குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, January 26, 2017

மனித வாழ்க்கையும் சூட்சும மஹாபாரதமும்

ஒரு வழியாக இந்த வருட ஆரம்பத்தில் மாணவர்களினால் பலரின் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்து விட்டது. மக்களிடையே வரவேற்பு பெற்ற இளம் மாணவர்கள் புதிய அரசியல் கட்சியை உருவாக்கலாம். மாவட்டம் வாரியாக நல்ல செயல் தலைவர்களை உருவாக்கலாம். கட்சியை நிர்வகிக்க கண்காணிக்க அதிகாரம் பெற்ற அமைப்பினை உருவாக்கலாம். அந்த அமைப்புக்கு தகுந்த நேரிய சீரிய செயல் திறமையும் புத்திசாலித்தனமும் மிக்க முதிய இளைஞர்களை நியமிக்கலாம். இது நல்ல தருணம். தமிழகத்தின் மாற்றுக் கட்சிக்கு ஏற்ற தருணம். இந்த தருணத்தை விட்டு விடாது தமிழர்களின் எதிர்காலத்திற்காக புதிய கட்சியினை உருவாக்கினால் வெறுத்துப் போய் இருக்கும் தமிழர்கள் தானாகவே புதிய கட்சியை அங்கீகரித்து விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட சகுனிகளும், சாணக்கியன்களும் இருக்கின்றார்கள். இந்த இருவரை விட மீடியா என்றொரு அரக்கனும் உண்டு. அதை விட ஜாதி என்ற அணுகுண்டும் இருக்கிறது. இவற்றை எல்லாம் விட சுய நலம் என்றொரு தீயசக்தியும் உண்டு. 

இவைகளைச் சரி செய்திட அல்லது சந்தித்திட நல்ல திட்டங்களும், நல்லவர்களும் இருந்தால் கட்சியை உருப்படியாக தயார் செய்து விடலாம். மாணவர்கள் செய்வார்களா என்று பார்ப்போம். அந்த ஒரு மலர்ச்சி தமிழகத்தில் மலருமா? ச.சாக்கள் விடுவார்களா? என்று தெரியவில்லை. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி மாணவர்களின் போராட்டத்தை மெச்சிக் கொண்டிருக்கின்றன. இதுதான் சரியான சமயம். அவசரப்படாமல் அட்சர சுத்தமான தெளிவான செயல்முறைகளுடன், கொள்கைகளுடன் ”இளைய தமிழர் கழகம்” உருவாகட்டும். அது நாளைய தமிழகத்தை உண்மையான தமிழர்களைக் கொண்டு மக்கள் சேவையைச் செய்யட்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆசை. நிறைவேறுமா என்பது காலத்தின் கைகளில் உள்ளது.

அரசியலில் நொடிக்கு நொடி மாற்றங்கள் உண்டு. இப்போதைய முதல்வரும் அப்படியான முறையில் ஆட்சிக்கு வந்தவர் தான். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அரசியலில் பாலபாடம். அவலை விட்டு விட்டு எதார்த்தத்துக்கு வந்து விடலாம்.

”வாழ்க்கை சிக்கலாக இருக்கிறதே? மனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்ன செய்வதென்றும் புரிபடவில்லை” என்று சுப்ரமணியக்கவுண்டர் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ஒரு சிறிய விளக்கத்தைக் கொடுத்தேன். அது உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். 

”மஹாபாரதத்தில் நல்லவர்கள் ஐந்து பேர் தீயவர்கள் நூற்றி ஒருவர். நல்லவர்களுக்கு உதவி செய்ய மனித வடிவில் கிருஷ்ணன். தீயவர்களுக்கு உதவிட சகுனி. சகுனியின் சிந்தனை எப்போதும் கிருஷ்ணனின் மீது. கிருஷ்ணனின் சிந்தனை எப்போதும் சகுனியின் மீது. யார் என்ன செய்வார்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்பது தான் இருவரின் நோக்கமாக இருந்தது. கிருஷ்ணன் நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காக்க போராடினான். சகுனியோ நல்லவர்களை ஒழித்திட மட்டுமே சிந்தித்தான். 

இந்த உலகம் இயங்குவதே தீயவர்களால் தான். உலகெங்கிலும் நல்லவர்களே இருந்தால் அரசியல் இருக்காது. அரசாங்கம் இருக்காது. ராணுவம் இருக்காது. எல்லைகள் இருக்காது. இத்தனையும் இருப்பது தீயவர்களால் தான். 

பூமி ஒன்றே ஒன்றுதான். ஒருபுறம் இருளும் ஒரு புறம் வெளிச்சமும் இருப்பது இயற்கை. அது போலத்தான் நல்லவர்களும் தீயவர்களும் இந்தப் பூமியில் இருப்பது. வாழ்க்கையின் மூலாதாரமே இந்தப் போராட்டம் தான். இந்தப் பிரிவினர் இல்லையென்றால் உலகம் தன் இயக்கத்தை நிறுத்தி விடும்” என்றேன்.

”ஆமாங்க, ஆமாங்க, சரியாச் சொன்னீங்க!” என்று ஆமோதித்தார்.

“சரி கவுண்டரே! இப்போது மனிதர்களை மஹாபாரதத்தை வைத்து எப்படி புரிந்து கொள்வது எனச் சொல்லித்தருகிறேன்” என்றேன்.

“சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று பரபரத்தார்.

”ஒரு கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கல் நீங்கள். அந்தக் கல்லைச் சுற்றிலும் உங்களுக்கு உறவினர்களாக இருப்பவர்களை ஒவ்வொரு கல்லாக வைத்துக் கொண்டே வாருங்கள். எல்லா உறவினர்களையும் கல் வடிவில் வைத்து விட்டீர்களா? இப்போது ஒவ்வொரு உறவினர்களின் இயல்புகளை உங்களுக்குத் தெரிந்த வகையில் ஆராயுங்கள். அவர்களை மஹாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடுங்கள். வெகுசரியான ஒப்பீடும் உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் புரிந்துகொள்ளவும் இயலும். எந்தக் கல் உங்கள் அருகில் இருக்கவேண்டும். எந்தக் கல் உங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கல்லிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது புரிந்து விடும். உங்கள் வாழ்க்கையில் யார் உங்களுக்குச் சகுனி என்பதும் தெரிந்து விடும்” என்றேன்.

“மஹாபாரதம் கதை அல்ல. அது சொல்வது வாழ்க்கையின் சூட்சும ரகசியங்களை. குரான் சொல்வதும் அதேதான். பைபிள் சொல்வது அதே தான். ஆனால் இவ்வுலகில் அலங்காரங்களும், புனைவுகளும் தான் புரிந்து கொள்ளப்படுகின்றன. சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள மறந்து விடுகின்றார்கள். நம் ஆன்மீக பேச்சாளர்கள் இருகின்றார்களே அவர்கள் தானிந்த இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள விடாமல் கதைகளைச் சொல்லிச் சொல்லி மனிதனை மயக்கத்திலேயே வைத்திருக்கின்றார்கள். அவர்கள் பாக்கெட்டுக்கு பணம் போக வேண்டும். பேசியே கெடுக்கும் கூட்டத்திலிருந்து வெளிவந்து விடுங்கள். இல்லையென்றால் மூளையைக் கழுவி உங்களிடமிருந்து உருவி விடுவார்கள்.

பாலத்தின் மீது வீடு கட்டாதே என்றொரு பதிவினை எழுதி இருந்தேன். அதைப் படித்தீர்கள் என்றால் பைபிள் சொல்லும் சூட்சுமம் புரியும். தமிழர்களைப் பொறுத்த வரை மஹாபாரதத்தை வைத்து தங்கள் வாழ்க்கையின் போராட்டம் எதை நோக்கி பயணிக்கிறது, யார் யாரெல்லாம் நமக்கு தீய செயல்களைச் செய்பவர்கள் என்பவைகளை எளிதில் கண்டு கொள்ளலாம். அவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம்”

”குறைவான நல்லவர்கள் அதிகமான தீயவர்கள். தீயவர்களின் நோக்கம் நல்லவர்களை அழிப்பது. நல்லவர்களின் நோக்கம் தீயவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது. இதுதான் வாழ்க்கைப் போராட்டம். இந்தப் போராட்டம் ஒவ்வொரு மனிதனின் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும் தீய எண்ணங்களைக் கொண்டவர்களை எதிர்கொள்வதுதான்”

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். 

”கவுண்டரே! ஜோதிடத்தில் ஒரு கணக்கு உண்டு. எந்த ராசிக்காரருக்கு நட்பு ராசி யார்? பகை ராசிகள் யார்? சமமான ராசிகள் யார் எனச் சொல்வார்கள். அதை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் விஷயம் உங்களுக்குப் புரியும்” என்றேன்.

“அப்படிங்களா?” என்று கேட்டவர் தன் ராசியையும் தன் குடும்பத்தினர் ராசியையும் சொல்ல ஆச்சரியம் அவர் குடும்ப உறுப்பினர்களின் ராசியும் அவரின் ராசியும் ஒன்றுக்கு ஒன்று ராசியானவை. அசந்து போய் விட்டார்.

எந்தக் குடும்பத்தில் பிரச்சினை இருக்கிறதோ சரியான ஜாதகத்தின் படி உள்ள ராசியை ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் விவரம் புரியும். எனக்கும் என் மகனுக்கு ராசிக்கு பகையாக அல்லவா இருக்கிறது என்ன செய்யப்போகின்றேன் என்று குழம்பி விடாதீர்கள். ஒதுக்கி வைத்து விடாதீர்கள். அது உங்களின் விதி. இதனைச் சரிசெய்ய ஒரு சூட்சுமம் இருக்கிறது. அதைச் செயல்படுத்தினால் குடும்ப உறவுகள் பலமடையும். அப்பனுக்கும் பிள்ளைக்கும் பிரச்சினை. அண்ணனுக்கும் தங்கைக்கும் சண்டை என்போர்கள் தங்கள் ராசியை ஆராய்ந்து பாருங்கள். இந்தக் கணக்கு ஒத்துப் போய் விடும்.

தங்கம், ஏதோ ஜோசியக்காரரை நம்பிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். எனக்கு நண்பனாக இருந்த ஒரு ஜோசியக்காரன் என்னை வைத்து அவன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான். இந்தக் காரியத்துக்காகத்தான் அவன் கல்யாணமே செய்தான். ஆகவே ஜோசியக்காரர்களை நம்புவதையும், எல்லாவற்றையும் அவர்களிடம் ஒப்புவிப்பதையும் முதலில் நிறுத்தி விடுஞ்கள்.

ஒரு ஜாதகத்தை ஆராய பலன் சொல்ல கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆகும். பலன் சொல்பவர்களுக்குப் பிரச்சினை வரும். அதையும் சரி செய்து கொள்ளும் முறை தெரிந்தவர்களால் கணிக்கப்படும் ஜாதகம் தான் சரியானது. நொடியில் பலன் சொல்லும் ஜாதகம் பிசினஸ். எதுவும் நடக்காது. வாக்கில் சுத்தமில்லாதவர்கள் சொல்வது ஜாதகம் கணிப்பது அல்ல என்பது எனது அனுபவம். இது சரியா? இல்லையா? என்பதெல்லாம் ஒவ்வொருவரின் அனுபவத்தில் உள்ளது.

இதோ கீழே  நட்புராசிகள் பகை ராசிகளின் லிஸ்டை பீமராஜையர் தனது பிளாக்கில் எழுதி இருந்தார். அந்த விபரமும் அவரது பிளாக்கின் இணைப்பும் உள்ளது. இது ஒரு கணக்கு. இதையே பிடித்துக்கொண்டு தொங்க வேண்டாம். சரகலையைப் பயின்றவர்களுக்கு கிரகங்கள் வேலையே செய்யவிடாமல் தடுக்கும் ஆற்றல் உண்டு. ஆகவே கணக்கினை ஆராயுங்கள். சரியாக இருக்கிறதா? என்று புரிந்து கொள்ள முயலுங்கள்.

1.மேஷ ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
சிம்மம், தனுசு, மேஷம், மிதுனம், கும்பம்.
பகை ராசிகள்: கன்னி, மகரம், கடகம்.
2.ரிஷப ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கன்னி, மகரம், மீனம், ரிஷபம், கடகம்.
பகை ராசிகள்: சிம்மம், தனுசு, கும்பம்.
3.மிதுன ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
துலாம், கும்பம், மேஷம். சிம்மம், மிதுனம்.
பகை ராசிகள்: விருச்சிகம், மகரம், மீனம்.
4.கடக ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம், கன்னி.
பகை ராசிகள்: துலாம், தனுசு, கும்பம், மேஷம்.
5.சிம்ம ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
தனுசு, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்.
பகை ராசிகள்: மகரம், ரிஷபம், மீனம், விருச்சிகம்.
6.கன்னி ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மகரம், ரிஷபம், கன்னி, கடகம், விருச்சிகம்.
பகை ராசிகள்: மேஷம், தனுசு, கும்பம்.
7.துலாம் ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கும்பம், மிதுனம், துலாம், சிம்மம், தனுசு.
பகை ராசிகள்: மீனம், மகரம், கடகம்.
8.விருச்சிக ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மீனம், கடகம்,கன்னி, மகரம், விருச்சிகம்.
பகை ராசிகள்: கும்பம், மிதுனம், சிம்மம்.
9.தனுசு ராசிக்காரர்களுக்கு. நட்பு ராசிகள்:
மேஷம், சிம்மம், தனுசு, கும்பம், துலாம்.
பகை ராசிகள்: ரிஷபம், கன்னி, கடகம், மீனம்.
10.மகர ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
ரிஷபம், கன்னி, மகரம், மீனம், விருச்சிகம்.
பகை ராசிகள்: மேஷம், சிம்மம், மிதுனம், துலாம்.
11.கும்ப ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
மிதுனம், துலாம், தனுசு, மேஷம், கும்பம்.
பகை ராசிகள்: கடகம், விருச்சிகம், கன்னி, ரிஷபம்.
12.மீன ராசிக்காரர்களுக்கு நட்பு ராசிகள்:
கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம், மகரம்.
பகை ராசிகள்: மிதுனம், துலாம், சிம்மம், தனுசு.
நட்பு பகை ராசிகளைத்தவிர மற்ற ராசிகள் சம ராசிகள் என்று அறியவும்.
நன்றி :பீமராஜய்யர்

குறிப்பு: இந்த உலகத்தின் மிகப்பெரிய வியாபாரப் பொருள் என்னதெரியுமா? தெரிந்தால் எனக்கு மெயில் அனுப்பவும். தெரியவில்லை என்றால் பொறுத்திருங்கள். விவரமாக எழுதுகிறேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.