குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அஜித் தோவல். Show all posts
Showing posts with label அஜித் தோவல். Show all posts

Saturday, October 4, 2025

வீட்டுக்கு வந்த டிரம்ப் மற்றும் அஜித் தோவல் - தொடர்ச்சி

எலியார் பூனைகளுக்குப் பயப்படவில்லை. 

ஆகவே நான் இன்கம்டாக்ஸ் அல்லது இ.டி. வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

அதற்கு காரணம் நானல்ல. 

கனவில் வந்தவர்கள்.

வள்ளலார் கருணையைக் கொஞ்சம் தள்ளி வை எனக் கனவில் வந்து சொன்னார்.

காந்தி மகானோ அகிம்சை என்றால் பாதகம் என்றும் அந்தக் காலத்தில் மனசாட்சி உள்ளவர்கள் இருந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் கொலைகாரனை கூட அண்ணா என்றும், தலைவர் என்று அழைக்கும் படுபாதகர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் கருணையோ, பொறுமையோ காட்டினால் உன்னை அழித்து விடுவார்கள் என்றும், பிரதமர் மோடி அவர்கள் கூட என்னைப் பற்றி காந்தித் திரைப்படத்துக்குப் பின்பு தான் எல்லோருக்கும் தெரிய வந்தது என்று சொன்னார் அல்லவா? இதையெல்லாம் கவனத்தில் வை என்றும் கனவில் வந்து உபதேசித்தார்.

என் மூளை பல உபாயங்களைத் தேடியது. அதில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்தது.

எலியைப் பிடிக்கலாமே தவிர கொல்லக் கூடாது. அது சட்ட விரோதம் என பீட்டா வழக்குத் தொடுக்கும் அபாயம் வேறு இருக்கிறது. 

முதலில் வழக்கு, அதன் பிறகு விசாரணை, வக்கீல் செலவு என இத்தியாதிகள் நடந்து தீர்ப்பு வரும் வரை அது கொலையாக கருதப்படும் அபாயம் வேறு இருக்கிறது.

ஆகவே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

மரண பயத்தைக் காட்டிட்டான் பரமா? - வசனம் நினைவிருக்கிறதா? 

எலிக்கு மரண பயத்தைக் காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது.

கொலை அல்ல, மரண பயம்..! 

இதெல்லாம் தேவையா? பேசாமல் எலியைப் பிடிக்க உத்தரவு போடச் சொல்லி, டெல்லி கோர்ட்டில் வழக்கு போட்டு விடலாமா எனக் கூட நினைத்தேன். செலவு ரொம்ப ஆகும். ஆகவே அதை தள்ளி வைத்து விட்டேன்.

படுக்கையறையின் அருகில் இருக்கும் சிலாப்பில் எலியார் விடிகாலையில் வந்து விடுவதைக் கண்டுபிடித்தேன். அடுத்த நாள் திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டியது என முடிவெடுத்தேன்.

விடிகாலையில் எலியார் சிலாப்பிற்கு வந்து, தன் பற்கள் மூலம் சில்மிஷத்தில் இருந்தார். 

கோதையை எழுப்பி பெட்ரூம் கதவைச் சாத்தி விட்டு வெளியில் நில், கையில் ஒரு துண்டு அவசியம். தரையில் அடிப்பது திட்டம். எலியார் பாதித்து விடக்கூடாது என்பது முக்கியம் என திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளிடம் விவரித்தேன்.

வழக்கம் போல மண்டையை ஆட்டி விட்டாள். 

லைட்டைப் போட்டவுடன், அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியில் நின்றாள்.

என் கையில் ஒரு பிரம்பு. 

லைட்டைப் போட்டவுடன் எலியாருக்கு பீதியில் கிலி பிடித்து விட்டது. குடுகுடுவென பீரோ வழியாக இறங்கி கதவருகில் வந்தவருக்கு மூச்சே நின்று போனது.

சாத்தப்பட்ட கதவு. 

எலியாருக்கு திகில் கிளம்ப கட்டிலுக்குள் கீழ் ஓடி ஒளிந்தார்.

என் கையில் இருந்த பிரம்பால் ஒரு தட்டு.

எலியாருக்கு ஒன்றுக்கு ரெண்டுக்கு வந்திருக்கும் போல.
 
தட தடவென அங்குமிங்கும் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தார்.

இனி திட்டத்தின் அடுத்த பகுதி.

கோதை லேசாக கதவைத் திற எனக் கத்தினேன்.

சத்தம் கேட்ட கோதை கதவைத் திறக்க, எலியாருக்கு திருப்பதி சொர்க்க வாசல் திறந்த போல இருந்தது போல. கூட்டத்தினர் திருப்பதி பெருமாளை பார்க்க முண்டியடிப்பது போல கதவிடுக்கு வழியாக வரவேற்பறைக்குச் செல்ல, அங்கே தூக்கக் கலக்கத்தில் எழுந்த கோதை தலை விரி கோலத்துடன், கையில் துண்டுடன் பத்ரகாளி போல நிற்கிறாள்.

எலியாருக்கு எப்படி இருந்திருக்கும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

சொர்க்கவாசலா? நரகவாசலா? 

எலியாருக்கு எந்த வாசல்?

ஓடி வந்த எலியாரின் அருகில் துண்டால் ஒரு தரையில் சாத்து சாத்தினாள் கோதை. 

எலியார் துள்ளிய துள்ளலைப் பார்த்தேன்.

உயரம் தாண்டுதலுக்கு ஒலிம்பிக் கமிட்டியார் எலிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பீட்டா அமைப்பினர் இதற்கெல்லாம் வழக்குத் தொடுக்க கூடாது. எலியாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு வேண்டுதல். அம்புட்டுத்தான்.

அன்றிலிருந்து எலியாரைக் காணவில்லை.

இன்கம்டாக்ஸ், என்ஃபோர்ஸ்மெண்ட் இண்டலிஜென்ஸ் ஆட்களைப் பார்த்து எதற்கு எலி அல்ல கிலி பிடித்தலைகிறார்கள் என எலியாருக்குப் புரிந்திருக்கும்.

வாலைச் சுருட்டிக் கொண்டு, பிள்ளையாரிடம் போய் விட்டார் போல எலியார். ஏனென்றால் பிள்ளையார் இந்துக் கடவுள் அல்லவா?

எலியாருக்கு அவரை விட்டால் வேறு போக்கிடம் இல்லையே. 

கனவு மூலமாக வந்த வள்ளலார் எலியை விரட்டி விட்டார் என்றும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் மனித ரூபாய் அல்ல ரூபாய நமஹ!

வளமுடன் வாழ்க.

04.10.2025

Thursday, September 18, 2025

வீட்டுக்கு வந்த டிரம்ப் மற்றும் அஜித் தோவல்

இப்படியெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் நடந்தது. 

விடியற்காலையில் எழும்போது பெட்ரூமில் இருக்கும் ஸ்லாப்பிலிருந்து பீரோ வழியாக இறங்கி மின்னல் போல மாடிக்கு சென்று விடுகிறது அந்த குட்டி எலி. 

மாடிச் சுவற்றில் ஓட்டை போடும்  முயற்சியில் ”கரக்,கரக்” சவுண்ட் உபத்திரவம்.

வீட்டுக்குள் அழையா விருந்தாளி. 

எலி மருந்து, எலி பொறி தகர டப்பாவிற்கு தேங்காய் வைத்தால், அதைச் சுற்றிலும் தின்று விட்டுச் சென்று விட்டது. 

பொறிக்கும் எலிக்கும் பிஜேபி - அதிமுக உடன்பாடு போல. 

ஒட்டும் பேஸ்ட் - ம்ஹூம்.

பல வித திட்டங்கள், உபாயங்களை யோசித்துச் செயல்படுத்திப் பார்த்தும் ம்ஹூம், எதுவும் எடுபடவில்லை. 

நண்பரிடம் ஆலோசனை - பூனை முடிகளை கொண்டு வந்து போடுங்க. எலி எட்டிப் பார்க்காது என்றார். அதையும் செய்து பார்த்து விட வேண்டியதுதான். 

முடியை விட குட்டிகளே மேல் என முடிவு செய்து, வீட்டுக்கு இரு பூனைக் குட்டிகளை ஓசி வாங்கிக் கொண்டு வந்தோம். கொஞ்சம் செம்பட்டையாய் இருந்தவன் டிரம்பு. கருப்பாய் இருந்தவன் அஜித் தோவல். 

கொஞ்சம் நம்பிக்கை வந்தது. வரிக்குடியில் ஒரு கொலபாதகம் மலையாளப்படம் நினைவுக்கு வந்தது. 

எப்படியும் குட்டி எலிக்கு கிலி பிடித்து விடும் என்று நினைத்தேன்.

பூனைக் குட்டிகள் இரண்டு. 

எலிக்கு வலை..

ஹாலில் இருக்கும் ஷோபாவில் படுத்துத் தூங்குவார்கள். அவ்வப்போது அஜித் தோவல் வீட்டுக்குள் ஒரு இடம் விடாமல் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். 

டிரம்ப் விளையாடுவான், சாப்பிடுவான், டூ ஒன் செல்வான். சொகுசு. ஷோபாவை அமெரிக்கா போல பாவித்தான். 

அவர்களுக்கு ஒரு சட்டியில் மண் போட்டு வீட்டுக்குள்ளே வெட்டவெளி ரெஸ்ட் ரூம். 

மனுசர்களுக்கு மூன்று, இவன்களுக்கு ஒன்று என நான்கு கணக்கு.

எலி எங்கே போச்சுன்னு தெரியவில்லை.

முதல் நாள் ஷோபாவில் படுத்து தூங்குவதும் விளையாடுவதுமாய் இருந்தார்கள்.

மறு நாள் நடுநிசி. 

யாரோ தலைமாட்டில் இருப்பது போல தெரிய விழித்தால் அஜித் தோவல்.

திக்கென்றது. 

டிரம்ப் கால் பக்கமாய். 

காலை எட்டு மணி போல இருவரையும் வந்த இடத்துக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.

இன்று காலையில் மீண்டும் அந்த எலி.. 

அடியேன் சுத்த சைவம். செயலிலும் கூட.

ஜீவகாருண்யத்தின் படி கொலை அனுமதிக்கப்படவில்லை.

வள்ளலார் வந்து தான் எலியைப் பிடித்து வீட்டுக்கு வெளியே விட வேண்டும்.

ஏன் சொல்கிறேன் என்றால்,

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒரு விஷ்ணு சிலைக்கு தலை இல்லா வழக்கை தள்ளுபடி செய்து விட்டு, அடிசனலாக கடவுளிடம் சென்று வேண்டிக் கொள் என்றுச் சொல்லி விட்டார். 

டெல்லியில் போராட்டம். மத உணர்வை புண்படுத்தி விட்டார் நீதிபதி என. அவர் சரியாகத்தான் சொன்னார். ஆனால் இவனுக்கு உண்மையைச் சொல்லி விட்டாரே எனக் கடுப்பு.

வழக்குப் போட்டவனுக்கு நீதிபதி மேல் தனிப்பட்ட காண்டு போல. 

நீதிபதி வாய் விட்டு விட்டார்.

மீடியாக்குஞ்சாமணிகள் ”ஆவ், ஒவ், அம், இம் ஹிம், ஆடுவென விஷ்ணுவை அவமதித்து விட்டாரென பொங்கு பொங்குன்னு பொங்கி பொங்கல் சாம்பார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால் அந்த தலையில்லா விஷ்ணு சிலை இருப்பது கஜுராகோ சிற்பங்கள் உள்ள இடம். யுனெஸ்கோ பட்டியலில் உள்ளது. 

உள்ளது உள்ளபடி பராமரிக்க வேண்டும்.  

வழக்கு போட்டவன் கணக்கு போட்டிருக்கிறான். 

இல்லாத தலையை வைத்து சூடம் சாம்பிராணி ஏற்றினால் கல்லாப் பெட்டி கணக்கும் என. அதற்கு சப்பைக்கட்டாய் முகலாயர்கள் உடைத்து விட்டார்கள் என கடந்த காலத்திற்குச் சென்று விட்டான். டெல்லி தோசம் மட்டுமல்ல, ஏதாவது செங்கல் உடைந்திருந்தால் கூட அக்பரும் அவுரங்கசீப்பும் உடைத்து விட்டார்கள் என ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆபரேட்டிங்க் சிஸ்டம் கோடு ஏற்கனவே இறைவன் எழுதி விட்டானாம். உபயம் டெல்லி முதல்வர் - அந்த மொழி சான்ஸ்கிரிட்டாம்.

கணிணி ராம். அதான் ராமனின் ராம் தான் கணிணி.  புரியவில்லையா? RAM MEMORY. 

படு ஸ்பீடாக போய்க்கொண்டிருக்கிறார்கள் கடவுளர்கள். காணும் இடமெல்லாம் கடவுள். இப்போது கணிக்குள் கடவுள். 

மைக்ரோசாப்ட் இனி ஓ.எஸ் எழுத வேண்டியதில்லை. இது எதுவும் தெரியாமல் குஞ்சாமணிகளும், சங்கிகளும் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

சரி மேட்டருக்கு வருவோம்.

நீதிபதிக்கு தெரியாதா? தலையில்லா முண்டத்தின் ஆட்டம் எதுக்குன்னு.

ரத்துன்னுட்டார். சட்டம் இப்போது விஷ்ணுக்கு எதிராய். 

எலி வேறு விநாயகப் பெருமானின் வாகனம்.. பூனை யாரோட வாகனமோ தெரியவில்லை.

தலையில்லா சிலையில் விஷ்ணு இருக்கும் போது, நான் அழைத்தால் ஜீவகாருண்யத்தின் பிதாமகர் வள்ளலார் வராமலா இருப்பார்.

பார்ப்போம் என்ன செய்கிறார் என.

எலியா? வள்ளலாரா?