குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Wednesday, May 21, 2014

இப்படியும் சில பெண்கள்

இன்று காலையில் வழக்கம் போல வினாயகரை தரிசனம் செய்து விட்டு, வயதான அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இரயில்வேயில் டிரைவராக இருந்தவர். 32 வருடம் சர்வீஸ். ஒரு முறை கூட ஆக்சிடெண்ட் செய்யாதவர். அதற்காக பத்தாயிரம் ரூபாய் அவார்டும், ஹெச் எம் டி வாட்ச்சும் பரிசு பெற்றவர்.

”சார், ரேஷன் கார்டு முகவரி மாற்றத்திற்காக கோவை ஆர்டிஓ ஆபிசில் அருகில் இருக்கும் தாசில்தார் அலுவலகத்தின் மேல் மாடியில் இருக்கும் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.கணிணியில் ஒரு சீட்டுக் கொடுத்தார் அங்கிருந்த பெண்மணி” என்றார்.

ஒரு வாரம் கழித்து முகவரி மாற்றம் செய்து வாங்கி வரலாம் என்று சென்றேன். ”நாளை வாருங்கள். தாசில்தார் வெளியே சென்று விட்டார் என்றுச் சொல்ல நானும் வந்து விட்டேன். இப்படியே மூன்று மாதமாய் என்னை படாதபாடு படுத்தினார் அப்பெண்மணி" என்றார். 

ரிட்டயர்மெண்ட் வாங்கிக்கொண்டு வயதான காலத்தில் அமைதியாக இருக்க வேண்டிய வயதுள்ள கிழவரை, ரேசன் கார்டில் முகவரி மாற்றத்திற்காக அவரை மூன்று மாதம் அழைக்கழித்திருக்கிறார் அந்தப் பெண்மணி. என்ன ஒரு மனசோ அவருக்கு தெரியவில்லை.

மூன்றாவது மாதம் ஒரு நாள் காலையில் சென்றவர் அந்தப் பெண்மணியுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறார். அதற்கு அப்பெண்மணி ”உஷ் இது அலுவலகம்” என்று மிரட்டி இருக்கிறார்.

”இன்றைக்கு ரேஷன் கார்டு தரவில்லை என்றால் கலெக்டரிடம் போவேன்” என்றுச் சொல்லி சத்தம் போட்டிருக்கிறார் பிராமணர். 

அதன் பிறகு அவரின் கைப்பையில் இருந்து முகவரி மாற்றப்பட்ட ரேஷன் கார்டை எடுத்துக் கொடுத்திருக்கிறார் அவர்.  "இது போல கட்டாக பல ரேஷன் கார்டுகளை அவர் கைப்பையில் வைத்திருந்தார்" என்றார் பெரியவர்.

"கடவுளாகப் பார்த்துக் கொடுத்த வேலைக்காவது அவர்  நியாயமாக இருக்கவில்லை அந்தப் பெண்மணி" என்றார் அவர்.

வயதானவர்களிடம் சாபம் பெற்று அவர் என்ன சாதித்து விடப்போகிறார் என்று தெரியவில்லை.

கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் கைகளைக் கட்டிக் கொண்டு கோவில் கோவிலாய் ஏறி இறங்குகின்றார்கள். தான் செய்த பாபம் கழிக்க வெளியில் தெரியாமல் அனேக காரியங்களைச் செய்கிறார்கள். 

பெண்களுக்கு இரக்க உள்ளம் என்கிறார்கள். இந்தப் பெண்மணிக்கு என்ன மாதிரியான உள்ளமோ தெரியவில்லை.

ஏழை அர்ச்சகரின் சாபம் பலித்து விடக்கூடாது என நினைத்தேன். 


Wednesday, April 16, 2014

குக்கூச் சத்தமும் ஒரு அனுபவமும்





சித்திரை ஒன்றாம் தேதியன்று அன்று குருநாதர் ஆசிரமத்திற்குச் சென்று அவரிடம் அமர்ந்திருந்தேன். ஏகப்பட்ட நபர்கள் வந்து குரு நாதரை வணங்கிச் சென்றார்கள். அங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதாவது கொண்டு வந்து அவரிடத்தின் முன்பு வைக்கின்றார்கள். பக்தி என்பதை விட குருநாதரின் மீதான அன்பின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி வைத்திருந்த பலாப்பழம் அன்றுச் சரியான மணத்துடன் நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.

குருநாதர் அமைதியாக யோகத்தில் இருந்தார்.

அவரிடம் உட்கார்ந்திருந்தாலே அமைதி, ஆனந்தம் தான். குளிர்ச்சி தவழும், அமைதியான அவ்விடத்தில் அமர்ந்திருப்பதே ஒரு கொடுப்பினை தான். விழித்திருக்கும் போது ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லாது எங்கெங்கோ அலைபாயும் மனம் அவரிடத்தில் அமர்ந்திருக்கும் போது அமைதியுடன் இருக்கும்.

சிறிது நேரம் கழித்து, குரு நாதரின் அறையிலிருந்து வெளியில் வந்து எம் குரு ’ஜோதி சுவாமி’களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது குருநாதரைச் சந்திக்க வந்த அன்பர், குருநாதருடன் நேரடியாகப் பேசிப் பழகி மருத்துவ சிகிச்சை பெற்ற திரு.கனகராஜைச் சந்தித்தேன்.

திரு.கனகராஜ் இ.எஸ்.ஐயில் பணி செய்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு நோய்க்காக அலோபதி மருத்துவம் பார்த்திருக்கிறார். ஒரே ஒரு மாத்திரைதான் சாப்பிட்டாராம். எழுந்து உட்கார முடியவில்லை என்றார் அவர் கண்களில் ஒளி மின்ன.

இனி கனகராஜ் முடிந்தான் என்றுச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள். எல்லாமே படுக்கையில் என்றாகி விட்டதாம். அலோபதி மருத்துவமும் கைவிட அவர் தன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று முடிவு கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவரின் நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ”முள்ளங்காடு வெள்ளிங்கிரி சாமிக்கிட்டே போ!” என்றுச் சொல்லி பேரூந்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

உடம்பு முழுவதும் வீங்கிப் போய், நடக்க முடியாமல், உட்கார முடியாமல் பேருந்திலிருந்து நடத்துனர் இறக்கி அங்கேயே விட்டு விட்டுப் போய் விட்டாராம்.

அங்கிருந்து நடக்க முடியாமல் உருண்டே ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறார். சாமி அவரைப் பார்த்ததும் பதியில் இருந்த ஒரு சிலரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் போய் சிவனார் வேம்பு என்கிற மூலிகையின் வேரினைப் பறித்து வர சென்றிருக்கிறார்.

”கை பெரிசு சார், பச்சைப் பசேல்னு இருந்தது” என்றார் கனகராஜ்.

கை அளவு பெரிய சைஸ் சிவனார் வேம்பின் வேரை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து கனகராஜிடம் கொடுத்து இதைக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் வா என்றுச் சொன்னாராம்.

யார் யாரையோ பிடித்து வீட்டுக்குச் சென்ற கனகராஜ், தன் அம்மாவிடம் வேரைக் கொடுத்து இதை அரைத்துத்  தா என்றுச் சொல்லி படுக்கையில் படுத்து விட்டாராம்.

என் அம்மா அந்த வேரை எப்படித்தான் அரைத்தாரோ தெரியவில்லை. என்றார் கனகராஜ். ஒரு குவளை அரைத்த பச்சைப்பசேல் விழுதினை குடித்து விட்டு படுத்திருக்கிறார். அது நாள் வரை தூக்கமே இல்லாமல் இருந்தவர் நன்கு தூங்கியிருக்கிறார். மறு நாள் எழுந்து விட்டார்.

”ஆச்சரியம்! அதிசயம் !!” என்றார்.

”இன்று உங்கள் முன்பு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றுச் சொல்லி தலைமேல் இருந்த குரு நாதரின் புகைப்படத்தைப் பார்த்துச் சிரித்தார் அவர்.

”அது இருக்கும் ஒரு இருபதாண்டுக்கும் மேல்” என்றார் தொடர்ந்து

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

எம் குரு ’ஜோதி சுவாமி’ புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார்.

அப்போது குரு நாதரின் அறைக்குள்ளிருந்து ”குக்கூ குக்கூ” என்றொரு சத்தம் வர ஆரம்பித்தது.

உள்ளே பார்த்தேன். வெள்ளுடை உடுத்திய தேகப்பொலிவுடன் பெரியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவரிடமிருந்து தான் அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது.

“சாமி, அவர் என்ன செய்கிறார்?”

“வாசியோகத்தில் உள்மூச்சுப் பயிற்சியில் தியானத்தில் இருக்கிறார்”

“அப்படின்னா?”

“அவர் இப்போது மூச்சினை வெளியில் விடுவதும் இல்லை, உள்ளே இழுப்பதும் இல்லை, உள்ளுக்குள்ளேயே மூச்சினை செலுத்திக் கொண்டு தியானத்தில் இருக்கிறார்” என்றார்.

அந்தப் பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மனசு சலனமற்று இருந்தது.

உள்ளே குரு நாதர் அமைதியுடன் யோகத்தில் உட்கார்ந்திருந்தார்.



ஜல் ஜல் சலங்கை ஒலி



ஆவணம் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் முடிவாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கும் ஒரு ஊர். காவிரி ஆறு பாயும் கடை நிலைக் கிராமம். எனது தாத்தா ஊர் அதுதான். 

காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து தான் ஊரில் விவசாயம் ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று குளங்கள் இருக்கின்றன.

விவசாயம் ஆரம்பித்து விட்டால் விடிகாலையில் மாட்டு வண்டிகள் வயல்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு விதம். சில மாடுகள் கருத்தாய் இருக்கும். சில மாடுகள் சண்டித்தனம் செய்யும்.

என்ன தான் இருந்தாலும் அதுகள் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையும், வண்டிச் சக்கரத்தின் கடையாணியில் மாட்டியிருக்கும் ஒரு வித பூ இலை போன்ற தகடுகளும் இசைக்கும் ஒலிக்கு இணையாக எதையும் சொல்லி விட முடியாது.

சல சலவென மடையிலிருந்து வயலுக்குள் பாயும் தண்ணீரை உழப்பி இரண்டடி ஆழம் புதையும் சகதிக்குள் கால்களை வைத்து கொண்டு வெண்ணெய் போல உழும் வண்டி மாடுகளைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மாடுகள் இல்லையென்றால் மனிதர்கள் வாழ்வதற்கு பெரும் சிரமப்பட்டிருப்பார்கள்.

விவசாயம் ஆரம்பித்த உடனே ஆவணத்து ஆற்றங்கரையோரம் புதியதாக ஒரு இட்லிக் கடை முளைக்கும். சூடாக டீயையும், இட்லியையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆற்றுக்கு அடுத்து குளங்கள் அதைத் தொடர்ந்து வயல்வெளிகள், அவ்வயல்களுக்கு இடையே ஊர்ந்து செல்லும் வெள்ளை பாம்பு போல சிற்றாறுகள் என கண்களைக் கட்டி இழுக்கும் ஆவணம் கிராமம்.

விவசாயமெல்லாம் முடிவும் தருவாயில் ஆவணத்தான் குளத்தின் மறுகரையில் இருக்கும் மாயன்பெருமாள் கோவில் பொங்கல் வந்து விடும். மாட்டு வண்டி கட்டிக் கொண்டு அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வோம். ஜெயராஜ் மாட்டினைக் குளிப்பாட்டி கழுத்தில் சலங்கை கட்டி விடுவார். சும்மா ஜல் ஜல் என ஜலங்கைகள் ஒலிக்க மாட்டு வண்டியில் பயணிப்பதே ஒரு அலாதி சுகம் தான்.

மாமா, தாத்தா, அக்கா, தங்கை என அனைவரும் அங்கு ஆஜராவோம். சிறு வயதில் எனக்கு பெரிய ஆற்றைப் பார்க்க பயம். அதுவும் கருப்புக் கலரில் இருக்கும் தடுப்பையும், தடுப்பை மீறிக் கொப்பளிக்கும் தண்ணீரையும் பார்த்தால் கிலி பிடித்து விடும்.

கண்ணையும், காதையும் பொத்திக் கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வேன். ஆனால் மாரிமுத்து திரையரங்கில் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டை போடும் போது நானும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் தோழிகளின் முதுகில் டிஸ்ஸூம் டிஸ்ஸூம் என்று குத்தி சண்டையிடுவேன் என்று அம்மா சொல்வார்கள்.

இதெல்லாம் எனது கடந்த கால நினைவுகளாய் எதிரே மாட்டுக் கொம்பில் ஜலங்கை கட்டி, வண்டியில் தன் குடும்பத்தோடு வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைக் கண்ட போது எனக்குள் நிழலாடியது.

எங்கெங்கு காணினும் பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என்று வெள்ளிங்கிரி மலை அடிவாரம் முழுவதும் ஆட்கள் மயம்.

பலரின் கையில் ஊன்று கோல்களுடன் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசிக்கவும், மணோண்மணியம்மையைத் தரிசிக்கவும் ஆட்கள் படை படையாய் வந்திருந்தனர். நிமிஷத்திக்கொரு தரம் பஸ்கள் நிரம்பி வழியும் ஆட்களுடன் பயணித்துக் கொண்டிருந்தன.

சித்திரை மாதம் முதல் தேதி அல்லவா? அதனால் நானும் மனையாளும் குருதேவரைச் சந்திக்கச் சென்று விட்டு, மதியம் பதினொன்று போல முட்டம் நாகேஸ்வரரையும், முத்துவாளியம்மனையும் தரிசிக்கச் சென்று கொண்டிருந்த போது பார்த்தவை தான் மேலே உள்ளவை.

சித்திரை முதலாம் தேதி அன்று தான் அம்மனைத் தொட்டு வழிபாடு செய்ய அனுமதிப்பார்கள். சுமார் 5000 ஆண்டுகள் பழமையான அம்மன் அல்லவா அவர். வெள்ளி வளையம் அணிந்து அம்மனின் பாதங்கள் சிலு சிலுவென குளிர்ந்தது. ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அவருக்கு பாதம் சுத்தம் செய்து அம்மனின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன். மனசு இலேசாகிப் போனது. இதை விட பேரின்பம் என்ன வேண்டி இருக்கு?

நாகேஸ்வரப் பெருமான் பாம்பு சுற்றி இருக்க முழு அலங்காரத்தில் கொள்ளை அழகில் பார்ப்போர் மனதைச் சொக்கி இழுத்தார். சொக்கியின் கணவர் அல்லவா? எல்லோரையும் சொக்க வைத்து விடுவதில் அவருக்கு நிகர் அவரே.

காளகஸ்தி சென்று ராகு கேது பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்கே நாகேஸ்வரரைச் சந்தித்து பசும்பாலில் வாரமொரு தடவை அபிஷேகம் செய்தால் சொக்கியின் கணவர் ராகுவையும், கேதுவையும் சும்மா இருங்கப்பா, நம்ம பையன் இவர் என்றுச் சொல்லி சிபாரிசு செய்வார்.

தரிசனம் முடித்து பேரூர் நோக்கி வந்து கொண்டிருக்கையில் மாதம்பட்டியில் புதியதாய் முளைத்திருந்த ஒரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடையில் ஒரு காப்பியையும், வாயில் இட்டவுடன் கரைந்தோடிய பக்கோடாவையும் சாப்பிட்டு விட்டு சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்குள் நுழைந்தும் ஜல் ஜல் சலங்கை ஒளி  காதுகளில் கொண்டே இருந்தது.

நாம் இழந்து போன இன்பம் அல்லவா அந்தச் சத்தம் !


Monday, March 31, 2014

மனதைப் போட்டு அழுத்துகிறதா பிரச்சினை? இதோ வழி

மனிதர்களில் பெரும்பாலானோருக்குப் பிரச்சினையே அவர்களின் மனசு தான். அரை நிமிடம் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? அப்படியே அரை மணி நேரம் மனதில் எந்த ஒரு சிந்தனையும் இன்றி இருந்தால்....

தூக்கத்தில் தான் மனசு சிந்தனையற்று இருக்கும். அதுகூட சில சமயங்களில் கனவாய் வந்து மிரட்டும்.

வேறு வழி இன்றி தன்னிலை மறக்க தமிழக அரசின் மரணக்கடைக்குச் செல்ல வேண்டியதுதான். வித விதமான மருந்துகளை வாங்கிக் குடித்து தன்னிலை மறந்து போதையில் திளைத்தால் தான் மனதைப் பிடித்து அழுத்திக் கொண்டு படாதபாடு படுத்தும் அந்தப் பிரச்சினை தீரும்.

காதலி கோவித்துக் கொண்டு ஊடலாகி விட்டாள். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து. மனைவி கோவித்துக் கொண்டு போய் விட்டார். உடனே தமிழக அரசின் மரணக்கடை மருந்து என்று எதற்கெடுத்தாலும் மருந்தாய்க் குடித்துக் குடித்து மரணத்துக்கு வரவேற்பு வைக்கின்றார்கள்.

சரி என்னதான் வழி என்கின்றீர்களா?

ஒரு பிரச்சினை வந்து விட்டது. பிரச்சினை ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும். முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொண்டு விடுவோம் அல்லவா? அதற்குள் ஏன் மனதைப் போட்டு குழப்பி, குழம்பி அய்யோ அம்மா என்று அரற்ற வேண்டும்?

ஆகவே என்ன பிரச்சினை வந்தாலும் சரி, உடனே அட... என்று உதறித் தள்ளி விடுங்கள். மனசு இலேசாகி விடும். ஒரு நாள் அதை மறந்து விடுங்கள். பின்னர் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவு உங்களுக்கே தெரியும். மேட்டர் ஓவர்.

ஏதாவது ஒரு அரசியல்கட்சித் தலைவரை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 

ஒரே ஒரு தொழில், ஒரே ஒரு மனைவி, ஒன்றிரண்டு பிள்ளைகள் வைத்திருக்கும்  நம்மை விட எத்தனைப் பிரச்சினைகளை அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திப்பார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் கவலைப்பட்டு உள்ளுக்குள் புழுங்க ஆரம்பித்தால் அவர் ஹாஸ்பிட்டலில் ஹோமாவில் படுத்திருக்க வேண்டும். என்ன செய்கிறார்? சிந்தியுங்கள்.

ஆகவே ... இனி என்ன பிரச்சினை வந்தாலும் தூக்கித் தூர கடாசி விட்டு, அடுத்த வேலையில் மூழ்குங்கள். பிரச்சினை வந்த இடம் தெரியாமல் ஓடிப் போய் விடும்.

ஓகே !

”ஏங்க... ஏங்க....”

-இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் ஏங்கனுமோ தெரியலை!-(மனசுக்குள் நான்)

”என்ன கோதை?”

“லேட்டாயிடுச்சு... வந்து காய்கறி நறுக்கிக் கொடுங்க...” என்றாள்.

”என்ன கோதை காலையிலேயே ஆரம்பிச்சுட்டே, பேப்பர் படிக்க விட மாட்டியா?, தொந்தரவு செய்கிறாயே?” என்றேன்.

“அதுக்கு நீங்க சாமியாரா இருக்கணும். யாரும் தொந்தரவு செய்யமாட்டாங்க” என்றார்.

வேறு வழி !!! 

இது போன்ற பிரச்சினைகளை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீரவே தீராது.



Monday, March 24, 2014

பிரம்மஸ்ரீ எஸ்வி.ராமசாமி அய்யாவின் குருபூஜை

அன்பு நண்பர்களே,

பிரம்மஸ்ரீ எஸ்.வி.ராமசாமி அய்யாவின் முதலாமாண்டு குரு  பூஜை விழா நாளை 25.03.2014 அன்று காலை 10 மணி முதலாய் தொடங்க இருக்கிறது.

அதுசமயம் அய்யாவின் குருபூஜையில் கலந்து கொள்ள விழைவோர் கீழ்கண்ட முகவரிக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.


செந்தில் நகர்,
சிவலிங்கபுரம்,
எஸ்.ஐ.எச்.எஸ். காலனி,
ஒண்டிப்புதூர், கோவை

தொடர்புக்கு :

ஜோதி சுவாமி - 9894815954
பாலன் - 9486207916

Saturday, March 15, 2014

ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா அழைப்பிதழ்


கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருக்கும் அருள்மிகு விஸ்வகர்மா ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் பங்குனி மாதம் 5ம் நாள் - 19.03.2014 - புதன் கிழமை அன்று நடைபெற உள்ளது.

அது சமயம்  15.03.2014 சனிக்கிழமை முதல் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா தொடக்கம் ஆரம்பித்து நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மனின் அருள் பெற்று மகிழவும்.


Tuesday, February 25, 2014

தன்னாலே மனதுக்குள் எழும் கேள்வி

மன்னர் ஒருவர் ஓவியப் போட்டி ஒன்றினை வைத்தார். இரண்டு ஓவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆளுக்கொரு சுவர் எதிரெதிரே கொடுக்கப்பட்டது. சுவருக்கிடையில் திரைச்சீலை தொங்க விடப்பட்டது.

முதல் ஓவியர் சுவற்றில் அற்புதமான ஓவியத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்.

இரண்டாவது ஓவியர் சுவற்றினை பட்டை தீட்டி பாலிஷ் செய்து கொண்டிருந்தார்.

போட்டிக்கான கடைசி நாளும் வந்து விட மன்னர் வந்தார். திரைச்சீலை விலக்கப்பட்டது.

முதல் ஓவியரின் ஓவியம் கண்ணைப் பறித்தது.

இரண்டாவது ஓவியர் பாலிஷ் செய்த சுவற்றில் முதல் ஓவியரின் ஓவியம் பிரதிபலித்தது.

இரண்டாவது ஓவியருக்கே பரிசைக் கொடுத்தார் மன்னர்.

- எங்கோ படித்தது. எழுதியவருக்கு நன்றி



Monday, February 24, 2014

யார் ஞானி பகுதி இரண்டு



எனது பால்ய பிராயத்தில் எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் பெயர் வேலாயுததேவர். அவர் சிவபெருமானைப் போற்றி பாடல்களை எழுதுவார். ஆவணம் பெரியகுளத்துகரையில் உள்ள சிவபெருமானிடம் அவருக்கு அவ்வளவு பக்தி. அவர் சிவபெருமானைத் துதித்து எழுதும் பாடல்களை புத்தகமாகப் பிரிண்ட் போடுவார். பிரிண்ட் போடுவதற்கு அச்சகத்தில் எழுத்துக் கோர்ப்பவர் தான் தாத்தாவுக்குப் பிரச்சினை.

தாத்தாவின் கையெழுத்து வீச்சு வீச்சாய் இருக்கும். அவ்வளவு  எளிதில் படித்து விட முடியாது. அச்சகத்தில் வேலை பார்ப்பவருக்கு வீச்செழுத்துப் படிப்பதில் பிரச்சினை. புத்தகம் பிரிண்ட் ஆகி வரும் போது பார்த்தால் ஒற்றுப் பிழை, புள்ளிகள் பிழை, எழுத்துப் பிழை என்று ஒவ்வொரு பக்கமும் பெரியவரின் திருத்திய சுவடுகளாய் இருக்கும். அதற்காக பெரியவர் ஒரு வேலை செய்தார்.

அந்தப் பிரச்சினையின் காரணமாகத்தான் அவர் தன் பாடல்களை அழகிய கையெழுத்தில் தன் பாடல்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார். 

என் அம்மாவிடம் தாத்தா பேசி, தன் பாடல்களை என்னை எழுதரச் சொல்லக் கேட்டிருப்பார் போல. அம்மா என்னிடம் வந்து தாத்தாவுக்கு பாட்டு எழுதிக் கொடுப்பா என்றுச் சொல்ல அன்றிலிருந்து நானும் அவர் கொண்டு வந்து கொடுக்கும் வீச்சுக் கையெழுத்தினைப் பிரதியினைப் படித்து புரியாதவற்றை அவரிடம் கேட்டு அதன்படி எழுதிக் கொடுப்பேன். அவர் என் கையெழுத்துப் படியை எடுத்துக் கொண்டு போய் அச்சகத்தில் கொடுத்து புத்தகமாக்கி கொண்டு வருவார். அதில் ஒரு புத்தகமும் எனக்குத் தருவார்.

நான் ஐந்தாவது படித்த காலத்தில் இருந்து பனிரெண்டாவது படிக்கும் காலம் வரை அவருக்கு பாடல்களை எழுதிக் கொடுப்பேன்.

ஆவணம் ஆவிகுளத்துக்கரையில் இருக்கும் பள்ளியின் பின்புறம் பெரிய புளிய மரம் ஒன்றிருக்கும். பரந்து விரிந்து நிழல் கொடுக்கும் அம்மரத்தின் அடியில் பயிர் அடிப்பது,  நெற்போர் வைப்பது, நெற்போரடிப்பது,  நெல் காயப்போடுவது என்று பல வித விவசாய வேலைகளுக்கும் பயன்படும். அங்குதான் மதிய வேலையில் பள்ளிச் சிறார்களாகிய நாங்கள் விளையாடுவோம். அது பெரிய புளியமரம். அப்படி ஒரு விருட்சத்தை இதுவரையில் நான் எங்கும் கண்டதில்லை. 

திடீரென்று ஒரு நாள் அவர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு என்னை அந்த புளியமரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அமர்ந்து சில பாடல்களை எழுதினோம். அவர் சொல்லச் சொல்ல அழகான கையெழுத்தில் எழுதிக் கொடுத்தேன். பாடல்கள் எல்லாம் எழுதி முடித்த பிறகு பழமையான அந்த சிவபெருமான் சன்னதிக்கு என்னை அழைத்துச் சென்றார். சன்னதியில் உட்காரச் சொல்லி விட்டு பின்புறம் சென்றார். கம்பிகள் பாவிய மரக்கதவுகளூடே சிவபெருமான் பிரம்மாண்டமாக தெரிந்தார். கோவிலின் பின்புறம் சென்றவர் கையில் சில இலைகளுடன் வந்தார். அதைக் கொண்டு போய் சிவபெருமானின் சன்னதியின் முன்பு இருக்கும் படிக்கட்டில் வைத்து விட்டு என் அருகில் வந்து நின்று கொண்டு கை கூப்பி எம்பெருமானை தொழுத நேரத்தில் அந்தப் பச்சை இலைகள் திடீரென்று தீபம் போல பற்றி எரிந்தது. 

எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். என்னடா இது இலைகள் இப்படி எரிகின்றனவே என்று நினைத்துக் கொண்டிருந்த போது என் தலைமீது கை வைத்து என்னவோ சொன்னார். பின்னர் எரிந்து கொண்டிருக்கும் இலைகளை தொட்டு கும்பிட்டார். நானும் கும்பிட்டேன். இலைகள் கருகி சாம்பலாய் கிடந்தது. அங்கிருந்து வந்து விட்டோம். 

அடுத்த நாள் மதியம் நானும் என சக வகுப்புத் தோழர்கள் சிலருடன் மீண்டும் சிவபெருமான் சன்னதிக்குச் சென்று தோழர்களிடம் சொல்லி இலைகளைப் பறித்து வந்து படியில் வைத்து “இம்..இம்” சொல்ல ஒன்றும் நடக்கவில்லை. நான் சொன்னதை என் சக தோழர்கள் எவரும்  நம்பத் தயாரில்லை. வெட்கமாய்ப் போய் விட்டது.

அடுத்த நாள் காலையில் தாத்தாவைப் பார்த்து இது பற்றிக் கேட்க, அவர் என்னைப் பார்த்து சிரி சிரியென்று சிரித்தார். பின்னர் ஏதோ சொன்னார். அது என்னவென்று எனக்கு நினைவில் இல்லை.

தொடர்ந்து இணைந்திருங்கள் என்னுடன்....


Saturday, February 8, 2014

யார் ஞானி?


தன்னை அறிந்தவர் தன்னை வெளிப்படுத்தார். எப்படி திடீரென்று வந்தோமோ அப்படியே திடீரென்று சென்று விடுவதையும், நிழல் மறைவது போல மனிதனும் மறைந்து விடுவான் என்பதையும், நிலையற்றவையே நிலையானது என்பதையும் அறிந்தவர்கள் எவரும் தன்னை வெளிக்காட்டவே மாட்டார்கள்.

ஆறு சட்டைகள் போட்டுக் கொண்டு ஒருவர் பைத்தியக்காரனைப் போல பேரூர் தாண்டிய பகுதியில் அவ்வப்போது தென்படுவார். அவர் யார்? எங்கிருந்து வந்தார்? அவருக்கு என்னதான் வேலை? இப்படி எந்தக் கேள்விக்கும் அவரிடம் இருந்து பதிலே கிடைக்காது. அவர் யாரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. ஆனால் கேட்டோருக்கு அவர் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இன்னொருவர் கடந்த இருபத்தைந்தாண்டு காலமாக ஒரே சடாமுடி, ஒரே உடையுடன் மருதமலைக்கும் பழனிக்குமாய் நடந்து கொண்டே இருக்கிறார். ஏன் அவர் அப்படி நடக்கிறார்? அவர் என்ன செய்கிறார்? யாருக்காவது தெரியுமா? அவரிடம் நெருங்கினால் சிரிப்பொன்றே பதிலாய் தருவார். இப்படிப்பட்டவர்கள் ஏன் பூமியில் அவதரிக்கின்றார்கள். இதெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாத ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்கள்.

நிலையற்ற வாழ்க்கையின் நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் எவரும் எந்த போதிலும் தான் யார், தன்னிடமிருக்கும் மகிமை என்பது பற்றி எவரிடமும் சொல்வதில்லை.

என் சிறுவயதில் நான் கண்ட ஒருவரைப் பற்றிய அனுபவம் இது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமான ஆவணத்தில் இருக்கும் சிவன் கோவில் நான் சிறு வயதாக இருந்த போது சிதிலமடைந்து கிடக்கும். சிவன் கோவிலின் எதிரே மிகப் பெரிய புளிய மரமொன்று இருக்கும். சிவன் கோவிலின் வடபுறமாய் குளமொன்று பரந்து விரிந்து கிடக்கும். 

இக்கோவிலின் அருகில் தான் நான் படித்த அரசுப்பள்ளி இருக்கும். தாத்தா என்னிடம் அடிக்கடிச் சொல்வார், ”சிவன் கோவிலிலிருக்கும் லிங்கத்தை மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் மன்னார்குடி பக்கமிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்கள்” என்று.  மஹா சிவராத்திரியன்றும் இன்னுமொரு விஷேசத்தின் போது வெகு விமர்சையாக விழா கொண்டாடுவார்கள். அப்போது சிவ பெருமான் தகதகவென்று ஜொலிப்பார். இப்படியான காலத்தில் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் காலத்தில் தான் இந்த அனுபவம் எனக்கேற்பட்டது.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா? அவர்கள் இறைவன் பால் பக்தி கொண்டு தன்னையே அவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியும் வாழ முடியுமா என்றெல்லாம் நாம் சிறு வயதில் படித்த அவர்களின் வரலாறு நமக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும்.

லிங்கத்தின் கண்ணில் ரத்தம் வடிந்ததற்காக தன் கண்ணையே தோண்டி எடுத்து லிங்கத்தில் பதித்த கண்ணப்ப நாயனார் கதை உங்களுக்குத் தெரியும் தானே? இதெல்லாம் சாத்தியம் தானா? என்று உங்களுக்கு தோன்றுகிறதல்லவா? இப்படியும் இருப்பார்களா ? நம்பமுடியவில்லையே என்றெல்லாம் தோன்றுபவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

Monday, January 13, 2014

வாசியோகமும் வெட்கமும்

நேற்று வாசியோகப் பயிற்சியில் இருக்கும் எனது மனையாளை அழைத்துக் கொண்டு, குருநாதரின் முள்ளங்காடு ஆஸ்ரமம் சென்றிருந்தேன். மனையாளின் பயிற்சி சரியாகச் செல்கிறதா என்பதை ஜோதி சுவாமி கண்காணித்து ஒழுங்கு படுத்துவார். அதற்காக வேண்டி ஆஸ்ரம் செல்வோம். 

கரூரில் இருக்கும் போது வாரா வாரம் நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்வேன். அதன் பிறகு கரூராரின் ஜீவசமாதிக்குச் செல்வேன்.

கோவைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடம் சென்ற பிறகுதான் சற்குரு சுவாமி வெள்ளிங்கிரி அவர்களின் ஜீவசமாதிக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. அமைதி தவழும் அற்புதமான வனத்தில் குரு நாதரின் ஜீவசமாதியில் பத்து நிமிடம் அமர்ந்து இருந்தாலே போதும் மனம் செத்துப் போய் விடும். மனம் செத்தால் தன்னிருப்பு மறைந்து போய் இயற்கையோடு ஒன்றிடுவோம். அந்த இன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இயற்கையோடு அல்லது இறைவனோடு ஒன்றிடுதலே தவம்.


நேற்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு குடும்பம் ஆஸ்ரமம் வந்திருந்தது. ஒரு பெரியவர் தன் இளைய மகனுக்கு வாசியோக உபதேசம் வழங்கிட ஜோதி சுவாமிகளிடம் வேண்டிக் கொண்டார். அக்குடும்பமே வாசியோகப்பயிற்சியில் இருப்பார்கள் போல. அப்பெரியவரின் பெண் ஒருவர் தியானத்தில் அமர்ந்து விட்டார். நீண்ட நேரம் ஆகி விட்டது என்று அவரின் கணவர் அவரை எழுப்பி விட்டு விட்டார். அப்பெண் கண்கள் சிவந்து தியான அறையிலிருந்து வெளியில் வந்து விட்டார். அவர் மெதுவாக வெளியேறி வனத்தில் உலாவ ஆரம்பித்தார்.

அப்போது அங்கு வந்த ஜோதி ஸ்வாமி அப்பெண்ணின் கணவரிடம் தியானத்தில் இருக்கும் போது எழுப்பி விடக்கூடாது என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பெண்ணின் கணவருக்கோ சங்கடம் வந்து விட்டது. அவர் மனது வருத்தப்படக்கூடாதே என்பதற்காக, சுவாமியிடம் ”சாமி அவரவர் பிரச்சினை அவரவர்களுக்கு” என்றேன்.

ஜோதி சாமி சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ வெட்கம் வந்து விட்டது.

ஏனென்றால் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் வாசியோகப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அம்மணி ஒரு மணி நேரத்திற்கு மேல் தியானத்தில் உட்கார்ந்து விட்டார். எனக்கோ பயம் வந்து விட்டது. குரு நாதரின் சிஷ்யர் ஜோதி சுவாமிகள் தியானத்திலிருந்து வந்து விட மனையாளோ எழுந்திருக்க காணோம்.மேலும் அரை மணி நேரம் ஆனது. எனக்கோ திகிலடிக்க ஆரம்பித்து விட்டது. மனையாளோ அசைவற்று உட்கார்ந்திருந்தார். கண்கள் மேலே நோக்கி நிலை குத்தியிருக்க, மெதுவாக விசில் சத்தம் வந்து கொண்டிருந்தது. சத்தம் கொடுத்து அவரை நினைவுக்கு கொண்டு வந்தேன். 

கண்கள் சிவக்க மனையாள் எழுந்தார். ஜோதி சுவாமி தியானத்தில் இருப்பவரை திடுக்கென்று எழுப்பி விடக்கூடாது என்றும், அது பெரிய பிரச்சினையை உண்டு செய்து விடும் என்றுச் சொல்ல அன்றிலிருந்து மனையாள் எத்தனை மணி நேரம் தியானத்தில் அமர்ந்தாலும் பார்த்துக் கொண்டுதானிருப்பேன். அப்பெண்ணின் கணவருக்கு ஏற்பட்ட பிரச்சினை தான் அன்று எனக்கும் ஏற்பட்டது.

பின்னர் அவரிடம் நானும் உங்களைப் போலத்தான், அதற்காகத்தான் சிரிக்கின்றார்கள் என்று விளக்கம் கொடுத்தேன்.

அது என்ன வாசியோகம் என்கின்றீர்களா?

வாசியோகம் ஸ்வாசம் அல்லது மூச்சு பற்றியது. இயல்பாக நாம் நாசி வழியாக காற்றை உள்வாங்கி பிறகு வெளிவிடுவதை ஸ்வாசம் என்கிறோம். சரியாக சொல்லவேண்டுமானால் இது வெளிமூச்சு. வாசியோகத்தில் நாம் கட்டுபடுத்தி பயிற்சி செய்வது உள் மூச்சு என்று அழைக்கப்படுகிறது. வெளிமூச்சுக்கும் உள் மூச்சுக்கும் மற்றபடி ஏதும் தொடர்பில்லை. 

வாசியோகம் மூலம் பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கும், இப்பிறவியில் சேர்த்துக்கொண்டிருக்கும் வினைப்பயங்களை எரித்துவிடலாம். வாசியோகம் பயிலாதவர்கள் வினைப்பயன்களை அனுபவித்துத் தான் தீர்க்க முடியும். ஒன்று முடியும் முன் மற்றொன்று சேர்ந்துவிடும். முடிவில்லாமல் பல பிறவிகளை மனிதன் எடுத்துக்கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம். இந்த சுழற்சியை கட்டுப்படுத்தி முழுதுமாக துண்டித்து பிறவிக்கான காரணங்களை அறவே எரித்துவிட்டு பிறவிக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலைக்கு மீள்வதற்கு வாசி யோகம் வழிகாட்டுகிறது. 

இதை புத்தகத்தில் படித்தோ அல்லது பிறர் சொல்லி கேட்டோ பயில முடியாது. இதுகுருமுகமாக பயிலவேண்டிய ஒன்று. வேறு மாற்றுவழி கிடையாது. ( நன்றி ஆனந்தவள்ளல் இணையதளம் - www.anandavallal.com )

சுருக்கமாகச் சொன்னால் வாசி = சிவா

Thursday, December 12, 2013

கோவையில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா


கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமத்தில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழி :
பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்லும் வழியில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு இடதுபுறம் செல்லும் சாலையில் ஆற்றோரத்தில் இருக்கிறது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமம். இங்குதான் விழா நடைபெற உள்ளது.

தேதி : 15.12.2013 

நிகழ்ச்சி நிரல்:
  • காலை 8.00 மணி முதல் 9.30 வரையிலும் கூட்டு தியானம்
  • காலை 9.30 மணி முதல் 10.00 வரை காலைச் சிற்றுண்டி 
  • காலை 10.00 மணி முதல் 12.00 வரை சொற்பொழிவு
  • காலை 12.00 மணி முதல் 1.30 வரை ஒருங்கிணைந்த தியானம்
  • பகல் 1.30 மணி முதல் 4.30 வரை அன்னமளிப்பு
  • மாலை 6.00 மணிக்கு தீபமேற்றுதல்

வித்தியாசமான சூழலில் அமைதியை உணரும் அற்புத தருணத்தை தரக்கூடிய விழாவாக இருக்கும். இந்த ஆன்மீக அனுபவத்தை உணர்ந்திட விழைவோர் விழாவில் கலந்து கொள்ள முயற்சியுங்கள். நிச்சயம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அடிக்கடி பேருந்துகள் வரும். முள்ளங்காடு ஸ்டாப் என்றுச் சொல்லி இறங்கிக் கொள்ளவும்.

* * *

Tuesday, December 3, 2013

டெங்கு ஜாக்கிரதை

தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் டெங்கு வந்த போது உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஏன் அவ்வாறு ஏற்பட்டன என்றால், இக்காய்ச்சல் வந்தால் என்ன செய்யும் என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் தீவிரதாக்குதல் உடலை நிலைகுலைய வைத்து விடும். அபாயகட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலாமல் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.இதன் காரணமாய்த்தான் ஆரம்பத்தில் டெங்குவின் பாதிப்பை சரிசெய்ய முடியவில்லை. இப்போது அதற்கு மாத்திரைகள் வந்து விட்டன.

டெங்கு காய்ச்சல் வந்தால் கடுமையான தலைவலி, முதுகு தண்டில் வலி உண்டாகும். அதன் பிறகு காய்ச்சல் நிற்கும். இரண்டு நாள் கழித்து மீண்டும் வரும். அதற்குள் உடலுக்குள் டெங்கு நோய்கிருமிகள் ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்ஸ்ஸைக் குறைத்து அழித்து விடும். இந்த பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்புக்குள் பாயும் ரத்தமானது உடலுறுப்புகளுக்குள் கசிய ஆரம்பித்து விடும். உடலுக்குள் பாயும் குருதியானது கசியாமல் இருக்க இந்த பிளேட்லெட்ஸ் தான் காரணம். சாதாரணமாக ஒரு மனிதருக்கு இந்த பிளேட்லெட்ஸ் 1,50,000 முதல் 4,00,000 வரை இருக்கும். டெங்கு 5000க்குக் கொண்டு போய் முடித்து விடும். பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்பின் மிக மென்மையான பாகமான குடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும். அது ஏற்பட்டால் கொஞ்சம் பிரச்சினை தான். நன்றாகச் சாப்பிட்டு வந்தாலே உடம்புக்குள் பிளேட்லெட்ஸ் உருவாகி நார்மலுக்கு வந்து விடும். அத்துடன் தேவையான மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்து விட்டால் உடனடி குருதி சோதனை முக்கியம். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் குருதி சோதனை முக்கியம். பின்னர் தான் அது டெங்குவா இல்லை சாதாரண காய்ச்சலா என்று கண்டுபிடிக்க முடியும். சில மருத்துவர்கள் பார்த்தவுடனே தங்களின் அனுபவ அறிவால் இது என்ன காய்ச்சல் என்று கண்டுகொள்வார்கள். ஆனால் சிலரால் முடியாது. அனுபவ அறிவில்லாத காரணத்தால் பேரிழப்பு ஏற்படலாம் ஜாக்கிரதை.

டெங்கு வந்தால் பயப்பட தேவையே இல்லை. நேரா நேரத்துக்கு நல்ல சாப்பாடு. இள நீர், மாதுளை, பழங்கள், ஆண்டிபயாடிக் போன்றவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டால் போதும். KMCH, கொங்கு நாடு - கோவை மருத்துவமனைகளில் குறைந்தது நான்கு நாட்கள் ட்ரீட்மெண்ட் தங்கியிருத்தல் அவசியம்.

கார்காலத்தில் மேகங்களுடன் நோய்க்கிருமிகளும் சேர்ந்து வருகின்றன. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள். அசைவத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள். முட்டை கூட வேண்டாம். தினமும் நன்கு குளியுங்கள். சுகாதாரமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். இரண்டு தக்காளி பழத்தைப் போட்டு ரசம் வைத்து, ஒரு கீரை பொறியல், கொஞ்சம் சாதம் சாப்பிட்டாலே இந்த மழைக்காலத்தைக் கழித்து விடலாம். முடிந்த வரை சூடாகச் சாப்பிட்டு பழகுங்கள். சாலையோரக் கடைகளின் உணவுகள் பற்றி முழு விழிப்புணர்ச்சி தேவை. டீக்கடைகளில் பலகாரங்களுடன் நோய்க்கிருமிகளும் வருகின்றனவாம். பெரிய பெரிய ஹோட்டல்களின் உணவுகளின் ‘அபின்’ கலந்து விடுகின்றார்களாம். ஆகவே நம் ஆரோக்கியம் நம் கையில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Sunday, December 1, 2013

திண்டுக்கல் தண்டபாணி சாருக்கு நன்றி

மாலை நேரம், கணிணியில் திரு.சாவியின் நூலொன்றினைப் படித்துக் கொண்டிருந்தேன். போன் அழைத்தது. புது நெம்பர். 

வழமைபோல ‘வசியமை’ அழைப்பாக இருக்கும் போல இருக்குமென்று நினைத்தேன்.

”திண்டுக்கல்லில் இருந்து தண்டபாணி” என்றது மறுமுனை.

“சொல்லுங்க சார், என்ன வேணும்?” என்றேன்.

“சார் உங்க பிளாக்கைப் படித்தேன். நல்லா இருந்தது. எங்கள் ஊர் கோவில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. ஆன்மீக பேச்சாளர் மங்கையர்கரசி பேசினார்கள். நீங்கள் வந்து பேசுகின்றீர்களா?” என்று கேட்டார்.

இது என்ன புதுமாதிரியாக இருக்கிறதே என நினைத்துக் கொண்டு, “சார், ஏதோ எழுதுகிறேன். பேசவெல்லாம் சரியாக வராது.  நீங்கள் எனது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரிடம் பேசி, அவரிடம் தேதி பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த வருடம் அழையுங்கள், நிச்சயம் வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, நண்பர் திரு. பாரதி கிருஷ்ணகுமாரின் தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்தேன்.

இப்படி ஒரு அழைப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏதோ எனது அனுபவத்தை எழுதுகிறேன். அதற்காக இப்படி ஒரு அழைப்பா என வியக்கும்படி ஆனது. இனி தொடர்ந்து எழுதலாமா என யோசிக்க வைத்தது. எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

தேடலுடைய யாருக்கோ எது சேர வேண்டுமோ அது சென்று சேர்ந்தால் நல்லது தானே.

இனி எழுத முயல்கிறேன்.

அனைவரின் ஆசீர்வாதமும் அன்பும் தேவை !
-
ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Saturday, September 14, 2013

22 நாடுகள் சேர்ந்து விரட்டப்படவரின் நிகழ்காலத்தில் கதை

ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரச்சினைகள் இருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஒவ்வொரு நன்மைக்கும், தீமைக்கும்  நாமே காரணமாய் இருப்பதை நாம் அறிந்து கொள்வதில்லை. அறிந்து செய்யும் செயலோ அல்லது அறியாமல் செய்யும் செயலோ, என்ன செய்தோமோ அதற்குரிய பலன் அது நன்மையோ அல்லது தீமையோ அனுபவித்து தான் ஆக வேண்டும். ஒரு துன்பம் வருகிறது என்றால் ஏன் வந்தது என்பதை அறிந்து கொண்டு விட்டால் பிரச்சினையின் மூலம் தெரிந்து விடும். பின்னர் எது வரினும் கவலை ஏன் வரப்போகிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எப்போதாவது நிழல்காலத்தில் வாழ்வதை உணர்ந்திருக்கிறோமா என்று கேட்டால் பெரும்பாலானோர் “ நிகழ்காலமா?, அப்படியென்றால்” என்று கேட்பார்கள். இது ஒன்றுமில்லை. எது செய்யினும் அத்துடன் ஒன்றியிருத்தல் என்பதுதான்.

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது வீட்டு நினைவோ அல்லது சினிமா நினைவோ அல்லது காதலிகள் நினைவோ வந்தால் என்ன ஆகும்? எங்காவது ஓரிடத்தில் காரை முட்டி விடுவோம். செய்யும் வேலையில் முழுக்கவனமும் இல்லையென்றால் “கெட்டது காரியம்”.  நிகழ்காலத்தில் வாழ்ந்து பாருங்கள்.வெற்றிப்படிக்கட்டு கண்ணில் தெரியும். இதுதான் வெற்றியின் சாவி. பூட்டைத் திறக்க சாவி கிடைத்து விட்டது. இனி என்ன? பூட்டைத் திறந்து வெற்றிப்படிக்கட்டில் ஏற வேண்டியதுதான் பாக்கி.

ஒரு ஜோக் உங்களுக்காக,

சிலர் எப்போதுமே ஒரே மனநிலையில் வாழ்வர். மனிதர்களுக்கு எதையுமே எஸ்ட்ரீமாக செய்வதுதான் வழக்கம். அப்படி ஒரு மனிதரைப் பற்றித்தான் ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஒரு புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணர் ஆப்பிரிக்காவிற்க்கு கானக பயணம் சென்றார். அவர் திரும்பி வந்தவுடன் அவரது தோழர்கள் பயணம் எப்படி இருந்தது எனக் கேட்டனர். அதற்கு அவர் அது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நான் ஒரு மிருகத்தைக் கூட கொல்லவில்லை. அதற்கு பதிலாக நான் இங்கேயே ஆஸ்பத்திரியில் இருந்திருக்கலாம். என்றார்.

நீ எங்கிருந்தாலும், எங்குசென்றாலும் நீ நீயாகவே, உனது மனமாகவே, உனது குறிக்கோளாகவே இருக்கிறாய். இங்கு இப்பொழுது என்பதே உனக்கு இல்லை.

இக்கதையில் இருக்கும் பிரச்சினை என்னவென்று உங்களுக்குப் புரிந்து விட்டால் இனி “வானம் கூட வசப்படலாம்”

Sunday, August 18, 2013

வாழும் வரையிலும்

இப்பூமியில் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன இறக்கின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த உண்மை. எத்தனையோ மகான்கள், நூல்கள் நிலையற்ற வாழ்வினைப் பற்றிச் சொன்னாலும் மனிதர்களுக்கு அதெல்லாம் புரிவதே இல்லை.

மனிதனுக்குள்ளே மறைந்து நிற்கும் தானென்ற அகம்பாவமும், தானென்ற சுய நலமும் அவனுக்குக் கொடுக்கும் துன்பம் என்பது அளவிடற்கரியது. ஒரு கட்டத்தில் சுய நலத்தின் உருவாகவே மாறி விடும் மனிதனுக்கு தன் வயதான காலத்தில் தான் தாம் என்ன செய்தோம் என்ற தவறு புரிய ஆரம்பிக்கும்.

பிறர் கொடுத்த ரத்தத்தால் வந்தோம். பிறரின் உழைப்பில் வளர்ந்தோம். இப்படி பிறராலே உயர்ந்தோம். நம் அறிவும், அனுபவமும் பிறரின் அறிவாலே நமக்கு கிடைத்தது. இவ்வுலகில் நமக்கு கிடைத்த ஒவ்வொரு பொருளும் பிறரின் உதவியின்றி கிடைப்பதில்லை என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

கொடுத்தே புகழ் பெற்ற ஒருவர் இப்பூமியில் இருந்திருக்கிறார். சிபிச் சக்கரவர்த்தி, பாரி இவர்களின் வரிசையில் வந்தவர் அவர். கடந்த வாரத்தில் கர்ணன் திரைப்படம் பார்த்த போது அவரைப் பற்றி பாடிய பாடல்கள் உங்களுக்காக. படித்துப் பாருங்கள்.

சில உண்மைகள் புரியும்.

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

நானிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
என்று இவர்கள் எண்ணும் முன்னே
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னை கொடுப்பான் தான் உயிரும் தான் கொடுப்பான்
தயா நிதியே



Monday, July 22, 2013

சாஸ்திரங்களில் உணவு சாப்பிடும் முறைகள்(1)

கடந்த சனிக்கிழமை எனது நண்பர் திரு ஜோதி ஸ்வாமிகள் அவர்கள் பாடி மக்களுக்கு அர்பணித்த “திருமந்திரம் 3000” ஒலிப்பேழை வெளியீட்டு விழா பூண்டி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஆலயத்தில் நடைபெற்றது. வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் தூவிக் கொண்டிருந்த மழையிலும், சில்லென்று வீசிய மலைக்காற்றின் குளுமையிலும் விழா இனிமையாக நடந்தேறியது. 

விழாவின் இடையில் விழா மேடையில் ஒவ்வொருவரும் பேசி முடித்த பிறகு பொறுப்பாக கை தட்டி அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

நூற்றுக் கணக்கான நபர்கள் கூடியிருந்தனர்.விழாவில் கொடுக்கப்பட்ட மிக்ஸர், ஜிலேபி,  தண்ணீர் பாட்டில்களை சாப்பிட்டபின் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே குப்பையைப் போட்டு விட்டுச் சென்றனர். 

விழா முடிந்த பிறகு அங்கு கிடந்த தண்ணீர் பாட்டில், மிக்ஸர் காகிதம் போன்றவற்றை அழகிய இளைஞர் ஒருவர் பொறுக்கி எடுத்து அங்கு வைத்திருந்த குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்.  இதோ அந்த இளைஞர் உங்கள் பார்வைக்காக.




சரி, இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.

மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? உடம்பிற்குள் செல்லும் பொருட்கள் மற்றும் மனசு (??????) இரண்டைத் தவிர வேறு எந்தக் காரணத்தினாலும் நோய் வரக்கூடிய சாத்தியங்கள் இல்லவே இல்லை எனலாம். ஆனாலும் மூன்றாவதாய் வேறொரு காரணமும் உண்டு. உயிருக்கு உணவே தேவையில்லை என்பார் எனது மாஸ்டர். மூன்றாவது காரணத்தை இங்குச் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால் சமயம் வரும்போது எழுதுகிறேன்.

முன்னோர்கள் தன் வம்சங்கள் நோயின்றி வாழ எத்தனையோ நல்ல வழிகளை அனுபவித்து உணர்ந்ததை எழுதியும், சொல்லியும் வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் நாமோ எதைப் பற்றியும் கவலைப்படுவதும் இல்லை. உணர்ந்து கொள்வதும் இல்லை.

சாஸ்திரங்களில் உணவு உட்கொள்ளும் முறைகளைப் பற்றிச் சொல்லி இருக்கின்றார்கள். ஸ்ரீ வராகி விஜயம் என்ற புத்தகத்தில் விரிவாக எழுதி இருந்தார்கள். அதில் முக்கியமானவை உங்களின் கவனத்திற்காக. மனதில் குறித்துக் கொள்ளுங்கள். 

ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக அமர வேண்டும்
கீர்த்தியை விரும்புவன் தெற்குமுகமாக அமர வேண்டும்
சம்பத்தை விரும்புவன் மேற்கு முகமாக உட்கார வேண்டும்.
சத்தியத்தை விரும்புகிறவன் வடக்கு முகமாக உட்கார்ந்து உணவு வேண்டும்.

சாப்பிடும் போது அன்னத்தில் மயிர் இருந்தால் அந்த அன்னத்தைக் கீழே வைத்து விட்டு மீதி உள்ளதை புசிக்க வேண்டும். தலைமயிரையும், நகத்தையும், வேஷ்டியில் பிரித்த நூலையும் வீட்டு முன்வாசலில் போடுதல் கூடாது. பின் வாசலில் தான் போட வேண்டும்.

சாப்பிடும் போது வாயில் மயிர் அகப்படுதல் முன் கூட்டியே வரும் கவலையை உணர்த்துவதாகும். அப்படி வந்தால் அதை உமிழ்ந்து விட்டு ஒரு நெல் சாப்பிட்டு விட்டால் எந்தக் கவலையும் வராது. வந்தாலும் சிக்கல் இருக்காது.

இன்னும் இருக்கிறது.

தொடரும் விரைவில்...


Wednesday, July 3, 2013

வள்ளுவரும் வாசுகியும் - வாழ்க்கைத் தத்துவம்



எல்.சி.டி டிவி, உடலை கொன்று கூறாக்கும் ஏ.சி, ஷோபா, மெத்தை, கட்டில், கையணி, காதணி, ஒன்றுக்கும் உதவாத பட்டுச்சேலைகள், பளபளக்கும் ஆடைகள், கார், ஃப்ளைட் என்று ஆண்களும், பெண்களும் பொருட்களின் மீதான மோகத்தில் திளைத்து, அதற்காக தன் வாழ்க்கையை வேலை வேலை என்று அட்டையைப் போல உறிஞ்சும் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உழைத்து அவர்கள் போடும் காசைப் பொறுக்கிக் கொண்டு, அதே கார்ப்பொரேட் கம்பெனிகள் நடத்தும் மால்களில், அவர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களை வாங்கி ஏமாந்து போய் நிற்கிறார்கள் இன்றைய நவ நாகரீக மனிதர்கள். அதுமட்டுமா, உழைத்து முடித்து உடலில் அத்தனை நோய்களையும் பெற்றுக் கொண்டு, முடிவில் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட ஆன்மீக வியாபாரிகளிடம் சென்று அடைக்கலமாகி இருக்கும் சொத்தினையும் அவர்களிடம் இழந்து விடுகின்றார்கள். இதைப் பற்றிய புரிதல் என்பது கொஞ்சம் கூட மனிதர்களிடையே இல்லை என்பதுதான் நாகரீகத்தின் மோசமான விளைவினைக் காட்டுகிறது. மூளைச் சலவை செய்து சுத்தமாக மடித்து வைக்கப்பட்ட துணியைப் போல ஆகி விட்டார்கள் மனிதர்கள்.

எத்தனை லட்சம் கொடுத்து வாங்கினாலும் கார் தெருவில்தான் நிற்கும். எத்தனை லட்சம் கொடுத்து ஆடைகள் வாங்கினாலும் அது கிழிந்து சாயமிழந்து பழதாகி விடும். இன்றைக்கு எல்.சி.டி நாளைக்கு என்ன டிவியோ? வாங்கிய எல்சிடிக்கு என்ன மதிப்பு இருக்கிறது? ஒன்றுமில்லை. இன்றைக்கு ஆப்பிள் போன். நாளைக்கு அப்கிரேடு ஆனால் வாங்கிய போன் மதிப்பிழந்து போய் விடும். நான் பிராண்டட் சர்ட்தான் போடுவேன். நான் வைத்திருக்கும் காரின் விலை 20 லட்சம் என்றெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். இப்பெருமை வந்தது இப்பொருட்களால் என்றால் அது பொருட்களை தயாரிப்பவர்களுக்குத்தானே சேரும். உனக்கு என்ன இதில் தற்பெருமை இருக்கிறது? இப்படியான பொருட்களை விற்பவர்களுக்கு வேண்டுமானால் லாபம் கொட்டும். வாங்கியவர்களுக்கு ஈகோவினால் பொருள் இழப்புதான் மிச்சம். இப்படியான மக்களுக்குத்தான் இந்தக் கதை. தொடர்ந்து படியுங்கள்.

திருவள்ளுவரின் திருக்குறளில் ஒரு இடத்தில் கூட கமா போட்டு விடமுடியாது. வார்த்தைகளை மாற்றிப் போடவும் முடியாது. அப்படிப் போட்டால் பாடலின் அர்த்தமே மாறிப்போய்விடும். இப்படியான படைப்பை இன்றிருக்கும் எவராவது எழுத முடியுமா?  ஏன் முடியவில்லை? என்ன காரணம்? யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? வள்ளுவரும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா? வள்ளுவரும், அவரின் மனைவி வாசுகியும் ஒரே ஒரு ஆடையை ஒருவர் மாற்றி ஒருவர் அணிந்து கொண்டுதான் வெளியில் சென்று வருவார்களாம். வள்ளுவரின் தேவைகளை அறிந்து அவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே தன் வாழ் நாள் கடமையாக கொண்டிருந்தவர் வாசுகி அம்மையார். இன்றைக்கு வாழும் கணவன் மனைவிகளில் எத்தனை பேர் இவர்களைப் போல இருக்கின்றார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சிலர் இருக்கலாம். கணவன், மனைவி உறவென்பது படைக்கும் தொழில், ஆக்கும் தொழில் கொண்டது. இல்லையென்று எவராவது மறுக்கமுடியுமா? இவ்வுறவுக்கு இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில், ஸ்டைல் என்ற பெயரில் எவ்வளவு கேடுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்ப நல நீதிமன்றங்களில்  பார்த்தால் தெரியும்? எத்தனை எத்தனை வழக்குகள். ஏன் ? எதற்கு? என்று கேட்டால் ஒரே ஒரு காரணம் தான் சொல்வார்கள். “பொருள்”

திருப்பதியில் ஜீவசமாதி அடைந்து திருப்பதி பெருமாள் சன்னிதிக்கே பெரும் புகழைத் தேடித்தந்த கொங்கனவர் என்கிற சித்தர் ஒரு முறை திருவள்ளுவரும், வாசுகி அம்மையாரும் வசிக்கும் தெருவழியாகச் செல்லும் போது பசியெடுக்க, இவர்களின் வீட்டு வாசலில் நின்று கொண்டு பிச்சை கேட்டிருக்கிறார். அந்த நேரத்தில் வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். கணவர் சாப்பிட்டு முடித்தவுடன் வாசலுக்கு வர, அங்கு கொங்கணவர் கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.

இந்தக் கொங்கணவர்  மகா தவ பலம் நிரம்பியவர். வழியில் வந்து கொண்டிருக்கையில் அவர் மீது எச்சம் போட்ட கொக்கினை கோபத்துடன் பார்க்க அந்த நிமிடத்தில் கொக்கு தீப்பிடித்து இறந்து விட்டது. அவரின் கண் வீச்சுக்கு அவ்வளவு சக்தி. அச்சம்பவம் முடிந்த பிறகுதான் வாசுகி அம்மையாரிடம் பிச்சை கேட்டு வந்திருக்கிறார். அம்மையார் வர காலதாமதமானதால் கோபத்துடன் அவரை நோக்க, அவரைப் பார்த்துச் சிரித்த வாசுகி அம்மையார், “கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்க சித்தருக்கு சித்தபிரமை பிடித்து விட்டதாம்.

இவருக்கு எப்படி அச்சம்பவம் தெரியும் என்று குழம்புகிறார். பிறகு தெளிவுறுகிறார். எத்தனையோ காலம் தவம் செய்து கிடைத்த பலனை, ஒரு சாதாரண பெண் வெகு அலட்சியமாய் சொல்கிறார் என்றால் காரணம் என்ன? கணவனுக்கு பணிவுடை செய்யும் மனைவிக்கு அத்தனை சக்தி எப்படிக் கிடைக்கும்? இதெல்லாம் சாத்தியமா?

ஆம். எல்லாம் சாத்தியமே. 

அர்ப்பணிப்பு, தூயமனது, தியாகம்.

வள்ளவருக்கும் வாசுகிக்கும் இருந்தது அர்ப்பணிப்பு, தூயமனசு, தியாகம். வாசுகியின் அர்ப்பணிப்பு தான் வள்ளுவருக்கு திருக்குறளை எழுத வைத்தது.

கொங்கணவர் இவர்கள் இருவரும் இருக்கும் ஏழ்மை நிலையைப் பார்த்து விட்டு வள்ளுவரை தனி இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். தன் தவ வலிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை படைத்த அச்சித்தர், தன் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தீர்த்தம் எடுத்து எதிரில் இருந்த பாறை மீது தெளிக்க அது தங்கமாகிறது. வள்ளுவரிடம் காட்டி, இதை வைத்துக் கொண்டு வசதியாய் வாழுங்கள் என்றுச் சொல்லி இருக்கிறார்.

அவரைப் பார்த்து நகைத்த வள்ளுவர், இன்னும் கொஞ்ச தூரத்தில் இருந்த பாறையின் அருகில் சென்று அதன் மீது சிறு நீர் கழித்திருக்கிறார். அப்பாறையே தங்கமாகி விட்டது.

கமண்டலத்தின் தீர்த்தத்துக்கு இருந்த வல்லமை வள்ளுவரின் சிறுநீருக்கு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? யோசித்துப் பாருங்கள். 
வள்ளுவர், வாசுகியின் வாழ்க்கை புரியும்.

குறிப்பு : இக்கதைகள் எனது மாஸ்டர் சொல்லி நான் கேட்டது. அவரிடம் அனுமதி கேட்டு பதிக்கப்பட்டது.

Friday, June 28, 2013

திருமந்திரம் இசைத்தட்டு வெளியீடு விழா - வெள்ளிங்கிரி சுவாமிகள் ஆஸ்ரமம்


தமிழகத்தின் முதல் சாத்திர நூல் திருமந்திரம். திருமூலர் அவர்கள் திருவாவடுதுறையில் தங்கி இருந்து மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடியதாக கருதப்படும் திருமந்திரத்தினை ஒலி வடிவில் இசைத்தட்டாக எனது உயிரோடு உயிராய் நின்று எனக்குள்  நிறைந்திருக்கும் எனது குரு நாதரின் அருமைச் சீடரும், துன்பம் வரும் முன்பே ஓடோடி வந்து நின்று காத்தருளும் ஜோதி ஸ்வாமிகளின் குரலில் வெளிவருகிறது.

கோயமுத்தூரின் அடையாளம், கோவைக்கு உயிர் கொடுத்து வரும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் எனது குரு நாதர் சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதியில், ஜூலை மாதம் 20 ஆம் தேதி, 2013, ஆடி மாதம் 4ம் தேதி சனிக்கிழமை அன்று மூன்று மணி அளவில் வெளியீட்டு விழா நடக்கிறது.
இசைத்தட்டு இலவசமாய் வழங்கப்படுகிறது. கோவையில் இருக்கும் நண்பர்கள் விழாவில் அவசியம் கலந்து கொண்டு திருமூலர் வழங்கிச் சென்ற திருமந்திரத்தின் இசைத்தட்டினைப் பெற்றுச் செல்ல அழைக்கிறேன்.

சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வழி :

ஈஷா யோகமையம் செல்லும் வழியில் முள்ளங்காடு செக்போஸ்டில் இடதுபுறம் திரும்பினால் சுவாமியின் ஆஸ்ரமத்திற்குச் செல்லலாம். 

ஜோதி ஸ்வாமிகளை தொடர்பு கொள்ள : 9894815954

திருமந்திரத்திலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக இங்கே !

பாடல் 85 :
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

பாடல் : 270
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பாடல் :1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

Thursday, June 20, 2013

நட்பிற்கு மரியாதை உண்மைச் சம்பவம்

நேற்று ஆஃபீசுக்கு வரும்  வழியில் சத்திரோடு அன்னபூர்ணா ஹோட்டலின் முன்புறம் டிவிஎஸ் ஒன்று அடிபட்டு கீழே கிடந்தது. பல்சர் பைக்கில் மோதியவன் நின்று கொண்டிருந்தான். விழுந்து கிடந்தவன் கைலி கட்டி இருந்தான். ஆள் பார்க்க கிராமத்தான் போலிருந்தான். அன்னபூர்ணா செக்யூரிட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.  சாலையில் சென்று கொண்டிருந்தோர் ஒருவர் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இடித்தவன் அவன் பாட்டிற்கு நின்று கொண்டிருந்தான். அடிபட்டு விழுந்தவன் அவனாகவே தட்டுத்தடுமாறி எழுந்தான். கண்களில் கண்ணீர் வடிய வலியில் துடித்தபடி எழுந்தான். வண்டியை நிமிர்த்தினான். பரிதாபத்துக்குரிய அந்த இளைஞன் அழகாய் இல்லை. அவன் ஒரு பெண்ணாக இல்லை. அவனிடம் பளபளப்பான ட்ரஸ் இல்லை. அழுக்காய் இருந்தான். இச்சமூகத்தின் மன நிலையை இச்சம்பவம் எனக்கு பளீரென சுட்டிக்காட்டியது.

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் அவனுக்கு உதவ எனதுடல் ஒத்துழைக்காது. மனவலியுடன் அவன் மெதுவாக வண்டியை நிமிர்த்தி கண்ணீருடன் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல்சர் பரதேசி எப்போதே சென்று விட்டான்.

சக மனிதன் துன்பத்தைக் கூட கண்டு கொள்ளாத உலகில் வாழ்வதை நினைத்து வேதனைதான் மண்டியது. 

எனது நண்பரொருவர் கணபதியில் வசிக்கிறார். அவருக்கு ஒரு நண்பர், அவர் ஒரு கோவில் பூசாரி. தனிக்கட்டை. கல்யாணம் ஏதும் செய்துகொள்ளவில்லை. 

அன்றைக்கு விடிகாலையில் பூசாரிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. வலியில் துடித்திருக்கிறார். நம் ஆயுள் முடியப்போகிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவருக்கு உதவி செய்தவர்கள் ”உங்கள் சொந்தக்காரர் யாராவது இருக்கின்றார்களா, சொல்லி அனுப்புகிறோம்” என்று கேட்க அவர், “எனது நண்பரிடம் சொல்லுங்கள், அவர் வந்தால் க் கொள்வார்” என்றுச் சொல்லி இருக்கிறார். எனது நண்பருக்குத் தகவல் வந்து பூசாரியார் இருக்குமிடம் செல்லுகையில் உயிர் போய் விட்டது. விடிகாலை 5.45க்கு உயிர் பிரிந்து விட்டது. வேறு எந்தச் சொந்தக்காரரிடம் சொல்லவில்லை. தன் நண்பரிடம் மட்டும் தகவல் சொல்லி விட்டு அவர் விண்ணுலகை அடைந்து விட்டார். 

எனது நண்பர் பூசாரி நண்பனை மரியாதையுடன் தகனம் செய்து அத்தனை செலவினையும் செய்து விட்டு வீடு திரும்பினார்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. - திருவள்ளுவர் 

(நட்பின் உன்னதம் என்னவென்றால் எப்போதெல்லாம் நண்பன் துன்பப்படுகின்றானோ அவனுக்கு தன்னால் இயன்ற நிலையில் நின்று அவனின் துன்பத்தை நீக்குவது தான்  உண்மையான நட்பு)

பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனின் நட்பினைப் பற்றிய சில கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு. இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று கூட நினைத்தேன். 

இக்காலத்தில் நட்பினால் தான் மிகப் பெரும் பகை வளரும். கூடாத நட்பின் விளைவாக சொத்து, சுகம் இழந்தவர்கள் எண்ணற்றோர். இப்படி இருக்கும் கலிகாலத்தில் மனதை சிலிர்க்கச் செய்யும் இச்சம்பவத்தில் நானொரு சாட்சியாக இருந்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பித்தான் இப்பதிவு.

Wednesday, May 15, 2013

நேர்மைக்கு முன்னால்


சமீபத்தில் சவுக்கு இணையதளத்தில் நேர்மையே உன் விலை என்ன?என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அக்கட்டுரை இந்தியாவின் தற்போதைய நிலையை சரியாகச் சுட்டிக்காட்டி இருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கும் கார்ப்பொரேட் கம்பெனிகாரர்களின் மன அசைவுக்கு ஏற்பத்தான் அரசியலும், நாடும் அசையும். இதைத் தெரிந்து கொண்டவர்கள் பிசினஸ் புள்ளிகளாக மாறுகிறார்கள். தெரியாதவர்கள் நேர்மை பேசி விரக்தியில் விழுவார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்பவர்கள் ஜெயிக்கின்றார்கள். அதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள். இது கார்ப்பொரேட் தத்துவம். வாழ்வியல் தத்துவம் வேறு. எந்த ஒரு கார்ப்பொரேட்டும் ஒரு காலத்தில் வீழ்ச்சியைத் தான் சந்திக்கும். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகாகி விட முடியாது அல்லவா? இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். இப்போது விஷயத்திற்கு வரலாம்.

கலிகாலம் வந்து விட்டதே, உன் பொருள் என் பொருள், என் பொருள் உன் பொருள் என்று சண்டை சச்சரவுகள் இல்லாமால் வாழ்ந்து வரும் மனிதர்களிடையே எப்படிப் பிரச்சினையை உருவாக்குவது என்று கவலைப்பட்டார்களாம். பளபளவென மின்னும் தங்கக் கட்டிகளை தெருவில் இறைக்க அன்றிலிருந்து மனிதனுக்குள் தனக்கு என்ற ஆசை வேர்விட்டு பிரச்சினை துளிர் விட்டு இன்றைக்கு அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கும் வரை வந்து விட்டது.

இப்படியான காலகட்டத்திலும் தர்ம தேவதையின் தவப்புதல்வர்கள் இப்பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு தர்ம தேவையின் தவப்புதல்வனின் கதை தான் இது.

திருச்சியில் மிகப் பெரிய கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று இருக்கிறது. அக்கம்பெனியின் முதலாளி பெரும் தனக்காரர். எவரையும் மதிப்பது கூட இல்லை. பணமிருந்தால் போதும் எவனையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எள்ளல் கொண்டவர் அவர். இப்படிப்பட்ட தடித்தனம் மிக்க அவர் திருச்சியின் பிரதான சாலையில் இடமொன்றினை வாங்கினார். வாங்கியவுடன் இரண்டடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு, நான்கு மாடிகளைக் கட்டி விட்டார். 

கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் இந்த சட்டமீறலைக் கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கச் சென்ற போது, அவரை அலுவலகத்திற்குள் விடவே இல்லை. கேட்டிற்கு வெளியில் இருக்கும் செடியின் மீது உன் நோட்டீஸை ஒட்டி விட்டுப் போ என்று எகத்தாளமாய் எக்காளாமிட்டிருக்கிறார் முதலாளி. அதிகாரி நேர்மைக்கு பெயர் போனவர். தர்ம தேவதையின் வாரிசு. என்ன அவமானப்படுத்தினாலும் தன் கடமையைச் சரிவரச் செய்யும் தன்னம்பிக்கைக்காரர். அடுத்த சில நாட்களில் பொக்லினைக் கொண்டு வந்து அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடிகளை இடித்து தள்ளி விட்டுச் சென்று விட்டார்.

பணமிருந்தும், புகழ் இருந்து, அதிகாரவர்க்கத்தினரின் துணை இருந்தும் கட்டிட இடிப்பினை அவரால் தடுக்க முடியவில்லை. அவரால் செய்ய முடிந்தது என்ன தெரியுமா? அந்த கார்ப்பொரேஷன் அதிகாரிக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான். இதை அவர் தனது வெற்றி என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கும் சேர்ந்து மிகப் பெரிய ஆப்பினைச் சொருகினார் அந்த அதிகாரி.

மாற்றலாகிப் போன இடத்தில் அவருக்கு நெருக்கமான ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியைச் சந்தித்து இருக்கிறார். ஐயேயெஸுக்கு ஆச்சரியம். திருச்சியில் இருந்தவர் திடீரென இங்கு வந்து விட்டாரே என்ன காரணம் என்று கேள்வி கேட்க, அவர் விவரத்தைச் சொல்லி இருக்கிறார். அந்த ஐ ஏ எஸ் தன் நண்பரை மாற்றம் செய்த அந்த கார்ப்பொரேட் முதலாளிக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். 

அடுத்த ஒரு வாரத்தில் அந்த நிறுவனத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்து. அத்தனை அக்கவுண்டுகளும் லாக் செய்யப்பட்டது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. திக்பிரமை பிடித்தவர் போலாகி விட்டார். முதலாளிக்குத் திகில் பிடித்து விட்டது. கிலி பிடித்தாட்ட ஆள் பீதியில் உறைந்து போனார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு கணக்குக் காட்ட வேண்டுமே? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். தர்மம் நின்று கொல்லும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.

எந்த ஒரு போலியும் நேர்மைக்கு முன்னே தூசிக்குச் சமமானது என்பதை அனுபவத்தில் அந்த முதலாளி நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.