குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமயம். Show all posts
Showing posts with label சமயம். Show all posts

Wednesday, August 31, 2016

நான் தாத்தாவாகப் போகின்றேன்

அண்ணன் முத்துகிருஷ்ணனின் மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஒரு பெண் வேமங்குடியில் வாழ்க்கைப்பட்டிருக்கிறது. ஆவணம் அருணாசலம் மாமா வீட்டுக்குப் பின்னால் தான் இரண்டாவது பெண் வாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் எனக்கு மகள்கள் அல்லவா? நான் சித்தப்பா அல்லவா?

அம்மு பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன்,”அம்மு உன்னை ஒருத்தர் சித்தின்னு அழைக்கப்போகிறார்! ரித்திக் நீ மாமாவாகப் போகின்றாய்!” என்றார்.

அம்மு. ‘என்ன? என்ன?’ என்று கேட்டு விழித்தது. ரித்திக் சிரித்தான்.

”ஆமா அம்மு, உன் அக்காவிற்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆகையால் நீ சித்தி தானே?” என்றார்.

ஒரே சிரிப்பு அம்முவுக்கு.

என்னைப் பார்த்தார். எனக்குத் திக்கென்றது. பக்கத்தில் கோதை உட்கார்ந்திருந்தார்.

’நீ தாத்தாவாகப் போகிறாய் தங்கம்’ என்றார் அண்ணன்.

கோதை என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.

”நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது, எனக்கு அண்ணணும் இல்லை, தம்பியும் இல்லை” என்றேன் படக்கென்று.

சிரி சிரியென சிரித்து விட்டு எங்கள் குடும்ப வரலாற்றினைச் சொல்ல ஆரம்பித்தார். அது தனி பதிவில் (குடும்ப வரலாறு பகுதி 1)

இனி என்ன ஆகப்போகின்றது? நான் தாத்தாவாகப் போகின்றேன். வேறு வழியே இல்லை. நான் தாத்தா தான்.

Thursday, August 25, 2016

அழகன்

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தது. அடுத்துப் படிக்க வேண்டும். எல்லோரும் டி.பார்ம் படித்து விட்டு மெடிக்கல் வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அக்கா தஞ்சை அதிமுக மாவட்ட பிரதிநிதி. சேவல் சின்னத்தில் போட்டியிட்ட குழ.செல்லையா மாமாவுக்கு நெருக்கம். ரெகமெண்டேசன் கடிதம் பெற்று தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் டி.பார்ம் சேர முயற்சித்தேன் கிடைக்கவில்லை. 

வீட்டுக்கு பின்னால் ரங்கசாமி அண்ணன் இருந்தார். அவரைச் சந்திக்கச் செல்வதுண்டு. அப்போதே வேதாந்தமாகப் பேசுவார். அவர் என்னிடம் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தையும், பகவத் கீதையையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

அதுவரை மாலைமதி, ராணிமுத்து, ராஜேஷ்குமார், சுபா (எனக்குப் பிடித்த நாவல் தங்கக் கொலுசு மற்றும் தூண்டில் முள்), குமுதம் வகையறாக்களே எனக்குத் தெரியும். ஒரு புது உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ரங்கசாமி அண்ணனுக்கு நன்றி.


உள்ளே இழுத்துக் கொண்டார் கண்ணதாசன். கண்ணனைப் பற்றிய அவரது புலம்பல் கண்ணன் மீது மாறாப்பற்றுக் கொள்ள வைத்தது. கண்ணனைத் தேடினேன். அப்போதெல்லாம் இணையம் ஏது?  காணும் புத்தகத்திலெல்லாம் கண்ணன் படம் கிடைத்தால் கட் செய்து வைத்துக் கொள்வேன். தூண்டிக்காரன் பத்ரகாளி, வீரபத்திரர் என்று தேவர் இனத்தின் அடையாளங்களை விட்டு விட்டு என் மனம் கண்ணனைத் தேடியது. ஜெயதேவரின் அஷ்டபதியில் ராதே கண்ணன் பற்றி கண்ணதாசனின் எழுத்துக்கள் மோகப்படுத்தியது. விடாது தேடினேன் கண்ணனை.

ஒரு வழியாக கரூர் ராமகிருஷ்ண மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பொழுது கண்ணன் பற்றிய அத்தனைப் புத்தகங்களையும், பாடல்களையும் விடாது கேட்க ஆரம்பித்தேன். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கெளதமானந்தரையும் விடவில்லை. எனக்கு ராமகிருஷ்ண கோவிலில் மந்திர தீட்சை கொடுத்த பேலூர் மத்தின் தலைவர் எனது குரு காலம் சென்ற ரங்கநாதனந்தரையும் விடவில்லை. ஆஸ்ரம தலைவர் ஆத்மானந்தா அவர்கள், ’ஏனப்பா கண்ணன் மீது இவ்வளவு பற்று?’ என்று கேட்டு விட்டு அவனைப் பற்றிய புத்தகங்கள், பாடல்கள் எங்கு கிடைத்தாலும் கொண்டு வந்து கொடுப்பார்.

கண்ணனில் மூழ்கி கிடந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கடவுள் பற்றிய ஒரு தெளிவான முடிவிற்கு வந்து விட்டேன். ஆனால் இந்தக் கண்ணன் மீதான ஈர்ப்பு மட்டும் இன்றைக்கும் என்னை விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு அவனைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். கண்ணனின் வாழ்க்கை சொல்வது வேறு ஏதோ. அது என்னவென்று உணர வேண்டும் . ஓஷோவின் பகவத் கீதை ஒரு தரிசனம் மற்றும் அஷ்டவக்ர மகா கீதை புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். காலம் வரட்டும்.

இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உங்களுக்காக இரண்டு பாடல்களை இங்கு இணைப்புக் கொடுக்கிறேன். கேட்டுப்பாருங்கள். மனதை அள்ளி விடுவான் கிருஷ்ணன்.





ராகுல், சிந்துஜா மற்றும் மிருளாளினியின் குரல்களின் வழியே கண்ணனின் அன்புக் கரங்களின் தழுவலில் மனது ஒடுங்கி நிற்கும் அற்புதத்தை அவசியம் அனைவரும் உணருங்கள். இசை வழியே உள்ளத்துக்குள் ஊடுறுவும் அற்புத தரிசனத்தை ஒரு நொடி உணருங்கள். மாயவன் அழகனாய் மனக்கண்ணுக்குள் வெளிப்படும் ஆனந்த தரிசனத்தை உணருங்கள்.

- கோவை எம் தங்கவேல்.



Monday, August 22, 2016

சட்டசபை சொல்லும் கதை

தேர்தல் முடிந்து 2016ம் ஆண்டின் முதல் சட்டசபைக்கூட்டம் நடந்து வருகிறது. சபையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. விவாதங்களும், செய்திகளும் என மீடியாக்கள் வெகு பரபரப்பு. ஒவ்வொருவருக்கும் தகுந்தவாறு கணிப்புகள், வேதனைகள், கண்டிப்புகள், போராட்டங்கள் என்று தர்க்க நியாயங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது ஒரு கதை சொல்லப்போகின்றேன்.

ஒரு ஜென் குரு தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

தினமும் பள்ளிக்கு வருவார். சீடர்கள் பெஞ்சுகளில் அமர்ந்திருப்பர். அனைவரையும் பார்ப்பார். ’அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துப் படியுங்கள். யாரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடாது’ என்பார். சீடர்கள் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு படிப்பர். 

ஜென் குரு மேஜை மீது தலையை வைத்துக் கொண்டு தூங்கி விடுவார். குருவிடமிருந்து மெலிதான குறட்டைச்சத்தம் வந்ததும் சீடர்கள் அனைவரும் சத்தமின்றி தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். சத்தம் அதிகமானதும் ஜென் குருவின் கைகள் அருகிலிருக்கும் பிரம்பை எடுத்து டேபிளில் ஒரு அடி அடிப்பார். சீடர்கள் அமைதியாக இருப்பார்கள். மீண்டும் மெலிதான குறட்டைச் சத்தம் வரும். சத்தம் அதிகமாகும். மீண்டும் பிரம்படி. 

சீடர்களுக்கு இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஜென்னை அல்லவா கற்றுக் கொள்ள வந்தோம். ஆனால் இங்கு நடப்பதோ வேறாக அல்லவா இருக்கிறது என்று நினைத்தார்கள். அதை குருவிடமும் கேட்டார்கள்.

’நீங்கள் ஜென்னைத் தான் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்’ என்றார் குரு.

சீடர்களுக்குப் புரியவில்லை.

‘மனம் பலவாறாகச் சிதறிக் கொண்டிருக்கும். அதைத் தட்டித் தட்டி ஒழுங்குப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்’ என்றார்.

இந்தக் கதை சொல்லும் பாடம் என்னவென்று புரியவில்லை என்றால் தொடருங்கள்.

அரசியல்வாதிகளை மக்கள் மறக்காமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, மக்கள் மனதில் தங்களை இருப்பு வைத்துக் கொண்டே இருப்பதற்காக சம்பவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 

ஒரே மாதிரியான அரசியல் நிகழ்வுகள் நடந்தால் மக்கள் நாட்டுப்பிரச்சினைகளை பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அது மக்கள் எழுச்சியாக வந்து விடும் ஆபத்து இருக்கிறது. அதையெல்லாம் மக்கள் யோசித்து விடவே கூடாது. டீக்கடையிலும், தினசரிகளிலும், டிவிக்களிலும் ஒவ்வொரு நாளும் இது போன்ற பிரச்சினைகள் பேசிக் கொண்டிருக்க வேண்டும். எழுதப்பட வேண்டும். 

அரசு நலத்திட்டங்கள் எல்லாம் செய்கிறதே என்று கேட்கத் தோன்றும். அமைச்சர் வீட்டிற்கு வரும் சாலைகள் போடப்படும் போது அருகிலிருக்கும் சாலைகளும் செப்பனிடப்படுவது தான் நலத்திட்டங்கள்.

அரசியல் என்பது சாதரண விஷயமில்லை. அதற்கென அரிச்சுவடிகள் தனியானவை. அவை புத்திசாலிகளுக்கு மட்டுமே புரிந்தவை. அந்தப் புத்திசாலிகள் தலைவராகின்றார்கள். கொஞ்சம் புத்திசாலிகள் அமைச்சராகின்றார்கள். பிறர் தொண்டராகவே இருக்கின்றார்கள்.

ஒரு ஜென் குரு தட்டுவதால் சீடருக்கு ஜென்னை போதிப்பது போலவே அரசியல்வாதிகள் கிளப்பும் பிரச்சினைகளால் அரசியல் செய்கின்றார்கள். புரிந்து கொள்ள முயலுங்கள்.


2016 கோவை புத்தக திருவிழாவில் ஒரு நாள்

பொழுது புலரும் முன்பு எழுந்து கொள்வேன். ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீர். கொழுப்பைக் குறைக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும் என நண்பர் சொல்லி இருந்தார். டீ, காபி, சுக்கு மல்லிக்காஃபி எல்லாம் போயிடுச்சு. வழக்கம் போல உழவர் சந்தைக்குச் செல்லாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். மனையாள் சந்தைக்குச் சென்று விட்டார்.

வீட்டில் சுத்த சைவம். இலை தழைகள் தான். உறவினரும், நண்பர்களும் வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை. அப்படி வந்தாலும் ஒரு நாள் அதிகபட்சம் இரண்டு நாட்கள். விட்டால் போதும் என ஓட்டம் பிடிப்பார்கள். காரம், புளி இல்லாமல் அரை உப்புச் சாப்பாடு என்றால் எவர் தான் இருப்பார்கள்?



தினமலரில் கோவை கொடீசியா வளாகத்தில் புத்தக திருவிழா என்று போட்டிருந்தார்கள். பசங்க ஞாயிறுகளில் பதினோரு மணிவாக்கில் டிவியில் உட்கார்ந்து விடுவார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது போக்கு டிவி. கொடீசியா கிளம்பினேன். 

வீல் சேர் கொண்டு வந்து கொடுத்தார்கள். முன்புறம் பெரிய பந்தல் போட்டு பெரிய பெரிய புத்தக கம்பெனிகள் ஸ்டால் போட்டிருந்தார்கள். கூட்டமும் அதிகம் தான். எனக்குத் தேவையான ஓஷோ புத்தகங்களை கவிதா பப்ளிகேசனில் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் ராம்ப் இல்லை. படிக்கட்டுகள் எதிரே இளித்தன. இரண்டு பக்கமும் இருந்த ராம்பை அடைத்து வைத்திருந்தார்கள். புத்திசாலிகள்.

ஒரு வழியாக இறங்கி பின் வீல் சேரினை தூக்கி வைத்து உள்ளே சென்றேன். பையன் வீல் சேரினைத் தள்ளிக் கொண்டு சென்றான். நிவேதிதா ஒவ்வொரு ஸ்டாலாக சென்று உள்ளே இருக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றினையும் எடுத்து எடுத்துப் பார்ப்பதும் பின்னர் விலையைப் பார்ப்பதுமாய் இருந்தது. பையனும் இருக்கும் ஆங்கில சிறுவர் இதழ்களை எல்லாம் அலசி ஆராய்ந்து புத்தகங்களைத் தேர்வு செய்தான். நானும் மனையாளும் ஸ்டாலின் வாசலில் உட்கார்ந்திருந்தோம். மூன்று மணி ஆயிற்று. இன்னும் அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி முடியவில்லை.

பசி கிள்ளல் போட்டது. கேண்டீன் சென்றோம். பசங்க வெஜ் பிரியாணியும், நானும் மனையாளும் இரண்டு சப்பாத்திகளும் சாப்பிட்டோம். அங்கு டேபிள் துடைத்துக் கொண்டிருந்த பெண்மணி மிகவும் களைத்துப் போயிருந்தார். சாப்பிட்டாயாம்மா எனக் கேட்டேன். இன்னும் சாப்பிடவில்லை சார் என்றது அது. மனையாள் கொஞ்சம் காசு கொடுத்துப் போய் சாப்பிடும்மா என்றார்.

மீண்டும் புத்தகத்தேடல் ஆரம்பித்தது. ஆயிற்று ஐந்து மணி. ஒரு வழியாக எல்லா ஸ்டால்களையும் பார்த்து புத்தகங்களைப் புரட்டி தேவைக்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தோம்.

வந்ததும் பசங்க இருவரும் பேனாவை எடுத்து ஒவ்வொரு புத்தகங்களிலும் பெயரும் தேதியும் எழுதினார்கள். மனையாளுக்கு அடியேன் சலுகை விலை பொன்னியின் செல்வன் பதிப்பினை வாங்கிக் கொடுத்திருந்தேன். இருக்கும் வேலைப்பளுவில் அவர் ஐந்து பாகங்களையும் படிப்பதற்கு ஐந்து வருடம் ஆகும் என நினைக்கிறேன்.

உயிர்மையில் கூட்டம் இல்லை. அதே போல கிழக்குப் பதிப்பகத்திலும் அதிகம் இல்லை. காலச்சுவடு சொல்லவே வேண்டாம். புத்தகத்தை எடுத்தாலே திகீர் என்கிறது. ஒவ்வொன்றும் 200, 300, 500, 1000 என்று இருக்கிறது. 

குழந்தைகள் அதிகம் வந்திருந்தார்கள். குழந்தைகள்  புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. லயன் காமிக்ஸ் ஸ்டாலில் கூட்டம் அதிகம். ஆனால் அவர்களும் அதிக விலை வைத்து விற்கின்றார்கள். 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் ஆங்கில நாவல்கள் கலர் கலரான புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். பையன் அங்கு சென்று கொஞ்சம் புத்தகங்களை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். ஒரு புத்தகத்தினை பிரித்தேன். கண்ணில் பட்ட வார்த்தை அய்யோ என கதறவிட்டது. அவனுக்கு இன்னும் கொஞ்சம் வயது வரட்டும் என்று நினைத்து மறுத்து விட்டேன். 

மனையாள் வெளிநாட்டு இலக்கிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். ’உள்நாட்டு இலக்கியத்தைப் படிக்கவே முடியவில்லை. இதில் அயல் நாடு வேறா தூக்கித்தூரப்போடு’ என்றேன். பின்னே எரிச்சலாக இருக்காதா? கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளவே முடியாது. அந்தக் கலாச்சாரத்தைப் படித்து என்ன கிழிக்கப்போகின்றோம்? நமக்கெல்லாம் ஜானகிராமன் வகையறாக்கள் தான் சரிப்படும். பிகேபி, சுபா, ராஜேஷ்குமார் எல்லாம் படித்து ஏமாந்ததுதான் மிச்சம். பொட்டுப் பிரயோஜனம் இல்லை. இந்த நாசமாப்போகும் சினிமா, டிவிக்கு இந்தப் புத்தகங்கள் எவ்வளவோ பரவாயில்லை. 

கொட்டகையில் இருந்த புத்தக ஸ்டால்களில் கூட்டம் புத்தகங்களை அள்ளியது. வியாபாரம் சூப்பர் சார் என்றார் பில் போடுபவர். ஸ்டாலுக்கு பத்து நாளைக்கு 36000 ரூபாய் கட்டணமாம். ‘பின்னர் ஆள் கூலி, சாப்பாடு, ஹோட்டல் பில், போக்குவரத்துச் செலவு என்று அதற்குப் பிறகுதான் லாபம்’ என்றார். ’அதெல்லாம் தாண்டியாச்சு சார்’ என்றார் அவர் தொடர்ந்து. வளரும் பதிப்பாளர்கள் என்றொரு பகுதியில் ஒரு டேபிளில் கொஞ்சம் புத்தகங்களை வைத்திருந்தார்கள். ஒரு பெரிய புக் ஸ்டாலில் வாசலில் ஒரு பையன் நின்று கொண்டு உள்ளே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருந்தார். இதில் அயர்னி என்னவென்றால் கிண்டில் வேறு விற்றுக் கொண்டிருந்தார்கள். புத்தகத்துக்கும் கிண்டிலுக்கும் சரிப்பட்டு வருமா?

பசங்க இருவரும் புத்தகங்களை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு சீரியசாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அடியேனும் தான். மனையாள் சமையல் செய்யச் சென்று விட்டார். அந்தப் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் கிச்சனையே பார்த்துக் கொண்டிருந்தன. 

Saturday, August 13, 2016

துறவு என்பது என்ன? காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா?

மனதை அழுத்தும் துன்பங்களில் இருந்து விடுபட கோவில்களை நாடுகிறேன். சில சமயம் சாமியார்களை நாடுகிறேன். சில சமயம் அவர்கள் சொல்லித்தரும் பயிற்சிகளைச் செய்கிறேன். எல்லாவற்றையும் துற என்கின்றன நூல்கள். ஒரு சிலர் அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள். என்னதான் செய்வது? புரியவில்லை. யாரிடம் கேட்பது என்று புரியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. எனக்குப் புரியும் படி ஏதாவது சொல்ல முடியுமா? - மாலதி(யூயெஸ்ஸே)

உங்களுக்கான பதிலை ஒரு புத்தகத்திலிருந்து தருகிறேன். அது பலருக்கும் நிச்சயம் உதவும். பலரும் பல மாதிரிச் சொல்லியதுதான். புரியும் படிச் சொல்ல இந்த புத்தகத்தை எடுத்துக் கொள்கிறேன்.

முதலில் மதம், அமைப்புகள் பற்றிய குறிப்பு:-

அன்பே,
மனிதன் அடிமையாகிப் போனான்
ஏனெனில், தனிமைக்குப் பயந்து.

அந்தப் பயத்தால் ஒரு கூட்டம், சமூகம், சங்கம்
அவனுக்குத் தேவைப்பட்டதால்

பயமே அத்தனை அமைப்புகளுக்கும் அடிப்படை
எப்படி இந்த பயந்த மனதால்
சத்தியத்தை அறிய முடியும்?

சத்தியத்தை அறிய துணிவு வேண்டும்
துணிவு தவத்தினால் வருகிறது
எந்தக் கூட்டத்திலிருந்தும் அல்ல.

ஆகவே தான்

எல்லா மதங்களும்
சங்கங்களும் அமைப்புகளும்
சத்தியத்தைத் தேடும் பாதையை
மறைக்கின்றன
மூடுகின்றன
தடை செய்கின்றன. 

(குறிப்பு : சத்தியம் என்பதை உண்மை என்று கருதவும்)

* * *

அடுத்து துறவு பற்றியது.

துறவு பொருள்கள் சம்பந்தப்பட்டதல்ல
எண்ணங்கள் சம்பந்தப்பட்டது
துறவு வெளியே சம்பந்தப்பட்டதல்ல
உள்ளே சம்பந்தப்பட்டது
துறவு உலகம் சம்பந்தப்பட்டதல்ல
ஒருவன் சம்பந்தப்பட்டது

உலகத்தில் இருப்பது பற்று இல்லை
உன் மனதில் உலகம் இருப்பது தான் பற்று
உன் மனதிலிருந்து உலகம் மறைந்து விட்டால் - அது தான் துறவு.

* * *

மனிதன் யதார்த்தத்தில் வாழ்வதில்லை
கனவுகளிலேயே வாழ்கிறான்
ஒவ்வொரு மனமும் தனக்கென ஒரு உலகத்தை
எங்கும் காணக்கிடைக்காத உலகத்தை
உருவாக்கிக் கொண்டுள்ளது

இரவும் பகலும் மனம் கனவுகளிலேயே இருக்கிறது
இந்தக் கனவுகள் கணக்கில்லாமல்
கட்டுக்கடங்காமல் போகும் போது
மனிதன் பைத்தியமாகிப் போகிறான்

ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் இருத்தல் என்பது
கனவுகளற்று இருப்பதே.

* * * 

ஓஷோவின் இந்தக் கவிதை சொல்லும் அர்த்தங்கள் ஆயிரமாயிரம். அப்துல்கலாம் கனவு காணச் சொன்னாரே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது உலக வாழ்க்கை. உலக வாழ்க்கை என்பது வேறு ஒரு மனிதன் துறவு கொள்வது என்பது வேறு. 

இது உங்களுக்கான கனவு. நீங்கள் தெளிவாயிருத்தலே துறவு என்கிறது இந்தக் கவிதை.

அந்தக் காலத்தில் துறவு பூண்டவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். நபிகள் திருமணம் செய்து கொண்டவர். கண்ணன் பல திருமணங்களைச் செய்து கொண்டவன். திருக்குரான், கீதைகள் எல்லாம் அருளப்பட்டது திருமணம் ஆனவர்களாலே. திருமணம் ஆகாமல் பிரம்மச்சரியம் ஏற்பதை துறவு என்றுச் சொல்வது அபத்தம். அமைப்பினைப் பாதுகாக்க அல்லது உருவாக்கப் பயன்படுபவை இது போன்ற வேஷங்கள். ஆனால் துறவு என்பது உடலுக்கு அல்ல உள்ளத்துக்கு.

எண்ணங்களில் நான் இல்லாமல் நிகழ்வில் வாழ்வதுதான் உண்மையான துறவு. நிகழ்வில் வாழ ஆரம்பித்தால் உலக வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என புரிந்து கொள்ள முடியும். பிறகென்ன துக்கமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. எல்லாம் ஒன்று தான்.

மனிதன் ஒரு ஆற்றினைப் போல வாழ வேண்டும். குளத்தைப் போல அல்ல.

குறிப்பு : மேற்கண்ட எழுத்து அனைத்தும் ஓஷோவின் ஒரு கோப்பைத் தே நீரில் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. நன்றி ஓஷோ மற்றும் கம்யூன்.

Wednesday, August 10, 2016

கோச்சிங் சரியில்லை

பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்கு நின்று கொண்டிருக்கையில் அருகில் நின்று கொண்டிருந்த மாணவியின் அம்மா ’பத்தாவது வரை தான் இந்த ஸ்கூலில் கோச்சிங் நல்லா இருக்காம். பனிரெண்டாம் வகுப்பிற்கு கோச்சிங்க் சரியில்லையாம்’ என்றுச் சொன்னதாக மனைவி சொன்னார். மனைவியின் உறவினர் ஒருவர் தன் குழந்தையை ஒவ்வொரு பள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். கோச்சிங் சரியில்லையாம்.

’தேர்வு எழுதுவது வாத்தியாரா? ஸ்டூடண்டா?’ என்று கேட்டேன். கோதை என் முகத்தையே பார்த்தார். ’அரசுப் பள்ளியில் படிக்கிறவர்கள் கூட இன்றைக்கு அதிக மார்க் எடுக்கின்றார்கள் கோதை அங்கெல்லாம் கோச்சிங் எப்படி இருக்கும் என்று யோசித்தாயா?’ என்று கேட்ட போது பேசாமல் இருந்தார்.

1992ல் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வருவதற்கு முன்பே கணிணியில் பேசிக், ஃபோர்ட்டான், பாஸ்கல், கோபால், சி லாங்குவேஜ்களைப் படிக்க முயன்று பல்வேறு மனப்பிறழ்வுகளுக்கு உட்பட்டவன் அடியேன். ஒரு சாதாரண கூட்டலைக்கூட பேசிக் மொழியில் எழுத வராது. அதன் வரிசை என்று ரெம் என்றால் என்ன என்ற கேள்வி இப்படி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் பேசிக் லாங்குவேஜின் புரோகிராமிங் டெக்னிக்கே புரிபட்டது. அடுத்து போர்ட்டான், பாஸ்கல், கோபால் மொழிகள் எல்லாம் என்னை படாத பாடு படுத்தின. விண்டோஸ் 3.1 என்று நினைக்கின்றேன். ஒரே ஒரு கணிணியில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தார்கள். கலர் மானிட்டரெல்லாம் காஸ்ட்லி. அதில் வரும் சில படங்களைப் பார்க்கையில் சுவாரசியமாக இருக்கும். பூண்டி கல்லூரியில் படிக்கும் போது முதல் செமஸ்டரில் தமிழில் மட்டும் அதிக மார்க். 92 மார்க் என்று நினைக்கிறேன். மற்ற சப்ஜெக்டில் ஆவரேஜ். எல்லாம் ஆங்கிலம். யாருக்குப் புரியும்? ஆனால் எனது சிறு வயதில் ஜோசப் வாத்தியாரால் அறிமுகம் செய்யப்பட்டு தினமும் ஹோம் வொர்க்காக எழுதிச் சென்ற பனிரெண்டு வகை வாக்கியங்களால் எனக்கு மனதில் தைரியம் வர ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ள முயன்றேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். சுஜாதாவெல்லாம் கல்லூரிக்கு வந்திருந்தார். என்னவோ மீட் நடத்தினார்கள் சீனியர்கள். அவரிடம் பேச மாணவர்கள் அலைமோதினர். நானெங்கே பேசுவது? ஒரு சீனியர் மாணவர் சேலத்தைச் சேர்ந்த சசிகுமார் எனக்கு நண்பர், அவர் மூலமாக ஒரே ஒரு பேக் கிடைத்தது. கொடுத்த காசுக்கு வசூல் செய்து விட்டேன். இதர மாணவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

காலம் மாறியதில் பேசிக் எல்லாம் ஓடிப்போய் விட்டன. இப்போது என்னென்னவோ புதுப்புது மொழிகள் வந்து விட்டன. சாஃப்ட்வேர் படித்தவரெல்லாம் அமெரிக்கா சென்று லட்ச லட்சமாய் சம்பாதித்தார்கள். பி.எஸ்.சி முடித்ததும் எனக்கும் ஆசை வர நானும் மைக்ரோசாஃப்ட் எம்.சி.எஸ்.சி படித்து ஆன்லைனில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். ஊனமுற்றவன் என்பதால் எனக்கு அமெரிக்க கதவு மூடப்பட்டு என் கனவுக்கும் குழி வெட்டப்பட்டது. ஒரு சாதாரணவன் எளிதில் கற்று விடும் கல்வி எனக்கு படுபயங்கர வலிகளைக் கொடுத்தது. இருப்பினும் அதையெல்லாம் நானொரு ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் முட்டிபோட்டு வெறுங்காலில் சூடு கொப்பளிக்கும் கப்பிக்கல் சாலையில் தவழ்ந்து சென்ற போது எனக்கு கால் மட்டும் தான் வலிக்கும். மனது அது பாட்டுக்கு இருக்கும். அமெரிக்க கதவினை எம்பசியில் மூடியபோதுதான் அம்மா மீது கோபம் கொப்பளித்தது. அன்றே கொன்று விட்டிருந்தால் இன்றைக்கு இந்த அவமானம் எனக்கு ஏற்பட்டிருக்குமா என்று மனது கொந்தளித்தது. நான் வெகு சிரமப்பட்டு படித்த எம்.சி.எஸ்.சிக்கு இப்போது மதிப்பில்லை.  

பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் முதல் மார்க். எனக்கும் என் மச்சான் பிரான்ஸிஸ்காசனுக்கும் போட்டியோ போட்டி. பத்தாவது வரை அப்படித்தான். என் கூடப்படித்த மாணவி உமாவின் அப்பா டீக்கடையும், ஹோட்டலும் வைத்திருந்தார். அவர் ஜோசியம் கூட பார்ப்பாராம். அம்மா அவரிடம் என் ஜாதகத்தைக் காட்டினாராம். அவர் சொன்னாராம் உன் பையன் பட்டனைத் தட்டித்தான் சம்பாதிப்பான் என்று. அம்மாவுக்கு அப்போது டெலிபோன் பட்டன் தான் தெரியும். எனக்கு டியூசன் சொல்லிக் கொடுத்த ஓவிய வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் டெலிபோன் எக்சேஞ்ச் இருந்தது. அங்கு சென்று பார்ப்பேன். இங்கு தான் எதிர்காலத்தில் வேலை செய்யப்போகின்றேனோ என்று கேள்வி இருந்தாலும் ஐயர் சொல்லிட்டாரு அது சரியாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் டெலிபோனை ஆர்வத்துடன் பார்த்து வருவேன்.

என்னென்னவோ தொழில் செய்து தற்போது ரியல் எஸ்டேட்டில் மையம் கொண்டிருக்கிறேன். என் மச்சானோ தோல் பாக்டரியில் வேலை செய்து ஊரில் பெரிய வீடு கட்டிக்கொண்டிருக்கின்றான். இந்த ரியல் எஸ்டேட் தொழிலிருக்கிறதே முகம் தெரியாத வில்லன்களுடன் மோதுவது போன்றது. மனிதனைப் எளிதில் படித்து விடும் அற்புத அறிவினை எனக்கு இந்தத் தொழில் கற்றுக் கொடுத்துள்ளது. அரசியல் தானாகவே எனக்குள் முளை விட ஆரம்பித்துள்ளது. 

ஆரம்ப காலத்திலிருந்து பத்தாவது வரை முதல் மதிப்பெண் பெற்ற எனக்கு அந்த மதிப்பெண்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது முகத்தில் படீரென்று அறையும் உண்மை. வருடா வருடம் ஸ்டேட்டில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் எல்லோரின் தற்போதைய நிலை என்னவென்று பார்த்தால் கொடுமையாக இருக்கும். எதார்த்தம் என்னவென்றே தெரியாத நிலையில் தங்கள் பிள்ளைகளைப் படாத பாடு படுத்தி படிக்கச் சொல்லி துன்பப்படுத்தும் பெற்றோர்களில் நூற்றில் 99 சதவீதமானோர் கானல் நீரைத்தான் பார்க்கப் போகின்றார்கள்.

வாழ்க்கை என்பது பணம் சம்பாதிக்க இல்லை. வாழ்க்கை என்பது வாழ்வதற்கு என்று புரிய வரும் போது எல்லாம் கையை மீறிப் போய் இருக்கும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்போரின் மொத்தப் பணமும் கார்ப்பொரேட் சாமியார்கள் வசம் சென்று சேர்ந்து விடும்.

நிலையில்லா ஒவ்வொரு பொழுதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பி.ஈ படித்த ஒரு பெண் என்னிடம் 1500 ரூபாய் சம்பளம் தர முடியுமா? என்று கேட்டார்.  இன்றைக்கும் 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து விட்டு வேலையின்றித் தவிக்கின்றார்கள். கொட்டிக் கொடுத்த பணம் கையில் இருந்தால் அவனொரு தொழிலைச் செய்து கொண்டிருப்பான். அதுவும் போச்சு இதுவும் போச்சு. 

குழந்தைகளுக்கு கல்வியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். நான்கைந்து மொழிகளைக் கற்றுக் கொடுங்கள். வேறு ஏதேனும் தொழில் சார்ந்த இணைப்படிப்புகளைக் கற்றுக் கொடுங்கள். அது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிக உதவியாய் இருக்கும்.

அதை விடுத்து கோச்சிங் சரியில்லை என்று ஆரம்பித்தால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை.

Tuesday, August 2, 2016

மாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததிகள் இறுதிப்பகுதி


வீட்டிற்கு வந்தவுடன் என்னை எதிர்பார்த்து இரண்டு நபர்கள் உட்கார்ந்திருந்தனர். ஒருவர் எனது நண்பர். இன்னொருவர் அவரின் நண்பர். பிற விஷயங்களைப் பற்றி விசாரித்து விட்டு வந்த நோக்கமென்ன என்று வினவினேன். ”என்னை ஏதாவதொரு ஆசிரமத்தில் சேர்த்து விடுங்க” என்றார். ஏனய்யா அதற்குள் அவசரப்படுகிறாய்? என்று நினைத்துக் கொண்டு மேலும் விசாரிக்க ஆரம்பித்தேன்.

அவரின் இரண்டு குழந்தைகளும் ஆளுக்கொரு பக்கமாய் காதல் செய்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்களாம். இவருக்கும் மனைவிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். திருமணம் நடந்ததே எங்களுக்குத் தெரியாது. திடீரென்று குழந்தையுடன் வந்து நின்றார்களாம். உறவுக்காரர்களுக்கு கூட தெரியாதாம். இப்போது இந்த விஷயம் தெரிந்து அனைத்து உறவினர்களும் துக்கம் கேட்பது போல வீட்டுக்கு வந்து செல்கின்றார்களாம். இப்படி பல பிரச்சினைகளால் மனசு சரியில்லாமல் போய் விட்டதாம். ஆகவே இருக்கும் சொத்துக்களை தன் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டு ஆசிரமம் சென்று விடுகின்றார்களாம். அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமாம். வழி தேடி வந்துள்ளார். அவரின் பிரச்சினை இப்போது எனக்குள் வந்து விட்டது.

எனக்கொரு நண்பர் சென்னையில் இருக்கிறார். டிரேடிங் பிசினசில் கொடி கட்டிப்பறந்தவர். கார்னெட் மணல் ஏற்றுமதியில் நம்பர் ஒன்னாக இருந்தவர். அவர் செல்லாத நாடுகளே இல்லை எனலாம். ஒவ்வொரு நாட்டிலும் தொழில் அவருக்கு இருந்தது. நானும் எனது நண்பரும் ஆஃப்ரிக்கா நாடுகளுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் வாக்சின் ஊசி போட்டுக் கொள்ள சென்றிருந்தோம். அப்போது அவரின் வீட்டில் தான் தங்கி இருந்தோம். வீட்டில் அவரும் அவரின் மனையாளும் மட்டும் தான் இருந்தனர். அவரின் பெண் குழந்தைகள் எங்கே என்று விசாரித்தேன். அமெரிக்காவில் இருக்கின்றார்கள் என்று வருத்தமாகச் சொன்னார். மேலே எனது நண்பர் சொல்லிய அதே காரணம் தான். என்ன ஒன்று அவரின் பெண் ’நாளைக்கு எனக்கு கல்யாணம்ப்பா’ என்று போனில் சொல்லியதாம். இவரால் தடுக்கவா முடியும்? ’சரிம்மா நல்லா இரு’ என இருவரும் வாழ்த்தி இருக்கின்றார்கள். அன்றிலிருந்து ஆமை தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல இருவரும் ஆகி விட்டார்கள்.


வாழ்க்கை என்னதென்று தெரியாமல் வாழ்ந்து இறந்து போகும் மானிடப்பிறவி அல்லவா? ஆகவே அவர்கள் இருவரும் நிதர்சனம் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை இனிமேல் ஒன்றுமில்லை என்பது போல மாற்றிக் கொண்டு விட்டார்கள். காமமும், இறப்பும் மனிதர்கள் வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. ஆனால் மனித சமூகம் காமத்தைப் பற்றிப் பேசாதே என்றுச் சொல்லிகொடுத்து வருகிறது. சாவைப் பற்றிப் பேசாதே என்று பயமுறுத்தி வருகின்றது. காமம் மனித வாழ்வினை பிரதி நிதிப்படுத்துவதை மறைத்து விடுகின்றார்கள். அது பாவம் என்கிறார்கள். சாவு என்பது கொடுமையானது என்று பயமுறுத்தி விடுகின்றார்கள். மனிதன் உருவானதே காமத்தால் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல சாவதும் உண்மை. ஆனால் இவை இரண்டும் மாபெரும் மறைவுப் பொருளாய் மாற்றப்பட்டுள்ளன.

காமத்தால் மனிதன் தன்னைப் பிரதிநிதிப்படுத்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாறு அவன் செய்யும் போது பிரதியை நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று எப்படி உத்தரவு போட முடியும்? வாழ்வு முடிந்ததும் பிரதி உன்னைத் தொடர்ந்து பிரதிநிதிப்படுத்துவான். இதில் ஏன் இருவரும் துன்பப்பட வேண்டும்? உலகிற்கு வந்தீர்கள், வாழ்ந்தீர்கள், உங்கள் பிரதியை நீங்கள் விட்டுச் செல்வீர்கள். அந்தப் பிரதி தனக்கான வாழ்வைத் தானே வாழ்ந்து விட்டுச் செல்லட்டுமே? ஏன் அந்தப் பிரதியின் வாழ்வையும் நீங்களே வாழ முயல்கின்றீர்கள் என்றொரு கேள்வியை என் நண்பரைப் பார்த்துக் கேட்டேன்.

அவருக்குள் என்ன தோன்றியதோ தெரியவில்லை. காஃபி வேண்டுமென்று கேட்டார். குடித்ததும் வீட்டுக்குச் சென்று விட்டார். மறு நாள் காலை போனில் அழைத்தார்.

“தங்கம், மனசு இலேசாகி விட்டதுப்பா, நானும் என் மனையாளும் சந்தோசத்துடன் இருக்கிறோம்” என்றார்.

இதைத்தவிர வேறென்ன வேண்டும் எனக்கு? அவரின் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார் என்றால் அவரின் வாழ்க்கை மகிழ்வானதாகத்தானே இருக்க முடியும்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இனி எதிர்கால சந்ததியினர் பிரச்சினைக்கு வருவோம். தனி மரம் தோப்பாகுமா? என்று எவரும் யோசிப்பதில்லை. தன் சுகம், தன் வாழ்க்கை, தன் குழந்தை என்று இருப்போர்களின் கடைசிக் கால வாழ்க்கை ஏதாவதொரு முதியோர் காப்பகத்தில் முடிந்து விடும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நான் சம்பாதிக்கிறேன், என் வாழ்க்கை, நானே முடிவெடுப்பேன் என்று நினைத்து அதன்படி வாழ்க்கை நடத்துவது எந்தளவுக்கு முட்டாள்தனம் என்று நினைத்துப் பார்க்க வேண்டிய காலம் இது. அமெரிக்காவில் கூட குடும்பங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றன.

மனிதனின் வாழ்க்கைப் சகமனிதனைச் சார்ந்தே இருக்கின்றன. அதுதான் அமைப்பே! உண்மையை உணருங்கள். வாழ்வினைச் செழிப்பாக்குங்கள்.

Wednesday, July 27, 2016

எம்.எல்.ஏ தொடர் (5) - ஜல்லிக்கட்டு தமிழர்களின் தெய்வ வழிபாடு

யெம்மெல்லே காரில் சுதந்திரத்துடன் சட்டசபைக்குச் சென்று கொண்டிருந்தார். சுதந்திரம் யோசனையில் இருந்தார். சுதந்திரத்தின் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு சிரிப்பு வந்தது. ’இவனெல்லாம் என்னத்தை யோசித்து என்னத்தைக் கிழிக்கப்போறானோ? சுதந்திரம் பெயரில் மட்டும் தான் இருக்கிறது என்பதை அவன் இதுவரைக்கும் உணரவே இல்லையே முட்டாப்பய’ என்று நினைத்துக் கொண்டார்.

”என்னய்யா சுதந்திரம்! யோசனையாவே இருக்கீயே? என்னா விஷயம்?”

“அண்ணே! இந்த ஜல்லிக்கட்டை நினைச்சேன்யா? கொன்னா தப்பு இல்லையாம், ஆனால் விளையாடினா தப்பாம். இது என்னங்கய்யா நியாயம்?”

“அட அதுவாய்யா? விஷயத்தைச் சொல்றேன், குறுக்க குறுக்க கேள்வி கேட்டு லொள்ளு பண்ணாதய்யா” என்றவர் தொடர்ந்தார்.

“நேற்று ஆயுத எழுத்து விவாதத்தில் பெருமாள் என்பவர் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அபிடவிட்டில் கிருஷ்ணர் காளையை அடக்கி விளையாண்டார் என்றும் அது மத சம்பந்தப்பட்டது என்பது போலவும் ஒரு பாயிண்டை குறிப்பிட்டிருந்தார்கள் என்றார். இதில் நுண்ணரசியல் இருக்கிறது என்றார். அது சரிதான்யா. 

நம்ம சிவன் கோவிலில் பார்த்தாய் என்றால் காளை மாடுதான் சிவனுக்கு வாகனம். காளை மாட்டினை நாமெல்லாம் வணங்குகிறோம். அதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. ஆனால் இதைப் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. அதுமட்டுமல்ல சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ’பாரம்பரியம் என்பதாலே மாடுகளை வதைக்க அனுமதிக்க முடியாது’ என்கிறார்கள். 


மஞ்சு விரட்டு என்பது பாரம்பரியம் இல்லைய்யா. அது மத வழிபாட்டு முறை. தமிழர்கள் தான் உலகிலேயே மாட்டுப் பொங்கல் வைத்து மாடுகளை வணங்குபவர்கள். பசு மாடுகளுக்கு லட்சுமி என்று பெயர் வைப்பவர்கள். கோவிலுக்கு காளைகளை நேர்ந்து விடுவர். அவ்வாறு நேர்ந்து விடும் காளைகள் வயற்காட்டில் பயிர்களை மேய்ந்தால் கூட யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றினைந்து தமிழரின் தெய்வ வழிபாட்டோடு கூட இருக்கும்  மாடுகளையும், ஜல்லிக்கட்டினையும் வேறு வழியில் திசை திருப்புவது இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்றே நம்ப வேண்டியிருக்கிறது. இந்திய அரசு தன் அபிடவிட்டில் நான் மேலே சொல்லி இருப்பதைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதை என்னவென்று புரிந்து கொள்வது?

அது மட்டுமல்ல கிருஷ்ணர் ஜல்லிக்கட்டினார் என்று அபிடவிட்டில் சொல்வது சரியில்லை. இங்கு தமிழகத்தில் இருக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்களில் இருக்கும் நந்திகள் சொல்லும் சாட்சியத்தினை ஏன் மத்திய அரசு குறிப்பிடவில்லை என்று புரியவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது மிக வலுவான ஆதாரங்களையும், அதற்கான சாட்சி ஆவணங்களையும் கொடுத்தால் நீதிபதிகள் நிச்சயம் அது பற்றி பரிசீலிப்பார்கள். 

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒரு சிலருக்கு இருக்கும் நோக்கம் போல தெரிகிறது. இயற்கை விவசாயத்தை அழித்த பிரிட்டிஷ் அரசு போல தமிழர்களின் வாழ்வியலை சீரழிக்கும் போக்கு ஒரு சில ஆதிக்க மனப்பான்மை கொண்ட சக்திகளுக்கு இருக்கிறது என்பது உண்மை என்பது போல நடக்கக்கூடிய சம்பவங்கள் சொல்கின்றன.

அதுமட்டுமல்லய்யா சுதந்திரம். இன்னொன்றையும் உன்னிடம் சொல்லி விட வேண்டும். இந்து மதம் என்பது இந்தியாவில் தெய்வ வழிபாட்டினை கொண்டுள்ளவர்கள் அனைவரையும் இணைத்து இந்து மதம் என்றுச் சொல்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சில புத்திசாலித்தனமுள்ள ஆதிக்கவர்க்கத்தினர் இந்து மதம் என்ற பெயரால் ஒவ்வொரு இன வழிபாடுகளை, முறைகளை, பாரம்பரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட முயல்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறதய்யா? அப்படி சிதைத்து விட்டால் பல இன மக்களின் வழிபாட்டினை ஒரே முறையாக்கி அதற்கு தலைவராகி விடலாம் என்றொரு கருத்தும் பலராலும் முன் வைக்கப்படுகிறது.

நம் தமிழர் ஜல்லிக்கட்டின் பாரம்பரிய காரணத்தைக் கூட இவ்வாறு சிதைத்து விட முயல்கின்றார்களோ என்று அந்தப் பெருமாள் பேசியதில் விஷயம் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறதய்யா. 

விஷயம் புரிகிறதாய்யா? இனி மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்.


Monday, July 18, 2016

தீவிரவாதம் ஏன் நடக்கிறது? உண்மை என்ன?

உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக சாதாரண மக்களை பெரும் துயருக்குள் தள்ளிக் கொண்டிருப்பது தீவிரவாதம். அது மதத் தொடர்பானதாக இருந்தாலும் சரி, விடுதலை தொடர்பானதாக இருந்தாலும் சரி. ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது தீவிரவாதம் என்றே அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மூன்றாம் உலகப் போர் நடக்குமா என்றெல்லாம் விவாதங்கள் செய்கின்றார்கள். அதற்கு நிச்சயமாக சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என்றே கருதுகிறேன். இனிமேல் மூன்றாவது உலகப்போர் என்பது நடத்தப்பட்டால் பூமி என்ற உலகமே இருக்காது. வெடித்து சிதறி விடும்.

அறிவியல் மனிதனுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளைச் செய்ததை விட அழிவுக்கான பாதையைத்தான் காட்டி இருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனிதனை தன் நிலை இழக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. அவன் மிருகமாகிக் கொண்டே போகின்றான். ஒரு ட்ரக் 85 பேரைக் கொல்ல உதவுகிறது. துப்பாக்கியால பலரைக்க் கொல்லலாம். ஒரு அணுகுண்டு ஒரு ஊரையே சுடுகாடாக்கி விடுகிறது. ஒரு வைரஸ் கிருமி உலகையே கொன்றொழிக்கிறது. சகமனிதனைக்கூட அருகில் செல்ல விடுவதில்லை.

நாடெங்கும் ஆயுதத்தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. என்றைக்கு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அன்றிலிருந்து அவை மனிதனின் உயிரைப் பறித்துக் கொண்டே இருக்கின்றன. 

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதங்களுக்கு அச்சாணியாய், முழுக் காரணமாய் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது வியாபாரம். அறிவியல் வியாபாரம். ஆமாம் அறிவியலின் உச்சமாக ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தாங்கிக் கொண்டு செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் 5 போனா வைத்திருக்கிறாய்? நான் 6எஸ் அல்லவா வைத்திருக்கிறேன் என்று வெற்று ஈகோ. இந்த வெற்று ஈகோவை வளர்க்கும் சினிமாக்கள், மீடியாக்கள். 

இந்த வெற்று ஈகோவினால் ஆப்பிள் கம்பெனிக்கு லாபம். விளம்பரங்களால் மீடியாவிற்கு லாபம். ஆனால் அந்த ஆப்பிள் போனை வாங்குபவனுக்கு? மாதம் ஒரு புதிய அப்டேட்டை வாங்குவதால் என்ன பயன்?  எவரும் யோசிப்பதில்லை. என்ன தேவையோ அதற்குத்தான் பொருள் வேண்டும். காசைக் கரியாக்கும் ஈகோவினால் பொருள் இழப்புதான் ஏற்படும். இதை எவரும் உணர்ந்து கொள்வதில்லை. அதனால் உழைப்பை இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

இந்த உலகில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து விட முடியுமா? என்றால் ஆம் நிச்சயம் முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் அது நடக்காது.

ஒவ்வொரு நாடும் தன் ஆயுதத்தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். புதுப்புது ஆயுதங்கள் தயாரிக்க மிகப் பெரிய அளவில் பழைய ஆயுதங்கள் மீந்து விடுகின்றன. அந்த ஆயுதங்களைக் காசாக்குகின்றார்கள். அவை கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. பழைய ஆயுதங்கள் விற்கப்பட வேண்டுமெனில் சண்டைகள் நடக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆயுதங்களை விற்க முடியும். அந்தச் சண்டைகளை ஆயுத வியாபாரிகள் புத்திசாலித்தனமான விஷயங்களால் உருவாக்குகின்றார்கள். விஷயம் அவ்வளவுதான். கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். நான் கோடிட்டுக் காட்டுகிறேன். முழுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்கு பிரச்சினையின் ஆரம்பம் இருக்கிறதோ அதைச் சரிசெய்யாத வரைக்கும் இந்த தீவிரவாதம் நிற்கப்போவதில்லை. மக்கள் தங்கள் இன்னுயிரை இழப்பது தொடர்கதையாகத்தான் நடந்து கொண்டிருக்கும். யாரோ ஒருவரின் பேராசைக்கு உலக மக்கள் தங்கள் வாழ்வை இழக்கின்றார்கள். அலறுகின்றார்கள். அல்லல்படுகின்றார்கள். துயரத்தில் வீழ்கின்றார்கள். துன்பத்தில் வீழ்கின்றார்கள். 


Sunday, June 19, 2016

மகள் நிவேதிதாவிற்கு கடிதம் - 19 ஜூன் 2016

என் பிரியத்துக்குரிய அன்பு மகளே!
எந்த வித கட்டளைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் கடந்து செல்லும் நாட்களின் ஊடே சில தருணங்கள் நெகிழ்வுகளை உண்டாக்கி விடும். மனிதர்களுக்கு அந்த தருணங்களே அனுபவங்களாக வாழ்க்கையின் அர்த்தங்களாக மனதோடு ஊடாடிக் கொண்டிருக்கும். இன்றைக்கு நீ விடிகாலையில் எழுந்த என்னிடம் கொடுத்த வாழ்த்து அட்டையைப் பிரித்த போது மீண்டும் உண்டானது.


(உனது வாழ்த்து அட்டை)


(வெள்ளிங்கிரி மலை யாத்திரையின் போது)


என் பாச மகளே! மருத்துவ மனையில் நர்ஸ் உன்னை சிறு குழந்தையாக என் கைகளில் கொடுத்தபோது நான் அடைந்த நெகிழ்வினை உனது பத்தாவது வயதில்  நான் மீண்டும் இன்று அடைந்திருக்கிறேன். அழகான அந்த வாழ்த்து அட்டையில் எனக்காக நீ எழுதி இருந்த அந்த வாசகங்கள் என்னை வெட்கம் கொள்ள வைத்தன. ஆமாம் நான் ஏதாவது வேலையில் இருக்கும் போது நீ என்னிடம் ஏதோ கேட்க வருவாய், நான் அப்புறம் பேசலாம் என்று மறுத்து விடுவேன். இது அடிக்கடி நடக்கும். அப்போது நான் அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என்று எனக்கு ஆயாசமும் அசூசையும் ஏற்பட்டு விட்டது மகளே. இனி அவ்வாறு நடக்க இயலாமல் பார்த்துக் கொள்கிறேன்.

உன்னையும் உன் சகோதரனையும் நல்ல குழந்தைகளாக, சமூக பிரக்ஞை உடையவர்களாக, நல்ல திடமும், செயலூக்கமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, சக மனிதர்களிடையே அன்பு கொண்டவர்களாக வளர்க்க வேண்டுமென்ற நினைப்பின் காரணமாகவும்,  மனசாட்சிக்கு விரோதமாக எந்த விதக் காரியத்திலும் ஈடுபட்டு எவரின் சாபமும் பெற்று விடக்கூடாது என்ற எனது எண்ணத்தின் காரணமாகவும் தொழிலில் நான் சந்திக்கும் பிரச்சினைகளால் உண்டாகும் வலியினால் சில நேரங்களில் உனது வேண்டுகோளினை கேட்க முடியாமல் போய் விடுகின்றன. வேறொன்றும் காரணமில்லை மகளே!

தத்தி நடை போட்டு நடந்த நீ இன்றைக்கு தனியாக வெள்ளிங்கிரி மலைக்கு யாத்திரை செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாய். என்னைப் போலவே உனக்கு தண்ணீரும், பசுமையும் நிறைந்த இடங்கள் பிடித்தவை என்று எனக்குத் தெரியும். நானும், ரித்தியும் உன்னுடன் வெள்ளிங்கிரி மலையிலிருந்து வடியும் மூலிகை ஆற்றில் ஆனந்தமாகக் குளித்து, ஆற்றில் செல்லும் மீனைப் பிடிக்க முயன்று தோற்று மீண்டும் பிடித்து குழி செய்து அதில் மீனை நீந்த விட்டு விளையாடுவது எனக்கு இப்போது நினைவில் வந்து செல்கிறது.

உனக்கு ஒரு சில விஷயங்களைச் சொல்லி விட எனது மனது துடிக்கிறது. சொல்லி விடுகிறேன். நீ பெரிய பெண்ணாக வளர்ந்து வருகையில் இணையத்தில் எனது இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றால் படித்துப் பார்.

நீ எப்போதுமே தனியாள் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனது பிரச்சினையும், மகிழ்ச்சியும், வலியும் உன்னை மட்டுமே சார்ந்தது. அதை வேறு எவரும் உணர்ந்து கொள்ளக் கூட முடியாது. உன் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருபவர்கள் எவரும் நிரந்தரம் இல்லை என்பதை நீ முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் உனக்கு எந்த வித காரியத்தையும் பயனின்றி செய்ய மாட்டார்கள் என்பதை நீ நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உலகம் கொடுத்துப் பெறுவதைதான் தான் அச்சாணியாக கொண்டு இயங்குகிறது. நண்பர்கள் என்று யாரும் இல்லை, உறவினர்கள் என்று எவரும் இல்லை. எல்லோரும் மனிதர்கள் என்பதை மறந்து விடாதே.

பணம் என்றொரு மாயத்தோற்றமும், பொறாமை என்றொரு மயக்கும் குணமும் மனிதர்களை விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவைகளில் சிக்கிக் கொண்டு இன்னும் விடுபட முடியாமல் அவர்கள் தன் சக மனிதனுக்கு துன்பங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆகவே உனக்குத் துன்பங்கள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் சக மனிதர்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். இது அவசியமா? இது தேவையா? என்று உன்னைக் கேட்டுக் கொள்,  முடிவெடு, பிறகு செயல்படு. சக மனிதர்களால் உனக்கு பிரச்சினைகள் வராத வண்ணம் நீ செயல்பட்டாய் என்றால் என்றைக்கும் சந்தோஷமாக வாழலாம்.

மகளே இப்போது மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லப் போகின்றேன். நீ இப்போது கல்வி என்ற பெயரில் படித்துக் கொண்டிருப்பதெல்லாம் பிறரால் உருவாக்கப்பட்ட அவர்களின் குப்பைகள். இந்தக் குப்பைகளை நீ உண்மை என்று நம்பி விடாதே. இது ஒரு பாதை என்றளவில் எடுத்துக் கொள்.

உனது வாழ்க்கைக்கு நீ பயிலும் கல்வி என்பது வழிகாட்டி மட்டுமே. அதை வைத்துக் கொண்டு உனக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள். நீ ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டுமா? முதலாளியாக இருக்க வேண்டுமா? என்பதை நீ வளர்ந்து வருகையில் முடிவெடுத்துக் கொள். வெற்றி என்பது இங்கு நிரந்தரமில்லை என்பதையும், தோல்வியும் நிரந்தரமில்லை என்பதையும் நினைவில் மறக்காமல் வைத்துக் கொள்.

வெற்றி என்பதும் தோல்வி என்பதும் குதிரைக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்படும் புல் போன்றது மகளே. உனக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீ குதிரையாக இருக்க வேண்டாமென்பது எனது ஆசை. நீ அதை இயக்குபவராக இருக்க வேண்டும். புரிகிறதா?

உனது வாழ்த்துக்கு மிக்க நன்றி மகளே!

மிக்க அன்புடன் உனது அப்பா.

Thursday, May 19, 2016

வரி எனப்படும் கற்கதரு



இந்தியாவில் எத்தனையோ உலகை உலுக்கிய ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா முடங்கிப் போய் விடவில்லை. இந்த ஊழல்களில் தமிழர்கள் பங்கு பெற்றிருக்கும் ஊழல்கள் தான் ஆகப் பெரிது. ஒவ்வொரு விஷயத்திலும் தமிழர்கள் தமக்கென்று ஒரு முத்திரைப் பதித்துக் கொண்டே வருகின்றார்கள். ஊழலிலும் அப்படித்தான் முத்திரைகளைப் பதிக்கின்றார்கள். இந்த ஊழல்கள் என்று மட்டுமில்லை மாநில அரசுகள், மாநகராட்சிகள், ஊராட்சிகள், அரசு அலுவலர்கள் என்று அது ஒரு தொடர் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆரம்பித்த ஊழல்கள் இதுவரையிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. ஜனநாயகம் என்கிற பெயரால் வாக்காளர்களை ஓட்டுப்போட அழைக்கும் அதிகாரங்கள், ஓட்டுப் பெற்று ஜெயித்த பிறகு வாக்காளர்களை வேற்று கிரக வாசிகள் போல நடத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பொதுமக்களுக்கு சேவை செய்ய இருக்கும் அரசும், ஜனநாயகம் தொடர்பான அத்தனை அமைப்புகளும் சேவை செய்வதாக நடிக்கின்றன. 

மக்களுக்கு பணி செய்ய வேண்டுமென்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்கள் மக்கள் எஜமானர்களாக மாறி, யாரால் நம் குடும்பம் வாழ்கிறதோ அவர்களையே மிரட்டி காசு பறிக்கும் கூட்டமாக மாறிக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

இதை மாற்றுவதற்கு மக்களால் எதுவும் செய்யமுடியாது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசியல் உருவாக்கி வைத்திருக்கிறது. அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் தனி மனிதனின் வாழ்க்கை முடிந்து விடும். 

அரசை தனி மனிதன் கேள்வி கேட்க முடியாதவாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் பாதுகாவலர்கள் கேள்வி கேட்பவனை கேனயனாக்கி விடுவார்கள். 

இந்திய அரசியலமைப்பு என்று மட்டுமல்ல உலக அரசியலும் இப்படித்தான் இருக்கின்றன. இதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துபவர்களை ஜெயிலில் தூக்கிப் போட்டு விட்டு, கொஞ்ச காலம் முடிந்தவுடன் வெளியில் விட்டு நோபல் பரிசுகளைக் கொடுத்து வீட்டில் உட்கார வைத்து விடுவார்கள்.

இது உலகம் அழியும் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். யாராலும் எதையும் மாற்றி விட முடியாது. மாற்றமும் அரசியலில் வரவும் முடியாது. அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரு கட்சி இந்தியாவை ஆள்வதுதான் நான் மேலே சொல்வதற்கு சாட்சி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த இந்தியப் பிரதமர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் வருவார். பிஜேபி நிச்சயமாக வெற்றி பெறவே பெறாது. இதுதான் ப்ரீ பிளான் (முன்பே திட்டமிடல்). இதற்கு பல்வேறு காரணிகள் உண்டு.

இத்தனையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது மக்களின் வரிப்பணம். எது நடந்தாலும் நடக்கவில்லையென்றால் மக்களிடமிருந்து அரசுகள் பெரும் வரிப்பணம் என்றைக்கும் குறைவதே இல்லை. கற்பகதருவாய் கொட்டிக் கொண்டிருக்கும் வரிப்பணத்தை முன்னிருத்தியே கட்சிகள் உருவாகின்றன. ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால் ஊழல் மட்டும் மாறுவதே இல்லை. அந்தக் கற்பகதருவை அள்ளிடத்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அடித்துக் கொள்கின்றன. 

இதை மாற்றிட முடியுமா என்றால் முடியவே முடியாது. மக்களின் வாழ்க்கை யை அவ்வாறு சிக்கலில் கொண்டு வைத்திருக்கின்றது அரசியல். உழைக்கும் மக்களின் ஒவ்வொரு துளி வியர்வையிலும் ஒரு கால் துளி அரசுக்கு வரியாய்ச் செல்கிறது. இந்த வரி எனும் அருவியினால் தான் இந்திய அரசு எந்த வித சுணக்கமும் இன்றி தொடர்ந்து நடைபோடுகிறது. எத்தனையோ ஊழல்கள் நடந்தாலும் நடையில் தளர்ச்சி இல்லை. எந்த ஒரு கட்சியாலும், அமைப்பினாலும் இந்த பிரச்சினையைச் சரி செய்யவே முடியாது. அது நிச்சயம் முடியவே முடியாது. ஆனால் ஊழலில் பங்கு கொள்ளலாம். அதற்கு அர்பணிப்பும் திறமையும் வேண்டும்.

நல்லவனாய் இரு என்கின்றன ஆன்மீகச் சந்தைகள். எண்ணற்ற நூல்கள், நன்னெறியைப் போதிக்கின்றன. ஆனால் அரசியல் தனி மனிதனை திருடனாக இரு என்கிறது. அதுதான் அரசியல் என்கிறது அது.

ஆனால் தர்மம் என்கிற ஒன்று இவ்வுலகில் உண்டு. 

* * *




Friday, May 13, 2016

வருஷம் ஆறு லட்சம் கோடி மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது



பிசினஸ் ஸ்டாண்டு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு வருடா வருடம் உயர்ந்து கொண்டே செல்கிறதாம். மக்களிடமிருந்து கல்விக்கு என்று செலவழிக்கும் தொகை வருடம் ரூபாய் ஆறு லட்சம் கோடி என்பது தான் அந்தச் செய்தி  சொல்லும் உண்மை.

இந்திய மக்களிடமிருந்து தனியார் முதலாளிகள் கல்வி என்ற பெயரில் ஆண்டுக்கு ஆறு இலட்சம் கோடி வசூல் செய்து தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்கிறார்கள். இந்த ஆறு இலட்சம் கோடி இந்திய மக்களிடமே இருந்தால் அமெரிக்காவினை மிஞ்சும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. 

அது மட்டுமல்ல இந்திய மருத்துவத்துறையில் வருடம் ஒன்றுக்கு புரளக்கூடிய பணம் மட்டும் 12 லட்சம் கோடிக்கும் மேல் என்கிறது இந்தியா பிசினஸ் எனும் பத்திரிக்கை செய்தி. ஆக வருடம் கல்விக்கும் மருத்துவத்துக்கும் 18 லட்சம் கோடி ரூபாயை இந்திய மக்கள் செலவு செய்கிறார்கள். அத்தனை பணமும் மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது என்பதுதான் உரைக்கும் உண்மை.

அது மட்டுமல்ல நமக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, நாட்டை நிர்வகிக்க நாம் கொடுக்கும் வரிப்பணம் என்பது வேறு. அது எத்தனை லட்சம் கோடி என்பது நினைவுக்கு வரவில்லை.

வரியை விடுங்கள், கல்வி மருத்துவத்திறகான இத்தனை பணமும் இந்தியர்களிடம் இருந்தால் ஒவ்வொரு வீட்டிலும் பென்ஸ் காரல்லவா நிற்கும்? இந்தியாவில் பசி, பஞ்சம், பட்டினி, ஏழை என்று யாரையாவது காட்டத்தான் முடியுமா?

இத்தனைக்கும் காரணம் யார்? யோசித்துப் பாருங்கள்.

நம்மிடம் இருக்கும் பணத்தை நயவஞ்சக் கூட்டமொன்று கொள்ளை அடித்து கொழுத்துப் பெருத்து கூடி கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளும், ஏழைகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எவனாவது பேசுகின்றானா? 

நம்மிடமிருந்து பெறும் பணத்திலும் கொள்ளை அடித்துக் கொழுத்து திரியும் அரசியல்வாதிகளின் பொய்யை நாம் என்று புரிந்து கொள்ளப் போகின்றோம் என்று தெரியவில்லை. 

ஒரு அரசியல்வாதியின் பையன் தன் காரை முந்திச் சென்ற காரில் இருந்தவரைச் சுட்டுக் கொல்கிறார். ஒரு சினிமாக்காரன் குடித்து விட்டு வீடில்லாமல் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரேற்றிக் கொன்று விட்டு, கொலையே செய்யவில்லை என்று தீர்ப்பு பெறுகிறான். ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளிவந்த காரணத்தால் பணியாளர்கள் நெருப்பு வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். நம் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் மக்கள் பணியாளர்கள் மக்களை மதிப்பதே இல்லை. 

இதுவா ஜனநாயகம்? இதுவா அரசு நடத்தும் விதம்? இவர்களா இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு  உழைக்கப் போகின்றார்கள்? அத்தனையும் வேஷம்.

மக்கள் சேவைக்குத்தானே வருகின்றார்கள் அரசியல்வாதிகள்? அப்புறம் ஏன் அடித்துக் கொள்கிறார்கள்? யார் ஆட்சியில் இருந்தால் என்ன? இவர்கள் ஏன் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றார்கள்? 

அதிகாரமும், பணப்பசியும், பதவி வெறியும் கொண்டலையும் இவர்களை இந்திய மக்கள் என்றைக்குப் புரிந்து கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை.

இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவனை இந்திய மக்கள் என்றைக்குத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை.

இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள். இந்தியாவின் உண்மை நிலையினைச் சொல்லும் அற்புதமான பாடல், இந்திய தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சில் ரத்தம் வடிய வைக்கும் பாடல். 

என்ன செய்யப்போகின்றோம் நாம்? 




* * *
செய்தி உதவி :


Saturday, November 14, 2015

எம்.எல்.ஏ - 4

”அண்ணே ! இந்த உலகத்தில் நல்லவர்களே கிடையாதா?” என்று கேட்டார் சுதந்திரம்.

”சுதந்திரம், நீ அர்ச்சுனனும் இல்லை, நான் கிருஷ்ணனும் இல்லை, உனக்கு எது சொன்னாலும் புரியாதய்யா, அதனால தான் நீ என்கிட்ட அல்லக்கையா இருக்கிற, புரியுதா?” என்று கேட்டார் எம்.எல்.ஏ

கார் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. சுதந்திரத்துக்கு கழிவிரக்கம் வந்து விட்டது. இத்தனை நாளா அண்ணன் கூட இருக்கிறோம், நம்மைப் போய் இப்படிச் சொல்லிட்டாரே என்று அவருக்கு மனதுக்குள் வருத்தமேற்பட்டது. 

சுதந்திரத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு மனதுக்குள் அவரின் மீது இரக்கம் ஏற்பட்டது. 

“சுதந்திரம், உன்னோடு பெரிய அழிச்சாட்டியமாய் போயிடுச்சுய்யா. ஏதாவது கேட்டு என்னைப் பாடாய் படுத்துகிறாய். சரி நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன் கேளும்” என்றார்.

பளிச்சென்று சுதந்திரம் எம்.எல்.ஏ பக்கமாய் திரும்பினார்.

“இந்த உலகத்தில் நல்லவர்கள் என்று யாருமே இல்லவே இல்லைய்யா சுதந்திரம். மகாபாரதத்தை எடுத்துக் கொள். அந்தத் தர்மனே உண்மையை மெதுவாகச் சொல்லித்தான்யா துரோணரைக் கொல்ல உதவி செஞ்சாரு. சத்தமா சொன்னாலும், மெதுவாச் சொன்னாலும் பொய் பொய்தான்யா. ஜெயிப்பதற்கு உண்மை தேவையில்லைய்யா. பொய் தான் தேவை” என்றார் எம்.எல்.ஏ

சுதந்திரக்கு புரியற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள்

மாலை நேரம் !

மனதை மயக்கும் பறவைகளின் ஒலியில் கரைந்து கொண்டிருக்கும் காலத்தினூடே நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் இருவர் ஆற்றங்கரை ஓரமாய் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் குரு மற்றொருவர் சீடன்.

ஆற்றங்கரையோரமாய் இருக்கும் தவக்குடிலுக்கு அவ்வப்போது வரும் சீடன் குருவிற்கு பணிவிடைகள் செய்து, குடிலுக்கான காரியங்களைச் செய்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவான். இப்படியோ கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.

சீடனுக்கும் குருவைப் போல சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் ஆவல். ஆனால் அழகே உருவான மனைவி, ஆசைப் பிள்ளைகள், அன்பே உருவான தாய், தந்தை மற்றும் உறவினர்களையும், அவர்கள் இவன் மீது வைத்து இருக்கும் பாசத்தை எண்ணியும் சந்நியாசம் பற்றி மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.

சீடனின் மனக்குழப்பத்தின் காரணம் அறிய குரு” சீடனே  உனக்குள் என்ன பிரச்சினை? “ என்று கேட்டார்.

சீடனும் குருவிடம் விஷயத்தை மறைக்காமல் சொன்னான். அதற்கு குரு ”சீடனே, உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை நீ வீட்டுக்குச் சென்ற உடன் சொன்னாயானால், உன் குழப்பத்துக்கு ஒரு விடை கிடைக்கும் ” என்றார்.

அதன்படி குரு சீடனுக்கு அந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

சீடனும் வீட்டை நோக்கி பீடு நடை போட்டுச் சென்றான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அழகான மனைவி அவனுக்கு அமுது படைத்திட அருகில் குழந்தைகளுடன் ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தான்.

அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கை அறைக்குச் சென்றனர்.

சீடன் குரு உபதேசித்த மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் சீடனின் உடல் தானாகவே படுக்கையில் விழுந்தது. மூச்சு நின்றது. உடம்பு பிணம் போல ஆனது. ஆனால் சீடன் அவன் உடம்பை பார்த்துக் கொண்டிருந்தான். இது என்ன குழப்பம் என்று யோசித்த போது குரு உபதேசித்த மந்திரத்தின் மகிமை என்று அவன் புரிந்து கொண்டான்.

படுக்கையறைக்கு வந்த மனைவி பிணம் போல கிடந்த கணவனைக் கண்டு அலறினாள், துடித்தாள், துவண்டாள். கண்ணீரில் அவளின் கண்கள் குழமாயின. அழுது அழுது அவள் முகம் சிவந்து போனது. மணாளன் மறைந்து விட்டானென்று அவளும், சீடனும் உறவினர்களும் அழுது புரண்டனர். வீடே அழும் வனமாக மாறிப்போனது.

இது அத்தனையும் சீடனின் ஆன்மா பார்த்துக் கொண்டிருந்தது. உறவினர்களை எண்ணி அவன் மனம் துடித்தது. எவ்வளவு பாசக்காரர்கள் இவர்கள் என்று அவன் புளகாங்கிதமடைந்தான்.

சீடனின் குருவிற்கு தகவல் எட்டி அவர் சீடனின் வீட்டுக்கு வந்தார்.

அழும் அனைவரையும் பொறுமையாகப் பார்த்து விட்டு அனைவரையும் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.

”என் சீடனுக்காக இவ்வளவு பாசம் கொண்ட உறவினர்கள் இருப்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆகையால் நானொரு காரியம் செய்யலாமென்று நினைக்கிறேன்” என்றார்.

அனைவரும் குருவினைப் பார்த்தனர்.

”என் தவ வலிமையால் சீடனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வேறொரு உயிர் வேண்டும். யார் இவனுக்கு உயிர் கொடுத்து உதவுகின்றீர்கள்” என்று கேட்டார்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் ஒருவரும் சீடனுக்காக உயிரைக் கொடுக்க முன் வரவில்லை.

குரு சீடனின் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சென்றார். அவர்களைப் பார்த்து, “உங்களில் யார் என் சீடனுக்காக தங்கள் உயிரைக் கொடுக்க விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.

சீடனின் மனைவி குருவிடம், “அவர் இறந்தது இறந்தது போலவே இருக்கட்டும், இனி உயிர் பெற்று ஒன்றும் ஆகப் போவதில்லை. நான் என் குழந்தைகளுடன் வாழ்ந்து கொள்கிறேன்” என்றாள்.

குரு சிரித்துக் கொண்டே கமண்டலத்தை எடுத்தார். தண்ணீரை சீடனின் முகத்தில் தெளித்தார். தூக்கத்திலிருந்து எழுந்த சீடன் யாரிடமும் எதுவும் பேசாமல் குருவின் பின்னே நடந்தான்.






Wednesday, September 9, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இறுதிப்பகுதி

மனிதன் ஒரு கோமாளி. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. படுத்தவன் பரலோகம் போய் விடுகிறான். துயிலிருந்து நிச்சயம் எழுவோமா என்பதெல்லாம் கேள்விக்குறி. இருப்பினும் என்ன? கோபம், பொறாமை, சூது, வஞ்சகம் அது மட்டுமா இன்னும் என்னென்னவோ வித்தியாசமான எண்ணங்களால் சூழப்பட்டு தன்னை ஒரு அழியாப்பொருளாய் நினைத்துக் கொள்கிறான். அதனால் வருவதும், விளைவதும் தான் கர்மபலன் !

இப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒரு கதையைச் சொல்ல விரும்புகிறேன். அவசியம் படியுங்கள் !

ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.

உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்றுச் சொன்னார்.

சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே,  நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்றுச் சொன்னார்.

குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான். 

”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.

சீடன் மீண்டும் குருவிடம் சென்றான். 

“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான்  அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.

மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்

“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும்  தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்மபலனைத்தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.

ஆனால் குரு என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே கடவுளை விட குருவே உயர்வானவர்” என்றார் கடவுள்.

அன்பு நண்பர்களே! என்னைத் துரத்து துரத்து என்று துரத்திய கர்மவினைகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு இன்றைய அமைதியான வாழ்க்கைக்கு காரணம் என் குருநாதர்கள் சற்குரு வெள்ளிங்கிரி ஸ்வாமியும், ஜோதி ஸ்வாமிகள், எனக்கொரு துன்பம் என்றால் உடனடி உதவி என் குருநாதர்களிடமிருந்து உடனடியாக வந்து சேரும். அம்மாவின் மடியில் பாதுகாப்பாய் இருப்பது போன்று உணர்கிறேன்.

எந்த துன்பம் வரினும் அது பற்றிய எந்தக் கவலையும் எனக்கு இருப்பதில்லை. குரு நாதர் இருக்க பயமேன் !

நண்பர்களே, நல்ல குருவை தேடிக்கண்டுபிடியுங்கள். நான் அப்படித்தான் தேடியடைந்தேன். 

Thursday, August 20, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? பகுதி 2

துன்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை எவரும் அறிவார் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம். அதுதான் சரி என்று உடும்பாய் இருப்பர். அதனால் விளையும் செயல்களால் உருவாகும் துன்பங்களை அவர்கள் அறிவதுமில்லை. அதைப் பற்றிய சிறிய அலசல் கூட செய்ய மாட்டார்கள்.

சர்க்கரை வியாதி வந்து விட்டது என்பார்கள். என்ன மருந்து சாப்பிட்டாலும் குறைய மாட்டேன் என்பார்கள். ஆனால் வாயைக் கட்ட மாட்டார்கள். நாக்கைக் கட்டுப்படுத்தி விட்டால், பின் நடப்பவை எல்லாமே நன்மைதான். நாற்பது வயது வந்து விட்டதா? உடனே அசைவ உணவுக்கு டாட்டா சொல்லி விட வேண்டும். ஆனால் யார்தான் செய்கிறார்கள்? உழைத்து உழைத்து ஓய்ந்து போகும் உடல்பாகங்களுக்கு மென்மையான வேலைகளை அல்லவா கொடுக்க வேண்டும். சிக்கன் 65 பார்த்தால் நாக்கில் எச்சில் ஊற்று எடுக்கிறது. மசாலா வாசனையை நுகர்ந்தால் வயிறு கபகபவென பசிக்கிறது. நாக்கில் உமிழ் நீர் அருவியாய் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. பிறகென்ன பாதி மென்றும், மெல்லாமலும் வயிற்றுக்குள் அவை சேகரமாகி விடுகின்றன. அதன் பலனை தொடர்ந்து அனுபவித்துதானே ஆக வேண்டும்?

நம் உடல் என்ன வேலை செய்கிறது அதற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடம்பினைச் சீராக வைத்துக் கொண்டால் உடம்புத் துன்பம் அற்றுப் போய் விடும். அதையும் மீறி உடல் துன்பம் வருகிறது என்றால் அது கர்ம வினை என்று உணரத் தெரிய வேண்டும்.

ஜோசியக்காரர்களிடம் சென்றால் பல நல்ல விஷயங்கள் உங்களின் எதிர்கால வாழ்வில் நடக்கப்போகிறது என்பார்கள். ஆனால் எதுவும் நடக்காது. ஏன் என்று கேள்வியைக் கேட்டால் உங்கள் கர்மபலன், உங்களுக்கு நடக்க வேண்டிய நல்ல விஷயங்களைத் தடுக்கிறது என்பார்கள். ஒரு சிலர் பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்பார்கள். அதற்கு தனிக் கட்டணம் என்பார்கள். 

ஆறறிவுக்கு எட்டாத கர்மபலனை நினைத்து நாம் ஒரு சில சமயம் வருத்தப்படுவதுண்டு. இந்தக் கர்மபலனைத் தீர்க்கவே முடியாதா? என்று ஏங்கும் நிலைமையும் ஒரு சிலருக்கு வரும். 

விதி கர்மபலனை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றுச் சொல்கிறது. கீதையும் அதைத்தான் சொல்கிறது. மனுதர்மமும் அதைத்தான் சொல்கிறது. வேதமும் அதைத்தான் சொல்கிறது.

நாம் அறியாமல் செய்யும் அற்பச் செயலின் பலனைக்கூட நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும் என்கிறது அனைத்தும். சுவற்றில் மீது வீசப்பட்ட பந்து திரும்பவும் வரத்தானே செய்யும்?

இதற்கு என்னதான் வழி ? என்று யோசிக்கின்றீர்கள்? அப்படித்தான் நானும் ஒரு நாள் யோசித்தேன். விடாது தொரத்திய கர்மபலனை விட்டொழித்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென யோசித்தேன். 

அதன் விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்... !

Tuesday, August 18, 2015

குருவிற்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் - பகுதி 1

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். தினமும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நல்லதும் கெட்டதும் வந்து கொண்டே இருக்கின்றன. 

விடிகாலைப் பொழுதில் துயிலெழ ஆரம்பிப்பதிலிருந்து உறங்கச் செல்லும் வரை எத்தனை எத்தனையோ சம்பவங்கள், நிகழ்வுகள், திடீர் திருப்பங்கள், ஒன்றுமே இல்லாத செக்கு மாட்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவங்கள். துன்பம் அழுத்த முனையும் பொழுது கடவுளின் கோவில்களைத் தேடி ஓடுவோம். துன்பத்திற்கு விடிவு கிடைக்காதா என்று மனதுக்குள் அழுது புலம்புவர். கடவுளிடம் சண்டைகள் போடுவர். 

ஒரு சிலர் மாய மந்திரவாதிகளை தேடுவர். ஒரு சிலர் டெம்ப்ளேட் ஜோசியக்காரர்களைத் தேடி ஓடுவர். ஒரு சிலர் கோவில்களை நோக்கிச் செல்வர். ஒரு சிலர் கோவில்களில் பரிகாரங்கள் செய்வர். இப்படி இன்னும் எத்தனையோ விதங்களில் துன்பங்களிலிருந்து விடுதலை பெற துடிப்பர். 

நாமெல்லாம் மைக்ரான் குடும்பங்களாகி விட்டோம். கணவன், மனைவி, குழந்தை என்றாகி விட்டதால் நம் பெரியோர்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை. வயிற்று உப்புசமாக இருந்தால் இப்போதெல்லாம் நாம் ஜெலுசில் குடிப்போம் அல்லவா? ஒரு தம்ளர் நீரில் எலுமிச்சையைப் பிழிந்து கொஞ்சம் உப்பு போட்டுக் குடித்தால் ஓடிப்போகும் வயிற்று உப்புசம். எத்தனை பேருக்குத் தெரியும் இந்த விஷயம்? எனக்கு இந்த விஷயமே என் வீட்டுக்கு வந்த ஒரு விருந்தினர் சொல்லக் கேட்டது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வாய் ஒரு வழி முறை உள்ளது. அந்த வழி முறைகள் குடும்பம் குடும்பமாய் பாதுகாக்கப்பட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லப்பட்டு வந்தன. சுய நலமும், பொருட்கள் மீதான ஆசையும், நுகர்வின் மீதான மோகம் கொண்ட பெண்களாலும் வாழ்க்கை முறை மாறி விட்டது. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

நண்பரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.  நண்பரின் பையன் நன்றாகச் சம்பாதித்தான். வரப்போகும் மனைவிக்கு லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தான். நண்பரின் மனைவியோ 500 லிருந்து 750 ரூபாய்க்கு மேல் புடவையே எடுக்கமாட்டார். மனைவி மகனிடம் கடிந்து கொண்டார். அதற்கு பையன் நான் சம்பாதிக்கிறேன்.செலவு செய்கிறேன் என்றான். 

அறுபதாயிரம் ரூபாய்க்கு மனைவிக்குச் செல்போன் வாங்கிக் கொடுத்தான். இரண்டு இலட்ச ரூபாய்க்கு டிவி மற்றும் பிற. இனிதாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் அவனுக்கு வேலை பறிபோனது. கையில் காசும் இல்லாமல் போனது. செலவுக்கே திண்டாட்டம். பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது லட்ச ரூபாய் பட்டுப்புடவை. ஹாலில் உட்கார்ந்திருந்தது இரண்டு இலட்சரூபாய் டிவி. அதனால் என்ன பலன்?

கையிலிருந்த புதிய போனை விற்க முனைந்தான், வெறும் பத்தாயிரத்திற்கு கேட்டார்கள். வாங்கி ஒரு மாதம் இல்லை. அதற்குள் ஐம்பதாயிரம் போச்சு. இன்னும் இரண்டு மாதம் போனால் இரண்டாயிரம் ரூபாய்க்குக் கேட்பார்கள். செல்போன் கடை முதலாளி கையில் வெறும் ஐந்தாயிரம் ரூபாய் போனைப் பார்த்தான். அவரின் கடை ஷோரூமிலோ கோடிக்கணக்கான ரூபாய்க்கு மொபைல்கள் விற்பனைக்கு இருந்தன. அவனுக்கு அப்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்தது.

தனி வீட்டில் மனைவியோடு சந்தோஷமாக வாழச் சென்றவன் வீட்டைக் காலி செய்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கே வந்து சேர்ந்தான். மீண்டும் வேலை கிடைத்தது. மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான். சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். குடும்பத்தின் தலைவியின் கையில் நிதியின் நிர்வாகம் வந்தது. 

அவன் மனைவி இப்போது மசக்கையாக இருக்கிறார். அவன் அம்மாவிடம் இப்போது லட்சக்கணக்கில் பணம் இருக்கிறது. வரப்போகும் பேரனுக்கு சொத்துக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார் நண்பர்.

அதே போல துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட ஒரு வழி உள்ளது. அது என்ன??? அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.... !

Thursday, July 23, 2015

எம்.எல்.ஏ - தொடர் 2

டிவியில் பிரதமர் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்வதாக காலில் சுடுதண்ணீர் கொட்டியவன் கதறுவது போல கதறிக் கொண்டிருந்தார்கள்.

”சுதந்திரம், பிரதமர் காங்கிரஸ் கட்சியை அறுபதாண்டுகால ஊழல் ஆட்சி என்றுச் சொல்லிக் கிழித்தார், இப்போ என்ன செய்யறாருன்னு பார்த்தீயா? கம்முனு இருக்காரு?”

“ஆமான்னா, ஒரு அமைச்சர் இந்திய அரசால் தேடப்படுவருக்கு உதவி செய்கிறார். அது சட்டப்படி தேசத்துரோக குற்றம் என்கிறார்கள். ஆனால் அது மனிதாபிமான செயல் என்கிறார்கள் இவர்கள், இதென்னன்னா மனச்சாட்சியே இல்லாமல் இப்படிப் பேசுகிறார்கள்? சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க?”

”மனச்சாட்சியா? மண்ணாங்கட்டி! ஏன்யா சுதந்திரம், நல்லவன் வாரான்னா மரியாதையா குடுக்குது இந்த சமூகம்? பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும்?”

”இருந்தாலும் கூசாமா பேசுகிறார்களே, அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல”

“அதனாலதான்யா நீ என்கிட்டே பிஏவா கையைக் கட்டிக்கிட்டு நிக்கிற, இல்லேன்னா நீயும் ஒரு தலைவரா இருந்துருப்பே. சுதந்திரம், கூசாம பொய் பேசறவந்தான் அரசியல்வாதியா இருக்க முடியும், தெரிஞ்சுக்க! பதவி கிடைக்கிற வரைக்கும் யோக்கியனா நடிக்கனும், பேசனும். பதவி கிடைத்து விட்டால் காது கேக்காதவன் மாதிரி இருந்துக்கணும். இதற்குப் பெயர் தான்யா அரசியல்”

வாசலில் ஆள் நடமாடும் சத்தம் கேட்க, சுதந்திரத்தைப் பார்க்கிறார் எம்.எல்.ஏ.

“யாருன்னு பாருய்யா?”

“ரெகமெண்டேசனுக்கு வந்துருக்காங்கய்யா”

“சரி, சரி ! லூசுப்பயலுவலுக்கு ஒரு லெட்டர் பேடு வச்சுருக்கேமே அதை எடு” 

அரை மணி நேரம் கழித்து வாசலில் சென்று கொண்டிருந்தவர்கள் இப்படி பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள்.

”நம்ம எம்.எல்.ஏவைப் பார்த்தீங்களா, தொகுதிக்காரன்னு சொன்னவுடனே ஒரு வார்த்தைப் பேசாம ரெகமெண்ட் லெட்டர் கொடுத்தாரு, ரொம்ப நல்ல மனுஷன்யா நம்ம ஆள்”

குறிப்பு: லூசுப்பயல்கள் லெட்டர் பேடில் எழுதப்படும் எந்த ஒரு ரெகமெண்டேசனுக்கு யாரும் எந்த வித ரெஸ்பான்ஸும் குடுக்கமாட்டார்கள் என்றொரு ஏற்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்குள் உள்ளது.

Tuesday, June 9, 2015

காணாமல் போய்விட்ட கைப்பக்குவம்

என் சின்னம்மா வைக்கும் மீன் குழம்பில் ‘கவுச்சி’ வாடையே அடிக்காது. கடல் மீனாக இருந்தாலும் சரி, ஆற்று மீனாக இருந்தாலும் சரி. பைங்கால் சித்தி வைக்கும் சாம்பாரும், இறால் குழம்பும் ஒரு குண்டாச் சோற்றை அள்ளி அள்ளி விழுங்க வைக்கும். இறால் வருவலின் சுவைக்கு ஈடே இல்லை. அம்மா வைக்கும் சாம்பாருக்கு இணை இதுவரையிலும் சுவைக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி சென்று திரும்புகையில் புஞ்சை புளியம்பட்டியில் நம்பியூர் போகும் வழியில் ஒரு வீட்டு மெஸ்ஸில் கத்தரிக்காயும், உருளையும் சேர்ந்த பொறியல் சாப்பிட்டேன். அந்த மாதிரியான சுவையான பொறியலை இதுவரைக்கும் சாப்பிட்டதே இல்லை. ஆஹா அற்புதம். (ஆமாம் உங்களுக்கு புஞ்சை புளியம்பட்டியின் ஸ்பெஷல் கதை தெரியுமல்லவா???)

திருவாரூருக்குச் சென்றிருந்த போது எனது நண்பரின் வீட்டில் மாங்கொட்டை சாம்பாரும், பிஞ்சுப் பறங்கிக் காய் மசாலாவும் சாப்பிட்டேன். அவர் எப்போது திரும்பவும் திருவாரூர் வருவார், திரும்பவும் எப்போது மாங்காய் சாம்பாரும், பறங்கிக்காய் மசாலாவும் சாப்பிடுவோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நண்பரின் மனைவியாரின் கைப்பக்குவத்தில் அவர் சமைக்கும் “புளியதோரை” தெய்வத்தின் சன்னிதியில் தரும் பிரசாதம் போலவே இருக்கும்.

ஊருக்கு ஒரு ஸ்பெஷல் உணவு என்பது போல வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் உணவு இருக்கும். அதுவெல்லாம் அந்தக்காலமாகி விட்டது.

இப்போதெல்லாம் பெண்கள் சமையல் கட்டில் சென்று சமைப்பது என்றாலே எட்டிக்காயைக் கடித்தது போல ஆகி விடுகின்றார்கள். கோவையில் ஹோட்டல்கள் ஆட்களால் நிரம்பி வழிகின்றன. அதே போல மருத்துவமனைகளிலும் ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.

சாந்தி ஹியர் கேண்டீனில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேர் சாப்பிடுகின்றார்களாம். பிரபல ஹோட்டல்களில் நுழையவே முடியவில்லை. பெண்களுடன் ஆண்களும் குழந்தைகளும் ஒவ்வொரு ஹோட்டலாய் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது அங்கிருக்கும் ஹோட்டல்களில் மசாலா உணவுகள் தான் கிடைத்தன. சாம்பாரில் கூட மசாலாவைச் சேர்க்கின்றார்கள். சாதம் கேட்டால் முடிந்து விட்டது என்று நாண், சப்பாத்தி, புல்காவைக் கொண்டு வந்து வைக்கின்றார்கள். அதற்கு இணை உணவு மசாலா. ஒரே ஒரு நேரம் சாப்பிட்டதன் விளைவாக ஒரு நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு விட்டது.

எந்த வகை உணவானாலும் ஒரே மாதிரியாகத்தான் சமைக்கின்றார்கள். கோபி சென்றிருந்தேன். சாம்பார் சாப்பிட்டேன் ஒரே சுவை. எனது நண்பர் வீட்டில் எனது வீட்டில் வைக்கும் சாம்பார் போலவே இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டில் விசாரித்த போதுதான் தெரிந்து கொண்டேன். மார்க்கெட்டிங்க் எந்தளவுக்கு மனிதர்களை மாற்றம் செய்து விட்டது என்று அதிர்ந்து விட்டேன்.

சக்தி மசாலா, ஆச்சி மசாலா என்ற மசாலாக்கள் ஒவ்வொரு அடுப்பங்கரையிலும் நுழைந்து விட்டன. சாம்பார் பொடி, ரசப்பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, மீன் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள் என கிட்டத்தட்ட தமிழர்களின் பெரும்பாலோனோர் வீட்டில் மேற்படி மசாலாக் கம்பெனிகளின் மசாலாப் பாக்கெட்டுகள் தான். பின்னர் எங்கே கைப்பக்குவம் இருக்கும்? தமிழர்களின் பெரும்பாலான வீட்டில் ஒரே சாம்பார், ஒரே சுவை.

மசாலாக் கம்பெனியார்கள் பெண்களை மூளைச்சலவை செய்து விட்டனர். இன்ஸ்டண்ட் மசாலாவை பெண்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். வீட்டுச் சாப்பாட்டுக்கும், ஹோட்டல் சாப்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.

என் வீட்டில் அம்மா ஊரிலிருந்து அரைத்துக் கொடுத்து விடும் மல்லித்தூள் மசாலாதான் குழம்புக்கு பயன்படுத்துகிறோம். ஸ்பெஷலாக சாம்பார் தூளை அரைத்து விட்டார் மனையாள். சாம்பார் வாசம் அசத்தும். எந்த ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் வீட்டு உணவு நினைவுக்கு வந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை.

உங்கள் வீட்டில் அடுப்பங்கரைக்குள் சென்று பாருங்கள். மசாலா பாக்கெட்டுக்களை எடுத்துக் குப்பைக் கூடையில் போடுங்கள். மனையாளின் கைப்பக்குவத்தை உணர வையுங்கள். காணாமலே போய் விடக்கூடிய மனைவியின் கைப்பக்குவத்தை உங்களின் குடும்பத்துக்கு உணர்த்துங்கள்.

வாழ்க வளமுடன் !!!

Friday, June 5, 2015

10 ரூபாயும் ஒரு மூதாட்டியும்

சமூக ஆர்வலர்கள் இப்போதெல்லாம் அழிக்கப்படுகின்றார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். எல்லோருக்கும் உண்மை கசந்து விடுகிறது. சிலருக்கு கொலை செய்யும் மனத்தையும் தந்து விடுகிறது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை பார்க்கும் போது, ஓடோடி அவனுக்கு உதவி செய்யத் துடிக்காத இதயம் எவருக்கும் இல்லாமலிருக்காது. இருந்தும் பலரும் ஒதுங்கிக் கொள்கின்றார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. சமூகத்தின் நன்மைக்காக உதவிட வேண்டுமென்று நினைப்போருக்கு உண்மையில் கசப்பான அனுபவங்களே ஏற்படுகின்றன. சமீபத்தில் கோவையில் இப்படித்தான் மணல் கடத்தலுக்காக சமூக ஆர்வலர் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிலர் செய்யும் சில செயல்களால் மனித சமுதாயத்துக்கு கிடைத்திட வேண்டிய பல்வேறு நல்ல காரியங்கள் சீர்பட்டுப் போகின்றன.

நேற்றைக்கு கணபதி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் அடியேன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது வாசலில் ஒரு குரல். நெடு நெடுவென்ற உயரம். கெச்சலான தேகம். மஞ்சள் பூசிய முகம். நெற்றியில் குங்குமம். பட்டுச்சேலை போன்று வெகு நேர்த்தியாக உடுத்தப்பட்டிருந்தது. கையில் ஏதோ ஒரு துணிக்கடையின் பை. 

ஏறிட்டுப்பார்த்தேன், “பன்னாரி அம்மன் கோவிலுக்கு காணிக்கை” என்றார் அந்த மூதாட்டி. அருகில் வரச்சொல்லி, பத்து ரூபாய் நோட்டினை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி இப்படித் தொடர்ந்தார்.

”மகாராசனாட்டம் இருக்கிறாய், ஆனால் மனதுக்குள் பல்வேறு போராட்டங்கள். ஒவ்வொரு காரியத்திலும் தடை. மனதுக்குள் வலி. எந்தப் பிசினஸும் ஒழுங்காக நடப்பதில்லை. கண் திருஷ்டி இருக்கிறது. அதுதான் உன்னை இந்தப் பாடு படுத்துகிறது. உன்னால் கை காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு எங்கேயோ இருக்கின்றார்கள். ஆனால் நீயோ இருந்த இடத்திலேயே இருக்கின்றாய், இன்னும் கொஞ்சம் குறி சொல்லனும், அந்த சேரில் உட்காரட்டுமா?”

”பாட்டி நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் இல்லை. ஒன்றும் வேண்டாம். கிளம்புங்கள்” என்றேன்.

அந்த மூதாட்டியோ திரும்பவும் ”உனக்கு கண் திருஷ்டி நிறைய இருக்கு, அதைச் சரி செய்ய வேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே எதிரில் அமர எத்தனித்தார்.

”பாட்டி அப்படி ஏதாவதிருந்தால் அதோ அங்கே போட்டோவில் உட்கார்ந்திருக்கின்றாரே எனது குரு நாதர் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்” என மறுத்தேன். சுவாமியைப் பார்த்தார் அந்த மூதாட்டி. ”நீ நன்றாக இருப்பாயப்பா” என்றுச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

மனதுக்குள் ஏதும் பிரச்சினையோடு இருந்திருந்தால் பாட்டி பர்சைக் காலி செய்திருக்கும்.

கடந்த வாரம் ஒரு பெரியவர் அலுவலக வாசலில் வந்து நின்று கொண்டு, “வயதானவன், நல்ல வார்த்தை சொல்வேன், காபி குடிப்பதற்கு ஏதாவது தர முடியுமா?” என்று கேட்டார். நான் திரும்பிக் கொண்டேன். எனது நண்பர் இரக்க சுபாவி. அவரை உள்ளே வர வைத்து எதிரில் அமர்ந்து கொண்டார்.

பிறந்த நாள், நேரம், இடம் கேட்டார். நண்பர் சொன்னார். கையை நீட்டச் சொன்னார். தட்சிணை வைக்கச் சொன்னார். நண்பர் திகைத்து விட்டு எவ்வளவு என்று கேட்டார்.”ஒரு நூறு ரூபாய் வையுங்களேன்” என்றார் கிழவர். நண்பர் வேறு வழி இன்றி கையிலிருந்த நோட்டுகளை எடுத்துக் கையில் வைக்க அதைக் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டு பலன் சொல்ல ஆரம்பித்தார்.

மேலே அந்த மூதாட்டியார் சொன்னாரே அதையே அந்தப் பெரியவரும் சொன்னார். ஐந்து நிமிடங்களாய் ஒப்பேத்தி விட்டு, அடுத்து உங்கள் குழந்தைகளுக்கும் பார்க்கலாமா என்று ஆரம்பித்தார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டே நண்பரைப் பார்க்க, நண்பரோ அலறியடித்துக் கொண்டு போதும் என்றுச் சொல்லி எழுந்து விட்டார்.

அடுத்து பெரியவர் என்னைப் பார்த்து, ”அய்யா உங்களுக்கு?” என்று ஆரம்பித்தவுடனே பெரிய கும்பிடு போட்டு விட்டேன். ஆள் எழுந்து விட்டார்.

“அறுபது ரூபாய்” கொடுத்தேன் என்றார் நண்பர் வருத்ததுடன்.