குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அஸாஸில். Show all posts
Showing posts with label அஸாஸில். Show all posts

Friday, October 18, 2019

நரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)

அன்பே ராதே...!

எல்லைகளற்ற பிரபஞ்சத்தின் எண்ணற்ற தூசிகளில் ஒரு தூசியான பூமியில் பூத்த கள்ளம் கபடமற்ற ஒரே ஒரு ஜீவன் நீதானடி..!

சத்தங்கள் அற்ற உலகில் வசிக்கும் என் மென்மையான இதயத்தை, உன் புன்னகையால் கீறிச் செல்லும் ஒலியைக் கொண்டவளே...!

உதட்டோரம் நெளியும் சுளிவுகளில் நடனமாடும் புன்னகையை நிரப்பி, பூமியில் நிற்கவே முடியாமல் நிலை தடுமாறும் வகையில் நின்று கொண்டு, உன் மோகனப் புன்னகையால் கோடானு கோடி ஈட்டிகளை, என்னை நோக்கி எரியும் அன்பானவளே...!

உன்னால் உன்மீது காதலால் தகித்துப் பொங்கும் எரிமலையில் உன் அமுத கண்களில் துளிர்க்கும் ஒரு துளி நீரை விட்டு காதலால் அணைத்து முகிழும் அற்புத அழகே...!

பிரவாகத்தில் அமைதியாய் பூக்கும் மலரைப் போல மென்மையானவளே, உன் காதுகளில் அணிந்திருக்கும் அழகான பொன் வேய்ந்த காதணிகள் ஆடும் நர்த்தனம் கண்டு, உள்ளம் சோர்ந்து போனதடி....!

ராதே... உன் பெயர் தானடி காதல்... நீதான் காதல்... காதலில் மூழ்கிப் போய் மூச்சடைத்து பிரஞ்கையற்றுப் போய்க் கொண்டிருக்கிறேனடி....!

என்னை உன் காதலால் நிரப்பி விட்டாயடி மோகனத்தில் மோனத்தைக் காட்டும் தேவியே...!

காதல்...! காதல்...!! காதல்...!!!

ராதே...! ராதே...!! ராதே...!!!



* * *

வில்லன் இப்படி காதலில் மூழ்கி விட்டால், இந்த நாவல் எப்படி நகரும்? வாசகர்களே, நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். நாவல் ஆசிரியன் இந்த நாவலை எழுதிக் கொண்டே செல்வானென்று. ஆனால் அவனுக்கும் இந்த நாவலின் கதாபாத்திரங்களுக்கும் இடையில் சச்சரவுகள் எழும்பி விட்டதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் அல்லவா? கதாபாத்திரங்கள் ஆசிரியருடன் முரண்பாடு கொண்டால் என்ன ஆகும்? நாவல் வடிவு பெறாதே? கவலையாய் இருக்கிறேன் நாவலாகிய அடியேன்.

அஸாஸில் காதலில் மூழ்கிப் போனான். உலகம் இனி எப்படி இயங்கும்? என்னை இப்படி புலம்ப விட்டு விட்டானே ஆசிரியன். நாவல் இனி எப்படி உருவாகும் எனத் தெரியவில்லை. 

இந்தப் பாழாய்ப் போன காதல் அஸாஸிலுக்கு ஏன் வந்தது? ராதேயின் மீது காதல் கொண்டு, பித்துப் பிடித்தவன் போல அலைகிறான். ஏற்கனவே இந்த ராதே, இன்னும் கண்ணனை அடையாமல், ஏங்கி யமுனா நதிக்கரையோரம் அலைந்து கொண்டிருக்கிறாள். அவளை இவன் காதலிக்கிறானாம். என்ன கன்றாவியோ இது?

* * *

Wednesday, July 17, 2019

நரலீலைகள் - அஸாஸில் (4)

ராதேயின் காதலன் நான். 

என் பெயர் அஸாஸில் என்று உம்மையும் என்னையும் படைத்த அந்தக் கடவுள் என்னிடம் சொன்னார். 

நான் ஹீரோ அல்ல. வில்லன். இந்த நரலீலைகள் நாவலில் ஹீரோ இல்லை. வில்லன் தான் இருக்கிறான். அது தான் நான்.

எனக்கு எந்த செண்டிமெண்டும் கிடையாது. என்னால் இந்த உலகில் வெறுக்கும் ஒரே ஒரு ஆள், ‘கடவுள்’.

அவர் படைத்த மனிதர்களுடன் விளையாடுவது, முடிவில் அவர்களாலேயே அவர்களை அழிப்பது மட்டுமே எனது வேலை. உங்கள் ‘அவனும்’ என்னை என்னென்னவோ செய்து பார்க்கிறார். அவரால் என்னை அழிக்க முடியவில்லை.

நீங்கள் இருக்கும் வரையில் நானும் இருப்பேன். கடவுள் என்கிறவர் இருக்கிற வரையில் நானும் இருப்பேன். 

* * *

அஸாஸில்....! 

உங்களை அழிக்கும் கர்ண கடூரமான, இரக்கமே அற்ற, மனிதாபிமானம் அற்ற, அரக்கனை விட கொடூரத்தின் வில்லன் அஸாஸில்.

உங்கள் மனதுக்குள் பொதிந்து கிடக்கும் ஒவ்வொரு ரகசியங்களும், உங்களைப் படைத்த ‘அவனுக்கு’ தெரிந்ததை விட எனக்கு நன்றாகத் தெரியும். 

ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன். 

பயத்தால் நா உலர்ந்து, முகம் வெளிறி, ரத்தம் சுண்டி நடுங்கப் போகின்றீர்கள் நீங்கள்.

மனிதர்களை நான் எனது மிகச் சிறந்த பல ஆயுதங்களால் வதைக்கிறேன். அதன் மூலம், உங்களின் ‘அவன்’ படைத்த மனிதர்களைக் கொல்கிறேன். அழிக்கிறேன். ...!  உங்களை அழிப்பதற்கு நான் வைத்திருக்கும் கோடானு கோடி ஆயுதங்களில் ஒரே ஒரு ஆயுதம் எது தெரியுமா?

ஹா.....! ஹா.......!



ராதே....! 

உன் பெயரை உச்சரிக்கும் போது உன் மீது காதல் கொண்டு மனம் உன் மத்தம் கொள்கிறதடி. ராதே...! ராதே...!

என்னைக் கொல்லாமல் கொல்கிறதடி உன் மீது நான் கொண்ட காதல்...!

எவருக்கும் மண்டியிடாத இந்த அஸாஸில் உன்னிடம் மயங்கிக் கிடக்கிறேன் ராதே....!

ஓடோடி வா...! 

உன்னைப் பார்க்காத கண்களும் அருவியென கண்ணீரை, என்னைக் கேட்காமலே பொழிகிறதடி! நீ வரும் போது, கண்ணீர் மறைத்து விடக்கூடாது என அடிக்கடி கண்களைத் துடைத்து, துடைத்து சிவப்பேறிக் கிடக்கிறதடி ராதே...!

ராதே...!!


விரைவில் தொடரும் 

ராதேயின் அறிமுகம் விரைவில் வரும். அதுவரை நீங்களும் காதலில் மூழ்கிக்கிடப்பீர்களாக. 

காதல்...! காதல்...! காதல்...!! 
காதல் போயின்....
அஸாஸில்......!

ஹா....! ஹா......!