குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label Thangavel Manickam. Show all posts
Showing posts with label Thangavel Manickam. Show all posts

Monday, June 12, 2023

நிலம் (111) - அனுமதியற்ற மனைப்பிரிவு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

அரசு, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறையினர், நுகர்வோர் மன்றங்கள் இப்படி எல்லாமும் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? 

மக்களை ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்து போர்டு தலைவர்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் இன்னும் சாட்சிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அரசோ, நீதிமன்றமோ எதுவும் செய்யவில்லை. வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லை, ஏமாற்றப்பட்ட மக்களிடம் பணத்தைப் பிடுங்கும் வேலையை செய்கிறார்கள். 

அன் அப்ரூவ்டு மனைக்கு அனுமதி என்ற பெயரில் கோவையில் ஒரு சதுரடிக்கு எட்டு ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் அரசியல்வியாதிகளுடன் அரசு அலுவலர்களும். தனி இணையதளம், அதற்கு கட்டணம் என அதிமுக அரசு மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கியது. அன் அப்ரூவ்டு மனைக்கு பதிவுக் கட்டணம் வேறு வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்தார்கள் துணைப்பதிவு அலுவலர்கள். சட்டத்துக்குப் புறம்பான செயலை அனைவரும் மனக் கூச்சமின்றிச் செய்தார்கள்.

பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு,  வீட்டு மனை அனுமதி வழங்கப்பட்டதாகப் பொய் சொல்லி ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களுக்கு எந்தத்தண்டனையும் இல்லை. பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஆனால் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தண்டனையோ தண்டனை. ஏன்? 

கேட்க எவருமில்லாதவர்களாக,  நாதியற்றவர்களாக, அறிவற்றவர்களாக ஏழை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே நடக்கும் அக்கிரங்களை கண்டும் காணாதது போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரவருக்கு அவரவர் பிரச்சினை. இதில் பிறரின் பிரச்சினையை எங்கணம் பார்ப்பது? தற்போதைய உலகத்தின் தன்மை தான், தன் நன்மை என்பதாய் மாறி விட்டது. 

மின்சாரத்துறை அன் அப்ரூவ்ட் மனைகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. இதோ ஒரு கடிதம்.

மனை விற்றவர்கள், மனைக்கு அனுமதி கொடுத்து விட்டதாய் சொன்ன பிரசிடெண்டுகள், மனையைப் பதிவு செய்து கொடுத்த பதிவாளர்கள், வரி போட்ட பஞ்சாயத்து போர்டுகள், மின் இணைப்பு கொடுத்தோர் - இவர்கள் எல்லோரும் நல்லவர்கள்.

ஏமாந்தவர்கள் தீயவர்கள்!

வாழ்க இந்திய ஜனநாயகம்!



Friday, December 16, 2022

நிலம் (104) - நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பூமி என்பது ஒருவருக்கு உயிர் போன்றது. மண்ணையும், பெண்ணையும் தான் மனிதன் தன் மானம் என நினைக்கிறான். 

சார் பதிவாளர் செய்யும் தவறான பத்திரத்தினால் ஒரு குடும்பமே நிலைகுலையும் என்பதினை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் அதுவே பொருந்தும். தீர்ப்புகள் சரியில்லை எனத் திருத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் நேர விரயம், பண விரயம், மன உளைச்சலால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றுக்கு அந்த நீதிபதி பொறுப்பேற்க முடியுமா? சட்டத்தில் அதற்கு இடமில்லை.

சிம்பிளாக ஒரு கேள்வி - ஒரு வழக்கு என்றால் அதற்கு ஒரே ஒரு தீர்ப்பு தான் இருக்க முடியும். ஆனால் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இவர்களில் ஒருவர் தவறானவர் அல்லவா? ஆனால் இதை நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதுதான் சட்டத்தின் பெரிய ஓட்டை. இதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எப்படிச் சரியாக நீதி வழங்க முடியும்? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குத் தெரியும் ஒரு வக்கீல் பொய் சொல்கிறார் என. ஆனால் வழக்கு - விசாரணை டிசைன் இப்படிதான் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்திற்காக வழக்கு ஏற்பட்டு, திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென மரக்காணம் சார்பதிவாளரிடம் கோரப்பட்டது. ஒரிஜினல் வழக்கு எண் OS. 407/2006 மற்றும் அப்பீல் S.A.15/2012.

அதற்கு சார்பதிவாளர் பதிவுத்துறைச் சட்டத்தின் படி காலம் கடந்து விட்டதால், பதிவு செய்ய முடியாது என நிராகரித்து விட்டார். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில் - நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்ய காலவரம்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

சிவில் வழக்கில் கீழ் கோர்ட்டுகள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் போன்றவை நீண்ட காலம் எடுக்க கூடியவை என்பவை பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவைகளை எல்லாம் மறுத்து விட்டு, யாருக்கோ நன்மை செய்யும் போக்கில் மரக்காணம் சார்பதிவாளர் - நீதிமன்ற ஆவணப்பதிவை மறுத்திருப்பது சட்ட விரோதம்.

உண்மையில் ஆவணப்பதிவுகளை முன்பு நீதிமன்றங்கள் செய்து வந்தன. காலப் போக்கில் நிர்வாக வசதிக்காக பதிவு அலுவலகங்கள் உருவாக்கி, பத்திரப்பதிவுகள் தனியாக்கப்பட்டன. ஆனால் பத்திரப்பதிவாளர்கள் நீதிபதிகள் ஆக மாட்டார்கள். நீதிமன்றம் மட்டுமே சிவில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும். அந்தத் தீர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே சார்பதிவாளர்கள் பணி என்பதை அவர்கள் எதற்காகவோ மறந்து போய் விடுகிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதி மிகச் சரியான சம்மட்டி அடி தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். கீழே நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. படித்துக் கொள்ளவும்.

ஆகவே நீதிமன்றத் தீர்ப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்ய கால நேரம் என்கிற கட்டாயமில்லை என்று அறிந்து கொள்க.










Monday, December 12, 2022

நிலம் (102) - வெளிநாட்டு மக்களின் சொத்துக்கள் நூதன திருட்டு

யாரோ ஒருவர் தன் நலத்துக்காகச் செய்யும் செயல், ஏதோ ஒரு குடும்பத்தையே சீரழித்து விடுகிறது. ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பு சரியில்லை எனில் ஒரு நபர் மட்டும் பாதிப்பதில்லை - குடும்பமே பாதிப்படைந்து சீரழிந்து விடும். கோர்ட்டை நன்கு பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு சாமானியன் ஒருவனின் சொத்தினை எளிதில் திருடி விடலாம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் - சொத்துரிமை சட்டங்கள் அவ்வளவு குழப்பமானவை. அதுமட்டுமின்றி நயவஞ்சக முறையில், நரித்தனமான வக்கீல் ஒருவரின் வாதத்தால் சட்டம் கேள்விக்குறி ஆக்கப்படும் பல்வேறு சம்பவங்களை நாமெல்லாம் பார்த்து வந்திருக்கிறோம்.

அனுபோகப் பாத்தியம் என்றொரு விதி உள்ளது அல்லவா? இது சட்டம் எனில் அதுவே அறமாகும் அல்லவா? 

உங்கள் மனசாட்சியைத் தொட்டு, எனது இந்தக் கேள்விக்குப் பதிலை நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். 

இன்றைக்கு உத்திரப்பிரதேசத்தில் ராமருக்கு கோவில் கட்டும் இடத்தின் 800 ஆண்டுகால உரிமை மசூதிக்கு இருக்கிறது அல்லவா? 800 ஆண்டுகால மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்ட கோர்ட் அனுமதி கொடுத்திருக்கிறது. இது சரியா? அவ்வளவுதான் என் கேள்வி. இந்தக் கேள்விக்கு சார்பற்ற நிலையில் இருந்து சட்டமே மேல் என்ற அறிவின் மூலம் பதிலைத் தேடிப்பாருங்கள்.

எனக்கு மதம், மொழி, இனம் ஆகியவற்றில் அதீத ஈடுபாடு இல்லை. ஏனென்றால் என் பிறப்புக்கு முன்பே மனிதர்கள் இவைகளுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். அந்த வகையில் நானொரு அடிமை வம்சத்தில் பிறந்தவனே. மதமும், மொழியும், இனமும் மனிதர்களை அடிமைப்படுத்தும் மாய வலை என்பதை புரிதல் உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இப்போது திருட்டுக்கு வரலாம்.

சமீபத்தில் என்னிடம் சொத்துரிமை ஆய்வுக்கு வந்த ஆவணங்களில் இருந்த அட்ஜுடிகேசன் ஆவணத்தைப் பார்த்த போது - அதன் தன்மை எனக்கு சரியாகப்படவில்லை. வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் தன் சொத்தினை விற்பதற்கு எழுதிக் கொடுக்கும் பொது அதிகார முகவர் பத்திரத்தினை, பதிவு அலுவலகத்தின் அட்ஜுடிகேசன் செய்து பதிவு செய்வர். 

சந்தேகம் வந்து விட்டால் எனக்குத் தூக்கம் வராது. இந்த நிலத்தை வாங்குபவரிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இடத்தின் லொகேசன் கேட்டேன். அனுப்பி வைத்தார். மறுநாள் சென்று விட்டேன்.  எனது வழியில் விசாரித்து அந்த நில உரிமையாளரைப் பிடித்தேன். 

நிலம் விற்பனை செய்வதாகக் கேள்விப்பட்டேன் என்று ஆரம்பித்த போது, அவர் விற்பனை செய்ய விரும்பவில்லை என்பதை அறிந்தேன். புரபைலில் அவரின் போட்டோ பார்த்து அதிர்ந்தேன். இந்தப் போட்டோவில் இருந்ததும், புரபைல் போட்டோவும் வேறு. 

முற்றிலும் போகசாக தயாரிக்கப்பட்ட அட்ஜுடிகேசன் பத்திரம் அது. அதுமட்டுமல்ல இரண்டு பத்திரங்கள் ஆனவுடன், அந்த இடத்தில் வெளி நாட்டு நபரின் பெயரும், போலிப்பத்திரங்கள் செய்தவர்களின் பெயரும் கூட்டாக இருக்கின்றன. ஆன்லைனில் பார்க்கும் போது நம் பெயர் இருக்கிறது என்று நம்பிக் கொள்ள வேண்டியதுதான்.

சம்பவத்தை எழுதி விட்டேன். 

இந்தச் சொத்தினை வாங்க வேண்டாமென்று சொல்லி விட்டேன். ஏன் என்று கேட்டார் வாடிக்கையாளர் - மோசடிப்பத்திரங்கள் என்று மட்டும் சொல்லி விட்டேன். பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.

ஆகவே, வெளி நாடு வாழ் தமிழர்களே, உங்கள் சொத்துக்கள் மீது கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

* * *

உங்கள் மனதில் சஞ்சலமா? துன்பத்தில் இருக்கின்றீர்களா? எதைச் செய்தாலும் முடிவு தவறாகவே இருக்கிறதா? 

எனது வாழ்க்கையில் நான் பெற்ற துன்பங்கள் - அதில் நான் பெற்ற வெற்றிகள் பற்றிய அனுபங்களைச் சுவாரசியமாக எழுதி அமேசான் கிண்டிலிலும், டிஜிட்டல் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். உங்களுக்கு வழிகாட்டும் தோழனாக இருக்கும் என நம்பிக்கை உண்டு.

. டிஜிட்டல் புத்தகம் விலை ரூ.120/- விருப்பமுள்ளவர்கள் கீழே இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்து புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.



Wednesday, December 7, 2022

200 கோடி வரிபாக்கி - விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை இல்லை ஏன்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல என்பதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவும் ஆன புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஒருவரே சாட்சி. இதற்கு பத்திரிக்கைச் செய்திகளே சாட்சி.

அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் 2011ம் வருடத்திலிருந்து 2019ம் வருடம் வரை அவரின் வருமானத்தைக் கணக்கிட்டு வருமான வரித்துரை 206 கோடி ரூபாய் வரி விதித்தது. கவனிக்க 206 கோடி வரி என்றால் வருமானம் எவ்வளவு இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

03.12.2022ம் தேதியன்று தினத்தந்தியில் வெளியான செய்தியை அப்படியே தருகிறேன். படித்துப் பார்க்கவும்.

தொழிலதிபர் சேகர்ரெட்டி, குட்கா உற்பத்தியாளரிடம் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மறைத்துள்ளதாக வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளது. 

வங்கி கணக்குகள் முடக்கம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையின்படி, 2011-12-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் அவரது வருமானத்தை நிர்ணயம் செய்து, அவருக்கு ரூ.206.42 கோடி வருமான வரி விதிக்கப்பட்டது.

இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தாததால், அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கிற்கு வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனு தாக்கல் செய்தது. 

அந்த மனுவில் கூறப்பட்டுள்ள கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- குவாரி வருமானம் மறைப்பு விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. 

அவருடைய குவாரியில் 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.66 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 945 செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த குவாரியில் இருந்து வருமானமாக ரூ.122 கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 41 கிடைத்துள்ளது. இந்த விவரங்களை விஜயபாஸ்கர் மறைத்துள்ளார். 

இதுதவிர சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள எஸ்.ஆர்.எஸ்., மைனிங் நிறுவனத்திடமிருந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ரூ.85 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 765 பெற்றுள்ளார். 

குட்கா பணம் இதே காலகட்டத்தில் பான் மசாலா குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் பெற்றுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான வாடகை கட்டணமாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தை விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார். 

அதேபோல ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்ட தொகை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, விஜயபாஸ்கரின் ஆதரவாளரான நயினார் முகமது என்பவரது வீட்டில் ரூ.2 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையுடன் சேர்த்து விஜயபாஸ்கரிடம் ரூ.15 கோடியே 46 லட்சத்து 8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. 

ரூ.339 கோடி விஜயபாஸ்கரின் சென்னை மற்றும் புதுக்கோட்டை வீடுகளில் இருந்து ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் அவருக்கு கிடைத்த வருமானம் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த வரவு-செலவு இனங்கள் மூலமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 339 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. 

இதன்காரணமாக அவர் செலுத்த வேண்டிய வருமான வரி ரூ.206.42 கோடி வரிபாக்கிக்காகவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினத்தந்தி

இணைப்பு:

சரி, குட்காவில் ஊழல், குவாரியில் ஊழல், ஓட்டுக்கு லஞ்சப் பணம் என பல்வேறு குற்றங்களைச் செய்த விஜயபாஸ்கரை கைதாவது செய்திருக்கிறார்களா? 

அவர் இன்றும் எம்.எல்.ஏ. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் விஜயபாஸ்கரின் காலடியில் கிடக்கிறது. விசாரணை அமைப்புகளும், காவல்துறையும், சி.பி.ஐயும் விஜயபாஸ்கரிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றன. இந்திய நீதித்துறையோ வாய்மூடி மவுனமாய் இருக்கிறது.

விஜயபாஸ்கர் இந்தியாவின் முன்மாதிரி அரசியல்வாதியாகத் திகழ்கிறார் என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

இணையத்தில் இருந்து எப்போதேனும் நீக்கி விட முடியும் என்பதால் ஸ்கீரீன் ஷாட் இத்துடன்.