குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label யோகா. Show all posts
Showing posts with label யோகா. Show all posts

Sunday, April 5, 2020

வெற்றியடைய சூட்சும ரகசியம்


வெற்றி என்பதன் விளக்கம் ’பணக்காரனாக இருப்பது’ என்று நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பணக்காரர்களின் நிலை இன்றைக்கு என்னவென்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்னும் மூன்று மாதங்கள் கொரானாவால் வீட்டில் முடங்கினால் ஒவ்வொரு பணக்காரனும் பிச்சைக்காரனாகி விடுவான். கீழ்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமும் ஏற்கனவே பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே வெற்றி என்பது மாயை என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாழும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறோமா என்பதைத் தான் என்னைப் பொறுத்தவரை வெற்றி எனக் கருதுவேன். நாம் ஒவ்வொருவரும் வாழும் சூழல்கள் விதவிதமானவை. சூழலுக்கு ஏற்ற பழக்க வழக்கங்கள், உணவுகள், மொழிகள், உடைகள் என ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழலியல்வாதிகள்.

அமெரிக்கனைப் போல, இங்கிலாந்துக்காரனைப் போல, ஜப்பானியனைப் போலவெல்லாம் தமிழ்நாட்டில் வாழ முடியாது. பூமியின் தட்பவெட்பத்துக்கு ஏற்ப உருவான சூழ்நிலை, உருவாக்கி இருக்கும் சமூகக் கட்டமைப்புகளில் நம் வாழ்க்கையும் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதினை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இமயமலை, நேபாளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழல் அவர்கள் தினமும் உணவு தேடுவதாகத்தான் இருக்கின்றன. உணவைத் தேடுவது, அதற்காக உழைப்பது தான் அவர்களின் முதல் வேலை. பிறகு உண்பது, உல்லாசம், உறக்கம், ஆட்டம், பாட்டமாய் வாழ்க்கை சுகத்தில் கழிகின்றது. பல யுடியூப் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. அவைகளைத் தேடிப் பிடித்துப் பாருங்கள். அங்கு வசிப்பவர்கள் நோய் நொடி இன்றி சர்வசாதாரணமாக 100 வயதுக்கும் மேல் வாழ்கிறார்கள்.

இங்கோ, பசிக்காக படிப்பு, வேலை என ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையின் போக்கு படு கேவலமானதாக இருக்கிறது. படித்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்தால் காசு கிடைக்கும். அந்தப் பணத்தினால் சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் வாழ்க்கை? இன்பம்? குழந்தையாக இருக்கும் போதே, படி படி படி. படித்து முடித்ததும் பணி, பணி, பணி. பணி கிடைத்ததும் வேலை, வேலை, வேலை. கிடைக்கும் பணத்தை அனுபவிக்க கூட முடியாமல் ஜக்கி, ரவிசங்கர், நித்தி ஆகிய அட்டைகளிடம் கொண்டு போய் கொட்டி விட்டு, தேடிக்கொண்டிருப்போம் மன நிம்மதியை, வாழ்க்கையை. எல்லாம் கை விட்டுப் போயிருக்கும். வயதும் போயிருக்கும். நல்ல சாப்பாட்டினைக் கூட சாப்பிட முடியாது. சாப்பிட்டால் உயிர் போய் விடும் என்பார்கள் மருத்துவர்கள்.

காசு சம்பாதிப்பதுதான் வாழ்க்கை என்று ஒவ்வொரு மனிதனும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறான். இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதானதல்ல. மனம் எனும் அரக்கனிடமிருந்து விலகி, உண்மையை உணர்ந்து கொள்வது என்பது தற்போதைய சூழலில் முடியாத காரியம்.

இருக்கும் சூழலில் வெற்றியாக வாழ்க்கையை எளிதாக வாழ ஒரு சூத்திரம் ஒன்று உள்ளது.

அடியேனுக்கு சிறிய வயதில் இருந்து சாமியார்கள், வயதானவர்களுடன் தான் நட்பு. என் வயது நட்புக்காரர்கள் எனக்கு இல்லை. என்னை விட அனுபவசாலிகளுடன் பேசுவதையும், நட்புக் கொள்வதையும் விரும்புவன். அந்த வகையில் எல்லா மதங்களிலும், யோக, ஆன்மீக தொடர்பான விஷயங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.

தியானம், யோகம், யோகா, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்து பார்த்தேன். எதுவும் எனக்கான தேடலை, நான் தேடிய வழியைக் காட்டக்கூட இல்லை. முதலில் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கண்ணை மூடினால் அதுபாட்டுக்கு எங்கெங்கோ அலைகிறது.

சுழித்தோடும் ஆற்றை நினைக்கிறது. பெருகி வழிந்தோடும் அருவியைப் பார்க்கிறது. அமெரிக்காவின் நயாகராவிற்குச் செல்கிறது. உருளைக் கிழங்கு மசாலாவுக்குச் செல்கிறது. ஆலப்புழா செல்கிறது. நயன்தாராவை நினைக்கிறது. ரூடோஸ் நாய்க்குட்டி சாப்பிட்டாச்சா என நினைக்கிறது. நிமிட நேரத்தில் லட்சக்கணக்கான மைல்கள் செல்கின்றது. எண்ணங்கள் புற்றீசல் போல பெருகிக் கொண்டே இருக்கின்றன. எப்படிக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி, சூட்சுமத்தில் மனதை நிலைக்க வைத்து தியானிப்பது?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இப்படித்தான் மனது அலைந்து கொண்டிருந்தது வானத்தில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அலையும் மேகங்கள் போல.

மனதை அடக்க வேண்டும். இல்லையெனில் மனது எனும் குப்பைத் தொட்டிக்குள் அடங்கிப் போகனும். இதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை தான் நம் ஒவ்வொருவருக்கும். எனக்கும் அப்படித்தா இருந்தது.

தேடிக் கொண்டிருந்தேன் எளிய வழியை. அது கிடைத்தே விட்டது.

ஒரு ஜப்பானியன் போல அமைதியாக, எளிமையாக, வலிமையாக, அன்பாக வாழ துவங்கினேன். வெற்றி பெறுவது எங்கனம்? வாழ்க்கையின் போக்கிற்குத் தகுந்தவாறு எப்படி தொடர்வது என்று ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

2008ல் இருந்து பிளாக் எழுதுகிறேன். அன்றையிலிருந்து இப்போது வரையிலும் எழுதியிருக்கும் எழுத்துக்கள் சொல்லும் நானெப்படி மாறி இருக்கிறேன் என்று. அவ்வப்போது படித்துப் பார்ப்பேன். வேடிக்கையாக இருக்கும். இருப்பினும் அவைகள் நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதை எனப் புரிந்து கொள்வேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். இந்த வாக்கியம் உலகப் புகழ் பெற்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எதுவும் மாறவே இல்லை என்பதுதான்.

நான் கண்டடைந்த ‘அந்த எளிய’ வழியின் ஒரு பயிற்சியை நான் பழகத் துவங்கினேன். அது நான் தேடிய பாதைக்குத் தள்ளிக் கொண்டு சென்றது.

ஜப்பானியரின் வாழ்க்கையில் ‘டீ அருந்துவது’ என்பது ஒரு சமுதாய வழக்கம். அமைதியாக காலை மடக்கி அமர்ந்து அரைத்த பச்சைத் தேயிலைத் தூளில் சுடுநீர் விட்டு வடிகட்டிய தேநீரை அவர்கள் மகத்தான ஒரு மவுனத்தின் மூலம் அருந்துவார்கள்.

வெள்ளையும் பழுப்பும் நிறைந்திருக்கும் அமைதியான வீட்டு அறை ஒன்றில் அமைதியான, ஆனந்தமருளும் மவுனத்தின் பிடியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்துவதை தவமாகச் செய்வார்கள்.

அதுதான் ஆரம்பத்துவக்கம்.

மவுனம், அமைதி, புன் சிரிப்பு முதலில் இதை பழகிக் கொள்ளுங்கள்.

என் குரு நாதர் வெள்ளிங்கிரி சுவாமியின் வாக்கியம், ”பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”. இது ஏதோ ஒரு சாதாரண வாக்கியம் என்று நினைத்து விடாதீர்கள். பேச்சைக் குறைத்து விட்டு, உயிர் நாதமெனும் மூச்சைக் கவனி என்கிறார். கவனி என்பதுதான் எல்லாவற்றுக்குமான ஆரம்பப் புள்ளி.

தொடர்ந்து படியுங்கள்.

ஜப்பானின் புகழ் பெற்ற ஜென் தத்துவங்களைப் படித்திருப்பீர்கள். ஜென் என்பதைப் பற்றிய புரிதல்கள் பலப்பல. ஜென் தத்துவங்களின் ஒரே நிலை தன்னை அறிதல். தன்னை அறிதல் என்பது சூனியத்தில் தன்னைக் கரைப்பது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவுடனும் தன்னையும் இணைத்துக் கொள்வது. அவ்வாறு இணைத்துக் கொண்டவர்கள் தொட்டால் நோய் நீங்கும். பழுதானவற்றை நீக்கிப் பழையபடி உருவாக்குவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஒவ்வொரு அணுவும் இயங்கும். அவ்வாறானவர்கள் தான் புனிதர்கள் என்று அழைக்கிறோம்.

சரி, எங்கெங்கோ சென்று விட்டேன்.

ஒரு சிறிய பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். எல்லாமும் தெளிவாகி விடும்.

முன்பே பலரும் சொல்லி இருப்பதுதான் இது.

படிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் படிப்பதாக நினையுங்கள். சாப்பிடும் போது சாப்பிடுவதாக நினையுங்கள். எந்த வேலை செய்தாலும் வேலை செய்கிறேன் என நினையுங்கள்.

மனதினை இரண்டாகப் பிரியுங்கள். ஒரு மனதை வெளியில் கொண்டு வந்து நீங்கள் செய்வதை நீங்களே வேடிக்கைப் பாருங்கள். புரிகிறதா? நீங்கள் செய்வதை நீங்கள் வேடிக்கைப் பாருங்கள்.

ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்கும். போகப்போக பழகி விடும். பின்னர் இரண்டு மனதும் ஒன்றாகும் போது நடக்கும் மாயா ஜாலத்தை அப்போது உணர்வீர்கள்.

அந்த மனதும் இல்லாது போக வேண்டுமெனில் அதற்கும் ஒரு பயிற்சி இருக்கு. அது இப்போது வேண்டாம். ஏனென்றால் நாமெல்லாம் லெளகீக வாழ்க்கையில் இருக்கிறோம். அது நமக்குச் சரிப்பட்டு வராது.

இதை வெற்றியின் முதல்படி என அடித்துச் சொல்கிறேன்.

நிதானம், நேர்மை, ஒழுக்கம், அமைதி, பேரமைதியுள்ளம் ஆகியவை உங்களுக்கு வெற்றிக் கனியை பறித்து தரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

உங்களுக்கும் தானே…..

நம்பிக்கையே வாழ்க்கை….!