குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சுவாரசியமானவைகள். Show all posts
Showing posts with label சுவாரசியமானவைகள். Show all posts

Tuesday, May 11, 2010

பிரேமானந்தாவுடன் ஒரு நாள்

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் - அலங்கார வளைவுகள், கொடிகள், தோரணங்கள் என்று கல்லூரி அதகளப்பட்டது. வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தேன். பதினோறு மணிவாக்கில் அனைவரும் கல்லூரிக்குள் இருக்கும் மேடைக்கு வரும்படி சர்க்குலர் வந்தது. என்னவோவென்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்குள் இருக்கும் ஹாஸ்டலுக்கு மூன்று சக்கர சைக்கிளில் சென்றேன். கேட்டில் வாட்ச்மேன் நின்று கொண்டு உள்ளே விட மறுத்தார். ஏன் என்று கேட்க, அனைத்து மாணவர்களும் சுவாமி பிரேமானந்தாவின் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று நிர்வாகத்தினர் உத்தரவிட்டதால் ஹாஸ்டல் ஒரு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார். வேறு வழி இன்றி மாமரத்தின் அடியில் இருக்கும் பெஞ்சு ஒன்றின் மீது தஞ்சமடைந்தேன். சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய மீன் குளத்தில்( ஆராய்ச்சிக்காக வளர்க்கின்றார்கள்) பெரிய பெரிய சைஸில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அதையடுத்து பச்சைப் பசேல் வயல்களில் பசுங்கதிர்கள் சலசலவென பேசிக்கொண்டிருந்தன. அதையும் தாண்டி நாகப்பட்டினத்திற்கு ரயில் ஒன்று ஓசையிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது. 

இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே சிவப்புக் கலர் கார் ஒன்றும் தொடர்ந்து பல கார்களும் வந்தன. காரிலிருந்து இறங்கினார் சுருள் முடி பிரேமானந்தா. அதைத் தொடர்ந்து இறங்கினார் திவ்யா மாதாஜி. மஞ்சள் கலரில் சேலை. பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் அழகு. இறங்கியவுடன் தன்னை வரவேற்ற கல்லூரியின் நிர்வாகிக்கு ஒரு ரோஜாவை வரவழைத்துக் கொடுத்தார். கல்லூரிப் பையன்களுக்கு திவ்யாவைப் பார்த்ததும் சுறு சுறுப்பு வந்து விட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு மேடைக்குப் பறந்தனர். கவனிக்க பறந்தனர். கூட்டமெல்லாம் நமக்கு ஒத்து வராது என்ற நினைப்புடன் மெதுவாக ஹாஸ்டலுக்கு மீண்டும் சென்றேன். வாட்ச்மேன் கதவைத் திறந்து விட்டார். அறைக்குச் சென்று ரீகிரியேஷன் ஹாலுக்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். சாமியார் வரப்போவதாக சொன்னார். சரி வரட்டும் என்று குமுதம் புத்தகத்தைக் கையெலெடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

சரியாக ஒரு மணி நேரம் சென்ற பிறகு பிரேமானந்தாவுடன் கல்லூரி நிர்வாகியும் அவர் கூடவே திவ்யா மாதாஜியும் வந்தனர். ரீகிரியேஷன் ஹாலைப் பார்த்தார். நான் பய பக்தியுடன் வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லி, ராஜா என்ன படிக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன். கண்ணை மூடினார் கையை தலைமீது கொண்டு சென்றார். விபூதியாய்க் கொட்டியது. நெற்றியில் கொஞ்சம் இட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பக்தியுடன் பரவசத்தில் ஆழ்ந்தனர். நன்றாகப்படி என்று சொன்னார். அவர் அறையினை விட்டு வெளியே சென்ற பிறகு பின்னால் வந்த திவ்யா மாதாஜி அருகில் வந்து எந்த ஊர், என்ன படிக்கின்றீர்கள் என்றெல்லாம் விசாரிக்க நானும் பக்தியுடன் பதில்களை உதிர்த்தேன். சிரித்துக் கொண்டே ஒரு கையால் தலைமுடியைக் கலைத்து விட்டு அவசியம் ஆசிரமத்திற்கு வரும்படி சொல்லிச் சென்றார்.

அதன்பிறகு நடந்த விஷயம் தான் முக்கியமானது.

அவர்கள் சென்ற பிறகு அறைக்கு வந்த என் தோழர்களும், நண்பர்களும் என் தலைமீது கொட்டப்பட்டிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டனர். ஆனால் வழக்கம்போல திவ்யாவைப் பாத்ரூமில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டனர் என்பது தான் மிகப் பெரிய சோகம். டெர்ம் எக்ஸாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். லீவு முடிந்து வந்து பார்த்தால் அனைவரும் நக்கீரனும் கையுமாய் அலைந்து கொண்டிருந்தனர். என்ன விஷயமென்று பார்த்தால் பிரேமானந்தா மாட்டிக் கொண்டார். திவ்யா தூர தேசம் ஓடினார் என்பது தான். வகையாக என்னையும் நண்பர்கள் சற்று வறுத்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்டிருந்த நல்லம்மா என்ற அழகு தேவதையை அவர் கற்பழித்த விஷயம் தான் இன்னும் என் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது. நக்கீரனில் வெளியிட்டிருந்த அப்பெண்ணின் முகம் அப்படியே இன்னும் என் நினைவில் இருக்கிறது.




Saturday, August 1, 2009

பெண்கள் - உள்ளமும் அழகும்

டெலிமார்க்கெட்டிங் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவு செய்வது போன்ற விபரங்களுக்காக ஒரு மொபைல் கம்பெனியின் நோடல் ஆஃபீசருடன் பேச வேண்டிய சூழ் நிலை. அந்த நோடல் ஆஃபீசர் ஒரு பெண். முதலில் நானே பதிவு செய்த விபரம் தவறு என்பதால் கேன்ஷல் செய்து விட்டது நமது அரசாங்கம். பின்னர் மறுபடியும் நோடல் ஆஃபீசரே புதிதாய் பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தார். கையெழுத்திட்ட விண்ணப்பத்துடன் டிடியை இணைத்து மனைவியிடம் கொடுத்து அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நோடல் ஆஃபீசரிடமிருந்து போன். டிடி நம்பர் என்னவென்று டிடி எடுத்த வங்கியில் கேட்டுச் சொல்லவும் என்றார். விசாரித்து சொன்னேன். ஒரு வாரம் சென்ற பிறகு வங்கி குறிப்பிட்டது டிடி நம்பர் இல்லை என்றும் மற்றொரு நம்பர்தான் டிடி நம்பர் என்றும் சொல்கிறார்கள் என்பதால் புதிய பதிவினைச் செய்ய வேண்டுமென்றார். மீண்டும் பதிவு செய்து புது கணக்கைத் இமெயிலில் அனுப்பி வைத்தார். அதை பிரிண்ட் எடுத்து, இன்றைக்கு காலையில் நோடல் ஆஃபீசரிடம் கையெழுத்து இட்ட ஒரிஜினல் விண்ணப்பத்தை அளித்து விட்டு வந்த என் மனைவியிடம் ”சார், எங்களால் மிகுந்த சிரமப்படுகிறார்” என்று தன் வருத்தத்தை தெரிவித்தாராம் நோடல் ஆஃபீசர்.

வண்டியில் வரும் போது, என் மனைவி, ”ஏங்க அந்தப் பெண் ரொம்ப அழகாய் இருக்கிறார்.”

”சிவப்புக் கலரா?”

”ஆமாங்க, அவ்ளோ அழகு, பார்த்திருக்கலாம்” என்றார்.

”அழகு என்பது தோல் கலரில் இல்லை. உள்ளத்தில் இருக்கிறது. ஆள் அழகாய் இருந்தால் மனசு அழகாய் இருக்காது” என்று சொன்னேன்.

ஆள் அழகாய் இருந்தால் உள்ளம் கொடூரமாய் இருக்குமென்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் நானே அனுபவித்தும் இருக்கிறேன். என்னிடம் எத்தனையோ பெண்கள் பழகி இருக்கின்றார்கள். வாத்தியாராக வேலை செய்த காலத்தில் அழகான பெண் பிள்ளைகளின் செயல்களை நேரில் கண்டிருக்கிறேன். அழகாய் இருக்கிறோமென்ற எண்ணத்தின் காரணமாய் கொடூரமாய் நடந்து கொள்வர். இப்படி நான் சந்தித்த எத்தனையோ பெண்கள் அழகினால் கர்வம் கொண்ட சம்பவத்தினையும் அதன் பொருட்டு வாழ்க்கையில் வேதனைகளைச் சந்தித்த கதைகளையும் அறிவேன்.

வீடு வந்து சேர்ந்தோம். கொரியர் வந்திருந்தது. நோடல் ஆஃபீசரே புதிதாய் ரெஜிஸ்டர் செய்து ஈமெயிலில் நேற்று எனக்கு அனுப்பி வைத்த விண்ணப்பத்தை, பிரிண்ட் எடுத்து எனது கையொப்பத்தை பெற கொரியரில் அனுப்பி இருந்தார். என் பொருட்டு அவர் தன்னை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறார் என்பது புரிந்தது. நோடல் ஆஃபீசர் ஆள் மட்டும் அழகு இல்லை, உள்ளமும் அழகு என்று அந்த நொடியில் உணர்ந்தேன். எவர் ஒருவர் பிறருக்காக தன்னை சிரமத்திற்குட்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள்.

இப்போது நோடல் ஆஃபீசரைப் பார்க்க ஆவலாய் இருக்கிறது.

Thursday, April 30, 2009

இளமை விகடனில் பரிந்துரைக்கப்பட்ட பதிவு

எனது நண்பர் செல்போனில் வந்தார்.பேசிக் கொண்டிருந்த போது உங்க பதிவு இளமை விகடன்.காமில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். நமக்கு ஒன்றும் புரியவில்லை.
தள முகவரியை பெற்று தளத்தினுள் சென்றேன். ஆச்சர்யம் தான்.

இளமை விகடனில் பரிந்துரைக்கப்பட்ட பதிவு “ கையளவு இதயம்


நன்றி : இளமை விகடன்.காம்

Wednesday, April 22, 2009

சாதிக்க விரும்புகின்றீர்களா ?

கோபப்படாதவர்கள் புத்திசாலிகள் !

மனிதன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிர்சாதனம் ெபாருத்தப்பட்ட அறையில் இருக்க விரும்புவான். ஆனால் இரும்பு தயாராகும் இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்க விரும்பமாட்டான். உணர்ச்சிகள் விஷயத்தில் இப்படித்தான். மகிழ்ச்சியான நிமிடங்கைள மிகவும் விரும்பும் மனிதன், கோபமான உணர்ச்சியில் வெகுநேரம் இருக்க விரும்புவதே இல்லை. கோப உணர்ச்சியும் இப்படித்தான். ஆம்! எல்லாருடைய உண்மையான கோபமும் ‘ஒரு நிமிடம்’ தான்.

எதிராளியின் பிரதிபலிப்புத்தான் அந்தக் கோபத்தின் காலகட்டத்தை நீட்டிக்கச் செய்கிறது. ‘என்னடி! நெனச்சிக்கிட்டிருக்கே உன்மனசுல? பெரிய மகராணின்னு நினைப்பா?’ என்று ஒரு கணவர் ஆரம்பிக்கிறார் என்றால், பொங்குகிற பாலில் தண்ணீர் தெளித்து அதை அடக்குகிற கதையாய், ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. தயவு செஞ்சு கோபப்படாதீங்க’ என்று சூட்டைக் குறைக்கிற வார்த்தைகளைத் தெளித்தால், கணவன் அடங்கிய பாலாகிவிடுவான்.

எல்லா கணவன் மனைவிக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரே நேரத்தில் இருவரும் கோபப்படேவ கூடாது. அந்த நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். ‘எவ்வளவு வேண்டுமானாலும் கத்து. நான் ஒன்றும் பேசப்போவதில்லை. நீ அடங்குவேல்ல! அப்ப வச்சுருக்கேன் உனக்கு’ என்று அந்த நிமிடம் ஒரு கணவன் அடங்குவானேயானால் அவன் புத்திசாலி.

இருவரும் ஒரே காலகட்டத்தில் கோபப்படும் போதுதான் வார்த்தைகள் தடிக்கன்றன. கைகள் நீளுகின்றன. ஏன் இன்னும்கூட விபரிதமாகெவல்லாம் ஏதேதோ நிகழ்ந்துவிடுகின்றன.

ஆத்திரக் கணத்தில் வரும் வார்த்தைகளுக்கு அர்த்தமில்லை. அவற்றை உண்மையான அகராதி கொண்டு மொழி பெயர்க்கக் கூடாது. அடங்கியபின் வரும் வார்த்தைகளே அர்த்தமுள்ளவை.


கோபம் எனும் மதுவைப் பெருமூளையில் ஏற்றிக்கொண்டவர்கள் பிதற்றத்தான் செய்வார்கள். ஒருவர் சூடேறுவதும் சூடு இறங்குவதும் ஒரு நிமிடத்தில்தான்.

‘கோபம் வரும்போது மனைத திசை திருப்பி ஒன்று, இரண்டு, மூன்று என்று முடிந்தவரை எண்ணுங்கள். உங்களுக்கே நம் கோபம் அடங்கிவிட்டது என்று தோன்றும்வைர எண்ணுங்கள்’ என்று உளவியல் நிபுணர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். இப்படி எண்ணிப் பார்த்தால் 60க்கு மேல் உங்களால் எண்ண முடியாது. ஆமாம், உங்கள் கோப உணர்ச்சிெயல்லாம் ஒரு நிமிடம்தான்.

கோப உணர்ச்சியில் மனம் திளைளப்பதே இல்லை. அதிலிருந்து மனம் வெளிவரவே விரும்புகிறது. ஆனால் எதிராளியின் சில சொற்களும், செயல்களும் அந்தக் கோபத்தைப் புதுப்பிக்கின்றன. நம்மீது பாய்ந்து வருகிறவரின் கோபத்தைச் ‘சாரி’ என்கிற ஒரு வார்த்தை பாதியாக்குகிறது. பதிலாகச் சொல்லப்படும் எரிச்சலூட்டுகிற சில வார்த்தைகளோ அவரது கோபத்தைப் பன்மடங்காக்குகிறது.

கோப உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு எந்த நியாயமும் புரிவதில்ைல. கோப உணர்ச்சியிலிருந்து வெளிளிக்கொணர்ந்த பிறகு எடுத்துச் சொன்னால்தான் தலைலக்குள் ஏறுகிறது.

உங்களுக்குக் கோபம் வந்தாலும் சரி, பிறர் கோபத்திற்கு ஆளானாலும் சரி அந்த ஒரு நிமிடத்தை சரிவரப் பயன்படுத்திக்கொண்டால் நீங்கள் நிச்சயம் நினைத்ததைச் சாதிப்பீர்கள்.!.

நன்றி : லேனா தமிழ்வாணன்

Saturday, April 18, 2009

தலைவன் என்கிறவன் யார் ?

தினசரி பேப்பரை பிரிண்ட் செய்து தலையில் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். ஊறுகாய் போட்டு கைகள் கடுக்க தெருத் தெருவாய் தூக்கிச் சென்று விற்றவர் முதலாளியானார். டேபிள் துடைத்தவரின் தொழில் சாம்ராஜ்ஜியம் இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஹோட்டலில் தங்க உனக்கு அனுமதி கிடையாது என்று கேவலப்படுத்தியதால் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இந்தியாவின் முகவரியானது. இப்படி கேலிக்கும், அவமானத்திற்கு உட்பட்ட எத்தனையோ உள்ளங்கள் தொழில் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதிகளாய் வலம் வருகிறார்கள்.

அவ்வாறு முன்னேறியவர்களின் வாழ்வில் சோர்வும், அசதியும் ஏற்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் என்ன செய்திருப்பார்கள் ? இதோ கீழே சில வரிகள். குறிக்கோளை நோக்கிய பயணத்தில் இச்சில வரிகள் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

உழைப்பு என்பது விழலுக்கு இறைத்த நீராய் செல்லாமல் வயற்காடுகளில் கிணற்றிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக சிந்தாமல் சிதறாமல் எவ்வாறு பாத்திக்குள் சென்று சேர்கிறதோ அதைப் போல இருக்க வேண்டும். எதை நோக்கிய பயணம் என்ற முடிவு முதலில் எடுக்கப்படல் வேண்டும். பயணத்தில் ஆங்காங்கே தடங்கல்கள் ஏற்படும் போது மனம் துவண்டு சோர்வடையக்கூடாது. புறப்பட்டாகி விட்டது. இனி நிற்க முடியாது. இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது. எந்த இடத்தைச் சென்று சேர வேண்டுமோ அந்த இடம் இதோ இன்னும் சில அடிகளில் தான் இருக்கிறது. துவண்ட கால்களை உதறி எழ வேண்டும். மூச்சை உள்ளே ஆழமாக இழுத்து உடம்பை உதறி உத்வேகம் கொள்ள வேண்டும். ரத்தம் சூடாக உடலெங்கும் பாயும். நெஞ்சுக்குள் குறிக்கோள் தகிக்க தகிக்க, கண்களில் தீப்பொறி பறக்க பறக்க, விடாது முன்னேற வேண்டும்.

தங்கச் சுரங்கத்தை தேடி தோண்டியவர் சோர்வுற்று வெறுப்பாக சென்று விட்டார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த வேறொருவர் இரண்டு அடி தோண்டினார். கண்ணெதிரே தங்கப்பாளங்கள் பளபளத்தன என்ற உண்மைக் கதை சோர்வுக்கு துணையாக வரட்டும். இன்னும் இரண்டடி தோண்டியிருந்தால் தங்கப்புதையல் கிடைத்திருக்கும். சோர்வும், அசதியும் வெற்றியின் நேர் பகைவர்கள். அவர்களை விரட்டி அடி. தூர தூர... விரட்டி அடி.. வந்து விட்டது அதோ பார்... வெற்றி உன்னைத் தேடி வந்து விட்டது. அதற்கு நீ இன்னும் சில அடிகள் எடுத்து வைக்க வேண்டும். விடாதே... விடாதே... வெற்றி நிச்சயம்.

அடுத்ததாக தலைவன் என்பவனின் இயல்பு பற்றிய ஒரு சிறு விளக்கம் தருகிறேன்.

தலைவன் என்பவன் யார் தெரியுமா ? “ இலட்சியத்தை, குறிக்கோளை மேலாண்மை செய்கிறவன்” . குறிக்கோளை அடைந்து விட்ட பிறகு அதை மேலாண்மை செய்யப்பழகிக் கொண்டவர் நாளை உலகை ஆளப்போகும் தலைவன். மேலாண்மை என்ற சொல்லில் அனேக அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. அது என்ன ? விரைவில்....

Thursday, April 9, 2009

கையளவு இதயம் !

தங்கியிருந்த அறையிலிருந்து படிக்கும் அறைக்குச் செல்ல இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். வழியில் சிறு கற்கள் பாவிய சாலை. காலையில் எழுந்து குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு தூய ஆடை உடுத்தி மண் தரையில் தவழ்ந்து செல்வேன். உச்சி வெயிலில் சாலையில் கொட்டிக் கிடக்கும் கற்கள் எல்லாம் நெருப்புக் கங்குகளைப் போல சுடும். மண் தரையோ அமிலத்தை உள் வாங்கியதாக கொதிக்கும். கிளாஸ் முடிந்ததும் தவழ்ந்து வருவேன். முட்டியில் கொப்பளித்து விடும். கைகள் சூட்டில் வெந்து சிவந்து கிடக்கும். கண்களில் கண்ணீர் ததும்பும். உள்ளுக்குள் வேறு படிக்க வேண்டுமென எரிந்து கொண்டிருக்கும் ஆசை தகிக்கும். நெஞ்சுக்குள் சூடு கிளம்பும். வியர்த்து விறுவிறுத்துப் போகும் உடம்பு சோர்வடையும். பல்லைக் கடித்துக் கொண்டு இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான், இதோ வந்து விட்டது என்று துவண்டு விழும் கைகளும், முட்டியும் கடு கடுக்க தவழ்ந்து செல்வேன். சூட்டில் வெந்து போன முட்டிக்குள் சிறு மணல்கள் புகுந்து கொண்டு தவழ முடியாமல் விண் விண்ணென்று வலிக்கும். சுளீர் சுளீரென்று வலி உடலெங்கும் பரவும். வலி... வலி...

மழை ! சேறும் சகதியும் சேர்ந்து சாலையில் கிடக்கும். சுத்தமாக குளித்து விட்டு கிளாசுக்குச் செல்லும் வழியில் கைகால்கள் எல்லாம் சேறும் சகதியும் ஒட்டிக் கொண்டு வெயிட் ஏறி தவழ இயலாமல் பாரமாய் இருக்கும். சாப்பிடும் கைகள் சேற்றுக்குள் கிடந்து உழலும். சகதிக்குள் கிடக்கும் கப்பிக்கல் முட்டியில் குத்தும். வலி.. வலி... கண்கள் வலி தாங்காமல் தன்னாலே கண்ணீரைத் துப்பும். தவழ்ந்து செல்லும் போது ஏற்படும் வியர்வையில் கண்ணீரும் சேர்ந்து காணாமல் போய் எனது வைராக்கியத்திற்கு வலுச் சேர்க்கும்.

ஒரு முறை கல்லூரியில் நடந்த வன்முறையின் காரணமாக உடனடியாக விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம். கல்லூரியும், ஹாஸ்டலும் காலியானது. யாரையோ பிடித்து பஸ் ஸ்டாண்டிற்கு சென்று சேர்ந்தேன். அப்போது நேரம் காலை பத்து மணி. எண்ணற்ற பஸ்கள் கடந்து சென்றன. ஒன்றிலும் ஏற முடியவில்லை. கூட்டம். கூட்டம். என்னைப் பார்த்ததும் பஸ் டிரைவர்கள் பஸ்ஸை நிறுத்தாமல் சென்றார்கள். சூடு கொப்பளிக்கும் சாலையில் சென்று அடுத்த பஸ்ஸிற்காக காத்திருப்பேன். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விடும். மாலை ஆறு மணிக்குத்தான் ஒரு பஸ் நின்றது. ஏறினேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்து ஊரு வர விடிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. ஏழு மணிக்கு ஊரின் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த என் உறவுக்காரர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். உடம்பு சோர அசதியில் படுத்தேன். உணவு உண்டு இரு நாட்களாகி இருந்தன. இப்படி இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு முறை பஸ்ஸில் பிரேக் அறுந்து விட அனைவரும் வெளியே குதித்தோடி தப்பி விட்டனர். நான் எப்படி இறங்குவது? டிரைவரும், கண்டக்டரும் திட்டினார்கள். என்னால் இறங்க முடியாது என்று அவர்களுக்கு தெரியவில்லை. டிரைவரும் ஒரு வழியாக இறங்கிவிட பஸ் தானாக சென்று புளிய மரத்தின் மீது மோதி நின்றது. அந்தச் சூழ் நிலையிலும் பஸ் கம்பியினை இறுகப் பற்றிக் கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருந்தேன்.

பஸ்ஸில் ஏறினால் உட்கார இடம் கிடைக்கவே கிடைக்காது. எனது இரு கைகளையும் எத்தனையோ செருப்புக் கால்கள் மிதித்திருக்கின்றன. சேறும் சகதியும், எச்சிலும், கோழையும் துப்பிக் கிடக்கும் பஸ் ஸ்டாண்டுகளில் தவழ்ந்து சென்று பஸ் ஏறுவேன். கொஞ்சம் கூட அசூசையோ வெறுப்போ கொண்டதில்லை. ஏன் எனக்கு மட்டுமிப்படி என்றும் எண்ணியதில்லை. எவரைப் பற்றியும் கவலையும் பட மாட்டேன். எனக்குத் தேவை கணிணி அறிவியலில் முதல் வகுப்பில் தேர வேண்டும். குறிக்கோளினை அடைய என்ன துன்பம் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவும், தைரியமும் நெஞ்சுக்குள் கனலாய் தகித்துக் கொண்டிருந்தது. முடிவில் அடைந்தே விட்டேன்.

கையளவு இதயம் ! அது தான் சாதனைக்கு கருவி !

Friday, March 27, 2009

அறிஞர் அண்ணாவின் பேச்சு - ஒலி வடிவில்

அண்ணாவும், அவரின் பேச்சும் என்னை வசீகரித்த ஒன்று. ஏன் என்று இந்த பேச்சினைக் கேட்டு விட்டு முடிவு செய்யுங்கள். மக்கள்..மக்கள்... மக்கள்... என்ன ஒரு தெளிவான பேச்சு. அழகான தமிழில் அவரின் கோர்வையான பேச்சு கேட்கக் கேட்க இன்பம். நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

Monday, March 23, 2009

ஆசையே முன்னேற்றத்துக்கு அறிகுறி

ஆன்மீகம் சொல்கிறது “ஆசையே அழிவுக்கு காரணம்”. ஆசை இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும்.ஆசை இல்லாத மனிதன் பிணமல்லவா?

மீண்டும் ஆன்மீகம் சொல்கிறது "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“. போதுமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இன்றிப் போகும் ஆபத்து இருக்கிறது அல்லவா?

”உன்னை விட தாழ்ந்தவர்களை எண்ணிப் பார். நீ இப்போது இருக்குமிடம் தெரியும்.ஆகையால் பேராசைப்படாதே” என்கிறது ஆன்மீகம்.

மேற்கண்ட ஆன்மீக மேற்கோள்கள் மனிதர்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு காரணமாயிருக்கின்றன என்பது என் எண்ணம். இன்றைய கால கட்டத்தில் இந்தப் பழம் குப்பைகள் உதவாது. தூக்கி தூர எறிந்து விட வேண்டும். நவீன காலம் இது.

ஆசையே வாழ்கைக்கு அச்சாணி. போதவே போதாது என்பது மனிதனுக்கு பொன் தரும் மருந்து. உன்னை விட உயர்ந்து இருப்போரைப் பார் அப்போது தான் நீ இருக்கும் தாழ்ந்த இடம் தெரியும் என்பன போன்ற வாக்கியங்கள் தான் மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்து வைத்திருக்கும் தொழிலதிபரிடம் திருப்தி அடைந்து விட்டீர்களா என்று கேட்டால் கேட்பவரைப் பார்த்து சிரிப்பார்.

மனிதர்களின் மீது அன்புவைத்திருக்கும் தொழிலதிபர் என்ன சொல்லுவார் தெரியுமா ? என்னால் இன்னும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டும். மீண்டும் அடுத்த இலக்கு. அடுத்த சாதனை என்றுச் சொல்லுவார்.

ஆகையால் நண்பர்களே, ஆசைப்பட வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும். உலகத்தையே கைக்குள் கொண்டு வர ஆசைப்பட வேண்டும். பண மழையில் குளிக்க வேண்டும். உன்னால் உலகம் உய்விக்க வேண்டும். உன் பெயரைச் சொல்லியே உலகம் விழிக்க வேண்டும். போதாது போதாது இன்னும் இன்னும் என்றே உன் இதயம் சத்தமிட வேண்டும். உன்னை விட பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தோரின் மீது கண் பதிக்க வேண்டும். அதோ அவர்கள் உட்கார்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கிடையே உனக்கும் ஒரு சிம்மாசனமிருக்கிறது பார். உலகை வழி நடத்த உன் அறிவை வளர்த்துக் கொள். உனக்கான இடம் உன்னைத் தேடி வரும். வந்தே தீரும்.

விடாதே... இலைக்கை அடையும் வரை விடாதே...

Wednesday, March 18, 2009

எந்தக் காது கேக்காது !

மாலை நேரம். மனைவி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். அடியேன் கணிணியில் பிசியாக இருந்தேன். டோரா மற்றும் புஜ்ஜியின் பயணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மு தனது அண்ணாவுடன்.

அம்மு எனது ரோஜாப்பூ மகள். அவள் நடந்தால் சாரல், சிரித்தால் தென்றல் என்று அவள் என்ன செய்தாலும் இன்பம் இன்பம் தான். குழந்தைகள் தான் வாழ்க்கையினை அர்த்தப் படுத்துகிறார்கள் என்பதினை அடிக்கடி அம்மு உணர்த்துவாள். அம்முவின் சில கேள்விகள் நினைக்க நினைக்க சந்தோஷம் தருபவை.

சென்னையிலிருந்து அம்முவின் சித்தி அழைத்திருந்தார்கள். அம்மு என்ன செய்கிறார் என்று கேட்டிருப்பார் போல. கிரைண்டரில் அரைத்துக் கொண்டிருந்த உளுந்த மாவினை சிறு கிண்ணியில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிக்கிறார் என்று அம்முவின் அம்மா சொல்லி இருக்கிறார். மாவு சாப்பிட்டால் காது கேட்காதாம் என்று சித்தி சொல்கிறார் ஆகையால் சாப்பிடாதே என்று அம்முவிடம் சொல்லியிருக்கிறார் மனைவி.

அதற்கு அம்முவின் கேள்வி” எந்தக் காது கேக்காது. இந்தக் காதா அந்தக் காதா ?”. இதற்கு என்னவென்று பதில் சொல்வதென்று திகைத்து பின்னர் இரண்டு காதுகளும் கேட்காதாம் அம்மு என்று சொல்லி இருக்கிறார்.

Wednesday, March 11, 2009

வாழ்க்கை என்பது.... !

இதுவரை எத்தனையோ பிளாக்குகள் படித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அதையும் மீறி என் மனதுக்குள் புகுந்து கொண்ட பிளாக் இது. இந்த எழுத்தாளர் தொடர்ந்து எழுதாமை என்னை நெருப்புக்குள் தள்ளுவது போல இருக்கிறது. எனது வேண்டுகோளை ஏற்பாரா ?

பிளாக்கின் முகவரி : இரு கண்கள் போதாது !
http://raasaiya.wordpress.com

அவரின் பிளாக்கில் இருந்து சில கவிதைகள் கீழே.. அனுமதித்தே ஆக வேண்டும் திரு ராசய்யா அவர்களே... தவறிருந்தால் மன்னித்து அருளவும். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் வெளிச்சம் காட்டுவதில் தவறேதும் இல்லையே ராசய்யா...
நன்றி : ராசய்யா.

என் அப்பாவிற்கு : எழுதியவர் திரு. ராசய்யா
--------------------------------------------------
கரிசலாய் இருக்கும் எனை
விதை நிலமென நினைத்து
விட்டுப்போன என் அப்பாவிற்கு,

ஆங்கிலப் பள்ளியில் சேர்த்து
ஆனந்தப்பட்டீர்கள்
ஒவ்வொரு காலையும்
என் காலனிகளை
பளபளப்பாக்கி
பரவசப்பட்டீர்கள்

பட்டம் வாங்கியபோது என்
பரம்பரையில் முதல்
பட்டதாரி என் மகனென
பார்த்தவரிடமெலாம்
சொல்லித்திரிந்தீர்கள்

வேலை தேடி
சென்னை சென்ற போது
சீமைக்கே அனுப்பியதாய்
சிலாகித்துக் கொண்டீர்கள்

வேலைக்கு சேர்ந்தும் என்
வீட்டுச் செலவிற்கு
பணம் அனுப்பினீர்கள்

இன்று,
நல்ல வேலை
நல்ல சம்பளம்
சொன்ன போதே
பிறவிப்பயனையடைந்தேன் என்றீர்கள்

நடக்கத்தானே கற்றுக்கொண்டேன்
வாழத் தெரிந்து கொண்டேன்
என நினைத்து விட்டுப்போனீர்களா?


மேலும் கவிதைகளையும் அவரது பிளாக்கினையும் படிக்க இவ்விடத்தில் சொடுக்கவும்

என்ன தேசமோ ?

தேர்தல் வந்து விட்டது. தொகுதிப் பங்கீட்டில் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். இலங்கைத் தமிழர்களின் கல்லறையின் மீது ஆட்சி அமைக்கத் துடிக்கின்றார்கள் அரசியல்வாதிகள். நீயா நானா என்று போட்டி போடுகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தில் சிக்கி சின்னா பின்னப்படுகிறது இலங்கைத் தமிழச்சிகளின் கற்பு. பச்சிளம் குழந்தைகளையும் விடாமல் நெருப்பு மழை பொழிந்து கொன்று வருகிறது இலங்கை. வேடிக்கை பார்க்கிறது தமிழகம். தன் மான உணர்ச்சியுடையோர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், நெஞ்சுக்குள் ரத்தம் வடிய வடிய வேதனையோடு நாட்களைக் கடத்துகின்றார்கள் உண்மைத் தமிழர்கள்.

இந்தப் பாடலைக் கேட்டு வையுங்கள். மனம் சற்று ஆறுதல் பெறும்.

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

இன்பம் துன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
காலம் நாளை மாறலாம்
காயம் எல்லாம் மாறலாம்
சோகமென்ன தோழனே
சூழ்ச்சி வெல்வாய் வீரனே
எதிர்த்து நின்று போரிடு
இன்று ஓய்வெடு
நீ இன்று ஓய்வெடு
என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?

பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும் போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள்
ஜெயிக்கபோகும் மானிடா
மயக்கம் இங்கே ஏனடா
உறுதியோடு கேளடா
உண்மை நீயடா
ஓ... உண்மை நீயடா

என்ன தேசமோ?
இது என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ?
தர்மம் தூங்கிப் போகுமோ?
நீதி வெல்லுமோ?
இங்கு வேதமாகுமோ ?
என்ன தேசமோ? இது என்ன தேசமோ?

Sunday, March 8, 2009

கோயம்பேட்டில் அனாதைச் சிறுவர்களுடன் - 1

லாரிக்குள் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். லாரி டிரைவர் குசும்பு பிடித்தவன். எதிரே வரும் கார்களை இடிப்பது போல லாரியைச் செலுத்தினான். “வேல்முருகா எதிரே வரும் காருக்கு நன்றாகத்தான் வழி விடேன்” என்ற போது, “சார், நாம பெரிய வண்டியில் இருக்கிறோம் அவன் தான் பயந்து ஒதுங்கிப் போகனும்” என்றான். ”அடப்பாவி பயலே, நீ செய்யுறது சரியில்லை“ என்று கோபமாகக் முறைக்க வேறு வழி இன்றி எதிரே கார்கள் வந்தால் நன்கு ஒதுங்கி வழி விட்டான்.

விடிகாலை நான்கு மணிக்கு கரூரிலிருந்து கிளம்பி சென்னைக் கோயம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது லாரி. பின்னால் மூடிய லாரிக்குள் பத்து அனாதைச் சிறுவர்களும், மூன்று சக்கர சைக்கிளும், பதினைந்து பேருக்கு இரண்டு மாதம் தாங்கும் அளவுக்கு சமையல் பொருட்களும் இருந்தன. காலைச் சாப்பாடு புளிச்சாதம், தயிர்சாதம். மதியம் ஹோட்டலில் சாப்பிட்டோம். வழியில் நுங்கு, டீ, வடை, பஜ்ஜி என்று சிறுவர்களுடன் சாப்பிட்டேன். பத்து சிறுவர்களும் மாறி மாறி லாரியின் முன்புறம் வந்து என்னுடன் ஒட்டிக் கொள்வார்கள். சென்னையைப் பார்ப்பது என்பது அவர்கள் வாழ்வில் நடக்கப் போகிற அற்புத சம்பவம். அதற்கு காரணமான கம்ப்யூட்டர் வாத்தியாராகிய என்மீது கொள்ளைப் பிரியம் கொண்டார்கள். அதன் பலன் என்னவென்றால் அவர்கள் சாப்பிடுகிறார்களோ என்னவோ, என்னை அவர்கள் கவனித்த விதம் பற்றி வார்த்தைகளில் வடிக்க இயலாது.

இவ்விடத்தில் சற்று நிற்க :

அனாதைச் சிறுவர்கள் என்று எழுதிய போது மனதுக்குள் வந்து சென்ற வரிகளும், கவிதையும் கீழே.

”என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்சி. ” எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நகுலனின் பத்துக் கவிதைகள் கட்டுரையில் இருந்து.

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் - நகுலனின் கவிதை




சரி விஷயத்துக்கு வருகிறேன். இனி...

சரியாக நான்கு மணிக்கு கோயம்பேட்டின் பின்புறமிருக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தை அடைந்தோம். பொறுப்புச் சாமி ஓடிவந்து வரவேற்றார். பிரதர் ஒருவரும் வந்து வரவேற்றார். சுற்றி வர முற்செடிகள். ஒத்தையடிப்பாதை. நீண்ட கூரைக் கொட்டகைகள் இரண்டு. அதில் ஒன்றில் தங்கும் அறைகள் மூன்று இருந்தன. மற்றொன்றில் பூஜை அறை, சமையல் கிடங்கு மற்றும் சமையல் அறையுடன் கூடிய சாப்பாட்டுக் கூடம். தண்ணீர் கிடையாது. சைக்கிளில் சென்று பிடித்து வரவேண்டும். கரண்ட் இல்லை. வேறொரு இடத்தில் ஆஸ்ரமத்தின் பள்ளி கட்டிட வேலைக்கு போட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து சமையல், பாத்ரூம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். பாம்பு, பூரான், திருடர்கள் மற்றும் இன்னபிற தொல்லைகள் அதிகம். கொசுக்கள் ஈக்கள் போல மொய்க்கும். இரவில் சுவர்க்கோழிகள் சத்தம் காதைக் பிளக்கும். இரவில் மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சம். இனிமேல் இரண்டு மாதங்கள் இங்கு இருக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை.

பத்துக்கு பதினைந்து அடியில், அறையோடு கூடிய பாத்ரூம், ஏர்கூலர், பேன், விடிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது வில்வ இலை ஜூஸ்( எனக்கும் பெரிய சாமிக்கும் மட்டும்), காலையில் டீ அல்லது காஃபி, ஏழு மணிக்கு டிஃபன், சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பாடு, மாலை நான்கு மணிக்கு காஃபியுடன் சிற்றுண்டி, இரவு ஏழு மணிக்கு டிஃபன், இரவில் பழ ஜூஸ் அல்லது சுண்டக் காய்ச்சிய பால், கல்லூரிக்கு சென்று வர காண்டசா கிளாசிக் கார் என்று வாழ்ந்தவன் மேற்படி சொன்ன இடத்தில் சென்று தங்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?

Thursday, March 5, 2009

தேர்தல் வந்து விட்டது !



இனிமேல் செய்தி தாள்களில் தேர்தல் விதிமுறை மீறல் என்ற தலைப்பினை அடிக்கடிக் காணலாம். செய்தி தாள்களுக்கு விளம்பர வருமானம் அதிகமாகும். மீடியாக்கள் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எக்ஸ்குளூசிவ் பேட்டி என்று உடம்பு அதிரும் இசையில் விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கும்.

கட்சியின் கொள்கைகள், கூட்டணி தர்மம் என்ற வார்த்தகளில் காணாமல் போய் விடும். நேற்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள் ஆவார்கள். நண்பர்கள் எதிரிகள் ஆவார்கள்.

விவாதங்கள் தூள் பறக்கும். இலங்கைப் பிரச்சினை தமிழ் நாட்டில் காணாமல் போய் விடும்.

நேற்று டைம்ஸ் நவ்வில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டி எடுத்தவர் மிஸ்டர் சிதம்பரமென்றே அழைத்தார். ஆச்சர்யம்.

பாகிஸ்தானுக்கு எதிராக புஜ பல பராக்கிரமத்தை காட்டக்கூடாது. தீவிரவாதம் ஒரு மைண்ட் கேம். அதை மூளையால் தான் வெல்ல வேண்டுமென்றுச் சொன்னார் சிதம்பரம்.

இந்தியாவின் ராஜ தந்திரம் சரிதான். ப.சிதம்பரத்தின் குரல் ஆளுமைத்தன்மை வாய்ந்தது. வெகு அலட்டலான குரலில் நறுக்கு தெறித்த வார்த்தகளில் அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. காந்தக் குரலோன்.

இந்தத் தேர்தலின் முடிவில் ஆட்சி அமைக்க, குதிரை பேரங்கள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. பார்ப்போம்.

Wednesday, March 4, 2009

கவனமாய் இருங்கள்

எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

Sunday, March 1, 2009

கருத்துச் சுதந்திரம் எங்கே




நீண்ட நாட்களாக பதிவு ஏதும் எழுத இயலவில்லை. காரணம் அதிகமான வேலைப்பளு. இனிமேல் ஏதாவது எழுதலாமென்றிருந்த வேலையில் இணைய தளத்தின் சுதந்திரத்துக்கும் வேட்டு வைத்து விட்டார்கள். அது என்னவென்று சொல்லவே பயமாக இருக்கிறது. ஜூனியர் விகடனில் நீதிமன்றம், பிளாக் பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்கிற போக்கு இந்திய ஜன நாயகத்துக்கு வேட்டு வைக்கும் செயல். கேள்வியே கேட்க்கக்கூடாது என்கின்றன சட்டத்தைப் பாதுக்காக்கும் அமைப்புகள். பொதுமக்கள் நீதியின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை குலைந்து வருகிறது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் நீதி அமைப்புகளாலும், அரசியல்வாதிகளாலும், பெரும் பணக்காரர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன என்பது வேதனை தரும் உண்மை.

சற்று ஆசுவாசப்படுத்த இந்தப் பாட்டை பாருங்கள். இது போன்ற சூழ் நிலைகளில் தான் இவ்வகைப் பாடல்களும், இசையும் மனிதனுக்கு ஆறுதல் தரும் போல. தவறுதான். வேறு வழி இல்லை.

நீங்களும் ஒரு பார்வை பார்த்து வையுங்கள். பெண்கள் அழகானவர்கள். அற்புதமானவர்கள்.


Wednesday, February 4, 2009

ரொம்ப பசிக்குதா ?

சித்தி வீடு. காலையில் எழுந்ததும் வீட்டின் எதிரே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். சித்தி அங்குமிங்கும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது. இன்னொரு அடுப்பில் குளத்தில் இருந்து பிடித்து வந்த மீன் குழம்பாய் மாறிக் கொண்டிருந்தது.

”தங்கம், இந்தா வேப்பங்குச்சி. பல் துலக்கு “ சொல்லி விட்டு சொம்பில் தண்ணீரும்,வேப்பங்குச்சியும்,துண்டும் கொடுத்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்றார்.

பல் துலக்கி முடித்து விட்டு உட்கார்ந்த போது சித்தப்பா ரகசிய பாஷையில் கொட்டகைக்குள் அழைத்துச் சென்று தென்னை மரத்துக் கள்ளை குடிக்க சொன்னார். சித்திக்குத் தெரிந்தால் தொலைத்து விடுவார். அவசர அவசரமாக குடித்து வைத்தேன். தித்திப்பாய் இருந்தது.

திரும்பவும் பெஞ்ச். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த சித்தி “ ரொம்ப பசிக்குதா” என்று கேட்க

சிரித்து வைத்தேன்.

”மீன் வறுத்துக் கிட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம் என்ன ?”

”சரிம்மா” என்றேன்.

*****
பெண்கள் கல்லூரியில் புரபஸர் மற்றும் ஸ்டூடண்ஸுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்த போது போன் வந்ததாய் சொன்னார்கள். சித்தி தவறி விட்ட செய்தி கேட்டு துடித்துப் போனேன்.

அடித்துப் பிடித்துக் கொண்டு சென்றேன். அம்மா சித்தியின் தலைமாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். சுற்றிலும் உறவுகள் கதறிக் கொண்டிருந்தார்கள்.

சித்தி அருகில் போய் உட்கார்ந்திருந்தேன். பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த சித்தியின் தலையை தடவி விட்டேன். கண்களில் கண்ணீர் ஒழுகியது. அழுது ஓய்ந்து விட்டு வந்து கையைப் பார்த்தேன். கையில் சித்தியின் தலையில் இருந்து வெளியேறிய பேன்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

இனி... “ ரொம்ப பசிக்குதா? “ குரலை எப்போது கேட்கப் போகிறேன்.

*******

சித்தியின் கடைசி மகன் சென்னையில் வாசம் செய்கிறார். மிகச் சமீபத்தில் திருமணம் ஆனது. குடும்பத்துடன் தம்பி வீட்டில் சென்று தங்கினேன். ஒரு நாள் என் மனைவி, மகள், மகனுடன், தம்பியும் தம்பி மனைவியும் காலை பத்து மணிக்கு ஷாப்பிங் சென்றார்கள். வருவதற்கு இரவு ஆகி விட்டது.

மதியம் சாப்பாடு இல்லை. மாலையில் வீடு துடைக்க வந்த கிழவி வர டீ போட்டுக் கொடுத்தார். பசி சற்று அடங்கியது. நான் சாரு நிவேதிதாவின் கட்டுரையினை அப்லோடு செய்யும் வேலை செய்து கொண்டிருந்தேன்.

இரவு மணி எட்டு. எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

”ரொம்ப பசிக்குதா ?”

குரல் கேட்டு நிமிர்ந்தேன். தம்பி மனைவி.

"இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு செய்து விடுவேன். கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம்” என்று சொன்னார் தம்பியின் மனைவி.

“சரிம்மா” என்றேன்.

எனக்குப் நேர்ப் பின்புறமிருந்த பூஜை அறையில், போட்டோவில் இருந்த சித்தி சிரித்தது போல இருந்தது.

*****

Monday, January 26, 2009

சங்கு வண்டி

காமராஜர் காரில் சென்று கொண்டிருக்கும் போது காரின் முன்பாக போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலி எழுப்பிய படி சென்று கொண்டிருக்கும். அது என்ன சத்தம் என்று உதவியாளரிடம் கேட்பார். சைரன் சத்தமென்று சொல்ல காரை உடனடியாக நிறுத்தச் சொல்லி இறங்கி நானென்ன செத்தா போய்விட்டேன். காருக்கு முன்னாடி சங்கு ஊதிகிட்டு போறீங்க என்று சொல்லி வீணா செலவு பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க என்ற படியே காரில் ஏறிச் செல்வார். இந்தக் காட்சி காமராஜர் படத்தில் வருகிறது.

இன்றைய அரசியல்வியாதிகளும், அடிப்பொடிகளும், அரசு அலுவலர்களும் செத்த பொணம் வருது செத்த பொணம் வருது விலகுங்க என்று சொல்லும்படியாக சைரன் வைத்த காரில் பயணம் செய்வது இவர்களுக்கு மனசாட்சி செத்துப் போய் வெறும் மனிதப் பிம்பங்களாய் உலா வருவதைக் காட்டுவது போல இருக்கிறது. நல்ல அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பற்றி இங்கு விமரிசிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க.

கட்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பிரமுகரின் கட்டி முடிக்கப்படாத தியேட்டருக்கு லைசென்ஸ் வழங்க மறுக்கும் கலெக்டரிடம் சட்டப்படி தான் நடக்கணும். அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக்கூடாது என்றும் சொல்வார். ஆனால் இன்று நடப்பதென்ன ?

சாதாரண தொண்டனாக இருக்கும் கறை வேட்டிக்காரரின் அலட்டலும் மிரட்டலையும் வார்த்தைகளில் சொல்ல இயலுமா ? காவல்துறை அலுவலங்களில் பார்த்தால் தெரியும் இவர்கள் செய்யும் சேட்டைகளை.

ரத்தமும் துரோகமும் நிரம்பி வழியும் வரலாற்றுப் பக்கங்களில் காமராஜரைப் போன்றோரின் பக்கங்கள் பாலைவனத்துச் சோலைகளாய் இருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

Saturday, January 24, 2009

சபரி மலை ஐயப்பன் கோவில் பயணமும் தரிசனமும்

சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்தேன். நண்பர்களுடன் வேனில் பயணித்தேன். வழியெங்கும் பச்சைப் பசேல் மரங்கள்.. குளிர் காற்று. பார்க்கப் பார்க்க பரவசமாய் இருந்தது. வழியில் நிறுத்தி இயற்கைச் சுனையில் குளியல் இட்டோம். அருகில் இருந்த கடையில் கப்பங்கிழங்கு வாங்கி சாப்பிட்டோம். சேச்சி வீட்டில் எங்களுக்கு மதிய சாப்பாடு தயாராகியது. சோறு கொட்டை கொட்டையாக இருந்தது. ஆனால் சாப்பாடு வெகு சுவை. சாப்பிட்டு முடித்து விட்டு தொடர்ந்து பயணித்தோம்.

பேட்டை துள்ளல் என்னால் இயலவில்லை. ஆகையால் நண்பர்கள் மட்டும் துள்ளல் முடிந்து மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தனர். நானும் இன்னும் ஒரு சாமியும் வேனில் பயணித்தோம். தொடர்ந்து என்னுடன் பிஎஸ்என்எல் அதிகாரியாக இருக்கும் நண்பரின் அம்பாசிடர் காரும் வந்தது. நிலக்கல்லில் வேன் நிறுத்த வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். நான் பம்பை செல்ல வேண்டுமென்பதால் எனது நண்பரின் காரில் பம்பை சென்று சேர்ந்தேன். நண்பர்கள் வரும் வரை ஒரு நாள் முழுதும் காருக்குள் முடங்கினேன். மலைப்பாதையினைக் கடந்து நண்பர்கள் வரும் வரை பம்பையில் காத்து இருக்க வேண்டுமென்ற குருசாமியின் உத்தரவு. மறு நாள் பம்பை ஆற்றில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குளியல் போட்டேன். மலைப்பாதையில் டோலிக்கு ரூபாய் 800 பணம் கட்டிய பிறகு நான்கு பேர் தூக்கிக் கொண்டு பயணித்தார்கள். வழியில் இறக்கி ஐந்து பேரும் கட்டஞ்சாயா குடித்தோம். ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்தேன். வாங்க மறுத்தார்கள். அவர்கள் படும் சிரமத்தினைக் கண்டு நெஞ்சு வலித்தது. என் இயலாமையினை எண்ணி வருத்தமடைந்தேன். வேறு என்ன செய்ய இயலும் என்னால்.

எனது குழுவில் பதினைந்து பேர் இருந்தோம். மஞ்சள் கலரில் ஆளுக்கொரு கொடி வைத்திருந்தோம். நாங்கள் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அவ்விடத்திலெல்லாம் கொடியினை ஆட்டியபடி வர வேண்டும் என்பது குரு சாமியின் உத்தரவு. கொடி ஆடுவதை வைத்து குழு நண்பர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். எளிதில் ஒன்று சேர்ந்து விடலாம். நண்பர்கள் நடைபாதை வழியாக இரண்டு கிலோ மீட்டர் நீண்டிருந்த வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பதினெட்டாம் படியருகில் வருவதற்கு விடிகாலை ஆகிவிடும். டோலி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் பதினெட்டாம் படியருகில் சென்றது. எனக்குப் பயமாகி விட்டது. எண்ணிலடங்கா கூட்டம். எங்கு நோக்கினும் ஐயப்ப பக்தர்கள். ஐயப்பா ஐயப்பா என்ற ஒலி. மைக்கில் அறிவிப்புகள். எனக்கோ ஒருவரையும் தெரியாது ஐயப்பனைத் தவிர. தலையில் இருமுடி. தவழ்ந்து தான் செல்ல வேண்டும். என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த போது என் குழுவில் இடம்பெற்ற விவரமான ஒரு ஐயப்ப பக்த நண்பர் என்னை கண்டுபிடித்து வந்து சேர்ந்து கொண்டார்.இருவரும் பதினெட்டாம் படியருகில் வந்து சேர்ந்தோம்.

அங்கிருந்த காவல்காரர்கள் அருகில் வந்து தேங்காய் வைத்து இருக்கின்றீர்களா என்று கேட்க, இருக்கு என்றேன். இருமுடியினை நண்பரிடம் கொடுத்து விட்டு தேங்காயை வேகமாக அடிக்கச் சொல்ல, நானும் அவ்வாறே செய்ய இரு போலீஸ்காரர்களும் தேங்காய் நன்கு உடைந்து விட்டது என்று மகிழ்ச்சியாய் சொல்ல எனக்குள் நெகிழ்ந்தது. படியேற வேண்டும். வலதுபுறம் கீழே இருந்து மேல் படி வரை போலீஸ்காரர்கள் கைகளை வைத்து மறித்து வழியேற்படுத்தினர். ஏறுங்கள் என்றனர். தவழ்ந்து ஏறினேன். கை வழுக்கியது. அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் கை கொடுக்க முயன்றேன். மறுத்து விட்டார். நீங்களே ஏறுங்கள் என்றார். அனைத்து போலீஸ்காரர்களும் ஏற்றிவிடப்பா ஐயப்பா, ஏற்றி விடப்பா ஐயப்பா என்று கோஷமிட்டன்ர். ஒவ்வொரு படியாக ஏறுங்களென்று சொல்லியபடி பின்னால் ஒரு போலீஸ்காரர் வந்தார். பதினெட்டாம் படியினைத் தொட்டேன். அங்கு நின்றிருந்த வேறு இரண்டு போலீஸ்காரர்கள் ஓடி வந்தனர். நேரே கோயில் படிகளில் வருமாறு அழைத்துக் கொண்டு சென்றனர். நீண்ட வரிசையில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இரு நொடி தரிசனம் தான் கிடைத்தது. இருவரை விலக்கி விட்டு ஐயப்பனை பார்க்க வைக்க முயன்று தோற்றனர்.



அங்கு நின்றிருந்த மற்றொரு போலீஸ்காரர் என்னையும் என் நண்பரையும் ஐயப்பன் கோவில் படி அருகில் அழைத்துச் சென்று விட்டார். இங்கிருந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு மெதுவாக வாருங்கள் என்று சொல்லி விட்டு பின்னால் நின்று கொண்டார். நீங்கள் நடக்கணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஐயப்பன் அருளுவார் என்று சொன்னார். ஐயப்பன் ஜோதியில் ஜொலித்துக் கொண்டிருந்தார். கையில் கொண்டு சென்றிருந்த காசுகளை உண்டியலில் போடச் சொன்னார். பம்பையில் குளிக்கும் போது ஏதாவது துணியை விட வேண்டுமாம். ஆனால் நான் விடவில்லை. காசு போடும் போது காசோடு துண்டும் சேர்ந்து உண்டியலுக்குள் சென்று விட்டது. போலீஸ்காரர் சிரித்தார். ஐயப்பனுக்கு கொடுக்க வேண்டியதிருந்திருக்கும் போல என்று சொன்னார். கருவறையில் இருந்து பூசாரி ஒருவர் வெளியே வந்து நீண்ட இலைப் பிரசாதமும், ஆரத்தியும் காட்டினார். ஐயப்பன் உயிரோடு உள்ளே உட்கார்ந்திருப்பது போல தோன்றியது. பிரசாத்தைப் பெற்றுக் கொண்டு வெளி வந்தோம். மஞ்ச மாதா கோவிலின் அருகில் உட்கார்ந்தேன். மற்ற நண்பர்களை அழைத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு என்னுடன் வந்த நண்பர் கிளம்பி விட்டார். மஞ்ச மாதா கோவிலின் அருகில் விடிய விடிய உட்கார்ந்திருந்தேன்.


இதற்கிடையில் பசி வர யாரோ ஒரு ஐயப்ப பக்தர் சாதம் வாங்கி வந்து கொடுத்தார். சாப்பிட்டு விட்டு துண்டை விரித்து படுத்து விட்டேன். அடிக்கடி எழுந்து மஞ்சள் கொடியினை ஆட்டியபடி இருப்பேன். பின்னர் படுத்து விடுவேன்.

விடிகாலையில் குருசாமியும் இன்னொரு சாமியும் என்னைக் கண்டுபிடித்து வந்து விட்டனர். மூவரும் ஐயப்ப சேவா சங்கத்தினர் தந்திருந்த அறைக்குச் சென்று குளித்து முடித்து விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அனைத்து நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மற்ற சாமிகளும் அறைக்கு வந்து விட்டனர். குரு சாமி நெய் தேங்காய்களை உடைத்து சேகரித்தார். குருசாமி என்னை அவர் முதுகில் தூக்கிக் கொள்ள நெய்யினை சுமந்த படி இன்னுமொரு சாமியும் கூடவே வந்தனர். எங்களைப் பார்த்த காவல்கார்ர்கள் எவரும் வழி மறிக்கவே இல்லை. மீண்டும் நேரடியாக ஐயப்பன் கோவில் படி அருகில் கொண்டு போய் நிறுத்தினர்.

ஐயர் நெய்யினை வாங்கிக் கொண்டு போய் அபிஷேகம் செய்தார். கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தேன். அபிஷேகம் முடித்து மூவருக்கும் இலையில் பிரசாதம், நெய் தீபம் காட்டினார். மூவரும் கிளம்ப எத்தனித்த போது சற்று இருங்கள் என்றுச் சொல்லி உள்ளே சென்று ஐயப்பன் மீது இருந்த நெய்யினை வழித்து எடுத்துக் கொண்டு வந்து என் இரு கால்களிலும் பூசி விட்டு ஐயப்பா இந்தப் பையன் நடக்கணும் என்று வேண்டிக் கொண்டார். போலீஸ்காரர்கள் மீண்டும் எங்களை கோவிலின் வாசல் படி அருகில் இடது புறம் இருக்குமிடத்தில் கொண்டு போய் விட்டு, இவ்விடத்தில் இருந்து தியானம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றனர். மூவரும் அங்கிருந்த படியே தியானம் செய்து ஐயப்பனைக் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தோம். வரிசையில் ஐயப்ப பக்தர் நெய் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தியானம் செய்து விட்டு சந்தனம் பெற வந்தோம். அவ்விடத்தில் அபிஷேகம் முடித்து வந்த ஐயப்ப பக்தர்கள் என்னைப் பார்த்தனர். அனைவரும் வரிசையாக என் மீது அபிஷேக நெய்யினைப் பூசி ஐயப்பா, இந்தப் பையன் நடக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். என் உடல் முழுதும் அபிஷேக நெய்யும் சந்தனமும் வழிந்தது. யார் யாரெல்லாமோ எனக்காக வேண்டிக்கொண்டனர். அந்த அன்புக்கு நான் என்ன செய்ய ? என்னை யார் என்று கூட தெரியாது அவர்களுக்கு. ஆனால் நான் நடக்க வேண்டுமென வேண்டிக் கொண்டார்கள். அவர்களின் அன்பு என்னை நிலை குலைய வைத்தது.

நான் கை கூப்பிய படியே என் மீது அபிஷேக நெய் பூசும் ஐயப்பன்களை கண்ணில் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தேன்.


இந்தப் பதிவினை எழுதக் காரணம் என்ன ? என் மீது அன்பு கொண்டு நான் நடகக் வேண்டுமென வேண்டிக்கொண்ட ஐயப்ப பக்தர்களின் அன்பிற்கு நன்றிக்கடன் செலுத்துவது தான்.

Tuesday, January 13, 2009

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

சுண்ணாம்புக் கார கிழவி வந்துட்டாளான்னு பாருடா தங்கம் என்பார்கள் அம்மா. தலை நரைத்த கிழவி ஓலைப் பெட்டியில் கொண்டுவரும் சுண்ணாம்புச் சிப்பிகளை மூன்று மரக்கால் நெல் அளந்து போட்டு விட்டு ஒரு மரக்கால் சுண்ணாம்பு சிப்பிகளை வாங்கி வைப்பார். வெந்நீர் வைத்து அதில் சிப்பிகளைச் சேர்த்து பனைமரத்து மட்டையால் கிளறி விட சிப்பிகள் நீரில் வெந்து கொழ கொழப்பாய் வரும். அதை மண் சட்டியில் வைத்து மேலே தண்ணீர் சேர்த்து, சாக்கைப் போட்டு கட்டி வைத்து விடுவார்கள். போகி அன்று காலையில் நீலம் வாங்கி வந்து சுண்ணாம்புச் குழம்பினை கொஞ்சம் எடுத்துப் போட்டு கலந்து வீட்டின் சுவருக்கெல்லாம் வெள்ளை அடிப்பார்கள். காவிக்கட்டியினை உடைத்து அதில் தண்ணீர் விட்டு கலந்து கொண்டு வெள்ளையும், சிவப்பும் கலந்த வரி வரியான பட்டையினை வீட்டினைச் சுற்றி அழகாய் அடித்து வைப்பார் அம்மா. வீடே களை கட்டிவிடும். அக்காவும், தோழிகளும் பொங்கலன்று என்ன கோலம் போடலாம் என்ற டிஸ்கசனில் இருப்பார்கள். கலர்ப்பொடி வாங்கி வைப்பார்கள். வீட்டைச் சுற்றிலும் மண் தரைகள் சாணி மெழுகி வழுவழுவென்று பச்சையாய் மிளிரும்.

ஆசாரி தேங்காய் கொட்டாச்சியில் செய்த அகப்பையைக் கொண்டு வந்து தந்து விட்டுச் செல்வார். தாதர் மார்கழி மாதம் முழுதும் விடிகாலையில் வீட்டுக்கு வீடு செகண்டி அடித்து வந்ததன் கூலியை நெல்லாக வாங்கிச் செல்வார். வண்ணான் வருடம் முழுவதும் துணி துவைத்ததற்கான கூலியினை நெல்லாக வாங்கிக் கொண்டு செல்வார். மாட்டுப் பொங்கலுக்கு படையல் போட தும்பைப் போல வெளுத்த வேட்டி ஒன்றினை தந்து விட்டு செல்வார். வேலையாட்கள் வந்து நெல்லும், காசும் வாங்கிச் செல்வார்கள். வேலையாட்களுக்கு வேட்டியும், சட்டையும், துண்டும் தருவார் மாமா. குயவர் வந்து பொங்கல் வைக்க அடுப்பு, பானைகளையும், குழம்பு வைக்க சாம்பார் சட்டி, பொறியல் செய்ய சிறிய சட்டிகளையும் கொடுத்து நெல் வாங்கிச் செல்வார். அம்மா மறக்காமல் மீன் குழம்பு சட்டிகளையும் வாங்கி வீட்டின் புழக்கடைப் பக்கம் கவுத்து வைப்பார்.

பொங்கலன்று விடிகாலையில் காய்கள் எல்லாம் வெட்டப்பட்டு கிட்டத்தட்ட பதினாறு காய் கறிகள் மற்றும் மணக்க மணக்கச் சாம்பாரும் தயார் செய்யப்பட்டு இருக்கும். மாமா காலண்டரை வைத்துக் கொண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் பார்த்தபடி இருப்பார். வாசலில் மெழுகி அழகான கோலமிட்டு சாணியில் பிள்ளையார் பிடித்து தலையில் அருகம்புல் சொருகி திரு நீறு பூசி, குங்குமம் வைத்து ஜம்மென்று அமர்ந்திருப்பார் பிள்ளையார் சுவாமி. கரும்பு கட்டுகளும், தோட்டத்திலிருந்து வாழைக்குலைகளும் வீடெல்லாம் நிறைந்திருக்கும். மாட்டுப் பொங்கலுக்கு மாலை கட்ட ஆவாரம்பூவும், கூலப்பூவும், இண்டங்காயும், பெரண்டையும், வேப்பிலையையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருப்பார்கள் வேலைக்காரர்கள். ஈஞ்சி என்று சொல்லக்கூடிய மிளாறைக் கொண்டு வந்து இரண்டு கம்புகளுக்கிடையே கொடுத்து நாறாக்கியபடி இருப்பார் தாத்தா. மாடுகளுக்கு கொம்பு சீவி பளபளவென மின்னும். மாட்டு வண்டிக்கு பெயிண்ட் அடித்துப் புதுப் பெண் போல மினுமினுக்கும்.

பொங்கலன்று, காலையில் தேங்காய் உடைத்து சாம்பிராணி காட்டி பொங்கல் பானை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு எரிப்பார்கள். தண்ணீர் கொதித்து வந்ததும் அரிசி போட்டு பொங்கி வர பொங்கலோ பொங்கல் என்று குலவை இடுவார்கள். சங்கு ஊதுவார்கள் மாமா. சர்க்கரைப் பொங்கலுக்கு என்று தனிப் பொருட்களை எல்லாம் கொட்டி நன்றாக வேக வைத்து இறக்கி வைப்பார்கள். இலையினைப் போட்டு காய்கறிகள், பழங்கள் எல்லாம் வைத்து பொங்கலை வைத்து பல்லயம் போடுவார்கள். பாலும் தயிரும் ஊற்றி மேலே சர்க்கரை தூவி தேங்காய் பூ தூவி வாழைப்பழங்களையும் வைத்து சுற்றிலும் கறி வகைகளை வைத்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமெடுத்து பிள்ளையாருக்குச் சோறு ஊட்டி, அடுப்புக்குச் சோறு ஊட்டி, பானைக்கும் சோறு ஊட்டி சாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து தூப தீபங்காட்டி விட்டு பல்லயத்திலிருந்து பொங்கல் எடுத்து அனைவருக்கும் தருவார்கள். உட்கார்ந்து வயிறு புடைக்கச் சாப்பிடுவோம். திருமணமான தங்கை, அக்காள் வீடுகளுக்கு பொங்கல் சீர் கொண்டு செல்லப்படும்.

பக்கத்து வீடுகளுக்கெல்லாம் பொங்கலும், கறி வகைகளும் செல்லும். கரும்பு சாப்பிட்ட படி புதுச் சட்டை அணிந்து நண்பர்களோடு விளையாட ஆரம்பித்து விடுவோம்.

மறு நாள் மாடுகள் எல்லாம் குளிக்க வைக்கப்பட்டு, கொம்புகளில் பெயிண்ட் அடித்து வண்ண வண்ணக் கயிறுகள் கட்டி வைக்கோல் போரில் கட்டப்பட்டு இருக்கும். மாலை நேரத்தில் போன வருடம் வெட்டிய இடத்திலேயே அடுப்பு வெட்டி மண் எடுத்து பக்குவமாய் பிசைந்து பிள்ளையார் பிடித்து தலையில் ஆவாரம்பூ, கூலப்பூ, இண்டங்காய், வேப்பிலை சொருகி மேடை போட்டு விபூதி, மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கப்படுவார். வண்ணான் கொடுத்த வேட்டியினை விரித்து தாம்பூலத்தட்டில் பழ வகைகளோடு அருமையாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார் பிள்ளையார். வெண் பொங்கல் வைத்து பழங்கள், தேன், சர்க்கரை, தயிர், பால் சேர்த்து பிசைந்த சாதத்தை மாடுகளுக்கு ஊட்டி மாலையிட்டு, குங்குமம், மஞ்சள் வைத்து கும்பிட்டு வருவோம். படையலைப் பிரித்து பாதி அளவுக்கு பொங்கலை எடுத்துக் கொண்டு மீதியை வேஷ்டியில் கட்டி வைத்து விடுவார் மாமா. அது நாளை வரும் வண்ணான் எடுத்துச் செல்ல.

அதற்கும் மறு நாள், ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் எல்லாம் பிள்ளையார் கோவிலில் பொங்கல் வைத்து படையலிட்டு குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு வருவார்கள். நான்காம் நாள் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். கலந்து கொள்ளும் எல்லோருக்கும் பரிசுகள் நிச்சயம். அன்றிரவு கரகாட்டம் பட்டையைக் கிளப்பும்.

நான்கு நாட்களும் ஊரார் அனைவரும் கூடி மகிழ்ச்சியாய் கொண்டாடி மகிழும் பொங்கலை நினைத்தால் மனதில் சோகமே உருவெடுக்கிறது தற்போது.

ஏங்க, நாளைக்கு காலையில் சர்க்கரைப் பொங்கல் மட்டும் வைத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம் என்ற மனைவியைப் பார்த்தேன். நகரக் கலாச்சாரத்தில் வாழ்ந்த மனைவிக்கு கிராமத்துக் கலாச்சார கொண்டாட்டங்கள் பற்றி தெரியாது என்ற வருத்தம் என்னைப் பீடித்தது. கிராமத்துக் கலாச்சாரத்தில் வளர்ந்த எனக்கு அந்த நாட்கள் திரும்பவும் கிடைக்காத வருத்தம் ஏற்பட்டு வாழ்க்கையின் மீதான எரிச்சல் ஏற்பட்டது.

பிள்ளைகளுக்கு கரும்பு கூட கொடுக்க விடாமல் சளி பிடிக்கும் வேறு ஏதேனும் தொந்தரவுகள் வரலாம் என்று தடுத்து விட்டாள். பிள்ளைகளை எதிர்காலத்தில் வேலை பார்க்கும் இயந்திரமாய் வாழ வளர்த்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள். மனிதனின் கொண்டாட்டங்கள் இன்று பணத்தின் மீது குவிந்து விட்டதால் மனிதன் மறைந்து கொண்டிருக்கிறான். இயந்திரங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Tuesday, January 6, 2009

வாழ்க்கை என்னும் விளையாட்டு

மனித மனத்தில் சரியான எண்ணங்களை புகுத்தினால்தான் அதை தேவையான முறையில் நாம் இயக்க முடியும். இன்று பலரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டிய விஷயங்கள் பற்றியே திரும்பத் திரும்பப் பட்டியல் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை விட என்னென்ன வேண்டுமென்ற எண்ணங்களைப் புகுத்துவது தான் சரியான அணுகுமுறை.

அப்படிச் செய்தாலே, தேவையில்லாதவை தானாகவே விடைபெற்று விலகிவிடும்.
நம் வீட்டில் இருக்கிற சில மின்சார சாதனங்களைப் போல, தேவைப்பட்டால் இயக்குவதும், தேவை இல்லையென்றால் நிறுத்துவதும் மனித மனத்துக்கும் சாத்தியம். அந்த அளவுக்கு மனம் மீது ஆளுமை செலுத்துவது அவசியம்.

கனவு காணுவது நல்லது. அது உங்களுக்கு ஊக்கம் தருவது. ஆனால் நிறைய பேர் கனவு நிலையிலேயே நின்று கொண்டு வாழ்க்கைக்குள் இறங்கப் பயப்படுகிறார்கள். உங்களை கனவு நிலையிலேயே வைத்திருக்க கூடியவற்றில் ஒன்று ஜோதிடம். ஒரு பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் என்ன விழப்போகிறது என்று எதிர்ப்பார்ப்பது போல உங்கள் வாழ்க்கையை நீங்களே ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு கிரகங்கள் அதிலே என்ன போடப் போகின்றன என்று பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

உங்கள் தகுதியை, ஆற்றலை அறிந்து கொள்ளாத போது தான் அதிர்ஷ்டங்களை நம்பத் தொடங்குகிறீர்கள். வேகமாக ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். பதட்டப்படுகிறீர்கள். இந்தப் பதட்டத்தின் காரணமாகத்தான் ஜாதகத்தை நம்பிப் போகிறீர்கள். தன்னை அறிந்து கொள்ளாமல் சில வெற்றிகளைப் பெற்றால் அதை அதிர்ஷ்டத்தால் வந்தவை என்று நீங்களே நம்பத் தொடங்கி விடுவீர்கள். பிறகு ஒவ்வொன்றுக்கும் உங்கள் ஜாதகத்தையோ, கைரேகையையோ, எண் கணிதத்தையோ பார்த்துக் கொண்டுதான் உங்களால் செயல்பட முடியும்.

தனது தனிப்பட்ட ஆற்றல் பற்றி இன்றைய மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால் தான் சில அற்புதங்கள் எதிர்பார்த்து அவர்கள் அலைமோதுகிறார்கள். இவையெல்லாம் பதட்டத்தின், அச்சத்தின் வெளிப்பாடு தான். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப் பெரிய அற்புதம் என்ன தெரியுமா? வாழ்க்கையை விளையாட்டாய் நடத்திச் செல்வது. இது ஒவ்வொருவருக்கும் சாத்தியமே.

நன்றி : காட்டுப்பூ மற்றும் சத்குரு ஜக்கி வாசுதேவ்.


காட்டுப்பூவை கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். கெட்டி அட்டையில் கடைசி பக்கங்களில் வரும் ஜென் கதைகள் எனக்குப் பிடித்தவை. தற்போது வரும் காட்டுப்பூ இதழில் மேற்கண்ட கட்டுரையினைப் போன்று எண்ணற்ற விஷயங்கள் வருகின்றன.

ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க திகட்டாத சுவை தருகிறது. சில கட்டுரைகள் வாழ்வியல் வினோதங்களை சுட்டுகின்றன. சில கட்டுரைகள் வாழ்க்கையின் முரண்பாடுகளில் மனித வாழ்க்கை சிக்கி சீரழிவதை காட்டுகின்றன. இதுபோன்ற வித விதமான கட்டுரைகள் வருகின்றன காட்டுப்பூவில். அனைவரும் படிக்க ஏதுவான ஒன்றாய் திகழ்கிறது. மதங்கள் இவ்விடத்தில் மறைந்து போகிறது. தனி மனித தன்மை மட்டும் தான் மனிதனை மாற்ற இயலும் என்று சொல்கிறது காட்டுப்பூ.

ஆகவே நண்பர்களே நான் படித்தக் காட்டுப்பூவில் இருந்து அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் ஒரு கட்டுரையினை மட்டும் மேலே பதிவிட்டு இருக்கிறேன்.


இப்புத்தகத்தை ஒரு வருடம் தபாலில் பெற ரூபாய் 180ம், இரண்டு வருடங்கள் பெற ரூபாய் 350ம், மூன்று வருடங்களுக்கு ரூபாய் 500ம் ஆகும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் பெற இங்கு கிளிக்கிடவும். காட்டுப்பூ