குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, July 4, 2020

காதலெனும் அபத்த நாடகம்


காதலை தெய்வீக உணர்வு என்பார்கள். காதலுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் அனேகம். இன்றைக்கும் காதலுக்காக கொலைகள் நடக்கின்றன. காதலர்களும் செத்துப் போகின்றார்கள். காதலர்களின் பெற்றோர்களும் செத்துப் போகின்றார்கள். காதல்,காதல், காதல், இல்லையெனில் சாதல் சாதல் சாதல் என்று கவிதை எழுதிச் சென்றார் பாரதி. உடுமலை நாராயண கவியின் காதல் பாடல்களும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சினிமா காதல் பாடல்களும் என்றைக்கும் சிலாகிக்க வேண்டிய பொக்கிஷங்கள் என காதலில் வீழ்ந்து உருண்டு புரண்டவர்கள் கண்களில் மின்னலடிக்க பேசுவார்கள்.

காதல் சினிமாவில் இருக்கிறது. அதுவும் தமிழ் சினிமாவில் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. உலகெங்கும் காதலர்கள் காதலிக்கின்றார்கள். காதலித்துக் கொண்டே இருக்கின்றார்கள். கடைசி மனிதன் இவ்வுலகில் இருக்கும் வரை காதலும் இருந்து கொண்டே இருக்கும்.

காதலின் பெரும் நெருடல் என்னவென்றால் காதல் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பதில்லை. காதல் தோல்வியைத்தான் கொண்டாடுகிறது. சலீமின் காதலி அக்பரால் கொல்லப்பட்டார். காதலில் வெற்றி அடைந்தோர் பெரும்பாலும் இருப்பதில்லை. காதல் என்பது சாத்தானின் வடிவம் என்போர் பலர். அது மனத்தை மட்டும் அல்ல உறவினையும் சிதைத்து விடுகிறது. சமூகத்திற்கு கேடுகளை விளைவித்து விடுகிறது என்பார்கள்.

பெரியோர்கள் காதலை மனிதனின் அபத்த நாடகம் என்று வர்ணிப்பர். ஆரம்பம் மட்டுமே இருக்கும், முடிவென்பது இருக்காது. காதலின் வடிவம் இன்னதென்று சொல்ல முடியாது என்பார்கள்.

உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகின்றேன். அற்புதமான காதல் கதை. ஊமைப் பெண்ணின் காதல் இது. மொழியற்ற, ஓசைகளற்ற அழகான யுவதியின் அற்புதமான காதல் இது. ஒளிகளின் வழியே காதலைச் சொன்ன அற்புதமான பெண் அவள். பூமியில் சுழன்றடிக்கும் காற்றின் நெளிவு சுழிவுகளில் தன் உடலை லயத்துடன் இணைத்து நடனமாடிய இயற்கையின் அற்புதப் பேரழகியின் காதல் இது.

அவளின் காதல், அவள் கண்களில் பொங்கும் காதலெனும் உணர்வுகளால் ஒளிப்படமாக்கி காதலனின் மீது தவழ விட்ட அந்த பேசாமொழிப் பெண்ணின் காதல் இது.

கேட்கத் தயார் ஆகி விட்டீர்களா?

ஞானிகளும், சித்தர்களும், மகா யோகிகளும், சூஃபிக்களும், ஜென் குருக்களும், இறைத்தூதரைப் பற்றியே சிந்தித்துப் போற்றும் ஃபாஸ்டர்களும் தேடி அலைவது ஓசைகளற்ற அந்த இறைவனின் உலகில் ஓர் இடம். அவனின் அன்புக்கு அடிமையாகி விட வேண்டுமென்ற தாகத்தால் அவர்கள் தங்களைப் பெரும் துன்பங்களுக்குள்ளும் துயரத்துக்குள்ளும் ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.

ஓசை – இசை. மனிதனின் அற்புதமான கண்டுபிடிப்பு. இதிலும் மேன்மையான ஒன்று ஓசைகளற்ற உலகம். காற்றுடன் இசைவது, ஓசையில் மூழ்குவது முடிவில் ஓசையில்லா, ஒலியில்லா உலகில் அவனின் அற்புத தரிசனத்தை தரிசிப்பது என்பது பேரின்பமோ பேரின்பம் அல்லவா?

அந்தப் பேரின்பத்தை, இவர்களுக்கு எளிதில் கிடைத்து விடாத அந்த இறையின் கொடையை, ஒரு பேசாமொழிப் பெண்ணுக்கு இறைவன் கொடுத்திருந்தான். கடவுள் மயங்கிக் கிடந்த போது, நான் உங்களுக்குச் சொல்லப் போகும் கதைநாயகிக்கு கொடுத்து விட்டான் போல.

இனி கதைக்குப் போகலாமா?

மலைகளில் இருந்து வழிந்தோடும் நீர் தழுவிச் செல்லும் ஆற்றங்கரையோரமாக கவனிப்பாரற்று கிடக்கும் ஒரு அழகான மசூதி. விடிகாலைப் பொழுதில் பாங்கு சொல்வதற்காக கதவைத் திறந்த பெரியவர், அவனைக் காண்கிறார்.

அவன் பெயர் சூஃபி. பெரியவரிடம் தானே பாங்கு சொல்கிறேன் என்று கேட்கிறான். அன்றைக்கு பாங்கு ஒலிக்கிறது. ஓசை மசூதியிலிருந்து எழுந்து இயற்கையைச் சூழ்கிறது. அழகான கோர்வையான இசையுடன் ஒலிக்கும், இறைவனை துதிக்க வாருங்கள், இது அதற்கான நேரம் என்று அழைக்கும் குரலுக்குக் கட்டுப்பட்டு பெரும்பாலானோர் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். தொழுகையின் போது, சூஃபி தன் உயிரை விடுகிறான்.

அன்பு நண்பர்களே…!

ஆறடி நீளத்தில், ஆழத்தில் மண்ணுக்குள் ஒரு குழி வெட்டப்படுகிறது. இக்குழி அவனுக்கானது அல்ல, காதலின் அபத்த நாடகத்தின் முடிவினை அக்குழி தனக்குள் புதைத்துக் கொள்ளப்போகிறது. அந்தக் குழியில் புதையுண்ட காதல், உங்களின் நண்பனான கோவை தங்கவேலின் வார்த்தைகளில் உங்களிடம் வந்து சேர, அக்குழி வெட்டப்படுகிறது நண்பர்களே.

அந்தக் காதலின் அபத்தத்தை இனிச் சொல்லப் போகிறேன் உங்களுக்கு. கேளுங்கள்.

அந்த ஊமைப் பெண் ஒரு நாள் பஸ்ஸில் அழகிய யுவனான சூஃபியைப் பார்க்கிறாள். பார்த்த நொடியில் கண் வழியே சென்று மனதின் புதைந்து போனான் சூஃபி. சூஃபியின் பிரார்த்தனை மாலை அவளிடத்தில் கிடைக்கிறது. அதை மறந்து விட்டுச் சென்று விடுகிறான் சூஃபி.

மசூதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியவர் அபூப்பின் கிளாரினெட் இசைக்கு கதகளி நடனமாடுவாள் அந்த ஊமைப் பெண்.

கிளாரினெட்டில் இருந்து தவழும் இசையின் மகத்துவத்தை நீங்கள் யூடியூப்பில் கேளுங்கள். மனதை உருக்கும் ஓசை வெளிவரும். அந்த ஓசை தன்னை அழித்துக் கொண்டு காற்றோடு கலந்து போகும். கேட்போரின் மனதை ஆக்கிரமத்து தனக்குள் இழுத்து, மனதை இல்லாமல் அழிந்து போகவிடும். அப்பெரியவரின் கிளாரினெட் இசைக்கு அழகாய், காற்றாய் நடனமாடுவாள் அப்பெண். அது ஒரு கவிதையாக மலரும் அற்புதமான நேரம்.

அந்தப் பெரியவரின் சீடன் தான் இந்த சூஃபி. அங்கு அவனைப் பார்க்கிறாள் அவள். காதல் படறுகிறது குளத்திற்குள் படறும் பாசி போல.


ஒரு மாலையின் அற்புதமான நேரத்தில், சூஃபியைச் சந்திக்கச் செல்வாள் அவள். சூஃபி இறைவனை நோக்கிப் முழங்காலிட்டு பிரார்த்திப்பான். அவனருகில் சென்று அமர்ந்து அவன் இறைவனை பிரார்த்திப்பது போல அவளும் முயல்வாள். பிரார்த்தனை முடித்து கண் விழிக்கும் சூஃபி அவளை அங்கிருந்து செல்லாதே என்று கேட்பான்.

காதல், காதல், காதல். பொங்கி வழியும் அந்த தருணத்தில் இருவருக்குள்ளும் நிகழும் அந்த உணர்வின் வீச்சினை என்னவென்று சொல்வது நண்பர்களே? எழுத்துக்கள் உணர்வின் முன்னே தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டன. எழுத முடியாது வார்த்தைகள் அவர்களின் காதலின் முன்னே மகிழ்வுடன் தோல்வியுற்று போயிற்று.

இக்காதல் பெரியவருக்குத் தெரிய வருகிறது. அவர் அவளிடம் ”நிம்மதியாக உறக்கம் கொள் மகளே!” என்றுச் சொல்கிறார்.

இந்த வார்த்தைகளுக்கு இன்னொரு நீண்ட பதிவு எழுதுகிறேன்.

”நிம்மதியாக உறக்கம் கொள் மகளே….!” சாதாரண வார்த்தைகள் அல்ல.

அவளின் தகப்பனுக்கும் தெரிய வருகிறது. உடனடியாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. சூஃபியைக் கடிந்து கொள்கிறார் அபூப். அந்த அழகான இறைவன் நிறைந்திருக்கும் மசூதியிலிருந்து வெளியேறுகிறான் சூஃபி.

அவனைச் சந்திக்கச் செல்லும் அவள், அவனை கட்டித்தழுவுகிறாள். காதல் அங்கு சங்கமித்து இயற்கையோடு உணர்வுகள் ஒன்றாகின்றன. கட்டித்தழுவலில் காதலில் முகிழ்ந்து விடலாம் நண்பர்களே. உணர்வுகளின் சங்கமம் மட்டுமே உண்மையான காதலாக இருக்க முடியும். உடல்களின் சங்கமம் காதலுக்குத் தேவையே இல்லை.

மறுநாள், சூஃபி அவளின் வீட்டு வாசலில் அவளுக்காக காத்து நிற்கிறான். அவளும் வருகிறாள் அவளைப் பெற்ற தகப்பன் தன் நெஞ்சில் குத்திக் கொள்கிறான். தகப்பனுக்காக அவளாய் மாறி நிற்கும் காதலன் சூஃபியை, தன் உயிரை, தன் காதலை, தன் வாழ்க்கையை விட்டு, மீண்டும் வீட்டுக்குள் திரும்புகிறாள் அவள். சூஃபி தன் உயிரை அங்கேயே விட்டு விட்டு, வெறும் உடலோடு எங்கோ சென்று விடுகிறான்.

இனியும் என்னால் எழுத முடியாது நண்பர்களே.

காதல் எப்போதும் அபத்தமானது. அந்த ஊமைப் பெண்ணின் காதலும் அபத்த நாடகமாகி, பைத்தியக்கார உலக வாழ்க்கைக்குள் மூழ்கிப் போய் விடுகிறது.

இதைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமா?

பிரைம் வீடியோவில் சூஃபியும் சுஜாதாயும் எனும் மலையாள திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் கதையைத்தான் மேலே சொல்லி இருக்கிறேன்.

அவசியம் அனைவரும் இப்படத்தை தனியாக அமர்ந்து பாருங்கள். இசைக் கோர்வையும் படமும் உங்களுக்கு கோடானு கோடி வர்ண ஜாலங்களை நிகழ்த்தும்.

அந்த இயக்குனருக்கு எனது வாழ்த்துகள். இசையமைத்தவருக்கும் அன்புகள்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த சூஃபியும், நடிகை அதிதி ராவும் பாராட்டத்தக்கவர்கள்.

வாழ்க மலையாள சினிமா உலகம்.

வாழ்க காதல்…!

இன்னொரு பதிவில் உங்களுடன் பேசுகிறேன்.

வாழ்க நலமுடன்…!


Sunday, April 12, 2020

காதலின் இன்னொரு வடிவம் தாம்பத்தியம்

மகள் சிறுவயதாக இருக்கும் போது சூடத்தை விழுங்கி விட்டாள். வாயில் நுரை தள்ளி, இனி தாங்காது என்று ஒரு மருத்துவர் சொல்ல, ரேஸ்கோர்ஸில் மசானிக் மருத்துவமனையில் தான் ”இது சின்ன விஷயம். தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். 

இடைப்பட்ட  நேரத்தில் கண்ணில் காணும் கோவில்களின் வாசலில் நின்று, “பகவானே, என் பிள்ளையைக் காப்பாற்று, காப்பாற்று, என் உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொண்டு, பிள்ளையைக் காப்பாற்று, காப்பாற்று” என்று அலறித் துடித்துக் கொண்டு, கண்களில் நெஞ்சின் வலி தாங்க முடியாமல் வலியும் கண்ணீரைத் துடைக்க கூட மனமின்றி அலைந்து கொண்டிருந்தேன். கடவுளுக்கு வாய் இருந்தால், நான் பட்டத் துயரங்களை அழுது கொண்டே சொல்லி இருப்பார்.

தகப்பன் ஒருவன் மனைவி, மக்களை நெஞ்சில் சுமந்து கொண்டு, அவர்களின் நல வாழ்வுக்காக வெயிலிலும், மழையிலும் அலைந்து கொண்டு சம்பாதித்து கொண்டு வந்து வீடு சேர்ப்பான். அசதியில் சாப்பிடக்கூட மாட்டான். மக்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிம்மதியாக உறங்குவான்.

அவனின் உடம்பில் தெம்பு இருக்கும் மட்டும் மனைவிக்காகவும், மக்களுக்காகவும் ஓடிக் கொண்டே இருப்பான். ஓடிக் கொண்டே இருப்பான். இதோ தன் பிள்ளைகளையும், மனைவியையும் காப்பாற்ற ஒரு பிள்ளையை தலையில், வைத்துக் கொண்டு, மனைவியைக் கையில் பிடித்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருக்கிறானே அவனை ஒரு நிமிடம் மனதுக்குள் கொண்டு வந்து பாருங்கள்.

கண்கள் தானாகவே கண்ணீரை நிரப்பும். இந்த உலகம் எங்கும் தகப்பன்களாலே நிறைந்து கிடக்கிறது. அந்த தகப்பன்சாமிகளை எவரும் கண்டு கொள்வதே இல்லை. 

வீட்டுக்கு திரும்பி வருவோமா? காலம் வருமா? மனைவியைப் பார்ப்போமா? பிள்ளைகளைத் தொட்டு தழுவி முத்தம் கொடுப்போமா? பெற்ற அன்னையைப் பார்க்க முடியுமா? அப்பாவின் முகம் காண முடியுமா? இல்லை கொரானா கொன்று போடுமா எனத் தெரியாமல் கோடானு கோடி தகப்பன்கள் வெளி நாடுகளில் சிக்கிக் கொண்டு, நான்கு சுவற்றுக்குள் மனம் குமைந்து கிடக்கின்றார்களே, அவர்களை விடவா இங்கு இறைவன் உயர்ந்தவன்? அந்தத் தகப்பன்கள் தனக்காகவா மாடாய் உழைக்கிறார்கள்? அந்த தகப்பன்களின் காதல் மனைவிகள் தங்களின் இன்பத்தை மறந்து, வருவார், வருவார், அவர் என்னைப் பார்க்க வருவார் என காத்துக் கொண்டிருக்கின்றார்களே. அவர்களை விடவா இறைவன் பெரியவன்?

வாழும் சாமிகள் அல்லவா அந்த தாய்களும்,தகப்பன்களும்....!

காதல் அன்பு வடிவெடுத்து எல்லா துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொண்டு, தன் மனைவியும்,மக்களும் நலமாக இருக்க வேண்டுமென்பதற்காக மாற்றமெடுக்கிறது.

இதோ ஒரு சம்பவம். உங்களுக்கு கண்ணில் கண்ணீர் வரவைக்கும் ஒரு கணவனின் செயல். இவர்கள் அஜித், ஷாலினி போல அழகானவர்கள் இல்லை. ஆனால் இவர்களின் தாம்பத்தியத்தின் அன்பு, பிறருக்கு முன்னுதாரனமாக இருக்கிறது. வரலாற்றில் இடம்பிடித்து இருக்கிறார்கள்.

விவாகரத்துத் தேடி கோர்ட்டில் நிற்கும் தகப்பன்களும், தாய்களும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்களேன். கொடுப்பதில், சகித்துக் கொள்வதில் அன்பின் பெயரால் செய்யலாமே. இனிமேல் மனிதராகவா பிறப்பெடுத்து வரப்போகிறோம். அப்படியே என்ன குறை இருப்பினும் ஏற்றுக் கொள்ளலாமே. 

இனி அந்தச் சம்பவம்:



வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியிருப்பதால் விளிம்புநிலை மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், வயது 65. இவரின் மனைவி மஞ்சுளா (வயது 60) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

ஆனால் ஊரடங்குச் சட்டத்தால் தமிழகம் - புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், பேருந்துகள் இயக்கமும் நிறுத்தப்பட்டிருப்பதால் புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லை.

ஊரடங்கு முடிந்தபிறகு செல்லலாம் என்று நினைக்கும் அளவுக்கு மனைவியின் உடல்நிலை சீராக இல்லை. நோயுற்ற மனைவி வலியால் துடிப்பதைப் பார்க்குமளவுக்கு சக்தியில்லை. அதனால் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்த முதியவர் அறிவழகன், துணிந்து அந்த முடிவை எடுத்தார்.

தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்… எவ்வளவு நேரமாகும், அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா.. நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா.. வழியில் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது… போலீஸ் இருப்பார்களே என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன். அவரின் சிந்தனை அனைத்தும் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.

இடுப்பில் கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்த அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 130 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

2 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு இருவரையும் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்திருக்கின்றனர் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள். சிகிச்சைகள் அனைத்தும் முடிந்ததும், எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று அறிவழகனிடம் மருத்துவர்கள் கேட்க, ``எம்பொண்டட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லைன்னா நான் இல்ல” என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியபோது, ``ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இல்லை. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை அந்த முதியவர் 130 கிலோமீட்டர் சைக்கிளிலேயே அழைத்து வந்ததாகக் கூறினார். அதனால் உடனே அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளித்தோம். குறிப்பிட்ட தூரம் வரைதான் எங்களால் ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்க முடியும். ஆனால், அவர்களின் ஏழ்மை நிலைமையைக் கருத்தில்கொண்டு ஆம்புலன்ஸை இலவசமாகவே அனுப்பி வைத்தோம்” என்றது.

நன்றி : விகடன் செய்தி

Tuesday, August 14, 2018

இரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்

ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இன்றும் என்னை விட்டு அகலாது அவ்வப்போது காலை நனைக்கும் கடலலைகள் போல நினைவுகளைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி என்றொரு ஓவிய ஆசிரியர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஆறாம் வகுப்பிற்கு அவர் ஓவியப்பயிற்சியுடன், ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். கதைகள் சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு ஒரு உள் பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது. ஆங்கிலம் அவருக்குச் சரியாக வராது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். ஏனென்றால் அடியேன் தான் வகுப்பின் லீடர். பேப்பர் திருத்துவதிலிருந்து மக்கு பசங்களுக்கு மாலையில் டியூசன் சொல்லிக் கொடுப்பதிலிருந்து அவருக்கு நிரம்பவும் பிடித்த மாணவன் நான். வாரம் தோறும் அவரின் வீட்டுக்கு நானும் தங்கையும் சென்று விடுவோம். தனியாகத்தான் இருந்தார். எனக்கு ஆங்கில இலக்கணமும் படிக்கவும் சொல்லித்தருவார்.

என்னென்னவோ செய்து பார்ப்பேன். ஓவியம் மட்டும் எனக்கு வரவே வராது. முடிந்த அளவு முயற்சிப்பேன். ஓவியத்தில் இருக்கும் நாசூக்கு எனக்கு வரவில்லை. அவரும் பல தடவை சொல்லிக் கொடுத்தார். இருந்தால் தானே வருவதற்கு? ஒரு தடவை கூட முகம் சுளித்ததே இல்லை.


என்னைப் படைத்த இறைவனுக்கு எப்போதுமே என் மீது அதிக கரிசனம் உண்டு. என்னிடம் இருக்கும் ஒவ்வொன்றாய் பிடுங்கிக் கொண்டு ”இவன் என்ன செய்வான்னு பார்ப்போம்” என விளையாடிக் கொண்டே இருக்கிறான். பால் குடி மறக்கா குழந்தையாக இருக்கும் போது நடக்கமுடியாமல் கால்களை பறித்துக் கொண்டான். அசரவில்லையே நான். அது அவனுக்கும் எனக்குமான கணக்கு. அதை நான் அவனுடன் தீர்த்துக்கொள்கிறேன். இப்படித்தான் எனக்கு மிகவும் பிடித்த என் ப்ரிய ஆசிரியரை அவன் வேறு பள்ளிக்கு மாற்றினான். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னை விட்டு வேறோரு ஊருக்குச் சென்றார். இப்போது அவர் எங்கிருக்கின்றாரோ? இல்லையோ? தெரியவில்லை.

அதன் பிறகு ஜோசப் அமல்தாஸ் என்றொரு வாத்தியார் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவரின் பெல்பாட்டம் பேண்ட் ரொம்ப பேமஸ். சைக்கிளில் வருவார். சட்டைக்காலர் கூட ஆட்டுக்காது போல கிடந்து அல்லாடும். ஒரு பைசா என்னிடம் வாங்கியதில்லை. நானும் அவர் எனக்குச் சொல்லித்தரும்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் அவரிடம் படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். ரொம்பவும் கண்டிப்பான ஆசிரியர். அவரைப் நெஞ்சுக்குள் திடுக்கென்று இருக்கும். ஆங்கிலத்தில் டென்ஸ் (TENSE) வைத்து வாக்கியங்கள் எழுதக் கற்றுக் கொடுத்தவர் அவர். அதை வைத்துதான் கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில புயலைச் சமாளித்தேன். இன்றைக்கும் எனது ஆங்கிலப் புலமையில் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே !

டியூசனுக்குச் செல்லும் போது அவர் அறையின் அருகில் இருந்த மற்றொரு அறையில் வேறொரு பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியர் தங்கி இருந்தார். பார்க்கும் எவரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் பழக்கம் எனக்கு. அந்த ஆசிரியருடன் பழகிக் கொண்டேன். ஒரு மண்ணெண்ணய் ஸ்டவ். இரண்டு மூன்று பாத்திரங்கள். ஒரு சில கரண்டிகள். நான்கைந்து உடைகள். கைலிகள் இரண்டு. ஏதோ ஒரு ஊர்ப் பெயர் சொன்னார். நினைவில் இல்லை. கல்யாணம் ஆகி விட்டது என்றார். அவர் சமைக்கும் போது அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். நாசூக்கு என்றால் அப்படி ஒரு நாசூக்கு. சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம். ஆனால் சமையலில் மண்ணெண்ணெய் வாடை அடிக்கும். ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார். கேட்டுக் கொண்டிருப்பேன். சிறிது நேரம் அமைதியாக இருப்பார்.

புல்புல்தாராவை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அவர் வைத்திருந்த புல்புல்தாராவை எடுத்து வாசிப்பார். அது அழுது கொண்டே இருக்கும். அவரின் நெஞ்சுக்குள் எந்தக் காதலி அமர்ந்து கொண்டு சோக கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தாரோ? தெரியவில்லை. அதைப் பற்றி என்னிடம் அவர் ஏதும் சொன்னதும் இல்லை. அவர் புல்புல்தாராவை வாசிக்கும் போதெல்லாம் சோகமாகவே இருக்கும். ஞாயிறுகளில் அவரைச் சந்திக்கச் சென்று வருவேன். அவரின் அந்த வாசிப்பு எனது அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அவர் அறையின் நேர் கீழே இருந்த வீட்டில் ஒரு குடும்பம் தங்கி இருந்தது. அந்தக் குடும்பத்தின் தொழில் ஐஸ் விற்பது. மலர்ந்த மல்லிகை போன்ற ஒரு முகம் எனக்கு மாலையில், விற்காமல் மீதமிருக்கும் ஐஸைக் கொண்டு வந்து நீட்டும். எனக்கு மட்டுமே நீட்டும். முக்காடிட்டு ஒற்றைக் கண்ணில் வழிந்தோடும் பாசத்தைக் காட்டும் அந்தக் கண்கள் இப்போதும் என் கனவுகளில் வந்து என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொள்வேன். பின்னர் தூக்கம் வராது. மனது தவியாய் தவிக்கும். அந்தக் கண்கள் இப்போது என்னவாக இருக்குமோ தெரியவில்லை.


கண்கள் என்றைக்கும் அழிவதில்லை. அதன் அழகும் குறைவதில்லை. கண்கள் சொல்லும் கவிதைகளும், அதன் பேச்சுகளையும் இதுவரை எழுதி எழுதியே களைத்துப் போன கவிதையாளர்களால் கூட கண்களின் பேச்சை எழுத முடியவில்லை. கண்களுக்கு மொழியே தேவையே இல்லை அல்லவா?

கருணை பொங்கி, ப்ரியமாய் வழிந்தோடிய அந்தக் கண்களின் அன்பில் நனைந்து, நனைந்து மூழ்கி அதிலேயே கரைந்து போக மனது தவிக்கிறது. 

Wednesday, December 30, 2015

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

பீப் சாங் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான். 

என்ன ஒரு பாடல்? இசைக் கோர்ப்பு? அந்தக்காலமெல்லாம் இனிமேல் வரத்தான் கூடுமா? நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது.





வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே கோவிலின் தேரழகோ முன்னழகிலே கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Saturday, April 28, 2012

மனதுக்கு வலி தரும் காதல்

மூளை முதல் கொண்டு நரம்புகள் அனைத்தும் விரைத்து இதயம் துடி துடிக்க, உதிர அணுக்கள் எல்லாம் காதலியின் பெயரை உச்சரித்துக் கொண்டு உடம்பெல்லாம் பரவ, உதிரச் சூட்டின் வலி தாளாமல் உடல் சோர்ந்து வீழ, மனது வெந்து வெதும்பி வீழ, காதலியின் வருகைக்காக வரும் வழி பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போக, காதலியின் குரல் கேளாமையால் காதுகள் எல்லாம் பஞ்சடைத்து போக மொத்தத்தில் அவளின் நினைவாலே உருமாறிப் போய் நிற்கும் காதலனின் தவிப்பை கமல் இக்காட்சிகளின் வழியே உருவகப்படுத்துவார்.

இதோ அந்தப் பாடலும் காட்சியும் உங்களுக்காக.



- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்