குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, October 30, 2016

சன் டிவியின் தமிழ்மாலை

வீட்டில் வீடியோகான் பிளாக் அன்ட் வொயிட் டிவி இருந்தது. வெள்ளிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்கத்து வீட்டுக்காரர்கள், குழந்தைகள், நண்பர்கள் என்று வீட்டில் ஒளியும் ஒலியும் பார்க்க வருவார்கள். தூர்தர்சனில் நள்ளிரவில் தமிழ் படம் போடுவார்கள். கிட்டத்தட்ட 20 பேராவது வருவார்கள். இப்படியே சென்று கொண்டிருந்த நாளில் சன் டிவி தன் முதல் டிஜிட்டல் பயணத்தைத் துவக்கியது. ஊரில் பெரிய கொடை வைத்து கேபிள் டிவி கனெக்‌ஷன் கொடுத்தார்கள். மாமாவை நச்சரித்து கேபிள் வீட்டுக்கு வந்து விட்டது. 

பனிரெண்டு மணி வாக்கில் தான் சன் டிவி ஆரம்பிக்கும். அதுவரை திரையில் சினிமா பாடல்கள் மட்டும் தான் ஒலிக்கும். அந்த மணியிலிருந்து இரவு வரை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசைவதே இல்லை. சாப்பாடு தூக்கம் எல்லாம் டிவியின் முன்னால் தான். காணாததைக் கண்டால் விட முடியுமா? ஒரே அதிசயம் தான். துல்லியமான படம். தூர்தர்சனின் ஈக்கள் மொய்க்கும் ஒளிபரப்பினைப் பார்த்துச் சலித்துப் போன மனதுக்கு இந்தத் துல்லியம் மாபெரும் மகிழ்ச்சியைத் தந்தது. 

அனுபவ் பிளாண்டேஷன்ஸ் விளம்பரங்கள் தூள் பரக்கும். ரமேஷ் கார்ஸ் விளம்பரம் கிளப்பும். என்னிடம் வாங்க என்ற அழைப்பு அப்போது பிரபலம். தீபாவளி நாட்களில் சன் டிவி போட்டிகள் நடத்தி பரிசுகளை ஒவ்வொரு பிரபலமான ஊர்களின் கடைகளில் பெற்றுக் கொள்ளச் சொன்னது. ஊரெங்கும் சன் டிவி. சன் டிவியின் பிரபலமான வர்ணனையாளர் ரபி பெர்னாட் அப்போது பிரபலம். பெப்சி உங்கள் ஜாய்ஸ் உமா, பல நிகழ்ச்சிகளைத் தொகுந்து வழங்கும் உமா பத்மநாபன் பெண்களிடையே பிரபலம். சிலோனின் அப்துல் ஹமீது நடத்திய குடும்ப நிகழ்ச்சி என கிளப்பியது சன் டிவி.

அடுத்து அடுத்து பல சேட்டிலைட் சேனல்கள் வந்தாலும் சன் டிவியின் ரீச்சை அவர்களால் தடுக்க முடியவில்லை. சித்தி சீரியல் தமிழ் மக்களின் ரசனையைப் புரட்டிப் போட்டது. சினிமாக்கொட்டகைகள் காற்று வாங்கின. பத்திரிக்கைகள் படிப்பதும், உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவதும், அக்கம் பக்கத்து வீடுகளில் உறவாடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போக ஆரம்பித்தது.

டிஜிட்டல் வழி தகவல் சாதனம் - பேஜர்

1997 களில் என்று நினைவு. முதன் முதலாக பேஜர் வந்தது. இடுப்பு பெல்டில் பெட்டி போல வைத்துக் கொண்டு திரிந்தார்கள். அதன் பிறகு தமிழில் பேஜர் வந்தது. பின்னர் மொபைல் போன் வந்தது. பிபிஎல் என்று நினைக்கிறேன். பனிரெண்டு ரூபாய் அவுட்கோயிங்க் கால் என நினைக்கிறேன். பல் வேறு கம்பெனிகள் கட்டணத்தைக் குறைத்துக் கொண்டே வந்ததால் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்தன. அது  ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது. தரை வழி போன்கள் மதிப்பிழந்தன. அருகில் அமர்ந்திருக்கும் சகோதரனிடம் கூட பேசவிடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டது மொபைல் போன்கள்.


(தினம்தோறும் புதுப்புது வடிவங்கள் எடுத்து மக்களின் பாக்கெட்டில் பெரும் ஓட்டைகளைப் போட்டுக் கொண்டிருக்கும் நவ நாகரீக கொள்ளையர்களாக மாறிப்போன மொபைல் போன்களின் ஆரம்ப வடிவம் )

இன்றைக்கு சாட்டிலைட் டிவிக்களின் ஆதிக்கமும், மொபைல் போனின் ஆதிக்கமும் உலகை துவம்சம் செய்து வருகின்றன. சக மனிதர்களிடையே இருந்த நேசத்தைக் குறைத்து விட்டன. ஒவ்வொரு மனிதனும் தனித்தீவாக மாறி வாழ ஆரம்பித்து விட்டான்.

சன் டிவி தன் அதி வீச்சால் ஒரு முறை ஆட்சியையே மாற்றியது.பின்னர் அமைச்சரை உருவாக்கியது. இன்றைக்கும் கோடிகளில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவையே ஊழல் பிரச்சினையில் ஆட வைத்தது. சன் டிவியின் பிரபலமாகி ஆட்சி மாற்றத்திற்குக் காரணமான ரபி பெர்னாட் இப்போது ஜெயா டிவியில் இருக்கிறார். அனுபவ் பிளாண்டேசன், ரமேஷ் கார்ஸ் மோசடிகள் நடந்தன. பல மக்கள் பாடுபட்ட சேர்த்த பணத்தை இழந்தனர். இப்படி ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து கொண்டே இருக்கிறது.

மொபைல் போன் சந்தையோ உலகையே அசைக்கின்றன. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கத்தை தேர்ந்தெடுக்க கூடிய வல்லமைக்கு இன்றைய மொபைல் உலகம் மாறி விட்டது. 

பத்திரிக்கைகள் தங்கள் முகத்தை மாற்றிக் கொண்டன. காலத்துக்கு ஏற்ப மாறினால் தான் தொழில் செய்ய முடியும். அச்சுப்பத்திரிக்கைகள் இன்றைக்கு சாட்டிலைட் சேனல்களாக மாறி விட்டன. மொபைல் ஆப்களில் செய்திகள் வெளியிடுகின்றன. எல்லாம் மாறி விட்டன.

ஆனால் இத்தனை நன்மைகள் நடந்தாலும் மக்களின் வாழ்க்கை தனிமைப்படுத்தியதாக இந்த இரண்டும் மாற்றி விட்டன. ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் டிவியின் முன்பு முடங்கிக் கிடக்கின்றார்கள். சிறார்கள் கார்ட்டூன் சேனல்களில் முடங்கி விட்டனர். படிப்பது குறைந்து விட்டது. மூளைகள் சேட்டிலைட் சேனல்களில் அடகு வைக்கப்பட்டு விட்டன. படிப்பாளிகள் கூகிளில் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஃபேஸ்புக்கில் அரட்டை அடித்தல் ஆரம்பித்து கொலை வரைக்கும் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது. ஆனால் மனிதன் அழிய ஆரம்பித்திருக்கின்றான். மேலும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்ல விரும்பவில்லை. புரிந்து கொள்ள முயலுங்கள். ஒவ்வொரு நாளும் மொபைல் போனில் பேசுவது எவ்வளவு நேரம்? டிவி பார்ப்பது எவ்வளவு நேரம்? என்று கணக்கெடுத்துப் பாருங்கள். அதிர்ந்து போய் விடுவீர்கள். நாம் பேசுவது ஒவ்வொன்றும் முக்கியமானவையா? அவசியம் கருதி தான் பேசுகின்றோமா? என்று யோசியுங்கள்? ஆச்சரியப்படுவீர்கள். 

ஆகவே டிவி பார்ப்பதையும், மொபைலில் பேசுவதையும், வாட்சப்பில் மெஜேஜ் பார்ப்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டால் உங்களுக்குள் நிகழும் அற்புதங்களை நிச்சயமாக உணர்வீர்கள். தேவையென்றால் பயன்படுத்தலாம் தப்பில்லை. அதையே அதிகமாகப் பயன்படுத்துவது என்பது தேவையற்றது அல்லவா?

என் பள்ளிப்பருவ தோழனின் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று வந்தேன். சுவையான சமையல் உண்டு நண்பனின் குடும்பத்தோடு அளாவளாவி மகிழ்வோடு  வீடு வந்து சேர்ந்தோம். விடிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு பிள்ளைகளுக்கு இனிப்புகளைக் கொடுத்து விட்டு கோவிலுக்குச் சென்று வந்தேன். பின்னர் அக்கம்பக்கத்து வேற்று மத வீடுகளுக்கு இனிப்பும் பலகாரங்களைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தார் மனைவி. பிள்ளைகள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்கள்.

மாலையில் கொஞ்சம் பட்டாசுகளை வெடித்து விட்டு சிற்றுண்டி உண்டு விட்டு தீபாவளி நாளை கொண்டாடினோம். இதற்கு முக்கியமாக நான் செய்தது தீபாவளி அன்று டிவியை முற்றிலுமாக அனைத்து விட்டேன். மொபைல் போனையும் தான். 

ஆகவே நண்பர்களே, டிவியையும், மொபைல் போனையும் அவசியம் தேவையென்றால் உபயோகியுங்கள். இல்லையென்றால் தூர வைத்து விடுங்கள். அவை உங்களின் நேரத்தையும் மகிழ்ச்சியையும் கொன்று கொண்டிருக்கின்றன.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.