குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கடிதங்கள். Show all posts
Showing posts with label கடிதங்கள். Show all posts

Monday, October 6, 2008

அன்பு மகனுக்கு கடிதம் (7) தேதி : 5.10.2008

ரித்திக், நீ முதன் முதலாய் எங்களை விட்டு விட்டு உனது மாஸ்டருடன் கராத்தே காம்படீஷனில் கலந்து கொள்ள செல்கிறாய். வாழ்த்துக்கள். அந்தக் குழுவிலேயே நீதான் சிறுவன். உன்னை பனிரெண்டு வயதுக்குள்ளே இருப்போருடன் போட்டியிட வைப்பார்கள். வெற்றி என்பது உலகில் வேறு வகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். நீ கராத்தே பழக வேண்டுமென்று நினைத்தற்குக் காரணம் உனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரவேண்டுமென்பதற்காகத்தான். தற்காப்புக் கலையில் நீ சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காகத்தான்.




ஆறு வயதில் உனக்கு பல அனுபவங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதன் முதலாய் உன்னை மாஸ்டருடன் அனுப்பி வைத்தேன். உன்னை எல்லோரும் பாராட்டினார்கள். மெத்த மகிழ்ச்சி.

சமூகத்திற்கு சிறந்த சேவை செய்ய வேண்டும். உன்னால் இவ்வுலகம் பயன்பெற வேண்டும். பெற்றால் இப்படிப் பட்ட பிள்ளையைப் பெற வேண்டுமென்று உலகே சொல்ல வேண்டும். அப்போது தான் நானும், உன் அம்மாவும் பட்ட துன்பங்கள் தீரும்.

வாழ்த்துக்கள் ரித்தி...

அன்பு அப்பா

Sunday, July 6, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 6 ( 06.07.2008)

ரித்தி,

அம்முவுக்கு காய்ச்சல் வந்து விட்டது தான் உனக்கு தெரியும். ஆனால் அந்தக் காய்ச்சலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று உனக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நீ குடிக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் என்ற நுண்ணிய நோய்க் கிருமிகள் இருப்பதும் ஒரு காரணம். பின்னர் சாப்பிடும் சாப்பாட்டிலும் இருக்கும். அதனால் அம்மாவிடம் சொல்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து தரச் சொல்லி பின்னர் தான் தண்ணீர் குடிக்கனும்.

எதுக்கு தண்ணீரைக் கொதிக்க வைக்கனும் என்று கேள்வி கேட்பாய் . காரணம் என்னவென்றால், தண்ணீர் கொதிக்கும் போது காய்ச்சலுக்கான நோய் கிருமியும், அதன் பின்னர் தொடர்ந்து கொதிக்க வைக்கும் போது மஞ்சள் காமாலை நோயினை உருவாக்கும் நோய்க் கிருமியும் செத்து விடும்.

வீட்டில் தயாராகும் உணவினைத் தவிர ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய ரெடிமேட் உணவுகளும், பரோட்டா போன்ற உணவுகளில் நோய் கிருமிகள் இருக்கும் என்று டாக்டர் சொன்னதாக அம்மா சொல்லியது உனக்கு நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஆதலால் வெளியிடங்களில் சாப்பிடுவதையும், மிட்டாய், சிப்ஸ், வடை போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடு.

மேலும் சாப்பாட்டினை எப்போதும் சூடாகவே சாப்பிட்டு பழகிகொள். அம்மாவிடம் சொல்லி சூடு செய்து தரச்சொல்லி சாப்பிடு.

மனிதனுக்கு சொத்து என்பது அவனது உடல் நலம் தான். உடலை நன்கு பேணி வரவேண்டும். நோயில்லா வாழ்வே சிறந்தது.


அன்பு அப்பா...................

Tuesday, June 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 5 10.06.2008

ரித்தி உனக்கு ஸ்கூல் ஆரம்பித்துவிட்டது. உன் வாழ்க்கையின் முக்கியமான பகுதியில் இருக்கிறாய். கற்றல் தான் வாழ்வின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துள்ளது. கற்றல்... ஆராய்தல்... தெளிதல்.. அதற்கேற்ப வாழ்க்கையினை அமைத்தல். நன்கு படிப்பாய் என்று தெரியும். கீழே சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன். புரிந்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

பள்ளி பஸ் கட்டணம் பாதி அளவுக்கு உயர்த்தி இருக்கின்றார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் முடிவு. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள். கல்விக் கூடங்களை நடத்துவது டிரஸ்ட். பொதுச் சேவை நிறுவனம் என்பார்கள். லாபம் இன்றி நடத்துவதாக டீடில் எழுதி இருப்பார்கள். ஆனால் கட்டிட நிதிக்கு என்று தனி வசூல், டியூசன் பீஸ் என்று தனி வசூல். புத்தகத்துக்கு என்று தனி வசூல். பதிப்பாளர்கள் 20 லிருந்து 40 பெர்சண்ட் வரை கமிஷன் தருகிறார்கள் பள்ளிகளுக்கு. பொதுச் சேவை நிறுவனங்களுக்கு எதுக்குப் லாபம் என்று தெரியவில்லை. அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு அடிமாட்டுச் சம்பளம் தருவார்கள். டிரஸ்ட்டில் வரும் வருமானத்துக்கு 80ஜி என்ற சட்ட விதிப்படி வருமான வரி விலக்கும் உண்டு. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேட்பார் இல்லை. அரசியல்வாதிகள் இது உங்களுக்கான அரசு என்பார்கள். ஆனால் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. இப்படி எல்லாம் நாடகம் போடுபவர்களை உனக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடிதமெழுதுகிறேன்.

ரித்தி உனக்குப் புரியுமோ இல்லையோ தெரியாது. ஆனால் அனைவரும் தவறு செய்யவேண்டுமென நோக்கோடுதான் செயல்படுகிறார்கள். யாரும் உண்மையாக இல்லை. பணம் ஒன்று தான் குறிக்கோள். அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நமது அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதற்கு உனக்கு விளக்கம் சொல்கிறேன். கேள்..

என் வண்டிக்கு பெட்ரோல் போடுகிறேன் அல்லவா. அதுக்கு வரி உண்டு. இந்த வரியும் மற்ற பொருட்களுக்கு போடப்படும் வரியும் வித்தியாசமானவை. எப்படி என்று கேட்கின்றாயா ? சொல்கிறேன் கேள்.

செருப்பு வாங்கினோம் என்றால், செருப்பின் விலையில் 10% வரி என்று போடுவார்கள். செருப்பு ரூபாய் 100 என்று வைத்துக் கொள்வோம்.வரி 10 ரூபாய். மொத்தம் 110 ரூபாய் ஆகும்.

ஆனால் பெட்ரோலுக்கு அப்படி இல்லை. ஒரு ரூபாயில் 52 பைசா மத்திய அரசுக்கும் 12 பைசா மாநில அரசுக்கும் வரியாக செலுத்த வேண்டும். ஆக 64 பைசா வரி போக பெட்ரோலின் உண்மையான விலை 26 பைசாதான். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் வரி மட்டும் 64 ரூபாய். பெட்ரோலின் உண்மையான விலை 26 ரூபாய்தான். புரிகிறதா உனக்கு?மக்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் வரி வசூலித்து அதுக்கு நிதி, இதுக்கு நிதி, அந்த வளர்ச்சி திட்டம், இந்த வளர்ச்சித் திட்டம், ரோடு போடுகிறோம் அது இதுவென்று சொல்லிச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். எல்லாவற்றிலும் இவர்களுக்கு பணம் வரும்.

குருடு ஆயிலை சுத்திகரித்த பின்பு பெட்ரோலுக்கான ஒரு லிட்டர் விலை இவ்வளவு அதற்கு இவ்வளவு வரி என்று போட்டால் என்ன ? போட மாட்டார்கள். ஏனென்றால் இந்த எரிபொருள் அத்தியாவசிய தேவை. மக்களின் அன்றாடத் தேவையில் கை வைத்தால் வேறு வழியின்றி மக்கள் வாங்கித்தான் ஆவார்கள் என்ற எண்ணம் தான்க் ஆரம். அதிக வரி விதித்தால்தான் அரசியல்வாதிகள்க சொகுசு வாழ்க்கை நடத்த முடியும்.

அடுத்த ஒரு அக்கிரமம் பற்றிச் சொல்கிறேன் கேள்.

தா.பாண்டியன் என்ற கட்சித்தலைவரின் பேட்டியினைக் காண நேர்ந்தது. சில அதிர்ச்சி தரும் விஷயங்களை சொன்னார்.

இந்தியாவுக்கு தேவையான குரூடு ஆயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம் அல்லவா. ஆனால் இந்தியாவில் இருந்து குருடூ ஆயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார். இந்தியாவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அரசாங்கம் எண்ணை துரப்பண பணிகளை கொடுத்து இருக்கிறதாம். அவர்கள் உலக பெரும் பணக்கார எண்ணெய் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்களாம். வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்தால் வரக்கூடிய லாபத்தை பணமாக மட்டும்தான் எடுத்துச் செல்லலாம் என்று முன்பு ஒரு சட்டம் இருந்ததாம். அதை வெளியில் சொல்லாமல் மாற்றி விட்டதாகவும், இப்போது வரக்கூடிய லாபத்தை பொருளாகவும் எடுத்துச் செல்லலாமென்றும் மாற்றி வைத்திருப்பதாகவும், அதனால் அந்த எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் இருந்து குருடூ ஆயிலை அவர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். இந்தியாவுக்குத் தேவையான குரூடு ஆயிலை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கும் அவலத்தைப் பார் ரித்தி.

இதை விட இன்னொரு கூத்தினை சொல்கிறேன் கேள். சமீபத்தில் ஒரு டாலருக்கு சமமான இந்திய ரூபாய் 38 ஆக இருந்தது இப்போது 43 ரூபாய் ஆகப்போகிறது. காரணம் என்னவென்றால் ரிசர்வ் பேங்க எத்தனையோ கோடி டாலர்களை மிகச் சமீபத்தில் வாங்கியதாகவும் அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதாகவும் பாண்டியன் அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் ரூபாயின் மதிப்புக் குறைந்து விட்டதாகவும் சொன்னார். நமது இந்திய நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்புக் குறைந்தால் தான் லாபம் வருமாம். என்ன ஒரு நாட்டுப் பற்று... பார்....

இப்படி அரசியல்வாதிகளும், பிசினஸ் செய்பவர்களும் சொல்லி வைத்து இந்தியாவைக் கூட்டுக் கொள்ளை இடுகின்றார்கள். ஏழை மக்களை நினைத்துப் பார் ரித்தி. ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் அவர்களை நீ முன்னேற்ற வேண்டும். நீ பெரியவனாக ஆகி, நாட்டை ஆளும் பொறுப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தையும் , தொழில் சட்டத்தையும் அடியோடு மாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்த சிலவற்றை வரும் கடிதங்களில் எழுதுகிறேன். அது உனக்கும் பயன்படுமென்றால் உபயோகப்படுத்திக் கொள்.

இப்படிக்கு
உன் அன்பு அப்பா...

Thursday, May 22, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 4 (22.5.2008)

ரித்தி, உன் அம்மா வரும் ஜூன் மாதம் உனக்குப் பிறந்த நாள் என்று சொன்னாள்.
பிறந்த நாள் பற்றி உனக்கு சிலவற்றைச் எழுதலாமென்று நினைக்கிறேன்.
ஒரு மனிதனின் பிறப்பு மற்ற மனிதர்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
காமராஜர் பற்றி வரும் நாட்களில் நீ படிப்பாய். காந்தி, நேரு பற்றியும் படிப்பாய்.
இவர்களின் பிறந்த நாள் எப்படி மற்றவர்களால் கொண்டாடப்படுகிறதோ
அதைப் போல உனது பிறந்த நாளும் மற்றவர்களால் கொண்டாடப்பட வேண்டும்.

உனது பிறப்பு உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உபயோகமாய் இருக்க வேண்டும்.

பிறந்த நாளின் போது உன்னிடம் கேட்க நினைத்தாலும் உனக்கு புரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் கடிதம் எழுதுகிறேன். எப்போவாவது நேரம் இருந்தால் உன் அப்பாவின் கடிதங்களை படித்து பார்.

நீ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தூய ஆடை அணிந்து, தினமும் பாலீஷ் செய்யப்பட்ட ஷூ அணிந்து உன் அம்மா அன்பாக பார்த்து பார்த்து சமைத்த உணவினை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறாய்.இங்கிலீஷில் பாட்டு சொல்கிறாய். சாப்பிடும் போது கைத்துண்டை மடியில் வைத்துக் கொள்கிறாய். நாசூக்காக பேசுகிறாய். கண்களால் சிரிக்கின்றாய்.

உனது கராத்தே மாஸ்டர் சொல்லுகின்றார். கராத்தே பழகும் போது ஸ்டெப் போட்டு விட்டு அவர் முகத்தை பார்ப்பாயாம். அவர் புன்னகைப்பாராம். நீயும் சிரித்து விட்டு அடுத்த ஸ்டெப் போட்டுக் காட்டுவாயாம். சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவார். அன்பு மேலிட உன்னை தன்னுடன் அணைத்துக் கொள்வார்.

ஜூனியர் மாஸ்டர் நீ எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதாகவும், மனதைக் கொள்ளை அடித்து விடுவதாகவும் சொன்னார். உன்னால் முடியவில்லை என்றால் போதும் என்று சொல்லிவிட்டு விலகி வந்து விடுவாயாம்.

ரித்தி, ஆம் நீ செய்யும் மேனரிஷங்கள் அழகானதாய் இருந்தால் பார்ப்போரும், உன்னுடன் பழகுவோரும் உன்னை நேசிப்பார்கள்.

எங்கோ வந்து விட்டேன் இல்லை. விஷயத்துக்கு வருகிறேன்.

உனக்கு பள்ளிக் கட்டணமாக பள்ளி ஆரம்பிக்கும் போது ஆயிரக்கணக்கிலும், மாதம் தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் கட்டி வருகிறேன். என்னால் முடியும். ஆனால் உன்னை ஒத்த சிறுவர்கள் பலரும் அழுக்கு அறையிலும், சுகாதாரமற்ற உடைகளும் அணிந்து புளியங்கொட்டை அரிசி சாப்பாட்டினையும், பாதி அளவே இருக்கும் முட்டையினையும் சாப்பிடவும் பள்ளிக்கு வருகிறார்களே தெரியுமா உனக்கு.

கல்வி உனக்கு ஒரு மாதிரியும், மற்றவர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது ரித்தி. அதனால் வாழ்க்கை தொலைப்போர் எண்ணற்றவர்.

நாளை நீ இந்த நாட்டை ஆளும் வாய்ப்பை பெற்றால் வணிக நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒழித்து விடு. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவின் சொத்து என்று சட்டம் இயற்று. இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்று சட்டமியற்று. கல்விக்கு கட்டணமே இல்லை என்று செய்.

செய்வாயா ரித்தி..


உன் அன்பு அப்பா...

Wednesday, May 14, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 3 ( 14.05.2008)

ரித்தி, இன்று உனக்கு சில முக்கியமான விஷயங்களை சொல்ல இருக்கிறேன்.

முதலில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இதன் அர்த்தம் என்னவென்றால், யாரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ நீ தீங்கேதேனும் செய்தால் அது திரும்பவும் உனக்கு தீங்காய் வந்து முடியும் என்பது.

இதற்கு என்ன ஆதாரம் என்று நீ கேட்பாய் என்பது எனக்கு தெரியும். விஷயத்துக்கு வருகிறேன். திபெத் என்ற நாட்டினை பற்றி உனக்குச் சொல்ல வேண்டும். சீனா திபெத்தை ஆக்ரமித்து திபெத்தியர்களை அவர்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்த போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது சில நாட்களுக்கு முன்பு. கேட்பார் யாரும் இல்லை. கேட்டாலும் சீனா எவரையும் மதிப்பதும் இல்லை.

ஆனால் நடந்தது என்ன இப்போது ? இரு நாட்களுக்கு முன்பு சீனாவில் படு பயங்கரமான நில நடுக்கம் வந்து 10 ஆயிரம் சீனர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள். கடவுள் என்பவனின் தண்டனை இருக்கிறதே அது படு பயங்கரமாக இருக்கும். சீனாவினை எப்படி தண்டித்து இருக்கிறார் பார் மகனே.... தர்மம் சூட்சுமமானது என்பார்கள். இறைவனின் தர்மம்
இப்படி இருக்கிறது...

இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று சொல்லுவது.

புரிந்து விட்டதா கண்ணே...? ஆதலால் எவர் ஒருவருக்கும் நீ தீங்கு செய்ய நினைக்காதே...


இன்னும் ஒரு விஷயம் கண்ணே .. !

கடந்த ஞாயிறு அன்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் ( இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்)
தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு " IF THE HEALTH MINISTER CAN'T DO THIS, WHO CAN ? " அதன் சாரம்சத்தை தருகிறேன். ஒரு மில்லியன் என்று சொன்னால் பத்து லட்சம் என்று அர்த்தம். ஒரு பில்லியன் என்று சொன்னால் 100 லட்சம் என்று அர்த்தம்.

ஒரு மில்லியனுக்கும் மேலே புகையிலையினால் இந்தியாவில் மனிதர்கள் சாகின்றார்கள் என்றும், 15% பள்ளிக் குழந்தைகள் புகையிலையினை பயன்படுத்துகிறார்கள் என்று உலக ஆரோக்கிய நிறுவனத்தின் ஆராய்ச்சியில் சொல்லி இருப்பதாக எழுதியிருந்தார்.
மேலும் அந்த ஆராய்ச்சியில் 52% இளைஞர்கள் சினிமாக்களை பார்த்த பின் தான் புகை பிடிக்க ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். புகையிலை தயாரிப்பு கம்பெனிகளால் உலக அளவில் மூன்று மில்லியன் மக்கள் இறப்பதாகவும் சொல்கிறார்.

தெற்காசிய நாடுகளில் தயாராகும் சாராயத்தில் 65% இந்தியாவில்தான் குடிக்கிறார்களாம். 15 வருடத்திற்கு முன்பு 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தயாரிக்கப்பட்ட சாராயம் இன்று 2.3 பில்லியன் லிட்டராக உயர்ந்து இருக்கிறதாம். சாரயம் குடிப்பவர்களின் ஆவரேஜ் வயது 28 லிருந்து 19 வயதாக வேறு குறைந்து இருக்கிறதாம். மேலும் இது 19லிருந்து 15 வயதாக இன்னும் 5 அல்லது 7 வருடத்திற்குள் குறைந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்களாம்.

இந்தியாவில் இறக்கும் மூன்றில் இரண்டு பங்கு மனிதர்கள் நான்கு வகையான கொலைகாரர்களான சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய உணவுகள் இவற்றினைப் பயன்படுத்துவதால் கொல்லப்படுவதாகவும் சொல்கிறார். சாரயத்தினால் தனி மனிதன் மட்டும் பாதிக்காமல் அவனது குடும்பமே பாதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்.

உலக் ஆரோக்கிய நிறுவனம் இந்தியா கேன்சர் என்ற புற்று நோய், டயாபடீஸ், கார்டியோ வஸ்குலர் எயில்மெண்ட்ஸ் மற்றும் மெண்டல் டிஸ்ஆர்டர் நோயின் பிடியில் விழ ஆரம்பித்துள்ளதாக முன்பே எச்சரித்து உள்ளதாகவும் சொல்கிறார். மேலும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இன்ன பிற என்று எழுதியிருக்கின்றார்.

இதெல்லாம் உனக்கு ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் எதிர்காலத்தில் நீ எப்படி வருவாயோ எனக்குத் தெரியாது.

உனக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி கிடைத்தால் ( அதற்கு நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் ) உடனடியாக சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் தீமை விளைவிக்கும் உணவுப் பொருட்களை தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூடி விடு,
கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தையும் இயற்றி விடு. ஏனெனில் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்களும் கொலை செய்பவர்களே..

என் அன்பு மகனே... உனக்கு வாய்ப்பு கிடைத்தால் செய்வாய் என நினைக்கிறேன். செய்வாய் தானே...

உன் அன்பு அப்பா.....

Monday, May 12, 2008

மகனுக்கு கடிதம் - 2 ( 12.05.2008)

ரித்தி, எப்போ பார்த்தாலும் விளையாட்டு, கார்ட்டூன் சானல் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு கோபமாக வருகிறது. சத்தம் போட்டால் முகத்தை அப்படி ஒரு பாவமாய் வைத்துக் கொண்டு விடுகிறாய். அதிலுமின்றி ஒரு சிரிப்பு வேறு. அப்படியே கோபத்தை குறைத்து விடுவாய் நீ.....







நேற்று கராத்தே மாஸ்டரின் உதவியாளர் உன்னை ரொம்பவும் தான் பாரட்டி விட்டார். ” பேசவே மாட்டேன் என்கிறான் “ ரித்தி என்றார்
மேலும்
“ எதற்கெடுத்தாலும் சிரிப்புதான், போதும் என்று சொல்லி பயிற்சியினை நிறுத்தினான்” என்றார்.
” நல்லா வளர்த்து இருக்கீங்க சார்” என்று எனக்கு வேறு பாராட்டு. இருந்தாலும் நீ இன்னும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆவல்.

நல்ல பெயர் என்றால் இப்படி இல்லை மகனே ! கீழே படி உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

பூவுலகில் ஒரு நேரத்துக்கு கூட உணவில்லாமல் இருக்கும் எத்தனையோ உன்னுடைய சகோதரர்கள் சகோதரிகள் செத்து கொண்டு இருக்கின்றார்கள். உன் சகோதரிகள் உடுத்த உடையின்றி இருக்க இடமின்றி அல்லாடுகின்றனர். மருத்துவ வசதிகள் இன்றி அனு தினமும் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உன் பாட்டிகளும், தாத்தாக்களும் ஆதரவின்றி நிராதரவாய் நிற்கின்றனர். அவர்களை காப்பாற்றுவாயா என் அன்பு மகனே...

உனக்கு பசி எடுத்தால் ஊட்டி விட உன் அம்மா ஓடோடி வருவாளே, அது போல நீயும் உன் சகோதர சகோதரிகளுக்கு உணவிட்டு வளர்ப்பாயா ? நல்ல துணிகளை வாங்கி கொடுத்தும் அவர்களுக்கு இருக்க இடமும், நல்ல உணவும், மருத்துவ வசதியும் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வாயா ?

உன் சகோதரி அம்முக்குட்டி அழுதால் துடித்துப் போவாயே, அது உனக்கு நினைவில் இருக்கிறதா ?

பாவமில்லையா பக்கத்து வீட்டு பாப்பாவும் தம்பியும்... அவனையும் அப்படி கவனித்துக் கொள்வாய் தானே.... நீ சாப்பிடும் போது எல்லோரும் சாப்பிட்டு இருப்பார்களா என்று ஒரு துளியாவது நினைத்துப் பார்ப்பாயா ? இப்போதைக்கு இது போதும் மகனே...

Saturday, May 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 1 நாள் 10.5.2008

இன்று காலையில் கராத்தே கிளாசுக்கு அழைத்துச் சென்றேன் அல்லவா ? மாஸ்டர் ஆறு மணிக்கு வாருங்கள் என்று நேற்றே அழைத்ததுதான் உனக்கு தெரியுமே. நாம் சரியாக ஆறு மணிக்கு சென்று விட்டோம். ஆனால் மாஸ்டர் வரவில்லை. அப்போது நீ என்னிடம் “ அப்பா, எனக்கு பால் வாங்கித் தருகிறாயா ? ” என்று கேட்டாய்.

பேக்கரியில் டீ கொடுத்தவர் நீ டீ குடிக்க முயற்சித்து சூட்டால் முகம் சுளிப்பதைக் கண்டு, அருகில் வந்து ” சூடா இருக்கா, ஆற்றி தரவா ” என்று கேட்க நீ சிரிப்புடன் முறுவலித்ததை பார்த்த அவர் அன்புடன் உன் தலையினை கோதி விட்டு ஆற்றி எடுத்து வந்து கொடுத்தார் அல்லவா ? அதைப் போல அனைவரிடமும் அன்பான பார்வையுடன், லேசான புன்னகையுடன் அணுகி வா. அனைவரும் உன்னை நேசிப்பார்கள். மனிதர்கள் அன்புக்கு ஏங்குபவர்க்ள். அனைவரிடம் அன்புடன் பேசு. ஆதரவாக இரு. எல்லோரும் உன்னை விரும்புவார்கள்.

ஏழு மணிக்கு மாஸ்டர் வந்து விட்டார். அவருக்கு நேரம் கிடைக்காது. அவர் லேட்டாக வருவார். அவருக்கு எண்ணற்ற பணிகள். ஆதலால் அவர் நேரத்துக்கு வர இயலாது.

ஆனால் நீ, சரியான நேரத்திற்கு சரியான இடத்துக்கு சொன்ன இடத்தில் இருக்க வேண்டும். டைம் மேனேஜ்மெண்ட் என்று சொல்லுவார்கள் ஆங்கிலத்தில். நேரத்தை ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாய் கழிக்க வேண்டும்.

என்ன செய்வாய் தானே...

உன் அன்பு அப்பா....

அன்பு மகனுக்கு ஒரு வேண்டுகோள்

மகனே, நீ இந்தப் பதிவுகளைப் என்றாவது ஒரு நாள் படிப்பாய் நம்பிக்கையில் எழுதுகிறேன். உனக்கு யூகேஜி பாடங்கள் படிக்க வேண்டி இருக்கும். நேரமும் இருக்காது. அது மட்டும் இன்றி கார்ட்டூன் சானல் பார்க்கனும், பக்கத்து வீட்டுப் பையன் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கவும் உனக்கு நேரம் பத்தாது. மாலையில் நீ கராத்தே கிளாஸ் போவதால் நேரம் என்பது இருக்காது எனவும் தெரியும். இருந்தாலும் ஒரு நம்பிக்கை.

நான் எப்போதும் இணையதளத்தை வாசித்துமெழுதியும் வருவதை நீ ஆர்வமுடன் அருகில் இருந்து பார்ப்பது எனக்கு தெரியுமென்பதால் அந்த நம்பிக்கையில் எழுதுகிறேன். வரும் நாட்களில் உனக்கு கடிதம் எழுதி வைப்பேன். நேரம் இருந்தால் படித்து பார்க்கவும்.