குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, September 14, 2008

குன்னக்குடியாரின் மருதமலை மாமணியே....

குன்னக்குடி வைத்திய நாதன் - மறக்கமுடியாத பிம்பம்

வயலினில் பேசிய குன்னக்குடி வைத்திய நாதனின் மறைவு இசை உலகிற்கு மாபெரும் இழப்பென்றாலும் அவரின் சுவடுகள் இசை வரலாற்றில் பதிக்கப்பட்டு விட்டது. பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் வரலாற்றில் தன் பெயரை பொறிக்கச் செய்த குன்னக்குடி வைத்திய நாதன் அவர்களின் இசை மனித உலகம் இருக்கும் வரை என்றும் போற்றி பாராட்டப்படும். அவரின் சில மறக்க இயலா வாசிப்புகளை இங்கே பட்டியலிடுகிறேன். கேட்டும் பார்த்தும் ரசிக்கவும். அருணகிரி நாதரின் பாடலை வயலின் பாடுகிறது பாருங்கள்.



டிரம்ஸ் வாசித்துப் பாருங்கள்

எத்தனையோ பேர்களுக்கு டிரம்ஸ் வாசித்துப் பார்க்க வேண்டுமென்று ஆவலாய் இருக்கும். அதெல்லாம் சாத்தியப்படுமா என்றால் வேதனைதான். ஆனால் கணிணி உலகில் அது சாத்தியம் தான். இந்தப் பிளாக்கை படிக்க வரும் நண்பர்கள் சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்துப் பழகுங்கள்... நன்றாக வாசித்தால் அருகில் இருப்போரின் சிரிப்பை பெறுவீர்கள். கர்ண கடூரமாக வாசித்தால் முறைப்பை பெருவீர் என்பதை நினைவில் கொள்க.

Virtual'>http://www.pog.com/games/Virtual_Drums">Virtual Drums

Click here to play this game

Tuesday, September 9, 2008

வாழ்த்துக்கள்

இங்கிலாந்தில் பணி புரிய சென்றிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். இறைவன் எல்லா வளமும் நலமும் ஆரோக்கியமும் அருள இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Sunday, August 31, 2008

தஞ்சாவூரென்றாலே குளிர்ச்சி தான் போலும் !

அடியேன் தஞ்சாவூர்காரன். எப்போதும் பசுமையும், தண்ணீரும், திருவிழாக்களும், காதணி விழாக்களும், திருமண விருந்துகளும் களை கட்டும் எங்கள் தஞ்சையில். இசையும், கொண்டாட்டமும் எங்கள் ஊரின் முக்கிய அம்சங்கள். உழைப்பு... உழைப்பு.... உறவுகள்... விழாக்கள்... இது தான் தஞ்சை மாவட்டம்.

ஆனால் பாருங்க, இந்தப் பாட்டில் தஞ்சாவூர் பெயர் வர, என்னவென்று எட்டிப் பார்த்தால்... ஆகா.. ஆகா.. இளமை துள்ளி விளையாடுகிறது பாருங்கள் இங்கே.... பாடல் வரிகளும் எங்க ஊர்க்காரனுங்க பேச்சுலே அசத்தற மாதிரி வேற இருக்கு. பச்சைப் பசேல்னு இருக்கு பாருங்க...

பார்த்து ரசிங்க .......... முடிந்தால் தஞ்சாவூர் பக்கம் ஒரு தடவை வந்து பாருங்க....

Saturday, August 30, 2008

கேரளா, கஞ்சிக்கோட்டில் கோக், பெப்ஸிக்கெதிரான போராட்டத்தில் சாரு நிவேதிதாவுடன் !



( சாரு நிவேதிதாவுடன் என் மகன் ரித்திக் நந்தா )




மணி ஒன்பது முப்பது இருக்கும். சாருவிடம் இருந்து போன். நாளைக் காலையில் கேரளா செல்கிறேன் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வர “சார் வந்துட்டீங்களா“ என்றேன்.

“இரயிலைத் தவற விட்டு விட்டேன் தங்கம். அதனால் காலையில் ஃபிளைட்டைப் பிடித்து அரை மணி நேரமாக வந்து நின்று கொண்டிருக்கிறேன் கார் வருகிறது என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் வரவில்லை “ என்று சொன்னார்.

“அப்படியா “ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது மற்றொரு அழைப்பு வர, அந்த அழைப்பினைத் ஏற்று பேச சாருவின் வாசகர் ஒருவர் என்னைப் பார்க்க வருவதற்கு வீட்டுக்கு வழி கேட்டார். வழி சொல்லி முடித்தவுடன் சாருவிடமிருந்து மீண்டும் ஒரு அழைப்பு.

” தங்கம் கார் இன்னும் வரவில்லை” என்றார்.

“சார் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டுமா “ என்றேன்.

“ தங்கம், நான் எங்கிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்” என்று கேட்க, ” கேரளாவில்தானே “ என்று நான் கேட்க, “இல்லை தங்கம்..கோவை ஏர்போர்ட்டில் நிற்கிறேன் தங்கம் “ என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நம்ம ஓட்டை வண்டியில சாருவை ஏற்றிக் கொண்டு வந்தால் சாரு மறு ஜென்மத்திலும் பைக் சவாரியை மறந்து விடுவாரே என்று எண்ணிக் கொண்டிருந்த போது சாருவின் வாசகரின் கார், வீட்டின் வாசல் முன்பு வந்து நின்றது. சாருவின் வாசகர் திரு சிவா வீட்டின் முன்பு காரை நிறுத்தி லேப்டாப் மற்றும் சில பொருட்களை துணைவியாரிடம் கொடுத்துக் கொண்டிருக்க அவரிடம்,

“சார், வாங்க போலாம், சாரு ஏர்போர்ட்டில் நிற்கிறார் “ என்று சொல்ல அவரும் “ஆகா , ஆகா... “ என்றபடி காரை உயிர்பித்தார். பறந்தது கோவை ஏர்போர்ட்டை நோக்கி கார்.

”சரியான பசி. அதனால் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்து இங்கு சாப்பிட்டேன்” என்றார் சாரு. அப்போது மணி 10.50.

அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். எனது துணைவியாரும் சிவாவும் கோழிக் கடைக்குச் சென்று நாட்டுக்கோழிக் கறியினை வாங்கிக் கொண்டு வந்தனர். அதற்கிடையில் லேப்டாப்புக்குத் தேவையான சாஃப்ட்வேர்களை இணைத்து இயக்கும் சில வழி முறைகளைச் சாருவுக்குச் சொல்லித் தந்தேன்.

இடையில் கேரளாவில் இருந்து போன் வந்தது. நண்பர்களுடன் சரியாக மூன்று மணிக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னார்.

சிவாவும் சாருவும் சாப்பிட்டனர். என் மகள் நிவேதிதா கத்திக் கொண்டிருந்தாள். காய்ச்சல் வேறு. அத்துடன் பக்கத்து வீட்டுப் பெண் குழந்தையுடன் சண்டை. வீட்டில் ஒரே அழுகையும் சத்தமும். அவளை மடியில் போட்டுத் தட்டித் தூங்க வைத்தபடி சாப்பிட்டு முடித்தேன்.

காரில் கிளம்பினோம். காரில் செல்லும்போது கேரள முதல்வருக்கு அவர் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. மேடை போட்டு இருப்பார்கள். மாலை எல்லாம் போடுவார்கள் போலும். கூட்டமாக மக்கள் வேறு கூடி இருப்பார்கள். எனது வாழ்வில் முதன் முதலாக எழுத்தாளர் ஒருவர் சமூகப் பிரச்சினைக்காக அதுவும் வேறு மாநிலத்த்தில் பேசப்போகிறார் என்றும் நம்ம சாரு பேசப்போகிறாரே என்றும் எனக்குள் எதிர்பார்ப்பு கூடியபடி இருந்தது.

கஞ்சிக்கோடு. தோளில் தொங்க விட்ட பையுடன் ஒருவர் வழி மறித்தார். இன்னும் ஒரு மணி நேரமாகும் ஊர்வலம் வர என்று சொல்ல, சாருவுடன் கட்டஞ்சாயா குடித்தேன் ஊர்வலம் வந்து சேரும் இடைப்பட்ட நேரத்தில்.

இரண்டு நாட்களாக ஊர்வலத்தில் மக்கள் நடந்து வருகிறார்களாம். ஊர்வலம் கஞ்சிக்கோட்டில் இருக்கும் கோகோ கோலாவின் ஃபாக்டரி முன்பு முடிவு பெற வேண்டும். அங்கு இவர் உரை ஆற்ற வேண்டும் என்றும் சொன்னார்.

சிறிது நேரத்தில் நானூறு பேர் இருக்கும் போல. வரிசையாக கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். நான் காரிலேயே உட்கார்ந்து கொண்டேன்.

சாருவும், சிவாவும் சென்று விட்டனர். ஊர்வலத்தின் முன்புறம் சாலையில் நின்ற படியே ஒருவர் மைக்கில் முழங்கினார். மேடையும் இல்லை. மாலையும் இல்லை. எனக்குள் தமிழ் நாட்டின் அரசியல் மேடைகளும், போராட்டங்களும் நிழலாடின. உண்மைப்போராட்டம் அது. உணர்ச்சிப் போராட்டம் அது. தண்ணீர் கொள்ளையைத் தடுக்க, தண்ணீரைக் காப்பதற்கு போராட்டம். நாளைய சந்ததிகள் தண்ணீர் இன்றி துன்பப் படக்கூடாது என்பதற்கான போராட்டம். அமெரிக்க பகாசுர கம்பெனியினை எதிர்த்து அன்றாடம் காய்ச்சிகள் செய்யும் போராட்டம். ஏசிக்குள் அமர்ந்து கொண்டு குளுகுளுவென செல்லும் பணக்காரனுக்கும், எது நடந்தாலும் கிஞ்சித்தும் கவலைப்படாத மிடில் கிளாஸ் மக்களின் நலனுக்காக உடுத்த உடையின்றியும், சரியான உணவின்றியும் இருக்கும் ஏழை மக்களின் உணர்ச்சி மிகு போராட்டம் அங்கு நடந்தது.


அங்கு சிங்கமென கர்ஜித்தார் சாரு. அமைதியான குரல். குத்தீட்டிகள் போல கேட்பவர்களின் காதுகளையும் , நெஞ்சங்களையும் துளைத்தன அவரின் பேச்சு. ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவரின் உரையினைக் கேட்கக் கேட்க எனக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது.

அட ஆமாம். அவர் பாட்டுக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தனை விட்டுக் கிழி கிழியென்று கிழிக்கிறார். மாத்ருபூமியில் அவர் எழுதிய கட்டுரையின் கேள்விகளுக்கு நிருபர்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று முதல்வர் அச்சுதானந்தன் அவர்களை கேட்டால் ஓடி ஒளிந்து கொள்கிறார் என்று அவர் பாட்டுக்கு பேசுகிறார். விடமாட்டேன். வருவேன்... வருவேன்.. மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பேன்.. பதில் சொல்... பதில் சொல் என்று கர்ஜிக்கிறார். அந்த இடத்தில் என் மனதில் வீர வசனம் பேசிய சினிமா ஹீரோவெல்லாம் தூசு தூசாகிவிட்டனர். தைரியமென்றால் அப்படி ஒரு தைரியம். எதிரில் ஆளும்கட்சியின் அடியாட்களாகிய போலீஸை வைத்துக் கொண்டு முதல்வரை வாங்கு வாங்குன்னு பேசுவதற்கெல்லாம் தைரியம் வேண்டும். தமிழ் நாட்டில் ஏதாவது போலீஸ் பிரச்சினை செய்தால் ஏதாவது செய்யலாம். ஆனால் இவரோ கேரளாவில் முதல்வருக்கு எதிராகப் பேசுகிறார். ரொம்ப தைரியம் தான் இவருக்கு. அவரின் தைரியம் எனக்கு அதைரியத்தை உருவாக்கியது. மனுஷன் விடாமல் பட்டயக் கிளப்புறாரு. அனில்ங்கிறாரு. அம்பானிங்கிறாரு.. அய்யோ சாமிகளா அதையெல்லாம் இங்கு எழுதினால் அப்புறம் நமக்கு ஆப்புத்தான்.

இப்படி அவர் பேசப் பேச எனக்கு அய்யய்யோ போலீஸ்காரங்க காரைப் பார்த்துட்டு போனாங்களே. இவரு பாட்டுக்கு சிம்மம் போல கர்ஜிக்கின்றாரே கடுப்பாகி கூட்டத்துக்குள் புகுந்து லத்தியால ஒரு போடு போட்டானா என்ன பண்றது. அவர் கூட வந்து காரில படுத்துக் கிடக்கிற இவனுக்கு ரெண்டு சேர்த்துப் போடனும்னு போட்டா செத்துல போய்விடுவோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக பேசி முடித்தார். மீண்டும் ஊர்வலம் ஆரம்பித்தது. மைக்கில் சாரு நிவேதிதா, சாரு நிவேதிதா என்று கதறிக் கொண்டிருந்தனர். நானும் சிவாவும் காரில் ஊர்வலத்தின் பின்பாக சென்று கொண்டிருந்தோம். ஊர்வலத்தின் இடையில் சாருவை அழைத்துக் கொண்டு பெப்சிக் கம்பெனி எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு சென்று பார்த்தால் கம்பெனிக்கு முன்பாக ஒரு பஸ், ஜீப் நின்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது போலீசார் இருப்பார்கள் என நினைக்கிறேன். 15 அடி தூரத்தில் காரை நிறுத்த காரின் முன்புற சீட்டில் அமர்ந்திருந்த என்னையே போலீஸ்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

” தங்கம், போலீஸார் எல்லோரும் உங்களையே பார்த்துக்கிட்டு இருக்காங்க “ என்று வேறு சொல்லி பயமுறுத்தினார்.

எத்தனை நேரம்தான் தைரியமா இருக்கிற மாதிரி நடிக்கிறது. சரி இன்னிக்கு பொங்கல் தான் சட்னிதான் என்று நினைத்து சகதர்மினியிடம் போனில் ”இப்படி இப்படி என்ன செய்றது” என்று கேட்டேன். இங்கே பாருங்க சாரு நம்ம வீட்டு விருந்தாளி. அவரைக் கைது செய்தாங்கன்னா நீங்களும் அவரு கூடவே போய் ஜெயில்ல இருந்துட்டு வாங்க என்று சொல்லி எரியுற நெருப்பில என்னய (எண்ணெய்) வார்த்தா. அவளுக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.

ஊர்வலம் அந்த இடத்தின் முன்பு வருவதற்குள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு, ” சூழ்நிலை சரியில்லை தங்கம். என் செல்போனை வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது நடந்தா பதட்டப் படாதீங்க. பத்திரிக்கைகளுக்கு கூப்பிட்டுச் சொல்லுங்க, நண்பர்களிடம் சொல்லுங்க” என்று சொல்லியபடி மீண்டும் ஊர்வலத்தின் முன்புறம் சென்று கூட்டத்தில் கலந்து விட்டார்.

வெகு சூடாக பேச்சுக்குரல்களும், தள்ளு முள்ளும் நடந்தது. ஒருவர் மைக்கில் கோகோ கோலாவின் தண்ணீர் கொள்ளையை எதிர்த்து முழங்கினார். அதைத் தொடர்ந்து சாரு பேசினார். “போலீஸார் நமக்கு எதிரியில்லை. எதிரி வேறு ஆள்” என்று சொல்லி காட்டமாக பேசினார். ஆனால் நிதானத்துடன் பேசினார். அந்த இடத்தில் தேவை நிதானம். உணர்ச்சி வசப்பட்டால் லத்தி அடி நிச்சயம் தொடர்ந்து கைதும் செய்யப்படும் என்ற சூழ்நிலையிலும் வெகு ஜாக்கிரதையாகப் பேசி ஊர்வலத்தை அமைதியாக முடிவு பெற வைத்தார். தொடர்ந்த முழக்கத்தினிடையே அந்த ஊர்வலம் அமைதியாக கலைந்தது.

இதே வேறு எவராக இருந்தாலும் கொந்தளிப்பாக பேசி, மக்களின் உணர்ச்சியினைக் கிளப்பி விட்டு தடி அடி நடத்த வைத்து, கலவரம் செய்து செய்தி தாளில் செய்தியாக்கி இருப்பார்கள். ஆனால் சாரு செய்தது....???

சாருவும், சிவாவும் வர, காரில் கோவைப் பயணம் தொடர்ந்தது.

காரில் வரும்போது, “தங்கம், கோழிக்கறி பஞ்சு பஞ்சா இருந்தது சாப்பிட, குக்கரில் வேக வைப்பாரா பூங்கோதை? ” என்று கேட்டார்.

”ஆமாம் சார். இஞ்சியுடன் குக்கரில் வேக வைத்துதான் பின்னர் மசாலா சேர்ப்பார் “ என்றேன்

“ சென்னையில் நாட்டுக்கோழி சாப்பிட்டால் கட்டி கட்டியாக இருக்கும்” என்றார்.

காரின் சீட்டில் சாய்வாக படுத்துக் கொண்டேன். ஒரு மேல் நாட்டு கம்பெனி குளிர் பானம் தயாரிக்கின்றேன் என்று சொல்லி பூமியின் ஆதாரமான தண்ணீரை ராட்சதப் போர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து பதினைந்து லிட்டர் தண்ணீரைச் சுத்திகரித்து ஒரு பாட்டில் குளிர் பானமாக்கி விற்கிறது. தண்ணீருக்காக மாநிலங்கள் ஒவ்வொன்றும் அடித்துக் கொண்டு இருக்கின்றன. நம் மாநிலத்தின் நீர் வளம் கொள்ளை போகிறதே என்று கவனிக்காமல் ஓட்டுப் பொறுக்கிகள் இப்படி மக்களுக்கு துரோகம் செய்கிறார்களே இவர்களை யார் தான் தட்டிக் கேட்பது. கேரளத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் கார்பொரேட் ஆட்களாகி விட்டனர் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த ஊர்வலத்தில் நடந்து வந்த ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் ஏழைகள். இரண்டு நாட்களாக நடந்து வருபவர்களை சாலையில் செல்லும் எவரும் பாரட்டவும் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. கடைக்குள் இருப்போர் சற்றுக் கவனித்துப் பார்த்தார்கள். அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட மக்களுக்காக ஏழைகள் நடக்கிறார்கள். காவல் துறையினரின் லத்தி அடிகளை வாங்கவும் தயாராகி போராடுகிறார்கள். மிடில்கிளாஸ் எனும் சூடு சொரனையற்ற மக்களோ எவனோ எதுக்கோ போராடுகிறான் என்ற அளவில் இருக்கின்றார்கள். புழு கூட துன்புறுத்தினால் சிறிதாவது முண்டிப் பார்க்குமே என்றெல்லாம் எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. அதற்குள் வீடு வந்து விட,

டெக்கான் கிரானிக்கிள்ளுக்கு ஆர்ட்டிக்கிள் டைப் செய்து கொடுக்க, சாரு எடிட் செய்தார். அந்தக் கட்டுரையினை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும்போது தோசையும், கறிக்குழம்பும் சாப்பிட்டு முடித்தார் சாரு. சிவா திருப்பூர் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

கோவை ரயில் நிலையத்துக்குச் சென்றால் சென்னை செல்லும் இரயில் போத்தனூரில் தான் நிற்குமெனவும் இங்கு வராது எனவும் சொல்ல சிவா, சாருவை சடுதியில் போத்தனூர் சென்று சேர்த்தார்.

சாரு இரயில் ஏறிவிட்டார். போனில் அழைத்து இரவு வணக்கம் சொல்லி விட்டு, சிவாவிடம் திருப்பூர் சென்று சேர்ந்தவுடன் குறுஞ்செய்தி அனுப்பவும் என்று சொல்லியிருந்தேன். இரவு 11.00 மணிக்கு குறுஞ்செய்தி வந்து சேர அயர்ந்து தூங்க ஆரம்பித்தேன்.

Wednesday, August 27, 2008

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 5

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 4

அர்த்தமுள்ள இந்து மதம் பகுதி 3

அர்த்தமுள்ள இந்துமதம் பகுதி 2

வெகு அற்புதமான, கணீர் குரலில் கண்ணதாசன் பேசுகிறார். கேளுங்கள். கேட்டு மகிழுங்கள்.


Tuesday, August 26, 2008

நடிகை ரம்பாவுக்காக பிரார்த்தனை

அன்பு உள்ளமே.. உங்களுக்கு இறைவன் மகிழ்ச்சியான வாழ்வினையும், நீண்ட ஆயுளையும் வழங்கட்டும். பேரோடும் புகழோடும் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்


Monday, August 25, 2008

அர்த்தமுள்ள இந்துமதம் 1 - கண்ணதாசனின் குரலில்

அர்த்தமுள்ள இந்துமதம் 1 - கண்ணதாசனின் குரலில்


காந்தக் குரலோன் கண்ணதாசன். குடியும் கூத்தும் கண்ணதாசனை கண்ணனின் தாசனாக்கியது போலும். என்ன ஒரு கணீர் குரலில் இந்து மதத்தையும் அதன் பெருமையினையும் சொல்கிறார். கேட்டு மகிழுங்கள்

Osho Speach - Strange consequence

Rajneesh - Called as Osho. My favorite philosopher.

See his speach about Strange consequence

சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ உரை

சுவாமி விவேகானந்தரின் முதல் சிக்காகோ உரையின் எழுத்து வடிவ தொகுப்பு. கிடைக்காத பொக்கிஷம்.

Saturday, August 23, 2008

தங்கத்தைக் காதலிக்கும் உலகம்

தங்கம்! உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உலோகம். அரசாங்கங்கள் தங்கத்தை சேகரித்து வைத்திருக்கின்றன. தங்க நகைக் கடைகளை காணும் போதெல்லாம் சொர்க்கலோகம் போல இருக்கும். உலகப் பெண்கள் பெரும்பாலோராலும் விரும்பப்படும் பொருள் தங்கம். ஆண்களும் விரும்புவார்கள்.

இந்தப் பாடலைக் பார்த்து வையுங்கள். எதுக்கும் இருக்கட்டும்.

பின்குறிப்பு : இந்தப் பாடலுக்கும் எனது பெயருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அப்படி யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாடலைக் கேட்ட பின்னர் உங்களுக்கு தங்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வந்தால் நான் என்ன செய்ய.

Friday, August 22, 2008

நான் என்ன செய்ய பகுதி 2 இன் இறுதிப் பகுதி

டாக்டர் வந்தார். சோதித்து விட்டு

”யார் சார் தங்கம் “ என்றார்.

என் நண்பர் என்னைக் காட்டினார். ஒரு முறை முறைத்தார். எனக்கு வெலவெலத்துப் போய் விட்டது. அந்த மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரியாக இருந்த எனது தோழியின் நண்பர் அவர்.

முடிந்தது கதை என்று எண்ணி வியர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது. சட்டை வியர்வையில் நனைந்து விட்டது. லாரா என்னையே குறுகுறுவெனப் பார்த்தபடி இருந்தாள்.

என் நண்பர் நமுட்டுச் சிரிப்புடன் இருந்தார். லாராவின் அக்காவின் பார்வையில் எரிமலை வெடித்தது.

”இரண்டு நாட்கள் இருக்கணும். குளுகோஸ் ஏத்தனும் தொடர்ந்து. அடிக்கடி புலம்பறாங்க. தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அதனால் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதமாக இவர் சாப்பிடவே இல்லை” என்றார்.

நான் லாராவைப் பார்த்தேன். தலையைக் குனிந்து கொண்டாள்.

மீண்டும் என்னை கொலைகாரனைப் பார்ப்பது போல பார்த்து விட்டுச் சென்றார். கதவருகே சென்றவர் என்னைப் பார்த்தார்.

”நீங்க இங்கேயே இருங்க” என்றார்.

தலையாட்டினேன்.

நர்ஸ் வந்தாள். ஏதோ மருந்தைச் குளுக்கோஸ் பாட்டிலில் ஏற்றினாள். கையில் குளுக்கோஸ் போடப்பட்டது.

லாரா என்னை பெட்டின் மீது அமரும்படி சொன்னாள். அமர்ந்தேன். லாரா தனது வலது கையால் என் வலது கையினைப் பிடித்துக் கொண்டாள். அவள் அருகில் அப்படியே அமர்ந்து இருந்தேன்.

என் நண்பர் விடை பெற்றார். லாராவின் அக்காவும் விடை பெற்றார். விடிய விடிய நான்கு குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டன. லாராவின் கை எனது கையை விடவில்லை. நல்ல தூக்கத்திலும் இறுகப் பிடித்தபடியே தூங்கினாள். கையை மெதுவாக விலக்கினால் முனக ஆரம்பித்தாள்.

நர்ஸ் வந்து நான் கையை எடுக்க முயற்சிப்பதைப் பார்த்துவிட்டு முறைத்தாள். இரவு முழுவதும் விழித்தபடி லாராவின் அருகிலேயே இருந்தேன்.

விடிகாலையில் கண் விழித்தாள் லாரா. என்னைப் பார்த்துச் சிரித்தாள். எழுந்து அறைக் கதவைச் சாத்தினாள். என் அருகில் வந்தாள். தோளில் சாய்ந்து கொண்டாள்.

” லாரா.. நர்ஸ் வரப்போகிறாள் பார். தப்பா நினைக்கப் போறாங்க ” என்றேன்.

“ நினைக்கட்டும். இதுக்குத்தானே இத்தனை நாள் காத்திருந்தேன் “ என்றாள்.

” என்ன லாரா. இரண்டு மாசமா சாப்பிடாமல் இருந்தாயாமே. ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் ? “

” உங்களுக்காகத்தான் தங்கம் “ என்றாள்.

இரண்டு நாட்கள் அவளுடன் ஆஸ்பிட்டல் வாசம். அவளுடனே சாப்பிட்டு தூங்கி விழித்தேன்(!!!). என்னை விட்டு ஒரு நிமிடம் கூட விலக மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

ஒரு வழியாக வீட்டில் கொண்டு சென்று சேர்த்து விட்டு இருப்பிடம் சேர்ந்தேன்.

இப்போது லாரா எங்கே ?

எங்கோ இருக்கிறாள் நலமாக. அவளைப் பார்த்து கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகிவிட்டது. இந்தக் கதை எழுத ஆரம்பித்த போது ஏதோ ஒரு வகையில் நான் அவள் மனதினைக் காயப்படுத்தி இருக்கிறேன் என்று தெரிந்தது. அதற்கு நான் என்ன செய்ய ?????

லாராவின் அக்கா என்னுடன் அவள் பேசுவதை தடை செய்ய, லாரா என்னை விட்டு நீங்கினாள். ஆனால் அவள் நினைவுகளோ எழுத்து வடிவத்தில் என்னுடனும் உங்களுடன் பயனிக்கிறது.

அப்படியே இந்தப் பாட்டையும் கேட்டு வையுங்கள். சுகமாக இருக்கும்.

Thursday, August 21, 2008

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 4

அவள் உயிர் பெற்று வந்த பிரம்மனின் படைப்புகளின் உன்னதம். அவள் சிரித்தால் பார்ப்பவனுக்குள் பூகம்பம் உண்டாகும். சில்லென்று ஒரு குளிர்ச்சி உடல் முழுதும் பரவும். சடக்கென்று மனசு அமைதி பெறும். அழகு என்பது இவளா. இல்லை இவள் தான் அழகா. இரண்டுக்கும் வேறுபாடு சொல்ல இயலாது மனிதனால். அப்படி ஒரு தேவதை. அவளுக்கு ஒரு தங்கை.

ஆண்மகன் அவன். அழகு திருமகன். இவனுக்கு ஒரு அண்ணன். இருவரும் பெண்பார்க்கச் செல்வார்கள். அக்கா தம்பியை நோக்குவாள். தம்பியும் அப்படியே. அந்தப் பார்வையின் அர்த்தம் காதல். இதைத் தான் கம்பனும் கவி பாடியிருப்பானோ ? பார்வையில் காதலைப் பறிமாறும் அந்த உள்ளங்கள் தவித்துப் போகின்றன. ஏன்... அது தான் விதி என்பார்கள் மனிதர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளின் பாதையில் அண்ணன் அக்காவையும், தம்பி தங்கையையும் மணக்க நேரிடுகிறது.

அண்ணன் இறந்து விடுகிறான். அக்கா விதவையாகிறாள். ஒரு குளிர்காலப் பொழுதில் மழை கொட்டுகிறது. இவனும் அவளும் தனிமையில் சந்திக்கும்படி நேர்கிறது. அவள் மனதில் விளையும் உணர்வுகளின் தொகுப்பு இது...

பாடலா இது... வாழ்க்கையின் கோரங்களைச் சொல்லும் பாடல் இது. விதவைப் பெண்ணின் தவிப்பை கொட்டி எழுதப்பட்ட பாடல். கேட்கும் என் மனதை உள்ளுக்குள் அழவைக்கும் இந்தப் பாடல். சோகத்திலும் சுகம் இருக்கத்தானே செய்கிறது.


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ -3

சத்ரியன் படத்தில் பானுபிரியா நடித்த இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசு லேசாகி விடும். மிகவும் அருமையான பாடல் இது.

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 2

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் மனசு துள்ளி விளையாடும். என்றும் இனிமை தரும் பாடல்


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 1

ஆகாய கங்கை - இளையராஜாவின் இன்னிசையில் எப்போது வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் இது.

Wednesday, August 20, 2008

நான் என்ன செய்ய பகுதி 2ல் முதற்பகுதி

இரவு நேரம். மணி பத்து இருக்கும். அப்போது ” சார் உங்களுக்கு போன் வந்திருக்கிறது “ என்றான் கார்த்தி. போனில் என் நண்பர்..

“சார். லாராவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறேன். அவள் உங்களைப் பார்க்கனும்” என்று சொல்கிறாள்.

அடித்துப் பிடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றேன். அங்குள்ள நர்ஸ், டாக்டர்ஸ் எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அவர்கள் ஏன் அப்படி பார்க்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.



என் நண்பர் வந்து லாரா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். கொடி போல துவண்டு கிடந்தாள் லாரா. லாராவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. முனகிக் கொண்டிருந்தாள். அவள் அக்கா அருகில் நின்று அழுது கொண்டிருந்தாள். என்னை சோகத்துடன் பார்த்தாள். எனக்கு மயக்கம் வரும் போல இருந்தது. லாரா நன்றாகத்தானே இருந்தாள். ஏன் திடீரென்று இப்படி ஆனாள்.அருகில் நாற்காலியினை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தேன்.

நான் ஆபீஸ் வந்து வண்டியை நிறுத்தும் முன்பு அருகில் வருவாள்.
“சார் வாங்க..” என்று சொல்லிச் சிரிப்பாள்.

மாடர்ன் டிரஸ்ஸில் தேவதை போல வந்து நிற்பாள். பக்கத்துக் கடைக்காரன்கள் எல்லாரின் வயிற்றிலும் புகை வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புத்தகங்களை எடுத்துக் கொண்டு கதவை திறந்து பிடித்த படி நிற்பாள்.

”லாரா.. சாப்பாடு ஆயிடுச்சா” என்று கேட்டபடி சேரில் அமர்வேன்.

“ம்.. நீங்க சாப்பிட்டீங்களா ? “ என்பாள். என் அம்மாவை அவள் ரூபத்தில் பார்ப்பேன். அப்படி ஒரு அன்பு என் மீது.

அப்படி சுறுசுறுப்பாய் இருந்தவளா இப்படி மயங்கிக் கிடக்கிறாள். என் நெஞ்சில் பாராங்கல்லை வைத்தது போல வலித்தது.

”தங்கம்..தங்கம்..தங்கம்....தங்கம்...” மந்திரம் போல ஜெபித்துக் கொண்டிருந்தாள். எனக்கு தலை கிறுகிறுத்தது.

என் நண்பர் அருகில் வந்து ” லாரா..லாரா.. இங்கே பாரு தங்கம் வந்திருக்கிறார் “ என்று இரு முறை சொன்னார். லேசாக கண் விழித்தாள். என்னைப் பார்த்தாள்.

நான் லாரா என்றேன் மெதுவாக. கண்ணில் கண்ணீர். என்னைப் பார்த்ததும் படக்கென்று எழ முற்பட்டாள். அவள் அக்கா வந்து எழ விடாமல் தடுத்தாள்.

”சார். எனக்கு ஒன்றுமில்லை. அழாதீங்க...” என்று சொல்லி சிரித்தாள். முகத்தில் களைப்பு தெரிந்தது.

அடுத்து அவள் செய்தது என்ன ??? ( தொடரும் )

Sunday, August 17, 2008

நான் என்ன செய்ய ? பகுதி 1

என் நண்பரின் ஆபீஸுக்குள் நுழைந்த போது கம்ப்யூட்டரில் ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” என்ற பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. அலைபாயுதே படத்தில் வரும் அந்தப் பாடல். எனக்கு அந்தப் பாடல் பிடிக்காது.

கம்ப்யூட்டரின் முன்பு நண்பரின் ஆபீஸில் வேலை செய்யும் ஃப்ரான்சிஸ்கா அமர்ந்திருந்தாள்.

“என்ன ஃப்ரான்சிஸ்கா ? பாட்டெல்லாம் சோகமாக இருக்கிறதே ? என்ன விஷயம்” என்று கேட்டேன்.

”ஒன்றுமில்லை சார்..”

சிரித்தேன்.

”ஃப்ரான்சிஸ்கா என்னை என்ன மடையன் என்றா நினைக்கிறாய் ? “

“இல்லை சார். “ இல்லை என்று சொல்லும் போதே ஏதோ இருக்கிறது என்று எனக்குள் தோன்றியது. இதற்குமேல் கேட்க எனக்கு சங்கோஜமாக இருந்ததால் விட்டு விட்டேன்.

காலை நேரம். மதியம் சாப்பாடு பற்றி பேச்சு வந்தது.

“சார் மதியம் எங்கே சாப்பிடுவீங்க?”

“ஆஸ்ரமத்தில் சாம்பாரா சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு ஃப்ரான்சிஸ்கா, அதனாலே இன்றைக்கு மட்டன் சாப்பிடனும் என்று ஆசை”

“சார்.. எங்க வீட்டில மட்டன் குழம்பும் வறுவலும் செய்கிறார்கள். எடுத்துட்டு வரட்டுமா ? சாப்பிடுவீர்களா ?“

மட்டன் குழம்பு, வறுவல் என்றவுடன் எனக்கு நாக்கில் ஜொள்ளு ஒழுகியது. அதை வெளிக்காட்டாமல்,

“உங்களுக்கு எதுக்கு சிரமம் “ என்றேன்.

“ சிரமம் என்றெல்லாம் இல்லை சார். சாப்பிடுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். எடுத்து வருகிறேன்.”

“ சரி. கொஞ்சமா எடுத்துட்டு வாங்க. கொஞ்சம் ரசம் மறக்காமல் எடுத்து வாருங்கள்” என்றேன்.

ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு எடுத்து வர கிளம்பி விட்டாள். நான் கணிணியில் சீரியஸாகி விட்டேன். அதுவரை எனது நண்பர் வரவில்லை. செல்லுக்கு கூப்பிட்டால் தொடர்பில் இல்லை என்று வருகிறது.

ஒரு மணி இருக்கும். கையில் பெரிய பையுடன் வந்தாள்.

தட்டில் சோறு போட்டு மட்டன் குழம்பும் வறுவலுடன் ஆம்லெட்டையும் எடுத்து வைத்தாள். கண்ணில் நீர் வழிய சாப்பிட்டேன். அம்மா கையில் சாப்பிட்டது போல இருந்தது. எனக்குள் சொல்லொண்ணா இன்பம்.

சந்தோஷத்தில் “ ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு அருமை. உங்க கைக்கு ஒரு முத்தம் தரலாம் போல இருக்கு” என்றேன்.

“ம்.. ஆசையைப் பாருங்க” என்று பளிப்புக் காட்டினாள் ஃப்ரான்சிஸ்கா.

என் முகம் சுருங்கியதைப் பார்த்தவள், “சரி போகட்டும். இந்தாருங்கள்” என்று கை நீட்ட ஒரு முத்தத்தை பதித்தேன் அவள் கையில்.

சிரித்தாள். நானும் அசடாக சிரித்து வைத்தேன்.

”அவ்வளவுதானா? ரசம் எப்படி இருக்குன்னு சொல்லவில்லையே“ என்றாள்.

“உண்மையை சொல்லனுமா. பொய் சொல்லனுமா“ என்று கேட்க

“உண்மையைச் சொல்லுங்க” என்றாள்.

“சுமார் தான் ஃப்ரான்சிஸ்கா“

“நான் தான் வைத்தேன். எனக்கு ரசம் வைக்கத் தெரியாது. மட்டன் குழம்பு, வறுவல் என் அம்மா செய்தார்கள்“ என்றாள்.

எனக்கு சுறுக்கென்றது. ”சாரி ஃப்ரான்சிஸ்கா. ரசம் கூட பரவாயில்லை” என்று சொல்லி வைத்தேன். சிரித்தாள்.

சில நாட்கள் கடந்தன. ஃப்ரான்சிஸ்கா தனியாக இருக்கும் போது ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக என் நண்பர் சொன்னார்.

ஃப்ரான்சிஸ்கா எவரையாவது காதலிக்கும் போல என்றும் சொன்னார். நானும் ஆமோதித்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை நாளில் எனது நண்பரும் ஃப்ரான்சிஸ்காவும் மதுரைக்கு சென்று வந்தனர். நான் மாலையில் வந்தேன் என் நண்பரைப் பார்க்க. என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னார். பாருக்கு சென்றோம்.

“சார். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

“சொல்லுங்கள்” என்றேன்.

”“ஃப்ரான்சிஸ்கா உங்களைக் காதலிக்கிறாள்“ என்றாள்.

“என்ன ??? “ எனக்குள் அதிர்ச்சி.

“ஆமாம் சார். பஸ்ஸில் இருவரும் செல்லும் போது அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தாள். என்ன ஃப்ரான்சிஸ்கா என்று கேட்ட போது அவள் உங்களைப் பற்றி தான் பேசினாள். சாப்பிட அழைத்தபோது மறுத்து விட்டாள். இன்று பாஸ்டிங் இருப்பதாக சொன்னாள். அவள் வாரத்தில் நான்கு நாட்கள் பாஸ்டிங் (பட்டினி) இருப்பாள். என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறாள். ஏன் என்று கேட்க வில்லை. இன்று தான் எனக்கு விடை கிடைத்தது சார். நீங்கள் நடக்க வேண்டுமென அவள் பாஸ்டிங் இருப்பதாக இன்று சொன்னாள் சார். எனக்கு கண்ணீரே வந்து விட்டது சார்.”

மனதுக்குள் பூகம்பம் அடித்தது. மனசு வேற பாரமாகிவிட்டது. என் நண்பர் சொல்லி விட்டு கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

”ஆனால் என்னால் அவளைக் காதலிக்க முடியவில்லையே சார். நான் என்ன செய்ய ?“

”சார் ப்ளீஸ் சார். பாவம் சார் ஃப்ரான்சிஸ்கா. உங்களையே வாழ்வாக எண்ணி இருக்கிறாள். என்று சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

ஃப்ரான்சிஸ்காவுக்கு மேல் படிப்புக்கு ஆர்டர் வர சென்று விட்டாள் வேலைக்கு வரவில்லை. நான் அவளுக்கு அளித்த பரிசில் எங்களது ஆத்மாவுக்கு என்று எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அழுதாள்.

என்றோ ஒரு நாள் ஃப்ரான்சிஸ்காவின் நினைவு வர அந்தப் பாடலை கேட்டேன். இப்பொழுது நான் நான் மட்டும் அந்தப் பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் தனியாக. பாடல் வரிகள் கீழே...


எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதலுக்காகவோ அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குயிலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இதுபோல மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


நன்றி :
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிரத்னம்,
பாடலாசிரியர் : வைரமுத்து.
__________________

Tuesday, August 12, 2008

சாகப்போகும் மனிதர்கள் மற்றவர்களைச் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்

மனிதா... ஓடுகிறாய்... ஓடுகிறாய்... ஓடிக்கொண்டே இருக்கிறாய். எங்கே ஓடுகிறாய் சாவதற்குள் உன் ஓட்டம் நின்று விடுமா மனிதா இல்லை ஓடிக்கொண்டிருப்பாயா ? பேங்கில் பணம் சேர்த்து வைத்து விட்டாயா ? சொத்து நிலம் வாங்கி குவித்து விட்டாயா ?
குவி குவி... நீயா அனுபவிக்க போகிறாய். நீ தேடித் தேடி சேர்த்து வைத்தது எல்லாம் நாளை எவனுக்கோ போகப்
போகிறது. போகட்டும். அதனால் என்ன ? ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே.. வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும்... மனிதா மனிதனுக்கு உள்ள அகந்தையினால் பார் ஆயிரக் கணக்கில் ஜார்ஜியாவில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். போர் ... போர்.. எதற்கு மனிதா... எதற்கு.... ? யார் வாழ இந்தப் போர் ?? எவன் இருக்கப்போகிறான் சாகாமல்... நடக்கட்டும் நடக்கட்டும்.. போர் நடக்கட்டும். ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே. உனக்கு நேரம் இருந்தால் கீழே உள்ள பாடலை படித்துப் பார். படித்து விட்டு திரும்பவும் ஓடு... நிற்காதே. நின்றால் சாவு உன்னைப் பிடித்து விடும்.

படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர் : ஜேசுதாஸ்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே ...............
பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன ...............
ஆசைகள் என்ன ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது ..........
உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்...........
காலஙக்ள் மாறும் கோலங்கள் மாறும் மானிடம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்
பேதை மனிதனே
பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

Thursday, August 7, 2008

திரைப்பட விமர்சனங்கள்

இந்திய இறையாண்மைக்கு வேட்டு

”நாங்கள் விரைவில் புதிய நீர்க்கொள்கையை அறிவிக்கப் போகிறோம். இதன்படி எங்கள் மாநிலத்தில் பாயும் நதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்க, இனி எங்கள் சட்டமன்றத்தின் அனுமதி கட்டாயம் பெற்றாக வேண்டும்' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் “

அண்டை மாநிலத்திலிருந்து இப்படி ஒரு அறிக்கை. இதுவரை தமிழகத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. முல்லைப் பெரியார் அணையில் உச்சநீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டது கேரளா. கேட்க நாதியில்லை. இந்த அறிக்கையினை மற்ற மாநிலங்களும் பயன்படுத்தினால் விளைவு தமிழ் நாடு சுடுகாடாகும் நிலை.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள நீர் ஒப்பந்தம் இதுவரையில் நல்ல முறையில் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்கள் பக்கத்து மாநிலங்களின் உரிமையில் கை வைப்பது என்பது உள் நாட்டுக்குள் மாநிலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது இவர்களுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.

இப்படிப் பட்ட விஷயங்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மத்திய அரசுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இதுவரை மெளனம் காக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்திய யூனியன் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. மாநிலங்கள் அடித்துக் கொள்ளும் முன்பு நடவடிக்கை எடுப்பது நல்லது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காமல் இருந்தால் போதும். செய்வார்களா ?

Monday, August 4, 2008

மகாராஜாக்களின் பிம்பங்கள்

கடந்த காலத்தின் வரலாற்றை புரட்டினால் ராஜாக்களால் ஆளப்பட்ட ராஜ்ஜியங்களும், நடத்தப்பட்ட போர்களும் விரவிக் கிடக்கும். பொதுவாக ராஜாக்கள் என்றாலே மகுடம், உடல் முழுதும் நகைகள், உயர்ந்த ரகத்தில் துணி, ஒரு விதமான செருப்பு என்று தான் மனக்கண்ணில் வந்து செல்வார்கள்.

யாருக்கு என்ன கோபமோ, வெறியோ தெரியவில்லை. யாரால் இப்படிப் பட்ட வழக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டதோ தெரியவில்லை. இன்றைய நாளில் அந்த மகாராஜாக்களின் பிம்பங்கள் மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்களின் வாயில் கதவினை திறந்து விட்டு சல்யூட் அடிக்க நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால், யானை கட்டி போரடித்த, சாலைதோறும் மரங்களை நட்டு வைத்த அந்தக் கால ராஜாக்களை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. வரலாற்றுக்கும் இன்றைய நிதர்சனத்துக்கும் இடையேயான இடைவெளியில் நடக்கும் மாற்றங்களில் ராஜாக்களின் பிம்பங்களின் நிலை கூட மாற்றம் கண்டு விடுவதை எண்ணினால் வாழ்வின் நிச்சயமற்ற தன்மை உறைக்கிறது அல்லவா.

மிகச் சமீபத்தில் சாரு நிவேதிதா அவர்களின் வாசகர் சந்திப்பு நடந்த ஹோட்டலில் வாயிற் கதவினை திறந்து விடுபவரைக் கண்டபோது மனதில் தோன்றியவை. என்ன ஒரு விசித்திரமான உலகம் பாருங்கள்....

Saturday, July 26, 2008

சமரசம் உலாவும் இடமே

அன்பு நண்பர்களே,

வாழ்க்கை ஒரு போராட்டம். வலிமை உள்ளவன் வசதியாய் வாழ்கிறான். மற்றவன் ஏங்கிச் சாகிறான். காசுதான் மனிதனின் அளக்கும் அளவுகோலாய் மாறிய இந்த உலகில் மதமும், மண்ணாங்கட்டியும் மிருகமாய் வாழ மனிதனைப் பணிக்கிறது. ஆடுகிறான். பாடுகிறான். அழிக்கிறான். அழிந்து போகிறான். ஆனால் இந்த இடத்தில் காசும் பகட்டும் பொன்னும் பொருளும் மதிப்பின்றி போய் விடும். நீங்களும், நானும் ஏன் பிரதமரும் கூட ஒன்று தான்..... பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

படம் : ரம்பையின் காதல்
வெளிவந்த வருடம் : 1956
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் : மருதகாசி
இசையமைத்தவர் : தெரியவில்லை



சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே


சேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலேயே
இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

Monday, July 14, 2008

CONGRADULATIONS TO MISS DAYANA MENDOZA - MISS UNIVERSE 2008




My heartiest wishes to you Ms Dayana Mendoza...

Friendly
Thangavelu

Sunday, July 13, 2008

முனியாண்டி மூன்றாம் ஆண்டு விலங்கியல் - திரைவிமர்சனம்

கேண்டீன் வைத்து நடத்தும் பொன்வண்ணனின் மகனாக பரத். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறையில் படிக்கிறார். ஊர் பெரிய தாதாவின் பெண்ணுடன் காதல் வருகிறது. கதா நாயகியின் அறிமுகம் அவரது காலில் தொடங்குகிறது. என்ன ஒரு டைரக்டோரியல் டச் தெரியுமா இந்த சீன். இந்த சீனுக்கு பின்தான் படம் பார்க்க விருப்பமே வருகிறது. பரத் கல்லூரியில் பாடும் ஒரு பாட்டு. இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லுவது போல அமைந்துள்ளது இப்படத்தின் சிறப்பு. பொன்வண்ணனின் வேஷம் இதுவரை தமிழ் சினிமாவில் எவரும் போடாத வேஷம் என்பது இப்படத்தின் சிறப்புக்கு இன்னும் ஒரு காரணம். முடிவெட்ட கடைக்குச் செல்லும் பரத்திற்கு, பொன் வண்ணன் அட்வைஸ் சொல்லும் காட்சிகள் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். கல்லூரி தேர்தலை சாக்காக வைத்து இரு ஜாதிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் இதுவரை ஹாலிவுட்டில் கூட எடுக்கப்படாத அளவுக்கு மயிர்க்கூச்செரியும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளன. இயக்குனர் திருமுருகன் இதற்காக மெனக்கெட்டு இருப்பது அவரின் சின்சியர் உழைப்பினை காட்டுகிறது. தமிழ் சினிமாவுக்கு உலகில் சிறந்த படைப்பினை வழங்க வேண்டுமென்ற அவரது எண்ணம், ஆர்வம், உழைப்பு வேறு எவரிடத்திலும் காணக்கிடைக்காத ஒன்று.

கதா நாயகி பரத்தை கேவலப்படுத்த பரத் செருப்பால் அடித்து, தென்னந்தோப்பை கொளுத்தி விடுகிறார். இந்தக் காட்சி படம் பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வரவழைக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. நாயகி தன் அப்பாவிடம் இந்த விஷயத்தை மறைத்து விடுவதால் பரத்தைக் காப்பாற்றுகிறார். கதை என்றால் இது தான் கதை. திருமுருகன் வைத்திருக்கும் இந்தத் திருப்பம்தான் கதையின் சுவாரசியமான போக்கிற்கு உறுதுணையாக இருப்பது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

பொன்வண்ணனின் மூத்த மகனை நாயகியின் அப்பா கொன்று விடுவது கதையில் இருக்கும் மர்ம முடிச்சு. இதுவரை எத்தனையோ சினிமாக்கள் வந்து இருக்கிறது. எந்தச் சினிமாவிலும் இதுவரை சொல்லப்படாத மர்ம முடிச்சு இந்தப் படத்தில் தான் இருக்கிறது. நாயகி அப்பாவின் எதிரி இன்னொரு ஜாதிக்காரன் தான் பரத்திடம் இந்த உண்மையினைப் போட்டு உடைக்கிறார். அதைக் கேட்ட பரத், நாயகியின் அப்பாவை புரட்டி எடுக்கும் காட்சியில் தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. விசில்களின் சத்தம் வின்னை முட்டுகிறது.

கதையின் முடிவாக மாணவர்களின் கூட்டத்தில் பரத் ஆற்றும் உரை, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையினை ஞாபகப்படுத்துகிறது. இப்படி ஒரு சீனை வைத்த திருமுருகன் தமிழ் சினிமாவில் எவரும் அசைக்க முடியாத , தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது கண்கூடு.

கதையில் பரத்திற்கு நண்பனாக முடியில் மணி கட்டி, இடுப்பில் மணிகளை தொங்க விட்டு வருபவர் யார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் நகைச்சுவைப் புயல் வடிவேலுவின் பெயரைக் போட்டார்கள். ஆனால் வடிவேலுவைக் காணாமல் தியேட்டரில் படம் பார்த்த அனைவரும் வடிவேலு எங்கே, வடிவேலு எங்கே என்று சத்தம் போட்டார்கள். பின்னர் தான் தெரிந்தது இடுப்பில் மணி கட்டி நடித்தவர் தான் வடிவேலு என்று. ஹாலிவுட் தரத்திற்கு மேக்கப் கலை உயர்ந்து இருப்பது தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு முன்னேறியுள்ளது கண்டு வியப்புதான் மேலிட்டது.

படத்தின் முடிவும், பாடல்களும் சொக்க வைக்கும் ரகம்.. இந்த விமர்சனத்தில் பாதிக் கதையினைத் தான் சொல்லி இருக்கிறேன். மீதியை நீங்கள் தொலைக்காட்சியில் சாரி சாரி... தியேட்டரில் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டுகிறேன்.

Tuesday, July 8, 2008

விடை தெரியாத கேள்விகள்...

கரூர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் கம்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த காலம். எனது சக ஆசிரிய தோழன் கிச்சா எனும் கிருஷ்ணகுமாரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அவரின் அம்மா ( அவர் பெயர் கூட தெரியாது ) என் மீது கொண்டிருந்த அன்பு கடவுள் என்மீது கொண்ட அன்புக்கும் மேலானது என்றே சொல்லலாம். கிச்சாவுக்கு என் மீது அடிக்கடி பொறாமை வந்து விடும். ”தங்கம், இந்தா அம்மா கொடுத்து விட்டாங்க “ என்று டப்பாவை கொடுப்பார். என்னவென்று திறந்து பார்த்தால் உள்ளே ஏதாவது பலகாரம் இருக்கும். ”எனக்குகூட தரலை தங்கம்” என்று என்னை திட்டியபடியே தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பார். திட்டிக்கொண்டே செல்வார். நான் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வேன்.

தங்கும் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது “அம்மா, வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்று ஹாஸ்டல் பையன் வந்து சொல்வான். வீட்டுக்கு சென்றால் மட்டனோ அல்லது கருவாட்டுக் குழம்பு, ஆம்லெட் இருக்கும். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்து விட்டு வருவேன். இதைக் கவனித்த சாமியார்களில் ஒருவர் பெரிய சாமியாரிடம் போட்டுக் கொடுத்து விட்டார். உடனே பெரிய சாமி என்னை அழைப்பதாக ஓலை வரும். செல்வேன். ”யாரப்பா அது ? நீ மட்டன் , கருவாடு எல்லாம் சாப்பிடுகிறாயாமே” என்பார். ”ஆமாம் சாமி. சாப்பிடனும் போல இருக்கும். சாப்பிட்டு வருவேன்” என்பேன். ”உம் மேல அந்தம்மாவுக்கு அவ்வளவு பிரியமா?” என்று கேட்பார் ”ஆமாம்” என்பேன். சிரித்துக் கொண்டே அந்த டாபிக்கை விட்டு விட்டு விவேகானந்தரை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்.

கிச்சா அம்மா என்னை தனது மகன் போல பாவித்து வந்தார். தீபாவளி, பொங்கல் திரு நாட்களிலும், வீட்டில் ஏதாவது விஷேசமாக செய்தாலும் அவசியம் நான் செல்ல வேண்டும். நான் சென்ற பிறகு தான் கிச்சாவுக்கும் சாப்பாடு கிடைக்கும். ஒரு நாள் உடம்பு சரியில்லை என்று தெரிந்து கொண்டு ஆஸ்ரமத்திற்கு வந்து விட்டார்கள். எனது கண்கள் பனித்து விட்டன. அவர்கள் தான் நான் ஆஸ்ரமத்தில் இருந்த நாள் வரையிலும் எனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தார்கள். நான் என்ன செய்தேன் அவர்களுக்கு ? ஒன்றுமில்லை.. ஏதாவது வேண்டுமா என்றால் போப்பா என்று சொல்லி மறுத்து விடுவார்கள்.

பெற்ற தாயைவிட வளர்த்த தாய் என்றால் கிச்சாவின் அம்மாதான் எனக்கு நினைவுக்கு வருவார்கள்.... இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லை. ஏன் அவர்கள் என் மீது பாசத்தைக் கொட்டி வளர்த்தார்கள் ? தெரியாது.... கிச்சாவுக்கு என் மீது கொள்ளை பிரியம். ஏன் கிச்சா இப்படி என்றால் தெரியவில்லை தங்கம். உன்னைப் பார்த்தாலே நெஞ்சு நெகிழ்ந்து விடுகிறது என்பார். கிச்சாவின் நண்பர் பன்னீர் என்பவர். அவரின் அம்மாவின் விருந்தோம்பல் இன்றும் என் நினைவினை விட்டு அகலாத சம்பவம். முன்னே பின்னே தெரியாத என் மீது கொண்ட அவர்களின் அன்புக்கு என்ன காரணம் ? தெரியாது... இதெல்லாம் விடை தெரியாத கேள்விகளாய் எனக்குள் வலம் வருகின்றன அடிக்கடி....

விவேகானந்தா பள்ளியில் கம்யூட்டர் சார் என்றால் பசங்களுக்கு ஒன்னுக்கு வந்து விடும். கையில் நீள பிரம்பு அல்லது மூன்றடி நீளத்தில் ஸ்கேலோ இருக்கும். படிக்க வில்லை என்றால் பின்னி எடுத்து விடுவேன். அந்த அளவுக்கு கொடுமைக்காரனாக இருந்தேன்.

என்னிடம் படித்த மாணவர்களின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது. நான் சாப்பிட வில்லை என்று தெரிந்தால் வந்து குவிந்து விடும். திணறி விடுவேன். ஏதாவது விஷேச உணவு வீட்டில் சமைத்தால் முதலில் என்னிடம் தான் வரும். வாயில் வைத்து கடித்துக் கொண்டிருக்கும் போதே பிடுங்கி தின்று விடுவார்கள் எனது மாணவர்கள். மேலே வந்து ஒட்டிக் கொள்வார்கள். அடித்தாலும் வாங்கிக் கொள்வார்கள். கிளாஸ் முடிந்த பின்பு சார், கை சிவந்து போயிடுச்சு என்று என்னிடம் காட்டுவார்கள். எனக்கு கண்ணீர் வந்து விடும். சார், விடுங்க சார். படிக்கனும்னுதானே அடிச்சீங்க. என்று சிரித்துக் கொண்டே சொல்வார்கள். நான்கு வருடம் அங்கு வேலை செய்தேன். எனது மாணவர்களுக்கு பிராக்டிகலில் 50/50 மார்க் வாங்கி கொடுத்து விடுவேன். அவன் எவ்வளவு மக்காயிருந்தாலும் விடமாட்டேன். முருகானந்தம் என்ற பையன் இருந்தான். சரியாகவே சாப்பிட மாட்டான். தீனி பண்டாரம். அவனுக்கு வீட்டில் இருந்து பலகாரங்கள் வரும். பாக்கெட்டில் வைத்திருப்பான். இண்டர்வெல்லில் வருவான். முறுக்கை எடுத்துக் கொடுத்து சாப்பிடுங்க என்பான். வேண்டாம்டா என்றால் விடமாட்டான். நல்லாயிருக்கில்லே என்று சொல்லி சிரிப்பான். ஒரு தடவை அவன் படிக்கவில்லை என்று பிரம்பால் பட்டக்சில் நாலு போட்டேன் கம்பால். வேணும்னா இன்னும் அடிச்சுக்கங்க என்று சொல்ல போடா என்று சொல்லி விட்டு கிளாஸ் எடுத்தேன். கிளாஸ் முடிந்ததும் ஜட்டிக்குள் இருந்து இரண்டு துண்டுகளை எடுத்துக் காட்டி ஏமாந்துட்டீங்களா என்று சிரிக்க என்ன செய்வதென்றே தெரியாமல் விழிப்பேன். அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பான்.

தீபாவளி அன்று எனது மாணவர்கள் தான் எனக்கு எண்ணெய் தேய்த்து விடுவார்கள். குளியல் அறைக்குள் வந்து சீயக்காயை தலையில் வைத்து தேய்க்க தேய்க்க என் அம்மா தீபாவளிக்கு அரப்பு தேய்த்து என்னைக் குளிப்பாட்டி விடுவது நினைவுக்கு வந்து கண்களில் கண்ணீர் தேங்கும். அரப்பின் வழிசலில் கண்ணீர் கரைந்து விடும். உடம்பு சரியில்லை எனில் வரிசை கட்டி வருவார்கள் அறைக்குள். அதைப் பார்க்கும் சாமியார்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதாக சொல்வார்கள். நான் சிரித்துக் கொள்வேன்.

சாப்பாடு பரிமாறுவார்கள். தட்டு நிறைய பலகாரம் இருக்கும். போதும்டா விடுங்கடா என்றாலும் விடாமல் எதையாவது பேசி, சேட்டைகள் செய்து சாப்பிட வைத்து விடுவார்கள்.

என் மீது மாணவர்கள் கொண்ட அன்பிற்கு என்ன காரணம் ? தெரியாது.... இப்படி என் வாழ்வில் கேள்விகளாய் வந்தவர்கள் அனேகம் பேர்.

இப்படி சில நிகழ்ச்சிகள் வாழ்வில் என்று மறக்க முடியாத கல்வெட்டாய் பதிந்து விடும்.

Sunday, July 6, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 6 ( 06.07.2008)

ரித்தி,

அம்முவுக்கு காய்ச்சல் வந்து விட்டது தான் உனக்கு தெரியும். ஆனால் அந்தக் காய்ச்சலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று உனக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நீ குடிக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் என்ற நுண்ணிய நோய்க் கிருமிகள் இருப்பதும் ஒரு காரணம். பின்னர் சாப்பிடும் சாப்பாட்டிலும் இருக்கும். அதனால் அம்மாவிடம் சொல்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து தரச் சொல்லி பின்னர் தான் தண்ணீர் குடிக்கனும்.

எதுக்கு தண்ணீரைக் கொதிக்க வைக்கனும் என்று கேள்வி கேட்பாய் . காரணம் என்னவென்றால், தண்ணீர் கொதிக்கும் போது காய்ச்சலுக்கான நோய் கிருமியும், அதன் பின்னர் தொடர்ந்து கொதிக்க வைக்கும் போது மஞ்சள் காமாலை நோயினை உருவாக்கும் நோய்க் கிருமியும் செத்து விடும்.

வீட்டில் தயாராகும் உணவினைத் தவிர ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய ரெடிமேட் உணவுகளும், பரோட்டா போன்ற உணவுகளில் நோய் கிருமிகள் இருக்கும் என்று டாக்டர் சொன்னதாக அம்மா சொல்லியது உனக்கு நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஆதலால் வெளியிடங்களில் சாப்பிடுவதையும், மிட்டாய், சிப்ஸ், வடை போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடு.

மேலும் சாப்பாட்டினை எப்போதும் சூடாகவே சாப்பிட்டு பழகிகொள். அம்மாவிடம் சொல்லி சூடு செய்து தரச்சொல்லி சாப்பிடு.

மனிதனுக்கு சொத்து என்பது அவனது உடல் நலம் தான். உடலை நன்கு பேணி வரவேண்டும். நோயில்லா வாழ்வே சிறந்தது.


அன்பு அப்பா...................

Wednesday, July 2, 2008

எனது பிறந்த நாள்

எனது பிறந்த நாளுக்கு தமிழ் மன்றத்தில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்களை படிக்க

தமிழ்மன்றம் வாழ்த்துக்கள் படிக்க


நேரிலும், போனிலும், மெயிலிலும் வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி

Saturday, June 28, 2008

பிளாஸ்டிக் பைகள்

போன் பேசிக்கொண்டிருந்த போது கூச்சலும் சத்தமும் கேட்க என்னவென்று பார்த்தால் மாணவர்களின் அணிவகுப்பு. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று கோஷம் இட்டனர் மாணவர்கள். விழிப்புணர்வு பிரச்சாரமெல்லாம் நன்றாகத்தான் செய்கிறார்கள்.

தவற்றுக்கு ஆரம்பம் எதுவோ அதை வசதியாக மறந்து விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றுச் சொன்னால்,

தமிழ்நாடு அரசு குடிகார கடைகளையும் பார்களையும் நடத்துகிறது. குடித்து விட்டு வெளியில் வந்தால் காவல் துறையினை வைத்து கைதும் செய்கிறது. தமிழ் நாட்டின் சட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். பிள்ளையை கிள்ளி விட்டு, அதன் கண்ணில் மிளகாய்ப் பொடியினையும் தூவி விடுவது போல அல்லவா இருக்கிறது.

பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனங்களை ஒழித்துக் கட்டினால் போதும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தேவையே இல்லை. பிளாஸ்டிக் பைகளை கொடுக்கும் கடைகளை நிரந்தரமாக மூடச் செய்துவிடுவோம் என்று அரசாணை வெளியிட்டால் போதும்(!!??)பிளாஸ்டிக் பைகள் காணாமலே போய்விடும். அதை விடுத்து என்னனென்னவோ கூத்துகள் எல்லாம் நடத்துகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் ஹோட்டல் ஹோட்டலாக பிளாஸ்டிக் பைகளுக்காக ரெய்டு நடத்தினார்கள். நான் பார்சல் சாப்பாடு வாங்க ஹோட்டலுக்கு சென்றேன். இலையில் சாப்பாடு கட்டினார்கள். சாம்பார், ரசமெல்லாம் எதில் கட்டுவார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிளாஸ்டிக் பையில் கட்டி வந்து கொடுத்தார் சர்வர். ஏனய்யா இது மாத்திரம் பிளாஸ்டிக் இல்லையா என்று கேட்க இதுக்கு மாத்திரம் அனுமதி உண்டென்றார் அவர்.

பொது மக்களா பிளாஸ்டிக் பைகளை வாங்கி வைத்து பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகள் கொடுக்கும் கடைகளை அல்லவா இவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். பிரபலமான ஷாப்பிங் மால்களில் போய் பிரச்சாரம் செய்ய வேண்டியது தானே. அங்கே சென்றால் கிழித்து விடுவார்கள்.

சரி... கார் கண்ணாடிகளில் கருப்பு ஃபிலிம் ஒட்டக்கூடாது என்றார்கள். இப்போது என்ன நடக்கிறது என்று ரோட்டில் பார்த்தால் அல்லவா தெரிகிறது பொது மக்கள் அரசாணைக்கு கொடுக்கும் மரியாதை என்னவென்பதை. சட்டத்தை பாதுக்காக்கும் காவலர்கள் சாலை தோறும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள் ?????

பிரச்சாரமாம், விழிப்புணர்வாம், சட்டமாம். விதியாம். புண்ணாக்கு....

என்னய்யா கூத்து இது.... இப்படியுமா மக்களை முட்டாளாக்குவார்கள். கேவலம்... கேவலம்.
இளிச்சவாயன் எவனாவது கிடைத்தால் அவன் தலையில் மிளகாய் அரைப்பதும், ஃபைன் போடுவதும் ... கேவலம் ... கேவலம்...

Wednesday, June 18, 2008

வாஞ்சி நாதன் !

எண்ணங்களில் எரிமலை
ரத்த நாளங்களில் புயல்
சுண்டி விட்ட நரம்பாகிறது உடல்
சூரியனின் தகிப்பாகிறது மனசு
அணுகுண்டின் நெருப்பாகிறது கண்கள்
கொதிக்கும் இரும்புலையின்
வசமாகிறது உணர்ச்சிகள்
உன்னை நினைக்கையில்

நரம்புகள் முறுக்கேற
ரத்தம் கொதி கொதிக்க
உடம்பு எரிய எரிய
உணர்ச்சிகள் வெடித்து சிதறுகிறது
உன் தியாகத்தை நினைக்கையில்

மேகம் தனக்காக மழை பெய்வதில்லை.
காற்று தனக்காக வீசுவதில்லை
நீதான்... நீதான்... நீதான்
மேகம்...
நீதான் காற்று...
நீதான் இந்தியாவின் ரத்தம்
நீதான் இந்தியாவின் மூச்சு
நீதான் இறைவன்.....

மணியாச்சி ரயில் நிலையத்தில்
பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் துரையை
சுட்ட தமிழன் , இந்தியன்
வாஞ்சி நாதனுக்கு ஒரு சல்யூட்

கஞ்சி குடிக்க சிங்கி அடிக்கனும்

மிகச் சமீபத்தில் கண்டசீலா ரைஸ் ( அரிசியா ?) மற்றும் அமெரிக்க அதிபர் இருவரும் இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்பட்ட பொருளாதார உயர்வின் காரணமாக இரு நாட்டவர்களும் அதிகம் சாப்பிடுவதால் தான் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சொல்லி வைக்க, நமது அரசு வாயைத் திறந்து வார்த்தை சொல்லவில்லை. இருக்கட்டும் அமெரிக்காவுடனான உறவு மெயிண்டெய்ன் செய்யபடுகிறது என எண்ணிக் கொள்ளலாம்.

ரோம் நகரில் நடந்த சர்வதேச மா நாட்டில் உணவுப் பஞ்சத்துக்கு காரணம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் குண்டு மனிதர்கள் உண்டு கொழுப்பது என்று விவாதம் செய்யப்பட்டிருக்கிறது. இது தான் காரணமா என்றால் இல்லை என்று சொல்லலாம்.

ஆயுத உற்பத்திக்கும், வாங்குவதற்கும் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய உற்பத்திக்கு அந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. விவசாயம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நிலைப்பாட்டை எவரும் யோசிப்பதாகவே தெரியவில்லை. பெரும் தொழில்கள், பங்குச் சந்தை வளர்ச்சி என்று யோசிக்கும் வல்லுனர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.கை நிறைய காசு இருந்தாலும் சாப்பிட உணவுப் பொருள் வேண்டுமே என்று சிந்திக்கவே மறந்து விட்டார்கள். விளை நிலங்கள் வீடுகளாக்கப்படுகின்றன. பெரும் முதலீடுகளுக்கு அரசுகள் விலை நிலங்களை பலி இடுகின்றன. விளைவு விவசாய உற்பத்திக்கான நிலம் குறைக்கப்படுகிறது. உற்பத்தி குறைகிறது.பெருகி வரும் மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள் உற்பத்தியும் பெருக வேண்டும். ஆனால் அரசுகள் இதைப் பற்றி கிஞ்சித்துக் கவலைப் படுவதில்லை.வாகனத்துக்கு எரிபொருள் வேண்டி உணவுப் பொருட்கள் எரிபொருட்களாக மாற்றப்படுகின்றன. சாப்பிட வேண்டிய பொருட்கள் வேறு வழியில் பணமாக மாற்றம் செய்யப்படுவது மேலும் உணவுப் பற்றாக்குறையினை ஏற்படுத்தி விடுகின்றன. அமெரிக்காவிலும் , பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் பயோ டீசலுக்கு உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஏழை நாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்கிறார்கள்.

சமீபத்தில் பருத்தி நூல் விலையேற்றம் கண்டது. காரணம் அமெரிக்காவின் இறக்குமதி. அவர்கள் நாட்டில் பருத்தி உற்பத்தியினை குறைத்து விட்டார்கள். இங்கிருந்து பருத்தி ஏற்றுமதி செய்யப்படுவதால் ஜவுளித் தொழிலுக்கு நூல் தட்டுப்பாடு ஏற்படுவதால் விலையேற்றம் தானாகவே வந்து விடுகிறது.

இந்திய அரசு ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டது. தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும். ஆகவே முற்றிலுமாக உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு 200% ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும். பருத்திக்கும் 500% ஏற்றுமதி வரி விதித்தால் ஏற்றுமதி குறையும். ஏற்றுமதி செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை. நம் விலை இவ்வளவு என்று சொன்னால் வேண்டுபவர்கள் வாங்கிக் கொள்ளட்டும்.

உணவுப் பற்றாக்குறையினை சமாளிக்க உடனடியாக உணவுப் பொருள் மிக அதிகமான ஏற்றுமதிக்கான வரி விதிக்க வேண்டும். விவசாய நிலங்களை பண்படுத்தி விவசாய உற்பத்திக்கு ஊக்கமும், மானியங்களும் வழங்க வேண்டும். விவசாயிக்கு அதிகப்படியான சலுகைகளை தர வேண்டும். அவனுக்கு உயர்ந்த கவுரவம் வழங்கப்பட வேண்டும். ஆட்டம் ஆடி கூத்து கட்டும் நடிகர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை விட உலகத்துக்கு உணவு தரும் விவசாயி மேலானவன் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்..

இல்லையெனில் கஞ்சி குடிக்க சிங்கி அடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

Saturday, June 14, 2008

சாரு நிவேதிதாவிடம் மாட்டிக்கொண்டேன்....

நேற்று இரவு சாருவிடம் இருந்து தொலைபேசி வந்த போது சரியான ஜூரம். கட்டுரை அனுப்பி இருக்கிறேன். நேரம் இருக்கும் போது அப்டேட் செய்யுங்கள் என்று சொன்னார். சார் ஜூரமாக இருக்கிறது. காலையில் அப்டேட் செய்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு உறங்கினேன்.

காலையில் 4 மணிக்கு எழுந்து அம்முவுக்கு பால் காய்ச்சி கொடுத்து விட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். ( அம்மணி ஊருக்குப் போயிருக்கிறார்கள் ) ஏழு மணிக்கு ரித்திக், அம்முவுக்கு இட்லி ஊட்டி விட்டு மருந்துகள் கொடுத்து விட்டு இணையத்தை பார்த்தால் சாருவிடம் இருந்து வந்த கட்டுரையில் என்னைப் பற்றி இரண்டு வரிகள். படித்ததும் மண்டை காய்ந்து விட்டது. மேலதிக விபரத்துக்கு....

www.charuonline.com

ஆனாலும் சுவாரஸியமாகத்தான் இருக்கிறது.

Thursday, June 12, 2008

ஆசியன் நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள்

எண்ணெய் வள நாடுகளும் அதன் வியாபார தொடர்பு நிறுவனங்களும் இணைந்து வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு வேட்டு வைக்கவும், வளர விடாமலும் செய்ய சிண்டிகேட் அமைத்து குருடு ஆயிலின் விலையினை அதிகப்படுத்தி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.

கேஸ்பிராமின் தலைவர் ஒருவர் தி ஹிண்டுவில் குருடு ஆயில் 250 அமெரிக்க டாலரை எட்டும் என்று ஜோசியம் சொல்லி இருக்கிறார். இந்த நிலை வந்தால் உலகில் என்ன நடக்கும் ? மக்கள் என்ன ஆவார்கள் ? ஆளும் அரசுகள் என்ன செய்யும்... ? விளைவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே முடியாது.

இதற்கு என்னதான் தீர்வு ?

எண்ணை வள நாடுகளில் உணவுப் பொருட்கள் விளைவிக்க இயலாது. ஆதலால் அந்த நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் உணவுப் பொருட்களுக்கான விலையினை 100 மடங்கு அதிகம் செய்ய வேண்டும். அரசாங்கமே உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்று மிக அதிக விலைக்கு விற்றால் தான் எண்ணை வள நாடுகளின் ஆட்டம் குறையும்.

அதுவுமின்றி, ஆசிய நாடுகளில் இருந்துதான் மிக அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதற்க்கும் அவ்வாறே செய்தால் ஆடிப் போய் விடுவார்கள்.

கடைசியாக ஒரு வேண்டுகோள் : ஆசிய நாடுகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட கரன்சி முறையினை ஏற்படுத்தினால் இப்படிப்பட்ட விளைவுகளை முற்றிலுமாக ஒழித்து விடலாம். ஐரோப்பாவுக்கு என்று ஈரோ இருப்பது போல ஆசிய நாடுகளுக்கு என்று தனிப்பட்ட கரன்சி உருவாக்கினால் தான் ஆசிய நாடுகள் வளர முடியும்.

ஆசிய நாடுகளின் தலைவர்களும், நிதியமைச்சர்களும் ஆவன செய்வார்களா ?

கணவன் மனைவி உறவு

கணவனின் மனத்தை கொள்ளை அடிப்பது எப்படி?
















மனைவியின் மனத்தைக் கொள்ளை அடிப்பது எப்படி ?
















புதுச்சேரியிலிருக்கும் எனது உறவுக்காரப் பெண் அனுப்பிய போட்டோவைப் பார்த்ததும் எனக்கு தோன்றியது. வாழ்க்கை என்பது கொடுத்து பெறுவது. அது அன்பானாலும் சரி... வேறு எதுவானாலும் சரி.


ஆனால் இவ்வுலகம் இப்போது நடைபோடும் பாதை ஃபேண்டஸி வே.. எதார்த்தம் சிறிதும் வாழ்க்கையில் எதிர்படாமல் வாழ நினைக்கிறார்கள். எதார்த்தம் கண் முன்னே நிற்கும் போது ஏற்றுக்கொள்ள இயலாமல் செய்வதறியாமல் விழித்து நிற்கும் பைத்தியக்காரனை போல நிற்கிறார்கள் மனிதர்கள்.

Wednesday, June 11, 2008

பாடப் புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம்

மத்திய அரசு சிலபஸ் சி.பி.எஸ்.இ ஆறாம் வகுப்பில் நியூ லேர்னிங் டு கம்யூனிகேட் என்ற பாடப்புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இருப்பதாக செய்தி படித்தேன். அதனால் உண்டான சர்ச்சைக்கு கேள்வி ஒன்றே ஒன்று தான். ஏன் ரஜினி பற்றி படிக்கக் கூடாது. ரஜினி ஒரு சாதனையாளர் தான். சினிமாவில் நடித்தவர்கள் தான் தமிழ் நாட்டினை ஆண்டிருக்கிறார்கள். ஆண்டும் வருகிறார்கள். அமெரிக்காவிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இதிலென்ன தவறு இருக்கிறது. ரஜினி ஒரு சரித்திர நாயகன் என்பதில் என்ன சந்தேகம் இருக்கிறது ?

வேலூர் மாவட்ட டி.ஆர்.ஓ சுகந்தி

வேலூர் மாவட்டத்தின் எட்டு தாலுக்காக்களில் டி.ஆர்.ஓ சுகந்திக்கு எதிராக அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஒட்டு மொத்தமாக சிக் லீவ் என்று போராட்டம் நடத்தினார்கள். காரணம் என்னவென்றால் டி.ஆர்.ஓ, சக ஊழியர்களை அசிங்கமாகப் பேசுவது, மன உளைச்சல் ஏற்படுத்தியதால் தான் இந்தப் போராட்டம் என்று அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிலுப்பன் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் இவரே , டி.ஆர்.ஓ மிகவும் நல்லவர், அரசின் சலுகைகளை உரியவர்களிடம் சேர்க்கும் நேர்மையாளர், சிபாரிசுகளுக்கு செவிசாய்க்காத துணிச்சல் காரர் என்று நற்சாட்சி பத்திரமும் வாசிக்கிறார்.

வேலூரில் உள்ள விவசாய சங்கங்கள் டி.ஆர்.ஓவுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் மெமோ கொடுத்து விட்டார் என்ற வதந்திக்காக போராட முடிவெடுத்ததாம். இப்படி மக்களுக்கு நல்லதை செய்ய நினைக்கும் டி.ஆர்.ஓவுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் ( தகவல் உதவி )

Tuesday, June 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 5 10.06.2008

ரித்தி உனக்கு ஸ்கூல் ஆரம்பித்துவிட்டது. உன் வாழ்க்கையின் முக்கியமான பகுதியில் இருக்கிறாய். கற்றல் தான் வாழ்வின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துள்ளது. கற்றல்... ஆராய்தல்... தெளிதல்.. அதற்கேற்ப வாழ்க்கையினை அமைத்தல். நன்கு படிப்பாய் என்று தெரியும். கீழே சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன். புரிந்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

பள்ளி பஸ் கட்டணம் பாதி அளவுக்கு உயர்த்தி இருக்கின்றார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் முடிவு. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள். கல்விக் கூடங்களை நடத்துவது டிரஸ்ட். பொதுச் சேவை நிறுவனம் என்பார்கள். லாபம் இன்றி நடத்துவதாக டீடில் எழுதி இருப்பார்கள். ஆனால் கட்டிட நிதிக்கு என்று தனி வசூல், டியூசன் பீஸ் என்று தனி வசூல். புத்தகத்துக்கு என்று தனி வசூல். பதிப்பாளர்கள் 20 லிருந்து 40 பெர்சண்ட் வரை கமிஷன் தருகிறார்கள் பள்ளிகளுக்கு. பொதுச் சேவை நிறுவனங்களுக்கு எதுக்குப் லாபம் என்று தெரியவில்லை. அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு அடிமாட்டுச் சம்பளம் தருவார்கள். டிரஸ்ட்டில் வரும் வருமானத்துக்கு 80ஜி என்ற சட்ட விதிப்படி வருமான வரி விலக்கும் உண்டு. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேட்பார் இல்லை. அரசியல்வாதிகள் இது உங்களுக்கான அரசு என்பார்கள். ஆனால் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. இப்படி எல்லாம் நாடகம் போடுபவர்களை உனக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடிதமெழுதுகிறேன்.

ரித்தி உனக்குப் புரியுமோ இல்லையோ தெரியாது. ஆனால் அனைவரும் தவறு செய்யவேண்டுமென நோக்கோடுதான் செயல்படுகிறார்கள். யாரும் உண்மையாக இல்லை. பணம் ஒன்று தான் குறிக்கோள். அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நமது அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதற்கு உனக்கு விளக்கம் சொல்கிறேன். கேள்..

என் வண்டிக்கு பெட்ரோல் போடுகிறேன் அல்லவா. அதுக்கு வரி உண்டு. இந்த வரியும் மற்ற பொருட்களுக்கு போடப்படும் வரியும் வித்தியாசமானவை. எப்படி என்று கேட்கின்றாயா ? சொல்கிறேன் கேள்.

செருப்பு வாங்கினோம் என்றால், செருப்பின் விலையில் 10% வரி என்று போடுவார்கள். செருப்பு ரூபாய் 100 என்று வைத்துக் கொள்வோம்.வரி 10 ரூபாய். மொத்தம் 110 ரூபாய் ஆகும்.

ஆனால் பெட்ரோலுக்கு அப்படி இல்லை. ஒரு ரூபாயில் 52 பைசா மத்திய அரசுக்கும் 12 பைசா மாநில அரசுக்கும் வரியாக செலுத்த வேண்டும். ஆக 64 பைசா வரி போக பெட்ரோலின் உண்மையான விலை 26 பைசாதான். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் வரி மட்டும் 64 ரூபாய். பெட்ரோலின் உண்மையான விலை 26 ரூபாய்தான். புரிகிறதா உனக்கு?மக்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் வரி வசூலித்து அதுக்கு நிதி, இதுக்கு நிதி, அந்த வளர்ச்சி திட்டம், இந்த வளர்ச்சித் திட்டம், ரோடு போடுகிறோம் அது இதுவென்று சொல்லிச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். எல்லாவற்றிலும் இவர்களுக்கு பணம் வரும்.

குருடு ஆயிலை சுத்திகரித்த பின்பு பெட்ரோலுக்கான ஒரு லிட்டர் விலை இவ்வளவு அதற்கு இவ்வளவு வரி என்று போட்டால் என்ன ? போட மாட்டார்கள். ஏனென்றால் இந்த எரிபொருள் அத்தியாவசிய தேவை. மக்களின் அன்றாடத் தேவையில் கை வைத்தால் வேறு வழியின்றி மக்கள் வாங்கித்தான் ஆவார்கள் என்ற எண்ணம் தான்க் ஆரம். அதிக வரி விதித்தால்தான் அரசியல்வாதிகள்க சொகுசு வாழ்க்கை நடத்த முடியும்.

அடுத்த ஒரு அக்கிரமம் பற்றிச் சொல்கிறேன் கேள்.

தா.பாண்டியன் என்ற கட்சித்தலைவரின் பேட்டியினைக் காண நேர்ந்தது. சில அதிர்ச்சி தரும் விஷயங்களை சொன்னார்.

இந்தியாவுக்கு தேவையான குரூடு ஆயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம் அல்லவா. ஆனால் இந்தியாவில் இருந்து குருடூ ஆயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார். இந்தியாவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அரசாங்கம் எண்ணை துரப்பண பணிகளை கொடுத்து இருக்கிறதாம். அவர்கள் உலக பெரும் பணக்கார எண்ணெய் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்களாம். வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்தால் வரக்கூடிய லாபத்தை பணமாக மட்டும்தான் எடுத்துச் செல்லலாம் என்று முன்பு ஒரு சட்டம் இருந்ததாம். அதை வெளியில் சொல்லாமல் மாற்றி விட்டதாகவும், இப்போது வரக்கூடிய லாபத்தை பொருளாகவும் எடுத்துச் செல்லலாமென்றும் மாற்றி வைத்திருப்பதாகவும், அதனால் அந்த எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் இருந்து குருடூ ஆயிலை அவர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். இந்தியாவுக்குத் தேவையான குரூடு ஆயிலை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கும் அவலத்தைப் பார் ரித்தி.

இதை விட இன்னொரு கூத்தினை சொல்கிறேன் கேள். சமீபத்தில் ஒரு டாலருக்கு சமமான இந்திய ரூபாய் 38 ஆக இருந்தது இப்போது 43 ரூபாய் ஆகப்போகிறது. காரணம் என்னவென்றால் ரிசர்வ் பேங்க எத்தனையோ கோடி டாலர்களை மிகச் சமீபத்தில் வாங்கியதாகவும் அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதாகவும் பாண்டியன் அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் ரூபாயின் மதிப்புக் குறைந்து விட்டதாகவும் சொன்னார். நமது இந்திய நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்புக் குறைந்தால் தான் லாபம் வருமாம். என்ன ஒரு நாட்டுப் பற்று... பார்....

இப்படி அரசியல்வாதிகளும், பிசினஸ் செய்பவர்களும் சொல்லி வைத்து இந்தியாவைக் கூட்டுக் கொள்ளை இடுகின்றார்கள். ஏழை மக்களை நினைத்துப் பார் ரித்தி. ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் அவர்களை நீ முன்னேற்ற வேண்டும். நீ பெரியவனாக ஆகி, நாட்டை ஆளும் பொறுப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தையும் , தொழில் சட்டத்தையும் அடியோடு மாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்த சிலவற்றை வரும் கடிதங்களில் எழுதுகிறேன். அது உனக்கும் பயன்படுமென்றால் உபயோகப்படுத்திக் கொள்.

இப்படிக்கு
உன் அன்பு அப்பா...

Monday, June 9, 2008

மேகமும் மறைக்க முடியுமா சூரியனை ?

சாரு நிவேதிதா மூலம் அறிமுகமானவர் ராஜநாயஹம். அவரைப் பற்றி லியர் மன்னன் என்ற கட்டுரையினை www.charuonline.com ல் எழுதினார் சாரு. எனது MARK ADMAN என்ற அட்வர்டைசிங் கம்பெனியின் வேலைக்காக ராஜ நாயஹத்தை அனுகலாம் என்று கருதி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரின் பேச்சு என்னை ஏதோ ஒரு வகையினில் ஈர்த்தது.

சந்திக்க வேண்டுமென்ற ஆவல் மனதினுள். நேற்று அதற்கான நேரம் கிடைக்க, எனது நண்பருடைய மாமனாரின் காரை எடுத்துக் கொண்டு திருப்பூருக்குப் பயணம் செய்தேன். கையில் ஹெச்பியின் டச் ஸ்கீரின் லேப்டாப். டாட்டா இண்டிகாமின் பிளக் அண்ட் சர்ப் இணைய கனெக்‌ஷன். பென் டிரைவுடன் அவரை சந்தித்தேன். ஆனால் என் செல்போன் நோக்கியா 1100. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

திருப்பூர் சென்று சேரும் வரையில் ஐந்து தடவை போன் செய்து விட்டார். அவரது பையன் கீர்த்தி எதிரில் வந்து வழிகாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ராஜ நாயஹம் காரில் இருந்து முதன் முதலாய் பார்த்தேன். அசல் ஹீரோ தான். வயசு என்னவென்றே கண்டு பிடிக்க முடியவில்லை. அது எனக்கு தேவையுமில்லை. அவரின் டிரஸ்ஸிங்க் சென்ஸ் – என்னை ஒரு நிமிடம் அவரின் மேல் பொறாமை கொள்ளச் செய்து விட்டது.

சரளமான பேச்சு. புதிய விஷயங்களை கண்டால் ஆச்சரியப்படுவது. குடும்ப விஷயம் மற்றும் இன்ன பிற பேசினோம். நான் எதற்கு அவரைப் பார்க்கச் சென்றேனோ அதை மறந்து விட்டேன். பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சாப்பாடு தயார் சாப்பிடலாம் என்றார்கள் ராஜ நாயஹத்தின் துணைவியார்.

அதற்கு முன்பு லேப்டாப்பை ஆன் செய்து அவரையும் என்னையும் சேர்த்து படம் எடுத்துக் கொண்டேன். புகைப்படம் ஒன்றினையும் எடுத்துக் கொண்டேன்.
(நானும் தமிழன் தான் என்பது உங்களுக்கு நினைவுக்கு வருவது எனக்கு தெரிகிறது. என்ன செய்ய ? பழக்க தோஷம் விடுமாட்டேன் என்கிறது). லேப்டாப்பை பார்த்து அவருக்கு ஒரே ஆச்சரியம் தான். சின்னக் குழந்தை போல ஆச்சரியம் அடைந்தார்

தமிழில் பிளாக் இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார். யாகூவில் மட்டும் பிளாக் இருப்பதாகவும் சொன்னார். நான் தமிழில் பிளாக் தயார் செய்து தருகிறேன் என்றேன். அப்படியா என்று ஆச்சரியப்பட்டார். இதென்ன பிரமாதம் என்று சொல்லியபடி சரியாக இருபது நிமிடத்தில் அவருக்கான பிளாக்கை உருவாக்கினேன். www.rprajanayahem.blogspot.com மனிதருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்படி ஒரு குதூகலம் முகத்தில். ஏதேதோ கேள்விகள் கேட்டார். சொன்னேன். பிறகு சாப்பாடு.

மட்டன் வறுவல் – எங்க வீட்டு அம்மனி செய்வதைப் போல வெகு டேஸ்ட். சாம்பார் ( அவரைக்காய் ), ரசம் என்ன ஒரு சுவை.. வாழை இலையில் சூடான சாதத்துடன் அப்படி ஒரு வித்தியாசமான கலவையுடன் நிறைவான சாப்பாடு. நான் அதிகம் சாப்பிடமாட்டேன் என்பதால் அளவோடு நிறுத்திக் கொண்டேன்.

நானோ பிசினஸ் பேசுபவன். என் நேரமும் அதே சிந்தனையாக இருப்பவன். அவரோ இலக்கியவாதி. அவரின் மூச்சே இலக்கியமாகத்தான் இருக்கும். மிக நன்றாக பாட்டுப் பாடுவார் என்று சொன்னார். தினமலரில் அவரின் பேட்டி பார்த்தேன். கி.ராஜநாரயணன், அசோகமித்திரன், கோணங்கி, சாரு நிவேதிதா என்று பலராலும் பாராட்டப்பட்டவர். வெளி நாட்டு இலக்கியத்தில் அவரின் அறிவுத்திறன் உச்சம். நானோ அவரின் உலகத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதவன். இருப்பினும் எனக்கேற்றவாறு பேசினார் அவர்.

இப்படி எல்லாம் நல்ல மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள் என்று அவரைச் சந்தித்த பின்புதான் அறிந்து கொண்டேன்.

அவரைக் காணமல் போக வைக்க பிரமப் பிரயத்தனங்கள் நடக்கின்றன என்று அவரின் பேச்சு மூலம் தெரிந்து கொண்டேன். இலக்கிய உலகில் மிக முக்கியமான் இடத்தில் இருக்கும் அவர் சரியான ஆதரவு இன்றி வாடுபவர். இன்றைய உலகில் இணையம் இன்றி வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. அதன் பரிச்சயம் கொஞ்சம் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் இலக்கியவாதி அவர்.

பூப்போல பாதுகாக்கணும் என்று நினைத்திருக்கிறேன். அவரின் எழுத்துக்களை உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களிடம் சென்று சேர்க்க வேண்டுமென்பது என் ஆவல். முயற்சிகள் ஆரம்பித்து விட்டன. விரைவில் புதுப் பொலிவுடன் RPராஜநாயஹத்தின் எழுத்துக்கள் இணைய உலகில் பைனரி எண்களாய் டிஜிட்டல் வடிவத்தில் மிதந்து கொண்டிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான தடம் மிக அழுத்தமாகப் பதிக்கப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

Thursday, June 5, 2008

ஏமாளி மக்களா நாம் ?

பணவீக்கம் என்பது என்ன ?

கடந்த வருடம் இதே தேதியில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இந்த வருடம் 110 ரூபாய் விற்றால், 10% பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். வெளி நாட்டு இணையதள செய்தி ஒன்று இந்தியாவின் பணவீக்க விகிதம் 10 சதவீதத்தை தொட்டு விட்டதாக சொல்கிறது. ஆனால அரசு 7.8% என்று சொல்கிறது. எது உண்மை ? செய்தி சொல்லுவதா ? இல்லை அரசு சொல்லுவதா ? தெரியவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலை இப்போது அதிகப்பட்சமாக உயர்ந்து இருக்கிறது. இனிமேலும் பணவீக்க விகிதம் உயரத்தான் போகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. காங்கிரஸ் அரசு ஓட்டு பெறுவதற்காக விலையேற்றத்தை தள்ளி வைத்து விட்டு, கர்நாடகத்தில் தோற்றபின் அதிரடியாக விலையேற்றம் செய்கிறது. யாருக்கு இப்போ நஷ்டம்? ஒரு சாதாரண ஓரளவு படித்த குடும்பப் பெண் நிதி நிலைமைக்கு ஏற்ப செலவை சரி செய்வாள். அது கூட தெரியாமல் சரியான நேரத்தில் விலையேற்றாம் செய்ய மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு. பலன்... கடுமையான விலையேற்றம். அடுத்த ஆட்சி பிஜேபி தான் என்று காங்கிரஸ்காரர்கள் கட்டியம் செய்து அதன் படி நடக்கின்றார்கள்.. வரட்டும் .. பிஜேபி.... அவர்களாவது ஏதாவது செய்கிறார்களா என்று பார்க்கலாம்.

அரசின் அடுத்த கேடு கெட்டதனம் ஒன்று இருக்கிறது. அதைச் சொன்னால் அதிர்ச்சி தான் வரும். இந்தச் செய்தியினை நான் ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்து அதிர்ந்தே போனேன். அரசின் இந்த கேடு கெட்ட தனத்துக்கு அளவே இல்லையா... எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா ? அதுவும் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் தான் அடிக்கின்றார்கள். என்ன அது என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ? சொல்கிறேன்... கேளுங்கள்....

ஒரு லட்ச ரூபாயை பேங்கில் போட்டால் வட்டி வருஷத்துக்கு 8500 ரூபாய் தருகிறது வங்கி. இந்த வட்டிக்கு 1% வரி போடுகிறது அரசு. சரி அதனால் என்ன என்கின்றீர்களா. இதே பணத்தை பங்குச் சந்தையில் போட்டால் வரும் வருமானத்துக்கு வட்டி இல்லை. இது எப்படி இருக்கிறது பாருங்கள்.. பண முதலாளிகளுக்கு வரும் வருமானத்தில் வட்டி இல்லை. மிடில்கிளாஸ் மக்களின் பாடுபட்டு சேர்த்த பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு. எரிச்சலா இல்லை உங்களுக்கு....

மிடில்கிளாஸ் மக்கள் யாராவது பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வார்களா.. மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பணம் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு அடாவடியாக அரசு மிடில் கிளாஸ் மக்களின் தலையினை உருட்டி சம்பாதிக்கிறது. கோடிகளில் புழங்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலாளிகள் வரிப்பணம் கட்ட வேண்டாமாம். வாயையும் வயிற்றினையும் கட்டி காசு சேர்த்து வைக்கும் மிடில்கிளாஸ்ஸின் பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு...

எதற்கு என்று கேட்கின்றீர்களா ? அரசியல்வாதிகளின் சம்பளத்தை உயர்த்தவும், சட்டசபையினிலும், நாடாளுமன்றத்திலும் கூச்சலும் குழப்பமும் செய்யவும் தான். ஆனால் படிக்காசு எல்லாம் பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்ந்து விடும்.

கட்டிடம் கட்டும் சித்தாளின் கூலி, வயலில் வேலை பார்க்கும் பெண்ணின் கூலியினை உயர்த்த யாராவது இதுவரை குரல் கொடுத்து இருப்பார்களா ? சொல்லுங்கள்.... ப

பணவீக்கம் அதிகமானால் அதிகச் செலவு செய்ய வேண்டுமே ? என்ன செய்வது... சம்பளத்தில் பண வீக்கத்துக்கு ஏத்தவாறு அதிகம் கொடுப்பார்களா ? கேளுங்கள் ? யாராவது வாயைத் திறக்கனுமே ? அரசியல் வாதிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..

பணவீக்கம் உயர்ந்தால் பேங்கில் போடப்படும் பணத்துக்கும் 7.8% பணவீக்கம் விகிதப்படி பணம் கொடுத்தால் அல்லவா பொதுமக்கள் சமாளிக்க முடியும். இலலையெனில் பணவீக்க விகிதத்துக்கு ஏற்றபடி சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் அல்லவா ? யார் தான் செய்வார்கள் ?

சொல்லனும்னு தோணுச்சு சொல்லிவிட்டேன்...

Friday, May 30, 2008

கள்ளும் நானும்.....

இந்தக் கள் இருக்கே.... அதன் சுவையும் போதையும் ஒரு அலாதியான விஷயம்.

சின்ன வயதில் எங்க வீட்டு வேலைக்காரர் அம்மாவிடம் என்னை தோப்புக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு கிடைத்த பின்பு, மாட்டு வண்டியில் பயணம் செய்தோம். தோப்பில் 20 தென்னை மரங்களும், 30 பலா மரங்களும் இடையிடையே கொய்யா மரங்களும் இருக்கும். வடக்குப் பக்கமாக ஒரு அகன்ற கேணி ஒன்றும் உண்டு. அதில் மாடுகளைக் கட்டி ஏற்றம் இறைக்க ஆரம்பித்தார் ஜெயராஜ். பெரிய அகன்ற பாத்திரம் போல ஒரு தொட்டியினை கிணற்றுக்குள் இறக்கி தண்ணீரை நிறைத்து அதை மேலே இழுத்து அடிப்புறம் பிளாஸ்டிக் டியூப்பினை கயிற்றால் இழுத்தால் தண்ணீர் வாய்க்காலில் கொட்டி அப்படியே சென்று நிலக்கடலை பயிறுக்குள் பாயும். பார்க்க பார்க்க பரவசமாய் இருக்கும். வாய்க்காலின் மேல் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணியில் கையை வைத்தால் சிலீரென்று இருக்கும். அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும்.

அப்போது தென்னையில் கள் இறக்க ஆள் ஒருத்தர் வந்தார். ஜெயராஜ் ஓடிப்போய் ஒரு மரத்துக் கள்ளினை வாங்கி வந்து,
” இதைக் குடிடா “ என்று சொல்ல நான் மறுத்தேன்.
”அம்மா அடிக்கும் “
” உடம்புக்கு நல்லதுடா தங்கம். கொஞ்சமா குடி “
“ வேணாம் ஜெயராசு... ”
“ அம்மாட்டே நான் சொல்லுறேன். நீ குடிச்சுப்பாரு “
தயக்கத்துடன் கள்ளை வாங்கி வாயருகில் கொண்டு செல்ல புளிச்ச வாடை அடிக்க, முகத்தை சுளித்தேன்.
“ ஒன்னும் பண்ணாது. குடி ... “ என்று மீண்டும் சொல்ல

கண்ணை மூடிக்கொண்டு அரை லிட்டர் அளவுக்கு குடித்து வைத்தேன். கள்ளைக் குடித்ததும் முன்பே வாங்கி வைத்திருந்த இட்லியும், காரச் சட்டினி, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து பிரித்து வைத்தார். காரச் சட்டினியுடன் இட்லி தேவாமிர்தமாக இருக்க, சுவைத்து ரசித்து சாப்பிட்டேன்.

பச்சை வாழை இலையில் சிவப்பாய் காரச்சட்டினி, வெள்ளை கலரில் இட்லி மஞ்சள் கலரில் சாம்பார் என்று அந்தக் கலர் காம்பினேஷனே பார்க்க நவீன ஓவியம் போல இருக்கும்.

பலா மரத்தடியில் வைக்கோலை போட்டு துண்டு விரித்து வைத்து இருந்தார். அதில் சென்று படுத்தேன். ஆரம்பித்தது சோதனை...

போதை.. தலை சுற்ற என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை. பக்கத்து தோட்டத்தில் இருந்த தக்காளிச் செடியில் பழுத்து இருந்த தக்காளிப் பழங்களை பறித்தும், வெண்டை, கத்தரிக்காய்களை பிடிங்கி எறிந்தும் ரகளை பண்ணியிருக்கிறேன். ஏதோ செய்து ஜெயராசு என்னை படுக்க வைத்தார் போலும். தூங்கிவிட்டேன்.

மாலையில் அம்மாவிடம் பக்கத்து தோட்டக்காரர் விஷயத்தை போட்டு உடைக்க, அம்மாவின் தம்பியான மாமாவின் பிரம்படி ஒன்று கிடைத்தது. தாத்தாதான் தடுத்தார் மேலும் பிரம்படி கிடைக்காமல். ஜெயராசுக்கு திட்டு விழுந்தது.

ஆனால் அந்தக் கள்ளு சுவையாகத்தான் இருந்தது.....

Monday, May 26, 2008

ஹாக்கர்ஸால் தாக்கப்படும் செல்போன்கள்

எஸ் எம் எஸ் மூலம் ஹாக்கர்ஸ் செல்போன் பயன்படுத்துபவர்களின் தகவலை திருடி விடுகிறார்கள். இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் என்று வரும் எஸ் எம் எஸ்க்களை உடனே அழித்து விடவும். இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால் செல்போனின் தகவல்கள் அனைத்தையும் அந்த மெசேஜ் அனுப்பியவரை சென்று சேரும். இன்கமிங், அவுட்கோயிங் அனைத்தையும் தெரிந்து கொள்வார்கள். இல்லையெனில் ஐடிடெண்டியினை அழித்து விடுவார்கள்.

உங்கள் புருஷனுக்கு ஆக்ஸிடென்ட், இந்த ஆஸ்பிட்டலில் சேர்த்து இருக்கிறோம். ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் எடுத்துக் கொண்டு இந்த முகவரிக்கு உடனே வரவும் என்ற மெசேஜ் கிடைத்து அரக்க பரக்கச் சென்று அந்தப் பெண்ணை வழிமறித்து பணத்தை சுவாகா செய்த நிகழ்ச்சி எல்லாம் நடந்திருக்கிறது.

ஜாக்கிரதை...

Saturday, May 24, 2008

விமர்சகர்களுக்கு கேள்விகள்

சினிமா விமர்சனம் தமிழ் உலகில் பரபரப்பானது. சினிமாவினைப் பற்றிய விமர்சனம் போதை
தரும் என்பதால் அதை விட்டு விடுகிறேன். இலக்கிய உலகத்துக்கு வந்தால் அப்பப்பா
எத்தனை எழுத்துக்கள். எத்தனை விமர்சனங்கள்.

எண்ணி அறிய இயலா பிளாக்குகள். அத்தனையிலும் விமர்சனம். விமர்சனம். அந்த
எழுத்தாளர் அதில் இப்படி எழுதியிருக்கிறார். ஆனால் வாழ்வில் வேறு எப்படியோ இருக்கிறார்.
இன்னொருவரின் கதையினை திருடி விட்டார். இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது
என்று இன்னும் வகைப்படுத்த முடியாத அளவுக்கு விமர்சனங்கள்.

அத்தனையும் படிக்க உட்கார்ந்தால் பயித்தியக்காரனும் தெளிந்து விடுவான்.
இங்கு பயித்தியக்காரன் ஒருவன் தான் சுயபுத்தியோடு இருக்கிறான்.

காப்பி அடித்து எழுதுகிறார் என்று விமர்சனம் எழுதுகிறார்கள்.
ஏனய்யா விமர்சனம் எழுதும் வித்தகா நீயே உன் அப்பாவோ இல்லை அம்மாவின் காப்பி தானய்யா ? இந்த லட்சனத்தில் விமர்சனம் எழுதுகிறாய்.

இன்னும் ஒரு அபத்தம் நடக்கிறது பிளாக்குகளில். ஒருவரின் கதை புரியவில்லை என்றால் உடனே அய்யோ அம்மா என்று அலறி புடைத்து சமூக காவலாளி வேஷம் போட்டு எழுத்தா அது புண்ணாக்கு அது இதுவென்று எழுதுவது...

விமர்சகா, உனக்கு விளங்க வில்லை என்றால் மேலேயும் கீழேயும் பொத்திக் கொண்டு போகனும். அதற்கு எழுதியவனை விமர்சிப்பது உன்னுடைய அறியாமையை காட்டும். அதாவது நீ புத்தி இல்லாதவன் என்று நீயே உன்னை விமர்சிப்பது தான் அது.

படி. ரசி... பிடிக்கவில்லை எனில் ஒதுக்கு. அதை விடுத்து விமர்சனம் என்ற பெயரில் அலறுவது குறை சொல்லுவது, கூட்டம் போட்டு திட்டுவது, ஏன் உனக்கு இந்த வேலை ?

மற்றவனை பற்றி விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார். பின்னர் எழுத துவங்கு.

Thursday, May 22, 2008

அன்பு மகனுக்கு கடிதம் - 4 (22.5.2008)

ரித்தி, உன் அம்மா வரும் ஜூன் மாதம் உனக்குப் பிறந்த நாள் என்று சொன்னாள்.
பிறந்த நாள் பற்றி உனக்கு சிலவற்றைச் எழுதலாமென்று நினைக்கிறேன்.
ஒரு மனிதனின் பிறப்பு மற்ற மனிதர்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
காமராஜர் பற்றி வரும் நாட்களில் நீ படிப்பாய். காந்தி, நேரு பற்றியும் படிப்பாய்.
இவர்களின் பிறந்த நாள் எப்படி மற்றவர்களால் கொண்டாடப்படுகிறதோ
அதைப் போல உனது பிறந்த நாளும் மற்றவர்களால் கொண்டாடப்பட வேண்டும்.

உனது பிறப்பு உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உபயோகமாய் இருக்க வேண்டும்.

பிறந்த நாளின் போது உன்னிடம் கேட்க நினைத்தாலும் உனக்கு புரிந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் கடிதம் எழுதுகிறேன். எப்போவாவது நேரம் இருந்தால் உன் அப்பாவின் கடிதங்களை படித்து பார்.

நீ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தூய ஆடை அணிந்து, தினமும் பாலீஷ் செய்யப்பட்ட ஷூ அணிந்து உன் அம்மா அன்பாக பார்த்து பார்த்து சமைத்த உணவினை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறாய்.இங்கிலீஷில் பாட்டு சொல்கிறாய். சாப்பிடும் போது கைத்துண்டை மடியில் வைத்துக் கொள்கிறாய். நாசூக்காக பேசுகிறாய். கண்களால் சிரிக்கின்றாய்.

உனது கராத்தே மாஸ்டர் சொல்லுகின்றார். கராத்தே பழகும் போது ஸ்டெப் போட்டு விட்டு அவர் முகத்தை பார்ப்பாயாம். அவர் புன்னகைப்பாராம். நீயும் சிரித்து விட்டு அடுத்த ஸ்டெப் போட்டுக் காட்டுவாயாம். சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவார். அன்பு மேலிட உன்னை தன்னுடன் அணைத்துக் கொள்வார்.

ஜூனியர் மாஸ்டர் நீ எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதாகவும், மனதைக் கொள்ளை அடித்து விடுவதாகவும் சொன்னார். உன்னால் முடியவில்லை என்றால் போதும் என்று சொல்லிவிட்டு விலகி வந்து விடுவாயாம்.

ரித்தி, ஆம் நீ செய்யும் மேனரிஷங்கள் அழகானதாய் இருந்தால் பார்ப்போரும், உன்னுடன் பழகுவோரும் உன்னை நேசிப்பார்கள்.

எங்கோ வந்து விட்டேன் இல்லை. விஷயத்துக்கு வருகிறேன்.

உனக்கு பள்ளிக் கட்டணமாக பள்ளி ஆரம்பிக்கும் போது ஆயிரக்கணக்கிலும், மாதம் தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் கட்டி வருகிறேன். என்னால் முடியும். ஆனால் உன்னை ஒத்த சிறுவர்கள் பலரும் அழுக்கு அறையிலும், சுகாதாரமற்ற உடைகளும் அணிந்து புளியங்கொட்டை அரிசி சாப்பாட்டினையும், பாதி அளவே இருக்கும் முட்டையினையும் சாப்பிடவும் பள்ளிக்கு வருகிறார்களே தெரியுமா உனக்கு.

கல்வி உனக்கு ஒரு மாதிரியும், மற்றவர்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கிறது ரித்தி. அதனால் வாழ்க்கை தொலைப்போர் எண்ணற்றவர்.

நாளை நீ இந்த நாட்டை ஆளும் வாய்ப்பை பெற்றால் வணிக நோக்கத்தில் நடத்தப்பட்டு வரும் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒழித்து விடு. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்தியாவின் சொத்து என்று சட்டம் இயற்று. இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்று சட்டமியற்று. கல்விக்கு கட்டணமே இல்லை என்று செய்.

செய்வாயா ரித்தி..


உன் அன்பு அப்பா...

Sunday, May 18, 2008

சினிமா சில கருத்துக்கள்

சினிமா சாக்கடை என்று பொதுவாக சொல்கிறோம். காரணம் கேட்டால் பெண்களைத் தான் கை காட்டுவோம். ஏனெனில் பெண்களை வீட்டுக்குள் வைத்து பொத்தி பொத்தி அவளை சொத்தாக்கி விட்ட சமூகத்தில் வளர்ந்து வந்ததால் அப்படித்தான் சொல்லுவோம்.

பெண்களை வீட்டுக்குள் வைத்து அவளை ஒரு சொத்தாக கருதி, முக்கியத்துவம் கொடுக்கும் நமது சமூகம், அந்தப் பெண் அவுத்துப் போட்டு ஆட வரும் போது ஏற்படும் மன அதிர்ச்சியில் கொழுப்பு பிடித்தவள், விபச்சாரி என்று எளிதாக சொல்கிறது.

விபச்சாரம் ! ஆண் இன்றி விபச்சாரம் இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம். பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் என்று. அதை விட்டு விடலாம். சில பெண்கள் இருக்கலாம். அவர்களை நிம்போமேனியாவாக கருதி விட்டு விடலாம்.

ஆணுக்கு தேவை பெண். கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்ட ஆணின் அந்தரங்க ஆசையினை நிறைவேற்ற வேண்டிய தருணத்தில் அங்கு பெண் தேவைப் படுகிறாள். அதற்கு அங்கு ஒரு பெண் விபச்சாரி ஆக்கப்படுகிறாள்.

சினிமாவில் பெண்கள் அவுத்து போட்டு ஆடுவதால் தான் தமிழ் நாட்டில் இந்த அளவுக்கு பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. இல்லை எனில் தினமும் கற்பழிப்பு தான் நடக்கும்.

ஆணின் வக்கிரங்களுக்கு வடிகாலாய் பெண்ணின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியுமா ?

சினிமா கதாநாயகிகள் ஆண்களின் காமம் எனும் எரியும் நெருப்பில் எரிக்கப்படும் விறகுகள் ஆவார்கள். அவர்களின் சமூக சேவை எவராலும் செய்ய இயலாத மாபெரும் தியாகம் என்பேன். காரணமும் உண்டு. சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் ஆட்ரி ஹெர்பனைக் காதலித்த ஒருவரின் அனுபவமும் அதனால் அவரின் வாழ்க்கையில் நேர்ந்தவைகளையும் சுவையாக சொல்லி இருந்தார். ஒவ்வொரு மனிதனின் ரகசிய காதலியாக இருப்பவர்கள் நடிகைகள். அவர்கள் திரையில் வந்து சிரிக்கும் போதெல்லாம் அவளைக் காதலிக்கும் ஆணின் மனசுக்குள் ஏற்படும் உணர்வினை எழுத்தால் எழுதிவிட முடியாது. சிலரின் காம இச்சைகளை தீர்த்து வைப்பதும் நடிகைகளே.. இப்படி ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாய் இருக்கும் நடிகைகளை விபச்சாரி என்று சொல்லுவது எந்த வகையில் நியாயம் என்பது தான் எனக்கு புரியவில்லை.

பணம் கிடைக்கிறது. அதனால் தான் நடிக்கின்றார்கள் என்று விவாதம் செய்வது இங்கு பொருத்தமற்றது. ஏன் ஆண்கள் எவரும் விபச்சாரத்தை விட மிக மோசமான ஏமாற்று வித்தை, செப்படி வித்தைகள் ஏதும் செய்து பணம் சம்பாதிக்கவில்லையா ? ஏன் அரசியலை விட கொடுமையான தொழிலையா நடிகைகள் செய்து விட்டார்கள்.

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் புகழ், பெருமை அனைத்தும் பெண்களின் உடம்பின் மீது எழுப்பபடும் கோட்டை. இல்லை என்று எவராலும் மறுக்க முடியுமா ? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்.. தற்போதைய ஹீரோக்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சிம்பு என்று புகழ் பெற்று இருக்கும் நடிகர்கள், நடிகைகள் இன்றி படம் எடுப்பார்களா ? இல்லை அதில் தான் நடிப்பார்களா ? அப்படி எடுத்தால் எவனாவது சினிமாவுக்குத் தான் செல்வானா ?

விபச்சாரிகள் என்று சொல்லி நடிகைகளை அழைப்பதை விட்டு விட்டு அவர்களின் வாழ்க்கை எண்ணற்ற ஆண்களின் காம வடிகாலுக்காக அழிக்கப்படுகிறது என்ற உண்மையினை ஒரு கணமேனும் எண்ணிப் பார்த்தால் அது அவர்களுக்கு செய்யும் பெரிய உபகாரமாக இருக்கும்.

Wednesday, May 14, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 3 ( 14.05.2008)

ரித்தி, இன்று உனக்கு சில முக்கியமான விஷயங்களை சொல்ல இருக்கிறேன்.

முதலில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இதன் அர்த்தம் என்னவென்றால், யாரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ நீ தீங்கேதேனும் செய்தால் அது திரும்பவும் உனக்கு தீங்காய் வந்து முடியும் என்பது.

இதற்கு என்ன ஆதாரம் என்று நீ கேட்பாய் என்பது எனக்கு தெரியும். விஷயத்துக்கு வருகிறேன். திபெத் என்ற நாட்டினை பற்றி உனக்குச் சொல்ல வேண்டும். சீனா திபெத்தை ஆக்ரமித்து திபெத்தியர்களை அவர்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்த போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது சில நாட்களுக்கு முன்பு. கேட்பார் யாரும் இல்லை. கேட்டாலும் சீனா எவரையும் மதிப்பதும் இல்லை.

ஆனால் நடந்தது என்ன இப்போது ? இரு நாட்களுக்கு முன்பு சீனாவில் படு பயங்கரமான நில நடுக்கம் வந்து 10 ஆயிரம் சீனர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள். கடவுள் என்பவனின் தண்டனை இருக்கிறதே அது படு பயங்கரமாக இருக்கும். சீனாவினை எப்படி தண்டித்து இருக்கிறார் பார் மகனே.... தர்மம் சூட்சுமமானது என்பார்கள். இறைவனின் தர்மம்
இப்படி இருக்கிறது...

இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று சொல்லுவது.

புரிந்து விட்டதா கண்ணே...? ஆதலால் எவர் ஒருவருக்கும் நீ தீங்கு செய்ய நினைக்காதே...


இன்னும் ஒரு விஷயம் கண்ணே .. !

கடந்த ஞாயிறு அன்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் ( இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்)
தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு " IF THE HEALTH MINISTER CAN'T DO THIS, WHO CAN ? " அதன் சாரம்சத்தை தருகிறேன். ஒரு மில்லியன் என்று சொன்னால் பத்து லட்சம் என்று அர்த்தம். ஒரு பில்லியன் என்று சொன்னால் 100 லட்சம் என்று அர்த்தம்.

ஒரு மில்லியனுக்கும் மேலே புகையிலையினால் இந்தியாவில் மனிதர்கள் சாகின்றார்கள் என்றும், 15% பள்ளிக் குழந்தைகள் புகையிலையினை பயன்படுத்துகிறார்கள் என்று உலக ஆரோக்கிய நிறுவனத்தின் ஆராய்ச்சியில் சொல்லி இருப்பதாக எழுதியிருந்தார்.
மேலும் அந்த ஆராய்ச்சியில் 52% இளைஞர்கள் சினிமாக்களை பார்த்த பின் தான் புகை பிடிக்க ஆரம்பிப்பதாகவும் சொல்லியிருக்கிறார். புகையிலை தயாரிப்பு கம்பெனிகளால் உலக அளவில் மூன்று மில்லியன் மக்கள் இறப்பதாகவும் சொல்கிறார்.

தெற்காசிய நாடுகளில் தயாராகும் சாராயத்தில் 65% இந்தியாவில்தான் குடிக்கிறார்களாம். 15 வருடத்திற்கு முன்பு 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தயாரிக்கப்பட்ட சாராயம் இன்று 2.3 பில்லியன் லிட்டராக உயர்ந்து இருக்கிறதாம். சாரயம் குடிப்பவர்களின் ஆவரேஜ் வயது 28 லிருந்து 19 வயதாக வேறு குறைந்து இருக்கிறதாம். மேலும் இது 19லிருந்து 15 வயதாக இன்னும் 5 அல்லது 7 வருடத்திற்குள் குறைந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்களாம்.

இந்தியாவில் இறக்கும் மூன்றில் இரண்டு பங்கு மனிதர்கள் நான்கு வகையான கொலைகாரர்களான சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய உணவுகள் இவற்றினைப் பயன்படுத்துவதால் கொல்லப்படுவதாகவும் சொல்கிறார். சாரயத்தினால் தனி மனிதன் மட்டும் பாதிக்காமல் அவனது குடும்பமே பாதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்.

உலக் ஆரோக்கிய நிறுவனம் இந்தியா கேன்சர் என்ற புற்று நோய், டயாபடீஸ், கார்டியோ வஸ்குலர் எயில்மெண்ட்ஸ் மற்றும் மெண்டல் டிஸ்ஆர்டர் நோயின் பிடியில் விழ ஆரம்பித்துள்ளதாக முன்பே எச்சரித்து உள்ளதாகவும் சொல்கிறார். மேலும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் இன்ன பிற என்று எழுதியிருக்கின்றார்.

இதெல்லாம் உனக்கு ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் எதிர்காலத்தில் நீ எப்படி வருவாயோ எனக்குத் தெரியாது.

உனக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி கிடைத்தால் ( அதற்கு நீ தகுதியானவனாக இருக்க வேண்டும் ) உடனடியாக சாராயம், புகையிலை, போதை மருந்துகள் மற்றும் தீமை விளைவிக்கும் உணவுப் பொருட்களை தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூடி விடு,
கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தையும் இயற்றி விடு. ஏனெனில் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்களும் கொலை செய்பவர்களே..

என் அன்பு மகனே... உனக்கு வாய்ப்பு கிடைத்தால் செய்வாய் என நினைக்கிறேன். செய்வாய் தானே...

உன் அன்பு அப்பா.....

Monday, May 12, 2008

மகனுக்கு கடிதம் - 2 ( 12.05.2008)

ரித்தி, எப்போ பார்த்தாலும் விளையாட்டு, கார்ட்டூன் சானல் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு கோபமாக வருகிறது. சத்தம் போட்டால் முகத்தை அப்படி ஒரு பாவமாய் வைத்துக் கொண்டு விடுகிறாய். அதிலுமின்றி ஒரு சிரிப்பு வேறு. அப்படியே கோபத்தை குறைத்து விடுவாய் நீ.....







நேற்று கராத்தே மாஸ்டரின் உதவியாளர் உன்னை ரொம்பவும் தான் பாரட்டி விட்டார். ” பேசவே மாட்டேன் என்கிறான் “ ரித்தி என்றார்
மேலும்
“ எதற்கெடுத்தாலும் சிரிப்புதான், போதும் என்று சொல்லி பயிற்சியினை நிறுத்தினான்” என்றார்.
” நல்லா வளர்த்து இருக்கீங்க சார்” என்று எனக்கு வேறு பாராட்டு. இருந்தாலும் நீ இன்னும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆவல்.

நல்ல பெயர் என்றால் இப்படி இல்லை மகனே ! கீழே படி உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

பூவுலகில் ஒரு நேரத்துக்கு கூட உணவில்லாமல் இருக்கும் எத்தனையோ உன்னுடைய சகோதரர்கள் சகோதரிகள் செத்து கொண்டு இருக்கின்றார்கள். உன் சகோதரிகள் உடுத்த உடையின்றி இருக்க இடமின்றி அல்லாடுகின்றனர். மருத்துவ வசதிகள் இன்றி அனு தினமும் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உன் பாட்டிகளும், தாத்தாக்களும் ஆதரவின்றி நிராதரவாய் நிற்கின்றனர். அவர்களை காப்பாற்றுவாயா என் அன்பு மகனே...

உனக்கு பசி எடுத்தால் ஊட்டி விட உன் அம்மா ஓடோடி வருவாளே, அது போல நீயும் உன் சகோதர சகோதரிகளுக்கு உணவிட்டு வளர்ப்பாயா ? நல்ல துணிகளை வாங்கி கொடுத்தும் அவர்களுக்கு இருக்க இடமும், நல்ல உணவும், மருத்துவ வசதியும் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வாயா ?

உன் சகோதரி அம்முக்குட்டி அழுதால் துடித்துப் போவாயே, அது உனக்கு நினைவில் இருக்கிறதா ?

பாவமில்லையா பக்கத்து வீட்டு பாப்பாவும் தம்பியும்... அவனையும் அப்படி கவனித்துக் கொள்வாய் தானே.... நீ சாப்பிடும் போது எல்லோரும் சாப்பிட்டு இருப்பார்களா என்று ஒரு துளியாவது நினைத்துப் பார்ப்பாயா ? இப்போதைக்கு இது போதும் மகனே...