குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமையம். Show all posts
Showing posts with label சமையம். Show all posts

Friday, May 6, 2016

மனிதனின் இரண்டு முகங்களும் ஒரு ஜென் கதையும்

ஒரு மதுச்சாலையில் ஒருவன்
தனக்குள்ள உறுதியான வைராக்கியம் பற்றி
பெருமையடித்துக் கொண்டான் :

“மதுவை இனித் தொடவே மாட்டேன்” என்றான்.

ஆனால் அன்று மாலையே
அங்கே வந்து விட்டான்.

எல்லோரும் கேட்க, இப்படி உரக்கச் சொன்னான்:

“நான் என் மன வைராக்கியத்தை விடப் பலமானவன்!
நான் முழுதும் போராடி என் வைராக்கியத்தைத்
தோல்வியடைச் செய்து விட்டேன்.
இரண்டு மடங்கு மதுவைக் கொடு!”

(நன்றி : ஓஷோவின் ஒரு கோப்பைத் தேநீர் )

இதை ஓஷோ ஒரு மனிதனின் சுய வஞ்சனை என்கிறார். எந்த ஒரு செயலையும் அவன் நியாயப்படுத்திக் கொள்கிறான் என்கிறார் ஓஷோ.

* * *

அடுத்து ஒரு ஜென் கதை.  இந்தக் கதை உங்களுக்குப் புரிந்து விட்டால் !



கடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன மீனுக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்.

’கடல், கடல் என்று பேசிக் கொள்கிறார்களே, அப்படியென்றால் என்ன?’ என்பது தான் அந்தச் சந்தேகம். அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு பெரிய மீனிடம் சென்று,

“கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது?” என்று கேட்டது.

“அதுதான் உன்னைச் சூழ்ந்திருக்கிறது. அதற்குள் தான் நீ இருக்கிறாய்!” என்றது பெரிய மீன்.

“ஆனால் அது எனக்குத் தெரியவில்லையே!” என்றது சின்ன மீன்.

“நீ அதற்குள் இருப்பதால் தான் உனக்குத் தெரியவில்லை. நீ பிறந்ததும் கடலில். வாழ்ந்து கொண்டிருப்பதும் கடலில். உன்னைச் சுற்றி இருப்பதும் கடல். உனக்குள் இருப்பதும் கடல். உனது தோலைப் போல் அது உன்னை விட்டு நீங்காமல் சூழ்ந்திருக்கிறது. நீ பிறந்து வாழ்ந்து மறையப் போவதும் இந்தக் கடலில் தான். அதற்குள் இருப்பதால் அது தெரியவில்லை” என்றது பெரிய மீன்.

* * *

இந்த ஜென் கதை புரிந்து விட்டால் வாழ்வில் படும் துயரங்களில் இருந்து மனிதன் விடுதலை பெற்று விடுவான். புரியவில்லை என்றால் அடுத்து ஒரு அருமையான கதையொன்றினை வெளியிடப் போகிறேன். அந்தக் கதை சொல்லும் உங்களுக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.

ஜென் கதைக்கு முன்பு இருக்கும் கவிதை உங்களின் மனதை நிச்சயம் கீறி விட்டிருக்கும். சுய நிந்தனையில் மனிதனை விட மிகவும் உயர்ந்தது எதுவுமே இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. அந்த சுய வஞ்சகத்தன்மையினால் அவன் இழப்பது தன் வாழ்க்கையை என்று அவர் என்றைக்குமே உணருவது இல்லை.

கவிதை மனிதனின் ஒரு முகத்தையும், ஜென் கதை மனிதனின் அறியாமை எனும் முகத்தையும் காட்டுகிறது. இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

* * *


Friday, January 9, 2015

சித்து விளையாட்டு

இரண்டாண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் வீடு தேடி வந்தார் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகச் சொன்னார். எனது பிளாக்கினைப் படித்துப் பார்த்தவர் என்னைச் சந்தித்து விட்டு அதன் பிறகு அவர் அவரின் முடிவினைத் தேடிக்கொள்ள இருப்பதாகச் சொன்னார்.

குடும்ப உறவுக்குள் பிரச்சினை. சொத்து சம்பந்தமாக கோர்ட்டில் வழக்காடுகிறார்கள். பணம் பிரச்சினை. குழந்தையில்லை. அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் நண்பராகவும், குருவாகவும் மதித்த ஒருவரைச் சந்திக்கும்படியும், அதன் பிறகு தற்கொலை செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டாண்டுகள் ஓடோடின.  நேற்று என்னைச் சந்தித்தார் அவர்.

அவருக்கு ஒரு பெண் குழந்தை. ரோஜாப்பூ மாதிரி இருந்தது அப்பெண் குழந்தை. மீண்டும் பணப் பிரச்சினை. எந்தத் தொழில் செய்வது என்று தெரியவில்லை. குழப்பம். குழந்தையை எப்படி வளர்ப்பது? ஒரே பிரச்சினை. குடும்பத்தின் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இன்னும் இழுத்துக்
கொண்டிருக்கிறது. புலம்ப ஆரம்பித்தார்.

தற்கொலை செய்ய முடிவெடுத்தவருக்கு கையில் ஒரு குழந்தையைக் கொடுத்து தன் சித்து விளையாட்டை ஆட ஆரம்பித்திருக்கிறான் இறைவன் என்று கண்டு கொண்டேன். கர்ம வினைப் பயனை அனுபவித்தாக வேண்டுமய்யா என்று கூவ வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவர். அவரை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி வைத்தேன். எம் குரு அவரைக் கவனித்துக் கொள்வார். இனி அவர் வாழ்க்கை சிறக்கும்.

யாருக்குப் பிரச்சினையில்லை இவ்வுலகில். புரிந்து கொண்டவர்கள் அமைதியாக வாழ்வார்கள். புரியாதவர்கள் புலம்புவார்கள். எனக்கும் பிரச்சினை வந்தது. 

எனது குரு என்னிடம் கேட்டார், “உங்களுக்கு எத்தனை கோடி வேண்டும்?”. 

உடனடியாக மறுத்து விட்டேன். கர்ம வினை துரத்துமே, பணமா கர்ம வினையை சரி செய்யும்? நீங்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே, இலங்கையிலும், தமிழகத்திலும் என்ன நடந்தது என்று. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடிந்தது?

எல்லோருக்கும் எல்லாமும் புரிந்து விட்டால் !  இந்தப் பாடல் உங்களுக்குப் புரிந்தால் இப்பதிவும் புரியும்


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே. - திருமூலரின் திருமந்திரம்


Wednesday, November 26, 2014

காலம் சொல்லித்தரும் பாடம்

வாழ்க்கை பல புதிர்களைக் கொண்டது என்கிறார்கள். புரியாதவர்களுக்கு புதிர். புரிந்தவர்களுக்கோ அது ஒரு விளையாட்டு மைதானம். 

அழகிய மயிலாள் ஒருத்திக்கு தன் அழகுமேல் அதீத ஆர்வம். அதனால் கர்வம் ஏற்படுகிறது. அவள் தன்னை மிக உயர்ந்தவள் என்று எண்ணிக் கொள்கிறாள். 

ஆனால் உண்மையில் என்ன நடக்கும்? நாட்கள் ஆக ஆக முகம் சுருங்கும், கண்கள் களையிழக்கும், அழகிய பிருஷ்டங்கள் கூனல் விழுந்து, முடி நரைத்து தள்ளாடி நடப்பாள். இதை அவள் இளைமையில் உணர்கின்றாளா என்றால் இல்லை. அப்படி அவள் வாழ்க்கையில் நிச்சயம் நடக்கப் போகின்ற இந்த மாறுதல்களை நினைத்துப் பார்த்திருந்தால் இளமையை எண்ணிக் கர்வம் கொண்டிருக்க மாட்டாள். இந்த உண்மையை அவள் அவளின் முதுமையான காலத்தில் தான் உணர்வாள்.

காலம் கடந்த ஞானோதயம் வந்து என்ன ஆகப்போகின்றது. இதைத்தான் மனிதனை மறைக்கும் மாயை என்கிறார்கள். 

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண்கள், ஒரு ஆண். அந்தப் பெண்மணிக்கு மூத்த மகள் மீது கொள்ளைப் பிரியம். மற்ற இரண்டு குழந்தைகளை அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார். மூத்த பெண்ணுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள். இரண்டையும் அப்பெண்மணிதான் கண்ணுக்குள்ளே வைத்து வளர்த்தார். 

பசங்களும் வளர்ந்தார்கள். இருவரும் பெரியவர்களாகி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். தனது பேரன்கள் மீது அந்தப் பெண்மணிக்கு அன்போ அன்பு. அப்படி ஒரு அன்பு. இளைய பேரன் வெளிநாடு சென்றான். போனில் பாட்டியோடு பேசிக் கொள்வான். காண்ட்ராக்ட் முடிந்து திரும்பி வருவதற்கு முதல் நாள் மூத்த பேரன் தன் பாட்டியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு வந்தான். ஏன் தம்மைத் திடீரென்று தன் வீட்டில் கொண்டு போய் விடுகிறார்கள் என்று அப்பெண்மணிக்கு புரியவில்லை. இளைய பேரன் வெளி நாட்டில் இருந்து வரும் போது தன் அம்மா கூட இருப்பதை மூத்த மகளும், மருமகனும் விரும்பவில்லை என்பதை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டார் அப்பெண்மணி.

பந்த பாசம் என்பதெல்லாம் இருக்கிறது என்று “கண்ணூ” பதிவில் படித்தோம். இந்தச் சம்பவம் வேறு மாதிரி இருக்கிறது. பந்தபாசம் எல்லாம் சும்மாதானா என்று நினைக்கத் தோன்றும்.

இந்தச் சம்பவத்தை நடத்தியது தர்மம். தர்மத்தின் வழி மிகவும் சூட்சுமமானது என்று நான் “தர்மத்தின் தீர்ப்புக் கதைகள்” என்ற பகுதியில் எழுதினேன். அப்பெண்மணிக்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் அவரே. எதைக் கொடுத்தாரோ அது இல்லை என்று உணர்ந்திருக்கிறார். 

தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்றேன் அல்லவா? இனி தெய்வத்தின் தர்மம் என்ன என்பதையும், அதற்கான விளக்கத்தையும் இப்போது பார்க்கலாம்.

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில்,நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

“உத்தவரே ! அன்று குருக்ஷேத்திரப்போரில் அர்ஜூனனுக்காக நான் சொன்னது, ‘பகவத்கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள்,”உத்தவ கீதை”. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன். 

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்
.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

'ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன். 

''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!. 

(மேற்கண்டவை நான் படித்தது.அதை அப்படியே தந்திருக்கிறேன். இப்போது புரிகிறதா தர்மத்தின் பாதை என்ன என்பது? அது வெகு வெகு சூட்சுமமானது)