குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சொத்து. Show all posts
Showing posts with label சொத்து. Show all posts

Monday, April 6, 2015

நிலம்(15) - முப்பாட்டனார் சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டா?

கடந்த வாரத்தில் எனது நண்பரொருவர் என்னைச் சந்தித்தார். அவர் ஒரு இடத்தினை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், என்னிடம் லீகல் ஒப்பீனியன் பெறலாம் என்றும் வந்திருப்பதாகவும், வெகு கவனமாக ஆவணங்களைப் பரிசீலித்து கிரையம் செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

முப்பாட்டனாரின் சொத்தில் இன்றைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். தாத்தா சொத்துப் பேரனுக்கும் உண்டு என்று கிராமத்தில் கூடச் சொல்வார்கள். தந்தை கூட விற்க முடியாது என்பர் பலர். ஆமாம் அதுதான் உண்மையும் கூட.

நண்பர் கொண்டு வந்து கொடுத்த சொத்தானது, தற்போது விற்பனை செய்ய விரும்பியவரின் தாத்தாவுக்கும் தாத்தா கிரையம் பெற்ற சொத்து. எந்த வித உயிலும் எழுதி வைக்காமல் அனைவரும் காலமாகி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் என்றுச் சொல்லக்கூடியவரின் தந்தை இந்தச் சொத்தில் ஒரு பகுதியை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இது செல்லாது என்கிறார் த.உ.எ.சொ. அது உண்மைதான் என்று அனைவருக்கும் தெரியும். தாத்தா சொத்து பேரனுக்கு இல்லாமல் விற்க இயலாது.

ஆனால் அந்தக் கிரைய ஆவணத்தை படிக்கும் போது அதில் முக்கியமான விஷயமொன்று இருந்தது. குடும்பத்தின் பணத்தேவைக்காக மேற்படிச் சொத்தினை வேறொருவரிடம் அடமானம் செய்து வைத்திருந்திருக்கிறார் த.உ.எ.சொவின் தந்தை. அதை மீட்பதற்காகவும், மேலும் பணத்தேவைக்காகவும் மேற்படி முப்பாட்டனார் சொத்தினை விற்றிருக்கிறார் அந்த தந்தை. அதாவது குடும்பத்தின் பணத்தேவைக்காக பணம் தேவைப்படும் போது முப்பாட்டனார் சொத்தினை இதர வாரிசுகளின் அனுமதியின்றி ( நிரூபிக்கப்படும் பட்சத்தில்) விற்பது தவறில்லை என்கிறது ஒரு தீர்ப்பாணை.

அந்த விற்பனை செய்யப்பட்ட சொத்தினைத்தான் எனது நண்பர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார். 

கிட்டத்தட்ட நான்கு கோடி இருக்கும் அந்தச் சொத்து. தப்பித்துக் கொண்டார் நண்பர்.... 

வாழ்க வளமுடன் !!!

Friday, June 13, 2014

நிலம்(8) - மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டா?

மிகச் சமீபத்தில் சில அழைப்புகள் வந்தன. ஒருவர் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தார். இன்னொருவர் சென்னையிலிருந்து அழைத்திருந்தார். அவர்களின் கேள்வி மூதாதையர் சொத்தைப் பற்றி இருந்தது.அதிலும் பெண்களுக்குப் பங்கு உண்டா என்பதைப் பற்றி இருந்தது. ஆகையால் அது பற்றிய ஒரு சில விளக்கங்களைப் பார்க்கலாம். பெரிய விஷயம். கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகிறேன். வேலைப்பளு அதிகம். ஓகே !

மூதாதையர் சொத்தில் வாரிசுகளுக்கு பாத்தியம் உண்டு என்று பெரும்பாலானோர் சொல்வார்கள். மூதாதையர் சொத்தில் நிச்சயம் வாரிசுகளுக்கு பங்கு உண்டு என்பது உண்மைதான் என்றாலும் ஒரு சில சிக்கல்களும் உண்டு. 

இந்து குடும்ப சட்டத்திருத்தம் 1990ன் படி மகள்களுக்கு பங்கு உண்டு என்ற திருத்தம் வந்தாலும் வந்தது பெரும்பான்மையான பெண்கள் வழக்கு மேல் வழக்குகள் தொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆசையின் வடிவமாய் கருதப்படும் பெண்கள் வழக்குத் தொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவர்களுக்கு உரிமையும் உண்டு என்று அரசே சொல்லி விட்டதால் மேலும் உற்சாகமடைந்த பெண்கள் இதே காரணத்தை வைத்து வழக்குத் தொடுப்பேன் என்றுச் சொல்லி பலருக்குப் பீதியையும், ரத்தக் கொதிப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். வழக்கு போடுவேன் என்றுச் சொல்லியே காசைப் பிடுங்கிக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.

குடும்ப உறவின் சிக்கல்கள் இந்த ஒரு சட்டத்திருத்தத்தால் மேலும் தீவிரமடைந்தன என்று நிச்சயம் சொல்லலாம். இந்துக் குடும்பத்தில் தாய் மாமன் உறவு ஒரு தந்தைக்கும், தாய்க்கும் மேலான ஒன்றாக கருதப்படுகிறது. உதாரணம் சொல்ல வேண்டுமெனில் தன் அக்காவோ அல்லது தங்கையின் மகளோ, மகனோ ஊனமாகப் பிறந்து விட்டால் தாய் மாமன் வயது சரியாக இருந்தால் திருமணம் செய்து கொள்வான், இல்லையெனில் தன் மக்களுக்குத் திருமணம் செய்து கொள்வான். தன் சகோதரிகளின் வாரிசுகளின் ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் அவன் தான் பொறுப்பு. அவனின் கடமை அத்துடன் முடிந்து விடுவதில்லை. அது வாழையடி வாழையாக தொடர்ந்து வரும் பொறுப்பு. அதை அவன் மகிழ்ச்சியுடன் செய்வான்.

இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்துக் குடும்பம். இந்தச் சட்டம் வந்தாலும் வந்தது. தாய் மாமன்கள் பாடு பெரும்பாடாய் போனது.

தொடரும்...

Saturday, March 22, 2014

நிலம்(5) - வெளியூரில் சொத்துக்கள் வைத்திருக்கின்றீர்களா கவனம்!

வெளியூர்களில் சொத்து வைத்திருக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இது. பொறுமையாகப் படிக்கவும்.
          
சமீபத்தில் ஒரு பூமி விலைக்கு வந்தது. அந்தப் பூமியில் ஒரு பிரச்சினை. டிடிசிபி அப்ரூவல் பெற்ற மனையிடத்தில் ஒரு மனையினை முத்து என்பவரின் மனைவி தேவி என்கிறவர் நில புரமோட்டரிடமிருந்து 1980ஆம் ஆண்டு கிரையம் பெறுகிறார். வில்லங்கச் சான்றிதழில் தேவியின் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது பதிவாகி இருக்கிறது. சொத்து தேவிக்கு உரிமையானது.

2011ம் வருடம் ராம் என்பவர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்கிறார். அது என்னவென்றால் எனக்குச் சொந்தமான பூமியை தேவி என்கிறவர் போலியாக ஆவணம் தயாரித்து உரிமை கொண்டாடுகிறார் என ராஜேஷ் என்பவரின் மனைவி தேவி என்றுக் குறிப்பிட்டு தேவி மீது (கவனிக்க) வழக்குத் தொடர்கிறார். 

தேவியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஏனென்றால் அப்படி ஒருவர் இல்லவே இல்லை. முத்துவின் மனைவி தேவிதான் இருக்கிறாரே தவிர ராஜேஷ் என்பவரின் மனைவி என்பவர் இல்லவே இல்லை.  பிரதிவாதியிடமிருந்து பதிலேதும் இல்லை.

ஆகையால் கோர்ட் ராம் என்பவருக்கே சொத்து உரிமையானது என்று உத்தரவு பிறப்பிக்கிறது. அந்த உத்தரவைக்  கொண்டு ராம் நில உடமைப் பதிவேடுகளில் மாற்றம் செய்கிறார்.

நில உடைமைப் பதிவேடுகளில் இப்போது நிலம் ராமுக்குச் சொந்தமானது. அப்போது தேவியின் சொத்து என்ன ஆனது?

மேற்படிச் சொத்துக்கு யார் உரிமையாளர்?

நிச்சயம் தேவிதான் உரிமையாளர்.

ராம் டாக்குமெண்டுகளை தயார் செய்திருக்கிறாரா என்றால் அதுவுமில்லை. அவர் கிரையம் பெற்றது சரியானது தான். அது எப்படி?

டிடிசிபி புரமோட்டருக்கு நிலம் எழுதிக் கொடுத்தவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சொத்து அவ்விடத்தில் இருந்திருக்கிறது. அந்தச் சொத்தினைதான் ராம் வாங்கி இருக்கிறார்.

அதெப்படி ஒரே சொத்துக்கு இருவர் உரிமையாளர்களாக இருக்கமுடியும் என்கின்றீர்களா?

நிச்சயம் முடியவே முடியாது.

அப்போது ராமின் பத்திரத்தில் என்னதான் பிரச்சினை?

ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது.

சொத்து விபரத்தில் குறிப்பிட்டுள்ளது முந்தைய உரிமையாளர்களுக்கு பாத்தியமற்ற வேறொரு இடம். அதுதான் பிரச்சினை. ராம் தவறான சொத்தினை வாங்கி இருக்கிறார்.

இதைக் கண்டுபிடித்து சரி செய்ய எத்தனை காலம் ஆகும் என ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.தேவிக்கு எவ்வளவு பிரச்சினை உண்டாகி இருக்கிறது என்று பாருங்கள்.

இந்தப் பிரச்சினையின் முழு காரணகர்த்தா டாக்குமெண்ட் எழுதியவர் மற்றும் சொத்தினை ராமுக்கு விற்றவர் இருவர் மட்டும் தான்.

ராம், தான் எந்தச் சொத்தை வாங்குகிறோம் என்று தெரியாமல் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அவர் வழக்குத் தொடுத்தது யார் மீது என்று பார்த்தால் அதுவும் தவறானது. ராம் நிச்சயம் கோர்ட்டை ஏமாற்றி இருக்கிறார் என்றே தெரிய வருகிறது.

இப்படியும் பிரச்சினை வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு என்னதான் வழி !

நன்கு அனுபவம் வாய்ந்த எழுத்தர்கள் அல்லது நல்ல சர்வீஸ் கம்பெனிகளை அணுகுவதுதான் சாலச் சிறந்தது.

இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.