குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கந்தசாமி. Show all posts
Showing posts with label கந்தசாமி. Show all posts

Saturday, October 11, 2008

கந்தசாமி முத்துவைக் கலங்க அடித்த கதை

முக்கியமான வேலையாக வெளியில் சென்ற போது எதிரே வண்டியில் கந்தசாமி.

”எங்கேப்பா தங்கம்?”

“வண்டி சரி பண்ணனும், அதான்“ இழுத்தேன்.

”சரி நானும் வருகிறேன்“ சொல்லியபடி என்னுடன் மெக்கானிக் ஷாப்புக்கு வந்தார்.

மெக்கானிக் முத்து தீபாவளிக்கு வாங்கிய பேண்ட் சர்ட்டினைக் காட்டினார். மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்தவனாகிய அடியேன் வழக்கம்போல விலை பற்றிக் கேட்க,

“ஜீன்ஸ் 1200, சர்ட் 800 “ என்றார் முத்து.

அசந்து போனேன். 1200 எனது ஒரு மாத நெட் வாடகை. 800 ஒரு மாத மளிகை சாமான் பட்ஜெட். கந்தசாமி என் முகத்தைப் பார்க்க, நானும் பார்க்க பெருமூச்செறிந்தேன்.

”தங்கம், உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” வில்லங்கத்தை அங்கேயே ஆரம்பித்தார் கந்தசாமி.

ஏதாவது வில்லங்கமா சொல்லி ஏதாவது பிரச்சினையைக் கொண்டு வந்து விடப்போகிறார் என்றெண்ணி பயந்து கொண்டே ஈனஸ்வரத்தில் “ சொல்லுங்க”

”இந்த ஜீன்ஸ் விலை 300 ரூபாய் இருக்கும். சர்ட்டின் விலை 250 ரூபாய் இருக்கும். ஆனா பாரு, 1450 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குறாங்க மக்கள்” என்றார்.

அதிர்ச்சியாகி ”என்ன கந்தசாமி, ஒரேயடியாய் கபடி ஆடுறீங்க” என்றேன்.

இதைக் கேட்ட முத்துவோ அதிர்ச்சியில் சிலையாகி விட்டிருந்தார்.

”ஆமாப்பா, நான் டெக்ஸ்டைல் துறையில் வேலை பார்த்தது தான் உனக்குத் தெரியுமே. ஐந்து டாலர், எட்டு டாலருக்கு மேலே ஜீன்ஸ் பேன்டெல்லாம் கிடையாதுப்பா. அவ்வளவு தான் அடக்க விலை. வெளி நாட்டுக்கு இன்வாய்ஸ் அனுப்பும்போது பார்த்திருக்கிறேன். சரக்கு அனுப்பும் கம்பெனிக்கு 20% லாபம் சேர்த்துதான் விலை குறிப்பிட்டிருப்பார்கள்”

“அப்போ, 250 லிருந்து 400 வரைதான் என்று சொல்கின்றீர்களா? “ என்றேன்.

”ஆமாப்பா. அவ்வளவுதான் விலை. பிராண்டுக்கு என்று ஒரு விலை சேர்த்து வெளி நாட்டுக்காரன் கொள்ளை கொள்ளையா அடிக்கிறான்கள். நம்ம ஊரு ஜவுளி கடையெல்லாம் நாளுக்கு ஒரு நடிகையை வைத்து விளம்பரம் செய்யுறாங்க. அதுக்கெல்லாம் எப்படி காசு வரும். இதோ இப்படித்தான்”

நம்பமுடியாமல் அவரையே பார்த்தேன்.

முத்துவோ புலம்ப ஆரம்பித்தார். ”அழுக்கு உடையோடு கஷ்டப்பட்டு, ஸ்பேனர் பிடித்து உழைத்துச் சம்பாதிக்கிற காசையெல்லாம் இப்படித் திருடுறாங்களே” என்று புலம்ப ஆரம்பித்தார்.

வந்த வேலை முடிந்த திருப்தியில் கந்தசாமி என்னை மெக்கானிக் ஷாப்பில் விட்டு விட்டு கிளம்பினார்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிவிட்டது முத்துவின் நிலை.

Friday, October 10, 2008

கந்தசாமியுடன்(10.10.2008)

கந்தசாமி என்ற எனது நண்பர். அடிக்கடி விதண்டாவாதமாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சினைக் கேட்டால் ரத்தம் கொதிக்கும்.

ஆனால் நான் அப்படி இல்லை. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டு எனக்கு என்று இருக்க வேண்டுமென அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். என்ன அர்த்தமென்றால், சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்குமாம். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமாம். நடுத்துண்டில் விஷம் ஏதும் இருக்காதாம். அதைச் சாப்பிட்டால் பிரச்சினை இருக்காது. இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் இருக்குமிடத்திற்கு தகுந்த வாறு மாறிக்கொள்ள வேண்டுமென்பது தான். அய்யா அப்படித்தான். ஆனால் கந்தசாமி இருக்காரே அவர் ஒரு விதமான கேரக்டர். வேலை பார்ப்பது ஒரு மில்லில். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். பேச ஆரம்பித்தாப் எப்போதும் மற்றவர்களை குறைச் சொல்லிக்கொண்டிருப்பார். விதண்டாவாதமாக ஏதாவது சொல்லி வைப்பார். வேறு வழி. எனக்கு எழுத வராது என்பதால் அவர் சொன்ன சில விதண்டாவாதங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதி வைக்கிறேன். பிடித்திருந்தால் படித்து வைக்கவும்.

கந்தசாமியிடம் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வளவும் அத்துப்படி. விஷய ஞானமுள்ளவர். அவருக்கு இப்போதைய தலையாய பிரச்சினை மின்சார வெட்டு. என்னைப் பார்க்கும்போதெல்லாம் கொந்தளிப்பார்.

” என்னப்பா இது. இப்படியெல்லாம் பேசுகிறாய் “ என்றால் போதும் தொலைந்தேன். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். எதிர்த்து ஏதாவது சொல்லபோனால் கொலை வெறியுடன் கருத்துக்கள் அம்புகளாய் சீறும். இப்படிப்பட்ட ஆளிடம் நட்புத் தேவையா என்றால் எனக்குத் சொல்லத் தெரியவில்லை. மனிதர் ரொம்ப நல்லவர். பேச்சுதான் ஒரு மாதிரியாய் இருக்கும்.

அப்படித்தான் நேற்று அவரைச் சந்தித்த நேரத்தில், ஒரு விஷயம் சொன்னார். ”தமிழ் சமூகத்திற்கு சுரனையே இல்லை”.

”என்னப்பா திடீரென்று இப்படி பாய்கிறாய் ? “

“ஆமாம் தங்கம். தமிழகம் என்றால் சினிமா. சினிமா என்றால் தமிழகம். சரிதானே ?”

ஏதோ வில்லங்கமாக வரப்போகிறது என்ற யோசனையுடன் ஆமோதித்து வைத்தேன்.

“பின்னே என்னப்பா, கிழவர்கள் காதலையெல்லாம் ரசிக்கிறார்கள் தமிழர்கள். அதுவும் பொருந்தாக் காதல். கிழவனும் குமரியும் “ என்றார்.

“ ஏய்... நீ எங்கே வருகிறாய் என்று தெரிகிறது. இப்படியெல்லாம் சத்தமா பேசி வைக்காதே.. பின்னி பெடலெடுத்து விடுவார்கள்”

சிரி சிரியென்று சிரித்தார். மனதுக்குள் என்னனென்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் மெதுவாக அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்