குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, October 13, 2016

சிவகார்த்திகேயனின் அழுகை

அண்ணா, சிவகார்த்திகேயன் மேடையில் அழுது விட்டார் பார்த்தீர்களா? என்று போனில் ஒரு சினிமா நண்பர் அழைத்து ஆதங்கப்பட்டார். கிட்டத்தட்ட 32 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் அவர். மிக நல்ல கதை சொல்லி. ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன. அவர் 12 மணி நேரம் கதை சொல்வார். அந்தளவுக்குத் திறமைசாலி. ஆனால் இதுவரை ஒரு படம் கூட அவரால் இயக்கமுடியவில்லை. காரணம் அவருக்கு அந்த வித்தை தெரியவில்லை. போன் போட்டு சிவகார்த்திகேயனுக்காக பேசுகிறார். இதனால் அவருக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் யோசித்திருந்தால் போன் செய்திருக்கமாட்டார்.

சிவகார்த்திகேயன் ஏன் அழுகிறார்? எங்கே நாம் அடுத்து அடுத்து கோடிகளில் சம்பாதிக்க முடியாதோ என்ற ஆதங்கத்தில் அழுகிறார் விஷயம் அவ்வளவுதான். புரிந்துகொள்ள முயலுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டார். கமல்ஹாசன் கூட கண்ணீர் சிந்தினார். ஏனென்றால் அவரின் பிசினஸுக்குப் பிரச்சினை. அதனால் அழுதார். இதில் நமக்கு என்ன பிரச்சினை என்று எவரும் சிந்திப்பதில்லை.

இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? சிறிய தொழில் செய்பவன் கூட தன் சக தொழில் போட்டியாளரிடம் தோற்றுப் போகின்றானே அவன் என்ன அழுது கொண்டா இருக்கின்றான்? இல்லை பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றானா? இல்லையே? தொழில் போட்டியில் பல இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும். அதைச் சமாளித்துதான் வெற்றி பெற வேண்டும். உடனே மீடியாவில் அழுக ஆரம்பித்தால் தினம் தோறும் நொடிக்கு நொடி அழுகாட்சிகளையே மீடியாக்கள் காட்டிக் கொண்டிருக்க நேரிடும். இதெல்லாம் எதற்கு? 

இதெல்லாம் புரியும் அளவுக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே அரசியலைத்தான் எழுத்தாளர்களும் செய்கின்றார்கள். எழுத்தாளர்களில் கூட சினிமாத்தனம் இருக்கிறது. ஜெயமோகன் சாரு நிவேதிதா என்று எழுதுகின்றார்கள். 

இந்த அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த அரசியல் என்று தெளிந்து கொள்ள வேண்டும். தனிமனிதப் பெருமை பேசும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும், இலக்கியவாதிகளைப் பற்றி யும் தெளிவறப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களின் அரசியல் நம் இரக்க குணத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி நம்மிடமிருந்து பணம் பிடுங்க செய்யும் மாயாஜால வித்தை. அரசியல்வாதி அதிகாரத்தை அடைந்து பணம் சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றான். எந்த அரசியல்வாதியும் தன் சொத்தை விற்று மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழவும், அதிகாரத்தை அனுபவிக்கவும், அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் தான் அரசியலுக்கு வருகிறான். செலவு செய்கிறான்.

எழுத்தாளர்கள் பணமும் புகழும் சம்பாதிக்கத்தான் எழுதுகின்றார்கள். சமூகப் பிரக்ஞை, வரலாறு என்று பேசி மாய்மாலம் செய்வார்கள். 

சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்குள் வருகின்றார்கள். ஹீரோயின் இல்லையென்றால் ஹீரோக்கள் சினிமாவுக்கே வரமாட்டார்கள். 

பத்திரிக்கையும், சினிமாவும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவை மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை. மக்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையப் போட உருவாக்கப்பட்ட மாயவலைகள். சினிமா ஒரு பக்கம் நம்மிடமிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அரசியல் வரிப்பணமாக உறிஞ்சிக் கொள்கிறது. இவர்கள் இரண்டு பேரையும் இணைத்து பத்திரிக்கைகள் தர்ம நியாயம் பேசியே கண்ணுக்குத் தெரியாமல் உறிஞ்சிக் கொள்கின்றார்கள்.

விஷயம் அவ்வளவுதான். ஒரு புள்ளி மட்டுமே இது. 

ஒரு விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசியலில் தூய சேவை செய்கின்றவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். எழுத்தாளர்களில் பலர் உலகமக்களுக்காக உண்மையாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிக்கையாளர்களில் பலர் உண்மையின் சொரூபமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவரையும் நமக்குத் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இங்கு தான் அரசியல் நடக்கின்றதே?

ஆனால் சினிமா அதுவும் அல்ல இதுவும் அல்ல. சினிமாவில் உறிஞ்சப்படுதல் மட்டுமே நடக்கின்றது. அந்த சினிமா அரசியலையும் உருவாக்குகிறது. அடிமைத்தனத்தில் சினிமா ஒரு விதம். நான் அவரின் ரசிகன் என்றுச் சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை சொல்பவனுக்கு இருக்கிறது என்று எவரும் யோசிப்பதில்லை. இந்தப் பூமிப்பந்தில் சினிமாவைப் பற்றியும், சினிமாக்காரர்களைப் பற்றியும் தெரியாதவர்கள் ஐந்து பர்செண்டேஜ் இருக்கலாம். மீதமுள்ளவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் சினிமாவில் சென்று சேர்கிறது. 

ஒரு சாதாரண போர்ன் நடிகை 100 கோடிக்கு நகை வைத்திருக்கிறார். அவளின் படத்தைப் பார்ப்பவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைக்கு பதினைந்து கோடி சம்பளம் பெறுகிறார் என்று மீடியாவில் பேசப்படும் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகனின் பாக்கெட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. ஆனால் சிவகார்த்திகேயன் அழுகிறார். 

யாருக்காக அழுகிறார்?

ரசிகனுக்காக எவரும் அழுவதில்லை. ரசிகன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அழுகின்றார்கள். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.