குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, July 22, 2012

அரசையும் மக்களையும் ஏமாற்றும் தனியார் மருத்துவமனைகள்


குழந்தைகள் படிக்கும் பள்ளியின் செக்யூரிட்டியின் கண்கள் கலங்கி இருந்தன. விசாரித்தேன். அவர் மனைவிக்கு கர்ப்பைப்பையில் கட்டி வந்து விட்டது என்று புலம்பினார். ஆபரேசன் செய்ய ஆகும் செலவை நினைத்து கலங்கிப் போயிருந்தார். அவரிடம் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் பற்றிச் சொல்லி உடனடியாக காப்பீட்டு அடையாள அட்டை பெறும்படியும், அதன் வழி முறைகள் பற்றியும் விளக்கம் கொடுத்து விட்டு வந்தேன். நான்கு நாட்கள் கழிந்து, வழியில் சந்தித்த செக்யூரிட்டி காப்பீட்டு அட்டை பெற்று விட்டதாக சொன்னார். அதன் பிறகு நடந்த விஷயம் தான் பதிவெழுதக் காரணம்.

சிகிச்சையின் போது காப்பீட்டு அட்டை இருக்கிறதா என்று கேட்ட தனியார் மருத்துவமனை, காப்பீட்டு அட்டையுடன் சென்றவுடன் திகிலைக் கிளப்பி இருக்கின்றார்கள். காப்பீட்டு திட்டத்தில் கர்ப்பை ஆபரேசன் செய்யலாமாம். கர்ப்பையில் இருக்கும் கட்டியோடு சேர்த்து ஆபரேசன் செய்ய முடியாதாம். அதாவது கர்ப்பப்பையை நீக்க வேண்டும். கட்டி இருப்பதால் அது வேறு நோயாம். என்ன ஒரு லொள்ளு பாருங்கள். படிக்காதவர்கள் என்றால் இந்த பகல் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள் தலையை மொட்டை அடிப்பதையே வழக்கமாய் வைத்திருக்கின்றார்கள்.

அரசு பணம் கொடுக்கிறது, அதை வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக் கூட தனியார் மருத்துவ மனைகளுக்கு கசக்கிறது. இலவசமாய் சிகிச்சை கொடுக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளோ உடனடி சிகிச்சைக்கு மறுக்கின்றன.

இது பற்றி சில நிரூபர்களிடம் பேசிய போது தனியார் மருத்துமனைகள் பல சிகிச்சை செய்யாமலே போலி குடும்ப அட்டைகளை வைத்துக் கொண்டு கட்டணங்களை வசூல் செய்து கொள்கின்றார்கள் என்றுச் சொன்னார்கள். 
அரசு மருத்துவமனைக்கு ஈசிசிஜி எடுக்கச் சென்றிருக்கிறார். 30 நாட்கள் கழித்து வரும்படி சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தாங்க முடியாத வலியுடன், நோயின் உச்சத்தில் இருப்பவருக்கு 30 நாட்கள் கழித்து ஈசிசி எடுக்க வாருங்கள் என்கிறார்கள். ( 30 நாட்களுக்குள் மேலுலகம் சென்று விடுவார் என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள் போல). இதே அரசியல்வாதிகளாகவோ அல்லது அரசு அலுவலர்களாகவோ இருந்தால் உடனடியாக ஈசிசிஜி எடுத்திருப்பார்கள். படிக்காதவர், பாமரன் என்றால் அரசு மருத்துமனைகள் கூட எப்படி நடந்து கொள்கின்றன என்று பாருங்கள். இது கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது. 

பணமில்லாதவன், ஏழை பாழைகளுக்கு சிகிச்சை பெற வழி வகைகள் செய்தால் கூட அதைக்கூட மறுக்கும் இந்த வகை மருத்துவமனைகளை என்னவென்றுச் சொல்வது? இவ்வளவிற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு உள், வெளி நோயாளிகளில் 20 சதவீதம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உத்திரவாதத்தில் தான் அரசு அனுமதி அளிக்கிறது.

இதையெல்லாம் சரி செய்ய முடியாதா? என்று கேட்டால் நிச்சயம் செய்ய முடியும். டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் இந்தவகை ஏமாற்றுக்களை முற்றிலுமாக நீக்கி, நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யலாம். 

அரசு சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இதை அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டுமென்பதற்காக எழுதி இருக்கிறேன். 

காப்பீட்டு திட்ட அட்டை பெறுவது எப்படி?

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இதற்கென தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதற்கென தரப்படும் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வருட வருமானச்  சான்றிதழ் பெற்று, மீண்டும் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு சென்றால் அங்கு புகைப்படம், ரேகை முதலியன எடுத்து அடையாள அட்டை எண் கொடுக்கின்றார்கள். வருட வருமானம் ரூபாய் 72,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். குடும்ப அட்டையை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 

http://www.cmchistn.com/index.html - இந்த முகவரியில் என்னென்ன நோய்க்கு சிகிச்சை கிடைக்கும் என்று விரிவாக இருக்கிறது. மேலும் விபரம் வேண்டுமெனில் அழைக்கவும் : Toll Free Number:  1800 425 3993 

- கோவை எம் தங்கவேல்

Tuesday, July 3, 2012

அம்மா என்றால் அசிங்கம்




மகளை அழைக்கச் சென்று வீடு திரும்பிய மனைவியின் முகம் பேயறைந்தந்தது போல இருந்தது. பள்ளியில் ஏதோ பிரச்சினை போலும் என்று நினைத்துக் கொண்டே விசாரித்தேன். பிரச்சினை பள்ளியிலோ அல்லது குழந்தைகளாலோ அல்ல.

மகளுடன் படிக்கும் தோழியை அழைக்க பாட்டி ஒருவரும் மனைவியுடன் செல்வாராம். நேற்றைக்கு கோவையில் லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆகவே குடை எடுத்துக் கொண்டுதான் பள்ளிக்குச் சென்றார்கள்.

பள்ளி விட்டதும் பாட்டி தன் பேத்தியையும், மனைவி என் மகளையும் அழைத்துக் கொண்டு கேட் தாண்டி நான்கு அடி தூரம் வந்திருப்பார்களாம். பாட்டியின் மகன் காரில் வந்திருக்கிறார். காரில் அவருடன் மனைவி மட்டும் இருந்தாராம். காரை நிறுத்தி தன் மகளை மட்டும் ஏற்றிக் கொண்டவர், பாட்டியை நடந்து வா என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டாராம். பாட்டிக்கு கண்ணில் கண்ணீர் துளிர்த்து நின்றதாம். 

“ஐந்து வயதில் கணவர் இறந்து போய் விட்டார். இவனை படித்து ஆளாக்குவதற்கு இருந்த சொத்தையெல்லாம் விற்று படாத பாடு பட்டு படிக்க வைத்து வேலையையும் வாங்கிக் கொடுத்தேன். என்னதான் சொல்லுங்க, கணவன் இருந்தால் என்னை இப்படி விட்டு விட்டுப் போவாரா? ஏதோ உசிர் இருக்கும் வரை அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்” என்று சொல்லி அழுதிருக்கின்றார்.

என் மனைவி ஏதோதோ சொல்லி சமாளித்து அவரை ஆறுதல் படுத்தி இருக்கிறார். 

ஆசை ஆசையாய் பெற்று வளர்த்து கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி படிக்க வைத்து, நேரத்திற்கு உணவு கொடுத்து, வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து வரும் பிள்ளைகளில் நூற்றுக்கு 99 சதவீதம் மேலே கண்ட மகனைப் போலத்தான் இருக்கின்றார்கள்.

ஏன்?

எல்லாவற்றுக்கும் ஒரு பெண் தான் காரணம்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

எனது குடும்பத்தில் என் சின்னம்மா பசங்க மூவர். என்னுடன் சேர்த்து நால்வர். நால்வரும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு ஒரே கொண்டாட்டம் தான். மட்டன், சிக்கன், முட்டை என்று கூத்தும் கும்மாளமுமாய்த் தான் இருக்கும். 

முதல் குழந்தையின் போது மனைவி வாமிட் எடுத்துக் கொண்டே இருப்பாள். அதை வாங்கிக் கொண்டு போய் வெளியில் கொட்டி தண்ணீர் கொடுத்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவது நடுத்தம்பி.

மூத்த தம்பி பிரவசத்தின் போது மருத்துவமனையிலேயே என் அம்மாவுக்குத் துணையாகவும், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்வது என்று இருப்பான். 

இப்படி இருந்தவர்கள் இன்றைக்கு வருடத்திற்கு ஒரு முறை என்னுடன் பேசுவது அரிது. காரணம் அவர்களின் திருமணம்.

சரியாகச் சொன்னால் பெண்கள். மூவரும் மூன்று திசைகள். மெட்டீரியல்ஸ் வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுப் போன நுகர்வுப் பெண்களாய் வாழ்க்கையில் ஆசைக்கும், நிதர்சனத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் அற்பங்களாய் இருக்கின்றார்கள்.

வாழ்க்கையின் நிதர்சனம் புரிவது ஐம்பது வயதுக்கும் மேல். அப்போது எவராலும் ஏதும் செய்ய இயலாது. இயலாமையால் வெந்து வெந்து வேதனைப்படத்தான் முடியும்.

பாட்டியின் மகனுக்கும் இதே சூழல் வரத்தான் செய்யும். அப்போது வருந்தி என்ன ஆகப் போகின்றது. சாகின்ற வரையில் தன் மகனைப் பற்றி நினைத்து நினைத்து வேதனையில் அல்லவா அப்பாட்டி இறந்து போகும்? 

கணவன் இல்லையென்றால் மனைவியும், மனைவி இல்லையென்றால் கணவனும் கேட்பாரற்றுப் போவார்கள் என்பதுதான் நிதர்சனம். எத்தனை அன்பாக பிள்ளைகள் இருந்தாலும் அது எதற்குமுதவாது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, June 27, 2012

கரிசல் மண் திரைப்படத்தின் மனதை மயக்கும் பாடல்


மிகச் சமீபத்தில் எனது ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், சினிமா பட இயக்குனருமான சுப. தமிழ்வாணன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் தற்போது “கரிசல் மண்” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பேராவூரணி பகுதி, கீரமங்கலம், பைங்கால், வேமங்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவிடம் வேலை செய்து கொண்டிருந்த திரு யானிதேஷ் என்ற புது இசையமைப்பாளர் தன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றும், நீங்கள் அவசியம் திரைப்படப் பாடல்களை கேட்டு கருத்துச் சொல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை முதன் முதலில் ஒரு திரைப்படப்பாடலைக் கேட்கின்ற போது மனது பட்டென்று பாடலோடு ஒட்ட வேண்டும் என்று நினைப்பேன். அத்தகைய பாடல்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வெளியிடப்படுகின்றன.

எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவத்தில் வேலை செய்து, பின்னர் கைதாகி மலேசியா சிறையில் இருந்து வெளிவந்த போது வானொலிப் பெட்டி ஒன்றினை வாங்கி வந்திருந்தார். அதை நான் வெகு பத்திரமாக பாதுகாத்து வந்தேன். பெண்கள் கல்லூரி ஒன்றில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி புரிந்து விட்டு, பத்து நாள் லீவில் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

1997ம் வருடம் என்று நினைக்கிறேன். படப்பைக் கற்கள் பதிந்த வீட்டு வாசலில் குளிர் காலமொன்றின் சூரியன் உதிக்காத பொழுதில் செய்தி கேட்பதற்காக வானொலியை ஆன் செய்த போது, இளையராஜாவின் காதலுக்கு மரியாதை படத்தின் “என்னைத் தாலாட்ட வருவாளா?” பாடலை முதன் முதலாய் கேட்க நேர்ந்தது. வானொலி என்பதால் அதே பாட்டை அடுத்த தடவை உடனடியாக கேட்க இயலாதே. கேட்ட பொழுதே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது பாடலும், ராகமும்.

அப்பாடலைக் கேட்பதற்காகவே வாக்மென் வாங்கி, கேசட்டில் அப்பாடலைப் பதிவு செய்து பலமுறை கேட்டிருக்கிறேன்.


அவரிடம் நிச்சயம் கேட்கிறேன் என்றுச் சொல்லி இருந்தேன். தற்போது வரக்கூடிய திரைப்படப்பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற்போல ஏதோ ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் பதிகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் ”ஏண்டி கள்ளச்சி” என்ற பாடல் என்னை அமைதியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதே போல நினைத்தாலே இனிக்கும் படத்தின் “அழகாய் பூக்குதே” என்ற பாடலு என்னைக் கவர்ந்த சமீபத்திய பாடல்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியான ஒரு பாடலை “கரிசல் மண்” படத்தில் கேட்க நேர்ந்தது. நீங்களும் கேட்டு விட்டு பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். அபுதாபியைச் சேர்ந்த பாடகி வந்தனா இப்பாடலைப் பாடி இருக்கிறார். இயக்குனர் சுப.தமிழ்வாணனும், இசையமைப்பாளர் யானி தேஷ்க்கும், பாடகி வந்தனாவிற்கும், பாடலாசிரியர் சுப்ரமணிய நந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ அந்தப் பாடல்


- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, June 25, 2012

என்ன சொல்ல ஒன்றும் புரியவில்லை

பாஸ்போர்ட் ரினீவல் வந்து விட்டது. முதன் முதலில் பாஸ்போர்ட் எடுக்க ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து ஒரு வருடம் ஏமாந்த கதையெல்லாம் நினைவுக்கு வந்து இனி என்ன பாடோ தெரியவில்லையே என்று திகிலடித்தது பாஸ்போர்ட் ரினீவல்.

அவினாசி சாலையில் இருக்கும் புதிய இடத்து பாஸ்போர்ட் ஆஃபீசுக்குச் சென்றால் அங்கு ஆன்லைனில் பதிவு செய்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வர வேண்டுமென்று சொன்னார்கள். ஆஹா வேலை எளிதாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு பாஸ்போர்ட் தளத்திற்குள் நுழைந்தால் ஆரம்பித்தது வினை.

இரண்டு நிமிடம் கழித்து தான் திரை வரும். ஒரு வழியாக முதன் முதலாய் பதிவு செய்து, எல்லா விபரங்களையும் பதிவு செய்து, மீண்டும் அப்லோட் செய்தால் மாலை நான்கு மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் பெறுங்கள் என்ற செய்தி கிடைக்க, மூன்று மணிக்கே இணையதளத்தை திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தால் “அடேய் பயலே என்னிடமா? “ என்று எதுவுமே கிடைக்க வில்லை. இப்படியே நான்கு நாட்கள் சென்றன. எரிச்சலில் கஸ்டமர் கேருக்கு போன் செய்து விசாரித்தால் நேரிடையாகச் செல்லுங்கள் என்றார்கள்.

அப்ளை செய்த அடுத்த நாள் பாஸ்போர்ட் கையில் வந்து விட்டது. மத்திய அரசின் அலுவலகமான பாஸ்போர்ட் ஆஃபீஸ் அசத்தலாய் இருக்கிறது. அட்டகாசமான சர்வீஸ் வழங்குகிறார்கள். எல்லாமே கணிணி மயம்.

வாசலில் செக்யூரிட்டி ஒரு பெண். சுடிதாரில் மிரட்டிக் கொண்டிருந்தார். பார்க்க படு ரகளையாய் இருந்தது. அலுவலகத்தின் உள்ளே போன் சனியன் தான் பெரிய பிரச்சினையாய் இருக்கிறது. என்ன சொன்னாலும் கேட்காத சில மனிதர்களுடன் அங்கு சிலர் போராடினார்கள். அரை மணி நேரம் கூட செல் போனை அணைத்து வைக்க முடியாத அற்பங்களை அங்குதான் பார்த்தேன்.

பாஸ்போர்ட் ரினீவல் செய்ய சில டிப்ஸுகள்.

1) இருப்பிட அடையாளத்திற்கு இரண்டு ஆவணங்கள்
2) ஐடெண்டிக்கு இரண்டு ஆவணங்கள்
3) திருமணமானால் கண்டிப்பாக அஃபிடவிட்
4) கல்விச் சான்றிதழ்கள் 
5) முந்தைய பாஸ்போர்ட்

போட்டோ தேவையில்லை. அவர்களே விரல் ரேகை, போட்டோவெல்லாம் எடுத்து விடுகின்றார்கள்.

பாஸ்போர்ட் அலுவலகம் போல மா நில அரசு அலுவலகங்களும் இருந்து விட்டால் மக்கள் சிரமம் இன்றி தங்கள் வேலைகளை முடித்துக் கொள்வார்கள். அரசு செய்ய வேண்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, May 29, 2012

ஐபிஎல் 420 கிரிக்கெட் - தினமணி தலையங்கம்

அடியேன் ஏப்ரல் 16-20, 2012 பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் முதன் முதலாய் எழுதிய கட்டுரையின் பெயர் “ஐபிஎல் 420 கிரிக்கெட்”. கட்டுரை வெளிவந்த புதிதில் பல நண்பர்கள் சும்மாவாச்சும் எழுதி இருக்கின்றீர்கள் என்று என்னிடம் “கருத்து” தெரிவித்தார்கள். அவர்களுக்கெல்லாம் சிரிப்பையே பதிலாக்கினேன்.

அதைத் தொடர்ந்து வெளி வந்த ஐபில் சூதாட்டம், மது, மாது கொண்ட்டாட்டங்களைக் கண்டு, “கருத்து” தெரிவித்த நண்பர்களே “என்னப்பா, அப்படியே நடக்கிறது” என்று மீண்டும் “கருத்து” தெரிவித்தார்கள்.

இன்றைய தினமணி தலையங்கமும், அடியேனின் கட்டுரையின் கருத்தும் ஒன்றாய் இருப்பதை பாருங்கள். ஐபிஎல் கருப்புப் பண முதலைகளின் பிசினஸ் ஏரியாவாக இருப்பதையும், கிரிக்கெட் கிரிக்கெட் என்று மக்கள் ஏமாந்து முட்டாளாக இருப்பதையும் படித்து, அதில் எவராவது ஒரு சிலராவது  உணர்ந்து திருந்துவார்கள் என நம்புகிறேன்.

-ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்.


தினமணியில் வெளியான 28.05.2012 தலையங்கத்தின் லிங்க்


அடியேனின் கட்டுரை 

ஐபிஎல் 420 கிரிக்கெட்

இந்தியாவில் 1990க்குப் பிறகான அரசியல் உலகில் பணம் சம்பாதிப்பதை பிரதானமாக அரசியல்வாதிகள் நினைக்க ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டார்கள். தங்களுக்கு என  தனியாகவும், தான் சார்ந்த கட்சியின் பெயராலேயும் பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தனர். இந்திய ஊழல்களின் ஆரம்பம் 1990க்குப் பிறகே சூடு பிடிக்க ஆரம்பித்தன. பொது நலத்தின் போர்வைக்குள்ளே சுய நலத்தின் நரி புகுந்தது. அரசியலிலில் நாகரீகம் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போனது. கொள்கைகள், கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் எல்லாம் மாற்றத்துக்கு உரியனவாய் மாறிப் போயின. பதவி இருந்தால் பத்து மட்டுமல்ல பத்து லட்சம் கோடியும் கிடைக்கும் என்று சமூகத்தில் எண்ணங்கள் ஊன்ற ஆரம்பித்தன. கட்சிப் பதவிக்கு கோடிகளைக் கொட்டி சீட் வாங்க ஆரம்பித்தார்கள். சமூகம் பணம் இல்லாத நல்லவனுக்கு கொடுக்கும் மரியாதையை விட, பணமுள்ள கெட்டவனுக்கு கொடுக்க ஆரம்பித்தது. ஊழலின் அசைக்க முடியாத புல் விதை இங்கு விதைக்கப்பட்டது.

மஹாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்திற்கு அழைக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த வேலையையும், குடும்பத்தையும் துறந்து களத்துக்குள் இறங்கிய இந்தியர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று ஓட்டுப் போட “பணம்” பெற்றுக் கொள்ளும் சுய நல இந்தியர்கள் இருக்க காரணம், பதவி வெறியும், எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க துடிக்கும் நபர்கள்தான் காரணம்.

முன்பு காந்தியின் எண்ணமும் செயலும் பொது நலத்தை முன்னிறுத்தி இருந்தது. பொது மேடையில் சுய நல பரப்புரைகள் இடம் பெறாது. இன்றோ அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்றால் வரிசை கட்டி சாலைகளில் பறக்கும் கார்கள் என்ன? சாலையோரம் நடப்படும் ட்யூப் லைட்டுகள் என்ன, கொடிகள் என்ன, தோரணம் என்ன? ஆட்டம் என்ன பாட்டம் என்ன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இவ்வளவு பணத்தைக் கொட்டி செலவு செய்து விட்டு, பதவிக்கு வந்த பிறகு சும்மாவா இருப்பார்கள். தவறு செய்பவர்களுக்கு ஓட்டுப் போட்டு அனுப்பி வைக்கும் இந்தியர்களின் அறிவுக் கூர்மையை என்னவென்று மெச்சுவது? மாறிப் போன மக்களால் ஊழல் இந்தியாவின் முகமாய் மாறிப் போனது. இந்தியா என்றால் ஊழல், ஊழல் என்றால் இந்தியா என்றாகிப் போனது.

ஊழல் செய்து பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது என்று அந்த ஊழல் பணத்தையே முதலீடாக்கி மேலும் மேலும் கொள்ளை கொள்ளையாய் வசூலிக்க வேண்டுமென்ற இவ்வகை ஊழல்வாதிகளின் ஆசையை நிறைவேற்ற வந்தது தான் இந்தியன் ப்ரீமியர் லீக் என்கிற ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட்.

ஐபிஎல் டி20  கிரிக்கெட் எப்படி ஊழல்வாதிகளின் விளையாட்டாய் மாறியது என்பதைச் சுருக்கமாய் இனி பார்ப்போம்.

என் ஆர் ஐ என்றுச் சொல்லக்கூடிய வெளி நாடு வாழ் இந்தியர்கள் அதாவது வெளி நாடுகளில் வசித்து பிசினஸ் செய்து பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள், அப்பணத்தை எளிதில் இந்தியா கொண்டு வரும் படியான இந்தியப் பொருளாதார விதிகள் வெகு ஜாக்கிரதையாக வகுக்கப்பட்டன. இந்த விதிகளைப் பயன்படுத்திக் கொண்டும், இந்தியா சில நாடுகளுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் படியும் என் ஆர் ஐ பிசினஸ் மேன்களைப் பினாமியாக வைத்துக் கொண்டு பெரும்பான்மையான கறுப்புப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும், சில நாடுகளின் வழியாக கருப்புப் பணத்தை மூலதனமாய் மாற்றிக் கொண்டு, இந்தியாவில் பிசினஸ் செய்ய, இந்த ஐபிஎல் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தனர். டி20 கிரிக்கெட் விதிகளில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராய் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பான்மையான அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளும் தங்கள் கறுப்புப் பணத்தை வெகு எளிதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலீடு செய்கின்றனர். திரு லலித் மோடியும், திரு சசி தரூரும் கொச்சி அணியில் செய்த தில்லுமுல்லுகளை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருக்கலாம்.

டி20 கிரிக்கெட் மூலமாய் மிகப் பெரிய லாபம் கிடைக்குமா என்று சந்தேகிப்பீர்கள். ஸ்டார் டிவி ஒரு போட்டி ஒளிபரப்பிற்கு 40 கோடி கட்டணம் கொடுத்து ஏலமெடுத்து இருக்கிறது. இந்த நாற்பது கோடியை இரண்டு மணி நேரத்தில் எப்படி எடுப்பார்கள் என்று ஒரு நிமிடம் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒளிந்திருக்கும் ரகசியம் புலப்பட ஆரம்பிக்கும். ஒளிபரப்பிற்கான உரிமை, கட்டண உரிமை போன்றவற்றில் மட்டும்தான் வருமானம் வரும் என்று அப்பிராணிகள் நினைக்கக் கூடும். அது ஒரு சிறிய வருமானம் என்றால் மிகப் பெரிய வருமானம் வரும் வழி ஒன்று டி20 கிரிக்கெட்டில் இருக்கிறது.

விளையாட்டில் வெற்றி பெற்றால் பரிசுகள் கிடைக்கும். தோற்றால் ஒன்றும் கிடைக்காது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் டீம்களின் ஓனர்களுக்கு தோற்றாலும், வெற்றி பெற்றாலும் கோடி கோடியாய் ரகசியமாய் கொட்டும். தன் டீம் தோற்பதற்காகவா இத்தனை கோடிகளை கொட்டி விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்குவார்கள்? யோசித்துப் பாருங்கள் காரணம் உங்களுக்கு நன்கு புரியும். இன்னும் புரியவில்லை என்றால் தொடர்ந்து படியுங்கள். சில ஐபி எல் கிரிக்கெட் டீம்கள் ஜெயிக்கவே இல்லையே எப்படி அவர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள்? அதற்கு எப்படி பணம் வருகிறது என்று கேட்டுப் பாருங்கள். விபரம் தெரியும். இது ஒன்றும் பத்து ரூபாய் கத்தரிக்காய் வியாபாரம் இல்லை. இது ஒரு விதமான சித்து விளையாட்டு வியாபாரம். பணமிருப்போர் உல்லாச அறைகளிலே அழகிகளின் மடிகளில் படுத்துக் கொண்டு விளையாடும் சூதாட்டம் தான் 420 மன்னிக்கவும் டி20 கிரிக்கெட்.

தோற்றாலும் பணம் எப்படிக் கொட்டும் என்று இன்னும் புரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம்.  ஷாருக்கான் ஏன் கிரிக்கெட் டீமை வாங்க வேண்டும்? அவர் டீம் தோற்றால் நஷ்டமாகுமே?  நஷ்டமானால் போட்ட காசு புஸ்ஸாகிவிடுமே? கிரிக்கெட் மீதிருக்கும் ப்ரியத்தாலா ஷாருக்கான் ஐபிஎல் டீமை வாங்கினார்? நிச்சயமாக இருக்கவே முடியாது. போடும் பணம் இரட்டிப்பு அல்ல பல மடங்கு அதிகமாக வந்தால் தான் அல்லவா பணக்காரர்கள் முதலீடு போடுவார்கள். இல்லையென்றால் அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பார்களா? ஆகவே பெரும் பணம் முதலீடு செய்யப்பட்டால் சாதாரணமாய் கிடைக்கும் வருமானத்தை விட மிக அதிக வருமானம் கொட்டும் என்பதற்காகத்தானே முதலீடுகளை கொட்டுகின்றார்கள். உடனே ஷாருக்கான் துபாயில் வாங்கி இருக்கும் இந்தியர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வில்லா உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கிரிக்கெட்டை முன் வைத்து உலகமெங்கும் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்தச் சூதாட்டத்தை யாருக்கும் தெரியாமல், வெகு சாமர்த்தியமாக, ரகசியமாக இந்தியாவில் தொடர்ந்து நடத்திக் கொண்டு தான் வருகின்றார்கள். உலகப் போலீஸ் இண்டர் போலால் கூட கண்டுபிடிக்க முடியாது என்று இச்சூதாட்டத்தை நடத்துபவர்கள் மார்தட்டிக் கொள்வார்கள்.

சூதாட்ட ரகசியத்தை இப்போது பார்க்கலாம். எக்ஸ் என்ற டீம் எல்லாப் போட்டிகளிலும் ஜெயித்துக் கொண்டே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது பலரும் பெட் கட்டுவார்கள். பெரும் பணம் குவியும். எக்ஸ் அணிதான் ஜெயிக்கும் என்று ஏகப்பட்ட பேர் கிரெடிட் கார்டு மூலமும், இன்னபிற உண்டிகள் மூலமும் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்கள். மிகப் பெரும் பணம் வசூல் ஆனது தெரிந்தவுடன் சூதாட்டத்தின் அடுத்த வேலை ஆரம்பிக்கும். யாரோ ஒருவர் ஒய் என்ற அணி ஜெயிக்கும் என்று பெட் கட்டுவார். எக்ஸ் தோற்றால் ஒய்யுக்கு அத்தனை பணமும் வந்து விடும் அல்லவா? அதற்கேற்ப சிக்னல்கள் தண்ணீர் பாட்டில்கள் மூலமாகவோ, காயமடைந்து விட்டார் என்பதாகவே, கணுக்கால் உடைந்து விட்டது என்பதாகவோ சம்பந்தப்பட்ட பிளேயருக்குக் கொண்டு செல்லப்படும். முடிவில் எக்ஸ் தோற்று ஒய் ஜெயிக்கும்.  எக்ஸ் ஜெயிக்கும் என்று பணம் கட்டியவர்களின் பணம் ஹோகயா ஆகி விடும். ஒய் மீது பணம் கட்டியவர்களிடமிருந்து தோற்ற அணியின் அதாவது எக்ஸுக்கு பேசப்பட்ட பங்கு சென்று சேரும்.

இப்படியெல்லாம் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கு ஒன்றினை மீண்டும் நினைவு படுத்துகிறேன். விலை கொடுத்து வாங்கப்படும் விளையாட்டு வீரர்கள், அணியின் முதலாளி சொல்வதைக் கேட்பார்களா  இல்லை கேட்கமாட்டார்களா?  என்பதற்கான விடையில் இருக்கிறது டி20 கிரிக்கெட் 420 கிரிக்கெட்டான மாறியதன் காரணம்.

ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்பது போல அரசியல் புகுந்த இடம் ஊழலாகிப் போகும் என்பதற்கு பவித்திரமான விளையாட்டும் மாறிப் போனது. வெறும் பதினோறு நாடுகளில் விளையாடப்படும் கிரிக்கெட்டை பணம் கொழிக்கும் கற்ப தருவாய் மாற்றிக் காட்டி, அதையும் ஊழல் மயமாக்கியதோடு இல்லாமல் இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகளும், சில சுய நலமிகளும். டி20 கிரிக்கெட்டினை ஊழல் செய்ய உருவாக்கப்பட்ட விளையாட்டாய் மாற்றி விட்டார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாய் கிரிக்கெட் மாறி இருக்கிறது. வரப்போகும் வரலாற்றுப் பக்கங்களில் கிரிக்கெட் என்பது “திருடர்களின் விளையாட்டாய்” பதியப் படத்தான் போகிறது. உண்மை காற்றுப் போல. அது ஒரு நாள் புயலாய் மாறும் போது பொய் என்ற நாற்றமெடுக்கும் தோற்றம் கரைந்து போய் விடும். டி20 ஐபிஎல் ஊழலுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு என்பது வரலாற்றில் பதியப்படும். அப்போது மக்களெல்லாம் “இப்படி ஏமாந்து விட்டோமே?” என்று பெருமூச்செறிவார்கள் என்பது நிச்சயம்.

அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டும், காதில் ரேடியோவை வைத்துக் கொண்டும், இணைய தளங்களில் டி 20 கிரிக்கெட்டின் ரிசல்ட்டைக் கவனித்துக் கொண்டும், அது பற்றிய கமென்டுகளை பேசிக் கொண்டும், விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர் என்றுச் சொல்லி புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களை ஏமாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை கோடி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்போரை புத்திசாலிகள் என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்னதான் ஊழலாக இருந்தாலும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் என்பது மிக நல்ல வியாபாரம் என்ற உண்மையை நான் உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

-     கோவை எம் தங்கவேல், கோயமுத்தூர் ( 30/03/2012)

Friday, May 25, 2012

ஹெல்த் ட்ரிங்க்ஸினால் கேன்சர் வரலாம்


உடம்பு முடியாமல் மருத்துவமனையில் இருப்போரைப் பார்க்க செல்வோர் ஒரு காலத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் இல்லாமல் செல்ல மாட்டார்கள். கண்ணாடி பாட்டிலில் தனக்கே உரித்தான நறுமணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் ஒவ்வொரு நோயாளிகளின் தலைப்பக்கமாய உட்கார்ந்திருக்கும். அந்த அளவுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் ஹார்லிக்ஸ் ஒரு காலத்தில் மக்களிடையே மிகப் பிரபலமாய் இருந்தது. 

என் மனைவியின் சிறு வயதில் தூக்கி வைத்துக் கொஞ்சிய பக்கத்து குழந்தை ஐந்தாவது வயதில் கேன்சரால் இறந்து போய் விட்டது. பால் குடி மறந்ததும் அக்குழந்தைக்கு காய்ச்சிய பசும்பாலில் பிரபலமான (ஹார்லிக்ஸ் அல்ல) ஹெல்த் ட்ரிங் ஒன்றினை கலந்து கொடுத்து வந்திருக்கின்றார்கள். குழந்தையும் நன்றாக கொழு கொழுவென வளர்ந்திருக்கிறது. எல்லோரும் குழந்தையைப் பாரு “சேட்டு வீட்டுக் குழந்தை போல” இருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். பெற்றோர்களுக்கு பெருமையாக இருந்தது.

சாப்பாடு கொஞ்சம், ஹெல்த் ட்ரிங் அதிகமாய் கொடுத்து வளர்க்கப்பட்ட அக்குழந்தை திடீரென தன் ஐந்தாவது வயதில் நோயில் விழுந்திருக்கிறது. டெஸ்ட் செய்து பார்த்த போது கேன்ஸர் பாதிப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எனது குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யும் ஒரு பெண் டாக்டரிடம் ”குழந்தை கள் ஒல்லியாகவே இருக்கின்றார்களே அவர்களுக்கு ஏதாவது ஹெல்த் ட்ரிங்க்ஸ் கொடுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எக்காலத்திலும் குழந்தைகளுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் நிச்சயம் வேண்டவே வேண்டாம், அதற்குப் பதிலாக முட்டை, பால், இறைச்சி, மீன், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுங்கள்” என்றுச் சொன்னார்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கான பதில் வேறு எங்கிருந்தோ கிடைத்தது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உணவின் மூலமாகவே கிடைக்க வேண்டும். ஆனால் அது ஹெல்த் ட்ரிங்ஸ் வழியாக கிடைக்கிறது என்றால் அதன் பின் விளைவுகள் இப்படித்தான் ஆகும்.

சவுத் அமெரிக்காவில் மக்களால் அருந்தப்பட்ட ஒரு ஹெல்த் ட்ரிங்கினால் கேன்ஸர் வந்திருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் மருத்துவ உலகை கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகள் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாய் இருப்பதால் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ன விதமான பின் விளைவுகளை உருவாக்கும் என்று கண்டு பிடிக்க முடியாது. அதைப் பற்றிய விழிப்புணர்ச்சி பலர் இறந்த பிறகுதான் உருவாகும். 

அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விளம்பர மோகத்தில் திளைப்பதால் வரக்கூடிய பின் விளைவுகளைக் கண்டு கொள்ளாமல் விளம்பரப் படுத்தப் படும் ஒவ்வொரு பொருளையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடம்பு நன்றாக இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். நம் தமிழ் கலாச்சாரத்தில் உடல் நோவுக்கு என்று ஏகப்பட்ட பின் விளைவுகள் அற்ற மருந்து உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை அறிந்து கொண்டு உடலைக் காத்து உள்ளத்தை பாதுகாத்து நலமுடன் வாழ்க.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, May 22, 2012

சின்னப்புள்ள(1)


தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு ஆரம்ப எல்லையிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லையின் ஆரம்பத்திலும் இருக்கும் ஊர்தான் ஆவணம் கைகாட்டி. அம்மாவின் பிறந்தகம். குழந்தைப் பருவத்திலிருந்து கல்லூரி வயது வரை ஆவணத்தில் தாய் மாமன் வீட்டில் தான் வளர்ந்து வந்தேன். தாய்மாமா அருணாசலத்தின் மீசையைப் பார்த்தாலே ஒன்றுக்கு போய் விடும். தேவர்மகன் கமலஹாசன் மீசை வைத்திருப்பார். ஆவணத்துப் பன்னண்டாக்குளத்தில் மாமா குளிக்கச் சென்றார் என்றால் குளக்கரையே சோப்பு நுரையால் அதகளப்படும். மாமா தலையில் ஷாம்பூவாய் போட்டு தலைமுடி கொட்டிப் போனதுதான் மிச்சம். ஆனால் மீசை மட்டும் எமகிங்கரர் போல வைத்திருப்பார். மீசைக்கென்று தனியாக சீப்பு வேறு. காவிரி ஆற்றின் கிழக்குப் புறமாய் அகண்டு போய் கிடக்கும் இந்தக் குளம். ஏன் பண்ணண்டாக்குளம் என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. விசாரிக்கணும். குளத்தின் மேற்குப் புரத்தில் பலவகை மரங்களும், கிழக்குப் புறமாய் வயல்வெளிகளும், தெற்குப் பக்கமாய் மாயன்பெருமாள் கோவிலுமாய் வடிவமற்று இந்தக் குளம் இருக்கும். தண்ணீர் நிரம்பி இருக்கையில் கடல் போல காட்சியளிக்கும். 


இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. ஏதோ ஒரு தினத்தில் சைக்கிளில் குளிக்க அழைத்து சென்றிருந்தார்.  தேய்த்து தேய்த்து அரை மணி நேரம் எனது கைகால்கள் எல்லாம் சிவந்து போயின. குளிக்க வந்த குத்தூசு ராவுத்தர், "அருணாலம் விடுடா பய பயந்துறப்போறான்" என்றுச் சொல்ல அதன் பிறகு அரைகுறை மனதோடு விட்டார். அதுதான் அவர் கூட கடைசியாகக் குளிக்க போனது. சொரியும் சொரியில் உடம்பே புண்ணாய்ப் போய் விடும்.

போன வாரம் மாமா போன் செய்திருந்தார். ’பேரன் பேரன்னு தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறது அக்கா, பேரன் நாட்டுக் கோழி வேணும்னு கேட்டானாம், பத்து பதினைந்து கோழிகள் வீடு முழுக்க திரிந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, பேரன் வந்துட்டானா உன் கழுத்தைப் பிடிச்சு திருகிறுவேன்’ என்று தானா பேசிக் கொண்டிருக்கிறது என்றார். ’உடம்புக்கு வேற முடியவில்லை’ என்றுச் சொன்னார். ’உடனே பையனை அனுப்பி வை’ என்று கேட்டுக்கொண்டார். மறுநாள் மாலையில் அப்பத்தாவிடம் சென்று விட்டான் பையன். அவ்வளவுதான். உடம்பு முடியாமல் படுத்துக் கிடந்த அம்மா எழுந்து கொண்டாராம். 

கோழிகளின் கழுத்து திருகப்பட்டு குழம்பு, வறுவல்கள் ஆனது. மீன், நண்டு, இறால் என்று ஒரே அதகளம். தோட்டத்தில் மாம்பழம், நொங்கு, இளநீர், பலாப்பழம் என்று அடுத்தடுத்த மேட்டர்கள். செம்மறி ஆட்டு ஈரல் கறிக்குழம்பானது. ஆட்டுக்கால் பாயாவானது. கறி வறுவல் ஆனது. பையனும் பெண்ணும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் ஆனந்தப்பட்டார்கள். அடிக்கடி போன் செய்யும் எனது பெண்ணிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை. பெண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் போல. இருபது வருடம் பெத்து வளர்த்த பெற்றோர்களை விட்டு விட்டு ஒரு வருடமோ இரண்டு வருடமோ பழகும் பையனோடு திருமணம் செய்துகொண்டு போய் விடுகின்றார்கள் சில பெண்கள்(அடியேனின் கதை). எதிர் காலத்தில் அரேஞ்ச்டு மேரேஜ் இருக்காது என்றே நினைக்கிறேன். இது பற்றி எனது நண்பரின் அனுபவம் ஒன்று இருக்கிறது. அதை வேறு இடத்தில் சொல்கிறேன். 

கோவையில் அடியேனோ காலையில் முட்டைக்கோஸ் பொறியல், சாம்பார், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சாதம், கீரை என்று வியர்த்து விறுவிறுத்து சமையலறையில் கிடந்தேன். இரவில் தோசையும் ஏதாவதொரு சட்னியும். காலையில் வைக்கும் குழம்பு, பொறியல்களை மதியம் சூடு செய்து கொள்ள வேண்டும். இடையில் க்ரீன் டீ வேறு போட்டுக் கொள்ள வேண்டும். வீடு துடைத்து, போட்டிருக்கும் துணிகளைத் துவைத்துக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். 

சமைக்கும் போது ஒரு ஸ்பெஷல் துவையல் செய்தேன். மிக நன்றாக இருந்தது. ஸீரோ பெர்சண்டேஜ் ஆயில் துவையல் அது. பேச்சிலர்ஸ்ஸுக்கு ஏற்றது. தனியாக இருக்கும் கணவன்களுக்கும் ஏற்றது. முயற்சித்துப் பாருங்களேன்.

கொஞ்சம் தேங்காய் துறுவல்
இரண்டு மேஜைக்கரண்டி துவரம் பருப்பு
இரண்டு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு
ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை
ஆறேழு புதினா தழைகள்
கொஞ்சூண்டு மல்லித்தழை
கொஞ்சூண்டு கருவேப்பிலை
ஒரே ஒரு பூண்டு
துளியூண்டு பெருங்காயம்
கொஞ்சூண்டு உப்பு
எடுத்துக்கொண்டு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை (கட்டிப் பெருங்காயம் நல்லது) எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்தேன். மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாய் அல்லாது கொஞ்சம் நைஸாக அரைத்தேன். வழித்தெடுக்கும் போது கமகமவென மணம் வீசியது. தேவையான உப்பைச் சேர்த்துக் கொண்டேன்.

சுடுசாதத்தில் மோர் விட்டு, சைடிஸ்ஸிற்கு இந்தத் துவையல். சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தம். 

சுடுசாதத்தில் பசு மோர் விட்டால் கமகமவென மணக்கும். சிறுவயதில் அம்மா கொத்தரவங்காய் வற்றல், சோற்று வடகம், மோர் மிளகாய் வற்றல், ஆதண்டங்காய் வற்றல் பொறித்து தருவார்கள். ஒரு தட்டுச் சோறு சாப்பிடுவேன். 

ஆமாம், ஆதண்டங்காய் வற்றல் சாப்பிட்டு இருக்கின்றீர்கள் தானே? கோவையில் ஏதோ ஒரு  பழமுதிர் நிலையத்தில் கிடைக்கிறது என்றார்கள். எங்கே என்று தெரியவில்லை. செலரி வாங்கலாம் என்று பார்க்கிறேன். இதுவரை அகப்படவில்லை. கோவையில் செலரி கிடைக்கும் இடம் என்று தெரிந்தவர்கள் முடிந்தால் சொல்லுங்கள்.

பையனும் பெண்ணும் சந்தோஷமாய் இருக்கின்றார்கள், அம்மா சந்தோஷமாய் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். மனதுக்கு இதமாய் இருந்தது.

இதற்கிடையில் அங்கு பையனால் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. போன் வந்தது. ”யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்” என்கிறான் என்றார் மனையாள். ”அவனிடம் போனைக் கொடு” என்றேன்.

“அப்பா, நான் இப்போதே கோயமுத்தூர் வரணும்” என்றான் பையன்.

- விரைவில் தொடரும்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Thursday, May 17, 2012

புதிய சாட்டிலைட் சேனல்



எஸ் ஆர் எம் கல்லூரி நிறுவனர் திரு பச்சை முத்து அவர்களால் தொடங்கப்பட்ட ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கை பரவலாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. திறமைசாலிகளுக்கு மதிப்புக் கொடுத்த காரணத்தால், நல்ல கட்டுரைகள் வெளிவந்தன. ஆரம்பத்தில் நல்ல விஷயங்களோடு வெளியான பத்திரிக்கை, போகப் போக சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் புரியாமல் குழம்பிய போதுதான், புதிய தலைமுறை சாட்டிலைட் செய்திச் சானல் வெளிவந்தது. பத்திரைக்கை பத்தோடு பனிரெண்டானது. டிவி சானல் எல்லோரும் சன் டிவியை விட அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். ஆனால் எனக்கொன்றும் அவ்வளவு பிரமாதமாய் இருப்பது போல தெரியவில்லை. இந்தச் சானலில் அதிகப் பிரசங்கித் தனமான செய்திகளும், சும்மா ஒப்பேற்றுவது போல நிகழ்ச்சிகளும், எல்லாம் தெரிந்த மேதாவித்தனமான வார்த்தைப் பிரயோகங்களும் வெளிப்பட்டன. 

எந்த ஒரு செய்திக்கும், நிகழ்ச்சிக்கும் நிறைவு என்ற ஒன்று உண்டு. அதை இவர்கள் கொடுக்கவே இல்லை. சானலில் வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிறைவற்ற தன்மையைக் காணலாம். மேலும் இவர்கள் அரசியல் பின்புலம் அற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கின்றார்கள். இந்தச் செய்தி சானலை உலகப் புகழ் பெறும் வகையில் நடத்தலாம். ஆனால் அதற்கான எந்த ஒரு முஸ்தீபும் புதிய வடிவும், நிகழ்ச்சிகளும் இதுவரை வரல்லை. 

இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை நடு நிலை என்கிறார்கள்.’ஒப்புக்குச் சப்பாணி’ என்று தானே அர்த்தம் வரும். எது வரினும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று புதிய தலைமுறை செய்திகள் வெளியிடாதவரை இதுவும் ஒரு சானலாகத்தான் இருக்கும். 

நேற்று நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் சொன்னார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிலர் வருவர். அவர்களால் இண்டஸ்ட்ரி புத்துணர்ச்சி பெற்று பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். சினிமா உலகினர் சுறுசுறுப்பாய் உழைப்பர். திமுக குடும்பம் சினிமாவில் ஈடுபட்ட காரணத்தால் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அதே போல டாக்டர் சீனிவாசன், ரித்தீஷ் போன்றோரால் நிறைய தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. காசைப் பற்றியோ, படத்தின் தரம் பற்றியோ கவலைப்படாமல் இவர்களைப் போன்றோர் எடுத்து தள்ளிய சினிமாக்களினால்  சினிமா தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்தார்கள். இப்படிப் போன்றோர் தமிழ் சினிமாவிற்கு அடிக்கடி வந்து செல்வர். அது போன்றே தமிழ் சினிமா உலகில் எஸ் ஆர் எம் க்ரூப்பும் ஈடுபட இருக்கின்றார்களாம்.

சானல்கள் இல்லாத காலத்தில் படம் நன்றாக இல்லையெனில் தயாரிப்பாளார் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சாலையில் போக வேண்டியதுதான். ஆனால் தற்போது டிவி சானல்கள், எஃப் எம் ரேடியோக்கள், வெளி நாட்டு உரிமை, டப்பிங் உரிமை, வேற்றுமொழி உரிமை என்கிற பல்வேறு விஷயங்களினால் போட்ட காசுக்கு பங்கம் வந்து விடாமல் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக் கொண்டனர். திமுக ஆட்சியில் இருக்கும் போது அரசியல் அதிகார பலத்தால் சன் டிவியும், கலைஞர் டிவியும் தாங்கள் விரும்பிய விலைக்கு திரைப்படங்களை வாங்கினார்கள் என்கிறார்கள். திமுக ஆட்சியின் முடிவிற்குப் பிறகு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ ஆரோக்கியமானதாக மாறி இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றார்கள். பெரும் பணத்தினை முதலீடுகளாய் போட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல தமிழ் சாட்டிலைட் சேனல்கள் வருவது மன ஊக்கத்தினை தரும். போட்டி அதிகமிருக்கும் இடத்தில் நல்ல விலை கிடைக்கும் அல்லவா? 

சன், ராஜ், விஜய், கலைஞர், ஜெயா டிவிக்களின் சாட்டிலைட் உரிமைக்கான போட்டிக்கு மேலும் ஒரு சாட்டிலைட் சேனல் வரப்போகின்றதாம். எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் “வேந்தர் தொலைக்காட்சி” விரைவில் மலர இருக்கின்றதாம்.அவர்கள் பெரும் விலை கொடுத்து அரவான் திரைப்படத்தை வாங்கி இருப்பதாகவும், சகுனி படத்தின் விநியோக உரிமையுடன் சாட்டிலைட் உரிமையையும் வாங்கி இருப்பதாகவும் தமிழ் சினிமா உலகிலும், பத்திரிக்கை உலகிலும் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் புதிய தலைமுறை செய்திச் சானலில் இது பற்றிய விளம்பரங்கள் வெளியாகலாம். 
திரைப்பட விநியோகஸ்தராகவும், டிவி சானல்களாகவும் மாற இருக்கும் ‘புதிய தலைமுறை’ குழுமத்தினர் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Friday, May 11, 2012

வேலைக்குத் தேவை : எம்எஸ்சி பட்டதாரி

வாழ்க்கையின் முதல் தத்துவம் என்ன தெரியுமா? துணிச்சலை சோதித்துப் பார்ப்பதுதான். அவ்வாறு துணிச்சலை சோதிப்பவன் தான் என்றும் மாறாதா நிலைத்த வெற்றியைப் பெறுவான் என்கிறார் டூஸே.

எனது நண்பரின் சென்னையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிய எம் எஸ் சி ( மேத்ஸ், பிசிக்ஸ்) - கணிதம் அல்லது இயற்பியல் பெண் பட்டதாரி தேவை. மாலையில் நண்பரின் குழந்தைகளுக்கு (இருவர்) டியூசன் சொல்லித் தர வேண்டும். தங்குமிடம் கொடுத்து விடுவார். தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் தருவார்.

அதுமட்டுமல்ல, அசைவம், சைவம் சமைக்கத் தெரிந்த ஆதரவற்ற பெண்கள் இருவர் சென்னையில் பிரதான ஹோட்டல் அதிபர் வீட்டிற்கும், பில்டர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கும் தேவைப்படுகின்றனர்.

விருப்பம் உடையவர்கள் அல்லது வேலை தேடுவோரை அறிந்தவர்கள் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்லவும். இந்த மாதத்தின் கடைசி தேதி வரைக்கும் அழைக்கலாம்.



எனது தொலைபேசி எண் : 96005 77755

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, May 5, 2012

இந்தியா என்றால் என்ன?


நம் நாட்டில் விவசாயத்​துக்கும் விவசாயி​களுக்கும் மதிப்பு இல்லையே? (க.சங்கீத், மேல்அருங்குணம்.)

கழுகார் பதில்:விவசாயத்துக்கு மரியாதை தராத மனோபாவத்தைத்​தான் இங்கே உருவாக்கி விட்டார்களே!

இந்திய சமூகத்தின் கல்வி முறையை அறிமுகப்படுத்திய மெக்காலே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு உங்களது கேள்விக்கான பதிலாக அமையும்.

'நான் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்தபோது, பிச்சைக்காரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை. அத்தகைய நாடு அது. செல்வ வளமும், உயர் நியாய உணர்வுகளும், அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயம் மற்றும் கலாசாரப் பாரம்பர்யத்தை உடைத்து எறியாத வரை அந்த நாட்டை நாம் ஒருபோதும் வெல்ல முடியாது. எனவே, வெளிநாட்டில் இருந்து வருகிற எல்லாமே தன்னுடையதை விட உயர்ந்தது என்று எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இந்தியாவை அடக்கி ஆளப்படும் நாடாக மாற்ற, அந்த நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளை, பாரம்பரியக் கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று பேசினார் மெக்காலே. இந்த மனோபாவம்கொண்ட நாம் எப்படி விவசாயத்தை மதிப்போம்? 

இந்த வார ஜூனியர் விகடனில் வெளியானது மேலே இருப்பது. 

இந்தியாவில் இருக்கும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையும், ஏழைகளின் எண்ணிக்கையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எப்படி இருந்த இந்தியா, எப்படி சீரழிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு காரணம் பேராசைப்பட்ட, தகுதியற்ற அரசியல் தலைவர்கள் தானே? என்ன செய்யப்போகின்றோம் நாம்? 

மெக்காலே கண்ட இந்தியாவை எப்போது நாம் பார்ப்போம் இனி? 

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

நன்றி : ஜூனியர் விகடன்


Friday, May 4, 2012

மனித மனம்



கீதையில் மனித மனம்- கவியரசு கண்ணதாசன்


கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான்:

“அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”

அர்ஜுனன் கேட்கிறான்:

“மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.

கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; 
வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.”

பகவான் கூறுகிறான்:

“தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.”

இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்:

“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகுசிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப் படுத்துவது எளிதன்று. ஆனால், வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்.”

மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது, என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியான யோகமாகும்.

சகல காரியங்களுக்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும், நன்மைக்கும், தீமைக்கும், இருட்டுக்கும், வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும், வெறுப்புக்கும் மனமே காரணம்.

மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.

பகுத்தறிவையும் மனம் ஆக்கிரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.

கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான்; கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.

அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது; அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.

எந்த அனுபவங்களையும் கொண்டுவருவது மனம்தான்.

இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்கள் அழித்துவிடுகின்றன.

உடம்பையும் அறிவையும் மனமே ஆக்கிரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.

என்ன இந்த மனது?

காலையில் துடிக்கிறது; மதியத்தில் சிரிக்கிறது; மாலையில் ஏங்குகிறது; இரவில் அழுகிறது.

“இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்” என்றிருக்க மனம் விடுவதில்லை.

ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.

எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சரிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி?

“வைராக்கியத்தால் முடியும்” என்கிறது கீதை.

அதையே சொல்கிறார் பகவான் ராமகிருஷ்ணர்.

அது என்ன வைராக்கியம்?

உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது; எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.

மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கிவிடுவது.

ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கிவைத்து விடுவது; 

பந்தபாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.

பற்றறுப்பது; சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.

நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்று முடிவுக்கு வருவது.

ஜனனத்துக்கும், மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டி வைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டுகொள்வது.

துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப் படுத்துவது.

இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.

பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.

முயற்சிகள் தோல்வியுறும்போது, `இதற்கு இறைவன் சம்மதிக்க வில்லை’ என்று ஆறுதல் கொள்வது.

கணநேர இன்பங்களை’ அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டுகொள்வது.

ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே’ என்ற சம நோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.

காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.

சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால், எப்படி இது முடியும்?

பகவத் தியானத்தால் முடியும்.

அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ, வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து, வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.

இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.

பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி’யானது இப்படித்தான்.
தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும் இப்படித்தான்.

இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப்பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.

அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.

அப்போது ஓர் இடைறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.
கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது; அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்ணில் படுவதில்லை.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.

கவிஞனுக்கும், வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெறமுடியும்.

அதாவது, ஒன்றையே நினைத்தல்.

அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.

வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன்போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.

சங்கீத வித்வான் சரித்திர ஆராய்ச்சி செய்வதில்லை; ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.

ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.

ஒரு கதை உண்டு!

ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.

பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள்; துடித்தார்கள்.

அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப் போகிறதே என்று பார்த்தார்கள்.

தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள்.

தாய் எழவில்லை.

ஓங்கித் தடியால் அடித்தார்கள்; அப்போதும் அவள் எழவில்லை.

பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக்கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.

தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?

அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.

ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.

இந்த மனத்தின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.

ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக் கிறேன்.

ஜனனம் தகப்பனின் படைப்பு; மரணம் ஆண்டவனின் அழைப்பு; இடைப்பட்ட 
வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.

இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.

திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.

ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.

ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.

என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை.

பெற முயல்கிறேன்; பெறுவேன்.

பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந் தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று, மன அமைதி கொள்ள முயல்கிறேன்.

அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப் போகும்.

இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்துமதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.

லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்துமதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு.

- கண்ணதாசனின் பகவத் கீதையிலே ஒரு பகுதி

Thursday, May 3, 2012

மோகமுள் திரைப்படமும் நாவலும்




மோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது. 

ஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.

படிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் ! 

நாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.

திருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது. 

திஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன. 

ஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.

பாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.

காதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? 

சிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Tuesday, May 1, 2012

யமுனாவின் மீதான மோகம் தீரவில்லை



கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சந்தர்ப்பவசமாய் யமுனா என்னிடம் சிக்கிக் கொண்டாள்.

எங்களூர் பட்டிக்காட்டு கிராமம். படிப்பறிவு கொஞ்சம் கம்மியாக இருந்த கால கட்டத்தில் பிறந்த காரணத்தால் புத்தக வாசனை பள்ளிக்கூடத்தின் மூலமாகவே கிடைத்தது. மூன்றாவது படிக்கும் போது என்று நம்புகிறேன், ராணி காமிக்ஸ் அறிமுகமாகி அன்றிலிருந்து காமிக்ஸ்ஸின் ரகசிய ரசிகனானேன். மாமாவோ பாடப்புத்தகத்தை தவிர வேறு புத்தகத்தைக் கையில் பார்த்து விட்டார் என்றால் மண்டையில் அழுந்த ஒரு குட்டுப் போடுவார்.  மாமாவின் குட்டுக்குப் பயந்து மர பீரோவின் அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சில கிழிந்து போன, கசங்கிப் போன காமிக்ஸ் புத்தகங்கள். எல்லாம் தெரிந்த மாமா இதுவரையிலும் மரபீரோவின் அடியில் எதையும் தேடுவதே இல்லை. ஏன் என்று எனக்கு இன்றைக்கும் புரியவில்லை.

இப்படியான ஹிட்லர் வீட்டில், அக்கா மூலம் என்றோ ஒரு நாள் அறிமுகமானது மாலைமதி. அந்தக் கதை இன்றைக்கும் என் மனதை விட்டு அகலவில்லை. ஏன் என்று தெரியவில்லை. பழைய புத்தக கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாலைமதி கிடைத்து விடுமா என்ற நப்பாசையில் தேடிப் பார்ப்பேன். கிடைக்காது. செல்லம்மாவின் சமையல் குறிப்புகளாவது கிடைக்குமா என்று கூட பக்கங்களில் படருவேன். செல்லம்மா கால ஓட்டத்தில் காணாமல் போகும் குழந்தைப் பருவ நினைவுகள் போல காணாமல் போய்விட்டார்.

தொடர்ந்து எழுத்தாளர் சுபாவின் நாவல்களும், அட்டைப்படத்தின் மூலம் கேவி ஆனந்த்தும் எனக்கு தெரிய வந்தனர். சுபாவின் நாவல்களின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் படு அசத்தலாய் இருக்கும். ஆரம்ப கட்டம் அல்லவா? பார்க்கும் புத்தகங்கள் எல்லாம் திகிலைக் கிளப்பிக் கொண்டிருந்தன. சுபாவின் தூண்டில் முள் நாவல் என்னை கலவரப்படுத்திய ஒன்று. அவரிடமிருந்து என் கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் கூட வந்தது. அதன் பிறகு அவர் எழுத்தின் மீதான வாசிப்பு எனக்கு திகட்ட ஆரம்பித்தது. நரேன், வைஜெயந்தியின் உரையாடல்கள் அலுப்பினைத் தர ஆரம்பித்தது. நரேனின் சாகசங்கள் வயதானது போல தோன்றின. பிகேபியின் பரத், சுசீலா கூட அப்படித்தான் ஆகிப் போனார்கள்.

தொடர்ந்த என் வாசிப்பு, கல்லூரிப் படிப்பின் போது, ஜானகி ராமனின் மோகமுள் புத்தகத்தில் வந்து நின்றது. பூண்டிக் கல்லூரியின் நூலகருக்கு எனக்கு பதில் சொல்லிச் சொல்லியே சலித்து இருக்கும். மூன்று வருடப் படிப்பின் போது ஜானகிராமனின் மோகமுள் என்னிடம் சிக்கவே இல்லை. ஆனால் மோகமுள்ளின் மீதான பிறரின் பார்வைகள் மிகப் பெரும் ரகசிய ஆர்வத்தை அதன் மீது ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. குமுதத்தில் வெளி வந்த மோகமுள் திரைப்படத்தின் கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் எனது டைரியின் பக்கத்தில் நிரந்தரமாய் படமாக ஒட்டிக் கொண்டாள். அவளைப் பார்க்காது டைரியில் ஒரு எழுத்துக் கூட எழுத மாட்டேன்.

வாழ்க்கைச் சூழலின் மாறுபாட்டினால் கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணம் முடிந்து ஓடிக் கொண்டிருந்த போது, மோகமுள் மனதின் அடியாளத்தில் புதைந்து போய்க் கிடந்தது.

பவர் கட்டின் பிரதிபலனாக பல நூல்களைப் படிக்க வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டேன். வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து புத்தக அலமாரியை அணுகிய போது மனதுக்குள் ஒளிந்து கிடந்த “மோகமுள்” மெதுவாக வெளிவந்தது. நூலகரிடம் விசாரித்த போது இல்லையென்ற பதில் மோகமுள்ளின் மீதான ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.

இப்படியான தேடலில் போன சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் பிடித்தே விட்டேன் மோகமுள்ளை. யமுனாவின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தழுவிக் கொள்ள, திரைப்பட மோகமுள் யமுனாவிற்கும் ஜானகிராமனின் மோகமுள் யமுனாவிற்கும் எந்த வித தொடர்பும் இன்றி இருப்பதைக் கண்டு மனது அதிர்ந்தது.

ஜானகி ராமனின் யமுனா ஒரு முழு நிலவு(?). அவளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். 20 வருட ரகசியப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


குறிப்பு : மோகமுள் திரைப்பட கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் ஒரு கதக் நடன மாது. அவரின் வெப்சைட்டை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதோ அவரின் வெப்சைட் முகவரி.







Saturday, April 28, 2012

மனதுக்கு வலி தரும் காதல்

மூளை முதல் கொண்டு நரம்புகள் அனைத்தும் விரைத்து இதயம் துடி துடிக்க, உதிர அணுக்கள் எல்லாம் காதலியின் பெயரை உச்சரித்துக் கொண்டு உடம்பெல்லாம் பரவ, உதிரச் சூட்டின் வலி தாளாமல் உடல் சோர்ந்து வீழ, மனது வெந்து வெதும்பி வீழ, காதலியின் வருகைக்காக வரும் வழி பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போக, காதலியின் குரல் கேளாமையால் காதுகள் எல்லாம் பஞ்சடைத்து போக மொத்தத்தில் அவளின் நினைவாலே உருமாறிப் போய் நிற்கும் காதலனின் தவிப்பை கமல் இக்காட்சிகளின் வழியே உருவகப்படுத்துவார்.

இதோ அந்தப் பாடலும் காட்சியும் உங்களுக்காக.



- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Friday, April 27, 2012

போலி பிஸ்கட்டுகள் ஜாக்கிரதை

எனது நண்பரொருவர் வீட்டுக்கு வந்த போது பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் மற்றும் சில தின் பண்டங்களை வாங்கி வந்தார். அன்று மாலை டீயுடன் மூன்று பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டேன். இரவு வயிறு மந்தமாக இருந்ததால் ஒரே ஒரு தோசையுடன் இரவு உணவை முடித்து விட்டேன். நடு இரவில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. எழுந்து உட்கார்ந்ததும் வியர்த்தது. வயிற்றுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுத்தேன். மாலை நான்கு மணிக்கு சாப்பிட்ட பிஸ்கட் இரவு 11 மணி வரை ஜீரணம் ஆகாமல் இருந்தது.

மறு நாள் காலையில் நண்பருக்கு போன் செய்து பிஸ்கெட் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டேன். பிரபல பேக்கரி ஒன்றின் பெயரைச் சொன்னார். யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை.

டீத்தூளில் கலப்படம், பாலில் உரக்கலப்படம், பிஸ்கட்டில் போலி,இட்லி மாவில் சோடியம் என்று இன்னும் என்னென்ன செய்திருக்கின்றார்களோ தெரியவில்லை. கடைகளில் வாங்கிச் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருளிலும் விஷம் விஷம் விஷம்.

மனச்சாட்சியைத் தொலைத்து விட்டு மனிதர்கள் மிருகமாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நவ நாகரீக இந்தியப் பொருளாதார சந்தையின் பின் விளைவுகள். சாட்டிலைட் டீவிக்கள் வீட்டின் வரவேற்பறையில் விளம்பரங்களின் போதை மருந்தை தெளிப்பதன் விளைவு மனிதர்கள் தேவையற்ற பொருட்களுக்கு ஆசைப்படுகின்றார்கள். அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. நேர்மையாக உழைத்தால் உழைப்பவனுக்கு பைசா லாபம் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். வேறு வழி இன்றி இப்படியான நச்சுக் கொலைகளில் இறங்குகின்றனர்.  

இந்திய மக்கள் பேராசையின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்கள். எல்சிடி டிவி இருந்தாலே அவன் பணக்காரன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எல்யிடி டிவி, பிளாஸ்மா டிவி என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள். 40,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி இனி குப்பைக்குச் செல்லும். எல்யிடிக்கு அடுத்து என்ன டிவியோ? தினமொரு புதுப் பொருள் உதிக்கின்றது. பழைய பொருள் மார்க்கெட் போகின்றது. செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சந்திக்கும் நண்பர்கள் இன்னுமா பழைய போனை வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று நிச்சயமாய் கேட்பார்கள். அவர்கள் வைத்து இருக்கும் புது போனும் அடுதத ஆறு மாதத்தில் பழைய போனாகி விடும். இப்படியே தங்களிடம் இருக்கும் பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் அசுரக் கைகள் மக்களின் மூளைகளை காலி செய்து கொண்டிருக்கின்றன.

இத்துடன் இது முடியவில்லை. மேலும் மேலும் மனித குலத்திற்கு தீங்குகள் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கும். 

வாழ்வதற்கு என்னென்ன தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் சந்தோஷ வாழ்க்கை வாழ்கின்றார்கள். ஞாயிறு தோறும் குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லுபவர்களின் குடும்பங்களில் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

வாழ்க்கையிலும் போலிகள் புக ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே நண்பர்களே போலிகள் ஜாக்கிரதை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Sunday, April 22, 2012

முதன் முதலாய் பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் எழுதுகிறேன்

பரபரப்புச் செய்தி என்ற அரசியல் பத்திரிக்கையில் முதன் முதலாய் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் கட்டுரை வெளிவந்து இருக்கிறது. முதல் கட்டுரையே அசுர அடியாய் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். பத்திரிக்கை சென்னை மற்றும் கோவையில் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பும்படியான கட்டுரைகளை எழுதுவேன் என்று நம்புகிறேன். 



- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல் 

அக்குவாமரின் கற்கள் (Aquamarine Stones)



வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லாத மக்கள் இல்லவே இல்லை. தினமும் ஒவ்வொரு பிரச்சினை அதனால் ஏற்படும் மன உளைச்சல், மனவழுத்தம் என்று மனிதர்கள் நோய்களின் பிடிகளில் விழுகின்றார்கள். 

பிரச்சினையே வராமல் வாழ இவ்வுலகில் இடமே இல்லை. இடத்திற்கு தக்கவாறு, ஆளுக்குத் தக்கவாறு பிரச்சினைகள் நம்மைத் தொடர்ந்து கொண்டே தான் வரும்.

சிலருக்கு பிரச்சினைகள் வந்தால் குடியே முழுகிப் போனது போல தவித்துப் போய் விடுவார்கள். சிலர் மனதுக்குள் போட்டுப் புழுங்கிப் புழுங்கி மன நோய்க்கு ஆட்படுவார்கள். சிலர் கோபம் கொண்டு அடாத செயல்களைச் செய்ய முயல்வார்கள். சிலர் அவர்களுக்கே தெரியாமல் ஒரு பிரச்சினைக்காக பல பிரச்சினைகளைக் கிளப்பி மாட்டிக் கொள்வார்கள்.

யாரோ ஒரு சிலர் பிரச்சினைகள் வந்தால் இன்பமாய் அதை “டீல்” செய்வார்கள். பிரச்சினைக்கே பிரச்சினையை உருவாக்குவார்கள். பிரச்சினை அலறி அடித்து ஓடிப் போய் விடும். இப்படிப்பட்டவர்களிடம் மன அமைதி ஒரே மாதிரியாக இருக்கும்.

அப்படிப்பட்ட மன அமைதி தேவையெனில் சில கற்களை அணிந்து கொள்ளலாம் என்றுச் சொல்வார்கள். அதைக் காரணமாய் வைத்துக்கூட மன அமைதி கிடைக்கலாம். அப்படி ஒரு கற்களில் முதன்மையானது “அக்குவாமரின்” என்ற கற்கள்.

இக்கற்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கீழே இருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.
என்னிடம் பாலீஸ்டு, சர்ட்டிபைடு அக்குவாமரின் கற்களும், ரா கற்களும் இருக்கின்றன. மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்க விரும்புகிறேன். மேற்கண்ட கற்கள் தேவைப்படுவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன் எனக்கு எழுதவும்.

எனது மெயில் முகவரி : covaimthangavel@gmail.com 

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்.

சித்திரை மாதத்தில் பிறந்தால் சாதிக்கலாமா?

சித்திரை மாதம் பிறந்தால் நல்லது அல்ல என்று சொல்லுவார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் தான் சார்லி சாப்ளின், விக்டோரியா மகாராணி, சாமுவேல் ஜான்சன், ராணி எலிசபெத், மாவீரன் அலெக்ஸாண்டர், கார்ல் மார்க்ஸ், டார்வின், ஷேக்ஸ்பியர், லெனின், மனோன்மணியம் சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர்கள் சித்திரை மாதத்தில் தான் பிறந்திருக்கின்றனர் என்று தினமணியில் எழுதி இருந்தார்கள்.

ராணிகளைத் தவிர மற்ற அனைவரும் சின்னஞ் சிறு வயதில் பட்ட துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் சித்திரையில் பிறந்து சாதித்தவர்கள் பட்ட துயரங்களை விட சாதித்தவை பெரிதாக இருக்க முடியுமா என்று எனக்குப் புரியவில்லை.

துன்பங்கள் தான் வாழ்க்கையைச் செம்மைப் படுத்த இயலும் என்பார்கள். எனக்குப் பிடித்த அப்துற் றஹீம் அவர்கள் “வாழ்க்கை ஒரு முள் செடி போன்றது, அதில் பூத்திருக்கும் பூவில் இருக்கும் தேனை முள் குத்தாமல் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருக்கவே முடியாது” என்பார்.

வாழ்க்கை எல்லோருக்கும் இன்பமானதாய் இருந்ததாய் யாரும் சொல்லவில்லை. விரலுக்கேற்ற வீக்கம் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ஏழைக்கு ஒரு பிரச்சினை,பணக்காரனுக்கு ஒரு பிரச்சினை என்று பிரச்சினை இல்லாதோரை இவ்வுலகத்தில் காணுவதே அரிதென்றாகி விட்டது.

எந்த மாதத்தில் பிறந்தாலும், பிறப்பவர்களுக்கு பிரச்சினை வரத்தான் செய்கிறது. மாதத்தில் எதுவும் இல்லை, மனதில் தான் வாழ்க்கையின் இன்பமே இருக்கிறது என்கிறார் எனது ஆன்மீகவாதி நண்பர் ஒருவர்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்.

Friday, April 20, 2012

குழந்தைகளின் அழுகுரல்கள் அம்மாவிற்கு கேட்கவில்லையா?




உறவினரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக சென்றிருந்தேன். நகரமைப்பின் விதிகளுக்கு ஏற்ப நெருக்கமாய் கட்டப்பட்ட அழகிய வீட்டின் முன்பு நீண்ட வராந்தா, இடது பக்க சந்து வழியாக சிலுசிலுவென வீசும் காற்று.  பத்துக்குப் பத்து கிச்சன், பத்துக்கு பனிரெண்டு சைசில் ஒரு ஹால், பத்துக்கு பத்து சைஸில் ஒரு பெட்ரூம், பத்து நான்கு அடியில் ஒரு பாத்ரூம். இவ்வளவுதான் வீடு. மாத வாடகை ஐந்தாயிரம் ரூபாய். இதில் தண்ணீருக்கு தனி கட்டணம், மின்சாரத்திற்கு தனி கட்டணம். மாதம் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்கு மேல் வந்து விடும் என்று வைத்துக் கொள்ளலாம். இத்துடன் செலவு கணக்கை முடித்துக் கொள்வோம். இவ்வளவு வாடகை கொடுத்து, ஏன் தங்க வேண்டும். வீடு என்பது எல்லோருக்கும் தங்குமிடம் என்பதாகத்தான் புரிந்திருக்கும். ஆனால் வீடு என்பது அதற்கும் மேலே. வீடு மனிதனின் உயிர் நாடி. அவன் வாழ்வதும் வீழ்வதும் வீட்டில்தான். வீடு இல்லையென்றால் மனிதன் ஒரு அற்பன். காற்றில் பறந்து செல்லும் பஞ்சு போல அவனது வாழ்க்கை மாறி விடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டில், பெரும்பான்மையான நடுத்தர வருவாய் குடும்பங்களில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.



இரவு எட்டு மணி வாக்கில் வராந்தாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பது மணிக்கு பவர் கட் ஆனது. காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. பத்து மணியிலிருந்து பதினோறு மணி வரை மின்வெட்டு, பிறகு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை மின்வெட்டு என்று இரண்டு மணிகளுக்கு ஒரு முறை இரவில் மின்வெட்டு நிகழ்ந்தது. வீட்டிற்குள் வெப்பம் மைக்ரோவேவ் ஓவன் போல தகித்தது. சூடு தாங்காமல் வீட்டுக்கு வெளியில் வந்தால் பெரும்பான்மையான வீட்டின் வாசல்களில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் மின்வெட்டினைச் சமாளிக்கத் தூக்கத்தை இழக்க வேண்டி தெருவில் நின்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். சூடு தாங்காமல் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அழ ஆரம்பித்தன. தெருவெங்கும் குழந்தைகளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர் தகப்பன்கள். அந்த நேரத்தில் அவர்கள் செய்யும் அர்ச்சனைகளை காது கொடுத்துக் கேட்க முடிவதில்லை. விடிகாலை நான்கு மணிக்கு வேலைக்கு கிளம்புவோர் தூக்கமின்றி தவிக்கின்றனர். வண்டியில் செல்வோர் ஒரு நிமிடம் அசந்தால் ஆக்சிடெண்ட் ஆகின்றது. சரியான தூக்கமின்மையால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை தலைதூக்குகின்றன. பாட்டரி வாங்கி வைத்தால் கூட சமாளிக்க முடியவில்லை. பாட்டரி சார்ஜ் ஆனால் தானே தொடர்ந்து இயங்கும்.  கண்மண் தெரியாமல் குடித்து விட்டு போதையில் சாலையோரம் கிடப்போர்தான் இந்த மின் வெட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை மக்களுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டினை அமல்படுத்திய தமிழக அரசு பிற மாவட்ட மக்களுக்கு பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை பரிசாய் அளிக்கிறது. சென்னை மக்கள் இரண்டு வரிகள் கட்டுகின்றார்களா? இல்லை அவர்கள்தான் தமிழகத்தில் வாழ உரிமை உள்ளவர்களா? அங்கும் பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டியதுதானே? ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள்.

வீட்டுக்குள் தூங்கவும் முடியாமல், நிம்மதியின்றி தவிக்கும் சென்னை தவிர்த்த பெரும்பான்மையான தமிழக மக்களின் குழந்தைகள் வெப்பம் தாளாமல் இரவில் அலறுகின்றன. அம்மாக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள். தந்தைகள் துயரம் தாளாமல் மனதுக்குள் அழுகின்றனர். சீராட்டி, பாராட்டி வளர்க்கும் குழந்தைகளுக்கு தூக்கமில்லை. குழந்தைகள் தூங்கவில்லை என்று பெற்றோரும் தூங்கவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் தூக்கமின்றித் தவிக்கின்றார்கள்.

தாயுள்ளத்தோடு தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் “அம்மா” அவர்கள் தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான மின்சாரத்தினை குறைந்த பட்சம் இரவில் எந்த வித மின்வெட்டும் இன்றி வழங்க ஆவண செய்ய வேண்டும். கோவையின் பெரும்பான்மையான இடங்களில் இரவுகளில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை திருப்பி விட்டு, குடியிருப்புப் பகுதிக்கு மின்வெட்டினை அமுல்படுத்துகின்றார்கள் (பணம் பெற்றுக் கொண்டு) என்று காற்று வாக்கில் செய்திகள் கசிகின்றன. அதை உடனடியாக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும்.

குழந்தைகள் அழுகின்றன ! அம்மா கவனிக்கவில்லை என்று !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, April 16, 2012

சவக்கடை (அனைவரும் படியுங்கள் ப்ளீஸ்)




எனக்காக இன்றைக்கு மட்டும் ஒரு ஒரு தடவை என்று ஆரம்பிக்கப்படும் குடி, அடுத்து மாதமொருமுறை என்று மாறும். அடுத்து வாரம் ஒரு முறை என்றாகும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று மாறி, பின்னர் வீட்டிலேயே குடிக்கலாம் என்று (உபயம் : தமிழ் சினிமாக்கள்) மாறி, பின்னர் தினம் தோறும் ஒரு சுமால் பிறகு ஆஃப் என்று தொடர்ந்து புல் ஆகி விடும். பிறகு குடிக்காமல் இருந்தால் கைகள் நடுங்க ஆரம்பித்து, வேறு வழி இன்றி தினமும் உணவு போல குடி மாறி விடும். நோய்கள் உருவாகும். மருத்துவம் ஆரம்பிக்கும். குடிக்கான சிகிச்சை ஆரம்பிக்கும். 

முடிந்து வீடு வருபவருக்கு, ஒரு சொட்டு குடித்தால் என்ன என்று தோன்றும். வீட்டுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பிப்பார். நடுக்கமெடுத்த கைகள் குடியை நிறுத்தி மீண்டும் குடிக்க ஆரம்பித்த பிறகு தன்னை அறியாமலே உளற ஆரம்பிப்பார்கள். மனைவியை சந்தேகப்பட ஆரம்பிப்பார்கள். உறவினர்களுடன் வம்புக்குச் செல்வார்கள். நண்பர்களுடன் சண்டைக்குப் போவார்கள். வெளியிடங்களில் குடித்து விட்டு விழுந்து கிடப்பார்கள். ஆல்கஹால் உடம்பை முழுவதும் ஆக்ரமித்து இருக்கும் சூழலில் மனைவியை அல்லது நண்பர்களை கடித்து வைப்பார்கள். 

இந்த நிலை தான் ஆல்கஹால், தனக்கு அடிமையானவனை முடித்துக் கட்டக் கூடிய நிலை. அடுத்து திடீரென தற்கொலைக்கு முயல்வார்கள். ஆல்கஹால் இதைத்தான் செய்கிறது. குடிக்கும் மனிதனை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் சமூகத்தில் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளி கொன்று போடும். 

மானம் போய், மரியாதை போய், காசு போய், முடிவில் உயிரும் போய் விடும். குடும்பமும் நடுத்தெருவில் நிற்கும். குடிகாரன் மனைவி, குடிகாரன் மகள், மகன் என்று சமூகத்தில் ஒரு அடையாளமும் இலவசமாய் கிடைக்கும். 

யார் யாரெல்லாம் பீர் குடிக்கின்றார்களோ (வெயிலுக்கு குடிக்கிறேன் பேர்வழி என்று அலப்பறை செய்யும் லூசுகள்) அவர்களுக்கும் இதே நிலைதான். ஆல்கஹாலை எவன் ஒருவன் விரும்புவானோ அவனை அது பேயாய் பிடித்துக் கொள்ளும். எனது நண்பனொருவரின் அண்ணன் குடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆல்கஹாலின் பிடியில் எப்படி விழுந்தார் என்பதைத்தான் மேலே எழுதி இருக்கிறேன். ஆல்கஹால் குடிப்பது என்பது ஃபேஷன் அல்ல அது கொஞ்சம் கொஞ்சமாய் உடலுக்குள் ஆக்ரமித்துக் கொல்லும் விஷம். குடிப்பவர்கள் உடனடியாக நிறுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்.

டாஸ்மாக் என்பது சவமாய் மாற மனிதர்களை ஊக்குவிக்கும் ஒரு சவக்கடை என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா?

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

வெயிலில் நில்லுங்கள் வியாதியை துரத்துங்கள்



டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நண்பர்களுக்கு உடனடியாக தெரிவித்து விட வேண்டும் என்ற ஆவலில் இந்தப் பதிவு. 

விட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான ஒரு சத்து, இந்தச் சத்து கால்சியம் சம்பந்தமான பொருட்களை ஜீரணிக்கவும், அதை வெளியேற்றவும், எலும்புகளுக்கு உறுதியைத் தரவும் உதவுகின்றது. 60 பர்சண்டேஜிலிருந்து 90 பர்செண்டேஜ் இந்தியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் விட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விட்டமின் டியை பால் மற்றும் உணவு எண்ணெயில் சேர்த்தல் நலம் பயக்கும் என்பதாகும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

பால், எண்ணெய் பொருட்கள் மனிதனுக்கு கொழுப்பை உருவாக்கும் என்பதாலும், விட்டமின் டி மாத்திரைகள் அவ்வளவு நல்ல பலனை தராது என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விட்டமின் டியைப் பெறுவதே சாலச் சிறந்தது என்கிறார்கள்.

மனித உடலின் இருபது சதவீத பகுதியை வாரத்தில் இரண்டு முறை பதினைந்து நிமிடம் வெயிலில் காட்டினால் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைத்து விடும். சூரிய ஒளியில் நீச்சலடிப்பது, சூரிய ஒளியில் விளையாடுவது போன்றவையும் விட்டமின் டி உடலில் சேர உதவும். இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் " Cardio Vascular Disease, Rickets and Osteoporosis" நோய்கள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை என்கிற பதிவின் பின்னூட்டத்தில் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ சில விபரங்கள்.

பானி தண்ணீரில் புளிப்புச் சுவைக்காக சாட் மசாலாவுடன், மோனோ சோடியம் குளுடோ மேட் என்கிற கெமிக்கல்ஸ் சேர்த்து அதிகப் புளிப்புத் தன்மையை ஏற்றுகிறார்கள். அத்துடன் ரசாயனச் சாயங்களும் கலக்கப்படுகின்றனவாம். இந்தக் கலவையை இரண்டு நாட்களுக்கும் மேல் ஊற வைத்து, அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றார்கள். அதீத புளிப்புச் சுவை கொண்ட இந்த வகை பானி, அல்சரை உருவாக்கும். அல்சர் இருப்பவர்கள் தொடவே கூடாது. அதுமட்டுமல்ல இப்பானியைச் சாப்பிட்டால் உடனடி வயிற்று வலியுடன், நாள்பட பசியும் அறவே குறைந்து போய் விடும். சாலையோரங்களில் விற்கப்படும் இவ்வகை இன்ஸ்டண்ட் உணவு வகைகள் தயாரிப்பாளர்கள் சாப்பிடும் நபர்களின் ஆரோக்கியத்தை ஒரு கணம் கூட எண்ணிப் பார்ப்பதே இல்லை.

எனது ஆரம்ப காலங்களில் நான் பெரும்பாலும் சற்றே சுத்தமான இடங்களில் இருக்கும் சாலையோரக் கடைகளில் எப்போதாவது சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை மனைவி வெளியூர் சென்றிருந்த சமயம், குழந்தைகளுடன் எனக்கு நன்கு அறிமுகமான நண்பரொருவரின் சாலையோரக்கடையில் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வந்தோம். அதன் பலனாய் மூவருக்கும் வாய்ப்புண் உண்டாகி, தொண்டையில் அழற்சி ஏற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது.

விசாரித்துப் பார்த்தால் இட்லி மாவில் புளிப்புச் சுவைக்காக சோடியம் தண்ணீர் கலப்பதாக அறிந்தேன். ஒரு வாளியில் தண்ணீர் போன்ற ஒன்றினைக் கொண்டு வந்து அளவாக கலந்து இட்லி தோசை மாவுகள் விற்பனையாளர்கள் விற்கின்றார்கள்.அதுமட்டுமல்ல சில ஹோட்டல்களில் விற்கும் மீன் குழம்பில் இதே சோடியம் கலந்த தண்ணீர் கலக்கப்பட்டு வருகின்றனவாம்.

காசு போனாலும் பரவாயில்லை என்று உயர்தரமான ஹோட்டல்களில் தயிர்சாதம், கொஞ்சம் காய்கறிகள் சாப்பிடுவதே சாலச் சிறந்தது என்கிறார் எனது நண்பரொருவர். இன்னொரு நண்பரோ பேசாமல் பழக்கடையை நோக்கிச் சென்று விடலாம் என்றார். ஆனால் பழங்கள் உடலுக்கு நன்மையைத் தருகிறதா என்று கேட்டால் மருத்துவ நண்பரொருவர் சொன்ன சில விபரங்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருந்தன. அது என்ன? விரைவில்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்