குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வெள்ளிங்கிரி சுவாமி. Show all posts
Showing posts with label வெள்ளிங்கிரி சுவாமி. Show all posts

Thursday, April 21, 2022

மாப்பு தரு சாமி - துளிர்

புதிதாக படிப்பவர்கள் கீழே இருக்கும் இந்தப் பாகத்தின் முதற்பகுதியைப் படிக்கவும்.

மாப்பு தரு சாமி - விதை 

மேலே இருக்கும் முதற்பகுதியைப் படித்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

கேரளா சென்று வந்த சுவாமி என்னிடம் ”மாப்பு தரு சாமி’ என்ற வார்த்தைகளை ஏன் சொன்னார்? என்ற கேள்வியின் விடை காண ஆசிரமம் சென்று வரலாமென்று முடிவு செய்தேன்.

மதியம் போல பைக்கில் ஆசிரமம் சென்றேன். நல்ல வெயில். சூடு அதிகம். வழியெங்கும் காவடி, பால்குடங்கள் சுமந்தபடி மக்கள் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஏழாவது மலையில் அருள் பாலிக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசித்து திரும்பிச் செல்லும் மக்கள் சாரி சாரியாகச் சாலைகளில் சென்று கொண்டிருந்தனர். பலர் கைகளில் ஊன்றுகோல் கண்டேன். அன்றைக்கு என சுமார் ஐம்பதுக்கும் மேலான எண்ணிக்கையில் விதவிதமான கழுத்தில் சலங்கைகளுடன் மாடுகள் பூட்டிய மாட்டு வண்டிகள் ஜல் ஜல் என சென்று கொண்டிருந்தன. இளைஞர்கள் தான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. 

வெள்ளிங்கிரி பகுதி பக்தி கோலத்தில் மிளிர்கிறது. உண்மையான பக்தியை நான் சாலைகளில் நடந்து செல்லும் பக்தர்களின் வழி கண்டேன்.

நடந்து சென்ற ஒரு இளைஞனை நிறுத்திக் கேட்டேன். காங்கேயத்திலிருந்து பால்குடம் எடுத்து நடந்து வந்து பூண்டியில் அடியிலிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அபிஷேசம் செய்து விட்டு, மீண்டும் மலையேறி ஏழாவது மலையில் அருள் பாலிக்கும் ஆண்டவரைத் தரிசித்து விட்டு மீண்டும் நடை பயணத்திலேயே காங்கேயம் சென்று அங்கு தனது குலதெய்வத்துக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் எனச் சொன்னார். சின்னப் பையன். வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி மஞ்சள் துண்டினை இறுக கட்டி இருந்தான். விறுவிறுவென நடந்தான். அவன் சொல்லும் போது கண்கள் ஒளிர்ந்தன. இறைவன் மீது கொண்ட பக்தியா? இல்லை அவனது குடும்பத்தின் நலனுக்கான வேண்டுதலா? என்று தெரியவில்லை. கால்கள் வலிக்க நடக்கிறான். இறைவனைத் தரிசித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. நல்ல வளர்ப்பு. அவனின் அம்மாவும் அப்பாவும் அவனை பக்தியாய் வளர்த்திருக்கிறார்கள் என்று புரிந்தது. 

சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறான் அவன். 

ஏன்? 

யோசித்துப் பார்த்தால், ஏதோ ஒன்று அவனுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவை நிறைவேறவோ அல்லது நிறைவேற்றிய தேவையின் நன்றிக் கடனுக்காகவோ தன் உடல் வருத்தி தன் பக்தியை இறைவனிடம் சமர்ப்பிக்கிறான். 

என்ன ஒரு முரட்டு பக்தி?

இதற்கெல்லாம் ஈடு இணை என்று எதைச் சொல்வது? 

என் நண்பரின் மனைவி திருப்பூரிலிருந்து பழனி முருகனிடம் வேண்டுதலுக்காக நடைபயணம் செய்வார். அப்பக்தியை என்னவென்று சொல்வது? 

ஒரு வார்த்தை கோபமாகப் பேசி விட்டால் டைஓர்ஸ் என்று இருக்கும் காலகட்டம் இது. 

சரி இனி தொடரலாம்.

முள்ளங்காடு செக்போஸ்ட்டிலிருந்து தெற்கே செல்லும் தார்ச்சாலை வழியாகச் சென்று அங்கிருக்கும் சிறு கிராமச்சாலை கடந்து ஆசிரமம் சென்றேன். ஆசிரமத்தின் முன்பு இடது புறமாய் இருக்கும் மரங்களின் கீழே அமர்ந்து கொண்டேன். அன்று குருநாதரைச் சந்திக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாய் இருந்தது. ஜோதி சுவாமிகள் பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். 

எப்போதும் மாலை நேரத்தில் குளிர்காற்று ஆசிரமத்தினை தழுவும். வெயிலில் வந்த எனக்கு அந்த குளிர் அதனால் விளைந்த மகிழ்ச்சி குருநாதரின் அருள்.

பக்தர்களுடன் உரையாடிய சுவாமி  சிறிது நேரம் கழித்து என்னருகில் வந்து அமர்ந்தார். நானெதற்கு வந்திருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும். என்னிடம் பேச ஆரம்பித்தார்.

”ஆண்டவனே,கொடுங்களூர் பகவதி அம்மன் சன்னிதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். திடீரென்று காதுக்குள் ஒரு குரல். இன்னும் சிறிது தூரம் தள்ளி வா என்றது”

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”அங்கு ஒரு குளத்தைப் பார்த்தேன் ஆண்டவனே! அவ்விடத்தில் நின்று கைகூப்பி வணங்கினேன். மீண்டும் அதே குரல், இன்னும் கொஞ்சம் தூரம் கிழக்கே வா என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆண்டவனே. குரல் சொன்னபடி பத்தடி தூரம் நடந்து சென்றேன். அங்கு ஒரு சிறு கோவில் போல ஷெட் இருந்தது. அதன் நடுவே ஒரு சிறு கல் இருந்தது. அவ்விடத்தில் நின்று வணங்கினேன். சிறிது நேரம் சென்ற பிறகு, மீண்டும் அதே குரல் இன்னும் கொஞ்ச தூரம் கிழக்கே வா என்றது. குரல் வழி காட்டியபடி கிழக்கே பத்தடி தூரம் நடந்து சென்றால் அங்கே சிறு கோவிலும் சிலைகளும் இருந்தன. கைகூப்பி வணங்கி நின்று கொண்டிருந்த போது மீண்டும் அதே குரல், நான் இங்கில்லை இன்னும் கொஞ்சம் தூரம் கிழக்கே வா என்றது. குரல் சொன்ன வழியில் நடந்து சென்றேன். சாலையிலிருந்து ஒரு குறுகிய பாதை. அதன் வழியாகச் சென்றேன். அங்கு ஒரு வீடு இருந்தது. அதைத் தாண்டி இடது புறம் சென்றேன். ஆஹா ஆண்டவனே, அங்கு கண்டேன் அம்மாவை” என்றார்.

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

”ஒரு சிறு கோவில், உள்ளே பகவதி அம்மன். கோவிலின் முன்னாலே வலது புறமாய் ஒரு சமாதி. கோவிலின் எதிரில் குளம். பகவதி தாயின் முன்னாலே நின்றேன் ஆண்டவனே. என் கால்கள் தானாகவே உயர்ந்தன. இரு கால்களின் கட்டை விரல்கள் மட்டும் பூமியில் ஊன்றி நின்றதைக் கண்டேன். என்னை அறியாமலே நடந்து கொண்டிருந்த விந்தை அது. பகவதி அம்மனின் அருளால், அவள் குடிகொண்டிருக்கும் இடத்தில் இப்படியான சம்பவம் நடந்தது. அம்மாவை நோக்கி கைகூப்பி நின்று கொண்டிருந்தேன் ஆண்டவனே. அப்போது ஒரு குரல் கேட்டது. ’மாப்பு தரு சாமி, மாப்பு தரு சாமி’ என்று வேண்டியது.”

”எங்கிருந்து குரல் வருகிறது என்று உற்று நோக்கினால், கோவிலின் முன்பு இருக்கும் சமாதியின் உள்ளிருந்து வந்ததைக் கண்டேன். என்னிடம் எதற்கு மாப்பு (மன்னிப்பு) கேட்கிறது அக்குரல் என்று எனக்குப் புரியவில்லை, ஆண்டவனே. புரியாமல் அங்கு நின்று கொண்டிருந்தேன்” என்றுச் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு கிறுகிறுத்தது. எனக்கோ ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ஜென் தத்துவங்களில் மட்டுமே ஈடுபாடு அதிகம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் போல கடவுளைக் கழுவி ஊற்றியவர் எவரும் இல்லை. அதைப் போல ஓஷோ. அந்தளவுக்கு கடவுளையும், பூசாரிகளையும் அவர்களின் திருட்டுத் தனத்தையும் உரித்து தொங்க விட்டவர்கள். இவர்களாவது பரவாயில்லை. 

எம் குருநாதரின் குருவான கேரளா வடகரை சிவானந்த பரமஹம்சரின் வழிபாட்டு முறை கற்பு கண்றாவிகளை கேள்வி கேட்பவை. பிரம்மத்தை உடல் தாண்டி உணர வைப்பவை. சித்த வித்தை என்றொரு புத்தகம் இருக்கிறது. படித்துப் பாருங்கள். ஆசிரமம் சென்றால் நிச்சயம் அதிர்ந்து விடுவீர்கள். ஆசிரம நடைமுறைகள் திடுக்கிடச் செய்வன. சாதாரண நிலையில் இருப்போருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி உண்டாக்கும். என்னைப் பொறுத்தவரை அவரின் வழிபாட்டு முறை சரி.

இவர்களின் வழியில் அற வாழ்க்கையை நடத்தும் எனக்கு சுவாமி சொன்ன செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது.

திடீரென்று மனதுக்குள் ஒரு சம்பவம் நிழலாடியது. அதன் காரணமாய் எனக்குள் இருந்த மனமானது செய்வதறியாது திகைத்து நின்றது. அதுதான் காரணமா? பல விடை தெரியா கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதா? அறிவு ஏற்க மறுத்தது. அது என்ன? என்று பிறகு பார்க்கலாம்.

சுவாமி, என்னைப் பற்றி நன்கு தெரிந்தவர். உடனே அவரிடம் ”நான் அங்குச் செல்ல வேண்டுமென்று கேட்டேன். ஏற்பாடு செய்கிறேன்” என்றுச் சொல்லி ஆசிரமம் வரும் சுவாமியின் சீடர் திருச்சூர் சீனி ஏட்டனிடம் என்னை கொடுங்களூர் பகவதி அம்மன் ஆலயம் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

மறுநாள் விடிகாலையில் கோவையிலிருந்து கிளம்பி சீனி ஏட்டன் வீட்டுக்குச் சென்றேன். 

அவர் வீட்டில் ஒரு அற்புதம். 

சீனி ஏட்டனின் அம்மாவைப் பார்த்தேன். தெய்வாம்சம் நிரம்பிய அருள் பொங்கும் அன்பு முகம். 

என் வாழ்நாளில் அப்படி ஒரு பெண்மணியைக் கண்டதே இல்லை. உள்ளத்தூய்மை கொண்ட அன்னை அவர். 

அண்ணணும் தங்கையும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். அந்த அன்னை நற்குழந்தைகளைப் பெற்று இருக்கிறார். அன்னபூரணி அம்மாவைப் போன்ற தூய்மையான தோற்றம். எனக்கு திடீரென்று பகவான் ராமகிருஷ்ணரின் மனைவி சாரதா தேவியார் நினைவிலாடினார். 

ஒழுக்கமும், தெய்வ சிந்தனையும்,  அற வாழ்க்கையும் கொண்ட பெண்கள் தான் பூமியின் உண்மையான தெய்வங்கள். அவர்களின் படைப்புகள் தான் உலகை வழி நடத்தும் திறன் கொண்டவர்களாய் மிளிர்வார்கள். ஆரம்பகாலத்தில் ஜாதி மொழி பார்க்காத மனிதர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அவர்களின் படைப்புகள் உலகை வழி நடத்தினர். 

ஆனால் இப்போது ஒழுக்கம் தவறிய வாழ்க்கைதான் உயர்வானது என்ற கீழ் சிந்தனையில் பெண்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். பெண் விடுதலை என்பது தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது.

பெண்களின் பொருளாதார விடுதலை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. விஜய் டிவி நீயா நானாவில் ஒரு பெண்மணி அறுனூறு சேலை வாங்கி வைத்திருக்கிறேன் என்றும் நான் சம்பாதிக்கிறேன் நான் வாங்குகிறேன் உங்களுக்கு ஏன் வலிக்கிறது? என்று பேசியதைக் கேட்டேன். இப்படியான பெண்களின் வாரிசுகளின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

சீனி ஏட்டன் இட்லி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் மிளகாய் பொடி காலை உணவு அளித்தார். அத்துடன் சாயா ஒன்று. 

வீடு என்பது அறம் வாழும் இல்லம். ஒரு சில வீடுகளுக்குள் நுழையவே முடியாது. உடலில் எரிச்சல் உண்டாகும். ஒரு சில வீடுகளுக்குள் சென்று வந்தால் தரித்திரம் நம்மையும் பீடித்து விடும். பெரும்பாலும் நான் எவரின் வீட்டுக்கும் செல்வது இல்லை. உள்ளே நுழைந்ததும் தெரிந்து விடும் அவர்களின் வாழ்க்கை. இதற்கெல்லாம் ஞானம் தேவை இல்லை. அனுபவத்தில் அறியலாம். வாய் சும்மா இருக்காது. உண்மை பேசுகிறேன் பேர்வழி என உளறி விடுவேன். அது தேவையற்ற மனச்சங்கடங்களை உருவாக்கி விடுவதால் தவிர்த்து விடுவேன். 

சீனி ஏட்டனின் வீட்டில் அன்றலர்ந்த மலர் போன்ற முகங்கள் கண்டேன். மனதும் வயிறும் நிறைந்தது. எல்லாம் குருநாதரின் ஆசீர்வாதம்.

சீனி ஏட்டன் வழிகாட்ட கொடுங்களூர் நோக்கிப் பயணித்தேன்.

சுவாமியிடம் ஏன் அந்தக் குரல் இன்னும் பத்தடி தூரம் வா என்று சொன்னது?  அந்த குரல் யாருடையது? மாப்பு தரு சாமி என்ற குரல் ஏன் சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டது? இன்னும் பல விடை தெரியாக் கேள்விகளுடன் கொடுங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

தொடரும்...!

Monday, November 9, 2020

குருபக்தியின் உதாரணம் மருத்துவர் அய்யா நாகராஜ்

தேடிச் சோறுநிதந் தின்று — பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்

வாடித் துன்பமிக உழன்று — பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து — நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல

வேடிக்கை மனிதரைப் போலே — நான்

வீழ்வே னன்றுநினைத் தாயோ?

என்று பாடிய பாரதியார் இன்றளவும் தமிழர்கள் மத்தியில் தன் கவிதையால் ஆளுமையாக இருந்து வருகிறார். மனிதர்கள் பிறக்கின்றார்கள் இறக்கின்றார்கள் என்பது இயற்கை. இதில் எத்தனை மனிதர்கள் தான் வாழ்ந்து சென்ற பூமிக்கும், தன்னுடன் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நன்மையும், எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால் விரல் நீட்டிச் சொல்லி விடும் அளவுக்கே இருக்கின்றார்கள்.

பாரதியாரின் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் கருவிற்கு உதாரணமாக பல்வேறு மகான்களும், புனிதர்களும், வீரர்களும், தேசத் தொண்டர்களும் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள் இந்தப் பாரதப் பூமியிலே.

அப்படிப்பட்டவர்கள் மிக அரிதாகத்தான் இப்பூமியில் பிறக்கின்றார்கள். என் வாழ்க்கைப் பாதையில் நான் பழகியவர்களில் அப்படியானவர்களில் ஒருவர் தான் இவர்.


மருத்துவர் அ.நாகராஜ் அய்யா

தோற்றம்:01.10.1944 ஜீவ ஐக்கியம்:08.11.2020


இக்கட்டுரையை ஒலி வடிவில் கேட்க கீழே உள்ள யூடியூப் கிளிக் செய்யவும்



எம் குருவின் பிரதான சீடரும், கோவை இ.எஸ்.ஐயில் சிவில் சர்ஜனாகப் பணி செய்து ஓய்வு பெற்றவருமான மருத்துவர் நாகராஜ் அவர்கள் சமீபத்தில் குருவடி சேர்ந்தார். மருத்துவரின் ஜீவன் எம் குருவின் பாதக் கமலங்களில் ஐக்கியமானது. அவரைப் பற்றிய ஒரு சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது அவருக்கான அஞ்சலி என நினைக்கிறேன்.

2013ம் வருடம் முதற்கொண்டு குருவடிக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். 2014ம் வருடத்தில் மருத்துவரைச் சந்தித்தேன் முதன் முதலாக. குரு பூஜையின் போது அவருடன் நீண்ட நேரம் பேசக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்றைக்கு ஜோதி சுவாமிகளைக் காட்டி, இனி என்னால் இந்த ஆசிரமத்தினை நிர்வகிக்க வயது இடம் கொடுக்கவில்லை, மனதும் இடம் கொடுக்கவில்லை, குருநாதரின் அருளாசியால் இவரை இங்கு நியமித்திருக்கிறேன். இனி அவருடன் உங்களின் ஆன்மீக வாழ்க்கையைத் தொடருங்கள் என்றுச் சொல்லி புன்னகைத்தார். அன்றைக்கு குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஜீவசரிதம் புத்தகம் வெளியிடப்பட்டது என் நினைவுக்கு வந்து செல்கிறது.

கருமையான, சற்றே குள்ள உருவம். முகத்தில் வாசியோகத்தின் ஆத்ம அமைதி தெரியும். ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். இடது கையில் ஒரு வாட்ச், மோதிரம், கழுத்தில் செயின். வெள்ளுடையில் ஜொலிப்பார். நடை, உடை பாவனைகள் அனைத்தும் ஆழ்ந்த அமைதி கொண்டவையாக இருக்கும்.

வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதியின் நிர்வாகம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. மனிதர்களின் மனமானது பல உள் சிக்கல்களைக் கொண்டது. பொருளாதாரமும், தன் முனைப்பு ஈகோவும் கொண்டவர்களால் தங்கள் வாழ்க்கையை தாங்களே சிக்கலாக்கிக் கொள்வது தெரியாமல் வாழ்வார்கள்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கருணை இல்லா மனதுடையோர் கடவுளின் கருணையைக் கருதி தொழுதிருப்பர். சக உயிரினத்தின் மீது கருணை வைக்காதவர்களுக்கு கடவுள் எங்கணம் தன் கருணையை அளிப்பார் என்று புரிந்து கொள்ளாதவர்களால் தான் இந்த உலகம் இன்றைக்கும் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது. மானுடத்தின் வாழ்வியலும் சீரழிந்து போய் கொண்டிருக்கிறது.

அப்படியான தருணங்களை மருத்துவர் தன் குரு வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவேஸ்வர ஐக்கியமானது முதல் அனுபவித்து வந்திருக்கிறார். தம் குருவின் மீது கொண்ட அன்பினால், குரு பக்தியினால் இன்றைக்கு நொய்யல் ஆற்றங்கரையின் மீதோரம் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் குருவின் ஜீவ சமாதிக்கு அடிக்கல் நாட்டி, கோவிலாக உருவாக்கி தினமும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு அன்னம் அளித்து வரும் படியான தொண்டு செய்ய வழிகாட்டி நடத்தி வந்திருக்கிறார்.

இன்றைக்கு குருவின் ஜீவசமாதி ஆலயத்துக்கு வாழ்வியல் துன்பம் அகல குருவின் பாத கமலங்களைத் தரிசிக்க லட்சோப லட்ச மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

தினம் தோறும் பத்து இருபது என்று ஆரம்பித்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது நூற்றுக்கணக்கில் பக்தர்கள் தங்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட குருவினைத் தேடி வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆரம்பகாலங்களில் ஐந்து ஆறு பேருக்கு அன்னமளித்து வந்த எம் குருவின் ஆலயத்தில், இன்றைக்கு தினம் தோறும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு அன்னம் அளிக்கப்படுகிறது என்று சொன்னால் அதற்கு காரணமாக இருப்பவர் மருத்துவர் நாகராஜ் அய்யா அவர்கள் என்றால் அது மிகையல்ல. இக்காரியத்தை பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு இன்றைக்கும் திறம்பட நடத்தி வரும் ஜோதி சுவாமிகளைக் கண்டுபிடித்து, அவரை இக்காரியத்துக்கு ஆட்படுத்திய செயலைச் செய்து பல ஆயிரமாயிரம் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும், துன்பங்கள் நேராமல் காத்து வரும் சீரிய பணியைத் திறம்பட செய்ய மருத்துவர் அய்யா அவர்களே காரணம் என்பது அங்கு வந்து செல்லும் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர் தன் குரு நாதரிடம் பெற்ற அனுபவங்கள் பல. அதில் ஒரு சில, குருவின் மீதான நம்பிக்கையினால் விளையக்கூடிய அற்புதங்கள் பற்றியவை.

மாந்தர்களின் வாழ்வு முழுமைக்குமான தேடல் பொருள். பொருள் தேடி ஓடி ஓடிச் செத்துப் போகும் அற்ப மானுட வாழ்வில் பொருள் என்பது எதையும் தந்து விடுவதில்லை என்பதை எவரும் அறிந்தபாடில்லை. மாட மாளிகையும், எண்ண இயலா பணமும் இருப்பின் அதை விட இன்பம் வேறில்லை என்று நினைக்கும் அற்பர்களுக்கு அதை அடைந்த பின்புதான் தெரியும் இதுவல்ல இன்பம் என்று. பணமுடையவருக்கு இன்பம் பணமல்ல என்று தெரிந்திருக்கும். அப்படியானவர்கள் படாடோப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விடுவர்.

எண்ணற்றோர் அதிகார போதையும், பணத்தின் மீதான் ஆசையும் கொண்டு இந்த ஒரே எண்ணத்துக்காக மட்டுமே வாழ்ந்திருப்பர். எத்தனையோ எண்ணங்கள் இருப்பினும் ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருப்போரை பைத்தியம் என்று அல்லவா சொல்வோம்?. ஆனால் இங்கு பாருங்கள் அவர்களை நாம் தலைவர் என்கிறோம். தலைவர்கள் அதிகாரப் பைத்தியங்களாகவும், பணப்பைத்தியங்களாகவும் இருப்பதை ஆராதிப்பவர்களும் யார் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இப்படி பணம் தேடி ஓடித் திரிபவர்களுக்கு இறைவனே முடிவான வழியாகத் தெரிவார். கோவில் கோவிலாய் ஏறி இறங்கி பணம் கொடு இறைவனே என்று இறைஞ்சித் திரியும் மானிடர்களின் இடையே குருவின் ஆசியால் சொர்ணரேகையைத் தரிசித்து, அதனால் கொஞ்சம் கூட பொருளாசை இல்லாத வாழ்க்கையை மருத்துவர் வாழ்ந்தார். குரு எவ்வழியோ அவ்வழி சீடனும் என்பதற்கு ஏற்ப தனது வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்.

ஒரு முறை வெள்ளிங்கிரி மலைக்கு குருவுடன் சென்றிருக்கிறார் மருத்துவர். வெள்ளிங்கிரி மலைவாசனைத் தரிசித்து திரும்ப வரும் போது அன்னை ஆதிபராசக்தியின் மூன்று பெண்களின் வடிவில் நின்றிருப்பதை மருத்துவருக்குக்காட்டி ஆசி பெறச் செய்திருக்கிறார். ஆசி வழங்கிய மூவரும் நொடியில் மறைந்து போயினர் என்பதை குருவின் நினைவாக அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.

இந்த உலகம் சக்தி மயமானது. சக்தியே இயக்கி வருவது. ஆதிசங்கரரின் அன்னையான ஆதிபராசக்தி மூகாம்பிகை அன்னை குடி கொண்டிருக்கும் இடத்தில் தியானம் செய்வது சாலச் சிறந்தது என்று குருநாதர் மருத்துவரை அழைத்திருக்கிறார். அப்போது உடன் செல்ல இயலா காரணத்தால், வேறொரு தருணத்தில் மருத்துவர் ஆதிபராசக்தி அன்னை ஆதிமூகாம்பிகையத் தரிசிக்க குருவின் அனுமதி கேட்டிருக்கிறார். அனுமதி அளித்து, ஆங்கே ஒரு சில இடங்களைக் குறிப்பிட்டு அங்கு அமர்ந்து தியானம் செய் என்று சொல்லி அருளி இருக்கிறார்.

குரு சுட்டிய இடங்களில் அமர்ந்து தியானத்திலிருக்கும் போது, சொர்னரேகையை கண்டிருக்கிறார் மருத்துவர். தியானம் கலைந்து எழுந்திருக்கும் போது, அக்கோவிலில் பூஜை செய்து வரும் அடியவர் வந்து இந்த இடங்களில் எப்படி அமர்ந்திருக்கின்றீர்கள் என்று வினவி இருக்கிறார். குருவின் பெயரைச் சொல்ல, அவர் ஒரு மகான் என்றுச் சொல்லி விட்டு, மருத்துவரை அழைத்துச் சென்று வெள்ளிக் கவசத்தில் இருக்கும் சொர்ணரேகையைக் காட்டி இருக்கிறாஅர் அந்த அன்னைக்கு அடியவர். இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெற்றும் பொருளின் மீதும் எந்த வித ஆர்வமுமின்றி எளிய தவ வாழ்க்கையை வாழ்ந்து குருவின் திருவடியில் ஐக்கியமாகி இருக்கிறார் மருத்துவர் நாகராஜ் அய்யா அவர்கள். சொர்ணரேகை சக்கரம் எழுதத் தெரிந்தவர். அதை அவர் என்றைக்கும் தனக்காக செய்து கொள்ளவில்லை.

இதைப் போல இன்னும் எண்ணற்ற ஆச்சரியமளிக்கும் அற்புதங்களை நிகழ்த்திய குருவுடன் பயணித்தவர் இவர். இவரின் தவ வாழ்க்கையின் பலனாக, ஒரு குருவிற்கு சீடன் செலுத்திய குருபக்தியாக மலர்ந்து நிற்கிறது ஆலயம்.

அந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் எம் குருவின் ஆசியால் லட்சணக்கானவர்களின் துயர் துடைக்கப்படும். ஜீவசமாதி ஆலயங்களைத் தரிசிக்க அனுமதி பெற்றவர்களே வர இயலும். தாங்கள் செய்த கர்ம வினைகள் தங்களை அழித்திடா வண்ணம் குருவானவரே பாதுகாப்பார். அவ்வாறே இதுகாறும் என்னையும், என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆன்மீக அன்பர்களையும் குரு பாதுகாத்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து தவ வாழ்வு வாழ்ந்து வரும் என் சகோதரியும், மருத்துவரின் மகளுமான ராஜேஸ்வரி அவர்களுக்கும், சுவாமி ஜோதி அவர்களுக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் இவ்வுலகிற்கு தன் குருவின் ஆசி கிடைத்திட விட்டுச் சென்ற தொண்டினை தொடர்ந்து நடத்தி வர தம் குருவுடன் இணைந்து ஆசி வழங்குவார்.

குருவின் எல்லையில்லா கருணை மழையில் நாமெல்லாம் ஆனந்தமாக வாழ்ந்திடவும், பாதுகாப்பாய் இருந்திடவும் மருத்துவர் அய்யா அவர்களின் ஜீவ ஐக்கியத்தினை நினைவு கூர்ந்து, அவரின் ஆசி பெற விழைவோம்.

அன்புடன்

கோவை தங்கவேல்

08/11/2020 அன்று மருத்துவரின் மறைவுக்காக எழுதிய அஞ்சலிக் கட்டுரை.

Tuesday, February 24, 2015

குரு பூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே, வருகின்ற 01.03.2015 தேதியன்று கோயமுத்தூர் மாவட்டம், முள்ளங்காடு, பூண்டியில் அமைந்திருக்கும் எமது குரு நாதரின் ஆஸ்ரமத்தில் குருபூஜை விழா சிறப்புற நடைபெற உள்ளது. ஆன்மீக நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு குருவின் அருள் பெற வேண்டுகிறேன்.



Friday, July 11, 2014

எனது பிறந்த நாள் கொண்டாட்டம்

ஜூலை 1 அடியேனின் பிறந்த தினம். காலையில் பசங்களை பள்ளிக்கு அனுப்பி விட்டு, மனையாளுடன் வெள்ளிங்கிரி நோக்கிக் கிளம்பினேன். பூ மார்கெட் சென்று கொஞ்சம் மலர்களை வாங்கிக் கொண்டு, அப்படியே கோவைக் கொண்டாட்டம் அருகில் இருக்கும் காய் கறிக்கடையில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கிக் கொண்டு குஷி மூடுடன் ஆக்டிவாவை விரட்டினேன். குளுகுளுன்னு காற்று வீச மனது மலர்ச்சியுடன் இருந்தது.

சிறுவாணிக்குச் செல்லும் சாலையில் இருந்து செம்மேடுக்குப் பிரியும் சாலைக்கு முன்னே, இடது பக்கமாய் ஒருவர் இள நீரை மரத்தில் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். அங்கு நிறுத்தி ஒரு இள நீரை வாங்கிப் பருகினேன். வெகு சுவையாக இருந்தது. அப்படியே இன்னொரு இள நீரை வாங்கி வைத்துக் கொண்டு கிளம்பினேன்.


ஸ்வாமியிடம் சென்று மலர்களை வைத்து  அலங்கரித்து அவரின் நெஞ்சின் மீது மலர்ந்திருக்கிறது ஒரு தாமரை மலர்,  அதை அவருக்குச் சூடி விட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனையாள் வாசியோகப்பயிற்சியில் அமர்ந்திருந்தார்.

அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அமைதியாக இருந்தது. ஒரு சத்தம் இல்லை.

எனது குரு ஜோதி ஸ்வாமி வர அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.

இனி அடுத்த வருடம் வரைக்கும் அந்த அமைதி என்னுள் இருக்கும்.

எனது பிறந்த நாள் கொண்டாட்டம் கேக் இல்லாமல், புதுத்துணி இல்லாமல், மிட்டாய்கள் இல்லாமல், நுகர்வோர் கலாச்சார அடிமையாகாமல் அமைதியாய்க் கழிந்தது. 

பிறந்த நாள் அன்று அன்னையிடமும், குருவிடமும் ஆசி வாங்குவதை விட இந்தக் கொண்டாட்டங்களால் என்ன பயன்? என்று எனக்குத் தெரியவில்லை.

* * *



Wednesday, April 16, 2014

குக்கூச் சத்தமும் ஒரு அனுபவமும்





சித்திரை ஒன்றாம் தேதியன்று அன்று குருநாதர் ஆசிரமத்திற்குச் சென்று அவரிடம் அமர்ந்திருந்தேன். ஏகப்பட்ட நபர்கள் வந்து குரு நாதரை வணங்கிச் சென்றார்கள். அங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதாவது கொண்டு வந்து அவரிடத்தின் முன்பு வைக்கின்றார்கள். பக்தி என்பதை விட குருநாதரின் மீதான அன்பின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி வைத்திருந்த பலாப்பழம் அன்றுச் சரியான மணத்துடன் நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.

குருநாதர் அமைதியாக யோகத்தில் இருந்தார்.

அவரிடம் உட்கார்ந்திருந்தாலே அமைதி, ஆனந்தம் தான். குளிர்ச்சி தவழும், அமைதியான அவ்விடத்தில் அமர்ந்திருப்பதே ஒரு கொடுப்பினை தான். விழித்திருக்கும் போது ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லாது எங்கெங்கோ அலைபாயும் மனம் அவரிடத்தில் அமர்ந்திருக்கும் போது அமைதியுடன் இருக்கும்.

சிறிது நேரம் கழித்து, குரு நாதரின் அறையிலிருந்து வெளியில் வந்து எம் குரு ’ஜோதி சுவாமி’களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது குருநாதரைச் சந்திக்க வந்த அன்பர், குருநாதருடன் நேரடியாகப் பேசிப் பழகி மருத்துவ சிகிச்சை பெற்ற திரு.கனகராஜைச் சந்தித்தேன்.

திரு.கனகராஜ் இ.எஸ்.ஐயில் பணி செய்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு நோய்க்காக அலோபதி மருத்துவம் பார்த்திருக்கிறார். ஒரே ஒரு மாத்திரைதான் சாப்பிட்டாராம். எழுந்து உட்கார முடியவில்லை என்றார் அவர் கண்களில் ஒளி மின்ன.

இனி கனகராஜ் முடிந்தான் என்றுச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள். எல்லாமே படுக்கையில் என்றாகி விட்டதாம். அலோபதி மருத்துவமும் கைவிட அவர் தன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று முடிவு கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவரின் நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ”முள்ளங்காடு வெள்ளிங்கிரி சாமிக்கிட்டே போ!” என்றுச் சொல்லி பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

உடம்பு முழுவதும் வீங்கிப் போய், நடக்க முடியாமல், உட்கார முடியாமல் பேருந்திலிருந்து நடத்துனர் இறக்கி அங்கேயே விட்டு விட்டுப் போய் விட்டாராம்.

அங்கிருந்து நடக்க முடியாமல் உருண்டே ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறார். சாமி அவரைப் பார்த்ததும் பதியில் இருந்த ஒரு சிலரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் போய் சிவனார் வேம்பு என்கிற மூலிகையின் வேரினைப் பறித்து வர சென்றிருக்கிறார்.

”கை பெரிசு சார், பச்சைப் பசேல்னு இருந்தது” என்றார் கனகராஜ்.

கை அளவு பெரிய சைஸ் சிவனார் வேம்பின் வேரை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து கனகராஜிடம் கொடுத்து இதைக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் வா என்றுச் சொன்னாராம்.

யார் யாரையோ பிடித்து வீட்டுக்குச் சென்ற கனகராஜ், தன் அம்மாவிடம் வேரைக் கொடுத்து இதை அரைத்துத்  தா என்றுச் சொல்லி படுக்கையில் படுத்து விட்டாராம்.

என் அம்மா அந்த வேரை எப்படித்தான் அரைத்தாரோ தெரியவில்லை. என்றார் கனகராஜ். ஒரு குவளை அரைத்த பச்சைப்பசேல் விழுதினை குடித்து விட்டு படுத்திருக்கிறார். அது நாள் வரை தூக்கமே இல்லாமல் இருந்தவர் நன்கு தூங்கியிருக்கிறார். மறு நாள் எழுந்து விட்டார்.

”ஆச்சரியம்! அதிசயம் !!” என்றார்.

”இன்று உங்கள் முன்பு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றுச் சொல்லி தலைமேல் இருந்த குரு நாதரின் புகைப்படத்தைப் பார்த்துச் சிரித்தார் அவர்.

”அது இருக்கும் ஒரு இருபதாண்டுக்கும் மேல்” என்றார் தொடர்ந்து

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

எம் குரு ’ஜோதி சுவாமி’ புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார்.

அப்போது குரு நாதரின் அறைக்குள்ளிருந்து ”குக்கூ குக்கூ” என்றொரு சத்தம் வர ஆரம்பித்தது.

உள்ளே பார்த்தேன். வெள்ளுடை உடுத்திய தேகப்பொலிவுடன் பெரியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரிடமிருந்து தான் அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது.

“சாமி, அவர் என்ன செய்கிறார்?”

“வாசியோகத்தில் உள்மூச்சுப் பயிற்சியில் தியானத்தில் இருக்கிறார்”

“அப்படின்னா?”

“அவர் இப்போது மூச்சினை வெளியில் விடுவதும் இல்லை, உள்ளே இழுப்பதும் இல்லை, உள்ளுக்குள்ளேயே மூச்சினை செலுத்திக் கொண்டு தியானத்தில் இருக்கிறார்” என்றார்.

அந்தப் பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனசு சலனமற்று இருந்தது.

உள்ளே குரு நாதர் அமைதியுடன் யோகத்தில் உட்கார்ந்திருந்தார்.



Friday, June 28, 2013

திருமந்திரம் இசைத்தட்டு வெளியீடு விழா - வெள்ளிங்கிரி சுவாமிகள் ஆஸ்ரமம்


தமிழகத்தின் முதல் சாத்திர நூல் திருமந்திரம். திருமூலர் அவர்கள் திருவாவடுதுறையில் தங்கி இருந்து மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடியதாக கருதப்படும் திருமந்திரத்தினை ஒலி வடிவில் இசைத்தட்டாக எனது உயிரோடு உயிராய் நின்று எனக்குள்  நிறைந்திருக்கும் எனது குரு நாதரின் அருமைச் சீடரும், துன்பம் வரும் முன்பே ஓடோடி வந்து நின்று காத்தருளும் ஜோதி ஸ்வாமிகளின் குரலில் வெளிவருகிறது.

கோயமுத்தூரின் அடையாளம், கோவைக்கு உயிர் கொடுத்து வரும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் எனது குரு நாதர் சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதியில், ஜூலை மாதம் 20 ஆம் தேதி, 2013, ஆடி மாதம் 4ம் தேதி சனிக்கிழமை அன்று மூன்று மணி அளவில் வெளியீட்டு விழா நடக்கிறது.
இசைத்தட்டு இலவசமாய் வழங்கப்படுகிறது. கோவையில் இருக்கும் நண்பர்கள் விழாவில் அவசியம் கலந்து கொண்டு திருமூலர் வழங்கிச் சென்ற திருமந்திரத்தின் இசைத்தட்டினைப் பெற்றுச் செல்ல அழைக்கிறேன்.

சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வழி :

ஈஷா யோகமையம் செல்லும் வழியில் முள்ளங்காடு செக்போஸ்டில் இடதுபுறம் திரும்பினால் சுவாமியின் ஆஸ்ரமத்திற்குச் செல்லலாம். 

ஜோதி ஸ்வாமிகளை தொடர்பு கொள்ள : 9894815954

திருமந்திரத்திலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக இங்கே !

பாடல் 85 :
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

பாடல் : 270
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பாடல் :1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.