குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, April 20, 2017

கிட்னியில் கல் நீக்க மருந்து

எனது நண்பரின் மகன் திடீர் வயிற்று வலிக்காக மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்த போது ஸ்கேனில் கிட்னியில் கல் இருப்பதாகத் தெரிந்திருக்கிறது. ஆபரேசன் அது இதுவென்று பத்தாயிரத்துக்கும் மேல் செலவாகும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். கிட்னி கல்லை ஆபரேஷன் செய்து எடுத்தாலும் மீண்டும் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்றும் சொல்ல பையனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

வீட்டுக்கு வந்து தந்தையிடம் சொல்லி இருக்கின்றான். அட லூசுப்பயலே, இதுதானா பிரச்சினை, கவலையை விடு, சரி செய்து விடலாம் என்றுச் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அவருக்குத் தெரிந்த ஒரு நாட்டு மருந்து கொடுப்பவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

600 ரூபாய் விலையாம். அடுத்த இரண்டொரு நாட்களில் கிட்னியிலிருந்த கல் உடைந்து சிறு நீருடன் வெளியேறி இருக்கிறது. பையன் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறான். பத்து எம்.எம். கல் இருந்தாலும் உடைந்து சிறு நீரோடு வெளியேறி விடுமாம். 

சாதாரண கிராமத்தில் இருந்து கொண்டு அந்த நாட்டு மருந்தினை பிரச்சினை இருப்பவருக்கு உடனுக்குடன் செய்து கொடுக்கின்றார்களாம். 

உங்களுக்குத் தெரிந்தவருக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்றால் என்னை அழைக்கச் சொல்லவும். மருந்து வாங்கித் தர ஏற்பாடு செய்து தருகிறேன். வெளியூரில் இருப்போர்கள் அவசியம் கோவை வர வேண்டும். பார்சலில் மருந்து வாங்கி அனுப்ப இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் நேரில் வர வேண்டுமென்பது கட்டாயம்.

தேவைப்படுபவர்கள் அழைக்கலாம். காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மட்டுமே அழைப்புகளை எடுக்க இயலும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Thursday, April 6, 2017

அம்முவுக்குச் சொன்ன அப்பத்தாவின் வாழ்க்கை

பத்து வீடு தள்ளி இருக்கும் பள்ளி வாசலிலிருந்து வரும் பாங்கழைப்புக் கேட்டு நான்கரை மணிக்கு எழுந்து குடத்தடிக்குச் சென்று குளிர்ந்த நீரை எடுத்து முகம் கழுவி விட்டு, அடுப்புச் சாம்பல் எடுத்து பல் துலக்கி, வாய் கொப்பளித்து விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று சவுக்கில் பின்னப்பட்ட கூடையில் சாணியை வழித்து எடுத்து குப்பைக்கிடங்கில் கொட்டி விட்டு, அதில் கொஞ்சம் சாணியை எடுத்துக் கொண்டு வந்து வாளியில் வைத்து தண்ணீர் ஊற்றி கையால் தெளிக்கும் அளவுக்குக் கரைத்து வாசலுக்குக் கொண்டு வந்து பதவிசாக தெளித்து விட்டு, வாளியை ஓரமாக வைத்து விட்டு, ஒரு ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும் கொட்டிக் கிடக்கும் இலை தழைகளையும் குப்பைகளையும் பெருக்கிக் குப்பைக் கிடங்கில் சேர்த்து விட்டு நிமிர்ந்து கட்டுத்தறிக்குச் செல்லும்.

கட்டுத்தறியில் கட்டிக் கிடக்கும் மாடுகளுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை உருவி எடுத்து வந்து தீனி போட்டு விட்டு, வீட்டுக்குள் நுழைந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டுபோய் குடத்தடியில் போட்டு விட்டு அதில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து விட்டு, அடுப்படிக்கு வந்து அடுப்புச் சாம்பலை ஒரு தட்டில் வறண்டி எடுத்து வைத்து விட்டு சோத்துப் பானையில் முக்கால் திட்டம் தண்ணீர் எடுத்து அடுப்பின் மீது வைத்து விறகை எடுத்து அடுப்பினுள் வைத்து அதனுள்ளே பதவிசாக தீக்குச்சி உரசி விறகைப் பற்ற வைத்து விட்டு குடத்தடிக்கு வரும்.

சாம்பலில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கையில் தேங்காய் நாரை எடுத்துச் சேர்த்து வைத்துக் கொண்டு சாம்பலைத் தொட்டுக்கொண்டு அத்தனை பாத்திரங்களையும் விருட் விருட் என்று துலக்கி தண்ணீர் விட்டு அலசி சுத்தமாகக் கழுவி எடுத்து அடுப்பங்கரைக்குள் நுழைந்தால் அடுப்பில் இருந்த உலைப்பானையில் தண்ணீர் தளதளவென்று கொதித்துக் கொண்டிருக்கும்.

இரண்டு படி அரிசி எடுத்து தண்ணீர் ஊற்றி கழுவி, கழனித் தண்ணியை மாட்டுப்பொக்கையில் விட்டு களைந்தெடுத்த அரிசியைக் கொண்டு வந்து உலையில் போட்டு விட்டு, பக்கத்து அடுப்பினை மூட்டி அதில் முதல் நாள் மீந்திருந்த குழம்புகளைச் சுட வைத்து இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் காய்கறிகளை எடுத்து நறுக்கி பொறியலோ அல்லது கூட்டோ செய்து விட்டு, வடகம், மிளகாய் வத்தல்களை பொறித்து எடுத்து வைத்து விட்டு, அதற்குள் வெந்த சோறுப்பதம் பார்த்து கஞ்சியை வடித்து விட்டு, ஈரத்துணியில் சோற்றுப்பானையைச் சுற்றிலும் துடைத்து பிருமனையின் மீது வைத்து விட்டு, வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கி குப்பையை அள்ளி குப்பைக்கிடங்கில் சேர்த்து விட்டு நிமிரும்.

கதறும் மாட்டின் கன்றினை அவிழ்த்து விட்டு, மடியில் பால் சுரந்ததும் கன்றினைக் கட்டிப் போட்டு கொஞ்சம் பாலைக் கரந்து கொண்டு வந்து அடுப்பில் வைத்து சுட வைத்து விட்டு, மோர்ப்பானையை எடுத்து மத்தை வைத்து கரகரவென கடைந்து திரளும் வெண்ணையை வழித்தெடுத்து, அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மகன் தங்கத்தின் வாயில் வெண்ணெய் உருண்டையில் கொஞ்சம் போட்டு விட்டு மோரை எடுத்து பாத்திரத்தில் வைத்து விட்டு பெரிய தவளைப் பானையை எடுத்து அதில் சோற்றினைப் போட்டு மோர் ஊற்றி உப்புச் சேர்த்து வயக்காட்டில் வேலை செய்பவர்களுக்கு கஞ்சியை தயார் செய்து, தொட்டுக்கொள்ள வெந்தய மாங்காய் ஊறுகாய், அடமாங்காய், மிளகாய் வத்தல், வடகம் எடுத்து வைத்து, பனை ஓலை நறுக்கை ஆள் கணக்குக்குத் தகுந்தாற் போல எடுத்து கட்டி வைத்து விட்டு, வீட்டு ஆட்களுக்கு சோறு போட்டு கொடுத்து விட்டு தலையில் சும்மாடு வைத்து தவளைப் பானையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இடுப்பில் கூடையில் சைடு டிஷ் வகையறாக்களுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் ஐந்து கிலோ மீட்டர் தூரமிருக்கும் வயலுக்குச் செல்லும்.

வயலில் இருந்து திரும்பி வரும் போது கையோடு காய்கறிகளோ அல்லது மீனோ அல்லது நண்டோ இருக்கும். மீன் இருந்தால் அதை சிலாம்பு நீக்கி தலையை அரிந்து, சட்டியில் போட்டு உப்புச் சேர்த்து உரசி, தண்ணீர் விட்டு அலசி, வெள்ளிக்கம்பி போல மின்னும் மீனுடன் அடுப்பங்கரைக்குள் நுழைந்து கைப்பக்குவத்தின் மகிமையில் வீடே மணக்கும் மீன் குழம்போ அல்லது காய்கறிக் குழம்போ தயார் செய்து வைக்கும்.

வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வேலைக்காரர்களுக்கு சோறு போட்டு மீன் குழம்பினை ஊற்றிக் கொடுக்க அவர்களும் வயறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு ’போய்ட்டு வாரேன், தேவச்சியாரே!’ என்றுச் சொல்லி விடை பெறுவர். 

பள்ளி சென்று வீட்டுக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டு கிணற்றடிக்குச் சென்று பொக்கையில் இருக்கும் தண்ணீரில் குளித்து விட்டு மாலை மயங்கும் நேரத்தில் வாசலில் உட்கார்ந்தால் மணக்கும் மீன் குழம்போடு சாப்பாடு கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொல்லும். சாப்பிட்டு விட்டு பாடப் புத்தகத்தை விரித்து வைத்து படித்து விட்டு எட்டு எட்டரைக்கெல்லாம் தூங்கப் போய் விடுவேன்.

மறு நாள் காலையில் பாங்கழைக்கும் நேரத்தில் அருகில் அம்மா இல்லாததைக் கண்டு திரும்பிப் படுப்பேன்.

காய்ந்து போன இலைச்சருகுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் ’வரட், வரட்’ சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். விடிகாலைக் குளிர் தூக்கம் சுகமானது. தாலாட்டுவது போல அம்மா கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும் சத்தம் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும்

Monday, March 27, 2017

வாளை மீன் கருவாட்டு வறுவல்

என் சிறு வயதில் கவுச்சி சுத்தமாகச் சாப்பிட மாட்டேன். என்னவோ தெரியவில்லை இது நாள் வரையிலும் கோழிக்கறி சாப்பிட்டதே இல்லை. எனக்குக் கோழி வாசம் சுத்தமாகப் பிடிக்காது. மீன் குழம்பு, நண்டுக் குழம்பு வகையறாக்களைத் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டேன். கருவாடு என்றால் அய்யோ அம்மா என்று அலறி விடுவேன்.

கீரமங்கலத்துக்குப் படிக்கச் சென்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட ஆரம்பித்தேன். எனக்குப் பிடித்த உணவு என்றால் முருங்கைக்கீரைக் குழம்பும், வாழைப்பூ பொறியலும், வெந்தய மாங்காய் ஊறுகாய், சுடுசோற்றில் மோர் சேர்த்தக் கஞ்சியும்தான். கல்லூரி சென்ற பிறகு மட்டன், மீன், நண்டு, இறால் என்று சாப்பிட ஆரம்பித்தேன். சாம்பாரைச் சாப்பிட்டு சாப்பிட்டு மக்கிப் போன நாக்குக்கு டிபரண்டாக கிடைத்தால் விடுமா? புகுந்து விளையாட ஆரம்பித்தேன்.

என் ஊரில் இன்றைக்கு தமிழகமெங்கும் பிரபலமான வஞ்சிரம் மீனை தொட்டுக்கூடப் பார்க்க மாட்டார்கள். சுவையற்றுச் சப்பட்டின்னு இருக்கும். பன்னா மீன், தட்டக்காரா, பொடி மீன்கள், வாவல் மீன், பச்சை முறல் மீன், கணவாய் மீன்கள் தான் பிரபலம். எனக்கு ரொம்பவும் பிடித்தது முறல் மீன் தான். திட்டமாக மிளகாயும், புளியும் சேர்த்து வைத்தால் இந்த மீன் சுவையை அடித்துக் கொள்ள எதுவும் இல்லை.  இந்த மீன் வறுவல் அள்ளும். 


இந்த மீன் பெயர் தான் முறல் மீன். பச்சை முறல் மீன் குழம்புக்கும் வறுவலுக்கும் ஏற்றது. கண்ணாடி மாதிரி இருக்கும்.

மஞ்சள்பொடி, சோம்பு, பூண்டு, மணத்துக்கு சின்ன வெங்காயம் கொஞ்சம், மிளகாய்ப் பொடி சேர்த்து மசாலா அரைத்து மீன் மீது கொட்டிக் கிளறியவுடனே (மறக்காமல் உப்புச் சேர்த்துக் கொள்ளவும்) வறுவல் செய்யலாம். இப்போதெல்லாம் மீனை மசாலா சேர்த்து வெயிலில் கருவாடாகக் காய வைத்து அதன் பிறகு பொறிக்கின்றார்கள். கொடுமை அப்படி ஒரு கொடுமை. மீன் கருவாடாகி அதை வறுத்தால் மீன் சுவையா கிடைக்கும்?

கோ 45 அரிசிச் சோற்றுடன் எந்தக் குழம்பைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் சுவை அள்ளும். இப்போது சாப்பிடுகின்றோமே பொன்னி அரிசி அது மாதிரி சுவை கெட்ட அரிசி வேறு எதுவும் இல்லை. ஐஆர் 20 அரிசி கூட பரவாயில்லை ரகம் தான். கோ 45 அரிசியைக் குழைய வைத்து அதில் முருங்கைக் கீரை பருப்புக் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

பழைய சோற்றினை உருண்டைப் பிடித்து அதில் ஒரு குழியை கட்டை விரலால் அழுத்தி தட்டக்கருவாட்டுக் குழம்பில் கிடக்கும் வாழைக்காயை எடுத்து வைத்து கொஞ்சூண்டு குழம்பை அதில் ஊற்றி அப்படியே வாய்க்குள் வைத்தால் அதை விட எந்த ருசியும் கிட்டே நிற்காது. தங்கராசு வயலுக்குச் சென்று விட்டு வந்தால் குண்டான் நிறையைக் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து இப்படித்தான் சாப்பிடுவான். எனக்கும் தருவான். வீட்டில் எவராவது பார்த்தார்கள் என்றால் என் தோல் உரிந்து விடும். யாருக்கும் தெரியாமல் அவனிடம் ஒரு வாய் வாங்கிக் கொள்வேன்.


(வாளை மீன் கருவாடு)

சரி வாளை மீன் கருவாடு எப்படி செய்வது என்றுச் சொல்லித் தருகிறேன். கருவாடு கிடைத்தால் செய்து சாப்பிட்டுப் பார்க்கவும். வாளை கருவாட்டில் உடம்பின் பகுதியை மூன்று அங்குல சதுரமாக கட் செய்து கொள்ளவும். கொஞ்சூண்டு சுடுதண்ணீரில் அமிழ்த்தி அலசிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பிறகு இந்த வாளைக் கருவாட்டுத்துண்டுகளை அதில் சேர்க்கவும். எண்ணெயில் நன்கு பொறிந்து உடைய ஆரம்பிக்கும். கவலைப்பட வேண்டாம். கருவாடு தூள் தூளாக உதிரி உதிரியாக மாற வேண்டும். 

கருவாடு உடைந்து கொழ கொழவென மாறி பின்னர் உதிரி உதிரியாக மாறும். அப்போது கொஞ்சூண்டு சோம்பு அதனுடன் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து இடித்து அதை எடுத்து இந்தக் கருவாட்டுடன் சேர்க்கவும். கொஞ்சூண்டு மிளகாய்ப் பொடியைத் தூவி சுருளச் சுருள வதக்கவும். பொறு பொறுவென வரும். அதுதான் பக்குவம். அடுப்பை அணைத்து வாணலியில் இருந்து உதிரான கருவாட்டினை பக்குவமாய் கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதில் முள் இருக்கும், கருவாடு வறுபட வறுபட முட்கள் எல்லாம் வெளியில் வந்து விடும். அதை எடுத்து எறிந்து விடாதீர்கள். அதற்கும் ஒரு பயன் இருக்கு.

கருவாடு வறுக்கும் போது வாயில் இருந்து வடியும் ஜொள்ளை வாய்க்குள்ளே அடக்கிக் கொள்ளவும். இதுதான் வெகுமுக்கியம். இல்லையென்றால் வாணலி நாறிப் போய் விடும்.

தட்டில் கொஞ்சம் சுடுசோற்றினைப் போட்டு நாசமாப் போன ஜெர்சிப்பசு மாட்டின் தயிரைக் கொஞ்சூண்டு எடுத்து சூட்டோடு சூடாகச் சேர்த்து கொஞ்சம் கல் உப்பை எடுத்து சோற்றில் போட்டு கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து மெதுவாக கையால் பிசைந்து கொள்ளவும். எல்லாம் முடிந்ததா?

இப்போது ஒரு கவளம் தயிர்ச்சோறு அதன் பிறகு கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மூன்றையும் ஒன்றாக்கி வறுத்து வைத்திருக்கும் கருவாட்டில் கொஞ்சம் எடுத்து நடு நாக்கில் வைக்கவும். அடுத்து என்ன? இனிமேல் படிக்கவா போகின்றீர்கள்.

சாப்பிட்டு முடித்து விட்டீர்களா? தட்டில் சோறும் இருக்காது, கருவாடும் இருக்காது. ஆனால் கருவாட்டு முள் இருக்குமே அதை மறந்து விடாதீர்கள். அப்படியே ஓரமாக எடுத்து வைத்த வெங்காயத்தை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள். சவுக் சவுக்கென கருவாட்டு வாசத்தோடு வெகு அருமையாக இருக்கும். அடுத்து முள்ளை ஒவ்வொன்றாக எடுத்து இரு விரல்களால் பிடித்துக் கொண்டு நாக்கில் வைத்து தடவினால் மிச்ச சொச்ச கருவாட்டின் சுவையும் நாக்கில் சேர சொல்லவா வேண்டும்? அனுபவித்துப் பாருங்கள். அழகான மச்சினிச்சி முகமும் மறந்து போகும். மறக்காமல் மச்சினிச்சிக்கு கொஞ்சம் அனுப்பி வைத்து விடுங்கள். மச்சினிச்சி இல்லாதவர்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள்.

வாளை மீன் கருவாட்டு வறுவலும் சுடச்சுட தயிர்சோறும் சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன் அமிர்தத்தை மிஞ்சி விடும் இந்த உணவின் ருசி!

Saturday, October 22, 2016

நண்பனுக்கோர் கடிதம் - மங்கை நீ மாங்கனி

பட்டுக்கோட்டைக்கும் புதுக்கோட்டைக்கும் செல்லும் பேருந்துகள் ஆவணம் வழியாகத்தான் செல்லும். தஞ்சாவூர் பெரிய கோவிலின் வழியாக வரும் காவிரி ஆற்றின் கிளை நதி ஊரின் கிழக்கே செல்லும். கடைமடைப் பகுதியாதலால் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது. நதி தாண்டியதும் வயல்கள் பரவிக்கிடக்கும். கிளை நதியிலிருந்து பிரியும் சிறிய ஆற்று வாய்க்காலும் கடல் நோக்கிச் செல்லும். இந்தக் கிளை நதியின் மேல்புறமாகத்தான் அடியேன் படித்த அரசு மேல் நிலைப்பள்ளி இருக்கிறது.  


(எனது அலுவலகத்தில் 1997ம் வருடத்தின் புகைப்படம்)



(மறைந்த எனது நண்பன் ஜஹாங்கீர் ஆலம்)

ஒன்பதாம் வகுப்பில் தான் எனது பள்ளித்தோழன் ஆலத்தைச் சந்தித்தேன். ஊரில் ஆலத்தின் அப்பாவும் எனது தாத்தாவும் நண்பர்கள். தாத்தா மாணிக்கதேவர் நேதாஜியின் இந்திய தேசியப்படையில் வீரராக இருந்தவர். அப்போது அவர் மலேசியாவில் இருந்தாராம். மலேசியாவில் பெரிய கடை வைத்து நடத்திவர் தான் ஆலத்தின் அப்பா இஸ்மாயில் ராவுத்தர். பெரிய மட்டப்பாறை வீட்டில் தான் வசித்து வந்தார். 

ஆலத்திற்கு மூன்று சகோதரர்கள். அக்பர், ஒளரங்கசீப், பகதூர்ஜா  பின்னர் ஜகாங்கீர் ஆலம் என இவன். மன்னர்களின் பெயர்கள் அல்லவா? அதற்கேற்ப ஆலம் இளவரசன் போலத்தான் வாழ்ந்தான். பள்ளியில் அவனுக்கு என்று தனி நட்பு வட்டமே உண்டு. வித விதமான உடைகள், உணவுகள் என அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டமே இருந்தது.

ஆலம் ஏன் என்னிடம் நட்பு கொண்டான் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனது பெயருக்கு அடுத்த பெயர் அவனது. பரிட்சையில் ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தான். எனது நட்பு அவனுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் என்னிடம் நெருங்கிப் பழகினான். எனக்கு அவன் போட்டியில்லை என்பதால் நான் அவனைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. தேர்வில் எனது பேப்பரை பெற்று அப்படியே காப்பி அடித்து வைப்பான். பாஸ் செய்வதற்கு மட்டும் தான் எழுதுவான். அதிக மதிப்பெண் பெறுவது அவன் நோக்கமல்ல. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து விட்டான். உபயம் அடியேன்.

ஜோசப் வாத்தியாரிடம் டியூசன் படிக்கச் சென்ற போது முதன் முதலாக  ஆலத்தின் வீட்டுக்குச் சென்றேன். கத்தரிப்பூ கலரில் அழகான டப்பாவில் இனிப்புகள் இருந்தன. எடுத்து என்னிடம் கொடுத்து அனைத்தையும் சாப்பிடு என்றான், ஓவல் காப்பி கொடுத்தான். எனக்கு எல்லாமே புதிதாக இருந்தன. ஓவல் டின் காப்பி எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. 

பத்தாம் வகுப்பு வந்த பிறகு வாரம் தோறும் அவனது வீட்டுக்குச் சென்று இருவரும் சேர்ந்து படிப்பதுண்டு. எனது சில நண்பர்களும் என்னுடன் வருவார்கள். ஆலத்தின் அப்பாவுக்கு அவன் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்ற அடங்காத ஆசை. ஆனால் ஆலமோ படிப்பது என்றால் எட்டிக்காயாக நினைப்பான். அப்பாவின் ஆசைக்காக படிப்பான். அவனது எழுத்து கோர்வையாக இருக்கும். இதுவரையிலும் அவனைப்போல எழுதுபவரை நான் பார்த்ததே இல்லை. கோடு போட்டது போல வெகு அழகான கையெழுத்து. 

சிறிய வயதில் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதது காலத்திற்கேற்ப கிடைக்க வேண்டும். எல்லாமும் கிடைத்து விட்டால் போகும் வழி மாறி விடும். பத்தாம் வகுப்பிலேயே சிகரெட், தண்ணீர், சீட்டு என்று பழகிக் கொண்டான். வேறு என்ன பழக்கங்கள் இருக்கின்றனவோ அத்தனை பழக்கங்களும் அவனிடம் தொற்றிக் கொண்டன. அவனிடமிருந்து நான் தருவித்துக் கொண்டது சிகரெட். பாரின் சிகரெட் பண்டில் பண்டிலாக குடிப்பான். அடிக்கொரு தடவை டீ அருந்துவான். அப்பா மலேஷியா சென்று விட்டால் குஷியாகி விடுவான். கேட்க கேட்கக் பணம் கொடுத்து செல்லமாக வளர்த்தார் அவனின் அம்மா. அவன் முகம் சுண்டி விட்டால் அந்தம்மாவுக்குத் தாங்காது.

அடிக்கடி எனது வீட்டுக்கு வருவான். இருவரும் பத்தாயப்பெட்டிக் கொட்டைகையிலும், மாமரத்தின் அடியிலும் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருப்போம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் அவனுக்கும் எனக்குமான நட்பு அவ்வப்போது பார்த்துக் கொள்வது என்று ஆகி விட்டது. நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு எப்போதாவது வீட்டுக்கு வருவான். நானும் சென்று வருவேன். அதன் பிறகு முற்றிலுமாக நின்று விட்டது. கரூருக்கு வந்த பிறகு அவன் ஆவணம் கைகாட்டியில் இருக்கும் வியெஸ்ஸெம் மகளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் இரண்டு குழந்தைகள் என்றும் கேள்விப்பட்டேன். ஒரே ஒரு முறை போனில் பேசினேன்.

எனக்குத் திருமணமான பிறகு ஒரு முறை அவன் வீட்டுக்குச் சென்றேன். காரின் ஓட்டுனர் வீடு பூட்டிக் கிடக்கிறது என்றார். திரும்பி விட்டேன். அவன் இறந்து விட்டான் என்றுச் சொன்னார்கள்.

நானும் அவனும் பழகிய அந்த இரண்டு வருடங்கள் வெகு இன்பமானவை. அர்த்தமுள்ளவை. வாழ்வின் அத்தனை சுகங்களையும் அவன் அந்த வயதில் அனுபவித்தான். நான் அவனோடு சாட்சியாக மட்டுமே இருந்தேன். பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை சிகரெட் புகைப்பான். சன்னலைத் திறந்து வைத்து விடுவான். நான் பசித்திருப்பதை அவனால் சகிக்கவே முடியாது. வாய்க்குள் மலரும் அருமையான புன்னகை கொண்டவன். கண்கள் மட்டுமே சிரிக்கும். அவனின் புன்னகை மோகனப் புன்னகை. அவன் அப்பாவுக்கு மட்டுமே பயப்படுவான். அடி பின்னி பெடலெடுத்து விடுவார்.

ஆவணம் கைகாட்டி ஸ்டார் தியேட்டரில் நானும் அவனும் ஒரு இரவில் இரண்டாவது ஆட்டத்தில் விஜயகாந்ந் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பார்த்திருக்கிறோம். என்னை தன் பைக்கில் அமர்த்தி வைத்துக் கொண்டு படு வேகமாகச் செல்வான். 

கிராமப்புறங்களில் இருக்கும் ஊனமுற்றவர்களின் பாடு என்னவென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மனதுக்குள் புழுங்கிப் புழுங்கி ஏதோ ஒரு பெட்டிக்கடையோ அல்லது ஏதோ ஒரு கடையிலோ தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். என்னுடன் நெருங்கிப் பழகவே அசூசையைப்படுபவர்கள் இருந்த காலத்தில் என் மீது என்ன காரணத்தினாலோ பிரியமாக இருந்தான். அவன் தேவை முடிந்த பிறகும் அவனின் நட்பு என்னுடன் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவனின் நல்லது கெட்டது அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும். 

அவனுக்கு ஒரு காதலி இருந்திருக்கிறாள். அவள் யாரென்று கடைசி வரை என்னிடம் சொல்லவே இல்லை. அவன் மிகச் சிறந்த காதலன். என்னுடனான நட்பில் அவன் மறைத்த ஒரு விஷயம் இதுதான். ஒரு ஊனமுற்றவனை நேசிக்கவே நல்ல மனது வேண்டும். அவன் என்னுடன் நட்புக் கொண்டான். நாங்கள் இருவரும் இந்தப் பாடலை ஒரு நாளைக்கு குறைந்தது 50 தடவை கேட்போம். என்னடா இந்தப்பாடலில் இருக்கிறது? என்று கேட்பேன். சிகரெட்டைப் பற்ற வைத்து  மெல்லிதாக ஊதிக் கொண்டே புன்னகைப்பான். நான் அவனுடன் இருந்தால் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு வெளியில் புகையை ஊதிக் கொண்டே இந்தப்பாடலை கேட்டுக் கொண்டிருப்பான். அவனுடன் நானும்.

இதோ அந்தப் பாடல்....




அவனுக்கு ஒரு கடிதத்தை எழுத ஆசைப்படுகிறேன். அவன் மனிதனாகப் பிறந்திருந்தாலோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் இந்தக் கடிதம் அவனிடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

அன்பு நண்பா ஆலம்,

என்ன காரணத்தினாலோ நீ என்னை உன் பிரிய நண்பனாக்கி என்னுடன் பழகினாய். அடிக்கடி உன் முகமும், உன் புன்னகையும், நீ எனக்கு உணவு பரிமாறும் நினைவுகளும் வந்தென்னை பீடித்து உன் நினைவுகளில் அமிழ்த்தி விடுகிறது நண்பா. நீ இந்த உலகை விட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மறைந்து போனாய். 

எனக்கு ஆன்மீகத்திலும் எனது குரு நாதரின் மீது அளவுகடந்த நம்பிக்கை உண்டு நண்பா. எனது காலம் எதுவரை என்று எனக்குத் தெரியாது. ஆன்மீகம் மனிதர்களுக்கு புல்லாகி பூடாகி என்ற வாழ்க்கைப் பிறப்புகளை வரிசைப்படுத்துகிறது நண்பா. வேறு எதுவாகவும் பிறக்க நான் விரும்பவில்லை நண்பா.

எனக்கு என் உடல் மீதும் இந்த உலக வாழ்க்கை மீதும் உள்ள பற்று என்றைக்கோ நீங்கி விட்டது நண்பா. ஒன்றுமே இல்லாத இந்த வாழ்க்கையில் நான் பெற்ற கடன்களை தீர்த்து விட்டு வெளியேற வேண்டும் என்ற ஆவல் மட்டுமே உள்ளது. இனி எந்தப் பிறப்புமே பிறக்கக்கூடாது என்றே நினைக்கிறேன். 

ஆனாலும் நண்பா உன்னை நான் சந்திக்க விரும்புகிறேன். இப்போது உன்னால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிகரெட் பழக்கம் போய் விட்டது. உன்னுடன் ஒரே ஒரு சிகரெட்டை நெருப்புப் பஞ்சில் பற்றும் வரும் வரை புகைக்க வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. 

நீ வேறு எந்தப் பிறப்பாகவும் பிறக்கவில்லை என்றால் மேல் உலகத்தில் இருப்பாயானால் நான் அங்கு வந்து உன்னைச் சந்திக்கிறேன். எனக்கும் உனக்குமாக இரண்டு சிகரெட்டுக்களை கையோடு வைத்துக் கொள். இல்லையென்றால் நான் உனக்கும் எனக்குமாக இரண்டு சிகரெட்டுகளைக் கொண்டு வருகிறேன். இருவரும் ஆனந்தமாக புகைக்கலாம்.

இப்படிக்கு
உன் நண்பன் தங்கம்

Wednesday, July 15, 2015

கடவுளைப் பார்க்க முடியுமா?

”கடவுளைக் கண்ணால் பார்க்க முடியுமா? ” உலக மாந்தர்களின் உள்ளத்தே விடை தெரியா கேள்வியாய் காலம் காலமாய் உதித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எவராலும் விடை சொல்ல முடியவில்லை. 

ஞானிகளைக் கேட்டால் ”அவர் உன்னுள்ளே இருக்கிறார்” என்கிறார்கள். போகிகளைக் கேட்டால் ”கடவுளா? அவர் அந்தக் கோவிலில் இருக்கிறார், இந்தக் கோவிலில் இருக்கிறார்” என்று சொல்கிறார்கள். நாத்திகர்களைக் கேட்டால்,”கடவுள் இல்லை, கல் தான் உண்டு” என்கிறார்கள்.

எவரைக் கேட்டாலும் பதில் கிடைக்கிறது. ஆனால் கடவுளைக் காணமுடியவில்லை. அன்பர்களே, சீர்காழி கோவிந்தராஜனின் இந்தப் பாடலைத் தனிமையில் கேளுங்கள் ! கேட்டு விட்டு மனதூடே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று உங்களுக்குப் புரிய வரும். அப்படியும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ....



ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த குழந்தையைத் திடீரென்று காணவில்லை என்றால் குழந்தையைக் காண்பதற்காக மனது துடிதுடிக்குமே! அழுது புலம்புமே ! அலறுமே ! உடல் சோர்ந்து போமே ! இதயம் வலித்து வலித்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுமே ! உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே? செத்துப் போய் விடலாமே! என்று துடித்து துடித்து துன்பத்தில் உழலுமே ! ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா? அழுததுண்டா? ( கேள்வி கேட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்).

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

Friday, June 5, 2015

10 ரூபாயும் ஒரு மூதாட்டியும்

சமூக ஆர்வலர்கள் இப்போதெல்லாம் அழிக்கப்படுகின்றார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். எல்லோருக்கும் உண்மை கசந்து விடுகிறது. சிலருக்கு கொலை செய்யும் மனத்தையும் தந்து விடுகிறது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை பார்க்கும் போது, ஓடோடி அவனுக்கு உதவி செய்யத் துடிக்காத இதயம் எவருக்கும் இல்லாமலிருக்காது. இருந்தும் பலரும் ஒதுங்கிக் கொள்கின்றார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. சமூகத்தின் நன்மைக்காக உதவிட வேண்டுமென்று நினைப்போருக்கு உண்மையில் கசப்பான அனுபவங்களே ஏற்படுகின்றன. சமீபத்தில் கோவையில் இப்படித்தான் மணல் கடத்தலுக்காக சமூக ஆர்வலர் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிலர் செய்யும் சில செயல்களால் மனித சமுதாயத்துக்கு கிடைத்திட வேண்டிய பல்வேறு நல்ல காரியங்கள் சீர்பட்டுப் போகின்றன.

நேற்றைக்கு கணபதி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் அடியேன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது வாசலில் ஒரு குரல். நெடு நெடுவென்ற உயரம். கெச்சலான தேகம். மஞ்சள் பூசிய முகம். நெற்றியில் குங்குமம். பட்டுச்சேலை போன்று வெகு நேர்த்தியாக உடுத்தப்பட்டிருந்தது. கையில் ஏதோ ஒரு துணிக்கடையின் பை. 

ஏறிட்டுப்பார்த்தேன், “பன்னாரி அம்மன் கோவிலுக்கு காணிக்கை” என்றார் அந்த மூதாட்டி. அருகில் வரச்சொல்லி, பத்து ரூபாய் நோட்டினை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி இப்படித் தொடர்ந்தார்.

”மகாராசனாட்டம் இருக்கிறாய், ஆனால் மனதுக்குள் பல்வேறு போராட்டங்கள். ஒவ்வொரு காரியத்திலும் தடை. மனதுக்குள் வலி. எந்தப் பிசினஸும் ஒழுங்காக நடப்பதில்லை. கண் திருஷ்டி இருக்கிறது. அதுதான் உன்னை இந்தப் பாடு படுத்துகிறது. உன்னால் கை காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு எங்கேயோ இருக்கின்றார்கள். ஆனால் நீயோ இருந்த இடத்திலேயே இருக்கின்றாய், இன்னும் கொஞ்சம் குறி சொல்லனும், அந்த சேரில் உட்காரட்டுமா?”

”பாட்டி நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் இல்லை. ஒன்றும் வேண்டாம். கிளம்புங்கள்” என்றேன்.

அந்த மூதாட்டியோ திரும்பவும் ”உனக்கு கண் திருஷ்டி நிறைய இருக்கு, அதைச் சரி செய்ய வேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே எதிரில் அமர எத்தனித்தார்.

”பாட்டி அப்படி ஏதாவதிருந்தால் அதோ அங்கே போட்டோவில் உட்கார்ந்திருக்கின்றாரே எனது குரு நாதர் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்” என மறுத்தேன். சுவாமியைப் பார்த்தார் அந்த மூதாட்டி. ”நீ நன்றாக இருப்பாயப்பா” என்றுச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

மனதுக்குள் ஏதும் பிரச்சினையோடு இருந்திருந்தால் பாட்டி பர்சைக் காலி செய்திருக்கும்.

கடந்த வாரம் ஒரு பெரியவர் அலுவலக வாசலில் வந்து நின்று கொண்டு, “வயதானவன், நல்ல வார்த்தை சொல்வேன், காபி குடிப்பதற்கு ஏதாவது தர முடியுமா?” என்று கேட்டார். நான் திரும்பிக் கொண்டேன். எனது நண்பர் இரக்க சுபாவி. அவரை உள்ளே வர வைத்து எதிரில் அமர்ந்து கொண்டார்.

பிறந்த நாள், நேரம், இடம் கேட்டார். நண்பர் சொன்னார். கையை நீட்டச் சொன்னார். தட்சிணை வைக்கச் சொன்னார். நண்பர் திகைத்து விட்டு எவ்வளவு என்று கேட்டார்.”ஒரு நூறு ரூபாய் வையுங்களேன்” என்றார் கிழவர். நண்பர் வேறு வழி இன்றி கையிலிருந்த நோட்டுகளை எடுத்துக் கையில் வைக்க அதைக் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டு பலன் சொல்ல ஆரம்பித்தார்.

மேலே அந்த மூதாட்டியார் சொன்னாரே அதையே அந்தப் பெரியவரும் சொன்னார். ஐந்து நிமிடங்களாய் ஒப்பேத்தி விட்டு, அடுத்து உங்கள் குழந்தைகளுக்கும் பார்க்கலாமா என்று ஆரம்பித்தார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டே நண்பரைப் பார்க்க, நண்பரோ அலறியடித்துக் கொண்டு போதும் என்றுச் சொல்லி எழுந்து விட்டார்.

அடுத்து பெரியவர் என்னைப் பார்த்து, ”அய்யா உங்களுக்கு?” என்று ஆரம்பித்தவுடனே பெரிய கும்பிடு போட்டு விட்டேன். ஆள் எழுந்து விட்டார்.

“அறுபது ரூபாய்” கொடுத்தேன் என்றார் நண்பர் வருத்ததுடன்.


Wednesday, January 16, 2013

துண்டு


கிராமத்தானுக்கு துண்டு என்பது நண்பன். வெயிலில் உழும் போது தலைக்கு பாதுகாப்பாகவும், வியர்வையைத் துடைக்கும் போதும், குளிக்கும் போதும் இப்படி துண்டு என்பது அவனுடன் ஒட்டிப் பிறந்த உறுப்பாகவே இருக்கும். இதே துண்டு விழாக்காலங்களிலும், உறவுகளின் வீடுகளிலும் அவனுக்கு மரியாதையை அளிக்கும். இப்படிப்பட்ட துண்டுக்கு வேறொரு முகமும் உண்டு. 

இந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.13 லட்சம் கோடி. மேலும் மேலும் துண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. 

கிராமத்தானுக்கு உதவியாய் இருந்த துண்டு, மரியாதையை அளித்த துண்டு இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறிய அவலம் இருக்கிறதே அதற்கு காரணம் யார் தெரியுமா ?அனைவரின் விரலும் சுட்டும் ஒரே ஒரு நபர் “ பாரதப் பிரதமர்”. 

வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் எக்ஸ்ட்ராவைத் தான் துண்டு என்கிறோம். இந்தியாவிற்கு துண்டு எப்படி விழுகிறது என்பதை திரு க்ருமூர்த்தி அவர்கள் துக்ளக்கில் பதிவு செய்திருக்கிறார். 

அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் துண்டு நம்பர் ஒன்.

ஏற்றுமதி செய்யும் மதிப்பை விட இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகமானால் வர்த்தகத்தில் துண்டு விழுகிறது. இது நம்பர் டூ.

நம்பர் ஒன்னுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் நம்பர் ஒன் - மானியம். மானியம் கொடுப்பதினால் அரசின் வரவில் இருந்து செலவழிக்க வேண்டி இருக்கிறது. துண்டு விழுகிறது.

நம்பர் டூ - வரி விலக்கு. அரசுக்கு கிடைக்கக் கூடிய வரவில் பெரும் வெடியை வைப்பது இந்த வரிவிலக்குகள். இதனாலும் துண்டு விழுகிறது.

நம்பர் த்ரீ - இலவசம். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அக்மார்க் அயோக்கியத்தனம். இதனாலும் பெரிய துண்டு விழுகிறது.

வரி வசூலில் காட்டப்படும் மந்தம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால் அதிலும் ஒரு துண்டு விழுகிறது.

ஆகவே நான்கு துண்டுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரக் கழுத்தை நெரிக்கிறது. மக்கள் மூச்சுத் திணற ஆரம்பிக்கின்றார்கள். விலைவாசி உயர ஆரம்பிக்கிறது. மக்கள் துன்பத்தில் உழல ஆரம்பிக்கின்றார்கள்.

நம்பர் டூ துண்டுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஏற்றுமதி இறக்குமதியில் வித்தியாசம் ஏற்படும் போது, உலக அளவில் இந்திய ரூபாய்க்கு இருக்கும் மதிப்புக் குறைகிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் நாம் குறைவான ரூபாய் கொடுத்தால் போதுமானது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் அதிக ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த அதிக ரூபாயும் துண்டாய் மாறி விடுகிறது.

இப்படி விழுந்து கொண்டே செல்லும் துண்டினைச் சமாளிக்க கடன் வாங்குகிறது அரசு. கடனுக்கு கொடுக்கும் வட்டியும் ஒரு துண்டு. இப்படியே எல்லாத் துண்டுகளும் ஒன்று சேர்ந்து தான் இந்தியாவின் நடப்பாண்டு பற்றாக்குறை 5.13 லட்சம் கோடி ரூபாய் ஆகி விட்டது. 

இந்த துண்டு விழாமல் தடுக்க எஸ்.க்ருமூர்த்தி சில கருத்துக்களை எழுதி இருக்கிறார்.

1. வரியை உயர்த்த வேண்டும்.
2. வரிச்சலுகைகளை நீக்கிட வேண்டும்.
3. ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசங்களை ஒழித்திட வேண்டும்.
4. மானியங்களை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் துண்டினை எடுக்க முடியும் என்கிறார் அவர்.

துண்டு எப்பேர்பட்ட வேலைகளைச் செய்கிறது என்று பாருங்கள். நாம் என்னவோ துண்டினை வெகு சாதாரணமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

 நன்றி : துக்ளக் மற்றும் எஸ்.க்ருமூர்த்தி அவர்கள். (க்ருவிற்கு காரணம் இருக்கிறது)

திரு சுப்புவிற்கு ஒரு கேள்வி விரைவில்

Thursday, December 13, 2012

தாரா என்ற அழகி


தனக்குத் துன்பம் ஏன் வருகிறது? என்று யாரும் சிந்திப்பதே இல்லை. இறைவா, என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறாய் என்று இறைவனைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளைத் தன்னை நோக்கி ஒருவன் கேட்டுக் கொண்டான் என்றால் துன்பத்தின் ஆரம்ப விதைகள் என்ன என்று கண்டுகொள்ளலாம். ஆனால் எவரும் அவ்வாறு செய்வதே இல்லை.

ஏதோ இறைவன் வேறு வேலையே இல்லாமல் இவனுக்கு மட்டும் துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பதாக ஒவ்வொருவருக்கும் நினைப்பு. அவர் என்னதான் செய்வார் ? பாவம் மனிதனை விட படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

தன் குழந்தைகள் தான் செய்யும் செயல்களாலே துன்பங்களை வரவழைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதைக் கண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பவர் அவர்தான்.

ரேஸ்கோர்ஸில் இருக்கும் மசானிக் குழந்தைகள் மருத்துவமனை அருகில் ஒரு வேன் நின்றிருந்தது. வேன் உள்ளே கருப்பாய் காக்கிச் சட்டை போட்ட மனிதர் ஒருவர் அழகான குழந்தை ஒன்றினை வைத்துக் கொண்டிருந்தார். மனதில் சந்தேகம் எழ அவர் அருகில் சென்று யார், என்ன என்ற கேள்விகளைக் கேட்டேன்.

குறைப்பிரவசமாய் பிறந்த அக்குழந்தையை யாரோ ஒரு பெண் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டுச் சென்று விட்டாராம். யாரோ ஒரு நபர் அக்குழந்தையைக் கண்டுபிடித்துப் பார்த்த போது, உயிர் மட்டும் இருந்ததாம். யார் யாரிடமோ சென்று தாய்ப்பால் வாங்கி வந்து அதற்கு ஊட்டி விட்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் விடுதியில் கொண்டு வந்து விட்டு விட்டாராம். அக்குழந்தையை கண்ணும் கருத்துமாய் பார்த்து வளர்த்து வருகின்றார்கள். இப்படியும் சில பெண்கள் இருக்கின்றார்கள். இதை விட கொடுமையான மனம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அந்த நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற மக்கட் சேவையை ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

தாய் என்பவளுக்கு ஏன் இப்படிப்பட்ட முடிவு எடுக்கத் தோன்றுகிறது என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் சமூகக்கட்டுப்பாடுகள் நீங்கிய ஒரு சூழலில் அவர் வாழ்ந்து வருவது என்ற ஒரு காரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகட்டுப்பாடு அத்துடன் சமூகக் கட்டுப்பாடு வேண்டும் என்பது எனது முடிவு. சமூகத்திலிருந்து பிரிந்து தனியாய் வாழும் மனிதர்களால் தான் இப்படிப்பட்ட கொடூர முடிவுகளை எடுக்க நேரிடும்.

மேல்தட்டு மக்களிடம் மட்டுமே காணப்படும் இவ்வகையான கொடூர மனப்பான்மை கீழ்த்தட்டு மக்களிடமும் மிகுந்து வருவது வேதனை தருகிறது. சமூகம் சிதைக்கப்பட்டு விட்டது என்பதையே மேலே இருக்கும் தாராவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.

சமூகம் என்பது உறவு, உற்றார் என்று கொள்க.

Thursday, October 11, 2012

காய்கறிகளில் விஷத்தன்மையை நீக்குவது எப்படி?

கறிவேப்பிலை, மிளகாய், பசலைக்கீரை, கத்தரி, வெண்டை, புடலை போன்றவற்றின் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் படிந்திருக்கின்றன. இம்மருந்துகளை நீக்கி விட்டு உணவாகச் சமைத்தால் தான் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வரக்கூடிய எழுதவே முடியாத பல்வேறு வகை நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

சாதாரண தண்ணீரில் கழுவி விட்டு காய்கறிகளைச் சமைப்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுக்கு ஒப்பாகும்.

பூச்சுக் கொல்லி விஷத்தன்மையை எப்படி நீக்குவது?

மஞ்சள் தண்ணீர் அல்லது வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்கறிகளை நன்கு அமிழ்த்தி ஊற விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது காய்கறிகளின் மீது படிந்திருக்கும் 95 சதவீத மருந்து நீக்கப்படும் என்று கேரளாவைச் சேர்ந்த தனியார் அமைப்பின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா)

பணக்காரர்களின் அரிசியான பாசுமதியில் மிக அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து இருக்கிறது என்கிறது அவ்வறிக்கை.

சுகாதாரத் துறையின் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே வாழ்க்கை என்பதாய் வாழ்வதால், இது போன்ற மக்களைக் கொல்லும் நஞ்சுகளில் இருந்து தப்பிப்பது என்பது முடியாத ஒன்று.

கேஎஃப்சி சிக்கனில் புழு இருந்தது என்று திருவனந்தபுரத்தின் செய்தி. உலகெங்கும் கடை விரித்திருக்கும் கேஎஃப்சி இது போல அமெரிக்காவில் புழு சிக்கனை விற்றிருந்தால் இந்த நேரம் கடை என்னவாகி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடையை சோதனை செய்யக்கூட கடைச் சிப்பந்திகள் அனுமதிக்கவில்லையாம்.

நேற்று திரு.குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றினை வாசித்தேன். சேமிக்கும் வழக்கமுடைய நம் இந்திய மக்களை திரு மன்மோகன் சிங் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்கிறார், இதைத்தான் புது பொருளாதார வளர்ச்சி என்கிறார் என்று குருமூர்த்தி சொல்கிறார். காலம் காலமாய் ஒரே வழக்கமுடைய மக்களை திசை திருப்பி அமெரிக்கர்களைப் போல பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்து மக்களை கடன்காரர்களாக்கி, குடும்பங்களை தனிமைப்படுத்தி, சமூக கட்டமைப்பையே உடைத்துப் போடும் அளவுக்கு திரு மன்மோகன் சிங்கின் பொருளாதார சிந்தனை இருக்கிறது என்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவில் திவாலான மிகப் பெரிய வங்கிகளைப் போல இந்தியாவிலும் உருவாக்கி விட வேண்டுமென்ற திரு.ப.சிதம்பரத்தின் கொள்கையை இப்பொருளாதார சித்தாந்தம் ஊக்குவிக்கின்றது என்றும், இதை நோக்கித்தான் திரு.ப.சி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றார் என்கிறார் அவர்.

கோவையில் பெரிய பணக்காரர்கள் எல்லோரும் பல சிலிண்டர் கனெக்‌ஷன்களை வைத்துக் கொண்டு, தங்கள் கார்களுக்கு மானியச் சிலிண்டர்களை பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதைப் போல அமைச்சர்களும் பயனடைகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றே. இதைக் காரணமாய் வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய சிலிண்டர்களைக் குறைப்பது பெரிய திருடர்களை ஒழிக்க வீடுகளே இல்லாமல் ஆக்குவது போன்றது. இது  என்னவிதமான பொருளாதார வளர்ச்சியோ தெரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் போலி அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை களைவது வெகு எளிதானது. அதைச் செய்து போலிகளைக் களைந்து விடாமல் இப்படி மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது மக்கள் விரோத சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கோவையில் மின்சாரம் வரும் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. காலையில் 6-8, மதியம் 12-2, இரவு 6-7, 9-10, 11-12, 1-2, 4-5. இப்படி ஒரு மின்சார சப்ளையை உலகத்தில் வேறு எங்கும் மக்கள் அனுபவித்தே இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை. அல்லது ஒழுங்கு படுத்தக்கூட இல்லை. இப்படியே சென்றால் தமிழர்கள் பீகாரிகள் போல அகதிகளாய் மாறி விடும் சூழ் நிலை வந்தே தீரும். அதற்குள் ஆட்சியாளர்கள் மின்வெட்டினை ஒழுங்குபடுத்தி விட வேண்டும். ஆனால் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

ஓட்டுப்போடும் போது வாங்கிய காசுக்கு பலனை அனுபவித்துத்தானே தீர வேண்டும்? தமிழகம் அனுபவிக்கின்றது.




Saturday, September 29, 2012

கோவிலும் மனித உடலும்


தமிழர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியை, குமரிக் கண்டத்தினை கீழே இருக்கும் படத்தில் பாருங்கள். இப்படி இருந்த தமிழர் வாழ்விடம் இப்போது இருக்கும் அவலத்தையும் பாரீர். இருக்க இடம் இல்லாமல் தவிப்பதைப் பாரீர். பரிசோதனைக் கூடங்களில் கொல்லப்படும் எலி போல தமிழர்கள் கொல்லப்படுவதைப் பாரீர். ஏன் என்று கேட்க நாதியற்றுப் போனதைப் பாரீர். உலகின் மூத்த குடியான தமிழர்கள் தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் கையேந்தி நிற்கும் அவலத்தைப் பாரீர். 


ஆனால் உங்களுக்கு ஒரு உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். காலத்தின் சூழலில் மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தான் இன்றைக்கும் என்றைக்கும் அசைக்கவே முடியாத உலக கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது ஒரு ரகசியம். அதையெல்லாம் பட்டவர்த்தனமாக வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது தெரிந்து கொள்ளுங்கள். அது சுனாமியைப் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

நம் தமிழர்களின் அறிவிற்கு எந்த மனிதனாலும் ஈடே கொடுக்க முடியாது. ஒவ்வொரு தமிழனின் வாழ்வியல் கோட்பாட்டிலும் அசைக்க முடியாத பங்கீட்டாய் இருப்பவை கோவில்கள். “கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?” பதிவில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலையும் கீழே வரும் விபரங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கோவிலின் அமைப்பும் மனித உடலின் பாகங்களும்

முன்கோபுரம் - பாதங்கள்
முன்மண்டலம் - முழங்கால்
நிருத்தமண்டபம் - தொடை
பலிபீடம் - தொப்புள்
மகாமண்டபம் - மார்பு
அர்த்தமண்டபம் - கழுத்து
கர்ப்பகிரகம் - சிரம்
தட்சிணாமூர்த்தி - வலது செவி
சண்டிகேஸ்வரர் - இடது செவி
ஸ்தபனமண்டபம் - மூக்கு
ஸ்தபனமண்டலவாசல் - வாய்
லிங்கம் - புருவத்தின் மத்திய பகுதி
விமானம் -தலையின் உச்சி
சரீரப்ப்ரஸ்தாரம் ஷேத்திரம் (தலம், கோவில் இருப்பிடம்)

அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்கிற ஐந்து பிரகாரங்களையும் ஐந்து வித கோஷங்கள் என்று குறிப்பிடுவார்கள்.  இதனைப் பின்பற்றித்தான் சாமியை வழிபடல் வேண்டும். 

கோவில்களுக்குச் சென்று வழிபடுவது எப்படி  என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.

மன ஒருமை செய்து, வேற்று சிந்தனை களைந்து, இறையுடன் ஒன்றி கோவிலுக்குள் நுழைய வேண்டும். பலிபீடத்தின் அருகில் வீழ்ந்து தீய எண்ணங்களை பலிகொடுத்து, சுத்தமான உணர்வுடன் எழுந்து கொடிமரத்தின் அருகில் சென்று விழுந்து வணங்க வேண்டும்.

ஆண்கள் - தலை, இரண்டு கைகள், இரண்டு காதுகள், இரு முழங்கால்கள், மார்பு போன்றவை மண்ணில் பட வணங்க வேண்டும்.

பெண்கள் - இரண்டு கைகள், இரண்டு முழங்கால்கள், தலை பூமியில் படும்படி வணங்க வேண்டும்.

சன்னதி கிழக்கு என்றால் பலிபீடத்தின் அக்னி மூலைக்கு எதிரில் தலைவைத்து வணங்க வேண்டும். தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதி என்றால் பலிபீடத்தின் நிருதி மூலையியில் தலைவைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னிதியானால் பலிபீடத்தின் வாயு மூலையில் தலைவைத்து வணங்க வேண்டும்.

கொடிமரத்தைத் தாண்டி மண்டபத்தில் நுழைந்த பிறகு வேறு எந்தச் சன்னிதியிலும் வணங்கக்கூடாது. எவருக்கும் வணக்கம் செலுத்துதல் கூடாது. நந்தியை வணங்கி, அவரிடம் சிவ பெருமானை வணங்க உத்தரவு கேட்ட பிறகுத்தான் சிவனை வழிபட செல்ல வேண்டும்.

இதன் பின்னர் கருவறை வாசலில் இருக்கும் துவாரபாலகரை தரிசித்து விட்டு அதன் பின்னர் கருவறை சென்று சிவனை வழிபடல் வேண்டும். அதன்பிறகு பிற சன்னிதிகளை வணங்கலாம்.
-
நேற்று நண்பர் ஒருவர், உலகில் மாபெரும் கலவரங்கள் நடக்கப்போவதாகச் சொன்னார். இப்போதுள்ள காலத்தின் வெளிப்பாடு மிகக் கொடூரமாய் இருக்கிறது. அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள் எல்லாம் அக்கிரமங்களே அல்ல. அது ஒன்றுமே இல்லாதவை. ஆனால் அரசியல்வாதிகளை முன்னிருத்திக் கொண்டு சில சுய நலவாதிகள் செய்யும் அக்கிரமங்கள் அளவுகடந்து செல்கின்றன. அரசியல்வாதி 0.000001 பர்செண்டேஜ் தின்கிறான். ஆனால் இவனை துணையாக்கும் சுய நலவாதிகள் தின்பது 9.99999 பர்செண்டேஜ். இச்சுய நலவாதிகளுக்கெதிரான மக்கள் கலவரங்கள் நடக்கப் போகின்றது என்பதைக் குறிகள் சுட்டிக் காட்டுகின்றன. விதிப் பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். மீண்டும் ஒரு உலகப் போர் நிகழப்போகின்றது. அதிலே கவுரவர்கள் என்கிற சுய நலவாதிகள் அழிக்கப்படப்போகின்றார்கள். இப்போது ஊழல்வாதிகளாய் வெளிப்படுவது அரசியலாதிகள் அல்ல. கார்பொரேட் கம்பெனிகள் என்ற சுயநலவாதிகள். இவர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் உலகெங்கிலும் ஆரம்பமாகி விட்டது. அது பரவும் ! சுய நலசக்திகளை, மக்கள் விரோத சக்திகளை அழிக்கும். அந்தப் போரில் மக்களும் தங்கள் இன்னுயிரை இழப்பர். இழப்பினும் உலகம் சுத்தமடையும்.

* * * * * * *

கட்டுரை ஆக்க உதவியும் நன்றியும் : கழுகூர் வரலாற்றுத் தழும்புகள் - கவிஞர் கழுகூர் பழனியப்பன்

Monday, September 24, 2012

கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?


கோவில்களுக்குச் செல்வது, பூஜைகள் செய்வது, அபிஷேகம் செய்வது, கோவில் பணிகள் செய்வது, தளம் போடுவது, விளக்குகள் வாங்கிக் கொடுப்பது, பூக்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற இறைப்பணிகளைச்  செய்பவர்களைக் கடவுள் காப்பாற்றுவாரா? 

அவ்வாறு திருப்பணி செய்பவர்கள் எல்லாம் கோடிகளில் அல்லவா மிதக்க வேண்டும்? அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே?. நோய் நொடி இல்லாமல் அல்லவா வாழ வேண்டும். ஆனால் அப்படி யாருக்கு கடவுள் ஆசி வழங்குவதில்லையே? 

அதுமட்டுமா? கடவுளுக்கு நாள்தோறும் பூஜை,புனஸ்காரங்களைச் செய்து வரும் பூஜாரிகளும், ஐயர்களும் கோடீஸ்வரராய் அல்லவா மாறி இருக்க வேண்டும்? இன்றைக்கும் ஐந்து, பத்து தட்டுகளில் விழுகிறதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?  இவர்களுக்கு நோய் நொடி வந்தால் மருத்துவரிடம் அல்லவா செல்கின்றார்கள்? கடவுளுக்கு நாள்தோறும் தொண்டு செய்பவர்களுக்கே இந்த நிலை என்றால் அவ்வப்போது கோவில்களுக்குச் சென்று வருபவர்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏன் கடவுள் வேண்டி நிற்போருக்கு உடனுக்குடன் எதுவும் செய்வதில்லை? கல் மனதாய் இருக்கின்றானே ஏன்? இந்தக் கடவுள் நம்மைக் காப்பாற்றுவானா? இது போல இன்னும் என்னென்னவோ கேள்விகள் இருக்கின்றன. இக் கேள்விகளுக்குப் பதில் தான் என்ன?

மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்பவர்களில் சில நாடுகளில் இருப்போர் மாயா உலகின் உச்சபட்ட இன்ப வாழ்வினை வாழ்கின்றார்கள். அவர்கள் என்றைக்கும் கோவில்களுக்கோ, சர்ச்சுகளுக்கோ செல்வதில்லை. அழகான வீடு, கார், மனைவி, வற்றவே வற்றாத பொருளாதாரம், ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கடவுளை தினம் தோறும் வணங்குபவனை விட, கடவுளைப் பற்றி சிந்தித்தே பாராதவர்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றார்களே எப்படி?

நமக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்கள் சில அனுபவங்களைப் பாடல்களாய் பாடி வைத்திருக்கின்றார்கள். அப்பாடலில் இரண்டு பாடலை முதலில் படியுங்கள்.

கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா? 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே - சிவவாக்கியர்

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே – அகத்தியர்

மேலே இருக்கும் இரண்டு பாடல்களை ஊன்றி கவனித்துப் படித்துப் பாருங்கள். கடவுளின் தந்திரம் புரியும். 

நியூமராலஜி உண்மையா?


நேற்று மாலை நண்பர்களுடன் சந்திப்பு. எனது நண்பரொருவரால் எனக்கு அறிமுகமான நண்பரோடு எந்த வித தயக்கமோ, முதன் முதலில் பேசுகிறோம் என்கிற எண்ணமோ இன்றி வெகு சகஜமாகப் பேசினேன். அடிக்கடி பேசிக் கொள்வோம்.  

இப்படியான நாட்கள் கழிந்து கொண்டிருந்த போது நேற்றைக்கு திரு கண்ணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். எந்தக் காரணத்தை வைத்து நாம் நண்பர்கள் ஆனோம் என்று கண்ணன் அவர்களிடம் கேட்ட போது நிமித்த பிரசன்னத்தில் நாங்கள் போன ஜன்மத்தில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்களாக இருந்தோம் என்றார். அதனால் தான் அந்த முன் ஜென்ம தொடர்பின் காரணமாய் நாங்கள் முன்பே பழகியவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.முன் பின் பழக்கமில்லை. நேருக்கு நேராய் பார்த்தது இல்லை. முகம் எப்படி இருக்கும் தெரியாது. இப்படியான பல இல்லைகளுக்கும் தாண்டிய ஒரு அன்பு, நெருக்கம், வியப்புத்தான். அதற்கொரு காரணம் இருக்கிறது. 

திரு கண்ணன் அவர்களிடம் பேசினால் எனக்கு பயம் வந்து விடும். காலையில் யாரிடம் பேசினீர்கள், யாரைச் சந்தித்தீர்கள் என்றெலாம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். சினிமாக்காரர்களுடன் தொடர்பில் இருப்பதால் அவரிடம் பேசினாலே எனக்கு திக் திக் என்றிருக்கும். என்னைப் போல ஆட்களுக்கு, ரொம்ப டேஞ்சரான “ஜோதிட திலகம்” அவர். இருப்பினும் நேற்று நடந்தைதையும், ஒரு மணிக்கு முன் நடந்ததையும் சொல்ல ஒரு “தில்” வேண்டுமல்லவா? அலட்டிக் கொள்ளாமல் எதிரில் உட்கார்ந்திருப்பவரை அலற அடிக்கும் ரகளையானவர். எதிர்கால, கடந்தகால, நிகழ்காலத்தினைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு மாற்றத்தின் அறிகுறி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கைப் பாதையின் போக்கு நேராகலாம் அல்லது சரி செய்யப்படலாம். 

ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று.

ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருக்கிறார். அவரின் பையன் பனிரெண்டாவது வகுப்பு எக்ஸாம் எழுதப் போகின்றான். கண்ணன் ”அவன் அடுத்த வருடம் வெளி நாட்டுக்குச் செல்வான்” என்கிறார். அட, இன்னும் எக்ஸாமே எழுதவில்லை, அவன் எப்படி வெளி நாடு செல்வான் என்று கேள்வியைக் கேட்டு விட்டு அவர் சென்று விட்டார். பையன் எக்ஸாம் எழுதி முடித்து சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் படிக்க அப்ளை செய்திருக்கிறான். தமிழ் நாட்டிலும் மேற்படிப்பிற்கு அப்ளை செய்திருக்கிறான். இரண்டுக்கும் அனுமதி கிடைத்து விட்டது. ஜாதகம் பார்க்க வந்தவர் போனில் “சார்” என்று அலறி இருக்கிறார். இப்படியான ஒரு சம்பவம் பற்றிச் சொல்லியவர், வாழ்க்கை நொடிக்கு நொடி மாற்றத்துக்கு உரியது என்றார். உண்மைதானே ?

நியூமராலஜி உண்மையா என்று விஷயத்திற்கு வருவோம். மெட்ரிக் அளவுகள் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த மெட்ரிக் அளவுகள் உலகையும் மனித வாழ்வினையும் சூட்சுமாய் சூழ்ந்திருக்கும் கிரகங்களை எந்த விதத்திலும் பாதிக்கவே பாதிக்காது. பெயரில் ஒரு எழுத்தை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ வெற்றி கிட்டும் என்றால் அப்படி மாற்றிக் காட்டுபவர் முதலில் கோடீஸ்வரனாக மாறி இருப்பார். அப்படி அவர் மாறாத பட்சத்தில் நியூமராலஜியை எப்படி உண்மை என்று ஏற்றுக் கொள்ள இயலும். கையெழுத்தே போடத்தெரியாத ஒருவனுக்கு நியூமராலஜியால் பயன் இல்லை என்கிறபோது நியூமராலஜி ஒரு வெற்று தத்துவம்.

மெய்யறிவியலில் ஒரு ரகசியம்: 

மனித மனத்தை ஊடுறுவ முடியுமா என்ற கேள்விக்கு என்ன பதில்? 
குருடன் முத்தை துளைத்தான்
விரலில்லாதவன் அதை நூலில் கோர்த்தான்
கழுத்தில்லாதவன் அதை அணிந்தான்
நாவில்லாதவன் அதைப் புகழ்ந்தான்
- தைத்தீரிய ஆரண்யம்

தன் எதிரே அமர்ந்திருக்கும் ஒருவனிம் மனதுக்குள் அவன் நினைக்கும் எண்ணத்தில் ஊடுறுவி அறிந்து கொள்ளும் திறமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இயற்கை மனிதனுக்கு எண்ண ரகசியங்களை மறைத்து வைக்கும் திறமையை அருளினாலும் அதையும் உடைத்து விடும் வழியையும் மனிதனுக்கு தந்து இருக்கிறது.

* * *

Thursday, September 13, 2012

முழுமுதற் இறைவன் யார்? ஒரு விளக்கம்



குரு வாழ்க ! குருவே துணை !!

மெய்யன்பர்களே !
பலவிதமான தெய்வ வழிபாடுடைய இந்துக்களில் பலருக்கும், எந்த மூர்த்தியை வழிபட்டால் எல்லா மூர்த்திகளையும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது தெரியாதிருக்கிறது. அதைப் பலரும் அறியும்படி தெரிவிக்கவே, சிவன் கோவல்களில் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தைத் தவிர வேறு பிரதிஷ்டை ஒன்றுமின்றி அமைத்துக் காட்டி இருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

சிவலிங்கம் மூன்று கூறுகளுடையன. அடிப்பாகம் நாற்கோண வடிவமாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும். மத்தியபாகம் எட்டுப் பட்டமுடைய அட்டகோண வடிவமாய், வாமை, சேஷ்டை, ரெளத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரதமணி, சர்வ பூத தமனி என்னும் மகாவிஷ்ணுவின் எட்டு சக்திகளும். அதனோடு பொருந்த இருக்கும் ஆவுடை எனப்படும், மனோன்மணியாகிய ஒன்பதாவது சக்தியும் சேர்ந்து மகாவிஷ்ணுவின் நவசக்திகளாகி, நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் ‘ஸ்திதி’ கர்த்தரான விஷ்ணுபாகத்தை உணர்த்துவதாகும். அரன் என்பதன் பெண்பாலே அரி என்பதாகும். அதனாலேயே ‘அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயரனார்க்கே’ என்று திரு நாவுக்கரசு நாயனாரும், திருமழிசையாழ்வார் தமது இயற்பாவிலே ‘மாதாயமாலவனை மாயவனை’ என்றும் அருளிச் செய்திருக்கின்றார்கள்.

அதனால் தான்  நமது அப்பனாகிய மகா விஷ்ணுவின் பாகமாகவும், மாதொருபாகன், உமா மகேஸ்வரன், அர்த்தனாரி, சங்கர நாராயணன் என்ற ஆணும் பெண்ணும் சேர்ந்த அபூர்வ மூர்த்தங்களாகவும், அமைந்து திகழ்கின்றன. அதற்கு மேலுள்ள பாகம் நெருப்பிற்கு அதிபதியும், அழித்தல் எனப்படும் சம்ஹாரம், மறைத்தல் எனப்பரும் த்ரெளபவம், அருளல் எனப்படும் அனுக்கிரஹம் ஆகிய முத்தொழில்களுக்கும் அதிபதியான சிவபாகமாகும்.
பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம் பூமிக்கும் மறைந்து ஒடுங்கி நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுபாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்து நிற்கும். நெருப்புகதிபதியான சிவபாகம் மேலோங்கி ஜோதிபோன்று ஜொலித்துக் கொண்டிருக்கும். 

இம்மூன்றும் சேர்ந்த அருவமும், உருவமுமற்ற ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி வடிவே சிவலிங்கம் ஆகும். ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனும், மகாவிஷ்ணுவின் பத்துத்திரு அவதாரங்களை வழிபட்ட பலனும், சிவபெருமானின் 25 மூர்த்தங்களை வழிபட்ட பலனும் ஒருங்கே கிடைக்ககூடியதாகவும் இருக்கின்றதென்பதை வேதாகமங்கள் வலியுறுத்துகின்றன.

புராண இதிகாசங்களும், அனுபூதிமான்களது அனுபவங்களும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரசமரம் சுற்றிவரும் அன்பர்கள் சைவர்களாக இருந்தாலும், வைணவர்களாக இருந்தாலும் எல்லோரும் ஒன்று போல சொல்லி வரும்,

மூலதோ பிரஹ்மரூபாய, 
மத்தியதோ விஷ்ணுரூபிணி,
அக்ரஹ்த சிவரூபாய,
விருக்‌ஷராஜாயதே நம.

என்ற மந்திரமும் சிவலிங்க தத்துவத்தின் உண்மையை நன்றாக வலியுறுத்துகிறதல்லவா? அல்லாமலும் உலகிலுள்ள எல்லா மரங்களும் அவற்றின் விதைகளும், கனிகளும், எல்லா வகையான முட்டைகளும், ஜீவராசிகளின் தலைகளும், பிண்டங்களும், பூமியும், சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும், அண்டங்கள் பலவும், ஆகாயமும், சிவலிங்க வடிவின் மேற்பாகம் போல அமைந்திருப்பது சிந்திக்கத்தக்கது.

மேலும் பாவங்களிலெல்லாம் மிகவும் கொடியது பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். மனிதரைக் கொன்ற கொலைப்பாவம். அதை நீக்க வேண்டுமானால் தனியான எந்த மூர்த்தியையும் வழிபட்டு, நீக்கிக் கொள்ள முடியாது என்பது வேதாகம விதி. அதை நீக்க வேண்டுமானால் சிவலிங்க பூஜையே செய்தாக வேண்டும். 

அதனாலாயே திருவிளையாடல் புராணத்தில் பஞ்சமாபாதகம் செய்தவனுக்கும், மதுரை மீனாக்‌ஷிசுந்தரேசுவரர் அவன் பாவங்களை மன்னித்து, நற்கதி கொடுத்ததாகக் காண்கிறோம். காஞ்சிபுரத்தில் அம்மையார் சதாவும் இலிங்க பூஜை செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களும் சிவபூஜா துரந்தர்களாக இருக்க, அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து பாசுபதம் பெறுவதற்கு விஷேசத் தவம் புரிந்தது யாவரும் அறிந்ததே. இராமாயணத்தில் இராவண சம்ஹாரத்திற்குப் பிறகு, ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் இராம நாதரை சிவலிங்கத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் ஹனுமார் தனியாக காசியிலிருந்து இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் காணலாம்.
கந்த புராணத்தில் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஸ்ரீசுப்ரமணியப் பெருமான் திரிச்செந்தூரில் சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். 

கஜமுகா சூரனைச் சம்ஹாரம் செய்த பிறகு ஸ்ரீவிநாயகப் பெருமான் திருச்செங்காட்டங்குடியில் சிவலிங்கப் பூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். மேலுலகத்தில் அதிகாரம் பெற்ற சகலருமே சிவபூஜை செய்தே அவ்வப் பதவிகளைப் பெற்றிருப்பதாக, நமது நாயன்மார்களும் மாணிக்கவாசகரும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

- தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1 இல் பக்கம் 89,90,91 ( திருப்புறம்பயத் தல வரலாறு பகுதி)

சிந்திக்கவும், சிலிர்க்கவும் ஒரு குறிப்பு :

நமது தமிழர் பாரம்பரியத்தின் கல்வி ஐந்திரம் என்பதாகும். எண்ணியம்(சாங்கியம்), ஓகம், உலகாய்தம் ஆகிய இம்மூன்று கோட்பாடுகளும் வேதங்களை விட உயர்வானதாக மதிக்கப்பட்டனவாம். அரசர்கள் கல்வியில் இம்மூன்றும் முதன்மை பெற்றிருந்தனவாம். கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐந்திரம் கல்வியின் பிறப்பிடமாய் தமிழகம் திகழ்ந்தது. வட நாட்டிலிருந்தெல்லாம் இக்கல்வியைக் கற்றிட வந்தனராம். தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவராம். ஐந்திரக்கல்வி அறிவு வேட்கையைத் தூண்டி, மக்களை நன்னெறிபடுத்தியதாம். உலகிலேயே இரண்டே இரண்டு ஐந்திர நூல்கள் மாத்திரமே உண்டாம். அவை தொல்காப்பியமும், திருக்குறளுமேயாம். ( க. நெடுஞ்செழியன் - தமிழரின் அடையாளங்கள் நூலில் இருந்து)

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Tuesday, September 11, 2012

முழுமையான கடவுள் எது?

இந்து சமயத்தில் பல கடவுள்கள் இருப்பதை பலரும் கிண்டல் அடித்திருப்பார்கள். அதற்கான பதிலை ஒரு புத்தகத்தில் படித்தேன். எனக்கு அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருந்ததால் விரைவில் அப்பதிவு வெளியிடப்படும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, September 10, 2012

இயக்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்


குரு வாழ்க ! குருவே துணை !!





எனது நண்பர் கோவையில் ஃபில்ம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இருக்கிறார். இன்ஸ்டிடியூட் சம்பந்தமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வேறு யாரிடமாவது கருத்துக்களை கேட்கலாம் என்று நினைத்தோம். இயக்குனர் சுந்தர் ராஜன் அவர்களுக்கு அழைத்தேன். ”கோவையில் தான் இருக்கிறேன் தங்கம், எட்டு மணிக்குச் சந்திக்கலாமா?” என்றார்.

நானும் நண்பரும் நேரு விளையாட்டு அரங்கம் சென்று பாப்கார்ன் கொரித்து விட்டு, இயக்குனர் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் அன்று முதன் முதலாய் சந்தித்தோம். 

காருக்குள் அமர்ந்து கொண்டார். 

”குங்குமச் சிமிழில் விழுந்தவன் இன்றும் எழுந்து கொள்ள முடியவில்லை சார், ரேவதி போன்ற நடிகைகளைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது ” என்றேன். 

அவருக்கு நிரம்பப் பிடித்த படம் “குங்குமச் சிமிழ்” என்றார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன். இன்ஸ்டிடியூட்டுக்கு நிறைய ஆலோசனைகளும், கருத்துக்களும் சொன்னார்.
பத்து சில்வர் ஜூப்ளி கொடுத்த வெற்றி இயக்குனர். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். இன்றைய எதிர்கட்சித் தலைவரின் சினிமா வளர்ச்சிக்கு அவரின் பல திரைப்படங்கள் எவ்வளவு உதவி இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வெகு சாதாரணமாய் இருக்கிறார். பெரியவர்கள் எப்போதும் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அலட்டிக் கொள்வதில்லை. பெரியாரிசத்தின் பிடிப்பில் தன்னை முழுதாய் ஈடுபடுத்தி இருக்கிறார். 

ஆன்மீகவாதியான எனக்கும் பெரியாரிசத்தில் ஈடுபாடுடைய அவருக்குமான நட்பை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் உதிக்கும் சிரிப்பின் அர்த்தம் எனக்கே புரியவில்லை. அர்த்தம் விரைவில் விளங்கும் என்றே நினைக்கிறேன்.

சில்லிட்ட காற்று வீச இனிய வருகையாய் கை குலுக்குகினார். அவரின் கை “சில்லென்று” இருந்தது.

வெகு விரைவில் கோவையில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் அனைவருக்கும் சினிமா, டிவி, மீடியாக்களில் வாய்ப்புக்கள் உருவாக்கித் தரவும், நாடகக் கலையினை வளர்த்தெடுக்கவும், கற்பனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களுக்கு உதவிடவும் இந்த இன்ஸ்டிடியூட் செயல்படும் விதமாய் உருவாக்க வேண்டுமென்பது ஆவல். 



எங்களது ஃபெமொ மாடலிங் கம்பெனியின் மாடல்களை முழு வார்ப்பாக வார்த்தெடுக்க முயல்வோம். திறமைசாலிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு எட்டாத சினிமாக் கனவுகளை எட்ட வைக்கவும், பலருக்கு ஏணியாகவும் ஃபெமொவை விளங்கிட வைக்க விரும்புகிறோம். 

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.  நண்பர்களின் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் எதிர் நோக்கும்

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Sunday, September 9, 2012

பில்லி, சூனியம் வைப்பது எப்படி?


குரு வாழ்க ! குருவே துணை !!

சாப்பாட்டுக் கொண்டிருந்த போது உணவில் உப்பு, காரம், புளி குறைந்திருந்தது. உடம்பு கிடம்பு சரியில்லையோ என்று நினைத்துக் கொண்டேன். உப்பெல்லாம் கம்மியா இருக்கேன்னு கேட்டேன். போதும் போதும் என்று குரல் வந்தது அம்மணியிடமிருந்து. என்னடா இது? எப்பவும் மறந்துட்டேங்கன்னு சொல்ற ஆளு போதும் போதும்னு சொல்லுதுன்னு நினைச்சுக்கிட்டே சாப்பிட்டேன். 

முகமூடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது, “சுந்தரபாண்டியன்” திரைப்படத்தின் ட்ரையிலர் காட்டினார்கள். அட அம்மணியின் தங்கை மாதிரியே இருக்காளே ஹீரோயின் என்று நினைத்தேன். அத்துடன் சும்மா இருந்தால் பரவாயில்லை. அதை அம்மணியிடம் வேறு சொல்லி விட்டேன். சாப்பாட்டில் காரம், புளி, உப்பு எல்லாம் காணாமல் போய் விட்டது. 

இப்படித்தான் எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்டேன். அது என்னவோ தெரியவில்லை மனைவிகளின் தங்கை மட்டும் அழகா இருக்காங்க. அதை வெளிப்படையா(!???) சொன்னா மனைவிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. மூன்று நாளா உப்பில்லாம சாப்பிட்டதில் மூன்று கிலோ வெயிட் குறைந்து போய் விட்டது. இனி உப்பு போட்டு உணவு எப்போ கிடைக்குமோ தெரியவில்லை. 

அத்துடன் விட்டேனா? அடுத்து பில்லி வேறு வைத்த கதை இருக்கிறது. அதைக் கேளுங்கள் !

”தங்கையை பார்த்து விட்டு வருவோம்” என்றாள் அம்மணி. ”சும்மா போனா  நல்லாயிருக்காது, ஏதாவது வாங்கிக்கிட்டு போவோம்னு” சொன்னேன். நாங்கள் இருந்தது உழவர் சந்தை ஆகையால் இரண்டு கிலோ தக்காளியும், ஒரு கிலோ கேரட்டும் வாங்கிக் கொண்டு போனோம். போய்ப் பார்த்துட்டு சும்மா வந்திருந்தால் பில்லியிடம் இருந்து தப்பித்திருப்பேன். 

”என்ன மாமா தக்காளி, கேரட்டுன்னு” அம்மணியின் தங்கை கேட்க, தப்பா நினைத்துக் கொள்ளப் போகிறாளே என்று நினைத்துக் கொண்டு, ”உடம்பு சரியில்லை என்று சொன்னாயா? அதனால் கலர் கிலர் குறைஞ்சிருக்கும்னு தக்காளியும், கேரட்டும் வாங்கிக் கொண்டு வந்தேன்னு” சொன்னேன். 

வீட்டுக்குத் திரும்பி வரும்போது, “எவ்வளவு அக்கறை உங்களுக்கு?” என்றாள்.

“என்ன என்ன சொன்னாய்?”

“என் தங்கச்சிக்கு கலர் குறைஞ்சிருச்சுன்னு எவ்வளவு கவலை உங்களுக்கு?” என்றாள்.

பில்லியை நானே எப்படி வைத்துக் கொண்டேன் என்று பார்த்தீர்களா?

இப்படித்தான் பில்லி, சூனியம் வைப்பது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். 

வாழ்க வளமுடன் ! மனைவியின் தங்கைகள் ஏதும் இன்றி !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

குறிப்பு : வாயைக் கட்டவில்லை என்றால் இப்படித்தான் ஆகும் என்பது பதிவின் மெசேஜ்.

Saturday, September 8, 2012

புளி

குரு வாழ்க ! குருவே துணை !!

ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் “ஆறாம் திணை” தொடரில் ஒரு பகுதி இங்கே. புளியில் சமைத்த உணவின் சிறப்பைப் பற்றி எழுதி இருக்கிறார். புற்று நோய் வரக்கூடிய காரணிகளை ஆராய்ந்திருக்கிறார். படித்து மனதில் ஓரத்தில் குறிப்பிட்டு வையுங்கள். உபயோகமாய் இருக்கும்.

சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லும் விகடன் நிறுவனத்தாருக்கும், மருத்துவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் சமுதாயத் தொண்டு மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வளங்களையும் அருளட்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன் (ஆனந்த விகடன்)



குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்குச் சமையல் அறையில் பெண்கள் அதிக நேரம் செலவிட்டது அந்தக் காலம். அதே குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அதே பெண்கள், அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவது இந்தக் காலம். 'ஈவது விலக்கேல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவறேல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர் உடனடிக் கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம்.

சமைத்த உணவு, சில மணி நேரங்களில் கெட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் துவங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வொன்றாகத் தொடங்குவது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைக்க, நொதிக்காமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாது இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்களைச் சேர்த்துதான் 'உடனடியாகச் சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்தைக்கு வரு கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள். அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் புட்டிகளில். இதை வாங்கிப்போய் நீங்கள் எங்கே வைப்பீர்கள்? ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வளவும் சொந்த செலவில் சூனியம்வைத்துக்கொள்ளும் விஷயங்கள்தான்.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும் போது சமைத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்வைத்துச் சாப்பி டலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டி லில்வைப்பது ஆகட்டும்; காய் கறிக் கடையில் வாங்கிய காய்கனிகளைப் பத்திரமாக பிளாஸ்டிக் பையில் பிரித்துவைப்பது ஆகட்டும்;  இன்னும் புத்திசாலித்தனமாக இரவே காய்களை வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு சமர்த்தாக ஃபிரிஜ்ஜில்வைத்து, காலையில் சமையல் செய்து வேகமாகக் கிளம்பு வது ஆகட்டும்... உங்கள் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நீங்களே வழிவகுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

அதிசூட்டிலும் அதிகுளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து 'டயாக்ஸின்’ வாயு கசிந்துவருமாம். இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உங்கள் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். அப்புறம் அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டின் தருமோ என்னவோ... கண்டிப்பாக புற்றுநோயைத் தரக்கூடும்.

பள்ளிக்கூடத்துக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீரோ, சாப்பாடோ எடுத்துச் செல்ல முடியுமா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்லும் குழந் தைகள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாம் நம் வளர்ப்புதான். அழகான பிளாஸ்டிக் டப்பர் வேர் வாங்கி, அதில் சூடான வத்தல் குழம்பைக் கொடுத்து அனுப்புவீர்கள் நீங்கள். வத்தல் குழம்பில் மெள்ளக் கசியும் டயாக்ஸின் அப்போது ஒன்றும் செய்யாதுதான். எப்போதுமே ஒன்றும் செய்யாமல் இருக்குமா என்ன?

புற்றுநோய்க்கான காரணிகளில் ரொம்ப முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையறாக்களும்தான்.

புற்றுநோய் மட்டுமா? சர்க்கரை நோய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநியோகத்துக்கு பி.வி.சி. குழாய்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்று இப்போது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குழாய்கள் வளைந்து நெளிந்து வீட்டுக்குள் செல்ல, அதில் பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ கொஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல் உண்டாக்கி இருக்க லாம் என்று சந்தேகிக்கிறது இந்த ஆய்வு.

ரொம்பப் பயமுறுத்துவதற்கோ, அதிகப்படியான கற்பனையிலோ இதை எல்லாம் எழுதவில்லை. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை வெளி யிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் மேற் சொன்ன பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது புற்றுநோயை உறுதியாகத் தோற்றுவிக்கும் என்று பொருள். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவாக உறுதிப்படுத்தாத காரணிகள்).

இந்த நேரத்தில், தேசிய உணவியல் கழகம் சொல்லும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான  தகவலைத் தருகிறேன்.

'நீர்க் காய்கறியைக் கூட்டாகவைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும் முற்றிய காயைப் பொரியலாகவும் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக் கரைசலில் வேக விடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா? 'புளியில் வேக வைத்தால் அதன் புரதச் சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை.  நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்ட மின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்று சொல்கிறது தேசிய உணவியல் கழகம்.

நம் முன்னோர்கள் எவ்வளவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்கையை எவ்வளவு அபாயகரமானதாகவும் நாசகரமானதாகவும் நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம்... பார்த்தீர்களா?

Thursday, September 6, 2012

ஆன்மீகம் அறிவியல் மிஷ்கினின் முகமூடி பின்னும் உன்னால் முடியும் கோபிநாத்தும்




குரு வாழ்க ! குருவே துணை !!

மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றின் முன்மாதிரிகள் அல்லது முன் வடிவங்களை நாம்  கிழக்கிந்திய ஆன்மீக நூல்கள் வாயிலாக கண்டு கொள்ளலாம். புஷ்பக விமானம் முதற்கொண்டு, ஏவுகணைகள் வரை அத்தனையும் தொன்மையான இந்திய ஆன்மீகப் பாதையில் புரண்டு கொண்டிருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போஸான் துகள் கூட அப்படியே. 

மனிதனும் பிரபஞ்சமும் - சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எழுதிய நூலைப் படித்துக் கொண்டிருந்த போது, நூலின் பத்தாவது பக்கத்தில் ஒரு அடிக்குறிப்பு எழுதி இருந்ததைக் கண்டு வியப்பேற்பட்டது. பிரபஞ்சத்தில் இருப்பது இரண்டே இரண்டு பொருட்கள்தான். ஒன்று ஜடப்பொருட்கள் மற்றொன்று உயிராற்றல். கபிலர் இப்படித்தான் வரையறுத்து உள்ளார் என்கிறார் சுவாமி. மேலும் போஸான் பற்றிய முன்குறிப்பாய், 2008ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நூலில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பின்வருமாறு எழுதி இருக்கிறார்.

“அணுவை மட்டுமின்றி அதனுள்ளிருக்கிற புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் கூடப் பிளக்க முடியும், துகள் துகளாக்க முடியும் என்று கண்டு பிடித்திருக்கிறது நவீன விஞ்ஞானம். இறுதியில் இன்னும் பிளக்க முடியாத, உடைக்க முடியாத ஒரு துகள் எஞ்சியிருக்கிறதா என்பது புதிராக இருந்து வருகிறது. அப்படி ஒரு துகள் கிடைத்தால், பிரபஞ்சக் கட்டிடத்திற்கு அதுவே செங்கல்”

போஸானைப் பற்றிய  மறைக் குறிப்பினை சுவாமிகள் எழுதி இருப்பதை நாம் அறியலாம். இது போன்ற எண்ணற்ற அடிக்குறிப்புகள் பலவும் பல ஆன்மீக புத்தகங்களில் மறைபொருளாய் கிடக்கின்றன. இந்திய ஆன்மீகத்தைப் பற்றிய அறிவு பரவலாக்கப்பட்டால் மேலும் மேலும் இயற்கையில் ஒளிந்திருக்கும் எத்தனையோ விஷயங்களை அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியும்.  போஸானின் தத்துவம் சிதம்பர நடராஜர் சிலையில் இருக்கிறது என்று தற்போது பேசிக் கொள்வது நமக்குத் தெரியும்.

உங்களுக்கு ஒரு விஷயத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அக்னி, நெருப்பு, தீ, ஜோதி, ஜ்வாலை என்றெல்லாம் அழைக்கக்கூடிய நெருப்பு எப்படி உருவானது என்று சிந்தித்துப் பாருங்கள். அது ஏதோ ஒரு கல்லில் அல்லவா மறைந்து கிடந்தது. சாதாரண கல்லில் உலகை வாழ வைக்கும் அல்லது அழிய வைக்கும் ஊழித் தீயை உண்டாக்கும் கருப்பொருள் இருக்கிறது என்றால் பிறபொருட்களில் மறைந்து கிடப்பவை எத்தனையோ? அறிவியல் புலனின்ப அறிவுக்குள் அத்தனை காரணத்தையும் கண்டுபிடிக்க முனைந்து கொண்டே இருக்கிறது. அது நான்கு குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து கருத்துச் சொல்வது போலத்தான் இருக்கும் என்கிறார் சுவாமி தம் நூலில். 

வழிகாட்டுதல்களுக்கு ஆன்மீக நூல்கள் அறிவியலுக்கு துணை செய்கின்றன. ஆனால் சிலர் வழிகாட்டுகிறேன் என்று வேறு எங்கோ சமூகத்தின் பாதையை திருப்பி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நேற்று இயக்குனர் நண்பரொருவரின் வற்புறுத்தல் காரணமாய் முகமூடி திரைப்படத்திற்குச் செல்ல நேரிட்டது. தியேட்டர் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த போது ”அட்டகத்தி அளவுக்கு படம் கலெக்‌ஷன் சரியில்லை சார்” என்றார். ஆனால் தியேட்டரினுள் ஒரே ஒரு வரிசை மட்டுமே பாக்கி இருந்தது. தியேட்டர் ஃபுல். மேனேஜர் சரடு விட்டிருப்பாரோ என்று நினைத்தேன். முகமூடி திரைப்படம் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இப்படத்தோடு போட்டி போடக்கூடிய வேறு ஏதும் திரைப்படம் இல்லாத காரணத்தால் நிச்சயம் முகமூடி நல்ல கலெக்சனை கொடுத்திருக்கும். வெளியீட்டில் கூட நேரம் காலம் பார்க்கணும். பெரிய படங்களோடு போட்டி போட்டால் இரண்டாவது நாளே படம் பொட்டிக்குள் போய் இருக்கும். யுடிவியின் சாமர்த்தியம் சரியானது தான்.

மூன்று மணி நேர தன் நினைவு மறப்பு என்பதற்காக, பொழுதினை போக்குவதற்காக படம் பார்க்கச் செல்லும் போது செல்போனை ஏன் எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்றே தெரியவில்லை. எப்போதும் பேச்சுத்தானா? எதிலும் முழு ஈடுபாடு எவருக்கும் இருப்பதில்லை. பாட்டு வரும்போது சீட்டினை விட்டு எழுந்து செல்வது, வேறு எவராவது சினிமா ஹீரோ பெயரைச் சொல்லும் போது கழுதை தொண்டைக்குள் புகுந்தாற்போல வறட்டுக் கத்து கத்துவது, சீட்டி அடிப்பது, எழுந்து ஆடுவது போன்ற கோணங்கித் தனங்களைச் செய்யும் சக மனிதர்கள், இந்தச் சேட்டைகள் பிறருக்கு எரிச்சலைத் தரும் என்று ஏன் நினைக்க மறுக்கின்றார்கள் என்பது புரியவில்லை. அமைதியாய் உட்கார்ந்து சில்லிட்ட காற்றையும், இயக்குனரின் கலைப்படைப்பையும் ரசித்து விட்டு வந்தால் என்ன? மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மிருகத்தன்மைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சினிமா தியேட்டர்கள் ஒவ்வொன்றும் காட்டிக் கொண்டிருக்கின்றன. அது போகட்டும் !

பிரபல எழுத்தாளர் தஸ்தாவேயெஸ்கியின் ஏதோ ஒரு நாவலின் கதாபாத்திரத்தை தன் பெயராக வைத்திருக்கும் மிஷ்கினின் திரைப்படத்தில் மஞ்சள் சேலை குத்துப் பாட்டு கேட்கவும், பார்க்கவும் வெகு ரசனையாக இருக்கும். அப்படி ஒரு பாட்டு முகமூடி திரைப்படத்தில் இருக்கும் என்று நம்பினேன். மனிதர் ஏமாற்றி விட்டார். ஆனால் கொலை, போலீஸ் கதைக்களத்திலிருந்து மனிதர் இன்னும் திரும்பவில்லை. அஞ்சாதே, யுத்தம் செய் இரண்டு படங்களும் வன்புணர்ச்சி சம்பந்தப்பட்டதாய் இருந்தது. இளம்பெண்களை கற்பழிப்பது, வயதானவர்கள் இளம் பெண்களைக் கற்பழிப்பது போன்ற சித்திரங்கள் மிஷ்கினின் ட்ரேட்மார்க். சித்திரம் பேசுதடியில் ரவுடி தளம், நந்தலாலா - இவரின் படைப்பு அல்ல என்பதால் எழுதத் தேவையில்லை. நல்ல வேளை முகமூடியிலும் நரேன் முதிய மாமிகளை வன்புணர்ச்சி செய்யாமல் கொலையோடு விட்டு விட்டார். ஆகவே மிஷ்கினின் முகமூடி ரசனை எனக்குப் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இந்த முகமூடி ஓகே ரகம். இதற்கு மேல் ஏதும் செய்யமுடியாது. பாடல்கள் எல்லாம் அவரின் முந்தைய படங்களின் காப்பி போலவே இருக்கிறது. பிற்பகுதியை காமெடியாக்கி ஜிவ்வாவை கலாய்த்து விட்டார். ஜிவ்வா ரசிகர்கள் ஒருவரும் தியேட்டரில் விசில் கூட அடிக்கவில்லை.

தன் தாத்தாவிடம் உரையாடுவார் ஜிவ்வா.

”நான் ப்ரூஸ் லீ போல ஆவனும்” - ஜிவ்வா

“ஆகி என்ன செய்வாய்?” - தாத்தா

“ நல்லா ஃபைட் பண்ணுவேன்” - ஜிவ்வா

“ஃபைட் பண்ணி???” - தாத்தா

முழிப்பார் ஜிவ்வா.

ப்ரூஸ் லீ தனக்கென தனிப்பாதையை வகுத்து அதில் அவர் வெற்றி பெற்றார். அவரைப் போல மற்றொருவர் ஆக முடியாது. நீ யாராக வேண்டுமென்பதை நீயே தேடி கண்டுபிடி என்றுச் சொல்வார் ஜிவ்வாவின் தாத்தா.

இதைக் கண்டுபிடிக்க நம் கல்வி முறை உதவுவது இல்லை. மெட்டீரியல்ஸ் வாழ்க்கையை நோக்கிய பணத்தை சாரி பயணத்தைதான் இன்றைய கல்வி முறை சொல்லித் தருகிறது. அது மட்டுமல்லாமல் மீடியாக்களில் இதே கூத்துதான்.

உன்னால் முடியும் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கோபிநாத் பல தொழிலதிபர்களை வரவழைத்து அவர்களின் வெற்றிக் கதைகளையும், பிரச்சினைகளையும் கேட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர உதவி செய்கிறார் என்று எனது பல நண்பர்கள் பேசினார்கள். நல்ல நிகழ்ச்சி என்றும் சொன்னார்கள். எனக்கு அந்த நிகழ்ச்சி சுத்தமாய் பிடிக்கவில்லை. ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருக்கும் துடிப்பான இளைஞர்களைக் கேட்டுப்பாருங்கள்? ஒவ்வொருவனும் நான் அம்பானி போல வரணும் என்பார்கள். கோல்கேட் ஊழலில் நிலக்கரியை சட்ட விரோதமாய் வேறொரு தெர்மல் பவர் பிளாண்டுக்கு மாற்றிய வகையில் மட்டும் ரூபாய் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள் அம்பானி குழுமத்தார் என்கின்றன பல பத்திரிக்கைகள். அதுமட்டுமா பாலியஸ்டர் பிசினஸ்ஸில் இவர்கள் செய்திருக்கும் கோல்மால்களை வெளி நாட்டுக்காரர் புத்தகமாய் எழுதி வெளியிட, அதை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. இவரைப் போல ஆக வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்த குற்றவியல் பின்னணி கொண்ட குழுமத்தின் செயல்பாடுகளைக் கேட்டால் திரும்பவும் அதே போல சொல்வார்களா? மனச்சாட்சியும், இந்தியாவின் மீதும், சமூகத்தின் மீதும் பிடிப்பு உள்ள எவரும் திரும்பவும் அதே பதிலை நிச்சயம் சொல்லமாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையானவன். அவனது சூழலும் தனித்தன்மை வாய்ந்தது. வழிகாட்டுதல் என்பது மட்டுமே சரியாக இருக்குமே ஒழிய அவரைப் போல ஆவது, இவரைப்போல ஆவது என்று சமூகத்தினை தவறான வழிப்பாதையில் அழைத்துச் செல்லும் உன்னால் முடியும் நிகழ்ச்சி முற்றிலும் தவறானது. பிரபலங்களின் வெற்றிக் கதைகள் நமக்குத் தேவையில்லை. அவர்கள் வெற்றி பெற்றது அவர்களின் தனித்தன்மையினாலும், அவர்களின் சூழலினாலும் மட்டுமே. அதே சூழலும், அதே தனித்தன்மையும் எல்லோருக்கும் இருக்கவே இருக்காது. கோபிநாத்திற்கு மட்டுமே உதவியாக இருக்கும் இந்த வித நிகழ்ச்சிகள் வளரக்கூடிய எந்த ஒரு சமூகத்திற்கும் எந்த வித பிரதிபலனையும் தராது என்று நிச்சயம் என்னால் அடித்துக் கூற முடியும்.இதோ அதற்கான காரணம் கீழே இருக்கிறது.

ஒரு பெரிய பணக்காரனின் பையன் பிசினஸ் செய்ய வேண்டுமெனில் எளிதில் செய்வான், அதில் வெற்றியும் அடைவான். பிரபல அரசியல்வாதியின் பையன் நினைத்தால் அவனால் என்ன பிசினஸ் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதில் வெற்றியும் பெற முடியும். ஆனால் சாமானியன் ஒருவனால் முடியுமா? உன்னால் முடியும் கோபி நாத் இதற்கொரு பதிலைத் தருவாரா? பணமும், அதிகாரமும் இருப்பவர்களால் மட்டுமே பல பெரும் தொழில்கள் தொடங்க முடியும். சாமானியமானவன் காளான் வளர்க்க முடியும், சோப்புக்கட்டி விற்க முடியும். அந்தக் காலம் அல்ல இந்தக் காலம். இப்போது இருக்கும் காலம் சுய நலமும், ஈகோவும் நிரம்பிய மனிதக் கூட்டங்களால் நிரம்பியது. இதில் சாமானியனுக்கு எந்த வித வாழ்வியல் உரிமைகளும் எளிதில் கிடைப்பதில்லை. இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஏதாவதொரு அரசு சார்ந்த அமைப்புகளின் வாசல்களில் சென்று நில்லுங்கள். அப்போது உங்களுக்குத் தெரியும் நிதர்சனம் என்னவென்று.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


Thursday, August 30, 2012

பாலையைக் கடப்பானேன்?


உலகில் தோன்றிய எத்தனை எத்தனையோ நாகரீகங்களில் தமிழ் நாகரீகத்தில் மட்டுமே குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று ஐவகை பூமிகள் வரையறுக்கப்பட்டன. தமிழர் நாகரீகத்தில் மட்டுமே மனித வாழ்வியல் கோட்பாடு அகம், புறம் என்று வகுக்கப்பட்டன. குமரிக் கண்டம்தான் மனித குலம் வாழ மிகச் சிறந்த பூமியாக, அற வாழ்வில் பிடிப்புடைய மனிதர்களால் நிரம்பிய புண்ணியத்தலமாய் சிறந்திருக்கும் பூமி. இப்பூமியில் உதித்தவர்களால் மனித குலம் தழைத்தோங்க, சீரும் சிறப்புடன் வாழ பல் வகை அறிவு சார் நூல்கள் உதித்தன. முதன் முதலாக யூஸ் அன் த்ரோ கான்செப்ட்டை வாழை இலையில் உணவு படைத்து உருவாக்கிய பூமி நம் குமரிக்கண்டம். 

இப்படியான புண்ணிய பூமியில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கால மாற்றம் ஏற்படுத்தப்போகும் விளைவுகளுக்கு காரணம் இங்கிருக்கும் தமிழர்களே. குமரிக் கண்டத்தின் பூமி தீய எண்ணமுடையவர்களை தன்னிடமிருந்து நீக்கிட துணிந்து பல செயல்களை நிகழ்த்துகின்றது. அதில் ஒரு செயல்தான் மழைவளம் குன்றி மண் வளம், மக்கட் வளமும் சீரற்று இருக்கின்றன. 

தமிழர்கள் மோகத்திலும் குடியிலும் கூத்திலும் மூளை செயலிழந்து போய் தன் உடலையும், மனத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். அலோபதி மருந்தைப் போல உடனடிப் பலன் கிடைக்கும் என்பதாய் நினைத்துக் கொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் காசு பிடுங்கும் கூட்டத்தின் மாயைப் பிடியில் சிக்கி, எங்கெங்கோ சென்று வருகின்றனர். எத்தனை எத்தனை ஆன்மீக வழிகளில் சென்று முயன்றாலும், செய்வினைப்பலன் துரத்திக் கொண்டே இருக்கின்றது. மாயையில் சிக்கி மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தங்களின் பூமிக்கு தீங்கு செய்யின் அதன் பலனையும் அனுபவித்தாக வேண்டும். அதைத்தான் தமிழர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மோகம், குடி, கூத்தாட்ட மாயையை விலக்கி உண்மையை அறிந்திட நல்லோர் இடம் சேர வேண்டும். இளைஞன் ஒருவன் தான் எப்போதுமே இளமையாகவே இருப்பேன் என்று நினைத்துக் கொள்வது மாயை. பெண்ணொருத்தி தான் மட்டுமே அழகு என்று நினைப்பது மாயை. இது போன்ற எண்ணற்ற மாயை என்கிற வலையில் சிக்கி எது உண்மை, எது மாயை என்பதை அறியக்கூடிய அறிவுத்திறனும் மழுங்கிப் போய் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று வாழ்கிறார்கள் இன்றைய தமிழர்கள். 

மாயையின் காரணமாய் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரும் செயலின் பலனையும் அவனும், அவன் சார்ந்த உறவுகளும் அனுபவித்து ஆகவேண்டியது இயற்கையினைப் படைத்த “அவன்” கட்டளை. மீறவும் முடியாது, ஓடி ஒளிந்தாலும் தப்பிக்கவும் முடியாது.

செய்த வினைக்கு பலன் கிடைத்தே ஆக வேண்டும், உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டுமென்கிறார்கள். நிகழ்காலத்தில் இருப்போர்கள் “பாவம் செய்தவர்களும், தவறு செய்பவர்களும் தான் நன்றாக வசதி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்” என்பார்கள்.  அது உண்மையே இல்லை. பாவம் செய்கிறவன் தன் வாழ் நாளுக்குள்ளே அத்தனை துன்பங்களையும் அடைந்து நொந்து நூலாய் போவான். இதற்கு உங்களுக்குத் தெரிந்த உதாரணம் சொல்லவேண்டுமெனில் “கண்ணதாசனை”த் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்? கோவில் கோவிலாய் சுற்றினாலும், பூஜைகளும் புனஸ்காரங்களும் செய்தாலும், அன்னதானம் செய்தாலும், அற வழியில் நின்றாலும் செய்த பாவத்தின் பலன் வேறொருவனைச் சேரவே சேராது. உப்பை அள்ளி அள்ளி முழுங்கியவனுக்குத்தான் தாகம் எடுக்கும்.

”கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னைத் தியானிப்பானானால், அவன் கடந்த கால தீய வினைகள் விளைவுகளைச் சீக்கிரம் கழித்து விடுகிறான். விரைவில் அவன் அறவாளன் ஆகிறான். நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசம் அடைவதில்லையென்று நிச்சயமாக அறிக !- கீதை அத்தியாயம் IX, பாடல்கள் 30-31 (உதவி : ஒரு யோகியின் கதை )”

கீதையிலே பகவான் சொல்கின்றான் செய்த வினைப்பலனை நீ எளிதில் கழிக்கலாம். அவனைத் தியானித்தால் மட்டும் வினைப் பயனை நீக்கி விட முடியாது என்கிறான். வினைப்பலனை சீக்கிரம் கடக்கலாம் என்றுதான் சொல்கிறான். ஆக, பாவத்திற்கு பரிகாரம் இல்லை என்று முடிவு செய்யலாம். 
எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொள்ள ஒன்று,

பாலைவனத்தில், கொழுத்தும் வெயிலில், தகிக்கும் நெருப்புக் காற்றில் நடந்து செல்வது வினைப்பயன் என்கிற போது, பகவானை தியானிப்பதால் சற்று நேரம் வெயில் மங்க கூடும், அல்லது பாலைவனத்தில் திடீர் மழை பெய்யலாம். ஆனால் பாலையைக் கடந்து தான் ஆக வேண்டும்.

உங்களுக்குத் தெரிந்த பிற உதாரணங்கள்

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் தன் கர்மாவைக் கழித்த பிறகு தான் மோட்ச நிலை கிடைத்தது அனைவருக்கும். கடவுளே கிருஷ்ணனாய் பிறந்தாலும் அவனும் கர்ம வினைப் பலனை அனுபவித்த பிறகுதான் மோட்சம் பெற முடிந்தது. எவரும் வினைப் பலனை அனுபவிக்காமல் தட்டிக் கழிக்க முடியவில்லை.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் ராமனும் விதிப்பயனை அனுபவித்தார்.

கண்ணதாசன் சொல்வார் “ விதியை மதியால் வெல்வதும் விதியே”.


வினையை விதைப்பானேன், பாலையைக் கடப்பானேன் !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்