குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தர்மத்தின் தீர்ப்புக் கதைகள். Show all posts
Showing posts with label தர்மத்தின் தீர்ப்புக் கதைகள். Show all posts

Thursday, December 11, 2008

மந்திரம் கால் மதி முக்கால்

இந்தக் கதையில் வசிய மை பற்றி வந்திருப்பதால் வசிய மை என்ற தலைப்பில் ஒரு பதிவினை தனியாக எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவினை படித்தால் இந்தக் கதை சற்று சுவாரசியமாய் இருக்கும்.

இந்தக் கதையோடு தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நிறைவு பெறுகிறது. காரணம் மனிதர்களின் தவறுகளினால் தான் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது எனவும், எல்லோரும் தர்ம சீலர்கள் ஆகி விட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது எனவும் எனது இங்கிலாந்தில் வசிக்கும் பெண் தோழி ஒருவர் மொபைலினார். அவரின் கருத்துக்காக, இந்தத்தலைப்பில் வரும் கதைகள் இத்தோடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து படித்து வாருங்கள்.

அவருக்கு இரண்டு பெண் மகவுகள். இருவரும் பேரழகிகள். ஊரிலிருப்போரின் பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலும், வாந்தி பேதி எடுத்தாலும் அந்த வீட்டில் ஆஜராகிவிடுவார். மற்றும் இன்னபிற சொல்ல இயலா பிரச்சினைகளுக்கும் இவர் தான் நிவர்த்தி செய்ய வருவார். பிரச்சினை தீருமா என்றால் ”மோ”. (”மோ” என்றால் என்ன என்பதற்கு விரைவில் கட்டுரை ஒன்றினை மேற்கோள் காட்டுவேன். அதுவரை பொறுத்தருள்க)

இதுவுமின்றி இவருக்கு மற்றொரு தொழிலும் இருந்திருக்கிறது. வசிய மை தயாரித்துக் கொடுப்பது. கொடுத்தால் மட்டும் போதுமா ? பலன் கிடைத்ததா என்றால் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு சாகும் வரையில் மவுசு இருந்தது.

ஆண்களுக்கு பெண் வசிய மை கொடுப்பார். பெண்களுக்கு ஆண் வசிய மை கொடுப்பார். இதை விடுத்து இன்னுமொரு காரியமும் செய்து வந்திருக்கிறார். இவரின் மகளை ஊரின் பெரிய பணக்காரி ஒருத்தி விளக்குமாற்றால் அடி பின்னி எடுத்து விட்டார். தடுக்க வந்த இவருக்கும் சேர்த்து அடிகள் கிடைத்திருக்கின்றது. பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். பணம் ஏழையோடு மோதுகிறது என்ற பயம் காரணமாக இருந்திருக்கலாம். இவர் அப்போது ஒரு சபதமிட்டார். உன்னை ஒரு வாரத்திற்குள் பூமியிலில்லாதவாறு செய்து விடுகிறேன் என்று.

சொல்லி ஒரு வாரம்கூட முடியவில்லை. காலையில் நன்றாக இருந்த பணக்காரி சிறிது நேரத்தில் தூக்கில் தொங்கினாள். ஊரே பேசியது. இவர் தான் அவளைக் கொன்று விட்டார் என்று. ஆனால் யாரும் அவரிடம் கேட்கவில்லை. பயம்.. பயம்.
இவர் செய்து வந்த காரியம் என்னவென்று இப்போது புரிந்து விட்டதா?

நாட்கள் சென்றன. இவரின் இளைய மகள் தூக்கில் தொங்கினாள். மூத்த மகளுக்கு பைத்தியம் பிடித்தது. மனைவி இறந்தாள். பேரன் ஒருவன் கிறுக்குப் பிடித்து அலைந்தான். இவருக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இருக்க இடமும் இல்லை. பட்டினியாய் திரிந்தார். தொழிலும் நசிந்தது. படுக்கையில் கிடந்து இறந்தார்.

நான் தான் கொன்றேன்.. நான் தான் கொன்றேன்.... என்று அடிக்கடி முனகிக் கொண்டிருப்பாராம்.

தர்மம் சூட்சுமமானது தானே ?

பின்குறிப்பு : ஆண் வசிய மை தயாரிப்பு பற்றி எழுதவில்லையே என்று படிப்பவர்கள் நினைக்கலாம். பெண்ணை மயக்குவது தான் பெரிய பாடாய் இருப்பதால் பெண்ணைப் (அதாவது ஆணை மயக்கும் வித்தை) பற்றிய கவலை இன்றி இருந்து விட்டனர் போலும். எல்லா ஆண்களும் நடிகர்கள் போலவா இருக்கின்றார்கள் ? இல்லை ஆர்பி ராஜநாயஹம் போல அழகானவராகவா இருக்கின்றார்கள்?

Wednesday, December 10, 2008

கண்ணதாசனின் சப்பைக்கட்டு

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்காவது பகுதியில் தெய்வம் அன்றே கொல்லும் என்ற கதையினைப் பார்த்தோம். சும்மா கதை விடுகிறானென்று படிப்பவர்கள் நினைப்பார்கள். இங்கு, எனக்கு துணையாய் வருபவர் கண்ணதாசன். அவரின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். இந்தச் சம்பவம் தெய்வம் அன்றே கொடுக்குமென்பதற்கு உதாரணமாய் மிளிர்கிறது.

திரையுலகின் ஜாம்பவான் சின்னப்பாதேவர் (பஹ்ரைன் செந்தில் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை) முப்பத்தைந்து வயது வரையில் வறுமையிலும், ஏழ்மையிலும் உழன்ற போதிலும் நேர்மையினைக் கடைப்பிடித்தார். வெற்றிலைப்பாக்கு கடையில் வாங்கிய ஆறு ரூபாய்க் கடனுக்காக கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினான் கடைக்காரன். நிதித் துன்பம் தாங்காமல் மருதமலை கோவிலுக்குச் சென்று முருகனிடம் அழுது புலம்பி விட்டு திரும்பிய போது காலில் இடறிய சிகரெட் பாக்கெட்டினை எத்தியவாறே வந்தவர் ஏதோ நினைத்தபடி பாக்கெட்டை எடுத்து பிரிக்க, உள்ளே இரு சிகரெட்டுகளும், பத்து ரூபாயும் இருந்ததாம். கடன் ஆறு ரூபாய். தெய்வம் கொடுத்தது பத்து ரூபாய். அழுத அன்றே கொடுத்தது தெய்வம்.
தொடர்ந்து கண்ணதாசனே எனது கதைகளுக்கு உதவியாய் வருகிறார். அவரது அந்தக் கட்டுரையில் இருந்து சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

" பாவமாம் புண்ணியமாம் எந்த மடையன் சொன்னான், சொர்க்கமாம் நரகமாம் எங்கே இருக்கின்றன அவை?, பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக் கொள்வோம் பின்னாலே " இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள். நரம்பு தளர்ந்து போன கிழவர்கள் மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை என்று நினைக்கிறார்கள். எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள் என்கிறது கிறிஸ்தவம். மேலும் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்கிறது.

இப்படி எழுதி வரும் கண்ணதாசன் தர்மத்தின் தீர்ப்பு சூட்சுமமானது என்று சொல்லிவருமெனக்கு உதவியாய் கதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். அவரின் வார்த்தைகளிலேயே சற்று சுருக்கமாய்ச் சொல்கிறேன்.

மாயவரத்திலே வாழ்ந்து வந்த விதவையினை ஐந்து பேர் சேர்ந்து கற்பழித்தனர். மூச்சுத் திணறி இறந்த பிறகும் பிணத்தையும் ஒருவன் கற்பழித்தான். நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் ஏழு பேர். ஏழு பேருக்கும் மறுநாள் தூக்கு. ஆறுபேர் அழுது துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் மட்டும் சலனமேயில்லாமல் அமைதியாக இருந்தான். நானும் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அமைதியாக இருந்த மனிதனிடம் பேச்சுக் கொடுத்தோம். அவன் சொன்னான்.

"ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதவாறு அலிபி தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று, நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன் தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்து விட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததினால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கனவே செய்த கொலைக்களுக்காக சாகப் போகிறேன். "

அவன் சொல்லி முடித்த போது "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியே என் நினைவுக்கு வருகிறது.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார். " என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா! " ஆமாம் பாவம் கொடுத்த "போனஸ்" தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

"என்ன விலை நிர்ணயிக்கிறாயோ, என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்" என்று எழுதி இருக்கிறார்.

இந்தக் கதையில் தர்மம் சற்று சூட்சுமமாகத்தான் தன்னை நிலை நாட்டி இருக்கிறது என்பதும் படிப்போராகிய உங்களுக்கு புரிகிறதா.

ஆதலால் தான் சொல்கிறேன் " தர்மம் சூட்சுமமானது தானே? "

நன்றி : கண்ணதாசன், வானதி பதிப்பகம்.

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்கு

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே - பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் : பட்டினத்தார்.

பட்டினத்தாரைப் போல வாழ்ந்தாரும் இல்லை. வாழப்போவாரும் இல்லை. லெளகீக வாழ்க்கையின் உச்சத்தையும் தொட்டார். ஆன்மீக வாழ்வின் உச்சத்தையும் அடைந்தார். வாழ்க்கையின் விளக்கம் அவரது வாழ்க்கையிலே கிடைக்கும். ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே செய்யும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே என்ற படி பிறருக்கு துன்பமிழைப்பதையே வாழ்வின் நோக்கமாக கொண்டுள்ளனர் மாந்தர்கள்.

தெய்வம் நின்று கொல்லுமென்பார்கள். ஆனால் தெய்வம் அன்றே கொன்ற கதை ஒன்றும் உண்டு.

அவன் அந்த ஊரில் எவருக்கும் அடங்கா காளை. இரண்டு பெண்மக்கள் அவனுக்கு. இருப்பினும் பிறர்த்தியாருக்கு அவன் செய்யும் அடாவடி, கொடுஞ்செயலைக் கண்டு துளியும் கவலைப்பட்டானில்லை. ஆண்டவனும் அவனுக்குப் பாடம் புகட்டாமல் விடுவதில்லை என்று முடிவுகொண்டான்.

தன் வீட்டுக்குப் போகும் வழியில் இருந்த நிலத்தின் மீது கண் கொண்டான் கயவன். அந்த நிலம் கைம்பெண்ணின் ஒருத்திக்குச் சொந்தமானது. அதில் சிறு வீடு கட்டினாள். வேலை பார்த்த கொத்தனாரையும், சித்தாளையும் நையப்புடைத்தான் கயவன். எனக்கு இந்தச் சொத்தில் பங்கிருக்கிறது என்றான். கைம்பெண்ணோ அழுதாள். புலம்பினாள். விட்டானில்லை கயவன். தடுத்திட்டான் வீட்டு வேலையினை. ஊரும் பார்த்தது. ஒடுங்கிக் கிடந்தது. கேட்டால் ஊரே என்னது என்பான் இந்தக் கொலைக்கும் அஞ்சாத கயவன் என்று ஒதுங்கிக் கொண்டது.

என்ன செய்வது? சட்டத்தின் கதவினைத் தட்டினாள் கைம்பெண். சட்டம் அவனைக் கேள்வி கேட்கவுமில்லை. கைம்பெண்ணினுதவிக்கும் வரவில்லை.

யாருமெனக்குத் தேவையில்லை என்று சென்றாள் கோவிலை நோக்கி. அழுதாள். வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.

மறு நாள் காலையில் கயவனின் மகள் ஒருத்தி தாலி அறுத்தாள். மருமகன் மண்டையைப் போட்டான். அடுத்த நான்காவது நாளில் கையும் காலும் இழுத்துக் கொண்டது. வாயில் இருந்து எச்சில் ஒழுகியது கயவனுக்கு. கைம்பெண்ணின் வீட்டு வேலை ஜரூராக நடந்தது.

தெய்வம் நின்று கொல்லுமென்பது தெய்வத்திடம் அடைக்கலமாவோரின் வேண்டுதலைப் பொறுத்தது.

தர்மம் சூட்சுமமானது தானே....

Monday, December 8, 2008

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் 3

அந்த ஊர் முக்கியஸ்தரின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஊரின் இன்னொரு முக்கியஸ்தரின் மகளோடு காதல். கவிதை மழை பொழிவான் காதலன். உலக அறிவின்றி இருக்கும் காதலியோ அவனெழுதும் கவிதைக்கு அர்த்தம் புரியாமல் என்ன இப்படியெல்லாம் எழுதுகிறாய் என்று கடிந்து கொள்வாள். முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனது கவிதையில் இதயமென்ற வார்த்தை தான் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

தினமும் சந்திப்பு நடக்கும். பார்வையோடு சரி. சாப்பாடு ஆச்சா? அம்மா எப்படி இருக்கிறார், அப்பா எப்படி இருக்கிறார்? இப்படித்தான் பேசிக் கொள்வார்கள். காதலன் படிப்பினை முடித்து விட்டு வீட்டில் இருந்தான். இவர்களின் காதல் ஊர் பெண்டுகளுக்குத் தெரிய கண் காது மூக்கு சேர்த்து பேச ஆரம்பித்தார்கள். காதலனின் அம்மாவிடமே அது பற்றி விசாரிக்க, காதலனின் வீடே பற்றி எரிந்தது. காதலிக்கு அவள் அப்பாவால் கும்மாங்குத்துகள் பரிசாகக் கிடைத்தன. காதலியைப் பார்க்க முடியாமல் தவித்த காதலன் ஊரை விட்டு வெளியேறினான்.

காலங்கள் கடந்தன. ஊருக்குத் திரும்பினான். காதலியைச் சந்தித்தான். திருமணம் பற்றிப் பேசினான்.காதலி மழுப்பினாள்.கடமை அழைக்க பிறிதொரு நாளில் சந்திக்கலாமென்று வேலைக்கு திரும்பவும் சென்றான். காலங்கள் கடந்தன. மீண்டும் ஊருக்குத் திரும்பினான் காதலியைப் பார்ப்பதற்கு.

காதலியைப் பார்க்க முடியவில்லை. காரணம் அவளுக்குத் திருமணமாகி இருந்தது. காதலி அவனிதயத்தில் குத்தி விட்டுச் சென்றாள். வலிக்கும் இதயத்தோடு மீண்டும் வேலைக்குத் திரும்பினான்.

காலங்கள் உருண்டோடின.

காதலன் ஏதோ விஷயமாக ஊருக்குத் திரும்பினான். காதலனின் நண்பன் காதலியைப் பற்றிச் சொன்னான். காதலிக்குப் பிறந்த மகனின் இதயத்தில் ஓட்டையாம்.

தர்மம் சூட்சுமமானது தானே ??????

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் - 2

அந்த கிராமத்தில் அண்ணன் தம்பி இருவர். சமமாக சொத்து பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அண்ணனுக்கு நான்கு பிள்ளைகள். தம்பிக்கு ஒன்று. தம்பி மனைவிக்கும், தம்பிக்கும் அண்ணனைப் பார்த்து பொறாமை. பக்கத்து பக்கத்து வீடாகையால் அடிக்கடி ஏதாவது பிரச்சினை செய்வார் தம்பி. அண்ணன் ஒதுங்கிச் செல்வார். அண்ணன் மீதும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் துவேஷம் கொள்ளக் காரணம் அரசாங்கத்திடமிருந்து மாதா மாதம் விடுதலைப் போராட்ட வீரருக்கான பணம் வருவது. இது இப்படி இருக்க, அண்ணன் குடும்பத்தார் அனைவரும் விவசாய வேலையில் இறங்கியதால் குடும்பம் முன்னேறிக்கொண்டிருந்தது. தம்பிக்கு ஒரே ஒரு பிள்ளை ஆகையால் கூட மாட வேலை செய்ய ஆள் இல்லை. அதனால் அவரின் வளர்ச்சி தடைப் பட்டது. அண்ணன் குடும்பம் முன்னேறுவது கண்டு வெம்மையில் வாடிய தம்பி குடும்பம், பட்டுநூல்கார மந்திரவாதியை அணுகினர். எப்படியாவது அண்ணன் குடும்பத்திலிருப்போரை ஒழித்துக் கட்டி விட வேண்டுமெனச் சொல்லி காசையும் கொடுத்தனர். கொடுத்த காசுக்கு துரோகம் செய்யாமல் பட்டு நூல்காரனும் பில்லி வைத்தான். அண்ணன் குடும்பத்தாருக்குச் சொந்தமான மாட்டு மந்தையில் இருந்த மாடுகள் செத்து வீழ்ந்தன. பாரம் இழுக்கும் வண்டி மாடுகள் வாயில் ரத்தம் தள்ளி இறந்தன. ஆட்டு மந்தையில் ஆடுகளும் இறந்தன. என்ன காரணமென்று தெரியாமல் கலங்கினர் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பமோ குதூகலத்தில் கொக்கரித்தது. அண்ணன் மனைவி கால் கடுப்பிலேயே செத்தாள். குடும்பத்தின் குலவிளக்கு அணைந்தது. ஒழிந்தது அண்ணன் குடும்பம் என்று சந்தோஷத்தில் மிதந்தது தம்பி குடும்பம். தம்பி மகனுக்கு வந்த மனைவியும் பட்டு நூல்காரனை விடாமல் பிடித்துக் கொண்டாள். விளைவு மேலும் மேலும் அண்ணன் குடும்பத்தில் இழப்புகள். பிரச்சினைகள். அண்ணன் குடும்பம் தவித்தது.

அண்ணன் வீட்டிற்கு ஒரு பாதிரியார் வந்தார். வீட்டின் சனி மூலையிலும், சனி மூலைக்கு நேரெதிர் மூலையிலும் புதைக்கப்பட்டிருந்த பில்லியினை எடுத்து சுடுகாட்டில் வைத்து எரித்தார். பிரச்சினை முடிவுக்கு வந்தது. என்ன காரணமென்று தெரிந்து கொண்டார்கள் அண்ணன் குடும்பத்தார். தம்பி குடும்பத்தார் செய்யும் எந்த மந்திரவாத தொல்லைகளும் தங்களைப் பாதிக்காதவாறு தற்காத்துக் கொண்டார்கள். தம்பி குடும்பத்தார் சோர்ந்து போனார்கள். அண்ணன் குடும்பத்தில் வளர்ச்சி வேகமெடுத்தது.

காலங்கள் உருண்டோடின. பிள்ளைகள் பெரியவர்களானார்கள். அண்ணனுக்கும் தம்பிக்கும் பேரன் பேத்திகள் வந்தார்கள். தம்பி திடீரென நோயில் விழுந்தார். தம்பி மகன், தகப்பனை வீட்டின் வெளியில் இருந்த மரத்தடியில் போட்டான். மலம், நீர் எல்லாம் படுக்கையிலேயே சென்றன. உடம்பில் புண் வைத்து புழு நெளிந்தது. சாப்பாடும் கிடைக்காது. கத்தி கத்தி தொண்டையும் வறண்டு போனது. மருமகளும், மகனும் உதாசீனப் படுத்தினர். மழையிலும், வெயிலிலும் கிடந்து வாடினான் தம்பி. தம்பியின் துயரம் பொறுக்க முடியாமல் தம்பி மகனுக்கும், மனைவிக்கும் தெரியாமல் அண்ணன் சாப்பாடு வாங்கி வந்து போட்டார். தம்பி அழுதான். தம்பியை தன் பராமரிப்பில் விட ஆள் வைத்து தூது விட்டான் அண்ணன். தம்பி மகன் மறுத்து விட்டான். மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் ஒரு குடையின் கீழ் மரத்தடியில் கிடந்தான் தம்பி. ஊரே பார்த்தது. யாரும் எதுவும் கேட்கவில்லை. இரவுகளில் அழுது புலம்புவான் தம்பி. தம்பி மனைவியை வீட்டை விட்டு அடித்து விரட்டினாள் மருமகள். தம்பியைச் சுற்றிச் சுற்றி வருவான் அண்ணன். ஒரு நாள் உடம்பில் புழுக்கள் அதிகமாக, குடிக்க கஞ்சியின்றி மழையிலும் வெயிலிலும் கிடந்து செத்தான் தம்பி. ஊரே ஒன்று கூடி மலர் படுக்கையில் கிடத்தி சுடுகாட்டில் வைத்து எரித்தார்கள். பலகாரங்கள் சாப்பிட்டார்கள். கறி சமைத்து ஊரே சாப்பிட்டது. தம்பியின் மனைவி ஊரை விட்டு ஒதுங்கி இருந்த ஒரு வீட்டில் கொண்டு போய் கிடத்தப்பட்டாள். நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பாடு கிடைத்து அவளுக்கு. அவளும் இருட்டறையில் கிடந்து பசியோடு செத்தாள். அவளுக்கும் காரியத்தைச் செய்து முடித்தார்கள். தம்பியின் இழப்புத் தாங்காமல், தம்பி செத்துப் போன ஒரு வருடத்திற்குள் அண்ணனும் செத்துப் போனான்.

தர்மத்தின் தீர்ப்பைப் பார்த்தீர்களா? தர்மம் சூட்சுமமானது தானே? எப்படி சூரியனும் பூமியும் ஒரு வித கணக்கோடு இயங்குகிறதோ அது போல மனிதனின் வாழ்க்கையும் மாயமான கணக்கின் ஒழுங்கோடு இயக்கப்படுகிறது என்பது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

குறிப்பு : தர்மம் சூட்சுமமானது எந்த தலைப்பில் வெளிவந்த முதல் பதிவுக்குப் பின் வரும் பதிவுகள் கதைகளாய் எழுதப்பட்டு, இன்றிலிருந்து தலைப்பும் தர்மத்தின் தீர்ப்புக் கதைகளாய் மாறிவிட்டது. படிக்க படிக்க கடவுளின் மீது பற்று ஏற்படுவதாய் கருதினால் அதற்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. நடந்ததைச் சொல்கிறேன். இக்கதைகளில் வரும் மாந்தர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். அவர்களின் மூலம் கேட்ட சம்பவங்கள் தான் கதைகளாய் எழுதப்படுகிறது. சம்பவங்களின் உண்மைத் தரத்துக்கு நான் உத்திரவாதம் தர இயலாது. ஒரு வேளை இக்கதைகளின் மாந்தர்கள் சொல்லிய கதைகள் கற்பனையாகக் கூட இருக்கலாம்.