குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வெளிவந்த சுயநலமிகள்

23.01.2017 அன்று தமிழ்நாட்டு உண்மையான தமிழர்கள் ஒவ்வொருவரின் நினைவிலும் மாணவர்களும், இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவனரோ என்ற பதைபதைப்பும், மனவருத்தமும், சுய பச்சாதாபமும் ஏற்பட்டு இரத்தக் கொதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அடிக்கடி டிவி பார்ப்பதும், வாட்ஸ் சப்பில் மெசேஜ்களைப் படிப்பதும், சென்னைக்கு போன் செய்வதுமாக  இருந்தனர். மாலை வரை மனப்போராட்டம் நீடித்துக் கொண்டே இருந்தது.

நான் முன்பே நடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா? என்று. எழுதி இருந்தேன். அதைத்தான் செய்திருக்கின்றார்கள். 22ம் தேதி ஆதி பேசியதிலிருந்து ஆட்டம் ஆரம்பித்து விட்டது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. 23.01.2017 அன்று இரவு ’நேர்பட பேசு’ நிகழ்ச்சியில் பேசிய ஒரு இளைஞர் அவர்கள் எவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்று விவரித்தார். 

23.01.2017 நேர்படப்பேசு நிகழ்ச்சி பாகம் 1



23.01.2017 நேர்படப்பேசு நிகழ்ச்சி பாகம் 2

களத்தில் இருந்தவர்களை இந்த சினிமாகாரர்கள் உள்ளே நுழைந்து பேசக்கூட விடாமல் தடுத்த நிகழ்வையும் இவர்கள் தான் இந்தக் கலவரத்துக்கு காரணமாக இருந்தனர் என்றும் விவரித்தார். தெரிந்து செய்கின்றார்கள் தெரியாமல் செய்கின்றார்கள் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. எந்தக் காலத்திலும் சினிமாக்காரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ததே இல்லை என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். 

இது சினிமா இல்லை. வாழ்க்கை. நிதர்சனம். எதார்த்த உலகின் போராட்டக்களத்துக்குள் ஆயிரமாயிரம் இளம் குருதிகளின் நாளங்களில் புரண்டோடும் உணர்ச்சி அலைகளை சரியாக வழி நடத்திடாவிடில் இப்படித்தான் கண்டவர்கள் எல்லாம் நுழைந்து சீரழித்து விடுவார்கள். மதியம் போல பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த லாரன்ஸ் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் பாதியில் காணாமல் போனார். ஆதி மீடியாவில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியதைப் பார்த்த அனைவருக்கும் தெரியும் அவர் எப்பேர்பட்ட ஆள் என்று. 

ஒவ்வொரு மீடியாவும் தவறான புரிதல் வரும்படியான செய்திகளைத்தான் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த மீடியாவுக்கும் பொறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை. பரபரப்பாக்கிக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு அதுதான் தேவை. போராட்டக்களம் சந்தோஷமாகச் சென்று விட்டால் மீடியாக்காரர்களுக்கு என்ன வேலை? அவர்கள் எதிர்பார்த்தது நடந்தது. அதை வைத்து இன்னும் கொஞ்சம் காலம் பரபரப்பாகவும், விவாதக்களங்களையும் முன்னெடுப்பார்கள். 

களத்தில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் ஒவ்வொருவரின் தந்தைகள், தாய்கள், உறவினர்கள் என்று அனைவரும் போராட வந்த நிகழ்வு சாதாரணமாக நடந்த நிகழ்வு அல்ல. எதேச்சதிகாரத்துக்கும், அதிகார மையங்களுக்கும், ஊழல் அரசு அதிகாரிகளுக்கும் விடப்பட்ட எச்சரிக்கை. போதும் உங்கள் ஆட்டம் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கட்டியம் கூறிய போராட்டம். இதன் காரணமாக பலரின் தூக்கம் போயிருக்கும். இந்தப் போராட்டத்தின் முடிவினை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றார்கள்.

காவல்துறையினர் கூட்டமாக இருந்தவர்களை இழுத்த போது அவர்கள் ஜனகனமன என தேசிய கீதம் பாடினார்கள். சிலர் வந்தேமாதரம் வந்தே மாதரம் என்று முழங்கினார்கள். பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் நெஞ்சமும் துடித்தன. காவல்துறை செய்த செயல் நெஞ்சத்தைப் பதற வைப்பது போல இருந்தது. காவல்துறையினரில் அம்மா, அப்பாக்களும் இருக்கின்றனர். தன் பையன் அழுதாலே துடிக்கும் மனசு அவர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்களால் ஒன்றும் செய்திருக்கமுடியாது. அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆளும் அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் மனிதாபிமானத்தோடு இருக்கவே முடியாது. நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேசிய முன்னால் காவல்துறை அதிகாரி கருணா நிதி அவர்கள் ’மேலிடத்தின் உத்தரவுப்படிதான் காவல்துறை நடந்து கொள்ளும்’ என்று நிகழ்ச்சியின் முடிவில் போட்டுடைத்தார். 


(மேலே இருக்கும் பட்டியலில் வீடுகளில் வளர்க்கப்பட்ட காளைகளைச் சேர்த்திருக்கவே கூடாது. காடுகளில் இருக்கும் விலங்குகளும் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளும் ஒன்றா? பட்டியலில் சேர்த்திருக்கின்றார் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஏன்???)

11.07.2011ம் தேதியன்று மத்திய அமைச்சகமான சுற்றுச்சூழல் துறை ஒரு நோட்டிபிகேசனை வெளியிட்டுள்ளது. அதில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் காடுகளில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, கருஞ்சிறுத்தை, குரங்குகள் பட்டியலோடு காளைகளையும் சேர்த்திருக்கின்றார்கள். இந்தியாவெங்கும் இருக்கும் உழவர்கள் வீடுகளில் ஒவ்வொருவரின் வாழ்வாதாரமாக இருக்கும் காளைகளை ஏன் அந்த லிஸ்டில் சேர்த்தார்கள். திடீரென காளைகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

2009-2011 வரை ஜெய்ராம் ரமேஷ், 2011 - 2013 வரை தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், 2013-2014 வரை வீரப்ப மொய்லி ஆகிய காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களாக இருந்தனர். ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் அமைச்சராக இருந்த போதுதான் காளைகள் அந்த லிஸ்டில் சேர்க்கபட்டது. ஏன் சேர்த்தார் என்பதற்கு காரணத்தை எவரும் கேட்கவில்லை. உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்வியைக் கேட்டதா என்றும் தெரியவில்லை. அந்த அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த முக. அழகிரி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். ஜி.கே வாசன் மற்றும் காரைக்குடி ப.சிதம்பரம் ஆகியோரும் அமைச்சரவையில் இருந்தனர். அவர்களுக்கு தெரிந்திருக்காதா இந்த பட்டியல் விவரம். அவர்கள் ஏதும் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதற்கு காரணத்தை அவர்கள் தான் நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். அன்று அமைதியாக இருந்து விட்டு இன்று கருத்துச் சொல்கின்றார்கள். போராட்டம் செய்கின்றார்கள். சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஒரு பாயிண்டை வைத்து பீட்டா ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குகிறது. சுப்ரீம் கோர்ட் சட்டத்தின் படி தான் தீர்ப்பு வழங்கும் என்று எல்லோரும் சொல்கின்றார்கள். நம்புகின்றார்கள். அதைத்தான் சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியது.

அரசியல் என்பது இதுதான். பிரச்சினை சரி செய்யப்படவே கூடாது. சரி செய்வது போல காட்டணும் ஆனாலும் சரி செய்யக்கூடாது. இப்படி ஒவ்வொரு மக்கள் பிரச்சினையையும் சரி செய்து விட்டால் அரசியல் செய்ய முடியாது. நீரு பூத்து நெருப்பாகவே ஒவ்வொரு பிரச்சினையும் இருந்தால் தான் அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் வர இந்தப் பிரச்சினைகள் உதவி செய்யும். 

இன்றைக்கு கட்சிக்குத் தலைவர்களாக இருக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்டுப்பாருங்கள். உங்கள் கட்சியின் இப்போதைய கொள்கை என்னவென்று. எல்லோரும் திருதிருவென முழிக்க ஆரம்பித்து விடுவார்கள். இனி தமிழ் பேசி பயனில்லை. திராவிடம் பேசிப்பயனில்லை. ஜாதிமதம் பேசிப்பயனில்லை. தன் கட்சியின் கொள்கையாக எதைச் சொல்வார்கள்? கேட்டுப்பாருங்கள் தெரியும் அரசியல் என்றால் என்னவென்று.

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்குப் போட்டவர் தமிழர். அன்று விழித்திருக்க வேண்டிய அரசு மவுனம் சாதித்தது. ஏனோ தானோவென ஜல்லிக்கட்டுப் பிரச்சினையைக் கையாண்டார்கள். விளைவு இந்தப் போராட்டம்.

தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயன்ற இளைஞர் பட்டாளத்துக்கு முன் அனுபவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கட்டுக்கோப்பாக போராட்டத்தை நடத்தத் தெரிந்தவர்களுக்கு அரசியல் தெரியாது. அதுவும் இங்குள்ள அனைவருக்கும் தெரியும். 

காலம் காலமாக நடந்து வரும் போக்குதான் இது. அஹிம்சா போராட்டத்தின் வெற்றி பலியாகும் உயிர்களின் மீதுதான் கிடைக்கும். மஹாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தில் மாண்டவர்களின் மீதுதான் இந்தியா தன் சுதந்திரத்தைப் பெற்றது. நேற்று மாலையில் ஓய்வு பெற்ற நீதிபதி என்ன சட்டம் போடப்பட்டிருக்கிறது என்று கொடுத்த விளக்கத்தை முன்பே கொடுத்திருக்கலாம். கொடுக்கவில்லை. ஏனென்றால் இந்த இளைஞர் போராட்டம் இப்படி சுமூகமாக முடிந்து விடக்கூடாது. அவ்வாறு நடந்து விட்டால் யாருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாது போய் இருக்கும். இந்த நிகழ்வினால் பலர் ஆளும் கட்சியின் மீது கோபமும், சிலர் எதிர்கட்சிகளின் மீது கோபமும் கொண்டனர். இதைதான் அரசியல் எதிர்பார்க்கும். நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு பலன் கிடைத்திடுவது தான் அரசியல்.

நான் பிறக்கும் முன்பே நடந்த சுதந்திரப்போராட்டத்தை என்னால் காண முடியவில்லை. மெரினா கடற்கரையில் அந்தப் போராட்டத்தை இளைஞர்கள் கண் முன்னால் கொண்டு வந்து காட்டினர். காவல்துறையினர் அவர்களை முரட்டுத்தனமாக இழுக்கின்றனர். தூக்கி வீசுகின்றனர். போராடிய மாணவர்கள் ”ஜனகனமன” பாடினார்கள். ”வந்தே மாதரம்” என்று முழங்கினார்கள். அஹிம்சையாக உட்கார்ந்து போராடினார்கள். அவர்கள் ஹிம்சிக்கப்பட்டனர். அஹிம்சைக்கு எதிர் ஹிம்சைதானே. ஜனநாயகத்துக்கு எதிர் அரசியல்தானே. இந்தப் போராட்டத்தை வெகு எளிமையாக முடித்திருக்கலாம். ஆனால் அரசியல் அப்படி முடிக்க விடாது. அதைத்தான் இந்த தமிழர் சமுதாயம் நேற்றுக் கண்டது.



குறிப்பு: இன்றைய இளைஞர் பட்டாளம் அவசியம் படிக்க வேண்டிய அரசியல் பகடி நூல் ஒன்று உண்டு. போராட்டக்களத்தில் போராடியவர்கள் சோ எழுதிய சர்க்கார் புகுந்த வீடு என்ற அரசியல் நாவலை அவசியம் படியுங்கள். இந்த நூல் எப்படி அரசியல் செய்வது என்று சொல்லிக் கொடுக்கும். நிதர்சன அரசியல் என்றால் என்னவென்று உங்களுக்கு பாடமெடுக்கும். மறந்து விடாதீர்கள்.

எனக்கும் அல்லையன்ஸ் பப்ளிகேசனுக்கும் மறைந்த சோவுக்கும் எந்த வித வியாபாரத் தொடர்பும் இல்லை என்று இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.


Thursday, January 19, 2017

நடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா?

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாணவர்கள் இந்தாண்டு போராட்டத்தை முன்னெடுத்தெடுக்கிறார்கள். மிக்க மகிழ்வைத் தரும் நிகழ்வு இது. ஈழப் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்தது போலவும், மதுவிலக்குப் போராட்டத்தைக் கலகலக்க வைத்தது போலவும் இந்தப் போராட்டம் ஆகி விடக்கூடாது என்பதில் போராட்டக்காரர்கள் வெகு ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். 

மீடியாக்களின் கவனம் இப்போது மாணவர்களின் மீது உள்ளது. ஆனால் அந்தக் கவனம் திசை மாறி திசை திரும்பி விடுமோ என்ற எண்ணத் தோன்றுகிறது. காரணம் சினிமா நடிகர்கள். நடிகர்கள் சங்கத்தில் இப்போது ஆக்டிவாக இருக்கும் சில நூறு நடிகர்கள் சேர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்த ஆரம்பித்தால் மீடியாக்கள் இந்த நடிகர்களின் போராட்டத்தை லைவ் ரிலேவாகவும், செய்திகளாகவும் வெளியிடுவார்கள். மாணவர்களின் போராட்டம் மீடியா மத்தியில் கவனம் இன்றிப் போய்விடும் சாத்தியங்கள் அதிகமிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

தார்மீக ரீதியாக மீடியாக்கள் சில நடிகர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளக்கூடாது. மாணவர்கள் போராட ஆரம்பித்த பிறகு தான் நடிகர்கள் தங்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். தங்களைப் பார்க்க மாணவர்கள் கூடுவார்கள் என்ற கணக்குப் போட்டு இருக்கலாம். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும் ஆதாயமெடுக்க நினைத்திருக்கலாம். 

தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் சிறுபான்மையினராக இருக்கும் சினிமாக்காரர்கள், நாங்களும் போராடுகிறோம் என போராட்டத்தின் வீரியத்தை வீழ்ச்சியுறச் செய்வதும், போராட்டக்களத்தின் பலனை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பணம் சம்பாதிக்கட்டும் அது அவர்களின் உரிமை.  நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்வார்கள். எங்களுக்கும் போராட உரிமை உள்ளது என்பார்கல். யார் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் உண்மையான போராட்டத்தை தன் பக்கம் திருப்பி விடும்போக்கினைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 


(இதோ இந்த ஏறுதழும் வீரனைப் போல ஒரு காளையை தழுவ முடியுமா சினிமா நடிகர்களால்? நடிப்பதில் மட்டுமே வீரம் காட்டும் வீரர்கள் நடிகர்கள்)

சினிமா என்கிற மாயமோகத்தை வைத்து அறுவடை செய்யும் ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளின் சுய நலப்பாச்சாவைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை ஏமாந்தது போதும். நடிகர்களுக்காக நாட்டை கொடுத்த நிகழ்வுகள் இனி வேண்டாம். நடிகர்கள் நடித்து விட்டு பணம் சம்பாதிக்கட்டும் அதுவல்ல பிரச்சினை. சினிமாவைப் பார்த்து ரசிக்கலாம். விமர்சிக்கலாம். பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்கலாம். அது ஒரு பொழுது போக்கு மட்டுமே.

இப்போது சினிமா நடிகர்கள் தங்கள் படத்தைப் பார்க்க வரும் இளைஞர் கூட்டத்தினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதைத்தான் அவர்கள் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். சினிமா என்ற லேபிள் போராட்டம் இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று. மாணவர்களின் போராட்டத்தினை பிசுபிசுத்திட வைத்திடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

மீடியாக்கள் சினிமாக்காரர்களுக்கு வெளிச்சமிடுவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழனின் பாரம்பரியம் அழிக்கப்பட்டு விடாமல் பாதுகாத்திடல் வேண்டும். ஒவ்வொரு தமிழனாலும் தான் மீடியாக்கள் அசுர வளர்ச்சி அடைகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.

சாலையில் இறங்கிப் போராடும் தங்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். போராட்ட மாணவர்களுக்கு உணவும் உதவியும் வழங்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் குடும்பம் குடும்பமாக ஆதரவினை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். இறுதி ஆண்டுப் பரிட்சைகள் வரக்கூடும். அதிலும் கவனம் வைத்தல் அவசியம்.

சினிமாவாலும் அரசியலாலும் பீடிக்கப்பட்டு சீரழிந்து தமிழர் சமூகம் கிடக்கிறது. உலகிற்கே உயர்வான நாகரீக வாழ்க்கை வாழ்ந்து வந்த தமிழர் சமுதாயம் தலை நிமிரட்டும். சீறிவரும் காளைகளென எக்காளமிட்டு ஜல்லிக்கட்டு நடத்த போராட்டத்தை முன்னெடுங்கள். ஆரம்பம் இதுதான். 

தமிழர் நாடு எனும் தமிழ் நாடு தனது பாரம்பரியத்தை மீட்டெடுத்து தன் சந்ததியினருக்கு வாழையடி வாழையாக கொடுத்து மேன்மையுற வாழ வேண்டும்

Wednesday, July 27, 2016

எம்.எல்.ஏ தொடர் (5) - ஜல்லிக்கட்டு தமிழர்களின் தெய்வ வழிபாடு

யெம்மெல்லே காரில் சுதந்திரத்துடன் சட்டசபைக்குச் சென்று கொண்டிருந்தார். சுதந்திரம் யோசனையில் இருந்தார். சுதந்திரத்தின் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு சிரிப்பு வந்தது. ’இவனெல்லாம் என்னத்தை யோசித்து என்னத்தைக் கிழிக்கப்போறானோ? சுதந்திரம் பெயரில் மட்டும் தான் இருக்கிறது என்பதை அவன் இதுவரைக்கும் உணரவே இல்லையே முட்டாப்பய’ என்று நினைத்துக் கொண்டார்.

”என்னய்யா சுதந்திரம்! யோசனையாவே இருக்கீயே? என்னா விஷயம்?”

“அண்ணே! இந்த ஜல்லிக்கட்டை நினைச்சேன்யா? கொன்னா தப்பு இல்லையாம், ஆனால் விளையாடினா தப்பாம். இது என்னங்கய்யா நியாயம்?”

“அட அதுவாய்யா? விஷயத்தைச் சொல்றேன், குறுக்க குறுக்க கேள்வி கேட்டு லொள்ளு பண்ணாதய்யா” என்றவர் தொடர்ந்தார்.

“நேற்று ஆயுத எழுத்து விவாதத்தில் பெருமாள் என்பவர் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அபிடவிட்டில் கிருஷ்ணர் காளையை அடக்கி விளையாண்டார் என்றும் அது மத சம்பந்தப்பட்டது என்பது போலவும் ஒரு பாயிண்டை குறிப்பிட்டிருந்தார்கள் என்றார். இதில் நுண்ணரசியல் இருக்கிறது என்றார். அது சரிதான்யா. 

நம்ம சிவன் கோவிலில் பார்த்தாய் என்றால் காளை மாடுதான் சிவனுக்கு வாகனம். காளை மாட்டினை நாமெல்லாம் வணங்குகிறோம். அதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. ஆனால் இதைப் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. அதுமட்டுமல்ல சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ’பாரம்பரியம் என்பதாலே மாடுகளை வதைக்க அனுமதிக்க முடியாது’ என்கிறார்கள். 


மஞ்சு விரட்டு என்பது பாரம்பரியம் இல்லைய்யா. அது மத வழிபாட்டு முறை. தமிழர்கள் தான் உலகிலேயே மாட்டுப் பொங்கல் வைத்து மாடுகளை வணங்குபவர்கள். பசு மாடுகளுக்கு லட்சுமி என்று பெயர் வைப்பவர்கள். கோவிலுக்கு காளைகளை நேர்ந்து விடுவர். அவ்வாறு நேர்ந்து விடும் காளைகள் வயற்காட்டில் பயிர்களை மேய்ந்தால் கூட யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றினைந்து தமிழரின் தெய்வ வழிபாட்டோடு கூட இருக்கும்  மாடுகளையும், ஜல்லிக்கட்டினையும் வேறு வழியில் திசை திருப்புவது இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்றே நம்ப வேண்டியிருக்கிறது. இந்திய அரசு தன் அபிடவிட்டில் நான் மேலே சொல்லி இருப்பதைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதை என்னவென்று புரிந்து கொள்வது?

அது மட்டுமல்ல கிருஷ்ணர் ஜல்லிக்கட்டினார் என்று அபிடவிட்டில் சொல்வது சரியில்லை. இங்கு தமிழகத்தில் இருக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்களில் இருக்கும் நந்திகள் சொல்லும் சாட்சியத்தினை ஏன் மத்திய அரசு குறிப்பிடவில்லை என்று புரியவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது மிக வலுவான ஆதாரங்களையும், அதற்கான சாட்சி ஆவணங்களையும் கொடுத்தால் நீதிபதிகள் நிச்சயம் அது பற்றி பரிசீலிப்பார்கள். 

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒரு சிலருக்கு இருக்கும் நோக்கம் போல தெரிகிறது. இயற்கை விவசாயத்தை அழித்த பிரிட்டிஷ் அரசு போல தமிழர்களின் வாழ்வியலை சீரழிக்கும் போக்கு ஒரு சில ஆதிக்க மனப்பான்மை கொண்ட சக்திகளுக்கு இருக்கிறது என்பது உண்மை என்பது போல நடக்கக்கூடிய சம்பவங்கள் சொல்கின்றன.

அதுமட்டுமல்லய்யா சுதந்திரம். இன்னொன்றையும் உன்னிடம் சொல்லி விட வேண்டும். இந்து மதம் என்பது இந்தியாவில் தெய்வ வழிபாட்டினை கொண்டுள்ளவர்கள் அனைவரையும் இணைத்து இந்து மதம் என்றுச் சொல்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சில புத்திசாலித்தனமுள்ள ஆதிக்கவர்க்கத்தினர் இந்து மதம் என்ற பெயரால் ஒவ்வொரு இன வழிபாடுகளை, முறைகளை, பாரம்பரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து விட முயல்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறதய்யா? அப்படி சிதைத்து விட்டால் பல இன மக்களின் வழிபாட்டினை ஒரே முறையாக்கி அதற்கு தலைவராகி விடலாம் என்றொரு கருத்தும் பலராலும் முன் வைக்கப்படுகிறது.

நம் தமிழர் ஜல்லிக்கட்டின் பாரம்பரிய காரணத்தைக் கூட இவ்வாறு சிதைத்து விட முயல்கின்றார்களோ என்று அந்தப் பெருமாள் பேசியதில் விஷயம் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறதய்யா. 

விஷயம் புரிகிறதாய்யா? இனி மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்.