குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அனுபவம. Show all posts
Showing posts with label அனுபவம. Show all posts

Friday, June 5, 2015

10 ரூபாயும் ஒரு மூதாட்டியும்

சமூக ஆர்வலர்கள் இப்போதெல்லாம் அழிக்கப்படுகின்றார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். எல்லோருக்கும் உண்மை கசந்து விடுகிறது. சிலருக்கு கொலை செய்யும் மனத்தையும் தந்து விடுகிறது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை பார்க்கும் போது, ஓடோடி அவனுக்கு உதவி செய்யத் துடிக்காத இதயம் எவருக்கும் இல்லாமலிருக்காது. இருந்தும் பலரும் ஒதுங்கிக் கொள்கின்றார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. சமூகத்தின் நன்மைக்காக உதவிட வேண்டுமென்று நினைப்போருக்கு உண்மையில் கசப்பான அனுபவங்களே ஏற்படுகின்றன. சமீபத்தில் கோவையில் இப்படித்தான் மணல் கடத்தலுக்காக சமூக ஆர்வலர் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிலர் செய்யும் சில செயல்களால் மனித சமுதாயத்துக்கு கிடைத்திட வேண்டிய பல்வேறு நல்ல காரியங்கள் சீர்பட்டுப் போகின்றன.

நேற்றைக்கு கணபதி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் அடியேன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது வாசலில் ஒரு குரல். நெடு நெடுவென்ற உயரம். கெச்சலான தேகம். மஞ்சள் பூசிய முகம். நெற்றியில் குங்குமம். பட்டுச்சேலை போன்று வெகு நேர்த்தியாக உடுத்தப்பட்டிருந்தது. கையில் ஏதோ ஒரு துணிக்கடையின் பை. 

ஏறிட்டுப்பார்த்தேன், “பன்னாரி அம்மன் கோவிலுக்கு காணிக்கை” என்றார் அந்த மூதாட்டி. அருகில் வரச்சொல்லி, பத்து ரூபாய் நோட்டினை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி இப்படித் தொடர்ந்தார்.

”மகாராசனாட்டம் இருக்கிறாய், ஆனால் மனதுக்குள் பல்வேறு போராட்டங்கள். ஒவ்வொரு காரியத்திலும் தடை. மனதுக்குள் வலி. எந்தப் பிசினஸும் ஒழுங்காக நடப்பதில்லை. கண் திருஷ்டி இருக்கிறது. அதுதான் உன்னை இந்தப் பாடு படுத்துகிறது. உன்னால் கை காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு எங்கேயோ இருக்கின்றார்கள். ஆனால் நீயோ இருந்த இடத்திலேயே இருக்கின்றாய், இன்னும் கொஞ்சம் குறி சொல்லனும், அந்த சேரில் உட்காரட்டுமா?”

”பாட்டி நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் இல்லை. ஒன்றும் வேண்டாம். கிளம்புங்கள்” என்றேன்.

அந்த மூதாட்டியோ திரும்பவும் ”உனக்கு கண் திருஷ்டி நிறைய இருக்கு, அதைச் சரி செய்ய வேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே எதிரில் அமர எத்தனித்தார்.

”பாட்டி அப்படி ஏதாவதிருந்தால் அதோ அங்கே போட்டோவில் உட்கார்ந்திருக்கின்றாரே எனது குரு நாதர் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்” என மறுத்தேன். சுவாமியைப் பார்த்தார் அந்த மூதாட்டி. ”நீ நன்றாக இருப்பாயப்பா” என்றுச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

மனதுக்குள் ஏதும் பிரச்சினையோடு இருந்திருந்தால் பாட்டி பர்சைக் காலி செய்திருக்கும்.

கடந்த வாரம் ஒரு பெரியவர் அலுவலக வாசலில் வந்து நின்று கொண்டு, “வயதானவன், நல்ல வார்த்தை சொல்வேன், காபி குடிப்பதற்கு ஏதாவது தர முடியுமா?” என்று கேட்டார். நான் திரும்பிக் கொண்டேன். எனது நண்பர் இரக்க சுபாவி. அவரை உள்ளே வர வைத்து எதிரில் அமர்ந்து கொண்டார்.

பிறந்த நாள், நேரம், இடம் கேட்டார். நண்பர் சொன்னார். கையை நீட்டச் சொன்னார். தட்சிணை வைக்கச் சொன்னார். நண்பர் திகைத்து விட்டு எவ்வளவு என்று கேட்டார்.”ஒரு நூறு ரூபாய் வையுங்களேன்” என்றார் கிழவர். நண்பர் வேறு வழி இன்றி கையிலிருந்த நோட்டுகளை எடுத்துக் கையில் வைக்க அதைக் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டு பலன் சொல்ல ஆரம்பித்தார்.

மேலே அந்த மூதாட்டியார் சொன்னாரே அதையே அந்தப் பெரியவரும் சொன்னார். ஐந்து நிமிடங்களாய் ஒப்பேத்தி விட்டு, அடுத்து உங்கள் குழந்தைகளுக்கும் பார்க்கலாமா என்று ஆரம்பித்தார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டே நண்பரைப் பார்க்க, நண்பரோ அலறியடித்துக் கொண்டு போதும் என்றுச் சொல்லி எழுந்து விட்டார்.

அடுத்து பெரியவர் என்னைப் பார்த்து, ”அய்யா உங்களுக்கு?” என்று ஆரம்பித்தவுடனே பெரிய கும்பிடு போட்டு விட்டேன். ஆள் எழுந்து விட்டார்.

“அறுபது ரூபாய்” கொடுத்தேன் என்றார் நண்பர் வருத்ததுடன்.


Monday, April 6, 2015

நிலம்(15) - முப்பாட்டனார் சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டா?

கடந்த வாரத்தில் எனது நண்பரொருவர் என்னைச் சந்தித்தார். அவர் ஒரு இடத்தினை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், என்னிடம் லீகல் ஒப்பீனியன் பெறலாம் என்றும் வந்திருப்பதாகவும், வெகு கவனமாக ஆவணங்களைப் பரிசீலித்து கிரையம் செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

முப்பாட்டனாரின் சொத்தில் இன்றைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். தாத்தா சொத்துப் பேரனுக்கும் உண்டு என்று கிராமத்தில் கூடச் சொல்வார்கள். தந்தை கூட விற்க முடியாது என்பர் பலர். ஆமாம் அதுதான் உண்மையும் கூட.

நண்பர் கொண்டு வந்து கொடுத்த சொத்தானது, தற்போது விற்பனை செய்ய விரும்பியவரின் தாத்தாவுக்கும் தாத்தா கிரையம் பெற்ற சொத்து. எந்த வித உயிலும் எழுதி வைக்காமல் அனைவரும் காலமாகி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் என்றுச் சொல்லக்கூடியவரின் தந்தை இந்தச் சொத்தில் ஒரு பகுதியை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இது செல்லாது என்கிறார் த.உ.எ.சொ. அது உண்மைதான் என்று அனைவருக்கும் தெரியும். தாத்தா சொத்து பேரனுக்கு இல்லாமல் விற்க இயலாது.

ஆனால் அந்தக் கிரைய ஆவணத்தை படிக்கும் போது அதில் முக்கியமான விஷயமொன்று இருந்தது. குடும்பத்தின் பணத்தேவைக்காக மேற்படிச் சொத்தினை வேறொருவரிடம் அடமானம் செய்து வைத்திருந்திருக்கிறார் த.உ.எ.சொவின் தந்தை. அதை மீட்பதற்காகவும், மேலும் பணத்தேவைக்காகவும் மேற்படி முப்பாட்டனார் சொத்தினை விற்றிருக்கிறார் அந்த தந்தை. அதாவது குடும்பத்தின் பணத்தேவைக்காக பணம் தேவைப்படும் போது முப்பாட்டனார் சொத்தினை இதர வாரிசுகளின் அனுமதியின்றி ( நிரூபிக்கப்படும் பட்சத்தில்) விற்பது தவறில்லை என்கிறது ஒரு தீர்ப்பாணை.

அந்த விற்பனை செய்யப்பட்ட சொத்தினைத்தான் எனது நண்பர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார். 

கிட்டத்தட்ட நான்கு கோடி இருக்கும் அந்தச் சொத்து. தப்பித்துக் கொண்டார் நண்பர்.... 

வாழ்க வளமுடன் !!!

Sunday, April 22, 2012

சித்திரை மாதத்தில் பிறந்தால் சாதிக்கலாமா?

சித்திரை மாதம் பிறந்தால் நல்லது அல்ல என்று சொல்லுவார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் தான் சார்லி சாப்ளின், விக்டோரியா மகாராணி, சாமுவேல் ஜான்சன், ராணி எலிசபெத், மாவீரன் அலெக்ஸாண்டர், கார்ல் மார்க்ஸ், டார்வின், ஷேக்ஸ்பியர், லெனின், மனோன்மணியம் சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர்கள் சித்திரை மாதத்தில் தான் பிறந்திருக்கின்றனர் என்று தினமணியில் எழுதி இருந்தார்கள்.

ராணிகளைத் தவிர மற்ற அனைவரும் சின்னஞ் சிறு வயதில் பட்ட துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் சித்திரையில் பிறந்து சாதித்தவர்கள் பட்ட துயரங்களை விட சாதித்தவை பெரிதாக இருக்க முடியுமா என்று எனக்குப் புரியவில்லை.

துன்பங்கள் தான் வாழ்க்கையைச் செம்மைப் படுத்த இயலும் என்பார்கள். எனக்குப் பிடித்த அப்துற் றஹீம் அவர்கள் “வாழ்க்கை ஒரு முள் செடி போன்றது, அதில் பூத்திருக்கும் பூவில் இருக்கும் தேனை முள் குத்தாமல் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருக்கவே முடியாது” என்பார்.

வாழ்க்கை எல்லோருக்கும் இன்பமானதாய் இருந்ததாய் யாரும் சொல்லவில்லை. விரலுக்கேற்ற வீக்கம் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ஏழைக்கு ஒரு பிரச்சினை,பணக்காரனுக்கு ஒரு பிரச்சினை என்று பிரச்சினை இல்லாதோரை இவ்வுலகத்தில் காணுவதே அரிதென்றாகி விட்டது.

எந்த மாதத்தில் பிறந்தாலும், பிறப்பவர்களுக்கு பிரச்சினை வரத்தான் செய்கிறது. மாதத்தில் எதுவும் இல்லை, மனதில் தான் வாழ்க்கையின் இன்பமே இருக்கிறது என்கிறார் எனது ஆன்மீகவாதி நண்பர் ஒருவர்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்.

Monday, January 24, 2011

புது வீடு கட்டும் முன்பு கவனிக்க வேண்டியவை

மனிதர்கள் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமான வீடுகளைப் பற்றி நாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து வருகிறோம். ஒரு மொபைல் போன் வாங்கும் போது, அதன் செயல்பாடுகள் என்ன? விலை சரியா, வாரண்டி இருக்கா என்றெல்லாம் யோசித்து வாங்கும் நாம், நமக்கான அடையாளமாய், நம் வாழ்வோடு கூடவே வரும் தோழனாய் இருக்கும் வீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள சோம்பல் படுகிறோம். பலபேருக்கு இவ்விஷயங்கள் தெரியாது. 

வீடு வாங்க வேண்டுமென்றால் வாஸ்துகாரரை அழைத்து பீஸ் கட்டினால் போதும் என்ற நிலைக்கு மக்கள் இருக்கின்றார்கள்.முழுவதும் தெரிய வேண்டாம், ஆனால் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா அதற்குதான் இத்தொடரை எழுதுகிறேன்.

இனி, புது வீடு கட்ட நிலம் வாங்க முனையும் போது, அந்த நிலம் வீடு கட்ட தகுதி உடையதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நிலத்தில் உயிர் நிலம், உயிரற்ற நிலம் என்று இருக்கின்றன. உயிர் நிலத்தில் மனித குலத்திற்கு நன்மை தரக்கூடிய செடிகள் முளைத்திருக்கும். உயிரற்ற நிலத்தில் புல், பூண்டு கூட முளைத்திருக்காது. மேடு, பள்ளம், பிளவுகள் இருக்கும். உயிர் நிலத்தில் வீடுகட்டினால் நல்ல வாழ்க்கை வாழலாம். உயிரற்ற நிலத்தில் வீடுகள் கட்டக்கூடாது என்று மனையடி சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.



நிலத்தினை மற்றொரு முறையிலும் சோதிக்கலாம். மையத்தில் ஒரு கை நீளம், அகலம், ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, மீண்டும் மூடினால், பள்ளம் நிறைந்து, மேலும் மண் முகடு தட்டினால் அது நல்ல நிலம் என்றும் அறியலாம்.பள்ளத்தை மூடக்கூடிய அளவிற்கு மண் இல்லை என்றால் அது மோசமான நிலம் என்று தெரிந்து கொள்ளவும்.

அதே பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி வைத்து, பின்னர் பார்த்தால் தண்ணீர் ஊற்றிய அளவிலேயே இருந்தால் மிக நல்ல நிலமென்றும், குறைவாக இருந்தால் நடுத்தரமான நிலமென்றும், உலர்ந்து போய் இருந்தால் தகுதியற்ற நிலமென்றும் தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது தண்ணீர் சத்து இருக்க வேண்டியது அவசியம்.

- கோவை எம் தங்கவேல்

Thursday, January 20, 2011

வீடு பற்றிய தொடர் - 5ம் பகுதி

இறுதியாக, வடமேற்குத் திசையில் அமைந்திருக்கும் வீடுகள் வழங்கக்கூடிய பலன்களைப் பார்க்கலாம்.  இந்த திசைக்கு உரிய கடவுள் “வாயு பகவான்”. இவர் அதீத வலிமை கொண்டவர் என்பதால் இவ்வீட்டில் வசிப்பவர்களும் நல்ல மன உறுதி படைத்தவர்களாகவும், சீர்திருத்தவாதிகளாகவும், சிந்தனாவாதிகளாகவும், எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடியவர்களாகவும், கடவுளின் பால் மிக்க பக்தி கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். ஆனால் இந்த திசையில் வீசக்கூடிய காற்றில் கசப்பு சுவை இருப்பதால், மெலிந்த தேகம் கொண்டவர்கள் வசிக்க ஏதுவானதல்ல என்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு வீடு என்பது அவனின் முகவரியாய் இருக்கிறது. அவனின் சம்பாத்தியங்கள், நிம்மதி, குடும்பத்தின் வளர்ச்சி, வாரிசுகளின் பெருக்கம் போன்றவற்றிற்கும் வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக மனிதனின் நல்லது கெட்டது அனைத்துக்கும் இவ்வீடுகளே பெரும் பங்காற்றி வருகின்றன.வீடு இல்லாதவரை பிச்சைக்காரன் என்று தான் அழைக்க முடியும். அவன் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும், புத்திசாலியாய் இருந்தாலும் கூட அவனுக்கென்று ஒரு வீடு இல்லையென்றால் அவன் ஒரு நாடோடி வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும். வாடகை வீட்டில் குடியிருப்போர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து ஒரு வீட்டினைக் கட்டிக் கொள்ளவோ அல்லது விலைக்கு வாங்கவோ முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு வீடு இல்லாத நபர்களுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் மிகச் சிறந்த சேவையைச் செய்து வருகிறது. ஒவ்வொருவரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் சம்பாத்தியத்திற்கு ஏற்றவாறு மிகச் சிறந்த வீடுகளை, மிகக் குறைந்த வட்டியில் விற்பனை செய்கிறோம். விரைவில் வெறும் 25 லட்ச ரூபாய்க்கு, 24 நான்கு தனித் தனியான வீடுகளை 1000 சதுர அடி பரப்பளவில், இரண்டரை செண்ட் நிலத்தில், இரண்டு பெட்ரூம்கள் கொண்டதாக அமைக்க விருக்கிறோம். கோவையின் பிரதான இடமான ஒண்டிப்புதூரில் இந்த வீடுகள் அமையவிருக்கின்றன. இதற்கு வங்கிக் கடனுதவியும் பெற்றுத் தருகிறோம். வாடகை செலுத்துவது போல, வங்கிக் கடனைச் செலுத்தினால் போதுமானது. வாடகை கொடுத்தால் போல வீடு உங்களுக்கு சொந்தமானதாகி விடும். 

வாசகர்கள் தொடர்ந்து எங்களது நிறுவன தளத்தினையும், எனது இந்த பிளாக்கினையும் படித்து வாருங்கள். அல்லது இமெயில் சப்ஸ்கிரிப்ஷன் செய்து வைத்து விடுங்கள். விபரங்களை விரைவில் அப்லோட் செய்கிறோம்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்

Friday, January 14, 2011

வீடு பற்றிய தொடர் - 3 (அனைவருக்குமானது)

வடக்குத் திசையில் தலைவாயில் கொண்ட வீடுகள் பற்றிப் பார்ப்போம். வடக்குத் திசைக்கு அதிபதியானவர் குபேரன். இவனின் தேகம் பலவீனமானது. ஆகையால் உள்ளமும் சாந்தமானது. ஆனால் செல்வத்தில் பெரியவன். வியாபாரம் செய்வதில் இவனுக்கு நிகர் எவருமில்லை. திசைக்கு அதிபதியைப் பற்றிப் பார்த்தோம். இனி இந்த வீட்டில் வசிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று பார்க்கலாம். 

மிகவும் பண ஆசை பிடித்தவர்களாய் இருப்பார்கள். வடக்கு காற்றில் ஈரமும், பிசுபிசுப்பும் இருப்பதால் சளிக்காய்ச்சல் நோயால் அவதிப்படுவார்கள். இவர்கள் வீட்டில் மருந்துகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வீட்டிலுள்ளவர்கள் பிறருக்கு தீங்கு செய்ய விரும்பமாட்டார்கள்.

வடகிழக்கு திசைக்கு ஈசானிய மூலை என்றுச் சொல்லுவார்கள். இந்தத் திசைக்கு அதிபதி ஈசுவரன். இத்திசையில் வசிப்பவர்களுக்கு அதிர்ஷடம் அடிக்கும் பாக்கியம் உண்டு. மிகவும் கோபமானவர்களாகவும், எவரையும் எளிதில் நம்பாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஆன்மீக வழியில் ஈடுபடுவார்கள். கல்வியில் சிறந்தவராய் இருப்பார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுவார்கள்.

இனி ஃபார்ச்சூன் பிரிக்சின் மிக முக்கியமான சர்வீஸ் ஒன்றினைப் பார்க்கலாம். வெளி நாடுகளில் வசிக்கும் பலருக்கு இந்தியாவில் வீடோ அல்லது வேறு சொத்துக்களோ இருக்கும். இச்சொத்துக்களை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் எவராவது அத்துமீறி சொத்தினை ஆக்கிரமித்து விடுவர். ஆக்கிரமிப்பினை அகற்ற பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும். காலமும், பணமும் விரயமாவதுடன், பெரும் வேதனையையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இம்மாதிரி சொத்துக்களை ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தங்களது நேரடிப்பார்வையில் கொண்டு வந்து அதை மெயிண்டெய்ன் செய்து வருகிறது. தற்போது கோவையிலும், திருப்பூரிலும் மட்டும் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேவையின் முக்கியமான சில அம்சங்களைக் கீழே பார்க்கலாம்.

1) வீடு என்றால் வாடகைக்கு விட்டு மாதா மாதம் பணம் வசூல் செய்து, சொத்தின் உரிமையாளரின் வங்கி கணக்கில் செலுத்தி அதன் ரசீதை ஆன்லைனில் அப்டே ட் செய்கிறோம்.


2) அட்வான்ஸ் தொகை முழுவதையும் அவ்வாறே செய்கிறோம்


3) வீட்டுக்கு பெயிண்ட் மற்றும் இதர மராமத்து வேலை, தோட்ட வேலை போன்றவற்றையும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களை வைத்து செய்கிறோம்.


4) பிற வகைச் சொத்துக்களையும் விவசாய பூமியென்றால் அதை வேலியிட்டு, தகுந்த பயிர் செய்ய குத்தகைதாரரை ஒப்பந்தம் செய்து, அதன் பலனையும் வருடம் தோறும் உரிமையாளருக்கு பெற்றுத் தருகிறோம்.


5) வெறும் இடமென்றால் வேலியிட்டு அதை பாதுகாப்பாய் வைத்திருக்கிறோம்.


6) வரி மற்றும் இதர கட்டணங்களையும் செலுத்தி அதை ஆன்லைனிலே உரிமையாளர் மட்டும் பார்க்கும் படியும் செய்கிறோம்.


7) மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் சர்வீஸ்களையும் வழங்கி வருகிறோம். 

இதனை ப்ராபர்ட்டி மெயிண்டனன்ஸ் என்று நாங்கள் அழைக்கிறோம். இது பற்றிய இதர விபரங்களை எங்களது நிறுவன இணையதளத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேற்படிச் சேவைக்கு வருடம் தோறும் ஒரு சிறிய கட்டணத்தை சர்வீஸ் சார்ஜாக வசூல் செய்கிறோம். மேலே பட்டியலிடப்பட்ட சர்வீஸ் தவிர வேறு எந்த சர்வீஸ் என்றாலும், நிறுவன விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். மேலும் விபரங்கள் அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும்.


கோவை எம் தங்கவேல்
எக்சிகியூட்டிவ் டைரக்டர்
ஃபார்ச்சூன் நிறுவனங்கள்
தொடர்புக்கு : +91 422 4275976

Thursday, December 16, 2010

தெய்வம் இருக்கிறதா? இல்லையா?

ஆத்தீகம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாத்தீகம் பற்றிய அனுபவ கதைகள் குறைவு என்பதாலும், நாத்தீகம் பேசிய தலைவர்கள் பிற்பாடு ஆத்தீகத்தின் பால் ஈடுபாடுடையவர்களாய் மாறிய கதைகளைக் கேட்டதாலும் நாத்தீகம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றுச் சொல்வார்கள். இம்மாதம் முழுவதும் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். மார்கழி மாதத்தில் எங்கள் வீட்டில் முதல் தேதியன்றி தாதர் சங்கும், சிகண்டியும் அடித்துக்கொண்டு விடிகாலையில் வீடுதோறும் வருவார். அவர் முகத்தைக் காண நான் பல முறை முயன்றிருக்கிறேன். தைமாதம் நெல் வாங்க வரும்போதுதான் அவர் முகத்தைப் பார்க்க முடியும். போர்வை போர்த்திய உடல், கையில் சங்கு, சிகண்டியை அடித்துக் கொண்டே வீடுதோறும் வேக வேகமாய் நடந்து செல்வார். அம்மா, பரங்கிச் செடியின் பூவினைப் பறித்துக் கொண்டி, மாட்டுச் சாணத்தில் சொருகி வைப்பார். பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து, கோலமிட்டு, அதன் மீது பூசணிப்பூவை வைத்து, பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி சங்கினை முழக்குவார். நான் அவரருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.
தினந்தோறும் பூசணிப்பூ வாசலில் மலர்ந்து இருக்கும். மாக்கோலமிடுவதால் வெயில் ஏறுகையில் எறும்புகள் படையெடுக்கும் சாரை சாரையாய். மார்கழி மாதம் முழுவதும் அம்மா இடும் கோலத்தைப் பார்க்க விடிகாலையில் எழுந்து விடுவேன். இப்படியே செல்லும் அந்த மார்கழி முழுவதும்.

நிற்க.

காதல் திருமணம் முடித்து வீட்டில் மனைவியை விட்டு விட்டு தொழில் பார்க்க வெளியூர் வந்து விட்டேன். அம்மாவிற்கும், சுற்றத்தாருக்கும் நான் வேற்று ஜாதி பெண்ணை மணந்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பிறப்பிலேயே முரட்டுக் குணமுடையவனாய் இருந்தால் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.அதுவுமின்றி ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதாலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பர்.

மனதுக்குகந்த மருமகள் என்றால் எல்லாம் கிடைக்கும். பிடிக்காத மருமகள் என்கிறபோது மண் சட்டியும் பொன் சட்டிதானே. பொன்னி அரிசி சாப்பிட்டு பழகிய மனைவிக்கு கோ 43 அரிசி சோற்றை வாயில் வைத்தாலே வாந்தி வந்து விடும். அவள் கர்ப்பினியாய் வேறு இருந்தாள். வாயில் வைப்பதும், பின்னர் அதை வெளியில் தள்ளுவதும்தான் வேலையாய் இருந்தாள்.

மனைவிக்கு விடிகாலையில் பசி வந்து விடுவாம். கிராமத்தில் எங்கே விடிகாலையில் சமைப்பார்கள்? சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே? பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது? மிகச் சரியாய் அந்த நேரத்தில் அவளுக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

மார்கழி மாதம் வந்தால் எங்கள் கிராமத்தில் பஜனை செய்வார்கள். விடிகாலையில் பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தவழ ஆரம்பிக்கும். பஜனை முடிந்ததும் சுண்டலோ அல்லது பொங்கலோ சிறார்களுக்கு கொடுப்பார்கள். இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது. எனது மாமாவின் மகன் நாள்தோறும் தவறாமல் பஜனைக்குச் சென்று வருவான். வரும்போது அவன் கையில் பொங்கல் இருக்கும். அந்தப் பொங்கலைச் சாப்பிட்டு மார்கழி மாதம் முழுவதும் பசியாறி இருக்கிறாள் மனைவி. அப்பையன் தற்போது பெரிய ஆளாகிவிட்டான். அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம், விருந்து தடபுடலாய் நடக்கும்.

மகனுடன் எங்காவது வெளியில் சென்றால், கோவிலைப் பார்த்ததும் பய பக்தியுடன் இறங்கி வணங்கி விட்டு வருவான். அப்போதெல்லாம் நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வோம்.

எங்கோ பிறந்து, வளர்ந்தவள் பசித்திருக்கும் போது, யார் மூலமாகவோ அவளுக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவை அனுப்பி வைத்தது யார்?

இனி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். தெய்வம் இருக்கிறதா? இல்லையா என்பதை.