Monday, July 1, 2024
நரலீலைகள் (16) - இந்தியர்களுக்கு தேர்தல் வெற்றிப் பரிசு
Sunday, June 23, 2024
மோடி கா பரிவாரை நீக்குங்கள் - மோடி வேண்டுகோள்
இந்தியாவின் ஆன்மாவை தேர்தல் கமிஷன் கொன்று விட்டது என்று இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் கண்கூடாக காட்டியது. தேர்தல் கமிஷனரைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை ஒரு புதிய மசோதா (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act, 2023) மூலம் நீக்கினார் மோடி.
எதிர்கட்சித் தலைவர், பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு மத்திய மந்திரி இவர்கள் மூவரும் தேர்தல் கமிஷனரைத் தேர்ந்தெடுக்கலாம் என விதியை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவே மாற்றினார்.
அப்போதே தெரிந்து விட்டது இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜன யகத்துக்கும், தேர்தல் கமிஷனர்களுக்கும் இடையில் நடக்கப்போகும் யுத்தம் என.
இந்த யுத்தத்தில் மக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிகாரத்தின் முன்னால் ஜனநாயகம் கொல்லப்படும் என்பது வரலாறு. ஆளும் கட்சிக்கு வசதியாக தேதிகள் அறிவித்தது கமிஷன். தேர்தல் சதித்திட்டம் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் பரப்புரைக்குச் சென்ற மோடி - மத வெறுப்புப் பேச்சுக்களைப் பேசினார். ஒரே ஒரு அறிக்கை மூலம் தேர்தல் கமிஷன் மெய் வாய் மூடிக் கொண்டது.
ஒருவர் பிஜேபிக்கு பல ஓட்டுக்களைப் போட்டதாக வீடியோ போட்டார். அவரைக் கைது செய்தார்கள். வீடியோ போடாத பலர்களின் ஓட்டுக்கள் பற்றி யாருக்குத் தெரியும். ஒரு எம்.பி வோட்டிங் மிஷினையே அடித்து நொறுக்கினார். முஸ்லீம்கள் ஓட்டுப் போட விடாமல் பெயர்களை நீக்கம் செய்தனர். அடித்து விரட்டப்பட்டனர்.
மார்ச் 16 முதல் மே 30ஆம் தேதி வரை ரூ.1,100 கோடி மதிப்புள்ள ரொக்கமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிடிபட்டதைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். கடந்த மக்களவைத் தேர்தலில் ரூ.392 கோடியாக இருந்தது. டெல்லியிலும் கர்நாடக மாநிலத்திலுமே அதிக அளவில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட ரூ.200 கோடி மதிக்கத்தக்க ரொக்கமும் தங்கமும் கைப்பற்றப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று சபதமெடுத்தவர்கள் வாய் மூடி நின்றனர். எல்லோரும் கள்ள மவுனம் காத்தனர்.
அரசு அமைப்புகள் மட்டுமின்றி காசுக்கு கூவும் மீடியாக்களும் பொய்களாகப் பேசிப் பேசி வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொண்டனர். எங்கும் பணம், எதிலும் பணம், பணம் இல்லை என்றால் அதிகார மிரட்டல், ஊழல்வாதிகளை மோடி வாஷிங்க் மெஷின் மூலம் துவைத்தல் ஆகியவை நடைபெற்றது.
உலகமே வேடிக்கை மட்டுமே பார்த்தது.
ஒவ்வொரு நோடியும் லட்சக்கணக்கான போலிச் செய்திகளை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டனர். சோஷியல் மீடியா அதிபர்கள் எதைக் காட்ட வேண்டும், எதைக் காட்ட கூடாது என்பதில் கவனமாய் இருந்து கல்லாவை நிரப்பினர்.
ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை நேசிப்பவராக இருக்க வேண்டும் என்று வாய் கூசாமல் பேசுவார்கள். ஆனால் அரசியல் கட்சிக் குடிமகன்கள் அரசமைப்பையே கொன்று கொண்டிருக்கிறார்கள்.
இந்ததேர்தல் 2024 இந்தியாவின் ஜனநாயகம் கொல்லப்பட்ட நாள். மக்கள் தேர்தல் கமிஷனர்களிடம் தோற்றுப் போன நாள் ஜூன் 7,2024.
நடத்திய நாடகம் வெற்றி பெற்றதற்காக மோடி அவர்கள் விடுத்த வேண்டுகோள் இதோ !
மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் பிரசாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்பதைச் சேர்த்துக்கொண்டனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.
இதுவும் சாதனைதான். நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதன் மூலம் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகப் பக்கங்களின் பெயரிலிருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் பெயர் வேண்டுமானால் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரே பரிவார் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இனி நாடகம் இனிதே தொடரும்.
வரிகள் உயரும், வரிப்பிடுங்கல் தொடரும், விலை வாசி உயரும், சட்டங்கள் திருத்தப்படும், உயர் சாதியினர் ஆட்டம் போடுவர், கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படும், கீழ் சாதியினர் படிக்க முடியாது, படிக்க கடன் வாங்கவும் முடியாது, கல்வி படிக்க விடாமல் தடுக்கப்படுவர், இந்தியா மக்கள் கடனாளி ஆவர்.
எங்கெங்கும் உயிர்பலிகள் நடக்கும். இயற்கை மக்களைப் பலி வாங்கும். வேலை இருக்காது. வேலையும் கிடைக்காது. மோசடிகள் அதிகமாகும். இந்தியாவெங்கும் மக்கள் கடும் துயர்களை அனுபவிப்பர்.
இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டுமெனில் மக்கள் அற வழி நடக்க வேண்டும். அறத்தின் பாதையை தம் வாழ்க்கைப் பாதையாக கொள்ள வேண்டும். அறமற்றவர்களை அண்ட விடாமல் துரத்திட வேண்டும். எது அறம், எது உண்மை என கண்டறிய வேண்டும். இதெல்லாம் நடந்தால் இந்தியா மகிழும்.
மாணவர்களுக்கு மரணவலி தரும் நுழைவுத்தேர்வுகள்
இந்தியர்கள் நோயில் சிக்கி சின்னாபின்னமாக போக வேண்டுமென்பதற்காக கொண்டு வரப்பட்ட சதித்திட்டத்தின் பெயர் நீட். நீட் மருத்துவக் கல்வியை கோடீஸ்வரர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் உரித்தாக்குகிறது. நீட் மூலம் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக் கனியாக்கி, ஏழைகளை பரம ஏழைகளாக, பஞ்சைப் பராரிகளாக வைத்திருக்க வேண்டுமென்பதில் எல்லையற்ற இன்பம் கொண்டிருக்கிறார்கள்.
ஏழைகள் இல்லாத இந்தியா உருவானால் உயர்ஜாதியினரைக் கேள்வி கேட்பார்கள் என்பதினால், நயவஞ்சகமாக கொண்டு வந்த நுழைவுத் தேர்வு தான் நீட்.
எந்த ஒரு ஏழையும் படிப்பின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேறி விடக்கூடாது. ஏழைகளுக்கு கல்வி எளிதாகக் கிடைத்தால் ஏழைகள் அற்றுப் போய் விடுவர் என்பதனால் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நயவஞ்சமாக திணித்து விட்டார்கள்.
பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெறாத ஒரு மாணவர் நீட் தேர்வில் 720 முழு மதிப்பெண் பெற்றிருக்கிறான். எய்ம்ஸில் இலவசமாய் படிக்க காசைக் கொடுத்து 720 மார்க் வாங்கி விட்டால் படித்து விடலாம் என பேஜேபி ஆளும் மாநிலங்களில் நீட் வினாத்தாளை விற்பனைக்கு விட்டுள்ளனர். ஒரு சில நீட் தேர்வு மையங்களில் தேர்வு கண்காணிப்பாளரே கேள்விகளுக்கான பதிலை டிக் அடிப்பதற்கு பணம் வாங்கி இருக்கிறார்கள் எனச் செய்திகள் வருகின்றனர். நீட் தேர்வு அறைக்குள் தாலியைக் கூட பிடுங்கி வைத்துக் கொண்டு அனுமதித்திருக்கிறார்கள் என்ற செய்திகளையும் படித்தோம்
மத்திய சென்னையின் எம்.பி. தயா நிதி மாறன் அவர்கள் 12ம் வகுப்பில் இயற்பியல் தேர்வில் 1 மார்க் பெற்ற மாணவிக்கு நீட்டில் 720க்கு 720 மார்க் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது போல இன்னும் என்னென்ன மோசடிகளை பாஜக ஆளும் மா நிலங்களில் நடந்திருக்கிறதோ தெரியவில்லை. வெளியில் தெரிந்தவை இந்த மோசடிகள். தெரியாத மோசடிகள் எத்தனையோ?
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடே நடக்கவில்லை என்றார். பின்னர் ஒப்புக் கொண்டார். அரசுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு மசோதா 2024 பிப்ரவரியில் நிறைவேற்றபட்டது. தற்போது கூடுதல் இணைப்பாக 10 ஆண்டு சிறை, 1 கோடி அபராதம் என்று இணைத்து சட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள். நீட் முறைகேட்டை ஒப்புக் கொண்டிருக்கிறது அரசாங்கம் என்பதற்கு சாட்சி இதுவே.
எவனோ ஒருவன் கசிந்த கேள்வித்தாள் மூலம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் - ரேங்க் பட்டியல் முறைகேடானது அல்லவா? ஆனால் உச்சநீதிமன்றம் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீட் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்திருக்கிறது. கண் முன்பு சாட்சி இருந்தும் குற்றத்தைப் பார்க்காமல் அரசின் கொள்கைக்கு சாதுர்யமாக ஒப்புதல் அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தேசிய தேர்வாணையம் அக்கிரமமாக பலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி இருக்கிறது. இதனை மட்டும் ரத்துச் செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மறுபடியும் அவர்களுக்குத் தேர்வாம். பின்னர் ரேங்க். இப்படி போகிறது நீட் தேர்வு முறைகேடு. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வளவு பெரிய விஷயத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றனர்.
நீட் தேர்வு முறைகேடு மூலம் மதிப்பெண் பெற்றவர்களை எங்கனம் கண்டுபிடிப்பார்கள் சிபிஐயினர்? அதற்கு எத்தனை நாட்கள் பிடிக்கும் என்று தெரியாது. அதற்குள் மருத்துவக் கலந்தாய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது சரியல்ல என்று நீதிபதிக்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் நீதிமன்றம் வாய் மூடி மவுனமாக இருக்கிறது என்பது தான் வேதனை.
ஜார்கண்டில் ஐந்து பேரை நீட் முறைகேட்டுக்கென கைது செய்திருக்கிறார்கள். அதே போல ரவி அட்ரி கும்பல் உத்திரப் பிரதேசத்திலிருந்து ஜார்கண்ட் வழியாக பீகார் மாநிலத்திற்கும் கேள்வித்தாளை விற்பனை செய்திருக்கிறார்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
பள்ளியில் தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெற்றாலும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சிக்கான மதிப்பெண்ணாக இருப்பது மாணவர்களுக்கு இழைத்திருக்கும் கொடூரம். எத்தனை நுழைவுத் தேர்வுகளை எழுதுவது? நுழைவுத் தேர்வுக்கென எத்தனை ஆயிரங்களை கட்டணமாக கட்டுவது? தேசிய நுழைத்தேர்வு முகமை கோடிகளில் ஏழை மாணவர்களிடமிருந்து பணம் பறித்துக் கொண்டிருக்கிறது.
என்றைக்கு பிஜேபி அரசு பதவிக்கு வந்ததோ அன்றிலிருந்து சாமானியனுக்கு எளிதில் கிடைக்க வேண்டிய - ஒரு அரசு செய்ய வேண்டிய கட்டாயப் பணியைச் செய்யாமல் - எதிர்கால இந்தியாவின் சந்திதகளை - அவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி அழிக்கும் திட்டத்தினை வெகு நாசூக்காக - பதவிக்காக கூக்குரலிடும் நயவஞ்சகப் பேராசை பிடித்த நரிகளின் உதவியினாலும் - காசுக்காக சட்டத்தை விற்கும் - குரைக்கும் பல எச்சைகளின் உதவியாலும் மாணவர்களுக்கு மரணவலியைக் கொடுக்கிறார்கள்.
கல்வி ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டிய அரசாங்கம் மாணவர்களைப் படிக்க விடாமல் செய்யும் கொடுமையை உலகில் எங்கேயும் பார்க்க முடியாது. இந்தியாவில் மட்டுமே இப்பேர்பட்ட எமர்ஜென்சி போன்ற சட்டங்களைப் பார்க்கலாம். இந்திரா காந்தியின் எமர்ஜென்சி அரசியல் தொடர்பானது. ஆனால் இதுவோ இந்தியர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எதிரான கல்வி எமர்ஜென்சி.
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக நீட் மோசடிகள் தொடர்கின்றன. நயவஞ்சகர்களின் நரித்தனத்தை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நரிகள் பல்வேறு வழிகளில் நுழைவுத் தேர்வுகளை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவ போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இதைத்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆரம்பகாலத்திலிருந்து சொல்லி வந்தார், போராட்டம் செய்தார், சட்ட மசோதா நிறைவேற்றினார். ஆனால் ஆளுநர் ரவி - பாஜகவின் சேவகராக நம் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, பாஜகவின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அப்போதெல்லாம் வாய் மூடி கிடந்தவர்கள், ஒன்றிய அரசின் நரித்தனத்தை தற்போது உணர்ந்து போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
மாணவர்களின் கல்விக்குத் தடை போடும் அரசைக் கேள்வி கேளுங்கள். மணிப்பூரில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போதும், வாய் மூடி மவுனியாக இருப்பவர்களால், மக்கள் கேட்கும் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு 9000 கோடி விமானம் இருக்கிறது. செலவழிக்க மக்களின் வரிப்பணம் இருக்கிறது. கேள்விக்கு பதில் தர வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.
இ.வி.எம் இருக்கும் வரையில் - ஆட்சித் திருடர்களால் மக்களிடமிருந்து பறிக்கப்படும் மக்கள் உரிமைகள் இனி கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ஆட்சிகளைப் பறித்தார்கள் பாஜகவினர். அதை ஆளு நர் அங்கீகரித்திருக்கிறார்கள். மக்கள் போட்ட ஓட்டு எங்கள் கால் தூசுக்குச் சமம் என பாஜகவினரும், ஆளுநர்களும் கொக்கரிக்கின்றார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எமர்ஜென்சியை ஏவி விட்டிருக்கின்றார்கள்.
மருத்துவக் கல்வியும், உயர் கல்வியும் ஏழைகளுக்கு கிடைக்கவே கிடைக்காது. எந்தப் போராட்டமும் ஆட்சித் திருடர்களை ஒன்றும் செய்யாது. அவர்கள் அறம் அற்றவர்கள். ஆட்சியும் அதிகாரமும் வேண்டுமென்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். நீதிமன்றத்திலும் நுழைந்து விட்டார்கள். இனி இந்தியர்கள் இன்னொரு 500 வருடம் அடிமைகளாக வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பது கொடுமை.
தற்போதைய செய்தி என்னவென்றால், சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்து பல தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், ஜூன் 23 காலை நடைபெறவிருந்த நீட்-பிஜி நுழைவுத் தேர்வை “ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” ஒத்திவைப்பதாக சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
நீட்-யுஜி தேர்வு மற்றும் அது நடத்தும் பிற தேர்வுகளில் தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விமர்சனத்திற்கு உள்ளான தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து சுபோத் குமார் சிங் நீக்கப்பட்டடார்.
கேபினட் நியமனக் குழு, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலாவுக்கு, வழக்கமான பதவியில் இருப்பவரை நியமிக்கும் வரை, என்.டி.ஏ-வின் கூடுதல் பொறுப்பை அளித்து அறிவிப்பை வெளியிட்டது. தற்போதைய DG திரு. சிங், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் "கட்டாயக் காத்திருப்பில்" வைக்கப்பட்டுள்ளார்.
மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, மே 5-ம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் முறைகேடு மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பாதித்த இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான NEET-UG-யில் முறைகேடுகள் தொடர்பான வரிசை தொடங்கி, ஏஜென்சி தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஒரு லட்சம் மருத்துவப் படிப்புகளுக்கு 23 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் முறைகேட்டினை உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை.
நன்றி : தீக்கதிர்
Monday, June 17, 2024
மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களின் கண்ணீர் வரலாறு
1927ஆம் ஆண்டில் முதன் முதலாக இப்பகுதிக்கு வந்தபோது காட்டு மாமரங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், “மாஞ்சோலை” என்று பெயரிட்டனர் என்று சொல்லப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது கல்லிடைக்குறிச்சி. அங்கிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டினை கடந்து சுமார் 16 கிலோ மீட்டர் மலையேறினால் மாஞ்சோலை எஸ்டேட்டை அடையலாம்.
மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து பட்டியலின மக்களும், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களும் தொழிலாளர்களாக, முதலாளிகளின் தரகர்களால் இங்கு அழைத்துவரப்பட்டனர்.
குறைந்த ஊதியம், அதிக வேலை என இருந்த எஸ்டேட்டில் அதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்கிறது மாஞ்சோலையின் தொழிலாளர்கள் வரலாறு.
1999ம் வருடம் சூலை மாதம் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 கூலியாக வழங்க வேண்டுமென போராடினர். அப்போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.
திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா சிறுபிள்ளையாக இருக்கும் போது, அவரது தாயார் உமையம்மை ஆகிய இருவரும் உறவினர்களிடமிருந்து உயிர் தப்பிக்க மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் மறைந்து வாழ்ந்தனர். அங்கு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகில் வாழ்ந்த சிங்கம்பட்டியார் என்பவரைச் சந்தித்து ஆதரவு கேட்டார்கள். அதன் பிறகு சிங்கம்பட்டியார் மார்த்தாண்ட வர்மாவுக்கு பல பயிற்சிகள் பயிற்று வித்து, அவர் வாலிப வயது அடைந்தவுடன் தன்னுடைய மகனுடன், படை ஆட்களை அனுப்பி, மார்த்தாண்ட வர்மனின் உறவினர்களை விரட்டி விட்டு, மீண்டும் திருவிதாங்கூர் அரியணை ஏற உதவி செய்தார். போரில் சிங்கப்பட்டியாரின் மகன் இறந்ததால் அதற்காக 18ம் நூற்றாண்ட்டில் 1706 மற்றும் 1758 ஆண்டுகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியையும், 5 கிராமங்களையும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உட்பட 8 கோவில்களையும், 5 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் தானமாக வழங்கினார் மார்த்தாண்ட வர்மா. இந்த நிலத்தை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்தனர்.
சிங்கம்பட்டி ஜமீன் இளவரசர் சிவசுப்ரமணிய சங்கர தீர்த்தபதி சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது கொலை வழக்கில் சிக்கினார். வழக்குச் செலவுகளுக்காக் 1929ம் ஆண்டில் சுமார் 8500 ஏக்கர் நிலத்தினை பி.பி.டி.சி நிறுனத்திற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கினார்.
பி.பி.டி.சி நிறுவனம் செய்த அபகரிப்பு செயல்கள் என்ன?
இந்த இடத்தினை பி.பி.டி.சி நிறுவனம் அபகரிக்கச் செய்த செயல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
BBTC நிறுவனம் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்ட நிறுவனமாகும். குத்தகைக்கு நிலத்தை எடுத்த BBTC நிறுவனம் குறிப்பிட்ட வனப்பகுதிகளை செம்மைப்படுத்தி தேயிலையைப் பயிரிட்டது. குத்தகை காலம் 2028 வரை அமலில் உள்ளது. அனுமதிக்கப்பட்ட 99 ஆண்டு குத்தகை காலத்தில் BBTC நிறுவனம் மாஞ்சோலை நிலத்தில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறது.
1952 ஆம் வருடம் குத்தகைக்கு விடப்பட்ட டீ எஸ்டேட் உட்பட அனைத்து சிங்கம்பட்டி 22000 ஹெக்டேர் ஜமீன் காடுகளை ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்தின் மூலம் அரசு தன் வசம் எடுத்தது. ஆனால், பிபிடிசி நிறுவனம் தனது 99 வருடக் குத்தகையைத் தொடரலாம் என அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசு அனுமதித்தது. 1977 ஆம் வருடம் அரசு மேற்கண்ட 22000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி காட்டை காப்புக் காடாக மாற்றத் தமிழ் நாடு வனச்சட்டம் மூலம் அறிவிக்கை செய்தது. ஆனால் பிபிடிசி நிறுவனம் தன்னுடைய குத்தகை நிலத்தைக் காப்புக்காடாக மாற்றக் கூடாது எனவும் தனக்கு ரயத்வாரி பட்டா வழங்க வேண்டும் என்றும் பல்வேறு வகையில் கடிதங்கள் மூலமும், நீதிமன்றம் மூலமும் முட்டுக்கட்டை போட்டது. இதனால் இந்த வனப்பகுதியைக் காப்புக்காடாக மாற்ற முடியாமல் வன நிர்ணய அலுவலர், வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டார்கள்.
ரயத்வாரி பட்டா என்றால் என்ன?
ஜமீன்தார் யாருக்கு நிலத்தைக் குத்தகைக்கு கொடுத்திருக்கிறாரோ அந்தக் குறிப்பிட்ட நிலங்களை அரசு கையகப்படுத்தும் போது அந்நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டிருந்தால் அந்த நிலங்களுக்குக் கொடுக்கப்படும் பட்டாவின் பெயர் ரயத்வாரி.
இந்தப் பட்டாவை கேட்டுத்தான் வனத்துறைக்கு எதிராக BBTC நிறுவனம் வழக்குத் தொடுத்தது.
2010 ஆம் வருடம் (6.1.2010) வன நிர்ணய அலுவலர் மேற்கண்ட 22000 எக்டர் (பிபிடிசி குத்தகை நிலம் உட்பட) காட்டைக் காப்புக்காடாக மாற்றலாம் என உத்தரவு பிறப்பித்தார். பிபிடிசி நிறுவனம் இந்த உத்தரவுக்குத் தடை ஆணை பெறாமல் கேவியட் மனுவை மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது வனத்துறை. ஆகவே அப்போது பிபிடிசி நிறுவனத்தால் தடை ஆணை ஏதும் பெறமுடியவில்லை. ஆனால், வன நிர்ணய அலுவலர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிபிடிசி நிறுவனம் 2010 இல் மாவட்ட நீதிமன்றம் , திருநெல்வேலியில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2015ம் வருடம் மாவட்ட நீதிமன்றம் பிபிடிசி நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. பிபிடிசி நிறுவனம் மதுரை உயர் நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு செய்தது. 01.09.2017ம் தேதியன்று அந்த வழக்கையும் தள்ளுபடி செய்து நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவில் 'குத்தகை ஒப்பந்த காலம் முடியும்வரை, நிலத்தை நிறுவனம் அனுபவித்துக் கொள்ளலாம். ஒப்பந்த காலம் முடிவடையும் வரை மனுதாரருக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. மனுதாரர் தற்போது அனுபவித்துவரும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சாகுபடி செய்யலாம். அதைத் தவிர்த்து, பரப்பளவை விரிவாக்கம் செய்யக் கூடாது. குத்தகை ஒப்பந்த விதிகளை மீறினால், அதை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்திருக்கிறார்கள். மேற்கண்ட இந்த நிகழ்வு நடைபெற 40 வருடங்கள் ஆகியுள்ளது.
சமீபத்தில் பிபிடிசி நிறுவனம் மாஞ்சோலை எஸ்டேட்டை மூடுவதற்கு முடிவு செய்து, எஸ்டேட்டில் இருந்து மக்களை வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். இந்த எஸ்டேட்டின் குத்தகை 2028ம் ஆண்டு வாக்கில் முடிவுக்கு வர உள்ளது.
மாஞ்சோலை எஸ்டேட்டில் 1959ல் “மீண்ட சொர்க்கம்”, 1974ல் “மன்னவன் வந்தானடி”, 1990ல் “நிலா பெண்ணே”, 1991ல் “சார் ஐ லவ் யூ”, 1996ல் “பூமணி”, “சுந்தர புருஷன்”, 2008ல் “பேராண்மை”, 2009ல் “ஆனந்த தாண்டவம்” போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
இந்த எஸ்டேட்டில் பிபிடிசி கம்பெனியின் மாஞ்சோலை குருப் ஆபீஸ், தேயிலைத் தொழிற்சாலை, பெரிய மருத்துவமனை, மருத்துவர் இல்லம், கம்பெனியின் கண்காணிப்பாளர் இல்லம், தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாணவர் விடுதி, காவல் நிலையம், வாக்கி டாக்கி நிலையம், தபால் நிலையம், சிறந்த சுவையான டீ ரஸ்க் தயாரிக்கும் எஸ்டேட் பேக்கரி, இந்து, கிறித்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் எனப் பலவும் மாஞ்சோலையில் அமைந்துள்ளன.
எஸ்டேட் மூடப்பட்டு அப்பகுதிகள் காப்புக்காடாக மாற உள்ளது. இதனால் அங்கு பல தலைமுறைகளாக தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து, வாழ்ந்து வந்த மக்கள் கனத்த இதயத்துடன் தங்கள் குடியிருப்புகள், கோயில்கள், வாழ்வாதாரங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு எந்த உலகத்திலும் நிரந்தரமான இடமுமில்லை, அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் இல்லை. இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேட்பார் யாருமில்லை. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டதற்காக கொல்லப்பட்டனர். வரலாறு முழுக்க தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக உள்ளது. அதிகாரத்துக்கும் பணத்திற்கும் பேராசைக்கும் இடையில் சாமானிய தொழிலாளர்கள் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருப்பது காலம் காலமாக தொடரும் அவலம். மனிதன் மிருகத்தை விட கேவலமானவன் என்பதன் இன்னொரு வரலாறு தான் மாஞ்சோலை எஸ்டேட்டும் அதன் தொழிலாளர்கள். உழைப்பவனுக்கு இந்த உலகில் வாழ இடமில்லை என்பதே உண்மை.
* * *
Friday, May 24, 2024
இர்பானுக்கு மன்னிப்பு - சட்டம் பிரபலமானவர்களின் காலடியில் புதைக்கப்படுமா?
இர்பான் என்ற ஒரு தனி நபர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை கேலிக்கு ஆட்படுத்தி இருக்கிறார். பிரபலமாக இருப்போர் தன் செயலைப் பலரும் கவனிப்பார்கள் என்ற நினைவு இல்லாமல் இருப்பார்கள் என்று நம்ப நாமொன்றும் முட்டாள்கள் இல்லை.
உலகெங்கும் சுற்றிச் சுற்றி சாப்பிட்டு - அது சரியில்லை, இது சரியில்லை, இங்கே நல்லா இருக்கு, அங்கே நல்லா இருக்கு என பல ஹோட்டல்கள் நடத்தியவர் போலவும், சமையல் கலையில் உலகளவில் தேர்ந்தவர் போலவும் - பல வீடியோக்களைப் போட்டு காசு பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நபர் - தான் செய்த செயல் சட்டத்துக்கு விரோதமானது என்று தெரியாமல் வீடியோ போட்டார் என்று மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் - அதை சட்டம் ஏற்றுக் கொண்டால் - சட்டம் செத்துப் போனது போல் ஆகும்.
இர்பான் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர். வீடியோ எடுக்கும் போது அவருடன் இருந்தவர்கள் எவருக்கும் ஜெண்டர் பற்றி அறிவிக்க கூடாது என்ற சட்டம் பற்றித் தெரியாதா?
இவரின் மனைவி மருத்துவமனைக்கு ஆலோசனைக்குச் சென்றிருப்பாரே அப்போது ஜெண்டர் பற்றி அறிவிக்க கூடாது என்று தெரியாமலா வீடியோ எடுத்தனர்.
தெரியாமல் செய்து விட்டேன். மன்னிப்பு தாருங்கள் என்றால் - சட்டம் இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - இனி எல்லோருக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பே தண்டனை என்றால் சிறைச்சாலை எதற்கு?
காவல்துறை எதற்கு?
வக்கீல்கள் எதற்கு?
நீதிமன்றம் எதற்கு?
நீதிபதி எதற்கு?
விசாரணை எதற்கு?
எதுவும் தேவையில்லையே. தேவையற்ற வகையில் மக்களின் வரிப்பணத்தினை ஏன் செலவு செய்ய வேண்டும்.
தெரியாமல் ஹெல்மெட் போடவில்லை - போக்குவரத்துக் காவல்துறை மன்னிக்குமா?
போர்சே காரை தெரியாமல் எடுத்து இருவரைக் கொன்று விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?
தெரியாமல் ஊழல் செய்து விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?
தெரியாமல் கொலை செய்து விட்டேன் - மன்னிக்குமா சட்டம்?
இவருக்கு மன்னிப்பு வழங்கினால் சட்டம் தன் மதிப்பை இழக்கும். நீதிமன்றம் தன் மாண்பை இழக்கும். சட்டசபைகளில் சட்டம் இயற்றி, ஆளுநர்களிடம் போராடி சட்டமியற்றினால் இர்பான் போன்றவர்கள் அதை மீறினால் சட்டசபைக்கு என்ன மரியாதை?
சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதிக்கு என்ன மரியாதை?
ஏன் மக்கள் ஓட்டுப்போட வேண்டும்? சட்டசபை எதற்கு? ஜனாதிபதி எதற்கு? எல்லாவற்றையும் நீக்கி விடலாமா?
இர்பானின் திமிர் இது.
தன்னை மீடியாவில் பேசுபொருளாக மாற்றவும், எப்போதும் தனக்கொரு ஹைப் இருக்க வேண்டுமென்பதற்காகவும் - இதைப் போன்ற சட்டத்தினை மீறும் வீடியோவை இர்பான் போட்டிருக்கிறார்.
இவருக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை எனில் தமிழக அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கருதப்படும் நிலை உண்டாகும்.
என்ன வேண்டுமானாலும் செய்வேன் - செய்து விட்டு மன்னிப்புக் கேட்பேன் என்றால் அவனுக்கு சட்டம் என்ன செய்யும் என்று சட்டப்படி காட்ட வேண்டும். இல்லையெனில் சட்டம் பிரபலங்களின் காலடியில் புதைக்கப்படும்.
இவரைப் பாலோ செய்யும் இளம் தலைமுறையினருக்கு சட்டத்தை மீறினால் - மன்னிப்புக் கேட்டால் போதும் என்ற எண்ணம் ஏற்படும். அது சட்டம் ஒழுங்கை மட்டுமல்ல சமுதாயத்தில் தேவையற்ற அமைதியின்மையை உண்டாக்கும்.
தமிழக அரசு கவனிக்க வேண்டும். இவர் மீது சட்டப்படியான கடுமையான தண்டணையைப் பெற்றுத் தர வேண்டும்.
உணவுகளைப் பற்றி வீடியோக்களில் பேசும் இர்பான் - என்ன படித்திருக்கிறார்? உணவுகள் பற்றியும், அந்த உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் பற்றியும் - அதன் பின் விளைவுகள் பற்றியும் தெரிந்திருக்கிறாரா? பின் எப்படி அந்த உணவு நன்றாக இருக்கிறது, இது சுமாராக இருக்கிறது என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்?
இவரின் வீடியோக்களில் காட்டப்படும் உணவகங்களை - தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆராய்ந்திருக்கிறதா? இப்படி பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வரும் இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - சட்டத்தினை மீறும் அனைவருக்கும் - அரசு மன்னிப்பு வழங்க வேண்டும்.
சவுக்கு சங்கரும் ஃபெலிக்ஸும் மன்னிப்பு கேட்டால் விட்டு விடுமா சட்டம்? இவருக்கு மன்னிப்பு வழங்கினால் - இவர்கள் இருவருக்கும் மன்னிப்புக் கொடுக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்...!
Wednesday, May 22, 2024
சவுக்கு சங்கர் - ஃபெலிக்ஸ் ஜெரால்டு - உண்மை என்ன?
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. சவுக்கு சங்கரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, காவல்துறையில் பணிபுரியும் பெண்களைப் பற்றி தவறாகப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.
எப்படி என்கிறீர்களா?
சங்கரின் ஆரம்பகாலத்திலிருந்து நான் அவரைக் கவனித்து வருகிறேன். அவரின் கட்டுரைகளைப் படித்தும் வருகிறேன். முன்னாள் நீதிபதி செல்வத்தைப் பற்றி எழுதிய கட்டுரையிலிருந்து, த ரிப்போர்ட்டர்ஸ் கலக்டிவ் எனும் இணையதளத்தில் வெளியாகும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, சவுக்கு ஆன்லைனில் பதிப்பித்த போதெல்லாம் படித்திருக்கிறேன்.
சங்கர் தன்னை ஒரு பிராண்டாக உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை ஊழல் உளவு அரசியல் புத்தகத்தைப் படித்த போது அறிய முடிந்தது. இந்தப் புத்தகத்தை அவன் பட்டும்படாமல், சொல்ல வந்த எதையும் சொல்லாமல், ஒப்புக்குச் சப்பாணியாக வெளியிட்டிருந்தான். படித்த போதே தெரிந்தது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறான் இவன் என்பது.
தொடர்ந்து அவனின் அடுத்த கட்டம் அரசியலை நோக்கியும், தனியார் செய்திகளில் அடிபட்ட பணக்காரர்கள் பக்கம் திரும்பியது. சோர்ஸ் என்றொரு வார்த்தையை வைத்துக் கொண்டு, பலரையும் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருந்ததை நாமெல்லாம் பார்த்தோம்.
ஒரு வருடத்திற்கு முன்பு, நினைவில் இல்லாத ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக ஃபெலிக்ஸிடம் பேசிய போது, நானொரு ஏழை என்று என்னிடம் சொன்னான். ஆனால் இப்போது கோடிக்கணக்கில் சொத்துக்களை அதுவும் ஒருவருடத்திற்குள் வாங்கி வைத்திருக்கிறான் ஃபெலிக்ஸ் என்று செய்தி வெளியாகி உள்ளது.
ஃபெலிக்ஸின் யூடியூப் சானலில் சங்கர் பேசிய போது, இதன் பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது என்று புரிந்தது. அன்றிலிருந்து அவனது வீடியோவைப் பார்ப்பதுமில்லை. அவனது இணையதளத்தினைப் படிப்பதும் இல்லை.
ஒவ்வொரு தேர்தலும் தான் இவனைப் போன்றவர்களுக்கு டார்கெட்.
தேர்தல்களின் போது சோஷியல் மீடியா மூலம் அரைகுறை அல்லு சில்லுகளை இவர்களால் டார்கெட் செய்யப்படும் கட்சிகளுக்கு ஓட்டுப்போட விடாமல் செய்யலாம் என்ற திட்டத்திற்காக, வாட்சப் வாலிப வாலிபிகளை மூளைச் சலவை செய்வதற்காக - இவர் தன்னை ஒரு உண்மை பத்திரிகைகாரராக பதிவு செய்து வந்திருக்கிறார். வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
சமீபத்தில் கார்டியன் பத்திரிக்கையில் ஃபேஸ்புக் மெட்டா நிறுவனம் போலி செய்திகளை விளம்பரமாக்கியதை அனுமதித்துள்ளது என்ற கட்டுரை வெளியாகி உள்ளது.
மேலே இருக்கும் இணைப்பினைச் சொடுக்கி கட்டுரையைப் படித்துக் கொள்ளுங்கள்.
இப்படி பலரைப் பற்றியும் வதந்திகளையும், போலி செய்திகளையும் பரப்பி, உண்மையை தெரிந்து கொள்ள விடாமல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் கொடுக்கும் காசுக்கு தன்னை நம்பிய மக்களின் முதுகில் குத்தியிருக்கிறார்கள் இந்த இருவரும்.
உள் அரசியல் பற்றி அறிந்து கொள்ள முடியாத, தெரியாத மக்களை சப்ஸ்கிரைப் செய்ய வைத்தும், இன்னும் பல ரகசியமான வேலைகளைச் செய்து, பாலோயர்களை அதிகப்படுத்தியும் வந்திருக்கிறார்கள் இருவரும்.
இவர்களுக்கு மக்களிடம் அமோக ஆதரவு உண்டு என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, அதன் காரணமாக கட்சிகளிடம் பணம் பெற்றிருக்கிறார்கள் என்கிறது செய்திகள்.
ஒரு துரோகியின் கட்சியும், ஒரு இனத்துரோகியின் கட்சியும் இவனுக்கு கோடிக்கணக்கான ரூபாயை - திமுகவைப் பற்றி அவதூறு பேசவும், ஓட்டுக்கள் கிடைக்கா வண்ணம், சாமர்த்தியமாக போலிச் செய்திகளைப் பரப்ப வேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிக்கைகள் மற்றும் பல யூடியூப் சேனல்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்து விட்டதை அறிந்த பின்னால், காசு கொடுத்தவர்கள் கணக்கு கேட்டால் சொல்ல வேண்டுமே என்பதற்காக, பக்காவாக பிளான் போட்டு, ஒரு அவதூறு வீடியோவை வெளியிட்டு, கைது செய்ய வைத்து, காவல்துறைப் பாதுகாப்புடன் ஜெயிலுக்குள் அடைக்கலமாகி விட்டனர் என்றே நம்பத் தோன்றுகிறது.
யாரை வேண்டுமானாலும் நம்பலாம். இவர்களைப் போன்ற மக்களை ஏமாற்றி போலிப் பிம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் துரோகத்தையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்களை நம்பவே கூடாது.
திருடனுக்கு தேள் கொட்டியது போல அந்த இரு கட்சி துரோகிகளும் கள்ள மவுனத்தில் இருப்பர். இவர்கள் இருவரும் கணக்கு கொடுக்காமல், எல்லாம் செலவாகி விட்டது என்றுச் சொல்லி விடுவார்கள்.
அடுத்த தேர்தலுக்கு மற்றொரு கட்சியிடமிருந்து பணம் பெற்று, வழக்கம் போல அறியாமையால் கிடக்கும் மக்களை ஏமாற்றுவர்.
மேலும் இதோ தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி. படித்து வையுங்கள்.
Monday, May 20, 2024
நீதியின் அநீதி - இரண்டாவது நூல்
அன்பு நண்பர்களே!
அனைவருக்கும் வணக்கம். குறுஞ்செய்தி மாத இதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்த போது எழுதிய தொடர் “நீதியின் அநீதி”.
இந்தியாவில் நடந்த மதம் தொடர்பான கலவரங்களின் பின்பு மனிதர்கள் தன் சக மனிதர்களைக் கொன்றொழித்ததன் இரத்தம் படிந்த இந்திய வரலாற்றின் மனம் பதற வைக்கும் படுகொலைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன்.
இந்த புத்தகத்தை அமேசானில் வெளியிட்டிருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் கீழே இருக்கும் இணைப்பைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.
கிண்டில் அன்லிமிடெட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவசம. வரும் மூன்று நாட்களுக்கு இலவசமாய் படிக்க புரோமோசன் இருக்கிறது. படித்துப் பார்த்து விட்டு, மெயில் அனுப்புங்கள்.
தங்கவேல் மாணிக்கம்
20.05.2024
இணைப்பு : நீதியின் அநீதி
Saturday, May 4, 2024
இந்திய ஊடகங்கள் அழிக்கப்பட்டன - பத்திரிக்கை துறை விலைக்கு வாங்கப்பட்டது
இந்தியாவின் பத்திரிக்கை துறை அழிக்கப்பட்டது டிசம்பர் 30, 2022ம் ஆண்டு என்று ஆரம்பிக்கிறது ஆர்.சீனிவாசன் அவர்களின் கட்டுரை.
அன்றைய தினம் மிகவும் மதிக்கப்படும் மற்றும் மதிப்பிற்குரிய செய்தி நிறுவனமான என்டிடிவியின் முழு கட்டுப்பாட்டையும் செல்வாக்குமிக்க - மற்றும் பலராலும் சர்ச்சைக்குரிய நிறுவனராக விமர்சிக்கப்படும் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, அப்போது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆன அவரது அதானி எண்டர்பிரைசஸ் மூலம், என்.டி.டி.வியின் 27.26 சதவீத கூடுதல் பங்குகளை வாங்கிய பிறகு, முழுவதுமாக எடுத்துக் கொண்டார். பிரபல செய்தியாளர் பிரனாய் ராய் வெளியேற்றப்பட்டார்.
அவரிடம் என்.டி.டிவியின் நிறுவனப் பங்குகளில் 64.71 சதவீதம் உள்ளது. என்.டி.டி.வியை கொல்லைப்புறமாக ஆக்கிரமித்த அதானி, சில மாதங்களுக்கு முன்பு, இவரின் ஊடக நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ், புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அரசாங்க நட்பு ஊடகவியலாளர்களை பணியமர்த்தியது.
அதானியின் அடுத்த டார்கெட் தி குவிண்ட் பத்திரிக்கை. இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு விட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு குயிண்டில்லியன் பிசினஸ் மீடியாவின் 49 சதவீத பங்குகளை அதானியின் ஏஎம்ஜி நிறுவனம் வாங்கியது.
பதினைந்து வருடங்களாக, பத்திரிக்கைத் துறையில் தனி ஆதிக்கம் பெற்ற நிறுவனங்களை பல வித உபாயங்களைப் பயன்படுத்தி அதானி மற்றும் அம்பானி நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இதற்கு மோடி அரசு உறுதுணையாக இருந்தது என்கிறது அக்கட்டுரை. கட்டுரையின் ஆங்கில மூலம் கீழே உள்ளது. கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல இந்த ஊடகங்கள் மூலம் எவ்வளவு அளவு பணம் புரளுகிறது என்ற துல்லியமான கணக்குகள் உள்ளன. ஊடகங்களை அரசும், அரசு சார்பு நிறுவனங்களும் ஏன் விலைக்கு வாங்கி ஆக்கிரமிக்கப்படுகின்றன எனில் எந்த ஒரு உண்மையும் இந்தியர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற நரித்தந்திரத்தினை தவிர வேறொன்றும் இல்லை. இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டுமென்ற பேராசையால் இத்தகைய அறமற்ற செயல்களை செயல்படுத்துகிறார்கள்.
Thursday, May 2, 2024
கேள்விகள் - உச்ச நீதிமன்றத்துக்கு இது அழகா?
02.05.2024 தினதந்தி நாழிதழ் செய்தி
படித்து விட்டீர்களா?
இந்து திருமணத்தில், மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வர வேண்டும். ரிக் வேதத்தில் இதை 'சப்தபடி' என்று கூறுவார்கள்.
''நாம் நண்பர்களாகி விட்டோம். இந்த நட்பில் இருந்து பிரிய மாட்டேன்'' என்று மணமகளிடம் மணமகன் கூறுவான். இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணத்தை இந்து திருமணமாக கருத முடியாது.
1954-ம் ஆண்டின் சிறப்பு திருமண சட்டப்படி, எந்த மத, சாதி, இனத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறலாம். ஆனால், 1955-ம் ஆண்டின் இந்து திருமண சட்டப்படி, அவர்கள் 5-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதுடன், 7-வது பிரிவில் கூறப்பட்டுள்ள சடங்குகளையும் செய்திருக்க வேண்டும். ஆனால், மனுதாரர்கள், இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யவில்லை. முறையான சடங்குகள் இன்றி அவர்கள் பெற்ற திருமண பதிவு சான்றிதழ் செல்லாது. அவர்களது விவாகரத்து வழக்கும் ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் கூறினர்.
நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நீதிமன்றம் மதச்சாயத்துடன் இருக்கிறதோ என்ற ஐயத்தை மக்களிடம் தோற்று வித்திருக்கிறது. இந்து மதம் என்பது பற்றிய தெளிவான வரலாறு உள்ளது. அந்த வரலாற்றில் இந்து மதம் என்ற சொல் எப்படி வந்தது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
ஆங்கிலேயர் வருகைக்கு முன், இந்தியா என ஒரு முழு நாடாக என்றுமே இருந்ததில்லை என்பதால், தனித்தனியான சாம்ராஜ்யங்கள் தான் இந்தியக் கண்டத்தில் ஆண்டு வந்தன. இவைகளை எல்லாம் ஒன்றாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் முழு வரலாறாக, இந்திய வரலாறு என்னும் பெயரில், முதலில் ஹென்றி எலியட்டு என்னும் கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலரால் தொகுக்கப்பட்டது. இதன் காலம் 1867-77.
ஆங்கிலேயர்களால் இந்த உப கண்டத்தில் புழக்கத்தில் இருந்த மதங்களின் வழிபாட்டு முறைகள் ஒன்றோடு ஒன்று ஒத்திருப்பதின் விளைவாக சகல மதங்களையும் ஒரே மதமாக ஹிந்து என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தனர்.
ஹிந்து மதம் என்பது ஒற்றை மதமல்ல. அது பல மதங்கள் சேர்ந்த மாலை போன்றது. இதில் சனாதனம் என்பது ஒரு மலர். முதலில் ருத்ரன் வழிபாடு இருந்தது. அது பின்னாளில் சைவம் என்று அழைத்தார்கள். சைவத்திற்கு எதிர் மறையான புனையப்பட்ட கதைகளை மூலாதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைகள் வைணவம், சமணம், புத்தம் ஆகியவை. இந்த மதங்களின் முறையற்ற கலப்பே இன்றைக்கு ஹிந்து மதம் என்றழைக்கப் படுகின்றது.
இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் 28.05.2021ம் தேதியில் தினமணியில் எழுதிய நாம் சைவர்களா? இந்துக்களா? என்ற கட்டுரையில், ஆங்கிலேயர்களால் ஆறு சமயங்களாக தெய்வ வழிபாடு கொண்டவர்களை எல்லாம் ஒருங்கே இந்து என விளிக்கப்பட்டது என்கிறார்.
அதென்ன ஆறு சமயங்கள்?
சிவனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சைவர்கள்
விஷ்ணுவை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் வைணவர்கள்
சக்தியை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சாக்தர்கள்
விநாயகரை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் காணாபத்தியம்
முருகனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் கெளமாரம்
சூரியனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் செளரம்
இவ்வளவுதான் சமயங்கள் என்கிறார் அவர்.
இப்படியான வரலாறு கொண்டதுதான் இந்து மதம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு சமயம் அல்லது மதத்தில் திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் வேறுவிதமானவை.
மருதத் தினை - நல்லாவூர் கிழார் எழுதிய அகநானூறு நூலில் பாடல் 86, லைவன் தோழியிடம் சொன்னது என கீழே உள்ள பாடல் உள்ளது. இப்பாடலில் தமிழர் திருமணத்தில் அக்னி பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை.
உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரிக்
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்
‘கற்பினின் வழாஅ நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக’ என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேர் இற் கிழத்தி ஆக எனத் தமர் தர
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்
கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு, முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழ, ‘நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை’ என
இன் நகை இருக்கை பின் யான் வினவலின்
செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர
அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்
மடங் கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.
என்கிறது அகநானூறு பாடல். இந்தப் பாடல் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
உளுந்தம் பருப்பைச் சேர்த்துச் சமைத்த பொங்கலோடு குவிந்த சோற்றுத் திரளை உண்ணுதல் ஒரு பக்கம். வரிசையாகக் கால்களை ஊன்றிய பெரிய பந்தலில், புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவை குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்றப் பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, ”கற்பினின்று வழுவாது நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்தியக் கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக” என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்தக் கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர்.
இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து, ”பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ” என்று அவளை வாழ்த்தி, என்னிடம் அவளைத் தந்தனர்.
நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம். தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள். அவளை அணைக்கும் விருப்பத்துடன், நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள்.
”உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு” என்றேன். இனிய மகிழ்ச்சியுடன், நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இருக்கையில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்தக் கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.
அக நானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளபடி அக்னி வலமும் இல்லை. தாலி கட்டுதலும் இல்லை. தமிழர் வாழ்வில் அக்னி முன்பு ஏழு அடிகள் நடந்து திருமணம் செய்வித்தல் என்பது இல்லவே இல்லை என இப்பாடலைச் சாட்சியாக கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வரும் தமிழர்களின் திருமண முறைகள் மரபுவழி மணம், சேவை மணம், போர் நிகழ்த்தி மணம், துணங்கையாடி மணம், பரிசம் கொடுத்து மணம், ஏறு தழுவி மணம் மற்றும் மடலேறி மணம் ஆகியவைகள்.
இந்த தீர்ப்பினை ஒட்டி எழும்பும் கேள்விகள்:
சார் பதிவாளரிடம் பதிவு செய்யும் திருமணங்களின் நிலை இனி என்ன?
கிராமங்களில் கோவிலில் மாலை சூடி திருமணம் செய்விப்பார்களே அதன் நிலை என்ன?
கொங்கு பகுதியில் அக்னி இன்றி பாடல் பாடி திருமணம் செய்விப்பார்களே அதன் நிலை என்ன?
இதற்கு முன்பு காதல் திருமணம் செய்து பதிவு செய்தவர்களின் பதிவு ரத்தாகுமா?
பதில் தருமா நீதிமன்றம் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
பல கேள்விகளை எழுப்புகிறது இந்தச் செய்தியும் - தீர்ப்பும்.
பல்வேறு மதங்களின் கூட்டுக் கலவையான இந்து மத திருமணங்களை சட்டம் இயற்றி அதன் படி பதிவு செய்ய அரசு முனைகிறது. ஆனால் இந்த தீர்ப்பு அதையும் செல்லாதாக்கி விடுகிறது என்பது கவலைக்குரியதாகும்.
ஒரு சமயத்தின் திருமண நிகழ்வுகளைப் பிற சமயங்களைச் சேர்ந்தவரும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு இந்த தீர்ப்பு கொண்டு செல்கிறது.
உச்ச நீதிமன்றம் சட்டத்தின் படி இயங்கவில்லையோ என்ற சந்தேகத்தை இந்திய மக்கள் மனதில் விதைத்துள்ளது இந்த தீர்ப்பு.
வாழ்க வளமுடன்..!
இந்தப் பதிவு எனது தனிப்பட்ட கருத்து. யாரையும் எவரையும் குறிப்பிடுவது அல்ல. தீர்ப்புக்கான விமர்சனமும் அல்ல.
Tuesday, April 2, 2024
சற்குருவென அழைக்கவும் - ஜக்கி வாசுதேவ்
ஈஷா - சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பேட்டியின் போது, ”சர்ச்சுக்கு போனால் ஃபாதர், மசூதிக்குப் போனால் மவுலானா என்றும் அழைக்கிறீர்கள் அல்லவா அது போல என்ன சற்குரு என அழையுங்களேன்” என்று சொன்னார். அவர் வாதம் சரியானதுதான். பிற மதத்துக்காரர்களை அழைக்கும் போது, என்னையும் அழைத்தால் என்ன?
ஒரு ஷார்ட்டில் விஜய்டிவி நீயா? நானா? கோபிநாத்திடம், கார்பொரேட் பணியிலிருந்து வெளியேறி சொந்த தொழில் செய்யும் ஒருவர், யாரோ ஒருவரின் கைவிரலின் பட்டமாக இருக்க விரும்பவில்லை, சுதந்திரமாக இருக்க விரும்பி வேலையை விட்டேன் என்றார். அதற்கு கோபிநாத் சுதந்திரமான பட்டம் எங்காவது சென்று சிக்கிக் கொள்ளுமே என்றார். கோபிநாத்தின் வாதமும் சரியானதுதான்.
பட்டத்தை உதாரணமாகச் சொன்னால் பட்டத்தின் இயல்பை வாதமாக வைக்கும் கோபிநாத்தின் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது?
இருவரும் பேசியதற்கு காரணம் - அகங்காரம். அகங்காரம் அதிகமானால் தான் சொல்வதை எல்லோரும் கேட்கிறார்கள் என்ற போலித் திமிரும் கூட வந்து விடும்.
இவர்களைப் போல எத்தனை எத்தனையோ ஆட்கள் பூமியில் வந்து பேசி, வாதமிட்டு சென்று விட்டார்கள். வாழும் காலத்தில் கூட தன் நிலை அறியாதவர்களாய் வாழ்ந்து சென்று விடுகிறார்கள். நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்கும் ஆட்கள் இவர்கள்.
இருக்கட்டும். மேலே உள்ள பத்திகளில் சொல்லப்பட்டவைகளுக்கு விளக்கம் கீழே வரும்.
அதற்கு முன்பு ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவத்தைப் பார்க்கலாம்.
கேஜிஎஃப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே?
கோலார் தங்க வயல். அந்தப் பக்கமாக, ஆண்டர்சன் பேட் என்ற கிராமத்தில் ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்த கேசவனானந்தா சுவாமிகள் அங்கு சென்று சாந்தி ஆசிரமத்தினை துவக்கினார்.
ஆசிரமத்தின் வாயிலாக அன்னதானம் போன்ற பல தொண்டுகளைச் செய்து வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் கடலூர் பக்கமாக ஜீவசமாதி ஆகி விட்டார். இவரின் சீடர் பெயர் கோதண்டராம சிவயோகி.
கேசவனானந்தா சுவாமிகளின் மீது பெரும் பக்தி கொண்டவர். எங்கெங்கோ சென்று தன் குருநாதரின் சிலையொன்றினை வடித்து சாந்தி ஆசிரமத்திற்கு கொண்டு வந்து, பிரதிஸ்டை செய்யும்படி கேட்டிருக்கிறார்.
அப்போது இருந்த ஆசிரம நிர்வாகிகள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே அச்சிலையை அங்கிருந்த ஒரு தண்ணீர் நிறைந்த பகுதியில் வைத்து விட்டு, இந்தச் சிலையை பிரதிஸ்டை செய்யவதற்கு, வரவேண்டிய ஆள் வருவான் என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
நிற்க.
அமைதி குடிகொண்டிருந்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் நம் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்கு வந்து விடுவோம்.
எனது குருநாதர் ஜோதி சுவாமி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, கோலார் தங்க வயலில் இருந்து வந்த பக்தர்கள் மேற்கண்ட கோலார் தங்கவயல் கேசவானந்தா சுவாமிகள் சிலை பற்றிய சம்பவத்தை அவரிடம் விவரித்திருக்கின்றனர்.
காரணமின்றி காரியமில்லை அல்லவா?
”குருநாதரிடம் கேட்கிறேன், அவர் சொன்னால் நான் அங்கு வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, குருநாதரிடம் சென்று கேட்டிருக்கிறார்.
”நீதான் பிரதிஸ்டை செய்யனும், அதை எப்படி செய்யனும் எனச் சொல்கிறேன் அதன்படி செய்” என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருநாதர்.
ஜோதி சுவாமி பக்தர்களுடன் கோலார் தங்கவயல் ஆண்டர்சன் பேட்டிலிருக்கும் சாந்தி ஆசிரமம் சென்று சேர்ந்தார்.
22.02.2016ம் ஆண்டு தண்ணீருக்குள் இருந்த சுவாமி கேசவனானந்தா சுவாமிகளின் திருமேனியை எடுத்து வைத்திருக்கிறார். நைவேத்தியம் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நைவேத்தியமாக படைத்த பால் தம்ளரில் குறைந்து இருப்பதை பக்தர்களும், சுவாமியும் கண்டிருக்கின்றனர்.
(கோலார் தங்கவயலில் இருக்கும் சாந்தி ஆசிரமத்தில் உள்ள சுவாமி கேசவனானந்தாவின் திருமேனி. கல்வெட்டில் நம் குருநாதரின் பெயர் பொறித்திருப்பதைப் பார்க்கவும்)
”ஆண்டவனே, ஒரு சில கற்கள் பாலை உறிஞ்சும் பார்த்திருக்கிறேன். ஆனால் சுவாமியின் வாயின் அருகில் பால் நிறைந்த தம்ளரை கொண்டு சென்ற போது பால் தானாகவே குறைந்தது” என்றார் என்னிடம். சொல்லி விட்டு சிரித்தார். எதற்குதான் அவ்வப்போது சிரிக்கிறாரோ தெரியவில்லை.
மறு நாள் உலக வழக்கப்படி நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அந்த நிகழ்வில் ஜோதி சுவாமிக்கு ஒருவர் மாலையிட்டிருக்கிறார். அவர் அந்த மாலையை எடுத்து போட்டவருக்கே திரும்ப போட்டு விட, இப்படியெல்லாம் செய்யக்கூடாது அது மரியாதை செய்தவரை அவமானம் செய்தது போலாகும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகத்தான் மாலை, மரியாதை, சகல ஸ்ரீ, சற்குரு பட்டமெல்லாம் போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு ஜோதி சுவாமி அவர்களிடம், ”என் குரு என்னிடம் சொன்னது, நீ எப்போதும் சீடனாகத்தான் இருக்க வேண்டும், உன் முன்னால் இருப்பவர்கள் தான் உனக்கு குரு, ஆகவே குருவிற்குதான் மாலை சென்று சேர வேண்டும். சீடனுக்கு அல்ல என்பதால் மாலையை குருவிற்குதான் கொடுத்தேன்” என்று சொல்லி இருக்கிறார்.
இப்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், கோபிநாத் பற்றிய பத்திகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள். கோபிநாத்துக்கு விஷயதானம் செய்கிறவர்கள் யார்? என்று யோசித்துப் பாருங்கள். இத்துடன் இதை முடித்து விடலாம்.
கோசாலை..!
மாலைப்பொழுது. பொழுது மசங்கிய நேரம், சிட்டுக்குருவிகளின் சத்தம் இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டிருந்தது. மெல்லிய சூடில்லா காற்று வீசிக் கொண்டிருந்தது.
அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
”இதெல்லாம், ராமகிருஷ்ணர் பரம்பரை ஆண்டவனே” என்றார்.
”புரியவில்லை சாமி” என்றேன்.
”காளி கோவிலில் அர்ச்சகரான பகவான் ராமகிருஷ்ணர், பூஜை சாமான்களை கங்கையில் தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு சென்ற பக்தர்கள், சுவாமி இதை நீங்கள் தானா செய்ய வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு பகவான், பாரம்பரியத்தை விட்டு விடக்கூடாதல்லவா, பின்னால் வரக்கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்” என்று சொன்னாராம்.
”ஓ...! புரிந்தது சாமி” என்றேன்.
அம்புட்டுதான்.
வாழ்க வளமுடன்...!