குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அப்பத்தா. Show all posts
Showing posts with label அப்பத்தா. Show all posts

Thursday, April 6, 2017

அம்முவுக்குச் சொன்ன அப்பத்தாவின் வாழ்க்கை

பத்து வீடு தள்ளி இருக்கும் பள்ளி வாசலிலிருந்து வரும் பாங்கழைப்புக் கேட்டு நான்கரை மணிக்கு எழுந்து குடத்தடிக்குச் சென்று குளிர்ந்த நீரை எடுத்து முகம் கழுவி விட்டு, அடுப்புச் சாம்பல் எடுத்து பல் துலக்கி, வாய் கொப்பளித்து விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று சவுக்கில் பின்னப்பட்ட கூடையில் சாணியை வழித்து எடுத்து குப்பைக்கிடங்கில் கொட்டி விட்டு, அதில் கொஞ்சம் சாணியை எடுத்துக் கொண்டு வந்து வாளியில் வைத்து தண்ணீர் ஊற்றி கையால் தெளிக்கும் அளவுக்குக் கரைத்து வாசலுக்குக் கொண்டு வந்து பதவிசாக தெளித்து விட்டு, வாளியை ஓரமாக வைத்து விட்டு, ஒரு ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும் கொட்டிக் கிடக்கும் இலை தழைகளையும் குப்பைகளையும் பெருக்கிக் குப்பைக் கிடங்கில் சேர்த்து விட்டு நிமிர்ந்து கட்டுத்தறிக்குச் செல்லும்.

கட்டுத்தறியில் கட்டிக் கிடக்கும் மாடுகளுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை உருவி எடுத்து வந்து தீனி போட்டு விட்டு, வீட்டுக்குள் நுழைந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டுபோய் குடத்தடியில் போட்டு விட்டு அதில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து விட்டு, அடுப்படிக்கு வந்து அடுப்புச் சாம்பலை ஒரு தட்டில் வறண்டி எடுத்து வைத்து விட்டு சோத்துப் பானையில் முக்கால் திட்டம் தண்ணீர் எடுத்து அடுப்பின் மீது வைத்து விறகை எடுத்து அடுப்பினுள் வைத்து அதனுள்ளே பதவிசாக தீக்குச்சி உரசி விறகைப் பற்ற வைத்து விட்டு குடத்தடிக்கு வரும்.

சாம்பலில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கையில் தேங்காய் நாரை எடுத்துச் சேர்த்து வைத்துக் கொண்டு சாம்பலைத் தொட்டுக்கொண்டு அத்தனை பாத்திரங்களையும் விருட் விருட் என்று துலக்கி தண்ணீர் விட்டு அலசி சுத்தமாகக் கழுவி எடுத்து அடுப்பங்கரைக்குள் நுழைந்தால் அடுப்பில் இருந்த உலைப்பானையில் தண்ணீர் தளதளவென்று கொதித்துக் கொண்டிருக்கும்.

இரண்டு படி அரிசி எடுத்து தண்ணீர் ஊற்றி கழுவி, கழனித் தண்ணியை மாட்டுப்பொக்கையில் விட்டு களைந்தெடுத்த அரிசியைக் கொண்டு வந்து உலையில் போட்டு விட்டு, பக்கத்து அடுப்பினை மூட்டி அதில் முதல் நாள் மீந்திருந்த குழம்புகளைச் சுட வைத்து இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் காய்கறிகளை எடுத்து நறுக்கி பொறியலோ அல்லது கூட்டோ செய்து விட்டு, வடகம், மிளகாய் வத்தல்களை பொறித்து எடுத்து வைத்து விட்டு, அதற்குள் வெந்த சோறுப்பதம் பார்த்து கஞ்சியை வடித்து விட்டு, ஈரத்துணியில் சோற்றுப்பானையைச் சுற்றிலும் துடைத்து பிருமனையின் மீது வைத்து விட்டு, வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கி குப்பையை அள்ளி குப்பைக்கிடங்கில் சேர்த்து விட்டு நிமிரும்.

கதறும் மாட்டின் கன்றினை அவிழ்த்து விட்டு, மடியில் பால் சுரந்ததும் கன்றினைக் கட்டிப் போட்டு கொஞ்சம் பாலைக் கரந்து கொண்டு வந்து அடுப்பில் வைத்து சுட வைத்து விட்டு, மோர்ப்பானையை எடுத்து மத்தை வைத்து கரகரவென கடைந்து திரளும் வெண்ணையை வழித்தெடுத்து, அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மகன் தங்கத்தின் வாயில் வெண்ணெய் உருண்டையில் கொஞ்சம் போட்டு விட்டு மோரை எடுத்து பாத்திரத்தில் வைத்து விட்டு பெரிய தவளைப் பானையை எடுத்து அதில் சோற்றினைப் போட்டு மோர் ஊற்றி உப்புச் சேர்த்து வயக்காட்டில் வேலை செய்பவர்களுக்கு கஞ்சியை தயார் செய்து, தொட்டுக்கொள்ள வெந்தய மாங்காய் ஊறுகாய், அடமாங்காய், மிளகாய் வத்தல், வடகம் எடுத்து வைத்து, பனை ஓலை நறுக்கை ஆள் கணக்குக்குத் தகுந்தாற் போல எடுத்து கட்டி வைத்து விட்டு, வீட்டு ஆட்களுக்கு சோறு போட்டு கொடுத்து விட்டு தலையில் சும்மாடு வைத்து தவளைப் பானையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இடுப்பில் கூடையில் சைடு டிஷ் வகையறாக்களுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் ஐந்து கிலோ மீட்டர் தூரமிருக்கும் வயலுக்குச் செல்லும்.

வயலில் இருந்து திரும்பி வரும் போது கையோடு காய்கறிகளோ அல்லது மீனோ அல்லது நண்டோ இருக்கும். மீன் இருந்தால் அதை சிலாம்பு நீக்கி தலையை அரிந்து, சட்டியில் போட்டு உப்புச் சேர்த்து உரசி, தண்ணீர் விட்டு அலசி, வெள்ளிக்கம்பி போல மின்னும் மீனுடன் அடுப்பங்கரைக்குள் நுழைந்து கைப்பக்குவத்தின் மகிமையில் வீடே மணக்கும் மீன் குழம்போ அல்லது காய்கறிக் குழம்போ தயார் செய்து வைக்கும்.

வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வேலைக்காரர்களுக்கு சோறு போட்டு மீன் குழம்பினை ஊற்றிக் கொடுக்க அவர்களும் வயறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு ’போய்ட்டு வாரேன், தேவச்சியாரே!’ என்றுச் சொல்லி விடை பெறுவர். 

பள்ளி சென்று வீட்டுக்கு வந்து ஆட்டம் போட்டு விட்டு கிணற்றடிக்குச் சென்று பொக்கையில் இருக்கும் தண்ணீரில் குளித்து விட்டு மாலை மயங்கும் நேரத்தில் வாசலில் உட்கார்ந்தால் மணக்கும் மீன் குழம்போடு சாப்பாடு கொண்டு வந்து வைத்துச் சாப்பிடச் சொல்லும். சாப்பிட்டு விட்டு பாடப் புத்தகத்தை விரித்து வைத்து படித்து விட்டு எட்டு எட்டரைக்கெல்லாம் தூங்கப் போய் விடுவேன்.

மறு நாள் காலையில் பாங்கழைக்கும் நேரத்தில் அருகில் அம்மா இல்லாததைக் கண்டு திரும்பிப் படுப்பேன்.

காய்ந்து போன இலைச்சருகுகளைக் கூட்டிக் கொண்டிருக்கும் ’வரட், வரட்’ சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். விடிகாலைக் குளிர் தூக்கம் சுகமானது. தாலாட்டுவது போல அம்மா கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும் சத்தம் காதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கும்