குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, December 16, 2010

தெய்வம் இருக்கிறதா? இல்லையா?

ஆத்தீகம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாத்தீகம் பற்றிய அனுபவ கதைகள் குறைவு என்பதாலும், நாத்தீகம் பேசிய தலைவர்கள் பிற்பாடு ஆத்தீகத்தின் பால் ஈடுபாடுடையவர்களாய் மாறிய கதைகளைக் கேட்டதாலும் நாத்தீகம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றுச் சொல்வார்கள். இம்மாதம் முழுவதும் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். மார்கழி மாதத்தில் எங்கள் வீட்டில் முதல் தேதியன்றி தாதர் சங்கும், சிகண்டியும் அடித்துக்கொண்டு விடிகாலையில் வீடுதோறும் வருவார். அவர் முகத்தைக் காண நான் பல முறை முயன்றிருக்கிறேன். தைமாதம் நெல் வாங்க வரும்போதுதான் அவர் முகத்தைப் பார்க்க முடியும். போர்வை போர்த்திய உடல், கையில் சங்கு, சிகண்டியை அடித்துக் கொண்டே வீடுதோறும் வேக வேகமாய் நடந்து செல்வார். அம்மா, பரங்கிச் செடியின் பூவினைப் பறித்துக் கொண்டி, மாட்டுச் சாணத்தில் சொருகி வைப்பார். பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து, கோலமிட்டு, அதன் மீது பூசணிப்பூவை வைத்து, பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி சங்கினை முழக்குவார். நான் அவரருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.
தினந்தோறும் பூசணிப்பூ வாசலில் மலர்ந்து இருக்கும். மாக்கோலமிடுவதால் வெயில் ஏறுகையில் எறும்புகள் படையெடுக்கும் சாரை சாரையாய். மார்கழி மாதம் முழுவதும் அம்மா இடும் கோலத்தைப் பார்க்க விடிகாலையில் எழுந்து விடுவேன். இப்படியே செல்லும் அந்த மார்கழி முழுவதும்.

நிற்க.

காதல் திருமணம் முடித்து வீட்டில் மனைவியை விட்டு விட்டு தொழில் பார்க்க வெளியூர் வந்து விட்டேன். அம்மாவிற்கும், சுற்றத்தாருக்கும் நான் வேற்று ஜாதி பெண்ணை மணந்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பிறப்பிலேயே முரட்டுக் குணமுடையவனாய் இருந்தால் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.அதுவுமின்றி ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதாலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பர்.

மனதுக்குகந்த மருமகள் என்றால் எல்லாம் கிடைக்கும். பிடிக்காத மருமகள் என்கிறபோது மண் சட்டியும் பொன் சட்டிதானே. பொன்னி அரிசி சாப்பிட்டு பழகிய மனைவிக்கு கோ 43 அரிசி சோற்றை வாயில் வைத்தாலே வாந்தி வந்து விடும். அவள் கர்ப்பினியாய் வேறு இருந்தாள். வாயில் வைப்பதும், பின்னர் அதை வெளியில் தள்ளுவதும்தான் வேலையாய் இருந்தாள்.

மனைவிக்கு விடிகாலையில் பசி வந்து விடுவாம். கிராமத்தில் எங்கே விடிகாலையில் சமைப்பார்கள்? சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே? பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது? மிகச் சரியாய் அந்த நேரத்தில் அவளுக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

மார்கழி மாதம் வந்தால் எங்கள் கிராமத்தில் பஜனை செய்வார்கள். விடிகாலையில் பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தவழ ஆரம்பிக்கும். பஜனை முடிந்ததும் சுண்டலோ அல்லது பொங்கலோ சிறார்களுக்கு கொடுப்பார்கள். இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது. எனது மாமாவின் மகன் நாள்தோறும் தவறாமல் பஜனைக்குச் சென்று வருவான். வரும்போது அவன் கையில் பொங்கல் இருக்கும். அந்தப் பொங்கலைச் சாப்பிட்டு மார்கழி மாதம் முழுவதும் பசியாறி இருக்கிறாள் மனைவி. அப்பையன் தற்போது பெரிய ஆளாகிவிட்டான். அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம், விருந்து தடபுடலாய் நடக்கும்.

மகனுடன் எங்காவது வெளியில் சென்றால், கோவிலைப் பார்த்ததும் பய பக்தியுடன் இறங்கி வணங்கி விட்டு வருவான். அப்போதெல்லாம் நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வோம்.

எங்கோ பிறந்து, வளர்ந்தவள் பசித்திருக்கும் போது, யார் மூலமாகவோ அவளுக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவை அனுப்பி வைத்தது யார்?

இனி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். தெய்வம் இருக்கிறதா? இல்லையா என்பதை.

Thursday, September 30, 2010

காதல் திருமணத்தின் பத்தாவது ஆண்டு - அனுபவ வாழ்க்கை

இதோ இன்றைக்கு எனது காதல் திருமணத்தின் பத்தாம் ஆண்டு நாள். பத்து வருடத்திற்கு முன்பு, இன்றைய காலையில் தான் தஞ்சாவூரில் இருக்கும் அய்யனார் கோவிலில் மதியம் பனிரெண்டு மணிக்கு எனது காதலிக்கு திரு மாங்கல்யம் அணிவித்தேன். நான் படிக்க வைத்த மோகன் என்ற பையனும், டிரைவரும் ஆசீர்வாதம் செய்ய ஏதும் இல்லாத காரணத்தால், கோவிலின் அருகில் இருந்த செம்பருத்தி பூவை பறித்து, மலர் தூவினர். எங்கள் கல்யாணம் சம்பிரதாயங்களை மீறிய ஒன்று. எவரும் அய்யனார் கோவிலில் திருமணம் செய்யமாட்டார்கள் என்றுக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அய்யனார் எனக்குப் பிடித்தவர்.

திருமணம் முடிந்த பிறகு தான் அடுத்த போராட்டமே ஆரம்பிக்கும். உறவுகளின் எதிர்ப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நானும் என் மனைவியும் அனுபவிக்க ஆரம்பித்தோம். ஆனால் யாரையும் எதிர்ப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. ஆண்டாண்டு காலமாக இருந்த ஒரு நம்பிக்கைக் கோட்டை இருவரும் தகர்த்தோம். அதன் அதிர்வுகள் தீர நாட்களாகும் என்று நாங்கள் அமைதியாய் வாழ்க்கையின் சிக்கல்களில் மாட்டினோம்.

தொழிலில் 30 லட்ச ரூபாயை இழந்தேன். மாட்ரிட்டில் நடந்த குண்டு வெடிப்பில், நான் இழந்தது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். இருந்த வசதி வாய்ப்பெல்லாம் எங்களை விட்டுக் காணாமல் போனது. ஒரு ரூபாய் காசின்றி இருப்பேன். இந்தச் சமயத்திலும், ஏக்கர் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் நான் எந்த வித உதவியையும் என் வீட்டிலிருந்து எதிர்ப்பார்த்ததில்லை. ஆட்களை வைத்து வேலை செய்தவன், மற்றொருவரிடம் வேலை செய்தேன். இரவு பகல் பாராமல் உழைத்தேன். இந்தச் சமயங்களில் உணவுக்குப் பிரச்சினையாக இருக்கும். இரண்டு வருடம் தினந்தோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டேன். என் பையனும், மனைவியும் சோற்றில் உப்பும், தண்ணீரும் சேர்த்துதான் சாப்பிடுவார்கள். என்றாவது ஒரு நாள் காய் கறிகள் வாங்குவோம். இடையில் வந்து சென்ற தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்த சுவடுகள் இன்றியே சென்றன. புது உடைகள் அணிய பணமிருக்காது. ஆனால் எங்கள் வீட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினையும் யாருக்கும் தெரியாது. அந்தளவுக்கு மனைவி வீட்டினைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள்.

நீண்ட நாட்கள் கழித்து தேடி வந்த உறவுகளை வரவேற்றோம். ஏனென்றால் குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருந்தோம். இக்கால கட்டங்களில் நான் அடைந்த பக்குவங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இன்றைக்கு எங்களது உறவு வட்டத்தில் நாங்கள் ஒரு முன்னுதாரண தம்பதிகள். ஏனென்றால் நாங்கள் வாழ்க்கை என்றால் என்ன என்பதனை நன்கு புரிந்தவர்கள். நண்பர்களும், உறவுகளும், சமூகமும், உலகமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. நாங்கள் எங்களை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டோம். பிரச்சினைகளில் இருந்து தப்பித்து, மற்றவர் பிரச்சினைக்கு ஆலோசனை சொல்லும் இடத்திற்கு முன்னேறி விட்டோம்.

என் மனைவியிடம் “ நீங்கள், ஹீரோயின் மாதிரி இருக்கின்றீர்கள்? எப்படி இவரைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று எல்லோரும் கேட்கின்றார்கள்” என்று ஒரு பெண்மணி கேட்டிருக்கின்றார். அதற்கு என் மனைவி சொன்னது “ என் வீட்டுக்காரரை விட அழகானவர், அன்பானவரை நான் இதுவரை சந்தித்தது இல்லை”.

தாம்பத்தியம் என்றால் விட்டுக் கொடுத்தல் என்று தான் அர்த்தம் வரும். எனக்கு கோபம் வரும். கன்னா பின்னாவென்று சத்தமிடுவேன். ஆனால் அடுத்த நொடி அக்கோபம் என்னை விட்டுக் காணாமலே போய் விடும். ஏனென்றால் கோபம் இருக்குமிடத்தில் தான் குணமிருக்கும் என்பார்கள் என்று என் மனைவி சொல்வார்.

காய்கறிகள் வெட்டுவதிலிருந்து, சமைப்பதிலிருந்து, துணி துவைப்பது வரையில் நான் உதவிகள் செய்து வருவேன். ஏனென்றால் நான் செய்வது என் குடும்பத்திற்கு என்பது எனக்குத் தெரிகிறது.

எங்களுக்கு இரண்டு வாரிசுகள் இருக்கின்றனர். பையன் ரித்திக் நந்தா, பெண் நிவேதிதா இருவரும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

டிவியில் ஒரு நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்தவர்களில் நூற்றுக்கு 90 பேர் பிரிந்து விடுகின்றனர் என்றார். அவர்கள் காதல் செய்யவில்லை. காமம் செய்தார்கள் என்று புரிந்து கொண்டேன்.

காமத்தில் ஆரம்பிக்கும் அன்பு, காதலில் முடிந்து அது குழந்தைகளாய் வடிவெடுத்து வளர ஆரம்பிக்கும் தருவாயில் வாழ்க்கையின் மற்றொரு பாதையில் நாம் பயணிப்போம். அந்தப் பாதையில் நாங்கள் வெற்றிகரமாய் பயணம் செய்கிறோம்.

என் லட்சியங்கள் நிறைவேற நான் மிகக் கடுமையாக உழைத்து வருகிறேன். என்னை உற்சாகப்படுத்தி,ஊக்கப்படுத்தி வருகிறார் மனைவி. இந்த நேரத்தில் என் லட்சியங்கள் வெற்றி பெற, என்னை நெறிப்படுத்தி, ஒழுங்குப் பாதையில் அழைத்துக் கொண்டு, என்னோடு சேர்ந்து வரும் எனது சகோதரருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் என் வாழ்க்கையில் நான் நன்றிச் சொல்ல வேண்டியவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சேர்த்துச் சொல்கிறேன்

“இறைவா எங்களை ஆசீர்வதியுங்கள்”

Friday, September 24, 2010

பஞ்சலோகம் அணிய வேண்டுமா?

சிறு வயதில் காலில் தண்டை அணிவது வழக்கம். ஆனால் மக்கள் தங்களது ஈகோவினால் வெள்ளி, தங்கத்தில் தண்டை செய்து குழந்தைகளுக்கு அணிவிக்கின்றனர். இதனால் எந்தவித பலனும் கிடையாது என்பதுடன், இக்காலத்தில் தங்கம் விற்கும் விலைக்கு, கிலோ கணக்கில் தங்கம் அணிந்தவருக்கு உயிராபத்தும் ஏற்பட்டு விடக்கூடும்.

பஞ்சலோகமான தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட தண்டையை அணிவதால், மனித உடலைச் சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலின் உலோக சக்தியை அதிகரிக்கும். ஏனென்றால் பூமியின் ஒவ்வொரு இடத்திற்கும் உலோக அம்சம் கலந்த மண் வித்தியாசப்படும். இந்த வித்தியாசத்தை நிவர்த்தி செய்வது பஞ்சலோக தண்டை என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். கோவில்களில் சாமி சிலைகள் பஞ்சலோகத்தில் அமைக்கப்படுவதன் காரணமும் இது தான்.

தண்டை என்பது கொலுசு போன்றதாகும். கையிலோ அல்லது கழுத்திலோ அணியலாம்.

உதவிய நூல் : ஓலைச்சுவடி

Wednesday, September 8, 2010

நடிகர் முரளியும் நானும்




முரளி உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எனது நெருங்கிய நண்பரொருவர் நடிகர் முரளியை அறிமுகம் செய்து வைத்தார். அடிக்கடிப் பேசிக் கொள்வோம். வீட்டுக்கு அவசியம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். பையன் அதர்வாவின் திரைப்படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டார். படம் வெளியானவுடன் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பூவிலங்கு படத்திலிருந்து மனதிற்குள் அச்சாய் பதிந்தவர் நடிகர் முரளி. சமீபத்தில் நடிகை லட்சுமியோடு ஒரு பேட்டியில் அவரைக் கண்டேன்.

அவரின் திரைப்படப் போராட்டத்தை விவரித்தார். ஹீரோவாக கமிட் ஆகி மறு நாள் சூட்டிங் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, செய்திதாளில் வேறொரு ஹீரோவை போட்டு விளம்பரம் வருமாம். உள்ளுக்குள் கதறிக் கொண்டு அமைதியாகி விடுவாராம். அப்பாவின் படத்தில் நடிக்கும் போது “டேய் கருப்பா” என்ற சத்தத்தைதான் முதலில் கேட்டாராம். சினிமா எல்லோருக்கும் தனது கதவுகளை திறந்து விடுவது கிடையாது. அதிர்ஷ்டமும், மாறாத அர்ப்பணிப்பும், திறமையும் கொண்டவர்களால் தான் வெற்றி பெற இயலும் என்று உணர்த்தினார்.

காலையில் என் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, முரளியின் மரணத்தைப் பற்றிய ஃப்ளாஷ் நியூஸ் பற்றிச் சொன்னதும் பதறிப் போய் விட்டேன்.

வழக்கம் போல அவருக்கு அழைத்தேன்.

மறு முனையில் அதர்வா.


Friday, September 3, 2010

மந்திர தீட்சை




கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சாரதா பெண்கள் கல்லூரி(கரூர், அமராவதிபுதூர்) மற்றும் பள்ளிகள் பத்துக்கும் அடியேன் தான் கம்யூட்டர் சிஸ்டம் அனலிஸ்டாக பணிபுரிந்து வந்தேன். நான்காண்டுகால வாழ்க்கையில், உலகின் மற்றொரு முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

மனிதர்கள் எவரானாலும் அவர்களின் பிறவிக் குணம் என்றைக்குமே மாறாத ஒன்று என்ற மாபெரும் அனுபவ உண்மையை இங்கு தான் நான் கண்டேன். அனுபவம் இல்லாத, இளமையும் இணைந்த இந்தக் கால வாழ்க்கையில், நான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் பெரும் கதைக்கான கருவாக இன்றளவும் என் முன்னே விரியும். உண்மையை மட்டுமே எழுத வேண்டுமென்ற ஆவல் காரணமாய் அதற்கான சந்தர்ப்பம் தற்போது கனியவில்லை. விரிவாக பின்னொரு காலம் அது வார்த்தைகளூடே தன்னை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன் என் மூலமாக.

சென்னையிலிருக்கும் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் திரு கெளதமானந்தாவும், கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் தலைவர் திரு ஆத்மானந்தாவும் நெருங்கிய நண்பர்கள். அப்போது சென்னையிலிருக்கும் ராமகிருஷ்ண மடம், யுனிவர்சல் டெம்பிள் என்ற கோவிலைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஆத்மானந்தா அவர்கள் நிறைய நன்கொடையும், வேலை செய்ய ஆட்களையும் அனுப்பி வைத்தார். ஆத்மானந்தாவுடன் அடிக்கடி சென்னைக்குச் சென்று வருவேன்.

எனது வேலை ரிச்சி தெருவிலிருக்கும் கம்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையோடு. கரூர் ஆஸ்ரமத்தின் கிளையொன்று கோயம்பேடு மார்கெட் பின்புறம் இருக்கிறது. முட்காட்டில் இரண்டு கீற்றுக் கொட்டகையில் 15 அனாதைச் சிறுவர்களோடு, எனது நெருங்கிய நண்பராக இருந்த நாராயணனந்தா என்பவரின் கட்டுப்பாட்டில் அந்த ஆஸ்ரம் இருக்கிறது. இங்கு தான் நானும், ஆத்மானந்தாவும் வந்து தங்கிக் கொள்வோம். நாங்கள் வருகிறோம் என்றுச் சொன்னால் மதியம் காலிஃபிளவர் சாம்பார் மணக்கும். நாராயணனந்தா சாம்பாரில் ஸ்பெஷலிஸ்ட். மாலை எனக்குப் பிடித்த இடியாப்பம் மற்றும் குருமாவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தருவார் நாராயணனந்தா அவர்கள்.

ஒரு முறை, நான் சென்னை ராமகிருஷ்ண மத்தில் சுவாமி ஆத்மானந்தாவுடன் தங்கினேன். அன்பாக கவனித்துக் கொண்டார்கள். அதன் பிறகு சென்னை சென்று வரும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்கி வருவதற்கு நான் அடிக்கடி அந்த மத்திற்கு சென்று வருவேன்.

யுனிவர்ஸல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கான அழைப்பும் வர, நான் கரூர் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த வெள்ளுடை பிரதர்கள் சிலரோடு சென்னைக்குச் சென்றேன். ஆத்மானந்தா என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சென்னை மத்தில் இருக்கும் பகவான் ராமகிருஷண்ர் உயிரோடு இருக்கிறார் என்பார். அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவலிலும், மந்திர தீட்சை வாங்க வேண்டுமென்ற விருப்பத்தின் காரணமாய்த் தான் அங்கு சென்றேன்.

அங்கு தான் பேலூர் மடத்தின் தலைவர் திரு ரங்க நாதானந்தா மகராஜ் என்றவரைச் சந்தித்தேன். எனக்கு மந்திர தீட்சை தந்தார். ஒரு நொடி அவரைப் பார்த்தேன். ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். முடிந்தது. அவர் இறந்து கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஆகிறது. இன்றைக்கும் அவரின் அன்பும், அந்தப் பார்வையும் என்னை விட்டு அகலவே இல்லை.

சில மனிதர்கள் பிறப்பார்கள். இறப்பார்கள். அவர்களில் சிலர்தான் பலர் மனதில் வாழ்வார்கள். இவர்களைத்தான் இறப்பே இல்லாதவர்கள் என்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் எனக்கு தீட்சை அருளிய சுவாமி. திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்காக வாழ்ந்த ஸ்ரீ ரங்க நாதானந்தா அவர்கள் 1908 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் கையால் முதன் முதலில் மந்திர தீட்சை பெற்றுக் கொண்ட பாக்கியத்தை அளித்த இறைவனுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலே இருப்பவர் தான் ஸ்ரீ ரங்க நாதானந்தா. யுனிவர்சல் டெம்பிளையும் பார்க்கலாம்.

என் வாழ்க்கையில் நடந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் தான் மேலே இருப்பது.

Sunday, August 8, 2010

அம்முவும் புஜ்ஜுவும்





அம்முவும், புஜ்ஜுவும் தோழிகள். புஜ்ஜு அம்முவின் பக்கத்து வீட்டுக்கார பெண் குழந்தை. வெகு சூட்டிகையான பெண். அம்முவின் அருமை பெருமைகளை எழுத ஆரம்பித்தால் அது ஒரு அம்முபாரதம் ஆகி விடும்.

அம்மு ஒரு தாதா. புஜ்ஜு ஒரு தாதா. இரண்டு தாதாக்களும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும். வீடே அதகளப்படும். ஞாயிறுகளில் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கும், கலாட்டாவுக்கும் இறுதிப் பரிசு இவர்கள் அம்மாக்களின் மொத்துகள். அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து என்று இரவு வரை நீண்டு கொண்டே இருக்கும் இவர்களின் ராஜ்ஜியம்.




கோவை ஹோப் காலேஜ் - காதலர்கள்

நேற்று நானும் எனது நண்பரும் கோவை ஹோப் காலேஜ்லிருக்கும் ஃப்ரூட் லேண்டில் விற்கப்படும் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தோம். நல்ல கூட்டம். அரை மணி நேரம் காத்திருந்து சூடான, ஆவியில் வேக வைக்கப்பட்ட சோளப்பிஞ்சை வாங்கிக் கொண்டு காரை ஃப்ரூட் லேண்ட் அருகில் இருக்குமொரு சந்தில் பார்க் செய்து விட்டு பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

இந்த ஸ்வீட் கார்ன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. ஆனால் இதன் மேல் உப்பையும், வெண்ணெயையும், லெமன் கலந்த மிளகாய்பொடியையும் தடவி தருவார்கள்.அதைத் தவிர்த்து விட்டுச் சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு மாருதி கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. காரின் சன்னல்கள் லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தன. நண்பர் அதைக் கவனித்து விட்டு என்னிடம் காருக்குள் என்னவோ நடக்கிறது என்றார். மறந்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று சொல்லி விட்டு கார்னில் மூழ்கி விட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த போது கார் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். நண்பர், சார் அங்கே பாருங்க என்று அலறினார். அந்தப் பெண் எங்கள் காருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காருக்குச் சென்றார். நல்ல விளக்கொளியில் அவரைக் கவனித்தபோது திருமணமான பெண் என்று தெரிந்தது. ஏன் தவறாக நினைக்க வேண்டுமென்று சொல்லி அந்தப் பெண்ணின் உறவுக்காரராக இருக்கும் என்று நண்பரிடம் சொன்னேன். அதற்கு நண்பர் என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

அந்தப் பையனை பாருங்க என்றார். கல்லூரியில் படிக்கும் பையன் அவன். காரின் பின் சீட்டிலிருந்து டிரைவர் சீட்டுக்கு மாறி காரை எடுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பெண்ணும் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றார். இதெல்லாம் நடந்த நேரம் இரவு 7.30க்கு.

நண்பரிடம் இதுவும் ஒரு காதல் தான் என்றேன். தவறாகச் சொல்கின்றீர்கள், இதற்குப் பெயர் கள்ளக்காதல் என்றார்.

கள்ளக்காதல், நல்லகாதல் என்று காதலில் இன்னும் எத்தனை வகைகள் இருக்கின்றனோ தெரியவில்லை. வாழ்க்கையின் போக்கு சிலருக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும். அது மேற்படிச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கும்.

வாழ்க தமிழ் சமுதாயமும், கலாச்சாரமும்

- அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Wednesday, August 4, 2010

அன்றும் இன்றும்


பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது எனது தோழனும், எங்கள் வீட்டு விவசாய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சந்திர போஸுக்கு கல்யாணம் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண் பார்த்து அனைவருக்கும் பிடித்து விட்டது. வீட்டு வாசலில் மாமா, தாத்தா, அம்மா, அக்கா, போஸ் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். நான் அவனிடம் சொன்னேன். போஸு கல்யாணம் முடித்தவுடன் உன் பொண்டாட்டியை கொண்டு வந்து இங்கே விட்டு விட்டு வீட்டுக்குப் போயிடு என்று அவனைக் கலாட்டா செய்தேன். அவனும் சரிடா என்று சொல்லி விட்டான்.

கொஞ்ச நாட்களில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தான். நான் வாசலில் சேரில் அமர்ந்திருந்தேன். அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு என் அருகில் வந்தனர்.

வந்தவன், தங்கம், நான் கிளம்புறேண்டா, அண்ணி கையை பிடித்து என் கையில் கொடுத்து, நீயே பாத்துக்க என்று சொல்ல வெட்கத்தில் நெளிய ஆரம்பித்தேன். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரி சிரி என சிரிக்க ஆரம்பித்தனர். அண்ணியோ ஒரு படி மேலே போய் என்னங்க, ஒன்னும் பேச மாட்டேங்குறீங்க என்று சொல்ல வெட்கத்தில் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

அன்றைக்கு சரியான கலாட்டா.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஓடி விட்டன. போஸின் பையன் இஞ்சினியரிங் படிக்கப் போகிறான். பெண்ணும் படித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு திடீரென்று பலா பிஞ்சு சாப்பிடனும் போல இருக்க, அவனுக்கு போன் போட்டேன். அண்ணி வாய்ஸ் கேட்டது. என் குரல் கேட்டவுடன் அடையாளம் தெரியாமல் போஸிடம் கொடுத்து விட்டார்கள்.

டேய் போனைக் அங்கே கொடுடா என்றேன். அண்ணி வாங்கிப் பேசினார்கள்.

என்ன அண்ணி, அப்படியே தான் இருக்கின்றீர்களா? இல்லை வயதாகி விட்டதா என்றேன். ஏன் நீங்களே வந்து பாருங்களேன் என்றார். நீங்க அப்படியே இருந்தா, வந்து கூட்டிக்கிட்டு வருகிறேன். என்னுடன் வருகின்றீர்களா என்றேன். அவரும் உடனே கிளம்புன்னு சொல்லுவாரு, நீங்க வாங்க உங்க கூட வந்துடுறேன் என்றார். சிரி சிரியென்று சிரித்தேன்.

அருகில் அமர்ந்திருந்த என் மனைவி, உங்களுக்கு ரொம்பவும் தைரியம் தான் என்றாள். அவ்ளுக்கு எங்கே தெரியப்போகிறது எங்களைப் பற்றி?

போஸிடம் பலா மோசு அனுப்பி வை என்றுச் சொன்னேன். இப்போ எங்கேடா போறது என்றான். அம்மாகிட்டே சொன்னேன், அவங்க உன்னிடம் சொல்லச் சொன்னாங்க, சொல்லிட்டேன் என்றேன். எங்காவது பிடித்து அனுப்பி வைப்பான்.

எனது உயிரோடு கலந்து, என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போஸ் அடுத்த பிறவியில் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.

* * * * *

Tuesday, August 3, 2010

கோவைக்கு வந்த முதல்வரும் இந்திய ஜன நாயகமும்


மதியம் பனிரெண்டு மணிக்கு காந்திபுரம் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் ட்ரெண்டியில் சென்று கொண்டிருந்தேன். நேற்றைக்கு சற்றே வெயில் கடுமையாக இருந்தது. குளிர் காற்று வீசினாலும் வெயிலின் சூடு உடம்பிலேறி வியர்வை பெருகியது. என்னடா இது கோவைக்கு வந்த சோதனை என்று வெயிலை நொந்து கொண்டு எரிச்சலுடன் காந்திபுரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நேரம் வெயிலில் நிற்க முடியவில்லை. சோர்வும், எரிச்சலும் ஒரு சேர வந்தன. மனதில் அயர்ச்சியும் ஏற்பட்டது.

இள நீர் கடையில் செவ்வெளநீர் ஒன்றை பருகினேன். கடைக்காரர் புன்னகை முகத்தோடு பேசினார். வெயில் ரொம்ப போலிருக்கு என்றேன். அடுத்த வார்த்தையாக அயோக்கியப்பயல்கள் அதிகம் சார் அதனால் தான் வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறது என்றார். அயோக்கியப் பயல்களுக்கும் வெயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

அவினாசி சாலை முழுதும் துடைத்து வைத்தாற்போல இருந்தது. இருபக்கமும் வழி நெடுகவும் காவல்துறையினர் பத்தடிக்கு ஒருவராய் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ஒருபக்கம் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் மறுபக்கம் சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள்.

முதல்வர் வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்வார். நீங்கள் எதற்கு இப்படி வேகாத வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கத் தோன்றியது. கேட்க முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியும், எரிச்சலும் அவர்களுக்கும் ஏற்படும் தானே என்று நினைத்தேன். ஒருத்தருக்காக இத்தனை பேர் வெயிலில் நிற்கின்றார்களே இது தான் மக்களாட்சியா என்று தோன்றியது.

அரை மணி நேரம் அவினாசி, மசக்காளிபாளையம் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை வண்டிகளும் உறுமியபடியே நின்றன. வெயிலும், டீசல் பெட்ரோல் புகையும் சேர்ந்து கருக்கி எடுத்தன. தீங்கு விளைவிக்கும் புகையினை சுவாசித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் பத்திரமாய் ஹோட்டலுக்கு சென்று சேர எத்தனையோ பேரின் உடலாரோக்கியம் கெட்டது.

ஏன் நிற்கிறோம் என்று யோசித்தேன். இந்திய ஜன நாயகத்தின் காரணமாய் நிற்கிறாய் என்றது மனது.

உண்மைதானே?


* * * * *

Monday, August 2, 2010

மனிதர்களுள் மாணிக்கங்கள் - குமார்





கோவை மசக்காளிபாளையத்தில் சில நண்பர்களுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். சில்லிட்ட காற்று உடம்பைத் தழுவ அந்தச் சமயத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்புடன், அருகிலிருந்த பேக்கரியில் லெமன் டீ ஆர்டர் செய்தோம்.

கம கம வாசனையுடன் லெமன் டீ சாப்பிட்டு விட்டு, எதிர்ப்புறமாக இருந்த அகண்ட சாலையில் காருக்குள் அமர்ந்து கொண்டு சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்த போது, மீன் வறுவல் வாசத்தை, காற்று எங்களிடம் கொண்டு வந்தது.

ஒரு தள்ளுவண்டியில் மீன் வறுத்துக் கொண்டிருந்தார்கள். சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று தட்டுகள் நிறைய மீனை வறுத்தவர், அந்த எண்ணெயை அருகில் இருந்த சாக்கடையில் கொட்டினார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. என்னடா இது உலக அதிசயம் என்று எண்ணி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதற்குள் நண்பரொருவர் ஒரு தட்டு வறுவல் மீனை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

சார் என் கடைக்கு நிறைய கஸ்டமர்ஸ் இருக்காங்க. சின்னப் பிள்ளைகள் நிறைய பேர் வருவார்கள். இரண்டு லிட்டர் பாமாயிலை மீன் வறுத்தவுடன் கொட்டி விடுவேன். மேலும் மேலும் எண்ணெய் சேர்த்து வறுப்பது கிடையாது. என்னால் பிறரின் உடலுக்கும், குழந்தைகளின் நலத்துக்கும் தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சார் அடிக்கடி எண்ணெயை மாற்றுகிறேன் என்றார்.

ஆச்சர்யம். மீந்து போன பொருட்களை மறு நாள் சூடாக விற்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் வெளியிட்டு மகிழ்வார்கள். கால்வதியான மருந்துப் பொருட்களை விற்பவர்களும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்கும் பன்னாட்டு விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழிலதிபர்கள் என்று அவார்டுகளை வழங்கும் நமது அரசாங்கம். வியாபாரம் என்ற பெயரில் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற கொலைகாரர்கள் உலவும் இந்தப் பூமியில் தன்னை நம்பி சாப்பிட வரும் மனிதனின் நலத்தில், கவனம் வைத்துச் செயல்படும் மிஸ்டர் குமார் என்பவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் இவர்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மனித நேயம் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிய வருகிறது.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Thursday, June 10, 2010

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

நிவேதிதா எல்கேஜி படிக்கிறார். நான்கு வருடங்களாக எங்கும் செல்லாமல் கூடவே இருந்த செல்லமகளை பள்ளியில் அட்மிஷன் செய்து விட்டு வந்தோம்.

இரண்டு நாட்கள் கழிந்த பிறகு அவர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். வேனில் பயணம். மாலை நான்குமணிக்குத்தான் வருவார். அவர் கூடவே ரித்திக் நந்தாவும் செல்கிறார். அட்மிஷன் போட்டு விட்டுவந்த பிறகு மனசுக்கு பாரமாக ஆகிவிட்டது. இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.

நிவேதிதாவின் அம்மா என்னிடம் சரியான ரகளை செய்து கொண்டிருந்தார். பிள்ளையை கூடவேவைத்திருக்கப்போகின்றீர்களா என்று வம்பு செய்து கொண்டிருந்தார். எனது சோகத்தைப் பார்த்துசிரித்துக் கொண்டிருந்தார். பிள்ளை படிக்கப் போகிறாள் அதற்கு ஏன் இத்தனை அழிச்சாட்டியம்செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டார். ஆனால் அவர் என்ன சொன்னாலும் மனசுக்கு அதுதெரியவில்லை.

அந்த இரண்டு நாட்களும் சோகமாகவே கழிந்தது. திங்கள் அன்று ஆறு மணிக்கு நிவேதிதா எழுந்துகுளித்து விட்டு சாப்பிட்டு விட்டு ஜம்மென்று பள்ளிக்கு கிளம்பினார். வேனில் ஏற்றி விட்டு வந்தநிவேதிதாவின் அம்மா என்னிடத்தில் வந்து நின்றார். என்னவென்று அவர் முகத்தை நோக்க, கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது இதுதானோ?

Sunday, May 30, 2010

வாழ்வின் சூட்சுமம் தெரிந்த நாள்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மெட்ரிக் பள்ளியின் கணிணி ஆசிரியராகவும், இரண்டு சாரதா கல்லூரி மேலும் ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பள்ளிகளின் கணிணி நிர்வாகியாகவும் பணி புரிந்த போது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

ஊனத்தின் காரணமாய் எனக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையின் காரணமாக திருமண வாழ்வு பற்றி நான் என்றைக்கும் எண்ணிப் பார்த்தது இல்லை. எதை வேண்டாமென்று எண்ணுகிறமோ அந்தச் சூழலில் தான் நீ வாழ வேண்டுமென்று கடவுள் நினைத்தானோ என்னவோ தெரியவில்லை நான் வேலை செய்தது மகளிர் கல்லூரியில். ஆனால் இருந்ததோ சாமியார்கள் அருகில்.

தனி அறையும் அட்டாச் பாத்ரூம் வசதியுடன் மிகவும் வசதியாக தங்கி இருந்தேன். அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கும். யாராவது கெஸ்ட் வந்தால் அவர்கள் என்னுடன் தங்கி இருப்பர். அப்படி ஒரு நாள் வந்தவர்தான் பசுபதீஸ்வரானந்தா அவர்கள். வயது 96 இருக்கும். கை கால்களும் ஒரு தாள லயத்தில் உதறிக் கொண்டிருந்தன. தலையோ நிற்காமல் அங்குமிங்கும் ஆடியபடியே இருந்தது. கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார். தலையாட்டத்தின் காரணமாய் கண்ணாடி கழன்று விடாமல் இருக்க அழுக்கேறிய கயிறு ஒன்று தலையைச் சுற்றி கட்டியிருப்பார்.

என்னைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். விடிகாலையில் நான்கு மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. வலது காலின் கட்டை விரலை ஊன்றி லங்கோடுடன் சுமார் முக்கால் மணி நேரமாய் ஆடாமல் அசையாமல் கல்லில் வடித்த சிலைபோல நின்று கொண்டிருந்தார் பசுபதீஸ்வரானந்தா. ஆடிய தலையும், கைகால்களும் ஆடாமல் அசையாமல் இருந்தன. முக்கால் மணி நேரம் சென்ற பிறகு பத்து நிமிடம் நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் பாத்ரூமிற்குள் சென்று குளித்தார். விபூதி அணிந்தார். கட்டிலில் உட்கார்ந்தார். அதன் பிறகு தலையும், உடலும் ஆட்டம் போட்டன. போர்வைக்குள்ளிருந்து நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டார். இல்லையென்றேன். அதைப் பற்றி யோசிக்கவே இல்லையென்றேன். உனக்கு திருமணம் நடக்கும். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இருப்பார்கள். தெய்வமே உனக்கு மனைவியாய் வரும் என்றார். சாமி, ஏன் சாமி இப்படி ரகளை செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டேன். நான் கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றும் அதுதான் என் ஆசையென்றும் சொன்னேன். ஆத்மானந்தா சொன்னாரா என்று கேட்டு விட்டு தொடர்ந்தார்.

என் இளவயதில் நானும் கடவுளைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சாமியாராய் மாறினேன். இமயமலை சென்றேன். ரிஷிகேஷ் சென்றேன். திருவண்ணாமலை சென்றேன். எனக்குத் தெரியாத யோகமும் தவமும் இல்லை. சாப்பிடாமலயே ஒரு வருடம் கூட இருப்பேன். தியானத்தில் ஆழ்ந்தால் எத்தனை நாட்களோ தெரியாது. அப்படிப்பட்டவன் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேட்டுக் கொள் என்றுச் சொல்லி தொடர்ந்தார்.

இன்னும் சில வருடங்களில் நான் இறந்து போய் விடுவேன். நான் செய்த இத்தனை தவத்தினாலும் யோகத்தினாலும் இதுவரை கடவுள் எனக்கு காட்சி தரவே இல்லை. கடவுளைப் பார்க்காமல் விடமாட்டேன் என்று இமயமலையில் திரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்ப்பட்ட சாமியார் சொன்னார் ” நீயே தெய்வம் ”

அன்றைக்கு புரிந்தது எனக்கு. என் கடந்து போன நாட்கள் இனிமேல் கிடைக்குமா? கிடைக்காது. இதோ என் வாழ்வையும் சேர்த்து நீ வாழ். நீ விரும்புகிறாயோ இல்லையோ உனக்கு திருமணம் நடக்கும். குழந்தைகள் பிறக்கும். ஒவ்வொரு கட்டமாய் நீ பக்குவப்படுவாய். வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்.

இதோ எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். மனைவி என்னை தன் குழந்தை போல கவனித்துக் கொள்கிறாள். என் தாய் என் மனைவியைப் பார்த்து என்னிடத்தில் சொன்னார் “ நான் உன்னிடத்தில் எப்போதும் இருப்பேன்” என்று.

”நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை ” :- இயேசு நாதர்.

Friday, May 28, 2010

அண்ணனின் தவிப்பறியா மறைந்த தங்கையின் கதை

எனது இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் எனது ஊனத்தின் காரணமாய் தட்டிக் கழிக்கப்பட்டன என்பது இன்றைக்கும் என்னால் மறக்க முடியாத ஒன்று. இதுவரையிலும் எந்த ஒரு கல்யாண வீட்டிலும் சாப்பிட்டது கிடையாது. காரணம் எனது ஊனம். இளமைக்கால வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியிலும் ஊனத்தை நினைவுபடுத்தும் சம்பவங்களே என்னைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டு கூடவே வந்தன. அதன் காரணமாய் நான் அடைந்த மனத்துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு ஏதுமின்றியே என் நாட்கள் கழிந்தன.

நட்பு என்பதும் உடலை முன்வைத்து வருபவையோ என்று கூட எனக்குச் சில சமயம் நினைக்கத் தோன்றும். அதற்கு சில சம்பவங்களும் சாட்சியாய் என் முன் வந்து நிற்கும். இப்படி நான் கடந்து வந்த வாழ்க்கையின் நாட்கள் இன்றைக்கும் எனது இரவுகளில் கனவுகளின் மீட்சியாய் என் முன்னே நின்று தன் எச்சத்தை என் மீது உமிழ்ந்து விட்டுச் சென்ற பிறகு தூக்கம் வராமல் அவதிப்படுவேன்.

எனது மேல் நிலைப் பள்ளிப் படிப்பு எனக்கு மிகவும் கசப்பானவையாக இருந்தது. காரணம் நான் விரும்பிய படிப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியும், புனல்வாசலில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியும் என் ஊனத்தை முன் வைத்து கணிப்பொறிக் கல்வியை தர முடியாது என்று சொன்னது. ஸ்டூலில் ஏறி உட்காரமுடியாது என்று அவர்களாக ஒரு முடிவெடுத்துக் கொண்டு என் ஆசையை நிராகரித்தார்கள். என் கனவு நிறைவேற நான் மேலும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதற்கு நான் பட்டபாடு இருக்கிறதே அதை எழுத்தில் வடிக்க முடியுமா என்றால் மீண்டும் அந்த ஒரு துன்பத்தை அனுபவிக்க வேண்டுமா என்று மனது கேள்வி கேட்கிறது.

என் எம்எல்ஏ உறவினர் ஒருவரின் சிபாரிசில் தான் கணிப்பொறியியல் பட்டப்படிப்பு கிடைத்தது. அதையும் மறைந்த திருமெய்ப்பொருள் என்ற எனது கல்லூரி முதல்வர் மறுதலித்தார். ஆனால் பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளர் திரு துளசி அய்யா வாண்டையார் எனக்கு கணிணி அறிவியல் துறைப்படிப்புக் கிடைக்கவும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். அன்றைக்கு அய்யா கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் எனக்கு கம்ப்யூட்டர் படிப்பு கானலாகவே ஆகியிருக்கும். சரி போகட்டும் பழங்கதை.

எனது பனிரெண்டாம் வகுப்பு முடியும் தருவாயில் பைங்கால் என்ற கிராமத்திலிருக்கும் எனது சித்தியின் வீட்டில் தங்கிப் படித்தேன். என்னை அழைத்துச் செல்வது சித்தியின் மூத்த கொளுந்தனாரின் மகன். அவனும் என்னோடு கீரமங்கலத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்தான். சில உறவுகளின் நினைவுகள் இறக்கும் வரையிலும் மறக்க முடியாதவைகளாக இருக்கும். அப்படிப்பட்ட உறவுகளில் என் தங்கை ஒருத்தியை நான் இழந்து சில இரவுகளில் வரும் அவளின் நினைவுகளின் தொந்தரவால் தவித்திருக்கிறேன். அவள் பெயர் மாலதி. என்னை விட்டுப் பிரிந்த என் உயிருக்கும் மேலான என் அருமைத் தங்கை இவள்.

அடுத்த பகுதி விரைவில்

வாழ்விற்கு தேவை சந்தோஷமா? பணமா?


இன்றைய காலச் சூழலில் மனிதர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். உடல் நலம், மன நலம் பற்றி மனிதர்கள் கொஞ்சம்கூட யோசிக்கும் திறமையற்றவர்களாய் காசுக்கு வேலை பார்க்கும் இயந்திரமாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள். லட்சங்களில் கொடுக்கப்படும் சம்பளம் பின்னர் மால்களின் மூலமாக வசூல் செய்து விடுகிறார்கள்.

வெறும் 200 ரூபாய் பொருமானமுள்ள சாதாரண டிசர்ட் 2000 ரூபாய்க்கு பிராண்ட் பெயரில் விற்கப்பட்டு கொள்ளை அடிக்கப்படுகிறது. பிராண்ட் மோகத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே, ஏமாளிகளாய் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தனது ஈகோவினால் தனது உழைப்பை பிறர் திருடுகிறார்கள் என்பது தெரியாமல் ஏமாந்து போவதுதான் வேதனை.

வாழ்க்கை என்பது வேறு வகையானது. அது கொண்டாடப்பட வேண்டியது. மனித வாழ்க்கையின் தத்துவமே பிறருக்காக வாழ்வது தான். ஆனால் இன்றைய நவ நாகரீக மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

வெறும் பத்து செண்ட் நிலத்தில் தனக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்கும் ஒரு விவசாயியின் பேட்டியைக் படித்துப் பாருங்கள். இந்த விவசாயிக்கு முதலாளி என்று எவரும் இல்லை. காலை 10 மணி இரவு 7 மணி என்ற கணக்கு இல்லை. தானே முதலாளி தானே தொழிலாளி என்று வாழும் இந்த விவசாயியை விடவா நீங்கள் சந்தோஷமாய் இருக்கின்றீர்கள்?



பசுமை விகடனில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதியும், விவசாயியின் புகைப்படமும். நன்றி பசுமை விகடன்

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சிங்கான்ஓடையைச் சேர்ந்த பாஸ்கரன் சொல்கிறார்.

''ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டுஇருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட்) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஓரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு. குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.

நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இருக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு, கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி... இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்'' என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன், பத்து சென்ட் நிலத்தில் புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.

புடலைச் சாகுபடி செய்வது எப்படி என்பது நமக்கு இவ்விடத்தில் தேவையில்லை. பாஸ்கரனின் உழைப்பு என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. உடல் நலம், குடும்ப நலம், சந்தோஷம் போன்றவைகளுக்கு மொத்த குத்தகைதாரராக அல்லவா இருக்கிறார். எங்கே இந்த சந்தோஷமும் நிம்மதியும் உங்களிடம் இருக்கிறதா என்பதை சற்றே நிதானித்து ஆராய்ந்து பாருங்கள்.

அன்புடன் - தங்கவேல் மாணிக்கம்

Tuesday, May 11, 2010

பிரேமானந்தாவுடன் ஒரு நாள்

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் - அலங்கார வளைவுகள், கொடிகள், தோரணங்கள் என்று கல்லூரி அதகளப்பட்டது. வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தேன். பதினோறு மணிவாக்கில் அனைவரும் கல்லூரிக்குள் இருக்கும் மேடைக்கு வரும்படி சர்க்குலர் வந்தது. என்னவோவென்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்குள் இருக்கும் ஹாஸ்டலுக்கு மூன்று சக்கர சைக்கிளில் சென்றேன். கேட்டில் வாட்ச்மேன் நின்று கொண்டு உள்ளே விட மறுத்தார். ஏன் என்று கேட்க, அனைத்து மாணவர்களும் சுவாமி பிரேமானந்தாவின் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று நிர்வாகத்தினர் உத்தரவிட்டதால் ஹாஸ்டல் ஒரு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார். வேறு வழி இன்றி மாமரத்தின் அடியில் இருக்கும் பெஞ்சு ஒன்றின் மீது தஞ்சமடைந்தேன். சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய மீன் குளத்தில்( ஆராய்ச்சிக்காக வளர்க்கின்றார்கள்) பெரிய பெரிய சைஸில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அதையடுத்து பச்சைப் பசேல் வயல்களில் பசுங்கதிர்கள் சலசலவென பேசிக்கொண்டிருந்தன. அதையும் தாண்டி நாகப்பட்டினத்திற்கு ரயில் ஒன்று ஓசையிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது. 

இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே சிவப்புக் கலர் கார் ஒன்றும் தொடர்ந்து பல கார்களும் வந்தன. காரிலிருந்து இறங்கினார் சுருள் முடி பிரேமானந்தா. அதைத் தொடர்ந்து இறங்கினார் திவ்யா மாதாஜி. மஞ்சள் கலரில் சேலை. பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் அழகு. இறங்கியவுடன் தன்னை வரவேற்ற கல்லூரியின் நிர்வாகிக்கு ஒரு ரோஜாவை வரவழைத்துக் கொடுத்தார். கல்லூரிப் பையன்களுக்கு திவ்யாவைப் பார்த்ததும் சுறு சுறுப்பு வந்து விட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு மேடைக்குப் பறந்தனர். கவனிக்க பறந்தனர். கூட்டமெல்லாம் நமக்கு ஒத்து வராது என்ற நினைப்புடன் மெதுவாக ஹாஸ்டலுக்கு மீண்டும் சென்றேன். வாட்ச்மேன் கதவைத் திறந்து விட்டார். அறைக்குச் சென்று ரீகிரியேஷன் ஹாலுக்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். சாமியார் வரப்போவதாக சொன்னார். சரி வரட்டும் என்று குமுதம் புத்தகத்தைக் கையெலெடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

சரியாக ஒரு மணி நேரம் சென்ற பிறகு பிரேமானந்தாவுடன் கல்லூரி நிர்வாகியும் அவர் கூடவே திவ்யா மாதாஜியும் வந்தனர். ரீகிரியேஷன் ஹாலைப் பார்த்தார். நான் பய பக்தியுடன் வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லி, ராஜா என்ன படிக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன். கண்ணை மூடினார் கையை தலைமீது கொண்டு சென்றார். விபூதியாய்க் கொட்டியது. நெற்றியில் கொஞ்சம் இட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பக்தியுடன் பரவசத்தில் ஆழ்ந்தனர். நன்றாகப்படி என்று சொன்னார். அவர் அறையினை விட்டு வெளியே சென்ற பிறகு பின்னால் வந்த திவ்யா மாதாஜி அருகில் வந்து எந்த ஊர், என்ன படிக்கின்றீர்கள் என்றெல்லாம் விசாரிக்க நானும் பக்தியுடன் பதில்களை உதிர்த்தேன். சிரித்துக் கொண்டே ஒரு கையால் தலைமுடியைக் கலைத்து விட்டு அவசியம் ஆசிரமத்திற்கு வரும்படி சொல்லிச் சென்றார்.

அதன்பிறகு நடந்த விஷயம் தான் முக்கியமானது.

அவர்கள் சென்ற பிறகு அறைக்கு வந்த என் தோழர்களும், நண்பர்களும் என் தலைமீது கொட்டப்பட்டிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டனர். ஆனால் வழக்கம்போல திவ்யாவைப் பாத்ரூமில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டனர் என்பது தான் மிகப் பெரிய சோகம். டெர்ம் எக்ஸாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். லீவு முடிந்து வந்து பார்த்தால் அனைவரும் நக்கீரனும் கையுமாய் அலைந்து கொண்டிருந்தனர். என்ன விஷயமென்று பார்த்தால் பிரேமானந்தா மாட்டிக் கொண்டார். திவ்யா தூர தேசம் ஓடினார் என்பது தான். வகையாக என்னையும் நண்பர்கள் சற்று வறுத்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்டிருந்த நல்லம்மா என்ற அழகு தேவதையை அவர் கற்பழித்த விஷயம் தான் இன்னும் என் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது. நக்கீரனில் வெளியிட்டிருந்த அப்பெண்ணின் முகம் அப்படியே இன்னும் என் நினைவில் இருக்கிறது.




Friday, May 7, 2010

பசு ஏறி காளை மரணம்

ஆபிதீன் அவர்ககளின் சிறுகதை “அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு” படித்த போது மட்டுமே நான் மிகச் சந்தோஷமாயிருந்தேன். சிறுகதையென்றால் சிறுகதைதான் போங்கள்.

அன்பு நண்பர்களே, உங்களுக்கும் நிச்சயமாய் சிரிப்பு வரும். படித்து விட்டு அவருக்கொரு பதிலெழுதிப் போடுங்கள். சுகமாயிருக்கும் அவருக்கு.

நன்றி ஆபிதீன் சார்.


link : http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html

Tuesday, May 4, 2010

நன்றி மறவாமை

கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில் பல பள்ளிகளும், இரண்டு பெண்கள் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறித் துறையின் மேற்பார்வையாளராகவும், ஆசிரியராகவும் நான்காண்டுகள் தொண்டு செய்து வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம்தானிது. மேற்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தாளாளராக இருந்தவர் திரு ஆத்மானந்தா அவர்கள். அறுபது வயது இளைஞர். என் வாழ் நாளில் இவரைப் போன்ற மன உறுதி கொண்டவரைக் கண்டதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புக் கொண்ட நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

மாதந்தோறும் இரண்டு தடவையாவது சாமியுடன் காண்டசாவில் சென்னை சென்று வருவேன். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்யூட்டர் நிறுவனத்தில் தான் மொத்தமாக உதிரி பாகங்களை வாங்கி வந்து அசெம்பிள் செய்து கல்லூரியில் கணிணி நெட்வொர்க்கில் இணைப்பேன். அசெம்பிள் என்ற உடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் இந்த சம்பவம்.

ஒரு தடவை ஹிந்து முன்னனி தலைவர் திரு ராமகோபாலன் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கொடுத்திருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பிறகு தான் அவரைச் சந்திக்க முடியும். அவர் தங்கி இருந்த ஹெஸ்ட் ஹவுஸ்ஸின் இடது பக்கத்திலிருக்கும் அறையில் தான் அடியேனின் வாசம். அறை முழுதும் கணிணி பாகங்களாக இறைந்து கிடக்கும். புதிய ஆள் எவராவது பார்த்தால் தீவிரவாதி வெடிகுண்டு தயாரிக்கிறான் என்றே நினைத்து விடுவார்கள். எஸெம்பிஎஸ் மற்றும் பாக்ஸ்களும், மானிட்டர்களுமாய் அறை நிரம்பிக் கிடக்கும். அதனூடே தான் படிப்பது, தூங்குவது எல்லாம்.

திரு ராமகோபாலனுக்கு காவலுக்கு வந்த காவல்துறை அதிகாரி அறையை நோட்டம் விட்டு படக்கென்று கதவைத் திறந்து துப்பாக்கியை நெஞ்சை நோக்கி நீட்டினார் பாருங்கள். அரண்டு விட்டேன். அதன் பிறகு விபரம் சொல்லி ஒரு வழியாக தப்பித்தேன். அன்றிலிருந்து அந்த காவல்துறை அதிகாரிக்கு என்மேல் கொள்ளை அன்பு. சாப்பிட்டீர்களா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதே போல நடு இரவில் ஒரு நாள் நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமம் இட்ட ஒருவரும் அவருடன் மற்றொருவரும் வந்திருந்தனர். வேறு அறைகளில் தங்குவதற்கு இடமில்லாத காரணத்தால் என் அறையில் தங்கியிருக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். இந்து முன்னணியின் ஏதோ ஒரு மாவட்ட தலைவராம் அவர். கூட வந்திருந்தவர் அவருக்கு துணையாக வந்திருப்பார் போல எண்ணிக் கொண்டிருந்த போது இடுப்பிலிருந்து கருப்புக் கலரில் துப்பாக்கியை எடுத்தார் பாருங்கள். நடு நடுங்கிப் போய் விட்டேன். என்னடா இது வம்பு என்று பயந்து கொண்டே அவரைப் பற்றி விசாரித்தேன். போலீஸ் என்று சொன்னார்.

இது போல எண்ணற்ற சம்பவங்கள் ஆஸிரம வாழ்க்கையில் நடந்தது. அதையெல்லாம் தனியாக நாவலாக எழுதலாமென்று இருக்கிறேன். மேலும் சாரு நிவேதிதாவுடன் மூன்று வருடங்களாக தொடரும் நட்பும் மிகப் பெரிய நாவலுக்கான விதையை ஊன்றி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பகவான் ராமகிருஷ்ணரை தரிசித்து விட்டு காரில் அமர்வோம். அதற்கு முன்பே சமையல்காரர் எழுந்து எனக்கும், சாமிக்கும், டிரைவருக்கும் தேவையான காலை உணவைத் தயார் செய்து காரின் பின்னால் வைத்து விடுவார். முதல் நாள் இரவே சென்னையிலிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின்(பிராஞ்ச்) நிர்வாகியிடம் போனில் நானும் சாமியும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விடுவேன். எனக்குப் பிடித்த காலிபிளவர் சாம்பாரும், ரசம்(SUPER TASTY) மற்றும் பிற உணவுப் பொருட்களை திரு நாராயணனந்தா அவர்கள் தன் கைப்படவே சமைத்து வைத்திருப்பார். உணவின் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

சரியாக ஏழு மணிக்கு கார் திருச்சி டூ சென்னை சாலையிலிருக்கும் ஒரு பத்ரகாளி அம்மன் கோவிலின் முன்னால் நிறுத்தப்படும். அங்குதான் எனக்கும், ஆத்மானந்தாவிற்கும் காலை உணவைப் பரிமாறுவார் டிரைவர். சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் உலாவுவார் ஆத்மானந்தா சாமி. நான் காரில் அமர்ந்திருப்பேன். கிளம்பும் தருவாயில் கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு உண்டியல் போட்டு விட்டு வருவார். பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். சமீபத்தில் என் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் சென்று வந்த போது ஒரு அம்மன் கோவிலில் காரை நிறுத்தி சாப்பிட்டோம். ரித்திக்கிடம் பணம் கொடுத்து உண்டியலில் சேர்க்கச் சொன்னேன். நிவேதிதாவையும், ரித்திக்கையும் அம்மனை தரிசிக்கச் சொன்னேன். என் நண்பர் என்னிடம் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அவருக்குத்தான் இந்தப் பதிவு.

Monday, April 26, 2010

மொழி

கனவுகளிடையே வழிந்தோடும்
எண்ணங்களின் நீட்சியாய்
இசையும் பேச்சுமற்ற
பெருவெளியில் நீயும் நானும்
ஏதும் பேசிக் கொள்ளாமலே
அமைதியாய் இருந்த போது
உன் அதரங்களில்
பாம்பு போல நெளிந்த
புன்னகை சொன்னது
மொழி என்பது
சத்தமல்ல என்பதை

*****

Monday, April 19, 2010

ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா?

ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா? (இது ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மட்டும்)

காலையில் சுமார் ஆறு மணி அளவில் ப்ளாக் டீ வித் நாட்டுச் சர்க்கரை. பால் வேண்டவே வேண்டாம். இடையிடையே டீயும், காஃபியும் வேண்டவே வேண்டாம்.

எட்டு மணி அளவில் இரண்டு அல்லது மூன்று எண்ணெய் சேர்க்காத கோதுமை தோசையுடன், புதினாவோ அல்லது கொத்து மல்லியோ அல்லது தக்காளியோ சட்னியாக இரண்டு டீஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளவும். கோதுமை தோசை, மாவு தோசை(இரண்டு மட்டும்), இட்லி இரண்டு மட்டும், சப்பாத்தி இரண்டு(கண்டிப்பாக எண்ணெய் தவிர்க்கவும்). மேலும் கொஞ்சம் பழங்கள் ஏதாவது சேர்த்துக் கொள்ளவும். சீசனுக்கு தகுந்தவாறு பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் சாப்பிடவும்

பின்னர் ஒரு மணிக்கு ஒரு கப் (400கிராம்) சாதத்தோடு, ஒரு கப் கீரை, ஒரு கப் காய்கறியை (கண்டிப்பாக உருளைக் கிழங்கு தவிர்க்கவும்) பருப்போடோ அல்லது குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ செய்து தேங்காய் தவிர்த்து சாப்பிடவும். இதே அளவில் டேஸ்ட் வேறு வேறாக வரும்படி செய்து சாப்பிடவும். கோதுமையில் சாதம் கூட சேர்க்கலாம்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.

இரவு எட்டு மணி அளவில் மீண்டும் கோதுமை தோசையோ அல்லது கோதுமை ரவையோ சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். ஊத்தப்பம் சேர்க்கலாம் அல்லது இடியாப்பம் கூட ஓகே. இரவில் குறைவாக உண்ணும் போது நடு இரவில் பசிக்கும். தண்ணீர் குடித்துக் கொள்ளவும். நாளடைவில் நிம்மதியான உறக்கம் நிச்சயம். குறட்டை வரவே வராது.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.
இது வரையிலும் ஒன்றரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் அருந்தியிருப்பீர்கள்.

மேலும் ஒரு லிட்டரை கூட சேர்த்தால் நாளொன்றுக்கு தேவையான மூன்று லிட்டர் தண்ணீர் தேவை முடிந்து விடும். ஆகையால் இடை இடையே கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

அதிக உப்பு, பால், வெள்ளைச் சர்க்கரை மூன்றையும் நிச்சயமாய் தவிர்த்து விடவும். வெள்ளைச் சர்க்கரை விஷம். இந்தச் சர்க்கரை சேர்த்த எந்த பொருளானாலும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து தவிர்த்து விடவும். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் அதற்கு பதில் அவித்த காய்கறிகளோடு கொஞ்சம் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்ளவும்.

மேலும் இரவில் படுக்கச் செல்லும் முன்பு இரண்டோ அல்லது மூன்று சுமாரான துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளியைச் சாப்பிடவும். காலையில் டாய்லெட் செல்லும் போது வயிற்றைச் சுத்தம் செய்து விடும். நோய் எதுவும் அண்டாது.

மேலும் சில அவசியக் குறிப்புகள் :

புளிக்குப் பதிலாக கொடபுளியை உணவில் சேர்க்கவும். இது கொழுப்பைக் குறைத்து விடும். நாட்டுக் காய்கறிகளைச் சுவையாக செய்து தரும்படி வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி வையுங்கள். உப்பு நாளொன்றுக்கு முக்கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சூடான இடத்தில் நின்று வியர்வை வெளியேறுமாறு செய்து கொள்ளவும். மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். அதற்கு மேல் சேர்த்தால் கொழுப்பு சேரும்.

மட்டன் வேண்டவே வேண்டாம். சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் இரண்டு துண்டு கொஞ்சம் குழம்பு சாப்பிடவும். இதற்கு பதிலாக தொடர்ந்து சற்றே எண்ணெய்,உப்பு தவிர்க்கவும். கோழியில் நாட்டுக்கோழி உத்தமம். மசாலா குறைத்து, எண்ணெய் குறைத்து சமைத்து வாரம் ஒரு முறை உண்ணலாம். மீனில் திருக்கை வேண்டாம். மற்றவை குழம்பு வைத்து சாப்பிடவும். வறுத்த மீண் வேண்டவே வேண்டாம். குழம்பில் கொடபுளியைச் சேர்க்கவும். காரம் கொஞ்சூண்டு சேர்க்கவும். சாம்பாரில் புளி கொஞ்சமாய் இருக்க வேண்டும்.

சாதத்தோடு மோர் சேர்க்கலாம். பசும்பாலில் ஆடை நீக்கிய மோர் நல்லது. தினமும் எக்சர்சைஸ் செய்ய வேண்டியது இல்லை. தேவையென்றால் நடக்கவும். அது போதும். காய்கறிகளில் நாட்டுக்காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகள் தேவையில்லை. தண்ணீர் சத்து அதிகமிருக்கும் உணவுகள் உத்தமம். வியர்வையில் நாம் உண்ணும் உப்பு வெளியேற வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் நூறாண்டுகள் நிச்சயம். இடையிடையே ஏற்படும் காய்ச்சல், சளி தொல்லைகளை எளிதில் சமாளித்து விடலாம். பெரு நோய்கள் வந்தால் வேதனையுடன், விரயமும் உண்டாகும். தமிழக அரசின் இலவச மருத்துவக்காப்பீடு இருக்கிறது என்று எண்ணி ஆப்பசைத்த குரங்காகி விடாதீர்கள் ஜாக்கிரதை.





Tuesday, April 13, 2010

சர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து



சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்
(கடல் கடந்த தமிழ் மருத்துவம் )


மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.


கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே'

அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.


நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.


இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.

இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.


சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.


சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.



நன்றி - தாகம்

Monday, April 12, 2010

புற்றுநோய்க்கு இலவச மருந்து

அன்பு நண்பர்களே,

என் நண்பர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் புற்று நோயினால் அவதிப்பட்டார். முட்கள் கொட்டி விட்டன. கைகால்கள் சிறுத்து விட்டது. சாப்பாடு குறைந்து விட்டது. சென்னையிலிருக்கும் மிகப்பிரபலமான மருத்துவமனையில் மாதந்தோறும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில்தான் ஒரு பச்சிலை மருந்தைப் பற்றி அறிய நேர்ந்து அதை உட்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் பச்சிலை இரத்தத்தில் கலந்து இருக்கும் புற்று நோய்க்கிருமிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுகிறது. சஃபாரி காரில் கோட் சூட்டுடன் தற்போது வெகு சந்தோஷமாய் வலம் வருகிறார்.

பச்சிலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அலோபதி மருத்துவத்தையும் தொடர்ந்தார். புற்று நோய்க்கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அவரின் வாழ்வாதார நாட்கள் அதிகரித்து விட்டன. பழையபடி ஆள் பெருத்து சரியாகி விட்டார்.

இந்த மருந்துக்கு காசு ஒன்றும் தர வேண்டியதில்லை. பச்சிலை கொடுக்கும் இடத்திற்கு சென்று வர வேண்டியது மட்டும்தான் செலவு.

உங்களின் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ மேற்படி புற்று நோய் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும். அந்தப் பச்சிலை எங்கு கிடைக்கிறது என்ற விபரத்தினை அனுப்பி வைக்கிறேன்.

எனது மெயில் அட்ரஸ் : thangavelmanickam@gmail.com


அன்புடன் தங்கவேல்

Sunday, March 14, 2010

ராமேஷ்வரம்

எனது நெருங்கிய நண்பருடன் குடும்பத்தோடு ராமேஷ்வரம் சென்று வந்தேன். கோவையிலிருந்து ராமேஷ்வரம் சென்று வர கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் தூரம்.

மாலை நேரம் 6.10க்கு பாம்பன் பாலத்தில் காரை நிறுத்தி இறங்கினேன். கடற்காற்று பிசிபிசுப்புடன் உடலைத் தழுவ இறுக்கமான மன நிலையிலிருந்த மனசு சட்டென லேசாகியது.

சுற்றிலும் கடல். நடுவே வானவில்லைப் போன்ற பாலம். தனித்தீவாய்க் கிடந்தது ராமேஷ்வரம்.

குளு குளுவென காற்று உடலைத் தழுவ, மாலை நேரத்துச் சூரியன் தகதகவென ஜொலிக்க அந்தக் காட்சிகளைக் கண்ணுற்ற மனசு ஆரவாரித்தது. கடலுக்குள் எழுந்து ஆர்ப்பரித்து வரும் அலைகள் சிறிது நேரத்தில் கடலுக்குள்ளேயே மரித்துப் போவதை பார்த்தேன். எல்லையற்ற பிரபஞ்சத்தில் தூசி அளவே இருக்கும் பூமியில் இரண்டடி அகலத்தில் இயற்கையின் கருணையின் காரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், அவர்களின் ஆசா பாசங்களையும், அதனால் உண்டாகும் பிரச்சினைகளையும், சக மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும், கோடி கோடியாய் பணக்கட்டுகளை பாதுகாப்பாய் வைக்க நினைத்து லாக்கர்களில் மறைத்து வைத்திருக்கும் மனிதர்களையும் நினைத்து சிரிப்புதான் வந்தது. கடலுக்குள் எழுந்து காணாமல் போகும் அலைகளைப் போலே சடுதியில் விதியென்னும் கயிற்றில் உயிரினை விட்டு அம்போவென போவும் மனிதர்களுக்குத் தான் எவ்வளவு ஆசைகள், கொலை வெறி.

தலையில் வெளிச்சப்பொட்டாய் விளக்கு ஒளிர அமைதியாய் சென்னை செல்லும் ரயில் வண்டியொன்று ரயில் பாலத்தில் ஊர்ந்து சென்றது.

ஹோட்டல் ஒன்றில் தஞ்சமடைந்தோம்.

18 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடந்த கோவில். கோவிலின் வரலாறு என்ன? ஏன் அங்கு செல்ல வேண்டும்? அதனால் என்ன பலன்? இப்படி இன்னும் பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்வோம். படிப்பவருக்கு கொஞ்சமேனும் உதவிகரமாய் இருக்கும் இனி வரும் பதிவுகள்.


விரைவில் தொடரும்

Tuesday, February 2, 2010

தகப்பனுக்கும் தாய்மை உண்டு

என் மகள் நிவேதிதா நாப்தலீன் பால்ஸை சாப்பிட்டு விட்டு மயக்கமாகி விட்டாள். வாயில் நுரை தள்ளியது.

டாக்டர் காப்பாற்றுவது கடினம் என்றார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது என்னை மீறி. கைகள் சோர்ந்து விட்டன. மனசு செத்துப் போய் நடை பிணம்போல ஆகி விட்டேன்.

வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த பல பெற்றோர் என் கண்களிலிருந்து தானாக வடிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு உள்ளம் துடித்து அவரவரும் வந்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

விடிகாலை இரண்டு மணி. லேப் டெஸ்ட்டில் நாப்தலீன் பால்ஸ் என்ற விபரம் தெரிய, டாக்டர் என்னிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு ”கவலைப் படாதீர்கள் தங்கம், சாதாரண பிரச்சினைதான், குழந்தைக்கு ஒன்றுமில்லை இப்போதாவது உங்கள் கண்ணீரை துடையுங்கள்” என்றார்.

தாய் தன் இரத்தத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறாள். தந்தை தன் ஆன்ம பலத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறான்.

தாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை சொல்லுகிறது இப்பாடல்.


">

தந்தைக்கும் தாய்மை உண்டு என்பதைச் சொல்லுகிறது கீழே வரும் பாடல்.

">

Thursday, January 28, 2010

பாலும் சோறும் ஊட்டி வளர்த்த அம்மா

">

வேல்முருகனின் குரல் என்னை ஹிம்சைப் படுத்தி விட்டது. துறவிக்கே அம்மாப் பாசம் பாடலாய் பிரவாகமெடுத்தது. பாடலாய் பாடி கண்ணீரில் உழன்றே நன்றிக் கடன் செலுத்த பெற்ற தாயின் உடம்பில் நெருப்பு வைத்தார்.

கோடி கோடியாய் சம்பாதித்துக் குவித்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களால் கூட செய்ய முடியாத செய் நன்றி கடன் தான் அம்மா. உலகையே ஆளுபவர்களால் கூட சாதிக்க முடியாத ஒன்று அம்மாவிற்கான செய் நன்றிக் கடன்.

அம்மாவைப் படுத்தி எடுத்த பாவத்தை என்ன செய்து கழிக்க முடியும்?