குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 5, 2015

10 ரூபாயும் ஒரு மூதாட்டியும்

சமூக ஆர்வலர்கள் இப்போதெல்லாம் அழிக்கப்படுகின்றார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். எல்லோருக்கும் உண்மை கசந்து விடுகிறது. சிலருக்கு கொலை செய்யும் மனத்தையும் தந்து விடுகிறது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை பார்க்கும் போது, ஓடோடி அவனுக்கு உதவி செய்யத் துடிக்காத இதயம் எவருக்கும் இல்லாமலிருக்காது. இருந்தும் பலரும் ஒதுங்கிக் கொள்கின்றார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. சமூகத்தின் நன்மைக்காக உதவிட வேண்டுமென்று நினைப்போருக்கு உண்மையில் கசப்பான அனுபவங்களே ஏற்படுகின்றன. சமீபத்தில் கோவையில் இப்படித்தான் மணல் கடத்தலுக்காக சமூக ஆர்வலர் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிலர் செய்யும் சில செயல்களால் மனித சமுதாயத்துக்கு கிடைத்திட வேண்டிய பல்வேறு நல்ல காரியங்கள் சீர்பட்டுப் போகின்றன.

நேற்றைக்கு கணபதி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் அடியேன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது வாசலில் ஒரு குரல். நெடு நெடுவென்ற உயரம். கெச்சலான தேகம். மஞ்சள் பூசிய முகம். நெற்றியில் குங்குமம். பட்டுச்சேலை போன்று வெகு நேர்த்தியாக உடுத்தப்பட்டிருந்தது. கையில் ஏதோ ஒரு துணிக்கடையின் பை. 

ஏறிட்டுப்பார்த்தேன், “பன்னாரி அம்மன் கோவிலுக்கு காணிக்கை” என்றார் அந்த மூதாட்டி. அருகில் வரச்சொல்லி, பத்து ரூபாய் நோட்டினை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி இப்படித் தொடர்ந்தார்.

”மகாராசனாட்டம் இருக்கிறாய், ஆனால் மனதுக்குள் பல்வேறு போராட்டங்கள். ஒவ்வொரு காரியத்திலும் தடை. மனதுக்குள் வலி. எந்தப் பிசினஸும் ஒழுங்காக நடப்பதில்லை. கண் திருஷ்டி இருக்கிறது. அதுதான் உன்னை இந்தப் பாடு படுத்துகிறது. உன்னால் கை காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு எங்கேயோ இருக்கின்றார்கள். ஆனால் நீயோ இருந்த இடத்திலேயே இருக்கின்றாய், இன்னும் கொஞ்சம் குறி சொல்லனும், அந்த சேரில் உட்காரட்டுமா?”

”பாட்டி நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் இல்லை. ஒன்றும் வேண்டாம். கிளம்புங்கள்” என்றேன்.

அந்த மூதாட்டியோ திரும்பவும் ”உனக்கு கண் திருஷ்டி நிறைய இருக்கு, அதைச் சரி செய்ய வேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே எதிரில் அமர எத்தனித்தார்.

”பாட்டி அப்படி ஏதாவதிருந்தால் அதோ அங்கே போட்டோவில் உட்கார்ந்திருக்கின்றாரே எனது குரு நாதர் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்” என மறுத்தேன். சுவாமியைப் பார்த்தார் அந்த மூதாட்டி. ”நீ நன்றாக இருப்பாயப்பா” என்றுச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

மனதுக்குள் ஏதும் பிரச்சினையோடு இருந்திருந்தால் பாட்டி பர்சைக் காலி செய்திருக்கும்.

கடந்த வாரம் ஒரு பெரியவர் அலுவலக வாசலில் வந்து நின்று கொண்டு, “வயதானவன், நல்ல வார்த்தை சொல்வேன், காபி குடிப்பதற்கு ஏதாவது தர முடியுமா?” என்று கேட்டார். நான் திரும்பிக் கொண்டேன். எனது நண்பர் இரக்க சுபாவி. அவரை உள்ளே வர வைத்து எதிரில் அமர்ந்து கொண்டார்.

பிறந்த நாள், நேரம், இடம் கேட்டார். நண்பர் சொன்னார். கையை நீட்டச் சொன்னார். தட்சிணை வைக்கச் சொன்னார். நண்பர் திகைத்து விட்டு எவ்வளவு என்று கேட்டார்.”ஒரு நூறு ரூபாய் வையுங்களேன்” என்றார் கிழவர். நண்பர் வேறு வழி இன்றி கையிலிருந்த நோட்டுகளை எடுத்துக் கையில் வைக்க அதைக் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டு பலன் சொல்ல ஆரம்பித்தார்.

மேலே அந்த மூதாட்டியார் சொன்னாரே அதையே அந்தப் பெரியவரும் சொன்னார். ஐந்து நிமிடங்களாய் ஒப்பேத்தி விட்டு, அடுத்து உங்கள் குழந்தைகளுக்கும் பார்க்கலாமா என்று ஆரம்பித்தார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டே நண்பரைப் பார்க்க, நண்பரோ அலறியடித்துக் கொண்டு போதும் என்றுச் சொல்லி எழுந்து விட்டார்.

அடுத்து பெரியவர் என்னைப் பார்த்து, ”அய்யா உங்களுக்கு?” என்று ஆரம்பித்தவுடனே பெரிய கும்பிடு போட்டு விட்டேன். ஆள் எழுந்து விட்டார்.

“அறுபது ரூபாய்” கொடுத்தேன் என்றார் நண்பர் வருத்ததுடன்.


Monday, April 6, 2015

நிலம்(15) - முப்பாட்டனார் சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டா?

கடந்த வாரத்தில் எனது நண்பரொருவர் என்னைச் சந்தித்தார். அவர் ஒரு இடத்தினை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், என்னிடம் லீகல் ஒப்பீனியன் பெறலாம் என்றும் வந்திருப்பதாகவும், வெகு கவனமாக ஆவணங்களைப் பரிசீலித்து கிரையம் செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

முப்பாட்டனாரின் சொத்தில் இன்றைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். தாத்தா சொத்துப் பேரனுக்கும் உண்டு என்று கிராமத்தில் கூடச் சொல்வார்கள். தந்தை கூட விற்க முடியாது என்பர் பலர். ஆமாம் அதுதான் உண்மையும் கூட.

நண்பர் கொண்டு வந்து கொடுத்த சொத்தானது, தற்போது விற்பனை செய்ய விரும்பியவரின் தாத்தாவுக்கும் தாத்தா கிரையம் பெற்ற சொத்து. எந்த வித உயிலும் எழுதி வைக்காமல் அனைவரும் காலமாகி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் என்றுச் சொல்லக்கூடியவரின் தந்தை இந்தச் சொத்தில் ஒரு பகுதியை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இது செல்லாது என்கிறார் த.உ.எ.சொ. அது உண்மைதான் என்று அனைவருக்கும் தெரியும். தாத்தா சொத்து பேரனுக்கு இல்லாமல் விற்க இயலாது.

ஆனால் அந்தக் கிரைய ஆவணத்தை படிக்கும் போது அதில் முக்கியமான விஷயமொன்று இருந்தது. குடும்பத்தின் பணத்தேவைக்காக மேற்படிச் சொத்தினை வேறொருவரிடம் அடமானம் செய்து வைத்திருந்திருக்கிறார் த.உ.எ.சொவின் தந்தை. அதை மீட்பதற்காகவும், மேலும் பணத்தேவைக்காகவும் மேற்படி முப்பாட்டனார் சொத்தினை விற்றிருக்கிறார் அந்த தந்தை. அதாவது குடும்பத்தின் பணத்தேவைக்காக பணம் தேவைப்படும் போது முப்பாட்டனார் சொத்தினை இதர வாரிசுகளின் அனுமதியின்றி ( நிரூபிக்கப்படும் பட்சத்தில்) விற்பது தவறில்லை என்கிறது ஒரு தீர்ப்பாணை.

அந்த விற்பனை செய்யப்பட்ட சொத்தினைத்தான் எனது நண்பர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார். 

கிட்டத்தட்ட நான்கு கோடி இருக்கும் அந்தச் சொத்து. தப்பித்துக் கொண்டார் நண்பர்.... 

வாழ்க வளமுடன் !!!

Thursday, March 26, 2015

ரத்தம் கசியும் நினைவுகளூடே உப்புவேலி

எனக்குக் காந்தி மீது ஆற்றவே முடியாத கோபம் இருக்கிறது. எனது தாத்தா மறைந்த மாணிக்கதேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் பணி செய்தவர். அவர் வம்சத்தில் வந்தவன் என்பதால் கூட காந்தி மீது கோபம் வர காரணமாக இருக்கலாம். 

தாத்தா மலேசிய சிறையிலிருந்து இந்தியா வந்த பிறகு அவர் கூடவே கொண்டு வந்திருந்த ராணுவ சட்டையை நான் மார்கழி மாதக் குளிருக்கு அணிந்து கொள்வேன். சொரசொரப்பான மடக்குக் கத்தி ஒன்றினை அவர் இடுப்பில் சொருகி வைத்திருப்பார். அதுவும் ராணுவத்தில் இருந்து கொண்டு வந்ததுதான் என்பார். அதை விரிக்க என் சிறு வயதில் வலுப் போதவில்லை. 

ஒரு முறை முயற்சித்து ஆள்காட்டி விரலின் நடுவில் கத்தி பிளந்தது போல வெட்டி விட்டது. அதன் பிறகு அந்தக் கத்தியைப் பார்த்தாலே எனக்குள் விரலில் இருந்து கொட்டிய இரத்தம் நினைவுக்கு வந்து விடும். ராணுவத்தின் கத்தி என்பதை அது சரியாக நிரூபித்தது. அதன் பிறகு எனக்கு விபரம் தெரிந்த நாள் வரை விரித்துப் பார்க்கவே இல்லை. அந்தக் கத்தியில் ஒரு குத்தூசி போல ஒரு பகுதி இருக்கும். அதை வைத்துதான் குத்துயிரும் குலையுயிருமாய் கிடக்கும் வீரர்களுக்கு மோட்சம் கொடுப்பார்களாம். நிற்க !

இந்திய வரலாற்றுச் சரித்திரத்தில் மறைந்து போன ஒரு விஷயம் என்பதாய் ஜெயமோகன் தனது இணையதளத்தில் உப்புவேலி என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தார். எனது நண்பரிடம் சொல்லி உடனடியாக அந்தப் புத்தகத்தை வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சாதாரண கம்பெனியாக இந்தியாவுக்குள் நுழையும் போது வளமுடன் இருந்த இந்தியாவை, ஏழை நாடாக மாற்றியது மட்டுமல்லாமல், கலாச்சாரத்தையும், கல்வியையும் சீரழித்து சின்னாபின்னப் படுத்தியவர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்கிற வரையில் வரலாறு சொல்லிக் கொடுத்தது. ஆனால் இந்த உப்புவேலி காட்டும் இன்னொரு முகம் மேற்கண்ட சீரழிவை விடவும் கொடூரமான ஒன்றாய் இருக்கிறது. 

உப்புக்கு வரி, அதனால் உருவான வேலி (சுங்கம்) அதனால் மாண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பிரிட்டன் இந்தியாவை ஒரு இடம் விடாமல் சீரழித்து சின்னப்படுத்தி அழித்ததை ஒரு பிரிட்டன்வாசி எழுதி இருப்பதைப் படிக்கையில் நினைவுகளில் ரத்தம் துளிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

காந்தியின் அஹிம்சை மீது எனக்கு வெறுப்பு மண்டுகிறது. அதனால் அவர் மீது எனக்கு எல்லையில்லாக் கோபம் கொப்பளிக்கிறது. அஹிம்சை என்பது கெஞ்சுவது, இறைஞ்சுவது என்ற எண்ணம் உதித்தபடியே இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் உண்மை என்னை அப்படிச் சிந்திக் வைக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் அவசியம் படித்து உணர வேண்டிய அற்புதமான ஒரு நூல் “உப்புவேலி”. சிறில் அலெக்சின் மொழிபெயர்ப்பில் இந்தியாவின் வழிந்தோடிய ரத்தம் உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகள் படம் போல விரிகின்றன. எழுத்து பதிப்பகத்தின் அற்புதமான படைப்பு. 


Tuesday, February 24, 2015

குரு பூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே, வருகின்ற 01.03.2015 தேதியன்று கோயமுத்தூர் மாவட்டம், முள்ளங்காடு, பூண்டியில் அமைந்திருக்கும் எமது குரு நாதரின் ஆஸ்ரமத்தில் குருபூஜை விழா சிறப்புற நடைபெற உள்ளது. ஆன்மீக நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு குருவின் அருள் பெற வேண்டுகிறேன்.



Monday, February 2, 2015

ஆனந்தக் குளியல்


விபரம் தெரிந்த வயதில் நான் ஆவணம் கிராமத்தில் உள்ள கிளை ஆற்றில் ஆட்டம் போடுவதுண்டு. கண்கள் சிவக்கச் சிவக்க குளியல். காவிரியாற்றின் கடைமடை ஊரின் கிழக்கிலே செல்லும் ஆற்றிலிருந்து ஒரு சிறு வாய்க்கால் போல பிரிந்து செல்லும் சிறு ஆற்றின் இணைப்பில் உள்ள படிகளில் தான் குளியல் போடுவது வழக்கம். தடுப்பிலிருந்து சீறும் தண்ணீரில் தலையைக்காட்டிக் குளிப்பது ஆனந்தமோ ஆனந்தம். மாலை வேளைகளில் இரு சுவற்றின் மருங்கிலும் சின்னஞ்ச் சிறு மீன்கள் பாசியில் குத்திக் கொண்டு சரம் சரமாய் தொங்கும் அழகு மனதை அள்ளும். அதைக் கையால் தண்ணீருக்குள் தள்ளி விடுவேன். மொசு மொசுவென மொய்க்கும். ஆஹா அற்புதம்.

ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால் குளத்தில் குளியல், கோடையில் வடக்குத் தெருக்காரரின் தோட்டத்தில் உள்ள போரில் குளியல் போடுவதுண்டு. எனது வகுப்புத் தோழன் பனைமரத்துக் கள் இறக்குவான். தோட்டத்துக்குப் போகும் வழியில் தான் அவன் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடம் ஒரு மக் பனங்கள் வாங்கிக் குடிப்பேன். அதற்கு சைடு டிஷ் நண்டு வறுவல், ஆம்லேட் மற்றும் காரச் சுண்டல். சும்மா அள்ளும். கள் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றால் மாமா தோலை உரித்து உப்புத் தடவி விடுவார். ஆகவே அதை மறைக்க தோட்டத்து போரில் இரண்டு மணி நேரத்திற்கு குளியல் போட்டு விட்டு கள் வாசம் அடிக்காதவாறு சரி செய்து கொள்வதுண்டு.

ஆனால் வீரியன்கோட்டை சித்தப்பா வீட்டிலோ தலை கீழ். கோடையில் வீரியன்கோட்டைக்குச் செல்வதுண்டு. குளத்து மீனை விடிகாலையில் பிடித்து வந்து வறுத்து வைத்துக் கொண்டு, சின்ன தம்பி சிதம்பரம் வாங்கிக் கொண்டு வரும் தென்னங்கள்ளை குடித்துக் கொண்டே வறுத்த மீனைச் சாப்பிடுவது என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சித்தப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். சின்னம்மா தான் கோவித்துக் கொள்வார்கள். தம்பி விடவே மாட்டான். சின்னம்மா வைக்கும் மீன் குழம்பின் ருசியை இதுவரையில் நான் எங்கும் சாப்பிட்டதே இல்லை. அந்தக் கைப்பக்குவம் போனது போனதுதான். சின்னம்மா இறந்த பிறகு அந்தக் குழம்பின் ருசியும் அவரோடு சென்று விட்டது. இப்போது வாழ்க்கையோ முற்றிலுமாக மாறிப் போய் விட்டது. 

கோவை வந்த பிறகு குளியல் ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. உடம்புச் சூடு போக குளிக்க முடிவதில்லை என்பதில் எனக்குள் ஒரு ஆற்றாமை தொடர்ந்து கொண்டே இருந்தது. பாத்ரூமில் குளிப்பது எல்லாம் குளியலே இல்லை. சும்மா கோழி கொத்துவது போலத்தான் குளியலும். எரிச்சல் மண்டும் சில நேரங்களில். ஊருக்குச் செல்லும் போது கரூர் தாண்டி திருச்சி வழியில் செல்லும் போது சில நேரங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தால் ஒரு அவசரக் குளியலைப் போட்டு விடுவேன். இருப்பினும் அந்த சந்தோசம் கிடைப்பதில்லை.


சமீபத்தில் எனது குரு நாதரைத் தரிசிக்க வெள்ளிங்கிரி சென்றேன். பாரஸ்ட் காரர்கள் ஆஸிரமத்துக்குச் செல்லும் வழியில் பெரிய பள்ளத்தை தோண்டி விட்டார்கள். ஏனென்றுதான் தெரியவில்லை. அங்கிருக்கும் மக்கள் பள்ளத்துக்குள் இறங்கி ஆற்றுக்கு குளிக்கச் சென்று கொண்டிருந்தார்கள். ஆக்டிவா ஆசிரமத்துக்கு போக முடியாது. காரும் போக முடியாது. எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமிகள் ஒரு வண்டியை வாங்கி விட்டார். காங்கேயம் காளைகள் பூட்டிய வண்டி. ஆக்டிவாவை கொண்டு போய் நிறுத்திவிட்டு வண்டியில் அமர்ந்தேன். ’ஜல் ஜல்’ என சலங்கை மணிகள் இசைக்க மாட்டு வண்டியை வெள்ளிங்கிரி மலையிலிருந்து வழிந்து வரும் ஆற்றுக்குள் இறக்கி ஆற்றின் ஊடே ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றார் சாமி. வண்டியை நிறுத்தி விட்டு, மாடுகளை அவிழ்த்து அங்கிருந்த கரையோரமாய் மேய்வதற்காக கட்டி வைத்து விட்டு சாமி வண்டியில் அமர்ந்து விட்டார். 

குளியல் போட ஆரம்பித்தேன். அப்பப்பா என்ன ஒரு ஜில்! ஐஸ் கட்டி போல தெளிந்த தண்ணீர். உடம்பே சில்லிட்டது. நல்ல குளியல். உடம்பெல்லாம் சில்லிட்டு விட்டது. அப்படி ஒரு குளியல். புத்துணர்ச்சி என்றால் புத்துணர்ச்சி. எத்தனை மூலிகளைக் கடந்து வருகிறதோ தெரியவில்லை. சுவையோ சுவை. ஆசை தீர குளியலை முடித்து விட்டு ஆசிரமம் வந்தேன். அற்புதமான மனம் ஒடுங்கிய தியானத்தினை என் குரு நாதர் அருளினார். சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.

மனத்தில் எந்த வித சிந்தனையும் இல்லாது, மனம் ஒடுங்கிய நிலையில் எனது குரு நாதரின் ஆசீர்வாதத்தில் குளித்த அந்தத் தருணங்களை இனி எப்போது எனக்கருளுவாரோ?



Friday, January 9, 2015

சித்து விளையாட்டு

இரண்டாண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் வீடு தேடி வந்தார் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகச் சொன்னார். எனது பிளாக்கினைப் படித்துப் பார்த்தவர் என்னைச் சந்தித்து விட்டு அதன் பிறகு அவர் அவரின் முடிவினைத் தேடிக்கொள்ள இருப்பதாகச் சொன்னார்.

குடும்ப உறவுக்குள் பிரச்சினை. சொத்து சம்பந்தமாக கோர்ட்டில் வழக்காடுகிறார்கள். பணம் பிரச்சினை. குழந்தையில்லை. அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் நண்பராகவும், குருவாகவும் மதித்த ஒருவரைச் சந்திக்கும்படியும், அதன் பிறகு தற்கொலை செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டாண்டுகள் ஓடோடின.  நேற்று என்னைச் சந்தித்தார் அவர்.

அவருக்கு ஒரு பெண் குழந்தை. ரோஜாப்பூ மாதிரி இருந்தது அப்பெண் குழந்தை. மீண்டும் பணப் பிரச்சினை. எந்தத் தொழில் செய்வது என்று தெரியவில்லை. குழப்பம். குழந்தையை எப்படி வளர்ப்பது? ஒரே பிரச்சினை. குடும்பத்தின் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இன்னும் இழுத்துக்
கொண்டிருக்கிறது. புலம்ப ஆரம்பித்தார்.

தற்கொலை செய்ய முடிவெடுத்தவருக்கு கையில் ஒரு குழந்தையைக் கொடுத்து தன் சித்து விளையாட்டை ஆட ஆரம்பித்திருக்கிறான் இறைவன் என்று கண்டு கொண்டேன். கர்ம வினைப் பயனை அனுபவித்தாக வேண்டுமய்யா என்று கூவ வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவர். அவரை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி வைத்தேன். எம் குரு அவரைக் கவனித்துக் கொள்வார். இனி அவர் வாழ்க்கை சிறக்கும்.

யாருக்குப் பிரச்சினையில்லை இவ்வுலகில். புரிந்து கொண்டவர்கள் அமைதியாக வாழ்வார்கள். புரியாதவர்கள் புலம்புவார்கள். எனக்கும் பிரச்சினை வந்தது. 

எனது குரு என்னிடம் கேட்டார், “உங்களுக்கு எத்தனை கோடி வேண்டும்?”. 

உடனடியாக மறுத்து விட்டேன். கர்ம வினை துரத்துமே, பணமா கர்ம வினையை சரி செய்யும்? நீங்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே, இலங்கையிலும், தமிழகத்திலும் என்ன நடந்தது என்று. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடிந்தது?

எல்லோருக்கும் எல்லாமும் புரிந்து விட்டால் !  இந்தப் பாடல் உங்களுக்குப் புரிந்தால் இப்பதிவும் புரியும்


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே. - திருமூலரின் திருமந்திரம்


Monday, December 29, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம் - தொடர்ச்சி

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கோவை டைம்ஸ் பகுதியில் ரஜினி காந்த் அவர்களின் சொத்து ஏலம் பற்றி ஒரு பத்தி வெளிவந்திருக்கிறது. எந்த ஒரு செய்திக்கும் விரிவான அலசலை அளிக்கும் பத்திரிக்கை ரஜினி என்கிற கோபுரத்தின் கதையைப் பற்றி விரிவாக அலசி இருக்க வேண்டிய தருணத்தை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறது.

கோடம்பாக்கத்தின் தெருக்களிலும், ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் இளைமையையும், எதிர்காலத்தையும், குடும்பத்தையும் தொலைத்து விட்டு கட்டுக்கட்டாகப் பணமும், புகழும் கிடைக்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் மனதுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி இருக்க வேண்டிய அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியா தவற விட்டு தன் ஊடக தர்மத்தை வசதியாக மறந்து விட்டது. சினிமா என்ற மாயா உலகத்தின் மறுபக்கம் தான் ரஜினியின் சொத்து ஏலத்திற்கு வந்தது. இதே போல அமிதாப்பச்சனின் சொத்தும் ஏலத்திற்கு வந்தது நினைவிலிருக்கலாம். சினிமா மோகத்தின் மீதான மாயையை அலசி ஆராய்ந்து கட்டுரையை வெளியிட வேண்டிய தர்மத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா மறந்து விட்டது.

என்னைப் போன்று எத்தனை எத்தனையோ லட்சோப லட்சம் வாசகர்கள் கொடுக்கும் சிறு பணத்தில் வளர்ந்து நிற்கும் இந்தப் பத்திரிக்கை மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடமைக்கு ஆட்பட்டது. ஆனால் ரஜினி போன்ற மாயா உருவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தர்மத்தைக் காக்கத் தவறி நிற்கிறது.

என்றைக்கு ஒரு தராசு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கிறதோ அன்றிலிருந்து தன் முடிவுக்கான ஆரம்பப் படியை அது எடுத்து வைத்து விட்டது எனலாம். நூற்றாண்டு கால டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய நிலைக்கு இன்னுமொரு உதாரணம்,

இன்றைய சினிமா விமர்சனத்தில் கயல் திரைப்பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வெள்ளைக்காரத்துரை திரைப்படத்தை தவறுதலாக வெளியிட்டு இருக்கிறது.

காலம் சொல்லும் பதிலுக்கு கேள்வியை இவர்களே தயார் செய்திருக்கிறார்கள். பதில் வெகு கடுமையாக இருக்கக் கூடாது என்று அதன் வாசகன் என்ற நிலையில் விரும்புகிறேன்.


Saturday, December 27, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம்

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கோவையில் தன் பதிப்பினை வெளியிட்ட ஆண்டு முதலாய் இது நாள் வரையிலும் தொடர்ந்து அப்பத்திரிக்கையை வாசித்து வரும் வாசகன் என்ற முறையில் இப்பதிவு எழுத எனக்கு உரிமை இருக்கிறது என்ற வகையில் எழுதுகிறேன்.

தினமணி, தினத்தந்தி, தினமலர் மற்றும் இதர நாளிதழ்களை நான் செய்திக்காக மட்டுமே படிப்பேன். ஒரு வகையான டெம்ப்ளேட் தனமான செய்திகளையே தொடர்ந்து வழங்கி வரும் இப்பத்திரிக்கைகள் மீதான ஒரு வித பிடிமானம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மீது எனக்கு மிகுந்த பிரியம். அதன் செய்திகளும் தலைப்பும் செய்திக்குச் சம்பந்தப்பட்டவர்களை விமர்சித்தே வெளிவரும். தகவல் செய்திகள் கூட அப்படித்தான் இருக்கும்.

மக்களின் வரிப்பணத்தில் ஊழியம் பெறும் அரசு வேலையில் இருப்போரும், மக்கள் பணத்தை செலவிடும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் தன் கடமை மறந்து தனக்கு சம்பளமும், பணிப்பாதுகாப்பும் தரும் மக்களுக்குத் துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபடும் போது அந்தத் தவற்றினைச் சுட்டிக்காட்டி அவர்களை சட்டப்படியான வழியில் பணியைத் தொடரச் செய்ய வேண்டிய மாபெரும் சேவையில் இருக்கும் ஊடகத்தினர் தம் கடமை மறந்து செய்திகளை வெளியிட மறுப்பதும், மறைப்பதும் தகுமா? என்ற கேள்வி எனக்குள் உதித்தது.

ஏனென்றால் சின்னஞ் சிறு செய்தியாக இருப்பினும் அதை விரிவாக எழுதும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழகத்தின் தன்னிகரில்லா நடிகரும், உலகத்திலேயே அதிக மக்கள் விரும்பும் நடிகருமான திரு.ரஜினி காந்த் சொத்து ஏலம் வருகிறது என்ற செய்தியை ஒரு வரியாகக் கூட வெளியிடவில்லை. ஏனென்று யாரும் கேட்கப்போவதில்லை அப்படியே கேட்டாலும்  அவர்கள் பதில் சொல்லப்போவதும் இல்லை. எந்தச் செய்தியை வெளியிட வேண்டும்? எந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்ற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது என்கிற போதிலும், டைம்ஸ் நவ் டிவியில் பலரைக் கேள்வி கேட்கும் அர்னாப்பை இனி பார்க்கும் போது மனதுக்குள் நகைப்புத்தான் தோன்றும்.

வேஷம் கலைந்து விட்டது....



Friday, November 28, 2014

கார்த்திகை தீப திருவிழா அழைப்பிதழ்



Wednesday, November 26, 2014

காலம் சொல்லித்தரும் பாடம்

வாழ்க்கை பல புதிர்களைக் கொண்டது என்கிறார்கள். புரியாதவர்களுக்கு புதிர். புரிந்தவர்களுக்கோ அது ஒரு விளையாட்டு மைதானம். 

அழகிய மயிலாள் ஒருத்திக்கு தன் அழகுமேல் அதீத ஆர்வம். அதனால் கர்வம் ஏற்படுகிறது. அவள் தன்னை மிக உயர்ந்தவள் என்று எண்ணிக் கொள்கிறாள். 

ஆனால் உண்மையில் என்ன நடக்கும்? நாட்கள் ஆக ஆக முகம் சுருங்கும், கண்கள் களையிழக்கும், அழகிய பிருஷ்டங்கள் கூனல் விழுந்து, முடி நரைத்து தள்ளாடி நடப்பாள். இதை அவள் இளைமையில் உணர்கின்றாளா என்றால் இல்லை. அப்படி அவள் வாழ்க்கையில் நிச்சயம் நடக்கப் போகின்ற இந்த மாறுதல்களை நினைத்துப் பார்த்திருந்தால் இளமையை எண்ணிக் கர்வம் கொண்டிருக்க மாட்டாள். இந்த உண்மையை அவள் அவளின் முதுமையான காலத்தில் தான் உணர்வாள்.

காலம் கடந்த ஞானோதயம் வந்து என்ன ஆகப்போகின்றது. இதைத்தான் மனிதனை மறைக்கும் மாயை என்கிறார்கள். 

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண்கள், ஒரு ஆண். அந்தப் பெண்மணிக்கு மூத்த மகள் மீது கொள்ளைப் பிரியம். மற்ற இரண்டு குழந்தைகளை அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார். மூத்த பெண்ணுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள். இரண்டையும் அப்பெண்மணிதான் கண்ணுக்குள்ளே வைத்து வளர்த்தார். 

பசங்களும் வளர்ந்தார்கள். இருவரும் பெரியவர்களாகி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். தனது பேரன்கள் மீது அந்தப் பெண்மணிக்கு அன்போ அன்பு. அப்படி ஒரு அன்பு. இளைய பேரன் வெளிநாடு சென்றான். போனில் பாட்டியோடு பேசிக் கொள்வான். காண்ட்ராக்ட் முடிந்து திரும்பி வருவதற்கு முதல் நாள் மூத்த பேரன் தன் பாட்டியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு வந்தான். ஏன் தம்மைத் திடீரென்று தன் வீட்டில் கொண்டு போய் விடுகிறார்கள் என்று அப்பெண்மணிக்கு புரியவில்லை. இளைய பேரன் வெளி நாட்டில் இருந்து வரும் போது தன் அம்மா கூட இருப்பதை மூத்த மகளும், மருமகனும் விரும்பவில்லை என்பதை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டார் அப்பெண்மணி.

பந்த பாசம் என்பதெல்லாம் இருக்கிறது என்று “கண்ணூ” பதிவில் படித்தோம். இந்தச் சம்பவம் வேறு மாதிரி இருக்கிறது. பந்தபாசம் எல்லாம் சும்மாதானா என்று நினைக்கத் தோன்றும்.

இந்தச் சம்பவத்தை நடத்தியது தர்மம். தர்மத்தின் வழி மிகவும் சூட்சுமமானது என்று நான் “தர்மத்தின் தீர்ப்புக் கதைகள்” என்ற பகுதியில் எழுதினேன். அப்பெண்மணிக்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் அவரே. எதைக் கொடுத்தாரோ அது இல்லை என்று உணர்ந்திருக்கிறார். 

தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்றேன் அல்லவா? இனி தெய்வத்தின் தர்மம் என்ன என்பதையும், அதற்கான விளக்கத்தையும் இப்போது பார்க்கலாம்.

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில்,நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

“உத்தவரே ! அன்று குருக்ஷேத்திரப்போரில் அர்ஜூனனுக்காக நான் சொன்னது, ‘பகவத்கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள்,”உத்தவ கீதை”. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன். 

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்
.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

'ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன். 

''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!. 

(மேற்கண்டவை நான் படித்தது.அதை அப்படியே தந்திருக்கிறேன். இப்போது புரிகிறதா தர்மத்தின் பாதை என்ன என்பது? அது வெகு வெகு சூட்சுமமானது)

Saturday, November 15, 2014

கண்ணூ...!

சமீபத்தில் எனது பெரிய மாமா காலமாகி விட்டார். இறந்து கிடந்த மாமாவை பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணீர் பெருக்கெடுத்தது. உழைத்தே உயர்ந்தவர் அவர். சில சடங்குகளுக்காக செல்ல வேண்டியிருந்ததால் டிரைவரை அழைத்துக் காரை எடுக்கச் சொல்லி கிளம்பினேன்.

”அதுக்குள் ஏன் கிளம்புகிறாய்?” என்ற குரல் கேட்டது. திரும்பினேன். மாமாவின் மூத்த பையன். பெரிய மாமா மகனும் நானும் சிறிய வயதில்  பிரிக்க முடியாத தோழர்களாய் இருந்தோம். இடையில் என்னென்னவோ மாற்றங்கள். அவனும் நானும் பேசி பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டன.  ஏன் நானும் அவனும் பேசிக் கொள்ளாமலேயே இருந்தோம் என்று யோசித்தேன். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக யோசித்துப் பார்த்தேன். காரணம் மட்டும் புரியவில்லை. சிறிய வயதில், அறியாமல் செய்யக் கூடிய செயல்களின் பிடிவாதம் எவ்வளவு பெரிய அனர்த்தங்களை உண்டு செய்து விடுகின்றன.  இதனால் என்ன சாதித்து விட்டோம் என்று நினைத்துப் பார்த்த போது வெறுமை தான் மண்டியது. எரிச்சலில் மனசு எரிந்தது. சிறிய வயதில் அந்த காலத்துக்கே உண்டான பிடிவாத குணத்தினால் நாம் எத்தனையோ நல்லவைகளையும், நல்லவர்களையும் இழந்து விடுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

காலம் தான் மனிதர்களுக்கு பெரிய படிப்பினைகளைக் கற்றுக் கொடுக்கின்றன. அவன் முழுமையாகப் படித்து முடிக்கிற போது, அவனைத் தனக்குள் இழுத்துக் கொண்டு விடுகிறது. மீண்டும் வெற்றிடம் !

எனது நண்பரின் 86 வயதான தாயாருக்கு உடல் நிலை சரியில்லை. நண்பரோடு பிறதந்து மூன்று ஆண்கள். பெண்பிள்ளைகள் இல்லையே, நண்பரின் தாயாரை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற சிந்தனை. நண்பருக்கோ 50 வயது. இவர்தான் கடைக்குட்டி. நண்பரின் மூத்த அண்ணாவுக்கு 65 வயது இருக்கும்.

நானும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவமனைக்கு நால்வரில் ஒவ்வொருவரும் முறை வைத்து அம்மாவைப் பார்த்துக் கொள்கின்றனர். எனக்குள் ஆச்சரியம் மண்டியது. நான் அங்கு இருந்த நேரத்துக்குள் பால் வாங்கிக் கொண்டு வந்து ஆற்றி ஊட்டி விடுவதென்ன, வாய் துடைத்து விடுவதென்ன, தலை முடியைக் கட்டி விடுவதென்ன. அடடா என்ன பரிவு. ’கண்ணூ’ என்று நிமிடத்திற்கு ஒரு தடவை அந்த பாட்டி அழைக்க, ‘ஏம்மா? என்ன வேணும்?’ என்று நண்பரின் சகோதரர் கேட்க பத்து நிமிடத்தில் திரும்பி விடலாமென்று நினைத்துச் சென்றவன் ஒரு மணி நேரமாய் அமர்ந்து விட்டேன். 

கலைந்து கிடந்த தாயின் தலைமுடியை நீவி விட்டவர் என்னிடம், ‘என் தம்பி அம்மாவுக்கு அழகாய் தலை சீவி, பின்னலிடுவான்’ என்றார். எனக்கு கண்கள் பனித்தன. 

பெண் பிள்ளை இருந்தால் செத்துக் கிடக்கும் போது தலைமாட்டில் அமர்ந்து அழும் என்பார்கள். பெரிய மாமா இறந்த போது தம்பிக்கள் என்னிடம், ‘உனக்காவது ஒரு பெண் பிள்ளை இருக்கிறது, தலை மாட்டில் உட்கார்ந்து அழ ஆள் இருக்கு’ என்றார்கள். ’ஏன் கவலைப்படுகின்றீர்கள்? அவள் உங்கள் தலைமாட்டிலும் உட்கார்ந்து அழுவாள்’ என்றுச் சொன்னேன். 

ஆண் பிள்ளையானால் என்ன? பெண் பிள்ளையானால் என்ன? வளர்க்கும் வளர்ப்பில் இருக்கிறது. தன் தாயை எந்த வித அசூயையும் இன்றி குழந்தையைப் போல கவனித்துக் கொண்டிருக்கும் அந்த சகோதர்கள் போன்றோரால் தான் மனிதம் இன்னும் உயிருடன் இருக்கிறது. மனித சமூகத்தில அன்பும், பாசமும் என்றைக்கும் அழிவதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நண்பரின் தாயாரின் குரல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

‘கண்ணூ.....!’

Saturday, November 1, 2014

நிலம் (14) - இப்படியும் பிரச்சினை வருமா?

மாலை நேரம். மழை தூரிக் கொண்டிருந்தது. சிலு சிலுவென காற்று. அலுவலகத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு பத்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.

என்னைத் தேடிக் கொண்டு ஒரு வயதானவர் வந்தார். வரவேற்று அமர வைத்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மெதுவாக அவர் வந்த காரணமென்ன என விசாரித்தேன்.

அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு தலை சுற்றியது. 

எந்த ஒரு பிரச்சினைக்கும் முடிவு என்பது உண்டு என்பது என்னைப் பொறுத்தவரை உண்மையே. தேவர் சமுதாயத்தில் பிறந்ததால் என்னவோ எனக்கு விசுக்கென்று மூக்கின் மீது கோபம் வந்து விடும். ஆள் சரியில்லை என்றால் அடுத்த நொடியில் முடிவெடுத்து விடுவேன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. 

எனது குரு நாதர் தனபால் அவர்கள் நில பேரங்களில் நடந்து கொள்ளும் விதம், அவர் எப்படி ஒவ்வொரு நில பேரங்களையும் வெற்றிகரமாக செய்கிறார் என்பதற்கு காரணம் இருப்பதைக் கண்டுபிடித்தேன். 

பொறுமை, நிதானம் மேலும் ஒரு காரணம் உண்டு (அது ரகசியம்)

அவரின் வழிகாட்டுதலின் காரணமாக, அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடத்தின் காரணத்தால், சமீபத்தில் குத்து வெட்டாக நடந்து விட வேண்டிய ஒரு பிரச்சினையை வெகு சுமூகமாக முடித்தேன். அது ஒரு தனிக்கதை. அதை இன்னொரு பதிவாகப் பார்க்கலாம்.

சரி பெரியவர் பிரச்சினையைப் பார்ப்போம்.

பெரியவர் மூன்று ஏக்கர் நிலத்தினை ஒரு கூட்டுக்குடும்பத்திடம் இருந்து கிரையம் பெற்றிருக்கிறார். கொஞ்ச நாள் சென்ற பிறகு மூன்று ஏக்கரில் சுமார் இரண்டு ஏக்கரை வேறொருவருக்கு விற்றிருக்கிறார். நாட்கள் கழிந்தன. மீதமிருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தினைக் கிரையம் செய்து கொடுக்க சுத்தம் செய்ய முயன்ற போது வேறொருவர் வந்து தடுத்திருக்கிறார். அந்த ஒரு ஏக்கர் பூமி எனக்குச் சொந்தமென்று சொல்லி இருக்கிறார் தடுத்தவர்.

இருவரும் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவரிடம் முன்பு நிலத்தை விற்றவர்களில் ஒருவர் ஒரு ஏக்கரை வேறொருவருக்கு விற்றிருக்கிறார். 

கூட்டுக் குடும்பச் சொத்தினை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக விற்று விட்டார்கள், மீண்டும் மறுபடியும் விற்ற சொத்தை வேறு ஒருவருக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்த ஒருவர் மூலம் விற்க முடியுமா? இதுதான் பிரச்சினை. 

இதில் நடந்திருப்பது என்ன தெரியுமா?

கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் சொத்தினை விற்கும் போது கோர்ட்டில் பாகம் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கின்றார்கள். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவர்களின் பணத்தேவைக்காக பெரியவரிடம் சொத்தில் ஒரு பகுதியை விற்றிருக்கின்றார்கள். இது தெரியாமல் பெரியவர் சொத்தினை வாங்கி இருக்கிறார். பெரியவர் தான் வாங்கிய மூன்று ஏக்கர் பூமியில் இரண்டு ஏக்கர் நிலத்தினை விற்று விட்டார். 

கோர்ட்டு மூலம் பாகம் பிரிக்கப்பட்டு அவரவர் சொத்துக்கு பாகம் வந்ததும் பாகத்தைப் பெற்றவர் மீண்டும் அந்தச் சொத்தில் ஒரு ஏக்கரினை வேறொருவருக்கு விற்றிருக்கின்றார்.

பெரியவர் கிரையம் பெற்றதும், விற்றதும் சட்டப்படி சரியானது அல்ல. இதில் தவறு செய்திருப்பவர்கள் அந்தக் கூட்டுக் குடும்பத்தார்கள். வழக்கு கோர்ட்டில் இருக்கும் போதே சொத்தினைக் கிரையம் செய்து கொடுப்பது கிரிமினல் குற்றம்.

இப்போது பெரியவருக்குப் பிரச்சினை. சொத்தின் விலையோ பெரிது. என்ன செய்வது? கையைப் பிசைந்துக் கொண்டிருக்கின்றார் பெரியவர்.

பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும். பார்ப்போம். 

சொத்து வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை டெம்ப்ளேட்டாக எழுத முடியாது. பலரும் மெயிலில் கேட்கின்றார்கள். எப்படி எழுதுவது? சாத்தியமிருக்கிறதா? ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருப்பதைக் கவனித்துக் கொண்டுதானே வருகின்றீர்கள்?

குறிப்பு: லீகல் ஒப்பீனியனுக்கு எவ்வளவு கட்டணம் என்று பலர் கேட்கின்றார்கள். பல பேர் போனில் விபரம் கேட்கின்றார்கள். லீகல் ஒப்பீனியனுக்கு ரூபாய் 25,000/- கட்டணம். இதில் பத்திரத்தின் டிராப்டும் அடங்கும். கிரையம் முடித்ததும் மீண்டும் லீகல் ஒப்பீனியன் வழங்கப்படும். கட்டணத்தை ஆவணங்களுடன் வங்கி வரையோலையாக “M.THANGAVEL" என்ற பெயருக்கு அனுப்பி வைக்கவும். 

அலுவலக முகவரி மேலே இருக்கிறது.




Saturday, October 25, 2014

நிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்

சென்னையிலிருந்து நண்பரின் சிபாரிசின் பேரில் ஒருவர் கோவை வந்து என்னைச் சந்தித்தார். அவருடன் அவருடைய நண்பரும் வந்திருந்தார். இருவரும் பெரிய தொழிலதிபர்கள். கோடிகளில் வருமானம் வருகின்றது. சென்னையின் ஒரு பிரதான இடத்தினை வாங்குவதற்கு லீகல் ஒப்பீனியன் வேண்டுமென்று கேட்டார்கள். 

அவர்களிடமிருந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டேன். அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து கவனமாக ஆராய்ந்து பார்த்தேன்.

அந்த ஆவணத்தில் கணவருக்கும் மனைவிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்திருப்பதும், வழக்கில் மனைவி ஜெயித்திருப்பதும் தெரிய வந்தது. மிகச் சாமர்த்தியமாக கணவன், மனைவி என்பது தெரியாமலே ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.

இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று மனதுக்குள் ஆந்தை அலறியது.

சொத்து இருக்கும் கோர்ட்டில் ஏதாவது டாக்குமெண்ட்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்தேன். அங்கு இந்தச் சொத்தினை யாருக்கும் விற்க கூடாது என்று தடையாணை இருந்தது. அது எதுவும் வில்லங்கச் சான்றிதழில் வரவில்லை.

தடையாணை பெற்ற தேதியிலிருந்து மிகச் சரியாக ஒரு மாதம் கழித்து மேற்படிச் சொத்தின் ஆவணத்தினை வேறொரு வங்கியில் வைத்துக் கடனும் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

இந்தச் சொத்தினை வாங்குவதற்கு வந்தவர் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினை போட்டு கோடிகளில் முன்பணம் செலுத்தி இருந்தார். 

மேற்படி விஷயங்களைச் சொன்னது ஆள் பதட்டமாகி விட்டார். அவருக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் இவர் பெரிய  நிறுவனத்தின் முதலாளி. இத்தனைக்கும் அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்பு வேறொரு வக்கீலிடம் ஒப்பீனியன் வேறு வாங்கியிருக்கிறார். எப்படி இருக்கிறது சேதி பாருங்கள்?

சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட்டை ஆவணமாகக் கூட கருதமுடியாது என்று ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கிறது அவருக்கு தெரியவில்லை. அல்லது அந்த வக்கீலுக்குத் தெரியவில்லை போலும்.

சிக்கிக் கொண்டார் வசமாக. முள்ளின் மீது சேலை பட்டு விட்டது. சாமர்த்தியம் இருந்தால் தான் சேலை கிழியாமல் எடுக்க முடியும்.

மேற்படிச் சொத்தின் பேரில் கடன் இருக்கிறது. மேற்படிப் பிரச்சினை தெரியாமல் கடன் எப்படிக் கொடுத்தார்கள் என்பது வேறு ஒரு விஷயம். 

கோர்ட்டில் விற்க தடையாணை இருக்கிறது. இத்தனை பிரச்சினை இருக்கும் போது மேற்படிச் சொத்தினை எப்படி வாங்க முடியும்?

நிச்சயம் முடியாது அல்லவா? பெரும் பணம் போட்டு ஒரு வில்லங்கச் சொத்தினை எப்படி வாங்க மனது  வரும். 

அவருக்கு ஆறுதல் சொல்லி இந்தச் சொத்தினை உங்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முயல்கிறேன் என்றுச் சொல்லி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.

சரியாக இரண்டு மாதங்கள். சொத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்துச் சரி செய்யப்பட்டு, வில்லங்கம் ஏதுமில்லாத சொத்தாக கிரையம் பெற்றார் அவர்.

இப்படி ஒரு சொத்தின் மீது கண்ணுக்குத் தெரியாத பல வில்லங்கங்கள் இருக்கும். வெறும் வில்லங்கச் சான்றிதழால் மட்டுமே அதனைக் கண்டுபிடித்து விட முடியாது. கோர்ட்டில் இருக்கும் பிரச்சினையை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாவிட்டால் வில்லங்கம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

ஆகவே ஒரு சொத்தினை வாங்கப் போகின்றீர்கள் என்றால் வெகு கவனம் தேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத வில்லங்கங்களை சாமர்த்தியம் உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் உண்மை. முதன் முதலாகச் சொத்து வாங்குபவர்களுக்கு வெகு சிரமம் தான்.





Wednesday, October 8, 2014

நீதியா வென்றது?

உண்மை என்பது எப்போதும் இருப்பது. எப்போதும் பேசுவதுமில்லை. சாட்சியாக வந்து நிற்பதும் இல்லை. உண்மையின் அர்த்தமே மனிதனின் வாழ்க்கையோடு சூட்சுமமாய் புதைந்து கிடப்பது. உண்மை மனிதனின் மனசாட்சியுடன் தொடர்புடையது.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் புதை குழியில் பதுங்கி இருந்த போது அவருடன் உரையாடிக்கொண்டிருந்துப்பது எதுவோ அது தான் உண்மை. என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

உண்மையும் நீதியும் வேறு வேறு. நீதிக்கு என்று தனி வரையறை. உண்மைக்கென்று தனி வரையறை. இன்னும் புரியும் படிச் சொல்ல வேண்டுமென்றால் மகாபாரதக்கதையை எடுத்துக் கொள்வோம்.

மகாபாரதத்திலே பாண்டவரின் அரண்மனையில் தண்ணீரில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்து நகைத்த பாஞ்சாலி சிரிப்பு முகத்தினால் துரியோதனன் நடந்து கொண்டது அவனுக்கான நீதி. இந்த ஒரு காரணத்தால் அவிழ்ந்து விழுந்த கூந்தலுக்காக கொன்று குவிக்கப்பட்டார்கள் துரியோதனாதிகள். ஆனால் அதுதான் உண்மையா? உண்மை என்பது என்ன? என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

உண்மை தனக்கானவற்றை என்றேனும் பெற்றுக் கொண்டு விடும். மனிதர்களின் வேதனைகளுடனும், துன்பங்களுடனும், துயரங்களுடனும் பின்னிக் கிடப்பது உண்மை. அந்த உண்மையின் வீச்சு படு கொடூரமானதாய் இருப்பினும் அதனிடமிருந்து தப்பிப்பது முடியாத காரியம்.

வாழும் வரை பிறருக்கு உபயோகமாய், பிறரை கிஞ்சித்தும் வஞ்சித்து அவர்களின் சாபங்களைப் பெறாத வரையில் உண்மை உறங்கிக் கொண்டிருக்கும். சாபங்கள் தான் உண்மைக்கு உரம். உரமில்லாத உண்மையால் யாருக்கும் எந்த வித துன்பமுமில்லை. துயரமுமில்லை.

உரத்தை தயார் செய்வது அவரவர் செயலில் உள்ளது.


Wednesday, October 1, 2014

பாலைக் கொதிக்க வைப்பதில்லை

திருவள்ளுவர் மருந்து என்ற தலைப்பில் உணவு பற்றி பத்து குறள்களை அருளியிருக்கிறார். அதிலொன்று,

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் (945)

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவை அளவோடு உண்டு வந்தால் உயிருக்கு துன்பமில்லை என்பது தான் மேலே கண்ட குறளின் அர்த்தம்.

நாமெல்லாம் முன்னோர்கள் சொல் கேளா நவீன கால மாந்தர்கள் அல்லவா? தந்தையுடன் அமர்ந்து மது அருந்தச் சொல்லிக் கொடுத்த மாபெரும் கலைஞர்கள் இருக்கும் மாநிலமல்லவா நமது மாநிலம். இப்பேர்பட்ட பெரும் மகான்களுக்கு அரசு கலைமாமணி விருதுகளைக் கொடுத்து கவுரவிக்கின்றது. இதைக் காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதற்கில்லை. இது அரசியல் சார்ந்தது. அது கிடக்கட்டும் சாக்கடை.

தமிழக மாந்தர்களின் தற்போதைய நிலை சர்க்கரை வியாதி. 40 வயதுக்குள்ளேயே சர்க்கரை வியாதி. மூட்டை மூட்டையாக மாத்திரைகளை வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள். 

வயிறு பாவம், உள்ளே வருவதை எல்லாம் அரைத்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறது. மனிதன் சாகிற வரை வயிறு செய்யும் செயல் பற்றி ஒரு துளியாவது எவராவது நினைத்துப் பார்க்கின்றார்களா? 

நிச்சயம் இல்லை. அதைத்தான் நாக்கும், மூக்கும் தடுத்து விடுகிறதே. ஆசையை அறு என்று இதற்குத்தான் சொன்னார்கள் போலும்.

விடிந்தவுடன் டீக்கடை, சூடாக பஜ்ஜி, வடை, போண்டா. காலையிலேயே வயிற்றை அடித்துத் துவைத்து பிழிய வைத்து விடுகின்றார்கள். பெரும்பாலான டீக்கடைகளில் பால் பாக்கெட்டுகளை பால் கொதித்துக் கொண்டிருக்கும் தட்டின் மீது வைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல கொதிக்கும் பால் பாத்திரத்தில், பால் குறைந்தவுடன் மற்றொரு பால் பாக்கெட்டை பிய்த்து ஊற்றி விடுகின்றார்கள். அந்தப் பால் கொதிப்பதைப் பற்றி டீ மாஸ்டர் (இவருக்கெல்லாம் மாஸ்டர் என்று எவர் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை) கவலைப்படுவதும் இல்லை. கொதிக்காத பாலில் உடலைக்கெடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம்.

ஆவின் பாலில் கலப்படம் செய்தவரைக் கைது செய்து விட்டார்கள். கலப்பட பாலைக் குடித்தவர்களைப் பற்றி எவரும் பேசுவதும் இல்லை. இந்த உணவுக் கலப்படக்காரர்களுக்கு “ஒரு நாள் முழுவதும் சித்ரவதை செய்து மரண தண்டனை” விதிக்க வேண்டும். எத்தனை பேரின் உடலைச் சித்ரவதைச் செய்கின்றார்கள் இவர்கள் என்று நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

கொதிக்காத பாலும், ஊறு விளைவிக்கும் பஜ்ஜியும் அவசியம் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



Friday, September 26, 2014

நிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா?

சமீபத்தில் ஒருவர் என்னைச் சந்தித்தார். பழைய ஆவணங்களாக எடுத்துக் கொடுத்து எனது தாத்தாவுக்குச் சொந்தமான சொத்து. புது பட்டாக்காப்பியையும் எடுத்துக் கொடுத்து தாத்தா பெயரில் பட்டா இருக்கிறது என்றுச் சொல்லி வாரிசு சான்றிதழ்களை எடுத்துக் கொடுத்தார்.

அவரின் தாத்தா கிரையம் பெற்ற டாக்குமெண்ட், பட்டா எல்லாம் பர்பெக்ட். சொத்துக்கு விலை சொன்னார். எல்லாம் கேட்டுக்கொண்டேன். இரண்டு நாள் கழித்து என்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன்.

அந்த ஆவணங்களை கவனமாகப் பரிசீலித்துப் பார்த்ததில் அவரின் தாத்தாவுக்குப் பாத்தியமான விவசாய பூமியை அவர் காலத்திற்குள்ளேயே விற்று விட்டார் என்பது புரிந்தது. சொத்து விற்ற பிறகு பட்டா மற்றும் பெயர் மாற்றம் செய்யாமலேயே இருந்திருக்கின்றது. தாத்தா இறந்து விட, பேரன் சொத்துக்கு உரிமை கொண்டாடி டாக்குமெண்டைத் தூக்கி கொண்டு யாருக்கோ சொந்தமான சொத்தை விற்க கிளம்பி விட்டார்.

அமர்க்களமான பேச்சு, நடை உடை பாவனையில் பெரும் கோடீஸ்வரர்களையே மிஞ்சி விட்டார் வந்தவர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அந்தச் சொத்துக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான்.

விலை குறைத்துக் கேட்டு, விலை படியவில்லை என்றுச் சொல்லி, வேண்டாம் என்றுச் சொல்லி விட முடியும். ஆனால் இவர் இதே வேலையாகச் சுற்றிக் கொண்டு அவரின் நேரத்தையும், பிறரின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பார் என்பதால் உண்மை என்ன என்பதைச் சொல்லி விட முடிவு செய்தேன். அதை அவர் நம்புவாரா என்பதும் எனக்குப் புரியவில்லை. ஆனால் இதற்கொரு முடிவு செய்து விட வேண்டுமென்று நினைத்தேன்.

ஒருவரின் பெயரில் பட்டா இருந்தால் அவர் தான் அந்தச் சொத்துக்கு உரிமையாளராக இருப்பார் என்று  1800ல் இப்படி ஒருவர் சொன்னால் அது உண்மையாகும். இந்தக் காலத்தில் அப்படிச் சொன்னால் நில அபகரிப்பு வழக்கு போட்டு உள்ளே தூக்கிப் போட்டு விடுவார்கள்.

சொத்தின் டைட்டில் (பத்திரம்) யார் பெயரில் இருக்கிறதோ அவரே சொத்துக்கு உரிமையாளர். பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதற்காக சொத்துக்கு உரிமை கோருவது முட்டாள்தனம். அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த டைட்டில் மிகத் துல்லியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். காமா சோமாவென்று பத்திரம் தயாரித்தால் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டி வரும்.

டைட்டில் எழுதுவதும், சொத்து வாங்கும் முன்பு சொத்தினைக் குறித்து அலசி ஆராய்வதும் மிக முக்கியம். மிக மிக முக்கியம்.

அவர் வந்தார். அமரிக்கையாக அமர்ந்து விலை பற்றியும், பூமியின் பெருமை பற்றியும் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பேச விட்டு பின்னர் மெதுவாக ஆரம்பித்து விபரம் முழுவதும் சொன்னேன். பரிசீலித்த ஆவணங்களையும், வில்லங்கச் சான்றிதழ்களையும் காட்டி விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. முடிவில் இந்த டாக்குமெண்ட்களை வைத்துக் கொண்டு எவராவது கிரையம் கொடுத்தீர்கள் என்றால் ஜெயில் கம்பிதான் முடிவில் என்றும் சொன்னேன்.

ஒரு தம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அமைதியாக வணக்கம் சொல்லி விடை பெற்றார்.

தொடரும் விரைவில் ...

Tuesday, September 16, 2014

நிலம் (11) - செக்குபந்தி

எனது நண்பரொருவர் விற்கிரைய உடன்படிக்கை பத்திரம் ஒன்றினைக் கொண்டு வந்து கொடுத்தார். மனை ஒன்றினை வாங்குவதற்காக அக்ரிமெண்ட் அது. படித்துக் கொண்டே வந்தேன். சொத்து விபரத்தில் மனை எண், நீளம், அகலம், செக்குபந்தி விபரமெல்லாம் வெகு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது எந்த சர்வே எண், கிராமம் என்று குறிப்பிட மறந்து விட்டார் ஆவண எழுத்தர்.

இந்த அக்ரிமெண்டிட் எழுதி வாங்கியவர் கதியை நினைத்தால் “அய்யோ பாவம்”.

ஒவ்வொரு பத்திரத்திலும் சொத்து விபரமென்பது பத்திரத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தச் சொத்து விபரத்தில் சொத்து இருக்கும் மாவட்டம், தாலுக்கா, கிராமம், சர்வே எண், சப்டிவிஷன் எண்கள், மொத்த ஏரியா, அதில் எழுதக்கூடிய டைட்டிலுக்கு கட்டுப்பட்ட சொத்தின் அளவு, அது மொத்த ஏரியாவில் எந்தப் பக்கம் இருக்கிறது என்ற செக்குபந்தி விபரங்கள் இருக்கும்.

இந்தச் செக்குபந்தியில் ஒரு முக்கியமான, அவசியமான விபரத்தை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

அந்தக் காலங்களில் பத்திரங்கள் எழுதும் போது, செக்குபந்தியில் பக்கத்து பூமியின் சொந்தக்காரர் யாரோ அவரின் பெயரைக் குறிப்பிட்டு, இவருக்குப் பாத்தியப்பட்ட பூமிக்கும் கிழக்கு, வடக்கு என்று எழுதப்பட்டிருக்கும். இந்தச் செக்குபந்தி கிராமப்பக்கம் சரியாக இருக்கும். கிராமத்தில் யார் சொத்து யாருக்குச் சொந்தம் என்று பரம்பரையாகத் தெரியும். ஆனால் நகர்புறங்களில் அது சாத்தியமில்லை. யார் யாரோ வாங்குவார்கள், விற்பார்கள். ஒவ்வொரு முறையும் பெயர்கள் மாறிக் கொண்டே இருக்கும். என்ன வழி என்று கேட்பீர்கள். இதோ அந்த வழி.

செக்குபந்தியில் சொத்து விபரம் குறிப்பிடும் போது நிலத்தின் கிழ, மேல், தென், வடல் பகுதிகளின் சர்வே நெம்பரைக் குறிப்பிட்டு விட்டால் போதும். சர்வே எண் மாறாது அல்லவா? ஆகவே இனிமேல் சொத்துக்கள் வாங்கும் போது செக்குபந்தியில் கொஞ்சம் கவனம் வைக்கவும். மனையிடங்கள் வாங்கும் போது சொத்து விபரத்தில் இன்ன சர்வே நெம்பரில் வரக்கூடிய மனை எண் என்று குறிப்பிட்டு கிழமேல், வடதென் மனைகளைக் குறிப்பிட வேண்டும்.

புரிந்து விட்டதா? 

தொடரும் விரைவில்....


Saturday, September 13, 2014

நிலம் (10) - மலைப்பகுதியில் மனை நிலம்

சமீபத்தில் கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் அறிக்கையினை செய்தித்தாளில் படித்தேன். வெகு முக்கியமான விஷயம் என்பதால் இப்பதிவு உங்களுக்காக எழுதுகிறேன்.

கோவையில் மலைப்பகுதி கிராமங்களின் பெயர்கள் கீழே.
  1. தேவராயபுரம்
  2. கலிக்க நாயக்கன்பாளையம்
  3. பூலுவப்பட்டி
  4. தென்கரை
  5. மாதம்பட்டி
  6. தீத்திபாளையம்
  7. பேரூர் செட்டிபாளையம்
  8. சுண்டக்காமுத்தூர்
  9.  நாயக்கன்பாளையம்
  10. கூடலூர்
  11. நரசிம்ம நாயக்கன்பாளையம்
  12. எட்டிமடை
  13. தொண்டாமுத்தூர்
  14. நஞ்சுண்டாபுரம்
  15. சின்னதடாகம்
  16. வீரபாண்டி
  17. சோமையாம்பாளையம்
மேற்கண்ட மலைக்கிராமங்களில் விற்கக்கூடிய மனைப்பிரிவுகளுக்கு என்று ஒரு ஸ்பெஷல் அனுமதிகள் பெற வேண்டும். வனத்துறை, வேளான் பொறியிடல் துறை, புவியியல் சுரங்கத்துறை, தாசில்தார், பொதுப்பணித்துறை(ஓடை இருந்தால்) போன்ற அமைப்புகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறுதல் மிக முக்கியம். அதனைத் தொடர்ந்து உள்ளூர் திட்டக்குழு அனுமதிககான விண்ணப்பம் மற்றும் இன்ன பிற வேலைகளைச் செய்து மனையிட அனுமதி பெற வேண்டியது மிக அவசியம்.

சமீப காலங்களில் பல மலைக்கிராமங்களில் வீட்டு மனைகள் விற்பனைக்கு என்று விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வீட்டு மனைகளை வாங்க விரும்புவோர் மேற்கண்ட தடையின்மைச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

விரைவில் கோவையின் ஒரு பகுதி மக்களை பேரின்பத்தில் ஆழ்த்தக்கூடிய அற்புதமான ஒரு கட்டுரை விரைவில் எழுதப்படும்.


Friday, September 5, 2014

தமிழகத்தின் நிலை கவலைக்கிடமா?

நான்கு வருடங்களுக்கு முன்னால் சென்னை தொழில் துவங்க நல்ல நகரம் என்ற நிலைமை மாறிப்போய் விட்டது. தமிழகத்தின் பெரு நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் இன்றைய தமிழகம் மாறி விட்டது.

24 நான்கு மணி மின்சாரம், எளிய முறையில் அனுமதி மற்றும் நிலம் ஆகியவற்றைத் தருவதாக பிற மாநில முதல்வர்கள் உறுதியளிக்கின்றார்கள். கோவை பக்கம் சத்தமில்லாமல் பல நிறுவனங்கள் பல மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றார்கள்.

2009-2010ம் ஆண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 29.18 சதவீதமாக இருந்தது. ஆனால் 2013-2014ம் ஆண்டிலோ 3.5% சதவீதமாக குறைந்து விட்டது. 2009-2010ம் ஆண்டில் தொழிற்துறையின் வளர்ச்சி 20.93 சதவீதமாக இருந்தது 2014ம் ஆண்டில் 2013-2014ம் ஆண்டில் 1.61 சதவீதமாக குறைந்திருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரே காரணம் : மின்சாரம். 

திருப்பூர் பனியன் தொழில் தற்போது விறுவிறுப்படைந்திருக்கிறது. சீனாவில் மனித சக்தி குறைபாட்டால் இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரில் பல இடங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை போர்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

கோவையிலோ தலைகீழ் மாற்றம். நூல் மில்கள் மட்டுமே வேறு வழி இன்றி இங்கே இருக்கின்றன என்கிறார்கள்.

மின்சாரம், எளிய தொழில் அனுமதி, தொழில் சம்மந்தப்பட்ட உயர்மட்ட சந்திப்புகள் எதுவும் தமிழகத்தில் சாத்தியமில்லை என்கிறார்கள் பல தொழிலதிபர்கள்.

காற்றாலை மின்சாரம் இல்லையென்றால் தமிழகத்தின் மின் நிலமை மிக மோசமாகி விடும் என்கிறார்கள். காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு இன்னும் பழைய பாக்கிகள் கொடுக்கப்படவில்லையாம். இது பற்றிய விரிவான அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய தினசரியில் படிக்கலாம்.


என்ன செய்யப்போகின்றார்கள் தமிழர்கள்?

Thursday, September 4, 2014

நிலம் (9) மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டா? தொடர்ச்சி

வெகு நீண்ட நாட்களாகி விட்டன. தொடர்ந்து எழுத வேண்டுமென்ற ஆவல் ஒரு பக்கம் இருந்தாலும் பணிச்சுமை அதிகமானதால் இந்தத் தாமதம். நிலம் தொடரைப் படித்து பல நண்பர்கள் போனில் ஆலோசனை கேட்கின்றார்கள். ஒரு சில விஷயங்களுக்கு ஆலோசனை சொல்லலாம். ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் ஆலோசனை சொல்ல இயலாது. ஏனென்றால் தகுந்த ஆவணங்கள் இன்றி ஆலோசனை சொல்வது பெரிய துன்பத்தைக் கொண்டு வந்து விடும். ஆகவே என்னை ஆலோசனைக்காக அணுகும் நபர்கள் தகுந்த ஆவணங்களை அனுப்பி வைத்து விட்டு அதன் பிறகு ஆலோசனை கேட்கவும்.

மூதாதையரிடமிருந்து பாகமாக வந்த சொத்தினை தந்தை ஒருவர் காலமான பிறகு, அந்தத் தந்தையின் வாரிகளுக்கு கூட்டாக பாத்தியப்பட்டது. இந்தச் சொத்தில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பங்கு உண்டு என்கிறது இந்து வாரிசுரிமைச் சட்டம். தந்தையின் ஆண் வாரிசுகளுக்கும், பெண் வாரிசுகளுக்கும் மேற்படிச் சொத்தில் முழு உரிமை உண்டு. அது தான் உண்மை என்றாலும் கூட ஒரு சில விதி விலக்குகளும் உண்டு.

சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு நபர் என் தங்கை என் மீது வழக்குப் போட்டிருக்கிறார். அவரின் கல்யாணத்துக்கு தந்தை தன் சொத்தை விற்று தான் செலவு செய்தார். தந்தை இறப்புக்குப் பிறகு, என் பங்குச் சொத்திலும் அவருக்கு பங்கு வேண்டுமென்று கேட்டு வழக்குப் போட்டிருக்கிறார் என்று கண்ணீர் மல்க பெருத்த சோகத்துடன் சொன்னார். என் தங்கை பெரிய பணக்காரி. நானோ மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன். வழக்கு நடத்தக்கூட வசதியில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்ல தங்கம் என்று புலம்பினார். 

அவரின் சொத்து பத்திரங்களை அனைத்தையும் கொண்டு வரச் சொன்னேன். கொண்டு வந்து கொடுத்தார். அனைத்தையும் படித்தேன். இதுவரை நீதிமன்றங்களில் நடந்து பாகப்பிரிவினை வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளைப் படித்தேன். அதில் ஒரு தீர்ப்பில், ஒரு கூட்டுக்குடும்பச் சொத்தை குடும்பத்தலைவர் என்கிற முறையில் குடும்பத்தின் நியாயமான தேவைகளுக்காக விற்பனை செய்தால் அந்த விற்பனை, அனைத்து பங்கு உரிமை உள்ளவர்களையும் கட்டுப்படுத்தும் என்றுச் சொல்லப்பட்டிருந்தது.

என்னிடம் வந்த நபரின் தந்தை சொத்தினை விற்கும் போது வெகு தெளிவாக தன் மகளின் பங்கினை அவரின் திருமணத்திற்காகத்தான் விற்பனை செய்கிறேன் என்று தெளிவாக எழுதியிருந்தார். அந்தப் பாயிண்டைக் குறித்து வைத்துக் கொண்டு அவரிடம் தெளிவாக, உங்கள் தங்கைக்கு உங்கள் சொத்தில் பங்கு இல்லை என்று சொன்னேன். எனது வழக்கறிஞர் நண்பரிடம் அனுப்பி ஒரே ஒரு நோட்டீஸில் பிரச்சினையைத் தீர்த்து வைத்தேன்.

இப்போது தெரிந்திருக்கும் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதில் இருக்கும் விதி விலக்கு.


விரைவில் அடுத்த பகுதி


Monday, August 18, 2014

பொன்போலப் பிரகாசிக்கும் உடம்பு வேண்டுமா?

துருத்தி உண்டு; கொல்லன் உண்டு; சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாம் மனத்தில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் 
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே

கொல்லனுடைய துருத்தி ஒழுங்காக இருந்து விட்டால் இரும்பைப் பழுக்க வைத்து எந்த வடிவம் தேவையோ அதைப் பெற்று விடலாம்.  நம் உடம்பினிலே உயிரின் நிலையைப் பாதுகாத்துக் கொள்ள மூச்சுக்காற்றை ஒழுங்குப் படுத்தினால் ஜோதியாய் மாறிடும் என்கிறார் சிவவாக்கியர் சித்தர் அவர்கள்.

தியானம், யோகம், தவம் என்பன மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவதில் உள்ளது. தினம் தோறும் பிராணயாமம் செய்தால் ஈளை, இரைப்பு, இரத்தக் கொதிப்பு போன்றவை நீங்கி உடல் சுத்தமடையும். மூச்சுக்காற்றினைச் சுத்தப்படுத்தி கபாலத்தில் ஏற்றினால் உண்டாகும் யோகமே வாசியோகம். முதுமை அண்டாது, இளைமை எய்தி உடம்பு பொன் போல பிரகாசிக்கும். 

இதோ சிவவாக்கியரின் அடுத்த பாடல் அதைச் செப்புகிறது.

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே !


அவசியம் நண்பர்கள் அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்.

பட்டினத்தார் நம் உடலைப் பற்றி எழுதி இருப்பதைக் கீழே படியுங்கள்.

நாறும் உடலை நரிப்பொதி சோற்றினை நான் தினமும்
சோறும் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமும் சோரும் குழியில் விழாது
ஏறும்படி அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே.


மேற்கண்ட பயிற்சியை எனது குரு ஜோதி ஸ்வாமி அன்பர்களுக்கு வழங்குகிறார். விருப்பமுள்ளோர் அவரை அணுகவும். கட்டணம் ஏதுமில்லை. ஒழுங்காகப் பயிற்சி செய்தால் போதும். குரு இல்லாமல் செய்யவே முடியாது. அப்படிச் செய்வது ஆபத்தை அழைப்பதுக்கு ஒப்பாகும்.

Saturday, August 16, 2014

பெண்ணின் அவஸ்தையில் இதுவும் ஒன்று

மானிடப் படைப்பில் பெண் என்பவளைப் போன்ற அற்புதம் வேறு இவ்வுலகில் கிடையவே கிடையாது. அவள் வாழும் போதே கடவுள் தன்மையில் வாழ்கிறாள். சகிப்புத் தன்மையின் மறு அவதாரம் பெண்கள்.

ஒரு உதட்டுச் சுழிப்பில் ஆணின் உயிரைப் பறித்து விடும் மகத்துவம் கொண்டவள் அவள். ஒரு அசட்டுச் சிரிப்பில் உலகையே சுடுகாடாக்கி விடுவாள். அவளின்றி  இயங்காது இப்பூவுலகம். 

அப்படிப்பட்ட மகா அற்புதமான பெண்ணின் அவஸ்தையில் இதுவும் ஒன்று. அடியேனும் இப்படிப்பட்ட அவஸ்தையில் சிக்கி இருக்கிறேன். பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த அவஸ்தை நிச்சயம் ஏற்பட்டிருக்கும். 

இளையராஜாவின் அற்புதமான இசைக்கோர்ப்பில் வார்த்தைகள் இசையுடன் சேர்ந்து தாலாட்டும் இந்தப் பாடல், ஏதோ ஒரு இன்பலோகத்துக்குள் அமிழ்த்தும் சக்தி கொண்டது.

தனிமையில் கேட்டுப்பாருங்கள். 




இதில் வரும் லட்சுமி கேரக்டரைப் பற்றி விரிவாக “குறுஞ்செய்தி” இதழில் காதலும் கலவியும் என்றொரு தொடரில் பார்ப்போம்.


Friday, August 8, 2014

புற்று நோய், கிட்னி பெயிலியருக்கு சிகிக்சை

எனக்கு முன்பே தெரிந்த விஷயம் தான் இது. பலருக்கு மெயிலில் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் அனுப்பிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் ஒரு நண்பர் எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்த தகவலும், இணைய தளத்தில் இருந்த தகவலையும் ஒருங்கிணைந்து இந்த பதிவினை எழுதுகிறேன்.

புற்று நோய், கிட்னி பெயிலியர் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டோரை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.  இங்கு இரு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள். எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனராம்.

முகவரி :

N.S.அனந்த மூர்த்தி,
 நரசிபுரா, அன ந்தபுரா,
சகாரா வழி, சிமோகா,
கர் நாடகா.
போன் : 08183258033

மேற்கண்ட இடத்திற்கு எப்படிச் செல்வது ?

பெங்களூரிலிருந்து சிமோகா சென்று அங்கிருந்து  அனந்தபுரா செல்ல வேண்டும். அனந்தபுராவிலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு நரசிபுரா சென்று விசாரித்தால் இடம் தெரிந்து விடும்.

கீழ்கண்ட இணைப்பைப் படித்துப் பாருங்கள்.

http://www.chakru.com/narsipura-subbaiah-narayana-murthy-free-cancer-treatment/

வாழ்க வளமுடன் !

Friday, July 11, 2014

எனது பிறந்த நாள் கொண்டாட்டம்

ஜூலை 1 அடியேனின் பிறந்த தினம். காலையில் பசங்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு, மனையாளுடன் வெள்ளிங்கிரி நோக்கிக் கிளம்பினேன். பூ மார்கெட் சென்று கொஞ்சம் மலர்களை வாங்கிக் கொண்டு, அப்படியே கோவைக் கொண்டாட்டம் அருகில் இருக்கும் காய் கறிக்கடையில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கிக் கொண்டு குஷி மூடுடன் ஆக்டிவாவை விரட்டினேன். குளுகுளுன்னு காற்று வீச மனது மலர்ச்சியுடன் இருந்தது.

சிறுவாணிக்குச் செல்லும் சாலையில் இருந்து செம்மேடுக்குப் பிரியும் சாலைக்கு முன்னே, இடது பக்கமாய் ஒருவர் இள நீரை மரத்தில் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். அங்கு நிறுத்தி ஒரு இள நீரை வாங்கிப் பருகினேன். வெகு சுவையாக இருந்தது. அப்படியே இன்னொரு இள நீரை வாங்கி வைத்துக் கொண்டு கிளம்பினேன்.


ஸ்வாமியிடம் சென்று மலர்களை வைத்து  அலங்கரித்து அவரின் நெஞ்சின் மீது மலர்ந்திருக்கிறது ஒரு தாமரை மலர்,  அதை அவருக்குச் சூடி விட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனையாள் வாசியோகப்பயிற்சியில் அமர்ந்திருந்தார்.

அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அமைதியாக இருந்தது. ஒரு சத்தம் இல்லை.

எனது குரு ஜோதி ஸ்வாமி வர அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.

இனி அடுத்த வருடம் வரைக்கும் அந்த அமைதி என்னுள் இருக்கும்.

எனது பிறந்த நாள் கொண்டாட்டம் கேக் இல்லாமல், புதுத்துணி இல்லாமல், மிட்டாய்கள் இல்லாமல், நுகர்வோர் கலாச்சார அடிமையாகாமல் அமைதியாய்க் கழிந்தது. 

பிறந்த நாள் அன்று அன்னையிடமும், குருவிடமும் ஆசி வாங்குவதை விட இந்தக் கொண்டாட்டங்களால் என்ன பயன்? என்று எனக்குத் தெரியவில்லை.

* * *



Friday, June 13, 2014

நிலம்(8) - மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டா?

மிகச் சமீபத்தில் சில அழைப்புகள் வந்தன. ஒருவர் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தார். இன்னொருவர் சென்னையிலிருந்து அழைத்திருந்தார். அவர்களின் கேள்வி மூதாதையர் சொத்தைப் பற்றி இருந்தது.அதிலும் பெண்களுக்குப் பங்கு உண்டா என்பதைப் பற்றி இருந்தது. ஆகையால் அது பற்றிய ஒரு சில விளக்கங்களைப் பார்க்கலாம். பெரிய விஷயம். கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகிறேன். வேலைப்பளு அதிகம். ஓகே !

மூதாதையர் சொத்தில் வாரிசுகளுக்கு பாத்தியம் உண்டு என்று பெரும்பாலானோர் சொல்வார்கள். மூதாதையர் சொத்தில் நிச்சயம் வாரிசுகளுக்கு பங்கு உண்டு என்பது உண்மைதான் என்றாலும் ஒரு சில சிக்கல்களும் உண்டு. 

இந்து குடும்ப சட்டத்திருத்தம் 1990ன் படி மகள்களுக்கு பங்கு உண்டு என்ற திருத்தம் வந்தாலும் வந்தது பெரும்பான்மையான பெண்கள் வழக்கு மேல் வழக்குகள் தொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆசையின் வடிவமாய் கருதப்படும் பெண்கள் வழக்குத் தொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவர்களுக்கு உரிமையும் உண்டு என்று அரசே சொல்லி விட்டதால் மேலும் உற்சாகமடைந்த பெண்கள் இதே காரணத்தை வைத்து வழக்குத் தொடுப்பேன் என்றுச் சொல்லி பலருக்குப் பீதியையும், ரத்தக் கொதிப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். வழக்கு போடுவேன் என்றுச் சொல்லியே காசைப் பிடுங்கிக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.

குடும்ப உறவின் சிக்கல்கள் இந்த ஒரு சட்டத்திருத்தத்தால் மேலும் தீவிரமடைந்தன என்று நிச்சயம் சொல்லலாம். இந்துக் குடும்பத்தில் தாய் மாமன் உறவு ஒரு தந்தைக்கும், தாய்க்கும் மேலான ஒன்றாக கருதப்படுகிறது. உதாரணம் சொல்ல வேண்டுமெனில் தன் அக்காவோ அல்லது தங்கையின் மகளோ, மகனோ ஊனமாகப் பிறந்து விட்டால் தாய் மாமன் வயது சரியாக இருந்தால் திருமணம் செய்து கொள்வான், இல்லையெனில் தன் மக்களுக்குத் திருமணம் செய்து கொள்வான். தன் சகோதரிகளின் வாரிசுகளின் ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் அவன் தான் பொறுப்பு. அவனின் கடமை அத்துடன் முடிந்து விடுவதில்லை. அது வாழையடி வாழையாக தொடர்ந்து வரும் பொறுப்பு. அதை அவன் மகிழ்ச்சியுடன் செய்வான்.

இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்துக் குடும்பம். இந்தச் சட்டம் வந்தாலும் வந்தது. தாய் மாமன்கள் பாடு பெரும்பாடாய் போனது.

தொடரும்...

Thursday, June 12, 2014

நிலம் (7) - பிரிபடாத பாகச் சொத்து

எனக்குத் தெரிந்த நண்பரொருவருக்கு அவசரத் தேவை. அதனால் அவரின் நிலத்தினை விற்பனை செய்ய முடிவெடுத்து என்னிடம் வந்தார்.

இடத்தைப் பார்த்து விட்டு வந்த பிறகு டாக்குமெண்ட்களை கேட்டேன். கொண்டு வந்து கொடுத்தார். படித்த பிறகுதான் தெரிந்தது அது பிரிபடாத பாகச் சொத்து என்பது. அந்தச் சொத்தை எவருக்கும் விற்க முடியாது. வாங்கவும் மாட்டார்கள். நண்பருக்குப் பிரச்சினையோ தலைக்கும் மேல் இருக்கிறது. என்ன தான் வழி? இதற்கும் ஒரு வழி இருக்கிறது.

முதலில் அது என்ன பிரிபடாத பாக சொத்து என்பதைப் பார்க்கலாம்.

ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் இருபது செண்ட் நிலம் விற்கபடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த இருபது செண்ட் பூமிக்கு செக்குபந்தி குறிப்பிடாமல் பொதுவில் இருபது செண்ட் என்று எழுதிக் கொடுப்பார்கள். ஒரு ஏக்கரில் பொதுவில் இருபது செண்ட் என்றால் எந்தப்பக்கம் என்று நாம் கண்டுபிடிப்பது? இதைத்தான் பிரிபடாத பாக சொத்து என்றுச் சொல்வார்கள். 

ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த இருபது செண்ட் நிலம் எந்தப் பகுதியில் உள்ளது என்று பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என்றால் இந்த நிலத்தை எவரும் வாங்க மாட்டார்கள்.

இப்போது புரிகிறதா என்ன பிரச்சினை என்று. 

இதை எப்படி விற்பது? இதுதான் உங்கள் பகுதிச் சொத்து என்று எப்படி பிரிப்பது? இதற்கென்று சில நடவடிக்கைகள் எடுத்து பாகச் சொத்தில் இது தான் எனது பங்கு என்று டாக்குமெண்ட் உருவாக்கிய பின்னர் தான் விற்க முடியும்.

ஆகவே சொத்து வாங்கும் போது செக்குபந்தியில் அதிக கவனம் தேவை என்று இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும்.

செக்குபந்தி மட்டும் சரியாக இருந்தால் போதுமா? நிச்சயம் போதாது. பிற விஷயங்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை வரக்கூடிய பகுதிகளில் பார்க்கலாம்.

குறிப்பு: மெயில் மூலமும், போன் மூலமும் ஆலோசனை கேட்போருக்கு இதுதான் சரியான தீர்வு என்று சொல்ல முடியாது. தங்களிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை தீர ஆய்வு செய்து படித்த பிறகுதான் மிகத் துல்லியமான தீர்வை வழங்க முடியும். ஆகவே டாக்குமெண்ட்களை எனக்கு கொரியரில் அனுப்பி வைக்கவும்.

மிக மிகத் துல்லியமான பத்திரங்கள் எழுதவும், லீகலுக்கும் அணுகலாம்.

முகவரி : 
கோவை எம் தங்கவேல்
ஸ்ரீ சாய் ரத்னம் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட்,
33, பாரதி நகர் 2வது தெரு, கணபதி,
கோயமுத்தூர் - 641006,
போன் : 9600577755

Friday, June 6, 2014

சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் திரு உருவசிலை பிரதிஷ்டை விழா

ஆத்ம சகோதர, சகோதரிகளே !

உங்கள் அனைவருக்கும் ஆத்ம வணக்கம்.

நிகழும் சுப வருடம் வைகாசி மாதம் 25ம் நாள் (08.06.2014) ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் திரு உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அது சமயம் அனைத்து சித்த வித்யார்த்திகளும், மெய்யன்பர்களும் விழாவில் கலந்து கொண்டு குரு அருள்  பெற அன்போடு அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல் :-

காலை 8.00 மணிக்கு - திரு உருவ சிலை பிரதிஷ்டை
காலை 9.00 மணிக்கு - சிற்றுண்டி
பகல் 12.00 மணிக்கு - கூட்டு ஜெபம்
மதியம் 1.00 மணிக்கு - அன்னமளிப்பு

இங்கணம்

வெள்ளிங்கிரி ஸ்வாமி ஜீவ சமாதி
ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் ஆசிரமம் மற்றும் ட்ரஸ்ட்
முள்ளங்காடு போஸ்ட், செம்மேஉ, பூண்டி,
கோவை - 641114

தொடர்புக்கு 
டாக்டர் ஏ. நாகராஜ் M.B.B.S, D.C.H.,
மேனேஜிங் ட்ரஸ்டி
போன் : 94426 45711

ஜோதி ஸ்வாமிகள் 
போன் : 9894815954

Monday, June 2, 2014

கதை சொல்லும் வீடு - (1)

எகிப்திய பிரமிடுகள், இந்துக் கோவில்கள் போன்ற மர்மங்கள் நிறைந்து கிடக்கும் இடங்கள் இவ்வுலகில் பல உண்டு. இந்த மர்மங்களுக்குச் சாட்சியமாய் இருந்த மனிதர்கள் கால ஓட்டத்தில் ஒரு நாள் காணாமலே போய் விடுகின்றார்கள். அவர்களூடே அவர்கள் சம்மந்தப்பட்ட மர்மங்களும், ரகசியங்களும் மறைந்து போய் மேலும் மேலும் புதிராய், வரலாற்றுச் சுவடாய் நின்று கொண்டிருக்கின்றன. அந்த ரகசியங்கள் வெளிப்பட்டிருந்தால் மனிதனுக்கு உதவியாக இருந்திருக்கும். 

நான் அப்படி இருக்கப் போவதில்லை. எனக்குள் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ரகசியங்களை நான் எழுதத் துணிந்து விட்டேன். நானொரு வீடு என்று உங்களுக்குத் தெரியும். வீடு கதை சொல்லுமா என்றெல்லாம் யோசித்து மூளையைச் சூடாக்கிக் கொள்ளாதீர்கள்.

பாலு மகேந்திராவின் வீடு படம் பார்த்திருக்கின்றீர்கள் தானே. அந்த வீடு சொல்லும் கதையைப் பார்த்திருக்கின்றீர்கள் தானே? அதைப் போலத்தான் நானும் உங்களிடம் கதைச் சொல்லப் போகின்றேன். நான் பிறந்த தேதி எனக்குத் தெரியும். என் வாழ் நாள் எத்தனை நாட்கள் என்று எனக்குத் தெரியாது. நானும் மனிதனைப் போலத்தான். 

 நான் சொல்லும் கதையைக் படிக்க விரும்பியவர்கள் படிக்கலாம்.

-
தொடரும்



Saturday, May 31, 2014

போலிகள் உஷார்

இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் நான் பல தடவை பெரிய ஏமாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறேன். ஏதாவதொரு முறையில் நான் ஏமாந்து விடுகிறேன். சிலர் வெளியில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் எனது இந்த அனுபவம் பலருக்கு உபயோகப்படும். 

சமீபத்தில் எனது நண்பரொருவரால் புத்திசாலித்தனமாக ஏமாற்றப்பட்டேன். என்னிடம் நைச்சியமாகப் பேசி விஷயங்களைக் கறந்து கொண்டு விட்டு, அதன் மூலம் அவர் பலனடைந்து விட்டார்.  

நான் அவர் மீது வைத்திருந்த நட்பு தூய்மையானது. அவர் என்னை ஏமாற்றியதால், எனக்கு எந்த வித மனக்கிலேசமும் ஏற்படவில்லை. அவர் எனக்குச் செய்த தீமைக்காக நானும் ஒரு தீமையை அவருக்குச் செய்து விட இயலும். ஆனால் அது என் இயல்பு அல்ல. நான் துறவி போல இருக்க விரும்புவன். ஆகையால் அவருடன் இன்றைக்கும் எப்போதும் போல பேசிக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் அவர் என்னுடன் பேசுவதை பெரும்பாலும் தவிர்க்க விரும்புவதை அறிந்து நகைப்புத்தான் ஏற்பட்டது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.இது போல பலர் இருக்கின்றார்கள். எனது அனுபவம் உங்களனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.

எவனொருவன் தவறு செய்கின்றானோ அவன் தான் தண்டனைக்குப் பயப்பட வேண்டும். கவலைப்பட வேண்டும். தவறு செய்யாதவன் எதற்கும் பயப்பட வேண்டியதும் இல்லை. கவலைப்பட வேண்டியதுமில்லை.

எதிரில் உட்கார்ந்திருப்பவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தால் உங்களை ஏமாற்ற துணிந்து விடுவான். அது யாராக இருந்தாலும் சரி. சந்தேகத்துடனே அணுகுங்கள்.

இந்த உலகத்தில் நல்லவர்கள் அரிதாகிக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை எதையாவது சொல்லி கறந்து விடுகிறார்கள். அல்லது ஏமாற்றி விடுகிறார்கள். அதற்கொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். காரியத்தைச் சாதித்து விடுவார்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் நண்பனிடம் கூட பேசும் போது வெகு கவனமாய் பேசுங்கள்.

ஜாக்கிரதை! உங்களைச் சுற்றியும் போலிகளும், போலி வேடதாரிகளும் உலாவுகின்றார்கள். அவர்கள் பல விஷயங்களைச் சொல்லி உங்களிடமிருந்து பொருளைப் பறிக்க பார்ப்பார்கள். வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.