குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, February 16, 2025

ஜோர்கன் மோனாக்ஸைடு - ஒரு நிறுவனத்தை அழிக்கும் உத்தி

ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான நிதி கோரி வரும் ஆவணங்களைப் படிக்கிறேன். இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை இல்லாமல் இயங்கி காணாமல் போன பல நிறுவனங்கள் லட்சக்கணக்கில் உண்டு. அவை எல்லாம் தினசரிகளில் ஏலத்துக்கு வருகின்றன.

ஷேர் மார்க்கெட்டில் நிஃப்டி 50 யை தவிர பல கோடிக்கணக்கான நிறுவனங்களின் பங்கு மதிப்பு பற்றி கேள்வியை எழுப்புங்கள். அதன் பதில் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடலாம். 

அடியேன் முதலீடு கோரி வரும் நிறுவனங்களின் நிதி மேலாண்மை ஆட்களுடன் பேசி வருகிறேன். பேசிக் கொண்டும் இருக்கிறேன். அவர்கள் உண்மையை எப்போதும் தெரிந்து கொள்வதே இல்லை.

எளிதாக ஒன்றே ஒன்றினை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு நிறுவனத்தின் அல்டிமேட் எய்ம் என்ன? லாபம் சம்பாதிப்பது. அவ்வளவுதான். இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யகூடாது என்பதை நிதி மேலாண்மை செய்யும் நபர்கள் முடிவு செய்வார்கள்.

சமீபத்தில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் தலைவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் நிறுவனம் தற்போது நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர் என்னிடம் சொன்னார். நல்ல மதிப்பான உயர் கல்வி நிறுவனங்களில் படித்தவர்களை உயர் சம்பளத்தில் வேலைக்கு வைத்தேன். அதன் தொடர்ச்சியாக லாபத்தில் இயங்கிய நிறுவனம் நட்டத்திற்குச் சென்று விட்டது. என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை என்று புலம்பினார்.

இது அவரின் தவறு. அவரின் முடிவுகள் தினசரிச் செய்திதாள்களின்  ஊடானவை. 

அதென்ன ஜோர்கன் மோனாக்ஸைடு என்கிறீர்களா? இனி அதைப் படியுங்கள். உங்களுக்கே புரியும்.

கார்ப்பரேட் புற்றுநோய் : ஒவ்வொரு நிறுவனத்தில் ஒரு அமைதியான கொலைகாரன் இருக்கிறான். அது போட்டி, மோசமான பணியாளர்கள், அல்லது தவறான வணிக திட்டங்கள் அல்ல. அது ஜார்கன் மோனாக்சைடு—அர்த்தமற்ற கார்ப்பரேட் பேச்சுகள், மின்னஞ்சல்கள், மற்றும் உத்தியோகபூர்வ சமீபத்திய ஆவணங்களில் ஊறி, தெளிவான சிந்தனை மற்றும் உண்மையான செயல்களை தடுக்கும் விஷ வாயு. ஆங்கிலத்தில் இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். 

Jargon Monoxide: The Corporate Cancer That’s Killing Businesses

There’s a silent killer in your company. It’s not competition, bad hires, or even a broken business model. It’s jargon monoxide—a steady stream of meaningless corporate gibberish that seeps into meetings, emails, and strategy decks, suffocating clear thinking and real action.

You’ve heard it before. The executive who insists “We need to leverage cross-functional synergies to enhance stakeholder engagement.” The consultant who claims “Our approach is to drive transformational outcomes via customer-centric innovations.”

Translation: Nobody knows what the hell they’re talking about.

Jargon monoxide is what happens when people prioritize sounding smart over being smart. It’s corporate carbon monoxide—odorless, invisible, and quietly poisoning your company’s ability to think clearly and execute fast.

How Jargon Monoxide Spreads :

It starts with one person trying to sound more competent than they are. Instead of saying “We need to sell more,” they say “We must drive topline revenue expansion by leveraging omnichannel opportunities.”

No one wants to be the idiot who asks, “Wait, what?” so they nod along. Before you know it, every meeting is filled with people saying things like, “We need to optimize synergies to unlock value through scalable innovation.”

It’s a linguistic arms race. The minute one person starts talking like a McKinsey PowerPoint, everyone else has to keep up or risk looking uninformed. The result? A workplace where people talk in loops, meetings take twice as long as they should, and nobody actually does anything.

The Four Flavors of Jargon Monoxide

Jargon monoxide isn’t just one thing—it’s a disease with multiple strains, each more toxic than the last.

First, there’s convoluted crap. This is when a simple idea gets buried under unnecessary complexity. A restaurant owner could say, “We need to serve food faster.” Instead, they say, “We’re optimizing throughput via enhanced queue management solutions.” If your sentence could double as the instruction manual for a nuclear reactor, you’ve lost the plot.

Then, we have meaningless text —sentences that sound impressive but say absolutely nothing. Think of a tech CEO proudly declaring, “We’re driving a paradigm shift in agile methodologies to disrupt legacy frameworks.” What does that even mean? Nothing. But people still nod as if they just heard the wisdom of Socrates.

Next is in-group lingo—words designed to make outsiders feel stupid. A finance executive might say, “We need to enhance our liquidity position through a more favorable capital structure optimization process.” Translation: “We need more cash.” If a smart person outside your industry wouldn’t understand what you’re saying, you’re not communicating—you’re gatekeeping.

Finally, there’s the jargon blender—when someone just throws together every buzzword they can think of and hopes no one notices. Ever read a company’s mission statement and seen something like, “Our mission is to empower scalable, AI-driven, next-gen solutions to revolutionize the digital ecosystem”? That’s not a strategy. That’s a Mad Libs page from a management consultant’s notebook.

Why Jargon Monoxide is Killing Your Company

This isn’t just annoying. It’s actively making your business worse.

First, it wastes time. If every meeting needs an extra 20 minutes to decode what people are actually saying, your company is moving at half speed.

It also leads to bad decisions. When ideas aren’t clearly explained, nobody can tell the good ones from the bad. If you pitch a project as “a disruptive, game-changing initiative leveraging best-in-class technology,” it sounds amazing. But what are you actually doing? Spending millions on an app nobody needs?

Jargon monoxide also destroys morale. Nobody wants to work at a company where leadership speaks in riddles. People don’t quit companies; they quit bosses who can’t communicate.

And it pushes customers away. If your marketing sounds like a legal contract, customers will go somewhere else. Nobody trusts a company that says, “We offer scalable, AI-powered, cloud-native solutions that revolutionize the digital ecosystem.” They trust the company that says, “We make software that helps you run your business faster.”

How to Kill Jargon Monoxide

The antidote? Call it out.

Next time someone in a meeting says, “We need to align cross-functional synergies,” stop them and ask, “What does that actually mean?” If they can’t explain it in simple terms, they probably don’t understand it themselves.

Set a rule: no buzzwords without definitions. If someone says, “We need to be more customer-centric,” ask them, “Okay, what does that look like in practice?”

Write like a human. If your emails read like a corporate memo from 1987, rewrite them. Cut the fat—if a sentence can be five words instead of fifteen, make it five.

And most importantly, reward clarity. The best leaders don’t tolerate empty words—they push their teams to think clearly, explain things simply, and focus on real outcomes.

Final Thought: Simplicity is a Superpower

Great companies move fast, and fast companies communicate clearly. Jargon monoxide is a sign of a slow, bureaucratic culture—one that’s more interested in looking smart than being effective.

The best CEOs don’t hide behind complexity. They say what they mean, get to the point, and expect their teams to do the same.

So next time you hear someone say, “We need to unlock synergies through innovative, best-in-class solutions,” take a deep breath and reply:

“Or… we could just get to work.”

படித்து விட்டீர்களா? புரிந்து விட்டதா?

புரியவில்லை என்பவர்களுக்கு ஒன்றும் சொல்ல இயலாது. 

வளமுடன் வாழ்க..!

Sunday, February 2, 2025

இந்திய ஒன்றியத்தின் 2025 ஆண்டு பட்ஜெட் - ஒரு பார்வை

இன்றைய ஆங்கில தினசரிகளிலும், ஒரு சில தமிழ் தினசரிகளிலும் 12 லட்ச ரூபாய்க்கு வருமான வரிக்கட்ட வேண்டியதில்லை என்பதைப் பெரிதாகப் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசு 140 லட்சம் கோடி கடன் வாங்கப்போகிறதே ஏன் எனக் கேட்கவில்லை.  வரி விலக்கு அளித்திருக்கிறது - மக்களுக்கான பட்ஜெட் - இந்தியா வளர்கிறது - வளர்ச்சிக்கான பட்ஜெட் என சொரிந்து விட்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசு வீசும் காசுக்கு கூவும் சேவல்கள் இவர்கள். நாளை சேவல்கள் எண்ணெயில் பொறித்தெடுக்கப்படும் என்பது தெரியாதவர்களா இவர்கள். எல்லாமும் தெரியும். ஆனால் இப்போதைக்கு கூவுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. இனித் தொடருங்கள்.

ர்வதேச நாடுகளில் பின்பற்றப்பட்டும்  நிதி ஒதுக்கீட்டு தரவுகளின் படி ஜிடிபி சதவீதத்தில் கல்விக்கு 6 சதவீதம், சுகாதாரத்துக்கு 6 சதவீதமும் குறைந்தப்பட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

இந்திய நாட்டின் 15 சதவீத மக்கள் தனியார் மருத்துவமனையிலும், 45 சதவீத மக்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெறுகின்றனர். மீதமுள்ள 40 சதவீத மக்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் செத்துப் போகிறார்கள்.

இந்திய பட்ஜெட் 2025ல் இந்திய ஒன்றிய அரசு கல்விக்கு 2.3 சதவீதமும், சுகாதாரத்துக்கு 1.8 சதவீதமும் ஒதுக்கியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி இந்த பட்ஜெட்டை மக்களுக்கான பட்ஜெட் என சொல்கிறார். 

இந்திய மக்களின் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் உலகத்தரவுகளின்படி நிதி ஒதுக்காமல் மிகவும் குறைந்த பட்சமாக ஒதுக்கி விட்டு - இது மக்களுக்கான பட்ஜெட் எனச் சொல்வது எந்த வகையில் சரியென அவருக்கே வெளிச்சம். அவர் எப்போதும் இப்படித்தான். 

ஒரு சாயா குடித்தால் போதும் பசி தீர்ந்து விடும் என நினைப்பார் போல. அது அவரின் நினைப்பு. ஆனால் உண்மை அதுவல்ல.

விவசாயிகள் வைத்திருக்கும் கடன் சுமை 8.75 லட்சம் கோடி.  இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியான மிகவும் குறைவானது. 14 கோடி விவசாயிகளில் ஒருவருக்கு 1224 ரூபாய் மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது 1.71 லட்சம் கோடி ரூபாய். 

கார்பொரேட்டுக்கு 5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கியில் 14.56 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களின் கடன்கள் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. பெரு நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

மேல்தட்டு பணக்கார மக்களின் 92 சதவீதமும், நடுத்தர மக்களில் 68 சதவீதமும், ஏழைகளில் 42 சதவீதம் பிள்ளைகளே கல்வி கற்கிறார்கள்.  

பண வீக்கம் 6.5 சதவீதமாக இருப்பதால் பெற்றோர்கள் விலையுயர்வினால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு விடுவதால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை மறக்கிறார்கள். அதுமட்டுமின்றி 25 வயதுகுட்பட்டவர்களில் 28.5 சதவீதமும், 35 வயதுகுட்பட்டவர்களில் 18.2 சதவீதமும், 45 வயதுக்குட்பட்டவர்களில் 12.4 சதவீதமும், 60 வயதுக்குட்பட்டவர்களில் 8.5 சதவீதம் ஆட்கள் வேலையின்றி இருக்கிறார்கள்.

உணவுப்பொருட்கள் 12.5 சதவீதமும், மருந்துகள் 15.8 சதவீதமும், போக்குவரத்துக்கு 18.2 சதவீதமும், கல்விக்கு 22.4 சதவீதமும் விலைவாசி உயர்வு அடைந்துள்ளது. ஆனால் ஊதிய உயர்வோ 4.2 சதவீதமாக உள்ளது. 

இந்த வருடம் பொதுத்துறைச் சொத்துக்களை விற்பதால் 10 லட்சம் கோடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதால் இன்னும் வேலை வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும்.

இந்த வருடம் 140 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறது இந்தியா. ஒவ்வொருவரின் மீதும் கடன் 1.4 லட்சம் ரூபாய். இந்த பட்ஜெட் வெளி நாட்டு மூலதனத்தைச் சார்ந்து உள்ளது.  இந்த பட்ஜெட்டின் உள் ரகசியம் என்னவென்றால் உள் நாட்டு உற்பத்தியைக் குறைப்பது, சமூகத்தின் நலன்களை முற்றிலுமாக நிறுத்துவது, சமத்துவமின்மையை அதிகரித்து பதட்டத்தை உருவாக்குவது.

ஏனென்றால் இந்தியாவில் உள்ள மொத்த சொத்தில் மேல்தட்டு உயர்பணக்கார வர்க்கத்திடம் 40.5 சதவீதம் சொத்துக்கள் உள்ளன. அடுத்த நிலையில் உள்ள 9 சதவீதம் மக்களிடம் 35.8 சதவீதம் சொத்துக்கள் உள்ளன. 40 சதவீத மிடில் கிளாஸ் மக்களிடம் 20.6 சதவீதம் சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத மக்களிடம் 3.1 சதவீதம் சொத்துக்களே உள்ளன.

இந்தியா எல்லாருக்குமான நாடு என்றால், மக்கள் பட்ஜெட் என்றால் இந்தச் சொத்துப் பகிர்வானது உயர்வடைந்திருக்க வேண்டும். ஆனால் உயர்வடைய விடமாட்டார்கள். அரசு வெகு கவனமாக ஏழைகளின் நிலையை உயரவே விடாது. அதைத்தான் பிரதமர் மக்களின் பட்ஜெட் என்கிறார். அந்த மக்கள் 1 சதவீதம். இதர மக்கள் அடிமைகள் என்பதுதான் இதன் உள்ளர்த்தம்.

அரசியல் சார்பற்று கிடைத்திருக்கும் தரவுகளின் படி இக்கட்டுரையை எழுதி இருக்கிறேன். இன்னும் இருக்கிறது எழுதுவதற்கு. ஆனால் என்னால் முடியவில்லை. 

ஒவ்வொரு ஆளும் அரசும் ஏன் இப்படி கொடூர மனப்பான்மையில் ஆட்சி செய்கிறது? இதை மக்கள் உணராமல் - பல சிக்கல்களுக்குள் சிக்கி தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. மக்களை ஒன்றாக சேர்ந்து இணைந்து வாழவே விடாத மதம், மொழி, இனம், சாதி, மா நிலம் எனப் பிரித்து வைத்துக் கொண்டு - ஒரு சிறு கூட்டம் காலம் காலமாக மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் பட்டவர்த்தனமாய் தெரிகிறது. ஆனாலும் மக்கள் எப்போதும் திருந்தவே போவதில்லை என்பது எவராலும் மறுக்கவே முடியாத உண்மை.

மற்றபடி வருமான வரி விலக்கு - பஞ்சு மிட்டாய் போன்றது. ஏற்கனவே ஜி.எஸ்.டி மூலம் வரிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. 50 சதவீத மக்களிடம் இருக்கும் 3.1 சதவீதச் சொத்துக்களையும் இனி பறித்து விடும் இந்திய அரசின் பட்ஜெட்.

வளமுடன் வாழ முடியாது. நலமுடனும் வாழ முடியாது என்பதால் - ஒன்றும் சொல்வதற்கில்லை.

செய்தி ஆதாரம் : 02.02.2025 தேதியிட்ட தீக்கதிர் நாளிதழ், தினகரன் நாளிதழ்.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் ஜால்ரா செய்தி

நன்றி : தீக்கதிர், தினகரன், பிசினஸ் ஸ்டாண்டர்ட்

Monday, January 20, 2025

பிக்பாஸ் 8 - முத்துகுமரன் வெற்றி - ஒத்துக்கொள்ள வைக்கும் வியாபார உத்தி

பிக்பாஸ் 8 - மக்கள் செல்வன் (ரம்மி விளையாடச் சொல்லும் விளம்பரதாரரின் விளம்பரக் கட்டணத்தில் சம்பளம் வாங்கியவர்) உலக நடிப்பு கலைஞர், உத்தம புத்திரன், எதார்த்தவாதி, நடிகர், ஹீரோ, வில்லன் எனப் பன்முகம் காட்டும் பல திறமைகளை உள்ளே வைத்துக் கொண்டு, ஒரு சிலவற்றை மட்டும் வெளியில் விட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேத்துபதி அவர்கள் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார். 

எவ்வளவு பெரிய சாதனை? விஜய் சேத்துபதி பிக்பாஸ் வீட்டிலிருந்தோரிடம் பல பாடங்களைக் கற்றுக் கொண்டாராம். எல்லோருக்கும் அந்த வீடு பாடம் எடுத்ததாம். 

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் - பள்ளிகளை இழுத்து மூடி விடுங்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் எல்லோரையும் அனுப்பி வையுங்கள். வீடு பாடம் எடுத்து மிகச் சிறந்த திறமையாளர்களை - அதுவும் நம்ம பிரதமர் வாரம் 100 மணி நேரம் உழைப்பது போல, பல திறமையான உழைப்பவர்களை உருவாக்கி விடும். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சீசனைப் பார்த்து, ரசித்து, ருசித்து மகிழ்ந்த ஒவ்வொருவரின் வங்கி அக்கவுண்டிலும் சுமார் 40,50,000 ரூபாயைப் வழங்கி, அதனைப் பெற்று மக்கள் மகிழ்ந்த மிகச் சிறந்த சீசன் பிக்பாஸ் 8. அந்தளவுக்கு மக்களால் ரசிக்கப்பட்ட, ருசிக்கப்பட்ட, விரும்பப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8.

விஜய் டிவிக்கும் - உலகளவில் மக்களுக்காகவே நிறுவனம் நடத்தி - மக்களை மகிழ்வித்து மகிழும் எண்டமோல்ஷைன் இந்தியா நிறுவனத்துக்கும் -  தமிழ் ரசிக மக்களின் சார்பாக ஒரு வணக்கம்.

நம்ம பிரதமர் குஜராத்தில் பிரதமராக இருந்த போது,  இந்தியாவின் ஒரே ஒரு நம்பிக்கை என்று நாமெல்லாம் டிவிட்டர், ஃபேஸ்புக், பத்திரிக்கைகள், யூடியூப் ஆகிய உண்மையாளர்களின் உரைகற்களிடமிருந்து கற்று, அவரையும் தேர்ந்தெடுத்து, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

யூடியூப் சானல்களில் வழித்து, ருசித்து, எச்சில் ஒழுக சாப்பிடும் வீடியோக்கள் மூலம் முத்துகுமரனை பார்த்திருப்போம். ஒரு சில வீடியோக்களில் பேசியதையும் பார்த்திருப்போம். அதைத் தவிர அவனிடம் வேறு என்ன இருந்தது எனத் தெரியவில்லை. பட்டிமன்ற பேச்சுக்கள் வெற்று வார்த்தைகள். பொழுதினைக் கழிக்கலாம். ஆனால் ரசிக்க முடியாது.

பிக்பாஸ் 8 - வீட்டுக்குள் வந்த நாள் முதல் கொண்டு - அவன் சக போட்டியாளர்களை மனதளவில் சிறுமைப்படுத்துவதை வேலையாகவே வைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நிகழ்விலும் அவனின் முடிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. அவனின் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பான். இதர போட்டியாளர்களை அவன் வழி நடத்தினான். ஆட்டு மந்தை போல செயல்பட்டார்கள் இதர போட்டியாளர்கள்.

ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கூட்டணி வைத்தான். ஜெயித்ததும் அதற்கு அவனே காரணம் என்பான். ஆனால் எல்லோரும் வெற்றி பெற்றிருக்க வேண்டுமென்பான். சக போட்டியாளர்களிடம் நீங்கள் ஜெயித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பான். ஆனால் நீதான் எனக்கு போட்டியாளர் என்பான். நான் என் கேமை விளையாடுகிறேன் என்பான். ஒரு சிலரை மூளைச்சலவை செய்து - அவன் மட்டுமே வெற்றிக்குத் தகுதி எனச் சொல்ல வைப்பான். தனக்கு எதிராக களம் இறங்கிய மஞ்சரியை வெகு நாசூக்காக கூட இணைத்துக் கொண்டான். அவரை தன் சகோதரி என்றான். சவுந்தர்யாவுக்கு ஒன்றுமே தெரியாது என ஒவ்வொரு தருணத்திலும் சொல்லிக் கொண்டே இருந்தான்.  ரயான் வெற்றி பெற்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. விஷால் 5 லட்சம் எடுத்தை வெறுத்தான். பரிசுப் பணம் குறைகிறதே எனக் கவலைப்பட்டான். பிக்பாஸ் குரலை விட - அவன் தான் இந்த பிக்பாஸ் 8 சீசனையே நடத்தினான். இந்த சீசனில் அவன் குரலே எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. பிக்பாஸ் குரல் அமுங்கி விட்டது.

பிக்பாஸ் 8 - முத்துகுமரன் வெற்றி அடைவதற்காக நடத்தப்பட்டது. பிக்பாஸ் குழுவினரும் அவனுக்காகவே உழைத்தனர். 

ஏன்? இதற்குப் பின்னால் உள்ள மர்மம் தான் என்ன?

தமிழ் - தமிழர் - இந்த தமிழ் நாட்டில் நல்ல வியாபாரம் ஆகும் உணர்வுகள். வார்த்தைகள். எண்டமோல்ஷைன் இந்தியா இந்த உத்தியைப் பயன்படுத்தியது. விஜய் டிவி பயன்படுத்திக் கொண்டது.

சோஷியல் மீடியாக்களில் முத்துக்குமரனின் மார்க்கெட்டிங் டீம் இதர போட்டியாளர்களை வெகு கடுமையாக, அசிங்கமாக விமர்சித்தது. ஆனால் அவனுக்கும் இதற்கும் தொடர்பே இல்லையென்பது போல நடந்து கொண்டான்.

ஒரு கட்டத்தில் எல்லாப் போட்டியாளர்களுக்கும் தெரிந்து விட்டது. இந்த பிக்பாஸ் 8ன் வெற்றியாளர் முத்துகுமரன் என. அனைவரும் ஒரு வழியாக ஒதுங்கிக் கொண்டனர்.

எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைக்கும் நரித்தந்திர வியாபார அரசியல் உத்தி இது. விஜய் டிவி தமிழ் - தமிழர் என்ற வியாபார உத்தியை சிரமேற்க் கொண்டுள்ளது. 

இனி திராவிடத்துக்கு எதிரான ஒரு உத்தியை இவர்கள் உருவாக்குவார்கள். திராவிடத்தினை உடைத்தால் தான் அரசியல் செய்ய முடியும் என இனி ஒவ்வொருவரும் ஆரம்பிப்பார்கள். 

பிக்பாஸ் 8 - நடத்தியது முத்துக்குமரன். இது எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே ஒரு நயவஞ்சகனுக்கு விருது வழங்கப்பட்டு ஆட்டம் துவக்கப்பட்டிருக்கிறது.

வளமுடன் வாழ்க..!

Saturday, January 11, 2025

ரூடோஸ் - நினைவில் நீங்காத பாசக்காரி

2025 ம் வருடம் முதல் பதிவு. வேறு பதிவு எழுதி விட்டு, தொடரலாமா என நினைத்தேன். ஆனால் நிதர்சனம் அதுவல்லவே. தினம் தோறும் ஒரு நாளை இழந்து கொண்டே தான் பயணிக்கிறோம் வெற்றியை நோக்கி?!  நாளை நம் நாளே என்பதெல்லாம் வெற்று வார்த்தை அல்லவா? ஒவ்வொரு நாளும் நம்மை விட்டுப் பிரியும் போது, இழப்பைத்தான் சந்திக்கிறோம்.

ஆகவே இனி...!

அவள் வீட்டுக்கு வந்த நாள் நினைவிலிருக்கிறது. 

ரித்திக் நந்தா கையில் ஒரு சிறு அழுக்கான குட்டியுடன் வீட்டு வாசலில் நின்றிருந்தான். 

”அப்பா..! கேட்டைத் திறந்தேன். வீட்டுக்குள் வந்தது. வளர்க்கலாம்பா...!”

இளம் பிராயத்தில் ஆவணம் கிராமத்தில் செவலையனும், கருப்பனும் என்னுடன் வளர்ந்தார்கள். செவலையனை பக்கத்து வீட்டு மல்லிகாக்கா (இந்தக்கா செத்துப் போச்சு) கருவாட்டில் வெங்காய வெடியை வைத்து - அவன் அதைக் கடித்த போது இடது வாய் கிழிந்து போய் பற்கள் எல்லாம் வெளியில் தெரிந்தன. புழு வைத்து, என் கண் முன்னாலே செத்து போனான். கருப்பன் என்ன ஏதுவென்று தெரியாமல் செத்துக் கிடந்தான். நினைவிலாடியது. மறுத்தேன்.

“அப்பா...! ப்ளீஸ்” என்றான். பிள்ளைகள் கேட்டு எந்தத் தகப்பனால் மறுக்க முடியும்? வேண்டா வெறுப்பாய் தலையாட்டி வைத்தேன்.

கோதை மூன்று மாத குழந்தையான, தத்தி நடை போட்டு வந்த, அவளை நன்கு குளிப்பாட்டி, மறுநாள் கால் நடை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று தடுப்பூசிகள் போட்டுக் கொண்டு வந்தாள். ஜோதி சுவாமியிடம் சொன்னேன். அவர் தான் அவளுக்கு “ரூடோஸ்” எனப் பெயரிட்டார். 

அவளின் கண்கள் மஞ்சள் வண்ணமாய் இருக்கும்.  அவளின் கண்களில் ஒரு சோகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். 

மறுநாள் கோதை ஐஸ்கிரீம் வாங்கி வந்தாள். வாசலோரம் நின்று கொண்டிருந்தவள் வீட்டுக்குள் வந்தாள். அவளுக்கு ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் கொடுத்து விட்டு, இனி மேல் வீட்டுக்குள்ளே வரக்கூடாது என்று சொன்னேன்.

உங்களால் நம்பவே முடியாது. அவளின் இறப்பு வரை வீட்டு வாசப்படியைத் தாண்டி உள்ளே வந்ததே கிடையாது. என் வார்த்தைக்கு அவள் கொடுத்த மரியாதை.

மனைவியும், பிள்ளைகளும் என்றேனும் ஒரு நாள் சொல் பேச்சு கேட்கமாட்டார்கள். அவள் கடைசி வரை அந்தச் சொல்லைக் காப்பாற்றி வந்தாள். அது அவளால் மட்டுமே முடியும். வேறு எதுவாலும் முடியவே முடியாது.

விடிகாலையில் கோதை எழுந்து, முகம் திருத்தி அடுக்களைக்கு வந்த உடன் ரூடோஸுக்கு குக்கரில் சோறு வேக வைப்பாள். 

அவளுக்கு தான் முதல் உணவு தயாரிப்பாள்.

கடந்த ஒரு மாதம் முன்பாக அவள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டாள். அன்றிலிருந்து எனக்கு உணவு இறங்கவில்லை. கோதை சோகத்தில் பீடித்து விட்டாள். எனக்குள் சொல்லொண்ணா வலியும் வேதனையும் தொடர்ந்து கொண்டே இருந்தது. எங்கே இருந்தாலும் அவள் நினைப்பு வர மனம் கனத்து விடும். 

விளாங்குறிச்சி வீட்டில் மாலை நான்கு மணி ஆனதும் கேட்டைப் பார்த்து உட்கார்ந்து விடுவாள். பிள்ளைகள் இருவரும் பள்ளியிலிருந்து வரும் நேரம் அது. அவர்களுக்காக காத்திருப்பாள். அவர்கள் வந்ததும் ஒரு ஆட்டம், துள்ளல். இருவருடனும் வாக்கிங்க் சென்று வருவாள். காருண்யா வீட்டில் நான்கு மணி ஆனால் போதும். வாசலுக்கும் வீட்டுக்குமாக ஓடிக் கொண்டிருப்பாள். வாசல்படியில் தலை வைத்து கல்லூரி நோக்கி பார்த்துக் கொண்டிருப்பாள். ரித்திக் வந்ததும் அவனுடன் வெளியில் ஒரு வாக்கிங்க் சென்று விட்டு வருவாள்.

அவள் தூய்மையானவள். ஒன்றுக்கு இரண்டுக்கு போகும் இடம் வெகு சுத்தமாக இருக்க வேண்டும். சாப்பிடும் உணவு சுத்தமாக இருக்க வேண்டும். நிதானமாகச் சாப்பிடுவாள்.

அடுக்களையில் அவளுக்கு என தனிப் பாத்திரத்தில் உணவு எடுக்கும் போது, எங்கனம் தெரியுமோ தெரியாது. குலைக்க ஆரம்பித்து விடுவாள். கோதை கேட்டுக்கு வெளியில் நின்று எவரோடும் பேசி விடக்கூடாது. அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

என்னுடன் எப்போது உரசிக் கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு. கைகளுக்குள் நுழைந்து, கைகால்களை நக்கி விட்டு, அவளைத் தடவிக் கொடுக்கச் சொல்வாள். 

புத்திசாலி அவள். இரண்டு துண்டு கேக் கொடுத்தால், இரண்டையும் எச்சில் செய்து வைத்து விட்டு, பிறகு நிதானமாக சாப்பிடுவாள். வேறு எவரும் தொட்டு விடக்கூடாது அல்லவா?

எங்கே சென்று வந்தாலும் அவளுக்கு உணவும், எலும்பும் வாங்கி வருவது எனது வாடிக்கை. எலும்பை நிதானமாகச் சாப்பிடுவாள்.

ஞாயிறு தோறும் ரித்திக்கும், நிவேதிதாவும் குளிப்பாட்டி விடுவார்கள். நடுங்கிக் கொண்டிருப்பாள். அவளுக்காக ஃபேன் போட்டேன். அவளுக்காக படுக்கை வாங்கி வந்து போட்டேன். பவுடர் மற்றும் இன்னபிற அயிட்டங்களை வாங்கி வந்து கொடுத்தேன். 

வீட்டின் இளவரசியாக எங்களுடன் வாழ்ந்து வந்தாள்.

அவளுக்காக மணி வந்தான். அவனுடன் அவள் விளையாடினாளே ஒழிய, அவனை அவளுடன் சேர்த்துக் கொள்ளவே இல்லை. பெரியவனாக வளர்ந்து விட்டான். அவனைச் சமாளிக்க முடியவில்லை. அவனை தெரிந்தவர் ஒருவர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஒன்றரை வருடம் முன்பு கிட்னி ஃபெயிலிராகி இறந்து போனான்.

ரூடோஸுக்கு குட்டி போட முடியவில்லை. கர்ப்பப் பையில் கோளாறு. சுமார் 25000 ரூபாய் செலவு செய்து ஆபரேசன் செய்து கர்ப்பப்பையை நீக்கினேன். தினம் தோறும் மருத்துவர் வீட்டுக்கு வந்து குளுகோஸ் போட்டு, மருந்திடுவார். பிள்ளைகள் என்னை அவளருகில் அணுக விடமாட்டார்கள். கோதை அவளை தன் பெண் பிள்ளை போல கவனித்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல வயிற்றுப் புண் ஆறியது. பழையபடி ஆனாள்.

அவள் முகம் வாடினால் போதும். எனக்கு சுத்தமாக ஆகாது. உடனடியாக மருத்துவர், மருந்து என ஆரம்பித்து விடுவேன். பிள்ளைகள் தான் கவனித்துக் கொண்டார்கள். 

அவளுக்கும் கோதைக்கும் ஒரு பிணைப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வாசல்படியில் உட்கார்ந்திருப்பாள். கோதை சமையலறையில் நடமாடிக் கொண்டிருப்பாள். கோதையின் கால் கொலுசின் ஒலிக்கேற்ப அவளின் முகமும், காதுகளும் நடனமாடும். பார்க்கப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். முன்னறைக்கு வந்தால் கோதையின் முகத்தினைப் பார்ப்பதும், அவள் சமையலறைக்குள் சென்றதும் உள்ளே பார்ப்பதும், கண்களுக்குத் தென்படவில்லை எனில் கோதையின் கால் கொலுசொலியைக் கேட்டு அதற்கேற்ப காதுகளும், கண்களும், தலையும் அசைந்து கொண்டிருக்கும். அவளின் கவனம் முழுவதும் கோதையின் மீதே இருக்கும்.

அந்த நிலையில், அவளைப் பார்க்கும் போதெல்லாம் நெக்குருகி விடும் எனக்கு.

பெற்றால் தான் பிள்ளையா என்ன?

ஒருமுறை எவனோ ஒரு கொலைகாரன் கேட்டின் அருகில் கோதையுடன் நின்று கொண்டிருக்கையில் கடிக்க வந்து விட்டான். கால்களால் கோதையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாளாம் ரூடோஸ். அடுத்த நொடி மருத்துவரிடம் காட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்தாள்.

ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. கோசாலையில் ரூடோஸைக் கொண்டு போய் விட்டு ஊருக்குச் சென்று விட்டோம். ஜோதி சுவாமியுடன் காஞ்சிமா நதியில் ஆனந்தமாக ஆனந்தக் குளியல் போட்டுக் கொண்டிருந்திருக்கிறாள். அப்போது சுவாமியைப் பார்க்க வந்த ரமேஷ் என்ற பக்தருடன் சுவாமி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ரூடோஸைக் காட்டி ரமேஷிடம் சுவாமி ஏதோ சொல்லி இருக்கிறார். மனைவியிடமிருந்து தனித்து வாழ்ந்தவர், அன்றிலிருந்து மனைவியுடன் பேசி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பித்து விட்டார். ரூடோஸை அவர் எனது வழிகாட்டி என என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.

அவள் எங்கே சென்றாலும் அப்படித்தான். மனதைக் கொள்ளை கொள்ளும் முகம், பாவமெனத் தோன்ற வைக்கும் கண்கள், அழகான நடை, நீண்ட முகம் எனப் பார்ப்போரை பரவசப்படுத்தி விடுவாள்.

ஆற்றில் நீச்சல் அடிப்பது என்றால் கொள்ளைப் பிரியம். அக்கா ராஜேஸ்வரி மீது கொள்ளைப் பிரியம் அவளுக்கு. அள்ள அள்ளக் குறையாத அன்பை அவள் எல்லோருக்கும் வாரி வழங்கிக் கொண்டிருந்தாள். என் நண்பர் பாஸ்கர் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் பிஸ்கட்டுடன் வந்து விடுவார். அவரையே பார்த்துக் கொண்டிருப்பாள். வீட்டுக்குள் வரும் போது பிஸ்கட் - போகும் போதும் பிஸ்கட் போட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் ரகளை. 

சமீபத்தில் பின்காலில் ஒரு கட்டி வந்து விட்டது. அதற்காக மருத்துவம் பார்த்தோம். முடிவில் அது கேன்சர் என்று ரிப்போர்ட் வந்து விட்டது. அக்கட்டியை நீக்க முடியாது எனச் சொல்லி விட்டார் மருத்துவர். அவள் இருக்கும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் என்றுச் சொல்லி விட்டார். டிசம்பர் 18ம் தேதியிலிருந்து அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து கொண்டாள்.



(ரிப்போர்ட்)

கட்டியிலிருந்து புண் சீழ் பிடித்து வெளிவர ஆரம்பித்தது. சுத்தமாக இருந்தவளின் உடல் அழுக ஆரம்பித்தது. தோல் உறிந்து விட்டது. கால்களில் அது பரவி புண்கள் அதிகரித்தன. உடலெங்கும் நாற்றமெடுக்க ஆரம்பித்தது. அவள் படும் துயரத்தை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பையன் ரித்திக் நந்தாவிடம் கேட்டேன், அவளைக் கருணைக் கொலை செய்து விடலாமா என.

”இல்லையப்பா, நான் பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி விட்டான். 

முதலில் பால், தயிர், சோறு ஆகியவற்றை நிறுத்தினாள். நான் ஏதாவது கொடுத்தால் சாப்பிடுவாள். இட்லி சாப்பிட்டாள். அதையும் நிறுத்தி விட்டாள். பின்னர் பிரட் - அதுவும் நின்றது. உணவு முற்றிலுமாக குறைந்து விட்டது. நடமாட்டமும் குறைந்து விட்டது. ஒரு நாள் வாசல்படியில் வந்து படுத்திருந்தாள். பின்னர் அவளின் படுக்கையிலேயே படுத்திருப்பாள். தினமும் தண்ணீர் மட்டுமே குடிப்பாள்.

பையன் முகத்தில் மாஸ்க்கும், கையுறையும் மாட்டிக் கொண்டு தினமும் காலை, மாலை என இரு நேரமும் அவளைச் சுத்தம் செய்தான். அவளின் மலஜலத்தையும் சுத்தம் செய்தான். நிவேதிதா கல்லூரியில் இருந்து வந்த போது சுத்தம் செய்து கொண்டிருந்தாள். 

கேன்சர் அவளின் உடலெங்கும் பரவியது.

சமையலறைக்குள் செல்லும் கோதையிடம் குக்கர் கேட்டிருக்கும் போல. தினமும் கண்ணீரோடு அவள் முகம் கண்டு வேதனையில் உழல ஆரம்பித்தேன்.

நான்கு மணிக்கு விழிக்கும் போதெல்லாம், தினமும் கோதையிடம் கேட்பேன். கதவைத் திறந்து பார்த்து விட்டு இருக்கிறாள் என்பாள். ஒரு நிம்மதி வரும். 

06.01.2025ம் தேதி - திங்கள் கிழமை இரவு 7 மணி இருக்கும். எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. திடீரென்று வியர்த்து ஊற்றியது. உடலெல்லாம் சிலீரிட்டது. அடுத்த பத்தாவது நிமிடம் மருத்துவமனை ஐசியுவில் அட்மிட் செய்யப்பட்டேன். பிபி, சுகர், இசிஜி எல்லாம் நார்மல். நடு இரவு வீடு திரும்பினேன். 

ரூடோஸ் தலையைத் தூக்காமல் கண்களை மட்டும் அங்குமிங்குமாக அசைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். நான் மருத்துவமனை போகும் போது அவளைப் பார்த்துக் கொண்டே சென்றேன். வீட்டுக்குத் திரும்பி வரும் போதும் அவளைப் பார்த்துக் கொண்டே வீடு திரும்பினேன்.

09.01.2025ம் தேதி - வியாழக்கிழமை - கோதையிடம் வழக்கம் போல இருக்கிறாளா என்று கேட்டேன். இருக்கிறாள் என்றாள் கோதை. ராஜேஸ்வரி அக்காவை ஆசிரமத்திற்கு கொண்டு விட்டு வந்த ரித்திக் ”அம்மா! அம்மா!” என அழைத்தான். 

”ரூடோஸ் செத்துப் போயிட்டாம்ம்மா...! “

காலை மணி மார்கழி மாதம் 7.50க்கு இயற்கையை நாடிச் சென்று விட்டாள். 

கோதை அழ ஆரம்பித்தாள். 

குடுகுடுவென ஓடிய கால்கள், கொலுசொலி கேட்டு அசையும் காதுகளும், கண்களும் மூடிக் கிடந்தன. வாய் திறந்து கிடந்தது. கடைசியாய் அவள் கழித்த சிறு நீர் ஈரம் காயவில்லை. அவளுக்காகவென போட்டிருந்த ஃபேன் நின்று போயிருந்தது.

அவளுக்கு திருநீறும், குங்குமமும் இட்டேன். கடைசியாய் அவளுக்கு கோடித் துணியைப் போர்த்தினேன். 

வழிந்து ஒடும் கண்ணீருடன் கோதையும் ரித்திக்கும் அவளை வெண் துணியால் மூடி காருக்குள் வைத்தனர். 

அவளின் வீட்டையும், அவளின் உயிரான என்னையும் விட்டு விட்டு சென்றாள். 

நான் வாசல்படியிலேயே உட்கார்ந்திருந்தேன். இனி அவள் திரும்பி வரப்போவதில்லை. இனி அவள் எக்காலத்தும் திரும்பி வரவே போவதில்லை. 

வீட்க்குள் வந்தேன். வெள்ளிங்கிரி சுவாமியிடம் சென்றேன். இதயம் வெடித்தது. என் அப்பா, அம்மா இறப்பின் போதும் அழாத நான் வெடித்து அழுதேன்.  சுவாமி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் எப்போதும் பெருமை மிக்கவளாய் இருந்தாள். அவள் கொடுத்து வைத்தவள்.

காஞ்சிமா நதிக்கரையில் துறவி ஜோதி சுவாமி அவளின் இறுதி பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் தான் அவளுக்குப் பெயர் சூட்டியவர். ரித்திக்கும் சுவாமியும் அவளின் உடலை நதிக்கரையில் நல் அடக்கம் செய்தனர். 

மார்கழி மாதம் இறப்போர் சுவர்க்கம் செல்வர் என்பார்கள். ஏறு பொழுதான காலையில் இறந்தாள். ஒரு துறவியின் கையால், வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டாள். அவளுக்கு கிடைத்திருக்கும் இந்த பேரு வேறு எவருக்கேனும் கிடைக்காது. 

அவள் அப்படித்தான். 

அவளொரு இளவரசியாய் வாழ்ந்தாள். அவள் இறப்பும் வேறு எவருக்கும் கிடைத்திடா பேறு.

இதோ இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் வரையில் கண்களில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருக்கிறது. மனம் கனத்துக் கொண்டிருக்கிறது.

இனி நான் எங்கே தூய்மையான அன்பைப் பெறுவேன்? யார் தருவார் எனக்கு? 

நான் நேசித்தவரெல்லாம் என்னை விட்டுச் சென்று விட - வெறும் கூட்டை வைத்துக் கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கையா? இந்த வெற்று வாழ்க்கையை வாழ்ந்தால் தான் என்ன? வாழாமல் போனால் தான் என்ன?

நான் பெறாமல் பெற்ற என் இளைய மகள் அவள். 

என்னைக் கண்ணீரில் தவிக்க வைத்து விட்டுச் சென்று விட்டாள். 

11.01.2025

Friday, December 20, 2024

விஜய் சேதுபதியின் விடுதலை 2 விமர்சனம்

மனிதர்கள் சூழலுக்குக் கட்டுப்பட்டவர்கள். மீறவே முடியாது. கொள்கைகள், கோட்பாடுகள், அறம் போன்றவைகளெல்லாம் வாழ்க்கையின் சூழலுக்கு முன்பே தோற்றுப் போகும். எதையும் முழுமையாகக் கடை பிடிக்க முடியாது.

தந்தை பெரியார் காலத்தில் - வயதான காலத்தில் கூட மூத்திரப்பையைத் தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு மீட்டிங்குக்கும் சென்றார். அவர் நினைத்திருந்தால் வீட்டில் இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டே இருந்தார். அவரின் கொள்கைப் பிடிப்பால், அவர் கொண்டிருந்த பேரறிவால் - தந்தை பெரியார் என அழைக்கப்படுகிறார். இவரைப் போன்றோரைப் பார்ப்பது அரிது.

தமிழ் நாட்டில் - அரசியல்தலைவர்களை சினிமாவுக்குள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத ஆபாச படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஒருவர் சி.எம் ஆகணுமாம். இவரின் பின்னால் ஒரு கூட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. 

தலைவர்களை அடையாளம் காணக்கூடாது. அவர்கள் மக்களுக்காக தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ நபர்கள் - நந்தினி (குடிக்கு எதிராய் போராடிக் கொண்டிருக்கிறார்) போன்றோர்கள் மக்களுக்காக பலன் எதிர்பாராமல் போராடுகிறார்கள். இவரைப் போன்றோர்களை மறந்து போகிறோம். ஜிகினாவுக்குள்ளும், விளக்கின் வெளிச்சத்துக்குள்ளும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.

தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தக் கூடிய நேர்மையாளர் என்று பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் சீசன் 8 - விஜய் சேதுபதி தொகுப்பாளர். ஆரம்ப கட்டத்தில் அவர் போட்டியாளர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள் - ஹீரோ தொனியில் இருந்தது. நீங்கள் வெறும் தொகுப்பாளர். படத்தின் ஷூட்டிங்கில் பேசுவது போல எங்களிடம் பேசினால் - வெச்சு செய்வோம் என செய்தார்கள். அவர்களுக்கு ஏற்கனவே ஷூட்டிங் அனுபவமெல்லாம் இருக்குமென்பதால் விஜய் சேதுபதி திக்கித் திணறி படாதபாடு பட்டார். கடந்த இரு வாரங்களாக ஓரளவு பரவாயில்லை.

காக்கையை மயில் என சொல்லி விட முடியாது. காக்கை - காக்கை தான்.

தமிழ்நாடு அரசாங்கம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்து அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அந்த அரசாணையை நீதிமன்றங்கள் (????) தடை செய்து வைத்திருக்கின்றன. ஒன்றிய அரசோ கண்டும் காணாதது போல.

மக்களின் நலன் மீதும், அவர்களின் மீதும் அக்கறை கொண்டவரைப் போல சோஷியல் மீடியாக்களில் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் சேதுபதியைப் பற்றி. அவரின் பேச்சுகள் அவ்வாறு இருக்கின்றன.

பிக்பாஸ் 8 ஸ்பான்சர் - ஏ23 ரம்மி விளையாட்டு. குறைந்த பட்ச அறமும் இன்றி விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கி ஏ23 ரம்மி நிறுவனத்திடமிருந்து ஸ்பான்சர் பெற்றிருக்கிறது. எண்டமோல்சைன் இந்தியா நிறுவனம்தான் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். நாங்கள் அல்ல என்று கைகழுவிக் கொள்ள முடியாது.

சாமானியனிடம் தென்படும் அறம் கூட விஜய் டிவிக்கும், எண்டமோல்ஷைன் இந்தியாவுக்கும், நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் இருக்கும் விஜய சேதுபதிக்கும் இல்லை.

விஜய் சேதுபதி விடுதலை 2 படம் இன்று ரிலீஸ். இவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டப் பெயர் வேறு. 

வெட்கமாயில்லையா விஜய் சேதுபதி உங்களுக்கு?

ஆன்லைன் ரம்மியால் பலர் செத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உங்களின் கண்ணுக்குத் தெரியவில்லை. 

குறைந்த பட்சம் விஜய் டிவியிலாவது பேசி இருக்கலாமே?

இப்படிக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா உங்களுக்கு?

கேட்க முடியாது. நாம் அந்த இடத்தில் இல்லை. நம் குரல் அவர்களுக்கு கேட்காது. கேட்டாலும் கேட்காகதது போல நடிப்பார்கள். 

இதுதான் உலகம். விஜய் டிவிக்கும், எண்ட்மோல்சைன் இந்தியா நிறுவனத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் - நிகழ்ச்சியின் வாயிலாக - விளம்பரதாரர்கள் வழியாக வரும் பணம் மட்டுமே முக்கியம். மக்கள் செல்வனுக்கும் பணம் மட்டுமே முக்கியம்.

இவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். படித்தால் மட்டும் போதாது. கொஞ்சம் அறமும் வேண்டும். 

உடனே ஆ...! விஜய் சேதுபதியால் ஒன்றும் செய்ய இயலாது என்று சப்பைக் கட்டு கட்ட வந்து விடுவார்கள். விடுதலைப் படத்தின் புரமோஷனுக்காகத்தான் தொழிலாளி - முதலாளி டாஸ்க் வைக்கப்பட்டது. அதன் பிறகு அப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார்கள்.

விஜய் சேதுபதி இதைப் பற்றிப் பேசி எளிதாக கடந்து போனார். இவருக்குத் தெரியாது. இவரால் முடியாது என்றெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை. ஆனால் செய்யும் செயலின் பலன் அப்படி இருக்காது. விதையை விதைத்தவர் தான் அறுக்க வேண்டும்.

ஏ23 விதைத்துக் கொண்டிருக்கும் விதைகளின் பலனை விஜய் சேதுபதியும், விஜய் டிவியும், எண்டமோல்ஷைன் இந்தியாவும் அறுத்தே தீரும்.

மிச்சம் சொச்சம் இல்லாமல் வெச்சு செய்யும் அறம். பார்த்துக் கொண்டே இருங்கள். அது தான் நம்மால் முடியும்.

வளமுடன் வாழ்க.


Tuesday, December 10, 2024

மோசமடையும் இந்தியப் பொருளாதாரம் - கவனம்

2024-2025 ஆம் நிதியாண்டில் தற்போது நாட்டின் உற்பத்தியாது 7.2 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக குறைந்து உள்ளது. இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 5.4 சதவீதமாக சரிந்து உள்ளது. இது 7 சதவீத இலக்கை விட வெகுவாக குறைவான உற்பத்தி. 

பணவீக்கம் 4.5 சதவீதத்திலிருந்து 4.8  சதவீதமாக உயர்ந்துள்ளது. பண வீக்கத்தால் மக்கள் செலவு அதிகம் செய்ய வேண்டி இருக்கும்.

ரிசர்வ் வங்கி, வங்கிகளின் கட்டாய இருப்பு விகிதத்தை (CRR) 4.5 சதவீதத்திலிருந்து 4 சத வீதமாக குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ்  வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் வைத்துள்ளது. 

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை திரும்ப பெறுவதால் ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 1.3 சதவீதம் சரிந்துள்ளது. இதனை சமாளிக்க, வெளிநாட்டு நாணய வைப்புகளுக்கான (FCNR) வட்டி விகித உச்சவரம்பை 500  அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது இந்தியா. 

காய்கறிகள், பால், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை 15-20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக 4.8 சதவீதம் என்று கூறப்படும் பணவீக்கம், சாமானிய மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த பணவீக்க மதிப்பீட்டில் இந்திய அரசு சரியான மதிப்பினை வழங்கவில்லை என இடதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

பணவீக்கத்தின் பாதிப்பு சாமானிய மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. காய்கறிகளில் முதற் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் குறைவாக வாங்குகிறார்கள். உணவுப் பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவில் உயர்வடைந்திருக்கிறது என்பது சாமானிய மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இதையெல்லாம் மூடி மறைக்க முடியாது. ஆனால் சாமானியர்களின் சம்பளமோ, வருமானமோ உயர்வடையவில்லை. எதற்கெடுத்தாலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பதால் மக்களின் சேமிப்பில் துண்டு விழுகிறது.

வளமுடன் வாழ முடியாது. இனி சாமானியர் வாழ்க்கை பெரும் அவலத்துக்குட்பட்டு விடும் ஆபத்து கண் முன்னே நிற்கிறது.

அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தி சாமானியர்களைக் காப்பாற்ற வேண்டும்.

Saturday, November 30, 2024

நிலம் (119) - சொத்து வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று

இந்தியாவில் இருக்கும் சிவில் சட்டம் நூலாம்படை போல போல சிக்கலான ஒன்று எந்த நாட்டிலும் இருக்காது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், மதத்துக்கும் ஒவ்வொரு வகையான சட்டம். இவைகளைப் படித்து, அறிந்து, புரிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்குவது என்பது இருட்டுக்குள் பேனாவைத் தேடுவது போல.

சிவில் சட்டம் - மதங்களுக்கு எனத் தனித்தனியாக இருக்கிறது. அதன் வாரிசுகள்  மற்றும் வாரிசுகளுக்கு இடையேயான பாகங்கள் குறித்த பல விதமான சட்டப்பிரிவுகள் உள்ளன. ஆனால் சிக்கலான வாரிசுகளுக்கிடையேயான பாகங்கள் பற்றிய சட்டங்களைத் தேடினால் கிறுகிறுத்து விடுகிறது.

அதே போல சமீபத்தில் ஒரு சிக்கலான சொத்துப் பாகத்தைப் பற்றிய ஆலோசனை கேட்கப்பட்டது. 

என்னவென்றால் ஒருவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி - கணவரிடமிருந்து விலகி இருந்த ஒரு பெண்ணுடன் தனியான உறவு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தையும் பிறந்துள்ளது என்கிறார்கள். ஆனால் முறைப்படியான பதிவுகள் ஏதுமில்லை. ரத்த உறவு இருக்கிறது. 

ஆவணத்தின் மூலமாக உறவினை நிரூபிக்க முடியாது என்ற நிலையில் இந்தச் சொத்தினை ஒருவர் கிரையம் பெற வேண்டுமென்கிறார்.

இதற்குச் சட்டத்தில் லீகலான வழி உண்டா? 

ஆவணச் சான்றுகளின் மூலம் வாரிசை நிரூபிக்க முடியாவிட்டால் சொத்தில் பங்கு கிடைக்காது. எதிர்காலத்தில் சிக்கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசனையை வழங்கினேன். இது சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்க முடியாது. 

சட்டம் என்ன சொல்கிறது? அதை தான் அறம், தர்மம் இவைகளைத் தாண்டி யோசிக்க வேண்டி இருக்கிறது.

எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான அவசியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பூமி சொத்து என்பது ஒரே இடத்தில் தான் இருக்கும். அதன் உரிமையாளர்கள் மாறுவார்கள். எத்தனையோ உயிர்கள் பிறந்து வளர்ந்து செத்துப் போகின்றார்கள். ஆனால் சொத்து அதே இடத்தில் தான் இருக்கும்.

ஒரு சொத்து வாங்கும் போது வெகு கவனமாக ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அழிவைத்தான் சந்திக்க நேரிடும். 

எம்.ஜி.ஆருக்கு திருச்சியில் ஒரு சொத்து வாங்கிய பிறகுதான் வீழ்ச்சி ஏற்பட்டது என்பார்கள். அதன் பிறகு அவர் இறந்தும் போனார்.

அதே போலத்தான் ஜெயலலிதா அம்மையாருக்கும் என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் மூனாறில் ஒரு சொத்து வாங்கினார். அதன் பிறகு அவர் அமைச்சராக இருக்கவே முடியவில்லை.

ஒரு பிரபல அரசியல்வாதியின் சகோதரர் கோவையில் சொத்து வாங்கினார். அதன் பிறகு அவர் ஆளே இல்லாமல் போய் விட்டார். இப்படி சொத்துக்கள் என்பவை பலருக்கு நன்மையைத் தந்தாலும், சிலருக்கு துன்பத்தைத் தந்து விடும்.

புரிந்து கொள்வதற்காக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.

அந்தக் காலத்தில் திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போகும் போது பெரிய அதாவது வயதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்களை அழைத்துச் செல்வார்கள்.

ஆணின் உடல் வாகையையும், பெண்ணின் உடல் வாகையையும் பார்த்தாலே குடும்பத்துக்கு ஆகுமா, இல்லை கூத்தடிக்க ஆகுமா எனக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் உடலும், பெண்களின் உடலும் கட்டுக்குலையாமல் இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். கட்டுகுலைந்த உடல் என்றால் தெரிந்து விடும். கட்டுக்குலைந்து உடலமைப்பைக் கொண்டவர்களுக்கு பல அனுபவங்களால் உடல் குலைந்து போய் இருக்கும். இப்போது பலர் நல்ல அனுபவசாலிகள் தான் வாழ்க்கைக்கு ஏற்றவர்கள் என்று கதை பேசிக் கொண்டிருப்பார்கள். மனிதர்களின் மனம் என்பது விசித்திரமானது. அதன் தன்மை ரகசியமானது. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

பூமி வாங்கும் முன்பு நான்கெல்லைகளைச் சுற்றி வர வேண்டும். பூமிக்குள் சென்ற உடனே மனதுக்கு நிம்மதியாக இருக்கிறதா? மனது ஆர்ப்பரிக்கிறதா?எனப் பார்க்க வேண்டும். ஒரு முறை அல்ல, இரண்டொரு முறை இதைச் செய்ய வேண்டும். மெல்லிய நுண்ணுணர்வு உங்களுக்குள் காட்டிக் கொடுக்கும்.

வாஸ்து பார்க்காதீர்கள். அது பக்கா பிசினஸ். வாஸ்து படி கட்டிய வீடுகளில் வசிப்போருக்கு எந்த நன்மையும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பது வரலாறு.

பலரும் பல செய்திகளைச் சொல்வார்கள். அதையெல்லாம் மனதில் இருந்து விரட்டி விடுங்கள். சொத்து வாங்கும் முன்பு அது உங்களுக்கு உகந்ததா என அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது எனத் தோன்றினால் விட்டு விடுங்கள்.

விலை ஏறும், நல்ல லாபம் கிடைக்கும் என்றெல்லாம் தோன்றும். ஆனால் அதன் பின்னால் வரக்கூடிய அபத்தங்கள் உங்கள் வாழ்வைச் சீரழித்து விடும். சொத்து இருக்கும். ஆனால் நிம்மதி?

நிம்மதி தொலைத்த பலரும் பெரும் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களுக்கு கிடைத்த பலனோ கொடூரம். என்னிடம் பல உண்மையான ஆதாரங்களுடன் கூடிய நிகழ்வுகள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுத முனைந்தால் மனிதர்கள் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து போய் விடும்.

வளமுடன் வாழ்க...!


Tuesday, November 26, 2024

மழையை வெறுக்கும் சென்னை மக்கள்

மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய ஓர் அடிப்படையான பொருள் தண்ணீர். பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் என்பனவற்றைச் செழிக்கச் செய்வதுடன் மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத் தண்ணீர் இடம் பெற்றுள்ளது.

மழையின் வாயிலாகவும், ஆறுகளில் இருந்தும், நிலத்தினுள் இருந்தும் மனித சமூகம் நீரைப் பெற்று வருகிறது. இயற்கையாக ஓடும் காட்டோடைகளில் இருந்தும், ஆறுகளில் இருந்தும் மட்டுமே மனித சமூகம் தண்ணீரைப் பெற்று வந்தது. நீரைத் தேக்கிவைக்கவும், திசை திருப்பவும், பூமியின் உள்ளே இருந்து வெளிக் கொணரவும் படிப்படியாகக் கற்றறிந்தபோதுதான் மனிதசமூகம் வளர்ச்சி பெற்றது. இம்முயற்சியில் ஏற்பட்ட வெற்றியே சமூகத்திற்கு முன்னேற்றத்தை வழங்கியது. நாகரிகம், பண்பாடு என்பனவற்றை வளர்த்தெடுத்தது. உலகின் தொன்மையான நாகரிகங்கள் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே இருந்துள்ளன. 

பரிபாடலில் வையை ஆறும், சிலப்பதிகாரத்தில் காவிரி ஆறும் அழகுற இடம்பெற்றுள்ளன. 

‘கான்யாறு’ ‘விரிபுனல்’ என்று ஆறுகளுக்குப் பெயரிட்டனர். 

தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. 

இத்தகைய நீர்நிலைகள், குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர். 

கிணறு வெட்டுதல் தொடர்பான நூல் ‘கூவநூல்’ எனப்பட்டது. இந்நூல் படித்து பயிற்சி பெற்றோரை ‘கூவநூலோர்’எனப்பட்டனர். 

வேளாண்மைப் பெருக்கத்திற்கு, காடுகளை அழிப்பதும் குளங்களை வெட்டுவதும் அவசியமென பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.


நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவன் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே  (புறநானூறு 28 - 30) 

எனப் புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார். 

நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும் இப்பாடலின் அர்த்தம்.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு 

எனத் திருக்குறளில் திருவள்ளுவரும் நீரின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்பியிருக்கிறார்.


பொய்யா எழிலி பெய்விட நோக்கி

முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்

சிறு நுண் ணெறும்பின் - (புறநானூறு 173)

என பாடலில் எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள் என மழை வரும் காலத்தைப் புறச்சூழலை வைத்து கணித்திருக்கிறார்கள்.


துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல,

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (அகநானூறு 252)

கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கும் நடு இரவினிலே கூட தூங்காமல், பெரிய குளம் ஒன்று உடைபடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதன் காவலன் போல, என்னை அன்னை பாதுகாத்து வருகிறாள்’ என தலைவி தனது இக்கட்டான நிலை குறித்து தோழி மூலம் தலைவனிடம் சொல்லுகிறாள் என அக நானூற்றுப் பாடலில் நக்கண்ணையார் என்ற புலவர் பாடியிருக்கிறார்.

இவ்வாறு அக வாழ்விலும், புறவாழ்விலும் கூட பண்டைய தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் மழை நீரானது பூமிக்கு உயிர் நீராகும். நீரின்றி ஒரு நாள் கூட மனிதனாலோ அல்லது பூமியில் இருக்கும் எந்த உயிரினமும் வாழவே முடியாது. எந்த ஒரு மனிதனும் மழையை வெறுக்கமாட்டான்.

மழை பெய்தால் தெருவில் ஓடி, நிறைந்து, வழிந்து செல்லும். சென்னையில் இருக்கும் குளங்களை எல்லாம் தூர்த்தும், நீர் வழிப் பாதைகளை எல்லாம் வழிமறித்து வீடு வாசல் கட்டி வைத்துக் கொள்கிறார்கள். அரசு அவர்களை வெளியேற்ற முயன்றால் போராட்டம், கலவரங்கள் செய்ய வேண்டியது. பெரும் பணக்காரர்களின் அதீத ஆசைக்குப் பலியாகி ஏரிகளை வீடுகளாக்கிக் கொண்டு வாழ்வதும் இவர்களே.

மழையே பெய்யக் கூடாது. அப்படியே பெய்தால் வீட்டுக்குள் வரவே கூடாது. தெருவில் நீர் செல்லவே கூடாது என்றெல்லாம் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகளைக் கொட்ட வேண்டியது. நீர் வழிப் பாதைகளை அடைத்து விட வேண்டியது. மழை பெய்தால் அடைக்கத்தான் செய்யும்.  அய்யோ அரசு அப்படி செய்கிறது, கவனிக்கவே இல்லை எனக் கூப்பாடு போட வேண்டியது. 

சென்னை வாழ் மக்கள் மழைக்காலங்களில் போடும் மீம்ஸுகளும், மழையினைக் காரணம் காட்டி அரசையும், அரசு ஊழியர்களையும் கேவலமாகப் பேசுவதும், மழையை வெறுப்பதும் போன்ற செயலை எவரும் செய்ய மாட்டார்கள். ஆனால் சென்னையில் அதைச் செய்கிறார்கள். அரசியல்வியாதி பலதும் சொல்வான். கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போகிறது எனத் தெரியவில்லை. சோஷியல் மீடியா கூலிப்படையினரின் ஆட்டம் எழுத்தால் எழுத முடியவில்லை. வக்கிரம், ஆபாசம், தனி மனித தாக்குதல், உறவுத்தாக்குதல் என ஆட்டம் எல்லை மீறிப் போகிறது. இதற்கெல்லாம் ஒரு வழி வரத்தான் போகிறது. அப்போது பொய்களும், இணையக் கூலிப்படைகளின் ஆட்டமும் அடக்கப்படும்.

மழை என்பது கொடை. அதை வரவேற்று, அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து மழையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் கேவலமான பிறவிகளுடன் சேர்ந்து கொண்டு - மக்களும் மழையை வெறுத்தால் - நாளை நீரின்றி சென்னை அழிந்து போகும்.

மழையைக் கொண்டாடுங்கள். மழையை வரவேற்று மகிழுங்கள். நீர் வழிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 

26.11.2024

Friday, November 22, 2024

அரசு மருத்துவர்களின் அதிகாரத் திமிர்

சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை, ஒரு இளைஞன் கத்தியால் குத்தி விட்டான். 

அம்மாவுக்குப் புற்று நோய்.

தனியார் மருத்துவமனைகளில் செலவாகும் என்பதால் கிண்டியின் அரசு மருத்துவமனை.

விக்னேஷ் அம்மாவுக்கு நோய் சரியாக மருத்துவர் வைத்தியம் செய்திருக்கிறார். 

விக்னேஷின் அம்மா பிரேமாவின் பேட்டியின் படி இந்த மருத்துவர் கண்டபடி திட்டுவார் போல. புற்று நோயின் இரண்டாவது ஸ்டேஜில் சிகிச்சைக்குச் சென்றவர் ஐந்தாவது ஸ்டேஜுக்கு முன்னேறி இருக்கிறார். மருத்துவர் பாலாஜியின் சிகிச்சை மகத்துவம் என்கிறார் பேட்டியில்.

பதினெட்டு நாட்கள். படாத பாடு பட்டிருப்பார்கள் அம்மாவும், பையனும்.

சகட்டு மேனிக்கு திட்டுவாராம் மருத்துவர்.

இளம் ரத்தம். கீறி விட்டான்.

பரபரப்பு.

மருத்துவர் உலகம் பொங்கி பொங்கல் வைக்க கிளம்பினார்கள்.

மேற்கு வங்கம் போல இங்கும் ஒரு படையல் போட்டு விடலாமென ஒவ்வொரு அரசியல்வியாதியும் மருத்துவரை குசலம் விசாரிக்க கிளம்பி, போராட்டம் வரைக்கும் சென்றார்கள்.

இளைஞன் விக்னேஸ் மக்களில் ஒருவன். மருத்துவருக்குப் பொங்கிய அரசியல்வியாதிகள் விக்னேசுக்காகப் பொங்கவில்லை.

ஏனெனில் மருத்துவர்கள் மட்டுமே ஓட்டுப் போட்டு - இவர்கள் பதவிக்கு வந்து இருக்கிறார்கள்.

அவன் குற்றவாளி. 

குற்றத்தைத் தூண்டியவருக்கு அரசுப் பாதுகாப்பு.

மக்களின் ஒருவனான விக்னேசுக்கு மக்களாகிய நாம் தானே ஆதரவு தர வேண்டும். 

நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மருத்துவருக்கு நோயாளிக்குச் சிகிச்சை கொடுப்பது பணி. நோயால் பீடிக்கப்பட்டவர்களிடம் ஆதரவாக பேச வேண்டியது  கடமை. 

திட்டினால் கேட்டுக் கொண்டிருப்பார்கள் பலரும் என்னைப் போல. இங்கே சற்றே கோபம் வந்து விட்டது. 


கரூரில் ஆர்த்தோ மருத்துவரிடம் மாற்றுத்திறனாளி இரயில்வே கன்செஷன் சர்ட்டிபிகேட்டில் கையொப்பம் வாங்கச் சென்றிருந்தேன்.

சுமார் இரண்டு மணி காத்துக் கிடந்த பிறகு, வாசல் திறந்தது.

அரசு காசுக்குக் கேடு!

எங்கே போகிறாய்? 

எதுக்குப் போகிறாய்?

அரசாங்கத்தைச் சொல்லனும்!

தண்டச் செலவு?

60 சதவீதம்னு போட்டுத் தாரேன்!

சரி, சரி, எவ்ளோ காசு வெச்சிருக்கேய்?

இம்புட்டுத்தானா? இன்னும் வேண்டும்!

சரி, சரி, இந்தா...!

போட்டோவில் கையெழுத்துப் போட்டு விட்டு, கீழேயும் கையொப்பம் இட்டு சீல் வைத்தார்.

இலவச அர்ச்சனைகளுடன் சர்ட்டிபிகேட் கைக்கு வந்தது. 

200 ரூபாய் கைமாறியது. அவருக்குச் சற்றே ஆசுவாசம். அரசு பணம் செலவாயிடக்கூடாது என்பதில் மருத்துவருக்கு அவ்வளவு கரிசனம்.

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் புக் செய்யும் போது, ரவுண்ட் சீல் இல்லைன்னா டிக்கெட் கொடுக்க முடியாது.

மறு நாள் இரவு.

மீண்டும் இரண்டு மணி நேரம் வாசல் திறக்கக் காத்திருப்பு.

வேண்டா வெறுப்பாய் ரவுண்ட் சீல். 

மருத்துவருக்கு அரசு தரும் வசதியை தன்னைத் தவிர பிறர் அனுபவித்து விடக்கூடாது என்பதில் அவ்வளவு ஆனந்தம். பொண்டாட்டி வீட்டுச் சீதனம் பாருங்க. அவருக்குத் தெரியும், சீல் வைக்க வேண்டுமென. ஆனாலும் அலைய விடுவதில் ஒரு ஆனந்தம்.

20 வருடத்திற்கு முன்பு நடந்தது. இன்னும் நினைவிலாடுகிறது.

இளைஞன் விக்னேசுக்கு சும்மாச்சுக்கும் கோபம் வந்திருக்காது. அது சட்டப்படி தவறு. திட்டியிருக்கலாம். ஆனால் குத்தியிருக்கிறான். 

சட்டம் இனி அவன் வாழ்க்கையில் வெளையாடும்.

விதி வந்தவனுக்கு சட்டம் சனி பகவான். 

கடமையே கண்ணாக ஆற்றும் சட்டம். 

அரசியல்வாதிகள் என்போர் யாருக்காக என புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு ஒன்று எனில் எவரும் வர மாட்டார்கள். 

ஏழைக்கு ஏது நீதி?

22.11.2024

Saturday, November 16, 2024

நிலம் (118) - கோவை சூலூர் வட்டம் கரவழிமாதப்பூரில் நிலமெடுப்பு அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கரவழி மாதப்பூர் கிராமத்தில் தமிழ் நாடு தொழில் வளர்ச்சிச் துறை பல் முனை சரக்கு போக்குவரத்துப் பூங்கா அமைப்பதற்காக நிலமெடுப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. யாருடைய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. பயன்படுத்திக் கொள்க. 

இதன் மொத்தப்பரப்பு 54.70.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.