குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 11, 2017

திருவாதிரை விரதம்

அம்மு பிறந்த பிறகு தான் திருவாதிரை விரதம் பற்றித் தெரிய வந்தது. தஞ்சை வடிகால் பகுதியிலிருக்கும் எங்களூரில் திருவாதிரை விரதத்தை செட்டியார்கள் தான் பிடிப்பார்கள் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். எங்களூரில் திருவாதிரை என்றால் என்ன என்று கேட்பார்கள். முதன் முதலாக மாமியார் வீட்டிலிருந்து ஏழு கறி கூட்டும் திருவாதிரைக் களியும் வந்தது. புத்தம் புதிய சுவையில் முதன் முதலாக சுவைப்பதால் வெகு அருமை என்றுச் சொல்லி விட்டேன். மெதுவாகப் பேசும் வழக்கமே இல்லையாதலால் சற்றே உரக்கச் சொல்லி அது மாமியார் காதிலும் விழுந்து விட்டது. மனையாள் முறைத்துக் கொண்டிருந்தார். அவரவருக்கு சில பிரச்சினைகள் இப்படி உண்டாகி விடுகின்றன. உண்மையைக்கூட உரத்துச் சொல்லி விட முடியாத ஒரு சில தருணங்களில் இதுவும் ஒன்று.

இப்படித்தான் நான் குடும்பத்தோடு உறவினர் ஒருவர் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றிருந்தேன். மட்டன் குழம்பும், ஆம்லேட்டும் மனையாள் செய்திருப்பார் போல. மதியம் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உறவினர் மட்டன் குழம்பு அருமை அதை விட ஆம்லேட் சூப்பர் என்று ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார். ஆண்கள் எப்போதும் மாறுவதே இல்லை. 

இரவு உணவின் போது  மட்டன் குழம்பை தொட்டு இட்லியோடு நாக்கில் வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். தீக்கங்குவை எடுத்து நாக்கில் வைத்தது மாதிரி இருந்தது. அவ்வளவு மிளகாய்ப்பொடி. உறவினர் கண்களில் கங்கை கொட்டிக் கொண்டிருந்தது. மதியம் நன்றாக இருக்கிறது என்றுச் சொன்ன மட்டன் குழம்பு இரவில் சரியில்லை என்று எப்படிச் சொல்வது? மாட்டிக் கொண்டார். எனக்கல்லவோ தெரியும் விஷயம்? உறவினரின் மனைவி ’சப்புக்கொட்டிக்கிட்டா சாப்பிடுகிறாய்’ என்று மிளகாயைக் கொட்டி குழப்பி வைத்து விட்டார். 

எதை எங்கு எப்படிச் சொல்கிறோம் என்பதில் தான் வித்தையே இருக்கிறது. மனையாளின் உறவினர் வீட்டில் சாப்பிடப் போய் சப்பாத்தியும் குருமாவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி விட்டேன். பைக்கில் வீடு வந்து சேரும் வரை இடுப்புச் சதை கன்னிப் போய்க் கிடந்தது. வீட்டுக்கு வந்து எரிச்சல் தீர களிம்பை எடுத்து தடவலாம் என்று நினைத்து மகளிடம் வெகு நிதானமாக ’களிம்பை எடுத்து வா’ என்றுச் சொன்னேன். பய மக, விக்ஸை எடுத்து வந்து தர நானோ ஏதோ நினைப்பில் எடுத்து எரிச்சல் வந்த இடத்தில் தடவ உடம்பெங்கும் எரிச்சலுடன் வலியும் சேர்ந்து பரவ சப்பாத்தியும் குருமாவும் போன இடம் தெரியவில்லை. அத்தோடு முடிந்த அந்த உறவினர் வீட்டுக்குச் செல்வது. ஆனால் மனையாள் சென்று வருவார். அங்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவிர்த்து விடுவேன். எதற்கு வம்பு? என் மகள் இருக்கிறதே சரியான வம்புப் பேர்வழி. நான் அங்கு ஏதாவது சொல்லி இடுப்புக் கிள்ளப்பட அம்மு ஆசிட்டைக் கொண்டு வந்து ஊற்றி விடும். திட்டவா முடியும்? வேதனை எனக்கல்லவோ?

இப்படியான ஒரு சில அனுபவங்களின் காரணமாக இப்போதெல்லாம் சைகை காட்டி விடுவதுண்டு. இருந்தும் ஒரு இடத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன். அதை எழுதினால் வேறு ’ரசப்பார்வை’ வந்து விடும் என்பதால் விட்டு விடுகிறேன். நானென்ன சாருவா? மதனகாமராஜா கதை எழுத?

இன்றைக்கு விடிகாலை மூன்று மணிக்கே துயிலெழுந்து விட்டேன். துயிலெழும்போதே சரகலைப்படி மூச்சு எந்தப் பக்கம் ஓடுகிறது என்று கவனித்து அது சரியில்லை எனில் சரி செய்துதான் எழுவேன். இல்லையென்றால் எனக்கு அன்றைய நாள் சரியான ரகளையான நாளாக போய் விடும். சரகலையை ஓரளவு தெரிந்திருப்பதால் இப்போதெல்லாம் கொஞ்சம் ஃப்ரீயாக இருக்க முடிகிறது.

நேற்றே எனது அய்யர் நண்பரை அழைத்து திருவாதிரை எப்போது ஆரம்பிக்கிறது எத்தனை மணிக்குள் சாமி கும்பிட வேண்டுமென்று விசாரித்துக் கொண்டிருந்தார் மனையாள். 

காய்கறிகள், முட்டைக்கோஸ் மற்றும் உருளை பட்டாணி கூட்டு, தக்காளி, வெங்காயம், இஞ்சி, மிளகாய் எல்லாம் சுத்தம் செய்து தேங்காய் திருகி எடுத்துக் கொடுத்து விட்டு காலைக் கடன்களை முடிந்து வெளி வந்தால் அடுப்பில் சட்டியேற்றி சமைப்பது என்ற பெரிய வேலையை நிரம்பவும் துன்பப்பட்டு துயரப்பட்டு வியர்க்க விறுவிறுக்க சமைத்துக் கொண்டிருந்தார் மனையாள். ஏழு மணிக்குள் எல்லாம் தயார்.

பூஜை அறைப்பக்கம் போகவே இல்லை. தீபத்தட்டு வெளியில் வர தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டேன். கையில் மஞ்சள் கயிறு கட்டப்பட்டது. நாம் கழுத்தில் கட்டுவோம். திருவாதிரை அன்றைக்கு நம் கையில் கட்டுவார்கள். 

சாப்பிட உட்கார்ந்தோம். உப்பு, ஊறுகாய், அப்பளம், முட்டைக்கோஸ் பொறியல், உருளை பட்டாணிக்கூட்டு, திருவாதிரைக் களி, ஏழு கறிக் கூட்டு பரிமாறப்பட்டது. 

”அப்பா, களி எப்படி இருக்கிறது?” என்று அம்மு கேட்க நானோ எப்போதும் போல வேறு எங்கோ இருக்கிறோம் என்ற நினைப்பில் “சூப்பரா இருக்கு அம்மு!” என்றுச் சொல்லி விட்டேன். 

“அம்மு! இதே வாய் தான் சொல்லுச்சு எங்க அம்மா செய்யுற களிதான் சூப்பரா இருக்குன்னு” என்றார் மனையாள்.

மனதுக்குள் திகீர் என்றது. இதைத்தான் திருடனுக்கு தேள் கொட்டுவது என்பார்களோ என நினைத்துக் கொண்டேன். எத்தனை ஆண்டுகளானாலும் ’வெச்சு செய்யுறதுன்னு’ இதைத்தான் சொல்வார்கள் போல. பதினோறு வருஷமாச்சு நான் அந்த வார்த்தைகளைச் சொல்லி. எத்தனை வருடம் ஆனாலும் தான் என்ன? வாயிலிருந்து வெளியேறின வார்த்தைக்கு ஒரு வலிமை எப்போதும் உண்டல்லவா? 

ஆகவே நண்பர்களே! சொல்வதைச் சொல்லி விட்டேன். எங்கு எதை எப்படிப் பேசுகிறோம் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

திருவாதிரைக் கொண்டாடி விட்டீர்கள் தானே??? சிவனுக்கு உகந்த நாளாம் இது. மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.