குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, October 10, 2016

நிலம் (32) - வங்கியில் அடமானம் வைத்த சொத்து வில்லங்கமற்றதா?

”வங்கியில் சொத்தினை அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறேன், வங்கியின் வக்கீலே லீகல் ஒப்பீனியன் கொடுத்திருக்கிறார். மொத்த சொத்துக்கும் நான் தான் கையெழுத்து இட்டு கடன் பெற்றிருக்கிறேன்” என்று ஆரம்பித்தார் ஒருவர்.

இந்த ஒருவரின் அப்பா மறைந்து விட்டார். வாரிசுகள் நான்கு பேர். இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழும் பெற்றிருக்கின்றார்கள். பட்டாவும் நான்கு பேர்களின் பெயர்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் வங்கியில் ஒரே ஒருவர் மட்டும் மூலப்பத்திரத்தை வைத்து கடன் பெற்று இருக்கிறார். பிறரின் கையெழுத்தோ ஒப்புதலோ பெறவில்லை. மொத்த சொத்துக்குக்கும் அந்த வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

சொத்தினை விற்க வேண்டி வந்த போது பிறரின் கையெழுத்தே தேவையில்லை என்று பேச ஆரம்பித்தார் ஒரு பெரியவர். சின்ன விஷயம் இதைகூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை என்னிடம் அழைத்து வந்தார் நண்பர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரிடம் பேசிப் புரியவைத்தேன். விவரம் இல்லாதவர் சொன்னால் தான் புரியும்.

அவரிடம் உள்ள பிரச்சினை என்ன தெரியுமா? வங்கி மேலாளர் தவறு செய்யமாட்டார் என்ற நினைப்பில் படித்தவர், பெரிய பதவியில் இருப்பவர் தவறு செய்வாரா என்ற நம்பிக்கையின் காரணமாக விவாததத்தில் இறங்கி விட்டார் அவர்.

என்னிடம் விற்பனைக்கு வரும் பல்வேறு சொத்துக்களில் பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கி இருக்கிறேன், லீகல் எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது என்று சொல்வார்கள். காது தான் இருக்கிறதே, கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். எத்தனை பேருக்குச் சொல்லிக் கொண்டே இருப்பது? சிலருக்குச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் திறன் இருக்கும்.

வங்கியில் அடமானம் வைத்தச் சொத்துக்கள் ஏதோ ஒன்றிரண்டுகள் பிரச்சினை இன்றி இருக்கலாம். வங்கிகளில் லீகல் பார்ப்பது தவறானது என்றுச் சொல்ல வரவில்லை. ஆனால் 1 சதவீதம் தவறு நேர வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த ஒரு சதவீதம் பெரும் மன உளைச்சலைத் தந்து விடும்.

வங்கியில் அடமானம்  வைத்துப் பெறப்பட்ட சொத்துக்களின் லீகலை நம்பி விடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Saturday, October 8, 2016

ஒரு மட மாது

’பட்டால்தான் புத்தி வரும்’ பழமொழி இன்றைக்கும் உயிர்ப்போடு இருந்து கொண்டே இருக்கிறது. அனுபவம் சொல்லித் தந்த பாடத்தை அன்றைக்கே பலரும் சொல்லி வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் ’யார் கேட்பது?’. அனைத்துச் சுகங்களையும் அள்ளிப் பருகிய கண்ணதாசனே முடிவில் கண்ணனைத் தஞ்சமடைந்தார். வேறு வழி? ஆடிய ஆட்டம் அப்படி? 

நண்பரின் மனைவியுடன் மதுரை சென்று வந்த மனைவி வரும் போதே டெங்குவைக் கூட அழைத்துக் கொண்டு வந்து விட்டார். கணபதி சாலையில் இருக்கும் சிவா மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தோம். நான்கு நாட்களாக வாந்தி, காய்ச்சல் குறையவே இல்லை. பாரசெட்டமல் மருந்தினை மட்டுமே கொடுத்துக் கொண்டு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் தாமதித்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது. மனைவி ரொம்பவும் மெலிந்து விட்டார். வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து திரிந்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. பிளேட்லெஸ் 80,000 ஆயிரம் வரை குறைந்து விட்டது.

உடனடியாக கே.எம்.சி.எச் அழைத்துச் சென்று ஐ.சி.யூவில் அட்மிட் செய்தேன். வாந்தியாக எடுத்துக் கொண்டிருந்தார். அருகில் அமர்ந்திருந்த போது கண்களில் இருந்து தானாகவே தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மருத்துவர் ஜீவன் சந்திரா அவர்கள் மனைவியைப் பரிசோதித்து விட்டு என்னிடம் சொன்னார், “டோண்ட் வொரி மேன், ஐ வில் கிவ் யூ ஹெர் வித் வெரி சேஃப். நந்திங்க் டு வொரி மேன்” என்றுச் சொல்லி ஒரே ஒரு ஊசி மட்டும் போட்டார். அடுத்த அரை மணி நேரத்திற்குள் மனைவியின் வாந்தி நின்று விட்டது. சாப்பிட ஆரம்பித்து விட்டார்.

குளுக்கோசுடன் பாரசெட்டமல் மருந்து மற்றும் தண்ணீர் உணவு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தார்கள். பிளேட்லெஸ் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக டெங்குப் பாதிப்பில் இருந்து வெளி வந்தார். 

பணம் இருந்து என்ன பயன்? வேறு என்ன இருந்தும் என்ன பிரயோஜனம்? எதுவும் கை கொடுக்காது. உடலெல்லாம் ஊசி குத்திக் குத்தி புண்ணாகும். மருந்தின் வீரியத்தில் உடல் படாத அவஸ்தைப் படுத்தும். சாப்பிட முடியாது. தூங்க முடியாது. வேதனை, வேதனை, வேதனை இதைத்தவிர வேறெதையும் அனுபவிக்க முடியாது.

இதையெல்லாம் பார்த்து பார்த்து உடம்பின் மீதான பற்றே எனக்குப் போய் விட்டது. தலைக்கு ஷாம்பூ, வாசனை எண்ணெய், டை, முகத்துக்கு க்ரீம், ஷேவ் லோசன், ஷேவிங் மெசின், ஃபோம், செண்ட், சோப், டியோடரண்ட், விலை உயர்ந்த ஆடைகள், கார்கள், சொகுசாக அமர ஷோபாக்கள், ஏசி என்று உடம்புக்குத் தேவையான அத்தனையும் செய்தும் உடல் நோயால் பீடித்து விடுகிறது. ஒரு நாள் உடலைக் கழுவ வில்லை என்றால் நாற்றமடித்து விடும். மனைவி கூட அருகில் வரமாட்டாள். பெற்ற பிள்ளை தூரப்போய் விடுவர். இத்தனையும் ஒவ்வொருவருக்கும் தெரியும். தெரிந்தும் என்ன செய்கின்றார்கள்? 

சமீபத்தில் என் நண்பர் வாட்ஸப்பில் அனுப்பிய வீடியோ வெகு அருமையாக இருந்தது. யூடியூப்பில் ஏற்றி இதோ உங்களுக்காக. பொறுமையாக பாருங்கள். தானாகவே சகமனிதனின் மீது பற்று ஏற்பட்டு விடும். வீடியோவைப் பாருங்கள். தொடர்ந்து கீழே இருக்கும் பாடலையும் படித்து விடுங்கள். சும்மா கிர்ருன்னு இருக்கும்.


 நன்றி : படவிளக்கம் உருவாக்கிய ஜெ.பிரதீபன்

இனி பாடல் வரிகள்

ஒரு மடமாது மொருவனுமாகி
இன்ப சுகந்தரு மன்பு பொருந்தி
யுணர்வு கலங்க வொழுகிய விந்து
வூறுசுரோணித மீதுகலந்து

பனியிலொர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்து புகுந்து திரண்டு
பதுமவரும்பு கமடமிதென்று
பார்வை மெய்வாய் செவிகால் கைகளென்ற

உருவமுமாகி யுயிர்வளர் மாத
மொன்பது மொன்று நிறைந்து மடந்தை
யுதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளுமறிந்து

மகளிர்கள் சேனை தரவணையாடை
மண்படவுந்தியு தைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை யமுதமருந்தி
யோரறிவீரறி வாகிவளர்ந்து

 ஒளிநகையூற லிதழ்மடவாரு
வந்துமுகந்திட வந்துதவழ்ந்து
மடி யிலிருந்து மழலை பொழிந்து
வாவிருபோவென நாமம் விளம்ப

உடைமணியாடை யரைவடமாட
வுண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடியபாலரொ டோடி நடந்து

அஞ்சு வயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குருவுபதேச
முத்தமிழின்கலை யுங்கரைகண்டு
வளர்பிறையென்று பலரும் விளம்ப

வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடிகோதி மறுபதநீல
வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து
மணிபொன் இலங்கு பணிகளணிந்து

மாகதர் போகதர் கூடிவணங்க
மதன சொரூப னிவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழிகொண்டு சுழியவெறிந்து

மாமயில் போலவர் போவதுகண்டு
மனது பொறாம லவர்பிறகோடி
மங்கல செங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி யிதழமுதுண்டு

தேடியமாமுதல் சேரவழங்கி
ஒருமுதலாகி முதுபொருளாயி
ருந்த தனங்களும் வம்பிலிழந்து
மதனசுகந்த வித்னமிதென்று

வாலிப கோலமும் வேறுபிரிந்து
வளமையுமாறி யிளமையுமாறி
வன்பல்விழுந்திரு கண்களிருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து

 வாதவிரோத குரோதமடைந்து
செங்கை யினிலோர் தடியுமாகியே
வருவதுபோவ தொருமுதுகூனு
மந்தியெனும்படி குந்திநடந்து

மதியுமிழந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமன்மொழிந்து
துயில்வருநேர மிருமல்பொறாது
தொண்டையு நெஞ்சமு முலர்ந்து வறண்டு

துகிலுமிழந்து சுணையுமிழந்து
தோகையர் பாலர்கள் கோரணிகண்டு
கலியுகமீதி லிவர்மரியாதை
கண்டிடுமென்பவர் சஞ்சலமிஞ்ச

கலகலவென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து
தெளிவுமிராம லுரைதடுமாறி
சிந்தயு நெஞ்சமு முலைந்துமருண்டு
  
திடமுமுலைந்து மிகவுமலைந்து
தேறிநலாதர வேதென நொந்து
மறையவன்வேத னெழுதியவாறு
வந்ததுகண்டமு மென்று தெளிந்து

இனியெனக் கண்ட மினியெதொந்த
மேதினவாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசு மெனவுரை நாவு
றங்கி விழுந்துகை கொண்டு மொழிந்து

கடைவழி கஞ்சி யொழுகிடவந்து
பூதமு நாலுசு வாசமு நின்று
நெஞ்சு தடுமாறி வருநேரமே
வளர்பிறைபோல வெயிறுமுரோம

முஞ்சடையுஞ் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனதுமிருண்ட வடிவுமிலங்க
மாமலைபோல் யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி யுயிர் கொடுபோக
  
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கின ரேயிவர் காலமறிந்து
பழையவர் காணு மெனுமயலார்கள்

பஞ்சு பறந்திட நின்றவர்பந்த
ரிடுமெனவந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியுமென்று
பலரையுமேவி முதியவர் தாமி

ருந்தசவங்கழு வுஞ்சிலரென்று
பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறுமுடம்பை
வரிசை கெடாம லெடுமெனவோடி

வந்திள் மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை யடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிடமூடி யழல்கொடு போட

 வெந்து விழுந்துமு றிந்து நிணங்க
ளுருகி யெலும்பு கருகி யடங்கி
யோர்பிடி நீறுமிலாத வுடம்பை

நம்புமடி யேனை யினியாளுமே
- பட்டினத்தார் 

Thursday, October 6, 2016

கற்பு ஒழுக்க விழுமியங்களின் முகமூடி

ராகுல் சாங்கிருத்தியாயனின் ’வோல்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப் படித்த போது மனித சமூகத்தின் வரலாற்றினை முன்னெடுத்துச் செல்ல காரணியாக இருந்தவர்கள் பெண்கள் என்ற விஷயத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்த நூல் வரலாற்று புதினமாக எழுதி இருந்தாலும் அதனுடைய விஷயங்களை மறுத்து விட நம்மிடம் ஆதாரங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் அதாவது கிமு ஆறாயிரம் ஆண்டுகளில் பெண் தான் குடும்பத்தின் தலைவியாக இருந்து வந்திருக்கிறார். அப்பெண்ணுக்கு பல கணவர்கள் இருக்கின்றார்கள். அந்தக் காலத்தில் அது ஒழுக்க விதியாக இருந்தது.

இப்போதும் இமயமலைகளில் வாழும் ஒரு சில சமூகங்களில் ஒரே பெண்ணுக்குப் பல கணவர்கள் இருக்கின்றார்கள் என்று பல்வேறு ஆவணப்படங்கள் விவரிக்கின்றன.

காலங்கள் மாற மாற மனித சமூகம் மேம்பாடடைய பல்வேறு ஒழுக்க நியதிகள் வரையறை செய்யப்பட்டு சுய கட்டுப்பாடாகவே செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.

தமிழ் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற விஷயம் கற்பு எனச் சொல்லப்படுகிறது. ஆணொருவன் பெண்ணொருத்தியுடன் திருமண பந்தத்தில் இணையும் போது அவனுடைய சொத்தாகப் பெண் ஆக்கப்படுகிறாள். அதன் காரணமாக பாலியல் விஷயங்களையும் அவன் அவளிடம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேறு பெண்களை மனதால் கூட நினைத்துப் பார்க்க கூடாது அப்படி நினைத்தாலே கற்பு நெறி கெட்டு விட்டது என்பதும் நடைமுறை வாழ்வியல் நெறிகள். இளங்கோவின் சிலப்பதிகாரம் அதற்கொரு சான்று என தமிழ் கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கிறது. பிறன்மனை நோக்காது பற்றி திருவள்ளுவர் பாட்டெல்லாம் பாடி வைத்திருக்கிறார்.

பெரும்பாலான தமிழர்கள் இந்தக் கற்பு ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகின்றனர். அது ஒரு வித சுய ஒழுங்கினையும், நேர்மைத்தன்மையையும், மனதுக்குள் நான் நேர்மையானவன் என்ற கர்வத்தையும் தருகிறது. 

சமீப காலமாக தொழில் நிமித்தமாக பல்வேறு நபர்களைச் சந்திக்கும் போது நான் அவர்கள் வாயிலாக அறிய நேரிடும் விஷயங்கள் எதுவும் கற்பு விழுமியங்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. எனக்கு ஆச்சரியமும் மனிதனின் மீதான அவ நம்பிக்கையும் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.

மேட்டுக்குடித்தனக்காரர்களுக்கு டைவோர்ஸ் மீண்டும் மறுமணம் என்பது வெகு சாதாரணம். பொருளாதார வசதி கொண்ட சினிமாக்காரர்களின் வாழ்க்கை இதற்கு உதாரணமாக இருக்கிறது. அதே போல வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போரின் வாழ்க்கையிலும் அறுத்துக்கட்டுவது என்பது வெகு சாதாரணமாக மாறிப்போய் உள்ளது. ஆதாரம் ஜீ டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். 

இந்த மிடில் கிளாஸ் வகுப்பினைச் சேர்ந்த மக்களிடையே மட்டும் இந்த வகையான ஒழுக்கங்கள் பேணி வரப்படுகின்றன என்ற மாயை சூழல், தேவை, அவசியம், தர்மம், வாழ்க்கை, சுகம் இவற்றை முன் வைத்து ஒழுக்க விழுமியங்களின் எல்லைகள் வெகு எளிதாக தாண்டப்படுகின்றன. சமீபகாலங்களில் இந்தப் போக்கினை மிடில் கிளாஸ் வகுப்பு மக்கள் வெகு எளிதாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.

அவரவர் தேவைக்கு ஏற்ப கற்பு ஒழுக்கங்கள் மாற்றப்படுகின்றன. அதன் உப விளைவாக பல்வேறு மனச் சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றனர். உறவுகளுக்கிடையில் நம்பிக்கை சிதைந்து போகின்றது. 

சிதைந்த நம்பிக்கை வாழ்க்கை மீதான நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. அதன் காரணமாக சமூகத்தில் பெரும் துயரங்கள் மேகம் போல கவிழ்ந்து வருகின்றது.

சாலை விதிகளை சரியாக கையாண்டு ஒருவன் சாலையில் பயணித்தாலும் எதிரில் வருபவன் சரியாக கையாளவில்லை எனில் விபத்து ஏற்படுகிறது. ஒருவன் தவறு செய்தாலும் அது அடுத்தவனுக்குப் பிரச்சினையாகி விடுகிறது. விதிகளைச் சரியாகக் கடைபிடித்தாலும் பாதிக்கப்படுகின்றேன் ஆகையால் நானும் விதிகளைக் கடைபிடிக்கப்போவதில்லை என்ற சூழலுக்கு அவன் தள்ளப்படுகின்றான். 

இந்த நிகழ்வுதான் தற்போது சமூகத்தில் மெள்ளென ஆரம்பித்து முழு வீச்சில் பாய ஆரம்பித்திருக்கிறது. விளைவு என்னவாக இருக்கும் என்று யோசிக்கக் கூட முடியவில்லை.

மனித வாழ்க்கையின் ஆதார சுருதி பாதிக்கையில் சுருதி பேதம் ஏற்பட்டு அதன் காரணமாக தாளகதியும் அபஸ்வரங்களும் மாறிப்போய் கர்ண கடூரமான சங்கீதம் வெளிப்படுமோ என்ற பயம் எனக்குள் ஏற்பட்டு விட்டது. காலம் தான் இதற்கொரு நல்ல பதிலை தர வேண்டும். 

Friday, September 30, 2016

அன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் உணவும் சுவையும்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசு அலுவலக வேலையாக மாலையில் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு, எனது வக்கீல் நண்பரைப் பார்த்து விட்டு வீடு திரும்பிய போது கிட்டத்தட்ட 7 மணிக்கு மேல் ஆகி விட்டது. கணபதி ட்ராபிக் தாண்டி வீடு செல்ல எப்படியும் ஒரு மணி நேரம் ஆகி விடும் என்பதால் காந்திபுரம் பேரூந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் ஒரே ஒரு தோசை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு செல்ல முடிவு செய்து பார்சலுக்கு ஆர்டர் கொடுத்தேன்.



பார்சல் வந்ததும் கணபதி ட்ராபிக்கில் சிக்கி டீசல் பெட்ரோல் புகையினை சுவாசித்து வீடு வந்து சேர கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல் ஆகி விட்டது. கோயமுத்தூர் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும். ஹோட்டலில் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அன்னபூர்ணா தவிர வேறு எங்கும் சாப்பிடுவதில்லை. வேறு ஹோட்டலில் சாப்பிட்டால் வாய்ப்புண் வந்து விடும். பின்னர் வாயுத்தொல்லை வேறு வந்து அவஸ்தைப்படுத்தி விடும்.

நண்பர்கள் வந்தாலும் அன்னபூர்ணாவினை மட்டுமே பரிந்துரைப்பதுண்டு. காசைக் கொடுத்து விட்டு உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதால்.

மனையாள் தட்டில் தோசையை எடுத்து வந்து கொடுத்தார். சாம்பாரை ஊற்றினார். தோசையைக் கொஞ்சமாய் கிள்ளி, சாம்பாரில் துவைத்து வாயில் வைத்தால் இனிப்பு. தேங்காய்ச் சட்னியோ அது ஒரு விதமான இனிப்பு. எரிச்சல் தான் வந்தது. சாம்பாரில் சர்க்கரையை ஏன் தான் கொட்டுகின்றார்களோ எனத் தெரியவில்லை? முன்பெல்லாம் அன்னபூர்ணா டிஃபன் என்றால் எச்சில் ஊறும். மிக நல்ல நிறுவனம், பசித்து வருவோருக்கு அன்னமிட்ட வளர்ந்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட உணவகம் என்பதால் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஒரு மெயில் தட்டி விடலாம் என நினைத்து எழுதினேன்.

அடுத்த நாள் அன்னபூர்ணாவிலிருந்து முப்பது வருடமாக வேலை செய்து வரும் திரு.கலைமணி அவர்கள் போனில் அழைத்தார்கள். பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தேன். எனது ஆதங்கத்தைக் கொட்டினேன்.

சாப்பாடு சுத்தமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். மீன் குழம்பில் மீன் கவுச்சி வாடை வரக்கூடாது; கறிக்குழம்பில் ரத்த வாசம் வரக்கூடாது; சாம்பார் சாப்பிட்டவுடனும் கை மணக்க வேண்டும் என்று ஏக எதிர்பார்ப்புகள் உண்டு. மனையாளுக்கும் எனக்கு இந்த ஒரு விஷயத்தில் தான் அடிக்கடி முட்டிக் கொள்ளும், ஒரு சில சமயங்களில் அருமையாக சாம்பார் வைப்பார். பல தடவைகள் ஒரு மாதிரியாக இருக்கும். எனக்கு இது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக புரியவே புரியாத மர்மமாகவே இருந்து வந்தது. கவனமில்லாமல் சமைக்கின்றாரோ என்ற சந்தேகம் வேறு ஏற்படும். இருப்பினும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இதற்கு என்ன காரணம் என்பதை கலைமணி அவர்கள் புரிய வைத்தார்கள். அந்தக் காலத்தில் விவசாயம் செய்து வந்த உணவுப் பொருட்களின் தரமும் இந்தக் காலத்தில் விவசாயம் செய்து வரும் உணவுப் பொருட்களின் தரமும் வேறு வேறு. அந்தக் காலத்தில் இருந்த சுவையை இந்தக் காலத்தில் கொண்டு வர முடியாது என்றும் அதற்கு உணவு சமைக்கப் பயன்படும் பொருட்கள் தன் வயத்தை இழந்து விட்டது என்றும் சொன்னார். ஆமாம் அது உண்மைதான்.

ஊருக்குச் சென்று வரும் போது ஆவணம் கைகாட்டி மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வருவதுண்டு. மதுரைப் பக்கம் சென்றாலும் மாலை நேரச் சந்தைகளில் காய்கறிகள் வாங்கி வருவேன். உண்மையில் அந்தக் காய்கறிகள் வெகு மணமாக சுவையாக இருக்கும். முருங்கைக் கீரை வாசம் தூக்கும். முருங்கைக்காய் வாசமோ அள்ளும். பீட்ரூட் அடுப்பில் வேகும் போதே மணம் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் கோவையிலிருக்கும் காய்கறிகள் உப்புச்சப்பின்றி ஒரு விதமான அவிஞ்ச வாசம் அடிக்கின்றன. இத்தனைக்கும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவேன்.

சந்தையில் இருக்கும் கருவேப்பிலைக்கும், வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வேப்பிலைக்கும் வட தென் துருவ வித்தியாசம்.

சென்னை வடபழனியில் பிரசாத் ஸ்டூடியோ எதிரில் உள்ள த்ரீ சிக்ஸ்டியில் தான் வேலை நிமித்தம் சென்றால் தங்குவதுண்டு. சரவணபவன் சாப்பாடுதான் கொண்டு வந்து தருவார்கள். வாயில் வைக்கமுடியாது. அரிசி வெந்து இருக்காது. பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு படு கேவலமான பார்சல் செய்து அனுப்புவார்கள். கொடுமை. விலை ரூபாய் 180 என்று நினைக்கின்றேன். வேகாத ப்ரைடு ரைஸ் என்றொரு அயிட்டத்தை எப்படித்தான் சாப்பிடுகின்றார்களோ தெரியவில்லை? அரை குறை வேக்காடு அரிசியில் ஒரு உணவு பதார்த்தம்.

நவீன அறிவியல் உலகம் பணம் கிடைப்பதற்காக உண்ணும் உணவின் தரத்தை குறைத்து விட்டது. உணவுப் பொருட்கள் அனைத்தும் தன் இயல்பு மாறி வியாபார உத்திக்காக மாறிப்போய் விட்டது.

இனி அந்தக் கால பாரம்பரிய உணவு வகைகளை நாம் என்றைக்குமே சாப்பிட முடியாது என்று நினைக்கையில் வேதனை தான் மண்டுகிறது.

அன்னபூர்ணா கெளரிசங்கர் நிறுவனத்திற்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் வேண்டுகோள் ஒன்றினையும் விடுக்கிறேன்.

”எதிர்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரிய உணவு வகைகளையும், அதன் சுவைகளையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்குரிய ஏற்பாடுகளை தனிமனிதனால் உருவாக்கிட முடியாது. அது உங்களைப் போன்ற பெரும் நிறுவனங்களால் தான் இயலும். தமிழர்களின் பாரம்பரியத்தை உங்களைப் போன்ற நிறுவனங்கள்தான் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். எப்படி ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கின்றாரோ அதைப் போல தாங்களும் இந்த தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். செய்வீர்கள் என்ற அசைக்க முடியாத பெரும் நம்பிக்கை எனக்கு உண்டு.”

Wednesday, September 28, 2016

அன்னபூரணி தாய்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் தங்கி விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் கணிணி ஆசிரியராகவும், சாரதா நிகேதன் சயின்ஸ் காலேஜ் ஃபார் விமன் கல்லூரியின் கம்யூட்டர் துறையில் சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் அட்மினிஸ்ட்ரேசனாக வேலை செய்து வந்து கொண்டிருந்தேன். சுவாமி ஆத்மானந்தாவிடம் இரண்டு காண்டசா கிளாசிக் கார்கள் இருந்தன. அப்போது அம்பாசிடர் மற்றும் காண்டசாக்கள் மற்றும் மாருதி 800 கார்கள் பிரபலம்.

நானும் சாமியும் அடிக்கடி சாரதா கல்லூரிக்குச் செல்வோம். ஆஸ்ரமத்தில் இருப்போர் கடுப்புடன் பார்ப்பார்கள். அலுவலக கம்யூட்டர் அல்லது பிரிண்டர் அல்லது லேப் கம்யூட்டர் ஏதாவது பிரச்சினையில் இருக்கும். அத்துடன் வாரம் தோறும் கல்லூரிப் பெண்களுக்கு கணிப்பொறி கிளாஸ் எடுக்க வேண்டும். காரைக்குடி அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கும் அடியேன் தான் கணிப்பொறியியல் துறைக்கு அட்மின்ஸ். அடிக்கடி சாமியுடன் காண்டசாவில் பயணிப்போம். 


(திருப்பராய்துறை தபோவனம் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர்)

திருச்சி செல்லும் சாலையில் சுவாமி சித்பவானந்தர் அமைத்திருக்கும் திருப்பராய்துறை தபோவனத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அருகில் இருக்கும் ராமகிருஷ்ண  குடில் வேறு. தபோவனம் வேறு. தபோவனத்தில் இருந்த சித்பவானந்தரின் சீடர் பிரம்மசாரி ராமசாமி தான் குடிலின் நிறுவனர்.

(ராமகிருஷ்ணர் குடில் நிறுவனர் பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார்)

இரண்டு நிறுவனங்களுக்கும்  அப்போதே ஏதோ பிரச்சினை இருந்தது என்றுச் சொல்லிக் கொண்டார்கள். உண்மையா என்று தெரியவில்லை. சுவாமி சித்பவானந்தரின் இன்னொரு சீடர் தான் சுவாமி ஆத்மானந்தர். கரூருக்கு வந்து பசுபதிபாளையத்தில் ஐந்து பள்ளிகள் மற்றும் சாரதாபுரி எனும் இடத்தில் அமைந்த சாரதா நிகேதன் கல்லூரியையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அத்துடன் பெண்கள் கல்லூரியில் சுமார் 150 அனாதை பெண்களையும், ஆஸ்ரமத்தில் சுமார் 100 மாணவர்களையும் ஆதரித்து படிக்க வைத்து, உடை கொடுத்து வளர்த்து வந்தார். 

(சுவாம் ஆத்மானந்தர் - அமராவதிபுதூர் கல்லூரி விழாவின் போது)

சுவாமி சித்பவானந்தர் உயிருடன் இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. அவர் காலமானதும் தபோவனத்துக்கும் சுவாமி ஆத்மானந்தருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது. சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தபோவனத்தின் பெயரில் தான் பதிவு செய்து வைத்திருந்தார். மேற்படி நிறுவனங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்தார். ஆனால் உண்மையான உரிமையாளர்கள் தபோவனத்தினர். சட்டம் அதைத்தான் சொல்லும். அதைத்தான் சொல்லியது.

கரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்து அது தபோவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு எழுதியது. சுவாமியைக் கைது செய்து விடும் அளவுக்கு நிலமை தீவிரமானது. ஆசிரமவாசிகள் பரபரப்பாயினர். என்ன நடக்குமோ என்று கவலையடையத் தொடங்கினர். அடியேனுக்கு சுவாமியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு அனுமதி உண்டு. அவர் எந்த வேலையிலிருந்தாலும் அடியேன் நேரடியாக சுவாமியின் அறைக்குச் சென்று விடுவேன். எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

சாமியைப் பார்க்கச் சென்றேன். 

“என்னப்பா! ஏதும் வேண்டுமா?” என்றார்.

”சாமி, கைது என்று பேசிக் கொள்கின்றார்களே?” என்றேன். 

சிரித்துக் கொண்டே,”அன்னபூரணி பார்த்துக் கொள்வாள், நீங்க போய் சாப்பிட்டு விட்டு தூங்குங்க” என்றுச் சொல்லி தேங்காய் லட்டு ஒன்றினை எனக்கு கொடுத்தார். 

பரபரப்பாய் இருந்த சுவடு அடுத்த நாள் இல்லை. அவரைக் கைது செய்ய யாரும் வரவில்லை. அன்று சுவாமி சொன்ன வார்த்தைப் பலித்தது.  

மிகவும் குறைந்த விலையில் தமிழகத்தில் உள்ள பல ஏழைகள் தினம் தோறும் வயிறார உணவு உண்கின்றார்கள். பத்து ரூபாய் இருந்தால் போதும் அம்மா உணவகத்தில் வயிறு நிறையச் சாப்பிட்டு விடலாம். ஒரு வெகு சாதாரணமான குடும்பம் வெகு சொற்பமான தொகையில் தங்களின் பசியைப் போக்கி விடலாம். 100 யூனிட் வரை மின்கட்டணம் கூட இல்லை. 

இருபத்தைந்து கிலோ அரிசி இலவசமாய் கிடைக்கிறது. முப்பது ரூபாய்க்கு துவரம் பருப்பு ரேசனில் கிடைத்து விடுகிறது. அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு தன்னால் முடிந்த வரை எத்தனையோ லட்சோப லட்சம் மக்களுக்கு பசிப்பிணியை தீர்க்கிறது. அதற்கு காரணமாய் இருப்பது நம்ம முதல்வர் அம்மா அவர்கள்.

காமராஜர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து பெரும் புகழ் பெற்றார். ஆனால் அம்மா ஏழைகளுக்கு மட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளுக்கும் பல சுவை உணவளித்து வருகிறார். அன்னமிடுதல் என்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. பசிப்பிணியை தினம் தோறும் தீர்த்துக் கொண்டிருக்கிறார். அம்மா என்ற சொல் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்மா அவர்கள் வாழும் அன்னபூரணித் தாய். அன்னபூரணித்தாயின் பூரண நல் ஆசியுடன் விரைவில் நலம் பெறுவார் என பிரார்த்தனை செய்து கொள்வோம்.


Tuesday, September 27, 2016

சித்தர்கள் சாபம் பலிக்குமா? உண்மைச் சம்பவம்

ஆஸ்ரமத்திற்குச் நானும் மனையாளும் எட்டு மணி வாக்கில் கிளம்பினோம். செல்வபுரம் வழியாக பேரூர் சாலையில் பயணித்தோம். பள்ளிகள் விடுமுறையாதலால் வாகன நெருக்கடி இல்லை. ஆங்காங்கே அவசர கோலமாக சாலைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் வருகிறது அதுவும் உள்ளாட்சித் தேர்தல். ஆஸ்ரமம் சென்று சேர்ந்தோம்.

அருமையான அமைதி. அன்பர்கள் குறைவாக இருந்தனர். சாமியுடன் கொஞ்ச நேரம் இல்லற வாழ்வியல் சண்டைகள் போட்டு விட்டு, இரண்டு மணி நேரம் சுவாமியின் எதிரில் அமர்ந்து விட்டேன். மனதுக்கு அமைதி வேண்டும். எண்ணங்களே இல்லாத மனம் ஒரு துளி நேரம் இருந்தாலும் அதை விட இன்பம் ஏதுமில்லை. 

கண்ணை மூடி விட்டால் சினிமா நடிகையில் ஆரம்பித்து பக்கத்து வீட்டுப் பருவச் சிட்டு வரை சிந்தனை ஓடுகிறது. சிறிது நேரத்தில் ஒபாமாவுடன் உரையாட ஆரம்பித்து மன்மோகன் சிங்கிடம் 2ஜி கேள்விகள் கேட்கிறது. நேற்றுச் சாப்பிட்ட வடை சரியில்லை என்று இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று அடுத்த நொடியில் டீக்கடைக்குச் சென்று விடுகிறது மனசு. நொடிப்பொழுதும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சிந்தனையை நிறுத்தி வெற்று மனதாகி விட்டால் இந்தப் பிரபஞ்சத்துடன் எப்படி ஒரு ஆலமரம் இணைந்து நிற்கிறதோ அது போல இணைந்து விட்டால். புத்தன் சும்மாவா ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து ஞானம் பெற்றார்?

எழுத நன்றாக வருகிறது. ஆனால் இந்த மனதை அடக்கிட என்ன செய்தாலும் அது நம்மை அடக்கி விடுகிறது. நொடிப்பொழுதும் அடங்காது ஆட்டம் போடும் இந்தப் பொல்லா மனது குரு நாதரின் முன்னே மகுடிக்கு நின்றாடும் பாம்பு போல ஆடி அடங்கி விடும்.

சுவாமியிடம் பிரார்த்தனை செய்தால் போதும். ’அந்தப் பக்கமாகப் போ எல்லாம் சரியாகி விடும்’ என்று வழி காட்டி விடுவார். இல்லையென்றால் எவரையாவது கூட அனுப்பி கரை சேர்த்து விடுகிறார். அதற்கெல்லாம் பிராப்தம் வேண்டுமென நினைக்காதீர்கள். உங்களுக்கு மனது வேண்டும்.

ஜோதி சுவாமியுடன் வழக்கம் போல பேச ஆரம்பித்தேன். ஆஸ்ரமத்திற்கு வரும் ஒருவர் சமீபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருக்கு ரசவாதம் கைகூடி இருந்தது. ரசத்தைக் கட்டும் வித்தையை அவர் பழுதறக் கற்றிருந்தார். 

“ரசமும் மூலிகையும் வாங்க காசு கொடுங்கள். ஒரு கிலோ சுத்த வெள்ளிக்கட்டி தருகிறேன். விற்று சம்பாதித்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் அந்த அகால மரணம் அடைந்தவர் கேட்டார். மறுத்து விட்டேன்.

ரசக்கட்டு தெரிந்தவுடன் அந்த ஆள் தங்கம் வரைக்கும் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். வெளியில் நோய்க்கு மருந்து அளிக்கிறேன் என்றுச் சொல்லி ரகசியமாக இந்த ரசக்கட்டு வேலையைச் செய்து பணம் சம்பாதித்து, பெரும் பணத்தைச் சேர்த்து வந்திருக்கின்றார். பணம் வந்தால் பத்தும் பறந்து போகும். இவருக்குப் பதினொன்றும் போய் விட்டது.

சுவாமி ”இந்த வேலையெல்லாம் செய்யாதே” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் ”பின் ஏன் சித்தர்கள் ரசக்கட்டு வித்தையைச் சொன்னார்கள் ?” என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். 

தபஸ் செய்யும் மனிதன் சிறு அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவனால் வேலை ஏதும் செய்ய முடியாது. அதற்காக குண்டுமணி அளவு தங்கம் செய்து அதை விற்று உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ரசக்கட்டு வித்தையைச் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் அதை வைத்து பொருள் தேடினால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை.

விளைவு சின்னஞ்சிறு வயதில் அகால மரணம். கோடி கோடியாய் சேர்த்து வைத்திருக்கும் சொத்தினால் என்ன பிரயோஜனம்? ஆடிய ஆட்டம் முடிந்தது. 

”சாமி, சித்தர்கள் சாபம் பலிக்குமா?” என்றேன்.

“ஆமாம் ஆண்டவனே, நிச்சயம் பலித்து விடும். மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ, நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு வாழத்தான் சித்தர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் சித்த ரகசியங்களை மனிதர்களுக்குச் சொல்லிச் சென்றார்கள். அதை வைத்து பொருள் தேட ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும். இப்படி ஆரம்பித்தவர்கள் வாழ்க்கை எல்லாம் சீரழிந்து சிதைந்து போய் விடும் ஆண்டவனே!” என்றார்.

சித்தர்கள் சாபம் பலித்தே விட்டது. என் வாழ்க்கையில் நான் அனுபவ பூர்வமாக கண்டு கொண்ட உண்மைச் சம்பவம் இது.

சித்தர்கள் பெயரைச் சொல்லக்கூட தகுதி வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்கு சித்தர்கள் பெயர்களை அடைமொழியாக்கி பல்வேறு அக்கிரமங்கள் செய்கின்றார்கள். மருந்து விற்கின்றார்கள். மூலிகைகள் விற்கின்றார்கள். இந்த மூலிகைகளை காசு வாங்கிக் கொண்டா பூமி தருகின்றது? செய்யும் செயலில் தர்மம், நீதியும், நியாயமும் இருக்க வேண்டும், 

இன்றைய மருத்துவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் படும் துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சேலம் பக்கம் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து கொடுப்பவர்களுக்கு மறு நாள் அந்த நோய் பீடித்து விடும். அவர்கள் மருந்து சாப்பிட்டு நோய் தீரத் தீர மறுபடியும் மருந்து கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் கோடி கோடியாய் பணம் கேட்கவில்லை. 

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என பல உண்மைச் சம்பவங்களை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுத நினைத்தேன். முடியவில்லை. ஏனென்றால் அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத கொடூரங்கள் கொண்டவை. என்ன தங்கம் இப்படி எழுதுகின்றாரே நம்பவா முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள். உதாரணம் சொல்கின்றேன்.

இரண்டு பெண்கள். இரண்டு அதர்மம். நடந்தது என்னவென்று மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் படித்துக் கொள்ளுங்கள். முடிவு என்ன? பேரழிவு நடந்தது அல்லவா? 

இப்போது தர்மம் நின்று கொல்லாது. அன்றே கொல்கிறது! 

சித்தர்கள் பெயரைச் சொல்லி பொருள் பறிப்போர் சித்தர் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து கொள்ள இப்பதிவினை எழுதியிருக்கிறேன்.

Sunday, September 25, 2016

முருங்கை இலை சாம்பார் - சுத்தமான இயற்கை உணவு

எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன். தமிழகத்தில் காலரா வந்த காலம். மழை விடாது ஷவர் போலக் கொட்டிக் கொண்டே இருந்தது. பெரிய ஓட்டு வீடு எங்களது. பக்கத்தில் மாடுகள் கட்டிக் கொள்ள பெரிய கொட்டகை ஒன்றும், நிலக்கடலை செடிகளை வேய்ந்து வைத்திருக்கும் பெரிய உயரமான படல் ஒன்றும் இருக்கும். ஆடுகள், மாடுகள், பசு மாடுகள், கன்றுகள் என்று பத்துப் பனிரெண்டு உறுப்படிகள் இருக்கும். எல்லாம் மழையில் நனைந்து கொண்டே இருந்தன. விடாமல் ஊற்றிக் கொண்டே இருந்ததால் ஓடெல்லாம் நீரில் நனைந்து ஊறி இருந்தது. குளிர் விடாது அடித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து பத்து நாட்கள் விடாது மழை பெய்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஊருக்கு கிழக்கே இருந்த வயல்களில் இருந்த பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கிக் கிடந்தன. கடைசி போய் கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். காய்கறிகள், மீன் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. கடைத்தெருவில் ஒரு கடைகூட திறக்கவில்லை. 


வடக்கத்தியார் மளிகைக் கடையும், நவாஸ் கடையும் கூடத் திறக்கவில்லை. நவாஸ் கடையில் கோடை லீவுக்கு என்னை வேலைக்கு அனுப்பி வைப்பார்கள். கல்லாப்பெட்டியில் காசு வாங்கிப் போடும் வேலை தருவார் நவாஸ். கணக்குப் போட்டு கல்லாப்பெட்டியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மேரி பிஸ்கட்டும், பேரிச்சம்பழமும் கொடுப்பார். கோடை லீவு முடிந்து பள்ளி ஆரம்பித்ததும் புத்தகப்பையும், நோட்டுகளும், பேனாக்களும் தருவார். அத்துடன் காசும் வேற. இப்போது எங்கிருக்கின்றாரோ தெரியவில்லை.

விடாது கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் வீட்டில் இருப்போர் சாப்பிட அரிசு சோறு இருக்கும். குழம்புக்கு அம்மா வீட்டின் பின்புறமிருக்கும் முருங்கை இலையை பறித்து வந்து உருவி எடுத்து பொருமா போட்டு கீரைப் பொறியல் செய்வார்கள். கீரையுடன் துவரம் பருப்புச் சேர்த்து முருங்கைக் கீரைச் சாம்பார் வைத்து தருவார்கள். சுவையாக இருக்கும்.


இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் கீரைகள் பூச்சி மருந்து எண்டோசல்பானோ என்ன இழவோ தெரியவில்லை அடித்து சும்மா பச்சைப் பசேல் என்று கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். இந்த எண்டோசல்பான் பூச்சி மருந்தினால் தான் புற்று நோய் வருகின்றதாம். களைக்கொல்லி ரவுண்ட் ஆஃப் மூலமும் பல்வேறு நோய்கள் வருகின்றதாம்,

கத்தரி, வெண்டை, உருளை, கேரட், பீன்ஸ் என அனைத்தும் மருந்து மயம். சுத்த சைவம் சாப்பிட்டாலும் எந்த வடிவில் நோய் வருமோ தெரியவில்லை. இத்தனைக் களேபரத்திலும் ஒரே ஒரு உணவு மட்டுமே இயற்கை சார்ந்ததாக இருக்கிறது. செடி முருங்கை இல்லை. சாதாரணமான முருங்கைக் கீரை மட்டுமே சுத்தமான இயற்கை உணவு. முருங்கை மரத்துக்கு யார் உரம் போடுகின்றார்கள்? பூச்சி மருந்து அடிக்கின்றார்கள்? நம்பி உண்ணக்கூடிய சுத்தமான இயற்கை உணவு அது.

இனி முருங்கை இலை சாம்பார் வைப்பது எப்படி என்றுக் குறிப்புத் தருகிறேன். வாரம் ஒரு முறை விடாது சாப்பிடுங்கள். மூட்டு வலி தீரவும், உடம்பு இளைக்கவும் முருங்கை இலை சூப் வைத்துச் சாப்பிடுங்கள். உடல் தெளிவாய் இருக்கும்.

முருங்கைக்கீரை சாம்பார் செய்யும் விதம் எப்படி எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-
===========================

1.முருங்கை இலை உருவி சுத்தம் செய்தது நான்கு பிடி கை கொள்ளாமல் அள்ளும் அளவு
2,துவரம் பருப்பு - 100 கிராம் அளவு
3.தக்காளி ஒன்று
4.சிறிய வெங்காயம் பத்து அளவுக்கு
5,பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
6.மஞ்சள் தூள் சிட்டிகை
7.பச்சை மிளகாய் நான்கு (அவசியம் சேர்க்கவும்)
8.புளி சின்ன எலுமிச்சை அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்
9.மல்லித்தூள் (கடை மல்லித்தூள் ஆகாது. மல்லியுடன் சீரகம், சோம்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, மஞ்சள், மிளகு, கொஞ்சம் அரிசி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்)

அரைத்துக் கொள்ள:-
=====================
சீரகம் அரை டீஸ்பூன்
சோம்பு அரை டீஸ்பூன்
மிளகு பத்து
பூண்டு நான்கு பற்கள்

இனி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்

துவரம்பருப்புடன் மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (மறந்து விடாதீர்கள் இல்லையென்றால் வயிற்றில் போய் விடும்) பெருங்காயத்தூள், தக்காளியை நறுக்கி தேவையான தண்ணீர் விட்டு நான்கு விசில் வரும்படி குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்த பருப்பை மசித்து விட வேண்டாம். இத்துடன் புளித்தண்ணீர், மல்லித்தூள் ஒன்றை டீஸ்பூன் அளவு, அறைத்து வைத்த மசாலா, தேவையான உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் பொறிந்தவுடன் வரமிளகாய் இரண்டும், தட்டிய பூண்டுப் பற்கள் நான்கையும் சேர்த்து எல்லாம் சிவந்தவுடன் கலந்து வைத்திருக்கும் பருப்பினை சேர்த்து ஒரே ஒரு கொதி வந்தவுடன், முருங்கைக் கீரையை சேர்த்து அது ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து மூடி போட்டு வைத்து விடவும். பத்து நிமிடம் கழித்து கிளறி விடவும், மீண்டும் மூடி விடவும். சூட்டில் தான் கீரை வேக வேண்டும்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கீரை வெந்து சாப்பிடத் தயாராகி விடும். பருப்புக் கலவையை ஒரே ஒரு கொதியில் முருங்கைக் கீரையச் சேர்த்து விடவும். அடுத்த கொதி வந்தவுடன் அடுப்பை மறக்காமல் அடுப்பை அணைத்து விடவும். இல்லையென்றால் குழம்பு கடுத்துப் போய் விடும். 

முருங்கை இலையை தொட்டவுடன் பொசு பொசுவென்று இருக்கும். முகர்ந்து பார்த்தால் கீரை வாசம் அடிக்கும். இந்தக் கீரைதான் குழம்புக்கு நல்ல மணத்தையும், சுவையும் தரும்.  அடிக்கீரையைச் சேர்க்க வேண்டாம், கொழுந்துக் கீரை தான் வேண்டும்.

சுத்தமான ஆரோக்கியமான சாம்பார். வாரம் ஒரு முறை மறக்காமல் சாப்பிட்டு வாருங்கள்.

அடுத்து குண்டாக இருப்போர் உடல் இளைக்க எளிய முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

இந்தச் சூப் சாப்பிட்டவுடன் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆகவே மாலை ஆறு மணிக்குள் பசி எடுப்போர் சாப்பிட்டுக் கொள்ளவும்.

இரவு எட்டு அல்லது ஒன்பது மணி வாக்கில் இந்தச் சூப்பை குடல் நிறையக் குடித்து விட்டுப் படுங்கள்.

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை, ஐந்து எண்ணிக்கை அளவு பச்சை மிளகாய், தேவையான உப்பு அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்த்து இரண்டே விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். விசில் நின்றவுடன் வடிகட்டி அந்தச் சூப்பை தினமும் இரவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். குடிக்க முடிந்த அளவு குடித்துக் கொள்ளுங்கள். உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக இளைக்க ஆரம்பிக்கும். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஷேக் குடிக்கிறேன் பேர்வழி என உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

மூட்டு வலி பிரச்சினை இருப்போர் இந்தச் சூப்பை விடாது ஒரு பதினைந்து நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டு வலி ஓடிப்போய் விடும்.

சளி பிடித்திருக்கிறதா?  விடுங்கள் கவலையை. மேற்கண்ட சூப்பினை வைத்து இரவில் இரண்டு குவளை அளவில் நான்கைந்து நாட்கள் எடுங்கள். சளி என்ன ஆகும் என்று பாருங்கள். மாத்திரையும் வேண்டாம், ஆண்டிபயாட்டிக்கும் வேண்டாம்.  சொன்னால் புரியாது செய்து பாருங்கள். சளி பறந்து போய் விடும்.

முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சரி இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. ஓய்வாக இருக்க வேண்டிய நாள். வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றம் செய்ய செல்ல வேண்டும். வரட்டுமா?


Saturday, September 24, 2016

நிலம் (31) - பட்டாவா? பத்திரமா? எது சரி?

’என்ன இது தங்கவேல் பிரச்சினைகளாகவே எழுதிக் கொண்டிருக்கின்றாரே? பிரச்சினைகளே இல்லாத பூமி இல்லையா”’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இருக்கிறது. பிரச்சினைகளை ஏன் எழுதுகிறேன் என்றால் நிலம் வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எந்த வித பிரச்சினையும் இல்லாத பல கிரையங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரச்சினைகள் இருப்பதால் தானே கோர்ட்டுகளும், காவல்துறையும் இருக்கின்றன? 

தெரிந்த ஒருவர் பூமி கிரையம் வாங்க முடிவு செய்து வில்லங்கங்களை எல்லாம் பரிசோதித்து விட்டு அட்வான்ஸ் தொகையும் செலுத்தி இருக்கிறார். லீகல் ஒப்பீனியனுக்காக என்னிடம் வந்தார்.

அனைத்தும் சரியானதாக இருந்தது. பத்திரத்தில் உள்ள இடத்தின் அளவும் பட்டாவின் இடத்தின் அளவும் வேறு வேறாக இருந்தது. அதைக் குறிப்பிட்டு பட்டாவில் இருக்கும் பூமிக்கு மட்டுமே பணம் கொடுங்கள் என்றுச் சொல்லி விட்டேன்.

இவர் பூமியின் உரிமையாளரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லி அவரை என்னிடம் ஏதும் சொல்லாமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது போன்ற பிரச்சினைகள் வேறு வரும். இதையும் சமாளிக்க வேண்டும்.

”பத்திரத்தில் நான் எழுதி வாங்கிய சொத்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்குத்தானே விலை பேசினோம். இப்போது பட்டாவில் இருக்கும் சொத்துக்கு மட்டும் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றுச் சொன்னீர்களாமே இது நியாயமா? இப்படிச் சொல்லலாமா?” என்று கோபத்துடன் பேசினார்.

அவரிடம் ”அய்யா பத்திரத்தில் அந்தச் சொத்தின் உரிமையாளர் நீங்கள் தான் என்று இருப்பது சரிதான். ஆனால் பட்டாவில் இவ்வளவு இடம் தானே உங்கள் பெயரில் இருக்கிறது? உள்ள இடத்திற்குத் தானே காசு கொடுக்க முடியும்? இல்லாத இடத்திற்குப் பணம் எப்படித் தருவது? என்று கேட்டேன். ”அதெல்லாம் முடியாது” என்று வம்பு செய்ய ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் திருந்தாத கேசு என நினைத்துக் கொண்டு, “சரிங்க, நீங்க பத்திரத்தில் உள்ளபடி பட்டாவை பெற்றுக் கொடுங்கள். முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னேன்.

ஜெயித்து விட்ட நினைப்பில், ”இப்பச் சொன்னீங்களே, இது சரி, நான் பட்டாவுடன் வருகிறேன்” என்றுச் சொல்லி சென்று விட்டார். ஆயிற்று மூன்று மாதங்கள். 

ஆள் அரவமே இல்லாமல் இருக்க தெரிந்தவரை அழைத்து விசாரணை செய்தேன். ”இன்னும் இரண்டு நாட்களில் ஒப்பந்த தேதி முடிகிறது அதற்குள் அவரை உங்களிடம் அழைத்து வருகிறேன்” என்றுச் சொன்னார். அவர் மீண்டும் வந்தார். பட்டாவில் மாற்றம் செய்ய முடியவில்லையாம். ”என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன், முடியவில்லை” என்றார்.

ஆள் ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். கடைசி நேரத்தில் முழுப்பணத்தையும் பெற்று விடலாம் என்ற திட்டம் அவருக்கு. மீண்டும் சர்வே செய்து விடலாம் என்றொரு முடிவினை அவரிடத்தில் சொன்னேன். அவருக்கு முகமெல்லாம் மாறி விட்டது.  ”அதான் ஏற்கனவே அளந்து கொடுத்து விட்டேனே இனிமேலும் என்ன இருக்கிறது அளப்பதற்கு, என்னால் மீண்டும் செலவு செய்ய முடியாது” என்றார் அவர்.

”நாங்கள் செலவு செய்து அளக்கிறோம், நீங்கள் செலவு செய்ய வேண்டாம்” என்றவுடன் அவரால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் சர்வே செய்த போது பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தினை விட மேலும் நில அளவு குறைந்தது. பாதைக்கு பூமியை எடுத்திருக்கிறார்கள். அதைக் கணக்கிடாமல் முன்பு அளந்த சர்வேயர் இருக்கும் அளவீடுகளின் படியே அளந்து கொடுத்து விட்டார். மேலும் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரிடம் ”பாதைக்கு கொடுத்த பூமிக்கு பணம் எப்படிக் கொடுப்பது? பட்டாவில் இருக்கும் பூமிதான் அனுபோக பாத்தியத்தில் இருக்கிறது அதற்குத்தான் பணம் கொடுக்க முடியும்” என்று படாதபாடு பட்டு புரியவைத்து அதன் பிறகு தான் கிரையம் செய்து கொடுத்தார்.

இந்தக் கிரையப் பத்திரத்தை கொஞ்சம் விஷயமாக எழுத வேண்டும். இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஆகவே பட்டாவில் இருக்கும் பூமி தான் அனுபோக பாத்தியதை உள்ளது. அதற்கு தான் பணம் கொடுக்க வேண்டும். பத்திரத்தில் உள்ள பூமியின் அளவுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். பத்திரத்தில் இருக்கும் அளவும் பட்டாவில் இருக்கும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை.

நிலம் (30) - அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பிரச்சினைகள்

அன் அப்ரூவ்ட் மனைகளைக் கிரையம் செய்ய கோர்ட் தடை உத்தரவைப் போட்டிருக்கிறது என்பதற்காக அன் அப்ரூவ்ட் சைட் விற்போரும், சைட்டுகள் வாங்கியவர்களும் கோபத்தில் இருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். 

எல்பிஏ, சிஎம்டிஏ, டிடிசிபி அலுவலகங்கள் ஏன் உருவாக்கப்பட்டிருக்கின்றன? அன் அப்ரூவ்ட் என்றாலே இல்லீகல் என்று தானே அர்த்தம் வரும்? அந்த மனைகளை யார் வாங்கச் சொன்னது? அரசா அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்கச் சொன்னது? வீட்டு மனைகளை விற்பதற்கு தகுந்த அமைப்பில் விண்ணப்பம் கொடுத்து அனுமதி பெற்று விற்கச் சொல்கிறது அரசு. ஆனால் ஒரு சிலரின் ஆசைக்காக அரசிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் பூமியைச் சமப்படுத்தி சாலை போட்டு கல்லை நட்டு விட்டு மனை என்றுச் சொல்லி விற்க ஆரம்பித்தவுடன் சல்லிசாகக் கிடைக்கிறதே என்றுச் சொல்லித்தானே அனைவரும் வாங்கினார்கள். அன் அப்ரூவ்ட் மனைகளை விற்பதே தவறு. அதை விற்று விட்டு அரசுக்கும், கோர்ட் உத்தரவிற்கு எதிராகப் போராடுவது எந்த விதத்தில் சரி? என்று ஒருவர் என்னிடம் கேட்டார். மக்கள் திருந்தாத வரைக்கும் இதைப் போன்ற பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

என்னிடம் ஒரு பிரச்சினை வந்தது. பஞ்சாயத்து போர்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றுச் சொல்லி ஒருவர் வீட்டு மனை ஒன்றினை வாங்கி இருக்கிறார். சில வருடங்கள் சென்றவுடன் காசு சேர்த்துக் கொண்டு அந்த மனையில் வீடு கட்டுவதற்காக சென்று சுத்தப்படுத்தி பூஜை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வேப்பங்குச்சியில் பல் துலக்கியபடி ஒருவர் அங்கு வந்திருக்கின்றார். ”இங்கு என்ன செய்கின்றீர்கள்?” என்று வெகு சாதாரணமாக கேட்டிருக்கிறார். உடனே பூஜை போட்டுக் கொண்டிருந்தவர் ”இது என் வீட்டு மனை, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ யார் அதைக் கேட்க” என்று ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தவுடன் அவர் ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்று விட்டாராம்.

போர் போட்டிருக்கின்றார்கள். மின் இணைப்புப் பெற்றிருக்கின்றார். வீடு கட்ட ஆரம்பித்து முழுவதையும் கட்டி முடித்து கிரகப் பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். வேப்பங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டே ஒருவர் வந்தார் அல்லவா அவர் அங்கு மீண்டும் வந்திருக்கிறார்.

வேப்பங்குச்சிக்காரர் மெதுவாக ஆவணங்களை எடுத்து அவரிடம் காட்டி வீடு கட்டியவரின் இடம் அதே பகுதியில் வேறு இடத்தில் இருக்கிறது என்பதைப் புரிய வைத்திருக்கிறார். ”இது என் இடம், மரியாதையாக வெளியே சென்று விடு இல்லையென்றால் நில அபகரிப்புப் புகாரில் உள்ளே தூக்கிப் போட்டு விடுவேன்” என்றுச் சொல்லி இருக்கிறார்.  இப்போது அந்த வீடு வேப்பங்குச்சிக்காரருக்குச் சொந்தம். ஆள் எப்படி என்று பார்த்தீர்களா?  பூஜை போட்டவுடன் தடுக்கச் சென்றவரிடம் எகத்தாளம் பேசினால் இப்படித்தான் ஆகும்.

இந்தத் தவறு எப்படி நடந்திருக்கிறது என்றால் அன் அப்ரூவ்ட் மனைகள் விற்பவர்கள் பிளானைப் போட்டு மார்கெட் செய்வார்கள். ஓரளவிற்கு மனைகள் விற்றவுடன் மீதமிருக்கும் மனைகளை விற்க முடியவில்லை என்றால் அதையெல்லாம் ஒன்றாக இணைத்து பூமியாகவோ அல்லது வேறு மனைகளாகவோ மாற்றி விடுவார்கள். ஒருவர் 10 செண்ட் மனை வேண்டுமென்று கேட்டால் அதற்கேற்றவாறு கற்களைப் பிடுங்கி விட்டு புது மனைகளை உருவாக்கி விடுவார்கள். ஆனால் அரசு அனுமதி பெற்ற மனைகளை அப்படிச் செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பொது வழிச் சாலைகளைக் கூட தானம் எழுதிக் கொடுக்க மாட்டார்கள். மனைகளில் விடப்பட்டிருக்கும் பொது இடத்தினைக் கூட விட மாட்டார்கள். பொது இடத்தில் குழந்தைகள் விளையாட உபகரணங்களை அமைத்திருப்பார்கள். அதை அடுத்த மனை ஆரம்பிக்கும் போது பிடுங்கி எடுத்துக் கொண்டு போய் புதிய மனையில் பதித்து விற்பனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதுமட்டுமில்லை மின் கம்பங்களைக் கூட விடமாட்டார்கள். இப்படி ஒரு குரூப் இருக்கிறது. ஆனால் இந்த அன் அப்ரூவ்ட் மனைகளை விற்போரில் பலர் இந்தக் காரியங்களைச் செய்யமாட்டார்கள். சொல்லித்தான் விற்பார்கள். 

கோவையில் ஓர் இடத்தில் அன் அப்ரூவ்ட் மனைப் பிரிவில் ஒரு சில மனைகள் விற்றவுடன் மீதமுள்ள மனைகளை விற்க முடியவில்லை. சாலையையும் சேர்த்து வேறொருவருக்கு விற்று விட்டார்கள். மனைக்குப் பாதை கேட்டு இப்போது அரசு அலுவலங்களில் விண்ணப்பம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்த மனைகளை வாங்கியோரில் பலர். இதை எப்படிச் சரிசெய்வது? விதி! ஆகவே கவனம் கொள்ளுங்கள்.

அன் அப்ரூவ்ட் என்பது அப்ரூவ்ட் என்பதின் எதிர்ச்சொல் தானே?

சரி அந்தப் பிரச்சினைக்கு வருவோம். வீடு கட்டியவர் மனை உரிமையாளர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று காலில் விழுந்திருக்கிறார். வேறு வழி? ஒரு வழியாக இருவரும் பேசி முடிவெடுத்துக் கிரையம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கின்றார்கள். அடுத்த நாள் அன் அப்ரூவ்ட் மனைகளையோ அல்லது அதில் கட்டப்பட்ட வீடுகளையோ கிரையம் செய்ய தடை விதித்து கோர்ட் உத்தரவு போட உள்ளதும் போச்சே என்று நொந்து கொண்டிருக்கிறார்.

யாரோ ஒருவர் என்னைப் பார்க்கச் சொல்லி இருக்கிறார். போனில் விசாரித்து விட்டு என்னிடம் வந்தார். விஷயம் முழுவதையும் கேட்டுக் கொண்டேன். இந்தப் பிரச்சினைக்கு வழி என்ன? ஏதும் இருக்கிறதா? என்று அவரும் பலரிடம் கேட்டாராம். பதிவாளரிடமும் கேட்டிருக்கிறார். ஒன்றும் கிடைக்கவில்லை, பணம் செலவானாலும் பரவாயில்லை எனக்கு பிரச்சினை முடிய வேண்டும் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சட்டத்திற்கு புறம்பாகவோ அல்லது கோர்ட் உத்தரவிற்கு எதிராகவோ இல்லாமல் வெகு சரியான துல்லியமான சொல்யூசன் ஒன்றினை அவருக்குப் பரிந்துரைத்தேன். ”இது மட்டும் நீங்கள் சொல்லியபடி சரியானால் எங்கள் குடும்ப தெய்வமே நீங்கள் தான் சார்” என்றுச் சொல்லி கண்ணீரை உகுத்தார்.

இது அவர் என்னிடம் கொண்டு வந்த அடுத்தப் பிரச்சினை.

எழுந்து கொண்ட அவரை உட்கார வைத்தேன்.

”சார், உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. உங்கள் மனம் அதிலிருந்து விடுபட நினைக்கிறது. அதற்காக யார் மூலமாகவோ என்னைப் பார்க்க வந்திருக்கின்றீர்கள். நான் எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைத் தீர்வாகச் சொல்லி இருக்கிறேன். விஷயம் அவ்வளவுதான். உங்கள் பிரச்சினையின் தீர்வுக்கு நீங்களே காரணம். பிர்ச்சினை தீர்ந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் உங்களுடையதே. இதில் நானெங்கே வந்தேன்? கடவுள் எங்கே வந்தார்?”

”இப்படித்தான், ஏதாவது பிரச்சினைகளில் இருப்போர் சாமியார்களிடம் செல்வார்கள். முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். சாமியார் புன்னகையுடன் ஏதோ அருள்வாக்குச் சொல்வது போல, ”எல்லாம் சரியாகி விடும், கவலைப்படாதே, உனக்காகப் பூஜிக்கிறேன்” என்பார். பிரச்சினையில் சிக்கி இருப்போரின் மனம் அதிலிருந்து விடுபட துடித்துக் கொண்டிருக்கும். அதுவே அதற்கான தீர்வினைச் சொல்லியும் தரும். அதற்குள் மனிதன் யாராவது எனக்கு ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று அலைய ஆரம்பித்து விடுகின்றான். சாமியாரிடம் சென்றவுடன் பிரச்சினை தீர்ந்தது என்று அவரைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்து விடுகின்றார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு மனதுக்குள்ளே இருக்கிறது. யோசித்தால் கிடைத்து விடும். அப்படியும் தீரவில்லை என்றால் அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் மனமே அதற்குரிய ஆட்களை தன்னிடத்தில் இழுக்கும். எப்படியாவது தீர்வு கிடைத்து விடும். அதை விட்டு விட்டு சாமி கடவுள் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள், போய் வேலையைப் பாருங்கள்” என்றுச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

தெளிவடைந்ததைப் போலத் தெரிந்தது. நன்றாக இருந்தால் போதும். வேறென்ன வேண்டும்?


நிலம் (29) - கடைகள் வாங்கும் போது

இணையதளத்தினைப் படித்து வரும் வாசகர் ஒருவர் அவர் வாங்கப் போகும் சொத்தின் விபரத்தைக் குறித்து பல கேள்விகளைக் கேட்டார். பெரும்பான்மையானோருக்கு போனிலேயே எல்லாமும் தெரிந்து விட வேண்டும் என நினைப்பு இருக்கிறது. ஆனால் அது சொத்து விஷயத்தில் படு பயங்கர பாதகங்களைக் கொண்டு வந்து விடும் என்பது பிரச்சினையில் சிக்கினால் தான் புரியும். படித்தவர்கள் தான் இப்படியெல்லாம் செய்கின்றார்கள்.

முடிந்த வரை விளக்கினேன். போனில் எவ்வளவு நேரம் தான் பேசமுடியும். விட்டால் நாள் முழுக்க பேசுவார் போல. எனக்கு அடுத்தடுத்த வேலைகள் இருந்ததால் பிறிதொரு நாள் கூப்பிடுங்கள் பேசலாம் என்றுச் சொல்லி முடித்து விட்டேன்.

அடுத்த இரண்டாவது நாள் மீண்டும் அழைத்து அதே ராமாயணத்தை ஆரம்பித்தார். அவர் சொத்து வாங்குகிறார். சொத்து பற்றிய ஓரலான விஷயங்களை வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் பேசுவது?  சொத்து பற்றிய ஆவணங்களை நேரில் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். படித்து விட்டு அதன்பிறகு பேசலாம் என்றுச் சொன்னேன். உங்கள் கட்டணம் எவ்வளவு என்று ஆரம்பித்தார். சொன்னேன். அரண்டு போய் விட்டார்.”சார் என்னால் அவ்வளவு எல்லாம் முடியாது” என்று பேச ஆரம்பித்தார். என் வேலைக்கான சம்பளத்தை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்றும் வேறு இடத்தில் ஆய்வு செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்லி மறுத்து விட்டேன்.

விஷயம் முடிந்தது என்று நினைத்திருந்தேன். அடுத்த பத்தாவது நாளில் மீண்டும் அழைக்க ஆரம்பித்தார். ”சார் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள், எனக்கு நீங்கள் தான் ஆவணங்களை தரவு செய்து தர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார். 

முன்பு ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு ஆய்வு முடிந்தவுடன் கட்டணம் பெறுவேன். இப்போது பலரும் சொல்லி வைத்தாற்போல ஆய்வு முடிந்து ஓகே சொன்னவுடன் காணாமல் போய் விடுகின்றார்கள். இல்லையென்றால் பணம் கொடுப்பதற்கு பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். ஆவணங்களுடன் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டுதான் ஆய்வுக்கான வேலையைத் தொடர்வது என்று முடிவு கட்டியதால் என்னால் அடுத்த பல வேலைகளைச் செய்ய முடிகிறது. எவ்வளவு நாள் தான் நானும் சும்மாவே வேலை செய்வது? 

அவர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆய்வு முடிந்ததும் கட்டணம் தருகிறேன் என்றும் அடிக்கடி பேச ஆரம்பித்து விட்டார். மறுத்து விட்டேன். 

இப்படியே சென்று கொண்டிருந்த நாளில் ஒரு நாள் நேரில் வந்து அனைத்து ஆவணங்களையும் என்னிடம் கொடுத்தார். கேட்ட கட்டணத்தையும் கொடுத்தார். ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு அவரை என் முன்னால் அமர வைத்துக் கொண்டே பத்தாவது நிமிடத்தில் இந்த இடத்தினை வாங்க வேண்டாம் என்றுச் சொன்னேன். 

சார் என்றுச் சொல்லி பதட்டத்தில் எழுந்து விட்டார். மார்க்கெட் விலையை விட முக்கால் விலை என்று புரோக்கர் சொல்லியவுடன் ஆள் ஆசைப்பட்டு பெரும் தொகையினை அட்வான்சாகக் கொடுத்து பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினைப் போட்டு லீகல் பார்த்திருக்கிறார். அந்த சொத்தில் எந்த வித வில்லங்கமும் இல்லை  என அவர் வைத்திருந்த லீகல் ஒப்பீனியனும் சொன்னது. 

அவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. காரணத்தைக் கேட்டார். அவரின் முன்பு என்னிடம் இருந்த ஆவணத்தை எடுத்துப் போட்டேன். ”இதெல்லாம் உங்களுக்கு எப்படி சார் கிடைக்கிறது? படுபயங்கர மோசடியில் அல்லவா மாட்டிக் கொண்டேன்” என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் இருக்கும் வியாபாரக் கடை அது. சல்லிசான விலையில் வருகிறது என்றவுடன் ஆள் ஆசைப்பட்டு விட்டார். கடையின் உரிமையாளர் எல்லாச் சொத்துக்களையும் விற்று விட்டு அமெரிக்கா சென்று அவர் மகனுடன் தங்கப்போவதாகவும், அதனால் மார்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்பதாகவும் புரோக்கர் சொல்லி இருக்கிறார். 

அந்தக் கடை இருக்கும் இடத்தில் சாலையினை அகலப்படுத்துவதற்காக நோட்டிபிகேசன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நோட்டிபிகேசனில் இந்தக் கடையின் முக்கால் பாகம் சென்று விடும். அதாவது சுவர் மட்டுமே மிஞ்சும். நோட்டிபிகேசன் அறிவித்த நாளுக்கு அடுத்த வாரத்தில் தான் நம்ம ஆள் அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். சொத்தின் உரிமையாளர் அமெரிக்காவும் போகவில்லை ஆஃப்ரிக்காவும் போகவில்லை. புரோக்கருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்காது. 

”கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிட முடியுமா சார்?” என்று கேட்டார். அதை எப்படிப் பெறுவது என்று சொல்லிக் கொடுத்தேன்.

புரோக்கரை அழைத்துக் கொண்டு சொத்தின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நான் அவரிடம் கொடுத்த நோட்டிபிகேசன் நகலையும், புகார் ஒன்றினையும் அவரிடத்தில் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கின்றார். அடுத்த அரை மணி நேரத்தில் கொடுத்த அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டு அக்ரிமெண்ட் காப்பியை அவர் முன்னால் கிழித்துப் போட்டு விட்டு வந்து விட்டேன் என்றுச் சொன்னார். புரோக்கர் நடுங்கிப் போய் விட்டாராம்.

இந்த விஷயம் எப்படித் தெரியும்? என்று புரோக்கர் அவரிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்றுச் சொன்னார். அவரின் நன்றியைத் தெரிவிப்பதற்கு மேலும் அதிக கட்டணம் தருவதாகச் சொன்னார். என் வேலைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டேன். போதும் என்றுச் சொல்லி மறுத்து விட்டேன்.

ஆகவே கடைகள் வாங்கும் போது சாலை அகலப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்றும், ஏதேனும் நோட்டிபிகேசன் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். 

இப்படிப்பட்ட பிரச்சினையில் சிக்கி இருந்தால் தகுந்த ஆவணங்களை அனுப்பி வையுங்கள். மிகச் சரியான ஆலோசனையைத் தருகிறேன். என் முகவரி கேட்டால் கிடைக்கும். போனில் ஆலோசனை கேட்க வேண்டாம். அது துல்லியமாக இருக்க இயலாது.