குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, February 14, 2026

நிலம் (122) - சென்னை அடுக்குமாடி குடியிருப்பு 2500 கோடி மோசடி

சென்னை கொரட்டூரில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, சுமார் 10,000 பேரிடம் ரூ.2,500 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக ‘Urban Rise’  நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம், இது கோயில் நிலம் எனத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, 2,036 வீடுகளை வாங்கிய மக்கள் கையறு நிலையில் காசை இழந்து நிற்கிறார்கள் என்ற செய்தி படிக்க கிடைத்தது.

நில மோசடி பல வகைப்படும். அதில் இது ஒரு வகை. இதெல்லாம் பில்டருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. 

இந்த மோசடியில் குற்றவாளிகள் யார்? மக்கள். ஏமாந்தது மக்கள். ஆகவே மக்களே குற்றவாளிகள். 

இந்திய ஜனநாயகத்தில் இதுவரையிலும் ஏமாந்து கொண்டே இருப்போர் இந்தியர்களே. அவர்களே குற்றவாளிகள். ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், ஏமாறுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். இதையெல்லாம் சரி செய்யவே முடியாது. 

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சி.எம்.டி.ஏவில் அனுமதி வாங்குவார்கள். அப்போது ஒரு அரசு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவார்கள் - அந்த வக்கீல் எங்கே போனார்? இந்த லீகல் ஒப்பீனியன் தான் - கட்டிட அனுமதி வழங்க பரிந்துரை செய்யும். அந்த லீகல் ஒப்பீனியன் கொடுத்த வக்கீல் யார்? 

அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் போது - வாங்கிய ஒவ்வொருவரும் லீகல் ஒப்பீனியன் பார்த்திருப்பார்களே - அந்த வக்கீல்கள் எங்கே? 

ஒரு நிலத்தின் வரலாற்றை எப்படி ஆராய வேண்டுமென இணையதளங்களில், சோஷியல் மீடியாக்களில் பலரும் பல செய்திகளை சொல்லி இருக்கிறார்கள். இதை ஒருவர் கூடவா பார்க்கவில்லை? லீகல் ஒப்பீனியன் பெறாமலா வாங்கி இருப்பார்கள்?  1912ம் ஆண்டின் சர்வே ரெக்கார்டு எடுத்துப் பார்த்திருக்கலாம். ஆவணப் பதிவுகளை கண்டுபிடிக்க வில்லங்கம் போட்டுப் பார்த்திருக்கலாம். 
நிலம் பற்றிய அத்தனை விபரங்களும் ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் கிடைக்குமே? ஏன் பார்க்கவில்லை?

இந்த நிலத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்று பார்க்கலாம். 

சென்னை, கொரட்டூர் கிராமத்தில் க.ச.எண் 590 மற்றும் 591ல் உள்ள சுமார் 95 செண்ட் நிலமானது சுவாமி கரப்பாத்திர சிவபிரகாச சித்தர் ஜீவசமாதிக்கு சொந்தமானது. 


கல்வெட்டு

கீழே இருப்பது சமீபத்திய கோர்ட் ஆர்டர்


செய்தி கீழே


இந்த நிலமானது சுவாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாட்டுக்கு வரும் மக்களுக்கு அன்னதானம் செய்ய கொடுக்கப்பட்டது என்கிறார்கள்.

ரெவின்யூ ஆவணத்தினை ஆராயாமல் பட்டா கொடுத்தவர்கள் தப்பி விட்டார்கள்.  லீகல் ஒப்பீனியன் கொடுத்த வக்கீல்கள் தப்பி விட்டார்கள்(பிராக்டீஸ் செய்கிறார்கள் என்றுதான் சொல்வார்கள் - மருத்துவர்கள் போல).

இந்த அப்ரூவலே செல்லாது. ஏனென்றால் இந்த நிலத்தினைச் சேர்த்துதான் வீடுகட்ட பிளான் மற்றும் பொது உபயோக நிலம், பிரிபடாத பாக நிலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு இருப்பார்கள். ஆகவே இந்த அப்ரூவலில் இருந்து, கிரையம் செய்த ஆவணங்களில் இருந்து எல்லாமே செல்லாது.

சரி, இதைச் சரி செய்ய முடியுமா? 

அவ்வளவு எளிதானதல்ல. அரசு நினைத்தால் சரி செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்தால் அது சட்ட விரோதம். அப்பாவி மக்கள் என்ற கேட்டகரியில் இதை  சரி செய்யலாம் என்பார்கள். 

அது எப்படிச் சரியாக வரும்? 

ஒரு தவறைச் சரி செய்ய சட்டத்தை மாற்றினால், அல்லது வேறு வழி செய்தால், இதைப் போன்ற பல முறைகேடுகளை நிகழ்த்துபவர்களும், நிகழ்த்தியவர்களும் நிவாரணம் கேட்பார்களே?  

ஒரே ஒரு வழி - இந்த 95 செண்ட் நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப மற்றொரு நிலத்தை வாங்கிக் தருவது மட்டுமே சரியாகும். அதன் பிறகு அந்த மடத்திலிருந்து சம்மதப்பத்திரம் பதிய வேண்டும். இதை கோர்ட் செய்து தர வேண்டும். அரசு செய்யாது. கோர்ட் செய்யுமா என்றால் செய்யும். எப்போது முடியும் எனக் கேட்டால் அது யாருக்கும் தெரியாது.

அவ்வாறு தீர்ப்புக் கொடுத்தாலுமே கோர்ட்டில் இந்த வழக்கை சேலஞ்ச் செய்யலாம். அந்த ஒரு ஆபத்தும் உண்டு. 

இதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம்? காலம் தான் பதில் சொல்ல முடியும். 

ஒவ்வொரு நிலம் வாங்கும் முன்பு அதைப் பற்றிய சரியான லீகல் கருத்துரு பெற சரியான நபர்களை - வக்கீல்களை அணுகவும். 

எங்களது நிறுவனம் - கிராஸ்பி லா அசோசியேட்ஸ் அதைச் செய்து தருகிறது. சட்ட உதவிக்குத் தொடர்பு கொள்ளவும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எங்களது சட்ட நிறுவனம் இயங்கி வருகிறது.

வளமுடன் வாழ்க.

போட்டோக்கள் உதவி : https://veludharan.blogspot.com/2022/10/sri-karapaathira-sivaprakasa-swamigal.html - நன்றி

Friday, April 29, 2022

நிலம் (96) - கோவை சென்னையில் புதிய பதிவு மாவட்டங்கள் - சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும்

வருவாய்துறையில் மிக அதிகமான வருவாயைத் தரக்கூடிய சென்னை பதிவு மாவட்டம் இனி சென்னை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். அதுமட்டுமின்றி தாம்பரம் பதிவு மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும்.

அதே போல கோவை பதிவு மாவட்டம் இனி கோவை தெற்கு மற்றும் வடக்கு பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்.  மதுரையிலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

மேலும் 1998ம் ஆண்டுக்குப் பிறகு பத்திரப்பதிவு துறையில் எழுத்தர் பணிக்கு புதிய அனுமதிகள் வழங்கப்படவில்லை. ஆகவே புதிய அனுமதி வழங்கப்படும்.

கட்டிட கள ஆய்வுப்பணிக்கு புதிய ஆட்கள் தேவைப்படுதால் எழுத்தர் பணிக்கு அனுமதி வழங்குவது போல கள ஆய்வுக்கும் பட்டதாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

தட்கல் முறையில் ஆவணப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் (ஏப்ரல் 30, 2022) அலுவலகங்கள் செயல்படும் என்றும் மா நில அரசு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இனி அவைகள் ஒவ்வொன்றாக செயல்முறைப்படுத்துவார்கள். 

ஆவண எழுத்தர் உரிமை, கள ஆய்வுப் பணி அனுமதி ஆகிய இரண்டு புதிய வேலை வாய்ப்புகள் வர இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.




செய்தி உதவி : தினமணி 


Friday, September 3, 2010

மந்திர தீட்சை




கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சாரதா பெண்கள் கல்லூரி(கரூர், அமராவதிபுதூர்) மற்றும் பள்ளிகள் பத்துக்கும் அடியேன் தான் கம்யூட்டர் சிஸ்டம் அனலிஸ்டாக பணிபுரிந்து வந்தேன். நான்காண்டுகால வாழ்க்கையில், உலகின் மற்றொரு முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

மனிதர்கள் எவரானாலும் அவர்களின் பிறவிக் குணம் என்றைக்குமே மாறாத ஒன்று என்ற மாபெரும் அனுபவ உண்மையை இங்கு தான் நான் கண்டேன். அனுபவம் இல்லாத, இளமையும் இணைந்த இந்தக் கால வாழ்க்கையில், நான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் பெரும் கதைக்கான கருவாக இன்றளவும் என் முன்னே விரியும். உண்மையை மட்டுமே எழுத வேண்டுமென்ற ஆவல் காரணமாய் அதற்கான சந்தர்ப்பம் தற்போது கனியவில்லை. விரிவாக பின்னொரு காலம் அது வார்த்தைகளூடே தன்னை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன் என் மூலமாக.

சென்னையிலிருக்கும் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் திரு கெளதமானந்தாவும், கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் தலைவர் திரு ஆத்மானந்தாவும் நெருங்கிய நண்பர்கள். அப்போது சென்னையிலிருக்கும் ராமகிருஷ்ண மடம், யுனிவர்சல் டெம்பிள் என்ற கோவிலைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஆத்மானந்தா அவர்கள் நிறைய நன்கொடையும், வேலை செய்ய ஆட்களையும் அனுப்பி வைத்தார். ஆத்மானந்தாவுடன் அடிக்கடி சென்னைக்குச் சென்று வருவேன்.

எனது வேலை ரிச்சி தெருவிலிருக்கும் கம்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையோடு. கரூர் ஆஸ்ரமத்தின் கிளையொன்று கோயம்பேடு மார்கெட் பின்புறம் இருக்கிறது. முட்காட்டில் இரண்டு கீற்றுக் கொட்டகையில் 15 அனாதைச் சிறுவர்களோடு, எனது நெருங்கிய நண்பராக இருந்த நாராயணனந்தா என்பவரின் கட்டுப்பாட்டில் அந்த ஆஸ்ரம் இருக்கிறது. இங்கு தான் நானும், ஆத்மானந்தாவும் வந்து தங்கிக் கொள்வோம். நாங்கள் வருகிறோம் என்றுச் சொன்னால் மதியம் காலிஃபிளவர் சாம்பார் மணக்கும். நாராயணனந்தா சாம்பாரில் ஸ்பெஷலிஸ்ட். மாலை எனக்குப் பிடித்த இடியாப்பம் மற்றும் குருமாவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தருவார் நாராயணனந்தா அவர்கள்.

ஒரு முறை, நான் சென்னை ராமகிருஷ்ண மத்தில் சுவாமி ஆத்மானந்தாவுடன் தங்கினேன். அன்பாக கவனித்துக் கொண்டார்கள். அதன் பிறகு சென்னை சென்று வரும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்கி வருவதற்கு நான் அடிக்கடி அந்த மத்திற்கு சென்று வருவேன்.

யுனிவர்ஸல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கான அழைப்பும் வர, நான் கரூர் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த வெள்ளுடை பிரதர்கள் சிலரோடு சென்னைக்குச் சென்றேன். ஆத்மானந்தா என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சென்னை மத்தில் இருக்கும் பகவான் ராமகிருஷண்ர் உயிரோடு இருக்கிறார் என்பார். அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவலிலும், மந்திர தீட்சை வாங்க வேண்டுமென்ற விருப்பத்தின் காரணமாய்த் தான் அங்கு சென்றேன்.

அங்கு தான் பேலூர் மடத்தின் தலைவர் திரு ரங்க நாதானந்தா மகராஜ் என்றவரைச் சந்தித்தேன். எனக்கு மந்திர தீட்சை தந்தார். ஒரு நொடி அவரைப் பார்த்தேன். ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். முடிந்தது. அவர் இறந்து கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஆகிறது. இன்றைக்கும் அவரின் அன்பும், அந்தப் பார்வையும் என்னை விட்டு அகலவே இல்லை.

சில மனிதர்கள் பிறப்பார்கள். இறப்பார்கள். அவர்களில் சிலர்தான் பலர் மனதில் வாழ்வார்கள். இவர்களைத்தான் இறப்பே இல்லாதவர்கள் என்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் எனக்கு தீட்சை அருளிய சுவாமி. திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்காக வாழ்ந்த ஸ்ரீ ரங்க நாதானந்தா அவர்கள் 1908 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் கையால் முதன் முதலில் மந்திர தீட்சை பெற்றுக் கொண்ட பாக்கியத்தை அளித்த இறைவனுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலே இருப்பவர் தான் ஸ்ரீ ரங்க நாதானந்தா. யுனிவர்சல் டெம்பிளையும் பார்க்கலாம்.

என் வாழ்க்கையில் நடந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் தான் மேலே இருப்பது.