குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, November 15, 2016

கைகொடுத்த பத்ரகாளியம்மன்

இந்தியாவெங்கும் புரோக்கர்கள் ”சார் இத்தனை கோடி இருக்கிறது எத்தனை பர்செண்டேஜ்” என்று ஆரம்பிக்கின்றார்கள். பணம் வைத்திருப்பவர் யார்? பணம் மாற்றிக் கொடுப்பவர் யார்? என்று எவருக்கும் தெரியாது. ஆனால் கோடிகளில் தான் பேசுகின்றார்கள். பெட்டிக்கடை முதற்கொண்டு மாலில் இருக்கும் காஃபிக் கடை வரைக்கும் இதுதான் நான்கு நாட்களாகப் பேச்சு. என்னிடமும் பல நண்பர்கள் ”என்னப்பா இப்படி மோடி செஞ்சுட்டாரு” என்று வருத்தப்பட்டார்கள்.

மோடி தான் இரண்டு மாதங்கள் டயம் கொடுத்தார் அல்லவா? அப்போதே சூதானமாக சிந்திக்க வேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு இப்போது ’செஞ்சுட்டாருன்னா என்ன அர்த்தம்?’ என்றால் பதில் பேச்சு வரவில்லை.

ஒரு சிலர் என்னதான் வழி? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த வழியும் இல்லை என்று அவர்களுக்கு புரியும் படி பாடம் எடுத்த போது வலிக்காத மாதிரி பேசினார்கள்.

வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் படா குஷியில் இருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். மஞ்சப்பையில் ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி வீடு வீடாக அலைந்து கொண்டிருக்கின்றாராம். வீட்டுக்காரருக்கு உடம்பு முடியவில்லையாம். ஹாஸ்பிட்டல் செலவுக்குப் பணமில்லையாம். ”வீட்டுக்காரர் என்ன வேலை செய்கிறார்?” என்று கேட்டேன். ”பத்திரப்பதிவாளராக வேலை செய்கிறார்” என்றார். 

”விதி வலியது” என்றுச் சொல்லி சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருந்தார். ”நன்றாகத் தூங்கினேன் தங்கம்” என்றார் தொடர்ந்து. ”ஏன் இத்தனை நாளா தூங்கவில்லையா?” என்ற போது ”பக்கத்து வீட்டு அரசு அதிகாரி கோடி கோடியாய் சம்பாதிக்கின்றான், அவனின் நண்பரான நானோ அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறேனே என்று எல்லா கடவுள்களையும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி முடிக்கையில் விடிந்து விடும் தங்கம் என்றார்” சிரிப்புடன். 

”இப்போது அந்தக் கடவுகளை தினமும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன். திட்டத்தான் நேரமாகிறது. பாராட்ட ஒரு நிமிடம் கூட ஆவதில்லை” என்றார் நண்பர். சூடாக காஃபியைப் பருகி விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குக் கிளம்பினார்.

இன்னொரு நண்பர் வீட்டுக்கு வந்து ”சில்லறை கொடுங்க” என்றார். ”இன்னும் பிரிண்ட் வரவில்லை, வந்ததும் கொடுத்து விடுகிறேன்” என்றேன். கடுப்பில் ”வண்டியில் பெட்ரோல் தீர்ந்துடுச்சுப்பா, நூறாவது கொடேன்” என்றார். அம்மணியிடம் திரும்பினால் எரிமலைகளைக் கண்களில் பார்க்க வாயை மூடிக் கொண்டேன். ”கையில் எவ்வளவு இருக்கு?” என்றேன். ஆயிரமென்றார். ”சரி என்னுடன் வாருங்கள்” என்றுச் சொல்லி இருவரும் நண்பரின் பெட்ரோல் பங்குக்குச் சென்றோம். நண்பரை ”இங்கேயே இரும்” என்று சொல்லி விட்டு, நான் மட்டும் பங்குக்குச் சென்று 200 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டேன். ”மீதி நாளை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சத்தமாகச் சொன்னவர் கையில் 800 ரூபாயைச் சில்லரையாகக் கொடுத்தார். சத்தம் காட்டாமல் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். நண்பரிடம் கொடுத்தால் ”மீதிப்பணம் எங்கே?” என்று அதிர்ந்து போய் கேட்டார். ”கமிஷன்” என்றவுடன் “நீங்களுமா?”என்றுக் கேட்டு சோகமானார். விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு அழைந்து வந்து மனையாளிடம் 200 ரூபாயை வாங்கிக் கொடுத்தேன். 

”இதே பங்கில் பத்து நிமிடத்துக்கும் முன்பு நான் கேட்டால் இல்லையென்றார்களே?” என்றார். ”என்ன செய்கிறேன் பார்?” என்று கோபமாக கிளம்ப ”அவங்க நாளைக்கு தான் பாக்கி தருகிறேன் என்றார்கள்” என்றேன். ”அப்போ இது?” என்றார். “அதான் இது?” என்றேன். முறைத்து விட்டு கிளம்பினார். வீதியில் போற ஓணானை வேட்டிக்குள் விடுவது என்பது இதுதான். பழமொழியை அனுபவித்த சந்தோசத்தில் நம்ம விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

வங்கியில் பணம் எடுக்க முடியாது. வரிசை கட்டி நிற்க வேண்டும். நம்மிடம் இருக்கும் பணத்தையே நம்மால் எடுக்க முடியவில்லை ஆனால் வீட்டுச் செலவுக்கு குறைந்தது தினமும் 100 ரூபாயாவது வேண்டும். கையிலிருந்த சில்லறை எல்லாம் முடிய வேறு வழி இன்றி குல தெய்வம் பத்ரகாளியம்மன் தான் கை கொடுத்தார். அவ்வப்போது நூறு, ஐம்பதாக போட்டு வைத்தது இன்றைக்கு உதவுகிறது. அதற்காக அவருக்கு வட்டி கொடுத்து விடலாம் என்று முடிவு கட்டிக் கொண்டு கையேந்தி நிற்கையில் என்னை எடுத்துக்கோ என்று கையில் வந்து விழுந்தது அவரின் பணம். 

துன்பம் வரும் போது  கடவுள் தான் கை கொடுப்பார் என்பதை மோடிஜியால் அறிந்து கொண்ட நேரம் இது. 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.