குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, May 29, 2012

ஐபிஎல் 420 கிரிக்கெட் - தினமணி தலையங்கம்

அடியேன் ஏப்ரல் 16-20, 2012 பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் முதன் முதலாய் எழுதிய கட்டுரையின் பெயர் “ஐபிஎல் 420 கிரிக்கெட்”. கட்டுரை வெளிவந்த புதிதில் பல நண்பர்கள் சும்மாவாச்சும் எழுதி இருக்கின்றீர்கள் என்று என்னிடம் “கருத்து” தெரிவித்தார்கள். அவர்களுக்கெல்லாம் சிரிப்பையே பதிலாக்கினேன்.

அதைத் தொடர்ந்து வெளி வந்த ஐபில் சூதாட்டம், மது, மாது கொண்ட்டாட்டங்களைக் கண்டு, “கருத்து” தெரிவித்த நண்பர்களே “என்னப்பா, அப்படியே நடக்கிறது” என்று மீண்டும் “கருத்து” தெரிவித்தார்கள்.

இன்றைய தினமணி தலையங்கமும், அடியேனின் கட்டுரையின் கருத்தும் ஒன்றாய் இருப்பதை பாருங்கள். ஐபிஎல் கருப்புப் பண முதலைகளின் பிசினஸ் ஏரியாவாக இருப்பதையும், கிரிக்கெட் கிரிக்கெட் என்று மக்கள் ஏமாந்து முட்டாளாக இருப்பதையும் படித்து, அதில் எவராவது ஒரு சிலராவது  உணர்ந்து திருந்துவார்கள் என நம்புகிறேன்.

-ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்.


தினமணியில் வெளியான 28.05.2012 தலையங்கத்தின் லிங்க்


அடியேனின் கட்டுரை 

ஐபிஎல் 420 கிரிக்கெட்

இந்தியாவில் 1990க்குப் பிறகான அரசியல் உலகில் பணம் சம்பாதிப்பதை பிரதானமாக அரசியல்வாதிகள் நினைக்க ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டார்கள். தங்களுக்கு என  தனியாகவும், தான் சார்ந்த கட்சியின் பெயராலேயும் பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தனர். இந்திய ஊழல்களின் ஆரம்பம் 1990க்குப் பிறகே சூடு பிடிக்க ஆரம்பித்தன. பொது நலத்தின் போர்வைக்குள்ளே சுய நலத்தின் நரி புகுந்தது. அரசியலிலில் நாகரீகம் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போனது. கொள்கைகள், கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் எல்லாம் மாற்றத்துக்கு உரியனவாய் மாறிப் போயின. பதவி இருந்தால் பத்து மட்டுமல்ல பத்து லட்சம் கோடியும் கிடைக்கும் என்று சமூகத்தில் எண்ணங்கள் ஊன்ற ஆரம்பித்தன. கட்சிப் பதவிக்கு கோடிகளைக் கொட்டி சீட் வாங்க ஆரம்பித்தார்கள். சமூகம் பணம் இல்லாத நல்லவனுக்கு கொடுக்கும் மரியாதையை விட, பணமுள்ள கெட்டவனுக்கு கொடுக்க ஆரம்பித்தது. ஊழலின் அசைக்க முடியாத புல் விதை இங்கு விதைக்கப்பட்டது.

மஹாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்திற்கு அழைக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த வேலையையும், குடும்பத்தையும் துறந்து களத்துக்குள் இறங்கிய இந்தியர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று ஓட்டுப் போட “பணம்” பெற்றுக் கொள்ளும் சுய நல இந்தியர்கள் இருக்க காரணம், பதவி வெறியும், எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க துடிக்கும் நபர்கள்தான் காரணம்.

முன்பு காந்தியின் எண்ணமும் செயலும் பொது நலத்தை முன்னிறுத்தி இருந்தது. பொது மேடையில் சுய நல பரப்புரைகள் இடம் பெறாது. இன்றோ அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்றால் வரிசை கட்டி சாலைகளில் பறக்கும் கார்கள் என்ன? சாலையோரம் நடப்படும் ட்யூப் லைட்டுகள் என்ன, கொடிகள் என்ன, தோரணம் என்ன? ஆட்டம் என்ன பாட்டம் என்ன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இவ்வளவு பணத்தைக் கொட்டி செலவு செய்து விட்டு, பதவிக்கு வந்த பிறகு சும்மாவா இருப்பார்கள். தவறு செய்பவர்களுக்கு ஓட்டுப் போட்டு அனுப்பி வைக்கும் இந்தியர்களின் அறிவுக் கூர்மையை என்னவென்று மெச்சுவது? மாறிப் போன மக்களால் ஊழல் இந்தியாவின் முகமாய் மாறிப் போனது. இந்தியா என்றால் ஊழல், ஊழல் என்றால் இந்தியா என்றாகிப் போனது.

ஊழல் செய்து பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது என்று அந்த ஊழல் பணத்தையே முதலீடாக்கி மேலும் மேலும் கொள்ளை கொள்ளையாய் வசூலிக்க வேண்டுமென்ற இவ்வகை ஊழல்வாதிகளின் ஆசையை நிறைவேற்ற வந்தது தான் இந்தியன் ப்ரீமியர் லீக் என்கிற ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட்.

ஐபிஎல் டி20  கிரிக்கெட் எப்படி ஊழல்வாதிகளின் விளையாட்டாய் மாறியது என்பதைச் சுருக்கமாய் இனி பார்ப்போம்.

என் ஆர் ஐ என்றுச் சொல்லக்கூடிய வெளி நாடு வாழ் இந்தியர்கள் அதாவது வெளி நாடுகளில் வசித்து பிசினஸ் செய்து பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள், அப்பணத்தை எளிதில் இந்தியா கொண்டு வரும் படியான இந்தியப் பொருளாதார விதிகள் வெகு ஜாக்கிரதையாக வகுக்கப்பட்டன. இந்த விதிகளைப் பயன்படுத்திக் கொண்டும், இந்தியா சில நாடுகளுடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் படியும் என் ஆர் ஐ பிசினஸ் மேன்களைப் பினாமியாக வைத்துக் கொண்டு பெரும்பான்மையான கறுப்புப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும், சில நாடுகளின் வழியாக கருப்புப் பணத்தை மூலதனமாய் மாற்றிக் கொண்டு, இந்தியாவில் பிசினஸ் செய்ய, இந்த ஐபிஎல் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தனர். டி20 கிரிக்கெட் விதிகளில் யார் வேண்டுமானாலும் பங்குதாரராய் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பான்மையான அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளும் தங்கள் கறுப்புப் பணத்தை வெகு எளிதாக ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலீடு செய்கின்றனர். திரு லலித் மோடியும், திரு சசி தரூரும் கொச்சி அணியில் செய்த தில்லுமுல்லுகளை நீங்கள் செய்தித்தாள்களில் படித்திருக்கலாம்.

டி20 கிரிக்கெட் மூலமாய் மிகப் பெரிய லாபம் கிடைக்குமா என்று சந்தேகிப்பீர்கள். ஸ்டார் டிவி ஒரு போட்டி ஒளிபரப்பிற்கு 40 கோடி கட்டணம் கொடுத்து ஏலமெடுத்து இருக்கிறது. இந்த நாற்பது கோடியை இரண்டு மணி நேரத்தில் எப்படி எடுப்பார்கள் என்று ஒரு நிமிடம் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒளிந்திருக்கும் ரகசியம் புலப்பட ஆரம்பிக்கும். ஒளிபரப்பிற்கான உரிமை, கட்டண உரிமை போன்றவற்றில் மட்டும்தான் வருமானம் வரும் என்று அப்பிராணிகள் நினைக்கக் கூடும். அது ஒரு சிறிய வருமானம் என்றால் மிகப் பெரிய வருமானம் வரும் வழி ஒன்று டி20 கிரிக்கெட்டில் இருக்கிறது.

விளையாட்டில் வெற்றி பெற்றால் பரிசுகள் கிடைக்கும். தோற்றால் ஒன்றும் கிடைக்காது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் டீம்களின் ஓனர்களுக்கு தோற்றாலும், வெற்றி பெற்றாலும் கோடி கோடியாய் ரகசியமாய் கொட்டும். தன் டீம் தோற்பதற்காகவா இத்தனை கோடிகளை கொட்டி விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்குவார்கள்? யோசித்துப் பாருங்கள் காரணம் உங்களுக்கு நன்கு புரியும். இன்னும் புரியவில்லை என்றால் தொடர்ந்து படியுங்கள். சில ஐபி எல் கிரிக்கெட் டீம்கள் ஜெயிக்கவே இல்லையே எப்படி அவர்கள் தொடர்ந்து விளையாடுகிறார்கள்? அதற்கு எப்படி பணம் வருகிறது என்று கேட்டுப் பாருங்கள். விபரம் தெரியும். இது ஒன்றும் பத்து ரூபாய் கத்தரிக்காய் வியாபாரம் இல்லை. இது ஒரு விதமான சித்து விளையாட்டு வியாபாரம். பணமிருப்போர் உல்லாச அறைகளிலே அழகிகளின் மடிகளில் படுத்துக் கொண்டு விளையாடும் சூதாட்டம் தான் 420 மன்னிக்கவும் டி20 கிரிக்கெட்.

தோற்றாலும் பணம் எப்படிக் கொட்டும் என்று இன்னும் புரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம்.  ஷாருக்கான் ஏன் கிரிக்கெட் டீமை வாங்க வேண்டும்? அவர் டீம் தோற்றால் நஷ்டமாகுமே?  நஷ்டமானால் போட்ட காசு புஸ்ஸாகிவிடுமே? கிரிக்கெட் மீதிருக்கும் ப்ரியத்தாலா ஷாருக்கான் ஐபிஎல் டீமை வாங்கினார்? நிச்சயமாக இருக்கவே முடியாது. போடும் பணம் இரட்டிப்பு அல்ல பல மடங்கு அதிகமாக வந்தால் தான் அல்லவா பணக்காரர்கள் முதலீடு போடுவார்கள். இல்லையென்றால் அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பார்களா? ஆகவே பெரும் பணம் முதலீடு செய்யப்பட்டால் சாதாரணமாய் கிடைக்கும் வருமானத்தை விட மிக அதிக வருமானம் கொட்டும் என்பதற்காகத்தானே முதலீடுகளை கொட்டுகின்றார்கள். உடனே ஷாருக்கான் துபாயில் வாங்கி இருக்கும் இந்தியர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வில்லா உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கிரிக்கெட்டை முன் வைத்து உலகமெங்கும் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்தச் சூதாட்டத்தை யாருக்கும் தெரியாமல், வெகு சாமர்த்தியமாக, ரகசியமாக இந்தியாவில் தொடர்ந்து நடத்திக் கொண்டு தான் வருகின்றார்கள். உலகப் போலீஸ் இண்டர் போலால் கூட கண்டுபிடிக்க முடியாது என்று இச்சூதாட்டத்தை நடத்துபவர்கள் மார்தட்டிக் கொள்வார்கள்.

சூதாட்ட ரகசியத்தை இப்போது பார்க்கலாம். எக்ஸ் என்ற டீம் எல்லாப் போட்டிகளிலும் ஜெயித்துக் கொண்டே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது பலரும் பெட் கட்டுவார்கள். பெரும் பணம் குவியும். எக்ஸ் அணிதான் ஜெயிக்கும் என்று ஏகப்பட்ட பேர் கிரெடிட் கார்டு மூலமும், இன்னபிற உண்டிகள் மூலமும் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்கள். மிகப் பெரும் பணம் வசூல் ஆனது தெரிந்தவுடன் சூதாட்டத்தின் அடுத்த வேலை ஆரம்பிக்கும். யாரோ ஒருவர் ஒய் என்ற அணி ஜெயிக்கும் என்று பெட் கட்டுவார். எக்ஸ் தோற்றால் ஒய்யுக்கு அத்தனை பணமும் வந்து விடும் அல்லவா? அதற்கேற்ப சிக்னல்கள் தண்ணீர் பாட்டில்கள் மூலமாகவோ, காயமடைந்து விட்டார் என்பதாகவே, கணுக்கால் உடைந்து விட்டது என்பதாகவோ சம்பந்தப்பட்ட பிளேயருக்குக் கொண்டு செல்லப்படும். முடிவில் எக்ஸ் தோற்று ஒய் ஜெயிக்கும்.  எக்ஸ் ஜெயிக்கும் என்று பணம் கட்டியவர்களின் பணம் ஹோகயா ஆகி விடும். ஒய் மீது பணம் கட்டியவர்களிடமிருந்து தோற்ற அணியின் அதாவது எக்ஸுக்கு பேசப்பட்ட பங்கு சென்று சேரும்.

இப்படியெல்லாம் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கு ஒன்றினை மீண்டும் நினைவு படுத்துகிறேன். விலை கொடுத்து வாங்கப்படும் விளையாட்டு வீரர்கள், அணியின் முதலாளி சொல்வதைக் கேட்பார்களா  இல்லை கேட்கமாட்டார்களா?  என்பதற்கான விடையில் இருக்கிறது டி20 கிரிக்கெட் 420 கிரிக்கெட்டான மாறியதன் காரணம்.

ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்பது போல அரசியல் புகுந்த இடம் ஊழலாகிப் போகும் என்பதற்கு பவித்திரமான விளையாட்டும் மாறிப் போனது. வெறும் பதினோறு நாடுகளில் விளையாடப்படும் கிரிக்கெட்டை பணம் கொழிக்கும் கற்ப தருவாய் மாற்றிக் காட்டி, அதையும் ஊழல் மயமாக்கியதோடு இல்லாமல் இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகளும், சில சுய நலமிகளும். டி20 கிரிக்கெட்டினை ஊழல் செய்ய உருவாக்கப்பட்ட விளையாட்டாய் மாற்றி விட்டார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கு சாட்சியாய் கிரிக்கெட் மாறி இருக்கிறது. வரப்போகும் வரலாற்றுப் பக்கங்களில் கிரிக்கெட் என்பது “திருடர்களின் விளையாட்டாய்” பதியப் படத்தான் போகிறது. உண்மை காற்றுப் போல. அது ஒரு நாள் புயலாய் மாறும் போது பொய் என்ற நாற்றமெடுக்கும் தோற்றம் கரைந்து போய் விடும். டி20 ஐபிஎல் ஊழலுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு என்பது வரலாற்றில் பதியப்படும். அப்போது மக்களெல்லாம் “இப்படி ஏமாந்து விட்டோமே?” என்று பெருமூச்செறிவார்கள் என்பது நிச்சயம்.

அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டும், காதில் ரேடியோவை வைத்துக் கொண்டும், இணைய தளங்களில் டி 20 கிரிக்கெட்டின் ரிசல்ட்டைக் கவனித்துக் கொண்டும், அது பற்றிய கமென்டுகளை பேசிக் கொண்டும், விளையாட்டு வீரர்களுக்கு ரசிகர் என்றுச் சொல்லி புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களை ஏமாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை கோடி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிப்போரை புத்திசாலிகள் என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்னதான் ஊழலாக இருந்தாலும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் என்பது மிக நல்ல வியாபாரம் என்ற உண்மையை நான் உங்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

-     கோவை எம் தங்கவேல், கோயமுத்தூர் ( 30/03/2012)

Friday, May 25, 2012

ஹெல்த் ட்ரிங்க்ஸினால் கேன்சர் வரலாம்


உடம்பு முடியாமல் மருத்துவமனையில் இருப்போரைப் பார்க்க செல்வோர் ஒரு காலத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் இல்லாமல் செல்ல மாட்டார்கள். கண்ணாடி பாட்டிலில் தனக்கே உரித்தான நறுமணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில் ஒவ்வொரு நோயாளிகளின் தலைப்பக்கமாய உட்கார்ந்திருக்கும். அந்த அளவுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் ஹார்லிக்ஸ் ஒரு காலத்தில் மக்களிடையே மிகப் பிரபலமாய் இருந்தது. 

என் மனைவியின் சிறு வயதில் தூக்கி வைத்துக் கொஞ்சிய பக்கத்து குழந்தை ஐந்தாவது வயதில் கேன்சரால் இறந்து போய் விட்டது. பால் குடி மறந்ததும் அக்குழந்தைக்கு காய்ச்சிய பசும்பாலில் பிரபலமான (ஹார்லிக்ஸ் அல்ல) ஹெல்த் ட்ரிங் ஒன்றினை கலந்து கொடுத்து வந்திருக்கின்றார்கள். குழந்தையும் நன்றாக கொழு கொழுவென வளர்ந்திருக்கிறது. எல்லோரும் குழந்தையைப் பாரு “சேட்டு வீட்டுக் குழந்தை போல” இருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். பெற்றோர்களுக்கு பெருமையாக இருந்தது.

சாப்பாடு கொஞ்சம், ஹெல்த் ட்ரிங் அதிகமாய் கொடுத்து வளர்க்கப்பட்ட அக்குழந்தை திடீரென தன் ஐந்தாவது வயதில் நோயில் விழுந்திருக்கிறது. டெஸ்ட் செய்து பார்த்த போது கேன்ஸர் பாதிப்பு இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

எனது குழந்தைகளுக்கு மருத்துவம் செய்யும் ஒரு பெண் டாக்டரிடம் ”குழந்தை கள் ஒல்லியாகவே இருக்கின்றார்களே அவர்களுக்கு ஏதாவது ஹெல்த் ட்ரிங்க்ஸ் கொடுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எக்காலத்திலும் குழந்தைகளுக்கு ஹெல்த் ட்ரிங்க்ஸ் நிச்சயம் வேண்டவே வேண்டாம், அதற்குப் பதிலாக முட்டை, பால், இறைச்சி, மீன், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுங்கள்” என்றுச் சொன்னார்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கான பதில் வேறு எங்கிருந்தோ கிடைத்தது. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உணவின் மூலமாகவே கிடைக்க வேண்டும். ஆனால் அது ஹெல்த் ட்ரிங்ஸ் வழியாக கிடைக்கிறது என்றால் அதன் பின் விளைவுகள் இப்படித்தான் ஆகும்.

சவுத் அமெரிக்காவில் மக்களால் அருந்தப்பட்ட ஒரு ஹெல்த் ட்ரிங்கினால் கேன்ஸர் வந்திருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியாவில் மருத்துவ உலகை கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகள் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாய் இருப்பதால் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ன விதமான பின் விளைவுகளை உருவாக்கும் என்று கண்டு பிடிக்க முடியாது. அதைப் பற்றிய விழிப்புணர்ச்சி பலர் இறந்த பிறகுதான் உருவாகும். 

அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விளம்பர மோகத்தில் திளைப்பதால் வரக்கூடிய பின் விளைவுகளைக் கண்டு கொள்ளாமல் விளம்பரப் படுத்தப் படும் ஒவ்வொரு பொருளையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடம்பு நன்றாக இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். நம் தமிழ் கலாச்சாரத்தில் உடல் நோவுக்கு என்று ஏகப்பட்ட பின் விளைவுகள் அற்ற மருந்து உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை அறிந்து கொண்டு உடலைக் காத்து உள்ளத்தை பாதுகாத்து நலமுடன் வாழ்க.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, May 22, 2012

சின்னப்புள்ள(1)


தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு ஆரம்ப எல்லையிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லையின் ஆரம்பத்திலும் இருக்கும் ஊர்தான் ஆவணம் கைகாட்டி. அம்மாவின் பிறந்தகம். குழந்தைப் பருவத்திலிருந்து கல்லூரி வயது வரை ஆவணத்தில் தாய் மாமன் வீட்டில் தான் வளர்ந்து வந்தேன். தாய்மாமா அருணாசலத்தின் மீசையைப் பார்த்தாலே ஒன்றுக்கு போய் விடும். தேவர்மகன் கமலஹாசன் மீசை வைத்திருப்பார். ஆவணத்துப் பன்னண்டாக்குளத்தில் மாமா குளிக்கச் சென்றார் என்றால் குளக்கரையே சோப்பு நுரையால் அதகளப்படும். மாமா தலையில் ஷாம்பூவாய் போட்டு தலைமுடி கொட்டிப் போனதுதான் மிச்சம். ஆனால் மீசை மட்டும் எமகிங்கரர் போல வைத்திருப்பார். மீசைக்கென்று தனியாக சீப்பு வேறு. காவிரி ஆற்றின் கிழக்குப் புறமாய் அகண்டு போய் கிடக்கும் இந்தக் குளம். ஏன் பண்ணண்டாக்குளம் என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. விசாரிக்கணும். குளத்தின் மேற்குப் புரத்தில் பலவகை மரங்களும், கிழக்குப் புறமாய் வயல்வெளிகளும், தெற்குப் பக்கமாய் மாயன்பெருமாள் கோவிலுமாய் வடிவமற்று இந்தக் குளம் இருக்கும். தண்ணீர் நிரம்பி இருக்கையில் கடல் போல காட்சியளிக்கும். 


இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. ஏதோ ஒரு தினத்தில் சைக்கிளில் குளிக்க அழைத்து சென்றிருந்தார்.  தேய்த்து தேய்த்து அரை மணி நேரம் எனது கைகால்கள் எல்லாம் சிவந்து போயின. குளிக்க வந்த குத்தூசு ராவுத்தர், "அருணாலம் விடுடா பய பயந்துறப்போறான்" என்றுச் சொல்ல அதன் பிறகு அரைகுறை மனதோடு விட்டார். அதுதான் அவர் கூட கடைசியாகக் குளிக்க போனது. சொரியும் சொரியில் உடம்பே புண்ணாய்ப் போய் விடும்.

போன வாரம் மாமா போன் செய்திருந்தார். ’பேரன் பேரன்னு தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறது அக்கா, பேரன் நாட்டுக் கோழி வேணும்னு கேட்டானாம், பத்து பதினைந்து கோழிகள் வீடு முழுக்க திரிந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, பேரன் வந்துட்டானா உன் கழுத்தைப் பிடிச்சு திருகிறுவேன்’ என்று தானா பேசிக் கொண்டிருக்கிறது என்றார். ’உடம்புக்கு வேற முடியவில்லை’ என்றுச் சொன்னார். ’உடனே பையனை அனுப்பி வை’ என்று கேட்டுக்கொண்டார். மறுநாள் மாலையில் அப்பத்தாவிடம் சென்று விட்டான் பையன். அவ்வளவுதான். உடம்பு முடியாமல் படுத்துக் கிடந்த அம்மா எழுந்து கொண்டாராம். 

கோழிகளின் கழுத்து திருகப்பட்டு குழம்பு, வறுவல்கள் ஆனது. மீன், நண்டு, இறால் என்று ஒரே அதகளம். தோட்டத்தில் மாம்பழம், நொங்கு, இளநீர், பலாப்பழம் என்று அடுத்தடுத்த மேட்டர்கள். செம்மறி ஆட்டு ஈரல் கறிக்குழம்பானது. ஆட்டுக்கால் பாயாவானது. கறி வறுவல் ஆனது. பையனும் பெண்ணும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் ஆனந்தப்பட்டார்கள். அடிக்கடி போன் செய்யும் எனது பெண்ணிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை. பெண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் போல. இருபது வருடம் பெத்து வளர்த்த பெற்றோர்களை விட்டு விட்டு ஒரு வருடமோ இரண்டு வருடமோ பழகும் பையனோடு திருமணம் செய்துகொண்டு போய் விடுகின்றார்கள் சில பெண்கள்(அடியேனின் கதை). எதிர் காலத்தில் அரேஞ்ச்டு மேரேஜ் இருக்காது என்றே நினைக்கிறேன். இது பற்றி எனது நண்பரின் அனுபவம் ஒன்று இருக்கிறது. அதை வேறு இடத்தில் சொல்கிறேன். 

கோவையில் அடியேனோ காலையில் முட்டைக்கோஸ் பொறியல், சாம்பார், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சாதம், கீரை என்று வியர்த்து விறுவிறுத்து சமையலறையில் கிடந்தேன். இரவில் தோசையும் ஏதாவதொரு சட்னியும். காலையில் வைக்கும் குழம்பு, பொறியல்களை மதியம் சூடு செய்து கொள்ள வேண்டும். இடையில் க்ரீன் டீ வேறு போட்டுக் கொள்ள வேண்டும். வீடு துடைத்து, போட்டிருக்கும் துணிகளைத் துவைத்துக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். 

சமைக்கும் போது ஒரு ஸ்பெஷல் துவையல் செய்தேன். மிக நன்றாக இருந்தது. ஸீரோ பெர்சண்டேஜ் ஆயில் துவையல் அது. பேச்சிலர்ஸ்ஸுக்கு ஏற்றது. தனியாக இருக்கும் கணவன்களுக்கும் ஏற்றது. முயற்சித்துப் பாருங்களேன்.

கொஞ்சம் தேங்காய் துறுவல்
இரண்டு மேஜைக்கரண்டி துவரம் பருப்பு
இரண்டு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு
ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை
ஆறேழு புதினா தழைகள்
கொஞ்சூண்டு மல்லித்தழை
கொஞ்சூண்டு கருவேப்பிலை
ஒரே ஒரு பூண்டு
துளியூண்டு பெருங்காயம்
கொஞ்சூண்டு உப்பு
எடுத்துக்கொண்டு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை (கட்டிப் பெருங்காயம் நல்லது) எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்தேன். மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாய் அல்லாது கொஞ்சம் நைஸாக அரைத்தேன். வழித்தெடுக்கும் போது கமகமவென மணம் வீசியது. தேவையான உப்பைச் சேர்த்துக் கொண்டேன்.

சுடுசாதத்தில் மோர் விட்டு, சைடிஸ்ஸிற்கு இந்தத் துவையல். சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தம். 

சுடுசாதத்தில் பசு மோர் விட்டால் கமகமவென மணக்கும். சிறுவயதில் அம்மா கொத்தரவங்காய் வற்றல், சோற்று வடகம், மோர் மிளகாய் வற்றல், ஆதண்டங்காய் வற்றல் பொறித்து தருவார்கள். ஒரு தட்டுச் சோறு சாப்பிடுவேன். 

ஆமாம், ஆதண்டங்காய் வற்றல் சாப்பிட்டு இருக்கின்றீர்கள் தானே? கோவையில் ஏதோ ஒரு  பழமுதிர் நிலையத்தில் கிடைக்கிறது என்றார்கள். எங்கே என்று தெரியவில்லை. செலரி வாங்கலாம் என்று பார்க்கிறேன். இதுவரை அகப்படவில்லை. கோவையில் செலரி கிடைக்கும் இடம் என்று தெரிந்தவர்கள் முடிந்தால் சொல்லுங்கள்.

பையனும் பெண்ணும் சந்தோஷமாய் இருக்கின்றார்கள், அம்மா சந்தோஷமாய் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். மனதுக்கு இதமாய் இருந்தது.

இதற்கிடையில் அங்கு பையனால் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. போன் வந்தது. ”யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்” என்கிறான் என்றார் மனையாள். ”அவனிடம் போனைக் கொடு” என்றேன்.

“அப்பா, நான் இப்போதே கோயமுத்தூர் வரணும்” என்றான் பையன்.

- விரைவில் தொடரும்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Thursday, May 17, 2012

புதிய சாட்டிலைட் சேனல்



எஸ் ஆர் எம் கல்லூரி நிறுவனர் திரு பச்சை முத்து அவர்களால் தொடங்கப்பட்ட ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கை பரவலாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. திறமைசாலிகளுக்கு மதிப்புக் கொடுத்த காரணத்தால், நல்ல கட்டுரைகள் வெளிவந்தன. ஆரம்பத்தில் நல்ல விஷயங்களோடு வெளியான பத்திரிக்கை, போகப் போக சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் புரியாமல் குழம்பிய போதுதான், புதிய தலைமுறை சாட்டிலைட் செய்திச் சானல் வெளிவந்தது. பத்திரைக்கை பத்தோடு பனிரெண்டானது. டிவி சானல் எல்லோரும் சன் டிவியை விட அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். ஆனால் எனக்கொன்றும் அவ்வளவு பிரமாதமாய் இருப்பது போல தெரியவில்லை. இந்தச் சானலில் அதிகப் பிரசங்கித் தனமான செய்திகளும், சும்மா ஒப்பேற்றுவது போல நிகழ்ச்சிகளும், எல்லாம் தெரிந்த மேதாவித்தனமான வார்த்தைப் பிரயோகங்களும் வெளிப்பட்டன. 

எந்த ஒரு செய்திக்கும், நிகழ்ச்சிக்கும் நிறைவு என்ற ஒன்று உண்டு. அதை இவர்கள் கொடுக்கவே இல்லை. சானலில் வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிறைவற்ற தன்மையைக் காணலாம். மேலும் இவர்கள் அரசியல் பின்புலம் அற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கின்றார்கள். இந்தச் செய்தி சானலை உலகப் புகழ் பெறும் வகையில் நடத்தலாம். ஆனால் அதற்கான எந்த ஒரு முஸ்தீபும் புதிய வடிவும், நிகழ்ச்சிகளும் இதுவரை வரல்லை. 

இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை நடு நிலை என்கிறார்கள்.’ஒப்புக்குச் சப்பாணி’ என்று தானே அர்த்தம் வரும். எது வரினும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று புதிய தலைமுறை செய்திகள் வெளியிடாதவரை இதுவும் ஒரு சானலாகத்தான் இருக்கும். 

நேற்று நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் சொன்னார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிலர் வருவர். அவர்களால் இண்டஸ்ட்ரி புத்துணர்ச்சி பெற்று பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். சினிமா உலகினர் சுறுசுறுப்பாய் உழைப்பர். திமுக குடும்பம் சினிமாவில் ஈடுபட்ட காரணத்தால் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அதே போல டாக்டர் சீனிவாசன், ரித்தீஷ் போன்றோரால் நிறைய தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. காசைப் பற்றியோ, படத்தின் தரம் பற்றியோ கவலைப்படாமல் இவர்களைப் போன்றோர் எடுத்து தள்ளிய சினிமாக்களினால்  சினிமா தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்தார்கள். இப்படிப் போன்றோர் தமிழ் சினிமாவிற்கு அடிக்கடி வந்து செல்வர். அது போன்றே தமிழ் சினிமா உலகில் எஸ் ஆர் எம் க்ரூப்பும் ஈடுபட இருக்கின்றார்களாம்.

சானல்கள் இல்லாத காலத்தில் படம் நன்றாக இல்லையெனில் தயாரிப்பாளார் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சாலையில் போக வேண்டியதுதான். ஆனால் தற்போது டிவி சானல்கள், எஃப் எம் ரேடியோக்கள், வெளி நாட்டு உரிமை, டப்பிங் உரிமை, வேற்றுமொழி உரிமை என்கிற பல்வேறு விஷயங்களினால் போட்ட காசுக்கு பங்கம் வந்து விடாமல் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக் கொண்டனர். திமுக ஆட்சியில் இருக்கும் போது அரசியல் அதிகார பலத்தால் சன் டிவியும், கலைஞர் டிவியும் தாங்கள் விரும்பிய விலைக்கு திரைப்படங்களை வாங்கினார்கள் என்கிறார்கள். திமுக ஆட்சியின் முடிவிற்குப் பிறகு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ ஆரோக்கியமானதாக மாறி இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றார்கள். பெரும் பணத்தினை முதலீடுகளாய் போட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல தமிழ் சாட்டிலைட் சேனல்கள் வருவது மன ஊக்கத்தினை தரும். போட்டி அதிகமிருக்கும் இடத்தில் நல்ல விலை கிடைக்கும் அல்லவா? 

சன், ராஜ், விஜய், கலைஞர், ஜெயா டிவிக்களின் சாட்டிலைட் உரிமைக்கான போட்டிக்கு மேலும் ஒரு சாட்டிலைட் சேனல் வரப்போகின்றதாம். எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் “வேந்தர் தொலைக்காட்சி” விரைவில் மலர இருக்கின்றதாம்.அவர்கள் பெரும் விலை கொடுத்து அரவான் திரைப்படத்தை வாங்கி இருப்பதாகவும், சகுனி படத்தின் விநியோக உரிமையுடன் சாட்டிலைட் உரிமையையும் வாங்கி இருப்பதாகவும் தமிழ் சினிமா உலகிலும், பத்திரிக்கை உலகிலும் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் புதிய தலைமுறை செய்திச் சானலில் இது பற்றிய விளம்பரங்கள் வெளியாகலாம். 
திரைப்பட விநியோகஸ்தராகவும், டிவி சானல்களாகவும் மாற இருக்கும் ‘புதிய தலைமுறை’ குழுமத்தினர் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Friday, May 11, 2012

வேலைக்குத் தேவை : எம்எஸ்சி பட்டதாரி

வாழ்க்கையின் முதல் தத்துவம் என்ன தெரியுமா? துணிச்சலை சோதித்துப் பார்ப்பதுதான். அவ்வாறு துணிச்சலை சோதிப்பவன் தான் என்றும் மாறாதா நிலைத்த வெற்றியைப் பெறுவான் என்கிறார் டூஸே.

எனது நண்பரின் சென்னையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிய எம் எஸ் சி ( மேத்ஸ், பிசிக்ஸ்) - கணிதம் அல்லது இயற்பியல் பெண் பட்டதாரி தேவை. மாலையில் நண்பரின் குழந்தைகளுக்கு (இருவர்) டியூசன் சொல்லித் தர வேண்டும். தங்குமிடம் கொடுத்து விடுவார். தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் தருவார்.

அதுமட்டுமல்ல, அசைவம், சைவம் சமைக்கத் தெரிந்த ஆதரவற்ற பெண்கள் இருவர் சென்னையில் பிரதான ஹோட்டல் அதிபர் வீட்டிற்கும், பில்டர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கும் தேவைப்படுகின்றனர்.

விருப்பம் உடையவர்கள் அல்லது வேலை தேடுவோரை அறிந்தவர்கள் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்லவும். இந்த மாதத்தின் கடைசி தேதி வரைக்கும் அழைக்கலாம்.



எனது தொலைபேசி எண் : 96005 77755

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, May 5, 2012

இந்தியா என்றால் என்ன?


நம் நாட்டில் விவசாயத்​துக்கும் விவசாயி​களுக்கும் மதிப்பு இல்லையே? (க.சங்கீத், மேல்அருங்குணம்.)

கழுகார் பதில்:விவசாயத்துக்கு மரியாதை தராத மனோபாவத்தைத்​தான் இங்கே உருவாக்கி விட்டார்களே!

இந்திய சமூகத்தின் கல்வி முறையை அறிமுகப்படுத்திய மெக்காலே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு உங்களது கேள்விக்கான பதிலாக அமையும்.

'நான் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்தபோது, பிச்சைக்காரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை. அத்தகைய நாடு அது. செல்வ வளமும், உயர் நியாய உணர்வுகளும், அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயம் மற்றும் கலாசாரப் பாரம்பர்யத்தை உடைத்து எறியாத வரை அந்த நாட்டை நாம் ஒருபோதும் வெல்ல முடியாது. எனவே, வெளிநாட்டில் இருந்து வருகிற எல்லாமே தன்னுடையதை விட உயர்ந்தது என்று எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இந்தியாவை அடக்கி ஆளப்படும் நாடாக மாற்ற, அந்த நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளை, பாரம்பரியக் கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்’ என்று பேசினார் மெக்காலே. இந்த மனோபாவம்கொண்ட நாம் எப்படி விவசாயத்தை மதிப்போம்? 

இந்த வார ஜூனியர் விகடனில் வெளியானது மேலே இருப்பது. 

இந்தியாவில் இருக்கும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையும், ஏழைகளின் எண்ணிக்கையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். எப்படி இருந்த இந்தியா, எப்படி சீரழிக்கப்பட்டிருக்கிறது? இதற்கு காரணம் பேராசைப்பட்ட, தகுதியற்ற அரசியல் தலைவர்கள் தானே? என்ன செய்யப்போகின்றோம் நாம்? 

மெக்காலே கண்ட இந்தியாவை எப்போது நாம் பார்ப்போம் இனி? 

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

நன்றி : ஜூனியர் விகடன்


Friday, May 4, 2012

மனித மனம்



கீதையில் மனித மனம்- கவியரசு கண்ணதாசன்


கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான்:

“அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”

அர்ஜுனன் கேட்கிறான்:

“மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.

கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; 
வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.”

பகவான் கூறுகிறான்:

“தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.”

இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்:

“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகுசிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப் படுத்துவது எளிதன்று. ஆனால், வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்.”

மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது, என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியான யோகமாகும்.

சகல காரியங்களுக்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும், நன்மைக்கும், தீமைக்கும், இருட்டுக்கும், வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும், வெறுப்புக்கும் மனமே காரணம்.

மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.

பகுத்தறிவையும் மனம் ஆக்கிரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.

கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான்; கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.

அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது; அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.

எந்த அனுபவங்களையும் கொண்டுவருவது மனம்தான்.

இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்கள் அழித்துவிடுகின்றன.

உடம்பையும் அறிவையும் மனமே ஆக்கிரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.

என்ன இந்த மனது?

காலையில் துடிக்கிறது; மதியத்தில் சிரிக்கிறது; மாலையில் ஏங்குகிறது; இரவில் அழுகிறது.

“இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்” என்றிருக்க மனம் விடுவதில்லை.

ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.

எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சரிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி?

“வைராக்கியத்தால் முடியும்” என்கிறது கீதை.

அதையே சொல்கிறார் பகவான் ராமகிருஷ்ணர்.

அது என்ன வைராக்கியம்?

உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது; எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.

மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கிவிடுவது.

ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கிவைத்து விடுவது; 

பந்தபாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.

பற்றறுப்பது; சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.

நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்று முடிவுக்கு வருவது.

ஜனனத்துக்கும், மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டி வைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டுகொள்வது.

துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப் படுத்துவது.

இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.

பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.

முயற்சிகள் தோல்வியுறும்போது, `இதற்கு இறைவன் சம்மதிக்க வில்லை’ என்று ஆறுதல் கொள்வது.

கணநேர இன்பங்களை’ அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டுகொள்வது.

ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே’ என்ற சம நோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.

காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.

சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால், எப்படி இது முடியும்?

பகவத் தியானத்தால் முடியும்.

அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ, வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து, வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.

இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.

பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி’யானது இப்படித்தான்.
தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும் இப்படித்தான்.

இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப்பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.

அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.

அப்போது ஓர் இடைறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.
கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது; அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்ணில் படுவதில்லை.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.

கவிஞனுக்கும், வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெறமுடியும்.

அதாவது, ஒன்றையே நினைத்தல்.

அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.

வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன்போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.

சங்கீத வித்வான் சரித்திர ஆராய்ச்சி செய்வதில்லை; ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.

ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.

ஒரு கதை உண்டு!

ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.

பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள்; துடித்தார்கள்.

அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப் போகிறதே என்று பார்த்தார்கள்.

தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள்.

தாய் எழவில்லை.

ஓங்கித் தடியால் அடித்தார்கள்; அப்போதும் அவள் எழவில்லை.

பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக்கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.

தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?

அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.

ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.

இந்த மனத்தின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.

ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக் கிறேன்.

ஜனனம் தகப்பனின் படைப்பு; மரணம் ஆண்டவனின் அழைப்பு; இடைப்பட்ட 
வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.

இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.

திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.

ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.

ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.

என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை.

பெற முயல்கிறேன்; பெறுவேன்.

பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந் தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று, மன அமைதி கொள்ள முயல்கிறேன்.

அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப் போகும்.

இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்துமதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.

லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்துமதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு.

- கண்ணதாசனின் பகவத் கீதையிலே ஒரு பகுதி

Thursday, May 3, 2012

மோகமுள் திரைப்படமும் நாவலும்




மோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது. 

ஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.

படிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் ! 

நாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.

திருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது. 

திஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன. 

ஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.

பாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.

காதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? 

சிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Tuesday, May 1, 2012

யமுனாவின் மீதான மோகம் தீரவில்லை



கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சந்தர்ப்பவசமாய் யமுனா என்னிடம் சிக்கிக் கொண்டாள்.

எங்களூர் பட்டிக்காட்டு கிராமம். படிப்பறிவு கொஞ்சம் கம்மியாக இருந்த கால கட்டத்தில் பிறந்த காரணத்தால் புத்தக வாசனை பள்ளிக்கூடத்தின் மூலமாகவே கிடைத்தது. மூன்றாவது படிக்கும் போது என்று நம்புகிறேன், ராணி காமிக்ஸ் அறிமுகமாகி அன்றிலிருந்து காமிக்ஸ்ஸின் ரகசிய ரசிகனானேன். மாமாவோ பாடப்புத்தகத்தை தவிர வேறு புத்தகத்தைக் கையில் பார்த்து விட்டார் என்றால் மண்டையில் அழுந்த ஒரு குட்டுப் போடுவார்.  மாமாவின் குட்டுக்குப் பயந்து மர பீரோவின் அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சில கிழிந்து போன, கசங்கிப் போன காமிக்ஸ் புத்தகங்கள். எல்லாம் தெரிந்த மாமா இதுவரையிலும் மரபீரோவின் அடியில் எதையும் தேடுவதே இல்லை. ஏன் என்று எனக்கு இன்றைக்கும் புரியவில்லை.

இப்படியான ஹிட்லர் வீட்டில், அக்கா மூலம் என்றோ ஒரு நாள் அறிமுகமானது மாலைமதி. அந்தக் கதை இன்றைக்கும் என் மனதை விட்டு அகலவில்லை. ஏன் என்று தெரியவில்லை. பழைய புத்தக கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாலைமதி கிடைத்து விடுமா என்ற நப்பாசையில் தேடிப் பார்ப்பேன். கிடைக்காது. செல்லம்மாவின் சமையல் குறிப்புகளாவது கிடைக்குமா என்று கூட பக்கங்களில் படருவேன். செல்லம்மா கால ஓட்டத்தில் காணாமல் போகும் குழந்தைப் பருவ நினைவுகள் போல காணாமல் போய்விட்டார்.

தொடர்ந்து எழுத்தாளர் சுபாவின் நாவல்களும், அட்டைப்படத்தின் மூலம் கேவி ஆனந்த்தும் எனக்கு தெரிய வந்தனர். சுபாவின் நாவல்களின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் படு அசத்தலாய் இருக்கும். ஆரம்ப கட்டம் அல்லவா? பார்க்கும் புத்தகங்கள் எல்லாம் திகிலைக் கிளப்பிக் கொண்டிருந்தன. சுபாவின் தூண்டில் முள் நாவல் என்னை கலவரப்படுத்திய ஒன்று. அவரிடமிருந்து என் கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் கூட வந்தது. அதன் பிறகு அவர் எழுத்தின் மீதான வாசிப்பு எனக்கு திகட்ட ஆரம்பித்தது. நரேன், வைஜெயந்தியின் உரையாடல்கள் அலுப்பினைத் தர ஆரம்பித்தது. நரேனின் சாகசங்கள் வயதானது போல தோன்றின. பிகேபியின் பரத், சுசீலா கூட அப்படித்தான் ஆகிப் போனார்கள்.

தொடர்ந்த என் வாசிப்பு, கல்லூரிப் படிப்பின் போது, ஜானகி ராமனின் மோகமுள் புத்தகத்தில் வந்து நின்றது. பூண்டிக் கல்லூரியின் நூலகருக்கு எனக்கு பதில் சொல்லிச் சொல்லியே சலித்து இருக்கும். மூன்று வருடப் படிப்பின் போது ஜானகிராமனின் மோகமுள் என்னிடம் சிக்கவே இல்லை. ஆனால் மோகமுள்ளின் மீதான பிறரின் பார்வைகள் மிகப் பெரும் ரகசிய ஆர்வத்தை அதன் மீது ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. குமுதத்தில் வெளி வந்த மோகமுள் திரைப்படத்தின் கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் எனது டைரியின் பக்கத்தில் நிரந்தரமாய் படமாக ஒட்டிக் கொண்டாள். அவளைப் பார்க்காது டைரியில் ஒரு எழுத்துக் கூட எழுத மாட்டேன்.

வாழ்க்கைச் சூழலின் மாறுபாட்டினால் கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணம் முடிந்து ஓடிக் கொண்டிருந்த போது, மோகமுள் மனதின் அடியாளத்தில் புதைந்து போய்க் கிடந்தது.

பவர் கட்டின் பிரதிபலனாக பல நூல்களைப் படிக்க வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டேன். வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து புத்தக அலமாரியை அணுகிய போது மனதுக்குள் ஒளிந்து கிடந்த “மோகமுள்” மெதுவாக வெளிவந்தது. நூலகரிடம் விசாரித்த போது இல்லையென்ற பதில் மோகமுள்ளின் மீதான ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.

இப்படியான தேடலில் போன சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் பிடித்தே விட்டேன் மோகமுள்ளை. யமுனாவின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தழுவிக் கொள்ள, திரைப்பட மோகமுள் யமுனாவிற்கும் ஜானகிராமனின் மோகமுள் யமுனாவிற்கும் எந்த வித தொடர்பும் இன்றி இருப்பதைக் கண்டு மனது அதிர்ந்தது.

ஜானகி ராமனின் யமுனா ஒரு முழு நிலவு(?). அவளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். 20 வருட ரகசியப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


குறிப்பு : மோகமுள் திரைப்பட கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் ஒரு கதக் நடன மாது. அவரின் வெப்சைட்டை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதோ அவரின் வெப்சைட் முகவரி.







Saturday, April 28, 2012

மனதுக்கு வலி தரும் காதல்

மூளை முதல் கொண்டு நரம்புகள் அனைத்தும் விரைத்து இதயம் துடி துடிக்க, உதிர அணுக்கள் எல்லாம் காதலியின் பெயரை உச்சரித்துக் கொண்டு உடம்பெல்லாம் பரவ, உதிரச் சூட்டின் வலி தாளாமல் உடல் சோர்ந்து வீழ, மனது வெந்து வெதும்பி வீழ, காதலியின் வருகைக்காக வரும் வழி பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போக, காதலியின் குரல் கேளாமையால் காதுகள் எல்லாம் பஞ்சடைத்து போக மொத்தத்தில் அவளின் நினைவாலே உருமாறிப் போய் நிற்கும் காதலனின் தவிப்பை கமல் இக்காட்சிகளின் வழியே உருவகப்படுத்துவார்.

இதோ அந்தப் பாடலும் காட்சியும் உங்களுக்காக.



- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Friday, April 27, 2012

போலி பிஸ்கட்டுகள் ஜாக்கிரதை

எனது நண்பரொருவர் வீட்டுக்கு வந்த போது பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் மற்றும் சில தின் பண்டங்களை வாங்கி வந்தார். அன்று மாலை டீயுடன் மூன்று பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டேன். இரவு வயிறு மந்தமாக இருந்ததால் ஒரே ஒரு தோசையுடன் இரவு உணவை முடித்து விட்டேன். நடு இரவில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. எழுந்து உட்கார்ந்ததும் வியர்த்தது. வயிற்றுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுத்தேன். மாலை நான்கு மணிக்கு சாப்பிட்ட பிஸ்கட் இரவு 11 மணி வரை ஜீரணம் ஆகாமல் இருந்தது.

மறு நாள் காலையில் நண்பருக்கு போன் செய்து பிஸ்கெட் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டேன். பிரபல பேக்கரி ஒன்றின் பெயரைச் சொன்னார். யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை.

டீத்தூளில் கலப்படம், பாலில் உரக்கலப்படம், பிஸ்கட்டில் போலி,இட்லி மாவில் சோடியம் என்று இன்னும் என்னென்ன செய்திருக்கின்றார்களோ தெரியவில்லை. கடைகளில் வாங்கிச் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருளிலும் விஷம் விஷம் விஷம்.

மனச்சாட்சியைத் தொலைத்து விட்டு மனிதர்கள் மிருகமாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நவ நாகரீக இந்தியப் பொருளாதார சந்தையின் பின் விளைவுகள். சாட்டிலைட் டீவிக்கள் வீட்டின் வரவேற்பறையில் விளம்பரங்களின் போதை மருந்தை தெளிப்பதன் விளைவு மனிதர்கள் தேவையற்ற பொருட்களுக்கு ஆசைப்படுகின்றார்கள். அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. நேர்மையாக உழைத்தால் உழைப்பவனுக்கு பைசா லாபம் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். வேறு வழி இன்றி இப்படியான நச்சுக் கொலைகளில் இறங்குகின்றனர்.  

இந்திய மக்கள் பேராசையின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்கள். எல்சிடி டிவி இருந்தாலே அவன் பணக்காரன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எல்யிடி டிவி, பிளாஸ்மா டிவி என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள். 40,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி இனி குப்பைக்குச் செல்லும். எல்யிடிக்கு அடுத்து என்ன டிவியோ? தினமொரு புதுப் பொருள் உதிக்கின்றது. பழைய பொருள் மார்க்கெட் போகின்றது. செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சந்திக்கும் நண்பர்கள் இன்னுமா பழைய போனை வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று நிச்சயமாய் கேட்பார்கள். அவர்கள் வைத்து இருக்கும் புது போனும் அடுதத ஆறு மாதத்தில் பழைய போனாகி விடும். இப்படியே தங்களிடம் இருக்கும் பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் அசுரக் கைகள் மக்களின் மூளைகளை காலி செய்து கொண்டிருக்கின்றன.

இத்துடன் இது முடியவில்லை. மேலும் மேலும் மனித குலத்திற்கு தீங்குகள் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கும். 

வாழ்வதற்கு என்னென்ன தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் சந்தோஷ வாழ்க்கை வாழ்கின்றார்கள். ஞாயிறு தோறும் குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லுபவர்களின் குடும்பங்களில் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

வாழ்க்கையிலும் போலிகள் புக ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே நண்பர்களே போலிகள் ஜாக்கிரதை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Sunday, April 22, 2012

முதன் முதலாய் பரபரப்புச் செய்தி பத்திரிக்கையில் எழுதுகிறேன்

பரபரப்புச் செய்தி என்ற அரசியல் பத்திரிக்கையில் முதன் முதலாய் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் கட்டுரை வெளிவந்து இருக்கிறது. முதல் கட்டுரையே அசுர அடியாய் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். பத்திரிக்கை சென்னை மற்றும் கோவையில் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பும்படியான கட்டுரைகளை எழுதுவேன் என்று நம்புகிறேன். 



- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல் 

அக்குவாமரின் கற்கள் (Aquamarine Stones)



வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லாத மக்கள் இல்லவே இல்லை. தினமும் ஒவ்வொரு பிரச்சினை அதனால் ஏற்படும் மன உளைச்சல், மனவழுத்தம் என்று மனிதர்கள் நோய்களின் பிடிகளில் விழுகின்றார்கள். 

பிரச்சினையே வராமல் வாழ இவ்வுலகில் இடமே இல்லை. இடத்திற்கு தக்கவாறு, ஆளுக்குத் தக்கவாறு பிரச்சினைகள் நம்மைத் தொடர்ந்து கொண்டே தான் வரும்.

சிலருக்கு பிரச்சினைகள் வந்தால் குடியே முழுகிப் போனது போல தவித்துப் போய் விடுவார்கள். சிலர் மனதுக்குள் போட்டுப் புழுங்கிப் புழுங்கி மன நோய்க்கு ஆட்படுவார்கள். சிலர் கோபம் கொண்டு அடாத செயல்களைச் செய்ய முயல்வார்கள். சிலர் அவர்களுக்கே தெரியாமல் ஒரு பிரச்சினைக்காக பல பிரச்சினைகளைக் கிளப்பி மாட்டிக் கொள்வார்கள்.

யாரோ ஒரு சிலர் பிரச்சினைகள் வந்தால் இன்பமாய் அதை “டீல்” செய்வார்கள். பிரச்சினைக்கே பிரச்சினையை உருவாக்குவார்கள். பிரச்சினை அலறி அடித்து ஓடிப் போய் விடும். இப்படிப்பட்டவர்களிடம் மன அமைதி ஒரே மாதிரியாக இருக்கும்.

அப்படிப்பட்ட மன அமைதி தேவையெனில் சில கற்களை அணிந்து கொள்ளலாம் என்றுச் சொல்வார்கள். அதைக் காரணமாய் வைத்துக்கூட மன அமைதி கிடைக்கலாம். அப்படி ஒரு கற்களில் முதன்மையானது “அக்குவாமரின்” என்ற கற்கள்.

இக்கற்களைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கீழே இருக்கும் இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.
என்னிடம் பாலீஸ்டு, சர்ட்டிபைடு அக்குவாமரின் கற்களும், ரா கற்களும் இருக்கின்றன. மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்க விரும்புகிறேன். மேற்கண்ட கற்கள் தேவைப்படுவோர் தங்களைப் பற்றிய விபரங்களுடன் எனக்கு எழுதவும்.

எனது மெயில் முகவரி : covaimthangavel@gmail.com 

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்.

சித்திரை மாதத்தில் பிறந்தால் சாதிக்கலாமா?

சித்திரை மாதம் பிறந்தால் நல்லது அல்ல என்று சொல்லுவார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் தான் சார்லி சாப்ளின், விக்டோரியா மகாராணி, சாமுவேல் ஜான்சன், ராணி எலிசபெத், மாவீரன் அலெக்ஸாண்டர், கார்ல் மார்க்ஸ், டார்வின், ஷேக்ஸ்பியர், லெனின், மனோன்மணியம் சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றோர்கள் சித்திரை மாதத்தில் தான் பிறந்திருக்கின்றனர் என்று தினமணியில் எழுதி இருந்தார்கள்.

ராணிகளைத் தவிர மற்ற அனைவரும் சின்னஞ் சிறு வயதில் பட்ட துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், ஏச்சுக்கள், பேச்சுக்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் சித்திரையில் பிறந்து சாதித்தவர்கள் பட்ட துயரங்களை விட சாதித்தவை பெரிதாக இருக்க முடியுமா என்று எனக்குப் புரியவில்லை.

துன்பங்கள் தான் வாழ்க்கையைச் செம்மைப் படுத்த இயலும் என்பார்கள். எனக்குப் பிடித்த அப்துற் றஹீம் அவர்கள் “வாழ்க்கை ஒரு முள் செடி போன்றது, அதில் பூத்திருக்கும் பூவில் இருக்கும் தேனை முள் குத்தாமல் சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருக்கவே முடியாது” என்பார்.

வாழ்க்கை எல்லோருக்கும் இன்பமானதாய் இருந்ததாய் யாரும் சொல்லவில்லை. விரலுக்கேற்ற வீக்கம் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. ஏழைக்கு ஒரு பிரச்சினை,பணக்காரனுக்கு ஒரு பிரச்சினை என்று பிரச்சினை இல்லாதோரை இவ்வுலகத்தில் காணுவதே அரிதென்றாகி விட்டது.

எந்த மாதத்தில் பிறந்தாலும், பிறப்பவர்களுக்கு பிரச்சினை வரத்தான் செய்கிறது. மாதத்தில் எதுவும் இல்லை, மனதில் தான் வாழ்க்கையின் இன்பமே இருக்கிறது என்கிறார் எனது ஆன்மீகவாதி நண்பர் ஒருவர்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்.

Friday, April 20, 2012

குழந்தைகளின் அழுகுரல்கள் அம்மாவிற்கு கேட்கவில்லையா?




உறவினரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக சென்றிருந்தேன். நகரமைப்பின் விதிகளுக்கு ஏற்ப நெருக்கமாய் கட்டப்பட்ட அழகிய வீட்டின் முன்பு நீண்ட வராந்தா, இடது பக்க சந்து வழியாக சிலுசிலுவென வீசும் காற்று.  பத்துக்குப் பத்து கிச்சன், பத்துக்கு பனிரெண்டு சைசில் ஒரு ஹால், பத்துக்கு பத்து சைஸில் ஒரு பெட்ரூம், பத்து நான்கு அடியில் ஒரு பாத்ரூம். இவ்வளவுதான் வீடு. மாத வாடகை ஐந்தாயிரம் ரூபாய். இதில் தண்ணீருக்கு தனி கட்டணம், மின்சாரத்திற்கு தனி கட்டணம். மாதம் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்கு மேல் வந்து விடும் என்று வைத்துக் கொள்ளலாம். இத்துடன் செலவு கணக்கை முடித்துக் கொள்வோம். இவ்வளவு வாடகை கொடுத்து, ஏன் தங்க வேண்டும். வீடு என்பது எல்லோருக்கும் தங்குமிடம் என்பதாகத்தான் புரிந்திருக்கும். ஆனால் வீடு என்பது அதற்கும் மேலே. வீடு மனிதனின் உயிர் நாடி. அவன் வாழ்வதும் வீழ்வதும் வீட்டில்தான். வீடு இல்லையென்றால் மனிதன் ஒரு அற்பன். காற்றில் பறந்து செல்லும் பஞ்சு போல அவனது வாழ்க்கை மாறி விடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டில், பெரும்பான்மையான நடுத்தர வருவாய் குடும்பங்களில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.



இரவு எட்டு மணி வாக்கில் வராந்தாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பது மணிக்கு பவர் கட் ஆனது. காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. பத்து மணியிலிருந்து பதினோறு மணி வரை மின்வெட்டு, பிறகு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை மின்வெட்டு என்று இரண்டு மணிகளுக்கு ஒரு முறை இரவில் மின்வெட்டு நிகழ்ந்தது. வீட்டிற்குள் வெப்பம் மைக்ரோவேவ் ஓவன் போல தகித்தது. சூடு தாங்காமல் வீட்டுக்கு வெளியில் வந்தால் பெரும்பான்மையான வீட்டின் வாசல்களில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் மின்வெட்டினைச் சமாளிக்கத் தூக்கத்தை இழக்க வேண்டி தெருவில் நின்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். சூடு தாங்காமல் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அழ ஆரம்பித்தன. தெருவெங்கும் குழந்தைகளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர் தகப்பன்கள். அந்த நேரத்தில் அவர்கள் செய்யும் அர்ச்சனைகளை காது கொடுத்துக் கேட்க முடிவதில்லை. விடிகாலை நான்கு மணிக்கு வேலைக்கு கிளம்புவோர் தூக்கமின்றி தவிக்கின்றனர். வண்டியில் செல்வோர் ஒரு நிமிடம் அசந்தால் ஆக்சிடெண்ட் ஆகின்றது. சரியான தூக்கமின்மையால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை தலைதூக்குகின்றன. பாட்டரி வாங்கி வைத்தால் கூட சமாளிக்க முடியவில்லை. பாட்டரி சார்ஜ் ஆனால் தானே தொடர்ந்து இயங்கும்.  கண்மண் தெரியாமல் குடித்து விட்டு போதையில் சாலையோரம் கிடப்போர்தான் இந்த மின் வெட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை மக்களுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டினை அமல்படுத்திய தமிழக அரசு பிற மாவட்ட மக்களுக்கு பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை பரிசாய் அளிக்கிறது. சென்னை மக்கள் இரண்டு வரிகள் கட்டுகின்றார்களா? இல்லை அவர்கள்தான் தமிழகத்தில் வாழ உரிமை உள்ளவர்களா? அங்கும் பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டியதுதானே? ஏன் செய்யமாட்டேன் என்கிறார்கள்.

வீட்டுக்குள் தூங்கவும் முடியாமல், நிம்மதியின்றி தவிக்கும் சென்னை தவிர்த்த பெரும்பான்மையான தமிழக மக்களின் குழந்தைகள் வெப்பம் தாளாமல் இரவில் அலறுகின்றன. அம்மாக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள். தந்தைகள் துயரம் தாளாமல் மனதுக்குள் அழுகின்றனர். சீராட்டி, பாராட்டி வளர்க்கும் குழந்தைகளுக்கு தூக்கமில்லை. குழந்தைகள் தூங்கவில்லை என்று பெற்றோரும் தூங்கவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் தூக்கமின்றித் தவிக்கின்றார்கள்.

தாயுள்ளத்தோடு தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் “அம்மா” அவர்கள் தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான மின்சாரத்தினை குறைந்த பட்சம் இரவில் எந்த வித மின்வெட்டும் இன்றி வழங்க ஆவண செய்ய வேண்டும். கோவையின் பெரும்பான்மையான இடங்களில் இரவுகளில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை திருப்பி விட்டு, குடியிருப்புப் பகுதிக்கு மின்வெட்டினை அமுல்படுத்துகின்றார்கள் (பணம் பெற்றுக் கொண்டு) என்று காற்று வாக்கில் செய்திகள் கசிகின்றன. அதை உடனடியாக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும்.

குழந்தைகள் அழுகின்றன ! அம்மா கவனிக்கவில்லை என்று !

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, April 16, 2012

சவக்கடை (அனைவரும் படியுங்கள் ப்ளீஸ்)




எனக்காக இன்றைக்கு மட்டும் ஒரு ஒரு தடவை என்று ஆரம்பிக்கப்படும் குடி, அடுத்து மாதமொருமுறை என்று மாறும். அடுத்து வாரம் ஒரு முறை என்றாகும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று மாறி, பின்னர் வீட்டிலேயே குடிக்கலாம் என்று (உபயம் : தமிழ் சினிமாக்கள்) மாறி, பின்னர் தினம் தோறும் ஒரு சுமால் பிறகு ஆஃப் என்று தொடர்ந்து புல் ஆகி விடும். பிறகு குடிக்காமல் இருந்தால் கைகள் நடுங்க ஆரம்பித்து, வேறு வழி இன்றி தினமும் உணவு போல குடி மாறி விடும். நோய்கள் உருவாகும். மருத்துவம் ஆரம்பிக்கும். குடிக்கான சிகிச்சை ஆரம்பிக்கும். 

முடிந்து வீடு வருபவருக்கு, ஒரு சொட்டு குடித்தால் என்ன என்று தோன்றும். வீட்டுக்குத் தெரியாமல் குடிக்க ஆரம்பிப்பார். நடுக்கமெடுத்த கைகள் குடியை நிறுத்தி மீண்டும் குடிக்க ஆரம்பித்த பிறகு தன்னை அறியாமலே உளற ஆரம்பிப்பார்கள். மனைவியை சந்தேகப்பட ஆரம்பிப்பார்கள். உறவினர்களுடன் வம்புக்குச் செல்வார்கள். நண்பர்களுடன் சண்டைக்குப் போவார்கள். வெளியிடங்களில் குடித்து விட்டு விழுந்து கிடப்பார்கள். ஆல்கஹால் உடம்பை முழுவதும் ஆக்ரமித்து இருக்கும் சூழலில் மனைவியை அல்லது நண்பர்களை கடித்து வைப்பார்கள். 

இந்த நிலை தான் ஆல்கஹால், தனக்கு அடிமையானவனை முடித்துக் கட்டக் கூடிய நிலை. அடுத்து திடீரென தற்கொலைக்கு முயல்வார்கள். ஆல்கஹால் இதைத்தான் செய்கிறது. குடிக்கும் மனிதனை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் சமூகத்தில் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளி கொன்று போடும். 

மானம் போய், மரியாதை போய், காசு போய், முடிவில் உயிரும் போய் விடும். குடும்பமும் நடுத்தெருவில் நிற்கும். குடிகாரன் மனைவி, குடிகாரன் மகள், மகன் என்று சமூகத்தில் ஒரு அடையாளமும் இலவசமாய் கிடைக்கும். 

யார் யாரெல்லாம் பீர் குடிக்கின்றார்களோ (வெயிலுக்கு குடிக்கிறேன் பேர்வழி என்று அலப்பறை செய்யும் லூசுகள்) அவர்களுக்கும் இதே நிலைதான். ஆல்கஹாலை எவன் ஒருவன் விரும்புவானோ அவனை அது பேயாய் பிடித்துக் கொள்ளும். எனது நண்பனொருவரின் அண்ணன் குடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆல்கஹாலின் பிடியில் எப்படி விழுந்தார் என்பதைத்தான் மேலே எழுதி இருக்கிறேன். ஆல்கஹால் குடிப்பது என்பது ஃபேஷன் அல்ல அது கொஞ்சம் கொஞ்சமாய் உடலுக்குள் ஆக்ரமித்துக் கொல்லும் விஷம். குடிப்பவர்கள் உடனடியாக நிறுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்.

டாஸ்மாக் என்பது சவமாய் மாற மனிதர்களை ஊக்குவிக்கும் ஒரு சவக்கடை என்பதில் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா?

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

வெயிலில் நில்லுங்கள் வியாதியை துரத்துங்கள்



டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நண்பர்களுக்கு உடனடியாக தெரிவித்து விட வேண்டும் என்ற ஆவலில் இந்தப் பதிவு. 

விட்டமின் டி நம் உடலுக்குத் தேவையான ஒரு சத்து, இந்தச் சத்து கால்சியம் சம்பந்தமான பொருட்களை ஜீரணிக்கவும், அதை வெளியேற்றவும், எலும்புகளுக்கு உறுதியைத் தரவும் உதவுகின்றது. 60 பர்சண்டேஜிலிருந்து 90 பர்செண்டேஜ் இந்தியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் விட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விட்டமின் டியை பால் மற்றும் உணவு எண்ணெயில் சேர்த்தல் நலம் பயக்கும் என்பதாகும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

பால், எண்ணெய் பொருட்கள் மனிதனுக்கு கொழுப்பை உருவாக்கும் என்பதாலும், விட்டமின் டி மாத்திரைகள் அவ்வளவு நல்ல பலனை தராது என்பதாலும் இயற்கையில் கிடைக்கும் விட்டமின் டியைப் பெறுவதே சாலச் சிறந்தது என்கிறார்கள்.

மனித உடலின் இருபது சதவீத பகுதியை வாரத்தில் இரண்டு முறை பதினைந்து நிமிடம் வெயிலில் காட்டினால் நம் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைத்து விடும். சூரிய ஒளியில் நீச்சலடிப்பது, சூரிய ஒளியில் விளையாடுவது போன்றவையும் விட்டமின் டி உடலில் சேர உதவும். இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் " Cardio Vascular Disease, Rickets and Osteoporosis" நோய்கள் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை என்கிற பதிவின் பின்னூட்டத்தில் இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள். இதோ சில விபரங்கள்.

பானி தண்ணீரில் புளிப்புச் சுவைக்காக சாட் மசாலாவுடன், மோனோ சோடியம் குளுடோ மேட் என்கிற கெமிக்கல்ஸ் சேர்த்து அதிகப் புளிப்புத் தன்மையை ஏற்றுகிறார்கள். அத்துடன் ரசாயனச் சாயங்களும் கலக்கப்படுகின்றனவாம். இந்தக் கலவையை இரண்டு நாட்களுக்கும் மேல் ஊற வைத்து, அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றார்கள். அதீத புளிப்புச் சுவை கொண்ட இந்த வகை பானி, அல்சரை உருவாக்கும். அல்சர் இருப்பவர்கள் தொடவே கூடாது. அதுமட்டுமல்ல இப்பானியைச் சாப்பிட்டால் உடனடி வயிற்று வலியுடன், நாள்பட பசியும் அறவே குறைந்து போய் விடும். சாலையோரங்களில் விற்கப்படும் இவ்வகை இன்ஸ்டண்ட் உணவு வகைகள் தயாரிப்பாளர்கள் சாப்பிடும் நபர்களின் ஆரோக்கியத்தை ஒரு கணம் கூட எண்ணிப் பார்ப்பதே இல்லை.

எனது ஆரம்ப காலங்களில் நான் பெரும்பாலும் சற்றே சுத்தமான இடங்களில் இருக்கும் சாலையோரக் கடைகளில் எப்போதாவது சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை மனைவி வெளியூர் சென்றிருந்த சமயம், குழந்தைகளுடன் எனக்கு நன்கு அறிமுகமான நண்பரொருவரின் சாலையோரக்கடையில் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வந்தோம். அதன் பலனாய் மூவருக்கும் வாய்ப்புண் உண்டாகி, தொண்டையில் அழற்சி ஏற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது.

விசாரித்துப் பார்த்தால் இட்லி மாவில் புளிப்புச் சுவைக்காக சோடியம் தண்ணீர் கலப்பதாக அறிந்தேன். ஒரு வாளியில் தண்ணீர் போன்ற ஒன்றினைக் கொண்டு வந்து அளவாக கலந்து இட்லி தோசை மாவுகள் விற்பனையாளர்கள் விற்கின்றார்கள்.அதுமட்டுமல்ல சில ஹோட்டல்களில் விற்கும் மீன் குழம்பில் இதே சோடியம் கலந்த தண்ணீர் கலக்கப்பட்டு வருகின்றனவாம்.

காசு போனாலும் பரவாயில்லை என்று உயர்தரமான ஹோட்டல்களில் தயிர்சாதம், கொஞ்சம் காய்கறிகள் சாப்பிடுவதே சாலச் சிறந்தது என்கிறார் எனது நண்பரொருவர். இன்னொரு நண்பரோ பேசாமல் பழக்கடையை நோக்கிச் சென்று விடலாம் என்றார். ஆனால் பழங்கள் உடலுக்கு நன்மையைத் தருகிறதா என்று கேட்டால் மருத்துவ நண்பரொருவர் சொன்ன சில விபரங்கள் அதிர்ச்சி அளிப்பனவாக இருந்தன. அது என்ன? விரைவில்

ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Sunday, April 8, 2012

பானிபூரி சாப்பிடுவோரே ஜாக்கிரதை



கோவை மசக்காளிபாளையத்திலிருக்கும் ஒரு பானி பூரி ஸ்டாலில் நானும், காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவரும், இயக்குனர் ஒருவரும் ஒரு நாள் பானி பூரி சாப்பிட்டோம். 

ஒரு மணி நேரத்தில் அதிகாரியிடமிருந்து போன் வந்தது. “தங்கம் உங்களுக்கு வயிற்றில் ஏதாவது வலி தெரிகிறதா?” என்றார்.

அவரிடமிருந்து அழைப்பு வருவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னால் தான் வயிற்றைக் கலக்கி ”ஓட்டு” போட்டு விட்டு வந்தேன். 

“அட ஆமாம் சார்! இப்பத்தான் ஓட்டு போட்டேன்” என்றேன்.

”என்னங்க தங்கம், அதான் தேர்தல் முடிஞ்சிடுச்சே, பின்னே என்ன ஓட்டு அது இதுன்னு ரகளை செய்றீங்க” என்றார்.

“அட ஓட்டுன்னா, இரண்டுக்கு போவுறதுங்க” என்றேன்.

ஒரு நிமிடம் ஆயிற்று சிரித்து முடிக்க. பானி பூரியில் பிரச்சினை இருக்கிறது என்று முடிவு கட்டி மசக்காளிபாளையம் ரெகுலர் விசிட்டை ரேஸ்கோர்ஸுக்கு மாற்றினோம். எதைக் கட்டினாலும் கட்டலாம், வாயைக் கட்ட முடியாது அல்லவா?

இன்று குமுதம் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்து அதிர்ந்தேன். பானி தண்ணீரை புளிக்க வைக்க கலக்கப்படும் கெமிக்கல்ஸ் நோயை உண்டாக்கி விடும் என்று எழுதி இருந்தார்கள்.

ஆகவே நண்பர்களே, இனி பானி பூரி ஸ்டாலைப் பார்த்தால் உங்களின் வயிற்றை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ளுங்கள். நா உள்ளுக்குள் மடங்கி விடும்.

காசைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

பத்து மணி நேரம் பவர் கட் ஆகிறது. இரவுகளில் நான்கு மணி நேரம் கூசாமல் பவர் கட் செய்கின்றார்கள். எப்படித்தான் தூங்குவது என்றே புரியவில்லை. தமிழகம் குடிகார மயமாகி வருவது போதாது என்று மிச்சம் சொச்சம் இருப்போரையும் நோயாளியாக மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, March 14, 2012

உண்மை வேண்டுமா மரணத்தைக் கொடு


உண்மை தன்னை நிலை நாட்டிக் கொள்ள மாபெரும் விலையைக் கொடுத்து வரும் பலப்பல நிகழ்வுகளை நாம் பார்த்துக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறோம். பதவிப் பித்துப் பிடித்த கொ(த)லைவர்களால் புதைக்கப்படும் உண்மைகள் வெளிவர பலர் தங்கள் இன்னுயிரை இழக்கின்றார்கள். இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

2010 வரையிலும் 12க்கும் மேற்பட்ட ஆர்டிஐ ஆர்வலர்கள் தகவல் கேட்டதற்காகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு வெட்கக் கேடான விஷயத்தைப் படியுங்கள். சென்னையைச் சேர்ந்த திருமணி என்பவர் ரேஷன் கார்டு தொடர்பாக கேட்டிருந்த ஒரு கேள்விக்கு PIO எம் மணிமேகலை என்பவர் தகவல்  கொடுக்க ஆள் பற்றாக்குறை இருப்பதினாலே, நாள் ஒன்றுக்கு 1950 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தி வந்தால் அவர்களுக்கு எப்போது தகவல் கிடைக்கிறதோ அப்போது கொடுப்பதாகவும், அதுவரைக்கும் ஆகும் செலவை திருமணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். என்ன ஒரு அயோக்கியத்தனமான பதில் இது என்று பாருங்கள். தகவல் கேட்டால் கொல்கின்றார்கள். இல்லையென்றால் இப்படி ஒரு அக்கிரமத்தைச் செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். செய் நன்றி அற்ற மானிடர்கள் அரசு அலுவலர்களாய் இருக்கின்றார்கள். தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பது பெயருக்குத்தான் இருக்கிறது என்கிற மாயையை தமிழக அரசு அலுவலர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதாவது பரவாயில்லை, தகவல் கேட்டதற்காக உயிரையே வாங்கிக் கொள்கின்றனர் சிலர். இப்படியும் உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

நேற்று ஜெயா டிவியில் வெளியான இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய வீடியோவைப் பார்த்து, இரவு முழுவதும் தூக்கம் வராமல் ஆற்றாமையால் புழுங்கிக் கொண்டிருந்தேன். மனிதர்களில் இத்தனை அரக்கத்தனம் உடையவர்களும் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்ற போது எத்தனை மதங்களும், கடவுள்களும் வந்தாலும் மனிதர்கள் திருந்தவே போவதில்லை என்ற உண்மை சுட்டது. எதற்கும் ஒரு விலை உண்டு. சுவற்றில் வீசப்படும் பந்து திரும்பவும் எறிந்தவர் மீது விழும் என்பது உண்மையானால் இலங்கையில் ஒரு சிங்களவர் கூட உயிரோடு இருக்க அந்த உண்மை அனுமதிக்காது. அது நடக்கத்தான் போகின்றது. பாராட்டி, சீராட்டி, பொத்திப் பொத்தி வளர்த்த பெண்களை நிர்வாணப்படுத்தி, சேதப்படுத்தி, கற்பழித்து, கை கால்களை வெட்டி, உதைத்து, இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடூரங்களின் உச்சகட்டத்திற்குச் சென்ற இலங்கை சிங்கள ராணுவமும், அதை நடத்திக் காட்டிய கொலைஞர்களுக்கும் “உண்மை” என்ன விலை கொடுத்தும் தண்டனை பெற்றுக் கொடுக்கத்தான் போகின்றது. உலகின் சக்கரவர்த்தி என்று கொக்கரித்த ஹிட்லர் போன இடம் புல் முளைத்துப் போய் விட்டது. இவர்களெல்லாம் இயற்கைக்கு முன்னால் தூசியை விட கேவலமான பிறவிகள். 

இன்று ராஜ்ய சபாவைவிலும், நாடாளுமன்றத்திலும் கூக்குரலிட்டு சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும் எம்பிக்கள் கொத்துக் கொத்தாய் இலங்கையில் இலங்கை ராணுவம் மக்களைக் கொன்றுகொண்டிருக்கும்போது மொத்தமாய் பதவியைத் தூக்கி எறிந்து இந்திய அரசை ஸ்தம்பிக்கச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து எல்லாம் முடிந்த பிறகு இன்றைக்கு கூச்சல் இடுவது என்பது அரசியல் சுயநலம் என்று எவருக்கும் தெரியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பதவி ஐந்து வருடம். ஆனால் உண்மையின் பதவியோ காலம் முடிவுக்கும் இருக்கும். அதுநேரம் பார்த்து அடிக்கும். அரசியல் என்றால் சுய நலத்திலும் கீழானது என்பதை நம் தமிழக அரசியல்வாதிகள் நிரூபித்துக் கொண்டே வருகின்றார்கள். உலகம் எத்தனையோ அரசியல்வாதிகளைக் கண்டு வருகிறது. அரசியல்வாதிகளின் வாழ்க்கையையும் பார்த்து வருகிறது. அயோக்கியத்தனமும், அக்கிரமும் செய்து வந்த அரசியல்வாதிகளின் கதியையும் பார்த்துக் கொண்டுதான் வருகின்றது. பாவத்தின் சம்பளம் மரணம். அது சுய நலமே தன் நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வகை அரசியல்வாதிகளுக்கு எளிதானதாய் அமைந்து விடாது என்பது மட்டுமே உண்மை. 

கடவுள் நின்று கொல்வதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் அப்போதே தண்டனையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கடவுள். அதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருகின்றோம். அவனவன் வினையின் பலனை விதைத்தவன் தான் அறுக்க வேண்டும். அறுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

இந்தியாவில் சர்க்கரை மாஃபியா கும்பலுக்கு துணை போகின்ற மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு, பல சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் இவருக்கு,  சர்க்கரை குறைவால் மயக்கம் ஏற்பட்டது என்ற செய்தியை இவ்விடத்தில் சொல்லி ஆக வேண்டி இருக்கிறது. சான்று இல்லாத எந்தச் செய்தியும் உண்மையாக இருக்க முடியாது என்று அல்லவா அறிவியல் சொல்கின்றது.

-ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்


Tuesday, March 13, 2012

இது பேச்சுலர்ஸ் மேட்டர்


தினத்தந்தியில் ஒரு பத்தியைப் படித்தேன். பெண் பார்க்கச் சென்ற இடத்தில் மாப்பிள்ளையின் அக்கா, அப்பா, அம்மா மூவரும் சர்க்கரை இல்லாமல் காஃபி கேட்டதற்காக தன் பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்றுச் சொல்லி இருக்கிறார் ஒரு தகப்பன். இவ்வளவுக்கும் என் பையனுக்கு சர்க்கரை நோய் இல்லை என்றுச் சொல்லியும் பெண் வீட்டார் மறுத்து விட்டாராம். எய்ட்ஸ் செக்கிங் ரிப்போர்ட் கேட்டுத்தான் திருமணம் செய்வோம் என்கிறார்கள் இக்காலப் பெண்கள். இனி ஃபுல் பாடி செக்கப் ரிப்போர்ட் அதுவும் நாங்கள் சொல்லும் மருத்துவமனையில் செய்து தர வேண்டும் என்று கண்டிஷன் விரைவில் போடுவார்கள். 

ஆண்கள் ஆரோக்கியமாய் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தெருக்கள் தோறும் “டாஸ்மாக்” வைத்துக் கொண்டு, சினிமா தோறும் குடும்பத்தோடு குடிப்பதை நியாப்படுத்தும் காட்சிகளை வைத்துக் கொண்டும் சமுதாயத்தை நோயுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வரும் காலங்களில் ஆரோக்கியமானவர்களைப் பார்ப்பதே அரிதாகி விடும் போலத் தெரிகின்றது. எவருக்கும் தன் ஆரோக்கியத்தின் மீதான அக்கரை எள்ளளவும் இல்லை. அதே போல உணவுப் பொருட்களை விற்போரிடமும் வாடிக்கையாளர் நலன்களைப் பற்றிய அக்கரை சுத்தமாக இல்லை. அரசு சுகாதார அலுவலர்களுக்கு கடமை உணர்ச்சியும் துளிக்கூட இல்லை என்றே சொல்லலாம்.

ஆரோக்கியமற்றவர்களுக்கு இனி பெரும்பான்மை சமுதாயத்தில் பெண் கூட கொடுக்கமாட்டார்கள். பல பேர் “முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்” போல சயிண்டிஸ்ட்டாக அலைய வேண்டியதுதான் பாக்கி.

திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பது முக்கியமான ஒன்றாகும். 

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, March 9, 2012

மனச்சாட்சி எங்கே போனது? கிட்னி விற்கும் கிராமம்

தர்மம், நீதி, நியாயம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நிரூபிக்கும் அனேக சம்பவங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டு தான் வருகின்றன. ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியைக் கொள்ளை அடிக்கிறது ஒரு கட்சி. பட்டினி தாங்காமல் வெறும் 30,000 ஆயிரத்திற்கு கிட்னியை விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு இந்தியக் கிராமம். 

பசி தாங்காமல், உழைக்கவும் வழி இல்லாமல் தன் கிட்னியை விற்று விட்டு, கிடைத்த பணம் தீர்ந்த உடன் நோயில் கிடந்து 60 வயதில் போக வேண்டியவர்கள் ஆபரேசன் செய்ததால் இரண்டு வருடங்களில் இறந்து போகும் அவலம் மேற்கு வங்காளத்தில் பிந்தோல் என்ற கிராமத்தில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

தனக்குப் புற்று நோய் என்றவுடன் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவி சோனியா இருக்கும் இந்தியாவில் தான் இந்த மேற்படி அவலமும் நடக்கிறது. மக்கள் தொண்டாற்ற வந்தவர்களுக்கு உச்சபட்ச கவனிப்பு, ஆனால் மக்களுக்கோ வாழவும் வழியில்லாமல், விற்க பொருள் இல்லாமல் தன் உடல் உறுப்பையே விற்க வேண்டிய நிலமை. இதைத்தான் ஜன நாயகம் என்றுச் சொல்லி வருகின்றார்கள்.

எத்தனை திட்டங்கள் இருக்கின்றன, எத்தனை சட்டங்கள் இருக்கின்றன, எத்தனை நீதிமன்றங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? பட்டினியால் கிட்னியை விற்றுப் பின் அற்பாயுசில் செத்துப் போகின்றார்களே இந்தியர்கள். இதற்கெல்லாம் யார் காரணம்? ஜன நாயகம் அல்லவா காரணம்.

காசை வைத்துக் கொண்டு தின்று கொழுத்து தன் உடம்பைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொண்டு, பசியால் வாடுபவனின் கிட்னியையையும் விலைக்கு வாங்கி உடம்பில் பொறுத்திக் கொண்டு, அவனை சாகவும் அடிக்கும் பணக்கார நாய்களையும், அதற்கு உறுதுணையாய் இருக்கும் மாஃபியா ஹாஸ்பிட்டல்களையும் யார் என்ன செய்ய முடியும்?

ஜன நாயக ஆட்சியில் ஏழைகள் சொல் அம்பலம் ஏறுமா? இல்லை ஏழைகள் வாழ இந்தியாவில் வழிதான் இருக்கின்றதா?

பிரதமர் மன்மோகன் சிங் வியாபாரிகளுக்கு என்று ஆட்சி நடத்துகிறார். மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, வியாபாரிகள் நலமாய் வாழ வேண்டுமென்று பருத்திப் பஞ்சை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க மீண்டும் அமைச்சரவை கூட்ட நடவடிக்கை எடுக்கிறார். விவசாயி வாயில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டு, வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்க, அவர்களுக்கு வேண்டுவன செய்கிறார். இதைப் பற்றி அவர் எங்கே பேசப் போகின்றார். 

பக்கத்து நாட்டில் தமிழர்களைக் கொன்று குவித்த போது, தமிழகமே பொங்கிய போது, வாய் மூடி மவுனியாய் நின்று கொண்டிருந்த மனிதர் குல மாணிக்கம் அல்லவா நம் பாரதப் பிரதமர். 

இதோ அந்த கிட்னி வில்லேஜ் பற்றிய செய்தி ஆங்கிலத்தில் இருக்கிறது. படித்து விட்டு, நாமெல்லாம் மனிதர்கள் என்ற பெயரில் மிருகங்கள் வாழும்  உலகில் வாழ்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

People sell kidneys to beat starvation in West Bengal village
BINDOL (NORTH DIANJPUR): In these arid, impoverished parts, Bindol has another name - kidneyvillage. The wasted, skeletal men and women you would see slumped under the shade of trees are awaiting death with feeble breaths. This is the kidney sale capital of the state, perhaps of the country. Every second home here has someone who has sold his kidney to escape starvation. Many die within years. 

Now, the dying men have started forcing their wives to give up a kidney. 

Bindol's infamy has spread by word of mouth. Dusty tracks trail of the eastern highway to Bangladesh to take you to this village, barely 35km from the district headquarters of Raiganj. The greenery of Dinajpur changes into an arid landscape. Here and there in the dry, sandy waste there are patches of green maize plants. No trace of paddy or wheat. The villagers, mostly tribals, lie dozing off the effects of homemade liquor. 

But the name of Razzak perks them up. They lead you to his mansion in the Bajbindol area stands in sharp contrast to the hapless backdrop. Razzak is the 'dalal' (agent) you meet if you are desperate for a kidney. The price: Rs 3-4 lakh. Razzak has no problem finding donors. The villagers know they may be signing their death warrant if they accept Razzak's offer, but the payout - Rs 60,000 to Rs 1 lakh - is impossible to ignore. 

Lakshmiram Hansda sold his kidney - and his life - for Rs 80,000. On Wednesday, TOI saw him lying under a tree near his hut, gaunt, emaciated and hapless. He says he is 35 but looks 60. With no land of his own and a wife and daughter to feed, Lakshmiram had gone to Mumbai to work as labourer in 2000, like hundreds of local youths. But it brought him little money. When someone offered Rs 80,000 for a kidney, it seemed like a good deal. 

The money kept the family fed for only a few months. Soon after the surgery, Lakshmiram lost his strength to work. His starving wife and daughter deserted him. He now lives on an NGO's mercy, and is counting his days.

Not far from where Hansda lies, a group sits having drinks in a hut. Munshi Tudu, Jogen Hansda, Chhoto Murmu and Lapong Soren - all in thirties - are happy as only drunken men can be. They all survive on one kidney. Two years ago, Lapong had been to Kolkata where he had his kidney removed for Rs 1 lakh. What did he do with the money? "Bought a motorcycle, gave a part to my wife and... don't know what I did with the rest," he was not interested in recalling any more. They drink to forget that they don't have a future. 

The scourge has spread to nearby villages like Jalipara and Balia. Thirty-two-year-old Dulal Jali of Jalipara narrates his story, "It's next to impossible for a fisherman to make ends meet. So I accepted the offer of Kuddus (another agent) of Rs 1 lakh for a kidney. It was about four years ago. I got operated in Kolkata." Now with weakness a part of life, Dulal suffers along with his wife and daughter. "I cannot stay under the sun for long, I can hardly catch fish." 

There are those who complain that they were paid too little. Jatin Jali, who went with Razzak in 1998, still rues that he got only Rs 30,000. 

In the last couple of years, the tragedy has taken an ominous turn with the men forcing their wives to sell their kidneys. Astomi Malakar, who was married to Dilip Burman four years back when still in her teens, says: "My husband took me to Kolkata with another person two years ago. I already had a child by then. I was admitted to a hospital. I don't know what happened there but I have a surgery scar in my back." 

The Sripur Mahila O Khadi Unnayan Samity, an NGO, has been working with the victims but it's tough to create awareness when the villagers are willing to take the risk. "Every year these rural folk are forced to migrate to cities to feed their family. They often find themselves in the clutches of the beasts that run the racket." There have been cases when an unwilling victim was doped and operated upon and not paid a paisa. 

Bhattacharya said that they have repeatedly complained to police about agents like Razzak and Kuddus. "Razzak was arrested two years back but released in a few months. None dared to speak against him," said a local. 

The terrifying truth is that the hapless villagers see the Razzaks as messiahs. Thus, Anita Jali, a homemaker in Jalipara, finds nothing wrong in haggling for a better price. "We are three of us - me, my husband and father-in-law. They offered us Rs 6 lakh, but we demanded at least Rs 8 lakh," she said.