குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, July 27, 2016

எம்.எல்.ஏ தொடர் (5) - ஜல்லிக்கட்டு தமிழர்களின் தெய்வ வழிபாடு

யெம்மெல்லே காரில் சுதந்திரத்துடன் சட்டசபைக்குச் சென்று கொண்டிருந்தார். சுதந்திரம் யோசனையில் இருந்தார். சுதந்திரத்தின் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு சிரிப்பு வந்தது. ’இவனெல்லாம் என்னத்தை யோசித்து என்னத்தைக் கிழிக்கப்போறானோ? சுதந்திரம் பெயரில் மட்டும் தான் இருக்கிறது என்பதை அவன் இதுவரைக்கும் உணரவே இல்லையே முட்டாப்பய’ என்று நினைத்துக் கொண்டார்.

”என்னய்யா சுதந்திரம்! யோசனையாவே இருக்கீயே? என்னா விஷயம்?”

“அண்ணே! இந்த ஜல்லிக்கட்டை நினைச்சேன்யா? கொன்னா தப்பு இல்லையாம், ஆனால் விளையாடினா தப்பாம். இது என்னங்கய்யா நியாயம்?”

“அட அதுவாய்யா? விஷயத்தைச் சொல்றேன், குறுக்க குறுக்க கேள்வி கேட்டு லொள்ளு பண்ணாதய்யா” என்றவர் தொடர்ந்தார்.

“நேற்று ஆயுத எழுத்து விவாதத்தில் பெருமாள் என்பவர் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அபிடவிட்டில் கிருஷ்ணர் காளையை அடக்கி விளையாண்டார் என்றும் அது மத சம்பந்தப்பட்டது என்பது போலவும் ஒரு பாயிண்டை குறிப்பிட்டிருந்தார்கள் என்றார். இதில் நுண்ணரசியல் இருக்கிறது என்றார். அது சரிதான்யா. 

நம்ம சிவன் கோவிலில் பார்த்தாய் என்றால் காளை மாடுதான் சிவனுக்கு வாகனம். காளை மாட்டினை நாமெல்லாம் வணங்குகிறோம். அதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. ஆனால் இதைப் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. அதுமட்டுமல்ல சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ’பாரம்பரியம் என்பதாலே மாடுகளை வதைக்க அனுமதிக்க முடியாது’ என்கிறார்கள். 


மஞ்சு விரட்டு என்பது பாரம்பரியம் இல்லைய்யா. அது மத வழிபாட்டு முறை. தமிழர்கள் தான் உலகிலேயே மாட்டுப் பொங்கல் வைத்து மாடுகளை வணங்குபவர்கள். பசு மாடுகளுக்கு லட்சுமி என்று பெயர் வைப்பவர்கள். கோவிலுக்கு காளைகளை நேர்ந்து விடுவர். அவ்வாறு நேர்ந்து விடும் காளைகள் வயற்காட்டில் பயிர்களை மேய்ந்தால் கூட யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றினைந்து தமிழரின் தெய்வ வழிபாட்டோடு கூட இருக்கும்  மாடுகளையும், ஜல்லிக்கட்டினையும் வேறு வழியில் திசை திருப்புவது இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்றே நம்ப வேண்டியிருக்கிறது. இந்திய அரசு தன் அபிடவிட்டில் நான் மேலே சொல்லி இருப்பதைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதை என்னவென்று புரிந்து கொள்வது?

அது மட்டுமல்ல கிருஷ்ணர் ஜல்லிக்கட்டினார் என்று அபிடவிட்டில் சொல்வது சரியில்லை. இங்கு தமிழகத்தில் இருக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்களில் இருக்கும் நந்திகள் சொல்லும் சாட்சியத்தினை ஏன் மத்திய அரசு குறிப்பிடவில்லை என்று புரியவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது மிக வலுவான ஆதாரங்களையும், அதற்கான சாட்சி ஆவணங்களையும் கொடுத்தால் நீதிபதிகள் நிச்சயம் அது பற்றி பரிசீலிப்பார்கள். 

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒரு சிலருக்கு இருக்கும் நோக்கம் போல தெரிகிறது. இயற்கை விவசாயத்தை அழித்த பிரிட்டிஷ் அரசு போல தமிழர்களின் வாழ்வியலை சீரழிக்கும் போக்கு ஒரு சில ஆதிக்க மனப்பான்மை கொண்ட சக்திகளுக்கு இருக்கிறது என்பது உண்மை என்பது போல நடக்கக்கூடிய சம்பவங்கள் சொல்கின்றன.

அதுமட்டுமல்லய்யா சுதந்திரம். இன்னொன்றையும் உன்னிடம் சொல்லி விட வேண்டும். இந்து மதம் என்பது இந்தியாவில் தெய்வ வழிபாட்டினை கொண்டுள்ளவர்கள் அனைவரையும் இணைத்து இந்து மதம் என்றுச் சொல்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சில புத்திசாலித்தனமுள்ள ஆதிக்கவர்க்கத்தினர் இந்து மதம் என்ற பெயரால் ஒவ்வொரு இன வழிபாடுகளை, முறைகளை, பாரம்பரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட முயல்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறதய்யா? அப்படி சிதைத்து விட்டால் பல இன மக்களின் வழிபாட்டினை ஒரே முறையாக்கி அதற்கு தலைவராகி விடலாம் என்றொரு கருத்தும் பலராலும் முன் வைக்கப்படுகிறது.

நம் தமிழர் ஜல்லிக்கட்டின் பாரம்பரிய காரணத்தைக் கூட இவ்வாறு சிதைத்து விட முயல்கின்றார்களோ என்று அந்தப் பெருமாள் பேசியதில் விஷயம் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறதய்யா. 

விஷயம் புரிகிறதாய்யா? இனி மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.