குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 28, 2016

ஜெயமோகனின் அறச்சீற்றம்

கடந்த வாரம் என்று நினைக்கிறேன். வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில் ஒரு பையனை இரண்டொருவர் சேர்ந்து அடித்து துவைத்தனர். பார்த்த எனக்கு கடும் கோபம் ஏற்பட்டு எனது நண்பர்களை அழைத்து என்ன செய்யலாம் என்றுக் கேட்டேன். பல இடங்களில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதற்கென முஸ்தீபுகளைச் செய்த போது அது முடிந்து போன சமாச்சாரம் என்ற தகவல் கிடைத்தது. ஆசிரியர்கள் பணி மாறுதலும் அந்த பசங்களுக்கு டிசியும் கொடுக்கப்பட்டதாகவும், அடி வாங்கிய பையன் விரும்பினால் இருவரின் மீது வழக்குப் பதியலாம் என்ற செய்தி கிடைத்ததும் தான் மனசு சற்று ஆசுவாசப்பட்டது. இது ஒவ்வொரு மனிதனுக்குள் உண்டாகும் அறச்சீற்ற உணர்வு. எனக்கு ஏற்பட்டது அந்த அடி கொடுத்த பையனின் மீதான கோபம் இல்லை. அங்கு தர்மம் மீறப்படுகிறது. அதனால் சீற்றம் உண்டாகிறது. அவ்வளவுதான் விஷயம். நீ யார் கோபப்பட? உனக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அதற்கும் ஒரு பதில் இருக்கிறது என்னிடம்.

சாலையில் அடிபட்டுக் கிடப்போரைக் கண்டு கொள்ளாமல் சென்றால் மனிதனா நீ என்றெல்லாம் பேசுகின்றோமே அது என்ன விதத்தில் சரி? சிலர் ஓடோடி உதவி செய்கிறார்களே அதைப் போலத்தான் கடும் கொடும் செயல் நடக்கும் போது மனிதர்களுக்குள் உண்டாகும் கோபம். அதே போலத்தான் ஜெயமோகன் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

இது போன்ற வீடியோக்களைப் பார்த்ததும் படபடப்பும் நமக்குள் உறங்கிக் கிடக்கும் ஹீரோயிசமும் வெளி வந்து விடும். 

இதே போலத்தான் ஜெயமோகனும் செய்திருக்கிறார். அவருக்கு தன் கோபமானாலும் சரி, மகிழ்ச்சியானாலும் சரி, எழுதி விடத்தான் செய்வார். அவரின் அந்தக் கோபம் அந்தப் பெண்மணி மீது உண்டானது என்று முடிவு செய்ய வேண்டியதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்.

வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளால் நாட்டுக்கு எவ்வளவு இழப்புகள் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. நேற்று கூட சுப்ரீம் கோர்ட்டில் 85,000 கோடி ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு இதுவரை கடன் கட்டாமல் தவிர்த்து வரும் பெரும் தொழிலதிபர்களைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறது நம் மத்திய அரசு. வங்கிப் பணம் மக்களுடைய பணம் அல்லவா? வங்கிகள் திவாலானால் மனிதன் வங்கி மீது கொண்டிருக்கும் கடைசி நம்பிக்கை கூட சிதறுமானால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஹர்சத் மேத்தா என்ன செய்தார்? ஏதாவது நடந்ததா? பெரும் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் வங்கி மேலாளர்கள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றனவே அதையெல்லாம் யாரால் என்ன செய்து விட முடியும் வேடிக்கை பார்ப்பதைத் தவிர.

வங்கிகள் சாதரண மனிதனின் நம்பிக்கை. பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட காசைக் கொடுத்து வைத்துப் பின்னர் திரும்ப வாங்க முடியுமா என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால் வங்கிக்கு நம்பிச் செல்கிறார்கள். இந்த நம்பிக்கைக் குலையும் படி நடந்து கொள்வது சரி என்கின்றார்களா? 

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவோரால் எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல், மக்கள் மீது அலட்சியம். அதிகாரத்தைக் கொடுத்தவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஒன்றையே வேலையாக வைத்துள்ளார்கள். 

ஜெயமோகன் அந்தப் பெண்ணின் வேலை செய்யும் வேகத்தினைப் பார்த்துதான் கோபத்தில் எழுதி இருப்பார். இன்னுமா நாம் ஏமாற வேண்டும்? இப்படியுமா ஒரு அரசு அலுவலர் வேலை செய்வார்? என்ற உடனடிக் கோபம் தான் அது. அதற்காக அவரை இரண்டு நாட்களாக வறுத்து எடுப்பது சரியல்ல. கடந்து செல்ல வேண்டிய விஷயம் இது. ஜெயமோகனுக்கு உண்டானது அறச்சீற்றம். அது அழுக்கு அல்ல.

சிவா தன் பிளாக்கில் எழுதி இருந்ததை இங்கு மீள் பதிவிடுகிறேன். ஏனென்றால் அதுதான் உண்மை. 

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.

 வேலை வாங்கும்போது வேலையை வாங்கு.. 

ஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம்.  உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்.. 

ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.


நான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட…   உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.

இவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை.. 

ஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்.. 

குறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது.  பொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ 

வீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..

அதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,

இரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் ? வங்கிப்பாதுகாப்பு கேள்விக்குறி.

அதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன ? முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.

BSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.

நன்றி :  நிகழ்காலத்தில் சிவசுப்ரமணியன்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.