குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label உணவுகள். Show all posts
Showing posts with label உணவுகள். Show all posts

Friday, August 6, 2021

ரெண்டு இட்லி

மனிதனின் முதல் உணவு தாய்ப்பால். அதன் காரணமாகத்தான் தாயின் மீதான அன்பு பிள்ளைகளுக்கு அதிகம். இறுதிவரை தாயை நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

உணவு உணர்வுகளோடு ஒன்றியவை.  மனிதன் உணவால் உருவானவன். உணவின் தன்மைக்கு ஏற்ப அவனின் வாழ்க்கை இருக்கும். நலமோ, நோயோ எல்லாவற்றுக்கும் காரணம் உணவு.

திருக்குறள் ஒன்று

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளி முதலா எண்ணிய மூன்று

அதிக உணவும், குறைவான உணவும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றில் பாதிப்பினை உண்டாக்கி நோயாக மாறி விடும் என்கிறார் திருவள்ளுவர்.

உணவின்றி இவ்வுலகில் எவ்வுயிரும் இல்லை. ஆனால் மனிதனின் தற்போதைய நிலையோ பரிதாபம். என்றைக்கு உணவுப் பொருள் வணிகத்துறைக்குள் உட்புகுந்ததோ அன்றிலிருந்து நாம் எதைச் சாப்பிட வேண்டுமென்பதை செய்தி மீடியாக்களும், சினிமா டிவி பிரபலங்கள் என்றுச் சொல்லக்கூடிய ஃபிராடுகளும் முடிவு செய்கிறார்கள்.

சினிமாக்காரன் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை. நம் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி, நம்மை அவனின் பணத்தாசைக்குப் பலியாக்கி விடுகின்றான்கள். 

வெளி நாட்டு சொகுசுக்காருக்கு வரி விலக்குக் கேட்ட ஒரு குள்ள நரி ஹீரோ, கூல்டிரிங்க்ஸ் குடிக்கச் சொன்னான். பின்னர் அவனே கூல் டிரிங்க்ஸ் கம்பெனிக்கு எதிராய் படமும் நடித்தான். படம் கோடிக்கணக்கில் பிசினஸ் ஆச்சு. கோடி ரூபாய்க்கு கார் வாங்கி குஷியாய்ச் செல்கிறான். கூல்டிரிங்க்ஸ் குடித்தவர்களோ உடலைக் கெடுத்துக் கொண்டார்கள்.

ஸ்டைல் என்ற பெயரில் பெரிய புற்று நோய்க் கூட்டத்தையே உண்டாக்கினான் ஒரு கிழட்டு நரி ஹீரோ. வயதானாலும் மகள் வயதே கொண்ட சின்னஞ்சிறுப் பெண்களுடன் ஹீரோ வேஷம் கட்டுவான். அப்பெண்களின் காலை விரித்து காட்டுவான். 

இவனையெல்லாம் தலைவன் என்று அழைக்கும் முட்டாள் பயல்கள் கூட்டம் உண்டு. அதைப் படம் பிடித்துப் போட்டுக் காட்டும் மீடியா விபச்சாரக் கூட்டமும் ஒன்று இங்கே, நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றுச் சொல்லித் திரிகிறது. நாங்களெல்லாம் யோக்கியன்கள் என்று தர்மம் பேசுவான்கள். கேட்பதற்குக் கேணப்பயல்கள் இங்கு அனேகம் என்கிற போது வாயிலேயே வடையும் சுட்டு, ஊட்டியும் விடுகிறான்கள். ஒருத்தன் இன்னும் வாயில் வடைச் சுட்டுக் கொண்டே இருக்கிறான் இங்கே.

சோப்பிலிருந்து, உண்ணும் உணவிலிருந்து, பாத்ரூம் ஆசிட் வரையிலும் சினிமாக்காரன்கள் கூவிக் கூவி டிவியில் விற்றுக் கொண்டிருக்கின்றான்கள். நாமும் அவன்கள் சொல்வதைக் கேட்டு நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

உணவு உண்பதைக் கூட சினிமாக்காரன் சொல்லித்தான் கேட்கும் அவல நிலையில் மனிதனின் ஆறாம் அறிவு உயர்ந்துள்ளது. நாகரீகமாம்.

* * *

 


இனி இட்லிக்கு வந்து விடுவோம்.

திருப்பூரின் மிகப் பெரிய நிறுவன இயக்குனரின் சகோதரர். வால்மார்ட்டின் பிசினஸ் பார்ட்னர். உலகெல்லாம் சுற்றிய பிசினஸ்மேன். உலகிற்கே அச்சுறுத்தலாய் (பீகாஸஸ் உளவு சாப்ட்வேரைச் சொன்னேன்) இருக்கும் இஸ்ரேல் ஜூயிகளுடன் பிசினஸ் செய்கிறவர். அரசியலில் செல்வாக்கு மிக்கவர். எனது இனிய நண்பர்.

என் வீட்டுக்கு வரும் போது பசி நேரமானால் இருவரும் சாப்பிடுவதுண்டு. ஒரு நாள் டிபன் சாப்பிடும் போது இரண்டு இட்லி போதுமென்றார். வற்புறுத்தினாலும் கேட்கவில்லை, வேண்டாமென்று மறுத்து விட்டார்.

* * *

ஒரு கதை சொல்லப் போகின்றேன்.

அந்த அம்மாவுக்கு ஆறு குழந்தைகள். கணவர் குமாஸ்தா. குறைவான வருமானம். சொந்த வீடு. 

வீட்டின் பின்னால் முருங்கை மரம், வாழை மரங்கள், கீரைகள், தக்காளிச் செடிகள், காய்கறிச் செடிகள் வளர்ப்பார். ஒவ்வொரு நாளும் தோட்டத்தில் கிடைக்கும் பொருளை வைத்து குழம்பு அத்துடன் ரசமும். 

முருங்கைக் கீரை, பூ, காய் சீசனுக்கு ஏற்றவாறு கிடைப்பவைகள் தான் குழம்பாகவோ, கூட்டாகவோ, பொறியலாகவோ செய்வார். கடைப் பக்கம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.

வாழை மரத்தில் கிடைக்கும் அத்தனையும் உணவாக சமைத்து விடுவார். 

அந்த வீட்டில் என்றைக்கும் ரசம் இருந்து கொண்டே இருக்கும். அத்துடன் மோரும் கூட.

ரசம் எப்போதுமே குறையாது. ரசம் குறையக் குறைய சுடு நீர் மற்றும் உப்புச் சேர்த்து விட்டால் மீண்டும் ரசம்.

மோர் சாட்டின் துணி போல அவ்வளவு வெண்மை. உணவில் தூய்மை. அம்மாவின் கைங்கரியத்தில். உபயம் தண்ணீர். கொசுறாக தோட்டத்தில் இருக்கும் கருவேப்பிலை, கொத்தமல்லி தாளிப்பு.

ஆறு குழந்தைகளுக்கு மூன்று நேரம் உணவு. பிற ஐந்து குழந்தைகளின் கனவைச் சிதைத்து முதல் குழந்தையின் கல்விப் படிப்புச் செலவு என கட்டுக் கோப்பாக  தன் குடும்பத்தை நடத்தினார் அந்த அம்மா.

முதல் பையனும் பெரியவனாகி படித்து வேலை கிடைத்து திருமணமும் ஆனது. கணக்குப் போடத் தெரிந்த அண்ணன், இதுகளுக்குச் சம்பாதித்துப் போட்டால் நடுத்தெருவென, வட்டிக் கணக்குப் பார்க்க தெரியாத அம்மாவுடன் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டு, தனிக்குடித்தனம் சென்றான்.

திடீரென அந்த அம்மாவுக்கு நோய் வந்து விட்டது. வைத்தியம் பார்த்தனர். கடைசிப் பையன் சிறு குழந்தை. அம்மாவின் அரவணைப்பும் அன்பும் கிடைக்கவில்லை. 

முதல் பண வசதி படைத்த அண்ணன் வீட்டுக்குச் சென்றான். அண்ணன் வீட்டின் சமையலறையின் அருகில் பத்து பேர் அமரும் உணவு மேஜை. 

காலையில் எட்டு மணிக்கு அண்ணன் அலுவலகம் செல்வார். இவனுக்கோ அரசுப் பள்ளிக்கூடம்.

இருவரும் சாப்பிட உட்காருவார்கள்.

கடைசித் தம்பி தட்டில் இரண்டு இட்லி மட்டுமே. அதை அண்ணனும் பார்த்துக் கொண்டுதான் சாப்பிடுவார். அவரின் வாய் உணவுக்கு மட்டுமே திறக்கும்.

எப்போதும் தோசையானாலும் இரண்டு. சப்பாத்தி என்றாலும் இரண்டு மட்டுமே.

அண்ணி தன் கடைசிக் கொழுந்தனிடம் எப்போதும் சொல்வது ”இது போதும்”

* * *

பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அவரின் அண்ணாவோ கொரானா காலத்தில் செத்துப்  போனார். சுடுகாட்டுக்கு  செல்ல பத்து பேர் கூட இல்லை. கொரானா கட்டுப்பாடு. விதி.

”அண்ணி படுக்கையில் கிடக்கிறார். எழுந்து நடக்க கூட முடியவில்லை. பாவமாக இருக்கிறது” என்றார் நண்பர்.

”பரிதாபப்படுகின்றீர்கள் நீங்கள், தர்மமும் அறமும் மிச்சம் மீதி வைக்காமல் திருப்பிக் கொடுக்கும் இயல்பு கொண்டவை” என்றேன் அவரிடம்.

 * * *

நேற்று ஹோட்டலில் காலை உணவுக்காக பேரரிடம் “இரண்டு இட்லி” என்றேன்.

”போதுமா சார்” என்றான்.

நண்பரின் முகம் தெரியா அண்ணி நினைவிலாடினார்.

* * *

Wednesday, October 1, 2014

பாலைக் கொதிக்க வைப்பதில்லை

திருவள்ளுவர் மருந்து என்ற தலைப்பில் உணவு பற்றி பத்து குறள்களை அருளியிருக்கிறார். அதிலொன்று,

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் (945)

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவை அளவோடு உண்டு வந்தால் உயிருக்கு துன்பமில்லை என்பது தான் மேலே கண்ட குறளின் அர்த்தம்.

நாமெல்லாம் முன்னோர்கள் சொல் கேளா நவீன கால மாந்தர்கள் அல்லவா? தந்தையுடன் அமர்ந்து மது அருந்தச் சொல்லிக் கொடுத்த மாபெரும் கலைஞர்கள் இருக்கும் மாநிலமல்லவா நமது மாநிலம். இப்பேர்பட்ட பெரும் மகான்களுக்கு அரசு கலைமாமணி விருதுகளைக் கொடுத்து கவுரவிக்கின்றது. இதைக் காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதற்கில்லை. இது அரசியல் சார்ந்தது. அது கிடக்கட்டும் சாக்கடை.

தமிழக மாந்தர்களின் தற்போதைய நிலை சர்க்கரை வியாதி. 40 வயதுக்குள்ளேயே சர்க்கரை வியாதி. மூட்டை மூட்டையாக மாத்திரைகளை வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள். 

வயிறு பாவம், உள்ளே வருவதை எல்லாம் அரைத்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறது. மனிதன் சாகிற வரை வயிறு செய்யும் செயல் பற்றி ஒரு துளியாவது எவராவது நினைத்துப் பார்க்கின்றார்களா? 

நிச்சயம் இல்லை. அதைத்தான் நாக்கும், மூக்கும் தடுத்து விடுகிறதே. ஆசையை அறு என்று இதற்குத்தான் சொன்னார்கள் போலும்.

விடிந்தவுடன் டீக்கடை, சூடாக பஜ்ஜி, வடை, போண்டா. காலையிலேயே வயிற்றை அடித்துத் துவைத்து பிழிய வைத்து விடுகின்றார்கள். பெரும்பாலான டீக்கடைகளில் பால் பாக்கெட்டுகளை பால் கொதித்துக் கொண்டிருக்கும் தட்டின் மீது வைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல கொதிக்கும் பால் பாத்திரத்தில், பால் குறைந்தவுடன் மற்றொரு பால் பாக்கெட்டை பிய்த்து ஊற்றி விடுகின்றார்கள். அந்தப் பால் கொதிப்பதைப் பற்றி டீ மாஸ்டர் (இவருக்கெல்லாம் மாஸ்டர் என்று எவர் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை) கவலைப்படுவதும் இல்லை. கொதிக்காத பாலில் உடலைக்கெடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம்.

ஆவின் பாலில் கலப்படம் செய்தவரைக் கைது செய்து விட்டார்கள். கலப்பட பாலைக் குடித்தவர்களைப் பற்றி எவரும் பேசுவதும் இல்லை. இந்த உணவுக் கலப்படக்காரர்களுக்கு “ஒரு நாள் முழுவதும் சித்ரவதை செய்து மரண தண்டனை” விதிக்க வேண்டும். எத்தனை பேரின் உடலைச் சித்ரவதைச் செய்கின்றார்கள் இவர்கள் என்று நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

கொதிக்காத பாலும், ஊறு விளைவிக்கும் பஜ்ஜியும் அவசியம் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



Tuesday, December 3, 2013

டெங்கு ஜாக்கிரதை

தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் டெங்கு வந்த போது உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஏன் அவ்வாறு ஏற்பட்டன என்றால், இக்காய்ச்சல் வந்தால் என்ன செய்யும் என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் தீவிரதாக்குதல் உடலை நிலைகுலைய வைத்து விடும். அபாயகட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலாமல் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.இதன் காரணமாய்த்தான் ஆரம்பத்தில் டெங்குவின் பாதிப்பை சரிசெய்ய முடியவில்லை. இப்போது அதற்கு மாத்திரைகள் வந்து விட்டன.

டெங்கு காய்ச்சல் வந்தால் கடுமையான தலைவலி, முதுகு தண்டில் வலி உண்டாகும். அதன் பிறகு காய்ச்சல் நிற்கும். இரண்டு நாள் கழித்து மீண்டும் வரும். அதற்குள் உடலுக்குள் டெங்கு நோய்கிருமிகள் ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்ஸ்ஸைக் குறைத்து அழித்து விடும். இந்த பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்புக்குள் பாயும் ரத்தமானது உடலுறுப்புகளுக்குள் கசிய ஆரம்பித்து விடும். உடலுக்குள் பாயும் குருதியானது கசியாமல் இருக்க இந்த பிளேட்லெட்ஸ் தான் காரணம். சாதாரணமாக ஒரு மனிதருக்கு இந்த பிளேட்லெட்ஸ் 1,50,000 முதல் 4,00,000 வரை இருக்கும். டெங்கு 5000க்குக் கொண்டு போய் முடித்து விடும். பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்பின் மிக மென்மையான பாகமான குடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும். அது ஏற்பட்டால் கொஞ்சம் பிரச்சினை தான். நன்றாகச் சாப்பிட்டு வந்தாலே உடம்புக்குள் பிளேட்லெட்ஸ் உருவாகி நார்மலுக்கு வந்து விடும். அத்துடன் தேவையான மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்து விட்டால் உடனடி குருதி சோதனை முக்கியம். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் குருதி சோதனை முக்கியம். பின்னர் தான் அது டெங்குவா இல்லை சாதாரண காய்ச்சலா என்று கண்டுபிடிக்க முடியும். சில மருத்துவர்கள் பார்த்தவுடனே தங்களின் அனுபவ அறிவால் இது என்ன காய்ச்சல் என்று கண்டுகொள்வார்கள். ஆனால் சிலரால் முடியாது. அனுபவ அறிவில்லாத காரணத்தால் பேரிழப்பு ஏற்படலாம் ஜாக்கிரதை.

டெங்கு வந்தால் பயப்பட தேவையே இல்லை. நேரா நேரத்துக்கு நல்ல சாப்பாடு. இள நீர், மாதுளை, பழங்கள், ஆண்டிபயாடிக் போன்றவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டால் போதும். KMCH, கொங்கு நாடு - கோவை மருத்துவமனைகளில் குறைந்தது நான்கு நாட்கள் ட்ரீட்மெண்ட் தங்கியிருத்தல் அவசியம்.

கார்காலத்தில் மேகங்களுடன் நோய்க்கிருமிகளும் சேர்ந்து வருகின்றன. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள். அசைவத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள். முட்டை கூட வேண்டாம். தினமும் நன்கு குளியுங்கள். சுகாதாரமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். இரண்டு தக்காளி பழத்தைப் போட்டு ரசம் வைத்து, ஒரு கீரை பொறியல், கொஞ்சம் சாதம் சாப்பிட்டாலே இந்த மழைக்காலத்தைக் கழித்து விடலாம். முடிந்த வரை சூடாகச் சாப்பிட்டு பழகுங்கள். சாலையோரக் கடைகளின் உணவுகள் பற்றி முழு விழிப்புணர்ச்சி தேவை. டீக்கடைகளில் பலகாரங்களுடன் நோய்க்கிருமிகளும் வருகின்றனவாம். பெரிய பெரிய ஹோட்டல்களின் உணவுகளின் ‘அபின்’ கலந்து விடுகின்றார்களாம். ஆகவே நம் ஆரோக்கியம் நம் கையில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Wednesday, August 22, 2012

ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார்


குரு வாழ்க !
குருவே துணை!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பன ந்தானா? பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? - வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றாம் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலோ - நித்தம் விதிதொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம் - மகாகவி பாரதி

சித்தன் பாரதியின் பாடல்கள் புரியாத ஒன்றையும் புரிய வைத்திடும் செதுக்கல்கள். எதுவும் உண்மையில்லை, எல்லாமே சொற்பனம் என்கிறார். இப்பாடலை மூன்று நான்கு முறை தொடர்ந்து படியுங்கள். பாரதி ஒரு சித்தன் என்று உணர்வீர்கள்.

பெருவெடிப்பில் நிகழ்த்தப்பட்ட அற்புதத்தின் பேராற்றல் துண்டு துண்டாய் சிதறிய போது, ’எப்போதான் விடியுமோ, என்றைக்குத்தான் வருவானோ’வால் மனித வாழ்க்கைத் துவங்கிய அன்று முதல் இன்று வரை விரிவடைந்து கொண்டே செல்லும் வெடிப்பின் துகள்கள் ஒன்று சேரும் நாளுக்கு அடுத்து சிவத்தலம் தெரியும். வெடித்தவை பேராற்றல் ஈர்ப்பினால் மீண்டும் ஒன்று சேரும், பின்பு வெடிக்கும். 

மனித குல நன்மைக்கு,அண்டக்கல்லைத் தாண்டிச் சென்று திரும்பி வந்த மூவர் மட்டுமே இன்றைக்கும் மனித குலத்தின் அடையாள விருட்சமாய் திகழ்ந்து நிற்க, மனித கூட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது அந்த எல்லையின் எல்லைக்குள் தஞ்சமடைய.

பேராற்றலும், பெருமையும் உடைய நாட்டின் மகாராஜா அவர். அவரின் கொடையின் கீழ் சுகம், துக்கம், இன்பம், துன்பம் என்பனவற்றின் ஆட்சியின் கீழ் மனித குலம் வாழ்ந்து வந்தது. இந்த மகாராஜாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அழகின் தத்துவமாய், அறிவின் சிகரமாய் திகழ்ந்த அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஒரு விபரம் கிடைத்தது.

21ம் வயதில் இக்குழந்தை சன்னியாசம் போய் விடும். ஆசையாய் பெற்ற மகவு இப்படிப்போக எந்த தகப்பனுக்குத்தான் மனது வரும். வேறொருவரிடம் கேட்டபோது அரண்மனைக்குள் வைத்தே வளர்த்து வாருங்கள், அந்த வயது வரும் வரைக்குள் என்று பாசிட்டிவ் அப்ரோச் கான்செப்ட் கிடைத்தது மன்னருக்கு. அதன் படி வாழ்க்கையின் அத்தனை சுகமும் அந்தக் குழந்தைக்கு அரண்மனைக்குள்ளே கிடைக்க ஆரம்பித்தன.

21 அகவையில் வீட்டின் வாயிலுக்கு வந்த மகாராஜாவின் மகன் கண்களில் பட்டது ஒரு சவ ஊர்வலம். ஒரு சவ ஊர்வலம் மன்னாதி மன்னனின் தவப்புதல்வனை சன்னியாசம் கொள்ள வைத்தது. (ஏன்?) எல்லாவற்றையும் உதறிவிட்டு கிளம்பினார். அவர் புத்தர். எத்தனை எத்தனையோ புத்திசாலிகள், முனிவர்கள், அறிவாளிகள், உறவினர்கள் எல்லோரும் அவரை திரும்ப அழைக்கச் சென்றனர். சென்ற எவரும் வீடு திரும்பவில்லை. ஏன் ? மூவரில் சிவத்தலம் சென்று திரும்பிய சித்தார்த்தனின் அருட்வளைவில் சிக்கினர். ஆசையை துற என்றார் சித்தார்த்தன்.

மூவரில் ஒருவர் சித்தார்த்தன். மற்ற இருவர் யார்? 

ஓம் என்ற வார்த்தைக்குள் அகரம், உகரம், மகரம் மூன்றும் மறைந்து கிடக்க “ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார் ”.

குருவின் ஆசீர்வாதப்படி -

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


Monday, July 23, 2012

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும்?

கோவையின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றின் முதலாளி எனது நண்பர். எப்போதாவது அவரைச் சந்திக்கும் நேரத்தில் சுவாரசியமான பல விஷயங்களைச் சொல்வார்.

கோவையில் சனி அல்லது ஞாயிறுகளில் ஹோட்டல்களில் காசு வாங்கிப் போடவும், பில் போடவும் நேரமிருக்காது என்றார். பெரும்பாலான குடும்பங்கள் ஞாயிறுகளில் ஹோட்டல்களில் தான் சாப்பிடுகின்றன என்றார். மூலைக்கு மூலை ஹோட்டல்களாகவே இருப்பதன் மர்மம் எனக்கு அப்போதுதான் பிடிபட்டது.

கோவையின் திருச்சி ரோட்டில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் கேண்டீனில் ஒரு நாள் சாப்பிடுவோர் எண்ணிக்கை 7000 என்று எழுதி இருந்தது. சுமாராக 10,000 பேருக்கும் மேல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கேண்டீனுக்கு எதிரே இருக்கும் மருந்துக் கடையில் பில் போடுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் நிற்க வேண்டும். எந்த மருத்துவரிடமும் டோக்கன் இல்லாமல் செல்ல முடியாது. ஹோட்டல்களில் கூட்டம் கூடக் கூட மருத்துவர்களுக்கு வருமானம் கொட்டிக் கொண்டிருக்கும்.

பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் இல்லாமல் குழந்தைகள் வளர்வது எதிர்கால சமூகத்திற்கு மிகப் பெரும் தீங்கினைத் தரப் போகின்றது. நேற்றைய தினத்தந்தியில் “உஷாரையா உஷாரு” பத்தியில் பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண் மாணவிகள் சிலர் வகுப்பறையில் தண்ணீருடன் வோட்கா கலந்து குடித்திருக்கின்றார்கள் என்றும், வீட்டில் அப்பா தன் நண்பர்களோடு மது அருந்துவதையும், அவ்வப்போது அம்மாவும் மது அருந்துவதையும் பார்த்துப் பார்த்து, அந்த மாணவிகள் மதுவிற்கு அடிமையாக மாறி குடித்து வந்திருக்கின்றார்கள் என்று எழுதி இருக்கிறது.

சென்னையில் இருந்து போனில் அழைத்த பதிவர் ஒருவர், பெண்கள் அழகாய், மினுமினுக்க, தக்காளியாய் பளபளக்க வொயின் குடிக்கின்றார்கள் என்றுச் சொல்லி விட்டு, முடிவாய் இப்போதைக்கெல்லாம் திருமணம் செய்து கொள்வதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது என்றார்.

குறவைமீனும், சின்னஞ்சிறிய கெழுத்தி மீனையும் வைத்து, மாங்காய் போட்டு, அம்மியில் அரைத்த மிளகாயுடன், புளிப்பும் சேர எனது அம்மா வைத்த மீன் குழம்பின் சுவையை இதுகாறும் வேறு எந்த ஹோட்டல்களிலும் நான் சாப்பிட்டதே இல்லை. அம்மாவின் அன்போடு தயார் செய்யப்பட்ட உணவின் சுவையை எந்த ஒரு ஹோட்டலும் எப்போதும் தந்து விட முடியாது. 

பசும்பால் தயிரைக் கடைந்து கொண்டிருக்கும் போது பொங்கி வரும் வெண்ணெய் திரளை வழித்து எடுத்து நடு நாக்கில் வைத்து விடும் அம்மாக்கள் அந்தக் கால அம்மாக்கள் எல்லாம் நினைவுகளோடு நினைவுகளாய் பதிந்து  போய் கிடக்கின்றார்கள். இன்றைய அம்மாக்கள் டிவி பெட்டியில் சமையல் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு “டோர் டெலிவரி” ஹோட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காலங்களுக்கு ஏற்ற உணவு எது, காலையில் என்ன உணவு சிறந்தது, மாலையில் என்ன உணவு நல்லது, எந்தெந்தப் பொருளை எந்தெந்த உணவுடன் சேர்த்துச் சமைக்க வேண்டுமென்பதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவே முடியாது. காரணம் உடம்பின் மீதும், உணவின் மீது அக்கறை இன்றி கண்டதைத் தின்று விதி வந்த அன்றைக்குச் சாவோம் என்று பொறுப்பற்று வாழும் வாழ்க்கையை “ நாகரீகம்” என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாகரீகம் என்பதை உடையிலும், ஒப்புக்கும் பெறாத பாவணைகளிலும், உணவுகளிலும் இருக்கிறது என்று நம்புகிறார்கள் இன்றைய மாந்தர்கள்.

மெக்டொனால்டின் ஒரு வருட வருமானம் 23 பில்லியன் டாலர்கள். உலகிலேயே அதிக அளவு இறைச்சியை பதப்படுத்தி, பிராண்டட் பெயரில் விற்கும் இந்த உணவகத்தின் உணவுகள் எதுவும் உடலுக்கு நல்லதைச் செய்வதில்லை என்று பல இணையதளங்களில் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இன்றைக்கும் இந்த மெக்டொனால்டின் விற்பனை உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றதே ஒழிய குறையவில்லை.

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும் என்று இனி வரும் குழந்தைகளுக்குத் தெரியப்போவதில்லை. வளரும் சந்ததிகளுக்கு மெக்டொனால்ட், சரவணபவன்கள் தான் அம்மாக்களாகத் தெரியும். அன்பினைக் கூட நாகரீகத்தின் பெயரால் மாற்றமடைய வைத்த இன்றைய அம்மாக்களின் செயல் மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும்.

- கோவை எம் தங்கவேல்

Friday, May 25, 2012

ஹெல்த் ட்ரிங்க்ஸினால் கேன்சர் வரலாம்


உடம்பு முடியாமல் மருத்துவமனையில் இருப்போரைப் பார்க்க செல்வோர் ஒரு காலத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் இல்லாமல் செல்ல மாட்டார்கள். கண்ணாடி பாட்டிலில் தனக்கே உரித்தான நறுமணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் ஒவ்வொரு நோயாளிகளின் தலைப்பக்கமாய உட்கார்ந்திருக்கும். அந்த அளவுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் ஹார்லிக்ஸ் ஒரு காலத்தில் மக்களிடையே மிகப் பிரபலமாய் இருந்தது. 

என் மனைவியின் சிறு வயதில் தூக்கி வைத்துக் கொஞ்சிய பக்கத்து குழந்தை ஐந்தாவது வயதில் கேன்சரால் இறந்து போய் விட்டது. பால் குடி மறந்ததும் அக்குழந்தைக்கு காய்ச்சிய பசும்பாலில் பிரபலமான (ஹார்லிக்ஸ் அல்ல) ஹெல்த் ட்ரிங் ஒன்றினை கலந்து கொடுத்து வந்திருக்கின்றார்கள். குழந்தையும் நன்றாக கொழு கொழுவென வளர்ந்திருக்கிறது. எல்லோரும் குழந்தையைப் பாரு “சேட்டு வீட்டுக் குழந்தை போல” இருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். பெற்றோர்களுக்கு பெருமையாக இருந்தது.

சாப்பாடு கொஞ்சம், ஹெல்த் ட்ரிங் அதிகமாய் கொடுத்து வளர்க்கப்பட்ட அக்குழந்தை திடீரென தன் ஐந்தாவது வயதில் நோயில் விழுந்திருக்கிறது. டெஸ்ட் செய்து பார்த்த போது கேன்ஸர் பாதிப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எனது குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யும் ஒரு பெண் டாக்டரிடம் ”குழந்தை கள் ஒல்லியாகவே இருக்கின்றார்களே அவர்களுக்கு ஏதாவது ஹெல்த் ட்ரிங்க்ஸ் கொடுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எக்காலத்திலும் குழந்தைகளுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் நிச்சயம் வேண்டவே வேண்டாம், அதற்குப் பதிலாக முட்டை, பால், இறைச்சி, மீன், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுங்கள்” என்றுச் சொன்னார்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கான பதில் வேறு எங்கிருந்தோ கிடைத்தது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உணவின் மூலமாகவே கிடைக்க வேண்டும். ஆனால் அது ஹெல்த் ட்ரிங்ஸ் வழியாக கிடைக்கிறது என்றால் அதன் பின் விளைவுகள் இப்படித்தான் ஆகும்.

சவுத் அமெரிக்காவில் மக்களால் அருந்தப்பட்ட ஒரு ஹெல்த் ட்ரிங்கினால் கேன்ஸர் வந்திருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் மருத்துவ உலகை கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகள் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாய் இருப்பதால் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ன விதமான பின் விளைவுகளை உருவாக்கும் என்று கண்டு பிடிக்க முடியாது. அதைப் பற்றிய விழிப்புணர்ச்சி பலர் இறந்த பிறகுதான் உருவாகும். 

அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விளம்பர மோகத்தில் திளைப்பதால் வரக்கூடிய பின் விளைவுகளைக் கண்டு கொள்ளாமல் விளம்பரப் படுத்தப் படும் ஒவ்வொரு பொருளையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடம்பு நன்றாக இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். நம் தமிழ் கலாச்சாரத்தில் உடல் நோவுக்கு என்று ஏகப்பட்ட பின் விளைவுகள் அற்ற மருந்து உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை அறிந்து கொண்டு உடலைக் காத்து உள்ளத்தை பாதுகாத்து நலமுடன் வாழ்க.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, April 16, 2012

வெயிலில் நில்லுங்கள் வியாதியை துரத்துங்கள்



டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நண்பர்களுக்கு உடனடியாக தெரிவித்து விட வேண்டும் என்ற ஆவலில் இந்தப் பதிவு. 

விட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான ஒரு சத்து, இந்தச் சத்து கால்சியம் சம்பந்தமான பொருட்களை ஜீரணிக்கவும், அதை வெளியேற்றவும், எலும்புகளுக்கு உறுதியைத் தரவும் உதவுகின்றது. 60 பர்சண்டேஜிலிருந்து 90 பர்செண்டேஜ் இந்தியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் விட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விட்டமின் டியை பால் மற்றும் உணவு எண்ணெயில் சேர்த்தல் நலம் பயக்கும் என்பதாகும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

பால், எண்ணெய் பொருட்கள் மனிதனுக்கு கொழுப்பை உருவாக்கும் என்பதாலும், விட்டமின் டி மாத்திரைகள் அவ்வளவு நல்ல பலனை தராது என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விட்டமின் டியைப் பெறுவதே சாலச் சிறந்தது என்கிறார்கள்.

மனித உடலின் இருபது சதவீத பகுதியை வாரத்தில் இரண்டு முறை பதினைந்து நிமிடம் வெயிலில் காட்டினால் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைத்து விடும். சூரிய ஒளியில் நீச்சலடிப்பது, சூரிய ஒளியில் விளையாடுவது போன்றவையும் விட்டமின் டி உடலில் சேர உதவும். இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் " Cardio Vascular Disease, Rickets and Osteoporosis" நோய்கள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை என்கிற பதிவின் பின்னூட்டத்தில் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ சில விபரங்கள்.

பானி தண்ணீரில் புளிப்புச் சுவைக்காக சாட் மசாலாவுடன், மோனோ சோடியம் குளுடோ மேட் என்கிற கெமிக்கல்ஸ் சேர்த்து அதிகப் புளிப்புத் தன்மையை ஏற்றுகிறார்கள். அத்துடன் ரசாயனச் சாயங்களும் கலக்கப்படுகின்றனவாம். இந்தக் கலவையை இரண்டு நாட்களுக்கும் மேல் ஊற வைத்து, அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றார்கள். அதீத புளிப்புச் சுவை கொண்ட இந்த வகை பானி, அல்சரை உருவாக்கும். அல்சர் இருப்பவர்கள் தொடவே கூடாது. அதுமட்டுமல்ல இப்பானியைச் சாப்பிட்டால் உடனடி வயிற்று வலியுடன், நாள்பட பசியும் அறவே குறைந்து போய் விடும். சாலையோரங்களில் விற்கப்படும் இவ்வகை இன்ஸ்டண்ட் உணவு வகைகள் தயாரிப்பாளர்கள் சாப்பிடும் நபர்களின் ஆரோக்கியத்தை ஒரு கணம் கூட எண்ணிப் பார்ப்பதே இல்லை.

எனது ஆரம்ப காலங்களில் நான் பெரும்பாலும் சற்றே சுத்தமான இடங்களில் இருக்கும் சாலையோரக் கடைகளில் எப்போதாவது சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை மனைவி வெளியூர் சென்றிருந்த சமயம், குழந்தைகளுடன் எனக்கு நன்கு அறிமுகமான நண்பரொருவரின் சாலையோரக்கடையில் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வந்தோம். அதன் பலனாய் மூவருக்கும் வாய்ப்புண் உண்டாகி, தொண்டையில் அழற்சி ஏற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது.

விசாரித்துப் பார்த்தால் இட்லி மாவில் புளிப்புச் சுவைக்காக சோடியம் தண்ணீர் கலப்பதாக அறிந்தேன். ஒரு வாளியில் தண்ணீர் போன்ற ஒன்றினைக் கொண்டு வந்து அளவாக கலந்து இட்லி தோசை மாவுகள் விற்பனையாளர்கள் விற்கின்றார்கள்.அதுமட்டுமல்ல சில ஹோட்டல்களில் விற்கும் மீன் குழம்பில் இதே சோடியம் கலந்த தண்ணீர் கலக்கப்பட்டு வருகின்றனவாம்.

காசு போனாலும் பரவாயில்லை என்று உயர்தரமான ஹோட்டல்களில் தயிர்சாதம், கொஞ்சம் காய்கறிகள் சாப்பிடுவதே சாலச் சிறந்தது என்கிறார் எனது நண்பரொருவர். இன்னொரு நண்பரோ பேசாமல் பழக்கடையை நோக்கிச் சென்று விடலாம் என்றார். ஆனால் பழங்கள் உடலுக்கு நன்மையைத் தருகிறதா என்று கேட்டால் மருத்துவ நண்பரொருவர் சொன்ன சில விபரங்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருந்தன. அது என்ன? விரைவில்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, January 28, 2012

சரியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்

கல்கண்டில் வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரை உடல் நலத்திற்கு சில நல்ல கருத்துக்களை கொண்டிருப்பதால் அதை இங்கு அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். நன்றி : கல்கண்டு மற்றும் ஜே.டி.எஸ்

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

உடல் எடையைக் குறைக்க சரிவரச் சாப்பிடுங்கள்

உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் உங்கள் இடுப்பளவும் குறையும். நீங்கள் விரும்பியதை விட இரண்டு மடங்கு வேகத்தில் உடல் பருமன் குறையவும் வாய்ப்புள்ளது. மென்று சாப்பிடுவதால் பசி எடுப்பதும் குறைவதால் உடல் பருமன் குறைவதும் உறுதி.

உதாரணமாக உணவிற்குப் பிறகு காபி, தேநீர் அருந்தினால் இரும்புச் சத்து உடலில் சேராது என்பார்கள். ஆனால் உணவிற்குப் பிறகு அருந்தும் காபி அல்லது தேநீர் வளர்சிதை மாற்றத்தை 12% கூடுதலாகத் துரிதப்படுத்துவதால் சாப்பிட்ட உணவுகள், குறிப்பாக கொழுப்புகள் தங்காமல் எரிக்கப்பட்டு ஜீரணமாகி விடுகின்றன. சாப்பிட்ட உணவில் கண்டிப்பாக புளி, மிளகாய், ஏலக்காய், இஞ்சி என ஏதாவது ஒன்று இடம் பெற்றிருக்கும். இவற்றில் உள்ள வைட்டமின் சி, தேநீரில் உள்ள (காபியில் உள்ள) இரும்புச் சத்தை அழிக்காமல் ஜீரணிக்க வைத்து விடும்.

எனவே, மதியம் பிரியாணி, பரோட்டா என்று சாப்பிட்டால் ஒரு கப் தேநீர் அல்லது காபி அருந்துங்கள்.

பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், அசைவம் என எதைச் சாப்பிட்டாலும் அவை வேகமாக எரிய நன்கு மென்று சாப்பிட்டு ஒரு கோப்பை தேநீர் அருந்துங்கள். ஆப்பிள், திராட்சை போன்றவற்றை நன்கு மென்று சாப்பிடுங்கள்.

கலோரியை வேகமாக எரிப்பதுடன் குறைவாகச் சாப்பிட வைப்பது கைக்குத்தல் அரிசி, சம்பா ரவை, கேழ்வரகு, சோளம், பருப்புவகைகள். பருப்பு வகை 50% என்ற கணக்கில் சாப்பிட்டால் குறைவாகச் சாப்பிடுவோம். இவற்றில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பும் துத்தநாக உப்பு அதிகம் சாப்பிட்ட திருப்தியைத் தரும். இதனால் கு றைந்த அளவு உடலில் சேர்ந்த உணவும் உடலில் வேகமாக எரிக்கப்படும்.

மூன்றாவதாக சக்தி தரும் உணவுகளையும் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் சேர்க்காத கறுப்பு தேநீரிலும் காபியிலும் உள்ள காஃபைன், சாப்பிட்ட உணவுகளை வேகமாக எரிக்கிறது. பால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துங்கள். ஐஸ் கிரீம் சாப்பிடாமலும் பார்த்துக் கொள்ளவும். கிரீன் டீயும் பால் சேர்க்காமல் அருந்த வேண்டும்.


கிரீன் டீயில் காஃபைன் இல்லை. ஆனால், காட்சின்ஸ் என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. இது தினமும் 80 கலோரிகளை வளர்சிதை மாற்றமடைய விரைவுபடுத்தி எரித்துவிடுகிறது.

கறுப்பு நிற சாக்லெட்டுகளில் காஃபைன், காட்சின்ஸும் இருப்பதால் தினமும் 18 கிராம் அளவே சாப்பிட்டு வரவும். இவ்விரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் கலோரி வேகமாக எரிக்கப்படும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது சாக்லெட்டை சாப்பிடுவது நல்லது.

சாக்லெட்டில் கொழுப்பும் கலோரியும் அதிகம். எனவே 18 கிராமைத் தாண்டக்கூடாது.

நான்காவதாக, உடலுக்கு வெப்பம் தரும் உணவுகளைச் சேர்க்க வேண்டும். சமையலில் இஞ்சி, மிளகு, பூண்டு, கடுகு, கிராம்பு, ஏலக்காய் சேரவேண்டும். இவை கொழு ப்பையும் தீவிரமாக எரித்து விடும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் போல எனத் தினமும் சாப்பிட்டால் இவை வரமிளகாய் துவையல், கறிவேப்பிலைத் துவையல், மிளகு போன்றவை 100 கலோரியை தினந்தோறும் எரிக்கும்.

இத்துடன் கொழுப்பு நீக்கப்பட்ட, பால், தயிர், இரண்டு டம்ளர் சுடுநீர், மூன்று தக்காளி, அன்னாசிப்பழம், 100கிராம் திராட்சை போன்றவையும் உணவில் இடம் பெறுவது நல்லது.

சாதம் ஒரு கரண்டி அல்லது இரண்டு கரண்டி என்று குறைத்துக் கொண்டு மற்ற உணவுகளை சற்று தாராளமாக சேருங்கள். நன்கு மென்றும் சாப்பிடுவதே மிக முக்கியமானது. இதுவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.

- கே.டி.எஸ்.

Saturday, June 4, 2011

ஐடியில் பணிபுரிபவர்களுக்கு முக்கிய குறிப்பு

கம்ப்யூட்டரில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கும் உடல் சூடு அதிகமாகும். அச்சூடு அதிகரித்தால் உடலில் பலவித நோய்கள் உருவாக ஆரம்பிக்கும். உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் உடற் சூட்டைத் தணிக்க சில சிறிய வழிகளை தொடர்ந்தால் உடற்சூடு ஏற்படாது.

சாப்பாட்டில் தூள் உப்பின் உபயோகத்தை நிறுத்தி, கல் உப்பினைப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இரண்டாவதாக எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தி விட வேண்டும். மூன்றாவது பெப்சி, கோக், லெமன் என்று குளிர்பானங்களையும், பீட்சா, பர்கர் போன்ற சிற்றுண்டிகளைச் சாப்பிடுவதை முற்றிலுமாய் தவிர்த்து விடுங்கள். சர்க்கரை உபயோகப்படுத்துவதற்குப் பதிலாய் பனங்கற்கண்டு, பனைவெல்லம்(கெமிக்கல் சாராதது) பயன்படுத்துங்கள். பால், பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்து விடுங்கள்.

இனி உடற் சூட்டைத் தணிக்க என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்கிறேன். வாரம் இரண்டு முறை தலையிலிருந்து கால் வரை அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளித்தே ஆக வேண்டும். அப்படிக் குளிக்கவில்லை என்றால் உடற்சூடு குறையாமல் நோய்கள் வர ஆரம்பிக்கும். ஏசியில் அமர்ந்தால் சூடு குறைந்து விடும் என்று நினைக்காதீர்கள். அதில் அமர்ந்தால் உடற்சூடு அதிகரிக்கும். 

உடற்சூட்டைத் தணிக்க சீரக எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கவும். நல்லெண்ணெயை நன்கு காயவைத்து அதில் சீரகத்தை போட்டு பொறித்து வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெயை தேய்த்துக் குளிப்பதற்குப் பயன்படுத்தி வந்தால் உடற்சூடு குறைந்து உடல் காற்றுப் போல இருக்கும். 

அடிக்கடி பப்பாளி, கொய்யா, மாதுளை பழங்களைச் சாப்பிட்டு வரவும். வாரத்துக்கொருமுறை அவசியம் கொவ்வைக்காய் உணவில் சேர்க்கவும். அகத்திக்கீரை சிகரெட் பிடிப்பவர்கள் சேர்த்துக் கொள்ளவும். அகத்திக் கீரையில் நிகோடினைக் குறைக்கும் பொருள் இருக்கிறது.

Wednesday, March 9, 2011

கோவை சாந்தி கியர் கேண்டீன்

ஒண்டிப்புதூரில் இருக்கும் நண்பரைப் பார்க்கச் செல்லும் வழியில் சாந்தி கியர் கேண்டீன் என்ற போர்டைப் பார்த்ததும் காலையில் சாப்பிடாத காரணத்தால் ஒரு காஃபி குடித்து வரலாம் என்று உள்ளே சென்றேன். 

சென்ற பிறகுதான் தெரிந்தது அது கேண்டீன் இல்லை உயர்தரமான உணவகம் என்பதை. சுத்தமாய் பளிச்சிடும் டைல்ஸ் தரைகள். செல்ஃப் சர்வீஸ் பாணி பரிமாறுதல். சுத்தமாக துடைக்கப்படும் மேஜைகள். மெல்லிய சங்கீதம் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. சில்லிட்ட காற்று வீசுகிறது. சத்தமில்லாத சூழல். அமைதி தழுவும் சுற்றுப்புறங்கள். குழந்தைகள் கைகழுவ படிகள் என்று அசத்தினார்கள்.

உணவுகளின் விலையோ மிகக் மிகக் குறைவு. சாம்பார் வடையொன்றினை மனைவி வாங்கி வந்தார். விலை 10 ரூபாய் தான். இதே சாம்பார் வடை வேறு ஹோட்டல்களில் 23 ரூபாய் கொடுத்திருக்கிறோம். இட்லியோ ஆறு ரூபாய்(2) என்று எழுதி இருந்தது. மேலும் படிப்பதற்குள் அழித்து விட்டார் ஒரு அன்பர். கோதுமை தோசை சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

நண்பரிடம் விசாரித்தேன். கோவையில் பாதி பேர் சமைப்பதே இல்லை என்றும், சனி மற்றும் ஞாயிறுகளில் குடும்பத்தோடு சாந்தி கேண்டீனுக்கு வந்து விடுவதாகவும் சொன்னார். முழுச் சாப்பாட்டின் விலை ரூபாய் 25 என்றுச் சொன்னார். அசந்து விட்டேன்.

ஏதாவது அசந்தர்ப்பமாகத்தான் ஹோட்டல்களில் சாப்பிடுவதை வழக்கமாய் வைத்திருக்கிறேன். அதுவும் பழங்கள் கிடைக்காத போது, ஹோட்டல்களை நாடுவது வழக்கம். வீட்டுச் சமையல் போல சுத்தமான, சுகாதாரமான சமையல் எல்லாம் ஹோட்டல்களில் இன்றைய சூழலில் இருக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. எனது நண்பரின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு மாதம் வரை ஃப்ரீசரில் ஆட்டுக்கறியையும், கோழிக்கறியையும் வைத்திருப்பார்கள். அதற்கு தேவையான கிரேவியை ஒரு வாரம் வரை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் பார்த்த பிறகு ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுகளை உண்ணவும் ஆசை வருமா? இந்த நண்பருக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது. அவருக்கும் எனக்கும் வீட்டிலிருந்து தான் சாப்பாடு வரவழைப்பார். காரணத்தை பிறகுதான் புரிந்து கொண்டேன்.

சாந்தி கியர்ஸின் சோசியல் சர்வீஸ் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் பணியாற்றிய போது அங்கு வரும் அன்பர்களை சாமியார் முதலில் சாப்பிடச் சொல்லி விடுவார். அதன்பிறகு தான் வந்த காரணம் பற்றி பேசுவார். என்னையும் அப்படியே வாழும்படி சொல்வார். ஒருவனுக்கு எவ்வளவு காசினைக் கொடுத்தாலும் போதாது என்றுதான் சொல்லுவான். ஆனால் சாப்பாடு போட்டுப் பாருங்கள். ஒரு அளவுக்கு மேல் போதும் போதும் என்றுச் சொல்லி விடுவான். அவனுக்கு வயிறும் நிறைந்து விடும். மனதும் நிறைந்து விடும். இதைத்தான் தர்மத்திலேயே மிக உயர்ந்த தர்மம் “அன்னதானம்” என்றுச் சொல்வார்கள்.

அந்த அன்னதானத்தையும் மிகுந்த அர்தத்தோடு செய்யும் சாந்தி கியர்ஸின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.




Wednesday, March 2, 2011

உணவே விஷமான சம்பவம்

மிகச் சமீபத்தில் மனைவி சொந்த வேலையாக வெளியூர் சென்றிருந்தார். அன்றைய இரவு உணவுக்காக ஹோட்டல் செல்லும் வழியில், கேரளக்கார கடை ஒன்று கண்ணில் பட்டது. ஆப்பம், கொண்டக்கடலைக் குழம்பு என்று போர்டில் எழுதி இருந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கொச்சின் செல்லும் வழியில், பாலக்காட்டில் ஆப்பமும், கொண்டக்கடலைக் குழம்பும் சாப்பிட்டது நினைவுக்கு வர, உடனடியாக டூவீலரை நிறுத்தி உள்ளே சென்றேன்.

சூடாக இரண்டு ஆப்பமும், குழம்பும் பரிமாற சாப்பிட்டு முடித்து விட்டு வீடு வந்து விட்டேன். மறு நாள் காலையில் எச்சில் முழுங்க முடியவில்லை. தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டது போல இருந்தது. ஏதோ பிரச்சினை என்று மட்டும் தெரிந்தது. சரி மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். காரம், புளி சேர்க்காமல் சாப்பிட்டு வந்தேன். இரண்டு நாளாக தொண்டையில் கட்டிக் கொண்ட உணர்வு மட்டும் போகவே இல்லை. வேறு வழி இன்றி மருத்துவரிடம் சென்றேன். தொண்டையில் புண் என்று சொல்ல திக்கென்றாகி விட்டது.

இரு நூறு ரூபாய் செலவு, பதினைந்து நாட்கள் ஆயின தொண்டைப் புண் ஆறுவதற்கு.  முப்பது ரூபாய்க்கு ஆப்பம் சாப்பிட்ட கொடுமையால், உடம்பே ஏறுக்கு மாறாய் மாறி விட்டது. அதுமட்டுமா பதினைந்து நாட்கள் அவஸ்தை வேறு. இந்த ஹோட்டலின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இத்தனைக்கும் கோயமுத்தூர் ஹெல்த் டிபார்ட்மெண்டில் எனது நண்பர் வேலை செய்கிறார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடு, தூக்கி விடுகிறேன் என்கிறார். அதன்பின் வரும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் விட்டு விட்டேன்.

நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கதைகள் அனைத்தும் படு பயங்கரமாய் இருந்தன. மட்டன், சிக்கன் சாப்பிடாத காரணத்தால் மீன் உணவை மாதமொருமுறை பயன்படுத்தி வருகிறேன். அந்த மீனில் இருக்கும் படுபயங்கரம் என்ன தெரியுமா? மீன் பிடித்து கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகு தான் விற்பனைக்கே வரும் என்றும், அந்த மீனைச் சாப்பிடுவதால் ஏகப்பட்ட வியாதிகள் வரும் என்றும், பேசாமல் டேம் மீனுக்குச் சென்று விடுங்கள் என்றும் சொன்னார். டேம் மீன் மட்டும் சும்மாவா, மீனுக்கான உணவிற்காக குளத்தில் யூரியாவைக் கொட்டுகிறார்கள் என்றும் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் தெருக்களில் விற்பனைக்கு வரும் மீன்கள் பெரும்பாலும் கடைசித் தரமானது என்றும் சொன்னார். கேட்கவே படுபயங்கரமாய் இருந்தது. 

கடந்த வாரம் எனது நண்பரின் பண்ணை வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு முற்றிலுமாய் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்கிறார்கள். நல்ல இள நீர் ஒன்றினை அருந்தி விட்டு, வரும் வழியில் காலிஃபிளவர் தோட்டத்தைப் பார்த்தேன். அய்யோ என்று கதறலாம் போலிருந்தது. மருந்தால் பயிராகும் ஒரு  உணவுப் பொருள் என்றால் அது காலிஃபிளவர்தான். பேஸ்டு போல மருந்து ஒட்டி இருந்தது. காலிஃபிளவரில் இருக்கும் செலோனியம் புற்று நோய்க்கிருமிகள் வராமல் தடுக்கின்றன என்று படித்த ஞாபகம் வந்தது.

நவீனகாலம் உணவை விஷமாக்கியதை தவிர வேறொன்றும் செய்யவில்லை மனித குலத்திற்கு என்பது உண்மை.

Tuesday, May 4, 2010

நன்றி மறவாமை

கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில் பல பள்ளிகளும், இரண்டு பெண்கள் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறித் துறையின் மேற்பார்வையாளராகவும், ஆசிரியராகவும் நான்காண்டுகள் தொண்டு செய்து வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம்தானிது. மேற்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தாளாளராக இருந்தவர் திரு ஆத்மானந்தா அவர்கள். அறுபது வயது இளைஞர். என் வாழ் நாளில் இவரைப் போன்ற மன உறுதி கொண்டவரைக் கண்டதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புக் கொண்ட நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

மாதந்தோறும் இரண்டு தடவையாவது சாமியுடன் காண்டசாவில் சென்னை சென்று வருவேன். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்யூட்டர் நிறுவனத்தில் தான் மொத்தமாக உதிரி பாகங்களை வாங்கி வந்து அசெம்பிள் செய்து கல்லூரியில் கணிணி நெட்வொர்க்கில் இணைப்பேன். அசெம்பிள் என்ற உடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் இந்த சம்பவம்.

ஒரு தடவை ஹிந்து முன்னனி தலைவர் திரு ராமகோபாலன் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கொடுத்திருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பிறகு தான் அவரைச் சந்திக்க முடியும். அவர் தங்கி இருந்த ஹெஸ்ட் ஹவுஸ்ஸின் இடது பக்கத்திலிருக்கும் அறையில் தான் அடியேனின் வாசம். அறை முழுதும் கணிணி பாகங்களாக இறைந்து கிடக்கும். புதிய ஆள் எவராவது பார்த்தால் தீவிரவாதி வெடிகுண்டு தயாரிக்கிறான் என்றே நினைத்து விடுவார்கள். எஸெம்பிஎஸ் மற்றும் பாக்ஸ்களும், மானிட்டர்களுமாய் அறை நிரம்பிக் கிடக்கும். அதனூடே தான் படிப்பது, தூங்குவது எல்லாம்.

திரு ராமகோபாலனுக்கு காவலுக்கு வந்த காவல்துறை அதிகாரி அறையை நோட்டம் விட்டு படக்கென்று கதவைத் திறந்து துப்பாக்கியை நெஞ்சை நோக்கி நீட்டினார் பாருங்கள். அரண்டு விட்டேன். அதன் பிறகு விபரம் சொல்லி ஒரு வழியாக தப்பித்தேன். அன்றிலிருந்து அந்த காவல்துறை அதிகாரிக்கு என்மேல் கொள்ளை அன்பு. சாப்பிட்டீர்களா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதே போல நடு இரவில் ஒரு நாள் நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமம் இட்ட ஒருவரும் அவருடன் மற்றொருவரும் வந்திருந்தனர். வேறு அறைகளில் தங்குவதற்கு இடமில்லாத காரணத்தால் என் அறையில் தங்கியிருக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். இந்து முன்னணியின் ஏதோ ஒரு மாவட்ட தலைவராம் அவர். கூட வந்திருந்தவர் அவருக்கு துணையாக வந்திருப்பார் போல எண்ணிக் கொண்டிருந்த போது இடுப்பிலிருந்து கருப்புக் கலரில் துப்பாக்கியை எடுத்தார் பாருங்கள். நடு நடுங்கிப் போய் விட்டேன். என்னடா இது வம்பு என்று பயந்து கொண்டே அவரைப் பற்றி விசாரித்தேன். போலீஸ் என்று சொன்னார்.

இது போல எண்ணற்ற சம்பவங்கள் ஆஸிரம வாழ்க்கையில் நடந்தது. அதையெல்லாம் தனியாக நாவலாக எழுதலாமென்று இருக்கிறேன். மேலும் சாரு நிவேதிதாவுடன் மூன்று வருடங்களாக தொடரும் நட்பும் மிகப் பெரிய நாவலுக்கான விதையை ஊன்றி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பகவான் ராமகிருஷ்ணரை தரிசித்து விட்டு காரில் அமர்வோம். அதற்கு முன்பே சமையல்காரர் எழுந்து எனக்கும், சாமிக்கும், டிரைவருக்கும் தேவையான காலை உணவைத் தயார் செய்து காரின் பின்னால் வைத்து விடுவார். முதல் நாள் இரவே சென்னையிலிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின்(பிராஞ்ச்) நிர்வாகியிடம் போனில் நானும் சாமியும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விடுவேன். எனக்குப் பிடித்த காலிபிளவர் சாம்பாரும், ரசம்(SUPER TASTY) மற்றும் பிற உணவுப் பொருட்களை திரு நாராயணனந்தா அவர்கள் தன் கைப்படவே சமைத்து வைத்திருப்பார். உணவின் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

சரியாக ஏழு மணிக்கு கார் திருச்சி டூ சென்னை சாலையிலிருக்கும் ஒரு பத்ரகாளி அம்மன் கோவிலின் முன்னால் நிறுத்தப்படும். அங்குதான் எனக்கும், ஆத்மானந்தாவிற்கும் காலை உணவைப் பரிமாறுவார் டிரைவர். சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் உலாவுவார் ஆத்மானந்தா சாமி. நான் காரில் அமர்ந்திருப்பேன். கிளம்பும் தருவாயில் கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு உண்டியல் போட்டு விட்டு வருவார். பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். சமீபத்தில் என் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் சென்று வந்த போது ஒரு அம்மன் கோவிலில் காரை நிறுத்தி சாப்பிட்டோம். ரித்திக்கிடம் பணம் கொடுத்து உண்டியலில் சேர்க்கச் சொன்னேன். நிவேதிதாவையும், ரித்திக்கையும் அம்மனை தரிசிக்கச் சொன்னேன். என் நண்பர் என்னிடம் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அவருக்குத்தான் இந்தப் பதிவு.

Monday, April 19, 2010

ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா?

ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா? (இது ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மட்டும்)

காலையில் சுமார் ஆறு மணி அளவில் ப்ளாக் டீ வித் நாட்டுச் சர்க்கரை. பால் வேண்டவே வேண்டாம். இடையிடையே டீயும், காஃபியும் வேண்டவே வேண்டாம்.

எட்டு மணி அளவில் இரண்டு அல்லது மூன்று எண்ணெய் சேர்க்காத கோதுமை தோசையுடன், புதினாவோ அல்லது கொத்து மல்லியோ அல்லது தக்காளியோ சட்னியாக இரண்டு டீஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளவும். கோதுமை தோசை, மாவு தோசை(இரண்டு மட்டும்), இட்லி இரண்டு மட்டும், சப்பாத்தி இரண்டு(கண்டிப்பாக எண்ணெய் தவிர்க்கவும்). மேலும் கொஞ்சம் பழங்கள் ஏதாவது சேர்த்துக் கொள்ளவும். சீசனுக்கு தகுந்தவாறு பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் சாப்பிடவும்

பின்னர் ஒரு மணிக்கு ஒரு கப் (400கிராம்) சாதத்தோடு, ஒரு கப் கீரை, ஒரு கப் காய்கறியை (கண்டிப்பாக உருளைக் கிழங்கு தவிர்க்கவும்) பருப்போடோ அல்லது குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ செய்து தேங்காய் தவிர்த்து சாப்பிடவும். இதே அளவில் டேஸ்ட் வேறு வேறாக வரும்படி செய்து சாப்பிடவும். கோதுமையில் சாதம் கூட சேர்க்கலாம்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.

இரவு எட்டு மணி அளவில் மீண்டும் கோதுமை தோசையோ அல்லது கோதுமை ரவையோ சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். ஊத்தப்பம் சேர்க்கலாம் அல்லது இடியாப்பம் கூட ஓகே. இரவில் குறைவாக உண்ணும் போது நடு இரவில் பசிக்கும். தண்ணீர் குடித்துக் கொள்ளவும். நாளடைவில் நிம்மதியான உறக்கம் நிச்சயம். குறட்டை வரவே வராது.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.
இது வரையிலும் ஒன்றரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் அருந்தியிருப்பீர்கள்.

மேலும் ஒரு லிட்டரை கூட சேர்த்தால் நாளொன்றுக்கு தேவையான மூன்று லிட்டர் தண்ணீர் தேவை முடிந்து விடும். ஆகையால் இடை இடையே கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

அதிக உப்பு, பால், வெள்ளைச் சர்க்கரை மூன்றையும் நிச்சயமாய் தவிர்த்து விடவும். வெள்ளைச் சர்க்கரை விஷம். இந்தச் சர்க்கரை சேர்த்த எந்த பொருளானாலும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து தவிர்த்து விடவும். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் அதற்கு பதில் அவித்த காய்கறிகளோடு கொஞ்சம் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்ளவும்.

மேலும் இரவில் படுக்கச் செல்லும் முன்பு இரண்டோ அல்லது மூன்று சுமாரான துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளியைச் சாப்பிடவும். காலையில் டாய்லெட் செல்லும் போது வயிற்றைச் சுத்தம் செய்து விடும். நோய் எதுவும் அண்டாது.

மேலும் சில அவசியக் குறிப்புகள் :

புளிக்குப் பதிலாக கொடபுளியை உணவில் சேர்க்கவும். இது கொழுப்பைக் குறைத்து விடும். நாட்டுக் காய்கறிகளைச் சுவையாக செய்து தரும்படி வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி வையுங்கள். உப்பு நாளொன்றுக்கு முக்கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சூடான இடத்தில் நின்று வியர்வை வெளியேறுமாறு செய்து கொள்ளவும். மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். அதற்கு மேல் சேர்த்தால் கொழுப்பு சேரும்.

மட்டன் வேண்டவே வேண்டாம். சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் இரண்டு துண்டு கொஞ்சம் குழம்பு சாப்பிடவும். இதற்கு பதிலாக தொடர்ந்து சற்றே எண்ணெய்,உப்பு தவிர்க்கவும். கோழியில் நாட்டுக்கோழி உத்தமம். மசாலா குறைத்து, எண்ணெய் குறைத்து சமைத்து வாரம் ஒரு முறை உண்ணலாம். மீனில் திருக்கை வேண்டாம். மற்றவை குழம்பு வைத்து சாப்பிடவும். வறுத்த மீண் வேண்டவே வேண்டாம். குழம்பில் கொடபுளியைச் சேர்க்கவும். காரம் கொஞ்சூண்டு சேர்க்கவும். சாம்பாரில் புளி கொஞ்சமாய் இருக்க வேண்டும்.

சாதத்தோடு மோர் சேர்க்கலாம். பசும்பாலில் ஆடை நீக்கிய மோர் நல்லது. தினமும் எக்சர்சைஸ் செய்ய வேண்டியது இல்லை. தேவையென்றால் நடக்கவும். அது போதும். காய்கறிகளில் நாட்டுக்காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகள் தேவையில்லை. தண்ணீர் சத்து அதிகமிருக்கும் உணவுகள் உத்தமம். வியர்வையில் நாம் உண்ணும் உப்பு வெளியேற வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் நூறாண்டுகள் நிச்சயம். இடையிடையே ஏற்படும் காய்ச்சல், சளி தொல்லைகளை எளிதில் சமாளித்து விடலாம். பெரு நோய்கள் வந்தால் வேதனையுடன், விரயமும் உண்டாகும். தமிழக அரசின் இலவச மருத்துவக்காப்பீடு இருக்கிறது என்று எண்ணி ஆப்பசைத்த குரங்காகி விடாதீர்கள் ஜாக்கிரதை.