குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வில்லங்கச் சான்றிதழ். Show all posts
Showing posts with label வில்லங்கச் சான்றிதழ். Show all posts

Monday, October 10, 2016

நிலம் (32) - வங்கியில் அடமானம் வைத்த சொத்து வில்லங்கமற்றதா?

”வங்கியில் சொத்தினை அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறேன், வங்கியின் வக்கீலே லீகல் ஒப்பீனியன் கொடுத்திருக்கிறார். மொத்த சொத்துக்கும் நான் தான் கையெழுத்து இட்டு கடன் பெற்றிருக்கிறேன்” என்று ஆரம்பித்தார் ஒருவர்.

இந்த ஒருவரின் அப்பா மறைந்து விட்டார். வாரிசுகள் நான்கு பேர். இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழும் பெற்றிருக்கின்றார்கள். பட்டாவும் நான்கு பேர்களின் பெயர்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் வங்கியில் ஒரே ஒருவர் மட்டும் மூலப்பத்திரத்தை வைத்து கடன் பெற்று இருக்கிறார். பிறரின் கையெழுத்தோ ஒப்புதலோ பெறவில்லை. மொத்த சொத்துக்குக்கும் அந்த வங்கிக் கடன் கொடுத்திருக்கிறது.

சொத்தினை விற்க வேண்டி வந்த போது பிறரின் கையெழுத்தே தேவையில்லை என்று பேச ஆரம்பித்தார் ஒரு பெரியவர். சின்ன விஷயம் இதைகூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை என்னிடம் அழைத்து வந்தார் நண்பர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரிடம் பேசிப் புரியவைத்தேன். விவரம் இல்லாதவர் சொன்னால் தான் புரியும்.

அவரிடம் உள்ள பிரச்சினை என்ன தெரியுமா? வங்கி மேலாளர் தவறு செய்யமாட்டார் என்ற நினைப்பில் படித்தவர், பெரிய பதவியில் இருப்பவர் தவறு செய்வாரா என்ற நம்பிக்கையின் காரணமாக விவாததத்தில் இறங்கி விட்டார் அவர்.

என்னிடம் விற்பனைக்கு வரும் பல்வேறு சொத்துக்களில் பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கி இருக்கிறேன், லீகல் எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது என்று சொல்வார்கள். காது தான் இருக்கிறதே, கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். எத்தனை பேருக்குச் சொல்லிக் கொண்டே இருப்பது? சிலருக்குச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவர்களின் திறன் இருக்கும்.

வங்கியில் அடமானம் வைத்தச் சொத்துக்கள் ஏதோ ஒன்றிரண்டுகள் பிரச்சினை இன்றி இருக்கலாம். வங்கிகளில் லீகல் பார்ப்பது தவறானது என்றுச் சொல்ல வரவில்லை. ஆனால் 1 சதவீதம் தவறு நேர வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த ஒரு சதவீதம் பெரும் மன உளைச்சலைத் தந்து விடும்.

வங்கியில் அடமானம்  வைத்துப் பெறப்பட்ட சொத்துக்களின் லீகலை நம்பி விடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Wednesday, August 5, 2015

நிலம்(16) - தொல்லியல்துறை நிலங்களை கிரையம் பெற்றால் என்ன ஆகும்?

அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தையார் என்னைச் சந்திக்க வேண்டுமென போனில் கேட்டார். 

வீட்டிற்கு வரச்சொல்லி அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கை நிறைய டாக்குமெண்ட்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். 

”சார், என் பையன் அமெரிக்காவில் இருக்கின்றான். அவன் உழைப்பில் கிடைக்கும் காசில் கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தால் அவன் எதிர்காலத்துக்கு பயன்படுமே என நினைத்துக் கொண்டிருந்த போது, எனது நண்பர் மூலமாக இந்த பத்து ஏக்கர் நிலம் விலைக்கு வந்திருக்கிறது. பத்து இலட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துதான் இந்த பேப்பர்களை வாங்கி இருக்கிறேன். என் பையன் உங்களின் பிளாக்கைப் படிப்பானாம். அதனால் உங்களிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு வாங்கிய பிறகு கிரையம் செய்யலாம் என்றுச் சொன்னான், அதனால் தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றார்.

”நாளை மாலை என்னை வந்து பாருங்கள்” என்றுச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அவர் கொண்டு வந்த ஆவணங்களில் வக்கீல் ஒருவரின் கருத்துரையும் இருந்தது. முதலில் அதனை ஆராய்ந்தேன். அனைத்தும் சரியாக இருந்தன. வில்லங்கச்சான்றிதழ், மூலப்பத்திரங்கள் அனைத்தும் சரியாக இருந்தன. அடுத்து எனது மேல் கட்ட ஆவண ஆய்வினைத் தொடர்ந்தேன்.

மேற்படி நிலத்தின் மொத்த மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி இருக்கும். கிரையச் செலவு அது இதென்று கிட்டத்தட்ட இரண்டு கோடியே இருபது இலட்சம் செலவாகும்.

எனது ஆய்வில் மேற்படி நிலம் தொல்லியல் துறையினால் தடைசெய்யப்பட்ட  நிலம் என அறிந்து கொண்டேன். தொல்லியல் துறையினால் எடுக்கப்பட்டு, அதில் எந்த வித கட்டிடங்களோ அல்லது வேறு எந்த வித நடவடிக்கையுமே எடுக்க முடியாத நிலம் அது. அதுமட்டுமல்ல அந்த நிலத்தின் அருகிலிருந்து 300 அடியிலிருந்து 900 அடி வரை எந்த வித கட்டிடங்களோ வேறு எந்த மாற்றமும் செய்ய நினைத்தால் தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இதே போல நிலம் சென்னையில் இருக்கிறது. இந்த நிலத்தினைக் கிரையம் பெற்ற பல சென்னைவாசிகள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல தமிழகமெங்கும் இது போன்ற நிலங்கள் இருக்கிறது. கோவையில் ஒரு முக்கியமான ஊரில் இந்த நிலங்கள் இருக்கின்றன. நிலத்தின் உரிமையாளர் பெயர், பட்டா போன்றவைகளில் எந்த வித மாற்றத்தினையும் தொல்லியல் துறையினர் ஏற்படுத்தவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.

ஆகவே அந்த நிலம், நிலமாகத்தான் இருக்குமே ஒழிய வேறு ஒன்றினையும் செய்ய முடியாது. அப்படி செய்ய  முனைந்தால் அபராதம் மட்டுமின்றி சிறை வாசமும் உண்டு என்கிறது தொல்லியல்துறை.

மறு நாள் மாலை பெரியவர் வந்தார். காஃபி கொடுத்து உபசரித்து விட்டு அதன் பிறகு மேற்படி விஷயத்தை சொன்னேன். அதற்குரிய ஆவணங்களை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவருக்குப் படபடவென்று வியர்க்க ஆரம்பித்து விட்டது. கொடுத்த அட்வான்ஸ் தொகையை எப்படி வாங்குவது என்று இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார்.

இப்படி பல்வேறு சிக்கல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் நிலத்தினை வாங்கும்போது சரியான லீகல் ஒப்பீனியன் தருபவரிடம் லீகல் பெறவில்லை எனில் சம்பாதித்த பணம் வீணாய்ப் போய் விடும்.

அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் இன்ஞ்சினியர் போனில் அழைத்து பல முறை நன்றி நன்றி எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.