குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, December 4, 2012

ரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் புலம்பும் இயக்குனர்




சிலந்தி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய எனது நெருங்கிய நண்பர் ஆதியின் அடுத்த படம் கன்னடத்தில் ரனதந்திரா. திரு ரமேஷ் அவர்களின் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படத்தின் திரைப்பட ஷூட்டிங் பெங்களூரில் விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. 

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய ராகவேந்திரா ஹீரோவாகவும், தமிழ் படங்களில் நடித்த ஹரிப்பிரியா ஹீரோயினாகவும் நடிக்கின்றார்கள்.

ஷூட்டிங்கில் ஹரிப்பிரியாவின் நீச்சலுடைக் காட்சிகளை வெகு நேர்த்தியாய் அதற்கென்றிருக்கும் பிரத்யேகமான கேமராவினால் ஷூட் செய்திருக்கின்றார். 

"ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்தேன் சார்” என்றார். 

”பின் ஏன் சோகமாய் பேசுகின்றீர்கள்?” என்றேன்.

”அட அத ஏன் சார் கேட்கின்றீர்கள்?”

“ ஹரிப்பிரியா அந்த சீனைப் பார்த்து விட்டு, புரோமோவில் வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் போட்டுடுட்டாங்க சார் !” என்றார்.

தான் பெற்ற இன்பம் ரசிகர்கள் பெற வேண்டுமென்ற ஆவல் இயக்குனருக்கு. 

ஆனால் நடந்ததோ வேறு !

மொத்தத்தில் ரசிகர்களுக்கு ” வடை போச்சே !”






Saturday, September 22, 2012

சாட்டை என்கிற சினிமாவும் ஹீரோயிசத்தின் கொடூரமும்



நேற்றைக்கு முதல் நாள் தேனியிலிருந்து ஒரு அழைப்பு. பேசியவர் ஒரு ஆசிரியர். ”பத்துக் கோடி ரூபாய் கடன் வேண்டும்” என்றார். தொடர்ந்து புதிதாக பள்ளிக்கூடம் கட்டப்போவதாகவும், ஐந்து வருடத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் சொன்னார். ”ஐந்து வருடத்தில் வட்டியுடன் பத்து கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கா பள்ளிகள் சம்பாதித்துக் கொடுக்கின்றன?” என்று கேட்டேன். ”நாமக்கல் பகுதிகளில் டொனேஷனைக் கொண்டு போய் கொட்டுகின்றார்கள் சார், நான் அதை விட மிகச் சிறந்த பள்ளியை உருவாக்குவேன்” என்றார்.

ஊட்டியில் இருக்கும் பிரபல தனியார் பள்ளியில் டொனேஷன் அதாவது கேப்பிடேஷன் ஃபீஸ் 5,00,000 லட்சம் வசூலிக்கின்றார்கள். யூனிஃபார்முக்கு 50,000  ரூபாய் கட்டணம். இப்படி அவர் சொன்ன விபரங்களைக் கேட்டதும் மயக்கம் தான் ஏற்பட்டது.

”அரசு இலவசமாய் கல்வி வழங்கினால் என்ன செய்வீர்கள்?” என்றேன். ”எந்த அரசாலும் சரி, எவராலும் சரி அப்படி செய்யவே முடியாது என்றார். கல்வி பிசினஸ் செய்யும் பணமுதலைகளும், ஒத்து ஊதும் திருடர்கள் கூட்டத்தாரும் ஒன்று சேர்ந்து பல தனியார் அமைப்புகளை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அரசையே தூக்கி எறிந்து விடுவார்கள். பணத்திற்கு முன்பு அரசு சலாம் போடுமே தவிர வேறொன்றினையும் செய்யாது சார்” என்றார் அவர். 

”பூடானில் ஆசிரியப் பணியில் இருந்த போது, சாலையில் நடந்து சென்றால் எதிரே வரும் மக்கள் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்தி வழி விட்டு ஒதுங்கி நிற்பார்கள். இந்தப் பாழாய் போன மனித உரிமைகள் கமிஷனால் தான் ஒவ்வொரு மாணவனும் இன்றைக்கு சீரழிந்து போய் விடுகிறான்கள். ஒடித்து வளர்க்காத முருங்கை பலன் தராது சார். பூடானில் அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றது. ஒவ்வொரு ஊரும் பள்ளியை நிர்வகிக்கின்றார்கள். அங்கு தனியார் அமைப்புகள் கிடையாது” என்றார் அவர்.

ஒரு வழியாக தனியார் கல்வி என்கிற மாஃபியாக்கூட்டத்தின் செயல்பாடுகளை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒருவன் வாழ பலர் உழைத்துக் கொடுக்கின்றார்கள். இது பற்றிய ஒரு கட்டுரை வருகின்ற மாதம் “பரபரப்புச் செய்தி” பத்திரிக்கையில் வெளிவரும். படித்துப் பாருங்கள்.

ஒரு குடும்பத்தின் தலைவன் சரியில்லை என்றால் குடும்பம் என்ன ஆகும்? சீரழிந்து போகும். தலைமை ஆசிரியரிடம் தொலை நோக்குப் பார்வையும், கண்டிப்பும் இல்லையென்றால் அப்பள்ளி என்ன ஆகும்? அப்படித்தான் இன்றைய அரசுப் பள்ளிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு உகந்த கிரேடு, டிகிரேடு சிஸ்டம் கொண்டு வந்தால் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் நிச்சயம் ஓரளவிற்கு முன்னேறும். பள்ளிகள் இருக்கும் ஊரின் மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் மூலம் இந்த டிகிரேடு சிஸ்டம் செயல்படுத்தப்பட்டாலே போதும். அதுமட்டுமல்லாமல் அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் நன்மையைத் தரும். அதை ஏன் அரசுகள் செய்ய மறுக்கின்றன என்றால், தனியார் கல்வி மாஃபியாக்களிடமிருந்து வரும் பெட்டி டொனேஷன்கள் தான் காரணம் என்கிறார்கள்.

பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதுமா? பிற ஆசிரியர்களும் இருக்க வேண்டாமா? சாட்டை ஒரே ஒரு ஆசிரியர் ஒழுங்காக இருந்தாலே போதும் என்று ஹீரோயிசம் பேசுகிறது. பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்தி விட்டு வேறு பள்ளிக்குச் செல்கிறார் தயாளன் என்கிற சமுத்திரக் கனி. மாயாஜால வினோதக் கதை போல தமிழ் சினிமாக்களில் ஒரே ஒரு பாடலில் ஏழை ஹீரோ பெரிய கோடீஸ்வரனாக மாறுவதை காட்டுவார்களே அதே போலத்தான் சாட்டைப் படமும்.

யாரோ ஒரு இயக்குனர் ஏதோ ஒரு பேட்டியில் தம்பி ராமையா என்கிற நடிகரின் நடிப்பைப் பார்த்த போது எம்.ஆர்.ராதாவை பார்த்தது போல இருந்தது என்றார். எம்.ஆர்.ராதா எங்கே இந்த ராமையா எங்கே? இப்படிப்பட்ட இயக்குனர்கள் தான் இன்றைக்கு தமிழ் சினிமாவை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மூளை வறட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமாக்கள். நடிப்பு என்றால் என்ன என்று தெரியாமலே நடிக்கும் கலைஞர்கள், இயக்கும் இயக்குனர்கள் என்று ஒரு கூட்டம் சினிமாவைக் கேவலபடுத்தி வருகின்றார்கள். இதற்கு உதாரணம் மாண்புமிகு இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இதயம் டிக்கென்றிருக்கும்.

சாட்டை என்கிற பெயரில் அக்மார்க் ஹீரோயிசப்படம். ஆசிரியர்கள் ஹீரோக்கள் அல்ல ! அவர்கள் ஞானிகள். எதையும் எதற்காகவும் எதிர்பாக்காத தியாகிகள். இக்கால ஆசிரியர்களில் எத்தனை எத்தனையோ இளம் ஆசிரியர்கள் முழுத் தியாகத்துடன் தங்கள் குழந்தைகளை நேசித்து அவர்கள் படிப்பதையும், எழுதுவதையும் நேசிக்கின்றார்கள். நேற்று என் பையன் கூடப்படிக்கும் சகமாணவன் என் மனைவியிடம் ”உங்கள் பையனுக்குச் சுத்திப் போடுங்கள், ரொம்ப அழகாக எழுதுகிறான் என்று டீச்சர் கண் வைத்து விட்டதாகவும், அதை டீச்சரே சொல்லச் சொன்னதாகவும்” சொல்லி இருக்கிறான். ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நூற்றில் பத்து சதவீதம் பேர் சுய நலவாதிகளாய் இருப்பார்கள். அவர்கள் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை. பயிரில் களைகள் இல்லையென்றால் பயிரைப் பற்றி விவசாயி சிந்திக்க மாட்டான். களைகளும் வேண்டும், அதை களையெடுக்கும் வித்தையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மட்டுமல்ல தனியார் பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினாலே நிர்வகிக்கப்பட்டாலே போதும். இது போன்ற பிரச்சினைகள் ஓவர்.

பள்ளிப்பருவ காதல்கள் சுவாரசியமானவை. அக்காதல்கள் எதுவும் முழுமை பெறுவதில்லை. அதை ஒழுங்காக காட்டிய விதத்தில் சாட்டை நன்மை செய்திருக்கிறது. அதைக்கூட காசாக்கி அதை வைத்து தமிழ் சினிமாக்கள் ஹீரோக்களை உருவாக்கி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவர் இது போன்ற கவட்டிக் கிளர்ச்சிப் படங்களில் நடித்துதான் தானுமொரு ஹீரோ என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். முன்னனி ஹீரோவான ஒருவர் கபடி விளையாண்டும்,  பாத்ரூமில் காதலியின் மாமியாருக்கு சோப்பு போட்டும்தாம் ஹீரோவாக உயர்ந்தார். தற்போது பிரபலமாய் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் மலையாள மொழிகளில் செக்ஸ் படம் எடுத்துச் சம்பாதித்தவர்தான். பல பிரபலங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே பெண்கள்தான். இவர்கள் இல்லையென்றால் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்கள் ஆகி விடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தனி மனித துதி என்பது அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் தூக்கலாய் இருக்கும். எந்த ஒரு தனி மனிதனாலும் எதையும் பிடுங்கி விட முடியாது. மஹாத்மா காந்தி மட்டும் உண்ணாவிரதம் இருந்திருந்தால் எவனும் திரும்பிக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். காந்தியின் கொள்கைகளால் உயிரை இழந்தோரும், சிறையில் கிடந்து செத்தோரும் லட்சோப லட்ச மக்கள். அவர்கள் பற்றி யாருக்கு என்ன தெரியும்? இது போன்ற தனி மனித துதிகளும், போற்றுதல்களும் முற்றிலும் தவறானவை. அது ஒரு ஆகப் பெரிய கொடூரம் என்கிறேன்.

சாட்டைப் படத்தினை அனைவரும் பார்க்கலாம். ஏனென்றால் இப்படம் ஏதோ சொல்ல வருகிறது. பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எங்கே ஹீரோ, ஹீரோயின் காதலைச் சேர்த்து வைத்து விடுவார்களோ என்று பயந்தேன். அப்படி ஏதும் ஆக வில்லை. சமுத்திரக்கனி சொல்லும் கடைசி வாக்கியத்திற்காக சாட்டையைப் பார்க்கலாம். ஹீரோயிசம் என்கிற விஷத்தினுள்ளே ஒரு மெசேஜ்.


Monday, September 10, 2012

இயக்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்


குரு வாழ்க ! குருவே துணை !!





எனது நண்பர் கோவையில் ஃபில்ம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இருக்கிறார். இன்ஸ்டிடியூட் சம்பந்தமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வேறு யாரிடமாவது கருத்துக்களை கேட்கலாம் என்று நினைத்தோம். இயக்குனர் சுந்தர் ராஜன் அவர்களுக்கு அழைத்தேன். ”கோவையில் தான் இருக்கிறேன் தங்கம், எட்டு மணிக்குச் சந்திக்கலாமா?” என்றார்.

நானும் நண்பரும் நேரு விளையாட்டு அரங்கம் சென்று பாப்கார்ன் கொரித்து விட்டு, இயக்குனர் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் அன்று முதன் முதலாய் சந்தித்தோம். 

காருக்குள் அமர்ந்து கொண்டார். 

”குங்குமச் சிமிழில் விழுந்தவன் இன்றும் எழுந்து கொள்ள முடியவில்லை சார், ரேவதி போன்ற நடிகைகளைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது ” என்றேன். 

அவருக்கு நிரம்பப் பிடித்த படம் “குங்குமச் சிமிழ்” என்றார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன். இன்ஸ்டிடியூட்டுக்கு நிறைய ஆலோசனைகளும், கருத்துக்களும் சொன்னார்.
பத்து சில்வர் ஜூப்ளி கொடுத்த வெற்றி இயக்குனர். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். இன்றைய எதிர்கட்சித் தலைவரின் சினிமா வளர்ச்சிக்கு அவரின் பல திரைப்படங்கள் எவ்வளவு உதவி இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வெகு சாதாரணமாய் இருக்கிறார். பெரியவர்கள் எப்போதும் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அலட்டிக் கொள்வதில்லை. பெரியாரிசத்தின் பிடிப்பில் தன்னை முழுதாய் ஈடுபடுத்தி இருக்கிறார். 

ஆன்மீகவாதியான எனக்கும் பெரியாரிசத்தில் ஈடுபாடுடைய அவருக்குமான நட்பை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் உதிக்கும் சிரிப்பின் அர்த்தம் எனக்கே புரியவில்லை. அர்த்தம் விரைவில் விளங்கும் என்றே நினைக்கிறேன்.

சில்லிட்ட காற்று வீச இனிய வருகையாய் கை குலுக்குகினார். அவரின் கை “சில்லென்று” இருந்தது.

வெகு விரைவில் கோவையில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் அனைவருக்கும் சினிமா, டிவி, மீடியாக்களில் வாய்ப்புக்கள் உருவாக்கித் தரவும், நாடகக் கலையினை வளர்த்தெடுக்கவும், கற்பனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களுக்கு உதவிடவும் இந்த இன்ஸ்டிடியூட் செயல்படும் விதமாய் உருவாக்க வேண்டுமென்பது ஆவல். 



எங்களது ஃபெமொ மாடலிங் கம்பெனியின் மாடல்களை முழு வார்ப்பாக வார்த்தெடுக்க முயல்வோம். திறமைசாலிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு எட்டாத சினிமாக் கனவுகளை எட்ட வைக்கவும், பலருக்கு ஏணியாகவும் ஃபெமொவை விளங்கிட வைக்க விரும்புகிறோம். 

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.  நண்பர்களின் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் எதிர் நோக்கும்

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Thursday, August 16, 2012

அட்டகத்தி திரைப்படம்

அழகான, அற்புதமான ஒரு பாசச் சந்திப்பின் பின்பு நானும் எனது நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கோவை சிங்காநல்லூரில் இருக்கும் அம்பாள் சினி தியேட்டர் கூட்டத்தால் நிரம்பிக் கொண்டிருந்தது. நண்பர், அட்டகத்தி பார்ப்போமா என்றார். 

தியாகராஜர் காலத்திலிருந்து இன்று வரை காதல் காதல் காதல் என்றே தமிழ் சினிமா உலகம் படமாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு காதல் செய்வதே முழு முதல் தொழிலாய் மாறி இருக்கிறது. சிறிய வயதில் இருந்து உனக்கு20 எனக்கு 40 என்பது வரையும், முதல் மரியாதை காதல் என்பதாகவும் தமிழ் சினிமா உலகம் காதல் போதையில் ஊறி ஊறி அதிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சின்னஞ் சிறு குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் குஷி படத்தில் இயக்குனர் காதலைக் காட்டி தன் இயக்குனர் திறமையை வெளிப்படுத்தினார். அந்த வகையில் வந்த மற்றொரு படம் தான் அட்டகத்தி.

விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்க முயல்வோம் அல்லவா அதை ஹீரோ செய்கிறார். ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டே செய்கிறார். ஒரு பெண் கூட அவரைக் காதலிக்கவே இல்லை. இடைவேளைக்குப் பிறகு கல்லூரி செல்லும் ஹீரோ முன்பு தன்னை அண்ணன் என்றுச் சொல்லிய ஹீரோயினை மீண்டும் சந்திக்கிறார். ஹீரோயினின் சில சைகளை கண்டு அவள் தன்னைக் காதலிக்கிறார் என்று நினைத்து அவளின் மீது காதல் கொள்கிறார். முடிவில் பார்த்தால் தன் பெயரைக் கொண்ட வேறொருவரை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். விரக்தி அடையும் ஹீரோவை ஒரு பிச்சைக்காரன் என் பெண்ணைக் கட்டிக்கோ என்றுச் சொல்லும் போது ஹீரோ சிரிக்கிறார். அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது. 

அட்டகத்தியை கீழே வரும் பாடலில் அடக்கி விடலாம்.

”ஆள்வார்ப்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா, ஒரே காதல் ஊரில் இல்லையடா” - என்ற கமல்ஹாசனின் பாடல் தான் படத்தின் ஒன் லைன்.

ஒரு காலத்தில் காதல் காதல் என்று உருகி உருகிக் காதலித்த கமல்ஹாசன் தான் (தேரே மேரே பீஜ்ஜுமா பாடல் நினைவில் இருக்கிறதா உங்களுக்கு) மேலே இருக்கும் பாடலைப் பாடி இருக்கிறார்.

காலம் மாறுகிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. காதலுக்கு ஒவ்வொரு காலத்திலும் டெஃபனிஷன் மாறிக் கொண்டே வருகிறது.

படத்தின் முதல் பாதி சுவாரஸியமாய் இருக்கிறது. அடுத்த பாதியை சொதப்பி விட்டார் இயக்குனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. அடுத்த பாதியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கிளைமேக்ஸ் சோகமாய் இருக்கப் போகிறது என்றார். படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கப் போகிறது எனபதையும், கிளைமேக்ஸை எளிதில் ஊகித்து விடும் திரைக்கதையும் படத்தின் பிளாக்மார்க்.

காலத்தால் அழிக்கவே முடியாத எத்தனையோ பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். ரீமிக்ஸ் கூட பழைய பாடல்கள் இன்றைக்கும் ஹிட் அடிக்கின்றன. கானா பாடல்களில் புரட்சி செய்த இசையமைப்பாளர் தேவா இன்றைக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் இளையராஜா இருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் ஹிட்டோ ஹிட். இப்படத்தின் பாடல்கள் பற்றி எழுத ஒன்றுமில்லை. பின்னணி இசை சுமார் ரகம். கிடாரின் இசைக் கோர்ப்பு எரிச்சலைத் தருகிறது. குப்பத்து களத்தில் கிடார் இசையும், ஆங்காங்கே சில பழைய ட்யூன்களும் வருகின்றன. படத்தில் ஒட்டவே ஒட்டாத, தனியாக தெரிகிறது.

காதல் படங்களையும், ரவுடியிசத்தையும், ஒரே ஆள் நூறு பேரை அடிக்கும் படங்களையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகப் பெருமக்கள் மாறாத வரை இப்படியான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஏன் இது போன்ற படங்களே வந்து கொண்டிருக்கின்றன என்று யோசித்தால் ஒரு காரணம் தெளிவாய் தெரிகிறது.

பிரம்மனுக்கு அடுத்தபடியாக, ஒரு தாய்க்கு அடுத்த படியாக இருக்கும் படைப்பாளியான இயக்குனர்கள், ஹீரோ வரும் போது மெய்பொத்தி எழுந்து நின்று சலாம் போடும் போக்கினை மாற்றாத வரை எந்த ஒரு படைப்பும் முழுமையானதாக இருக்க முடியாது. 

* * *

Wednesday, August 1, 2012

தமிழ் சினிமாவில் புத்திசாலிகளின் பிசினஸ்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில புரட்சிகள் நடக்கும். திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வரின் வாரிசுகள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி சர்ச்சைகளையும், வெற்றிகளையும் குவித்தனர். கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் இறங்கி வெற்றிகளைக் குவித்தன(உண்மையா என்று தெரியவில்லை). ஆனால் பெரும்பாலான கார்ப்பொரேட் நிறுவனங்களின் சினிமாக்கள் தோல்வி அடைந்தன என்பதுதான் உண்மை. சன் க்ரூப்பின் முதல் படம் மட்டுமே பெருத்த லாபத்தைக் கொடுத்தது என்று சினிமா இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள்.

கார்பொரேட் நிறுவனங்களின் சட்டங்கள், திட்டங்கள், செயலாக்கங்கள் எதுவும் அதுவும் தமிழ் சினிமா உலகத்தில் பெரிய வெற்றியைத் தந்திட முடியாது. ஹாலிவுட் சினிமாவின் உருவாக்கம் போல தமிழ் சினிமாவில் பெரும் நிறுவனங்கள் சாதிக்க வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.

கிட்டத்தட்ட 31 சாட்டிலைட் சானல்கள், ஏழு பத்திரிக்கைகள், 48 எஃப் எம் சானல்கள், ஒரு விமான நிறுவனத்தை நடத்தும் சன் குழுமத்தினால் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. இதை விட பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தற்போது ஏதும் இல்லை. சமீபத்தில் தான் சினிமாவின் பெரிய சாதனையாளர் ஒருவர் “கார்ப்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் நின்று விட்டது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பேசினார்.

சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்கள்தான் அதிகம் இழந்திருக்கின்றார்கள். ஆனால் டெக்னீசியன்களும், நடிகர்களும் பெரும்பான்மையானவர்கள் எவரும் பொருளாதார இழப்பினைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.

சினிமாவில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அழிவைத்தான் சந்தித்திருக்கின்றார்கள் என்றுச் சொல்வார்கள். ஆனால் சிலர் சினிமாவை தன் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமான பிசினஸ்ஸாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சன் குழுமத்தின் மூலம் நில மோசடியில் கைதான சக்சேனா அவர்கள் தற்போது படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்திருக்கின்றார். அவரின் பேனரில் தினத்தந்தியில் “சாருலதா” படத்தின் பெயர் பளிச்சிடுகிறது. ஏற்கனவே இருக்கும் சினிமா அனுபவத்தில் வெகு எளிதாக இந்த பிசினஸ்ஸை அவரால் வெற்றிகரமாக நடத்தி விட முடியும். ஏரியாவிற்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைத்தால் போதுமே. அதைத்தான் இவரைப் போன்றவர்கள் தற்போது செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

எஸ்.ஆர்.எம் குழுமத்தின் வேந்தர் டிவி சார்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் நல்ல விலைக்கு வாங்கப்பட்டு, நல்ல லாபத்தோடு விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழகத்தின் பெரிய பஸ் கம்பெனி ஒன்று சினிமா வியாபாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றார்களாம்.

புத்திசாலிகளின் பிசினஸ் இப்படித்தான் இருக்கும்.

கதை கேட்க வேண்டியதில்லை, இயக்குனருடன் சண்டை பிடிக்க வேண்டியதில்லை இப்படி பலப்பல தயாரிப்புப் பிரச்சினைகள் இல்லாமல் சினிமாவில் பிசினஸ் செய்து லாபம் ஈட்டுவது என்பது புத்திசாலிகளின் பிசினஸ்தானே.

- கோவை எம் தங்கவேல்


Wednesday, June 27, 2012

கரிசல் மண் திரைப்படத்தின் மனதை மயக்கும் பாடல்


மிகச் சமீபத்தில் எனது ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், சினிமா பட இயக்குனருமான சுப. தமிழ்வாணன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் தற்போது “கரிசல் மண்” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பேராவூரணி பகுதி, கீரமங்கலம், பைங்கால், வேமங்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவிடம் வேலை செய்து கொண்டிருந்த திரு யானிதேஷ் என்ற புது இசையமைப்பாளர் தன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றும், நீங்கள் அவசியம் திரைப்படப் பாடல்களை கேட்டு கருத்துச் சொல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை முதன் முதலில் ஒரு திரைப்படப்பாடலைக் கேட்கின்ற போது மனது பட்டென்று பாடலோடு ஒட்ட வேண்டும் என்று நினைப்பேன். அத்தகைய பாடல்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வெளியிடப்படுகின்றன.

எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவத்தில் வேலை செய்து, பின்னர் கைதாகி மலேசியா சிறையில் இருந்து வெளிவந்த போது வானொலிப் பெட்டி ஒன்றினை வாங்கி வந்திருந்தார். அதை நான் வெகு பத்திரமாக பாதுகாத்து வந்தேன். பெண்கள் கல்லூரி ஒன்றில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி புரிந்து விட்டு, பத்து நாள் லீவில் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

1997ம் வருடம் என்று நினைக்கிறேன். படப்பைக் கற்கள் பதிந்த வீட்டு வாசலில் குளிர் காலமொன்றின் சூரியன் உதிக்காத பொழுதில் செய்தி கேட்பதற்காக வானொலியை ஆன் செய்த போது, இளையராஜாவின் காதலுக்கு மரியாதை படத்தின் “என்னைத் தாலாட்ட வருவாளா?” பாடலை முதன் முதலாய் கேட்க நேர்ந்தது. வானொலி என்பதால் அதே பாட்டை அடுத்த தடவை உடனடியாக கேட்க இயலாதே. கேட்ட பொழுதே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது பாடலும், ராகமும்.

அப்பாடலைக் கேட்பதற்காகவே வாக்மென் வாங்கி, கேசட்டில் அப்பாடலைப் பதிவு செய்து பலமுறை கேட்டிருக்கிறேன்.


அவரிடம் நிச்சயம் கேட்கிறேன் என்றுச் சொல்லி இருந்தேன். தற்போது வரக்கூடிய திரைப்படப்பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற்போல ஏதோ ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் பதிகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் ”ஏண்டி கள்ளச்சி” என்ற பாடல் என்னை அமைதியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதே போல நினைத்தாலே இனிக்கும் படத்தின் “அழகாய் பூக்குதே” என்ற பாடலு என்னைக் கவர்ந்த சமீபத்திய பாடல்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியான ஒரு பாடலை “கரிசல் மண்” படத்தில் கேட்க நேர்ந்தது. நீங்களும் கேட்டு விட்டு பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். அபுதாபியைச் சேர்ந்த பாடகி வந்தனா இப்பாடலைப் பாடி இருக்கிறார். இயக்குனர் சுப.தமிழ்வாணனும், இசையமைப்பாளர் யானி தேஷ்க்கும், பாடகி வந்தனாவிற்கும், பாடலாசிரியர் சுப்ரமணிய நந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ அந்தப் பாடல்


- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Thursday, May 17, 2012

புதிய சாட்டிலைட் சேனல்



எஸ் ஆர் எம் கல்லூரி நிறுவனர் திரு பச்சை முத்து அவர்களால் தொடங்கப்பட்ட ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கை பரவலாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. திறமைசாலிகளுக்கு மதிப்புக் கொடுத்த காரணத்தால், நல்ல கட்டுரைகள் வெளிவந்தன. ஆரம்பத்தில் நல்ல விஷயங்களோடு வெளியான பத்திரிக்கை, போகப் போக சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் புரியாமல் குழம்பிய போதுதான், புதிய தலைமுறை சாட்டிலைட் செய்திச் சானல் வெளிவந்தது. பத்திரைக்கை பத்தோடு பனிரெண்டானது. டிவி சானல் எல்லோரும் சன் டிவியை விட அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். ஆனால் எனக்கொன்றும் அவ்வளவு பிரமாதமாய் இருப்பது போல தெரியவில்லை. இந்தச் சானலில் அதிகப் பிரசங்கித் தனமான செய்திகளும், சும்மா ஒப்பேற்றுவது போல நிகழ்ச்சிகளும், எல்லாம் தெரிந்த மேதாவித்தனமான வார்த்தைப் பிரயோகங்களும் வெளிப்பட்டன. 

எந்த ஒரு செய்திக்கும், நிகழ்ச்சிக்கும் நிறைவு என்ற ஒன்று உண்டு. அதை இவர்கள் கொடுக்கவே இல்லை. சானலில் வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிறைவற்ற தன்மையைக் காணலாம். மேலும் இவர்கள் அரசியல் பின்புலம் அற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கின்றார்கள். இந்தச் செய்தி சானலை உலகப் புகழ் பெறும் வகையில் நடத்தலாம். ஆனால் அதற்கான எந்த ஒரு முஸ்தீபும் புதிய வடிவும், நிகழ்ச்சிகளும் இதுவரை வரல்லை. 

இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை நடு நிலை என்கிறார்கள்.’ஒப்புக்குச் சப்பாணி’ என்று தானே அர்த்தம் வரும். எது வரினும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று புதிய தலைமுறை செய்திகள் வெளியிடாதவரை இதுவும் ஒரு சானலாகத்தான் இருக்கும். 

நேற்று நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் சொன்னார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிலர் வருவர். அவர்களால் இண்டஸ்ட்ரி புத்துணர்ச்சி பெற்று பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். சினிமா உலகினர் சுறுசுறுப்பாய் உழைப்பர். திமுக குடும்பம் சினிமாவில் ஈடுபட்ட காரணத்தால் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அதே போல டாக்டர் சீனிவாசன், ரித்தீஷ் போன்றோரால் நிறைய தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. காசைப் பற்றியோ, படத்தின் தரம் பற்றியோ கவலைப்படாமல் இவர்களைப் போன்றோர் எடுத்து தள்ளிய சினிமாக்களினால்  சினிமா தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்தார்கள். இப்படிப் போன்றோர் தமிழ் சினிமாவிற்கு அடிக்கடி வந்து செல்வர். அது போன்றே தமிழ் சினிமா உலகில் எஸ் ஆர் எம் க்ரூப்பும் ஈடுபட இருக்கின்றார்களாம்.

சானல்கள் இல்லாத காலத்தில் படம் நன்றாக இல்லையெனில் தயாரிப்பாளார் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சாலையில் போக வேண்டியதுதான். ஆனால் தற்போது டிவி சானல்கள், எஃப் எம் ரேடியோக்கள், வெளி நாட்டு உரிமை, டப்பிங் உரிமை, வேற்றுமொழி உரிமை என்கிற பல்வேறு விஷயங்களினால் போட்ட காசுக்கு பங்கம் வந்து விடாமல் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக் கொண்டனர். திமுக ஆட்சியில் இருக்கும் போது அரசியல் அதிகார பலத்தால் சன் டிவியும், கலைஞர் டிவியும் தாங்கள் விரும்பிய விலைக்கு திரைப்படங்களை வாங்கினார்கள் என்கிறார்கள். திமுக ஆட்சியின் முடிவிற்குப் பிறகு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ ஆரோக்கியமானதாக மாறி இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றார்கள். பெரும் பணத்தினை முதலீடுகளாய் போட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல தமிழ் சாட்டிலைட் சேனல்கள் வருவது மன ஊக்கத்தினை தரும். போட்டி அதிகமிருக்கும் இடத்தில் நல்ல விலை கிடைக்கும் அல்லவா? 

சன், ராஜ், விஜய், கலைஞர், ஜெயா டிவிக்களின் சாட்டிலைட் உரிமைக்கான போட்டிக்கு மேலும் ஒரு சாட்டிலைட் சேனல் வரப்போகின்றதாம். எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் “வேந்தர் தொலைக்காட்சி” விரைவில் மலர இருக்கின்றதாம்.அவர்கள் பெரும் விலை கொடுத்து அரவான் திரைப்படத்தை வாங்கி இருப்பதாகவும், சகுனி படத்தின் விநியோக உரிமையுடன் சாட்டிலைட் உரிமையையும் வாங்கி இருப்பதாகவும் தமிழ் சினிமா உலகிலும், பத்திரிக்கை உலகிலும் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் புதிய தலைமுறை செய்திச் சானலில் இது பற்றிய விளம்பரங்கள் வெளியாகலாம். 
திரைப்பட விநியோகஸ்தராகவும், டிவி சானல்களாகவும் மாற இருக்கும் ‘புதிய தலைமுறை’ குழுமத்தினர் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Thursday, May 3, 2012

மோகமுள் திரைப்படமும் நாவலும்




மோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது. 

ஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.

படிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் ! 

நாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.

திருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது. 

திஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன. 

ஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.

பாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.

காதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? 

சிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Tuesday, May 1, 2012

யமுனாவின் மீதான மோகம் தீரவில்லை



கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சந்தர்ப்பவசமாய் யமுனா என்னிடம் சிக்கிக் கொண்டாள்.

எங்களூர் பட்டிக்காட்டு கிராமம். படிப்பறிவு கொஞ்சம் கம்மியாக இருந்த கால கட்டத்தில் பிறந்த காரணத்தால் புத்தக வாசனை பள்ளிக்கூடத்தின் மூலமாகவே கிடைத்தது. மூன்றாவது படிக்கும் போது என்று நம்புகிறேன், ராணி காமிக்ஸ் அறிமுகமாகி அன்றிலிருந்து காமிக்ஸ்ஸின் ரகசிய ரசிகனானேன். மாமாவோ பாடப்புத்தகத்தை தவிர வேறு புத்தகத்தைக் கையில் பார்த்து விட்டார் என்றால் மண்டையில் அழுந்த ஒரு குட்டுப் போடுவார்.  மாமாவின் குட்டுக்குப் பயந்து மர பீரோவின் அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சில கிழிந்து போன, கசங்கிப் போன காமிக்ஸ் புத்தகங்கள். எல்லாம் தெரிந்த மாமா இதுவரையிலும் மரபீரோவின் அடியில் எதையும் தேடுவதே இல்லை. ஏன் என்று எனக்கு இன்றைக்கும் புரியவில்லை.

இப்படியான ஹிட்லர் வீட்டில், அக்கா மூலம் என்றோ ஒரு நாள் அறிமுகமானது மாலைமதி. அந்தக் கதை இன்றைக்கும் என் மனதை விட்டு அகலவில்லை. ஏன் என்று தெரியவில்லை. பழைய புத்தக கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாலைமதி கிடைத்து விடுமா என்ற நப்பாசையில் தேடிப் பார்ப்பேன். கிடைக்காது. செல்லம்மாவின் சமையல் குறிப்புகளாவது கிடைக்குமா என்று கூட பக்கங்களில் படருவேன். செல்லம்மா கால ஓட்டத்தில் காணாமல் போகும் குழந்தைப் பருவ நினைவுகள் போல காணாமல் போய்விட்டார்.

தொடர்ந்து எழுத்தாளர் சுபாவின் நாவல்களும், அட்டைப்படத்தின் மூலம் கேவி ஆனந்த்தும் எனக்கு தெரிய வந்தனர். சுபாவின் நாவல்களின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் படு அசத்தலாய் இருக்கும். ஆரம்ப கட்டம் அல்லவா? பார்க்கும் புத்தகங்கள் எல்லாம் திகிலைக் கிளப்பிக் கொண்டிருந்தன. சுபாவின் தூண்டில் முள் நாவல் என்னை கலவரப்படுத்திய ஒன்று. அவரிடமிருந்து என் கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் கூட வந்தது. அதன் பிறகு அவர் எழுத்தின் மீதான வாசிப்பு எனக்கு திகட்ட ஆரம்பித்தது. நரேன், வைஜெயந்தியின் உரையாடல்கள் அலுப்பினைத் தர ஆரம்பித்தது. நரேனின் சாகசங்கள் வயதானது போல தோன்றின. பிகேபியின் பரத், சுசீலா கூட அப்படித்தான் ஆகிப் போனார்கள்.

தொடர்ந்த என் வாசிப்பு, கல்லூரிப் படிப்பின் போது, ஜானகி ராமனின் மோகமுள் புத்தகத்தில் வந்து நின்றது. பூண்டிக் கல்லூரியின் நூலகருக்கு எனக்கு பதில் சொல்லிச் சொல்லியே சலித்து இருக்கும். மூன்று வருடப் படிப்பின் போது ஜானகிராமனின் மோகமுள் என்னிடம் சிக்கவே இல்லை. ஆனால் மோகமுள்ளின் மீதான பிறரின் பார்வைகள் மிகப் பெரும் ரகசிய ஆர்வத்தை அதன் மீது ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. குமுதத்தில் வெளி வந்த மோகமுள் திரைப்படத்தின் கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் எனது டைரியின் பக்கத்தில் நிரந்தரமாய் படமாக ஒட்டிக் கொண்டாள். அவளைப் பார்க்காது டைரியில் ஒரு எழுத்துக் கூட எழுத மாட்டேன்.

வாழ்க்கைச் சூழலின் மாறுபாட்டினால் கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணம் முடிந்து ஓடிக் கொண்டிருந்த போது, மோகமுள் மனதின் அடியாளத்தில் புதைந்து போய்க் கிடந்தது.

பவர் கட்டின் பிரதிபலனாக பல நூல்களைப் படிக்க வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டேன். வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து புத்தக அலமாரியை அணுகிய போது மனதுக்குள் ஒளிந்து கிடந்த “மோகமுள்” மெதுவாக வெளிவந்தது. நூலகரிடம் விசாரித்த போது இல்லையென்ற பதில் மோகமுள்ளின் மீதான ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.

இப்படியான தேடலில் போன சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் பிடித்தே விட்டேன் மோகமுள்ளை. யமுனாவின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தழுவிக் கொள்ள, திரைப்பட மோகமுள் யமுனாவிற்கும் ஜானகிராமனின் மோகமுள் யமுனாவிற்கும் எந்த வித தொடர்பும் இன்றி இருப்பதைக் கண்டு மனது அதிர்ந்தது.

ஜானகி ராமனின் யமுனா ஒரு முழு நிலவு(?). அவளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். 20 வருட ரகசியப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


குறிப்பு : மோகமுள் திரைப்பட கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் ஒரு கதக் நடன மாது. அவரின் வெப்சைட்டை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதோ அவரின் வெப்சைட் முகவரி.







Saturday, April 28, 2012

மனதுக்கு வலி தரும் காதல்

மூளை முதல் கொண்டு நரம்புகள் அனைத்தும் விரைத்து இதயம் துடி துடிக்க, உதிர அணுக்கள் எல்லாம் காதலியின் பெயரை உச்சரித்துக் கொண்டு உடம்பெல்லாம் பரவ, உதிரச் சூட்டின் வலி தாளாமல் உடல் சோர்ந்து வீழ, மனது வெந்து வெதும்பி வீழ, காதலியின் வருகைக்காக வரும் வழி பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போக, காதலியின் குரல் கேளாமையால் காதுகள் எல்லாம் பஞ்சடைத்து போக மொத்தத்தில் அவளின் நினைவாலே உருமாறிப் போய் நிற்கும் காதலனின் தவிப்பை கமல் இக்காட்சிகளின் வழியே உருவகப்படுத்துவார்.

இதோ அந்தப் பாடலும் காட்சியும் உங்களுக்காக.



- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Saturday, March 3, 2012

காதலில் சொதப்புவது எப்படி? - 2

அறம், பொருள், இன்பம் என்று வரிசைப்படுத்தி உலகப் பொதுமறையை எழுதினார் திருவள்ளுவர். முதலில் அறம், அதன் படி பொருள், பின்னர் காதலின்பம் என்று வாழ்வியலை வரிசைப்படுத்தினார். ஆனால் இன்றோ முதலில் காதல், பின்னர் கொடுஞ்செயல் செய்து பொருள் என்று வாழ்வியல் முறை தவறிக் கிடக்கிறது.

”ஒரு பெண்ணிடத்தில் நீக்க முடியாத காதல் கொண்டு, அவள் காதலைத் தான் பெறாது போய் விட்ட போது, அவன் பனையின் கருக்குமட்டைகளை எடுத்து அவற்றைக் கொண்டு குதிரை உருவம் ஒன்று செய்வான். அதில் மணிகளும் மயிலிறகுகளும் வைத்து ஒப்பனை செய்து, கடிவாளம் போல ஒரு கயிற்றை அதன் மீது மாட்டிக் கொண்டு, தெருவழியாக அதன் மீது ஊர்வான். ஊரும் போது தன் காதலி மீது காதற்பாட்டுக்களைப் பாடிக் கொண்டே செல்வான்.

இக்காட்சி கண்டு சில சமயம் காதலியே இரங்கி மனமாறுவதுண்டு. அல்லது அவள் உறவினர் அவனை மணம் செய்யும்படி அவளைத் தூண்டுவர். ஆனால் காதலை இந்த அளவு வெளிப்படுத்தியும் காதலி அவனிடம் கனிவு காட்டவில்லையானால், அவன் செங்குத்தான குன்றிலிருந்து வீழ்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வான்.”

( நன்றி : ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - திரு வி.கனகசபை (1962) )

பாரதி சொன்னான் “காதல் காதல் காதல், காதல் இல்லையென்றால் சாதல் சாதல் சாதல்”. இப்படியான கலாச்சாரத்தில் பிரேக் அப் என்கிற காதலைப் பற்றி சொல்கிறது. காதல் மணம் முறிந்து சென்றால் அடுத்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் உயர்ந்த குன்றிலேறி தற்கொலை செய்து கொண்ட ஆணின் அறம் எங்கே, இப்படத்தில் அடுத்தவனைத் திருமணம் செய்து கொள்ள விழையும் பெண்ணின் அறம் எங்கே?

அடுத்து காதலைச் சொல்லும் வழி பற்றியது.

பார்வையிலே காதலை சொல்லுவது (காட்டுவது) பற்றி திருவள்ளுவர் காமத்துப்பாலில் விரிவாக எழுதி இருக்கிறார். மயிலாள் விழிகளை கொல்லும் கூற்றுவன் அம்புகளுக்கு இணையானது என்கிறார் அவர்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு. - திருக்குறள் காமத்துப்பால் (1083)

கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை. - கலைஞர் உரை

முதற்பகுதியில் கன்னியொருத்தி காளையொறுவன் தன் மீது கொண்ட காதலை எப்படி நயத்தகு முறையில் உறுதிப் படுத்துகிறாள் என்பதைப் படித்தீர்கள். ஆனால் இன்றைய சினிமாவில் காதல் வயப்படுவது எப்படிக் காட்டப்படுகிறது?

ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தால் காதல் வந்து விடும் என்கிறார் ரஜினி. பெண்ணே தேடித் தேடித்தேடிப் போய் அலைந்து திரிய வேண்டுமென்கிறார்கள். போனால் போவுது உன்னைக் காதலிக்கிறேன் என்கிறார் அஜீத் குமார். பெரும்பான்மையான தமிழ் சினிமாக்காதல் காட்சிகளை ஒரு நிமிடம் மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். அபத்தங்கள் புரியும்.

கற்பு என்பது பெண்ணுறுப்பை சிதைப்பதால் சீரழிந்து விடுவது அல்ல. ஆணுக்கும் பெண்ணுக்குமான அறத்தின் பெயர்தான் கற்பு. இயற்கை எப்படி ஒரு கட்டுக்குள் இயங்குகிறதோ மனிதனின் அக்கட்டுக்குள் இயங்கினால் அவன் வாழ்க்கை சீராக்கி அமைதியாய் வாழ்வான். அதில் சில கொடுமைகள் இருக்கின்றன. வாய் வழிச் சொல் எப்படி ஒரு மூலச் சொல்லை பாழ் படுத்தி விடுகிறதோ அது போல அந்தக் கொடுமைகள் தொடர்ந்து வந்து விடுகின்றன. அதையெல்லாம் பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இன்றைய திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல கேவலமான முறையில் காதல் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. நாங்கள் நடப்பதைத்தான் காட்டுகிறோம் என்பார்கள். அயோக்கியத்தனம் செய்வதற்கு தயரானவர்களுக்கு சமூகத்தின் மீதான பிடிப்பு இருப்பதில்லை. அமைதியான வாழ்க்கைத் தந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஏதாவது செய்து விட்டுப் போவோம் என்ற அக்கறையின்று இன்றைக்கு என்ன கிடைக்கிறது என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கின்றார்கள்.

பெரும்பாலானோர் இப்படத்தை ஒரு நல்ல படம் என்கிறார்கள். கல்லூரிகள் காதற்களமாய் உருவகப்படுத்தி காட்டப்படுகின்றன. கோயிலாய் காட்ட வேண்டிய இடம் கேவலமானதாய், வாழ்க்கைச் சீரழிக்கும் இடமாய் காட்டப்படுகிறது. படிக்கின்ற வயதில் காதல் கொண்டால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை எல்லாம் சினிமா காட்டுவதில்லை. ஆரம்பத்தில் பதிவில் படித்த காதற் காட்சிகளையும் இப்படத்தினையும் ஒரு நிமிடம் படம் பார்த்தவர்கள் ஒப்பிட்டுப்பாருங்கள். உலகத்திற்கே உதாரணமாய் திகழ்ந்த நம் தமிழ்க் கலாச்சாரத்தை இப்படம் எந்தளவுக்கு தரம் தாழ்த்தி இருக்கிறது என்பது புரிய வரும். இதை ஒரு சிறந்த படம் என்று எப்படிக் கூற முடியும்?

மிட்டாய் கடையில் விற்கப்படும் பலப்பல பலப்பங்கள் போலத் தான் தற்போதையை திரைப்படங்கள் வெளியாகின்றன. அவைகளில் தமிழர்களும் தமிழ் கலாச்சாரமும் உருவகப் படுத்துவது இல்லை. இப்பேர்ப்பட்ட கலாச்சார மேன்மையுடை சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பது கூட இல்லை. அதைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லை.

யூதர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தங்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் காப்பாற்ற புலவர்களையும், கல்வியாளர்களையும் பெரும் துன்பத்திலும் கூட பிறர் அறியாவண்ணம் காப்பாற்றி தங்களின் வாழ்க்கையை, முறையை எழுத்தில் வடித்தும், ஆவணமாக்கியும் பாதுகாத்து வந்தார்களாம். அவர்கள் எங்கே, நாம் எங்கே?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, March 2, 2012

காதலில் சொதப்புவது எப்படியும் மிட்டாய் கடையும் (A) - 1



( Art By Khalil Gibran )

ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரம் உலகின் உன்னத கலாச்சாரமாய் மிளிர்ந்தது. இன்றைக்கு வெட்கம் என்றால் விலை என்ன என்று கேட்கும் பெண்களைப் பார்க்கிறோம். உடல் பிதுங்கி வெளித் தெரியும் உடைகள், சூழ் நிலைக்கு ஒவ்வாத உடையலங்காரம், சிகையலங்காரம் போன்றவற்றினால் நாங்கள் நாகரீகம் மிக்கவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்றார்கள் இன்றைய பெண்கள். தங்களின் பெண் குழந்தைகள் முலை தெரிய, குண்டிகள் பிதுங்கி வெளியில் தெரிய, பெண்ணுறுப்பு முட்டிக் கொண்டு தெரிய உடை அணிவதை பெற்றோர்கள் பெருமையாய் நினைக்கின்றார்கள். நேற்றையச் செய்திதாளில் வகுப்புத் தோழன் தன் தோழிக்கு லிக்கர் கொடுத்து மயக்கப்படுத்தி தானும் தன் நண்பர்களுமாய் சேர்ந்து காருக்குள் வைத்து உறவு கொண்டிருக்கின்றான் என்றும், அவனைக் காவல்துறைக் கைது செய்திருக்கிறது என்றும் செய்தி வந்திருந்தது. ஏன் அப்பெண்ணுக்கு இந்த நிலை வந்தது? யோசிக்கணும்.

நாகரீக மோகத்தில் மூழ்கித் திளைக்கும் தமிழ்ச் சமூகம் பெண்கள் பலபேரோடு படுப்பதையும் இனி நாகரீகமாய் மாற்றி விடும். அல்லது மாதம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்வதும் நாகரீகம் என்றும் சொல்லக்கூடும். அது தான் சுதந்திரம் என்றும் பேசக்கூடும். கூடும் என்ன இப்போதே அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சுப்ரமண்யபுரம் என்ற படத்தில் கண்களால் பார்த்துக் கொண்டே நடைபயின்ற நடிகையைக் காட்டி இதைப் போன்றொதொரு பெண் எனக்கு திருமணம் செய்யக் கிடைப்பாளா என்று கேட்டவர்களும் உண்டு.

பண்டைய தமிழகத்தில் தமிழர்களின் சமூக வாழ்க்கையில் காதலைப் பற்றி பல நூல்களில் காணக்கிடக்கும் ஒரு சில காட்சிகளை முதலில் காணலாம்.

இதோ ஒரு காதல் காட்சியை காதல் கொண்ட இளம் நங்கையாள் ஒருத்தி சொல்கிறாள். கேளுங்கள் !

“காயாம்பூ ஒத்த கருவிழி நங்காய், கேள் !”

“அழகிய மாலையணிந்து வில் ஏந்தியவனாய் ஏதோ வேட்டையைத் தொடர்ந்து வந்தவன் போல ஓர் இளைஞன் என் முன் வருவான். வந்து கனிவுடன் நீண்ட நேரம் என்னை நோக்குவான். ஆனால் ஒரு சொல்கூடச் சொல்லாமல் சென்று விடுவான். அவனைப் பற்றிய எண்ணம் என் உறக்கத்தையே கெடுத்தது. நான் உள்ளூரத் துயரடைந்தேன். அவன் தன் காதலைக் கண்ணினால் தெரிவித்தானே யன்றி, நாவால் உறைப்பதில்லை. நானும் பெண்ணாய் இருப்பதினால் நாணம் காரணமாக அவனை எவ்வளவு காதலிக்கிறேன் என்று அவனிடம் கூறமுடியவில்லை.”

“மறைவான என் காதலின் துன்பம் பொறுக்கமாட்டாமல் நான் செய்த ஒரு செயல் இப்போது நினைத்தால் கூட வெட்கப்படத் தக்கதாயிருக்கிறது. ஒரு நாள் நான் நம் பண்ணையருகில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். அவன் வழக்கம் போல என் முன்வந்து நின்றான். நான் அவனை அழைத்து, “ஐய என்னை ஊஞ்சலில் சிறிது ஆட்டி விடு” என்றேன். மகிழ்ச்சியுடன் “அப்படியே செய்கிறேன்” என்று கூறி அவன் ஊசலாட்டினான். அப்போது நான் ஊசலிலிருந்து நழுவி விழுபவள் போல நடித்து அவன் தோள்கள் மீது விழுந்தேன்.”

“அவன் என்னை உடனே தன் கைகளால் இறுகப் பிடித்தான். நானும் உணர்விழந்தவள் போல அவன் தோள் மீது கிடந்தேன். அவன் என்னை மேலும் இறுக அணைத்துக் கொண்டான். ஆனால் நான் கண் விழித்ததும் கனிவுடன் தடவிக் கொடுத்துப் போகும்படி விட்டு விட்டான். ஆனால் என்னை ஆர்வமாகத் தானும் காதலிப்பதை அவன் செயல் உறுதியாகக் காட்டி விட்டது”

அடுத்து இன்னும் ஒரு கொலைக்கார காதல் காட்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதை நாளை எழுதுகிறேன்.
 
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, February 20, 2012

அருவி - ஒரு ஒன்லைன் கதை

நடு நிசி. யாரோ தண்ணீருக்குள் நடக்கும் பொலக் பொலக் சத்தம். உற்றுப் பார்த்தால் இரண்டு உருவங்கள் கண்மாய்க்குள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு உருவமும் ஜட்டி மட்டும் அணிந்திருக்கின்றன. மேலே ஒன்றுமில்லை. ஒரு உருவத்தின் தோளில் சாக்குப் பை போல ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொரு உருவம் தண்ணீருக்குள் கை விட்டு துலாவிக் கொண்டே நடக்கிறது.

ஒரு உருவம் கையை மேலே தூக்க, முரட்டு மீன் நிலவொளியில் துள்ளுகிறது. அதைப்  பிடித்து கோணிக்குள் திணிக்கும் போது, யாரங்கே?ன்னு” குரல் கேட்க, குரல் கேட்ட திசையைப் பார்க்க, அங்கு கையில் கம்போடு சத்தம் போட்டுக் கொண்டே ஒரு உருவம் ஓடி வருவதைப் பார்த்த இரு உருவமும், அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றன.

வாய்க்கால், வரப்புகளைத் தாண்டி மரங்கள் சூழ்ந்த பகுதிக்குள் நுழைந்த அந்த உருவங்கள் ஓரிடத்தில் மூச்சு வாங்க நிற்கின்றன. அவர்கள்தான் முத்தையன்,மல்லையன். முத்தையன் மல்லையனைப் பார்த்து மூச்சு வாங்க வெற்றிப் புன்னகை பூக்கிறான். மல்லையன் அப்படியே தரையில் விழுகிறான்.

கோணிப்பைக்குளிருந்து இரண்டு விரால் மீன்கள் நழுவி வெளியில் வருகின்றன.இருவரும் வெற்றிப் பெருமிதத்தோடு அந்த மீன்களைப் பார்க்கின்றனர்.

காலையில் முத்தையன் ஊருக்குள் வரும் காவல்துறையினர், முத்தையனையும் மல்லையனையும் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

காவல்துறையினர் எப்படி சரியாக இருவரையும் அடையாளம் கண்டார்கள்? மீன் பிடித்ததற்காகவா காவல்துறை இவர்களைக் கைது செய்தது? ஏன் கைது செய்தது? என்ன காரணம்? (கதையின் நகர்வு இந்தப் பிரச்சினையை வைத்துதான் நகர்கிறது) 

முத்தையன் இளம் வாலிபன். மல்லையன் முத்தையனின் பக்கத்து வீட்டுக்கார தோழன். முத்தையன் எள்ளலும், எகத்தாளமும் உடையவன். அவனுக்கு சரியாக மல்லையன். முத்தையனின் அப்பாவிற்கு இருக்கும் நிலங்கள் மூலமாய் வருமானம் வருவதால் சாப்பாடு மற்றும் இன்னபிற செலவுகளுக்கு முத்தையனுக்குப் பிரச்சினை இல்லை. ஊர் சுற்றல், அங்கங்கே ரகளை என்று திரிகின்றவன். இப்படியான நாட்களில் ஒரு நாள், கட்சிக்காரர் ஒருவரைப் பகைத்துக் கொள்கிறான். கட்சிகாரருக்கு முத்தையனைக் கண்டாலே ஆவதில்லை. அதே போல முத்தையன் கட்சிக்காரரைப் பார்த்தாலே எரிமலையாகி விடுவான்.

இதற்கிடையில் வீரபாண்டி என்பவரைச் சந்திக்கும் முத்தையன் அவருடன் கைகோர்க்கிறான். அதன் காரணமாய் அவன் அரசுக்கு எதிரான தீச்செயல்களில் ஈடுபடுகிறான். முத்தையன் அப்பாவின் நண்பர் ஏட்டாக இருக்கிறார். அவர் முத்தையனின்  நட்பு பற்றி, அப்பாவிடம் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கும்படிச் சொல்கிறார்.

முத்தையனின் அப்பாவும், அம்மாவும் அவனுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள். அதன்படி பக்கத்து ஊரில் இருக்கும் தன் உறவினரிடம் பெண் பார்க்கச் சொல்ல, அவர்களும் முத்தையனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைச் சொல்ல முத்தையனை வற்புறுத்திப் பெண் பார்க்கச் செல்லும்படிச் சொல்கின்றார்கள் பெற்றோர்கள்.

முத்தையன் அருவியைச் சந்திக்கிறான். அருவி குணத்தால் அழகானவள். படுரகளையானவள். ஏட்டிக்குப் போட்டி என்றாள் அருவிதான். அத்தனையும் குறும்பு. முத்தையனின் முரட்டுத்தனமும், அருவியின் குறும்பத்தனமும் ஒன்று சேர, காதலில் விழுகின்றார்கள். காதலியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் அவனுக்கு ஏதாகிலும் ஒரு பிரச்சினை வந்து, அவளைச் சந்திக்க விடாமல் தடுத்து விடுகிறது. ஏன் இப்படியாய் பிரச்சினை வருகிறது என்பது அவனுக்குப் பெரும் புதிராய் இருக்கிறது.

காதலியைச் சந்திக்க விடாமல் தடுப்பது எது? யார்? ஏன்? எதற்கு? 

முத்தையன் வீட்டில் திருமணத் தேதியைக் குறிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, வீரபாண்டியுடன் அரசுக்கு எதிரான ஒரு சம்பவத்தில் சிக்கிக் கொள்கிறான் முத்தையன். இதன் காரணமாய் முத்தையன் அந்தப் பகுதி முழுவதும் பிரபல்யமாகின்றான்.காவல்துறை முத்தையனைத் தேடுகிறது.

தேதி குறிக்கச் செல்லும் முத்தையன் அங்கு தனக்கு மனைவியாக வரப்போகிற அருவி, தன்னால் முன்பு வெறுக்கப்பட்ட கட்சிக்காரரின் மகள் என்பதையும், அந்தக் கட்சிக்காரர் தன்னுடைய உறவினர் என்பதையும் அறிகிறான்.

ஆரம்பத்தில் காவல்துறை ஏன் முத்தையனைக் கைது செய்தது? யார் அந்த வீரபாண்டி? அவர் ஏன் அரசுக்கு எதிராய் நடக்கிறார்? இவர் கூட முத்தையன் ஏன் சேர்ந்தான்?  காவல்துறையினரையின் வழக்கிலிருந்து எப்படித் தப்பித்தான்? தன்னை வெறுத்த கட்சிக்காரரின் மகளை எப்படித் திருமணம் செய்தான்?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல் 

Tuesday, January 24, 2012

நடிகர் விஜய்யின் சரியான நகர்தல்


குருவி படத்தில் விஜய் எங்கிருந்தோ பறந்து பறந்து வந்தெல்லாம் அடித்து தூள் கிளப்புவார். சினிமா தியேட்டரில் இண்டர்வல்லில் ரசிகன் ஒருவன் தன் நண்பனிடம் இது பற்றி அலுத்துக் கொள்ள, "நண்பன் இதே சூர்யா செய்தால் ஒத்துக் கொள்வோமா? இதற்கு விஜய்தான் லாயக்கு" என்றான். சினிமா தியேட்டருக்கு ரெகுலராக வருகை தரும் ரசிகன், தன் நண்பரான தியேட்டர் மேனேஜரிடம் “ என்னாங்க இது, காத்துல பறக்கறாரு, படம் பார்க்க புடிக்கல காசைக் கொடுங்க” என்றுச் சொல்லி வந்து நின்றார். இதெல்லாம் விஜய் படத்தின் ரிலீசின் போது அவரின் ரசிகர்கள் பேசிக் கொண்டது.

ஆனந்த விகடன் நேர்காணலின் போது பிரபல இயக்குனர்களின் லிஸ்ட்டில் விஜய்யின் பெயரே இல்லை என்று எழுதி இருந்தார்கள். அப்போது புது இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்றுச் சொன்ன விஜய் தற்போது உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

அவர் விரும்பிய, நம்பிய பறந்து பறந்து போடும் சண்டை இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை, ஆனால் படம் வெற்றி. விஜய்யிடம் என்ன பிரச்சினை என்றால் தான் செய்யும் சில அசட்டைகளை அவர் இன்னும் விடாமல் நடிப்பில் பயன்படுத்துவதுதான். ஒரே மாதிரியான அசட்டைகள் எரிச்சலை உருவாக்கும் என்பதை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நண்பன் படத்தினைப் பார்க்கின்ற போது தெரிய வருகின்றது.  இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் நண்பன் படத்தின் வெற்றிக்கு முன்னால் காணாமல் போய் விட்டன என்பதால் அதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்கத் தேவையில்லை.

இவருக்குப் பின்னால் வந்த சூர்யா பிரபல இயக்குனர்களின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார். சூர்யா நடிப்பில் எங்கோ சென்று விட்டார். தனுஷோ இன்னும் ஒரு படிமேல் சென்று விட்டார். போக்கிரி, வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற அக்மார்க் அட்டர் பிளாப்புகளால் தன் இமேஜ்ஜை வேறு விதமாக புரிந்து கொண்டிருந்தார் விஜய். ஆனால் தற்போது அவரின் நண்பன் படம் அந்த அடிதடி இமேஜ்ஜை உடைத்து, அவருக்கு வேறு விதமான பாதையைக் காட்டி இருக்கிறது. அவர் நிச்சயம் தற்போது தன் நிலையையும், ரசிகர்களின் போக்கினையும் புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம்.

இயக்குனர் சங்கருக்கென்று இருக்கும் ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்திருக்கும் விஜய், அடுத்து வரப்போகும் முருகதாஸின் “துப்பாக்கி”, கவுதம்மின் “யோகன் அத்தியாயம் ஒன்று” போன்ற படங்களினால் நிச்சயம் அமீர்கான் போன்ற சிறந்த நடிகராக மிளிர்வார் என்று நம்பலாம். இயக்குனர் முருகதாஸுக்கு என்று இருக்கும் ஆடியன்ஸ், கவுதமிற்கு என்று இருக்கும் ஆடியன்ஸ் என்று பல பிரபல இயக்குனர்களின் ஆடியன்ஸ்களை தன் பக்கம் ஈர்ப்பதில் தான் நடிகரின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். வியாபாரமும் அதிகமாகும். இந்த நடிகரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வரும். அதற்காக புதிய இயக்குனர்களின் படங்களை ஒத்துக் கொள்ளக் கூடாது என்றுச் சொல்லவில்லை. கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். ரசிகர்களைக் கவரும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும். தமிழ் சினிமா உலகின் சாபக்கேடு கதை திருட்டு. அதை விஜய்யின் தந்தை செய்கிறார் என்று சில சர்ச்சைகள் இருக்கின்றன.  இதன் காரணமாக கூட நல்ல  நல்ல கதைகள் கூட விஜய்யை எட்டி விடாமல் போகலாம். விஜய் இது போன்ற சின்ன சின்ன விசயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டியது அவரின் வெற்றிக்கு முக்கியம்.

இப்போதிருக்கும் காலம் எம் ஜி ஆர் காலம் அல்ல. இது டெக்னாலஜி ஆட்சி செய்யும் டெக் உலகம். அதை நடிகர்கள் உணர்ந்து தன் மீதான வியாபார உத்தியைப் பெருக்க வழி வகை செய்ய வேண்டும். அதை விடுத்து, “ நான் போகும் பாதை தனிப்பாதை” என்றெல்லாம் பஞ்ச் டயலாக் விட்டு, தானும் ரஜினி போன்று வரலாம் எனக் கனவுக் கோட்டை கட்டினால் அது காற்றின் சிறு சலசலப்பில் கலைந்து போகும்.

விஜய் அதை உணர்ந்து கொண்டால் மிக நல்ல நடிகராக பரிணமளிக்கலாம். இல்லை என்றால் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான, பெண்களால் அதிகம் காதலிக்கப்பட்ட “திரு மோகன்” கதி போல ஆகி விடுவார் என்பது நிச்சயம். உலகம் மாறிக்கொண்டிருக்கிறது, அதே போல மாற்றப்பட்ட வியாபார உத்திகளை புகுத்தாத எவரும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, January 23, 2012

அழகின் அற்புதம் படைப்பின் உச்சகட்டம்(A)

பல வருடங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் டெக்ஸ்டைல் இறக்குமதியாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பையிங் ஏஜென்டாக இருந்தேன். ஜெர்மனியில் இருக்கும் பிரபல தியேட்டர் ஒன்றின் சீருடை ஒன்றின் ஆர்டருக்காக கோவை வரும் சூழ் நிலை ஏற்பட்டது. நானும், வாசுதேவன் என்கிற நண்பரும் காரில் வந்து கொண்டிருந்த போது பல்லடம் தாண்டி ஒரு வளைவு வரும். வலது புறமாய் பெட்ரோல் பங்க் ஒன்று கூட இருக்கிறது. அது ஒரு எஸ் பெண்ட் போல இருக்கும். அந்த வளைவில் அடிக்கடி டிராஃபிக் ஆகி விடும். எங்களின் கார் (எனக்குப் பிடித்த ப்ரீமியர் 118 கார் ) முன்னே ஒரு பெண் எங்களைத் தாண்டிச் செல்ல முயன்று கொண்டிருந்தார்.

நண்பர் வாசுதேவன் கிரீச்சிட்டார். ”தங்கம், அங்கே பாருங்க அழகின் அற்புதத்தை!” என்றார் சத்தமாய். நிச்சயம் இது நாள் வரையிலும் நான் அப்படியான அழகுப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. ஒரு கணம் என் மூச்சு நின்று பின் நிதானமானது. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பிரம்மன் மறந்து போய் படைத்து விட்ட அற்புதத்தின் பேரழகி அப்பெண். நானும் என் நண்பரும் மூச்சடைத்து, பிரம்மையின் உச்சத்தில் மித மிஞ்சிய இன்பத்தில் ஆழ்ந்தோம். பார்ப்பதில் கூட இப்படி ஒரு இன்பம் இருப்பதை அன்று நாங்கள் அறிந்து கொண்டோம். இன்றைக்கு எங்கள் சார்பு நிறுவனமான ஃபெமோ மாடலிங் கம்பெனியில் எண்ணற்ற பெண்கள் விளம்பரங்களுக்காகவும், சினிமாவில் நடிப்பதற்காகவும் எங்களை அணுகுகின்றனர். இந்தியாவின் மிகப் பிரபலமான பல மாடல்கள் எங்கள் நிறுவனத்தின் மாடல்கள். இருப்பினும் அவர்களில் எவரும் இதுகாறும் நான் அன்று கண்ட “அற்புத அழகியினை” ஒத்தார்கள் இல்லை.

ஒரு பெண் அழகு என்று எப்படி உணருவது என்று கேட்கத் தோன்றும். தோற்றத்தை வைத்து அதை உணரலாம். பிற விஷயங்கள் பற்றி எழுத கூச்சமாய் இருப்பதால் விட்டு விடுகிறேன். வில் இருக்கிறதே வில் அதை பார்த்திருப்பீர்கள். காமத்தின் கடவுள் மன்மதன் கையில் இருக்கும் மனிதர்களைக் கொல்லும் வில், அதை நேரில் நிறுத்திப் பார்த்திருந்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் அனுமானித்திருக்க முடியும். இதற்கு மேல் விளக்கமாய் எப்படி எழுதுவது? இதோ ஒரு வில்லின் படம். மன்மதனின் கையில் வில் ஏன் என்ற கேள்விக்கு பதிலை நான் அந்த அழகின் அற்புதப்படைப்பினைக் கண்ட போது அறிந்து கொண்டேன்.



( எனக்குப் பிடித்த கடவுள் ராமரின் கையில் வில். இவர் கையில் வில் ஏன் என ஒரு கணம் எண்ணிபாருங்கள். கடவுள் படைப்பின் மகத்துவத்தினை உணரலாம், பிரமிக்கலாம், புரிந்து கொள்ளவே முடியாத கடவுள் படைப்புகளின் மகத்துவத்தை அறியலாம் )

ஜானி என்ற படத்தில் ஸ்ரீதேவி அப்படியான தோற்றத்தில் வருவார். அவருக்குப் பின்பு வந்த எந்த ஒரு கதாநாயகியும் அவ்வாறான தோற்றத்தில் இல்லை.

இளையராஜாவின் “தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது?” என்ற பாடலை கேட்கின்ற போதெல்லாம் என் மனதின் நினைவுகளூடே அப்பெண்ணின் அழகிய முகம் இடறிக் கொண்டிருக்கும். இதோ அப்பாடலையும், இப்பாடல் சம்பந்தமான சுவாரசியமான ஒரு பதிவினையும் படித்துப் பாருங்கள்.




பாட்டைக் கேட்கின்ற போதே தாலாட்டும் இளையராஜாவின் இசையமுதம் உங்களைத் தழுவிக் கொள்ளும். மார்கழி மாத விடிகாலைக் குளிரில் கோலம் போடும் அம்மாவைப் பார்க்க முயலும் குழந்தையை, குளிருக்கு இதமாய் தழுவி தன் முந்தானையால் மூடிக் கொள்ளும் அம்மாவின் அணைப்புப் போல.

- ப்ரியங்களுடன்

கோவை எம் தங்கவேல்



Wednesday, January 11, 2012

சாருநிவேதிதாவின் பத்தியும் ஒரு பரிகாசமும் (18+)




( சார் இங்கேயெல்லாம் பார்க்காதீங்க சார் )

போன் செய்து பிளாக் பற்றிப் பாராட்டிய திரு சக்கரபாணிக்கு நன்றி.

சாரு நிவேதிதாவின் பத்தி ஒன்றினை வாசிக்க நேர்ந்தது. அப்பத்தி அவரின்  வாசகர் ஒருவரின் கடிதம். முதலில் அப்பத்தியைப் படித்து விடுங்கள். அப்போதுதான் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்குப் புரியும்.


புத்தக திருவிழாவிற்கு சென்று 4000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியதைப் பற்றி சிலாகித்து எழுதி இருந்தார் ராஜ ராஜேந்திரன். அப்பத்தியில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், மனிதருள் மாணிக்கம் பாஸ்கர் ராஜா என்ற விஷயம்தான்.  அப்பத்தியைப் படித்ததும், இப்பத்தி எழுதியே ஆக வேண்டுமென்ற திட்டம் மனதுக்குள் வந்து  விட்டது.

நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்தின் கதையைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன்.

காலையில் ஒன்பது மணிக்கு பவர் கட். என்னெவென்று பார்த்தால் ஷட்டவுனாம். வேறு வழி இன்றி அருகில் இருந்த அரசு நூலகத்திற்குள் நுழைந்தேன்.

ஒரு புத்தகத்தை எடுத்து முன்னுரையைப் படிக்கலாமென்று பார்த்த போது, இலக்கிய சாதனையாளர்கள் என்று தலைப்பிட்டு நாவல் உலகின் பிதாமகன் இவர் என்று ஆரம்பித்திருந்தார்கள். தமிழில் வாசக பரம்பரையை உருவாக்க முனைந்தவர்கள் இவர்களில் ஒருவர் என்ற பதம் வேறு எழுதப்பட்டிருக்க, அடடே கடவுளாய் பார்த்து நம் கண்ணில் நல்ல ஒரு புத்தகத்தைக் காட்டி இருக்கின்றாரே என்று மகிழ்ந்தேன்.  அடுத்து தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி, சிவபாத சுந்தரம் என்கிற புத்தகத்திலிருந்து எடுத்து போட்டிருந்த பத்தியையும் படித்து, எனது முடிவை மனதுக்குள் சிலாகித்து, எனக்குள்ளே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். மிக நல்ல புத்தகம் தான் இது அதுவுமின்றி தமிழ் நாவல் உலகின் பிரமாதமான எழுத்தாளர் என்றும் முடிவு கட்டிக் கொண்டு, நிரம்பச் சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

தலைக்கு மூன்று தலைகாணியை வைத்துக் கொண்டு, பெட்டில் மல்லாந்து படுத்துக் கொண்டு நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். கடைசியில் என்ன ஆனது தெரியுமா? நாவலை முடித்ததும் மனையாள் அலற ஆரம்பித்தாள்.

”பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வரும் நேரத்தில் ஏன் இப்படி” என்று திட்ட ஆரம்பித்தாள். நாவல் படித்த வேகத்தில் அவள் திட்டியது நினைவில் ஏராமல், கஜினி முகம்மதுவின் படையெடுப்பு ஒன்றே நினைவில் நின்றாடியது. எனக்கு கஜினியை நிரம்பப் பிடிக்கும். கொண்ட கொள்கையில் விடாது நின்று ஜெயித்தவன் அல்லவா அவன். சிறு வயதில் பள்ளியில் படித்த பாடங்களை இது போன்ற தருணத்தில் கூட கடைபிடிக்கவில்லை என்றால் படித்ததற்கும், சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் கடைமைக்கும் அழகில்லை பாருங்கள்.

ஆனால், நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றுச் சொல்வார்களே அதை நான் அன்று அனுபவித்தேன். என் விஷயத்தில் தொடர்ந்து கடவுள் கெடுதலையே செய்து வருகின்றார் என்பதையும் நான் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்.

என்னத்தைச் சொல்ல போங்கள் !

ஏதேதோ சொல்லி சரிக்கட்டுவதற்குள் பையனும் பொண்ணும் காலிங்பெல்லை அடிக்க அடச்சே இன்னும் எட்டு மணி நேரம் மின்சாரத்தடை வேறா என்று எண்ணிக் கொண்டு விதியை நொந்து கொண்டேன்.

அத்துடன் விட்டாரா கடவுள், அன்று மாலையில் மிகச் சரியாக உறவினர்கள் மூவர் வீட்டுக்கு வந்து விட என் நிலைமைய நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். கடவுள் என் விஷயத்தில் ரொம்பவும் தான் இரக்கமற்று நடந்து கொள்கிறான் என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்குமே? இப்படி என்னப் புலம்ப வைத்த நாவல் எது? அதன் ஆசிரியர் யார்? அதன் கதை என்ன என்று உங்களுக்குத் தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்குமே.

அது என்ன நாவல், ஏன் இப்படி எனக்கு ஆனது என்று அந்த நாவலின் கதையை சுருக்கமாய் எழுதுகிறேன். படித்த உடன் உங்களுக்கு எனது நிலைமை ஏற்படவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு ஞானியாகத்தான் இருக்க முடியும். அந்தக் கதை என்னவென்றால்....

திரு யுவகிருஷ்ணாவின் பத்தி ஒன்றரை நிமிடத்தில் படிப்பதாய் இருக்க வேண்டுமென்ற கருத்திற்காக மரியாதை கொடுத்து, நாவலின் கதையை நாளை எழுதுகிறேன்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்

குறிப்பு : மேற்படி படம் நாவல் படித்த ஜோரில் போடப்பட்டது.

Tuesday, January 3, 2012

தயாரிப்பாளரை ஏமாற்றிய இயக்குனர்

கோர்ட்டுகள் குடும்பங்களின் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது மிகக் கொடுமையான ஒன்று. நீதிபதிகள் எவரும் கடவுள் அல்ல. மிக உயர்ந்த மனம் கொண்டவர்களும் அல்ல. வக்கீலாக பிராக்டீஸ் செய்து, அதன் பிறகு நீதிபதிகளாய் வருபவர்கள் தான்.

கணவன், மனைவிக்கு டைவோர்ஸ் கொடுப்பதில் நீதிமன்றங்கள் ஈடுபடுவது நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் சட்டம் தன் மூக்கை நுழைப்பது ஆகும். சட்டப்படி என்பது வாழ்க்கைக்கு ஒத்து வரவே வராது. தமிழ்ச் சமூகம் என்பது உயர்ந்த நம்பிக்கை சார்ந்த, சமூகச் சார்புடைய, கற்பியல் சார்ந்தது. அதில் சட்டத்துறையின் தலையீடு என்பது கேலிக்குறியதாகும். முன்பு ஒரு முறை அம்மாவின் அரசு பலியிடுதலை சட்டவிரோதம் என்றது. நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் அரசு தலையிட்டு, பின்னர் முக்கறுபட்டது நமெக்கெல்லாம் நினைவில் இருக்கலாம். இது போன்றதுதான் குடும்ப உறவுகளுக்குள் சட்டம் நுழைவது.

கணவன், மனைவி உறவென்பது சாதாரணமானது அல்ல. அது ஒரு டிவைன். இருவருக்கும் இருக்கும் பிணைப்பு என்பது கடவுள் தன்மை உடையது. அதையெல்லாம் சட்டத்தின் வரையறைகளுக்குள் கொண்டு வரவே முடியாது. என் நண்பருக்கு டிவோர்ஸ் ஆகி விட்டது. மனைவி தனியாக வாழ்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள். மூவரும் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர். மனைவிக்கு டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்ததில் மனைவியின் உறவினர்களுக்கு பெரும் பங்கு உண்டு. 

தனிமையில் வாழ்கிறார் நண்பரின் மனைவி. இவர் வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகின்றார் என்பது எனக்குப் புரியவே இல்லை. முடிவில் என்ன ஆகும் தெரியுமா? எவரும் இவரைக் கண்டு கொள்ளப் போவது இல்லை. தனிமையில் கிடந்து உழலுவார். தன் வாழ்க்கையை பலியிடுவார். இவரின் குழந்தைகள் கூட இவரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். குழந்தைச் செல்வங்களை கூட வைத்து, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்குவதில் இருக்கும் சந்தோஷத்தை விட மனிதனுக்கு வேறென்ன சந்தோஷம் பெரிதாய் இருக்க முடியும் சொல்லுங்கள் பார்க்கலாம். அதை இப்பெண்மணி இழந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல தன் கணவனையும் இழக்க வைத்திருக்கிறார்.

நானும் நண்பரும் வாரா வாரம் கோவை ரேஸ் கோர்ஸ் சென்று வருவோம். வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கார் வேறு வழியாக வந்தது. வழியில் நண்பரின் குழந்தைகள் தங்கிப் படிக்கும் பள்ளியின் ஹாஸ்டல் இருந்தது.

”என் குழந்தைகள் மூவரும் ஜெயிலில் கிடக்கிறார்கள்” என்றார் குரல் கம்ம. டைவோர்ஸ் வழங்கிய கோர்ட் இந்தத் தகப்பனின் சோகத்துக்கு என்ன பதில் சொல்லும். தானே குழந்தையை வளர்க்கிறேன் என்றுச் சொன்ன தாய் மூன்று பேரையும் ஹாஸ்டலில் கொண்டு போய் தள்ளி விட்டார். கோர்ட் குழந்தைகளை தாயின் அரவணைப்பில் தான் விடும். இது எத்தகைய ஒரு கொடூரம் என்பதைப் பாருங்கள். தகப்பன் நினைத்தால் கூட உடனே தன் குழந்தைகளைப் பார்த்து விட முடியாது. தாய், தந்தையின் அரவணைப்பில் வாழ வேண்டிய குழந்தைகள் தனியாய் வாழ்கின்றாஅர்கள்.  கோர்ட் ஒரு குடும்பத்தினை கெடுத்து, குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறதைப் பார்த்தீர்களா?

கோர்ட்டுகள் உறவுகளுக்குள் நுழைந்து கொடுக்கும் தீர்ப்புகளின் விளைவினைப் பார்த்தீர்களா? அவரின் மூடை மாற்றுவதற்காக பேச்சை மாற்றினேன். அப்போது அவர் சொன்னது.

இவரின் நண்பர் ஒரு இயக்குனர். எங்கெங்கோ சென்று யாரோ ஒருவரைப் பிடித்து ஒன்றரைக் கோடி பணத்தை வாங்கி விட்டார். வாங்கியது சென்னையில் ஒரு வீடு, சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கி விட்டார். படமெடுக்கிறேன் பேர்வழி என்று ஒப்புக்கு ஒரு படத்தினை எடுத்து, கொஞ்சம் வியாபாரமும் செய்து விட்டார். பணம் கொடுத்தவர் பெரிய பணக்காரர். அவருக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இப்படித்தான் பல இயக்குனர்கள் இருக்கின்றார்கள். இப்போது இந்த இயக்குனர் வேறு ஏமாளி தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார். எனக்கும் கூட சில அனுபவங்கள் உண்டு.

என்னிடம் ஒருவர் படமியக்க உதவி செய்யும் படி வந்தார். அவரை தமிழகத்தின் மிகப் பிரபலமான கோடீஸ்வர நண்பரிடம் அனுப்பி வைத்தேன். இயக்குனர் சென்று நண்பரைச் சந்தித்து விட்டு வந்து, “சார், என் வாழ்க்கையில் இவ்ளோ பணத்தினைக் கண்ணால் கூட கண்டது இல்லை சார் !” என்றார். என்ன இது இந்த ஆள் இப்படிப் பேசுகின்றாரே என்று நினைத்தேன்.

போனில் வந்த கோடீஸ்வர நண்பர் ”தங்கம், எப்படி நீங்க எல்லோரையும் நம்புகின்றீர்கள்?” என்றார். அதன் பிறகு இந்த இயக்குனரைப் பற்றி சில விஷயங்கள் சொன்னார். அவரின் கணிப்பு மிகச் சரியானது என்பதை அறிந்து கொண்டேன்.

இது நடந்து கொஞ்ச காலம் ஆனது. வேறொரு இயக்குனர் ஒருவர் என்னிடம் வாய்ப்பு பெற்றுத் தரும்படி வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியில் பெரும் பதவியில் இருக்கும் நண்பரிடம் அனுப்பி, ”நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார், இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்றுச் சொன்னேன். நண்பர் சரியான ஆராய்ச்சிப் பேர்வழி. இந்த இயக்குனரை உள்ளும் புறமும் சோதித்து விட்டு, “பத்துப் பைசாவிற்கு தேரமாட்டான் இவன்” என்றுச் சொன்னார்.

பிரபல அரசியல்வாதி  நண்பர் தன் மகனை ஹீரோவாக்க நினைத்து நல்ல ஸ்கிரிப்ட் தேடிக் கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் என்னிடம் சொன்ன போது, நல்ல ஸ்கிரிப்ட் ஒன்றினை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிய ஒரு புதிய இயக்குனரை அவரிடம் அனுப்பி வைத்தேன். “ஆள் சரியில்லைப்பா” என்றார் அரசியல்வாதி.

தகுதியற்றவர்களை சிபாரிசு செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் வேறுமாதிரியாய் இருந்தது. அத்துடன் சிபாரிசுகளை முற்றிலுமாய் நிறுத்தி விட்டேன்.

சினிமாவில் ஈகோ பிரச்சினை அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு இயக்குனர் புதியவர். அவரிடம் வேலை பார்க்கும் கேமரா மேன், “சார் எனக்கு பத்து வருடம் அனுபவம் சார், நீங்கள் புதிதாய் சினிமாவிற்கு வந்தவர். இந்தக் காட்சிக்கு இங்கே தான் கேமரா வைக்க வேண்டும்” என்று பலர் இருக்கச் சொன்னார். கேமரா அசிஸ்டெண்ட் இயக்குனர் சொல்வதைக் கேட்கவே மாட்டான்.இவரால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை. வேறு வழி இன்றி சமாதானம் ஆனார் இயக்குனர்.

அது மட்டுமல்ல “சினிமாவில் நம்பிக்கைத் துரோகம்” என்பது மிக அதிகம். முன்னால் ஒன்று பேசுவர், பின்னால் ஒன்று பேசுவர். இதுதான் சினிமா. கூட இருந்தே குழி பறிப்பதில் சினிமாவில் தான் மிக அதிகம். நல்ல நண்பராக இருப்போர் திடீரென்று மிகப் பெரும் எதிரியாய் மாறி விடுவதும் சினிமாவில் தான் சாத்தியம் என்றார் எனது சினிமா நண்பர் ஒருவர்.

ஒரு பிரபல இயக்குனரை தயாரிப்பாளர் எப்படித் திட்டினார் தெரியுமா? “ஏண்டா தேவடியாப்பயலே, என் காசுடா ! உன் இஸ்டத்திற்கு செலவு செய்வீயாடா நீ?” என்று பலர் முன்னிலையில் திட்டினார். அந்த இயக்குனர் ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். இயக்குனர் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு இப்போது தேவையில்லாத பழக்கங்களெல்லாம் கூட ஒட்டிக் கொண்டன. தயாரிப்பாளர் தலையில் துண்டினை போட்டுக் கொண்டு ஓட்டு வீட்டில் வாழ்கிறார். சினிமாவில் ஜெயித்தவர்கள் இல்லவே இல்லை. அது எவரானாலும் சரி !

ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன். விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்


Monday, December 26, 2011

குழந்தைகளை தடம் மாறச் செய்யும் சினிமா



( இது நாட்டுச் சுரைக்காய் )


( இது நீளச் சுரைக்காய், சப்பென்றிருக்கும்)



வரதராஜபுரம் சந்தைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், சிங்கா நல்லூர் டூ ஹோப்ஸ் காலேஜ் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராபிக்கினால் நிற்க வேண்டி இருந்தது. என்னவென்று விசாரித்தேன். அலாஃப்ட் ஹோட்டலில் “விஜய்” வந்திருக்கிறார் என்றார்கள். சாலையின் இருமருங்கிலும் கும்பல்.  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் நின்று கொண்டிருந்தனர். படக்குழுவினரின் வேன்களுக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். வேன்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்தன. சினிமாக்காரர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய புகுந்தோம் என்றால் எதிரிகளைத் தான் சம்பாதிக்க வேண்டும். 

உண்மையைப் பேசக்கூட பெரும் தயக்கம் இருக்கும் காலகட்டம் இது. வாய்மூடி மவுனியாய் இருப்பவன் புத்திசாலி. உண்மையைப் பேசுபவன் “பிழைக்கத் தெரியாதவன்”. 

பதிவர்கள் “ராஜபாட்டை” திரைப்படம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லை என்கிறார்கள். தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. ஆனால் டிவிக்களில் ”ராஜபாட்டை” திரைப்படம் ஆஹா ஓஹோ என்று ஓடுவதாய் நடிகர் விக்ரம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.விக்ரம் வந்தால் அவரைப் பார்க்க கூடும் கூட்டத்தாரை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை நடிகர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் உண்மை. “ஒஸ்தி” திரைப்படம் ஊத்திக் கொண்டது என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் டிவிக்களில் “ஒஸ்தி” பிரமாதமான வசூல் என்கின்றார்கள். மீடியாவைப் பற்றி எழுதிய பதிவை இப்போது நினைத்துப் பாருங்கள். மக்களை ஏமாற்றும் செயலைச் செய்து வரும் மீடியாக்களின் “தீவிரவாதப் போக்கினை” நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் 15 வயதுப் பெண்ணை, அவரின் உறவினர் தூக்கில் தொங்க வைத்திருக்கிறார். இப்பெண் பலபேருடன் இணைந்து இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ஸில் ஈடுபட்டு, அதை எம் எம் எஸ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் பெருத்த அவமானம் ஏற்பட்டிருப்பதாக இப்பெண்ணைக் கொன்றவர் பேட்டி அளித்திருக்கிறார். கோவையில் பதினைந்து வயதுப் பையன் தன் சக வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கி இருக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு பத்தியில் மன நல மருத்துவர்கள் மாதம் பத்திலிருந்து பதினைந்து கிளையண்டுகள் இது போன்ற கம்ப்ளைண்டுடன் வருகின்றார்கள் என்கிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சமூக கட்டுப்பாடுகள் மீதான வெடிகுண்டுகளை பிரபல ஹோட்டல்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. இனி வரும் காலங்களில் எட்டாம் வகுப்பு மாணவிகள் ஹாஸ்பிட்டல்களில் கருக்கலைக்க வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். உலகிற்கே முன்னுதாரணமான “தமிழ் கலாச்சாரம்” நாளை இப்படியான சம்பவங்களைப் பார்க்கத்தான் போகின்றது.

ஏன் இப்படி சமூகம் மாறியது? இதற்கு சுட்டு விரலை மட்டுமல்ல கையை மொத்தமாக நீட்ட வேண்டிய இடம் “ சினிமாக்காரர்கள்” மற்றும் “மீடியாக்கள்”. ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். 

வெள்ளி தோறும் வரதராஜபுரம் சந்தைக்கு முருங்கைக்கீரை வரும் என்பதால் நானும் மனையாளும் அங்குச் சென்றோம். ஆச்சரியமாக குண்டுச் சுரைக்காய் ஒன்றைப் பார்த்தேன். நீளமான பெரிய உருளை வடிவ சுரைக்காய் சப்பென்றிருக்கும்.

ஊரில் அம்மா அழகான சுரை விதையை ஊன்றி வைப்பார்கள். அதன் மீது பிய்ந்து போன சாணி எடுக்கும் தட்டுக்கூடையை கவிழ்த்து வைப்பார்கள். நாளடைவில் வெளிவரும் சுரைக்கொடி படர்ந்து பூ விட்டு, பிஞ்சாய் காய்த்துத் தொங்கும். காலையில் அப்பிஞ்சு சுரைக்காய் ஒன்றினைப் பறித்து பொறியல் செய்து தருவார்கள். சுடுசோற்றில் மோர் ஊற்றி அதனுடன் இச்சுரைக்காயைச் சாப்பிட “அமிர்தம்”. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகியது நாட்டுச் சுரைக்காயைப் பார்த்து. 

சந்தையில் அதைப் பார்த்ததும் அம்மாவின் சமையல் நினைவுக்கு வந்து விட்டது. ஒரு கட்டு முருங்கைக் கீரை ஐந்து ரூபாய் என்றார் பாட்டி.

மறு நாள், பிரான் வாங்கி வந்து சுரைக்காயுடன் சேர்த்து மனையாள் குழம்பு வைத்துக் கொடுத்தாள். நாட்டுச் சுரைக்காயுடன் பிரான் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அது ஒரு வித்தியாசமான சுவை.


இந்தச் சுரைக்காய் பற்றி கீழே இருக்கும் முக்கியமான விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். 

என்ன இருக்கு?

நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.


யாருக்கு நல்லது?

எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.


என்ன பலன்கள்? 

இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.



ஒரு சுவைக்காக பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டிய “ நாகரீக” காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது வருத்தம் தான் ஏற்பட்டது.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Friday, December 23, 2011

பெரும்பான்மையான திரைப்படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன?











எல்லோருக்கும் பிடித்தமான பொய் உலகம் “சினிமா”. சினிமாவில் வெற்றியடைவோர் இல்லவே இல்லை. தோல்விதான் முடிவில். அது யாராக இருந்தாலும் சரி. படைப்பாளிகள் அனைவரும் வெற்றியடைகின்றார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஏன் இல்லை?

கலைஞர் டிவியில் திரைப்பட பிதாமகன், புரட்சியாளர் திரு பாரதிராஜாவின் “அப்பனும் ஆத்தாளும்” என்ற தொடரில் நடிகை சுகன்யா தாவணி போட்டுக் கொண்டு இளமை வேடத்தில் நடித்தார். நம்பினால் நம்புங்கள். எனக்கு திரு பாரதி ராஜாவின் நம்பிக்கையின் மீது சந்தேகமே வந்து விட்டது. கர்வமும், தானென்ற நினைப்பும் எந்த ஒரு படைப்பாளிக்கும் வந்து விட்டால் இது போன்ற அவலக்காட்சிகளைத் தான் படம் பிடிக்க முடியும்.

இயல்பு மாறும் எந்த ஒரு படைப்பும் முடிவில் தோல்வியைத் தரும் என்பதில் பாரதி ராஜாவும், பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல என்பதற்கு கண்களால் கைது செய் திரைப்படமும், பொய் திரைப்படமும் உதாரணம்.

இயல்பு மாறாத திரைப்படங்கள் வெற்றியைத் தந்தே தீரும். நாடோடிகள் திரைப்படத்தின் கதை மாந்தர்கள் கதையோடு ஒன்றியவர்களாய், கதைக்களம் நடிகர்களோடு ஒன்றியதாய் இருந்தது. 

மைனா படத்தின் காட்சிகள் ஆக்கமும், ஆடுகளம் திரைப்படத்தின் காட்சிகளும் வெகு இயல்பாய் படத்தின் கதைக்கும், நடிகர்களுக்கும், களத்திற்கும், இசைக்கும், உரையாடலுக்கும் எந்த வித மன அதிர்ச்சி வேறுபாடின்றி இருந்தன. 

இருட்டில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திரைப்படம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளில் அவனின் இருப்பு திரைப்படத்திற்குள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் படம் தோல்விப் படம் என்றுச் சொல்வதை விட படைப்பாளி தோற்று விட்டான் என்று அர்த்தமாகிவிடும்.

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஓடுவதில்லை. ஓட வைக்கப்படுகின்றன. இவர்களுக்கான மார்க்கெட்டுகள் என்று எதுவுமே இல்லை. ஆனால் உருவாக்கப்படுகின்றன. இதற்கு சாட்சியாய் ரஜினி, கமல், சூர்யா, விஜய, அஜித் என்று காட்ட இயலும். ஆனால் இவர்களைத் தான் பெரும் நடிகர்கள் என்று காட்டுகின்றன மீடியாக்கள் (போலிகளின் ராஜ்ஜியத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கிறது)

திரைப்பட ரசிகனை தன் படைப்பிற்குள் இழுத்துக் கொள்ளாத எந்த ஒரு படைப்பும் வெற்றி அடையாது. தன் நடிப்பு எனும் மாயவலைக்குள் ரசிகனைக் கட்டிப் போடாத எந்த ஒரு நடிகனும் “சோப்” விற்கும் விளம்பர மாடலாக மட்டுமே நிலைக்க முடியுமே தவிர, நடிகனாய் பரிணமளிக்க முடியாது. இதற்குத் தேவை கர்வமற்ற, தானென்ற நினைப்பற்ற படைப்பாளிகளும் அவருக்கு உதவி செய்யும் சினிமாவைக் காதலிக்கும் டெக்னீஷியன்களும். கோடிகளில் சம்பளம் வாங்கும் “சோப்புக் கலைஞர்கள்” இது போன்ற படைப்பாளிகளுக்குத் தேவையே இல்லை.

தொழிலைச் சரியாகச் செய்தால் “பணம்” தானாக வரும் என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்.