குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 30, 2012

பாலையைக் கடப்பானேன்?


உலகில் தோன்றிய எத்தனை எத்தனையோ நாகரீகங்களில் தமிழ் நாகரீகத்தில் மட்டுமே குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று ஐவகை பூமிகள் வரையறுக்கப்பட்டன. தமிழர் நாகரீகத்தில் மட்டுமே மனித வாழ்வியல் கோட்பாடு அகம், புறம் என்று வகுக்கப்பட்டன. குமரிக் கண்டம்தான் மனித குலம் வாழ மிகச் சிறந்த பூமியாக, அற வாழ்வில் பிடிப்புடைய மனிதர்களால் நிரம்பிய புண்ணியத்தலமாய் சிறந்திருக்கும் பூமி. இப்பூமியில் உதித்தவர்களால் மனித குலம் தழைத்தோங்க, சீரும் சிறப்புடன் வாழ பல் வகை அறிவு சார் நூல்கள் உதித்தன. முதன் முதலாக யூஸ் அன் த்ரோ கான்செப்ட்டை வாழை இலையில் உணவு படைத்து உருவாக்கிய பூமி நம் குமரிக்கண்டம். 

இப்படியான புண்ணிய பூமியில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கால மாற்றம் ஏற்படுத்தப்போகும் விளைவுகளுக்கு காரணம் இங்கிருக்கும் தமிழர்களே. குமரிக் கண்டத்தின் பூமி தீய எண்ணமுடையவர்களை தன்னிடமிருந்து நீக்கிட துணிந்து பல செயல்களை நிகழ்த்துகின்றது. அதில் ஒரு செயல்தான் மழைவளம் குன்றி மண் வளம், மக்கட் வளமும் சீரற்று இருக்கின்றன. 

தமிழர்கள் மோகத்திலும் குடியிலும் கூத்திலும் மூளை செயலிழந்து போய் தன் உடலையும், மனத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். அலோபதி மருந்தைப் போல உடனடிப் பலன் கிடைக்கும் என்பதாய் நினைத்துக் கொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் காசு பிடுங்கும் கூட்டத்தின் மாயைப் பிடியில் சிக்கி, எங்கெங்கோ சென்று வருகின்றனர். எத்தனை எத்தனை ஆன்மீக வழிகளில் சென்று முயன்றாலும், செய்வினைப்பலன் துரத்திக் கொண்டே இருக்கின்றது. மாயையில் சிக்கி மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தங்களின் பூமிக்கு தீங்கு செய்யின் அதன் பலனையும் அனுபவித்தாக வேண்டும். அதைத்தான் தமிழர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மோகம், குடி, கூத்தாட்ட மாயையை விலக்கி உண்மையை அறிந்திட நல்லோர் இடம் சேர வேண்டும். இளைஞன் ஒருவன் தான் எப்போதுமே இளமையாகவே இருப்பேன் என்று நினைத்துக் கொள்வது மாயை. பெண்ணொருத்தி தான் மட்டுமே அழகு என்று நினைப்பது மாயை. இது போன்ற எண்ணற்ற மாயை என்கிற வலையில் சிக்கி எது உண்மை, எது மாயை என்பதை அறியக்கூடிய அறிவுத்திறனும் மழுங்கிப் போய் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று வாழ்கிறார்கள் இன்றைய தமிழர்கள். 

மாயையின் காரணமாய் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரும் செயலின் பலனையும் அவனும், அவன் சார்ந்த உறவுகளும் அனுபவித்து ஆகவேண்டியது இயற்கையினைப் படைத்த “அவன்” கட்டளை. மீறவும் முடியாது, ஓடி ஒளிந்தாலும் தப்பிக்கவும் முடியாது.

செய்த வினைக்கு பலன் கிடைத்தே ஆக வேண்டும், உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டுமென்கிறார்கள். நிகழ்காலத்தில் இருப்போர்கள் “பாவம் செய்தவர்களும், தவறு செய்பவர்களும் தான் நன்றாக வசதி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்” என்பார்கள்.  அது உண்மையே இல்லை. பாவம் செய்கிறவன் தன் வாழ் நாளுக்குள்ளே அத்தனை துன்பங்களையும் அடைந்து நொந்து நூலாய் போவான். இதற்கு உங்களுக்குத் தெரிந்த உதாரணம் சொல்லவேண்டுமெனில் “கண்ணதாசனை”த் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்? கோவில் கோவிலாய் சுற்றினாலும், பூஜைகளும் புனஸ்காரங்களும் செய்தாலும், அன்னதானம் செய்தாலும், அற வழியில் நின்றாலும் செய்த பாவத்தின் பலன் வேறொருவனைச் சேரவே சேராது. உப்பை அள்ளி அள்ளி முழுங்கியவனுக்குத்தான் தாகம் எடுக்கும்.

”கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னைத் தியானிப்பானானால், அவன் கடந்த கால தீய வினைகள் விளைவுகளைச் சீக்கிரம் கழித்து விடுகிறான். விரைவில் அவன் அறவாளன் ஆகிறான். நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசம் அடைவதில்லையென்று நிச்சயமாக அறிக !- கீதை அத்தியாயம் IX, பாடல்கள் 30-31 (உதவி : ஒரு யோகியின் கதை )”

கீதையிலே பகவான் சொல்கின்றான் செய்த வினைப்பலனை நீ எளிதில் கழிக்கலாம். அவனைத் தியானித்தால் மட்டும் வினைப் பயனை நீக்கி விட முடியாது என்கிறான். வினைப்பலனை சீக்கிரம் கடக்கலாம் என்றுதான் சொல்கிறான். ஆக, பாவத்திற்கு பரிகாரம் இல்லை என்று முடிவு செய்யலாம். 
எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொள்ள ஒன்று,

பாலைவனத்தில், கொழுத்தும் வெயிலில், தகிக்கும் நெருப்புக் காற்றில் நடந்து செல்வது வினைப்பயன் என்கிற போது, பகவானை தியானிப்பதால் சற்று நேரம் வெயில் மங்க கூடும், அல்லது பாலைவனத்தில் திடீர் மழை பெய்யலாம். ஆனால் பாலையைக் கடந்து தான் ஆக வேண்டும்.

உங்களுக்குத் தெரிந்த பிற உதாரணங்கள்

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் தன் கர்மாவைக் கழித்த பிறகு தான் மோட்ச நிலை கிடைத்தது அனைவருக்கும். கடவுளே கிருஷ்ணனாய் பிறந்தாலும் அவனும் கர்ம வினைப் பலனை அனுபவித்த பிறகுதான் மோட்சம் பெற முடிந்தது. எவரும் வினைப் பலனை அனுபவிக்காமல் தட்டிக் கழிக்க முடியவில்லை.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் ராமனும் விதிப்பயனை அனுபவித்தார்.

கண்ணதாசன் சொல்வார் “ விதியை மதியால் வெல்வதும் விதியே”.


வினையை விதைப்பானேன், பாலையைக் கடப்பானேன் !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.