குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பாவம். Show all posts
Showing posts with label பாவம். Show all posts

Saturday, November 23, 2019

நரலீலைகள் - எது நாவல்? (8)



முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒரு முகம் தெரியாத ஒருவர், ”நீ எழுதுவதெல்லாம் நாவலா?” என்று கேள்வி கேட்டிருந்தார்.  எது நாவல்? என்று கேள்வி கேட்டவருக்கு என்னிடமிருக்கும் ஒரு சில கேள்விகள் பதிலாய்.

’நீங்கள் வாழ்வது யாருடைய வாழ்க்கை? உங்கள் வாழ்க்கையா? இல்லை எவரின் வாழ்க்கை? நீங்கள் இந்த பூமியில் ஒரே ஒரு விஷயத்துக்காக இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று உங்களின் வேதம் சொல்கிறது. அது என்ன? உங்களின் பிறப்பின் நோக்கம் தான் என்ன?’ இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் நான் எழுதுவதும் நாவல் தான். கலைத்துப் போட்டு எழுத நானொன்றும் பின் நவீனத்துவப் படைப்பாளியும் இல்லை.  நாவலின் வடிவத்தை உடைக்க விரும்புகிறேன்.

என் மூளைக்குள் புகுந்திருக்கும் பல்வேறு குப்பை கூளங்களை நீக்கி, பரிசுத்தமாய், தேவகுமாரனாய், பரிசுத்த ஆவியாய், சுத்த ஆத்மாவாய், எல்லைகளற்ற பிரபஞ்சத்தை எனக்குள் உணர்வதற்காக, என்னைக் கட்டி ஆளும் அஸாஸில் எனும் மனதோடு போராடிக் கொண்டிருக்கும் பல துகள்களின் கூட்டிசைவுக் கரு நான்.

நாவல் என்றால் வடிவம் இருக்கும். வடிவம் என்றால் பொருள். பொருள் என்றால் உணர்வற்றது. உணர்வற்ற ஒரு பொருளை நான் உருவாக்க விரும்பவில்லை. எனது சொற்களுக்கு எங்காவது ஒரு காது கிடைக்கலாம். இல்லை கிடைக்காமலும் போகலாம். அது என் பிரச்சினை இல்லை. நான் விடுத்த சொற்களின் வீரம் பற்றியது அது. சொற்கள் மவுனத்தின் உடைப்பு என்பதையும், நான் சொல்ல விரும்புவது எனக்கே எனக்காக என்பதையும் நான் உணர்ந்து இருக்கிறேன். ஆகவே இந்த நாவல் உங்களுக்கானது அல்ல என்பதால் தயை கூர்ந்து நீங்கள் விலகி விடலாம். 

கேள்விகள் குறிகள் போல. அவை உம்மைத் தாக்கி அழித்து விடும். கேள்விகளின் பதில்கள் புரிதல் இல்லாத இடத்தில் சுயமோகம் கொள்ள வைக்கும். அகங்காரத்தின் தொனியில் மனித தன்மை இழக்க வைக்கும். ஆகவே விலகி விடுங்கள் என்னிடமிருந்து.

நீங்கள் ரசிக்க வேண்டுமென்பதற்காகவோ, உங்களிடமிருந்து எனக்கு பொருளோ, வேறு எதுவும் தேவை இல்லாத போது, நீங்கள் எனது நாவலைப் படிக்க வேண்டிய நிர்பந்தத்தை, நான் உங்களுக்கு தரவில்லை. 

நீங்கள் என்னை எளிதாகக் கடந்து போகலாம். உமது நாட்களை, இந்தப் பூமியில் பிரக்ஞையற்ற தன்மையாக நீங்கள் கழிப்பது போல. அதனால் எனக்கு துன்பம் இல்லை. இன்பமும் இல்லை. இன்பம் என்பது வேதனை மண்டியவை என நான் அறிந்து கொண்டிருக்கிறேன். 

எனது பெயர் தங்கவேல். தங்கவேல் இந்த உலகிற்கு தரப்போகும் இரண்டு சொற்கள் உண்டு. அந்தச் சொற்களால் தான் இவ்வுலகம் மேன்மை பெறும். உலகின் இயக்கம் அந்தச் சொற்களால் தான் உய்வு பெறும். உயர்வு பெறும். மனித உயிர்கள் மகிழ்ச்சியாய் வாழும். எனக்கு முன்னாள் வந்தவர்களும், வரப்போகின்றவர்களும், வந்து கொண்டிருப்பவர்களும் சொல்லிய, சொல்கிற, சொல்லக் கூடிய சொற்கள் தான் அவைகள். சொற்களில் என்ன இருக்கிறது மாற்றம் புரிதலுக்கு உட்படாத வரை? 

எவராலோ எழுதி வைக்கப்பட்ட குப்பைக் கூளங்களுக்கு அடிமையாக என்னால் வாழ இயலாது. எனது உலகம் வேறு. நான் பெற்றவை வேறு. பெற்றுக் கொண்டிருப்பவை வேறு. ஆகவே என்னைப் போன்ற தீவிரவாதியிடமிருந்து, அக்கிரமக்காரனிடமிருந்து, அயோக்கியனிடமிருந்து விலகி ஓடி விடுங்கள். 

ஏனென்றால் நெற்றியின் சுவடுகள் காய்த்து விடுவது தடுக்கப்பட்டு விடும் என நிமித்தம் கேட்கலாம். அந்த நிமித்தம் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரானதாய் இருக்கலாம். அதனால் நடுக்கம் உண்டாகலாம். பயம் ஏற்படலாம். சில்லிடும் உணர்ச்சி ஊசி போல குத்தலாம். கோபம் வரலாம். உடம்பு அதிரலாம். 

உண்மை என்னவென்று தெரியாத. அறியாமை விலகாத வரை, சித்தப் பிரமை விலகாத வரை என் எழுத்துக்கள் கோபம் கொள்ள வைக்கும் தன்மை உடையவைதான். 

உங்களைப் பொறுத்த வரை கரைகள் உடையவை ஆறுகள். எல்லைகள் உடையவை நாடுகள். எனக்கு கரைகளும் இல்லை, எல்லைகளும் இல்லை. நான் உங்களுக்கு முட்டாளாய் தெரிவேன். அறிவிலியாய் தென்படுவேன். என்னால் இந்த உலகிற்கு எந்தப் பயனும் இல்லாதவனாய் புரியப்படுவேன். பூமியில் புற்களுக்கு என்ன வேலை?

இப்படிக்கு நரலீலைகளின் நாவல் ஆசிரியன் கோவை எம் தங்கவேல்.

* * *

டிவியில் தங்கவேல் பேசிக் கொண்டிருந்தான். 

மக்கள் சேவையே மகேசன் சேவை, எனக்குப் பசிக்குச் சோறு போடுங்கள். உங்களுக்காக, உங்களின் குழைந்தைகளுக்காக, உங்களின் குடும்பத்திற்காக, உங்களுடன் இணைந்து பணி புரிய காத்து இருக்கிறேன். என் வீட்டு மின்சாரக் கட்டணத்தைக் கட்டுவாயா? என்று கேட்காதீர்கள். 

நீங்கள் உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை, உங்களிடமிருந்து பிடுங்கித் தின்பதை தடுத்துப் பாதுகாத்திட உங்களுக்காக உழைத்திடுவேன் எனச் சொல்கிறேன். உழைப்பின் ஊதியம் மொத்தமும் உங்களுக்கு கிடைத்தால் உங்களின் கனவுகள் நிறைவேறும்.

ஆனால் உங்களுக்கு ஊதியம் முழுமையாகக் கிடைப்பதில்லை. உங்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை 95 சதவீதம் எவனோ ஒருவன் தின்று கொழுக்கிறான். கிடைக்கும் 5 சதவீதத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவர்கள், வரிகள் என்ற பெயரில் 2 சதவீதத்தைப் பிடுங்கி, தனக்கும், தன் குடும்பத்துக்கும், பிடுங்க உதவி பெறும் ஊழியக்காரர்களுக்கும் பங்கு கொடுத்து விடுகிறார்கள். 

மிச்சமிருக்கும் 3 சதவீதத்தையும் அவர்கள் மாற்று வழியில் பிடுங்கி உங்களை ஏழைகளாக, கனவுகளோடு போராட வைத்து, முடிவில் ஏக்கத்துடன் மரணிக்க வைக்கிறார்கள். உங்கள் கனவுகளை, உங்களின் வாரிசுகளின் மீது சுமத்தி விடுகின்றீர்கள்.

அவர்களின் ஊதியமும் பிடுங்கி தின்னப்படுகிறது. அவர்களின் கனவுகளை அவர்களின் வாரிசுகளிடம் ஒப்படைத்துப் போய் விடுகின்றார்கள். இது காலம் காலமாய் நடந்து வரும் அக்கிரம். இதை எவரும் உணர்ந்து கொள்வதாய் இல்லை. 1 சதவீதத்தில் இருக்கும் அவர்கள், உங்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கித் தின்று விடுகின்றார்கள். உங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. உங்களிடமிருப்பவை எல்லாமும் அவர்களுடையவை. உங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கின்றார்கள். 

உண்மை என்ன என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உணர்ந்து கொள்ள முயலுங்கள்.

* * *

டிவியில் இருந்த கவனத்தைத் திருப்பி, எதிரே உட்கார்ந்திருக்கும் டி.ஜி.பி.ராஜ்குமார் மீது வெற்றுப் பார்வையை வீசினார் சி.எம்.

“யாருய்யா, இந்தத் தங்கவேல்? கேட்கும் எனக்கு நெஞ்சுக்குள் ஊசியைச் சொருகிய மாதிரி இருக்கு?”

“எனக்கும், அப்படித்தான் இருக்கிறது சார். உண்மை அதுதானே? அதைத்தான் அவர் சொல்கிறார். மக்கள் கூட்டம் கூடுகிறது அவரின் பேச்சைக் கேட்க. ஆரம்பத்தில் பத்து இருபது எனக் கூடினார்கள். இப்போது பத்தாயிரம், இருபதாயிரம் என கூடுகிறார்கள். அவர் பொத்தாம் பொதுவாகத்தான் பேசுகிறார். ஆனால் அவ்வளவும் உண்மை”

“நம் அரசு அவருக்கு இணக்கமாக இருக்கும்படி, அவரின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு போடுங்கள். முடிந்தால் அவரின் வீட்டுக்கு நான்கைந்து காவல்காரர்களைப் போடுங்கள். அரசு அவரைப் பாதுகாக்கிறது என்று மக்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்யுங்கள் டி.ஜி.பி”

“நிச்சயம் சார், இவரின் பேச்சுக்களை மக்கள் புரிந்து கொள்ள முயன்றால், அடுத்த ஆட்சியில் நீங்கள் ஜெயிலில் கிடப்பீர்கள் சார்”

“ஆமாய்யா, அதான் எனக்கும் பயமாயிருக்கு”

* * *

”மாயாண்ணே...! மாயாண்ணே...!”

கூக்குரலிட்டான் சநி என்கிற சந்து.

நாவல் என்பது ஒரு பொருள். அது பிரக்ஞை அற்றது. மாயனை நாவல் ஆசிரியன் பொருள் எனச் சொல்லி விட்டான். மாயனுக்கு கோபம் கொப்பளித்து வருகிறது. சந்துவின் கூக்குரல் மாயனுக்கு கேட்கிறது. 

* * *

அம்மே நாராயணி !
தேவி நாராயணி ! !
லக்‌ஷுமி நாராயணி !!!

* * *

தொடரும்





Thursday, August 30, 2012

பாலையைக் கடப்பானேன்?


உலகில் தோன்றிய எத்தனை எத்தனையோ நாகரீகங்களில் தமிழ் நாகரீகத்தில் மட்டுமே குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று ஐவகை பூமிகள் வரையறுக்கப்பட்டன. தமிழர் நாகரீகத்தில் மட்டுமே மனித வாழ்வியல் கோட்பாடு அகம், புறம் என்று வகுக்கப்பட்டன. குமரிக் கண்டம்தான் மனித குலம் வாழ மிகச் சிறந்த பூமியாக, அற வாழ்வில் பிடிப்புடைய மனிதர்களால் நிரம்பிய புண்ணியத்தலமாய் சிறந்திருக்கும் பூமி. இப்பூமியில் உதித்தவர்களால் மனித குலம் தழைத்தோங்க, சீரும் சிறப்புடன் வாழ பல் வகை அறிவு சார் நூல்கள் உதித்தன. முதன் முதலாக யூஸ் அன் த்ரோ கான்செப்ட்டை வாழை இலையில் உணவு படைத்து உருவாக்கிய பூமி நம் குமரிக்கண்டம். 

இப்படியான புண்ணிய பூமியில் இப்போது நடந்து கொண்டிருக்கும் கால மாற்றம் ஏற்படுத்தப்போகும் விளைவுகளுக்கு காரணம் இங்கிருக்கும் தமிழர்களே. குமரிக் கண்டத்தின் பூமி தீய எண்ணமுடையவர்களை தன்னிடமிருந்து நீக்கிட துணிந்து பல செயல்களை நிகழ்த்துகின்றது. அதில் ஒரு செயல்தான் மழைவளம் குன்றி மண் வளம், மக்கட் வளமும் சீரற்று இருக்கின்றன. 

தமிழர்கள் மோகத்திலும் குடியிலும் கூத்திலும் மூளை செயலிழந்து போய் தன் உடலையும், மனத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். அலோபதி மருந்தைப் போல உடனடிப் பலன் கிடைக்கும் என்பதாய் நினைத்துக் கொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் காசு பிடுங்கும் கூட்டத்தின் மாயைப் பிடியில் சிக்கி, எங்கெங்கோ சென்று வருகின்றனர். எத்தனை எத்தனை ஆன்மீக வழிகளில் சென்று முயன்றாலும், செய்வினைப்பலன் துரத்திக் கொண்டே இருக்கின்றது. மாயையில் சிக்கி மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தங்களின் பூமிக்கு தீங்கு செய்யின் அதன் பலனையும் அனுபவித்தாக வேண்டும். அதைத்தான் தமிழர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மோகம், குடி, கூத்தாட்ட மாயையை விலக்கி உண்மையை அறிந்திட நல்லோர் இடம் சேர வேண்டும். இளைஞன் ஒருவன் தான் எப்போதுமே இளமையாகவே இருப்பேன் என்று நினைத்துக் கொள்வது மாயை. பெண்ணொருத்தி தான் மட்டுமே அழகு என்று நினைப்பது மாயை. இது போன்ற எண்ணற்ற மாயை என்கிற வலையில் சிக்கி எது உண்மை, எது மாயை என்பதை அறியக்கூடிய அறிவுத்திறனும் மழுங்கிப் போய் “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்று வாழ்கிறார்கள் இன்றைய தமிழர்கள். 

மாயையின் காரணமாய் மனிதர்கள் செய்யும் ஒவ்வொரும் செயலின் பலனையும் அவனும், அவன் சார்ந்த உறவுகளும் அனுபவித்து ஆகவேண்டியது இயற்கையினைப் படைத்த “அவன்” கட்டளை. மீறவும் முடியாது, ஓடி ஒளிந்தாலும் தப்பிக்கவும் முடியாது.

செய்த வினைக்கு பலன் கிடைத்தே ஆக வேண்டும், உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டுமென்கிறார்கள். நிகழ்காலத்தில் இருப்போர்கள் “பாவம் செய்தவர்களும், தவறு செய்பவர்களும் தான் நன்றாக வசதி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்” என்பார்கள்.  அது உண்மையே இல்லை. பாவம் செய்கிறவன் தன் வாழ் நாளுக்குள்ளே அத்தனை துன்பங்களையும் அடைந்து நொந்து நூலாய் போவான். இதற்கு உங்களுக்குத் தெரிந்த உதாரணம் சொல்லவேண்டுமெனில் “கண்ணதாசனை”த் தவிர வேறு யாரைக் காட்ட முடியும்? கோவில் கோவிலாய் சுற்றினாலும், பூஜைகளும் புனஸ்காரங்களும் செய்தாலும், அன்னதானம் செய்தாலும், அற வழியில் நின்றாலும் செய்த பாவத்தின் பலன் வேறொருவனைச் சேரவே சேராது. உப்பை அள்ளி அள்ளி முழுங்கியவனுக்குத்தான் தாகம் எடுக்கும்.

”கேடு மிக உடையோனும் வேறு ஒன்றையும் எண்ணாது என்னைத் தியானிப்பானானால், அவன் கடந்த கால தீய வினைகள் விளைவுகளைச் சீக்கிரம் கழித்து விடுகிறான். விரைவில் அவன் அறவாளன் ஆகிறான். நித்திய சாந்தியையும் அடைகிறான். குந்தியின் புதல்வா, என் பக்தன் நாசம் அடைவதில்லையென்று நிச்சயமாக அறிக !- கீதை அத்தியாயம் IX, பாடல்கள் 30-31 (உதவி : ஒரு யோகியின் கதை )”

கீதையிலே பகவான் சொல்கின்றான் செய்த வினைப்பலனை நீ எளிதில் கழிக்கலாம். அவனைத் தியானித்தால் மட்டும் வினைப் பயனை நீக்கி விட முடியாது என்கிறான். வினைப்பலனை சீக்கிரம் கடக்கலாம் என்றுதான் சொல்கிறான். ஆக, பாவத்திற்கு பரிகாரம் இல்லை என்று முடிவு செய்யலாம். 
எடுத்துக்காட்டாய் விளங்கிக் கொள்ள ஒன்று,

பாலைவனத்தில், கொழுத்தும் வெயிலில், தகிக்கும் நெருப்புக் காற்றில் நடந்து செல்வது வினைப்பயன் என்கிற போது, பகவானை தியானிப்பதால் சற்று நேரம் வெயில் மங்க கூடும், அல்லது பாலைவனத்தில் திடீர் மழை பெய்யலாம். ஆனால் பாலையைக் கடந்து தான் ஆக வேண்டும்.

உங்களுக்குத் தெரிந்த பிற உதாரணங்கள்

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் தன் கர்மாவைக் கழித்த பிறகு தான் மோட்ச நிலை கிடைத்தது அனைவருக்கும். கடவுளே கிருஷ்ணனாய் பிறந்தாலும் அவனும் கர்ம வினைப் பலனை அனுபவித்த பிறகுதான் மோட்சம் பெற முடிந்தது. எவரும் வினைப் பலனை அனுபவிக்காமல் தட்டிக் கழிக்க முடியவில்லை.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் ராமனும் விதிப்பயனை அனுபவித்தார்.

கண்ணதாசன் சொல்வார் “ விதியை மதியால் வெல்வதும் விதியே”.


வினையை விதைப்பானேன், பாலையைக் கடப்பானேன் !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்