குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, September 21, 2021

நீட் தேர்வு தினமலர் முனைவர் காயத் திரி

நீட் தேர்வு குறித்து முனைவர் காயத்திரி அவர்கள் கடந்த  20.09.2021ம் தேதியன்று தினமலரில் சிந்தனைக் களம் என்ற பகுதியில் கீழே படத்தில் இருக்கும் கட்டுரையினை எழுதி இருக்கிறார்.


நன்றி : தினமலர் - முழு கட்டுரையினை இணையத்தில் படித்துக் கொள்ளவும். இந்தக் கல்வியாளரின் நோக்கம் கட்டுரையினைப் படித்ததும் தெரிந்து விடும்.

இந்தியாவில் பல்வேறு வகையான கல்வித்திட்டங்கள் உள்ளன. சிபிஎஸ்சியும் ஒன்று. ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை வைத்திருக்கின்றன. வேறுபட்ட கல்வித் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இந்தியா முழுவதுமான ஒரே தேர்வு என்றால் எப்படி சரியாகும்? எல்லாக் கல்வித் திட்டத்தினையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் கேள்வித்தாளுக்கு முழுமையான பதிலை மாணவனால் எங்கனம் எழுத முடியும்? 

ஆகவே நீட் தேர்வு என்பது ஒரு மோசடி என்பது தெளிவு. இதைப் பற்றி ஒரு வரி கூட இக்கட்டுரையில் அவர் எழுதவில்லை.

நீட் தேர்வில் வெற்றி பெற ஒரே வழி நீட் கோச்சிங்க். லட்சக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி உடையவருக்கு நீட் தேர்வில் வெற்றி கிடைக்கும். இதற்கு நீட் கோச்சிங்க் சென்டர்கள் சொல்லும் வெற்றிக் கணக்கே சாட்சி. 

இல்லையென்று இந்தக் கல்வியாளரால் எழுத முடியுமா? முடியாது. அதை மறைத்து விடுவார்.

ஒன்றிய அரசு ஒவ்வொரு மொழி வழி மாநிலங்களின் கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து நீக்கி ஒன்றிய அரசுப்பட்டியலில் சேர்த்தது பெரும் மோசடியான அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மொழி வழி மா நிலங்கள் தனக்கென தனிப்பட்ட  வரலாறு, கலாச்சாரம் கொண்டவை. இப்படி இருக்கும் போது இந்தியா முழுமைக்கும் ஒரே கேள்வித்தாள் என்றால் அது மோசடி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

பிஜேபி அரசின் காவி மயக் கல்விக்கு அடித்தளம் போட்டு வைத்திருக்கிறது. ஆரம்பமே தகராறு. இவருக்கு இதுவெல்லாம் நினைவில் இல்லை போல.

அடுத்து, முன்னைவர் காயத்திரி தன் கட்டுரையில் சுட்டுவது திமுகவின் நீட் ரத்து பற்றி. திமுக அரசு நீட் தேர்வு பற்றி ஆராய, ஒரு குழுவை உருவாக்கிய உடனே பிஜேபி கோர்ட்டிற்குச் சென்று தடை கேட்டது. 

சேப்பாக்கம் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதாக முழங்கினாராம். ஏன் செய்யவில்லை என்கிறார்.  அதிமுக துரோகி எட்டப்பனும் தான் சொன்னான். தீர்மானம் இயற்றினான். அதைப் பற்றி ஏன் இவர் எழுதவில்லை. ஏனென்றால் அதிமுக அடிமையாக படுத்துக் கிடக்கிறது. அதைப் பற்றி ஒரு வரி எழுதவில்லை. திமுக நீட் தேர்வினை ரத்துச் செய்வதாகச் சொல்லி வெற்றி பெற்றார்கள் என்றும், அவர்கள் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல தோற்றத்தினை உருவாக்கி இருக்கிறார் முன்னைவர்.

நீட் தேர்வு பற்றி மக்கள் கருத்து அறிய குழு போட்டவுடனே பிஜேபி தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் புதைத்திட நீதிமன்றப்படியேறியதே, அந்த தடங்கல் பற்றி வாயைத் திறக்காத கல்வியாளர், கல்வி படிக்க விரும்பும் மாணவர் தரம் பற்றி கேள்வி எழுப்புகிறார்.

ஒரு மாணவன் கல்வி கற்பதன் காரணமாகத்தான் தரம் உயர்கிறானே ஒழிய, கல்வி கற்கவே தரம் வேண்டும் என்று சொல்லும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்திற்கு கோடாரியாய் இருக்கிறார்கள். ஏழை மாணவன் உயர் கல்வி உரிமையைப் பெறக்கூடாது என்ற சிந்தனை கொண்டவர்கள் என்பது  அவர்களின் இந்த கட்டுரையில் வெளிப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் காலம், சூழல் போன்றவற்றுக்கு ஏற்பத்தான் கல்வியினை கற்கும். ஆரம்பத்தில் நன்றாகப் படிக்காத குழந்தைகள், பின் நாட்களில் நன்கு படிப்பார்கள். 

எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது. நீ ஆரம்பத்தில் நன்றாகப் படிக்கவே இல்லை, ஆகவே உனக்கு படிப்பு தர முடியாது என்றுச் சொல்லும் இந்த வகைத் தேர்வுகள் மனித மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவை அல்லவா? 

இதை வழிமொழியும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்தின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் அல்லவா?

தன் கட்டுரையில் திமுகவினை சாடு சாடு என சாடி விட்டு, கல்வியில் அரசியல் என்கிறார். கல்வியில் அரசியலைக் கலப்பது பிஜேபி தான். வேறு எவரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 

பொறியியல் கல்லூரிகளில் தரம் இல்லையாம்? தரமில்லாத எந்த ஒன்றும் காலப்போக்கில் இல்லாது போகும். அதைச் சரி செய்ய கடுமையான சட்டங்கள் தான் தேவை. மாணவனைக் கல்வி தான் தரப்படுத்தும். அதை எப்படி தரமாக வழங்குவது என அரசு கல்வி நிலையங்களைக் கண்காணித்து செயல்படுத்திட வைத்தல் வேண்டும். அதை விடுத்து படிக்கவே தேர்வு வைப்பேன் என்பது கொடும் செயல். கொடுமைச் சிந்தனை. கொலைகார எண்ணம். மக்களை மாக்களாக்க வைக்கும் பாதகச்செயல்.

திமுவைத் திட்டி, இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்து, பொறியியல் கல்வியை தரம் தாழ்ந்து விட்டது என்றுச் சொல்லி வரும் இவர், அடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்றால் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம் என்கிறார்.  

இது நாள் வரை, மெடிக்கல் படிக்க எந்த கோச்சிங்க் செல்லாமலும், கட்டணம் இல்லாமலும் சீட் பெற்று படித்த மாணவர்களுக்கு இது பெரும் சுமை.

நீட் கோச்சிங்க் சென்டர்களில் குவியும் கள்ளப்பணம் பற்றி இவர் வாய் திறக்கவில்லை. அங்கு நடத்தப்படும் தீண்டாமைகளை இவர் எழுதவில்லை. சமீப நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியானது பற்றியோ, பீகார் மாநிலத்தில் தேர்வு என்கிற பெயரில் நடத்தப்படும் மோசடி பற்றியோ வாய் திறக்கவில்லை. திருட்டுத் தேர்வு, கேள்வித்தாள் மோசடி செய்து வெற்றி பெரும் மாணவர்களைப் பற்றி ஒரு வார்த்தை இக்கட்டுரையில் உள்ளதா என்றால் இல்லை. 

ஐஏஎஸ் தேர்வில் ஒரு பிசி மாணவனைப் பார்த்து, தேர்வாளர் ம்... நீங்களெல்லாம் இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று அரசாள வந்து விட்டீர்கள் என்றுச் சொல்லி அவரை பெயில் ஆக்கிய சாட்சி என்னிடம் இருக்கிறது. தேர்வாளர் ஒரு பிராமின் என்று இங்கு சொல்ல விரும்புகிறேன். ஏன் அவன் நாடாளக் கூடாது என்று அவர் ஏன் கோபப்படுகிறார் என்று தெரிந்து கொண்டீர்களா? இதைத்தான் பிஜேபி அரசு செய்ய விரும்புகிறது.

உயர்கல்வி உயர் ஜாதியினருக்கு என்கிறது பிஜேபி அரசு.

கல்வியாளர் அடுத்து பரிந்துறை செய்கிறார் இப்படி

மருத்துவம் இல்லை என்றால் என்ன? வேறு படிப்புகள் இருக்கின்றனவே என்கிறார். இவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்னவென்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஏன் பெட்ரோமாக்சே தான் வேண்டுமா? வேறு எதுவும் வேண்டாமா என்று கேட்கிறார். 

அதாவது நாடாளும் கல்வி, மருத்துவம் போன்றவைகள் எங்களுக்கே உங்களுக்கு கீழ் நிலைப் படிப்பு இருக்கிறது அதைப் படியுங்களேன் என்கிறார்.

அப்துல்கலாம், ரஜினியை உதாரணம் காட்டுகின்றார். ஒரே ஒரு அப்துல் கலாமும், ரஜினியும் தான் இருக்க முடியும். அவர்களைப் போல இன்னொருவர் இருக்க முடியுமா? இவருக்குத் தெரியாதா? தெரியும். சொல்ல மாட்டார். அசைன்மெண்ட் அப்படி.

சினிமாவில் சாதித்தவனை விட அழிந்தவர்கள் தான் அதிகம். கோடியில் ஒருவன் வெற்றி பெறுகிறான் அதுவும் சிறிது காலம். அவரை உதாரணமாகக் காட்டும் இவரின் பாதகச்சிந்தனைக்கு மாற்றாக வேறு எதனையும் சுட்டிக்காட்ட முடியாது. ஒரு கல்வியாளர் என்ற போர்வையில் கல்வியில் வெற்றி பெற்றவர்களை உதாரணம் காட்டாமல் சினிமாக்காரனை உதாரணம் காட்டி, நீங்களும் சினிமாவுக்குச் சென்று அழிந்து போ என்றுச் சொல்லாமல் சொல்ல வருகிறாரா என்று தெரியவில்லை.

ஏன் இப்படி பொருமலுடன் இக்கட்டுரையினை எழுதி இருக்கிறார் இவர்?

ஏழை கீழ்சாதி மாணவர்கள் மருத்துவர் ஆகி விட்டால் கீழ் சாதிக்காரனிடம்  மருத்துவம் செய்ய சனாதன தர்மமும், ஆகம விதிகளும் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்ல வருகின்றார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நீட் தேர்வு வைத்து உங்களை நாங்கள் வடிகட்டி விடுவோம் என்றுச் சொல்லாமல்  சொல்கிறார்கள்.

கல்வி கற்க தடை போடும் எவரும் நிரந்தரமாக வாழ்ந்தது இல்லை. கல்வி கற்றுக் கொடுப்பவனை கடவுள் என்கிறது தமிழ் கலாச்சாரம். 

பிஜேபி தன் நிலைப்பாட்டை மாற்றி நாட்டை நிர்வாகம் செய்வதை கவனிக்க வேண்டும். அதை விடுத்து கல்வி கற்க தடை ஏற்படுத்தினால் காலம் அவர்களை மொத்தமாக அழித்து விடும். 

தன் வாழ்க்கையை நிரந்தரம் செய்ய முடியாத இவர்கள், மற்றவர்களுக்கு அழிவினை உண்டாக்கும் செயல்களைச் செய்கிறார்கள்.

அவ்வாறு செய்பவர்களுக்கு அறம் அதற்குரிய பலனை அளிக்கும் என்பது வரலாறு சொல்லும் செய்தி. நயவஞ்சக நரிகளையும், ஓநாய்களையும் தமிழர்கள் அறிந்து தெளிய வேண்டும்.

கல்வியாளர்கள் என்கிற போர்வையில் உலா வரும் பாதகச் சிந்தனைவாதிகளை உலகம் ஒதுக்கி தள்ளி விட வேண்டும். இவர்கள் மனித குலத்தின் ஒட்டுண்ணிகள். ஒட்டுண்ணிகள் காலப்போக்கில் உதிர்ந்து போய் விடும்.அவர்களை இனம் கண்டு கொண்டு, இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் உதறித் தள்ளிடல் காலத்தின் கட்டாயம்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடல் வேண்டும். அது ஒன்றே தர்மம்.

அது ஒன்றே அறம்.

வாழ்க வளமுடன்...!


Monday, July 26, 2021

விடிகாலை இரண்டு மணியில் மணி

விடிகாலை இரண்டு மணி. விழித்துக் கொண்டேன்.

சன்னலைத் திறந்தேன்.

அமைதி தவழும் மேற்கு மலைத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைகள் இருளாய் தெரிந்தது.

மீண்டும் படுக்கையில் படுத்தேன். 

அருகில் கோதை  சுருண்டு சிறுபிள்ளையாய் முடிகலைந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 

ஏகாந்தம் மண்டிய விடிகாலை நிசப்சத்தில் நினைவுகள் பின்னோக்கின.

அவன் வீட்டுக்கு வந்த போது அழுக்காய், சகதியில் புரண்டு, நாற்றமடித்துக் கொண்டிருந்தான். ஷாம்பூ போட்டு இரண்டு முறை குளிக்க வைத்தாள். அமைதியாக உட்கார்ந்திருந்தான். சேட்டை எதுவும் செய்யவில்லை. வெள்ளையும் செவலையும் கலந்த நிறத்தில் ஒல்லியாய் வீட்டுக்குள் சுத்தி வந்து கொண்டிருந்தான்.

ரூடோஸ் அவனைப் பார்த்து கர்ண கடூரமாய் குலைத்துக் கொண்டிருந்தான். இவளுக்காக தான் அவனைக் கொண்டு வந்திருந்தேன். ஜோதி சாமிதான் அவனை வீட்டுக்கு அனுப்பி வைந்திருந்தார்.

மணி என்று பெயர் வைத்தேன்.

மறுநாள் ரேபிட்ஸ் தடுப்பூசி மற்றும் இன்னொரு ஊசி போட்டுக் கொண்டு வந்தோம். அவனுக்கு என தனியாக உணவு தட்டு, சங்கிலி, கழுத்துப் பட்டை, பிஸ்கெட், எலும்பு மற்றும் இன்ன பிறவனவெல்லாம் வாங்கி வந்து கொடுத்தேன்.

நன்றாகச் சாப்பிட்டு விட்டு, காற்றாடியின் கீழே சுகமாய் படுத்து உறங்குவான். புதிய ஆட்கள் வந்தால் ஒரு சத்தம். ஈரக்குலை நடுங்கும் கர்ண கடூரமானது அவனது குரல்.

அவனது தலை பெரியது. சிங்கம் போல இருப்பான். அசைந்து அசைந்து நடந்து செல்லுகையில் பெண் நடப்பது போலவே இருப்பான். 

ரூடோசும் அவனும் ஒன்றாகவே இருந்தனர். ரூடோசுக்கு அவளது முழு உரிமையில் பங்குக்கு மணி வந்து விட்டான் என சில நாட்கள் சோகமாக இருந்தாள். பின்னர் பழகிக் கொண்டாள்.

(மணி - லேப்ராடர் வகை)

     



இப்படியான சூழலில் மணிக்கு ஒரு பிரச்சினை வந்தது.

ரூடோஸ் ஆறுமாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மைக்கு வருவாள். பெண்கள் போலவே அவளது பிறப்புருப்பில் இரத்தம் வடியும். நான்கைந்து நாட்களில் அவள் மேட்டிங்க்குக்கு தயாராக ஆவாள். அவள் மணியை முற்றிலும் நிராகரித்து விட்டாள். அவனும் அவளுடன் சேர்வதற்காக என்னென்னவோ சேட்டைகள் செய்து பார்த்தான். ஊஹூம். விளைவு குரைக்க ஆரம்பித்து விட்டான். 

மிருக மனம். இயற்கையின் அழைப்பு. மணி சோர்வடைந்து விட்டான். தினமும் அவளைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தான்.

பிள்ளைகள் இருவரும் வளர்கின்றனர். ரித்திக் இருவரையும்  நன்கு கவனித்துக் கொள்வான். நிவேதிதா மணியின் அருகில் செல்வதில்லை. பதின்ம வயதில் இருக்கும் இருவருக்கும்மிருகங்களின் இனச்சேர்க்கை சேட்டைகள் தேவையற்ற பதிவுகளை உருவாக்கி விடும் என மனதின் ஊடே சிந்தனைகள். நன்றாகப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விதமான சம்பவங்கள் ஏதேனும் மனதுக்குள் பதிந்து உணர்வுகளை கிளர்ச்சி அடைய வைத்து விடும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமே என்ற பயம் வேறு.

மணியை வேறு இடத்தில் விட்டு விடலாமென முடிவெடுத்து விட்டேன். மனசு கேட்கமாட்டேன் என்கிறது. நான்கைந்து நாட்களுக்கு குரைத்துக் கொண்டிருப்பான். சரியாகி விடுவான் என்றாலும் மணியின் இயற்கை உணர்வுகள் பாதிக்கப்படும் போது அவன் தன் கோபத்தினை அவன் முன்னால் இருக்கும் பொருட்கள் மீது காட்டுகிறான். கடித்து துவம்சம் செய்கிறான்.

விளாங்குறிச்சியில் மேட்டிங்குக்கு அடிக்கடி நாய்கள் வரும். ஆனால் இங்கே அதற்கான வாய்ப்பில்லை. 

தாராபுரத்தில் இருக்கும் நண்பரின் தோட்டத்தில் ஜூலி இருந்தாள். அவள் திடீரென இறந்து போனாள். பெரிய தென்னைத்தோட்டம் வைத்திருக்கிறார். தோட்டத்துக்குள் வீடு.

அவரை அழைத்தேன்.  ஏனென்றால் நாய் வளர்த்தவர்களுக்குத் தான் நாய்கள் மீதான அன்பு இருக்கும்.

“கொண்டு வந்து விடுங்கள் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

இவரின் நண்பரின் வீட்டில் சில்க்கி இருப்பதாகவும். அவளுக்கு மணி மேட்டிங்குக்கு சரியாக இருப்பான் எனவும் சொன்னார். 

அவனுக்கு இது எதுவும் தெரியாது. 

எனக்குதான் விடிகாலையில் விழிப்பு வந்து பதட்டத்தோடும், மன வருத்ததோடும் இருந்தேன். அவன் உணர்ந்து கொண்டானா எனத் தெரியவில்லை.

ஏழு மணிக்கு காரின் பின்னால் உட்கார்ந்து கொண்டான். அவனது தடுப்பூசி புத்தகம், அவனது உணவு தட்டு, சங்கிலிகளை எடுத்து காருக்குள் வைத்தான் ரித்திக். நிவேதிதா சோகமாக இருந்தாள். எனக்கோ மனமெல்லாம் டன் கணக்கில் கனத்தது.

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நினைவுகள் வந்து சென்றன. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். அதுவும் மணலில் வடித்த கல் போல அடிக்கடி உதிர்ந்து கொண்டே இருந்தது.

காரில் சமத்தாக உட்கார்ந்து கொண்டான். அவன் காரின் பின் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், நேரம் செல்லச் செல்ல படுத்து விட்டான். பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் சாலையில் இருக்கும் நாயக்கர் ஹோட்டலில் இரண்டு இட்லி சாப்பிட்டேன். கோதை பொங்கல். பிஸ்கெட் வாங்கிக் கொடுத்தோம். அமைதியாகச் சாப்பிட்டான். அழைத்தேன். திரும்பிக் கூட பார்க்கவில்லை.

தோட்டத்துக்குள் காரை நிறுத்தி காரில் இருந்து இறங்கினான். கோதையால் அவனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அங்கிருந்த ஒரு கருப்பு நாட்டு நாயிடம் சென்று முகர்ந்து பார்த்தான். ஒரு சில இடங்களில் ஒன்றுக்குச் சென்றான். நண்பர் அவனை கோதையிடமிருந்து வாங்கி, மரத்தில் கட்டினார்.

அவன் அவரைப் பார்த்து தன் அன்பினைத் தெரிவித்தான். 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினோம். அவன் காரில் இருக்கும் என்னைப் பார்த்துக் குரைத்தான். ஒரே ஒரு தடவைதான் குரைத்தான்.

அவனுக்குத் தெரிந்து விட்டது. 

இனி நான் அவனின் எஜமானன் அல்லவென.

நெஞ்சுக்குள் கத்தியைச் சொருகியது போல வலித்தது.

விழியோரம் கண்ணீர் துளிர்த்தது.

கோதை அறியாமல் துடைத்துக் கொண்டேன். நான் கலங்குவதை அவள் எப்போதும் பார்த்தது இல்லை. அது என் இயல்பும் இல்லை.

எங்கிருந்தோ வந்தான். இடையில் என்னோடு சில காலம் வாழ்ந்தான். இனி அவன் என்னோடு இல்லை. 150 கிலோ மீட்டர் தூரத்தில் வாழ்கிறான்.

இதோ இன்றைக்கு விடிகாலைப் பொழுதில் அவனின் நினைவுகளால் நிரம்பிக் கிடக்கிறது மனசு.

அன்பு வலிகள் நிறைந்தது. வேதனைப்படுத்துகிறது.

அவனுக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். 

கண்கள் கலங்கி மனதும் தளர்ச்சி அடைகிறது.

அவன் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியோடு வாழட்டும்.

Saturday, February 15, 2020

கணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி? (18க்கு மேல் மட்டும்)

நேற்று காலையில் ஒரு வேலையாக வெளியில் வந்த போது சாலையின் நடுவில் அணில் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கடந்து விட்டேன். மனது கேட்கவில்லை, உயிரோடு இருந்தால் தூக்கி அந்தப் பக்கமாய் விட்டு விடலாம். இல்லையென்றால் வீட்டுக்கு எடுத்துக்கு போய் கோதையிடம் திட்டு (சுகமோ சுகம்) வாங்கலாம் என நினைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு அதன் அருகில் வந்தேன். 

(அது என்னவோ தெரியவில்லை, என் மனையாள் கோபம் கொள்ளும் போது வெகு அழகாய் இருக்கிறாள். நானும் மகளும் அவளை காலையில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பதும், அவள் கோபம் கொள்வதும் ஊடல் கொண்ட அவளுடன், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றவுடன் முயங்குவதும் இப்படியே செல்கிறது வாழ்க்கை. இப்போதெல்லாம் அவள் என் பெண் நண்பர்களைப் பற்றி அதிகம் விசாரிக்கிறாள். பெண்களுக்குச் சந்தேகம் உடன் பிறந்த தமக்கை போல)

வண்டி செல்லும் போது உருவான காற்றினால் அதன் வால் ஆடியதைக் கண்டு அது உயிரோடு இருப்பதாய் நினைத்து விட்டேன். 

அய்யகோ.. !

அது செத்துப் போய் விட்டது.

சட்டென்று மனதுக்குள் கவிழ்ந்த பாரத்தால் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. என் படுக்கை அறையின் சன்னலோரம் தினமும் ஒரு அணில் கொய்யாமரத்தில் குதித்து ஓடி, சுவர் மீது உட்கார்ந்து தலையை அப்படியும், இப்படியுமாய் திருப்பிக் கொண்டிருக்கும். எனக்கு அவன் நினைவில் வந்து விட, உள்ளம் துடியாய் துடித்தது. அவனாக இருக்குமோ? இருக்காது என ஓரமாய் துளிர்த்தது நம்பிக்கை. அணில் என்றவுடன் ராமர் நினைவுக்கு வந்து விடுகிறார்.

ராமபிரானுக்கு மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கோவில் கட்ட நீதியை குழியில் போட்டு புதைத்த கதையை பாரதம் கண்டிருக்கிறது. அடியேனுக்கு தர்மம் மட்டுமே கண்ணில் தெரியும். பிறவெல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாதவை. ஆகவே அயோத்தியில் ராமர் கோவில் என்பது தர்மத்திற்கு விடப்பட்ட சவால் என்றே கருதுவேன். அவர்கள் கோவிலை இடித்தார்கள் ஆகையால் நாம் மீண்டும் கட்டுகிறோம் என்ற அபத்தவாதம் ஏற்கவியலாது.

ஒரு அதர்மத்துக்கு இன்னொரு அதர்மம் என்றால் உலகில் ஒருவர் கூட உயிரோடு இருக்க முடியாது. 

ராமபாணம் துளைத்த வாலி தன் நெஞ்சிலிருந்து பிடுங்கிய அம்பில் ராமன் பெயர் கண்டு, அவனுக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் உண்டு.  தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்பார்கள். அதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். ஒரு சிறிய மறைப்பு மட்டுமே என் முன்னால் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மறைந்து விட்டால் மனித வாழ்க்கையின் சூட்சுமம் விளங்கி விடும். இன்ப துன்பம் பற்றிய காரண காரியங்கள் தெரிந்து விடும். அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.

நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் நெடுவாசல்) மாணிக்கதேவர் (என் அப்பா) மழை பெய்யவில்லை என்றால் இன்றும் என்னோடு வைத்திருக்கும் ராமாயாணம் புத்தகத்தை வாசிப்பாராம். வாசித்து முடிக்கையில் மழை பெய்யும் என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது பழங்கதை. என் அப்பாவை ஒரு நாள் கூட அப்பா என்று அழைக்கவில்லை. அப்படி ஒரு பாசம் எனக்கும் என் அப்பாவுக்கும். இனிமேல் எனக்கு இனியொரு அப்பாவா வரப்போகிறார்? அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், என் காலம் முடிந்ததும் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். எல்லோருக்கும் கிடைத்த அப்பாவின் அன்பு எனக்கு கிடைக்காமலே போய் விட்டது. அம்மா? அன்பு????? அடியேன் இந்த விஷயத்தில் துரதிர்ஷ்டத்தின் குழந்தை.

ஆனால் என் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. வைக்கவும் மாட்டேன். என் மகனோ, மகளோ இதைப் போன்ற பதிவு எழுதக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்.



ராமர் மீது அதீத பக்தி கொண்ட அணில் ஒன்று, லங்காவுக்குச் செல்ல வானரங்கள் பாலம் கட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு உதவ முடிவெடுத்து, கடலுக்குள் விழுந்து நனைந்து, கடலோரம் சென்று உடலை மணலில் பிரட்டி, தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்துக் கொண்டிருந்ததாம். அதைக் கண்ட ராமன் அதை அன்போடு கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்தாராம். அதனால் அதன் மீது ராமர் கோடு விழுந்ததாம் என்றுச் செவி வழிக் கதை ஒன்று உண்டு. 

அணில்கள் சத்தம் ஒரு வித கீச் குரலில் அபஸ்வரம் மாதிரி இருக்கும். இப்போது தாளம், சுருதி,லயமில்லாமல் வரும் சினிமா பாடல்கள் போல. அதன் சுறுசுறுப்புக்கு இணையாக வேறு எந்த பிராணியையும் சொல்ல முடியாது. இந்த அணில்களை குறவர்கள் கவட்டியால் அடித்து குடலைப் பிடிங்கி தோளில் தொங்க வைத்துக் கொண்டு செல்வதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

எனக்கு திடீரென்று மஞ்சு நினைவுக்கு வந்து விட்டாள். மஞ்சு மஞ்சளாய் ஜொலிக்கும் குறத்திப் பெண். வாரா வாரம் கீரமங்கலத்திலிருந்து ஊசி,பாசி விற்க வருவாள். வீட்டுக்கு தவறாது வருவாள். அடியேன் அவளைப் பார்ப்பதற்காகத் தவமாய் தவமிருப்பேன். பழைய சோறு போட்டுக் கொடுப்பார்கள். ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, அவள் கஞ்சி சோற்றினை அள்ளிச் சாப்பிடும் அழகே அழகு. அவளை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. குட்டைப்பாவாடையில் அவளின் நடை அழகு சுண்டி இழுக்கும். இடையில் நெளிந்து செல்லும் தாவணி அவளின் முன்னழகை மறைக்க முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். மஞ்சள் கிழங்கு போல நிறம் அவளுக்கு. 

அவளின் கணவன் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டானாம். நான் அவளிடம் கேட்டேன், ”என்னைக் கட்டிக் கொள்கிறாயா?” என. சிரித்தாள். முல்லைப் பற்களின் வரிசையில் மனது சொக்கிப் போகும். கன்னத்தில் விழும் குழியில் இதயம் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்.

”உன் அம்மாவும், அக்காக்களும் உயிரோடு என்னைக் கொளுத்தி விடுவார்கள்” என்றாள். கல்லூரிக்குச் செல்லும் முன்பு ஒரு வருடம் வீட்டில் இருந்த போது அவளின் வாரா வாரம் வருகை நின்றதே இல்லை. கல்லூரிக்குச் சென்ற பிறகு இரண்டொரு முறை அவள் தங்கி இருந்த குறவர் குடிசைகளுக்குச் சென்று அவளைத் தேடினேன். கிடைக்கவில்லை.


நான் நடப்பதாக இருந்திருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்று இயமலைப் பக்கமாய் குடிசையைப் போட்டுக் கொண்டு அவளை விட்டு அகலாமல் அவளுடனேயே இருந்து இன்பமாக வாழ்ந்து இருப்பேன். வீட்டில் இரண்டு மணி நேரம் இருப்பாள். அம்மா ஏதாவது வாங்குவார்கள். தங்கைக்கு கண்மை, கிளிப் என. சோகத்துடன் செல்வாள்.  எனக்கோ கரையில் தூக்கிப் போட்ட மீனாய் உள்ளம் கிடந்து துடிக்கும். அவள் வரும் நாளன்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அந்த இரண்டு மணி நேரம் இருக்கிறதே, அதைப் போல நாட்கள் இனி என்றும் வரப்போவதில்லை. 

“மஞ்சு, நீ இப்போது எங்கே இருக்கிறாயோ தெரியவில்லை. உன் மீது அறியா வயதில் நான் கொண்ட காதல் இன்னும் என் நெஞ்சில் கல்லாய் சமைந்து கிடைக்கிறது. மீண்டும் மனிதனாய் பிறந்து உன்னோடு சேரும் நாள் வருமா எனத் தெரியவில்லை. உன் நினைவுகளுடன் நான் நடத்தும் அபத்தமான நாடகத்தின் விளைவைப் பார்த்தாயா மஞ்சு. எதையோ எழுத வந்து உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உன் அழகிய முகத்தில் என்றும் ஈரமாய் தெரியும் உன் விழிகளின் கருவிழிக்குள் சென்று விட இதயம் துடிக்கிறது மஞ்சு. உன் அழகான மை பூசிய கண் இமைக்குள் மறைந்து போய் விட துடியாய் துடித்துக் கொண்டே இருக்கிறது மனசு மஞ்சு”

”மஞ்சு...! மஞ்சு....! உன் மீது கொண்ட நான் கொண்ட காதலால், என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை அன்பே. உன் நினைவுகளுடன் உள்ளம் கரைந்து போய் விட்டது.”

அன்பு நண்பர்களே தலைப்பின் கதையை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன். 

Wednesday, January 29, 2020

சில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்

நெட்பிளிக்ஸில் சூர்யா தயாரித்த சில்லுகருப்பட்டி படத்தை நேற்று மாலையில் பார்த்தேன். நான்கு கதைகள். 


கதை ஒன்று: குப்பை பொறுக்கும் ஒரு சிறுவன் பிங்க் குப்பை பையில் கிடைக்கும் ஒரு போட்டோ அதைத் தொடர்ந்து ஒரு டேப் ரெக்காடர், அதைத் தொடர்ந்து கிடைக்கும் ஒரு வைர மோதிரம். அது ஒரு வளர் பருவ பெண்ணுக்கு சொந்தமானது. பிங்க் குப்பை போடப்படும் இடத்தைக் கண்டுபிடித்து அவளிடம் டேப் ரெக்காடரையும், மோதிரத்தையும் சேர்க்கிறான்.

கதை இரண்டு: பால்ஸ் (அது என்னா பால்ஸுன்னு எனக்குச் சத்தியமாக புரியவில்லை) கேன்சரால் பாதிக்கப்படு பையன். ஓலாவில் இணையும் ஒரு ஃபேஷன் டிசைனர் பொண்ணு. பால்ஸில் கேன்சரால் பேச்சு வார்த்தையோடு போன திருமணம். இருவரும் இணையும் கதை. காக்காவைக் காப்பாத்தினா அது பளபளன்னு மின்னும் பொருளைக் கொண்டு வந்து தினமும் அந்தப் பொண்ணு கிட்டே கொடுக்கிறது. இயக்குனரின் கற்பனை வளம் கண்ணதாசனை மிஞ்சுகிறது.

கதை மூன்று: வயதான இரண்டு பெருசுகள் அன்பு கொள்வது, பின்னர் சேர்வது. 

கதை நான்கு: கிட்டே இருந்து பார்த்தா தெரியாது. எட்டே இருந்து பார்த்தா கோபுரமா தெரியும் என தத்துவம் பேசும் சமுத்துரக்கனி. பொண்டாட்டியைத்தான் சொன்னார். அயல் நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் அவரவர் சம்சாரங்கள் கோபுரங்களாகத் தெரிகின்றார்கள் என்ற புதிய விஷயத்தை கற்றுக் கொடுத்தது. அப்புறம் இன்ப செக்ஸ் கணவனுக்கும் மனைவிக்கும். 

படமே முடிந்தது. இனி கதாகாலட்சேபத்துக்கு வருவோம்.

குடும்ப வாழ்க்கையில் வேலைக்குப் போகும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போடுவது, வீட்டினைப் பராமரிப்பது பெரும் கொடுமையானவை என்கிறார்கள் பெண்கள். பிள்ளைகள் பெற்றெடுக்க இனி ஹாஸ்பிட்டல் போதுமென்கிறார்கள். அந்தளவுக்கு ஆண்களால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் பெண்கள். டில்டோக்கள் விற்பனை இந்தியாவில் படு சூடாக நடக்கிறது என்கிறது ஒரு சர்வே.  அந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இந்தக் கதையை ஏன் சூர்யா தேர்ந்தெடுத்து தயாரித்தார்? என்ன ரகசியம்? சூட்சுமத்தின் முடிச்சை கொஞ்சமே கொஞ்சம் அவிழ்க்கிறேன்.(இந்த வார்த்தை ஆபாசமானது அல்ல)

தமிழ் சினிமாவில் ரஜினி குரூப், கமல் குரூப், கவுண்டர் குரூப், மதுரை குரூப், ஐயர் குரூப் என தனித்தனி பிசினஸ் குரூப்புகள் பல உண்டு. 

ரஜினியுடன் தனுஷ், ரஜினியின் நண்பர் நடராஜ் மகளைக் கட்டி, ரத்துச் செய்த விஷ்ணு விஷால் போன்றோர்கள், அனிருத் சமாச்சாரங்கள் (இளையராஜா போல வருவாராம் இவர் என ரஜினி புகழாரம் சூட்டியது) இன்னும் பக்கத்து, தூர சொந்த பந்தங்கள் இவர் படங்களில் நடிப்பார்கள். அவ்வப்போது புரட்சிக்காக சில பல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது போன்ற அல்லுசில்லு வேலைகளை இவர்கள் செய்வார்கள்.

கமலுடன் ரமேஷ் அரவிந்த் நிச்சயம், ஐயராத்து அம்பிக்களாகவும், மாமிகளாகவும் திரைப்படங்களில் நடிப்பார்கள். இவர் அவ்வப்போது சில பல ஸ்டண்டுகளை அடிப்பார். இனப்பாசம் அதிகம். அத்தனையும் ஒன்றுக்கும் ஆவாது போய் விடும்.

கவுண்டர் குரூப்பில் சூர்யா,கார்த்திக், சத்தியராஜ், சிபிராஜ், சத்யன், ஞானவேல் ராஜா, அவ்வப்போது நண்பர்கள் என தனி ஆவர்த்தனம்.

மதுரை குரூப்பில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் இப்படி இன்னும் ஒரு சிலர் என இது கொஞ்சம் வித்தியாசமானது.

ஐயர் குரூப்பில் விசு (கிஸ்மு அவசியம்), சங்கர்( நண்பன் படத்தில் வரும் ஆஸ்துமா ஐயர்), மணிரத்னம் வகையறாக்களின் தனி ஆட்டம். 

சன் டிவி, ஒரு சில தயாரிப்பாளர்கள் எல்லாம் மேற்கண்ட க்ரூப்புகளோடு இணைந்து கொள்வார்கள். இன்றைய தினகரனில் ரஜினியும், பேர் கிரில்ஸும் போட்டோ ஷூட் செய்தியும், ரஜினி மீதான வருமான வரித்துறைச் செய்தியும் தடவிக் கொடுத்தபடியே வெளிவந்திருந்த மர்மங்கள் அது தனி ராஜ்ஜியம்.

விஜய், அஜித் சமாச்சாரங்கள் வேறு. அவர்கள் தங்களை பிராண்டாக மாற்றி வேஷம் கட்டிக் கொண்டார்கள். அஜித் ஐயராத்துக்காரர் என்பது தனிப்பட்ட விஷயம்.

ரெட்டி க்ரூப் விஷால், விஜய்சேதுபதி வகையறாக்கள் வேறு.
பெரும்பாலும் நல்ல சினிமாக்கள், கலெக்‌ஷன் ஆகும் சினிமாக்கள் எல்லாம் இவர்கள் தொடர்பானவர்களிடமிருந்தோ அல்லது இவர்களின் தயாரிப்பிலோ தான் வரும்.  கனவுகளோடு வரும் இயக்குனர்களின் அட்டகாசமான கதைகள் பற்றி இவர்களுக்குத் தெரியாமல் போகாது. இண்டஸ்ட்ரியில் அந்தளவுக்கு போட்டுக் கொடுக்கும் ஆட்கள் தடுக்கி விழுந்தால் லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஒரு படம் வெளி வந்து வெற்றி பெறுவது பெரும்பாலும் இல்லை எனலாம். 

விஜய் டிவி அலப்பரை நடிகர்கள். புதுமுக நடிகர்கள், இன்ன பிற அல்லுசில்லுகள் அவ்வப்போது எவராவது ஏமாந்த சோனகிரிகளின் தலையில் மிளகாய் அரைத்து ஹீரோக்களாக வேஷம் கட்டுவார்கள். பெரும்பாலும் ராமராஜன் கதையாக முடிந்து போவார்கள். இம்மாதிரி படங்களால் தான் தமிழ் சினிமா இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை சினிமாக்காரர்கள் சொல்வார்கள். 

இந்த ஐந்தாறு சினிமா குரூப்புகளுடன் இயைந்து செல்பவர்களால் தான் சினிமா தயாரித்து வெளியிட முடியும். தியேட்டர்கள் பெரும்பாலும் இந்த ஐந்தாறு குருப்களின் கண்ட்ரோலில் இருக்கும். இந்த குரூப்புகளுக்குள் தான் சண்டை சச்சரவுகள் நடக்கும். செய்திகளாகும், பரபரப்பாகும். இவர்களின் தொடர்பில் இருக்கும் வெளியீட்டாளர்களால் சினிமா வியாபாரமாகும். 

தனி ஒருவன் சினிமா தயாரிக்கவோ அல்லது ஹீரோவாக நடிக்கவோ விடவே மாட்டார்கள். அப்படி வந்து விட்டால் ஜெயிக்க வைத்து, மொத்தமாக ஜோலியை முடித்து விடுவார்கள். இங்கு ஜோலி என்பது வேலையை என்று அர்த்தம் கொள்ள வேண்டுமென்று சொல்லி விடுகிறேன். நமக்கெல்லாம் வக்கீலும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை. ஜோலி என்கிற வார்த்தைக்கு அவ்வளவு மகிமை.

நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர் இந்தக் குரூப்பில் கதை சொல்ல வேண்டும். கதையில் ஒட்டுக்கள், வெட்டுக்கள், ஒரு சில இணைப்புகள் கோர்க்கப்பட்டு வேறு ஒருவரின் இயக்கத்தில் வெளிவரும். இப்போது கோர்ட்டுக்குப் போகின்றார்கள். அப்போதெல்லாம் அய்யோ பாவம் கதைதான். இப்போது ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் சூர்யா ஏன் இந்தக் கதையை தேர்ந்தெடுத்து தயாரித்தார் என்பதை...

சில்லுகருப்பட்டி திரைப்படம் சுட்டிக்காட்டும் தமிழ் சினிமா பிசினஸ் இதுதான். இதைச் சரி செய்ய இயலுமா? ஏன் முடியாது? ஆனால் ஒருவரும் செய்ய மாட்டார்கள். செய்யவும் விடமாட்டார்கள்.

புரிந்தவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள். ஆதர்சன ஹீரோக்களின் ரசிகசிகாமணிகள் அடியேனை மன்னித்து அருள்வீர்களாக. அவ்வளவுதான் இந்தப் பதிவு.

* * *

Thursday, January 23, 2020

நரலீலைகள் - அரசியல் என்றால் என்ன? (9)

பீமாவும் தங்கவேலும் சந்தித்தார்கள்.

”உன் பேச்சைக் கேட்டேன் தங்கம். மக்கள் சேவை என்றால் மகேசன் சேவை என்றுச் சொன்னாயே? மகேசன் வந்து உன்னிடம் சொன்னானா எனக்குச் சேவை செய் என்று”

“பீமா, மனிதனின் கடமை தான் என்ன? மக்களுக்குச் சேவை செய்வது தானே?”

“தங்கம், பூமியில் ஒரே ஒரு உண்மை மட்டுமே உண்டு. பசி. உன் பசியைத் தீர்த்துக் கொள்வதுதான் உனக்கு இயற்கை தந்திருக்கும் கடமை. பசி தீர்ப்பதற்காக பல வித உபாயங்களை உருவாக்கினார்கள். அந்த உபாயங்கள் மனிதர்களைத் தின்று கொண்டிருக்கிறது. உபாயங்களுக்குள் சிக்கிய மனிதர்கள் மீழ முடியாமல் மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கின்றார்கள்”

“என்ன சொல்கிறாய் பீமா? ஒன்றும் புரியவில்லையே?”

“உனக்கு புரிந்து விட்டால் இது போல பேசி இருப்பாயா? அரசியல் என்பது வேறு. வாழ்க்கை என்பது வேறு. அரசியல் பலி கேட்கும் போர்க்களம். இந்தப் போர்க்களத்தில் வெற்றியாளர்கள் எவரும் இல்லை. வெற்றி என்பதெல்லாம் அரசியலில் இல்லவே இல்லை.

அரசியல்வாதிகளின் முதன்மை எண்ணம் தன் நலம் மட்டுமே. தன் நலம் விரும்பாத ஒருவன் அரசியலுக்கு வரமாட்டான். துணியை உதறி தோளில் போட்டு விட்டு மனிதர்கள் இல்லாத இடத்துக்குச் சென்று விடுவான்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிறாய் நீ. யார் மக்கள்? அந்த மக்களின் தகுதி என்ன? அவர்களின் ஆசைகள் என்ன? அவர்களின் எண்ணங்கள் என்ன? இப்படி ஏதாவது தெரியுமா உனக்கு?

நீ அரசியலுக்கு வரலாம். வந்தால் நீயும் உன் வாரிசுகளும் பலி வாங்கப்படுவார்கள். அந்தக்கால மன்னர்களுக்கு இப்போது வாரிசுகள் இல்லை என்பதை நீ அறிவாய் தானே? அதே போலத்தான் அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் நடக்கும்.

அரசியலில் தர்மம் இல்லவே இல்லை. அறமும் இல்லை. தெளிந்த நீரோடை போலத் தெரியும் அரசியல் ஆற்றின் அடியில் கொடூரங்கள் நிறைந்து கிடக்கும். ஆசைப்படுபவன் மட்டுமே அரசியலுக்கு வருவான். நல்ல எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவே மாட்டார்கள். வரலாற்றினைப் புரட்டிப் பார் தங்கம். அதன் பிறகு அரசியலுக்கு வர முயற்சி செய்.

மக்களுக்குச் சேவை செய்கிறேன் பேர்வழி என பிதற்றி குழம்பி நிற்காமல் தெளிவாய் முடிவெடு. நீ சுகமாக இருக்க உழைக்க உன் எதிரில் இருக்கும் ஆயிரமாயிரம் வழிகளில் அரசியல் வழி ஒன்று. அரசியல் என்றால் அதிகாரம். அதிகாரம் என்றால் கட்டளை. கட்டளை என்றால் அகங்காரம். அகங்காரம் என்றால் அழிவு. இதைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அனுபவித்து பின்னாலே, சேரும் இடம் சேர்கின்றார்கள். உனக்கும் அதுதான் வேண்டுமா? என்பதை நீ யோசித்து முடிவு செய்.

மகேசன் என்றாயே...! கோவில்கள் எல்லாம் இப்போது கோவில்களாகவா இருக்கின்றனவா? அவன் சொன்னான், இவன் சொன்னான், அந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று எவரோ சொல்வதைக் கேட்டுக் கேட்டு, கோடானு கோடியாய் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை நீ அறியவில்லையா தங்கம்?”

தங்கவேல் குழம்பி போய் பீமாவைப் பார்த்தான். பீமா சிரித்துக் கொண்டே விடை பெற்றான்.

* * *

”சந்து, கவனித்தாயா? அரசியலுக்கு ஒரு கேரக்டர் வரப்போகிறது என நினைத்தேன். அதையும் பீமா கேட்டைப் போட்டு பூட்டி விட்டான். இனி தங்கவேல் கதை என்ன ஆகப் போகின்றதோ தெரியவில்லையே?”

“மாயாண்ணே, நம்ம கதாசிரியர் என்ன மவுனியா, ஜானகிராமனா? ரெகுலர் கதை விட. இந்த ஆள் வேற... பார்க்கலாம் அண்ணே... என்னதான் எழுதுகிறார் என்று”

“ஆமாடா சந்து. உனக்கும் இன்னும் எழுதவில்லை. பார்க்கலாம்....!”

* * *

உண்மையான உயரம்
எப்போதும் தாழ்வானது,
உண்மையான வேகம் 
எப்போதும் மெதுவானது,
மிகவும் உணர்ச்சியுள்ளது
மரத்துப் போனது,
பெரிய பேச்சாளன், ஊமை
ஏற்ற  இறக்கம், ஒரே அலையில் தான்,
வழியில்லாதவனே, சரியான வழிகாட்டி,
மிகப் பெரியதென்பது
மிகச் சிறிதானது
எல்லாம் கொடுப்பவனே
எல்லாம் பெறுபவன் 
- The Book of Mirdad





தொடரும்............................

Friday, November 1, 2019

தெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று

நேற்று தூறல் இல்லாத, குளிரடிக்கும் மாலை நேரம். பிள்ளையை அழைத்து வர, பள்ளிக்குச் சென்று வந்த மனையாள் அரக்கப் பரக்க வீட்டுக்குள் ஓடி வந்தார்.

“என்னாங்க... என்னாங்க... அடுத்த தெருவில், அதாங்க தாமரை அக்கா வீட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற ரோட்டில் யாரோ ஒரு மூட்டையைக் கொண்டாந்து போட்டு விட்டுப் போயிட்டாங்க. ஒரே நாத்தம். பிண வாடை அடிக்கிதுங்க”

“அட.... அப்படியா?” இது நானு.

”ஆமாங்க, பெய்லி வாக்கிங்க் போகும் போது அண்ணா பாத்தாராம். உடனே போலீசுக்குப் போன் போட்டுட்டாரு. நம்ம தெரு அண்ணாதிமுக்கா அண்ணனும் வந்துட்டாருங்க, நம்ம ஏரியா பீளமேடு ஸ்டேஷன் கண்ட்ரோலில் வருதாங்க. ரோட்டுக்கு அந்தப் பக்கம் சரவணம்பட்டி போலீஸ் கண்ட்ரோலாம். டவுன் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தாச்சாம்ங்க”

“அட... ஓ... சரிதான், நாத்தமெடுக்கிற மூட்டை.போலீஸ் வந்தாத்தான் சரியா இருக்கும்” - இது நானு.

ஒரே பரபரப்பு அவளுக்கு. மூட்டையில் என்ன இருக்கும்? குழந்தையாக இருக்குமோன்னு பாட்டி சொன்னாங்கன்னு இடையில் அவ்வப்போது ரூமிற்குள் வந்து ரன்னிங்க் கமெண்ட்ரி வேறு கொடுத்தபடி, அடுப்படிக்கும் ரூமிற்குமாய் ஓடிக் கொண்டிருந்தார்.

முளைக்கட்டின தானியங்கள் சூடு ஆறிப் போய் சுண்டலாய் கிண்ணத்தில் இருந்தது. காப்பியைக் காணோம். அதற்குள் மகளுக்கு ஹிந்தி வகுப்புக்கு நேரமாகி விட, சென்று விட்டார்.

எனக்குள் பலப்பல கேள்விகள் உதித்தன.

மூட்டைக்குள் யாராக இருக்கும்? குழந்தையாக இருந்தால், அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் ரேப் பண்ணி இருப்பார்களோ? இல்லை ஏதாவது முன் விரோதப் பகையின் காரணமாக துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கொண்டு வந்து போட்டு விட்டு போயிருப்பானோ? அது ஆணா இல்லை பெண்ணா? இல்லை குழந்தையா?

நாவரசுவைக் கொன்றது மாதிரி இருக்குமா? மூட்டை நாற்றம் அடிக்கிறது என்றாளே, அழுகி இருக்குமோ? அருவாளால் வெட்டி இருப்பானா? இல்லை கத்தியாக இருக்குமா?  ஆசிட் ஊற்றி எரித்திருப்பார்களோ? சதையெல்லாம் பிய்ந்து எலும்பில் ஒட்டிக் கிடக்குமா? புழுக்கள் பிணத்தை தின்று கொண்டிருக்குமா? 

இப்படியான கேள்விகள் எனக்குள் உதிக்க, சுண்டலை சாப்பிட மறந்து போனேன். அதற்குள் மகனை அழைந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவள்,”என்னாங்க... என்னாங்க...!” என்று அழைத்தபடியே அறைக்குள் வந்தாள்.

என்ன என்பது போல ஏறிட்டுப் பார்க்க,

“பாட்டி, மொட்டை மாடி மீது நின்னு பார்க்கலாம் வான்னு கூப்பிட்டாங்களா? இரண்டு பேரும் போய் நின்னோம், போலீஸ்காரரு அங்கன இருந்து உள்ளே போங்கன்னு விரட்டுறாருங்க, வந்துட்டோம்ங்க” என்றாள்.

”அப்படியா? அது என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்?”

“தெரியலிங்க, ஆனா அந்த மூட்டைய போலீஸ்காரங்களே அவிழ்க்கிறாங்களாம்னு பாட்டி சொல்லுச்சு” என்றாள்.

பதிலுக்கு நானும், “ரூடோஸும், மணியும் விடாது குறைத்துக் கொண்டே இருந்தார்கள். பிண வாடையைப் பிடித்திருப்பார்கள் போல” எனச் சொல்லி வைத்தேன்.

ஆள் சமையல் கட்டுக்குள் சென்று விட, இந்த மாத காலச்சுவட்டிற்குள் மனதை நுழைத்துக் கொண்டேன்.

இரவில் எனக்கு சளித் தொந்தரவினால் காது அடைத்துக் கொள்ள, மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். அரை மணி நேரத்தில் மாத்திரைகள் வர, சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.

இரவில் பொன் மாணிக்கவேல் விசாரித்து கொலைகாரனைக் கைது செய்வது போலவும், விவேக் ரூபலா இது பற்றி பேசிக்கொண்டிருப்பது போலவும், பரத் சுசீலா டீம் துப்பறிவது போலவும், இன்ஸ்பெக்டர் துரை ஜீப்பில் செல்வது போலவும் பலப்பல கனவுகள் என்னைத் தூங்க விடாது சில்மிஷங்கள் செய்தன. நரேந்திரன், வைஜெயந்தி ஜோடி பைக்கில் யாரையோ துரத்திக் கொண்டு செல்வது போல பரபரப்பாய் கனவு வந்தது. ராம்தாஸ் இன்னும் பைப்பிற்குள் புகையிலையை திணித்துக் கொண்டிருந்தார். ஜான் யாரையோ உளவு பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்ரேலின் என்.எஸ்.ஓ லோகோ வாட்ஸப்பில் புழு போல நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

பிரதமர் வழக்கம் போல இது பற்றி ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை என எதிர்கட்சிக்காரர்களின் பேட்டிகள் தினசரிகளில் வந்திருந்தன. அவர் இஸ்ரேலில் பிரதமருடன் இஸ்ரேலிய உணவுப் பதார்த்தங்களை ருசித்துக் கொண்டிருக்கும் செய்தியும், இஸ்ரேலில் பிரதமர் கையாலே சாப்பிட்டதாகவும், அதற்கு இஸ்ரேலிய பிரதமரிடம் ’இது நான் மட்டுமே எனக்கே எனக்காக பயன்படுத்தும் ஸ்பூன்’ என வலது கையைக் காட்டிச் சொன்னது கட்டம் கட்டி, இந்தியாவின் பெருமையை நிலை நாட்டினார் என புகழாரம் சூட்டிய செய்தி வெளியாகி இருந்தது. ஜக்கி வாசுதேவ் அவர்கள், இந்தச் செய்தி பற்றி, “இந்துத்துவ பெருமையை பிரதமர் வெளி நாட்டில் நிலை நாட்டி இருக்கிறார்” என கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் நினைவாக ஒற்றைக்கை மட்டும் சிலை வைப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதாகவும், அதற்காக அரசிடம் வெள்ளிங்கிரி மலையையே கைபோல செதுக்கி நம் பாரதப் பிரதமரைக் கவுரவிக்க திட்ட அனுமதிக்கு அனுப்பி இருப்பதாகவும் கூடுதல் செய்தியாகச் சொல்லியிருந்த செய்திகளும் கனவுகளில் ஒன்றன் பின் ஜூமில் வந்து வந்து சென்றன.

தந்தி டிவியில் இது பற்றிய “பிணத்தை மூட்டையில் போடும் அளவு கொலைகார கோவையா?” என்ற விவாதத்தில் சமூக ஆர்வலர் ராமசுப்ரமணியனுக்கும், ஜட்சு பொண்டாட்டி சாரி சாரி கணவருக்கும் சண்டை மூண்டது போலவும் கனா வந்து தூக்கத்தை விடாது கெடுத்தது.

விடி காலையில் விழிப்பு வர எழுந்து கொண்டேன். 

மூட்டைக்குள் யாராக இருந்திருக்கும்?  என்ற கேள்விகள் எழ, மீண்டும் கொலைக்கார கதைகளும், துப்பறியும் ஹீரோக்களும் நினைவிலாட, அருகில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தினசரியைப் பரபரப்புடன் புரட்டினால் இந்தக் கொலை பற்றிய செய்திகள் ஏதுமில்லை. காலை உணவு தயாரிப்பதில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவளிடம், “என்ன, செய்தி ஒன்றையும் காணவில்லையே, உனக்கு ஏதாவது தெரியுமா?” என்றேன்.

“அதாங்க, காலையிலேயே பாட்டி சொல்லிட்டாங்க. அது அழுகிய முட்டைக்கோஸ் மூட்டையாம்” என்றாள் விட்டேத்தியாக.

”ஙொய்யால....!” மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

செவனேன்னு இருந்தவனிடம் வந்து, மூட்டைக்கதை சொல்லி அது கடைசியில் முட்டைக்கோஸ் மூட்டையாக மாறிப்போன அவலத்தை சொல்லிய அவளின் முகத்தைப் பார்த்தால் ஒன்றுமே நடக்காத அப்பாவி போல சமைத்துக் கொண்டிருந்தாள்.

Tuesday, September 24, 2019

நிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்

என்னிடம் ஒருவர் ஒரு சிறிய சைட் ஒன்றிற்காக லீகல் ஒப்பீனியன் கேட்டிருந்தார். தேவைப்படும் ஆவணங்களை குறிப்பிட்டு, அவரிடம் இந்த ஆவணங்களைத் தருமாறு கேட்டேன்.

“சார், இதெல்லாம் எதுக்கு சார்? நீங்கள் இதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள்” என அவரின் வசதிக்காக என்னை வேலை செய்யச் சொன்னார். அதற்கு அடியேன் சரிப்பட்டு வர மாட்டேன் என்பதால், அவரிடம் ஆவணங்களைத் திருப்பிக் கொடுத்து, “உங்கள் விருப்பப்படி, என்னால் வேலை செய்ய இயலாது,  ஆகவே மன்னித்து விடுங்கள்” என்றேன்.

அவருக்கு பிபி அதாவது பிளட் பிரஷ்ஷர் உச்சத்தில் ஏறி விட்டது.

”அப்படி என்ன நீங்கள் லீகல் ஒப்பீனியன் பார்க்கின்றீர்கள்? வில்லங்கம் போடுவீர்கள், 1900லிருந்து ஆர்.எஸ்.ஆர் எடுத்துப் பார்ப்பீர்கள், ஒவ்வொரு பத்திரமாக டேலி பண்ணுவீர்கள், சரியாக இருந்தால் ஓகேன்னு சொல்வீர்கள், இதைத் தவிர வேறு என்ன புதிதாக லீகல் பார்க்கப் போகின்றீர்கள். என் வக்கீல் நண்பர்கள் இதைத்தான் செய்கின்றார்கள்” என்று கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.

சரி, இது வேற ஆள், இவருக்குப் புரிகின்ற மாதிரி சொல்லி ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டு, அவரை உட்காரச் சொன்னேன்.

மெதுவாக ஆரம்பித்தேன்.

”ஏரியல் வியூப்படி அரசு சாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ அல்லது அரசின் நிலங்களுக்கோ கையகப்படுத்தும் நிலையில் உள்ள நிலங்களின் அருகில் உங்களது நிலம் வருகிறதா என முதல் லீகல் ஆரம்பிப்பேன்” என்றேன்.

”என்ன? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது, இதையெல்லாம் ஏன் பார்க்கின்றீர்கள்?” என அடுத்த கேள்வி.

”இந்த நிலத்தை ஏன் வாங்குகின்றீர்கள்? வீடு கட்டணும் அல்லவா? அவ்வாறு வீடு கட்ட வேண்டுமெனில், உமது நிலம் இந்த விதிகளின் படி பாதிக்கப்படாமல் இருந்தால் தான் அனுமதி கிடைக்கும் என அரசு விதி இருக்கிறது” என்றேன்.

சட்டென்று உட்கார்ந்து விட்டார்.

”கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றீர்கள். ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு ஏன் வாங்குகிறோம், என்ன பயன்பாட்டுக்கு வாங்குகிறோம் என முடிவெடுப்பீர்கள். தமிழக அரசும், மத்திய அரசும் குறிப்பிட்டிருக்கும் பல விதிகளின் படி நிலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. சொத்தின் உரிமையை மட்டும் சரி பார்த்தல், லீகல் ஒப்பீனியன் ஆகாது. அரசு விதிகளுக்கு உட்படாமல் அதாவது பாதிக்கப்படாமல் அந்த நிலம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் எனது வேலை” என்று விவரித்தேன்.

அமைதியானார் அவர்.

இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எனத் தொடர்ந்தேன்.

“நீதிமன்றத்தில் வாதியால் சிவில் வழக்கொன்று தொடுக்கப்படுகிறது. பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடும். பிரதிவாதி என்பவருக்கு இன்னொரு பெயர் எதிரி. பிரதிவாதிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர் தனக்காக வாதாட வக்கீல் வைக்க வேண்டும். என்ன வழக்கு எனத் தெரிந்து அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து, தன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என சட்டத்துக்கு உட்பட்டு வக்கீல் மூலம் வாதாட வேண்டும். ஆவண சாட்சியங்களை அளித்தல் வேண்டும். நீதிபதி வாதி, பிரதிவாதிகளின் வக்கீல்கள் மூலம் பெறப்படும் ஆவணங்கள், சட்ட மேற்கோள்கள், முன் தீர்ப்புகள், வாதி/பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் இவற்றை எல்லாம் ஆராய்ந்து சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு அளிப்பார். இது நடைமுறை.”

”ஆனால் ஒரு சில அறிவாளி வக்கீல்கள் என்ன செய்வார்கள் என்றால், பிரதிவாதிக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதத்தை ஆள் செட்டப் செய்து வாங்கிக் கொள்வார்கள்.  பிரதிவாதிக்கு தன் சொத்தின் மீது வழக்கு இருப்பதே தெரியாமல் போய் விடும். கோர்ட் மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்தையும் பிரதிவாதிக்கு கிடைக்க விடாமல் செய்வார்கள். இன்னும் ஒரு சிலர் பிரதிவாதியின் முகவரியை தவறாக கொடுத்து விடுவார்கள்.”

”எந்த தபால்காரர் ஒழுங்காக தபாலைக் கொடுக்கிறார் இந்தக் காலத்தில். எனக்கு வர வேண்டிய புத்தகங்களைக் கூட, அவர் வசதிக்குத்தான் கொண்டு வந்து தருகின்றார். அந்த இலட்சணத்தில் தபால் அலுவலகம் இயங்குகிறது.”

”இப்படி பிரதிவாதியால் ஆஜராகாமல் இருக்கும் வழக்குகள் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு என ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். இந்த வகையில் வழங்கப்படும் எக்ஸ் பார்ட்டி தீர்ப்புகளை மீண்டும் அந்த பிரதிவாதி வழக்காக மாற்றலாம். அதற்கு இத்தனை நாட்கள் என கோர்ட் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்புகளின் படி உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்துக்களை வாங்கலாமா?” என்று அவரிடம் கேட்டேன்.

அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.

”இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கின்றீர்கள்” என்று வினவினார்.

”நான் என் தொழிலை நேசிக்கிறேன்”

அவர் ஒன்றும் சொல்லவில்லை, நீங்கள் கேட்ட ஆவணங்களையும், உங்களது கட்டணத்தையும் இரண்டொரு நாளில் கொண்டு வந்து தருகிறேன் என்றுச் சொல்லி விட்டுச் சென்றார்.

அந்த இடத்திற்கான லீகல் பார்த்து, டிராப்ட் எழுதி, கிரையம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு அவர் ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. உண்மை தெரியாமல் இருப்பதன் விளைவு அவரின் கோபம், அதனால் அவரிடம் தப்பில்லை என்று அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டபோது, அவரின் கோபத்தை நியாயப்படுத்தினேன். கண்கள் கலங்கி விட்டது அவருக்கு. ஆனால் அதுதானே உண்மை?

ஒரு காரியம் செய்யப் போகும் முன்பு அதற்கான திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு துறைக்கான ஆவணங்கள் அனைத்தும் தேடித் தேடி கண்டுபிடித்து, வாங்கி வைத்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள நிலங்களில் 90 சதவீதம் விபரம் என்னிடம் இருக்கிறது. 10 வருட காலமாய் உழைத்ததன் பலன் அது. லீகல் பார்க்க என்னெவெல்லாம் தேவை என்பதையும், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகளின் தீர்ப்புகளையும், தமிழக அரசு, இந்திய அரசுகள் வழங்கும் குறிப்பாணைகள், கெஜட்டுகள் எல்லாவற்றையும் படிக்கிறேன், குறிப்புகள் எடுக்கிறேன், தேவையானவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறேன். அதன் மூலம் ஒவ்வொரு நிலத்தின் தன்மை, அனுமதிக்கான விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றனவா என்றெல்லாம் ஆராய முடிகிறது. ஆனாலும் எனக்கே அவ்வப்போது அல்வா கொடுக்கும் ஒரு சில நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

ஒரு தனி மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால் அதை என்னளவில் சாத்தியப்படுத்தினேன். ஒரே ஒரு நிலமோ வீடோ வாங்குபவர்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை எனலாம். இது கலிகாலம் அல்லவா? யார் என்ன செய்து வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும்? எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பதே பெரிய வேலை.

உங்களிடம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தமிழக அரசு அனுமதி பெறாத மனை இடங்களை அனுமதி பெற வரையறைகளை செய்து பணம் கட்டச் சொல்கிறது அல்லவா? இதே போல கோவையில் ஒரு வரையறை நடந்து, சுப்ரீம் கோர்ட்டில் அந்த வரையறைச் செல்லாது என தீர்ப்பு பெறப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட சுமார் 400 கோடி ரூபாய் சும்மா கிடக்கிறது. பணம் கட்டியவர்களுக்கு அந்தப் பணம் இதுவரை திரும்பக் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் வீடுகள், இடங்கள் கிரையங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவரின் தேவை அல்லது ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

ஒரு விதியை மீற ஒரு வரையறை என்பதெல்லாம் சட்ட விரோதமானது. அரசு இந்த விஷயத்தில் கொள்கை முடிவெல்லாம் எடுக்க முடியாது. சட்ட விதிகளை மேம்படுத்தலாம், கொஞ்சம் எளிதாக்கலாம். ஆனால் அதை நீக்க முடியாது.

காஷ்மீர் 370 அப்படியே. சரியான வக்கீலிடம் இந்த வழக்குச் சென்றால், பிஜேபி அரசின் மூக்கு உடைக்கப்படும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பு அப்படி. பெரும்பான்மை பெற்றிருப்பதால் ஒரு காரியத்தைச் செய்து விடலாம் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை அடிமுட்டாள்தனம். வாழ்நாள் வரையிலும் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்க முடியாது. வரும் காலத்தில் வரக்கூடியவர் வெச்சு செய்வார்கள்.

ராஜீவ் காந்தி காலத்தில் உள்துறை அமைச்சகத்தில் இருந்தவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். அன்றைக்கே ஆரம்பித்தார் அவர் தன் திருவிளையாடல்களை என என்னிடம் ஒரு முக்கியமான நபர் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

விதி ஆட விட்டு, என்றைக்கு முடியாத நிலையில் இருக்கின்றார்களோ, அன்றைக்குப் பார்த்து, கயிற்றை இருக்கி முடிச்சுப் போட்டு விட்டது. இனி விதி போட்ட முடிச்சை தில்லை வாழ் நாயகனால் கூட அவிழ்க்க முடியாது. கொஞ்சமாவது மக்கள் பணத்தை விழுங்குகிறோம் என்ற நினைப்பு இருந்திருக்க வேண்டும். எவருக்கு இருக்கிறது இங்கே?

நாம் அனைவரும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு ஆளைச் சந்தித்திருப்போம். அவர் பெயர் பொதுவாக துரோகி என அழைக்கப்படும். அவரை நம் வாழ் நாள் வரையிலும் மறக்க முடியுமா? நெஞ்சில் குத்தாமல், முதுகில் குத்தியிருப்பார் அந்த துரோகி. அப்படியானவர்களை நாம் முதலில் மன்னிப்போமா? ஆனால் இப்போது என்ன செய்கிறோம்? என்ன செய்ய முடியும்?

ஒழுங்கீனம் இப்போது ஒரு தகுதியாக மாறிப் போனது. எல்லாம் மனித வாழ்க்கையில் சாத்தியம் தான். ஆனால் எது ஒன்று காலை, மாலை, பிறப்பு, இறப்பு என மனிதனையும், அவன் சூழலையும் இயக்குகிறதோ அதன் வாசலில் நிற்கும் போது ஒவ்வொருவரின் கணக்கும் சரி செய்யப்படுகிறது என்பது நிதர்சனம்.

ஆடும் வரை ஆடி விடுவோம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது அறிவிலித்தனம். எதுவும் முடியாமல் ஓய்வாக இருக்கும் போது, கண் முன்னால் ஒவ்வொன்றும் அழிக்கப்படும் அவலத்தைக் கண்டு துடித்து துடித்துச் செத்துப் போக விரும்புவர்கள் ஆடுவார்கள். அது அவரவர் வசதிக்கு உட்பட்டது.

வாழ்க வளமுடன்...!



அடியேன் செய்யும் வேலைகளில் ஒரு சில உங்களுக்காக. தேவைப்படுபவர்கள் அணுகலாம். 

Tuesday, September 10, 2019

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா?

இந்த மாத பிசினஸ் டுடேயை வாசித்த போது, நம் பாரதத்தின் மொத்தக் கடன் தொகை (மாநிலத்தையும் சேர்த்து) ஒரு லட்சத்து முப்பத்து ஓராயிரம் லட்சம் கோடி கடன் என்ற செய்தியைப் படித்தேன். 130 கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் கோடி கடன் இருக்கிறது. இத்தனைக் கடனும் ஏன் உண்டானது என்று பார்த்தால் தெளிவற்ற நிர்வாகமும், ஆட்சி முறையும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. 




என்ன நடந்தது? ஏன் இத்தனை கடன் என்பதற்கு ஒரே பதில் ஊழல். ஆம், இத்தனை தொகையும் ஊழலால் இந்தியாவிற்கு ஏற்பட்ட கடன். மக்களுக்கு இந்த சித்து விளையாட்டு புரிவதில்லை. புரியும் அளவிற்கு மீடியாக்கள் விடுவதில்லை. எவன் ஒருவன் டிவியும், செய்தி தாளும் படித்து, அதன் உண்மை என்னவென்று ஆராய்கிறானோ அவன் தான் புத்திசாலி. மீடியாக்களில் வரும் செய்திகள் உண்மையென நம்பினவன் முட்டாள். அந்தக் காலத்தில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. அவ்வப்போது அய்யோ குய்யோ என ஜன நாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது என்று கூக்குரலிடுவார்கள் பத்திரிக்கையாளர்கள். அதெல்லாம் சும்மா....!

நீதியின் பெயரால் உயர் மட்ட அளவில் நடக்கும் அக்கிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. நீதிபதிபதிகளை விமர்சிக்க கூடாது என்றும், அது தேச துரோகம் என்றும், அவமதிப்பு வழக்கு என்றும் மக்களைப் பயமுறுத்துவார்கள். பேட்டி கொடுத்த நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீது எந்தச் சட்டத்தில் இந்த நீதித்துறை நடவடிக்கை எடுத்தது என்று எவராவது யோசித்திருக்கின்றீர்களா? யோசித்திருக்கமாட்டீர்கள். ஏனென்றால் உங்களின் சிந்தனையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்ற பயம் திணிக்கப்பட்டிருக்கிறது.

சரி விடுங்கள் எரிச்சல் தான் மேலோங்கும். இங்கு எவனும் நல்லவனில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெளிவு பெற வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தன்னாட்சி பெற்ற உயர் நிர்வாகத்துறையின், உயர் அதிகாரி ஒருவரால் பாராட்டப்பட்டேன். அவர் எனது பிளாக்கைப் படிக்கிறார் என்கிற சிறு நேரத்து மகிழ்ச்சி உண்டானது.

“அய்யா, உங்களுக்கு எனது அனேக நன்றிகள்”

ஏதோ ஒரு வகையில் சிறு உதவியைச் செய்கிறேன் இந்த உலகிற்கு என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூடுமந்திரம் போடப்பட்டிருக்கும் நம்மைச் சுற்றிய மாயையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி விட முயல்கிறேன். பட்டவர்த்தமாக எழுதினால் பலரின் மனசாட்சி விழித்துக் கொள்ளும். ஆகையால் புரிந்தும் புரியாதவாறு எழுதுகிறேன். புரிந்தவர்கள் தெளிவாகுங்கள். புரியாதவர்கள் இன்னும் ஆழப் படியுங்கள்.

சரி, ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் ஒரு லட்சம் கோடி கடனை கட்ட வழி இருக்கிறதா என்று அறிந்து கொள்ள இங்கு தொடர்கின்றீர்கள். தொடருங்கள்.

எனது மனையிவியின் தூரத்து உறவினர் ஒருவர், தமிழகத்தின் பிரபலமான கட்சியில் பதவி வகித்தவரும், எம்.பியும் ஆன ஒருவருக்கு கடன் அதுவும் பெரிய அளவில் கடன் கொடுத்தார். உறவினர் தனது அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து வட்டிக்கு வாங்கி, கொஞ்சமே கொஞ்சம் வட்டி உயர்த்தி அந்த அரசியல்வாதிக்கு கொடுத்தார். கொஞ்ச நாட்களில் அந்த அரசியல்வாதியால் கடனையும், வட்டியையும் கொடுக்க முடியவில்லை. உறவினர் தற்கொலை செய்து கொண்டார். வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களின் கதி?

வங்கியும் இதே போலத்தான். வட்டிக்கு வாங்கியவர்கள் ஒழுங்காக கடனைக் கட்டவில்லை என்றால் என்ன ஆகும்? டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு எங்கிருந்து வட்டியைக் கொடுக்கும்? திவால் அல்ல வங்கியும் தற்கொலை செய்து கொள்ளும். அப்படித்தான் எனது பிரியமான விஜயா வங்கியும் தற்கொலை செய்து கொண்டது.

கலைஞர், ஒவ்வொரு வீட்டிற்கும் டிவி கொடுத்தார். அந்த டிவியால் சன் டிவி பயன் அடைந்தது. டிவியை டெண்டர் விட்டு வாங்கினார் அல்லவா? அந்த டிவியால் பொருளாதாரம் உயர்ந்ததா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மக்களின் பொருள் இன்னொருவரின் பாக்கெட்டில் சென்று சேர்ந்தது. டிவி வாங்கிய வகையில் பர்செண்டேஜ், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கும். இதனால் சமூகத்திற்கு என்ன பயன்? ஒரு எழவும் இல்லை. மிக்சி, கிரைண்டரின் கதையும் இதேதான். இலவச பைக்கிற்கும் இதே கதைதான்.

எனது இனிய நண்பர்களே, கடனைக் கட்ட வழி என்னவென்று உங்களுக்கு தெளிவாகி விட்டதா? தெளிவாகவில்லை எனில் நானொன்றும் செய்ய முடியாது.

இதுவரை பிஜேபி அரசு பொருளாதாரத்தின் ஆணி வேர் எதுவென்று கண்டுபிடிக்கவில்லை. அது முதலில் உயர் ஜாதிய சிந்தனையிலிருந்தும், மதக் கோட்பாடுகளிலிருந்தும் வெளி வர வேண்டும். தற்போதையைப் பொருளாதாரம், தத்துவங்கள் எதுவும் நாட்டின் வளர்ச்சிக்கானதல்ல என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றதோ தெரியவில்லை. ஒரு சாதாரண விவசாயிக்குத் தெரிந்த பொருளாதாரக் கோட்பாடு, பொருளாதார மேதைகளுக்குத் தெரியவில்லை என்கிற விடயம், நாட்டை வழி நடத்துபவர்களின் அறிவின் மீது சந்தேகத்தினை உண்டாக்குகிறது.

கிராமப்புறங்களில் ஒருவன் கடனாளியாகி விட்டால், அப்பன் சொத்து, தாத்தா சொத்து எங்கிருக்கிறது என்று தேடித் திரிந்து கண்டுபிடிப்பான். அதனால் கடன் தீருமா என்றால் தீராது. அதைப் போலத்தான் ஊழலைக் கண்டுபிடிக்கிறேன், பதுக்கிய பணத்தைக் கொண்டு வருகிறேன் என அமலாக்கத்துறையினரையும், சிபிஐயும் வைத்து பழம் சொத்தினைத் தேடித் திரிகிறது பிஜேபி அரசு. செமக் காமடி.

பொருளாதார மேதைகளே, 131 லட்சம் கோடியையும் வரக்கூடிய பத்தாண்டுகளில் கட்டி விடலாம். நிச்சயம் முடியும். கடனற்ற பாரதத்தினைக் கட்டமைத்து, மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கலாம். கொஞ்சம் உங்களின் பொருளாதார தத்துவங்களை ஆராயுங்கள். எங்கே நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்று.


Wednesday, August 21, 2019

நிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்

மனிதன் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் காலம் எல்லாம் போயே போய் விட்டது. வார்த்தை சொல்லி விட்டேன் - ஆண்மைத் தனம் இப்போது எங்கும் காணப்படுவதில்லை.

ஆறு மணி நேரம் வரிசையில் நின்று, அத்திவரதரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பும் முன்பு வீட்டுக்குள் பணம் வந்து விட வேண்டுமென நினைக்கிறார்கள். திருப்பதி கோவிலுக்குள் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஆலந்துறைப் பக்கம் பாட்டி ஒருத்தி இட்லி விற்கிறார். கூட்டம் இன்றும் குறையவில்லை. ஒரு பக்கம் இரண்டு இட்லிக்கு 250 ரூபாய் கொடுத்து சாப்பிடும் கூட்டம். பாதி விள்ளலில் எழுந்து நாசூக்காய் கை துடைத்துக் கொள்ளும் அக்கிரமக்காரர்கள் அலட்டலாய் திரிகின்றார்கள்.

இரண்டொரு நாட்களுக்கு முன்பு வயதான ஒருவர் என்னைச் சந்தித்தார். ’எனக்கொரு பிரச்சினை, சரி செய்து தர இயலுமா?’ என்று கேட்டார். 

”பிரச்சினை என்னவென்று சொல்லுங்கள், இயலுமா? எனச் சொல்கிறேன்”

நண்பர்களே, கவனக்குறைவு என்று சொல்ல மாட்டேன். ஏமாற்ற வேண்டும் என நினைத்து விட்டால் எப்படியும் ஏமாற்றி விடலாம் என்றுதான் திட்டமிடுகின்றார்கள். அரசியல்வாதிகளும் சரி, சட்டக்காவலர்களும் சரி எவருக்கும் கொஞ்சம் கூட மனச்சாட்சி என்பதே கிடையாது. எவன் செத்தால் எனக்கென்ன, என் வீட்டு உலை கொதிக்கிறதா? என நினைக்கிறார்கள். அப்படி ஒரு அழிச்சாட்டியத்தைச் செய்திருக்கிறார் அந்த புரமோட்டர் ஒரு சில அயோக்கியர்களுடன் கூட்டு சேர்ந்து. ரத்தம் கொதிக்கிறது நினைத்து நினைத்து.

கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் டிடிசிபி அப்ரூவ்ட் சைட் விற்பனை ஆனது பல வருடங்களுக்கு முன்பு. பல அரசுத் தொடர்புடையவர்களுக்கு பல கட்ட அனுமதிகள் பெற்று அந்த வீட்டு மனையினை, மாதத்தவணை முறையில் வாங்கி இருக்கின்றார்கள். வீடும் கட்டி விட்டார்கள்.

டிடிசிபி அனுமதியை சென்னையில் பெற்று இருக்கிறார் அந்த புரமோட்டர். அந்த அனுமதியை பஞ்சாயத்தில் அப்ரூவ்ட் பெறும் போது மனை வரைபடத்தை மாற்றி அனுமதி பெற்று, வீட்டு மனைகளின் எண்கள் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கிறார். பொது இடத்திற்கு என ஒதுக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடத்தையும் வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்து விட்டார். எந்தப் பத்திரத்திலும் மனையின் அளவீடுகள் குறிப்பிடவில்லை. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  இந்த இடத்தில் மனை வாங்கியவர்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை. சட்டம் தெரிந்தவர்கள், பெரிய மனிதர்கள். இனி என்ன, எவராவது கோர்ட்டுக்குச் சென்றால் மனை அனுமதி ரத்தாகிப் போகும். சரி செய்ய அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால், எனக்கு மிகவும் நெருங்கிய குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர்  அந்த இடத்தில் மனை வாங்க இருப்பதாகத் தெரிவித்து, பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். 32 வகையான ஆவணங்கள் தேவையென லிஸ்ட் போட்டுக் கொடுத்தேன். ஆள் அவ்வளவுதான். கிரையம் பெற்று விட்டார். அவ்வளவு அவசரம் அவருக்கு. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். வீடோ அல்லது மனையோ பிடித்து விட்டால், அவர்களே தங்களுக்குள் சமாதானம் செய்து கொள்வார்கள். எல்லோரும் வாங்கி இருக்கின்றார்கள், நாமும் வாங்கி விடலாம் என்று சமாதானமாகி விடுகின்றார்கள். பின்னர் அலையோ அலையென அலைந்து கொண்டிருப்பார்கள்.

இப்போது மனை அப்ரூவல் ரத்தாகுமா? இல்லையா? எனத் தெரியவில்லை. போராடிக் கொண்டிருக்கிறார்கள் வீட்டு மனை வாங்கியவர்களில் சிலர். புரமோட்டர் என்ன ஆனாரோ தெரியவில்லை. 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் யானை ராஜேந்திரன் அவர்களின் வழக்கின் மீது என்ஃபோர்ஜ்மெண்ட் தீர்ப்பு ஒன்றினை ஹைகோர்ட் வழங்கியது. முறைப்படி அனுமதி பெற்று கட்டப்படாத கட்டிடங்களை எவரின் அனுமதியும் இன்றி இடித்து தள்ளுங்கள் என்கிறது கோர்ட். மனைப்பிரிவும் அப்படி ஆனால் என்ன ஆகும்? 

அந்த புரமோட்டரின் ஆசையால், அக்கிரமத்தால் அந்த வீட்டு மனைகள் போலியாக பிளான் தயாரிக்கப்பட்டு, ஏமாளிகளுக்கு விற்று விட்டார். பாவம் அவர்கள் அலைகின்றார்கள். இன்னும் பட்டா வாங்க முடியவில்லை. மனைப்பிரிவினை ஒழுங்குப்படுத்தி சரி செய்ய வேண்டும். அதற்கான பணிகள் பலப்பல இருக்கின்றன. எப்படிச் செய்ய வேண்டுமெனச் சொல்லி அப்பெரியவரை அனுப்பி வைத்தேன்.

ஆகையால் நண்பர்களே, டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை வாங்கும் போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். என்னைப் போன்ற ஆலோசகர்களிடம் தகுந்த முறையில் ஆவணங்களை சரிபார்த்துக் கிரையம் பெறுங்கள்.

அப்பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் போனில் அழைத்தார்.

“தம்பி, ஒரு அபார்ட்மெண்ட் கிரையம் செய்ய வேண்டும், என்ன சார்ஜ் செய்கிறீர்கள்” என்றார்.

“முதலில், அபார்ட்மெண்ட் அனுமதி சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து விட்டுத்தான், பத்திரம் பதிவு செய்வேன், ஆகவே அனைத்து ஆவணங்களையும் கொண்டு வாருங்கள்” என்றேன்.

அவர் டென்சாகி விட்டார். ”பத்திரம் மட்டும் போட்டுத்தாங்க” என்றார்.

“முடியாது” என மறுத்து விட்டேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், போனில், ”தம்பி, நீங்க பெரிய ஆளா வருவீங்க, வாழ்த்துகிறேன்” என்றார்.
* * *

Saturday, August 17, 2019

பிரதமர் நரேந்திரமோடியின் நம்பர் ஒன் விசிறி

பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் நானும் சுவாமி ஆத்மானந்தாவும் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வியல் அனுபவங்கள், அவர் படித்த புத்தகங்களில் சிலாகிக்கும் இடங்கள் என என்னிடம் பகிர்ந்து கொள்வார். கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரின் இளமை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அவரது தாய்மாமா கொடுத்த அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய ‘எண்ணமே வாழ்வு’ என்ற புத்தகத்தை இரவு முழுவதும் உட்கார்ந்து படித்தாராம். அன்றைக்கு முடிவு செய்தாராம், நானும் விவேகானந்தர் போல சன்னியாசம் ஏற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என. இப்போது அவர் இரண்டு கல்லூரிகளின் தாளாளர், எண்ணற்ற ஆதரற்றவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 86 வயது இளைஞராக, இன்னும் ஆற்றக்கூடிய பணிகள் இவைகள் என என்னிடம் பட்டியல் இட்டுக் கொண்டிருந்தார் சமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்ற போது. அவரின் மனவலிமைக்கு ஈடு இணை இல்லை.

வாழ்க்கையானது எல்லோருக்கும் சுகத்தை வழங்குவதில்லை. எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே தந்து கொண்டிருப்பதில்லை. அதன் தன்மை பூமியைப் போன்றது. இரவு, பகல் போல இன்பம் துன்பம் கலந்தது. அதைப் புரிந்து கொள்ள இயலாமல் துன்பம் தீர பல்வேறு வழிகளை நாடுவது மனித மனிதத்தின் இயலாமை எனும் மனம்.

பியருடன் நம் பாரதத்தின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புரோகிராமைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாதாரண வாழ்க்கைச் சூழல், டீ விற்கும் நிலையில் பிறந்த அவர் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதி. அவரின் இன்றைய நிலைக்கு காரணம் கடவுள், விதி என ஆன்மீகவாதிகள் சொல்வார்கள். 

கடவுளிடம் செல்லும் பக்தனுக்கு தெரியும், அவர் அவனுடன் பேச மாட்டான் என்பது. அவன் தன் மனதுக்குள் கடவுளுடன் பேசிக் கொள்வதாக நினைத்து, தன் தேவைக்கான எண்ணத்தின் வலிமையை கூட்டிக் கொள்கிறான். கடவுள் தன் வேண்டுகோளை நடத்தி வைப்பார் என்று நம்புகிறான். அவனின் அந்த நம்பிக்கையின் வலிமைதான் அவனது வேண்டுகோள் நிறைவேற காரணமாக இருக்கிறது. கடவுள் பக்தனுடன் பேசுவதாக இருந்தால், ஒருவர் கூட கோவிலுக்கோ, மசூதிக்கோ, சர்ச்சுக்கோ செல்லமாட்டார்கள். அவர் கடவுளே அல்ல என்றுச் சொல்வார்கள். 

ஜாதகத்தில் விதி என்று சொல்வார்கள். பிரபல திரைப்பட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் யூடியூப் பேட்டி ஒன்றினைப் பார்த்தேன். அவரின் இளவயதில் 'அஸ்ட்ராலஜி அண்ட் அதிர்ஷ்டா’ எனும் ஜோதிடப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாகவும், அதில் யாரோ ஒருவர் தன் திருமணம் பற்றிக் கேட்ட கேள்விக்கு, இத்தனையாவது நாளில், உனது திருமணம் நடக்கும் என எழுதி இருந்ததாகவும், அச்சில் இருக்கிறதே, இவ்வளவு சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா? என்று நினைத்துக் கொண்டு, அந்த புத்தகத்தின் ஆசிரியரைப் பார்க்கச் சென்றதாகவும், அந்த பத்திரிக்கையின் ஆசிரியர், நீ நடிகனாகத்தான் வருவாய் என்று சொன்னதாகவும், அதன்படியே அவர் நடிகன் ஆனதாகவும், அதன் பிறகு அவரிடமே ஜோதிடம் கற்றுக் கொண்டதாகவும் சொல்லி இருந்தார். 

மூர்த்தி அவர்களுக்குப் போன் செய்தேன். அவர் தற்போது ஜோசியம் பார்ப்பது இல்லை எனவும், தன் பையன் வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று சொல்லி இருப்பதாகவும் சொன்னார். நேரில் சந்திக்கலாமா எனக் கேட்டேன். சென்னை வரும் போது, வாருங்கள் சந்திக்கலாம் என்றுச் சொன்னார். அவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக போன் செய்யவில்லை. ஜோதிடத்தின் சாத்தியக்கூறுகள் என்ன என்பது பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல். 

பாவம் சரவணபவன் அண்ணாச்சி. யாரோ ஒரு அயோக்கிய ஜோதிடனால் அவரின் வாழ்க்கையே போனது.  மிகத் துல்லியமான ஜோதிடம் சொல்ல இந்த உலகில் எவருமில்லை என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

கடவுளோ, விதியோ ஒருவனுக்கு உதவி செய்வதில்லை. அவன் தனக்குத்தானே உதவிக் கொள்ள, தன் மனத்தின் வலிமையை அதிகப்படுத்திக் கொள்ள ஜாதகமும், விதியும், கடவுளும் உதவுகின்றன. கடவுளால் கைவிடப்பட்டாலும் முயற்சி நிச்சயம் பலன் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

பிரதமர் மோடி அவர்கள் இத்தனை உயரத்தில் இருக்கிறார் என்பது சாதாரணமல்ல. அவருக்கு நான்கு மூளைகளும், ஐந்தாறு கைகளும், நான்கு தலைகளும் இல்லை. அவரும் நம்மைப் போல சாதாரண மனிதர் தான். பூமிபந்தின் ஒரே ஆனந்த பூமியான இந்தியாவின் முதல் மனிதராக இருக்கிறார். அவர் சார்ந்திருக்கும் கட்சி, கட்சியின் கொள்கைகள் பற்றி நான் இங்கு எழுத வரவில்லை. அதையும் தாண்டி இது வேறு. அவரின் இந்த உயரத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராய முயல்கிறேன். இது ஜோதிடமும் இல்லை.

பியரிடம், ’நான் ஒரு பணியை வெற்றிக்காகவே செய்கிறேன்’ என்றார் பிரதமர். ’தோல்வி அடைவதைப் பற்றி சிந்திப்பது இல்லை. வேறு வழிகளை ஆராய்வேன்’ என்கிறார்.

என்ன ஒரு வலிமை கொண்ட மனம் அவரது? பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் கொண்ட மனத்தின் வலிமைக்கு ஈடாக ஒன்றையும் சுட்டிக்காட்ட இயலாது. அவரின் அந்த மனம் - அவருக்கானவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. காலம் அவரின் வலிமையான மனத்தின் காலடியில் தன்னைச் சேர்த்து விட்டது. இந்தியாவே அவரின் அந்த வலிமையான எண்ணத்தின் பால் ஈர்க்கப்பட்டு உள்ளது. அவரின் அந்த எண்ணத்தின் வலிமையை நினைத்தால் எனக்கு சொல்லொண்ணா இன்பம் உண்டானது. எவ்வளவு வலிமை அவரிடம். தகர்த்தெறிய முடியா கோட்டையை விட அவரின் அந்த எண்ணம் வலிவானது அல்லவா நண்பர்களே!

நரேந்திரர் என்ற விவேகானந்தர், என்னிடம் 100 இளைஞர்களைக் கொடுங்கள், உலகையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் அல்லவா?  அவரின் ஒவ்வொரு பேச்சும் எவ்வளவு வலிமையைக் கொடுப்பவை? படித்திருக்கின்றீர்களா நீங்கள் விவேகானந்தரின் பேச்சை? அவரின் புத்தகங்களை? கீழே உள்ள இந்த வாக்கியத்தின் வலிமைக்கு ஈடு எது? அதைப் போலத்தான் பிரதமரும் பியரிடம் சொன்னார். 

பிரதமர் அவ்வளவு எளிதில் இந்த நிலைக்கு வரவில்லை. ஆனாலும் வந்து விட்டார். அது எங்கணம்? அவரை மட்டும் ஏன் முதலமைச்சராக, பிரதமராக பிஜேபி தேர்ந்தெடுத்தது? கரை கண்ட பல அரசியல்வாதிகள் இருக்கும் அந்தக் கட்சியில், நரேந்திரருக்கு மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது ஏன்? அவரின் எண்ணத்தின் வலிமை, கட்சியின் தலைவர்களின் எண்ணங்களுக்குள் ஊடுறுவி அல்லவா, அவர் தான் வேண்டும் எனச் சொல்ல வைத்தது. இல்லையென்று எவராலும் மறுக்க முடியாது நண்பர்களே...!

நாம் பெறும் ஒவ்வொன்றும் நாம் அதைப் பற்றி நினைக்காமலா கிடைத்திருக்கிறது? இல்லை அல்லவா?

மடக்கிய கை பெரிது அளவுள்ள அந்த இதயத்துக்குள் உதித்த எண்ணமல்லவா அவரை இந்த நிலைமைக்கு உயர்த்தியது. பாலைவனத்துச் சிங்கம் எனது மனம் கவர்ந்த உமர் முக்தாரின் நடை போல, கிரிலுடன் நடந்தார் அவர். 

பிரதமருடன் பேசும் போது கிரிலின் முகத்தில் அவ்வப்போது எழுந்த பயம் எனக்குள் கிளர்ச்சி ஊட்டியது. அவர் மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தலைவர் என்கிற எண்ணம் பியரின் பேச்சில் அவ்வப்போது வெளிப்பட்டது. அவரின் முகம் சாந்தமாக இருந்தது. அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் மக்களின் நலனை, சமுதாய நலனை, நாட்டின் நலனை பிரதிபலித்தது. தோல்வியைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றி பெற வேறு வழிகளை ஆராய்வேன் என்கிறார் அவர்.

வெற்றி அதை ஒன்றினைத் தவிர வேறொன்றினையும் அவர் கடுகளவும் நினைத்துப் பார்ப்பதில்லை என்கிறார். அவரிடம் இந்தியா என்ன? உலகே மண்டியிட்டு நிற்கும். அவர் கொண்ட எண்ணமே அவர் இப்போது இந்தியாவின் பிரதமராக இருக்க காரணம் அல்லவா?
அன்பு நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கிறார் இப்படி. நாமும் முயன்றால் தான் என்ன? கடிகாரத்தில் ஓடிக் கொண்டிருப்பது நொடி முள் அல்ல, நம் வாழ்க்கை என்கிறார் விவேகானந்தர். ஒரு மனிதரால் சாதிக்க முடியுமென்றால், அதை இன்னொரு மனிதனாலும் சாதிக்க இயலும் தானே? தோல்வி என்ற எண்ணத்தை நினைவில் இருந்து அகற்றுவோம். வெற்றி ஒன்றினைத் தவிர நமக்கு வேண்டியது வேறொன்றும் இல்லை. செய்யும் செயலில் பாதை தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.

அவர் நலமுடன் இருந்து இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் நன்மை செய்வார், பசியில் செத்துப் போவோர் இல்லாமல் செய்வார், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இல்லாமல் தன்னம்பிக்கை மிளிரும் விவசாயிகள் உருவாக நாட்டைத் திறம்பட வழி நடத்துவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். 

அவரின் வலிமை கொண்ட எண்ணம் அவருக்கு எல்லாமும் வழங்கியது போல சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக, நாட்டின் உயர்வுக்காக, மனிதர்களின் மேன்மைக்காக  நாமும் வலிமையான எண்ணங்களை எண்ணலாம். 

எண்ணமே வாழ்வு

* * *

Friday, August 2, 2019

நரலீலைகள் - நாய் காதல் (5)


உங்களுக்கு நரலீலைகளின் 3 மற்றும் 4 வது பகுதிகள் ஏதாவது புரிந்ததா? ஏதோ காதல் பித்து ஏற்பட்டு இந்த நாவல் ஆசிரியன் எழுதி இருக்கிறான் என நினைத்திருப்பீர்கள். ஆமாம் நீங்கள் நல்லவர்கள். அப்படித்தான் நினைப்பீர்கள். ஆனால் இந்த நாவலாசிரியன் இருக்கின்றானே அவனுக்குள் குறுக்கு வெட்டு பகுதி ஒன்று உண்டு.

இந்த அஸாஸில் யார் தெரியுமா? திருக்குர் ஆனை நாவலாசிரியனுக்கு அவ்வப்போது வாசித்துக் காட்டி அர்த்தம் சொல்லி கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்த ஆள் தான் அஸாஸில் அலீம் எனச் சொல்லக்கூடிய சைத்தான்.

கடவுளின் மகிமை தெரிய வேண்டுமெனில் சைத்தான் இருக்க வேண்டும். ஹீரோவின் மகிமை தெரிய வேண்டுமெனில் வில்லன் இருக்க வேண்டும். இப்போது புரிகிறதா உங்களுக்கு?

அஸாஸில் என்பவர் சைத்தான். இந்த உலகம் சைத்தானால் தானே ஆளப்பட்டு வருகிறது. உலகம் மட்டுமா உங்களின் ஒவ்வொருவரின் உள்ளத்துக்குள் உறங்கிக் கிடப்பவனும் அவன் தானே?

இல்லையென்றா நீங்கள் மறுக்கப்போகின்றீர்கள்? அஸாஸில் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு துகளிலும் இருக்கின்றான். அவன் ஆடும் ஆட்டத்தின் பகடைக்காய் தான் இந்த பூமி. மனிதர்களின் நாடி, நரம்புகளில், இரத்தத்தின் துளிகளில், விடும் மூச்சில் அவன் நீக்கமற நிறைந்து கிடக்கிறான். உங்களது காதலில், காமத்தில், பாசத்தில், பற்றில் எல்லாம் அவனே இருக்கிறான்.

உங்களை ஆளும் அஸாஸில் தான் உங்களுக்கு கடவுள். ஆனால் நீங்கள் எவரையோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று கோவில் கோவிலாய், மசூதியாய், சர்ச்சுக்காய் ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? ஓடி என்ன பயன்?

உங்களுக்குள் இருக்கும் அஸாஸிலை நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அவனை எவ்விதம் நீங்கள் விரட்டி அடிக்கப்போகின்றீர்கள்? முடியுமா உங்களால்?

* * *

”மாயா....! உனக்கு அறிவிருக்கிறதா? நாவலின் ரகசியங்களை வெளிப்படுத்தினால் சுவாரசியமே இருக்காதே? ஏனடா? நீயே உன் நாவலைக் கெடுக்கிறாய்? வேண்டாம் மாயா....! நீ அமைதியாக இருந்து கொள். நாவலின் கட்டமைப்பை சீர் குலைக்காதே. இல்லையென்றால் உன்னை ராஜீயாய சபாவில் கொண்டு போய் விட்டு விடுவேன். ஜாக்கிரதை..” - கோவை எம் தங்கவேல்

* * *

”அண்ணேய், அண்ணேய்....! ”

”என்னடா? சநி....”

“பிக்பாஸில் பார்த்தியாண்ணேய். இந்த கவின் பய பன்றதை?”

“நானெங்கடா அதைப் பார்த்தேன். ஒரு வேளை பாத்ரூமிக்குள் பண்ணி இருப்பானோ என்னவோ தெரியவில்லையேடா சநி”

“அண்ணேய், இது என்னா காதல்னே... சாக்ஸி சொல்றா என் ஃபீலிங்க்ஸ், என் ஃபீலிங்க்ஸ் ஹர்ட் பண்றான் கவின்ங்கறாளே??? அப்படின்னா என்னாண்ணேய்?”

”அதுவாடா, சொல்கிறேன் கேளு...!”

”நாய்க்காதல் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? நாய்கள் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மை கொண்டவை. பெண் நாய் குட்டி போட தயாரானவுடன் ஆண் நாய்கள் சுற்ற ஆரம்பிக்கும். அந்த நாய்களில் ஏதோ ஒரு நாயை பெண் நாய் தன்னை அண்ட விடும். பின்னர் அந்தக் காதல் முடிந்து விடும்.”


”புரிஞ்சுடுச்சுண்ணேய்....!”

”சேரனுக்கு லாஸ்லியா மீதுதான் மகள் பாசம் பொங்கும். எந்த தகப்பன்? தன் மகளை கன்னத்தைத் தடவி, கட்டிப் பிடித்துக் கொண்டலைகிறான்? கலாச்சாரம் பற்றி வாய் கிழிய பேசும் சேரனுக்கு மீராவை மகள் எனப் பாவிக்கத் தெரியாதா? கருப்பாய், சற்றே அழகற்றவளாய் தெரியும் மீராவை மகளாகப் பாவிக்காத சேரனுக்கு கொழுக் மொழுக் லாஸ்லியா மகளாகத்தான் தான் தெரிவாள். இதெல்லாம் இந்த நாவலில் வருகின்றானே அஸாஸில் செய்கிற அக்கிரமம். சேரன் மனதுக்குள் காமப் பித்தேறி அந்தப் பெண்ணைத் தடவிக்கிட்டு திரிகிறான்”



“அய்யோ... ???”

“அட, ஆமாடா சநி, மீராவை இடுப்பைப் பிடித்து தள்ளி விடுகிறான் இந்தச் சேரன். அந்தப் பெண் ஆற்றாமையால் அவனின் முதுகில் அடிக்கிறாள். அவள் அவன் செய்தது சரியில்லை என்று தான் சொன்னாள். ஆனால் இவன் என்னடா? செய்தான்? அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். இவனுக்கு மட்டும் தான் மகள்கள் இருக்கின்றாளா??? அப்போ மீரா யாரடா? அவளும் யாரோ ஒரு தகப்பனின் மகள் தானே? இவன் மகள்களுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகணுமா? அயோக்கியப்பயல்....!”

“அட, ஆமாண்ணேய், கமல் கூட சேரனை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பாராட்டினாரே??”

“ஒரு அயோக்கியனுக்கு இன்னொரு அயோக்கியன் தானடா குடை பிடிப்பான். இது தான் உலக வழக்கம் சநி...”

“அண்ணேய், இந்தப் பயல்கள், வாயற்ற பெண்ணை அல்லவா பலி கடாவாக்குகின்றார்கள். சரவணன் பஸ்ஸில் இடித்தேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வைக்கின்றார்கள் இந்த நல்லவர்கள். கமல் படத்தில் நடிக்கும் போது, நடிகைக்கே தெரியாமல் உதட்டைக் கடித்து உறிஞ்சினானே, அப்போதெல்லாம் இந்த நல்லவர்கள் எங்கே போனார்கள்?”

“அடேய் சநி, இந்த நாவலாசிரியன் கடுப்பாகி விடுவான் இப்படியெல்லாம் பேசினால். நானோ நாவல், நீயோ நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். நாவலின் ரகசியத்தைச் சொல்லி விட்டேன் என்று கடுப்பில் வேறு இருக்கிறான்”

“ஆமாண்ணேய், இந்த ஆளைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு”

* * *

”அன்பர்களே, மல்டிபிள் டிஸ்ஆர்டர் ஏற்பட்டு விட்டது உனக்கு” என்கிறாள் கோதை. இந்த நாவலைப் படித்து விட்டு, அவளுக்கு இது நாவலாய் தெரியவில்லையாம். ராஜம் கிருஷ்ணன், கல்கி போன்று எழுது என்கிறாள். அவர்களைப் போல எழுத நானொன்றும் அவர்களின் பிரதி அல்லவே. 

மனதற்ற நிலைக்குப் போக போராடிக் கொண்டிருக்கும் எளியவன் நான். எனக்கு சத்தங்களற்ற அந்த உலகின் அற்புதத்தில் ஒரு நொடி ஊடுறுவி வெளியேற ஆசை. 

இறைவனின் குரலில் கரைந்து கொண்டிருக்கும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் என்னை பிறரைப் போல நாவல் எழுது என்று கேட்டுக் கொள்ளும் கோதைக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும்
இடையே உள்ள திரை
அவர்களை விலக்கி வைக்கிறது
நீயிந்த திரையை நீக்கிட
விரும்பவில்லையா? நான்
தெய்வீகப் பேரொளியில்
என் உள்ளொளியைச் 
சேர்க்க வேண்டும் அல்லவா? - ரூமி

கோதை, உனக்குப் புரிகிறதா? எல்லைகளற்ற இந்தப் பிரபஞ்சத்தின் தூசிகளில் இருந்து மாற்று வடிவாய் உன் முன்னே, கணவனாய் உருவெடுத்து இருக்கும் உனது நான், விரும்புவது எனது நாவலின் வழியே உருகியோடும் அன்பினை மட்டுமே.  அன்பின் வழி கடவுள் தன்மையை அடைவது மட்டுமே எனது ஆவல் அன்பே....!

நானே உன் இதயம் - அந்த 
உணர்ச்சி மையத்தை நீ
உனக்குள் தேடாதே! அது
என்னிடம் உள்ளது
என்னில் இருந்து வேறாக 
உன்னை எண்ணி விடாதே! அப்போது
உன்னை நீ அறிய மாட்டாய்
நீ துன்பத்தாலும், வேதனையாலும்
நிரம்பியிருப்பவள்....!
வா..! என்னில் ஒரு பகுதியன்றோ நீ.....!
என் விலகப்பார்க்கிறாய் முழுமையில் இருந்து?
என்னை இருகப்பற்றிக் கொள்,
என்னை மகிமைப்படுத்திக் கொள்...! - ரூமி


* * *
02/08/2019

Tuesday, July 23, 2019

நிலம் (54) - ஊட்டியில் நிலம் வாங்கப்போகின்றீர்களா?

எனது நண்பர் ஊட்டிக்குச் சென்று வர அழைத்தார். குளிரும், நீரும் சேர்ந்த இடங்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இயற்கையின் ஆழ்ந்த அமைதி, குளிர் பொருந்திய கால நிலையில் சில் வண்டுகளின் இனிய தம்பூரா கீதங்கள் என மனது எல்லையில்லா அமைதியில் இருக்கும். உடனே போகலாம் என்று சொல்லி விட்டேன்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி சாலையில் சென்றோம். மேகமூட்டத்தில் காலைச் சூரியனின் கதிர்கள் பூமியை எட்டா வண்ணம் கருமையான நீர் ததும்பும் மேகங்கள் பாதுகாத்தன. ஆங்காங்கே தூறல்கள்  விழுந்து பூமியை கிளர்ச்சி அடைய வைத்துக் கொண்டிருந்தன. ஒன்பது மணியைப் போல கோத்தகிரி அடைந்தோம். அடேங்கப்பா டீஸ் ஸ்டாலில் கீரை போண்டாவுடன் ஒரு டீ. கோத்தகிரியில் மழையும் இல்லை. தூறலும் இல்லை.


அங்கிருந்து கீழ் கோத்தகிரிக்கு சென்றோம். நண்பர் இடம் வாங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் என்பதை அங்கு சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

பல இடங்களைப் பார்த்தோம். இதற்கிடையில் என்னிடம் ’இடம் எப்படி இருக்கு?’ என கருத்துக் கேட்டார். மதியம் போல கார்சன் எஸ்டேட் அருகில் காரை நிறுத்தினோம். நான்கடி உயரம் இருக்கும், காரைக் கடந்து சென்றது. மஞ்சள் வண்ணத்தில். காட்டெறுமைகளும், எருமை மாடுகளும் உலாவின. இன்றைக்கு அதற்கு வேட்டை தான் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட இந்த இடம் தகுதியானதல்ல எனக் கருதி கோத்தகிரிக்கே திரும்பினோம். 

லெமன் சாதம், உருளை வறுவல். சூடு இல்லை. கூடவே நெய் முறுக்கு. சாப்பிட்டு முடித்தவுடன், தெரிந்த ஒருவர் ஒரு ஆளை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார்.

நான்காண்டுகளுக்கு முன்பு இடம் வாங்க, அக்ரிமெண்ட் போட்டு 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். கிரையம் செய்ய அழைத்த போதெல்லாம் உரிமையாளார் வீட்டில் இருப்பதில்லையாம். திடீரென்று பார்த்தால் அந்த இடத்தை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டாராம். மூன்று ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னும் விஷயம் முடிந்தபாடில்லை. என்னுடன் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அட்வான்ஸ் கொடுத்து விட்டு, இன்னும் அலைந்து கொண்டிருக்கும் அவரின் நிலையை எண்ணி வருத்தம் உண்டானது. 

அவருக்கு யாரும் அங்கு உதவி செய்ய மாட்டார்கள்.  பணம் பெறும் வரைக்கும் தான் எல்லோரும் ஓடி வருவார்கள். பணம் கிடைத்ததும் ஓடி ஒளிந்து விடுவார்கள். அவ்வளவு எளிதில் அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியாது எனப் பலப்பல தகவல்களைக் கொட்டினார் அவர்.

இதில் என்ன கொடுமையான விஷயம் என்றால், நில உரிமையாளர் தான் இவரிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் இவரோ அவரிடம் சிக்கி விட்டதாக மூன்றாண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார். அவரிடம் சில ஆலோசனைகள் சொல்லி விட்டு வந்தேன்.

முன்பெல்லாம் வார்த்தைக்கு மரியாதை இருந்தது. இன்று காசுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள் என்று என்னிடம் இருந்த ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஊட்டியில் என்ன பிரச்சினை என்றால் செக்‌ஷன் 17 மற்றும் கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட லட்சம் ஏக்கருக்கும் மேலான இடங்கள் மற்றும் ஃபாரெஸ்ட் இடங்கள். இவைகளைக் கண்டுபிடித்து வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி விடும். ஊட்டியில் தற்போது கரலேஷன் நடந்து பல சர்வே எண்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அந்த இடத்தைத் தான் வாங்குகிறோமா என்று கண்டுபிடித்து எல்லைகளை வரையறைப்பது பெரிய வேலையாக இருக்கும். அடியேன் பல இடங்களில் ஊட்டியில் சர்வே செய்திருக்கிறேன். எல்லைப் பிரச்சினைக்கு எவரும் வருவது இல்லை.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவர்களிடம், இடங்களை வாங்குவதில் பிரச்சினை இருக்காது. அவர்கள் குதிரை விலைக்கு வாங்கி விட்டு, யானை விலை சொல்வார்கள். அருகில் 20 லட்சம் விலை போகும், ஆனால் 50 லட்சம் என விலை சொல்வார்கள். 

எனக்கொரு நண்பர் இருக்கிறார். அவர் ஊட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது சொன்னது. தவணை முறையில் பொருள் வாங்கிக் கொள்வார்களாம். தவணையை வாங்கச் சென்றால் ஆள் எஸ்கேப் ஆகி விடுவார்களாம். அலைந்து அலைந்து காசு கரியானதுதான் மிச்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 

இதில் ஒரு சில நில புரோக்கர்கள் அடாத வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தைக் காட்டி பல கிரையங்களைச் செய்வது. அட்வான்ஸ் கொடுத்த இடத்தில் பாகம் இருக்கிறது எனச் சொல்லி கேஸ் போட வைப்பது என பல அலப்பறைகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆட்களை எளிதாக கணிக்கிறார்கள். ஆளுக்கு ஏத்தது போல காரியங்களை செய்து, பணத்தைச் சிக்க வைத்து விடுகிறார்கள். பின்னர் பிரச்சினை என்றால் அதற்கும் பணம் பெறுகின்றார்கள். இது போன்ற பல சம்பவங்களை எனது நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்றைக்கு ஒரு இடத்தை வாங்குவது என்றால் சாதாரணமானதாகத் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். 

”ஏன் இப்படிப் புலம்புகின்றீர்கள்? வாழ்க்கை இதுதான். பிரச்சினைகள் இல்லாதவர்கள் உலகில் ஏது? பிரச்சினை இல்லாத இடம் தான் ஏது? எல்லாம் சரியாக இருந்து விட்டால் உலக இயக்கமே நின்று விடும். பிரச்சினை வராமல், எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் சரியாகி விடும்” என்றுச் சொன்னேன்.

“சரிதான் தங்கம், சரிதான்” என்றார் அவர்

ஊட்டியில் நிலம் வாங்கும் எண்ணம் இருப்பின் தகுந்த ஆலோசனை கிடைத்த பிறகு வாங்குங்கள் என எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு.