குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தாய்மை. Show all posts
Showing posts with label தாய்மை. Show all posts

Thursday, September 22, 2016

இப்படியும் ஒரு தாய்

”தலைவரே எனக்கு பெண் பிறந்திருக்கிறாள்” என்றார் நண்பர். ”இதோ வந்து விடுகிறேன்” என்றுச் சொன்னேன். ஆனால் மாலையில் ஓஷோவின் “நாரதரின் பக்தி சூத்திரத்தில்” மூழ்கியதால் அந்த நினைப்பே வரவில்லை. மணி ஏழாயிற்று. இனி விசிட்டர்ஸ் அனுமதி இல்லையென்றுச் சொல்லி விடுவார்கள் என்பதால் மறு நாள் செல்வதற்கு முடிவு செய்து கொண்டேன்.

மறு நாள் மாலை. வெயிலொன்றும் அதிகமில்லை. குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. கே.எம்.சி.ஹெச்சிற்குச் சென்றேன். கையில் நண்பரின் அம்மா தூங்கிக் கொண்டிருந்த அந்த அற்புதத்தை என்னிடம் தந்தார். அது அழகாக கண் மூடி துயிலிருந்தது. மலர்ந்த ரோஜாவைப் போல. சின்னஞ்சிறு கைகள் மூடி இருந்தன. கமலக் கண்கள் திரையிட்டிருந்தன. வெதுவெதுப்பான துணியில் ஒளி வீசும் மரகதமாய் துயில் கொண்டிருந்தது அந்த உயிர். அங்கு இவருக்கு மட்டும் தான் மதிப்பு. பெற்றவர்களுக்கு அவர் தான் சந்தோஷம். புதிய உயிரை உலகிற்கு தந்த பெரும் மகிழ்வில் அந்தத் தாயும் தகப்பனும் முகம் மலர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சுகப் பிரசவம் ஆகி இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன்.

என் மகளை என்னிடம் கொண்டு வந்த கொடுத்த போது அருகிலிருந்த அம்மாவிடம், ”என்னம்மா இவ்ளோ வெள்ளையா இருக்குது?” எனக் கேட்டேன். ”தண்ணிக்குள்ளே கிடந்துச்சுல்ல, அது அப்படித்தான் இருக்கும். காது மடலைப் பார் அந்தக் கலர் தான்” என்றார்.

என் மகன் பிறந்த போது கண்களை திறந்து கொண்டே தான் இருந்தான். பிறக்கும் குழந்தையின் கண்கள் நன்றாகத் தெரியும் என்றுச் சொல்லி செம்போத்து என்கிற செண்பகக் குருவியைக். கிராமத்திலிருந்து என் நண்பன் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தான். உடனே கிளம்பி விடாதீர்கள். அது கிராமப்புற நம்பிக்கை. அவ்வளவுதான்.


(செண்பகம் என்று அழைக்கும் செம்போத்துக் குருவி)

குழந்தைப் பிறந்ததும் ஒரு வருடத்திற்கு கண்ணை இமை காப்பது  போலக் காப்பாற்ற வேண்டும். அசந்து தூங்க முடியாது அந்தத் தாயால். தவழ ஆரம்பித்தவுடன் மேலும் கவனம் வேண்டும். எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். ஐந்து வருடம் வரை குழந்தையை நோய்களிலிருந்தும், பிற பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்ற ஒரு தாய் படும்பாடு சொல்லிக் கொள்ள முடியாது. இப்படித்தான் காவிரி நீருக்காக தீக்குளித்த விக்னேசையும், எவராலோ கொல்லப்பட்ட இந்தியாவின் இருபது ராணுவ வீரர்களையும் அவர்களின் பெற்றோர்கள் பெற்று வளர்த்திருப்பார்கள்.

ஒரு உயிரைக் கொல்வதை எளிதாகச் செய்து விடுகின்றார்கள். அந்தளவுக்கு மிருக குணம் கொண்டு கொலை செய்து விட்டு என்ன சாதிக்கப்போகின்றார்கள் என்பது தான் விளங்கவில்லை. ஏன் சக மனிதனிடம் இத்தனை வன்மம்? 

டிவி சானல்களில் யாருக்காகவோ அனைவரும் அடித்துக் கொள்கின்றார்கள். விட்டால் லைவ்வாக கொலை கூட செய்து கொள்வார்கள். ஏன் இப்படிப்பட்ட வாக்குவாதங்களைச் செய்கிறோம் அதனால் சமூகப் பெறப்போவது என்ன என்று கூடவா சிந்திக்க மறந்து போனார்கள் இவர்கள்? பெயர்களின் கீழே பார்த்தீர்கள் என்றால் ‘சமூக ஆர்வலர்’ என்று குறிப்பிடுவார்கள். கொடுமை!

மருத்துவமனையில் நண்பரின் அம்மா என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் தன் கிட்னியை தன் மகளுக்கு தானம் கொடுத்திருக்கிறார். அருகில் அவரின் பெண் இருந்தார். 

“உங்களுக்கு என்ன காரணத்தினால் கிட்னியில் பிரச்சினை வந்தது?” எனக் கேட்டேன்.

குழந்தைப் பிறப்பதற்கு தாமதமானதால் ஒரு பிரபலமான சோப்பு, ஷாம்பு, வாசிங் மற்றும் உணவூட்டப் பொருட்களை விற்கும் கம்பெனியின் மாத்திரையைச் சாப்பிட்டால் கரு தரிக்கும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். இந்தப் பெண் குழந்தை பெறும் ஆசையில் மாத்திரையை வாங்கி விழுங்கி இருக்கிறார். கிட்னி போச்சு. இனி வாழ் நாள் முழுவதும் அந்தப் பெண்ணின் நிலைமை. அந்தக் கம்பெனிக்கு காசு கிடைத்து விட்டது. உலகப் பெரும் கோடீஸ்வரக் கம்பெனிகளில் அதுவும் ஒன்றாக இருக்கும்.

கிட்னி டோனரிடம் பலவிதமாய் பேசுவார்களாம். பயமுறுத்துவார்களாம். கிட்னி தானத்தில் உறுதியாக இருக்கின்றார்களா என்று பல சோதனைகளைச் செய்வார்களாம். அதன் பிறகு தான் கிட்னி தானம் நடக்குமாம். 

”நான் மருத்துவரிடம் சொல்லி விட்டேனுங்க. என் இரண்டு கிட்னிகளையும் எடுத்து அவளுக்கு வைத்து விடுங்கள். நான் என் குழந்தைகளுக்காகத்தான் வாழ்கிறேன், அவர்களுக்காக இறப்பது எனக்கு மகிழ்ச்சியே” என்றுச் சொன்னேன் என்றார் அந்தத் தாய்.

(இந்தத் தாய் சொல்லும் மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கும் ரஜினி காந்த் சொன்ன மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா உங்களுக்கு)

Thursday, September 15, 2016

தாய்மை உணர்வுக்கு நிகர் வேறு ஏது?

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழி சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அனுபவ ரீதியில் நான் தகப்பனாக மாறிய பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒரு டிவியில் இறந்து போன தன் குழந்தையின் நினைவாகவே சுடுகாட்டில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு தாய் தினமும் சென்று அழுது புரண்டு கொண்டிருக்கின்றார் என்று டீசர் வெளியிட்டிருந்தார்கள். 

குழந்தையை வயிற்றில் சுமந்து வலியுடன் பெற்றெடுத்து அவஸ்தைகளை அனுபவித்து, நேரம் காலம் பாராது கண் விழித்து, சிறு நீர் கழித்தவுடன் உடை மாற்றி, மலம் கழித்தவுடன் முகம் சுழிக்காது சுத்தம் செய்து கழுவி விட்டு உடைகள் துவைத்து, குளிக்க வைத்து, அழுகையில் அது என்ன அழுகை எனக் கண்டுபிடித்து உணவு ஊட்டி, இரவும் பகலும் ஓயாது பாதுகாத்து வளர்க்கும் தாய்மைக்கு ஈடு இந்த உலகில் ஏது? 

தான் இல்லையென்றால் தன் குழந்தைகளும் இந்த உலகில் துயரப்படும் என்று நினைத்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு சிலர் தங்களோடு தங்கள் குழந்தைகளையும் கொன்று தானும் செத்துப் போகின்றார்கள். இது தாய்மை உணர்வின் அதீத உச்சகட்டம்.

அம்மா, அப்பா இல்லாத பல குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அந்தத் தாய்மை உணர்வின் மகத்துவம் பற்றி. கிடைக்காத அந்த பாசமழையின் அற்புதங்கள் அவர்களின் கண்களின் ஊடாக சோகத்தின் நிழலாகப் படிந்து கிடக்கும். அது அவர்களுக்கு நிரந்தரச் சோகக் குறியீடாகவே இருந்து விடும் அவர்களின் வாழ் நாள் முழுவதும்.

நல்ல ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு விதம் என்றால் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அர்ப்பணிப்பு அந்த உணர்வின் உண்மையை எந்த வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும்?

என்னையும் என் தாய் அப்படித்தான் வளர்த்தார். எல்லாக் குழந்தைகளும் ஓடி விளையாடும் போது தன் குழந்தை மட்டும் தவழ்ந்து செல்வதைப்பார்க்கும் என் தாயின் மன நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கையில் அவர் பட்டிருக்கும் மனத்துன்பத்தின் வீச்சினை என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அவரவர் துன்பம் அவரவருக்கு. ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளவே முடியாது. உதட்டளவில் வேண்டுமானால் துயரப்படுவதைப் போல காட்டலாம். ஆனால் உண்மையில் அது ஒரு நடிப்புச் சுபாவமே.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர் வசிக்கும் வீட்டின் கீழ்புறம் ஒரு குடும்பம் இருந்தது. அங்கு ஒரு பெண் குழந்தையைப் பார்த்தேன். இரண்டு கால்களும் சூம்பி இருந்தன. பாதங்கள் வளைந்து இருந்தன. முதுகுத்தண்டு பின்புறமாக வளைந்து இருந்தது. அப்பெண் குழந்தை நடந்தது. நன்கு பேசியது. அதைப் பார்த்ததும் எனக்குள் வலி பரவ ஆரம்பித்தது. சொல்லொண்ணாத் துன்ப உணர்வில் மூழ்க ஆரம்பித்தேன். 

ஆவணம் கிராமத்தில் எனக்குத் தெரிந்த ஒரு ஊனமுற்ற பையன் சாப்பாடு கிடைக்காமல், சரியாக பராமரிப்பு இல்லாமல் இறந்தே போனான். அவனது தாயும் தந்தையும் இருக்கும் வரையில் அவனைப் பாதுகாத்து வந்தனர். ஒருவரில் இருவர் இல்லாமல் போன பிறகு அவன் பிணமானான். அவன் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பான் என்று நினைக்கையில் மீண்டும் மீண்டும் துன்ப உணர்ச்சி மேலிடுகிறது.

அந்தப் பெண் குழந்தையின் தாயைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார். அவரிடம் சொன்னேன், உங்கள் குழந்தையை தைரியமான பெண்ணாக வளருங்கள் என்றேன். நிச்சயம் சார் அதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன் சார் என்று உறுதி கொடுத்தார். அந்தத் தாய் அப்படித்தான் வளர்ப்பார் என்று நம்புகிறேன். 


(தங்கவேல் மாரியப்பன் - பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்ற சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்)

இதோ இந்தியாவின் மானத்தை ஒலிம்பிக்கில் காப்பாற்றியவர்கள் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளே. வரலாறு சொல்லிக் கொண்டிருக்கும் இனிக் காலம் காலமாக. திறமையும், அர்ப்பணிப்பு மண்டிக்கிடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகளைக் கொடுக்கக் கூட இந்த கார்ப்பொரேட் உலகம் தயங்குகிறது. இன்று இந்தியா அவர்களிடத்தில் தலை வணங்குகிறது. இந்த வீரர்களின் தாய்கள் தான் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் தியாக உணர்வுதான் அவ்வீரர்களை வெற்றி பெற வைத்துள்ளது.

தாய்மை என்பது சொல்லிப் புரிந்து கொள்ள முடியாத வார்த்தை. அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் தன்மை.

இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சித்ரவதைக்கூடமாகவே இருக்கிறது. பள்ளிகளும், கல்லூரிகளும், அரசு அமைப்புகளும் கொடூரங்களைச் செய்து வருகின்றன. 

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் எனக்கு டேட்டா எண்ட்ரி வேலை கிடைத்து இண்டர்வியூக்கு வரச் சொல்லி இருந்தார்கள். அங்கு சென்றேன். கலெக்டரிடம் ஆர்டரைக்காட்டினேன். கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து பணி ஆர்டர் கொடுக்கச் சொன்னார். அதற்கு அவர் யாரிடமோ காசை பெற்றுக் கொண்டு வேறொருவருக்கு பணி கொடுத்து விட்டதாகக் கூசாமல் சொன்னார். ஊனமுற்ற அடையாள அட்டை வாங்கச் சென்றேன். என்னிடமும் பணம் கேட்டார்கள். உங்கள் அடையாள அட்டையும் வேண்டாம் உங்கள் உதவியும் வேண்டாம் என்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைவரின் முன்பும் சத்தமிட்டு அப்ளிகேஷனை கிழித்து போட்டு விட்டு வந்தேன்.

ட்ரெயினில் செல்வதற்கு ஊனமுற்றோர் பாஸ் வைத்திருக்கிறேன். டிக்கெட் பதிவு செய்யச் சென்றால் கோவையிலிருந்த டிக்கெட் முன்பதிவு கவுண்டரில் இருந்த பெண் எரிச்சலடைகிறார். அதைக் கொண்டா இதைக் கொண்டா என்று விரட்டுகிறார் என்றார் என் மனையாள். அவ்வளவு கடுப்பாக இருக்கிறது அந்தப் பெண்ணுக்கு.

வெற்றியடைந்த மாற்றுத்திறனாளிகளைப் பாரட்டக்கூட இவர்களுக்கு எந்த விதத் தகுதியும் இல்லை. வெட்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் மனம் கூசாமல் பாராட்டுகின்றார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகள் கொடுக்க மறுக்கும் தனியார் துறைகளும், ஒதுக்கும் அரசும் இன்று அவர்கள் பெற்ற பதக்கங்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றன. அசிங்க உணர்வு கொஞ்சம் கூட இல்லை. மாற்றுத்திறனாளிகளை வாழவே விடாத சமூகமும், அரசாங்கமும் அவர்களின் வெற்றிக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்கு இங்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை அதற்கான தகுதியும் இல்லை.