குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 23, 2013

குதிரை சொல்லும் செய்தி

"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன்.

"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.

"புரியல குருவே.." என்றான்.

"எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும்.

புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் வாழ்வின் ரகசியம் என்றார்.


* * *

Friday, December 13, 2013

நிலம்(3) - பவர் அல்லது பொது அதிகார ஆவணம்

நிலம் ஒரு மனிதன் பூமிக்கு வந்து சென்றதன் அடையாளம். அவன் பெயரைப் பூமியின் வரலாற்றில் ஏதோ ஒரு பக்கத்தில் பதிய வைக்கும் மகத்துவம் பெற்றது.

அப்படிப்பட்ட நிலத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் பல. அதைப் பிரச்சினைகள் என்றுச் சொல்வதை விட அறிந்து கொள்ளாமல் இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க முடியாது.

கோவையில் ஒரு இடத்தினை விற்க என்னை ஒருவர் அணுகினார். அவரிடமிருந்த டாக்குமெண்ட்கள் அனைத்தையும் படித்த பிறகு அவர் சொத்து வாங்கிய சர்வே எண்ணில் கிட்டத்தட்ட 300 கிரையம் ஆகி இருந்தது. அதில் பெரும்பான்மையானவை நேரடி கிரையம் பெற்றவை. அதில் ஒரு டாக்குமெண்ட்டினை எடுத்துப் படித்ததில் கிரையம் கொடுத்தவர் பவர் ஹோல்டர். அந்த சர்வே எண்ணில் இருக்கும் வீட்டு மனைகளை அவர் பவரின் மூலம் விற்றிருப்பது தெரிய வந்தது.

அவரின் பொது அதிகார ஆவணத்தை நகல் எடுத்துப் படித்த போது அந்த சர்வே எண்ணில் மொத்தம் இருந்த 15 ஏக்கர் பூமியில் 2 ஏக்கர் பூமிக்கு மட்டும் அதிகாரம் பெற்று இருந்தார். ஆனால் அவர் அந்த சர்வே எண்ணில் இருந்த 15 ஏக்கர் பூமியையும் இந்தப் பவர் மூலமாக விற்றிருப்பது தெரிய வந்தது. இது மிகப் பெரும் மோசடி.

அதுமட்டுமல்ல, அடுத்த பிரச்சினை, பவர் கொடுத்தவர் இந்த பவரை பவர் கொடுத்த மூன்றாவது நாளில் ரத்துச் செய்திருக்கிறார். மிகவும் புத்திசாலியாக அன் அப்ரூவ்ட் சைட்டுகளை மேற்படி பவர் ஹோல்டர் விற்றிருப்பது தெரிய வந்தது.

நபர் கொண்டு வந்த கொடுத்த ஆவணம் சட்டப்படி சரியான ஆவணம் இல்லை. ஆகவே அந்த பூமியை அவர் விற்கவே முடியாது. அவரின் முதலீடு இனி என்ன செய்தாலும் கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. கிரிமினல் கேஸ் போடலாம். கோர்ட்டுகளில் சிவில் கேஸ் நடத்தி ஜெயிப்பது என்பது இப்போது நடக்குமா? அதுமட்டுமல்ல பூமியின் உண்மையான உரிமையாளர் நில ஆக்கிரமிப்பு புகாரளித்தால் நிலம் வாங்கியவரும் மாட்டிக்கொள்வார். இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் அந்த நபர் சிக்கி இருந்தார்.

பொது அதிகார முகவர் மூலம் பூமி கிரையம் பெறும் போது அனேக விஷயங்களைக் கவனித்தல் அவசியம். இல்லையென்றால் இப்படிப்பட்ட மோசடியில் சிக்கிக் கொள்வீர்கள்.

நிலம் தொடரைப் படித்து விட்டு பலரும் ஆலோசனைகள் கேட்கின்றார்கள். ஆலோசனை கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும் நிலம் சம்பந்தமான ஆவணங்களைப் படித்து ஆலோசனை சொன்னால் அது சரியாக இருக்கும். ஒரு சில சின்ன பாயிண்டுகள் கூட மிகப் பெரிய பிரச்சினையைத் தரலாம். இல்லையெனில் அதிர்ஷ்டத்தையும் தரலாம் என்பதினை ஆலோசனைகள் கேட்போர் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

வேறேதேனும் நிலம் சம்பந்தமான கேள்விகளுக்கு அழையுங்கள் : 96005 77755 (காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மட்டுமே ஆலோசனை தர இயலும்)

தேவைப்படுவோருக்கு கட்டண சேவைகளும் உண்டு.


Thursday, December 12, 2013

கோவையில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா


கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமத்தில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழி :
பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்லும் வழியில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு இடதுபுறம் செல்லும் சாலையில் ஆற்றோரத்தில் இருக்கிறது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமம். இங்குதான் விழா நடைபெற உள்ளது.

தேதி : 15.12.2013 

நிகழ்ச்சி நிரல்:
  • காலை 8.00 மணி முதல் 9.30 வரையிலும் கூட்டு தியானம்
  • காலை 9.30 மணி முதல் 10.00 வரை காலைச் சிற்றுண்டி 
  • காலை 10.00 மணி முதல் 12.00 வரை சொற்பொழிவு
  • காலை 12.00 மணி முதல் 1.30 வரை ஒருங்கிணைந்த தியானம்
  • பகல் 1.30 மணி முதல் 4.30 வரை அன்னமளிப்பு
  • மாலை 6.00 மணிக்கு தீபமேற்றுதல்

வித்தியாசமான சூழலில் அமைதியை உணரும் அற்புத தருணத்தை தரக்கூடிய விழாவாக இருக்கும். இந்த ஆன்மீக அனுபவத்தை உணர்ந்திட விழைவோர் விழாவில் கலந்து கொள்ள முயற்சியுங்கள். நிச்சயம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அடிக்கடி பேருந்துகள் வரும். முள்ளங்காடு ஸ்டாப் என்றுச் சொல்லி இறங்கிக் கொள்ளவும்.

* * *

Tuesday, December 10, 2013

திருவாரூர் பயணத்தின் போது

அவசர வேலையின் காரணமாக திருவாரூர் சென்றேன். கோவையிலிருந்து கரூர் வரைக்கும் சாலை அற்புதமாய் இருந்தது. குறுகிய சாலைகள் எல்லாம் அகலமாய் இருந்தன. இருப்பினும் குறுக்கே நெடுக்கே விருட் விருட் என்று செல்வது மட்டும் குறையவே இல்லை. உயிரை முடி போல நினைக்கும் மனோபாவம் எப்படி சில மனிதர்களுக்கு ஏற்பட்டது என்பது புரியாத புதிர்தான். 

கரூர் பேருந்து நிலையம் எதிரில் இருக்கும் வள்ளுவர்(சங்கீதா) ஹோட்டலில் சூடான தோசை இரண்டினை சாப்பிட்டு விட்டு கிளம்பினேன். முன்பெல்லாம் வள்ளுவர் ஹோட்டல் பரோட்டா என்றால் எனக்கு மிகப் பிரியம். குருமாவும் பொலு பொலுவென உதிரும் பரோட்டாவும் வாயில் ஜொள்ளைக் கிளப்பும். எனது மாமனார் வீட்டிலிருந்து கோவைக்கு வந்தால் அவர்களுடன் கரூர் வள்ளுவர் ஹோட்டல் பரோட்டாவும் வரும். சமீபத்தில் அப்படி வந்த பரோட்டாவைச் சாப்பிடும் போது எரிச்சல் மண்டியது. பட்சணங்களின் விலையோ யானை விலை.

 கரூரிலிருந்து திருச்சிக்குச் செல்லும் வழியில் குளித்தலை தாண்டிச் செல்லும் சாலை குண்டும் குழியுமாய் இருந்தது. முன்பெல்லாம் சாலையோரத்தில் அதிக மரங்கள் இருந்தன. இப்போதோ வெறிச்சோடிப் போய் கிடந்தது. சாலையை அகலப்படுத்தியன் காரணமாய் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன போலும். காவிரி ஆற்றங்கரையோரமாய் சென்று கொண்டிருந்த போது காவிரி ஆற்றுக்குள் நிறைய லாரிகள் நின்று கொண்டிருந்தன. பாளம் பாளமாய் கீறி மண் அள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.  நிறைய லாரிகள் ஈக்கள் போல திரிந்தன.பரந்து விரிந்து கிடக்கும் காவிரி ஆறு தண்ணீரை மட்டும் கொடுக்கவில்லை.

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் சாலையைப் பிடித்து சென்று கொண்டிருந்த போது எதிரே இரண்டு கல்லூரி மாணவர்கள் அடிபட்டுக் கிடந்தார்கள். ஒருவருக்கு காலில் பாதியைக் காணவில்லை. இன்னொருவர் நடுரோட்டில் கிடந்தார். சுற்றிலும் கூட்டம். பல்ஸர் பைக் நசுங்கிப் போய் கிடந்தது. 108 ஆம்புலன்ஸில் அவர்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னே ஒரு பைக் கிராஸ் செய்து சென்றது. அதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கையில் போனுடன் கிட்டத்தட்ட 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தனர். விரைந்து கொண்டிருக்கும் பல விதமான வாகனங்களில் ஒரு நொடி மாறினாலும் சில்லுச் சில்லாய் சிதறி விடுவார்கள். ஏன் தான் இப்படி இருக்கின்றார்களோ தெரியவில்லை. 

நான் படித்த பூண்டி வாண்டையார் கல்லூரியில் கல்வி பயின்ற தமிழகத்தின் மிகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டரின் மகன் பைக் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார். இன்றைக்கும் பூண்டி ஆற்றங்கரையில் அவரின் நினைவாக பஸ் நிறுத்தமொன்று இருக்கிறது. இப்படியான நினைவகங்கள் பெருகக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. 

வீடு வரும் வரை அந்த ஆக்சிடெண்டின் பாதிப்பு இருந்தது. யார் பெற்ற பிள்ளையாக இருந்தால் தான் என்ன? அது ஒரு ஜீவன் தானே? அவர்களின் குடும்பமும், அவர்களும் என்ன பாடுபடுவார்கள் என்று நினைத்தாலே மனது வலிக்கிறது. வாலிப முறுக்கில் இப்படியான சின்னத்தனமான காரியங்கள் எவ்வளவு பெரிய இழப்புகளை தந்து விடுகின்றன என்பதை குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். பெற்றோர்கள் பசங்களுக்கு பைக் வாங்கிக் கொடுக்கும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். 

Tuesday, December 3, 2013

டெங்கு ஜாக்கிரதை

தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் டெங்கு வந்த போது உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஏன் அவ்வாறு ஏற்பட்டன என்றால், இக்காய்ச்சல் வந்தால் என்ன செய்யும் என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் தீவிரதாக்குதல் உடலை நிலைகுலைய வைத்து விடும். அபாயகட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலாமல் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.இதன் காரணமாய்த்தான் ஆரம்பத்தில் டெங்குவின் பாதிப்பை சரிசெய்ய முடியவில்லை. இப்போது அதற்கு மாத்திரைகள் வந்து விட்டன.

டெங்கு காய்ச்சல் வந்தால் கடுமையான தலைவலி, முதுகு தண்டில் வலி உண்டாகும். அதன் பிறகு காய்ச்சல் நிற்கும். இரண்டு நாள் கழித்து மீண்டும் வரும். அதற்குள் உடலுக்குள் டெங்கு நோய்கிருமிகள் ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்ஸ்ஸைக் குறைத்து அழித்து விடும். இந்த பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்புக்குள் பாயும் ரத்தமானது உடலுறுப்புகளுக்குள் கசிய ஆரம்பித்து விடும். உடலுக்குள் பாயும் குருதியானது கசியாமல் இருக்க இந்த பிளேட்லெட்ஸ் தான் காரணம். சாதாரணமாக ஒரு மனிதருக்கு இந்த பிளேட்லெட்ஸ் 1,50,000 முதல் 4,00,000 வரை இருக்கும். டெங்கு 5000க்குக் கொண்டு போய் முடித்து விடும். பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்பின் மிக மென்மையான பாகமான குடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும். அது ஏற்பட்டால் கொஞ்சம் பிரச்சினை தான். நன்றாகச் சாப்பிட்டு வந்தாலே உடம்புக்குள் பிளேட்லெட்ஸ் உருவாகி நார்மலுக்கு வந்து விடும். அத்துடன் தேவையான மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்து விட்டால் உடனடி குருதி சோதனை முக்கியம். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் குருதி சோதனை முக்கியம். பின்னர் தான் அது டெங்குவா இல்லை சாதாரண காய்ச்சலா என்று கண்டுபிடிக்க முடியும். சில மருத்துவர்கள் பார்த்தவுடனே தங்களின் அனுபவ அறிவால் இது என்ன காய்ச்சல் என்று கண்டுகொள்வார்கள். ஆனால் சிலரால் முடியாது. அனுபவ அறிவில்லாத காரணத்தால் பேரிழப்பு ஏற்படலாம் ஜாக்கிரதை.

டெங்கு வந்தால் பயப்பட தேவையே இல்லை. நேரா நேரத்துக்கு நல்ல சாப்பாடு. இள நீர், மாதுளை, பழங்கள், ஆண்டிபயாடிக் போன்றவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டால் போதும். KMCH, கொங்கு நாடு - கோவை மருத்துவமனைகளில் குறைந்தது நான்கு நாட்கள் ட்ரீட்மெண்ட் தங்கியிருத்தல் அவசியம்.

கார்காலத்தில் மேகங்களுடன் நோய்க்கிருமிகளும் சேர்ந்து வருகின்றன. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள். அசைவத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள். முட்டை கூட வேண்டாம். தினமும் நன்கு குளியுங்கள். சுகாதாரமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். இரண்டு தக்காளி பழத்தைப் போட்டு ரசம் வைத்து, ஒரு கீரை பொறியல், கொஞ்சம் சாதம் சாப்பிட்டாலே இந்த மழைக்காலத்தைக் கழித்து விடலாம். முடிந்த வரை சூடாகச் சாப்பிட்டு பழகுங்கள். சாலையோரக் கடைகளின் உணவுகள் பற்றி முழு விழிப்புணர்ச்சி தேவை. டீக்கடைகளில் பலகாரங்களுடன் நோய்க்கிருமிகளும் வருகின்றனவாம். பெரிய பெரிய ஹோட்டல்களின் உணவுகளின் ‘அபின்’ கலந்து விடுகின்றார்களாம். ஆகவே நம் ஆரோக்கியம் நம் கையில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Sunday, December 1, 2013

திண்டுக்கல் தண்டபாணி சாருக்கு நன்றி

மாலை நேரம், கணிணியில் திரு.சாவியின் நூலொன்றினைப் படித்துக் கொண்டிருந்தேன். போன் அழைத்தது. புது நெம்பர். 

வழமைபோல ‘வசியமை’ அழைப்பாக இருக்கும் போல இருக்குமென்று நினைத்தேன்.

”திண்டுக்கல்லில் இருந்து தண்டபாணி” என்றது மறுமுனை.

“சொல்லுங்க சார், என்ன வேணும்?” என்றேன்.

“சார் உங்க பிளாக்கைப் படித்தேன். நல்லா இருந்தது. எங்கள் ஊர் கோவில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. ஆன்மீக பேச்சாளர் மங்கையர்கரசி பேசினார்கள். நீங்கள் வந்து பேசுகின்றீர்களா?” என்று கேட்டார்.

இது என்ன புதுமாதிரியாக இருக்கிறதே என நினைத்துக் கொண்டு, “சார், ஏதோ எழுதுகிறேன். பேசவெல்லாம் சரியாக வராது.  நீங்கள் எனது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரிடம் பேசி, அவரிடம் தேதி பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த வருடம் அழையுங்கள், நிச்சயம் வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, நண்பர் திரு. பாரதி கிருஷ்ணகுமாரின் தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்தேன்.

இப்படி ஒரு அழைப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏதோ எனது அனுபவத்தை எழுதுகிறேன். அதற்காக இப்படி ஒரு அழைப்பா என வியக்கும்படி ஆனது. இனி தொடர்ந்து எழுதலாமா என யோசிக்க வைத்தது. எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

தேடலுடைய யாருக்கோ எது சேர வேண்டுமோ அது சென்று சேர்ந்தால் நல்லது தானே.

இனி எழுத முயல்கிறேன்.

அனைவரின் ஆசீர்வாதமும் அன்பும் தேவை !
-
ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Saturday, September 14, 2013

22 நாடுகள் சேர்ந்து விரட்டப்படவரின் நிகழ்காலத்தில் கதை

ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரச்சினைகள் இருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஒவ்வொரு நன்மைக்கும், தீமைக்கும்  நாமே காரணமாய் இருப்பதை நாம் அறிந்து கொள்வதில்லை. அறிந்து செய்யும் செயலோ அல்லது அறியாமல் செய்யும் செயலோ, என்ன செய்தோமோ அதற்குரிய பலன் அது நன்மையோ அல்லது தீமையோ அனுபவித்து தான் ஆக வேண்டும். ஒரு துன்பம் வருகிறது என்றால் ஏன் வந்தது என்பதை அறிந்து கொண்டு விட்டால் பிரச்சினையின் மூலம் தெரிந்து விடும். பின்னர் எது வரினும் கவலை ஏன் வரப்போகிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எப்போதாவது நிழல்காலத்தில் வாழ்வதை உணர்ந்திருக்கிறோமா என்று கேட்டால் பெரும்பாலானோர் “ நிகழ்காலமா?, அப்படியென்றால்” என்று கேட்பார்கள். இது ஒன்றுமில்லை. எது செய்யினும் அத்துடன் ஒன்றியிருத்தல் என்பதுதான்.

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது வீட்டு நினைவோ அல்லது சினிமா நினைவோ அல்லது காதலிகள் நினைவோ வந்தால் என்ன ஆகும்? எங்காவது ஓரிடத்தில் காரை முட்டி விடுவோம். செய்யும் வேலையில் முழுக்கவனமும் இல்லையென்றால் “கெட்டது காரியம்”.  நிகழ்காலத்தில் வாழ்ந்து பாருங்கள்.வெற்றிப்படிக்கட்டு கண்ணில் தெரியும். இதுதான் வெற்றியின் சாவி. பூட்டைத் திறக்க சாவி கிடைத்து விட்டது. இனி என்ன? பூட்டைத் திறந்து வெற்றிப்படிக்கட்டில் ஏற வேண்டியதுதான் பாக்கி.

ஒரு ஜோக் உங்களுக்காக,

சிலர் எப்போதுமே ஒரே மனநிலையில் வாழ்வர். மனிதர்களுக்கு எதையுமே எஸ்ட்ரீமாக செய்வதுதான் வழக்கம். அப்படி ஒரு மனிதரைப் பற்றித்தான் ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஒரு புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணர் ஆப்பிரிக்காவிற்க்கு கானக பயணம் சென்றார். அவர் திரும்பி வந்தவுடன் அவரது தோழர்கள் பயணம் எப்படி இருந்தது எனக் கேட்டனர். அதற்கு அவர் அது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நான் ஒரு மிருகத்தைக் கூட கொல்லவில்லை. அதற்கு பதிலாக நான் இங்கேயே ஆஸ்பத்திரியில் இருந்திருக்கலாம். என்றார்.

நீ எங்கிருந்தாலும், எங்குசென்றாலும் நீ நீயாகவே, உனது மனமாகவே, உனது குறிக்கோளாகவே இருக்கிறாய். இங்கு இப்பொழுது என்பதே உனக்கு இல்லை.

இக்கதையில் இருக்கும் பிரச்சினை என்னவென்று உங்களுக்குப் புரிந்து விட்டால் இனி “வானம் கூட வசப்படலாம்”

Sunday, August 18, 2013

வாழும் வரையிலும்

இப்பூமியில் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன இறக்கின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த உண்மை. எத்தனையோ மகான்கள், நூல்கள் நிலையற்ற வாழ்வினைப் பற்றிச் சொன்னாலும் மனிதர்களுக்கு அதெல்லாம் புரிவதே இல்லை.

மனிதனுக்குள்ளே மறைந்து நிற்கும் தானென்ற அகம்பாவமும், தானென்ற சுய நலமும் அவனுக்குக் கொடுக்கும் துன்பம் என்பது அளவிடற்கரியது. ஒரு கட்டத்தில் சுய நலத்தின் உருவாகவே மாறி விடும் மனிதனுக்கு தன் வயதான காலத்தில் தான் தாம் என்ன செய்தோம் என்ற தவறு புரிய ஆரம்பிக்கும்.

பிறர் கொடுத்த ரத்தத்தால் வந்தோம். பிறரின் உழைப்பில் வளர்ந்தோம். இப்படி பிறராலே உயர்ந்தோம். நம் அறிவும், அனுபவமும் பிறரின் அறிவாலே நமக்கு கிடைத்தது. இவ்வுலகில் நமக்கு கிடைத்த ஒவ்வொரு பொருளும் பிறரின் உதவியின்றி கிடைப்பதில்லை என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

கொடுத்தே புகழ் பெற்ற ஒருவர் இப்பூமியில் இருந்திருக்கிறார். சிபிச் சக்கரவர்த்தி, பாரி இவர்களின் வரிசையில் வந்தவர் அவர். கடந்த வாரத்தில் கர்ணன் திரைப்படம் பார்த்த போது அவரைப் பற்றி பாடிய பாடல்கள் உங்களுக்காக. படித்துப் பாருங்கள்.

சில உண்மைகள் புரியும்.

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

நானிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
என்று இவர்கள் எண்ணும் முன்னே
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னை கொடுப்பான் தான் உயிரும் தான் கொடுப்பான்
தயா நிதியே



Monday, July 22, 2013

தினமலர் அக்கம் பக்கத்தில்

கடந்த செவ்வாய்க் கிழமையன்று கோவை தினமலர் அக்கம்பக்கத்தில் எனது பிளாக்கை அறிமுகம் செய்திருந்தார்கள். இதோ அப்பக்கங்கள் கீழே. நன்றி தினமலர். படத்தைக் கிளிக் செய்து படிக்கலாம்.




சாஸ்திரங்களில் உணவு சாப்பிடும் முறைகள்(1)

கடந்த சனிக்கிழமை எனது நண்பர் திரு ஜோதி ஸ்வாமிகள் அவர்கள் பாடி மக்களுக்கு அர்பணித்த “திருமந்திரம் 3000” ஒலிப்பேழை வெளியீட்டு விழா பூண்டி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஆலயத்தில் நடைபெற்றது. வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் தூவிக் கொண்டிருந்த மழையிலும், சில்லென்று வீசிய மலைக்காற்றின் குளுமையிலும் விழா இனிமையாக நடந்தேறியது. 

விழாவின் இடையில் விழா மேடையில் ஒவ்வொருவரும் பேசி முடித்த பிறகு பொறுப்பாக கை தட்டி அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

நூற்றுக் கணக்கான நபர்கள் கூடியிருந்தனர்.விழாவில் கொடுக்கப்பட்ட மிக்ஸர், ஜிலேபி,  தண்ணீர் பாட்டில்களை சாப்பிட்டபின் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே குப்பையைப் போட்டு விட்டுச் சென்றனர். 

விழா முடிந்த பிறகு அங்கு கிடந்த தண்ணீர் பாட்டில், மிக்ஸர் காகிதம் போன்றவற்றை அழகிய இளைஞர் ஒருவர் பொறுக்கி எடுத்து அங்கு வைத்திருந்த குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்.  இதோ அந்த இளைஞர் உங்கள் பார்வைக்காக.




சரி, இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.

மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? உடம்பிற்குள் செல்லும் பொருட்கள் மற்றும் மனசு (??????) இரண்டைத் தவிர வேறு எந்தக் காரணத்தினாலும் நோய் வரக்கூடிய சாத்தியங்கள் இல்லவே இல்லை எனலாம். ஆனாலும் மூன்றாவதாய் வேறொரு காரணமும் உண்டு. உயிருக்கு உணவே தேவையில்லை என்பார் எனது மாஸ்டர். மூன்றாவது காரணத்தை இங்குச் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால் சமயம் வரும்போது எழுதுகிறேன்.

முன்னோர்கள் தன் வம்சங்கள் நோயின்றி வாழ எத்தனையோ நல்ல வழிகளை அனுபவித்து உணர்ந்ததை எழுதியும், சொல்லியும் வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் நாமோ எதைப் பற்றியும் கவலைப்படுவதும் இல்லை. உணர்ந்து கொள்வதும் இல்லை.

சாஸ்திரங்களில் உணவு உட்கொள்ளும் முறைகளைப் பற்றிச் சொல்லி இருக்கின்றார்கள். ஸ்ரீ வராகி விஜயம் என்ற புத்தகத்தில் விரிவாக எழுதி இருந்தார்கள். அதில் முக்கியமானவை உங்களின் கவனத்திற்காக. மனதில் குறித்துக் கொள்ளுங்கள். 

ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக அமர வேண்டும்
கீர்த்தியை விரும்புவன் தெற்குமுகமாக அமர வேண்டும்
சம்பத்தை விரும்புவன் மேற்கு முகமாக உட்கார வேண்டும்.
சத்தியத்தை விரும்புகிறவன் வடக்கு முகமாக உட்கார்ந்து உணவு வேண்டும்.

சாப்பிடும் போது அன்னத்தில் மயிர் இருந்தால் அந்த அன்னத்தைக் கீழே வைத்து விட்டு மீதி உள்ளதை புசிக்க வேண்டும். தலைமயிரையும், நகத்தையும், வேஷ்டியில் பிரித்த நூலையும் வீட்டு முன்வாசலில் போடுதல் கூடாது. பின் வாசலில் தான் போட வேண்டும்.

சாப்பிடும் போது வாயில் மயிர் அகப்படுதல் முன் கூட்டியே வரும் கவலையை உணர்த்துவதாகும். அப்படி வந்தால் அதை உமிழ்ந்து விட்டு ஒரு நெல் சாப்பிட்டு விட்டால் எந்தக் கவலையும் வராது. வந்தாலும் சிக்கல் இருக்காது.

இன்னும் இருக்கிறது.

தொடரும் விரைவில்...


Friday, July 12, 2013

நிலம்(2) - லீகல் ஒப்பீனியன் ஜாக்கிரதை

வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலருக்கு அவர்களின் தேவைக்காக, நிலம் தேர்ந்தெடுத்து, அதற்குத் தேவையான டாக்குமெண்ட்களை பெற்று, சரிபார்த்து, மார்க்கெட் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயித்து கிரயம் செய்து கொடுத்து வருகிறேன். அவர்கள் பணம் அனுப்புவதோடு சரி. கையெழுத்துப் போட மட்டும் வருவார்கள். அதன் பிறகு பட்டா, சிட்டா, அடங்கல், வரி, கந்தாயம் போன்றவற்றை அவர்கள் பெயருக்கு மாற்றி கொடுத்தும் வருகிறேன். கடந்த வருடம் இரண்டு  ஏக்கர் 23 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்தேன். இன்றைக்கு இந்த தேதியில் அதன் விலை ஏக்கர் 45 லட்சம் செல்கிறது. எவ்வளவு பெரிய வருமானம் பாருங்கள். அடுத்த வரும் ஏக்கர் 50 லட்சம் ஆகி விடும். கோடீஸ்வரர் ஆகி விடுவார். 

எனது இத்தொழில் மூலம் நான் அறிய வந்த சில தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கிறேன். அது அனைவருக்கும் உதவும் என்ற நம்பிக்கையின் காரணமாக.

ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு விதம். அந்த நிலத்தின் வரலாறோ அது ஒரு விதம். அதன் டாக்குமெண்ட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.சிலர் தேவையான டாக்குமெண்ட்கள் வைத்திருப்பார்கள். சிலருக்கு என்னவென்றே தெரியாது. மூதாதையர் நிலமாய் இருக்கும். அதன் உரிமையாளர்கள் யார் என்று கண்டுபிடிப்பது பெரும் சிரமம்.  

ஒரு நிலத்தின் கையெழுத்துதாரர்கள் 170 பேர் இருந்தார்கள். இவர்களை ஒன்று திரட்டி கையெழுத்து வாங்குவது பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நான்கு அல்லது ஐந்து வேன்கள் வாடகைக்கு எடுக்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு சில நிலத்தின் கதைகள் இருக்கும். 

இப்படித்தான் ஒரு தடவை,நண்பரொருவர் நிலம் வாங்க வேண்டி டாக்குமெண்ட்கள் சரிபார்க்க என்னிடம் வந்தார். அவர் கொடுத்த அத்தனை டாக்குமெண்ட்களையும் வாங்கி சரிபார்த்து வரும் போது வக்கீல் ஒருவரின் லீகல் ஒப்பீனியன் ஒன்றும், டைப் செய்யப்பட்ட ரிஜிஸ்டருக்கு தயாராக இருந்த பத்திரம் ஒன்றும் இருந்ததைப் பார்த்தேன்.

அனைத்து டாக்குமெண்ட்களையும் வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக செக்கிங் செய்து வந்த பிறகு,  வக்கீல் கொடுத்த லீகல் ஒப்பீனியனை படித்தேன்.
சி ஷெட்யூலின் படி நண்பருக்குப் பாத்தியப்பட்ட சொத்தினை வக்கீல் பி ஷெட்யூல் என்று போட்டு, சொத்து விபரத்தையும் தவறாக குறிப்பிட்டு எல்லாம் 100% சரி என்று சான்று கொடுத்திருந்தார்.இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, டாக்குமெண்ட்டும் தயார் செய்யப்பட்டு வந்திருந்தது. இந்த சொத்தினை நண்பர் வாங்கினால்,கிரையம் செய்திருந்தால் விளைவு என்ன? அப்பத்திரம் செல்லாது. கொடுத்த பணமும் போச்சு. நண்பரும் பணத்தை இழந்திருப்பார்.

கோவையில் ஏக்கர் 15 லட்சத்திலிருந்து 10 கோடி வரை விலை போகிறது. பல ஊரிலிருந்து பலர் இங்கு வசிக்க, தொழில் செய்ய வருகின்றனர்.  இவர்களில் பலர் சொத்துக்களை வாங்குகிறார்கள். பின்னர் விற்கிறார்கள். ஆக நிலத்தின் வரலாற்றை அட்சர சுத்தமாய் கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.நிலம் வாங்க நினைக்கும் போது அந்த நிலத்தின் அத்தனை வரலாற்றினையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். இல்லையென்றால் பணமும் அத்தோடு நிம்மதியும் போய் விடும். நிலம் வாங்கும் போது அதிக கவனம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிலர் வக்கீல் லீகல் ஒப்பீனியன் கொடுத்தால் போதும், அதை வைத்து கிரயம் பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். லீகல் ஒப்பீனியன் சரி என்று நினைத்தால் அதுவும் தவறாகப் போய் விடும் ஆபத்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

தொடரும் விரைவில்

Wednesday, July 3, 2013

வள்ளுவரும் வாசுகியும் - வாழ்க்கைத் தத்துவம்



எல்.சி.டி டிவி, உடலை கொன்று கூறாக்கும் ஏ.சி, ஷோபா, மெத்தை, கட்டில், கையணி, காதணி, ஒன்றுக்கும் உதவாத பட்டுச்சேலைகள், பளபளக்கும் ஆடைகள், கார், ஃப்ளைட் என்று ஆண்களும், பெண்களும் பொருட்களின் மீதான மோகத்தில் திளைத்து, அதற்காக தன் வாழ்க்கையை வேலை வேலை என்று அட்டையைப் போல உறிஞ்சும் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உழைத்து அவர்கள் போடும் காசைப் பொறுக்கிக் கொண்டு, அதே கார்ப்பொரேட் கம்பெனிகள் நடத்தும் மால்களில், அவர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களை வாங்கி ஏமாந்து போய் நிற்கிறார்கள் இன்றைய நவ நாகரீக மனிதர்கள். அதுமட்டுமா, உழைத்து முடித்து உடலில் அத்தனை நோய்களையும் பெற்றுக் கொண்டு, முடிவில் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட ஆன்மீக வியாபாரிகளிடம் சென்று அடைக்கலமாகி இருக்கும் சொத்தினையும் அவர்களிடம் இழந்து விடுகின்றார்கள். இதைப் பற்றிய புரிதல் என்பது கொஞ்சம் கூட மனிதர்களிடையே இல்லை என்பதுதான் நாகரீகத்தின் மோசமான விளைவினைக் காட்டுகிறது. மூளைச் சலவை செய்து சுத்தமாக மடித்து வைக்கப்பட்ட துணியைப் போல ஆகி விட்டார்கள் மனிதர்கள்.

எத்தனை லட்சம் கொடுத்து வாங்கினாலும் கார் தெருவில்தான் நிற்கும். எத்தனை லட்சம் கொடுத்து ஆடைகள் வாங்கினாலும் அது கிழிந்து சாயமிழந்து பழதாகி விடும். இன்றைக்கு எல்.சி.டி நாளைக்கு என்ன டிவியோ? வாங்கிய எல்சிடிக்கு என்ன மதிப்பு இருக்கிறது? ஒன்றுமில்லை. இன்றைக்கு ஆப்பிள் போன். நாளைக்கு அப்கிரேடு ஆனால் வாங்கிய போன் மதிப்பிழந்து போய் விடும். நான் பிராண்டட் சர்ட்தான் போடுவேன். நான் வைத்திருக்கும் காரின் விலை 20 லட்சம் என்றெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். இப்பெருமை வந்தது இப்பொருட்களால் என்றால் அது பொருட்களை தயாரிப்பவர்களுக்குத்தானே சேரும். உனக்கு என்ன இதில் தற்பெருமை இருக்கிறது? இப்படியான பொருட்களை விற்பவர்களுக்கு வேண்டுமானால் லாபம் கொட்டும். வாங்கியவர்களுக்கு ஈகோவினால் பொருள் இழப்புதான் மிச்சம். இப்படியான மக்களுக்குத்தான் இந்தக் கதை. தொடர்ந்து படியுங்கள்.

திருவள்ளுவரின் திருக்குறளில் ஒரு இடத்தில் கூட கமா போட்டு விடமுடியாது. வார்த்தைகளை மாற்றிப் போடவும் முடியாது. அப்படிப் போட்டால் பாடலின் அர்த்தமே மாறிப்போய்விடும். இப்படியான படைப்பை இன்றிருக்கும் எவராவது எழுத முடியுமா?  ஏன் முடியவில்லை? என்ன காரணம்? யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? வள்ளுவரும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா? வள்ளுவரும், அவரின் மனைவி வாசுகியும் ஒரே ஒரு ஆடையை ஒருவர் மாற்றி ஒருவர் அணிந்து கொண்டுதான் வெளியில் சென்று வருவார்களாம். வள்ளுவரின் தேவைகளை அறிந்து அவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே தன் வாழ் நாள் கடமையாக கொண்டிருந்தவர் வாசுகி அம்மையார். இன்றைக்கு வாழும் கணவன் மனைவிகளில் எத்தனை பேர் இவர்களைப் போல இருக்கின்றார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சிலர் இருக்கலாம். கணவன், மனைவி உறவென்பது படைக்கும் தொழில், ஆக்கும் தொழில் கொண்டது. இல்லையென்று எவராவது மறுக்கமுடியுமா? இவ்வுறவுக்கு இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில், ஸ்டைல் என்ற பெயரில் எவ்வளவு கேடுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்ப நல நீதிமன்றங்களில்  பார்த்தால் தெரியும்? எத்தனை எத்தனை வழக்குகள். ஏன் ? எதற்கு? என்று கேட்டால் ஒரே ஒரு காரணம் தான் சொல்வார்கள். “பொருள்”

திருப்பதியில் ஜீவசமாதி அடைந்து திருப்பதி பெருமாள் சன்னிதிக்கே பெரும் புகழைத் தேடித்தந்த கொங்கனவர் என்கிற சித்தர் ஒரு முறை திருவள்ளுவரும், வாசுகி அம்மையாரும் வசிக்கும் தெருவழியாகச் செல்லும் போது பசியெடுக்க, இவர்களின் வீட்டு வாசலில் நின்று கொண்டு பிச்சை கேட்டிருக்கிறார். அந்த நேரத்தில் வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். கணவர் சாப்பிட்டு முடித்தவுடன் வாசலுக்கு வர, அங்கு கொங்கணவர் கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.

இந்தக் கொங்கணவர்  மகா தவ பலம் நிரம்பியவர். வழியில் வந்து கொண்டிருக்கையில் அவர் மீது எச்சம் போட்ட கொக்கினை கோபத்துடன் பார்க்க அந்த நிமிடத்தில் கொக்கு தீப்பிடித்து இறந்து விட்டது. அவரின் கண் வீச்சுக்கு அவ்வளவு சக்தி. அச்சம்பவம் முடிந்த பிறகுதான் வாசுகி அம்மையாரிடம் பிச்சை கேட்டு வந்திருக்கிறார். அம்மையார் வர காலதாமதமானதால் கோபத்துடன் அவரை நோக்க, அவரைப் பார்த்துச் சிரித்த வாசுகி அம்மையார், “கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்க சித்தருக்கு சித்தபிரமை பிடித்து விட்டதாம்.

இவருக்கு எப்படி அச்சம்பவம் தெரியும் என்று குழம்புகிறார். பிறகு தெளிவுறுகிறார். எத்தனையோ காலம் தவம் செய்து கிடைத்த பலனை, ஒரு சாதாரண பெண் வெகு அலட்சியமாய் சொல்கிறார் என்றால் காரணம் என்ன? கணவனுக்கு பணிவுடை செய்யும் மனைவிக்கு அத்தனை சக்தி எப்படிக் கிடைக்கும்? இதெல்லாம் சாத்தியமா?

ஆம். எல்லாம் சாத்தியமே. 

அர்ப்பணிப்பு, தூயமனது, தியாகம்.

வள்ளவருக்கும் வாசுகிக்கும் இருந்தது அர்ப்பணிப்பு, தூயமனசு, தியாகம். வாசுகியின் அர்ப்பணிப்பு தான் வள்ளுவருக்கு திருக்குறளை எழுத வைத்தது.

கொங்கணவர் இவர்கள் இருவரும் இருக்கும் ஏழ்மை நிலையைப் பார்த்து விட்டு வள்ளுவரை தனி இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். தன் தவ வலிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை படைத்த அச்சித்தர், தன் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தீர்த்தம் எடுத்து எதிரில் இருந்த பாறை மீது தெளிக்க அது தங்கமாகிறது. வள்ளுவரிடம் காட்டி, இதை வைத்துக் கொண்டு வசதியாய் வாழுங்கள் என்றுச் சொல்லி இருக்கிறார்.

அவரைப் பார்த்து நகைத்த வள்ளுவர், இன்னும் கொஞ்ச தூரத்தில் இருந்த பாறையின் அருகில் சென்று அதன் மீது சிறு நீர் கழித்திருக்கிறார். அப்பாறையே தங்கமாகி விட்டது.

கமண்டலத்தின் தீர்த்தத்துக்கு இருந்த வல்லமை வள்ளுவரின் சிறுநீருக்கு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? யோசித்துப் பாருங்கள். 
வள்ளுவர், வாசுகியின் வாழ்க்கை புரியும்.

குறிப்பு : இக்கதைகள் எனது மாஸ்டர் சொல்லி நான் கேட்டது. அவரிடம் அனுமதி கேட்டு பதிக்கப்பட்டது.

Friday, June 28, 2013

திருமந்திரம் இசைத்தட்டு வெளியீடு விழா - வெள்ளிங்கிரி சுவாமிகள் ஆஸ்ரமம்


தமிழகத்தின் முதல் சாத்திர நூல் திருமந்திரம். திருமூலர் அவர்கள் திருவாவடுதுறையில் தங்கி இருந்து மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடியதாக கருதப்படும் திருமந்திரத்தினை ஒலி வடிவில் இசைத்தட்டாக எனது உயிரோடு உயிராய் நின்று எனக்குள்  நிறைந்திருக்கும் எனது குரு நாதரின் அருமைச் சீடரும், துன்பம் வரும் முன்பே ஓடோடி வந்து நின்று காத்தருளும் ஜோதி ஸ்வாமிகளின் குரலில் வெளிவருகிறது.

கோயமுத்தூரின் அடையாளம், கோவைக்கு உயிர் கொடுத்து வரும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் எனது குரு நாதர் சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதியில், ஜூலை மாதம் 20 ஆம் தேதி, 2013, ஆடி மாதம் 4ம் தேதி சனிக்கிழமை அன்று மூன்று மணி அளவில் வெளியீட்டு விழா நடக்கிறது.
இசைத்தட்டு இலவசமாய் வழங்கப்படுகிறது. கோவையில் இருக்கும் நண்பர்கள் விழாவில் அவசியம் கலந்து கொண்டு திருமூலர் வழங்கிச் சென்ற திருமந்திரத்தின் இசைத்தட்டினைப் பெற்றுச் செல்ல அழைக்கிறேன்.

சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வழி :

ஈஷா யோகமையம் செல்லும் வழியில் முள்ளங்காடு செக்போஸ்டில் இடதுபுறம் திரும்பினால் சுவாமியின் ஆஸ்ரமத்திற்குச் செல்லலாம். 

ஜோதி ஸ்வாமிகளை தொடர்பு கொள்ள : 9894815954

திருமந்திரத்திலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக இங்கே !

பாடல் 85 :
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

பாடல் : 270
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பாடல் :1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

Thursday, June 27, 2013

கோவையில் கண்ணதாசன் விருது 2013- முத்துலிங்கம் அசோகமித்திரன்



கோவை கிக்கானி பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணதாசன் கழகம் மரபின் மைந்தர் முத்தையா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய விருது விழா நடைபெற்றது. நிகழ்ச்சி ஆரம்பித்து சிறிது நேரமாகி விட்டிருந்தது. நானும் ரித்திக் நந்தாவும் சென்றிருந்தோம்.

அரங்கம் நிரம்பி வழிந்தது. வெகு அமைதியாக இருந்தது. அரங்கத்திலிருந்து ஒருவர் கூட வெளியில் செல்லவில்லை. சினிமா பிரபலங்களை காணத்தான் இவ்வளவு கூட்டம் கூடும். ஆனால் இந்த நிகழ்வு என்னை வெகுவாய் ஆச்சரியப்படுத்தியது. இலக்கியத்திற்காகவும் சிறு கூட்டம் இருக்கிறதே என்று சந்தோசம். சாரு நிவேதிதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் புத்தக வெளியீட்டு விழாவினை கோவையில் வைக்கலாம். நிச்சயம் வாசகர்கள் கூடுவார்கள். 

நண்பர் திரு பாரதி கிருஷ்ணகுமாரும், எங்களால் முதலாளி சார் என்றழைக்கப்படும் முதலாளியும் என்னை அழைத்திருந்த காரணத்தால் முதன் முதலாய் இப்படிப்பட்ட விழாவிற்குச் செல்ல எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. 

முதலாளி சார் எனக்கு கோவையின் பிரதான கிளப்பில் வைத்து திரு. பாரதி கிருஷ்ணகுமாரை அறிமுகப்படுத்திய போது அவருடனான உரையாடலில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் மனதை நெகிழச் செய்து கொண்டே வந்தார். சில நாட்கள் சென்ற பிறகு அவரிடமிருந்து “அப்பத்தா”, “அருந்தவப்பன்றி பாரதியார்” என்ற நூல்களும் அவர் இயக்கிய ஆவணப்படங்களும் வந்திருந்தன. அப்பத்தா சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். மனதை கீறிச் செல்லும் கதைகள் அவை. அருந்தவப்பன்றி பாரதியார் நூல் பாரதியார் வாழ்க்கையில் இதுவரை எவரும் சொல்லாத வரலாற்று சம்பவங்களை பதிவாகியிருக்கிறது. இதற்காக பெரும் உழைப்பினை அவர் கொடுத்திருக்கிறார். இந்த நூல் இனி பாரதியாரின் வரலாற்றில் ஒரு தனி இடம் பிடித்தே தீரும். 

வாச்சாத்தி தீர்ப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது வாச்சாத்தி என்ற கிராமத்தில் நடைபெற்ற வனக்காவலர்கள், காவல்துறை அதிகாரிகளின் பாலியல் வன்கொடுமை பற்றிய கொடூரத்தை விளக்கிய  ஆவணப் படைப்பினை திரு பாரதி கிருஷ்ணகுமார் எடுத்திருக்கிறார். 

இவ்வழக்கினை சிபிஐ கையிலெடுத்து கிட்டத்தட்ட 269 அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த “உண்மை” வெற்றி பெற்ற சம்பவம் அது. அதை அவர் ஆவணப்படுத்தியிருந்த விதம் நெகிழச் செய்தது. இந்த தீர்ப்பினைக் எழுதிய நீதிபதி பிரபல கட்சியின் மாநில அமைப்பாளரும் எனது நெருங்கிய நண்பரின் உறவுக்காரர்.  நாங்கள் இருவரும் இத்தீர்ப்பினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது “மனச்சாட்சி” மற்றும் “சட்டத்தின்” படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார். 

இந்த ஆவணப்படம் தமிழர்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளின் கொடுங்கோலாட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாய் இருந்தது. (சார், இன்னும் உங்களின் மூன்று படைப்புகளைப் பார்க்கவே இல்லை. மனது சரியாகட்டும் என்று காத்திருக்கிறேன்)

பாரதி கிருஷ்ணகுமாரின் இணையதளம் : www.bharathikrishnakumar.com

இனி விருதுக்கு வரலாம்.

அசோகமித்திரன் - படைப்பானது எப்போதும் இளமையாகவே இருப்பது போல அவரிடம் இளமை இருந்தது. அதிகம் பேச முடியவில்லை. ஆனால் அவரின் படைப்புகளை ஒரு வாசகியாக பாராட்டிய முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கண்களிலும் பேச்சிலும் அசோகமித்திரன் தெறித்தார். படுவீச்சு ! அசோகமித்திரனை நான் அதிகம் வாசித்திருக்கவில்லை. பாவாடை அகலமாயிருந்தால் பஸ்ஸில் ஏற வசதியாய் இருக்குமே என்று நினைக்கும் பெண்களின் உள்மனதைக் கூட படைப்புகளில் காட்டியிருக்கும் அசோகமித்திரன் பற்றி புகழ்ச்சி சூப்பர். இவர் கண்ணதாசனைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 

முத்துலிங்கம் - கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேலான திரைக்கலையுலக படைப்பாளி. அவரின் பாடல்கள் பற்றி பேசினார். கண்ணதாசனைப் பற்றிப் பேசினார். கொடுத்திருந்த நேரத்தில் திருக்குறளைப் போலச் சுருக்கமாய் பேசினார். முதுகுவலி என்று முதுமைக்கே உரிய காரணமொன்றினைச் சொன்னார். 

இசைக்கவி ரமணன் அவர்கள் பேசினார்கள். சிலாகிக்கும் அம்சங்கள் ஒன்றுமில்லை. பாடினார் ஆனால் பாருங்கள்  எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. இந்தக் காலத்து சின்னப் பிள்ளைகள் கூட எவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள். இவர் ஏன் அப்படிப்பாடினார் என்று புரியவில்லை. ஏதாவது காரணமிருக்கும். அது அவருக்கு நியாயமாய் இருக்கலாம். 

பேராசிரியர் ராமசந்திரன் - கண்ணதாசனைப் பற்றிப் பேச வந்து விட்டு, இந்தக் கால பட்டிமன்ற பேச்சினைப் பேசினார். பேராசிரியர் சார் என்னதான் சொல்லுங்கள் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிப் பேசினால் கேட்கின்றவர்கள் ஒருவர் கூட அவ்விடத்திலிருந்து எழுந்து கொள்ள முடியாது. கட்டிப் போடும் காந்தக்குரலோன் அவர். ஆனால் கடைசியாகப் பேச வந்த பேராசிரியர் வியர்த்துக் கொண்டே கிச் கிச் மூட்டிக் கொண்டிருந்தார். வேடிக்கையாக இருந்தது.

ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. 
அழியாத வரலாறு படைத்த கண்ணதாசன் அழகாய் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால் எனக்குத்தான் இவ்விருது விழா முழுமையற்றதைப் போல தோன்றியது, பாதிவயதில் காலமுமாகிப் போன கண்ணதாசனைப் போல.

Thursday, June 20, 2013

நட்பிற்கு மரியாதை உண்மைச் சம்பவம்

நேற்று ஆஃபீசுக்கு வரும்  வழியில் சத்திரோடு அன்னபூர்ணா ஹோட்டலின் முன்புறம் டிவிஎஸ் ஒன்று அடிபட்டு கீழே கிடந்தது. பல்சர் பைக்கில் மோதியவன் நின்று கொண்டிருந்தான். விழுந்து கிடந்தவன் கைலி கட்டி இருந்தான். ஆள் பார்க்க கிராமத்தான் போலிருந்தான். அன்னபூர்ணா செக்யூரிட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.  சாலையில் சென்று கொண்டிருந்தோர் ஒருவர் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இடித்தவன் அவன் பாட்டிற்கு நின்று கொண்டிருந்தான். அடிபட்டு விழுந்தவன் அவனாகவே தட்டுத்தடுமாறி எழுந்தான். கண்களில் கண்ணீர் வடிய வலியில் துடித்தபடி எழுந்தான். வண்டியை நிமிர்த்தினான். பரிதாபத்துக்குரிய அந்த இளைஞன் அழகாய் இல்லை. அவன் ஒரு பெண்ணாக இல்லை. அவனிடம் பளபளப்பான ட்ரஸ் இல்லை. அழுக்காய் இருந்தான். இச்சமூகத்தின் மன நிலையை இச்சம்பவம் எனக்கு பளீரென சுட்டிக்காட்டியது.

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் அவனுக்கு உதவ எனதுடல் ஒத்துழைக்காது. மனவலியுடன் அவன் மெதுவாக வண்டியை நிமிர்த்தி கண்ணீருடன் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல்சர் பரதேசி எப்போதே சென்று விட்டான்.

சக மனிதன் துன்பத்தைக் கூட கண்டு கொள்ளாத உலகில் வாழ்வதை நினைத்து வேதனைதான் மண்டியது. 

எனது நண்பரொருவர் கணபதியில் வசிக்கிறார். அவருக்கு ஒரு நண்பர், அவர் ஒரு கோவில் பூசாரி. தனிக்கட்டை. கல்யாணம் ஏதும் செய்துகொள்ளவில்லை. 

அன்றைக்கு விடிகாலையில் பூசாரிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. வலியில் துடித்திருக்கிறார். நம் ஆயுள் முடியப்போகிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவருக்கு உதவி செய்தவர்கள் ”உங்கள் சொந்தக்காரர் யாராவது இருக்கின்றார்களா, சொல்லி அனுப்புகிறோம்” என்று கேட்க அவர், “எனது நண்பரிடம் சொல்லுங்கள், அவர் வந்தால் க் கொள்வார்” என்றுச் சொல்லி இருக்கிறார். எனது நண்பருக்குத் தகவல் வந்து பூசாரியார் இருக்குமிடம் செல்லுகையில் உயிர் போய் விட்டது. விடிகாலை 5.45க்கு உயிர் பிரிந்து விட்டது. வேறு எந்தச் சொந்தக்காரரிடம் சொல்லவில்லை. தன் நண்பரிடம் மட்டும் தகவல் சொல்லி விட்டு அவர் விண்ணுலகை அடைந்து விட்டார். 

எனது நண்பர் பூசாரி நண்பனை மரியாதையுடன் தகனம் செய்து அத்தனை செலவினையும் செய்து விட்டு வீடு திரும்பினார்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. - திருவள்ளுவர் 

(நட்பின் உன்னதம் என்னவென்றால் எப்போதெல்லாம் நண்பன் துன்பப்படுகின்றானோ அவனுக்கு தன்னால் இயன்ற நிலையில் நின்று அவனின் துன்பத்தை நீக்குவது தான்  உண்மையான நட்பு)

பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனின் நட்பினைப் பற்றிய சில கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு. இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று கூட நினைத்தேன். 

இக்காலத்தில் நட்பினால் தான் மிகப் பெரும் பகை வளரும். கூடாத நட்பின் விளைவாக சொத்து, சுகம் இழந்தவர்கள் எண்ணற்றோர். இப்படி இருக்கும் கலிகாலத்தில் மனதை சிலிர்க்கச் செய்யும் இச்சம்பவத்தில் நானொரு சாட்சியாக இருந்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பித்தான் இப்பதிவு.

Monday, June 10, 2013

வெள்ளிங்கிரி மலையிலிருந்து வரும் ஓடை



நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்லும் போதெல்லாம் அகண்ட காவிரியில் சுழித்து ஓடும் தண்ணீர்ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குளியல் போட்டு, துணிகளைத் துவைத்து காய வைத்து விட்டு, பகல் பனிரெண்டு மணிக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அவரைத் தரிசித்து விட்டு வருவேன்.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஓடி விட்டன. 

நேற்று நானும் என் குழந்தைகள் இருவரும் முள்ளங்காட்டில் இருக்கும் வெள்ளிங்கிரி சித்தர் ஜீவ சமாதிக்குப் பின்புறம் வெள்ளிங்கிரி மலையில் இருந்து வரும் ஆற்றில் குளித்து விட்டு வந்தோம்.

குளிர் தண்ணீர், மலையில் இருந்து வருகிறது. உடம்புச் சூடெல்லாம் வடிய கண்கள் சிவக்க குளித்தேன். காவிரியில் குளித்த அன்று இருந்த சந்தோஷம் நேற்று எனக்கு கிடைத்தது.

ஜோதி சுவாமி மாங்காய் சாம்பாரும், அருமையான ரசமும், முட்டைக்கோசு பொறியலும், பொங்கலும் தந்து உபசரித்தார்.

நெஞ்சம் நிறைந்து வீடு திரும்பினேன். பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்பவர்கள் அந்த ஆற்றில் குளியல் போடுங்கள். மூலிகைத் தண்ணீர். உடலுக்கு நல்லது அல்லவா?



Thursday, May 30, 2013

மனிதன் எப்படி வாழ வேண்டும்?


பூமியில் பிறப்பெடுத்த மனிதனுக்கு அவனின் ஒவ்வொரு கால வயதிலும் பிறரின் உதவியில்லாமல் வாழவே முடியாது. ஆனால் விலங்குகளுக்கு அப்படி அல்ல. பால் கறப்பு முடிந்து அடுத்த கன்றுக்கு பசு தயாரானதும் பசு வேறு கன்று வேறு என்றாகி விடும். அதன் பிறகு கன்றின் வாழ்க்கை அதன் கையிலோ அல்லது அது எவரிடம் இருக்கிறதோ அவரின் கையிலோ மாறி விடும். இதே போலத்தான் ஒவ்வொரு விலங்கினங்களும் வாழ்கின்றன.

ஆனால் மனிதப் பிறவியை எடுத்துக் கொண்டால் குழந்தையாய் இருக்கும் பொழுதில் இருந்து அம்மாவின் உதவி தேவை. அம்மாவிற்கு அப்பாவின் உதவி தேவை. அப்பாவிற்கு பிறரின் உதவி தேவை என்று உதவி உதவி என்று பிறரிடமிருந்து பெறுவது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

வளர்வதற்குப் பெற்றோர் உதவி தேவை

படிப்பதற்கு ஆசிரியர் உதவி தேவை

சந்ததிக்கு பெண்ணின் உதவி தேவை

இப்படி அவனின் ஒவ்வொரு நொடியிலும் பிறரிடமிருந்து அவன் பெற்றுக் கொள்வது அதிகம். ஆனால் தற்போதைய கலிகாலத்தில் பெற்றுக் கொள்பவன் பிறருக்கு கொடுக்க மறுக்கிறான். அதை பணம் என்ற அளவுகோலை கொண்டு நான் ஏன் கொடுக்க வேண்டும்? என்று விதண்டாவாதமாய் கேள்வி கேட்கின்றான். அப்படிக் கேள்வி கேட்போருக்கு ஒரு செய்தி இதோ.

எனது மாஸ்டர் என்னிடம் சொன்ன ஒரு உண்மைச் சம்பவம்.

மாஸ்டர் அவரின் நண்பரின் கடைக்குச் சென்றிருந்த போது அழகிய யுவதி ஒருவர் வந்து 500 ரூபாய்க்குப் பென்சில் பேனாக்கள் வாங்கிச் சென்றிருக்கிறார். 

நண்பர் மாஸ்டரிடம்”இப்பெண்ணைப் பார்த்தால் ஏதாவது வித்தியாசமாய் தெரிகிறதா?” என்று கேட்டிருக்கிறார்.

”ஒன்றும் தெரியவில்லையே” என்றார் மாஸ்டர்.

“இப்பெண் எப்போது சாகும் என்று தெரியாது. முற்றிய நிலையில் புற்றுநோயால் அவதிப்படுகிறார். ஆனால் அப்பெண்ணின் முகத்தில் அதற்கான ஏதாவதொரு அறிகுறி தெரிகிறதா? இந்தச் சூழலிலும் வெறும் 5000 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். வாங்கும் சம்பளத்தில் 500 ரூபாயை தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய அனாதை விடுதிக்கு பென்சில், பேனாவாக வாங்கிக் கொடுத்து வருகிறார் “ என்றார் மாஸ்டரின் நண்பர்.

மேலே இருக்கும் சம்பவத்தைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

மாஸ்டர் தொடர்ந்து, ”மனிதன் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். இங்கு நாம் பெற்றிருப்பது எதுவுமே நம்முடையது அல்ல. நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் நமக்கு கொடுத்துச் சென்றது. மனிதன் அதை மறந்து வாழ்கிறான். அதனால் துன்பத்தில் உழல்கிறான்” என்றார்.

அப்பெண்ணின் நன்றி மறவாமையை நினைத்து எனக்கு ஒரு நிமிடம் சந்தோஷமாய் இருந்தது. அவரின் உடல் நிலையை நினைத்து மனம் கனக்கிறது.
-

Monday, May 27, 2013

குல்மொஹர் மரங்களில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன

விடிகாலைப் பொழுதில் தினம்தோறும் வீட்டின் அருகில் மயில்கள் அகவிக் கொண்டிருக்கும். அச்சத்தம் எனக்கொரு ஆர்வத்தைக் கொடுக்கும். கிட்டத்தட்ட இருபது மயில்களுக்கு மேல் இருக்குமென்று எண்ணுகிறேன். அதில் இரண்டு மயில்கள் எனது மருத்துவ நண்பரின் வீட்டின் மீது நின்று வெடுக் வெடுக்கென்று தலையை அங்குமிங்குமாய் திருப்பிக் கொண்டிருக்கும். மிக வேடிக்கையாக இருப்பினும் அவற்றின் அழகு என்னை குதூகலத்தில் கொண்டு போய் தள்ளி விடும். பூக்கள் விரிந்தாற் போல ஒரு மகிழ்ச்சி எனக்குள்ளே பரவும். பூக்களை நாமெப்போதும் ரசிப்பதில்லை. பூக்கள் என்றவுடன் பெண்கள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஆகையால் உண்மையான பூக்களை நாம் ரசிப்பது இல்லை. எனினும் அது யாருக்காகவோ பூத்துக் கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கையும் அவ்வாறுதான். ஆனால் அதை வாழத்தான் எவருக்கும் நேரமில்லை. அல்லது தெரியவில்லை. எல்லோரும் அதை வெகு சிக்கல்களுக்குள்ளாக்கி பின் துயரத்தில் வீழ்கிறோம்.

வசியம் என்பதைப் படித்து விட்டு, என்னை அழைக்கும் நபர்கள் எவரும் தன் வாழ்வினைப் பற்றிய படிதல் இல்லாமலிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்று தெரியவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தெரியுமா? 

பாதை ஒன்று தெரிகிறது. அதில் நடக்க ஆரம்பிக்கிறோம். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறோம். ஏன் நடக்கிறோம், எதற்காக நடக்கிறோம் என்பதெல்லாம் தெரியாது. நமக்கு முன்னே இருப்பவர் நடக்கிறார். நானும்  நடக்கிறேன் என்பார்கள். இப்படித்தான் இருக்கும் அவர்களின் வாழ்க்கை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறது அல்லவா? புரியாதவர்களுக்கு ஒன்றும் சொல்வதிற்கில்லை.

குல்மொஹர் மரங்களில் பூக்கள் அழகாய் பூத்திருக்கின்றன. ஒரு இலைகளைக் கூட காணமுடியவில்லை. வெறும் பூக்கள் தான் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அழகாய் உங்களுக்கு ஒன்றினைச் சொல்ல விரும்புகின்றன. 

அதைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை அழகானது. அதை அர்த்தமுடன் வாழ முயலுங்கள்.

அன்பைத் தவிர வேறெதுவும் வளர்வதில்லை. அது கொடுத்தால் கூடிக் கொண்டே செல்லும். இன்னும் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். எவரெல்லாம் அன்பில் நனைகிறார்களோ அவர்களுடன் இறைவன் இருப்பான் என்கிறார் எனது மாஸ்டர். அன்பினைக் கைக்கொள்ளுங்கள். இறைவன் உங்களின் சொற்களில் வந்து நிற்பான்.

வாழ்க வளமுடன்

Wednesday, May 15, 2013

நேர்மைக்கு முன்னால்


சமீபத்தில் சவுக்கு இணையதளத்தில் நேர்மையே உன் விலை என்ன?என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அக்கட்டுரை இந்தியாவின் தற்போதைய நிலையை சரியாகச் சுட்டிக்காட்டி இருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கும் கார்ப்பொரேட் கம்பெனிகாரர்களின் மன அசைவுக்கு ஏற்பத்தான் அரசியலும், நாடும் அசையும். இதைத் தெரிந்து கொண்டவர்கள் பிசினஸ் புள்ளிகளாக மாறுகிறார்கள். தெரியாதவர்கள் நேர்மை பேசி விரக்தியில் விழுவார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்பவர்கள் ஜெயிக்கின்றார்கள். அதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள். இது கார்ப்பொரேட் தத்துவம். வாழ்வியல் தத்துவம் வேறு. எந்த ஒரு கார்ப்பொரேட்டும் ஒரு காலத்தில் வீழ்ச்சியைத் தான் சந்திக்கும். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகாகி விட முடியாது அல்லவா? இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். இப்போது விஷயத்திற்கு வரலாம்.

கலிகாலம் வந்து விட்டதே, உன் பொருள் என் பொருள், என் பொருள் உன் பொருள் என்று சண்டை சச்சரவுகள் இல்லாமால் வாழ்ந்து வரும் மனிதர்களிடையே எப்படிப் பிரச்சினையை உருவாக்குவது என்று கவலைப்பட்டார்களாம். பளபளவென மின்னும் தங்கக் கட்டிகளை தெருவில் இறைக்க அன்றிலிருந்து மனிதனுக்குள் தனக்கு என்ற ஆசை வேர்விட்டு பிரச்சினை துளிர் விட்டு இன்றைக்கு அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கும் வரை வந்து விட்டது.

இப்படியான காலகட்டத்திலும் தர்ம தேவதையின் தவப்புதல்வர்கள் இப்பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு தர்ம தேவையின் தவப்புதல்வனின் கதை தான் இது.

திருச்சியில் மிகப் பெரிய கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று இருக்கிறது. அக்கம்பெனியின் முதலாளி பெரும் தனக்காரர். எவரையும் மதிப்பது கூட இல்லை. பணமிருந்தால் போதும் எவனையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எள்ளல் கொண்டவர் அவர். இப்படிப்பட்ட தடித்தனம் மிக்க அவர் திருச்சியின் பிரதான சாலையில் இடமொன்றினை வாங்கினார். வாங்கியவுடன் இரண்டடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு, நான்கு மாடிகளைக் கட்டி விட்டார். 

கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் இந்த சட்டமீறலைக் கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கச் சென்ற போது, அவரை அலுவலகத்திற்குள் விடவே இல்லை. கேட்டிற்கு வெளியில் இருக்கும் செடியின் மீது உன் நோட்டீஸை ஒட்டி விட்டுப் போ என்று எகத்தாளமாய் எக்காளாமிட்டிருக்கிறார் முதலாளி. அதிகாரி நேர்மைக்கு பெயர் போனவர். தர்ம தேவதையின் வாரிசு. என்ன அவமானப்படுத்தினாலும் தன் கடமையைச் சரிவரச் செய்யும் தன்னம்பிக்கைக்காரர். அடுத்த சில நாட்களில் பொக்லினைக் கொண்டு வந்து அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடிகளை இடித்து தள்ளி விட்டுச் சென்று விட்டார்.

பணமிருந்தும், புகழ் இருந்து, அதிகாரவர்க்கத்தினரின் துணை இருந்தும் கட்டிட இடிப்பினை அவரால் தடுக்க முடியவில்லை. அவரால் செய்ய முடிந்தது என்ன தெரியுமா? அந்த கார்ப்பொரேஷன் அதிகாரிக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான். இதை அவர் தனது வெற்றி என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கும் சேர்ந்து மிகப் பெரிய ஆப்பினைச் சொருகினார் அந்த அதிகாரி.

மாற்றலாகிப் போன இடத்தில் அவருக்கு நெருக்கமான ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியைச் சந்தித்து இருக்கிறார். ஐயேயெஸுக்கு ஆச்சரியம். திருச்சியில் இருந்தவர் திடீரென இங்கு வந்து விட்டாரே என்ன காரணம் என்று கேள்வி கேட்க, அவர் விவரத்தைச் சொல்லி இருக்கிறார். அந்த ஐ ஏ எஸ் தன் நண்பரை மாற்றம் செய்த அந்த கார்ப்பொரேட் முதலாளிக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். 

அடுத்த ஒரு வாரத்தில் அந்த நிறுவனத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்து. அத்தனை அக்கவுண்டுகளும் லாக் செய்யப்பட்டது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. திக்பிரமை பிடித்தவர் போலாகி விட்டார். முதலாளிக்குத் திகில் பிடித்து விட்டது. கிலி பிடித்தாட்ட ஆள் பீதியில் உறைந்து போனார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு கணக்குக் காட்ட வேண்டுமே? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். தர்மம் நின்று கொல்லும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.

எந்த ஒரு போலியும் நேர்மைக்கு முன்னே தூசிக்குச் சமமானது என்பதை அனுபவத்தில் அந்த முதலாளி நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.


Friday, May 3, 2013

என்ன செய்வீர்கள்?

நானும் இல்லத்தரசியும் மெடிக்கலுக்கு மருந்து வாங்கச் சென்றிருந்தோம். பையன் விளையாடும் போது தலையில் இடித்துகொண்டான். தலையில் புசுக்கென்று வீங்கிக் கொண்டது. சரியான டென்ஷன். இல்லத்தரசி மருந்தகத்தில் நின்று கொண்டிருந்தாள். நானோ தகிக்கும் வெயிலில் நின்றிருந்தேன்.

அப்போது என் வண்டிக்கருகில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. 

“சார், வண்டிக்கு எங்கே வீல் போட்டீர்கள்?” என்று கேட்டார்.

வெயிலி இது என்னடா கொடுமை என்று நினைத்துக் கொண்டே, அவருக்கு விபரங்களைச் சொன்னேன்.

“யாருக்கு சார்? “ என்று கேட்டேன்.

”என் பெண்ணுக்கு சார் ! மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டாள். என்னென்னவோ செய்து பார்த்தோம். எங்கெல்லாமோ ட்ரீட்மெண்ட் பார்த்தோம். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு காலை எடுக்க வேண்டியதாகி விட்டது” என்றுச் சொல்லி கண்கலங்கினார்.

அடுத்து அவர் சொன்னது, “பையனுக்கு மூளைக்காய்ச்சல் வந்து இடுப்புக்கும் கீழ் செயலிழந்து விட்டது”.

கேட்ட எனக்கு திகீர் என்றது. அவருக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்தேன். அவரின் மனவலி எனக்குள் பரவியது. அவருக்கு கோடிகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது. இருப்பினும் என்ன செய்வது? 

ஏன் இப்படி ஆனது அவருக்கு என்று எனக்குப் புரியவில்லை.

எத்தனை கோடிகள் இருப்பினும், எத்தனை அதிகாரத்தில் இருப்பினும், நாட்டின் உயர்ந்த பட்ச பதவியில் இருப்பினும் பிள்ளைகளுக்கு என்று வந்து விட்டால் அந்தக் கோடிகளால் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தால் என்ன செய்ய முடியும்? கையைக் கட்டிக் கொண்டு அழுதுதான் புரள வேண்டும்.

பிரதமர் நண்பராக இருந்தாலும் அவரால் என்ன சாதிக்க முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். இதுதான் வாழ்க்கை. இது தான் உண்மை. ஆனால் எவரும் அதைப் புரிந்து கொள்வதே இல்லை.

வழியில் செல்லும் போது எவனாவது காரில் இடித்து விட்டால் அவ்வளவுதான். குதி குதியென்று குதிப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் அடிமுட்டாள்கள் என்று கருத வேண்டும்.

ஒரு நிமிடம் யோசியுங்கள். ஒரு தத்துவம் புரியும். இதோ ஒரு சித்தரின் பாடல் உங்களுக்காக.

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ குதம்பாய் நாடி வருவதுண்டோ

போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான் வருமோ குதம்பாய் சாம்போது தான் வருமோ

காசினி முற்றாயுள் பைவசம் ஆயினும்
தூசேனும் பின்வருமோ குதம்பாய் தூசேனும் பின்வருமோ

உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்
பெற்றார் துணையாவரோ குதம்பாய் பெற்றார் துணையாவரோ

மெய்ப்பிணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
பொய்ப்பிணி ஏதுக்கடி குதம்பாய் பொய்ப்பிணி ஏதுக்கடி

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் மண்ணாசை ஏதுக்கடி

சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
யானையும் நில்லாதடி குதம்பாய் யானையும் நில்லாதடி

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
தங்கா தழியுமடி குதம்பாய் தங்கா தழியுமடி

கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வராதடி குதம்பாய் கூடவே வராதடி

- குதம்பைச் சித்தர்




Thursday, March 7, 2013

நிலம் (1) - நிலத்தை திருட முடியுமா?


எல்லா டாக்குமென்டுகளும் சரியாக இருக்கின்றன. வரி கட்டுகிறோம். நிலத்தின் அனுபவ பாத்தியமும் நம்மிடம் இருக்கிறது. நாம் தான் நிலத்தின் உரிமையாளர் என்று நம்பிக்கையோடு இருப்போம். எல்லா அனுபவ உரிமையும் நம்மிடம் இருந்தாலும் நம் நிலத்தை வேறொருவர் விற்க முடியுமா? என்று கேட்டால் ஆம் என்று சொல்ல முடியும். எப்படி சாத்தியம் என்கின்றீர்களா? 

இதோ எங்களிடம் வந்த ஒரு வழக்கின் விபரம் உங்களுக்காக.

சமூகத்தில் பிரபலமான ஒருவரின் நிலம் அது. தற்போதைய விலையோ கோடானுகோடி. அப்பிரபலம் காலமாகி விட அவரின் குடும்பத்தாருக்கு நிலம் இருக்கும் இடம் தெரியும். அத்துடன் விட்டு விட்டார்கள்.இப்படியான ஒரு சூழலில் வில்லாதி வில்லன் ஒருவன் இந்த நிலத்தின் மீது கண் வைக்கிறான். காரியங்கள் விறுவிறுவென நடக்க ஆரம்பிக்கின்றன.

அந்த இறந்து போன பிரபலத்தின் தாத்தாவின் பெயரும், வில்லாதி வில்லனின் தாத்தாவின் பெயரும் ஒன்றாக இருக்கிறது. இனிஷியலும் ஒன்றே. வில்லாதி வில்லன் அந்த நிலத்தை தன் தந்தையின் நிலம் என்றுச் சொல்லி, கோர்ட்டில் அதன் உரிமையாளர் என்று ஆர்டரும் வாங்கி விடுகிறான். அதன் பிறகு அந்த நிலத்தை வேறொருவரிடம் விற்றும் விடுகின்றான். நிலத்தின் உண்மையான உரிமையாளர் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால் அந்த நிலத்தை விற்று, அதை பிளாட் போட்டு விற்று விடுகின்றார்கள்.

இந்தச் சூழலில் பிரபலத்தின் வாரிசுகள் நிலத்தைப் பார்வையிட வந்த போது, வில்லாதி வில்லன் செய்து வைத்திருக்கும் வில்லத்தனத்தை அறிகின்றார்கள். எங்குச் சென்றாலும் அத்தனை டாக்குமெண்டுகளும் முற்றிலுமாய் மாற்றப்பட்டு இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். (வழக்கு முடிய எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்) 

எப்படி இப்பிரச்சினையில் இருந்து வெளிவருவது? 

நிலம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா? 

இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் நம்மிடம் இந்தப் பிரச்சினை வருகிறது.

இந்தப் பிரச்சினையில் உண்மையான உரிமையாளரின் உரிமையை எப்படிக் கண்டுபிடித்து நிலை நாட்டுவது?

அதை சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து நிலத்தினை மீட்டெடுக்க உதவினோம். 

குறிப்பு : ரெவன்யூ சர்வே ரெக்கார்டு என்பது வெகு முக்கியமான நிலம் சம்பந்தப்பட்ட அரசு ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளர்களின் பெயர்கள் இந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தவறும் பட்சத்தில் இது போல பிரச்சினைகள் வரக்கூடும். எதிர்காலத்தில் நிலம் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கின்றார்கள். ஆகவே நிலம் வைத்திருப்போர் அவசியம் கவனிக்க வேண்டியது இந்த ஆவணம்தான். வேறேதேனும் உதவிகள் தேவைப்பட்டால் என்னை அழைக்கவும். ஆலோசனைகள் நிச்சயம் தருவேன்.

Wednesday, March 6, 2013

புரியும் புதிர் ஒன்று


மனித வாழ்க்கையின் ரகசியம் 100 சதவீதம் என்றால் அதில் அரை சதவீதத்தைக் கூட அறிவியலாலும், பிற எந்த புற விஞ்ஞானத்தாலும் இது காறும் அறிந்து கொள்ள முடியவில்லை. இயற்கை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குள் தான் சக்தியே பிறக்கிறது. விலக்கல், ஈர்ப்பு சக்திகளிடையே பிறக்கிற மின்சாரம் மாயையிலிருந்து பிறக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் பொய் தோற்றங்களான ஏற்றம் இறக்கம், நன்மை தீமை, இன்பம் துன்பம், இரவு பகல் போன்ற மாயையிலிருந்து பிறப்பவை தான் மனித குல வாழ்வு. இந்த பொய் தோற்றங்கள் எப்போது ஒரு மனிதனை பாதிக்காது இருக்கின்றதோ அன்று அவன் படைப்பின் ரகசியத்தை அறிந்தவனாகின்றான். மனிதன் தன் வாழ்வு நிரந்தரமானது என்று நினைக்கிறான். ஆனால் அவனது வாழ்வு முடிதற்குரியது. அதை அவன் அறிந்திருந்தாலும் அவனைச் சுற்றி இருக்கும் மாயை அவனை அந்த உண்மையை அறியாவண்ணம் விலக்கி வைக்கின்றது.

வாழ்க்கை எனும் புதிரை விஞ்ஞானத்தால் விடுவிக்க முடியாது. இந்தச் செய்தி நம்பிக்கை இல்லாவிட்டால் உண்மையிலேயே பயங்கரமானதாகும். மனிதனின் எண்ணத்திற்கு முன்னால் இதுவரை வைக்கப்பட்ட நிலையான புதிர்களில் தலையானது வாழ்க்கை என்ற புதிரே - மார்கோனி

இந்திய ஆன்மீகப் பாரம்பரியத்தின் முக்கிய யோகியான பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை ஒன்று.

அவர் இந்தியாவில் வித்யாலயா நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய மான் குட்டி ஒன்றினை அவர் வளர்த்து வந்தார். அது அவருடனே வசித்து வந்தது. இப்படியான ஒரு நாளில் விடிகாலையில் பணி நிமித்தமாய் வெளியில் செல்லவதற்கு கிளம்பிய யோகியார், மான் குட்டிக்கு காலையில் உணவினைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். வித்யாலத்தில் பயின்று வந்த மாணவன் ஒருவன் அந்த மான் குட்டிக்கு மீண்டும் உணவளித்து விடுகிறான். அதன் காரணமாய் மான்குட்டி நோய்வாய்ப்பட்டு, படுத்தே இருந்திருக்கிறது. மாலையில் வித்யாலயாவிற்கு வரும் சுவாமி மான் குட்டியின் உயிர் ஊசலாடுவதைக் கண்டு வேதனையுறுகிறார். இறைவனிடம் வேண்டுகிறார். 

இறை அன்பின் காரணமாய் இறையின் மீது பற்றுக் கொண்டவர்களின் வேண்டுதலுக்கு இறைவன் உடனே செவி சாய்ப்பான் என்பது ஞானிகளுக்குத் தெரியும். “இறைவா, இம்மான் குட்டியின் உயிரைக் காத்து அருளுக” என்று பிரார்த்தித்த யோகியாரின் அன்றிரவு கனவில் அவருக்கு திருப்பம் ஒன்று ஏற்பட்டது.

அவரின் கனவில் வந்த அந்த மான் குட்டி, “சுவாமி, நான் இந்த உடலை விட்டு நீங்க விரும்புகிறேன், உங்கள் பிரார்த்தனை எனது விருப்பத்திற்கு இடையூறாய் இருக்கிறது” என்றது. திடுக்கிட்டு விழித்தெழுந்த யோகியார் மாபெரும் உண்மையை புரிந்து கொள்கிறார்.

நீங்களும் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? புரியாதவர்கள்  மீண்டும் படியுங்கள்.

இன்னும் வரும் ..... 
கட்டுரை ஆக்கத்திற்கு உதவி : ஒரு யோகியின் கதை ( நன்றி )

சித்த வாழ்க்கை


மனித உயிர்கள் உருவான நாளில் இருந்து இந்த நாள் வரையிலும் கோடானு கோடிபேர் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். மனித சமூகம் அத்தனை நபர்களையும் நினைவில் வைத்துக் கொண்டாடியதில்லை. பாரதம் மட்டுமல்ல உலகெங்கும் நன்னெறிகளைப் போதித்தவர்களையும், நல்லவைகளைச்  செய்தவர்களையும், கொடுங்கோலர்களையும் தான் உலகம் மறவாமல் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. ஏன் இப்படி? லோகாயதாய வாழ்க்கை நெறிகளில் பொருள் தேடும் வாழ்க்கையைத்தான் மாயை வாழ்க்கையின் அர்த்தமுள்ளதாக காட்டும். பணமில்லை என்றால் வாழ்க்கையில்லை என்கிறது லோகாயதாய வாழ்க்கை. இந்த வாழ்வின் பின்னால் செல்பவர்களை உலகம் மறந்து விடுகிறது.பொருள் பற்றிய எந்த வித பிரக்ஞையும் இன்றி வாழ்ந்தவர்கள் பின்னால் தான் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். நாட்டை ஆளும் அரசனின் அவையிலே காவி உடை உடுத்தியவருக்குத்தான் முதல் மரியாதை.. அங்கு செல்வத்திற்கு இடமில்லை. அருளுக்கு மட்டுமே இடமுண்டு.

”கையில் ஒரு பைசா பணமில்லை. அதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது அதனால் எனக்கு மகிழ்ச்சியில்லை. நாளைக்கு எனக்கு பணம் தேவை. ஆனால் என்னிடத்திலோ பைசா இல்லை. அவன் எங்கிருந்தோ பணம் வாங்கிக் கொடுப்பான். அது கடனாகக் கூட இருக்கலாம். அக்கடனைக் அவன் தான் கட்ட வேண்டும். இல்லையென்றால் அந்த அவமானம் அவனுக்குத்தான். இதுதான் சித்த வாழ்க்கை” என்றார்  எனது நண்பர்.

கிட்டத்தட்ட 90 கோடிக்கும் மேல் சொத்து அவருக்கு இருந்தது. வக்கீல் தொழில் செய்து வந்தார். வக்கீல்களுக்கு எப்போதுமே உண்மை பேச முடியாது. உண்மைக்கு எதிராய் தான் இருக்க முடியும். ஏதாவதொரு சந்தர்ப்பத்திலே உண்மை பேசலாம். ஆனால் பெரும்பாலும் உண்மைக்கு எதிராய்த்தான் தொழில் செய்ய முடியும். இப்படியான ஒரு தருணத்தில் இந்த வக்கீலுக்கு “காதறுந்த ஊசியும் வராது கடைக்கே” என்ற வாக்கியம் பட்டினத்தாருக்கு ஞானத்தை விழித்தெழச்செய்தது போல அவருக்கும் உண்மைக்கு எதிரான தொழில் விழிப்பு நிலையைத் தர, வீடு விட்டு குடிசையில் வாழ ஆரம்பித்தார். அங்கும் அவரின் உறவுகள் செல்ல ஆரம்பிக்க, யாரிடமும் சொல்லாமல் எங்கோ சென்று விட்டார். நீண்ட நாட்கள் சென்றன. காசியிலிருந்து வக்கீலின் குடும்பத்தாருக்கு அழைப்பு வர, அங்குச் சென்று  பார்த்தால் ஒரு சாதாரண மனிதன் வாழ அருகதையற்ற ஒரு அறையில் வாழ்ந்து இறையடி சேர்ந்திருக்கிறார் அந்த வக்கீல். கோடி கோடியாய் சொத்து இருந்தும் ஏன் அவர் இப்படியான ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். மனித வாழ்வின் விடையே அவர்தான்.

மனிதனிடம் இருக்கும் எல்லாமும் அவனிடமிருந்து சென்று விடும். மனிதனுடன் என்றும் இருப்பது அவன் செய்த தர்மம் மட்டுமே.

இன்னும் வரும் .....

Sunday, January 27, 2013

கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன்


அன்றைக்கு வெள்ளிகிழமை. முட்டம் நாகேஸ்வரரையும், முட்டத்து வாளியம்மனையும் தரிசித்து வரலாம் என்று ஆலாந்துறை புறப்பட்டேன்.  தன் வாழ்நாளில், விபரம் தெரிந்த நாள் கொண்டு காசைக் கையால் தொடாமலே வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ‘சத்குரு ஞானி வெள்ளியங்கிரி சுவாமிகள்” அவர்களைத் தரிசித்து வாருங்கள் என்ற நண்பரின் அறிவுரையின் படி, முட்டம் நாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து செம்மேடு வழியாக பூண்டி வெள்ளியங்கிரி ஆலயம் செல்லும் வழியில், வன காளியம்மன் ஆலயத்தின் இடதுபுறம் செல்லும் வழியில் சென்றேன். வலது புற பாதை வழியாகச் சென்றால் ஈஷா யோக மையம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இடதுபுறச் சாலையில் சென்றால் புளியமரங்கள் நிரம்பிய காடு தென்படுகிறது. அங்கிருக்கும் பதி வரை செல்லும் சாலை அங்கேயே முடிந்து விடுகிறது. சத்குருவின் ஜீவ சமாதிக்கு ஒற்றை அடிப்பாதைச் செல்கிறது. அதில் சென்று ஆஸ்ரமத்தை அடைந்தேன்.

சத்குருவின் ஜீவ சமாதியில் வேலை நடந்து கொண்டிருந்தது. தியானம் செய்ய முடியவில்லை. செல்லும் அனைவருக்கும் உணவளிக்கின்றார்கள். ஜீவசமாதியின் அருகில் செல்ல முடியவில்லை. கல் பதிக்கின்றார்கள். அடுத்த வாரத்திற்குள் வேலைகள் நிறைவு பெறும் என்றார்கள். ஜோதி சுவாமி, அருண், சீனிவாசன் ஆகியோரிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.

ஈஷாயோகமையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கி வரலாம் என்று சென்றேன்.செல்லும் வழியில் தென்பட்ட ஒருவரை நிறுத்தி ஈஷா யோகமையம் செல்லும் சாலைதானே இது என்று விசாரித்தேன். அது வேறு பாதை என்றுச் சொன்னார். பைக்கை திருப்பியவுடன், “இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள், பக்கத்தில் தான் வெள்ளியங்கிரி சுவாமி திருக்கோவில் இருக்கிறது, கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன் ” என்றார்.

சுற்றிலும் காடு, அதன் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் கருமை படர்ந்த தார்ச்சாலை. கணேசர் அடிக்கடித் தென்படுவார் என்ற எச்சரிக்கை வேறு மனதுக்குள் நிழலாட திக் திக் நெஞ்சுடன் வெள்ளியங்கிரிக்கு பயணமானேன்.

ஏழுமலை தாண்டி இருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி சுவாமி கோவிலின் அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று சேர்ந்தேன். வருடத்தின் ஒரே ஒரு நாள் நடக்கும் பூப்பந்தல் விழாவாம் அன்று. நல்ல தரிசனம். ஆலயத்தில் தீபம் அருளி, மலர்களும், பூக்களும், பிரசாதமும் தந்தார்கள். சத்குருவைத் தரிசிக்கச் சென்றால், அவர் இறைவனைத் தரிசிக்க அனுப்பி வைத்து விட்டார். பூண்டி கோவிலுக்குச் செல்லும் நினைப்பே என்னிடத்தில் இல்லை. எல்லாம் சத்குருவின் ஆசீர்வாதம்.

நிறைவுடன் திரும்பிய வழியில் மையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். இதோ கீழே இருக்கும் படத்தில் இருப்பவர்தான் வெள்ளியங்கிரி சுவாமி.



வெள்ளியங்கிரி சுவாமி ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் பதியில் வசிக்கும் கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும்,  மலைகளில் அலைந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு, கோவை டவுனிற்குள் வந்து சித்த மருந்துக் கடைகளிடம் மூலிகைகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு போய் சமைத்து அவர்களுக்குத் தருவாராம். மனிதனுக்கு என்றுமே தீரவே தீராத பிணி “பசிப்பிணி” அல்லவா. 

பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கோ அல்லது மையத்திற்கோ செல்பவர்கள் நான்கைந்து நிமிடங்கள் ஆற்றங்கரையோரத்தில் அமைதியாய் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவ சமாதியில் அமர்ந்து தியானம் செய்து விட்டுச் செல்லுங்கள். வற்றவே வற்றாத மூலிகை ஆற்றில் ஆர தீர குளித்து விட்டுச் செல்லுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். 

ஆஸ்ரமம் செல்ல விரும்புபவர்கள் இப்போது ஆஸ்ரமத்தில் தங்கி இருக்கும் ஜோதி சுவாமியிடம் பேசி விட்டுச் செல்லுங்கள். இவர் திடீரென்று குகை, மலை என்று சென்று விடுவார். நீங்கள் அங்குச் சென்றால் ஒருவாய் தண்ணீராவது தர ஆள் வேண்டுமே அதற்காகத்தான் சொல்கிறேன். அது மட்டும் காரணமல்ல. அங்குச் செல்பவர்களுக்கு உணவளிக்கின்றார்கள். சொல்லாமல் சென்று விட்டால் அளவோடு சமைக்கும் உணவை நமக்கு அளித்து விடுவார்கள். தொலைபேசி எண் : 98948 15954. 



Thursday, January 17, 2013

நம்பினால் நம்பலாம்

மனையாளும், குழந்தைகளும் பொங்கல் விழாவிற்காக சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். எனக்குப் இது போன்ற பாவனை விழாக்கள், சடங்குகள் இவற்றில் எல்லாம் நம்பிக்கைகள் இல்லாது போய் விட்டது. அனுபவம் தந்த பாடம் இது. இதைப் பெறுவதற்கு நான் கொடுத்தது அனேகம்.

கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருக்கும் பிடிப்பானது அதிகம். அது மனிதனுக்கு நல் வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதால்.அதன் காரணமாய் மனிதர்கள் சமூகத்தின் மீது பற்று வைக்கும் இவ்வகை விழாக்கள் பல்லாண்டுகளாய் தொடர்ந்து வர, குழந்தைகள் மனதில் அவை பதிய வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதன் காரணமாய் இவ்வகை விழாக்களை விமரிசையாக கொண்டாடும் கிராமத்தை நோக்கி குழந்தைகளை அனுப்பி வைத்தேன்.

தனிமை என்பது எப்போதும் மனிதனுக்கு உள்ளுணர்வைத் தூண்டி விடும் அற்புதத்தின் தருணம். நான்கு நாட்களின் தனிமை தந்த உற்சாகம் இன்னும் ஒரு வருஷத்திற்கு இருக்கும். அப்படியான தனிமையின் ஊடே கோவையின் ரேஸ்கோர்ஸில் அமர்ந்திருந்தேன்.

அழகான நடைபாதை. அழகிய யுவன்களும், யுவதிகளும், வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கடந்து விட்டவர்களும் நடந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது கிட்டத்தட்ட அறுபது வயது மிக்க முதியவர் ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார். வந்ததும் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

“ மனிதனுக்கு எப்போதும் ஒரு கூட்டம் துணையாக இருக்க வேண்டும். அது நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருப்பின் நலம். கோபத்தை விடுத்து இப்படிப்பட்ட நல்ல நண்பர்களை யார் யாரை எந்தெந்த வட்டத்தில் வைக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு அதன் படி அவர்களை வரிசைப்படுத்தி உங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துங்கள்” என்றார்.

அவர் சொல்லிய கருத்து என்னைக் கவர்ந்தது. சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். 

அடுத்த நொடி அவர் அங்கிருந்து சென்று விட்டார். யார் அவர் ? தெரியாது. எதற்காக என்னிடம் அவர் பேசினார்? தெரியாது. விடை தெரியாத எத்த்னையோ கேள்விகளுடன் இவரும் ஒரு கேள்வியாய் மனதில் பதிந்து விட  ரேஸ்கோர்ஸ் குளிர ஆரம்பித்தது. 

நடைபாதையில் மேலும் பலர் நடந்து கொண்டிருந்தனர். ரேஸ் கோர்ஸ் சாலை வட்டவடிமாய் இருந்தது. சுற்றிலும் மரங்களும் இருந்தன.

* * *

Wednesday, January 16, 2013

துண்டு


கிராமத்தானுக்கு துண்டு என்பது நண்பன். வெயிலில் உழும் போது தலைக்கு பாதுகாப்பாகவும், வியர்வையைத் துடைக்கும் போதும், குளிக்கும் போதும் இப்படி துண்டு என்பது அவனுடன் ஒட்டிப் பிறந்த உறுப்பாகவே இருக்கும். இதே துண்டு விழாக்காலங்களிலும், உறவுகளின் வீடுகளிலும் அவனுக்கு மரியாதையை அளிக்கும். இப்படிப்பட்ட துண்டுக்கு வேறொரு முகமும் உண்டு. 

இந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.13 லட்சம் கோடி. மேலும் மேலும் துண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. 

கிராமத்தானுக்கு உதவியாய் இருந்த துண்டு, மரியாதையை அளித்த துண்டு இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறிய அவலம் இருக்கிறதே அதற்கு காரணம் யார் தெரியுமா ?அனைவரின் விரலும் சுட்டும் ஒரே ஒரு நபர் “ பாரதப் பிரதமர்”. 

வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் எக்ஸ்ட்ராவைத் தான் துண்டு என்கிறோம். இந்தியாவிற்கு துண்டு எப்படி விழுகிறது என்பதை திரு க்ருமூர்த்தி அவர்கள் துக்ளக்கில் பதிவு செய்திருக்கிறார். 

அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் துண்டு நம்பர் ஒன்.

ஏற்றுமதி செய்யும் மதிப்பை விட இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகமானால் வர்த்தகத்தில் துண்டு விழுகிறது. இது நம்பர் டூ.

நம்பர் ஒன்னுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் நம்பர் ஒன் - மானியம். மானியம் கொடுப்பதினால் அரசின் வரவில் இருந்து செலவழிக்க வேண்டி இருக்கிறது. துண்டு விழுகிறது.

நம்பர் டூ - வரி விலக்கு. அரசுக்கு கிடைக்கக் கூடிய வரவில் பெரும் வெடியை வைப்பது இந்த வரிவிலக்குகள். இதனாலும் துண்டு விழுகிறது.

நம்பர் த்ரீ - இலவசம். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அக்மார்க் அயோக்கியத்தனம். இதனாலும் பெரிய துண்டு விழுகிறது.

வரி வசூலில் காட்டப்படும் மந்தம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால் அதிலும் ஒரு துண்டு விழுகிறது.

ஆகவே நான்கு துண்டுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரக் கழுத்தை நெரிக்கிறது. மக்கள் மூச்சுத் திணற ஆரம்பிக்கின்றார்கள். விலைவாசி உயர ஆரம்பிக்கிறது. மக்கள் துன்பத்தில் உழல ஆரம்பிக்கின்றார்கள்.

நம்பர் டூ துண்டுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஏற்றுமதி இறக்குமதியில் வித்தியாசம் ஏற்படும் போது, உலக அளவில் இந்திய ரூபாய்க்கு இருக்கும் மதிப்புக் குறைகிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் நாம் குறைவான ரூபாய் கொடுத்தால் போதுமானது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் அதிக ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த அதிக ரூபாயும் துண்டாய் மாறி விடுகிறது.

இப்படி விழுந்து கொண்டே செல்லும் துண்டினைச் சமாளிக்க கடன் வாங்குகிறது அரசு. கடனுக்கு கொடுக்கும் வட்டியும் ஒரு துண்டு. இப்படியே எல்லாத் துண்டுகளும் ஒன்று சேர்ந்து தான் இந்தியாவின் நடப்பாண்டு பற்றாக்குறை 5.13 லட்சம் கோடி ரூபாய் ஆகி விட்டது. 

இந்த துண்டு விழாமல் தடுக்க எஸ்.க்ருமூர்த்தி சில கருத்துக்களை எழுதி இருக்கிறார்.

1. வரியை உயர்த்த வேண்டும்.
2. வரிச்சலுகைகளை நீக்கிட வேண்டும்.
3. ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசங்களை ஒழித்திட வேண்டும்.
4. மானியங்களை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் துண்டினை எடுக்க முடியும் என்கிறார் அவர்.

துண்டு எப்பேர்பட்ட வேலைகளைச் செய்கிறது என்று பாருங்கள். நாம் என்னவோ துண்டினை வெகு சாதாரணமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

 நன்றி : துக்ளக் மற்றும் எஸ்.க்ருமூர்த்தி அவர்கள். (க்ருவிற்கு காரணம் இருக்கிறது)

திரு சுப்புவிற்கு ஒரு கேள்வி விரைவில்