இப்படியெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் நடந்தது.
மாடிச் சுவற்றில் ஓட்டை போடும் முயற்சியில் ”கரக்,கரக்” சவுண்ட் உபத்திரவம்.
வீட்டுக்குள் அழையா விருந்தாளி.
எலி மருந்து, எலி பொறி தகர டப்பாவிற்கு தேங்காய் வைத்தால், அதைச் சுற்றிலும் தின்று விட்டுச் சென்று விட்டது.
பொறிக்கும் எலிக்கும் பிஜேபி - அதிமுக உடன்பாடு போல.
ஒட்டும் பேஸ்ட் - ம்ஹூம்.
பல வித திட்டங்கள், உபாயங்களை யோசித்துச் செயல்படுத்திப் பார்த்தும் ம்ஹூம், எதுவும் எடுபடவில்லை.
நண்பரிடம் ஆலோசனை - பூனை முடிகளை கொண்டு வந்து போடுங்க. எலி எட்டிப் பார்க்காது என்றார். அதையும் செய்து பார்த்து விட வேண்டியதுதான்.
முடியை விட குட்டிகளே மேல் என முடிவு செய்து, வீட்டுக்கு இரு பூனைக் குட்டிகளை ஓசி வாங்கிக் கொண்டு வந்தோம். கொஞ்சம் செம்பட்டையாய் இருந்தவன் டிரம்பு. கருப்பாய் இருந்தவன் அஜித் தோவல்.
கொஞ்சம் நம்பிக்கை வந்தது. வரிக்குடியில் ஒரு கொலபாதகம் மலையாளப்படம் நினைவுக்கு வந்தது.
எப்படியும் குட்டி எலிக்கு கிலி பிடித்து விடும் என்று நினைத்தேன்.
பூனைக் குட்டிகள் இரண்டு.
எலிக்கு வலை..
ஹாலில் இருக்கும் ஷோபாவில் படுத்துத் தூங்குவார்கள். அவ்வப்போது அஜித் தோவல் வீட்டுக்குள் ஒரு இடம் விடாமல் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
டிரம்ப் விளையாடுவான், சாப்பிடுவான், டூ ஒன் செல்வான். சொகுசு. ஷோபாவை அமெரிக்கா போல பாவித்தான்.
அவர்களுக்கு ஒரு சட்டியில் மண் போட்டு வீட்டுக்குள்ளே வெட்டவெளி ரெஸ்ட் ரூம்.
மனுசர்களுக்கு மூன்று, இவன்களுக்கு ஒன்று என நான்கு கணக்கு.
எலி எங்கே போச்சுன்னு தெரியவில்லை.
முதல் நாள் ஷோபாவில் படுத்து தூங்குவதும் விளையாடுவதுமாய் இருந்தார்கள்.
மறு நாள் நடுநிசி.
யாரோ தலைமாட்டில் இருப்பது போல தெரிய விழித்தால் அஜித் தோவல்.
திக்கென்றது.
டிரம்ப் கால் பக்கமாய்.
காலை எட்டு மணி போல இருவரையும் வந்த இடத்துக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.
இன்று காலையில் மீண்டும் அந்த எலி..
அடியேன் சுத்த சைவம். செயலிலும் கூட.
ஜீவகாருண்யத்தின் படி கொலை அனுமதிக்கப்படவில்லை.
வள்ளலார் வந்து தான் எலியைப் பிடித்து வீட்டுக்கு வெளியே விட வேண்டும்.
ஏன் சொல்கிறேன் என்றால்,
உச்ச நீதிமன்ற நீதிபதி ஒரு விஷ்ணு சிலைக்கு தலை இல்லா வழக்கை தள்ளுபடி செய்து விட்டு, அடிசனலாக கடவுளிடம் சென்று வேண்டிக் கொள் என்றுச் சொல்லி விட்டார்.
டெல்லியில் போராட்டம். மத உணர்வை புண்படுத்தி விட்டார் நீதிபதி என. அவர் சரியாகத்தான் சொன்னார். ஆனால் இவனுக்கு உண்மையைச் சொல்லி விட்டாரே எனக் கடுப்பு.
வழக்குப் போட்டவனுக்கு நீதிபதி மேல் தனிப்பட்ட காண்டு போல.
நீதிபதி வாய் விட்டு விட்டார்.
மீடியாக்குஞ்சாமணிகள் ”ஆவ், ஒவ், அம், இம் ஹிம், ஆடுவென விஷ்ணுவை அவமதித்து விட்டாரென பொங்கு பொங்குன்னு பொங்கி பொங்கல் சாம்பார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால் அந்த தலையில்லா விஷ்ணு சிலை இருப்பது கஜுராகோ சிற்பங்கள் உள்ள இடம். யுனெஸ்கோ பட்டியலில் உள்ளது.
உள்ளது உள்ளபடி பராமரிக்க வேண்டும்.
வழக்கு போட்டவன் கணக்கு போட்டிருக்கிறான்.
இல்லாத தலையை வைத்து சூடம் சாம்பிராணி ஏற்றினால் கல்லாப் பெட்டி கணக்கும் என. அதற்கு சப்பைக்கட்டாய் முகலாயர்கள் உடைத்து விட்டார்கள் என கடந்த காலத்திற்குச் சென்று விட்டான். டெல்லி தோசம் மட்டுமல்ல, ஏதாவது செங்கல் உடைந்திருந்தால் கூட அக்பரும் அவுரங்கசீப்பும் உடைத்து விட்டார்கள் என ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆபரேட்டிங்க் சிஸ்டம் கோடு ஏற்கனவே இறைவன் எழுதி விட்டானாம். உபயம் டெல்லி முதல்வர் - அந்த மொழி சான்ஸ்கிரிட்டாம்.
கணிணி ராம். அதான் ராமனின் ராம் தான் கணிணி. புரியவில்லையா? RAM MEMORY.
படு ஸ்பீடாக போய்க்கொண்டிருக்கிறார்கள் கடவுளர்கள். காணும் இடமெல்லாம் கடவுள். இப்போது கணிக்குள் கடவுள்.
மைக்ரோசாப்ட் இனி ஓ.எஸ் எழுத வேண்டியதில்லை. இது எதுவும் தெரியாமல் குஞ்சாமணிகளும், சங்கிகளும் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி மேட்டருக்கு வருவோம்.
நீதிபதிக்கு தெரியாதா? தலையில்லா முண்டத்தின் ஆட்டம் எதுக்குன்னு.
ரத்துன்னுட்டார். சட்டம் இப்போது விஷ்ணுக்கு எதிராய்.
எலி வேறு விநாயகப் பெருமானின் வாகனம்.. பூனை யாரோட வாகனமோ தெரியவில்லை.
தலையில்லா சிலையில் விஷ்ணு இருக்கும் போது, நான் அழைத்தால் ஜீவகாருண்யத்தின் பிதாமகர் வள்ளலார் வராமலா இருப்பார்.
பார்ப்போம் என்ன செய்கிறார் என.
எலியா? வள்ளலாரா?