குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

Saturday, October 4, 2025

வீட்டுக்கு வந்த டிரம்ப் மற்றும் அஜித் தோவல் - தொடர்ச்சி

எலியார் பூனைகளுக்குப் பயப்படவில்லை. 

ஆகவே நான் இன்கம்டாக்ஸ் அல்லது இ.டி. வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

அதற்கு காரணம் நானல்ல. 

கனவில் வந்தவர்கள்.

வள்ளலார் கருணையைக் கொஞ்சம் தள்ளி வை எனக் கனவில் வந்து சொன்னார்.

காந்தி மகானோ அகிம்சை என்றால் பாதகம் என்றும் அந்தக் காலத்தில் மனசாட்சி உள்ளவர்கள் இருந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் கொலைகாரனை கூட அண்ணா என்றும், தலைவர் என்று அழைக்கும் படுபாதகர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் கருணையோ, பொறுமையோ காட்டினால் உன்னை அழித்து விடுவார்கள் என்றும், பிரதமர் மோடி அவர்கள் கூட என்னைப் பற்றி காந்தித் திரைப்படத்துக்குப் பின்பு தான் எல்லோருக்கும் தெரிய வந்தது என்று சொன்னார் அல்லவா? இதையெல்லாம் கவனத்தில் வை என்றும் கனவில் வந்து உபதேசித்தார்.

என் மூளை பல உபாயங்களைத் தேடியது. அதில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்தது.

எலியைப் பிடிக்கலாமே தவிர கொல்லக் கூடாது. அது சட்ட விரோதம் என பீட்டா வழக்குத் தொடுக்கும் அபாயம் வேறு இருக்கிறது. 

முதலில் வழக்கு, அதன் பிறகு விசாரணை, வக்கீல் செலவு என இத்தியாதிகள் நடந்து தீர்ப்பு வரும் வரை அது கொலையாக கருதப்படும் அபாயம் வேறு இருக்கிறது.

ஆகவே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா? - வசனம் நினைவிருக்கிறதா? 

எலிக்கு மரண பயத்தைக் காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது.

கொலை அல்ல, மரண பயம்..! 

இதெல்லாம் தேவையா? பேசாமல் எலியைப் பிடிக்க உத்தரவு போடச் சொல்லி, டெல்லி கோர்ட்டில் வழக்கு போட்டு விடலாமா எனக் கூட நினைத்தேன். செலவு ரொம்ப ஆகும். ஆகவே அதை தள்ளி வைத்து விட்டேன்.

படுக்கையறையின் அருகில் இருக்கும் சிலாப்பில் எலியார் விடிகாலையில் வந்து விடுவதைக் கண்டுபிடித்தேன். அடுத்த நாள் திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டியது என முடிவெடுத்தேன்.

விடிகாலையில் எலியார் சிலாப்பிற்கு வந்து, தன் பற்கள் மூலம் சில்மிஷத்தில் இருந்தார். 

கோதையை எழுப்பி பெட்ரூம் கதவைச் சாத்தி விட்டு வெளியில் நில், கையில் ஒரு துண்டு அவசியம். தரையில் அடிப்பது திட்டம். எலியார் பாதித்து விடக்கூடாது என்பது முக்கியம் என திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளிடம் விவரித்தேன்.

வழக்கம் போல மண்டையை ஆட்டி விட்டாள். 

லைட்டைப் போட்டவுடன், அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியில் நின்றாள்.

என் கையில் ஒரு பிரம்பு. 

லைட்டைப் போட்டவுடன் எலியாருக்கு பீதியில் கிலி பிடித்து விட்டது. குடுகுடுவென பீரோ வழியாக இறங்கி கதவருகில் வந்தவருக்கு மூச்சே நின்று போனது.

சாத்தப்பட்ட கதவு. 

எலியாருக்கு திகில் கிளம்ப கட்டிலுக்குள் கீழ் ஓடி ஒளிந்தார்.

என் கையில் இருந்த பிரம்பால் ஒரு தட்டு.

எலியாருக்கு ஒன்றுக்கு ரெண்டுக்கு வந்திருக்கும் போல.
 
தட தடவென அங்குமிங்கும் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தார்.

இனி திட்டத்தின் அடுத்த பகுதி.

கோதை லேசாக கதவைத் திற எனக் கத்தினேன்.

சத்தம் கேட்ட கோதை கதவைத் திறக்க, எலியாருக்கு திருப்பதி சொர்க்க வாசல் திறந்த போல இருந்தது போல. கூட்டத்தினர் திருப்பதி பெருமாளை பார்க்க முண்டியடிப்பது போல கதவிடுக்கு வழியாக வரவேற்பறைக்குச் செல்ல, அங்கே தூக்கக் கலக்கத்தில் எழுந்த கோதை தலை விரி கோலத்துடன், கையில் துண்டுடன் பத்ரகாளி போல நிற்கிறாள்.

எலியாருக்கு எப்படி இருந்திருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

சொர்க்கவாசலா? நரகவாசலா? 

எலியாருக்கு எந்த வாசல்?

ஓடி வந்த எலியாரின் அருகில் துண்டால் ஒரு தரையில் சாத்து சாத்தினாள் கோதை. 

எலியார் துள்ளிய துள்ளலைப் பார்த்தேன்.

உயரம் தாண்டுதலுக்கு ஒலிம்பிக் கமிட்டியார் எலிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பீட்டா அமைப்பினர் இதற்கெல்லாம் வழக்குத் தொடுக்க கூடாது. எலியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு வேண்டுதல். அம்புட்டுத்தான்.

அன்றிலிருந்து எலியாரைக் காணவில்லை.

இன்கம்டாக்ஸ், என்ஃபோர்ஸ்மெண்ட் இண்டலிஜென்ஸ் ஆட்களைப் பார்த்து எதற்கு எலி அல்ல கிலி பிடித்தலைகிறார்கள் என எலியாருக்குப் புரிந்திருக்கும்.

வாலைச் சுருட்டிக் கொண்டு, பிள்ளையாரிடம் போய் விட்டார் போல எலியார். ஏனென்றால் பிள்ளையார் இந்துக் கடவுள் அல்லவா?

எலியாருக்கு அவரை விட்டால் வேறு போக்கிடம் இல்லையே. 

கனவு மூலமாக வந்த வள்ளலார் எலியை விரட்டி விட்டார் என்றும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் மனித ரூபாய் அல்ல ரூபாய நமஹ!

வளமுடன் வாழ்க.

04.10.2025

Thursday, September 26, 2024

லப்பர் பந்து எனும் குப்பை

லப்பர் பந்து திரைப்படத்தைப் பார்த்த பிறகு மஹாத்மா காந்தி மீது கோபம் ஏற்பட்டது. 

தமிழ்நாட்டின் சினிமா இயக்குனர்கள் மறந்து போன பார்முலா ஒன்று உண்டு. 1960களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கும்பகோணம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பார்முலாவைத் தொட்டு விட்டால் வெற்றி நிச்சயம். அதைத் தொட்டிருக்கிறது இந்தப் படம். 

பார்முலா பற்றிப் புரியவில்லை என்பவர்களுக்காக எழுதுகிறேன். பாக்கியராஜ் இந்த பார்முலாவை தொட்டவர். முந்தானை முடிச்சில் ஆரம்பித்த பார்முலா திசைமாறியது வேட்டியை மடிச்சுக்கட்டு திரைப்படத்தில். அன்றிலிருந்து அந்த பார்முலாவை விட்டு விலகினார்- வெற்றியும் அவரை விட்டு விலகியது.

வேட்டியை மடிச்சுக்கட்டு என்றவுடன் இந்த மாதம் பெருமாள் முருகன் - உயிர்மை இதழில் எழுதிய செம்மி சிறுகதை நினைவுக்கு வந்து விட்டது. இந்தச் சிறுகதையை நீங்கள் அவசியம் படித்துப் பாருங்கள். திகைத்து நிற்பீர்கள் .

கோடி ரூபாயை பைனான்ஸில் போட்டு விட்டு - பைனான்ஸ்காரனின் மூடிய கடைக்கு முன் ஏமாந்து நிற்கும் மன நிலையை விட இது வேறு விதமானது. கதையை படித்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து நிற்கும் மனசு.

அந்த சிறுகதையின் இணைப்பு கீழே.

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-september-2024-perumal-murugan-short-story-02/

இடைச்செருகல்:

ஏ.ஆர்.ரகுமான் - என்னைப் பொருத்தவரை ஆஃப்ரிக்க, லெபனான், உருது, கஜல் பிட்டுசுட்டுக்கார புயல் - யு ஸ்ட்ரீம் என்றொரு விர்ச்சுவல் புரடெக்‌ஷன் ஹவுஸ் ஒன்றினை சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபில்ம் சிட்டியில் உருவாக்கி இருக்கிறார். இங்கு இதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது எனக் கேட்பீர்கள். தொடர்ந்து வருகிறது. படியுங்கள்.

இவரின் பிசினஸுக்குப் பின்னாலே ஒரு வகையான கால்குலேஷன் இருக்கிறது. 

போனைத் தடவும் தடவல்காரர்கள் அதிகம் ரசித்துப் பார்ப்பது மல்லு படமோ, போர்னோ படமோ அல்ல. யூடிப்பில் வரும் உணவு ரெசிப்பீ(?)க்கள், ஹோட்டல் உணவு ரெவிவியூக்கள். இவைகளைத் தான் அதிகம் பார்வையிடுகிறார்களாம். 

ஒரு சில போலி ரெவிவியூவ் அண்டாவாய்க்காரர்கள், ஹோட்டல் உணவுகளை, பெரிய பைட்டா போயிடலாம், வேறமாரி எனச் சொல்லிக் கொண்டே, வயிற்றுக் குப்பைத் தொட்டிக்குள் தள்ளிக் கொண்டிருப்பதை, வாயில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருப்போரின் புள்ளியியல் கணக்கு எக்கச் சக்கமாம். 

பார்ப்பதிலேயே பரவசம் காண்பவர்களின் எண்ணிக்கை அதிகமென்பதால் - அந்தக் கணக்கு வழக்குகளின் விபரங்கள் தெரிந்த ஏ.ஆர்.ஆர் இப்படி ஒரு வெர்சுவல் புரடெக்‌ஷன் ஹவுசை உருவாக்கி இருக்கிறார். சிம்பிளாக சொல்லணும் என்றால் மூடிய கதவுக்குள் ஸ்டூடியோ. முன்பொரு காலத்தில் கொட்டகைக்குள் ஸ்டூடியோ போல இப்போது விர்ச்சுவல் ஸ்டூடியோ.

சிந்தைசர் இசை காசு தரும். உண்மையான இசையைத் தராது. அந்த இசைக்கோர்ர்வைகள் அரிப்பு எடுத்த இடத்தில் இட்ஸ்கார்டு கிரீம் தடவுவது போல இருக்கும். ரஹ்மான் பாடல்களை இப்போது கேட்க முடியாது.

இயற்கையான இசைக்கருவிகள் வழியே புறப்படும் இசை, கேட்பவர்களின் மனதிற்குள் இசைக்கேற்ற உணர்வுகளை உண்டாக்கும். புல்லாங்குழலுக்குள் புகுந்து வரும் இசைக்கும், செமிகண்ட்டக்டர் டிவைஸ்ஸுக்குள்ளிருந்து  வெளிவரும் இசைக்கும் வித்தியாசம் உண்டு.

ஆப்பிளின் விர்ச்சுவல் ரியாலிட்டி கேட்ஜெட் தோற்றுப் போன ஒன்று. விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது பொய்.

உண்மை உண்மை தான், அதன் தன்மை வேறு.

பொய் எப்போதும் பொய் தான்.  நெருப்பில் மூடிக் கிடக்கும் சாம்பல் போல. ஒரு காற்றுக்கே தாங்காது பொய். ஆனால் உண்மை அப்படி அல்ல. அது அணையா நெருப்பு.

இது போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி படைப்புகளில் உயிரோட்டம் இருக்காது. உயிர்களின் உண்மையான உணர்வுகளைத் தராது.

தற்கால டெக் ஆட்களுக்கு வாட்சப்பே வள்ளுவர், ஃபேஸ்புக் அரிச்சந்திரன், டிவிட்டர் சிவபெருமான். படிக்கவும் மாட்டார்கள். படிப்பதைப் புரிந்து கொள்ளவும் தெரியாது. புரோ, ஐபோன் 18 அப்டேட் வந்துடுச்சு, கலக்கிட்டான் என்பார்கள்.  இதிலென்ன பெருமை வேண்டியிருக்கு? ஆப்பிள் ஐபோனை விற்றவன் அல்லவா பெருமைப்பட வேண்டும்? ஆப்பிள் போனைக் கையில் வைத்திருந்தாலே பெருமை மண்டி விடும். அடுத்த வருடம் கால்வாசி காசுக்கு கூட விற்கமுடியாமல் போகும் பொருள் போன்.  

பைத்தான் படித்தால் பெருமை, ஐடி கம்பெனியில் அடிமை வேலை பார்த்தால் பெருமை, கார் வாங்கினால் பெருமை, வீடு வாங்கினால் பெருமை. இப்படி எதெற்கெடுத்தாலும் பெருமை, பெருமை. பைசாவுக்கு பிரயோசனம் உண்டா இதிலே? என் மகளுக்கு சமைக்கவே தெரியாது. இப்படி ஒரு பெருமை அந்தப் பெண்ணைப் பெத்த அம்மாவுக்கு. பெருமை என்பது போலித்தனமானது. அது முடிவில் இழப்பை உண்டாக்கும். 

இப்படியான போலி மாயைகளில் சிக்கி இருப்போரிடம் பொய்களை விதைத்து, அறுவடை செய்வது எளிதானது. அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும், அறிவும் இருப்பதில்லை. பொய்களுக்கும், எதார்த்தத்தின் உண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளத்தான் யுடர்ன்ஸ் விர்ச்சுவல் ஸ்டியோ பற்றி எழுத வேண்டியிருக்கிறது.

முழுமையான விர்சுவல் ரியாலிட்டியில் தயாரிக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான பாகுபலியில் உயிரோட்டம் இல்லை. மாம்பழத்திலிருந்து அப்படியே சாறு எடுத்து பாட்டிலாக வருகிறது என்பார்களே அதுவும், உண்மையான மாம்பழச்சாறுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எப்படியோ அப்படித்தான் விர்ச்சுவல் ரியாலிட்டுக்கும், எதார்த்தமான படைப்புகளுக்கும் இடையில் உள்ளது.

லப்பர் பந்து உயிரோட்டமுள்ள படம். பாகுபலி இதன் முன்பு தூசுக்கும் காணாது. ஃபிக்ஸன் நாவலுக்கும், ஜானகிராமனின் மோகமுள்ளுக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசம் இரண்டு படத்துக்கும் உண்டு.

கற்பனை உலகின் உருவாக்கங்கள் எதார்த்தங்களோடு ஒன்றவில்லை என்றால், தோற்றுப் போன படைப்பு. லப்பர் பந்து திரைப்படத்தின் உயிரோட்டம் - படத்தைப் பார்க்கும் ரசிகனுக்குள் பல விதமான உணர்வுகளை உருவாக்குகிறது. ஏ.ஆர்.ரகுமானின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்டியோ மூலம் வரப்போகும் படங்கள் செத்துப் போனவையாக இருக்கும்.

லப்பர் பந்து திரைப்படம் - சாமானியர் பார்வையில் மிகச் சிறந்த, அற்புதமான படைப்பு. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் தான் என்னை அப்படம் குப்பை எனக் கருத வைத்தது.

குழந்தைகள் வளர வளர - அவர்களின் ஒவ்வொரு செயலையும் அம்மா, அப்பா,  அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மாமா, பாட்டி, அத்தை, தாத்தா, சித்தப்பா இப்படி  பல உறவுகள் மெச்சி, பாராட்டி மகிழ்வார்கள். அதாவது குழந்தையின் ஒவ்வொரு செயலையும் அங்கீகரிப்பார்கள். இந்த மன நிலை குழந்தைப் பருவத்திலிருந்து மனதுக்குள் பதிந்து விடும். 

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என போகப் போகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

லப்பர் பந்து திரைப்படத்தின் கதையைச் சுருக்கமாக பார்க்கலாம்.

அட்டைகத்தி தினேசு கிரிக்கெட் விளையாடுபவர். கீழ்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, ஆர்ட் வேலை செய்பவர். இப்பெண்ணுக்கு கணவன் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காது.

இவர்களுக்கு ஒரு பெண். 

அய்யராத்து அம்பி ஹரீசு கல்யாண் - கிரிக்கெட் பைத்தியம், சொந்தமாக பிரிண்டிங் தொழில். படத்தில் கீழ் சாதிப்பையன். நன்றாக கிரிக்கெட் ஆடுவான். ஊரில் பிரபலமாக இருக்கும் ஜில் பாய்ஸ் கிரிக்கெட் டீமில் கீழ்சாதி என்பதால், இவனை அவர்களுடன் விளையாட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

கிரிக்கெட் விளையாட்டில் பட்டாசாய் வெடிப்பவன் தினேசு. வயதானாலும் பந்தை அடித்து பட்டாசாய் ரன்களைப் பறக்க விடுவான். 

ஹரீசு - தினேசின் பெண்ணைக் காதலிப்பான். காதலி எதார்த்தமானவள்.  ஒரு கட்டத்தில் தினேசு கிரிக்கெட் விளையாடுவதை ஹரீசு விமர்சிக்க இருவருக்குள்ளும் ஈகோ வந்து விடும். 

காதலியின் அப்பாதான் தினேசு என்று  தெரியாது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிந்து விடும். அப்பா ஓகே சொன்னால் தான் கட்டிக்குவேன் என்கிறாள் காதலி. 

ஹரீசு தினேசு இணைப்பு நடந்தே தீரும். அதுதானே உலக சினிமா வழக்கம்?

முட்டல், மோதல், சேர்தல், காதல், வெற்றி கதைதான். ஆனால் முடிவில் ஒரு டிவிஸ்ட். கிளைமேக்ஸைச் சொல்லக் கூடாது. ஆனால் இங்கு சொல்லியே தீர வேண்டிய கட்டாயம். 

எனக்கு காந்தி மீது கோபம் ஏற்பட்டது என்று இந்தியாவின் டைபிக்கள் பொய்யான அகிம்சாவை வம்பிற்கு இழுத்திருக்கிறேன் அல்லவா? அதென்ன டைப்பிக்கள் பொய் என்கிறீர்களா? 

அகிம்சா வழிப் போராட்டங்களைப் பார்த்து, மனம் பதைத்த ஆங்கிலேயன் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்து விட்டு சென்று விட்டான். இப்போது அகிம்சை வழி போராட்டம் என்றால் 800 பேர் செத்துப் போக வேண்டும். 

வேற்று சாதி பையன்களை கிரிக்கெட்டில் சேர்க்காத ஜில் பாய்ஸ் டீமுக்கும் - தினேசு-ஹரிசு அடேங்கப்பா டீமுக்கும் போட்டி. 

தோற்று விடுவோம் என்பதால் கீழ்சாதிப் பையன்களை ஜில் பாய்ஸ் டீமுக்குள் கொண்டு வருகிறார்கள். தினேசு-ஹரிசு அடேங்கப்பா டீம் போட்டியில் தோற்று விடுகிறது. ஜில் பாய்ஸ் டீமுக்குள் கீழ்சாதி பையன்கள் கிரிக்கெட் விளையாடி ஒன்னு மண்ணாக இருப்பது, இவர்கள் வெற்றி பெற்றால் கெட்டுப் போகும் எனக் கருதி இருவரும் பேசி முடிவு செய்து வேண்டுமென்றே தோற்றுப் போவார்கள். அடுத்த ஆறு மாதங்கள் சென்ற பிறகு எல்லா சாதிக்காரர்களும் மைதானத்தில் ஒன்றாக விளையாடுகிறார்கள்.

இனி தான் மேட்டரே இருக்கிறது. 

விகடன் ஆன்லைனில் வருடம் 900/- ரூபாய் கட்டிப் படிக்கிறேன். அதில் லப்பர் பந்து கட்டுரையில் கீழே இருக்கும் கமெண்ட்டைப் போட்டேன். உடனடியாக பதிவானது. ஆனால் அடுத்த சில நொடிகளில் நீக்கப்பட்டு விட்டது. 

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியதுதான் இந்தக் கமெண்ட்.

விகடன் இந்தக் கமெண்டை நீக்கி விட்டது. ஏனென்று உங்களுக்குத் தெரியும். இந்த சாதியக் கட்டு அறுந்து போனால் அவர்களின் பொய் கட்டுமானம் நொறுங்கி விடும். இப்படியான கருத்து கூட அவர்களுக்கு எதிரானது. 

உயர்ஜாதிக்காரர்களுடன் எல்லா சாதிக்காரர்களும் சேர்ந்து விளையாட வேண்டுமாம். திரைப்படம் சொன்ன செய்தி. 

ஏன் அவர்களுடன் சேர வேண்டும்?  தன்னை உயர்சாதி என்றுச் சொல்பவர்களிடமிருந்து விலகிச் சென்றால், அவர்களை ஒதுக்கி வைத்தால், ஒதுங்கிச் சென்றால் என்ன ஆகி விடும்? செத்துப் போவோமா?

பிறந்தால் செத்துதானே போவோம்? அவன் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் ஒவ்வொருவரின் வயிற்றுப் பசி போய் விடுமா? யாருக்கும் நோய் வராதா? சாவு வராதா? எல்லாமும் வரத்தானே செய்யும்? ஏன் உயர்சாதிக்காரர்கள் என்பவர்களுடன் ஒட்டணும், உறவாட வேண்டும்?

அவர்கள் தங்களை மதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? 

காரணம் என்ன தெரியுமா?

கீழ்சாதி என்ற எண்ணம் மனதுக்குள் புகுந்து, பயமாக மாறி விட்டது.

தேவர் சமுதாயத்தில் பிறந்த என்னால் பிராமணர் வீட்டுக்குள் செல்ல முடியாது. பிராமணர்களைப் பொறுத்தவரை நானும் கீழ்சாதிக்காரன் தானே? இப்படி ஒவ்வொரு சாதி மீது நிகழ்த்தப்படும் இந்தத் தாக்குதலை வேறொரு சாதி மீது தொடுக்கிறோம். இதை எதிர்பார்த்துதான் சாதிய அடுக்குகள் உருவாக்கப்பட்டு, சமூகத்திற்குள் புகுத்தப்பட்டது. இதன் காரணமாக சமூகத்தில் சம நிலை, சமூக நீதி தவறுகிறது. 

இதைத்தான் முன்னோர்கள் காலத்தில் இருந்த பிராமணர்கள் உருவாக்கினார்கள். அது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது பல வடிவங்களில். அந்த வடிவத்தைதான் இந்தப் படமும் வெளிப்படுத்துகிறது.

கீழ்சாதிக்காரர்களுடன் சேர்ந்து விளையாட உயர்சாதிகாரன் முயல்கிறான் என்று படம் எடுக்க தோன்றவில்லை இந்த இயக்குனருக்கு? இயக்குனரின் மனதுக்குள் பதிந்து விட்ட சாதியப்பயம் அவரை சிந்திக்க விடாமல் தடுக்கிறது.

இந்த சாதிய அடுக்குகளில் சிக்கியதால் தான் - நம் சொத்தான சிதம்பரம் நடராஜர் கோவிலை எங்கிருந்தோ வந்த தீட்சிதர்கள் திருடி தின்று கொழுக்கிறார்கள். இந்தக் கோவிலைக் கட்டியது, செலவு செய்தது தமிழர்கள். ஆனால் நீதிமன்றம் தீட்சிதர்களின் கோவில் என்று தீர்ப்புக் கொடுத்திருக்கிறது. பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்தக் கட்டமைப்பை உடைக்க வேண்டியவர்கள் கடவுளின் பெயரால் - பாப புண்ணியங்களின் பெயரால் - அடிமையாக இருக்கிறோம்.

இந்த பாப புண்ணியங்கள் தீட்சிதர்களுக்கு இல்லையா என்று எவராவது எப்போதாவது கேட்டிருப்பீர்களேயானால் - சிதம்பரம் கோவிலோ அல்லது கருவறையோ எல்லோருக்குமான உரிமையாக அல்லவா இருந்திருக்கும்?

பஞ்சாப் மக்கள் மோடி கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களை நீக்க வைத்தார்கள். அவர்களிடம் இருக்கும் அந்த துணிச்சல் - ஆங்கிலேயனை எதிர்த்த தமிழர்களிடம் காணாது போனது ஏன்? 

தெருநாய்க்கு கிடைக்கும் எச்சில் சோற்றைப் போல கீழ்நிலைப் பதவிக்களுக்கும், அவர்கள் சொல்லும் வேலைகளைப் பெறுவதற்கும், அலைந்து கொண்டு, அடித்துக் கொண்டிருக்கிறோம். 

இனிமேல் பெரியார் வரமாட்டார். பெரியாரை ஏன் உயர்சாதி என்று கருதிக் கொள்பவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று தெரிகிறதா உங்களுக்கு?

சாதிய அடுக்குகளில் உண்டாக்கிய வெற்று சாதி அடுக்குகள் நீங்கினால் தான் அவர்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நாமும் செல்ல முடியும். அதை உடைத்து விடாமல் மதத்தின் பெயராலும் பாப புண்ணியங்கள் என்ற பெயரினாலும் சாதிய அடுக்குகளை உடையவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நாமெல்லாம அதைப் புரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம் என்பது தான் வேதனை.

பெரியார் மொழி, மதம் வழியான இவ்வகை ரகசிய சதிகளை அறிந்ததால் தான் அதையெல்லாம் சாமானியன் புரிந்து கொள்ளும் நோக்கில் பச்சையாகத் திட்டினார். எதிர்த்தும் நின்றார். 

ஒரு மதம் - ஆகமம் என்ற விதியைக் காரணம் காட்டி மனிதர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குமா? மதம் மனிதர்களுக்குள் அன்பைத்தான் போதிக்கிறது. பிரிவினையை எந்த மதமும் எப்போதும் போதிக்காது. ஆனால் அது அப்படித்தான் சொல்கிறது எனச் சொல்கிறார்களே அவர்கள் தான் மதத்தின் விரோதிகள் என்ற எளிய உண்மையைக் கூட சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நீ கீழ்சாதிகாரன், சமூகத்தில் ஒதுக்கி வைத்திருப்பது குற்றம், உனக்காக நான் போராடுகிறேன், அதை வெளிப்படுத்தும் படைப்புகளை முன் வைத்துப் போராடுகிறேன் என்று எவன் சொல்கிறானோ அவன் தான் சாதிய அடுக்குகளைப் பாதுகாப்பவன். அவன் தான் சாதியக் கட்டுமானங்களின் மீது ஒரு வித பயத்தை உண்டாக்குகிறான். அவன் தன்னை வளர்த்துக் கொள்ள, தன் வயிற்றுப் பசி தீர சாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றுச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். 

மகாத்மா காந்தி 1900 ஆண்டுகளில் உச்சத்தில் இருந்த காலத்தில் சாதிய அடையாளங்களுடனான சமூக நீதிக்கு முயன்றார்.

பெயர்களில், உடைகளில், உடலில் போடப்படும் குறியீடுகளில் இருக்கும் உயர்சாதி - கீழ்சாதி அடையாளங்களை ஒதுக்கி இருக்க வேண்டும் காந்தியார். 

ஹரிஜன் பத்திரிக்கை - ஹரிஜனுடன் ஒத்திசைந்த வாழ்வு என்றாலும் எங்கும் ஒரு கோடு இருந்து கொண்டே வருவதை இப்போதும் நீக்க முடியவில்லை. அந்த வகையில் லப்பர் பந்து போன்ற படங்கள் சாதியை மறக்கவிடாமல் பதிய வைத்துக் கொண்டே இருக்கும்.  

சிறு வயதிலிருந்து எது செய்தாலும் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மன நிலையானது, பெரியவர்களானாலும் விட்டு விலகுவதில்லை. அதனால் மனதுக்குள் ஆண்டாண்டு காலமாக பதிய வைத்திருந்த கீழ்சாதி எண்ணங்கள் அங்கீகாரம் வேண்டுமென்ற பாதையில் மட்டுமே பயணம் செய்கிறது. இப்படி இருக்க கூடாது என்பதற்காகத்தான் விகடனின் கட்டுரையில் மேலே இருக்கும் கமெண்டைப் போட்டேன். விகடன் அதை நீக்கி விட்டது. விகடனுக்கு அக்கருத்தை நீக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இக்கருத்து கூட யாரோ சிலரின் மனதுக்குள் முளைத்து விடக்கூடாது என்ற அதீத ஜாக்கிரதை உணர்வு.

கமெண்டைப் போட்டு விட்டு, நான் அடுத்த வேலைக்குச் சென்றிருப்பேன். விகடனின் இந்தச் செயலை என்னால் ஏற்க முடியவில்லை. அதற்காத்தான் இந்த நீண்ட பதிவு எழுத வேண்டியிருக்கிறது. 

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டியதுமில்லை. எவரின் அங்கீகாரமும் தேவையுமில்லை. இந்த பூமி எல்லோருக்குமானது. எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது. இதில் யாருடைய அனுமதியோ - அங்கீகாரமோ தேவையே இல்லை. 

அந்த கருத்தின் அடிப்படையில் லப்பர் பந்து திரைப்படத்தை நான் குப்பை என்றேன்.

ஒரு நாட்டுக்குள் குடிமகனாகப் பிறப்பது - அதன் தொடர்ச்சியாக சட்ட திட்டங்களை மதித்து நடப்பது என்பது வேறு. நான் இங்கு எழுதி இருப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

லப்பர் பந்து திரைப்படத்தைச் சாமானியனின் பார்வையில் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.

கோபாலகிருஷ்ணனின் டச்சுக்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. பெண்ணடிமை போற்றும் விசு வகையறாக்களுக்கு இப்படம் பிடிக்காது. அது நமக்குத் தேவையும் இல்லை. இப்படம் பெண்ணடிமையினைத் தகர்த்து வீசுகிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் இயல்பானதானக, உணர்வு பூர்வமாக இருக்கிறது.

தினேசுக்கு அவன் மனைவி எவர்சில்வர் டப்பாவில் மட்டன் வறுவல் எடுத்து வைக்கிறாளே - அந்த டப்பாவுக்குள் இருக்கிறது வாழ்வியல் சூத்திரம். ஹரீசுக்கும் காதலிக்கும் மனப்பிரிவு உண்டான உடன், அவளைப் பார்க்க வரும் போது, காதலியின் அம்மாவிடம் அந்த எவர்சில்வர் டப்பாவைக் கொடுக்கும் போது தெரிகிறது தன் பெண் இவனைக் காதலிக்கிறாள் என. 

எல்லோரும் படத்தை அவசியம் பாருங்கள். 

இப்பதிவையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒரு சிலருக்கு இப்பதிவு வன்மமாகத் தோன்றலாம். அதற்கு அவரவர் மனநிலையும், புரிதல் தன்மையுமே காரணம். 

இனியெல்லாம் சுகமே உண்டாகட்டும் உங்களுக்கு.

அரைகிலோ ஆட்டுக்கறியை ஒரு இஞ்ச் சைசுக்கு துண்டாக்கி, நல்லெண்ணெயில் மசாலா சேர்த்து, அதனுடன் ஆட்டுக்கறியை வேக வைத்து சாப்பிடும் போது உண்டாகும் சுவையை நீங்கள் லப்பர் பந்து பார்க்கும் பெறலாம்.

சைவப்பிரியர்களுக்கு கோமிய பரிசுத்தத்திற்கு முன்பு கிடைத்த ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் விற்பனை செய்த லட்டுவின் சுவை போலச் சுவைக்கும்.

திட்டுவார் திட்டட்டும், போற்றுவார் போற்றட்டும். எல்லாமும் அவரவருக்கே சேரட்டும்.