குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிலம். Show all posts
Showing posts with label நிலம். Show all posts

Tuesday, July 23, 2019

நிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா?

எனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம். மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள்  விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.


அங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு?’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம். 

லெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.

நான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது. 

அவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.

இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.

முன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள். 

எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 

இதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

”ஏன் இப்படிப் புலம்புகின்றீர்கள்? வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது? பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது? எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்சினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.

“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்

ஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.

Tuesday, May 28, 2019

நிலம் (53) - மலிவு விலை வீடுகள் என்றால் என்ன?

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிகழ்வுகள் இந்த ஆண்டு தமிழகத்திற்கு நடந்திருக்கும். குழப்பமான சூழல் தமிழகத்தில் நிலவியதால் உருவானது இந்த நிலை. நண்பர்களே, இந்தியா பிஜேபிக்காக மாற்றப்பட்டு விட்டது. இனி அந்த அமைப்பை உடைக்க முடியாது. உடைக்க பெரும் விலை கொடுக்க வேண்டும். பெரும் புத்திசாலிகள் பின்னால் இருக்கின்றார்கள். அந்த புத்திசாலிகள் இந்தியாவை பகுதி பகுதியாகப் பிரித்து, தடைகள் ஒவ்வொன்றையும் நீக்குகின்றார்கள். தமிழகத்தில் அதிமுகவில் ஆரம்பித்தது. அடுத்து திமுக என நீளும் அவர்களின் திட்டங்கள். இது தான் நடக்கப் போகிறது என நாமெல்லாம் நம்பும்படி ஒரு செயல் நடக்கும். ஆனால் எதற்கும் தொடர்பில்லாமல் இன்னொரு செயலை சத்தமில்லாமல் செய்து விடுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவில் இனி எதிர்காலத்தில் அரசியல் மக்களின் ஆசைப்படி நடக்காது. மக்கள் ஓட்டுப்போடுவார்கள். அது உரியவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்றெல்லாம் கேள்விகள் கேட்க முடியாது. இந்திய மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் அதிகாரமிக்க அமைப்புகளின் டிசைன் மாற்றப்பட்டு விட்டது. அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் கட்டுப்படுத்தபடும். மீறுபவர்கள் பதவியில் இருக்க முடியாது. ஆகவே இந்தியா அமெரிக்கா போல மாற்றப்பட்டு விட்டது என்பதை அறிக. அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் என்று நம்புகிறார்கள் அல்லவா அதே போல இந்தியாவில் மோடி பிரதமர் என்று நாம் நம்ப வேண்டும்.

நம்புவதில் நமக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது. ஆகவே நம்பி விடுவோம்.

நல்லது. இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏழு ஆண்டுகளில் நடக்கும் ஆட்சியின் பலனை மக்கள் அனுபவிப்பார்கள். ஊழல் பேர்வழிகள் மொத்தமாக துடைத்து வீசப்படுவார்கள். மாநிலம் சார்ந்த சிறு கட்சிகள் அழிக்கப்படும். அல்லது ஓரங்கட்டப்பட்டு முகவரி இன்றி ஆக்கப்படுவார்கள். துரோகிகளின் கணக்கு நேராக்கப்படும். நல்லவைகளை எதிர்பாருங்கள். மக்கள் நலன் சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்வுகள் இனி மலரும் எந்த தடையுமின்றி. இன்னொரு மதம், மற்றொரு மதத்தை விழுங்க முடியாது. இந்தியா இந்து ராஜ்ஜியம் என்பதை எவரும் மறந்து விடாத சூழல் உருவாகும்.

மக்கள் மகிழ்வுடன் இருந்தால் அதுவே போதுமானது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து, பசி இல்லாத இந்தியன் என்றொரு நிகழ்வு நடந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடியவரை இந்த அதிபுத்திசாலிகளால் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால தமிழகம் இந்தியாவின் மணி மகுடத்தில் சுடராய் திகழும். அதிமுக, திமுக இல்லாத அற்புதமான ஆட்சி நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கையே வாழ்க்கை. நல்லவற்றை நினைத்துப் பார்ப்பதில் என்ன சங்கடம் வரும்? நல்லது நடக்கும்.

சரி போகட்டும் விடுங்கள். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

இனி வரும் காலங்கள் ஒவ்வொருக்கும் வீடு குறைந்த விலையில் கிடைக்கும் சூழல் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் நன்கு வளர்ச்சி பெறும் பெருத்த லாபம் இன்றி. அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் உத்தரவாதத்தை ஜி.எஸ்.டி கவுன்சில் கூடிய போது உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வரி விகிதங்கள் 01/04/2019லிருந்து அமுலுக்கு வரும் என அறிவித்திருக்கின்றார்கள்.

அது சரி, மலிவு விலை வீடு என்றால் என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது.

மாநகராட்சி நகரங்களில் 968 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும், பெரும் நகரங்களில் 645 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும் அல்லது 45 லட்சம் மதிப்பு கொண்ட வீடுகள் மலிவு விலை வீடுகள் என்று கருதப்படும். இந்த வீடுகளுக்கு முன்பு 8% சதவீதம் வரி இருந்தது. இனி அது 1% சதவீதமாக இருக்கும்.

இதர வீடுகளுக்கு 12% சதவீத வரியிலிருந்து குறைந்து 8% சதவீதமாக இருக்கும் என கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நண்பர்களே, இனி உங்களின் கனவாகிய வீடு நனவாக சாத்தியங்கள் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பயன்படுத்த முயற்சியுங்கள்.

மலிவு விலையில் இரண்டு படுக்கை அறை கொண்ட இயற்கை சார்ந்த, காற்றாடி இல்லாத, ஏசி இல்லாத, பகலில் விளக்குப் போடாத வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கான வடிவமைப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

குளிர் பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மூனார், ஆலப்புழா ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் எனது அடுத்த புராஜெக்ட். மிகக் குறைந்த விலை, வலிமையான இயற்கை வீடுகள் என அதன் அமைப்புகள் இருக்கும்படி இருக்கும். உதாரணமாக ஊட்டியில் 25 லட்சத்தில் ஓய்வு இல்லம். அந்த வீட்டின் மூலம் மாதம் வருமானம் வரக்கூடியவாறு இருக்க வேண்டும் என்பது எனது ஆவல். இந்தச் சொத்துக்களின் லீகல் அனைத்தும் முன்பே சரி பார்க்கப்பட்டுதான் உங்களிடம் வரும். 

விரும்புவர்கள் தங்களின் தேவையை எனது இமெயிலில் தெரிவித்து விடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் இடத்தை பார்க்கும்படியும், வீடு வாங்கினால் அந்த வீட்டினைப் பார்க்கும்படி வசதிகளும் செய்து தரப்படும்.

மிகக் குறைந்த சரியான முதலீடு. எதிர்காலத்தில் நல்ல வருமானம், அமைதியான வாழ்க்கை என்பது அனைவரின் ஆவல். அந்த ஆவலை அடியேன் மூலம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் அருள் வழங்கட்டும்.

வாழ்க வளமுடன்....!

Wednesday, May 1, 2019

நிலம் (52) - பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையம் செல்லுமா?

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலாளிதான். அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். தொழிலாளி இன்றி பெரும்பான்மை உலகியல் இயக்கம் நடக்காது. அந்த வகையில் மாந்தர் வாழ்வியல் சக்கரங்களை தொழிலாளிகள் சுழல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

சமீபகாலமாக சுப்ரீம் கோர்ட் பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக கிரையமோ அல்லது வேறு ஏதாவது ஆவணமோ எழுதப்பட்டு அதன் மூலம் சொத்துக்களின் உரிமை மாற்றம் செய்வது செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்ததாக ஒரு செய்தி வாட்ஸ்சப் மூலம் பலருக்கும் பரிமாறிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த தீர்ப்பு ஒரு வழக்கிற்காக வழங்கப்பட்டது. அந்த வழக்கில் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை செய்யப்பட்டது செல்லாது என்பது தீர்ப்பு என நினைக்கிறேன். அந்த தீர்ப்பினைத் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் ஏதாவது ஒரு பதிவில் இணைத்து விடுகிறேன். ஆனால் முழுமையான விசயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பதிவு எழுதி இருக்கிறேன்.


(இதுதான் எனக்கும் வாட்சப்பில் வந்த செய்தி)

இது பற்றிய உண்மைதான் என்ன? என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். 

சொத்துரிமை மாற்றம் மற்றும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி சட்டம் 1882ன் படி பகுதி 5 மற்றும் 54ல், ஜிபிஏ (GPA) மூலம் ஒரு அசையாச் சொத்தின் உரிமையை வேறொருவருக்கு அட்டர்னி மாற்றலாம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆகையால் அந்த வகையான உரிமை மாற்றம் செல்லும் ஒன்றுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.

இதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. ஆனால் இந்தப் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையமோ அல்லது லீசோ கொடுக்கப்படும் போது பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறும் ஒரு சில அம்சங்கள் உள்ளன. அவைகளை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அதைக் கவனிக்காது விட்டால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் உரிமை மாற்றம் ஏற்பட்டிருப்பது செல்லாது போய் விடும் ஆபத்து உள்ளது. அது என்ன அம்சம் என்பதை எழுத இயலாது. உருவாக்கப்படும் ஆவணங்களைப் பொறுத்து வேறுபடும் என்பதால் பொதுவாக குறிப்பிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட் அரசாங்கத்துக்கு புதிய சட்டம் இயற்றுங்கள் எனவும், பவர் ஆஃப் அட்டர்னி பற்றிய தெளிவான சட்டம் அவசியம் என்பதற்கான அவசியத்தையும் குறிப்பிட்டது. ஒரு சில இணைய தளங்கள் தலைப்பினை தவறாக குறிப்பிட்டு விட்டன. அதனால் பலரும் கிலி பிடித்தலைந்தார்கள் என்பது உண்மை. ஆகவே அது பற்றிய கவலைகளை விட்டு விடவும். ஆனால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது வெகு கவனமாக இருத்தல் அவசியம். அதற்கு தகுந்த அட்வைஸ்சர்களை அணுக வேண்டியது அவரவர் கடமை.

சுப்ரீம் கோர்ட் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பால் மட்டுமே தீர்ப்பு வழங்கும் அமைப்பு. அதற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. ஒரு சில விஷயங்களுக்கு அது சட்டத்துக்கு உட்பட்டு சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம். சட்டம் என்பது பல வித உள் விஷயங்கள் உடையவை. வெகு நுணுக்கமானவை. இது பற்றிய ஒரு பதிவினை முன்பே எழுதி இருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் விடுபட்டது வெகு நுணுக்கமான விஷயம் ஆகும். இதை எழுதி இருக்கிறேன். தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எல்லாம் வல்ல கில்லாடிகளுக்கு சட்டத்தினை உடைக்கும் வழி முறைகள் தெரியும். உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் கீழே விகடனில் வந்துள்ள ஒரு செய்தியை அளிக்கிறேன். சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத்தான் சட்டத்தின் ஓட்டைகள் என்கிறார்கள். ஓட்டை என்றால் ஏதோ பானை, ஓட்டை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

நெடுஞ்சாலைத் துறையில் அடேங்கப்பா ஊழல்! - எடப்பாடி பழனிசாமி மீது ‘பகீர்’ புகார் - ஜூனியர் விகடன் - 01.05.2019ல் ( நன்றி ஜூனியர் விகடன்) 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ‘யாரை முதல்வராக்குவது’ என்று கூவத்தூரில் கூடி விவாதித்தபோது, எல்லா அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் ‘சமாளிக்கும்’ அளவுக்கு சமத்தர் என்றுதான் எடப்பாடியைத் தேர்வு செய்தது சசிகலா அண்ட் கோ. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எடப்பாடி அந்தளவுக்கு செல்வத்தையும், செல்வாக்கையும் வைத்திருந்ததுதான் காரணம்!

முன்பு எல்லாம் அரசு ஒப்பந்தப் பணிகள் என்றால், 10 சதவிகிதம், 15 சதவிகிதம் என்று அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் வெட்ட வேண்டியிருக்கும். அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, இந்த கமிஷன் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. உடனே, பணிகள் நியாயமாக நடக்கின்றன என்று ஆச்சர்யப்பட வேண்டாம். பழைய ஒப்பந்ததாரர்களுக்கு பெரும்பாலும் பணிகள் தரப்படுவதே இல்லை. பெரும்பாலும் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களே ஒப்பந்தங்களை ‘பறிமுதல்’ செய்துவிடுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டும் இதுதான்.

ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அசராமல் இப்போது, 652 கோடி ரூபாய் மதிப்புகொண்ட ஒரு சாலை ஒப்பந்தத்தில் பிரமாண்டமான ஊழல் அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘பழனி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டச் சாலைகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கமான மதுரை நிறுவனம் ஒன்றுக்கு, விதிமுறைகளை வளைத்துக் கொடுத்துள்ளனர். இதில் முதல்வரின் அரசியல் உதவியாளரான மணியானவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது’ என்பதே அந்த குற்றச்சாட்டு.

பெயர் குறிப்பிட விரும்பாத சாலை ஒப்பந்ததாரர்கள் சிலர், “சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்த அழைப்பு மார்ச் 5-ம் தேதி விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விவரங்களை ஆன்லைனில் மார்ச் 22-ம் தேதிதான் பதிவேற்றம் செய்துள்ளனர். முன்அனுபவம் குறித்த தகவல்கள் ஏப்ரல் 1-ம் தேதிதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க மே 2-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயித்துள்ளனர். முன் அனுபவம் உட்பட முழுமையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 45 நாள்கள் அவகாசத்துக்கு பின்னரே ஒப்பந்தத்தை திறக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் ஏப்ரல் 1ம் தேதி கணக்குப்படி முதல் 30 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதிமீறலாகும்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கணக்கிட்டு முன்கூட்டியே ஒப்பந்த அழைப்பை விடுத்தவர்கள், நடத்தை விதிமுறைகள் முழுமையாக விலக்கப்படுவதற்கு முன்னதாகவே, இறுதி நாள் கெடுவையும் குறித்துள்ளனர். ஏன் இந்த அவசரம்? பெரும்பாலான சாலை ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் தேர்தல் முனைப்பில் இருக்கும் போது, சந்தடியில்லாமல் வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. இதில் ஆர்.ஆர். தவிர்த்து மற்ற இரண்டும் டம்மி நிறுவனங்கள். விதிமுறைகளைத் தளர்த்தி, முதல்வருக்கு நெருக்கமான மதுரை ஆர்.ஆர். இன்ஃப்ரா கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றவர்களிடம், “எல்லா ஒப்பந்தங்களும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படுவதாகவும், இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறாரே?” என்றோம்.

“கிடையாது. கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களில், வெறும் 30 கோடிக்குதான் ஆன்லைன் மூலமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி எல்லாம், டெண்டர் பெட்டியில்தான் போடப்பட்டன. சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்தம்கூட ஆன்லைனில் கோரப்படவில்லை. டெண்டர் பெட்டியில் போட நாங்கள் செல்லும்போது, குண்டர்களாலும் அதிகாரிகளாலும் தடுக்கப்படுகிறோம். (இது ஒரு ஓட்டை)

மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்த அழைப்புகளில், இயந்திரங்கள் உரிமைகளுக்கான சான்றாவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சாலைப் பணியை மேற்கொள்ள இருபது ரோடு ரோலர்கள் இருப்பதாகக் கணக்கு காண்பித்தால் போதுமானது. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத் துறையின், சாலை ஒப்பந்தங்களில் இயந்திரங்கள் இயங்கு நிலையில் இருப்பதற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்தான் தரவேண்டும். அவர் யாருக்கும் தரமாட்டார். அமைச்சர் கைகாட்டும் நிறுவனத்துக்கு மட்டுமே தரச்சான்றிதழ் அளிக்கப்படும். மற்ற நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் செல்லும் அவலம் எல்லாம் இங்கு அரங்கேறுகிறது. (இது இன்னொரு ஓட்டை)

ஒப்பந்தம் கோரும் நிறுவனத்தின் நிகர மதிப்பு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், பழனி கோட்ட சாலைகளைப் பராமரிக்க விடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில், இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. 652 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, குறைந்தது 15 கோடியாவது கட்டியிருக்க வேண்டும். ஒப்பந்தம் எடுக்க விரும்பும் ஒரு நிறுவனம், ஒப்பந்தத்தில் கோரியுள்ள பணிகளைப் போன்று பல பணிகளை முன் அனுபவமாக முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்த வகையில் மட்டும் சராசரி ஆண்டு வரவு - செலவுக் கணக்கு, ஒப்பந்த தொகையில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால், பழனி கோட்ட ஒப்பந்தத்துக்கு 260.87 கோடி ரூபாய் வரவு - செலவுகொண்ட பணியை செய்துமுடித்த அனுபவத்தைக் கொண்ட நிறுவனம்தான் ஒப்பந்தம் எடுக்க முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆண்டு வரவு செலவு 227.12 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, முன்அனுபவ விதி 25 சதவிகிதமாக தளர்த்தப்பட்டு, 163.05 கோடிக்கு வரவு செலவு இருந்தாலே போதுமானது எனத் தகுதி குறைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.(இது சட்டமீறல், இதை கோர்ட் மூலம் நிரூபித்து டெண்டரையும் டெண்டர் கொடுத்தவரையும் டரியலுக்கு உட்படுத்தலாம்)

இதுபோன்ற பெரிய பணிகளைத் தவிர்த்து, சிறிய ஒப்பந்தங்களுக்கும் 17 சதவிகிதம் கமிஷன் தர வேண்டியிருப்பதாகவும் கூறும் ஒப்பந்ததாரர்கள், ‘‘எந்த ஒப்பந்தப்பணியை எடுத்தாலும், ஆட்சி மேலிடத்துக்கு மொத்த ஒப்பந்தத் தொகையில் 17 சதவிகிதம் கமிஷனாகக் கொடுக்கவேண்டும். அதிகாரிகளுக்கு ஏழு சதவிகிதம், உள்ளூர் அரசியல் பிரமுகர் மற்றும் போலீஸுக்கு இரண்டு சதவிகிதம், ஜி.எஸ்.டி ஐந்து சதவிகிதம் என 31 சதவிகிதத் தொகை இப்படியே போய்விடும். மீதமிருக்கும் 69 சதவிகிதத்தில்தான் பணி செய்யவேண்டும். அதிலும் லாபம் போக, 50 சதவிகிதத் தொகையில்தான் பணியே நடக்கிறது. இதில் எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்? இந்த கமிஷனுக்காகவே 100 கோடி ரூபாய் பெறுமான வேலைக்கு, 200 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்படுகிறது. விதிமுறைகளுக்கேற்ப நிறுவனங்களைத் தேர்வு செய்யாமல் நிறுவனங்களுக்கேற்ப விதிமுறைகளைத் தளர்த்துவதுதான் இங்கு நடக்கிறது’’ என்றனர். (இந்த கமிஷன் பிரச்சினையை எளிதாக சரிசெய்யலாம். ஆனால் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அரசியல் செய்ய முடியாது. அரசும் இயங்காது. ஊழல் என்பது வலிக்காமல் செல்லமாக கிள்ளுவது போல இருக்க வேண்டும். ஆனால் இப்போது ஊழல் என்பது பெரும் பள்ளமாக தோண்டி பலருக்கும் தெரிய செய்யப்படுகிறது. ஊழல் இன்றி ஒரு அரசு இயங்க முடியுமா? என்றால் நான் அடித்துச் சொல்வேன் இயங்கவே இயங்க முடியாது. ஊழல் பற்றிய டெஃபனிஷன்கள் பல உண்டு. வாரிசுகளுக்கு பணி வழங்குவது கூட என்னைப் பொறுத்தவரை ஊழல்தான். யாரோ ஒருவரின் தகுதி அவ்விடத்தில் வாரிசு என்கிற முறையில் மறுக்கப்பட்டு விடுகிறது என்பதுதான் உண்மை)

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், மதுரை பி.ஆர்.பி கிரானைட்ஸ் பழனிசாமியின் உறவுக்காரரான ராமு என்பவருக்கு சொந்தமானது. குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “எல்லா டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்படுகின்றன. யார் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒப்பந்தம் அளிக்கமுடியும். தரமில்லாத இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தகுதியுள்ளதா என்பதைக் கண்காணிக்கவுமே தரச்சான்றிதழ் கோரப்படுகிறது. யாருக்காகவும் விதியைத் தளர்த்தவில்லை. இதில் முறைகேடு நடக்கவாய்ப்பில்லை என நீதிமன்றமும் கூறியுள்ளது’’ என்றனர். (இது சட்டம், அதன் ஓட்டைகளை முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன்) சம்பந்தப்பட்ட ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவன தரப்பும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.  

ஊழலுக்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் தமிழக நெடுஞ்சாலைத்துறையில், தரச்சான்றிதழ் கோருவது தொடர்பாக மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம், “செருப்புக்கேற்ப காலை வெட்டுகிற கதையாக, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, விதிகளைத் தளர்த்துகின்றனர். முன்பெல்லாம், சாலை புதுப்பிப்புப் பணி என்றாலும், புதிய சாலை போட வேண்டும் என்றாலும் அந்தந்த கோட்டப் பொறியாளர் மதிப்பீடு செய்து, மாநிலத் தலைமைக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டு அந்தக் கோட்டப் பொறியாளரின் கண்காணிப்பில் பணிகள் நடக்கும். பணிக்கான தொகையும் குறைவாக இருக்கும். இப்போது, 38 கோட்டங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையைத்தான் அரசு செய்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது” என்றார்.

ஊழல் நடக்கிறதென்பது ஊர் உலகத்துக்கே தெரிகிறது. யாரால், எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்றுதான் தெரியவில்லை!

- ந.பொன்குமரகுருபரன்

குறிப்பு: சிவப்பு வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் இருப்பவை எனது குறிப்புகள். 

Friday, April 12, 2019

நிலம் (51) - சப்டிவிஷன் சர்வே எண்களில் ஏமாற்றுகிறார்கள்

பூமி - மனிதர்களின் அத்தனைக்குமான உன்னதம். காற்று, உணவு, உடை இப்படி எல்லாவற்றிற்கும் காரணமான இயற்கைக் கடவுள். அது தன்னைத் தானே ஒரு முறை குலுக்கிச் சிலிர்த்தால் தற்போதைய இந்தியாவின் உன்னத உத்தம பிரதமரும், அம்பானியும், அதானியும் காணாமல் போவர். சாதிகள் போகும், சண்டைகள் போகும், அதிகார மமதை போகும், எல்லாமும் போயே போய் விடும். தான் மட்டுமே உண்மையானவன் என்பது போல, ஒரு பெண்ணிடம் தன் அயோக்கியத்தனத்தைக் காட்டி, அதிகாரத்தினை அடையத் துடிக்கும் அற்பத்தனத்தை, அயோக்கியத்தனத்தை ஆம்பளைத்தனம் என்கிறார்கள் பலர்.

இயற்கையின் முன்னே மனிதர்கள் பதர்களை விடச் சிறியவர்கள். ஆனால் பாருங்கள்! ஒரு ஜான் அளவு இருக்கும் வயிற்றுக்கு, தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை என்னென்ன கொடுமைகள் செய்கின்றார்கள் இவர்கள் என. மலைகளை உடைக்கின்றார்கள், ஆறுகளை தடுத்து தண்ணீரை உறிஞ்சுகின்றார்கள், சாயத்தைக் கலந்து பூமிக்குள் மோட்டார் வைத்து செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்(திருப்பூரில்), இப்படி பூமியை சித்தரவதை செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்ப மனிதர்கள்.

மனித தன்மை கொஞ்சமாவது இருந்தால் ஆற்றில் கிடக்கும் மண்ணை அள்ளி விற்று தன் சுகத்துக்காகவும், பிள்ளைகளுக்கும் சொத்தினைச் சேர்த்து வைப்பார்களா? எல்லாவற்றையும் விற்று, பலரைப் பட்டினி போட்டு சாகடித்து, தான் மட்டும் வாழ்ந்து உயிரோடா இருக்கப் போகின்றார்கள்? என்றைக்கு மனிதன் பிறந்து விழுந்தானோ அன்றைக்கே அவனுக்கு எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது. அந்தத் தேதி தெரிந்தால் எந்த அறிவிலிகளும் இத்தனை ஆட்டம் ஆடாதுகள். தேதி தெரியாது. ஆட்டம் போடுகின்றதுகள்.

எத்தனை எத்தனை மதங்கள் இருந்தாலும், எத்தனை எத்தனை நல்ல நூல்கள் இருந்தாலும், கடவுள்கள் இருந்தாலும் மனிதன் தனது வயதான காலத்தில் தான் உணர்கின்றான். எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்ற அறிவு இன்றி, இறுதியில் தன் கைமீறி நடக்கும் அத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என எண்ணி வெம்புகிறான் திரு.அத்வானி போல.

அன்பைத் தவிர, சக மனிதன் மீதான அன்பைத் தவிர இந்த உலகில் வேறு ஏதாவது ஒன்று பெரிதா? சொல்லுங்கள் நண்பர்களே!!!!

சுயமோகிகளாலும், இந்த வாழ்க்கை நிரந்தரம் என எண்ணிக் கொண்டிருக்கும் அற்பர்களாலும் எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் ஏமாற்றப்பட்டு, அல்லல்பட்டு அயராது உழைத்த பொருளை இழந்து, வேதனையில் விழுந்து, மனம் நொந்து போய் இறந்து போகின்றார்கள். 

மீபத்தில் என்னிடம் ஒரு அன் அப்ரூவ்ட் மனையின் சொத்து அப்ரூவலுக்காக வந்தது. தினக்கூலி ஏழை அவர். அவரின் கனவு ஒரு வீடு. அவ்வளவு தான். எளிமையான அவரின் வீட்டு மனையினை அப்ரூவல் செய்வதற்காக, ஆன்லைனில் பதிவு செய்து அப்ரூவலுக்கு லோக்கல்பாடிக்குச் சென்ற போது இந்த மனை பதிவு செய்யப்பட்டிருக்கும் சர்வே எண்ணுக்கு உரித்தான ஆவணங்களைக் கொண்டு வரும் படி கேட்டிருக்கின்றார்கள்.

என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்று அவரிடமிருந்த ஆவணங்களைக் காட்டி இருக்கிறார். ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஒன்றும் புரியாமல் என்னிடம் வந்தார்.

லோக்கல்பாடியில் அவரின் மனைக்கான மூல ஆவணங்களைக் கேட்டிருக்கின்றார்கள். அவரிடம் இருந்த ஆவணங்களில் அவர் மனை அமைந்திருக்கும் சர்வே எண் இல்லை. விஷயம் விளங்கியதா? ஆனால் பிளான் இருக்கிறது. மூலப்பத்திரங்களை ஆய்வு செய்த போது கிரையம் பெறாத ஒரு பகுதியை சேர்த்து மனையாக போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். இவரும் ஒரு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் மனையைக் கிரையம் செய்திருக்கிறார். வக்கீலும் சரி பார்த்துதான் கொடுத்திருக்கிறார்.

வக்கீல் மூல ஆவணங்கள், பட்டாக்கள், கிரையம் ஆவணம், மேப் இவைகளை ஆராய்ந்து இருக்கிறார். எல்லாம் சரிதான். ஆனால் மனை இருக்கும் இடம் வேறொருவருக்கு உரித்தானது என்பதைக் கண்டறிய மறந்து போனார். அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும் எனக் கேட்கத் தோன்றும். அது அனுபவத்தில் வரக்கூடியது. மூளை சூடாகி கொதி கொதியென கொதிக்கும். கவனம் சிறிது பிசகினாலும் தவறாகிப் போகும். ஷார்பான புத்தியுடன் அமைதியான இடத்தில் அமர்ந்து ஆவணங்களை ஆராய்ந்து சரி பார்க்க வேண்டும்.

தனக்கு உரிமையில்லாத இடத்தில் மனை போட்டு விற்றிருக்கின்றார்கள். மனை விற்றவரை இனிப் பிடிக்க முடியுமா? அது சாத்தியமில்லாத ஒன்று. ஒரே வழி வழக்குப் போடுவது மட்டுமே. அவரின் உழைப்பு? அவரின் கனவு? அவரின் வாழ் நாள் ஆசை? எல்லாமும் பறிபோனது.

இந்த மனையில் நடந்திருக்கும் உள்குத்து என்ன தெரியுமா? தவறான சப்டிவிஷனைக் காட்டி மனையினை விற்றிருக்கின்றார்கள். ஆனால் மனை அமைந்திருந்த இடம் வேறு ஒருவருடையது. இதிலும் ஒரு கோல்மால் வேலை நடந்திருக்கிறது. யாரையோ சரிக்கட்டி அந்த சப்டிவிஷனுக்கான பட்டாவில் தன் பெயரையும் சேர்ந்திருக்கிறார் அந்தக் கில்லாடி ஆள்.

சப்டிவிஷன் ஆகும் போது க.ச. எண்.100 என்பது 100/1,2,3 என இடத்துக்கு தக்கவாறு, கிரைய ஆவணத்துக்கு ஏற்றபடி மாற்றம் செய்வார்கள். மேலும் உபபிரிவுகள் 100/3ஏ1, 3ஏ2,3ஏ3 என்று பிரியும். இந்த சப்டிவிஷன்கள் பிரிபடும் போது இல்லாத ஒருவரை பட்டாவில் ஏற்றி பல்வேறு கூத்துகளை அரங்கேற்றுவார்கள் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஆட்கள். அவர்களுக்கு பணம். நிலத்தின் உரிமையாளர்களுக்கு துன்பம். பிறரின் துயரம் தானே இன்னொருவருக்கும் வருமானம்.

இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் என் முன்னே. ”ஏதாவது செய்யுங்களேன் தங்கம்” என்று அரற்றினார். வேதனைதான் உள்ளத்தில் நிறைந்தது. அவருக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அவரின் மகிழ்ச்சியான முகத்தை விரைவில் பார்க்கும் நாள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பெரும் போராட்டம் தான். இருக்கட்டும் போராடிப் பார்த்து விடலாம் என முடிவு செய்து கொண்டு, “கவலை வேண்டாம், சரி செய்து விடலாம்” என்று அவரைத் தேற்றி அனுப்பினேன்.

ஆகவே நண்பர்களே, டிடிசிபி அப்ரூவல் மனைகள் என்றாலும், அன் அப்ரூவ்ட் மனைகள் என்றாலும், நிலங்கள் என்றாலும் சரி கவனமாய் இருங்கள். கவனமாய் இருங்கள். 

வாழ்க வளமுடன்.....!

Friday, April 5, 2019

நிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன?

நிலம் தொடர் 50வது பாகத்தை எழுதுகிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. காலம் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. கணிணி ஆசிரியனாக வாழ்க்கையைத் துவங்கியவன் இன்றைக்கு ரியல் எஸ்டேட் தொழிலே மூச்சாக இருப்பதற்கு, காலத்தை மட்டுமே காரணம் சொல்வேன். 

இந்த துறையில் அனுபவப்பாடம் பயின்றது வில்லன்களிடம். மக்களை எப்படி ஏமாற்றலாம் என நினைத்த வில்லத்தனமானவர்களிடம் தொழில் கற்றேன். எதைச் செய்யக்கூடாது என்று முதலில் தெரிந்து கொண்டேன். பின்னர் எது சரி எனப் புரிந்து கொண்டேன். யார் யாருக்கு என்னென்ன தெரியுமோ அந்த அறிவினை வைத்துக் கொண்டு இந்தத் தொழிலைச் செய்கின்றார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் அதுவல்ல. அது ஒரு கடல். பல அரசுத் துறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட மர்மங்கள் மண்டிக் கிடக்கும் மாயக்கடல்.

இதற்கென பல தனித்தனியான துறைகள் இருக்கின்றன. நில ஆவணங்கள் பதிவு செய்வது, அரசு ஆவணங்களை உருவாக்குவது, அளப்பது என இதற்கே இரண்டு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைகளும் தனக்கென தனித்தனி ஆவணங்களை வைத்திருக்கின்றன. அந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு நிலத் தொழில் செய்வது சாத்தியமா? நிச்சயம் சாத்தியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

புரியும்படிச் சொன்னால் இந்திய சாலை அமைச்சகம் கூட நிலத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். சாலை விரிவாக்கத்துக்கு நிலம் எடுத்தால் அதை ரெவின்யூ ரெக்கார்டில் கொண்டு வர எத்தனை காலம் பிடிக்கும் என உங்களுக்குச் சொல்லித் தெரியாத ஒன்றில்லை. ஏர்போர்ட் அத்தாரிட்டி மூலமாக கூட ஒரு நிலத்தின் ஆவணம் மாற்றப்படலாம் என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது.

வங்கிகளில் லீகல் ஒப்பீனியன் பார்ப்பார்கள். அது சரியானதுதான் என்று என்னிடம் வாதிடுவார்கள். வக்கீல்கள் எப்படி லீகல் பார்ப்பார்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் கொடுக்கும் ஆவணங்களை வைத்து சரி பார்ப்பார்கள். அவரிடம் அனைத்து டிபார்ட்மெண்ட்களின் ஆவணங்கள் இருக்குமா? என்றால் இருக்காது. நாம் கொடுக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு  அவர் சரி பார்ப்பார். ஆனால் உண்மை என்ன?  பல துறைகளில் பங்கெடுத்துக்கு இருக்கும் ஆவணங்களை அவர் எப்படி சரிபார்ப்பார்? இயலாது அல்லவா? ஒரு வாங்குபவரால் அத்தனை ஆவணங்களைத் திரட்ட முடியுமா? அது அவ்வளவு எளிதானதும் அல்ல. விற்பவர் தன்னிடம் இவ்வளவு தான் ஆவணங்கள் இருக்கின்றன என்பார். இருக்கும் ஆவணங்களை வைத்துக் கொண்டு சரி பார்ப்பது மட்டுமே இயலும். 

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, பெரும்பான்மையான தமிழக நிலங்களின் விபரங்களைச் சேகரித்து வைத்து இருக்கிறேன். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு நிலங்களை அலசி விட நீண்ட வருடங்களாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வருகிறேன். கடின உழைப்பின் காரணமாக இதைப் போன்ற ஆவணங்களைத் தேடித் தேடி அலைந்து திரிந்து டிஜிட்டலாக்கி பாதுகாத்து வருகிறேன். உதாரணமாக ஒரு நிலத்தை வாங்கி சைட் போட்டு விற்கலாம் என முடிவு செய்கின்றீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அந்த நிலம் சைட் போட தகுதியானது தானா எனக் கண்டறிய எளிதில் முடியாது. அதை ஒரு நிமிடத்தில் கண்டறிய தேவையானவைகள் என்னிடம் இருக்கின்றது. இப்போது புரியும் என நினைக்கிறேன்

கோடிக்கணக்கில் பொருள் முதலீடு செய்யும் போது இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு, எதிர்கால சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வது வாங்குபவர்களிடம் இருக்கிறது. கவனம் தேவை ! அவ்வளவுதான்.

இப்படி நான் ஆவணங்களை வகைப்படுத்திக் கொண்டு வரும் போது மானிய நிலங்கள் என்ற சொல்லை அடிக்கடி கேட்க ஆரம்பித்தேன்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது இந்தியாவில் இருந்த நிலங்களை எல்லாம் முன்னர் இருந்தவாறே பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஆங்கிலேயே முறைப்படிதான் இன்றைய நில அளவுகள் தொடர்கின்றன. அவ்வப்போது அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றன.

இந்திய அரசு விடுதலை பெற்ற போது, திருவாரூர் ஆதீனத்தில் இருந்து ஒருவர் டெல்லி சென்று திருப்பதிகப் பாடல்களைப் பாடி மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலைப் பெற்று நேருவிடம் கொடுத்தார் எனவும், அது பற்றிய ஒரு புகைப்படம் திருவாரூர் மடத்தில் இருப்பதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். அன்றைய இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்திய மக்களின் பிரதி நிதியான நேருவிடம் இப்படித்தான் மாறியது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது நான்கு போர் விமானங்களும், கொஞ்சம் ராணுவ வீரர்களும், இந்தியா முழுவதும் பசியும், பட்டினியும் தான் இருந்தனவாம். ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தான் இன்றைய இந்தியாவை உருவாக்கியது. இதில் பல்வேறு இடைத் துரோகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நீங்கள் “நரலீலைகள்” நாவலில் படித்துக் கொள்ளுங்கள்.

பிஜேபியின் மோடி இன்றைக்கு எதெற்கெடுத்தாலும் காங்கிரஸைக் குற்றம் சாட்டி, எதிர்மறையாகப் பேசிக் கொண்டிருக்க காரணம் அந்த காங்கிரஸ் தான். உலகமே இருண்டு கிடப்பதாய் நினைத்துக் கொண்டு கோயபல்ஸ் வசனங்களை வீசிக் கொண்டிருக்கின்றார்கள் பிஜேபியினர். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். உண்மையைப் பற்றிப் பேசும் போது, பொய் எதிரில் வந்து விடுகிறது. அது போகட்டும் அரசியல் அந்தப் பக்கம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் பதிவு செய்த நில ஆவணங்களில் மானிய நிலங்கள் என்ற பகுதி உண்டு. இதற்கென நில ஆவணத்துறையில் இதற்கென தனி பதிவுகளே உள்ளன. மானியம் என்றால் இலவசம் என அர்த்தம் வரும். இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களே தற்போது அரசு ரயத்துவாரி என்றுக் குறிப்பிட்டு வரி வசூலிக்கின்றது. ரயத்துவாரி என்பது வரி வசூல் நிலங்களைக் குறிப்பது ஆகும்.

1953ல் இனாம் ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு பெரும்பான்மையான நிலங்கள் ரயத்துவாரிகளாக மாற்றப்பட்டன. அவைகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன. ஒரு சில நிலங்கள் ரயத்துவாரிகளாக்கப்பட்டு வரி பெறாமல் பொது மக்களின் உபயோகத்துக்காக, நன்மைக்காக, ஆன்மீகத்துக்காக விடப்பட்டன. அப்படி ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டதற்கு முன்பு என்னென்ன மானிய நிலங்கள் இருந்தன என்பது பற்றிப் பார்க்கலாம்.

ஒரு வெகு சுவாரசியான தகவல் ஒன்றினைப் பகிரலாம் என நினைக்கிறேன். இன்றைக்கு அக்ரஹாரம் என்றுச் சொல்கின்றார்கள் அல்லவா? அது மானிய நிலத்தைக் குறிக்கும் சொல். பிராமணர்களுக்கு மன்னர்களால் கொடுக்கப்பட்டதுதான் அக்ரஹாரம். இந்த நிலத்திற்கு வரி வசூலிக்கப்படவில்லை. வேதம் சொல்லித் தரவும், வேதங்களைப் பரப்பவும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் இருக்கும் பகுதிதான் அக்ரஹாரம். பிரிட்டிஷ் அரசின் ஆவணங்களை பார்க்கும் போது, பிராமணர்களுக்கு ஏன் மானிய நிலம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. அது பற்றி இப்போது பேசத் தேவையில்லை.

ராணுவ வீரர், படைத்தளபதி, ஆசை நாயகிகள், தேவதாசி, கலைஞர்கள், நாட்டை ஆண்ட அரசர்களுக்கு, நொடித்துப் போன அரசர்களுக்கு, நாவிதர், தச்சர், சோழியர், வண்ணார், பூசாரி, வெட்டியான், காவல்காரர்கள், தலையாரி ஆகியோருக்கு மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. இது தவிர கோவில், ஆதீனங்கள், மடங்கள், சர்ச்சுகள், மசூதிகள் ஆகியவற்றுக்கும் மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. மேற்படி மானிய நிலங்களை வகைப்படுத்தி இருந்தார்கள். தர்மதாயம், தேவ நாயம், பந்த் விருத்தி, ஸ்தோத்திரியம், ஜாகிர், தேஸ்முக்/தேஸ்பாண்டே, அமாம், நோபந்தம் என்ற பெயர்களில் மானிய நிலங்கள் வழங்கப்பட்டு, வரி இல்லாமல் மானியம் பெற்றவர்கள் பயனடைந்து வந்தார்கள்.

அக்ரஹாரத்தில் கூட சர்வ, பிலுமுக்த, ஜோடி என உட் பிரிவு மானிய நிலங்கள் இருந்தன. இந்த பிரிவுகளுக்கு தக்கவாறு வரி இல்லாமலும், ஒரு முறை வரி செலுத்துவதாகவும், குறைந்த வரி செலுத்துவதாகவும் நிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. கைரதி மானிய நிலங்கள் முஸ்லிம் உலமாக்களுக்கு வழங்கப்பட்டன என ஆவணங்கள் சொல்கின்றன. தமிழகம் முழுவதும் பெரும்பான்மையாக பந்த் விருத்தி மானிய நிலங்கள் தான் இருந்தன. இந்த நிலங்கள் தான் இப்போது இருக்கும் நிலங்கள்.

மேற்கண்ட எல்லா வகையான மானிய நிலங்களையும் 1953க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் அரசு ரயத்துவாரி என வரி விதிக்கும் நிலங்களாக மாற்றியது. அதன் பிறகு வரி இருந்தாலும் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு கொடுத்தது. இன்றைக்கு இருக்கும் நிலங்களின் முன் வரலாறு இதுதான்.

தற்போது அரசாங்கம் தேவதாயம், தர்மாதாயம், தசபந்தம், பிரம்ம தேயம், காவல் ஊழியம், கிராம ஊழியம், கைவினைஞர் இனாம் என்பதாகப் பிரித்து நில ஆவணங்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.

இது தொடர்பான பல்வேற் விஷயங்களை இப்பதிவில் எழுத இயலாது. நீண்டு விடும். அவ்வப்போது எழுதுகிறேன். தொடர்ந்து பிளாக்கினைப் படித்து வாருங்கள்.

பூமி ஒன்றுதான் அதற்குப் பெயர்கள் தான் வேறு வேறு. அரச காலங்கள் தொட்டு, ஜன நாயகம் காலம் வரை நிலம் தான் இருக்கும் இடத்தில் தான் இருக்கின்றன. அதன் பெயர்களும், தன்மைகளும் காலத்துக்கு ஏற்ப மாறுபாடு அடைகின்றன.

மேலும் ஒரு குறிப்பு :

நீங்கள் வரிக் கட்டும் போது பசலி ஆண்டு என்றுச் சொல்கின்றார்கள் அல்லவா? அது என்ன தெரியுமா? அக்பர் காலத்தில் நிலவரி வசூலைப் பிரிக்க பசலி ஆண்டு என ஒரு கணக்கினை உருவாக்கினார்கள். ஷாஜகான் காலத்தில் தென்னிந்தியாவிற்கும் பசலி ஆண்டு வந்து சேர்ந்தது.  அப்போது ஆடி மாதம் 1ம் தேதி பசலி ஆண்டு தொடங்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கக் காலத்தில் ஒரு பசலி ஆண்டு என்பது ஜூலை 1ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30 தேதி வரை என வரையறுக்கப்பட்டு இது காலம் வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

Saturday, January 26, 2019

நிலம் (49) - சத்தமின்றி அமலாகும் நில உச்சரவரம்புச் சட்டம்

பொங்கல் அலுப்புகள், இனிப்புகள், கசப்புகள், அசதிகள் எல்லாம் உள்ளத்தை விட்டு அகன்றிருக்கும். காலம் தான் எல்லாவற்றுக்குமான விடையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ’இன்றைய நிலை, நாளை இல்லை. நாளையோ நம் கையில் இல்லை’ என்கிறார்கள் முதியோர்கள். ஆம் வாழ்க்கை எவரிடமும் கேட்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. (உண்மையில் அது நகரவும் இல்லை, நகர்த்தவும் இல்லை. நாம் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்)

வாழ்வியல் சூழல்கள் கற்பிதங்களுக்கான கற்பனைகளோடு இயைந்து மனிதனை தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாய வலையிலிருந்து எந்தக் காலத்திலும் வெளி வர  முடியாது. கருவுக்குள் இருக்கும் குழந்தை எப்படிச் சிந்திக்க வேண்டும் என உலகம் கேனத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் நலனுக்காக உருவான கட்டுப்பாடுகள், இப்போது மனிதன் கட்டுப்பாடுகளுக்காக வாழ வேண்டும் என மாறிப்போனது. 

அரசியல் செம கேவலமாக இருக்கிறது. கொலை கொள்ளை வரைச் சென்றிருக்கின்றார்கள் என்றெல்லாம் செய்திகள். என்ன மாதிரியான அரசியல் இது என்றே தெரியவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து நாற்றமடிக்கிறது. மக்கள் அந்தச் சாக்கடைக்குள் வீழ்ந்து சுகம் சுகம் என்று பாடிக் கொண்டலைகின்றார்கள்.

இதற்கிடையில் கோவையில் மிக பிரபலமான ஒரு நிறுவனத்தின் இயக்குனர் எனது பிளாக்கைப் படித்து விட்டு என்னைச் சந்திக்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார். பெரிசு ஏன் சிறிசுவைச் சந்திக்கணும்? தீர்க்க இயலா ஏதோ பெரும் பிரச்சினை போலும், வரட்டும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு வரச்சொன்னேன்.

பெரிசுகள் எப்போதும் சூதானமாகத்தான் ஆரம்பிப்பார்கள். நாம் தான் சூட்டின் மீது உட்கார்ந்திருப்பது போல கவனமாக இருக்க வேண்டும். மனசில ஓரமாக் வச்சுக்கங்க.

என்னைப் பற்றி விசாரித்து விட்டு, மெதுவாக ஆரம்பித்தார் அவர் கம்பெனியின் வேலைகள், தொழில்கள், அதன் வளர்ச்சிகள், பிரச்சினைகள் எனத் தொடர்ந்தது அவரின் பேச்சு. இதையெல்லாம் ஏதோ நம் மீது கொண்ட பிரியத்தின் மீதான காரணத்தால் சொல்கிறார் என்று நினைக்க நானென்ன சசிகலாவா? சிரித்துக் கொண்டேன். நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றாராம் அவர். ஆகையால் இந்தச் சின்ன வேலையை என்னைப் போல ஆட்களிடம் கொடுத்து ஃபாலோ செய்யச் சொல்லி முடிப்பது அவரின் வாடிக்கையாம். இப்படித்தான் தொடர்ந்தது பேச்சு. 

பெரிய பிரச்சினையுடன் ஆள் வந்திருக்கிறார் என்று நன்கு புலப்பட்டது. ஆனால் அது சாதாரண பிரச்சினை என என்னை நம்ப வைக்கவும், எனக்கு நேரமில்லாத காரணத்தால் தான் இதை உன்னிடம் தர உள்ளேன், அந்தளவுக்கு எனக்குப் பரந்த மனப்பான்மை எனவும் நான் அறிய வேண்டுமென விளக்கிக் கொண்டிருந்தார். பத்து ரூபாய் லாபம் கிடைக்க வேண்டுமெனில் பத்து மணி நேரம் உட்கார்ந்து பேசுவார்கள். ஆள் அந்த வகையானவர். 

இன்னொரு கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது. யூடியூப்பில் என்னிடம் விற்பனைக்கு வந்த ஒரு தென்னந்தோப்பைப் பற்றி விபரம் வெளியிட்டிருந்தேன். வெளி நாடுகளில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் போன்கள் வந்தன. சொல்லி வைத்தாற்போல இடம் எங்கே இருக்கிறது? என்பார்கள். சொல்வேன். விலை என்ன என்று கேட்பார்கள்? சொல்வேன். அந்த விலையா அந்த இடத்தில் என்பார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருப்பேன். சரி என வைத்து விடுவார்கள். இப்படித்தான் ஒரு லேடி போனில் அழைத்தது. எந்த ஊரில் இருந்து பேசுகின்றீர்கள் என்று கேட்டேன். கோவையிலிருந்துதான் என்றார். பொய் பேசுறவங்களிடம் நான் தொடர்ந்து பேசுவதில்லை என அழைப்பை நிறுத்தினேன். அது துபாய் அழைப்பு. அடுத்த நொடியில் இன்னொரு அழைப்பு. என் மனைவி பேசிக் கொண்டிருக்கிற போது எப்படி நீங்கள் அழைப்பை நிறுத்தலாம் என்றார் ஒருவர். நானென்ன அவர் வீட்டு வேலைக்காரனா? செம டென்சனாகி விட்டது. நான் கொடுத்த சவுண்ட் எஃபெக்டில் ஆள் குரலை இறக்க தொடர்பை துண்டித்தேன். இப்படியான தொல்லைகளும் இருக்கின்றன.

இன்னும் ஒரு சிலர் இருக்கின்றனர். போனில் அழைத்து எனக்கு இன்ன தேவை என்பார்கள், இடம் சொல்வார்கள், அவர்களின் முதலீட்டுத் தொகையைச் சொல்வார்கள். நான் அவருக்காகச் செய்யப் போகும் வேலைகளையும்,  எனது கட்டணத்தையும் விவரிப்பேன். அடுத்த இரண்டொரு நாட்களில் அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்து விடும். அவரின் தேவை அவரின் முழு அளவில் எந்த வித சிக்கலும் இன்றி நிறைவேறும். இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்கள். இன்னும் பலர் இருக்கின்றார்கள். அதையெல்லாம் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் எழுதுவேன் படித்து மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

சரி பெரிசுவின் பிரச்சினைக்கு வரலாம்.

வினோபாவா ஆச்சாரிய யக்ஞம் மூலமாக தமிழக மெங்கும் எடுக்கட்ட நிலங்கள் தற்போது ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன என்று எனக்குத் தெரியும். அதே போல நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி எடுக்கப்பட்ட நிலங்களையும் அரசு தற்போது பட்டாவில் அரசு நிலம் என குறிப்பிட்டு வருகிறது என்பதும் எனக்குத் தெரியும். பெரும் தனக்காரர்களின் அனேக சொத்துக்கள் சத்தமில்லாமல் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அப்போது இந்த அளவுக்கு வசதிகள் இல்லை. இப்போது இருக்கின்றன. உட்கார்ந்த இடத்தில் சரசரவென வேலை நடக்கிறது.

பெரிசு ஃபாக்டரி கட்டுவதற்காக வாங்கிய பதினைந்து ஏக்கர் நிலமும் அரசு நிலம் என மாறிப் போனது. விற்பனை நடந்து பத்து வருடம் ஆகி விட்டது. இனி எங்கே பணம் கிடைக்கும்? எல்லா ஆவணங்களையும் எடுத்தால் 1958ல் அந்த பதினைந்து ஏக்கர் நிலத்தின் அப்போதையை உரிமையாளர் யக்ஞத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டது தெரிந்து டென்சனாகி எங்கெங்கோ சென்று முட்டி மோதி ஓடிக் களைத்துப் போய் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கையில் எனது பிளாக்கைப் படித்துப் பார்த்து விட்டு கல் வீசலாம் வந்தால் பழம், போனால் கல்லு என வந்து விட்டார்.

அவரின் அனைத்து ஆவணங்களையும் மேலோட்டமாகப் பார்த்தேன். 15 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் பெற்று விட அற்புதமான வாய்ப்பு இருப்பதைக் கண்டறிந்தேன். அவரிடம் சொன்னேன், மீட்டு விடலாம் என.

ஆகவே அன்பு நண்பர்களே ஆன்லைனில் உங்களின் நிலம் உங்களிடம் தான் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.


Wednesday, January 9, 2019

நிலம் (48) - டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாமா?

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வாழ்த்தினைப் பிறருக்குச் சொல்லும் போதெல்லாம் திருப்பூர் குமரன் மண்டை உடைந்து செத்துப் போன செய்தியும், கோவையில் செக்கிழுந்த வ.உ.சிதம்பரனாரும் நினைவில் வந்து விடுகின்றார்கள். உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆங்கில ஆண்டு. அடிமையின் சின்னமாய் இருந்தாலும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடியாத வகையில் வரலாற்று சின்னமாகிப் போன அவலம் நினைவிலாடும். வரும் கால தலைமுறையினருக்கு இந்த எண்ணங்கள் வரச் சாத்தியங்கள் குறைவு.

ஆட்சிப் பொறுப்புக்கு தகுதியே இல்லாதவர்கள் வரும் போது, அவரவர் புத்திக்குத் தக்கவாறு வரலாற்றை மாற்றி சிறார்களுக்கு பாடப்புத்தகங்களை உருவாக்கும் அவலத்தை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் ஜாதிக்கு ஒரு வரலாறு எனவும், ஜாதிக்கு ஒரு பள்ளி எனவும் மாறினாலும் மாறலாம். பெண்கள் தனிப்பள்ளி இருப்பது போல இந்த ஜாதிப் பெண்களுக்குத் தனிப்பள்ளி, ஆண்களுக்கு தனிப்பள்ளி என்று கூட வரலாம். குறுகிய மனம் படைத்தோர் பதவிக்கு வரும் போது இத்தகைய அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பூனைக்கு எவரும் மணி கட்டுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தன் மொழி, தன் இனம், தன் சிந்தனை பற்றிய கவலைகள் தான். 

உடம்பு என்று இருந்தால் நோய் இருக்கும். அதே போல சொத்துக்கள் என்று இருந்தால் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர்கள் என்னிடம் கொண்டு வந்த சொத்துப் பிரச்சினை நான் எதிர்பார்க்காத ஒன்று.

கோவையில் சேரன் மாநகர் என்றொரு பகுதி இருக்கிறது. அந்தப் பகுதி விளாங்குறிச்சி என்ற ரெவின்யூ கிராமத்தில் அடங்கியது. இந்தப் பகுதியில் தமிழ் நாடு வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்ட நிலங்கள் அதிகம். கிட்டத்தட்ட 1200 ஏக்கருக்கும் மேல் என்று நினைவு. அது பற்றிய விபரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்த நிலங்கள் அரசின் வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்டவை. இதில் தகுந்த இடத்தில் தடையின்மைச் சான்று பெற்றால் ஒழிய வீடோ அல்லது விற்பனையோ செய்ய இயலாது. 

என்னிடம் வந்த பிரச்சினை விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள நான்கு டிடிசிபி அப்ரூவ்ட் சைட்கள். அவை டிடிசிபி அப்ரூவல் செய்யப்பட்டு மனை வரைபடம் வழங்கப்பட்டிருக்கின்றன. மனை வரைபடம் வழங்கப்பட்ட ஆண்டு 1992. ஹவுசிங் போர்ட் நிலம் எடுக்க உத்தரவிட்டு பதிவு செய்யப்பட்ட ஆண்டு 1983. ஆனால் 1992ம் வருடம் மனை அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த மனையை வாங்கியவர் தற்போது விற்க முனையும் போது அது ஹவுசிங் போர்டில் வருகிறது என்ற தகவல் கிடைத்து அதிர்ந்தனர் தற்போதைய நில உரிமையாளர்கள்.

இது எப்படிச் சாத்தியம் என்று அனைவரும் நினைக்கலாம். நான் முன்பே சேரன் மாநகர் பகுதியில் பதினைந்து வருடங்களாக பட்டா வாங்க இயலாத வீட்டு மனைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன். கிட்டத்தட்ட 70 வீட்டு மனைகள் டிடிசிபியால் அப்ரூவல் செய்யப்பட்டவை. தற்போது வரைக்கும் பட்டா பெற முடியவில்லை. காரணம் அந்த நிலங்கள் நில உச்ச வரம்புச் சட்டத்தில் அரசின் நிலமாக மாற்றப்பட்டவை. அந்த விஷயத்தை மறைத்து மனை அப்ரூவல் பெற்று விற்பனை செய்திருக்கின்றார்கள்.

டிடிசிபி அப்ரூவல் விதிகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். சொத்தின் உரிமையில் வில்லங்கம் ஏற்பட்டால் தகுந்த நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள் என. வில்லங்கச் சான்றிதழ் கொடுக்கும் போது இது முழுமையான ஆவணம் அல்ல என்று கொடுத்திருப்பார்கள். அதைப் போலத்தான் இதுவும்.

ஆகவே டிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் என்றுச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிட வேண்டாம். தகுந்த ஆட்களைக் கொண்டு அந்தச் சொத்தின் வரலாறு போன்றவற்றை ஆராய்ந்து வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில் அவஸ்தைப் பட நேரிடலாம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Monday, November 19, 2018

நிலம் (47) - அன் அப்ரூவ்ட் மனைகள் அரசு மீண்டும் அவகாசம்

20.10.2016ம் தேதிக்கு முன்பு வரை அனுமதியற்ற மனைப்பிரிவில் வீட்டு மனை வாங்கியவர்களும், அந்த மனைப்பிரிவு உரிமையாளர்களும் மனைப்பிரிவு வரன்முறைச் சட்டத்தின் படி வீட்டு மனைகளை வரன்முறைப்  படுத்தி அனுமதி பெறலாம் என தமிழக அரசு கடந்த 04.05.2017ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு வரன்முறைக்கட்டணமும், மேம்பாட்டுக் கட்டணமும் குறைக்கப்பட்டு மீண்டும் காலக்கெடு வழங்கப்பட்டது. இந்த மாதம் 03.11.2018ம் தேதியோடு மூன்றாவது காலக்கெடுவும் முடிந்து விட்டது. இனியும் உள்ளாட்சிகளால் சேகரிக்கப்பட்டு மனைப்பிரிவு வரைபடங்களாக அனுமதிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 50 சதவீதம் வரன்முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அரசு அனுமதியல்லாத மனைப்பிரிவினை அனுமதி பெற்றுக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்தும் மக்கள் கவனத்தில் கொள்ளாதிருப்பது சரியல்ல. 

அனுமதியற்ற மனைப்பிரிவினை ஏன் பத்திரப்பதிவு செய்தார்கள், அது அரசின் தவறல்லவா? என்று என்னிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்து கொடுக்க மட்டுமே உள்ளது. லீகல் ஒப்பீனியன் எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். பத்திரப்பதிவாளர்கள் அது பற்றிய கேள்விகள் எழுப்ப வேண்டியதில்லை என்று பத்திரப்பதிவுச் சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதால் அரசும் அவ்வப்போது பல விதிகளை உருவாக்கி மக்களின் தேவையற்ற கால விரயத்தையும், பொருளையும் இழக்கவிடாமல் செய்து வருகிறது. இருப்பினும் ஏமாறவே பிறப்பெடுத்த மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம்.

03.11.2018ம் தேதி கடைசிக்காலக்கெடு. இனி என்ன ஆகும்? என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். திட்டக்குழுமம் அதற்கொரு வழியினைச் அரசுக்குப் பரிந்து செய்திருக்கிறது. 03.11.2018க்குப் பிறகு வரும் வரன்முறை செய்யும் மனைகளுக்கு அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கலாம் என்றொரு அறிக்கையை அரசின் கவனத்திற்காக அனுப்பி இருக்கிறது. அதன் படி 03.11.2018க்குப் பிறகு மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆனால் அதற்கு வரன்முறைக்கட்டணத்தில் 03.11.2018ம் தேதியிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பித்தால் வரன்முறைக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும், அடுத்த ஆறாவது மாதத்திற்குள் விண்ணப்பித்தால் 25 சதவீதம் அபராதமும், 12 மாதங்களுக்குப் பிறகு விண்ணபித்தால் 50 சதவீதமும் அபராதக்கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன் முறை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ளுங்கள். தவறும் பட்சத்தில் அந்த மனைகளை எக்காலத்தும் விற்கவும் முடியாது. அதில் வீடுகள் கட்டவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Saturday, November 17, 2018

நிலம் (46) - அன் அப்ரூவ்டு வீட்டுமனைகள் என்ன நடக்கிறது?

அன் அப்ரூவ்டு வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் அரசு முழு மூச்சாக வீட்டு மனைகள் அப்ரூவல் திட்டத்திற்கான அமைப்புகள் மூலம் வரன் முறை செய்ய இரண்டு முறை கட்டணக் குறைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியும் இன்றும் அன் அப்ரூவ்டு மனைகளில் பாதி கூட வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று பத்திரிக்கைச் செய்திகள் வெளிவருவது கொடுமையான விஷயம்.

இனி அரசு அதிரடி முடிவுகள் எடுக்கலாமென்று பேசிக் கொள்கின்றார்கள். வரன்முறை செய்யாத வீட்டு மனைகளை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் உரிய அலுவலகத்திற்கு விபரங்கள் அனுப்பி, அந்த மனைகள் பற்றிய வரைபடங்களைத் தயாரித்து மீண்டும் உள்ளாட்சிக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். முன்பு போல பல ஆவணங்கள் தேவையில்லை என்றும் அரசு சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறது. இருப்பினும் மீண்டும் பாதி மனைகள் அப்ரூவல் செய்ய வரவில்லை என அரசு சொல்கிறது.

இனி அரசு ஏதாவது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்குமா? என்று தெரியவில்லை. மக்கள் வரன்முறைக்கட்டணம் அதிகம் என்றுச் சொல்கிறார்கள். இன்னும் கட்டணத்தைக் குறைக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். என்ன செய்யப்போகிறது அரசு என்று தெரியவில்லை.

மீண்டும் அரசு கால நிர்ணயம் செய்தால் உடனுக்குடன் அன் அப்ரூவ்டு மனைகளை வாங்கியவர்கள் விண்ணப்பம் செய்து வரன்முறை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வரலாம். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் அர்த்தமில்லை.

Monday, October 8, 2018

நிலம் (45) - பீமா பட்டா நிலங்கள் ஜாக்கிரதை

நண்பர் இந்தியாவெங்கும் கிளை பரப்பி இருக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர். நண்பரின் வேண்டுகோளுக்காக சென்னையில் இருக்கும் சொத்து ஒன்றின் வில்லங்கம் பார்க்க நேரிட்டது. 

மூதாதையர் சொத்து என்று கிரையப்பத்திரங்கள் சொல்லியது. வில்லங்கச் சான்றிதழ்களும் அதையே உறுதிப்படுத்தின. எனக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. பட்டாவைக் காணவில்லை. அதற்குப்பதிலாக ஆர்டியோவின் பட்டா வழங்கலாம் என்ற பரிந்துரை மட்டும் இருந்தது. துலாவ ஆரம்பித்தேன். நான் கேட்ட ஆவணங்களைக் கொண்டு வரும்படி நண்பரிடம் சொன்னேன். அவர் தொடர்புடைய ஆளை அனுப்பி வைத்தார்.

என் முன்னால் நான் கேட்டிருந்த ஆவணங்களுடன் அமர்ந்திருந்தார் அவர். எனது பாட்டியின் சொத்து, பரம்பரையாக எனது அனுபோகத்தில் வந்தது என்றும், அதற்காகத்தான் ஆர்.டி.ஓவின் பரிந்துரைக் கடிதம் பெற்றேன் என்றும் விளக்கம் சொன்னார். சொத்து இருப்பது சென்னை அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில். ஆன்லைன் பட்டாவும் கிடைத்தது. எல்லாம் சரி. ஆனால் எங்கோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உள்ளுக்குள் உதறிக் கொண்டிருந்தது. வந்த ஆளின் நடவடிக்கை திமிர் தனமாக வேறு இருந்தது.

அரை மணி நேரம், அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சென்னையில் இருக்கும் நிலங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க என்னிடமிருக்கும் ஒரு சில ஆவணங்களை எடுத்தால், எதிரில் உட்கார்ந்து இருந்தவர் கொண்டு வந்து கொடுத்த நிலங்கள் பீமா பட்டா பெற்றவை எனத் தெரிந்தது. உள்ளுக்குள் கடுப்பு ஏற, ”பீமா(பி மெமோ) பட்டான்னு ஒன்னு இருக்கே அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.

ஆளுக்கு பதட்டம் அதிகரித்து விட்டது. அது மட்டுமல்ல இவரின் நிலத்தின் அருகில் ஒரு அரசியல் தொடர்புடைய ஒருவரின் டிரஸ்ட் பெயரில் ஏகப்பட்ட புறம்போக்கு இடங்கள் டிரஸ்ட்டின் பெயரில் பதிவாகி இருந்ததையும் கண்டேன். விட்டு வெளுத்து வாங்கினேன். ”நீங்க கோயமுத்தூரில் அமர்ந்து கொண்டு சென்னையில் இருக்கும் சொத்துக்களைப் பற்றிக் கண்டுபிடிப்பீர்கள் என கனவா கண்டேன், தெரியாமல் வந்து விட்டேன், ஆளை விட்டு விடுங்கள்” என்றுச் சொல்லி கிளம்பி விட்டார். எந்த வங்கி மேனேஜர் மாட்டிக் கொள்ளப்போகின்றாரோ தெரியவில்லை. அந்தச் சொத்தினை வைத்து லோன் வாங்கி விடலாமல்லவா என பேச்சு வாக்கில் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

அரசு பட்டா நிலங்களை ஒட்டி இருக்கும் புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்க்கவும், பயிர் செய்து கொள்ளவும் வரி விதித்து பட்டாக்களை வழங்கும். அந்தப் பட்டாக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலங்கள் அரசுக்குத்தான் சொந்தமே தவிர தனிப்பட்டவருக்குச் சொந்தமாகாது. உடனே மூன்று வருடங்களுக்கு மேல் அனுபோகப்பாத்தியம் இருந்தால் பட்டா பெறலாமே என கோர்ட்டு உத்தரவு இருக்கிறதே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது வேறு, இது வேறு.

சென்னை ஆள் என் நண்பரிடம் சென்று, ”எங்கேய்யா, பிடித்தாய் அவரை?” என்று விசாரித்திருக்கிறார். நண்பரிடம் ”அது புறம்போக்கு நிலம்” என்று சொன்னேன். ”அடப்பாவி ஏற்கனவே ஐந்து லட்சத்தை விழுங்கி விட்டானே, இனி எப்போ எப்படி அந்தக்காசைப் பெறப்போகின்றேனோ தெரியவில்லையே” என கதறிக் கொண்டிருந்தார். அரசு நிலத்துக்கு ஐந்து லட்சம் கொடுத்த பரோபகாரியானார் எனது நண்பர். ஒரு வார்த்தை இந்தச் சொத்தினை வாங்கப் போகின்றேன், பார்த்துச் சொல் என்று கேட்டிருந்தால் ஐந்து லட்சம் தப்பித்திருக்கும். எனக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்துக்காக அவர் இழந்தது ஐந்து லட்சம். 

பில் அனுப்பி வைத்திருக்கிறேன். என்ன செய்கிறார்? எனப் பார்க்க வேண்டும்.

இதே போல கவுண்டம்பாளையத்தில் ஒரு பிரபல சினிமா நடிகர் ஒருவர் பண்ணை வீடு ஒன்றினை வாங்கி வைத்திருந்தார். பாதி பட்டா பூமி, மீதி பீமா பட்டா பூமி. மொத்தமாக முடித்து காசைக் கறந்து விட்டனர். அதை விற்க என்னை அணுகியவுடன் தான் இந்த விஷயம் தெரிந்தது. நடிகருக்கு உள் மன வேதனை ஏற்பட்டு அந்தப் பண்ணையை விற்கவும் இல்லாமல், பராமரிக்கவும் இல்லாமல் சும்மா போட்டு விட்டார். சும்மா கிடக்கிறது அது பராமரிப்பு இன்றி. சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை என்பதை  என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

Monday, June 4, 2018

நிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது

நில உச்சவரம்புச் சட்டத்தினைக் கையில் எடுத்து வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது தமிழக அரசு. செய்தி வெளி வந்து விட்டது. இனி எவரும் ஏக்கர் கணக்கில் சொத்துக்களைக் குவிக்க இயலாது. டிரஸ்ட் மற்றும் நிறுவனங்களுக்கு விதி விலக்கு உண்டு எனினும் அதற்கான அப்ரூவல் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியே அப்ரூவல் பெற்றாலும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாகத்தான் கருதப்படுமே தவிர தனியார் நிலமாக இருக்காது. 

அதுமட்டுமல்ல இது போன்ற கம்பெனியின் கீழ் இருக்கக் கூடிய நிலங்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்குதல் அவசியம். இல்லையென்றால் ஏமாற்றப்படுவீர்கள் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். தகுதியும், இது பற்றிய விவரங்கள் தெரிந்த நல்ல ஆலோசகரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே அது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும். அதுமட்டுமின்றி டிரஸ்ட் கீழ் வரக்கூடிய பூமிகளை வாங்குவதற்கும் ஏகப்பட்ட சட்ட விலக்குகள் தேவை என்பதையும் கவனத்தில் கொள்க. யாருக்கு எங்கே எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? என்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு கண்டுபிடிக்கவும் வழிகள் உண்டு. நன்கு ஆலோசித்த பிறகே இது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதினை மறந்து விட வேண்டாம்.


இதோ கீழே தினமலரில் வெளிவந்திருக்கும் செய்தி உங்களுக்காக.

நில உச்சவரம்பு சட்டப்படி, உபரி நிலம் தொடர்பான கணக்கெடுப்பு, மாநிலம் முழுக்க துவங்கியுள்ளது. மாநிலத்தில், உபரியாக உள்ள நிலங்களை மீட்க வகை செய்யும், நில சீர்திருத்த சட்டம், 1970 பிப்., 15 முதல் அமலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும், நில உரிமை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, உபரி நிலத்தை, அரசு கையகப்படுத்தி வந்தது.கடந்த, 1983ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடு முழுக்க, ஒரு கோடியே, 11 லட்சத்து, 15 ஆயிரம் ஏக்கர், உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 71 லட்சத்து, 63 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 48 லட்சத்து, 90 ஆயிரத்து, 600 ஏக்கர் நிலம், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.அரசின் திடீர் உத்தரவையடுத்து, மீண்டும் உபரி நிலத்தை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 'ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவில், உபரி நிலம் தொடர்பான அறிக்கையை, வரும், 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:நில உச்சவரம்பு சட்டப்படி, நஞ்சை, புஞ்சை நிலம் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு, அதிகபட்சம், 60 ஏக்கர் வரை மட்டுமே நிலம் இருக்க வேண்டும்.அறக்கட்டளை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, நில உச்சவரம்பு சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், ஒரு சென்ட் அதிகமாக இருந்தாலும், அது உபரி நிலமாக கருதப்பட்டு, வருவாய்த்துறை வசம் எடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. உபரி நிலம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிமுறைப்படி, 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 


குறிப்பு : ஒரு குடும்பத்திற்கு 60 ஏக்கர் என்பதன் கணக்கு வேறு. அரசு வைத்திருப்பது தர ஏக்கர் கணக்கு என்பது வேறு. 60 ஏக்கர் எனக் குறிப்பிடுவது நாம் பயன்படுத்தும் கணக்கு. ஊருக்கு ஊர் இந்த ஏக்கர் வித்தியாசப்படும் என்பதினைக் கவனத்தில் கொள்க.

Saturday, May 12, 2018

நிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது?

பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம், ஆத்திரம் என பொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல போலிகள் புனைபெயர்களில் பல்வேறு அக்கப்போர்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை எது, பொய் எது என்று எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எந்தச் செய்தி உண்மையானது? எந்தச் செய்தி போலியானது என்று உணர்வதற்குள் அடுத்தச் செய்தி வந்து விடுகிறது. பத்திரிக்கைகள் தங்கள் சுயதர்மத்தை இழந்து சார்பு நிலைகள் எடுத்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் டிவி, பத்திரிக்கை இருக்கின்றன. எதிரானவர்களை கர்ணகடூரமாக விமர்சிக்கின்றார்கள். மொத்தத்தில் நிம்மதியற்றுப் போய் கிடக்கின்றார்கள். வயதாகையில் வாய்தா இல்லாமலே சேருமிடம் சேர்கின்றார்கள். அது அவர்கள் பாடு.

எதைக் கொடுக்கின்றோமோ அதைத் திரும்பப் பெறுதல் வேண்டும். எதைப் பெறுகின்றோமோ அதை கொடுத்தல் வேண்டும். இதுதான் இயற்கையின் விதி. எந்தக் கொம்பராலும் இதை மாற்ற முடியாது. 

சமீபத்தில் அன் அப்ரூவ்ட் மனைகளை அப்ரூவல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடையப் போகிறது என்பதால் மக்கள் அல்லோலகல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசும் ஆங்காங்கே கேம்ப்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தும் இனியும் 8 லட்சம் மனைகள் அப்ரூவல் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

என்னால் முடிந்த வரைக்கும் தெரிந்தவர்களுக்கு, ஆன்லைனில் அன் அப்ரூவ்டு மனைகளை பதிவு செய்து கொடுத்தேன். அன் அப்ரூவ்ட் லேயவுட்களையும் அப்ரூவ்ட் செய்து கொடுக்க தேவையான உதவிகளையும் செய்து வருகிறேன். அப்போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க நேர்ந்தது. அதை உங்களிடம் பகிரத்தான் இந்தப் பதிவு.

அன் அப்ரூவ்ட் மனைகள் என்பது டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் என்று அர்த்தம். வீட்டு மனைகளை அங்கீகரிக்க மேற்கண்ட இரண்டு அமைப்புகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து போர்டுகளுக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீடு கட்ட அனுமதி வழங்க இடமுண்டு. ஏனென்றால் பஞ்சாயத்து போர்டுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க அனுமதி உண்டு. கவனிக்க மனை அப்ரூவல் வழங்க அனுமதி இல்லை. வரி வசூலிக்க அனுமதி இருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அளவில் ஒரு குறிப்பிட்ட சதுரடிகள் வீடு கட்ட மட்டும் அனுமதி தரலாம்.

பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்டு மனைகள் என்றுச் சொல்லி மனைகளை விற்றார்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது உங்களின் அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை. 

அன் அப்ரூவ்ட் மனைகள் பதிவு செய்திருக்கக் கூடாது அல்லவா? அது அரசின் தவறுதானே என்று கேட்பீர்கள். ஒரு துணைப் பதிவாளர் என்பவர் எந்த ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்தாலும் பதிவு செய்து கொடுப்பார். குறைந்தபட்ச உரிமைகளை அவர் பரிசீலனை செய்து பதிவு செய்ய எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு சொத்து பற்றிய வில்லங்கங்கள் பார்க்க அனுமதில்லை. அது அவரின் வேலையும் இல்லை. ஆகவே பதிவாளர்கள் மீது குற்றம் சொல்வது என்பதும் ஏற்புடையதல்ல.

அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்குவதில் உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மனை விற்பனையாளர் குறிப்பிட்ட லேயவுட்டில் உருவாக்கி இருக்கும் மொத்த மனைகளையும் மனைகளாக விற்றிருந்தால் பிரச்சினை வராது. ஆனால் ஒரு சில மனை விற்பனையாளர்கள் லேயவுட்டில் இருக்கும் விற்காத மனைகளை நிலங்களாக மாற்றி விற்று விடுவார்கள். இப்போது புரிகிறதா பிரச்சினை? ஒரு சிலர் சாலைகளை பஞ்சாயத்துக்கு தானம் கொடுக்காமல் சாலைகளையும் சேர்த்து விற்று விடுவார்கள். அந்த மனைகள் நீர்வழிப்பாதையாக இருக்கலாம், விரிவாக்கத்துக்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். தொழிற்சாலைப்பகுதியாக இருக்கலாம். கோவிலுக்குப் பாத்தியப்பட்டதாக இருக்கலாம். நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். இப்படி பல்வேறு ’இருக்கலாம்களில்’ ஏதாவது ஒரு ’இருக்கலாமுக்குள்’ வந்து விட்டால் மனையும் போச்சு, மன அமைதியும் போய் விடும்.

அப்ரூவ்டு மனைகள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இருக்கலாம்களுக்குள் இல்லாத நிலமாக இருப்பின் மட்டுமே அனுமதி பெறுகின்றன. அதுமட்டுமல்ல எந்த ஒரு விரிவாக்கத்தின் போதும் மனைகளை அரசு பயன்படுத்தவும் சட்டத்தில் இடமில்லை.

இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஓர் நினைவூட்டல்.

இனி மேலும் ஒரு பிரச்சினை வர உள்ளது. அன் அப்ரூவ்ட் லேயவுட்களில் அப்ரூவ்ட் செய்யப்பட்ட மனைகளை வாங்கும் போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அது என்ன பல விஷயங்கள் என்கின்றீர்களா? அது ஒவ்வொரு மனைக்கும் வேறுபடும் என்பதால் பொதுவாகக் குறிப்பிட முடியாது. அவ்வாறு எழுதினால் படிப்பவர்கள் குழம்பி விடுவார்கள். நல்ல பிராப்பர்ட்டி கன்சல்டண்ட்டிடம் விவாதித்த பிறகு மனைகளை கிரையம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் !!!

Monday, December 11, 2017

நிலம் (42) - நில உச்ச வரம்புச் சட்டம் இன்னும் இருக்கிறதா?

என்னிடம் ஆலோசனை கேட்க வரும் பலரிடம் நில உச்சவரம்புச் சட்டம் பற்றி விவரித்திருக்கிறேன். ஆனால் ஒருவரும் நம்பமாட்டேன் என்றார்கள். ஒருவர் ”என் வக்கீலிடம் கேட்டேன், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, உங்களுக்கு மட்டும் தான் இப்படி வித்தியாசமான விஷயமெல்லாம் தெரியுமா?” என்று எதிர்கேள்வி கேட்டார். அவரிடம் நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. முட்டாள்களிடம் பேசுவதில் என்ன பிரயோஜனம்? சொல்வதில் ஏதாவது உண்மை இருக்குமா? என்று கூடவா சிந்திக்கக் கூடாது. வக்கீல் சொல்லி விட்டார் என்றால் போதுமா? உண்மை என்று ஒன்று உண்டு அல்லவா? ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள் என்றே தெரியவில்லை. அது போகட்டும். அது அவரவர் பிரச்சினை.

“சாலையோரம் இருந்த இடத்தினை வாங்காதீர்கள்” என்று படித்துப் படித்துச் சொன்னேன். கேட்கவில்லை. இன்றைக்கு இடித்து விட்டார்கள். என் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை எனக்குத் தெரிந்தவருக்கு. காசும் போச்சு, நிம்மதியும் போச்சு. சொன்னால் கேட்பவர்களுக்கு சொல்லலாம். ஆதாரத்தைக் கொடுத்தும், கேட்கமாட்டேன் என்று நிலம் வாங்கியவரின் கதி இன்றைக்கு அதோகதி. படட்டும். இனி புத்தி வந்து என்ன ஆகப் போகிறது?

நில உச்சவரம்புச் சட்டம் என்றால் என்னவென்றால் ஒரு தனி மனிதர் மொத்தமாக ஐந்து தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அதிகமாக வைத்திருந்தால் அரசு எந்த அறிவிப்பும் இன்றி அதை அரசுடைமையாக்கி விடும். விஷயம் புரிகிறதா? தனியார் கம்பெனிகள் என்றால் 15 தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு என தனியாக அரசு அலுவலகம் வைத்திருக்கிறது.

தினமலரில் வந்த செய்தி கீழே:

நில சீர் திருத்த சட்ட பணிகளை கண்காணிக்கும் துணை கலெக்டர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரிடம், ஒப்படை அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சிலரிடம் உபரியாக உள்ள நிலங்களை பெற்று, நிலம் இல்லாதோருக்கு வழங்கும் நில சீர்திருத்த சட்டம், சுதந்திரத்துக்கு பின் கொண்டுவரப்பட்டது. 

தமிழக நில சீர்திருத்த, நில உச்சவரம்பு சட்டம், 1961ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது, 1970 பிப்., 15 முதல் நடைமுறையில் உள்ளது. நில உச்சவரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின், 1983, மார்ச் முழுவதும், 1.11 கோடி ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில், 72 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 49 லட்சம் ஏக்கர், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நில உச்சவரம்பு சட்டம், தற்போதும் நடைமுறையில் உள்ளது. சட்ட விதிகளின்படி, நிலம் எடுப்பு, பட்டா மோசடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளுக்காக, மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட அளவில், துணை கலெக்டர் தலைமையிலான பிரிவு, நில உச்சவரம்பு சட்ட பணிகளுக்காக இயங்கி வந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, சில மாதங்களுக்கு முன், நில சீர்திருத்த பணிகள் அனைத்தும், ஆர்.டி.ஓ., எனப்படும், வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நில சீர்திருத்த அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் ஒப்படை வழங்கும் அதிகாரிகளாக, அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில சீர்திருத்த சட்டத்தில், நிலம் எடுப்பு, ஒப்படைப்பு தொடர்பான பணிகள், சப்-கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உபரி நிலம் ஒப்படைப்பு, நில சீர்திருத்தம் போன்ற பணிகள், சட்ட வழிகாட்டுதலின்படி, வருவாய் கோட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படும். 

இது குறித்து, மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில், சப்-கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


படித்து விட்டீர்களா? யாரெல்லாம் ஏகத்துக்கும் சொத்துக் குவித்து வைத்திருக்கின்றீர்களோ அவர்கள் உடனடியாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று வாழாவிருந்து விடாதீர்கள். அதென்ன தர ஏக்கர் என்று கேள்வி கேட்பவர்கள் போனில் அழைக்கவும். அல்லது மெயில் அனுப்பவும்.

விரைவில் பாகம் பிரித்த சொத்தின் உரிமையாளர், இறந்து போனால் அந்தச் சொத்தின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்விக்கும், வில்லங்கமான ஒரு விஷயத்திற்கு விளக்கம் எழுத இருக்கிறேன். 

Monday, August 28, 2017

நிலம் (41) - இந்து ஒருவரின் முஸ்லிம் மகனுக்கு சொத்துரிமை உண்டா?

நண்பரே எனக்கும் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்லுங்கள்,

ஒருவர் இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு சொத்து உரிமை உள்ளதா?  அவரின் தந்தை 1991ம் ஆண்டும், தாய் 2002ம் ஆண்டும் இந்துவாகவே இறந்தனர். அவர் முஸ்லிமாக மாறிய ஆண்டு 2008. முஸ்லிமாக மாறிய பிறகுதான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு ஒரு அண்ணன், இரண்டு சகோதரிகள். அனைவரும் இந்துவாகவே உள்ளனர். அவர்களின் தந்தை பெயரில் தற்போது 10 சென்ட் நிலம் உள்ளது. அவரால் அந்த சொத்தில் பங்கு கேட்க உரிமை உள்ளதா? இதற்கு ஒரு வழி சொல்லுங்கள். 

நன்றி,  தஸ்.கார்த்தி.


இப்படி ஒரு மெயில் தஸ் கார்த்தி என்பவர் அனுப்பி இருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்று எதுவுமே தெரியாது. ஒரு சட்ட விளக்கம் கேட்கிறார். வக்கீலிடம் சென்றால் செலவு செய்தாக வேண்டும். இலவச சட்ட விளக்கம் கேட்கின்றோமே நம்மைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டாவது கேள்வியைக் கேட்கலாம் என்று நினைக்கவில்லை. மொட்டையாக ஒரு மெயில் அனுப்பி வைக்கிறார்கள். ஒரு சிறிய அறிமுகத்துக்கு கூட சிரமப்படுகின்றார்கள். அது அவர்களின் பிரச்சினை. என்னிடம் உதவி கேட்டால் செய்ய முடியாது என்றா சொல்ல முடியும்?

கார்த்தி உங்களின் மெயிலைப் படித்தேன். தாங்கள் கேட்டிருக்கும் கேள்வியின் சாராம்சம் என்னவென்றால், இந்து ஒருவரின் மகன் முஸ்லிமாக மதம் மாறினால் அவருக்கு தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு தந்தையின் சொத்தில் பாகம் கிடைக்குமா? என்பதுதான். சரியா?

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமைச் (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமைச்(திருத்தம்) சட்டம் 2005 ஆகியவைகளின் படி பிரிவு 26ல் மதம் மாறியவர்களின் சொத்துரிமையை இந்தப் பிரிவு தடை செய்யவில்லை. ஆனால் முஸ்லிமாக மாறியவரின் வாரிசுகள் அந்தச் சொத்தில் பாகம் கோர முடியாது என்கிறது அப்பிரிவு. இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 1850 ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட கேஸ்ட் டிஸெபிளிட்டி ரிமூவல் சட்டத்தின் (Caste Diablities Removal Act 1850) படி மதம் மாறியவர்களுக்கான மத வேறுபாடு உரிமை நீக்கம் மாற்றியமைக்கப்பட்டது.

ஆகவே அந்த 10 செண்ட் நிலத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய வாரிசுக்குப் பங்கு உண்டு. அந்த வாரிசு உயிருடன் இல்லை என்றால் அவரின் வாரிசுகளுக்கு அந்தப் 10 செண்ட் நிலத்தில் உரிமை இல்லை.

ஒரு உபகுறிப்பு:

இந்தியாவில் முஸ்லிம் மதத்தைப் பொறுத்தவரை ஹனபி, ஷபீ, இத்னா ஆஷாரி மற்றும் இஸ்லாமி என நான்கு சட்டங்கள் இருக்கின்றன. இஸ்லாமி சட்டத்தில் நிஸாரி மற்றும் முஸ்தாலி ஆகிய உட்பிரிவுகளும் இருக்கின்றன. இருப்பினும் மாலிகி மற்றும் வஹாபி ஆகிய சட்டங்களும் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றன. இத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் பல வழக்குகளை இந்தியாவின் மற்ற குடிமக்களுக்கு உள்ள பொதுவான சட்டங்களின் படியே தீர்க்கின்றன. முஸ்லிம் சட்டத்தில் சொத்துக்களின் வாரிசுரிமை, விற்பனை ஆகியவற்றில் பல பிரிவுகள் உள்ளன. சொத்துக்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்க வேண்டும். தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழலைத் தவிர்த்து விடலாம்.

மேலும் ஒரு உபகுறிப்பு:

உங்களின் கேள்வி பொதுப்படையானது என்பதாலும் எனது நிலம் (40) இந்துவானவர் முஸ்லிமானால் வாரிசுரிமை எப்படி இருக்கும் தொடருக்குத் தொடர்பு உடையதாக இருப்பதாலும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன். ஒரு உதவி கேட்கும் போது முறையாக கேள்வி கேட்டல் அவசியமென்று கருதுகிறென். ஆகவே இனிமேல் வேறு எவரிடமும் உதவி கேட்க விரும்பினால் முறைப்படி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அதன் பிறகு கேள்வி கேளுங்கள் என்று விரும்புகிறேன். அது உதவி செய்பவருக்கு மகிழ்வைத் தரும் என நினைக்கிறேன். அதைச் செய்வது செய்யாததும் உங்கள் விருப்பம். 

தொடர்ந்து இணைந்திருங்கள். சுவாரசியமான பல வழக்குகளை அலசலாம்.

Saturday, August 26, 2017

நிலம் (40) - இந்துவானவர் முஸ்லீமானால் வாரிசுரிமை எவ்வாறு இருக்கும்?

ஒரு வழியாக பிக் பாஸில் பிந்து மாதவியின் தோளில் கை போடும் அளவுக்கு வையாபுரி நெருங்கி விட்டார் அண்ணன்(??) என்கிற உறவில். புறம் பேசும் அளவுக்கு ஈனப்புத்தி உள்ளவர்கள் பிக்பாஸில் இல்லாதிருப்பது நன்றாக இருக்கிறது. குரோதங்களும், துரோகங்களும், கொலைகளும், கெடுமதியும் இல்லாமல் இருக்கும் சூழலைப் பார்க்கும் போதும், அது பற்றிப் படிக்கும் போதும் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகிறது. 

எனக்கு நீண்ட நாட்களாக ஏன் ஜானகிராமனின் படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன என்பது புரியாமல் இருந்தது. பிக்பாஸ் பார்த்த பிறகு அவரின் நாவல்களின் அடிநாதம் புரிபடுகிறது. அவரது படைப்புகளில் உறவுகளின் இடையே உண்டாகும் உணர்ச்சிகளால் விளையும் செயல்களால் நாவல் தொடர்ந்து நடைபெறும். அடிதடி இல்லை, கொலைகள் இல்லை. அவரின் நாவல்கள் மனதை வருடி விட்டுச் செல்லும் தன்மையானவை.

மனிதர்களுக்கு எதுவும் இன்பகரமானதாக இருந்தால் தான் மகிழ்வார்கள். அதை ஜாரா அருமையாக கையாண்டிருக்கிறார். இவரைப் போன்ற நாவலாசிரியர்கள் இப்போது இல்லை என்பது முகத்திலறையும் உண்மை. தற்கால பிரபலமான நாவலாசிரியர் பாலகுமாரனின் நாவல்கள் மனித குலத்துக்கு தவறான வழிகாட்டுதல்களை சொல்லிச் செல்பவை. ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரை வியாபாரப் பொருள். அதை தன் நாவல்களில் புகுத்தி ஏற்கனவே குழம்பிக் கிடப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார் பாலகுமாரன். அது ஒரு பக்கம் போகட்டும். 

சமீபத்தில் கேரளாவிலிருந்து ஒரு மலையாளி முஸ்லிம் என்னை அழைத்திருந்தார். கோவையில் தான் வசித்து வந்தாராம். எர்ணாகுளத்தில் செட்டிலாகி விட்டாராம். அவர் சொத்து ஒன்றினைக் கிரையம் பெற இருப்பதாகவும் அது பற்றிய ஆலோசனையை போனிலேயே சொல்ல முடியுமா என்று கேட்டார். பெரும்பாலும் ஆவணங்களைப் படிக்காமல் எதுவும் சொல்வது வழக்கமில்லை என்றாலும் பொதுவான சந்தேகம் என்றால் சொல்கிறேன் என்றும் சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா என்று கேட்டால் ஆவணங்களைப் படிக்காமல் சொல்ல இயலாது என்றும் சொன்னேன்.

பொதுவான விஷயம் தான் என்றுச் சொல்லி விட்டு தொடர்ந்தார். படியுங்கள், உங்களுக்கு மண்டை காய ஆரம்பித்து விடும்.

அதாவது என்னிடம் போனில் பேசியவர் வீடு ஒன்றினை விலைக்கு வாங்க இருப்பதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் இந்துவாக இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்தவரின் மகன் என்றும், அவரின் அப்பா இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கும் வாரிசுகள் இருக்கின்றார்கள் என்றும் சொன்னார். இந்துப் பெண்ணுக்கு ஒரு ஆண் வாரிசு இருப்பதாகவும் சொன்னார். நான் அந்த வீட்டினைக் கிரையம் பெற விரும்புகிறேன், எனக்குத் தெரிய வேண்டியது இந்துப் பெண்ணுக்குப் பிறந்த பையனுக்கு அந்த வீட்டில் சரி பாதி பாகம் வருமா?  வராதா? எனக் கேட்டார். 

அவர் கேள்வியை வெகு சாதாரணமாகக் கேட்டு விட்டார். எனக்கோ தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. சொத்துரிமைச் சட்டம் இந்தியாவில பல அலகுகளாக பிரிந்துள்ளது. இந்து, கிறிஸ்து, முஸ்லிம், பார்சி, காஷ்மீர் என பல பிரிவுகள் இருக்கின்றன. ஏன் பாண்டிச்சேரிக்கும் தனி சட்டம் இருக்கிறது. பெரும்பாலும் இதுவரை இந்துக்கள் சொத்துக்கள் பற்றியே கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. அது பற்றிய வழக்குகள், விபரங்கள், சட்டங்கள் படித்திருக்கிறேன். 

என் வக்கீல் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். ’உனக்கு மட்டும் தான்யா இப்படியெல்லாம் கிளையண்ட் வருவார்கள்’ என்று அலுத்துக் கொண்டனர். ஒரு சிலர் இருவருக்கும் சரிபாகம் என்றுச் சொன்னார்கள். ஒரு சிலர் தெரியாது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ அது என்ன விஷயம் என்று அறிந்து கொள்ளும் வரை உறுத்திக் கொண்டிருக்கும். ஆகவே அதற்கான முயற்சிகளை எடுத்தேன். சட்டப்புதையல்களில் தேட ஆரம்பித்தேன். கிடைத்தது அவரின் கேள்விக்கான விடை.

இந்து ஒருவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய பின்பு அந்த மார்க்கத்தின் படி வாழ்ந்து இறந்து உள்ளார் என்றால் அவரின் சொத்துக்கள் முஸ்லிம் சட்டப்படித்தான் பாகம் பிரியும். உங்களது கேள்விக்கு விடை என்னவென்றால் இந்து ஒருவர் இந்துவாக இருக்கும் போது இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார். அவர் மட்டும் பின்னால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து குழந்தைகள் பெற்றிருக்கிறார். அவர் காலமான பிறகு அந்தச் சொத்துக்கள் முஸ்லிம் பெண்ணுக்கும் அவரது முஸ்லிம் மகனுக்கு மட்டுமே பாத்தியமாகும். இந்துப் பெண்ணுக்குப் பிறந்த மகனுக்கோ அல்லது அவரது இந்து மனைவிக்கோ சொத்தில் பாகம் கிடைக்காது என்றுச் சொன்னேன். முகம்மதியர் பாகப்பிரிவினைச் சட்டத்தில் இயல் 14வது பிரிவில் இந்தக் குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.

ஒரு வழியாக அவருக்கு விடை கிடைத்து விட்டது. உங்களுக்கும் ஒரு விஷயம் தெரிந்து விட்டது.

தொடர்ந்து இணைந்திருங்கள். பல்வேறு சட்டங்களைப் பற்றி அலசுவோம்.

Thursday, July 20, 2017

நிலம் (39) - சுவாரசியமான வழக்கு - எது முதலில்

ரியல் எஸ்டேட் தொழில் தற்போதைய சூழலில் கடலுக்குள் அகப்பட்ட தோணி போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ரெரா என்கிறார்கள், ஜிஎஸ்டி என்கிறார்கள் இன்னும் என்னென்னவோ சொல்கிறார்கள். மணல் விலையை யார் நிர்ணயிக்கின்றார்கள் என்பது தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது போல மர்மமாக இருக்கிறது. அரசு ஒரு விலை சொல்கிறது, மார்க்கெட்டில் ஒரு விலை விற்கப்படுகிறது. வீடு வாங்கவோ அல்லது வீட்டு மனை வாங்கவோ விரும்பினால் குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதை தான் இனி. மிடில் கிளாஸ் மக்களின் அத்தியாவசிய தேவையான வீடு இனி அவர்களுக்கு வசப்படுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இரண்டொரு நாட்களுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைக்கு பட்டா தரமாட்டேன் என்று ஒருவர் அணுகினார். என்னவென்று பார்த்தால் எனக்கு தலையே கிறுகிறுத்தது. சுமார் 25 வீட்டு மனைகளுக்கான பட்டா பிரச்சினையாக இருக்கிறது. தற்போது அரசு நிலம் என்று வருகிறது. வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் ரிட்டயர்ட் ஆகி வீட்டில் இருக்கின்றார்கள். இதைச் சரி செய்து தர முடியுமா? என்றுக் கேட்டிருக்கின்றார்கள்.

ஒரு ஊரில் பெரும் தனக்காரர் இருந்திருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. அவைகளில் அவர் விவசாயம் செய்து வந்தார். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக தன் நிலத்தில் பெரிய ஏரியைக் கட்டி அதில் தண்ணீர் தேக்கி பரம்பரை பரம்பரையாக தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்திருக்கிறார். தன் நிலத்தில் விளையும் விவசாய பொருட்களை அருகில் இருக்கும் ரெயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு சென்று ரயிலில் ஏற்றி பக்கத்து ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஏரி நிரம்பி உடைப்பெடுத்து வழிந்து அது ரயில்வே தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டன. ரயில் பாதை முற்றிலுமாக அழிந்து விட்டது. அரசாங்கம் இவரின் மீது ஏரியைக் கவனமாக பராமரிக்காத காரணத்தினால் உடைப்பு ஏற்பட்டதாகவும், ஆகவே இந்த இழப்புக்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டுமென்று வழக்குத் தொடுத்தது.

அந்த ஊரில் புகழ் பெற்ற வக்கீல் ஒருவரிடம் வழக்கு விவரத்தினைத் தெரிவித்து ஜெயித்துக் கொடுக்கும்படியும், அட்வான்ஸாக பணமும் கொடுத்து விட்டு வந்து விட்டார் விவசாயி. நீண்ட நாட்களாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே இல்லை. திடீரென்று ஒரு நாள் வக்கீலுக்கு வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது என அறிவிப்பு வர ஆள் சரியான டென்ஷன் ஆகி விட்டார். வழக்கு விபரங்கள் ஏதும் இல்லை, ஆவணங்கள் ஏதும் இல்லை. வழக்குதாரர் ஊரில் இருப்பதால் உடனடியாக வரச்சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார். இரவெல்லாம் தூக்கமில்லாமல் சிந்தனையில் இருந்தவர், விடிகாலையில் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு வழக்கு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டு சமையற்காரன் நேரமாகி விட்டது எனவும், சாப்பிட வரும்படியும் அவரை அழைக்க, வருகிறேன் என்றுச் சொல்லி மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் சமையற்காரன் இவரை சாப்பிட அழைக்க, அவனிடம் இவர் எரிந்து விழுந்திருக்கிறார். வழக்கு விபரத்தைச் சொல்லி என்ன செய்வதென்று தெரியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன் உனக்கு நான் சாப்பிடுவது தான் முக்கியமா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த சமையற்காரன் எது முன்னாலே என்று கேட்டுப் பாருங்கள். வழக்கே முடிந்து விடும் என்றுச் சொல்ல வக்கீலுக்கு பொறி தட்ட குஷியாகி விட்டார். ரயில்வே நிலையம் அமைப்பதற்கு முன்பு ஏரி கட்டப்பட்டதா? இல்லை ரயில்வே நிலையம் வந்த பிறகு ஏரி கட்டப்பட்டதா? இந்தக் கேள்விக்குப் பதில் தான் வழக்கின் தீர்ப்பும். எந்த வித இழப்பீடும் தர வேண்டியதில்லை என வழக்கில் வெற்றி பெற்று விட்டார் அந்த வக்கீல். சட்டப்புத்தகத்தைப் படித்து பெரும் புகழ் பெற்றவரானாலும், அவரின் சமையறகாரனின் புத்திசாலித்தனம் தான் அந்த வழக்கில் அவர் வெற்றி பெற உதவியது. 

இந்தக் கதையில் இருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளலாம். வழக்கே ஆனாலும் சட்டப்புத்தகத்தினால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. அனுபவம் என்றொரு விஷயம் இருக்கிறது. அந்த அனுபவ அறிவு தான் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வினைத் தரும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் பலரும் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என ஆசைப்பட்டு வருகின்றனர். கொஞ்ச நாளில் ச்சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்பதாய் கருதத் தொடங்கி விடுகின்றனர். நொடிக்கு நொடி மாறும் உலகம் இது. இந்த நிமிடத்தில் இருக்கும் ஒரு விஷயம் அடுத்த நொடியில் இருப்பதில்லை. ரியல் எஸ்டேட் தொழில் கற்றுக் கொள்வதல்ல. ஒவ்வொரு சம்பவத்திலும் கற்றுக் கொள்பவை. 

ஆயிரக்கணக்கில் பத்திரங்கள் படித்திருக்கிறேன். கோயம்புத்தூர் நகரின் ஒட்டு மொத்த சொத்தின் விபரமும் என்னிடத்தில் இருக்கின்றன. ஒரு சொத்தின் தன்மையை நான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொண்டு விடுவேன். லீகல் சரி செய்யலாம். ஆனால் நடை முறை என்பது வேறு. தமிழகத்தின் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ரெவின்யூ டிபார்ட்மெண்டில் இருப்போருக்கு எல்லா விஷயமும் தெரிந்து விடுவதில்லை. ரெவின்யூ டிபார்ட்மெண்ட் என்பது ஒரு கடல். என் அறிவு என்பது அதில் இரு துளி மட்டும் தான். பிற விஷயங்கள் அனுபவத்தில் மட்டுமே தான் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விஷயங்களைத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். 

வெறும் ஏட்டறிவு மட்டும் இருந்தால் அதனால் பிரயோஜனம் ஏதுமில்லை என்பதைத்தான் அந்த சுவாரசியமான வழக்குச் சொல்கிறது.

குறிப்பு : மேலே இருக்கும் வழக்கு விபரம் அப்துற் றஹீம் அவர்களின் ’எண்ணமே வாழ்வு’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. நன்றி!


Friday, July 7, 2017

நிலம் (38) - அன் அப்ரூவ்டு மனைகளை அப்ரூவ்ட் செய்வது எப்படி

தவறுகளுக்குப் பிராயசித்தம் செய்தால் சரியாகி விடும் என்பது இந்து மத வழக்கம். அதை அரசும் செய்கிறது. சட்டத்தினை மீறினால் அரசுக்குப் பணம் கட்டு, சரி செய்து தரலாம் என்கிறது. பெரும்பான்மை மக்களின் நன்மையை உத்தேசித்து இந்த முடிவுக்கு வருவது நல்ல விஷயம் தான். கிராமப்புறங்களில் பஞ்சாயத்தில் ஒரு சில விஷயங்களில் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்படும். அபராதம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகி விடும். என்றாலும் அபராதம் செலுத்தியவர்களுக்கு அது அவமானமாகவே இருக்கும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். 

பஞ்சாயத்து அப்ரூவ்டு என்ற ஒன்று இல்லாத போது விற்பனை களை கட்டியது. அதை பதிவுத்துறையும் ஏற்றுக் கொண்டு பதிவு செய்தது. அரசுக்கு வருமானமும் கொட்டியது. பதிவுத்துறைக்கும் பல வருமானங்கள். பஞ்சாயத்துக்களுக்கு வருமானம் கொட்டியது. ஒரு தவறை அழகாக எந்த வித மனசாட்சியும் இல்லாமல் அனைவரும் சேர்ந்து செய்தார்கள். அது சரியல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது. நீதிமன்றம் அதற்கும் ஒரு விதிவிலக்கினை கொடுத்து மனை வரன்முறைப் படுத்த உத்தரவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மொத்தத்தில் பாதிக்கப்பட்டது யார் தெரியுமா? பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் விலை குறைவு என்று நினைத்து வாங்கினார்கள் அல்லவா அவர்கள் தான் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். விலை குறைவு என்று நினைத்தவர்களுக்கு இப்போது அந்த மனையை வரன்முறைப்படுத்த கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.  மனை விற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மனை வாங்கியவர்கள் அப்போதே டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அப்ரூவல் மனைகளை வாங்கி இருந்தால் இந்தச் செலவு இல்லை அல்லவா? பதிவு துறையினருக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை. மனை விற்றவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லை. அரசுக்கு எந்த விதப் பிரச்சினையும் இல்லை, பஞ்சாயத்தார்களுக்கும் எந்த வித பிரச்சினையும் இல்லை. 

மொத்தப் பிரச்சினையும் மனை வாங்கியவர்களின் தலையில் வந்து விடிந்திருக்கிறது.  படித்துப் படித்துச் சொன்னாலும் எவரும் கேட்கவில்லை. டிடிசிபி மனைகள் விலை அதிகம் என்றால் அந்தளவுக்கு செலவு செய்தால் தான் மனை அப்ரூவல் பெற முடியும் என்பதால் விலை அதிகம். 

பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகளுக்கு யாரிடமும் எவரிடமும் அப்ரூவலும் பெற வேண்டியதுமில்லை செலவும் இல்லை. அதனால் தான் விலை குறைத்து விற்கப்பட்டது. படித்தவர்களும் அன் அப்ரூவ்டு மனைகளைத்தான் வாங்கினார்கள். இப்போது அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி இனி அவ்வாறு வாங்கிய அன் அப்ரூவ்டு மனைகளை எப்படி அப்ரூவ்டு செய்வது என்று பார்க்கலாம்.

பத்திரத்தின் நகல்
பட்டா காப்பி
அ பதிவேடு
வில்லங்கச் சான்றிதழ்
மனை வரைபடம் ( சர்வே நம்பர் காட்டப்பட்டிருக்க வேண்டும்)
நிலத்தின் புல வரைபடம்
கிராம புல வரைபடம்
மனைக்குச் செல்லும் பாதை வரைபடம் - சர்வேயரிடம் சான்றிதழ் பெற வேண்டும்
தாசில்தார் என்.ஓ.சி - (விவசாய பூமியாக இருந்தால்)

மேற்கண்ட ஆவணங்களை வைத்து இணையதளத்தில் அப்ளை செய்து கட்டணம் செலுத்தி மேற்கண்ட விண்ணப்பத்தை உள்ளூர் பஞ்சாயத்திலும், உள்ளூர் அல்லது நகர் புற திட்டக்குழுமத்திடமும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் ரெகுலரிஷேசன் மற்றும் அபராத கட்டணங்களை கேட்கும் போது கட்டினால் தனி வீட்டு மனையை சப்டிவிஷன் செய்து அப்ரூவல் வழங்குவார்கள்.

இது பற்றிய மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் போனில் தொடர்பு கொண்டு நேரில் வந்தால் உதவி செய்யத் தயாராக உள்ளேன். 

Saturday, June 24, 2017

நிலம் (37) - அரசின் புதிய வழிகாட்டி மதிப்பு

நீதிமன்றங்களின் ஒரு சில தீர்ப்புகள் எனக்குள் பல்வேறு கேள்விகளை உருவாக்கி விடுகின்றன. பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள் என்று ஒரு விஷயமே இல்லாத போது பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்ட் மனைகள் என்று விற்பனை நடந்த போது எந்த அரசும், அரசு அமைப்பும் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு பதிவாளரின் வேலை எந்த ஆவணமாக இருந்தாலும் பதிவு செய்து கொடுத்தல் என்பது சட்டம் என்றாலும் இப்போது பதிவாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்கின்றார்கள். ஆவணங்களைக் கேட்கின்றார்கள். அவர்கள் ஏதும் தவறு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகக் கேட்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

நில வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ற வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டு மனைகளை அப்ரூவல் செய்ய தனி அரசு அமைப்புகள் இருக்கின்றன. இருந்த போதிலும் பஞ்சாயத்து அப்ரூவ்ட் என்றுச் சொல்லி வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன. இவை அனைத்தும் அரசுக்கும் தெரியும், நீதிமன்றங்களுக்கும் தெரியும். எவரும் நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆனால் திடீரென்று பஞ்சாயத்து அப்ரூவ்ட் மனைகள் சட்ட விரோதமானவை என்றுச் சொல்லி மனைப்பதிவினை தடுக்கிறது நீதிமன்றம். பதிவகங்களும் பத்திரங்களை பதிவு செய்ய மறுக்கின்றன. இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டவைகள் சட்டத்திற்குப் புறம்பானவை தானே? அதை என்ன செய்வது? சட்டத்திற்குப் புறம்பாக பதிவு செய்யப்பட்ட அன் அப்ரூவ்ட் மனைகளை அரசு ஒரு ஆணை பிறப்பித்து அப்ரூவ்ட் மனைகளாக மாற்றலாம் என்கிறது. அதற்கும் பல்வேறு கட்டணங்களை விதித்திருக்கிறது. இந்தக் கட்டணங்களைச் செலுத்துவதை விட அப்ரூவல் செய்திருக்கலாம் என்று இப்போது பலரும் நினைக்கின்றார்கள். அது தண்டனை என்றே கருத வேண்டி இருக்கிறது.

விகடனில் அரசின் அதிரடி அறிவிப்பான வழி காட்டி மதிப்புக் குறைப்பு பற்றிய வெளிவந்திருந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதற்காகத்தான் இந்தப் பதிவு.

இனி அந்தப் பதிவினைப் படியுங்கள்:
=====================================

தமிழ்நாடு அரசு, வழிகாட்டி மதிப்பினை 33% குறைப்பதாக பிரம்மாண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால்  பொது மக்களுக்கு இமாலயப் பலன் கிடைக்கும் என்கிற மாதிரி ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அந்த அறிவிப்பின் இறுதியில், இந்த மதிப்புக் குறைவினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஆவணங்களின் பதிவுக் கட்டணம் 1 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகித மாக உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவு விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக ரியல் எஸ்டேட்  துறைக்கு இது மற்றுமொரு சோதனையாக வந்து சேர்ந்திருக்கிறது.

அரசினால் உயர்த்தப்பட்ட பதிவுக் கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதமாகக் குறைக்கப்பட வேண்டும். ஏனென்றால், பொது மக்களுக்கு ஒரு சலுகை வழங்கும்போது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படத்தான் செய்யும். அதை ஈடுகட்ட அதே துறையில் வரி விதிக்கமாட்டார்கள். வேறு ஆடம்பரப் பொருள்கள், மதுபானங்கள் போன்று சில இனங்கள் மீது கூடுதல் வரி விதித்து அந்த இழப்பை ஈடுகட்டுவார்கள். எனவே, பதிவுக் கட்டணத்தை உடனே குறைத்தாக வேண்டும்.

அடுத்து, கட்டடங்களுக்குப் பொதுப்பணித் துறை மதிப்பில் இருந்து 33% சலுகை வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போதுள்ள வழிகாட்டி முறை 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது, முதல் மூன்றாண்டுகளுக்கு அல்லது ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை, சில சமயத்தில் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். கடந்த 2010-ம் ஆண்டு  வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது  ஓரளவுக்கு நியாயமாக இருந்தது. ஆனால், 2012-ல்  திடீரென்று ஏராளமான இடங்களில் வழிகாட்டி மதிப்பு மீண்டும் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த முறை 5 மடங்கு, 10 மடங்கு, 20 மடங்கு ஏன் அதற்கு மேலும் கூட மதிப்பு உயர்த்தப்பட்டது. இதனால் பதிவுத் துறையின் வருமானம் வீழ்ந்தது. நிர்ணயித்த இலக்கில் பாதிகூட தேறவில்லை. 

பல இடங்களில் விற்பனை விலையைவிட, வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாகப் பாதிக்கப் பட்டு மாநிலத்தின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து. நடுத்தர வர்க்கத்தினரின் இல்லக் கனவு தகர்க்கப்பட்டது.

இப்போது மனை வாங்கும் எல்லோருக்கும் சின்ன சாக்லேட் தந்துவிட்டு, வீட்டோடு சொத்து வாங்குபவர்களிடம் பிக் பாக்கெட் அடிக்கப்படு கிறது. பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையின்படி, கட்டடங்களின் மதிப்பு 33% குறைக்கப்படவில்லை. முன்புபோலவே உள்ளது. இந்த அறிவிப்பால், மனை வாங்குபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்குக் கிடைக்கும் சலுகை ரூ.630 மட்டுமே. இது அகோரப் பசியால் தவிப்பவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வேலை.

8.6.17 நிலவரப்படி, முத்திரைக் கட்டணம் 7%, பதிவுக் கட்டணம் 1% எனப் பத்திரப் பதிவுச் செலவு மொத்தம் 8 சதவிகிதமாக இருந்தது. இப்போது, முத்திரை கட்டணம் 7% பதிவுக் கட்டணம் 4 சதவிகிதமாக மொத்தம் 11 சதவிகிதமாக அது உயர்ந்துள்ளது.  

இன்றைக்கு, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மனையில் கட்டப்பட்ட  ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீட்டோடு சொத்து வாங்குவதாக வைத்துக்கொண்டால், 

சொத்து மதிப்பு -   ரூ.2,00,000

முந்தைய கணக்கீடு :

முத்திரைக் கட்டணம்  -  ரூ. 14,000
பதிவுக் கட்டணம் - ரூ.2,000
மொத்தப் பத்திரப் பதிவுச் செலவு - ரூ.16,000

புதிய கணக்கீடு: 

மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 33% குறைக்கப்பட்டதால், ரூ.1 லட்சம் மதிப்புகொண்ட  மனையின் தற்போதைய மதிப்பு ரூ.67,000. அதற்கு 11% பத்திரப் பதிவுச் செலவு ரூ.7,370. ரூ.1 லட்சம் வீட்டுக்கு மொத்தச் செலவு  ரூ.11,000. ஆக மொத்தம்  ரூ.18,370 பத்திரப் பதிவுக்குச் செலவிட வேண்டும். அதாவது, அரசுக்குக் கூடுதல் வருமானம் ரூ.2,370 இதுதான் சலுகை வழங்கும் லட்சணமா? பதிவுத் துறை பற்றிய அறிவிப்பு,  வலது கையால் தந்துவிட்டு இடது கையால் பிடுங்கிக் கொள்வதைப் போலத்தான் உள்ளது.

பொதுவாக, தமிழ்நாட்டில் கட்டடத்தோடு விற்கப்படும் சொத்துகள்தான் அதிகம். அதுவும் கட்டடங்கள் அனைத்தும் ரூ.1 லட்சம் என மதிப்பிட முடியாது. பல லட்சங்கள், கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கட்டடங்கள்கூட இருக்கின்றன. எனவே, அரசின் அறிவிப்பால், சொத்து வாங்குபவர்களின் செலவுதான் அதிகரிக்குமே தவிர குறையாது. 

மேலும், மனையின் மதிப்பு 33% குறைக்கப்படுவ தால், சொத்தின் மதிப்புக் குறையும். இதனால், கறுப்புப் பணப் புழக்கம் அதிகரிக்கும். உதாரணமாக,   ஒரு மனையை ஒருவர் சில மாதங்களுக்கு முன் ரூ. 1 கோடிக்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்குக் குறைவாக அவர் அந்த மனையை விற்கமாட்டார்.  ஆனால், இப்போது பத்திரத்தில் காட்டப்போவது ரூ.67 லட்சம் மட்டுமே. ஆக, ரூ.1 கோடி கைமாறும் நிலையில் ரூ.33 லட்சம் கறுப்புப் பணமாக மாற வாய்ப்புள்ளது.  

ஆகமொத்தத்தில், இந்த அறிவிப்பினால்,  சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்தப் பலனும் இல்லை. யாரை ஏமாற்ற இந்த 33% குறைப்பு அறிவிப்பு என்று தெரியவில்லை. எல்லாம் அந்த ‘சாமி’க்கே வெளிச்சம்!

Posted Date : 06:00 (18/06/2017)
குறைக்கவில்லை... அதிகரித்திருக்கிறார்கள்... தமிழக அரசின் கைடுலைன் வேல்யூ மேஜிக்!
- ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் பதிவுத் துறை தலைவர்

நன்றி : நாணயம் விகடன்