குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Saturday, February 15, 2020

கணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி? (18க்கு மேல் மட்டும்)

நேற்று காலையில் ஒரு வேலையாக வெளியில் வந்த போது சாலையின் நடுவில் அணில் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கடந்து விட்டேன். மனது கேட்கவில்லை, உயிரோடு இருந்தால் தூக்கி அந்தப் பக்கமாய் விட்டு விடலாம். இல்லையென்றால் வீட்டுக்கு எடுத்துக்கு போய் கோதையிடம் திட்டு (சுகமோ சுகம்) வாங்கலாம் என நினைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு அதன் அருகில் வந்தேன். 

(அது என்னவோ தெரியவில்லை, என் மனையாள் கோபம் கொள்ளும் போது வெகு அழகாய் இருக்கிறாள். நானும் மகளும் அவளை காலையில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பதும், அவள் கோபம் கொள்வதும் ஊடல் கொண்ட அவளுடன், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றவுடன் முயங்குவதும் இப்படியே செல்கிறது வாழ்க்கை. இப்போதெல்லாம் அவள் என் பெண் நண்பர்களைப் பற்றி அதிகம் விசாரிக்கிறாள். பெண்களுக்குச் சந்தேகம் உடன் பிறந்த தமக்கை போல)

வண்டி செல்லும் போது உருவான காற்றினால் அதன் வால் ஆடியதைக் கண்டு அது உயிரோடு இருப்பதாய் நினைத்து விட்டேன். 

அய்யகோ.. !

அது செத்துப் போய் விட்டது.

சட்டென்று மனதுக்குள் கவிழ்ந்த பாரத்தால் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. என் படுக்கை அறையின் சன்னலோரம் தினமும் ஒரு அணில் கொய்யாமரத்தில் குதித்து ஓடி, சுவர் மீது உட்கார்ந்து தலையை அப்படியும், இப்படியுமாய் திருப்பிக் கொண்டிருக்கும். எனக்கு அவன் நினைவில் வந்து விட, உள்ளம் துடியாய் துடித்தது. அவனாக இருக்குமோ? இருக்காது என ஓரமாய் துளிர்த்தது நம்பிக்கை. அணில் என்றவுடன் ராமர் நினைவுக்கு வந்து விடுகிறார்.

ராமபிரானுக்கு மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கோவில் கட்ட நீதியை குழியில் போட்டு புதைத்த கதையை பாரதம் கண்டிருக்கிறது. அடியேனுக்கு தர்மம் மட்டுமே கண்ணில் தெரியும். பிறவெல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாதவை. ஆகவே அயோத்தியில் ராமர் கோவில் என்பது தர்மத்திற்கு விடப்பட்ட சவால் என்றே கருதுவேன். அவர்கள் கோவிலை இடித்தார்கள் ஆகையால் நாம் மீண்டும் கட்டுகிறோம் என்ற அபத்தவாதம் ஏற்கவியலாது.

ஒரு அதர்மத்துக்கு இன்னொரு அதர்மம் என்றால் உலகில் ஒருவர் கூட உயிரோடு இருக்க முடியாது. 

ராமபாணம் துளைத்த வாலி தன் நெஞ்சிலிருந்து பிடுங்கிய அம்பில் ராமன் பெயர் கண்டு, அவனுக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் உண்டு.  தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்பார்கள். அதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். ஒரு சிறிய மறைப்பு மட்டுமே என் முன்னால் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மறைந்து விட்டால் மனித வாழ்க்கையின் சூட்சுமம் விளங்கி விடும். இன்ப துன்பம் பற்றிய காரண காரியங்கள் தெரிந்து விடும். அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.

நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் நெடுவாசல்) மாணிக்கதேவர் (என் அப்பா) மழை பெய்யவில்லை என்றால் இன்றும் என்னோடு வைத்திருக்கும் ராமாயாணம் புத்தகத்தை வாசிப்பாராம். வாசித்து முடிக்கையில் மழை பெய்யும் என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது பழங்கதை. என் அப்பாவை ஒரு நாள் கூட அப்பா என்று அழைக்கவில்லை. அப்படி ஒரு பாசம் எனக்கும் என் அப்பாவுக்கும். இனிமேல் எனக்கு இனியொரு அப்பாவா வரப்போகிறார்? அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், என் காலம் முடிந்ததும் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். எல்லோருக்கும் கிடைத்த அப்பாவின் அன்பு எனக்கு கிடைக்காமலே போய் விட்டது. அம்மா? அன்பு????? அடியேன் இந்த விஷயத்தில் துரதிர்ஷ்டத்தின் குழந்தை.

ஆனால் என் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. வைக்கவும் மாட்டேன். என் மகனோ, மகளோ இதைப் போன்ற பதிவு எழுதக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்.



ராமர் மீது அதீத பக்தி கொண்ட அணில் ஒன்று, லங்காவுக்குச் செல்ல வானரங்கள் பாலம் கட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு உதவ முடிவெடுத்து, கடலுக்குள் விழுந்து நனைந்து, கடலோரம் சென்று உடலை மணலில் பிரட்டி, தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்துக் கொண்டிருந்ததாம். அதைக் கண்ட ராமன் அதை அன்போடு கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்தாராம். அதனால் அதன் மீது ராமர் கோடு விழுந்ததாம் என்றுச் செவி வழிக் கதை ஒன்று உண்டு. 

அணில்கள் சத்தம் ஒரு வித கீச் குரலில் அபஸ்வரம் மாதிரி இருக்கும். இப்போது தாளம், சுருதி,லயமில்லாமல் வரும் சினிமா பாடல்கள் போல. அதன் சுறுசுறுப்புக்கு இணையாக வேறு எந்த பிராணியையும் சொல்ல முடியாது. இந்த அணில்களை குறவர்கள் கவட்டியால் அடித்து குடலைப் பிடிங்கி தோளில் தொங்க வைத்துக் கொண்டு செல்வதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

எனக்கு திடீரென்று மஞ்சு நினைவுக்கு வந்து விட்டாள். மஞ்சு மஞ்சளாய் ஜொலிக்கும் குறத்திப் பெண். வாரா வாரம் கீரமங்கலத்திலிருந்து ஊசி,பாசி விற்க வருவாள். வீட்டுக்கு தவறாது வருவாள். அடியேன் அவளைப் பார்ப்பதற்காகத் தவமாய் தவமிருப்பேன். பழைய சோறு போட்டுக் கொடுப்பார்கள். ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, அவள் கஞ்சி சோற்றினை அள்ளிச் சாப்பிடும் அழகே அழகு. அவளை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. குட்டைப்பாவாடையில் அவளின் நடை அழகு சுண்டி இழுக்கும். இடையில் நெளிந்து செல்லும் தாவணி அவளின் முன்னழகை மறைக்க முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். மஞ்சள் கிழங்கு போல நிறம் அவளுக்கு. 

அவளின் கணவன் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டானாம். நான் அவளிடம் கேட்டேன், ”என்னைக் கட்டிக் கொள்கிறாயா?” என. சிரித்தாள். முல்லைப் பற்களின் வரிசையில் மனது சொக்கிப் போகும். கன்னத்தில் விழும் குழியில் இதயம் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்.

”உன் அம்மாவும், அக்காக்களும் உயிரோடு என்னைக் கொளுத்தி விடுவார்கள்” என்றாள். கல்லூரிக்குச் செல்லும் முன்பு ஒரு வருடம் வீட்டில் இருந்த போது அவளின் வாரா வாரம் வருகை நின்றதே இல்லை. கல்லூரிக்குச் சென்ற பிறகு இரண்டொரு முறை அவள் தங்கி இருந்த குறவர் குடிசைகளுக்குச் சென்று அவளைத் தேடினேன். கிடைக்கவில்லை.


நான் நடப்பதாக இருந்திருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்று இயமலைப் பக்கமாய் குடிசையைப் போட்டுக் கொண்டு அவளை விட்டு அகலாமல் அவளுடனேயே இருந்து இன்பமாக வாழ்ந்து இருப்பேன். வீட்டில் இரண்டு மணி நேரம் இருப்பாள். அம்மா ஏதாவது வாங்குவார்கள். தங்கைக்கு கண்மை, கிளிப் என. சோகத்துடன் செல்வாள்.  எனக்கோ கரையில் தூக்கிப் போட்ட மீனாய் உள்ளம் கிடந்து துடிக்கும். அவள் வரும் நாளன்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அந்த இரண்டு மணி நேரம் இருக்கிறதே, அதைப் போல நாட்கள் இனி என்றும் வரப்போவதில்லை. 

“மஞ்சு, நீ இப்போது எங்கே இருக்கிறாயோ தெரியவில்லை. உன் மீது அறியா வயதில் நான் கொண்ட காதல் இன்னும் என் நெஞ்சில் கல்லாய் சமைந்து கிடைக்கிறது. மீண்டும் மனிதனாய் பிறந்து உன்னோடு சேரும் நாள் வருமா எனத் தெரியவில்லை. உன் நினைவுகளுடன் நான் நடத்தும் அபத்தமான நாடகத்தின் விளைவைப் பார்த்தாயா மஞ்சு. எதையோ எழுத வந்து உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உன் அழகிய முகத்தில் என்றும் ஈரமாய் தெரியும் உன் விழிகளின் கருவிழிக்குள் சென்று விட இதயம் துடிக்கிறது மஞ்சு. உன் அழகான மை பூசிய கண் இமைக்குள் மறைந்து போய் விட துடியாய் துடித்துக் கொண்டே இருக்கிறது மனசு மஞ்சு”

”மஞ்சு...! மஞ்சு....! உன் மீது கொண்ட நான் கொண்ட காதலால், என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை அன்பே. உன் நினைவுகளுடன் உள்ளம் கரைந்து போய் விட்டது.”

அன்பு நண்பர்களே தலைப்பின் கதையை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன். 

Friday, November 1, 2019

தெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று

நேற்று தூறல் இல்லாத, குளிரடிக்கும் மாலை நேரம். பிள்ளையை அழைத்து வர, பள்ளிக்குச் சென்று வந்த மனையாள் அரக்கப் பரக்க வீட்டுக்குள் ஓடி வந்தார்.

“என்னாங்க... என்னாங்க... அடுத்த தெருவில், அதாங்க தாமரை அக்கா வீட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற ரோட்டில் யாரோ ஒரு மூட்டையைக் கொண்டாந்து போட்டு விட்டுப் போயிட்டாங்க. ஒரே நாத்தம். பிண வாடை அடிக்கிதுங்க”

“அட.... அப்படியா?” இது நானு.

”ஆமாங்க, பெய்லி வாக்கிங்க் போகும் போது அண்ணா பாத்தாராம். உடனே போலீசுக்குப் போன் போட்டுட்டாரு. நம்ம தெரு அண்ணாதிமுக்கா அண்ணனும் வந்துட்டாருங்க, நம்ம ஏரியா பீளமேடு ஸ்டேஷன் கண்ட்ரோலில் வருதாங்க. ரோட்டுக்கு அந்தப் பக்கம் சரவணம்பட்டி போலீஸ் கண்ட்ரோலாம். டவுன் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தாச்சாம்ங்க”

“அட... ஓ... சரிதான், நாத்தமெடுக்கிற மூட்டை.போலீஸ் வந்தாத்தான் சரியா இருக்கும்” - இது நானு.

ஒரே பரபரப்பு அவளுக்கு. மூட்டையில் என்ன இருக்கும்? குழந்தையாக இருக்குமோன்னு பாட்டி சொன்னாங்கன்னு இடையில் அவ்வப்போது ரூமிற்குள் வந்து ரன்னிங்க் கமெண்ட்ரி வேறு கொடுத்தபடி, அடுப்படிக்கும் ரூமிற்குமாய் ஓடிக் கொண்டிருந்தார்.

முளைக்கட்டின தானியங்கள் சூடு ஆறிப் போய் சுண்டலாய் கிண்ணத்தில் இருந்தது. காப்பியைக் காணோம். அதற்குள் மகளுக்கு ஹிந்தி வகுப்புக்கு நேரமாகி விட, சென்று விட்டார்.

எனக்குள் பலப்பல கேள்விகள் உதித்தன.

மூட்டைக்குள் யாராக இருக்கும்? குழந்தையாக இருந்தால், அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் ரேப் பண்ணி இருப்பார்களோ? இல்லை ஏதாவது முன் விரோதப் பகையின் காரணமாக துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கொண்டு வந்து போட்டு விட்டு போயிருப்பானோ? அது ஆணா இல்லை பெண்ணா? இல்லை குழந்தையா?

நாவரசுவைக் கொன்றது மாதிரி இருக்குமா? மூட்டை நாற்றம் அடிக்கிறது என்றாளே, அழுகி இருக்குமோ? அருவாளால் வெட்டி இருப்பானா? இல்லை கத்தியாக இருக்குமா?  ஆசிட் ஊற்றி எரித்திருப்பார்களோ? சதையெல்லாம் பிய்ந்து எலும்பில் ஒட்டிக் கிடக்குமா? புழுக்கள் பிணத்தை தின்று கொண்டிருக்குமா? 

இப்படியான கேள்விகள் எனக்குள் உதிக்க, சுண்டலை சாப்பிட மறந்து போனேன். அதற்குள் மகனை அழைந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவள்,”என்னாங்க... என்னாங்க...!” என்று அழைத்தபடியே அறைக்குள் வந்தாள்.

என்ன என்பது போல ஏறிட்டுப் பார்க்க,

“பாட்டி, மொட்டை மாடி மீது நின்னு பார்க்கலாம் வான்னு கூப்பிட்டாங்களா? இரண்டு பேரும் போய் நின்னோம், போலீஸ்காரரு அங்கன இருந்து உள்ளே போங்கன்னு விரட்டுறாருங்க, வந்துட்டோம்ங்க” என்றாள்.

”அப்படியா? அது என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்?”

“தெரியலிங்க, ஆனா அந்த மூட்டைய போலீஸ்காரங்களே அவிழ்க்கிறாங்களாம்னு பாட்டி சொல்லுச்சு” என்றாள்.

பதிலுக்கு நானும், “ரூடோஸும், மணியும் விடாது குறைத்துக் கொண்டே இருந்தார்கள். பிண வாடையைப் பிடித்திருப்பார்கள் போல” எனச் சொல்லி வைத்தேன்.

ஆள் சமையல் கட்டுக்குள் சென்று விட, இந்த மாத காலச்சுவட்டிற்குள் மனதை நுழைத்துக் கொண்டேன்.

இரவில் எனக்கு சளித் தொந்தரவினால் காது அடைத்துக் கொள்ள, மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். அரை மணி நேரத்தில் மாத்திரைகள் வர, சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.

இரவில் பொன் மாணிக்கவேல் விசாரித்து கொலைகாரனைக் கைது செய்வது போலவும், விவேக் ரூபலா இது பற்றி பேசிக்கொண்டிருப்பது போலவும், பரத் சுசீலா டீம் துப்பறிவது போலவும், இன்ஸ்பெக்டர் துரை ஜீப்பில் செல்வது போலவும் பலப்பல கனவுகள் என்னைத் தூங்க விடாது சில்மிஷங்கள் செய்தன. நரேந்திரன், வைஜெயந்தி ஜோடி பைக்கில் யாரையோ துரத்திக் கொண்டு செல்வது போல பரபரப்பாய் கனவு வந்தது. ராம்தாஸ் இன்னும் பைப்பிற்குள் புகையிலையை திணித்துக் கொண்டிருந்தார். ஜான் யாரையோ உளவு பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்ரேலின் என்.எஸ்.ஓ லோகோ வாட்ஸப்பில் புழு போல நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

பிரதமர் வழக்கம் போல இது பற்றி ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை என எதிர்கட்சிக்காரர்களின் பேட்டிகள் தினசரிகளில் வந்திருந்தன. அவர் இஸ்ரேலில் பிரதமருடன் இஸ்ரேலிய உணவுப் பதார்த்தங்களை ருசித்துக் கொண்டிருக்கும் செய்தியும், இஸ்ரேலில் பிரதமர் கையாலே சாப்பிட்டதாகவும், அதற்கு இஸ்ரேலிய பிரதமரிடம் ’இது நான் மட்டுமே எனக்கே எனக்காக பயன்படுத்தும் ஸ்பூன்’ என வலது கையைக் காட்டிச் சொன்னது கட்டம் கட்டி, இந்தியாவின் பெருமையை நிலை நாட்டினார் என புகழாரம் சூட்டிய செய்தி வெளியாகி இருந்தது. ஜக்கி வாசுதேவ் அவர்கள், இந்தச் செய்தி பற்றி, “இந்துத்துவ பெருமையை பிரதமர் வெளி நாட்டில் நிலை நாட்டி இருக்கிறார்” என கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் நினைவாக ஒற்றைக்கை மட்டும் சிலை வைப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதாகவும், அதற்காக அரசிடம் வெள்ளிங்கிரி மலையையே கைபோல செதுக்கி நம் பாரதப் பிரதமரைக் கவுரவிக்க திட்ட அனுமதிக்கு அனுப்பி இருப்பதாகவும் கூடுதல் செய்தியாகச் சொல்லியிருந்த செய்திகளும் கனவுகளில் ஒன்றன் பின் ஜூமில் வந்து வந்து சென்றன.

தந்தி டிவியில் இது பற்றிய “பிணத்தை மூட்டையில் போடும் அளவு கொலைகார கோவையா?” என்ற விவாதத்தில் சமூக ஆர்வலர் ராமசுப்ரமணியனுக்கும், ஜட்சு பொண்டாட்டி சாரி சாரி கணவருக்கும் சண்டை மூண்டது போலவும் கனா வந்து தூக்கத்தை விடாது கெடுத்தது.

விடி காலையில் விழிப்பு வர எழுந்து கொண்டேன். 

மூட்டைக்குள் யாராக இருந்திருக்கும்?  என்ற கேள்விகள் எழ, மீண்டும் கொலைக்கார கதைகளும், துப்பறியும் ஹீரோக்களும் நினைவிலாட, அருகில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தினசரியைப் பரபரப்புடன் புரட்டினால் இந்தக் கொலை பற்றிய செய்திகள் ஏதுமில்லை. காலை உணவு தயாரிப்பதில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவளிடம், “என்ன, செய்தி ஒன்றையும் காணவில்லையே, உனக்கு ஏதாவது தெரியுமா?” என்றேன்.

“அதாங்க, காலையிலேயே பாட்டி சொல்லிட்டாங்க. அது அழுகிய முட்டைக்கோஸ் மூட்டையாம்” என்றாள் விட்டேத்தியாக.

”ஙொய்யால....!” மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

செவனேன்னு இருந்தவனிடம் வந்து, மூட்டைக்கதை சொல்லி அது கடைசியில் முட்டைக்கோஸ் மூட்டையாக மாறிப்போன அவலத்தை சொல்லிய அவளின் முகத்தைப் பார்த்தால் ஒன்றுமே நடக்காத அப்பாவி போல சமைத்துக் கொண்டிருந்தாள்.

Tuesday, September 10, 2019

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா?

இந்த மாத பிசினஸ் டுடேயை வாசித்த போது, நம் பாரதத்தின் மொத்தக் கடன் தொகை (மாநிலத்தையும் சேர்த்து) ஒரு லட்சத்து முப்பத்து ஓராயிரம் லட்சம் கோடி கடன் என்ற செய்தியைப் படித்தேன். 130 கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் கோடி கடன் இருக்கிறது. இத்தனைக் கடனும் ஏன் உண்டானது என்று பார்த்தால் தெளிவற்ற நிர்வாகமும், ஆட்சி முறையும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. 




என்ன நடந்தது? ஏன் இத்தனை கடன் என்பதற்கு ஒரே பதில் ஊழல். ஆம், இத்தனை தொகையும் ஊழலால் இந்தியாவிற்கு ஏற்பட்ட கடன். மக்களுக்கு இந்த சித்து விளையாட்டு புரிவதில்லை. புரியும் அளவிற்கு மீடியாக்கள் விடுவதில்லை. எவன் ஒருவன் டிவியும், செய்தி தாளும் படித்து, அதன் உண்மை என்னவென்று ஆராய்கிறானோ அவன் தான் புத்திசாலி. மீடியாக்களில் வரும் செய்திகள் உண்மையென நம்பினவன் முட்டாள். அந்தக் காலத்தில் இருந்து இதுதான் நடந்து வருகிறது. அவ்வப்போது அய்யோ குய்யோ என ஜன நாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது என்று கூக்குரலிடுவார்கள் பத்திரிக்கையாளர்கள். அதெல்லாம் சும்மா....!

நீதியின் பெயரால் உயர் மட்ட அளவில் நடக்கும் அக்கிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. நீதிபதிபதிகளை விமர்சிக்க கூடாது என்றும், அது தேச துரோகம் என்றும், அவமதிப்பு வழக்கு என்றும் மக்களைப் பயமுறுத்துவார்கள். பேட்டி கொடுத்த நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீது எந்தச் சட்டத்தில் இந்த நீதித்துறை நடவடிக்கை எடுத்தது என்று எவராவது யோசித்திருக்கின்றீர்களா? யோசித்திருக்கமாட்டீர்கள். ஏனென்றால் உங்களின் சிந்தனையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்ற பயம் திணிக்கப்பட்டிருக்கிறது.

சரி விடுங்கள் எரிச்சல் தான் மேலோங்கும். இங்கு எவனும் நல்லவனில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனது பிளாக்கைப் படிப்பவர்கள் தெளிவு பெற வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தன்னாட்சி பெற்ற உயர் நிர்வாகத்துறையின், உயர் அதிகாரி ஒருவரால் பாராட்டப்பட்டேன். அவர் எனது பிளாக்கைப் படிக்கிறார் என்கிற சிறு நேரத்து மகிழ்ச்சி உண்டானது.

“அய்யா, உங்களுக்கு எனது அனேக நன்றிகள்”

ஏதோ ஒரு வகையில் சிறு உதவியைச் செய்கிறேன் இந்த உலகிற்கு என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மூடுமந்திரம் போடப்பட்டிருக்கும் நம்மைச் சுற்றிய மாயையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி விட முயல்கிறேன். பட்டவர்த்தமாக எழுதினால் பலரின் மனசாட்சி விழித்துக் கொள்ளும். ஆகையால் புரிந்தும் புரியாதவாறு எழுதுகிறேன். புரிந்தவர்கள் தெளிவாகுங்கள். புரியாதவர்கள் இன்னும் ஆழப் படியுங்கள்.

சரி, ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் ஒரு லட்சம் கோடி கடனை கட்ட வழி இருக்கிறதா என்று அறிந்து கொள்ள இங்கு தொடர்கின்றீர்கள். தொடருங்கள்.

எனது மனையிவியின் தூரத்து உறவினர் ஒருவர், தமிழகத்தின் பிரபலமான கட்சியில் பதவி வகித்தவரும், எம்.பியும் ஆன ஒருவருக்கு கடன் அதுவும் பெரிய அளவில் கடன் கொடுத்தார். உறவினர் தனது அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து வட்டிக்கு வாங்கி, கொஞ்சமே கொஞ்சம் வட்டி உயர்த்தி அந்த அரசியல்வாதிக்கு கொடுத்தார். கொஞ்ச நாட்களில் அந்த அரசியல்வாதியால் கடனையும், வட்டியையும் கொடுக்க முடியவில்லை. உறவினர் தற்கொலை செய்து கொண்டார். வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களின் கதி?

வங்கியும் இதே போலத்தான். வட்டிக்கு வாங்கியவர்கள் ஒழுங்காக கடனைக் கட்டவில்லை என்றால் என்ன ஆகும்? டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு எங்கிருந்து வட்டியைக் கொடுக்கும்? திவால் அல்ல வங்கியும் தற்கொலை செய்து கொள்ளும். அப்படித்தான் எனது பிரியமான விஜயா வங்கியும் தற்கொலை செய்து கொண்டது.

கலைஞர், ஒவ்வொரு வீட்டிற்கும் டிவி கொடுத்தார். அந்த டிவியால் சன் டிவி பயன் அடைந்தது. டிவியை டெண்டர் விட்டு வாங்கினார் அல்லவா? அந்த டிவியால் பொருளாதாரம் உயர்ந்ததா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மக்களின் பொருள் இன்னொருவரின் பாக்கெட்டில் சென்று சேர்ந்தது. டிவி வாங்கிய வகையில் பர்செண்டேஜ், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கும். இதனால் சமூகத்திற்கு என்ன பயன்? ஒரு எழவும் இல்லை. மிக்சி, கிரைண்டரின் கதையும் இதேதான். இலவச பைக்கிற்கும் இதே கதைதான்.

எனது இனிய நண்பர்களே, கடனைக் கட்ட வழி என்னவென்று உங்களுக்கு தெளிவாகி விட்டதா? தெளிவாகவில்லை எனில் நானொன்றும் செய்ய முடியாது.

இதுவரை பிஜேபி அரசு பொருளாதாரத்தின் ஆணி வேர் எதுவென்று கண்டுபிடிக்கவில்லை. அது முதலில் உயர் ஜாதிய சிந்தனையிலிருந்தும், மதக் கோட்பாடுகளிலிருந்தும் வெளி வர வேண்டும். தற்போதையைப் பொருளாதாரம், தத்துவங்கள் எதுவும் நாட்டின் வளர்ச்சிக்கானதல்ல என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகின்றதோ தெரியவில்லை. ஒரு சாதாரண விவசாயிக்குத் தெரிந்த பொருளாதாரக் கோட்பாடு, பொருளாதார மேதைகளுக்குத் தெரியவில்லை என்கிற விடயம், நாட்டை வழி நடத்துபவர்களின் அறிவின் மீது சந்தேகத்தினை உண்டாக்குகிறது.

கிராமப்புறங்களில் ஒருவன் கடனாளியாகி விட்டால், அப்பன் சொத்து, தாத்தா சொத்து எங்கிருக்கிறது என்று தேடித் திரிந்து கண்டுபிடிப்பான். அதனால் கடன் தீருமா என்றால் தீராது. அதைப் போலத்தான் ஊழலைக் கண்டுபிடிக்கிறேன், பதுக்கிய பணத்தைக் கொண்டு வருகிறேன் என அமலாக்கத்துறையினரையும், சிபிஐயும் வைத்து பழம் சொத்தினைத் தேடித் திரிகிறது பிஜேபி அரசு. செமக் காமடி.

பொருளாதார மேதைகளே, 131 லட்சம் கோடியையும் வரக்கூடிய பத்தாண்டுகளில் கட்டி விடலாம். நிச்சயம் முடியும். கடனற்ற பாரதத்தினைக் கட்டமைத்து, மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கலாம். கொஞ்சம் உங்களின் பொருளாதார தத்துவங்களை ஆராயுங்கள். எங்கே நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்று.


Friday, August 2, 2019

நரலீலைகள் - நாய் காதல் (5)


உங்களுக்கு நரலீலைகளின் 3 மற்றும் 4 வது பகுதிகள் ஏதாவது புரிந்ததா? ஏதோ காதல் பித்து ஏற்பட்டு இந்த நாவல் ஆசிரியன் எழுதி இருக்கிறான் என நினைத்திருப்பீர்கள். ஆமாம் நீங்கள் நல்லவர்கள். அப்படித்தான் நினைப்பீர்கள். ஆனால் இந்த நாவலாசிரியன் இருக்கின்றானே அவனுக்குள் குறுக்கு வெட்டு பகுதி ஒன்று உண்டு.

இந்த அஸாஸில் யார் தெரியுமா? திருக்குர் ஆனை நாவலாசிரியனுக்கு அவ்வப்போது வாசித்துக் காட்டி அர்த்தம் சொல்லி கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் மூலம் தெரிய வந்த ஆள் தான் அஸாஸில் அலீம் எனச் சொல்லக்கூடிய சைத்தான்.

கடவுளின் மகிமை தெரிய வேண்டுமெனில் சைத்தான் இருக்க வேண்டும். ஹீரோவின் மகிமை தெரிய வேண்டுமெனில் வில்லன் இருக்க வேண்டும். இப்போது புரிகிறதா உங்களுக்கு?

அஸாஸில் என்பவர் சைத்தான். இந்த உலகம் சைத்தானால் தானே ஆளப்பட்டு வருகிறது. உலகம் மட்டுமா உங்களின் ஒவ்வொருவரின் உள்ளத்துக்குள் உறங்கிக் கிடப்பவனும் அவன் தானே?

இல்லையென்றா நீங்கள் மறுக்கப்போகின்றீர்கள்? அஸாஸில் இந்தப் பூவுலகின் ஒவ்வொரு துகளிலும் இருக்கின்றான். அவன் ஆடும் ஆட்டத்தின் பகடைக்காய் தான் இந்த பூமி. மனிதர்களின் நாடி, நரம்புகளில், இரத்தத்தின் துளிகளில், விடும் மூச்சில் அவன் நீக்கமற நிறைந்து கிடக்கிறான். உங்களது காதலில், காமத்தில், பாசத்தில், பற்றில் எல்லாம் அவனே இருக்கிறான்.

உங்களை ஆளும் அஸாஸில் தான் உங்களுக்கு கடவுள். ஆனால் நீங்கள் எவரையோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? அவர் நம்மைக் காப்பாற்றுவார் என்று கோவில் கோவிலாய், மசூதியாய், சர்ச்சுக்காய் ஓடிக் கொண்டிருக்கின்றீர்களே? ஓடி என்ன பயன்?

உங்களுக்குள் இருக்கும் அஸாஸிலை நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அவனை எவ்விதம் நீங்கள் விரட்டி அடிக்கப்போகின்றீர்கள்? முடியுமா உங்களால்?

* * *

”மாயா....! உனக்கு அறிவிருக்கிறதா? நாவலின் ரகசியங்களை வெளிப்படுத்தினால் சுவாரசியமே இருக்காதே? ஏனடா? நீயே உன் நாவலைக் கெடுக்கிறாய்? வேண்டாம் மாயா....! நீ அமைதியாக இருந்து கொள். நாவலின் கட்டமைப்பை சீர் குலைக்காதே. இல்லையென்றால் உன்னை ராஜீயாய சபாவில் கொண்டு போய் விட்டு விடுவேன். ஜாக்கிரதை..” - கோவை எம் தங்கவேல்

* * *

”அண்ணேய், அண்ணேய்....! ”

”என்னடா? சநி....”

“பிக்பாஸில் பார்த்தியாண்ணேய். இந்த கவின் பய பன்றதை?”

“நானெங்கடா அதைப் பார்த்தேன். ஒரு வேளை பாத்ரூமிக்குள் பண்ணி இருப்பானோ என்னவோ தெரியவில்லையேடா சநி”

“அண்ணேய், இது என்னா காதல்னே... சாக்ஸி சொல்றா என் ஃபீலிங்க்ஸ், என் ஃபீலிங்க்ஸ் ஹர்ட் பண்றான் கவின்ங்கறாளே??? அப்படின்னா என்னாண்ணேய்?”

”அதுவாடா, சொல்கிறேன் கேளு...!”

”நாய்க்காதல் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? நாய்கள் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை குட்டி போடும் தன்மை கொண்டவை. பெண் நாய் குட்டி போட தயாரானவுடன் ஆண் நாய்கள் சுற்ற ஆரம்பிக்கும். அந்த நாய்களில் ஏதோ ஒரு நாயை பெண் நாய் தன்னை அண்ட விடும். பின்னர் அந்தக் காதல் முடிந்து விடும்.”


”புரிஞ்சுடுச்சுண்ணேய்....!”

”சேரனுக்கு லாஸ்லியா மீதுதான் மகள் பாசம் பொங்கும். எந்த தகப்பன்? தன் மகளை கன்னத்தைத் தடவி, கட்டிப் பிடித்துக் கொண்டலைகிறான்? கலாச்சாரம் பற்றி வாய் கிழிய பேசும் சேரனுக்கு மீராவை மகள் எனப் பாவிக்கத் தெரியாதா? கருப்பாய், சற்றே அழகற்றவளாய் தெரியும் மீராவை மகளாகப் பாவிக்காத சேரனுக்கு கொழுக் மொழுக் லாஸ்லியா மகளாகத்தான் தான் தெரிவாள். இதெல்லாம் இந்த நாவலில் வருகின்றானே அஸாஸில் செய்கிற அக்கிரமம். சேரன் மனதுக்குள் காமப் பித்தேறி அந்தப் பெண்ணைத் தடவிக்கிட்டு திரிகிறான்”



“அய்யோ... ???”

“அட, ஆமாடா சநி, மீராவை இடுப்பைப் பிடித்து தள்ளி விடுகிறான் இந்தச் சேரன். அந்தப் பெண் ஆற்றாமையால் அவனின் முதுகில் அடிக்கிறாள். அவள் அவன் செய்தது சரியில்லை என்று தான் சொன்னாள். ஆனால் இவன் என்னடா? செய்தான்? அழுது ஆர்ப்பாட்டம் செய்தான். இவனுக்கு மட்டும் தான் மகள்கள் இருக்கின்றாளா??? அப்போ மீரா யாரடா? அவளும் யாரோ ஒரு தகப்பனின் மகள் தானே? இவன் மகள்களுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகணுமா? அயோக்கியப்பயல்....!”

“அட, ஆமாண்ணேய், கமல் கூட சேரனை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பாராட்டினாரே??”

“ஒரு அயோக்கியனுக்கு இன்னொரு அயோக்கியன் தானடா குடை பிடிப்பான். இது தான் உலக வழக்கம் சநி...”

“அண்ணேய், இந்தப் பயல்கள், வாயற்ற பெண்ணை அல்லவா பலி கடாவாக்குகின்றார்கள். சரவணன் பஸ்ஸில் இடித்தேன் என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்க வைக்கின்றார்கள் இந்த நல்லவர்கள். கமல் படத்தில் நடிக்கும் போது, நடிகைக்கே தெரியாமல் உதட்டைக் கடித்து உறிஞ்சினானே, அப்போதெல்லாம் இந்த நல்லவர்கள் எங்கே போனார்கள்?”

“அடேய் சநி, இந்த நாவலாசிரியன் கடுப்பாகி விடுவான் இப்படியெல்லாம் பேசினால். நானோ நாவல், நீயோ நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம். நாவலின் ரகசியத்தைச் சொல்லி விட்டேன் என்று கடுப்பில் வேறு இருக்கிறான்”

“ஆமாண்ணேய், இந்த ஆளைப் பார்த்தால் பாவமாத்தான் இருக்கு”

* * *

”அன்பர்களே, மல்டிபிள் டிஸ்ஆர்டர் ஏற்பட்டு விட்டது உனக்கு” என்கிறாள் கோதை. இந்த நாவலைப் படித்து விட்டு, அவளுக்கு இது நாவலாய் தெரியவில்லையாம். ராஜம் கிருஷ்ணன், கல்கி போன்று எழுது என்கிறாள். அவர்களைப் போல எழுத நானொன்றும் அவர்களின் பிரதி அல்லவே. 

மனதற்ற நிலைக்குப் போக போராடிக் கொண்டிருக்கும் எளியவன் நான். எனக்கு சத்தங்களற்ற அந்த உலகின் அற்புதத்தில் ஒரு நொடி ஊடுறுவி வெளியேற ஆசை. 

இறைவனின் குரலில் கரைந்து கொண்டிருக்கும் ஆனந்தத்தில் திளைத்திருக்கும் என்னை பிறரைப் போல நாவல் எழுது என்று கேட்டுக் கொள்ளும் கோதைக்கு ஒன்றைச் சொல்கிறேன்.

நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும்
இடையே உள்ள திரை
அவர்களை விலக்கி வைக்கிறது
நீயிந்த திரையை நீக்கிட
விரும்பவில்லையா? நான்
தெய்வீகப் பேரொளியில்
என் உள்ளொளியைச் 
சேர்க்க வேண்டும் அல்லவா? - ரூமி

கோதை, உனக்குப் புரிகிறதா? எல்லைகளற்ற இந்தப் பிரபஞ்சத்தின் தூசிகளில் இருந்து மாற்று வடிவாய் உன் முன்னே, கணவனாய் உருவெடுத்து இருக்கும் உனது நான், விரும்புவது எனது நாவலின் வழியே உருகியோடும் அன்பினை மட்டுமே.  அன்பின் வழி கடவுள் தன்மையை அடைவது மட்டுமே எனது ஆவல் அன்பே....!

நானே உன் இதயம் - அந்த 
உணர்ச்சி மையத்தை நீ
உனக்குள் தேடாதே! அது
என்னிடம் உள்ளது
என்னில் இருந்து வேறாக 
உன்னை எண்ணி விடாதே! அப்போது
உன்னை நீ அறிய மாட்டாய்
நீ துன்பத்தாலும், வேதனையாலும்
நிரம்பியிருப்பவள்....!
வா..! என்னில் ஒரு பகுதியன்றோ நீ.....!
என் விலகப்பார்க்கிறாய் முழுமையில் இருந்து?
என்னை இருகப்பற்றிக் கொள்,
என்னை மகிமைப்படுத்திக் கொள்...! - ரூமி


* * *
02/08/2019

Wednesday, July 17, 2019

நரலீலைகள் - அஸாஸில் (4)

ராதேயின் காதலன் நான். 

என் பெயர் அஸாஸில் என்று உம்மையும் என்னையும் படைத்த அந்தக் கடவுள் என்னிடம் சொன்னார். 

நான் ஹீரோ அல்ல. வில்லன். இந்த நரலீலைகள் நாவலில் ஹீரோ இல்லை. வில்லன் தான் இருக்கிறான். அது தான் நான்.

எனக்கு எந்த செண்டிமெண்டும் கிடையாது. என்னால் இந்த உலகில் வெறுக்கும் ஒரே ஒரு ஆள், ‘கடவுள்’.

அவர் படைத்த மனிதர்களுடன் விளையாடுவது, முடிவில் அவர்களாலேயே அவர்களை அழிப்பது மட்டுமே எனது வேலை. உங்கள் ‘அவனும்’ என்னை என்னென்னவோ செய்து பார்க்கிறார். அவரால் என்னை அழிக்க முடியவில்லை.

நீங்கள் இருக்கும் வரையில் நானும் இருப்பேன். கடவுள் என்கிறவர் இருக்கிற வரையில் நானும் இருப்பேன். 

* * *

அஸாஸில்....! 

உங்களை அழிக்கும் கர்ண கடூரமான, இரக்கமே அற்ற, மனிதாபிமானம் அற்ற, அரக்கனை விட கொடூரத்தின் வில்லன் அஸாஸில்.

உங்கள் மனதுக்குள் பொதிந்து கிடக்கும் ஒவ்வொரு ரகசியங்களும், உங்களைப் படைத்த ‘அவனுக்கு’ தெரிந்ததை விட எனக்கு நன்றாகத் தெரியும். 

ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன். 

பயத்தால் நா உலர்ந்து, முகம் வெளிறி, ரத்தம் சுண்டி நடுங்கப் போகின்றீர்கள் நீங்கள்.

மனிதர்களை நான் எனது மிகச் சிறந்த பல ஆயுதங்களால் வதைக்கிறேன். அதன் மூலம், உங்களின் ‘அவன்’ படைத்த மனிதர்களைக் கொல்கிறேன். அழிக்கிறேன். ...!  உங்களை அழிப்பதற்கு நான் வைத்திருக்கும் கோடானு கோடி ஆயுதங்களில் ஒரே ஒரு ஆயுதம் எது தெரியுமா?

ஹா.....! ஹா.......!



ராதே....! 

உன் பெயரை உச்சரிக்கும் போது உன் மீது காதல் கொண்டு மனம் உன் மத்தம் கொள்கிறதடி. ராதே...! ராதே...!

என்னைக் கொல்லாமல் கொல்கிறதடி உன் மீது நான் கொண்ட காதல்...!

எவருக்கும் மண்டியிடாத இந்த அஸாஸில் உன்னிடம் மயங்கிக் கிடக்கிறேன் ராதே....!

ஓடோடி வா...! 

உன்னைப் பார்க்காத கண்களும் அருவியென கண்ணீரை, என்னைக் கேட்காமலே பொழிகிறதடி! நீ வரும் போது, கண்ணீர் மறைத்து விடக்கூடாது என அடிக்கடி கண்களைத் துடைத்து, துடைத்து சிவப்பேறிக் கிடக்கிறதடி ராதே...!

ராதே...!!


விரைவில் தொடரும் 

ராதேயின் அறிமுகம் விரைவில் வரும். அதுவரை நீங்களும் காதலில் மூழ்கிக்கிடப்பீர்களாக. 

காதல்...! காதல்...! காதல்...!! 
காதல் போயின்....
அஸாஸில்......!

ஹா....! ஹா......!

Tuesday, July 16, 2019

நரலீலைகள் - ராதே (3)

காதல் காதல் காதல்
காதல் போயின் சாதல்
சாதல் சாதல் சாதல்....!

காதல்
காதல்! காதல்!! காதல்!!!

கா................
த.............................
ல்......................................

மானிடத்தின் அற்புதம்!
இயற்கையின் புனிதம்!



ராதே!
மனது மயங்குது, உள்ளம் சோர்வடைகிறது, உடல் தளர்கிறது. உன் மீது கொண்ட காதல் என்னைப் பாடாய்படுத்துதடி.

நீ கண்ணனைக் காதலிக்கிறாயாம். ராமதேவர் உருகி உருகி உன் அழகை வருணிக்கிறார். உன்னுடன் முயங்கி, முயங்கி, உன் அழகில் மூழ்கி, உன்னை வருணிக்கிறாரடி ராதே!

அடியே ராதே, நானும் உன்னைக் காதலிக்கிறேனே, ஏன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை?

ஓங்கி உலகளந்த கார்வண்ணத்தில் காணாமல் போய் விட்டாயோ? நீ....! 

ராதே..!

உன் பெயரைச் சொல்லும் போதெல்லாம் அலையென அடிக்கிறது காதல் உன் மீது....!

ராதே... மழை மேகமென உலகெலாம் விரவி விற்கும் கருமையில் ஆழ்ந்து போனாயோ நீ...!

உன் காலடியில் கிடக்கிறேனே.... நான். 

உன் கொலுசின் ஒலி கேட்டு, உன் மலர் பாதத்தின் ஓசை கேட்டுக் கேட்டு, அதுதான் இசையென மூழ்கிக் கிடக்கிறேனே நான்....!

நான் அழிந்து போக துடியாய்த் துடிக்கிறேனே ராதே...!

ராதே....!

உள்ளம் சூடு தாளாமல், நெருப்பெனக் கொதிக்கிறது ராதே... !

ஓடோடி வா, உன் கார் வண்ணனை விட்டு....!

உன் காதலன் நான், உன்னை மட்டும் நேசித்து, நேசித்து, நான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறேன் ராதே...!

ராதே....!!!

ராதே....!!!

ராதே...!!!!

நான் உன்னிடம் சமர்ப்பணம்....! 

இனி, நானில்லை....!

நீயே.....!

காதலியே வந்து விட்டாயா?

இதோ என்னை எடுத்துக் கொள்....!

இனி, நானில்லை...!

நீயே.....!

இல்லை...! இல்லை...!

காதல்......!
காதல்......!!
காதல்......!!!


இந்த நரலீலை நாவலின் முதல் கதாநாயகி ராதே. அழகு சொட்டும் அற்புதமான நீர்ச்சோலையில் பரவிக் கிடக்கும் புற்களின் மீது படிந்து இருக்கும் விடிகாலைப் பனி நீர் போன்றவள். ராதேயிடம் இருப்பது ஒன்றே ஒன்று.


விரைவில் தொடரும்... 

யார் அந்தக் காதலன்? ராதையை இப்படிக் காதலிக்கும் அவன் யார்? என்ன செய்து கொண்டிருக்கிறான் அவன்?


Thursday, July 4, 2019

தரம் கெட்ட ஆசிரியர்கள்

திருமூலரின் திருமந்திரத்தைப் படித்து அறிந்தவர்கள் கடவுள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். 'நீயே கட உள்' என்று சொல்லி விட்டார். யார், யார், எப்படி, எவ்வாறு திருடுவார்கள், பொய் சொல்வார்கள், அயோக்கியர்களின் இலக்கணம் பற்றி விரிவாக எழுதி வைத்திருக்கிறார். அதையெல்லாம் படித்தீர்கள் என்றால் தப்பித்து விடலாம். 

ஆன்மீகவாதிகள் மட்டும் இல்லையென்றால், அமைதியாக இருக்கும் இந்த உலகம் என்பதினை அறுபது எழுதுபதுகளில் இருக்கும் அனுபவசாலிகள் புரிந்து கொள்வார்கள்.

உடனே, 'நீ மட்டும் உனது பிளாக்கில் எவரோ ஒரு சாமியாரின் போட்டோவை வைத்திருக்கிறாயே அது மட்டும் என்னவாம்?' என்று கேட்கத் தோன்றும். அவ்வாறு கேட்கவில்லை என்றால் தான் அது அதிசயம். எனது குரு ஏழைகளுக்கு உணவிட்டவர். நோய்களுக்கு மருந்து கொடுத்தவர். மலைவாழ் மக்களுக்கு ஏராள உதவி செய்தவர். இன்றைக்கு மதம் சார்ந்து அவர் எவருக்குமான உபதேசங்களை வழங்க வில்லை. தியானம், உணவு இரண்டு மட்டுமே அவருக்கான உபதேசமாக இருக்கிறது இன்றும். 

எளிமை, அமைதி, ஆனந்தம், அருட்பாதுகாப்பு ஆகியவை கிடைக்கிறது. அவரின் ஜீவ சமாதியில் மனது ஆர்பாட்டம் அற்று அமைதியடைகிறது.  மனம் அமைதியானால் எல்லாமும் கிடைத்திடும். அதுவே வெற்றியின் முதல் படி என்று நினைக்கிறேன். ஆகவே அவர் என்னைச் சுற்றிலும் இருக்கிறார் என்பதாக நினைக்கிறேன். எனது குரு அமைதியானவர். அது ஒன்றே அவரிடமிருந்து எனக்கு கிடைக்கும் வரம் என நினைக்கிறேன். ஆகவே அவரின் புகைப்படம் எனது பிளாக்கில் இருக்கிறது. 

நிற்க.

நான் விவேகானந்தர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, முழு ஆண்டுத் தேர்வு நேரங்களில் தலைமை ஆசிரியர் என்னிடம் கணிணி புத்தகங்களைக் கொடுத்து நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து தருமாறு கேட்பார். ஆனால் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வராது. ஏனென்று விசாரித்தால் எந்தப் புத்தகக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அதற்குத்தான் ஆர்டர் என்றொரு நியதியை பள்ளியில் வைத்திருந்தார்கள். தனியார் பள்ளி நடத்துவது என்பது அவ்வளவு சிறப்பானதல்ல. ஆனால் வெற்றி சூட ஒரு சில வழி முறைகள் உள்ளன. வருடத்தின் ஆரம்பித்திலேயே கல்லா கட்டி விட வேண்டியது. இல்லையென்றால் பள்ளியை இழுத்து மூட வேண்டியதுதான். 

ஒரு கோடி முதலீடு என்றால் பல கோடிகள் வருமானம் வர வேண்டும். இல்லையென்றால் பள்ளி நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதைத்தான் தனியார் பள்ளிகள் தொடர்ந்து செய்கின்றன. இதில் என்ன ஒரு அயோக்கியத்தனம் என்றால், பள்ளி தொடங்க அனுமதி பெற பொதுச் சேவை நிறுவனம் இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. பொதுச் சேவையை தனியார் தங்களது குடும்பத்துக்கு மட்டும் செய்வார்கள் என்பது எழுதப்படாத விதி. இன்னொரு விதி இருக்கிறது. ஆந்திராவில் எனது நண்பரின் பல்கலைக்கழக நிறுவனர் தன் மகனை அதே காசால் இழந்து இன்றைக்கு அய்யய்யோ, அம்மம்மா என்று திக் பிரமை பிடித்தலைகிறார். எத்தனை பெற்றோர்களின் சாபத்தை வாங்கிக் குவித்தார். பணம் இருக்கிறது ஆள வாரிசு இல்லாமல் போனார். இதன் பெயர் தலைவிதி.

ஒரு முறை அரிசிக்கு வரி விதிக்கப்போகிறேன் என்று பீதியைக் கிளப்பி ஒவ்வொரு அரிசி ஆலை முதலாளிகளிடமிருந்து கோடியைக் குவித்த ஒருவர் இன்றைக்கு கல்லறையாகிக் கிடைக்கிறார். கவனிக்க ஆள் இல்லை. நினைத்துப் பார்க்க கூட எவரும் இன்றி ஆத்மா அரபிக் கடலோரம் அலைந்து கொண்டிருக்கிறது.

சஞ்சிகை என்றொரு இலக்கிய இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. தனியார் பாடப்புத்தகங்கள் நிறுவன வரிசையில் மதுபென் என்றொரு கம்பெனி இருக்கிறது. இந்தியாவெங்கும் கிளைகள் உண்டு. நான்காம் வகுப்புக்கு சிதம்பரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப்பள்ளியைச் சேர்ந்த ஜீவிதா என்பர் அந்தப் புத்தகத்தை எழுதியதாக முன்பக்கத்தில் இருக்கிறது. அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கீழே இருக்கும் படத்தில் படித்துத் தெரிந்து கொள்க. 






அந்த ஆசிரியை மனதில் உண்மைக்கும் சற்றும் தொடர்பில்லாத விஷயத்தைப் பற்றி எழுதுகிறோமே என்ற சங்கடம் கொஞ்சம் கூட இல்லை. பிரட்டு விஷயத்தைப்  பாடப்புத்தகமாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்லும் இவரைப் போன்ற ஆசிரியரை என்ன செய்யலாம்? இப்புத்தகத்தைக் கொஞ்சம் கூட ஆராய்ச்சி செய்யாமல் வெளியிட்ட நிறுவனத்தின் தன்மையும், அவர்களின் வியாபாரத்தினையும் என்னவென்று சொல்வது?

ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன், திருமூலரைப் படித்தவர்கள் என.. ஆகவே ஆன்மீகம் என்றொரு போர்வையில் நடக்கும் வியாபார தந்திரங்களில் மாணவர்களையும் மூளைச் சலவை செய்து விட்டால் இன்னும் வசதியாக இருக்குமே, கடைசி வரை சிந்திக்க விடாமல் செய்து, அடிமையாகவே வைத்திருக்கலாமே என்ற நாசகார திட்டத்திற்கு அந்த ஆசிரியை உடன்பட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.


மேலே இருக்கும் வீடியோவில் அந்த ஆசிரியையும், யுடர்ன் சானல்காரரும் பேசிய ஆடியோ இருக்கிறது. எந்த அளவுக்கு அந்த ஆசிரியை விவரம் கெட்டதனமாக இருக்கிறார் என்பதையும், அவர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்க கொடுக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் மாணவர்களின் சிந்தையில் என்னவாக இது பதிவாகும்? என நினைத்துப் பாருங்கள்.

ஆன்மீகம் எதுவும் தருவதில்லை மனிதனுக்கு என்பதை எந்தக் காலத்திலும் மனிதன் புரிந்து கொள்ளப் போவதில்லை. அவனின் துன்பத்துக்கும் துயரத்திற்கும் யாரோ ஒருவர் தான் காரணம் என்று நினைக்கும் எண்ணம் எப்போது அவனை விட்டு நீங்குகிறதோ அன்றைக்குத்தான் அவன் மனிதனாக மாற முடியும்.

ஒரு பொறம்போக்கு ஜோசியக்காரனால் ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சி ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். ஜோசியக்காரனுக்கு காசு கிடைத்து விட்டது. அதுதான் உண்மை. பெரும்பான்மையான ஜோசியக்காரர்கள் பலன் சொல்வார்கள், பலிக்கவில்லையே என்று கேளுங்கள். உடனே அது உனது கர்ம பலன் என்றுச் சொல்லித் தப்பித்து விடுவார்கள்.

பானை செய்யும் குயவன் களிமண்ணை எடுத்து சக்கரத்தில் வைக்கும் போது பானையா, சட்டியா என முடிவு செய்வான். பெரும்பாலான மனிதர்கள் அவன் விட்ட வழி என்று கூறிக் கொண்டு திரிவார்கள். திட்டமிடாமலும், குறிக்கோளும் அற்றவர்களின் கடைசிப் புகலிடம் தான் கடவுள். இந்து மதம் அற்புதமான வழிகாட்டி. அதன் பாதையின் முடிவிடம் வெற்றிடம். அதை உணர்ந்து கொள்வதற்குள் பரலோகப் பிராப்தி அடைந்து விடுகிறார்கள் அனேகர்கள். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஏனோ தானோ என பாடம் எழுதும் ஆசிரியர்களைத் ‘தரம் கெட்ட ஆசிரியர்கள்’ என்று தான் சொல்ல வேண்டும்.

நன்றி : சஞ்சிகை இதழ்

Saturday, June 8, 2019

பானபத்திர ஓலாண்டியே உமக்கு ஒரு கடிதம்

பானபத்திர ஓலாண்டியே, 

அனேக நமஸ்காரங்களுடன் கோவையிலிருந்து தங்கவேல் எழுதுகிறேன். எனது இந்தக் கடிதம் உம்மை எட்டாது என்று எமக்குத் தெரியும். இந்தக் கடிதத்தை எமக்கு எழுந்த அறச்சீற்றத்தினால் எழுதுகிறேன். உம்ம சினிமா (மெல்லிசைப்பாடல்களை) எவர் பாடினாலும் காசு கொடுத்து விட்டுத்தான் பாட வேண்டுமாமே? நீதிமன்றத்தில் வழக்குப் போட்டீர்களாம். கோர்ட்டும் உமக்கு பணம் கொடுக்காமல் எவரும் பாட்டுப் பாடக்கூடாது எனத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறதாம். 

எதுக்கு உமக்கு காசு கொடுத்துப் பாட வேண்டும் என உம்ம காலை நக்கி வயிற்றை நிரம்பச் செய்து கொள்ளும் இசை அடிப்பொடிகளின் பேட்டிகளையும் அடியேன் கண்டேன். 

உம்மை, எம் தமிழர்கள் தங்கள் அறியாமையால் இசைக்கடவுள் என்றார்களே!  அதனால் உமக்கு ஏதும் கணம் ஆகி விட்டதா?  இருக்கட்டும் பானபத்திரரே.

அமுதமாய்ப் பெருகு மான ந்தக் கடலாம்
இதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி
உதித்த பிரணவத் தாலே யுருவாய்
ஊமையா மெழுத்தா யோதொணா மறையாய்
மனமெனு மாசான் வளர்கனல் மூட்ட
உசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய்
மந்தாத் தொனியாய் மனத்திடைத் தோன்றி
மார்பு காண்டம் வரவரப் பெருத்து
மலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம்
தாடையா மைந்தின் திறத்தல் மூடல்
விரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல்
எனவிவ் வறு தொழிலாற் பிறந்து 
பலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய்
நலந்தரு மறையாய் நாட்டிய கலையாய்
பற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச்
சுற்றிய தாலே சூட்ச மறிந்து
ஓத முடியா வுயர்நாத மாச்சே
நாதமே முக்கலை நாதமூ வெழுத்து
நாதமே முக்குணம் நாதமே முப்பொருள்
நாதம் மூவுல காகி விரிந்து
நாதமாம் பரத்தில் லயித்தது பாரே

நாதம் பரத்தில் லயித்திடு மதனால்
நாத மறிந்திடப் பரமு மறியலாம்

சங்கீத சாஸ்திரத்தில் வழங்கி வரும் பன்னிரெண்டு சுரங்களையும், இருபத்து நான்கு சுருதிகளாகவும் நாற்பெத்தெட்டு தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்து கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் அனுபவித்திலிருக்கின்றன. 

பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெரு நாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசை நுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சங்கீதத்திற்கு முக்கிய ஆதாராமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராகமுண்டாக்கும் முறையையும் நுட்பமாகச் சொல்கின்றன.

பூர்வ தமிழ் மக்கள், சுரங்களையும், சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்பட்டிருக்கின்றன. அதன் வழியாக தொடர்ந்து வந்த தீட்சிதர்களும், பாகவதர்களும் இசைக்கோர்வைகளைப் பாடினார்கள் 

நன்றி : கருணாமிர்த சாகரம் - தமிழ் இசை நூல்

தமிழிசையிலிருந்து உருவான ஆதி இசைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு, வார்த்தைகளை மாற்றிப் போட்டு, எவர் எவரோ உருகி உருகி ரசித்து உருவாக்கிய வாத்தியங்களை வாசிக்க வைத்து இசைக்கோர்வையை உருவாக்கயவருக்கு காப்பிரைட் பேச என்ன தகுதி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆதி இசைக்கோர்வையை பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால் அதை இன்னொருவர் பாடக்கூடாது என்றுச் சொல்ல தகுதி வேண்டுமல்லவா?

நாதம் என்பது கடவுள். ஒலியிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பம். ’ஓம்’ என்ற நாதம் தான் எல்லாவற்றுக்குமான ஆரம்பம் என்று அறிவியலாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த ’ஓம்’ இலிருந்து பிரிந்த இசையை அனுமதி இல்லாமல் பாடக்கூடாது என்றுச் சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை எந்தச் சார்பும் இன்றி புரிந்து கொள்ள முயலுங்கள்.

பானபத்திர ஓலாண்டி அவர்களே, உமக்கும், உம்மை அணுக்கி, கழுவிக் குடிக்கும் இசைப்பண்ணர்களும் மேலே இருக்கும் ‘கருணாமிர்த சாகரம்’ புத்தகத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாரும். உம்மால் மிகச் சிறந்த மெல்லிசை மன்னர் என்று அழைத்தவர்களின் வாரிசின் நிலைமை இன்றைக்கு எவ்வாறாயிருக்கிறது என்று உமக்குத் தெரிந்திருக்குமே! இசையை விற்றவர்களும், சாராயக்கடை நடத்தியவர்களின் வாரிசுகளும் பிச்சை எடுத்து திரிகின்றனர். இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் ஆனானப்பட்ட விஜய் மல்லையா கதியையும், காந்தக்குரலால் தமிழர்களைக் கட்டிப் போட்ட தியாகராஜபாகவதரின் நிலையும் அறிந்திருப்பீர்களே....!

தமிழர்களின் பாடலைப் பாட்டமைத்ததிற்கு காசு வாங்கி சொகுசாய் வாழ்ந்து விட்டு, போதாது போதாது என்றலையும் உம்மை பானபத்திர ஓலாண்டி என அழைப்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மதுரை இசைக்கடவுள் அந்தப் பானபத்திரனை ஓட ஓட விரட்டி அடித்தது போல இசைக்கடவுள் உம்மையும் அடித்து விரட்ட வேண்டாமென்று அந்த நாதச் சக்கரவர்த்தியை வேண்டிக் கொள்கிறேன். 

என் எதிர்ப்பை உமக்குத் தெரிவிக்க, இணையவெளியில் எழுதி இருக்கிறேன். எனது இந்தப் பதிவில் ஏதாவது தவறு இருப்பின் சுட்டுக. திருத்திக் கொள்ளத் தயராக இருக்கிறேன்.

என்னை வாழ வைத்த என் முன்னோர்களுக்காகவும், இனி வாழப்போகும் இளையோர்க்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனக்காக அல்ல. என்னை வாழ வைத்த சமூகத்தின் பிரதிநிதியாக எம் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். அதைத் தவிர எமக்கும் உமக்கும் எந்த வித வாய்க்கா வரப்புத் தகராறு இல்லை.

08/06/2019 6.03பி.எம்.

Thursday, June 6, 2019

காமிக்ஸ் நினைவுகள்

சின்னஞ்சிறு வயதில், ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு படிப்பென்றால் திகட்டாத அல்வா சாப்பிடுவது போல. பிட்டுப் பேப்பரைக் கூட எடுத்துப் படித்து விடுவேன். நான்காம் வகுப்பு படிக்கையில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகமானது. எனது வகுப்புத் தோழன் நைனா முகம்மது, பேராவூரணி பஸ் ஸ்டாண்டில், அவன் அத்தா வாங்கி வரும் ராணி காமிக்ஸை பள்ளிக்கு கொண்டு வருவான். எல்லோருக்கும் இலவசமாய் படிக்கத்தருவான். ஆனால் எனக்கு மட்டும் 10 பைசா வாங்கிக் கொண்டுதான் படிக்கத் தருவான். ஏன் அவன் இவ்வாறு செய்தான் என்பதை என்னால் அப்போது விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எனது மச்சான் பிரான்சிஸ்காசன் (தமிழன்) மற்றும் அவனுடன் ஒரு சிலர் குரூப்பாக இருப்பார்கள். அவனுக்கு நைனா முகமது இலவசமாய் படிக்கக் கொடுப்பான். அணவயல் கணேசன் வாத்தியாருக்குத் தெரிந்தால் முதுகில் பிரம்பால் கோடு போட்டு விடுவார். எந்த வாத்தியாருக்கும் தெரியாமல் புத்தகத்துக்கு இடையில் வைத்துக் கொண்டு அந்த க்ரூப் மட்டும் படிப்பார்கள்.  அதை அவ்வப்போது எனக்கு காட்டி, என்னிடமிருந்து காசைப் பறித்து விடுவார்கள். மந்திரவாதி மாண்ட்ரேக், ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்தி போன்றவர்கள் எனக்கு அப்படித்தான் அறிமுகமானார்கள். 



வீட்டின் முன்னே இருக்கும் சலுவா மாமியின் மகன் முபாரக் எனக்கு நிறைய நாவல்கள், காமிக்ஸ் தருவான். அதற்குப் பதிலாக என்னிடம் ஏதாவது எழுதும் வேலை வாங்கிக் கொள்வான். வீட்டுப்பாடமோ அல்லது ஏதாவது எழுதித் தரச்சொல்லிக் கேட்பான். எழுதிக் கொடுப்பேன். 

ஆறாம் வகுப்புப் படிக்கும் போது வீரப்ப தேவர் மகன் மாரிமுத்து வீட்டுக்கு படிக்கச் செல்வதுண்டு. அங்குதான் மர்ம மனிதனின் மந்திரக்குகை போன்ற திகில் கதைகள் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. மாரிமுத்து என்னை அந்தப் புத்தகங்களைப் படிக்க விடமாட்டான். இரவில் பேய் வரும் என்றுச் சொல்லி பயம் காட்டுவான். மாரிமுத்துவின் அக்காக்கள் பாரதியும், அகிலா ஆகிய இருவரும் படிக்கும் மாலைமதி, ராணிமுத்து போன்ற புத்தகங்கள் கிடைத்தன. மாரிமுத்துவும் நானும் நல்ல நண்பர்கள் ஆனோம். அங்கு நிறைய புத்தகங்கள் கிடைக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டிருப்பேன். மாமாவுக்கு தெரியாமல் தான் படிக்கணும். மாமாவுக்குத் தெரிந்தால் போச்சு.

இதற்கிடையில் ராவுத்தர் கடை கசாலி எனக்கு அறிமுகமானான். அவனிடம் இருந்து அம்புலிமாமா, அலாவுதீனின் அற்புத விளக்கு, 1000 இரவுக்கதைகள் போன்ற புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இப்படியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் பத்தாம் வகுப்பின் போது ஆலம் அறிமுகமானான். அவன் வீட்டில் இரண்டு புத்தக அலமாரிகள் இருந்தன. அவற்றுக்குள் அடுக்கப்பட்ட புத்தகங்கள் பல இருந்தன. உமர் முக்தார் கதை அங்குதான் கிடைத்தது. இரவு பகல் பாராமல் உமர் முக்தார் புத்தகத்தைப் படித்தேன். நீண்ட காலங்களுக்குப் பிறகு கடந்த வருடம் அந்தப் புத்தகம் மீண்டும் கண்ணில்பட, வாங்கிக் கொண்டு வந்து, மீண்டும் இரவு பகல் பாராமல் படித்தேன். மனையாள் அப்படி என்ன இருக்கு அந்தப் புத்தகத்தில் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அன்றைய புரிதலுக்கும் இன்றைய புரிதலுக்கு எத்தனை வித்தியாசங்கள்?

கல்லூரி சென்றேன். ராஜேஷ்குமார், சுபா போன்ற மூன்றாம் தர நாவல் ஆசிரியர்களிடமிருந்து விலகி கல்கி, கி.ரா, தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் இலக்கிய தரிசனம் கிடைத்தது. பூண்டி புஷ்பம் கல்லூரியின் நூலகம் எனக்கு அற்புத புதையலாக கிடைத்தது. நாளொன்றுக்கு ஒரு புத்தகம் வீதம் படித்துக் கொண்டே இருப்பேன். அதே சமயம் கணிணி பாட்ப்பிரிவும் படித்துக் கொண்டிருப்பேன். கல்லூரி நேரம் தவிர பெரும்பான்மை நேரம் புத்தகங்களுடனே செல்லும்.

அதற்கடுத்தாக கரூர் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கு கணிணி ஆசிரியராகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐந்து வருடங்களாக அனேக புத்தகங்கள் படிக்க கிடைத்தன. அங்கு ஆன்மீக தொடர்பான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. எனக்குப் புரியவே புரியாது. ஆனாலும் படித்து வைப்பேன். புரிந்து கொண்டுதான் படிக்க வேண்டுமெனில் நடக்கிற விஷயமா? அல்லது நானென்ன ஆர்.பி.ராஜநாயஹமா? சாதாரண தங்கவேல். 

எனக்குள் ஒரு நிராசை இருந்து கொண்டே இருந்தது. ராணி காமிக்ஸின் அத்தனை புத்தகங்களும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் தான் அது. சமீபத்தில் 1 முதல் 100 வரையிலான ராணி காமிக்ஸ் புத்தகங்களை ஸ்கேன் செய்து இலவசமாய் யாரோ ஒரு புண்ணியவான் நெட்டில் போட்டிருந்தார். அத்தனை வருட ஏக்கம் இப்போது தீர்ந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு புத்தகங்களைப் படித்து விடுகிறேன். அது மட்டும் இன்றி இன்னும் நிறைய சிறார் புத்தகங்களை அந்தப் புண்ணியவான் ஸ்கேன் செய்து நெட்டில் விட்டிருக்கிறார். ஒன்றையும் விடாமல் இறக்கிப் பதிவு செய்து கொண்டேன். அந்த புண்ணியவானுக்கு நன்றி.

காமிக்ஸ் புத்தகங்கள் டிவி இல்லாத நாட்களில் கண் முன்னே படம் காட்டின. அதனால் உண்டான் ஈர்ப்பு அதன் மீதான பற்றுதலை அதிகமாக்கின. காமிக்ஸ் கதைகள் எல்லாம் வீர சாகசங்கள் நிறைந்தவை. அந்தப் புத்தகங்கள் தான் எனக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்தன என்று இன்றைக்கு என்னால் உணர முடிகிறது. காமிக்ஸ் ஹீரோக்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்கள் எந்த ஒரு சூழலிலும், சிக்கலான நேரங்களிலும் தப்பி விடுவார்கள். அவர்கள் பழைய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. அடுத்து என்ன என்று அதிரடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த ஹீரோயிசமானது அதீதமானது. எதார்த்தத்துக்கும் அதற்கும் வெகுதூரம். ஆனால் ஹீரோக்களின் இயல்பு என்பது தொடர் முயற்சி. முடிவில் வெற்றி. அந்த ஹீரோக்களின் இயல்புதன்மை என்னிடம் ஒட்டிக் கொண்டது.

சமூக வாழ்க்கையில் மனிதர்கள் என்ற போர்வையில் உலாவும் சுய நலவாதிகளின் சித்து விளையாட்டுக்களில், விபரம் தெரியாமல் சிக்கிக் கொண்டு பொருளையும், நேரத்தையும் இழந்து விடும் போதெல்லாம், மனது வலித்தாலும், சோர்ந்து போகாது. மீண்டும் அடுத்த வேலைக்கு தயார் ஆகி விடும் இயல்பு என்னிடம் இருக்கிறது.

இதுவரையிலும் நான் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் எல்லோரும் என்னுடன் சிறிதுகாலம் பயணிப்பார்கள், காணாமல் போவார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏற்படுவது இல்லை. இங்கு எல்லாமே கொடுத்துப் பெறுவது, அல்லது பெற்றுக் கொண்டு கொடுப்பது மட்டும் தான். மனிதன் சார்பு நிலை கொண்டவன். பெறுவதும்,கொடுப்பதும்தான் வாழ்க்கை. யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு விளங்கி விடும். இது வாழ்க்கை. இந்த வாழ்க்கையை வாழ ஒரு சில குணங்கள் மனிதர்களுக்குத் தேவை. 

அப்படியான மிக முக்கியமான குணங்களில் ஒன்று தோல்வியில் துவளாமை. அதை எனக்கு காமிக்ஸ் ஹீரோக்கள் கற்றுக் கொடுத்தார்கள். என் பிள்ளைகளுக்கு நான் காமிக்ஸ் நிறைய வாங்கிக் கொடுக்கிறேன். பள்ளிப் பாடங்களுக்கு இடையில் படிக்கின்றார்கள். ஒரு முறை மகள் நிவேதிதா ஒரு பாடத்தில் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டாள். அவளை என்னால் எளிதாக சமாதானப் படுத்த முடிந்தது. எளிதில் புரிந்து கொள்கிறாள். ரித்திக்கும் இந்த வயதில் பெரிய மனிதத்தன்மை உடையவனாக இருக்கிறான். 

ஆன்மீக புத்தகங்கள் கோவில்களுக்கும், கோவில்களை ஆளும் ஆட்களுக்கு வருமானத்தை பெற்றுத் தருகின்றன. இழப்பது ஆன்மீகத்தை நம்புகிறவன் மட்டுமே. மனை அமைதி தேடி கோவிலுக்குச் சென்றால் அங்கு நம்மிடமிருப்பவைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. இதுதான் உண்மை. 

இன்னும் சொல்லப்போனால் ஆன்மீகமும் தோல்வியில் துவளாமையைத்தான் சொல்கின்றது. அதற்கு பல்வேறு கதைகளை கடவுள்களின் வடிவில் வைத்திருக்கிறது. அக்கதைகளைப் புரிந்து கொண்டு அதன் வழி நடப்பது என்பது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். நாம் மஹாபாரத தருமரைப் போல வாழவே முடியாது. நகுலனைப் போல இருக்க நினைத்துப் பார்க்கவே முடியாது. அதெல்லாம் சுயசார்பு வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. 

இங்கு வல்லவன் மட்டுமே வாழ்வான். அந்த வல்லவன் பிம்பத்தை காமிக்ஸ் புத்தகங்களில் வரும் ஹீரோக்கள் உருவாக்குகின்றார்கள். அதன் வழி அவர்கள் நடக்கின்றார்கள். அந்த பிம்பங்கள் நமது உள்ளத்தில் அந்த எண்ணத்தை உருவாக்குகின்றன.

காமிக்ஸ் என்று எளிதாக கடந்து விடுகிறோம். அந்த காமிக்ஸ் ஹீரோக்களின் தன்மை மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்து விட்டால் வாழ்க்கையை எளிதாக கடக்கலாம். நீட் தேர்வில் மார்க் வாங்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்களை எல்லாம் பார்க்கையில் அவர்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் வருவதில்லை. அவர்கள் சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சாதாரண சிலந்திக்கு இருக்கும் முயற்சி கூட ஆறறறிவு படைத்தவர்களிடம் இல்லாது போவது சமுதாயத்தின் பார்வையால் உண்டாகும் அனர்த்தம். திருடனைத்தான் திறமைசாலி என்கிறது இந்தச் சமுதாயம். ஏனென்றால் சமுதாயமும் சேர்ந்து திருடுகிறது. திருடனுக்குத்தான் திருடனைப் பிடிக்கும்.

மருத்துவம், அதுவும் அலோபதி மருத்துவம் போன்ற கொலைகார தொழில் இந்த உலகில் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது. ராணுவ வீரன் எதிரியை சுட்டுக் கொன்று விடுகிறான். சடுதியில் விடுதலை. இப்போதைய நவீன மருத்துவம் என்கிற பெயரில் மருத்துவம் செய்யும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுதல் என்கிற வைத்திய முறை இருக்கிறதே அதை விட கொடுமையான நரகம் இப்பூவுலகில் வேறு இல்லை. 

நண்பர்களே, உங்கள் குழந்தைகளுக்கு வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் அந்தக் குணத்தைக் கற்றுக் கொடுக்க, நல்ல நல்ல காமிக்ஸ் புத்தகங்களைப் பரிசளியுங்கள். டிவி கார்ட்டூன்கள் அறிவை வளர்ப்பதில்லை. புத்தகங்கள் நினைவுகளை உருவாக்கி, உள்ளத்துக்குள் பதிய வைக்கின்றன. 

மீண்டும் சந்திப்போம் விரைவில்.....!

06/06/2019-1.43பி.எம்.

Saturday, May 4, 2019

எது சிறந்த வாழ்க்கை?

அன்பு நண்பர்களே,

வணக்கம். நீண்ட நாட்களாகி விட்டன எனது வாழ்வியல் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு. காலச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் மனதுக்கு இனிமையானதாக இருந்திருப்பின், என்னுள்ளத்தில் பொங்கி வரும் உணர்வுகளை எழுதுவேன். பணிச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் இல்லாத ஒன்றைத் தேடி ஓடச் செய்கின்றன. 

ஓஷோவின் புத்தகத்திலே படித்தேன் இப்படி.

ஏதோ ஓர் நாட்டிலே ஒரு புத்தர் கோவில் இருக்கிறதாம். கோவில் என்றால் உள்ளே சிலை இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அந்தக் கோவிலில் புத்தர் சிலை இல்லை. கோவிலுக்குச் செல்வோர் ’எங்கே புத்தர்? எங்கே புத்தர்?’ என்று கேட்பார்களாம்.

அங்கிருக்கும் புத்த பிட்சுகள் என்ன சொல்லி இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்களேன். விடையைக் கீழே தருகிறேன். யோசித்துக் கொண்டே தொடருங்கள்.

எனக்கு அரசியலில் அனேக நண்பர்கள் உண்டு. நீதித்துறையிலும் அதிக நண்பர்கள் உண்டு. அரசியலில் இருக்கும் ஒரு நண்பரின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் என்னை சிலிர்க்க வைக்கும். பரம்பரைப் பணக்காரர் அவர். பணத்துக்கு பஞ்சம் இல்லை. அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். சமீபத்தில் அவரின் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன்.

அவரின் இப்போதைய தலைவரை நல்லவர், எளிமையானவர் என்றெல்லாம் விளித்திருந்தார். சிரிப்பு தான் வந்தது.

அந்த நண்பருக்கு சில கேள்விகள் கேட்க மனது ஆலாய்ப் பறக்கிறது.

இந்தியாவின் ஆன்மா அதன் அரசியலமைப்புச் சட்டம். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் இருப்பிடம் சட்டசபைகள். ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தவர்களுக்கு பதவியும், முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தவர்களின் பதவிகளையும் பிடுங்கிக் கொண்டு, சட்டத்தை தன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நோக்கி அரக்கச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்களில் ஒருவரைத்தான் நீங்கள் அவ்வாறு சொன்னீர்கள். உங்கள் கையில் கட்டி இருக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணக்கயிறுகளை எந்த நம்பிக்கையில் கட்டி இருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை உங்களுக்கு கொடுத்தவர் எவரோ அவர் இப்படியானவர்களுக்கு என்ன பரிசு தருவார்? என அறிவீர்களா? பதிலை நீங்களே உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

நீங்களும், நானும், ஏன் உங்களால் வல்லவர், நல்லவர், எளிமையானவர் என்று விளித்திருப்பவரும் கால ஓட்டத்தின் முன்பு காணாமல் போவோமே, ஆனால் இந்தியாவை ஆளும் அரசியலமைப்புச் சட்டம் என்றும் இருந்து கொண்டே இருக்குமே, அதைக் கேலிக்குறியதாக்கி மகிழும் சிறு குழுவும் நாளைக்குள் என்ன எந்த நொடியில் வேண்டுமானாலும் காணாமல் போவார்களே, அவர்களையா நீங்கள் உயர்த்துகின்றீர்கள்? ஆனால் நீங்கள் அப்படியானவர் இல்லையே? ஏன் இந்த மாற்றம்? ஏனோ??? ஏனோ???? உங்களின் அறம் என்னவாயிற்று? வாடகைக்கோ அல்லது வட்டிக்கோ விட்டிருக்கின்றீரா?

இந்தியாவை ஆன்மீக நாடு என்று சொன்னால் அந்த ஆன்மீகம் சொல்லித் தந்த, கவுரவர்களின் கயமைத்தனத்தின் முடிவினை மறந்தீரா? இராவணன் தூக்கிச் சென்று சிறை வைத்த சீதாவைப் போல, எம் இந்தியத் தாயை தமிழகத்தில் ஆளும் ஆட்கள், ஆளுக்கு ஆள் கற்பழித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்களுக்கு ராவணனின் கதி நடக்காது என்றா நினைத்தீர்கள்? சுத்தமாக துடைத்து எடுக்கப்படுவார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்கள் இருக்க வேண்டாமென்பது என் ஆவல்.

கடவுள் என்னைப் பொறுத்தவரை முரண்பாடுகளின் மொத்த உருவமானவர். புரியும் படி சொல்ல வேண்டுமெனில் அவர் இன்பமாகவும் இருக்கிறார், துன்பமாகவும் இருக்கிறார். அவர் இருளாகவும் இருக்கிறார், வெளிச்சமாகவும் இருக்கிறார். அவர் உங்கள் கயிறுக்குள் தன்னைக் கட்டிக் கிடக்கவில்லை. அவரின் முரண்பாட்டின் விளையாட்டுப் பொம்மைகள் தான் நீங்களும், நானும், உங்களின் அந்த எளியவரும்.  ( நன்றி ஓஷோ)

உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொருவரின் இறுதியையும், மழையையும் எங்கே எப்படி என நடத்துபவன் அவனே. ஃபானிபுயலால் தமிழகம் நீரால் நிறையும் என்று கனவு கண்டாரே உங்களின் அந்த எளியவர். புயலின் தாக்கத்தால் இன்னும் அனேக கோடிகளை டெண்டரில் அள்ளலாம் என்று கனவு கண்டார்களே உங்களின் எளியவர்கள். ஒரு நிமிடத்தில் அது சென்ற பாதையைப் பார்த்தீரா? முடிந்தால் உங்களின் அவரை அதை மாற்றச் சொல்லித்தான் பாருங்களேன். சடுதியில் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்களை வீட்டுக்கு விரட்டுபவரை மாற்றி அமைக்கச் சொல்லிப் பாருங்களேன். ரத்தத்தின் சூடும், பதவியின் நாற்காலியும் இருக்கும் வரை ஆடுவார்கள். ஆட விட்டு மொத்தமாக பிடுங்கி விடுவார் உங்களின் கையில் கட்டி இருக்கும் கயிற்றுக்கு நம்பிக்கை கொடுப்பவர்.

ஆகவே உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அந்த அறத்தினை கொஞ்சம் வெளியில் உலாவ விடுங்கள். கானல் நீரான நமது வாழ்க்கையில் கொஞ்சமேனும் உண்மையாக இருந்து விட்டுப் போகலாமே? 

உங்களை நான் நிரம்பவும் மதிக்கிறேன். அதற்காகத்தான் இந்தப் பத்திகள். நீங்கள் என்னை மதிக்கின்றீர்களா இல்லையா? என்னை பொருட்டாக கருதுகின்றீர்களா? என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. நான் சொல்வதைச் சொல்லத்தான் செய்வேன். கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்.

நண்பர்களே, எங்கெங்கோ சென்று விட்டேன். மன்னித்தருள்க. உங்களின் பொன்னான நேரத்தின் ஒரு சில நொடிகளைத் தின்று விட்டன எனது இந்த முழுமையற்ற வார்த்தைகள். மன்னிக்கவும். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

ஒரு யூடிப் சானலில் பார்த்தேன். யாரோ ஒரு பையன் சாலையோரத்தில், செருப்புத் தைக்கும் ஒருவரையும், நெருப்பில் வெந்து ஆறிய முகத்தோடு அருகில் அமர்ந்திருந்த அவரின் மனைவியையும் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே...!




மிகப் பொறுமையாக இந்த வீடியோவை பாருங்கள். மனது நெகிழும். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்களின் வாழ்க்கையை முன் பதிவுகளை கழட்டி ஓரமாக வைத்து விட்டு, நமது வாழ்க்கையையும், இந்த எளிய கணவன், மனைவியின் வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது உண்மையான தாம்பத்தியம என்பது புரிய வரும்.

நீண்ட நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு பிள்ளைப் பேற்றுக்கு வந்த மனைவியை தன் பிள்ளையுடன், மீண்டும் அழைத்துச் செல்ல விரும்பிய கணவனின் ஆசையை மறுத்த மாமியாரால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதான் பணக்காரத் தாம்பத்தியம். இவர்களின் வாழ்க்கையில் அன்பு எங்கே இருக்கிறது?

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியின் காதலனுடன் பிரேக் அப்பாம். விகடன் செய்தி. காதலன் சொந்த சம்பாத்தியம் செய்யவில்லையாம், பெற்றோரின் உதவியால் தான் வாழ்கின்றானாம், அது ஸ்ருதிக்குப் பிடிக்கவில்லையாம். காதல் பிரேக் அப். உலகம் கொண்டாடுகிறது. விகடன் செய்தி வெளியிட்டு மகிழ்கிறது. அவர்கள் ஏன் பிரேக் அப் செய்தார்கள் என ஸ்ருதியின் நண்பர்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? இது என்ன மாதிரியான காதல்? (என் படத்தை வெளியிட மறுத்தால், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கண்ணீர் விட்டவரை தலைவன் என ஓட்டுப் போடுகின்றார்கள் தமிழகத்தில். இதை விட வெட்கக்கேடான செயலும் இவ்வுலகில் உண்டா? யோசிக்கும் திறனற்றாப் போனார்கள் தமிழர்கள்?)

காதல் என்பது என்ன என்பதற்கான டெஃபனிஷன்கள் என்னிடம் பல உண்டு. இதுதான் காதல் என்று சொல்ல முடியாது. ’ஏக் துஜே கேலியே’ காதல் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். தேவதாஸ் காதலெல்லாம் படத்தோடு சரி. அதுதான் உண்மை என நம்பிக் கொண்டு சென்றால் வாழ்க்கை நக்கிக் கொண்டு போய் விடும்.

பிறந்தாய், வளர்ந்தாய், உருவானாய், பிறக்க வைத்தாய், வளர வைத்தாய், சென்று சேர்வாய் - இயற்கை மனிதனுக்கு விதித்தது இதுதான். இதற்கிடையில் நடப்பவை எல்லாம் வெற்று நாடகம். காட்சி கலைந்ததும் காணாமல் போய் விடுவோம். உங்களையும், என்னையும் சுற்றி இருப்பது எதுவும் இல்லாத ஒன்றிலிருந்து பிறப்பெடுத்தவை. எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடும். அது உங்களின் அருமை பிள்ளையானாலும் சரி, அழகான மனைவியானாலும் சரி, கடவுளுக்கு நிகர் தந்தை, தாயானாலும் சரி.

சரி முன் பத்தியில் கோவிலில் புத்தர் சிலை ஏன் இல்லை என்பதற்கான பதில் கீழே.

”இந்த தூய்மையான, வெறுமையான மெளனமான இடமே புத்தர்”

இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை இனிதாய் கழியும்.

உங்களுக்கும், எனக்கும் எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது நண்பர்களே.....!

இதை என்றைக்கும் மறந்தும் மறந்து விடாதீர்கள்.

ஒரு பொண்ணு நெனச்சா திரைப்படப்பாடலும், அதன் வரிகளும் உங்களுக்காக.

" உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உனை இங்கு காணாததால் உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசாததால் இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் இதயமே இதயமே உருகுதே உருகுதே நிழலினில் தொடரும் தொடரும் எனது ஜீவனே உறவுகள் வளரும் வளரும் எனது தேவனே விழி சிந்தும் ராகம் ஒன்று உனை நாடுதே எதிர்காலம் நீயே என்று தினம் கூடுதே கண்மணியே கண்மணியே மனம் இங்கு மயங்கிடுதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உனை இங்கு காணும் வரை உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசும் வரை இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் சாலையில் சோலையில் காலையில் மாலையில் நிதம் ஒரு புதுமை பழகும் எனது ராஜனே இனியதும் இளமை குலவும் எனது தேவியே வசந்தத்தின் தேசம் எங்கும் வலம் போகலாம் வருகின்ற காலம் தோறும் சுகம் காணலாம் இரவுகள் மலருதே அமுதங்கள் பருகிடவே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உனை இங்கு காணும் வரை உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசும் வரை இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன்"



விரைவில் சந்திப்போம் நரலீலையில்....!

- 04/05/2019

Friday, April 12, 2019

நிலம் (51) - சப்டிவிஷன் சர்வே எண்களில் ஏமாற்றுகிறார்கள்

பூமி - மனிதர்களின் அத்தனைக்குமான உன்னதம். காற்று, உணவு, உடை இப்படி எல்லாவற்றிற்கும் காரணமான இயற்கைக் கடவுள். அது தன்னைத் தானே ஒரு முறை குலுக்கிச் சிலிர்த்தால் தற்போதைய இந்தியாவின் உன்னத உத்தம பிரதமரும், அம்பானியும், அதானியும் காணாமல் போவர். சாதிகள் போகும், சண்டைகள் போகும், அதிகார மமதை போகும், எல்லாமும் போயே போய் விடும். தான் மட்டுமே உண்மையானவன் என்பது போல, ஒரு பெண்ணிடம் தன் அயோக்கியத்தனத்தைக் காட்டி, அதிகாரத்தினை அடையத் துடிக்கும் அற்பத்தனத்தை, அயோக்கியத்தனத்தை ஆம்பளைத்தனம் என்கிறார்கள் பலர்.

இயற்கையின் முன்னே மனிதர்கள் பதர்களை விடச் சிறியவர்கள். ஆனால் பாருங்கள்! ஒரு ஜான் அளவு இருக்கும் வயிற்றுக்கு, தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை என்னென்ன கொடுமைகள் செய்கின்றார்கள் இவர்கள் என. மலைகளை உடைக்கின்றார்கள், ஆறுகளை தடுத்து தண்ணீரை உறிஞ்சுகின்றார்கள், சாயத்தைக் கலந்து பூமிக்குள் மோட்டார் வைத்து செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்(திருப்பூரில்), இப்படி பூமியை சித்தரவதை செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்ப மனிதர்கள்.

மனித தன்மை கொஞ்சமாவது இருந்தால் ஆற்றில் கிடக்கும் மண்ணை அள்ளி விற்று தன் சுகத்துக்காகவும், பிள்ளைகளுக்கும் சொத்தினைச் சேர்த்து வைப்பார்களா? எல்லாவற்றையும் விற்று, பலரைப் பட்டினி போட்டு சாகடித்து, தான் மட்டும் வாழ்ந்து உயிரோடா இருக்கப் போகின்றார்கள்? என்றைக்கு மனிதன் பிறந்து விழுந்தானோ அன்றைக்கே அவனுக்கு எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது. அந்தத் தேதி தெரிந்தால் எந்த அறிவிலிகளும் இத்தனை ஆட்டம் ஆடாதுகள். தேதி தெரியாது. ஆட்டம் போடுகின்றதுகள்.

எத்தனை எத்தனை மதங்கள் இருந்தாலும், எத்தனை எத்தனை நல்ல நூல்கள் இருந்தாலும், கடவுள்கள் இருந்தாலும் மனிதன் தனது வயதான காலத்தில் தான் உணர்கின்றான். எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்ற அறிவு இன்றி, இறுதியில் தன் கைமீறி நடக்கும் அத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என எண்ணி வெம்புகிறான் திரு.அத்வானி போல.

அன்பைத் தவிர, சக மனிதன் மீதான அன்பைத் தவிர இந்த உலகில் வேறு ஏதாவது ஒன்று பெரிதா? சொல்லுங்கள் நண்பர்களே!!!!

சுயமோகிகளாலும், இந்த வாழ்க்கை நிரந்தரம் என எண்ணிக் கொண்டிருக்கும் அற்பர்களாலும் எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் ஏமாற்றப்பட்டு, அல்லல்பட்டு அயராது உழைத்த பொருளை இழந்து, வேதனையில் விழுந்து, மனம் நொந்து போய் இறந்து போகின்றார்கள். 

மீபத்தில் என்னிடம் ஒரு அன் அப்ரூவ்ட் மனையின் சொத்து அப்ரூவலுக்காக வந்தது. தினக்கூலி ஏழை அவர். அவரின் கனவு ஒரு வீடு. அவ்வளவு தான். எளிமையான அவரின் வீட்டு மனையினை அப்ரூவல் செய்வதற்காக, ஆன்லைனில் பதிவு செய்து அப்ரூவலுக்கு லோக்கல்பாடிக்குச் சென்ற போது இந்த மனை பதிவு செய்யப்பட்டிருக்கும் சர்வே எண்ணுக்கு உரித்தான ஆவணங்களைக் கொண்டு வரும் படி கேட்டிருக்கின்றார்கள்.

என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது என்று அவரிடமிருந்த ஆவணங்களைக் காட்டி இருக்கிறார். ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஒன்றும் புரியாமல் என்னிடம் வந்தார்.

லோக்கல்பாடியில் அவரின் மனைக்கான மூல ஆவணங்களைக் கேட்டிருக்கின்றார்கள். அவரிடம் இருந்த ஆவணங்களில் அவர் மனை அமைந்திருக்கும் சர்வே எண் இல்லை. விஷயம் விளங்கியதா? ஆனால் பிளான் இருக்கிறது. மூலப்பத்திரங்களை ஆய்வு செய்த போது கிரையம் பெறாத ஒரு பகுதியை சேர்த்து மனையாக போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். இவரும் ஒரு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் மனையைக் கிரையம் செய்திருக்கிறார். வக்கீலும் சரி பார்த்துதான் கொடுத்திருக்கிறார்.

வக்கீல் மூல ஆவணங்கள், பட்டாக்கள், கிரையம் ஆவணம், மேப் இவைகளை ஆராய்ந்து இருக்கிறார். எல்லாம் சரிதான். ஆனால் மனை இருக்கும் இடம் வேறொருவருக்கு உரித்தானது என்பதைக் கண்டறிய மறந்து போனார். அதை எப்படிக் கண்டு பிடிக்க முடியும் எனக் கேட்கத் தோன்றும். அது அனுபவத்தில் வரக்கூடியது. மூளை சூடாகி கொதி கொதியென கொதிக்கும். கவனம் சிறிது பிசகினாலும் தவறாகிப் போகும். ஷார்பான புத்தியுடன் அமைதியான இடத்தில் அமர்ந்து ஆவணங்களை ஆராய்ந்து சரி பார்க்க வேண்டும்.

தனக்கு உரிமையில்லாத இடத்தில் மனை போட்டு விற்றிருக்கின்றார்கள். மனை விற்றவரை இனிப் பிடிக்க முடியுமா? அது சாத்தியமில்லாத ஒன்று. ஒரே வழி வழக்குப் போடுவது மட்டுமே. அவரின் உழைப்பு? அவரின் கனவு? அவரின் வாழ் நாள் ஆசை? எல்லாமும் பறிபோனது.

இந்த மனையில் நடந்திருக்கும் உள்குத்து என்ன தெரியுமா? தவறான சப்டிவிஷனைக் காட்டி மனையினை விற்றிருக்கின்றார்கள். ஆனால் மனை அமைந்திருந்த இடம் வேறு ஒருவருடையது. இதிலும் ஒரு கோல்மால் வேலை நடந்திருக்கிறது. யாரையோ சரிக்கட்டி அந்த சப்டிவிஷனுக்கான பட்டாவில் தன் பெயரையும் சேர்ந்திருக்கிறார் அந்தக் கில்லாடி ஆள்.

சப்டிவிஷன் ஆகும் போது க.ச. எண்.100 என்பது 100/1,2,3 என இடத்துக்கு தக்கவாறு, கிரைய ஆவணத்துக்கு ஏற்றபடி மாற்றம் செய்வார்கள். மேலும் உபபிரிவுகள் 100/3ஏ1, 3ஏ2,3ஏ3 என்று பிரியும். இந்த சப்டிவிஷன்கள் பிரிபடும் போது இல்லாத ஒருவரை பட்டாவில் ஏற்றி பல்வேறு கூத்துகளை அரங்கேற்றுவார்கள் ரெவின்யூ டிபார்ட்மெண்ட் ஆட்கள். அவர்களுக்கு பணம். நிலத்தின் உரிமையாளர்களுக்கு துன்பம். பிறரின் துயரம் தானே இன்னொருவருக்கும் வருமானம்.

இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் என் முன்னே. ”ஏதாவது செய்யுங்களேன் தங்கம்” என்று அரற்றினார். வேதனைதான் உள்ளத்தில் நிறைந்தது. அவருக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அவரின் மகிழ்ச்சியான முகத்தை விரைவில் பார்க்கும் நாள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பெரும் போராட்டம் தான். இருக்கட்டும் போராடிப் பார்த்து விடலாம் என முடிவு செய்து கொண்டு, “கவலை வேண்டாம், சரி செய்து விடலாம்” என்று அவரைத் தேற்றி அனுப்பினேன்.

ஆகவே நண்பர்களே, டிடிசிபி அப்ரூவல் மனைகள் என்றாலும், அன் அப்ரூவ்ட் மனைகள் என்றாலும், நிலங்கள் என்றாலும் சரி கவனமாய் இருங்கள். கவனமாய் இருங்கள். 

வாழ்க வளமுடன்.....!

Friday, March 29, 2019

பசியின் கண்ணீர்

பாரதிக்கு மட்டும் அந்தக் கோபம் சொந்தமானதில்லை. பேச்சாளர்களும், ஆன்மீகக் குப்பைகளைக் கொட்டும் செப்டிக் ஆட்களும் அடிக்கடிச் சொல்வார்கள், ”தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம்” எனப் பாரதி கூறினார் என.

அந்தக் கோபம் பாரதிக்கு மட்டும் சொந்தமானதில்லை. பசித்திருப்போருக்கு உணவிடும்  ஒவ்வொருவருக்கும் அது உள்ளே உறங்கிக் கிடக்கும் தனியா நெருப்பு. சாலைகளில் பஞ்சைப் பறாரியாய் கிடப்போருக்கு சாப்பாட்டு பொட்டலம் வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒருவருக்குள்ளும் அந்த கோபம் இருக்கும். அவரால்  முடிந்தது அந்தப் பொட்டலம்.

கோடியாய்க் குவித்து மாதம் ஒரு முறை விண்ணில் பறக்கும் சேவகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இருக்க  வேண்டிய கோபம், சாதாரணன் ஒருவனிடம் இருக்கிறது. நாடக நடிகர்களும், சினிமா நடிகர்களும் தோற்று விடும் நடிப்பை நடிக்கும் நயவஞ்சக நரிகளாய், வேடமிட்டு வரும் வெண் தாடிகளும், வெள்ளுடைகளும் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவை தட்டிப் பறித்து தன் அடிப்பொடிகளுக்கும், தான் அடிமையாய்க் கிடக்கும் எஜமானர்களுக்கு கொடுக்கிறார்கள். பசியால் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள் இந்தியர்கள்.

வங்கி கணக்கு என்றார்கள், மானியம் என்றார்கள். வங்கியில் கிடக்கும் பணத்தை உறிஞ்சி கயவாளிகளுக்கு கொடுத்து வெளி நாட்டுக்கு ஓட வைத்து வழி அனுப்பி வைக்கின்றார்கள்.

ஒரு வேளைச் சோற்றுக்கும் உணவின்றி தவிப்போர் இந்தியாவெங்கும் விரவிக் கிடக்கின்றனர். சாலைகள் தோறும் கவனிப்பார் இன்றி பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துப் போகின்றார்கள். அரசு பிணக்கிடங்குகளில் கிடக்கும் அனாதைப் பிணங்களின் கணக்குகள் அரை சதவீதம் கூட இருக்காது. ஆதரவின்றி, கவனிப்பாரின்றி செத்துப் போகும் லட்சோப லட்சம் மக்களின் ஒரே தேவை உணவு. அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் பிடுங்கித் தின்னும் வெள்ளுடைய நயவஞ்சகர்கள் நரிகளாய் ஊருக்குள் ஊளையிட்டுக் கொண்டு, சிவப்பு விளக்குப் பொருத்தி சிங்காரமாய் பவனி வருகின்றார்கள். சிவப்பு விளக்கு சிங்காரன்கள் நாட்டைப் பிறருக்கு விற்கும் கயவாளிகள். 

நான்கரை லட்சம் டன் உணவு வீணாய் போனது இந்தியாவில். பசியால் செத்துப் போவோர் கணக்கு எனக்குத் தெரியவில்லை. செத்துப் போகும் விவசாயிகள் கணக்கு மட்டும் தெரிகிறது. விவசாயி கடனால் செத்துப் போகின்றார். ஆனால் பசியால் சாவோர் எண்ணிக்கையோ பல மடங்கு என்கிறார்கள். 7 ரூபாய் தருகின்றாராம் நாளொன்றுக்கு விவசாயிக்கு. என்ன ஒரு கொடூரம்?

போகட்டும் அறக்கோபம். கோபம் தெரிந்து விழும் வார்த்தைகள் மனதுக்குள் சற்றே ஆற்றுதலைத் தருகின்றன.

”அப்பா, இன்றைக்கு ஐ,ஐ.டி ரிசல்ட்” என்றார் நிவேதிதா.

“ போன தடவை, 98 மார்க் அல்லவா? இந்த தடவை 100 எடுத்தால் மாலையில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு உணவு வாங்கித் தருவேன்” எனச் சொன்னேன்.

சிறிய புன்னகையுடன், “அப்பா, எனக்கும் திக் திக்குன்னுதான் இருக்கு?” என்றார்.

மாலைச் சரியாக நான்கு மணி பத்து நிமிடம்.

“அப்பா, 100ப்பா, என்னாலே நம்பவே முடியவில்லை” என்றார் போனில்

இரவு எட்டு மணி போல கணபதியில் இருக்கும் அன்னபூர்ணாவிற்குச் சென்றோம்.

திக்கித் திணறிச் சாப்பிட்டாலே 300 ரூபாய்க்கு மேல் சாப்பிட முடியாது. சிறிய எளிய உணவு, சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தோம். அங்கு ஒருவர் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். ஹோட்டலில் இருந்து வெளியில் வருவோரிடமெல்லாம் சென்று பலூன் வாங்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தார். எவரும் வாங்கவில்லை. களைத்துப் போன முகம். வியர்வையில் நனைந்து உப்புக் காய்ந்து போன சுவடுகள் கொண்ட சட்டை. ஒருவர் குழந்தையுடன் வெளியில் வர அவரிடம் சென்றார். அவர் தலையாட்டி மறுத்து விட்டு நகர, அவர் தடுமாறி விழப்போனார். 

பசி.....!

எனக்குள் சுருக்கென்றது.

அவரை அருகில் அழைத்து கொஞ்சம் பணத்தைக் கையில் கொடுத்து ’சாப்பிட்டு வரும்படி’ கேட்டுக் கொண்டேன். காசை வாங்க முடியாது என்று மறுத்தார். இரண்டு பலூன்களைப் பெற்றுக் கொண்டு காசைக் கொடுத்தேன். அவர் கண்களில் கண்ணீர் பொசுக்கென்று அருவியாய் வழிந்தோடியது. முதுகில் தட்டிக் கொடுத்து, ”போய் சாப்பிட்டு விட்டு, வியாபாரத்தை தொடருங்கள்” என்று சொன்னேன்.

வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் மகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

“ஏம்பா, அவர் அழுகிறார்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் நிவேதிதா. உள்ளுக்குள் எரிமலை கனன்று கொண்டிருந்தது. நிவேதிதாவுக்கு புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

ஹோட்டலுக்குள் செல்லும் முன்பு இவரைப் பார்த்திருந்தால் கூடவே அழைத்துச் சென்றிருப்பேன். அவர் சாப்பிடுவதைக் கண்டு என் மனது நிறைந்திருக்கும். அந்த வாய்ப்புக் கிடைக்காமல் போனது.

ஹோட்டலுக்குள் சென்று வயிறாரச் சாப்பிட்டு வருபவர்கள் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் சக மனிதனைக் கூடவா கவனிக்க மாட்டார்கள்? என்ன மாதிரியான உலகம் இது எனக்குள் ஆயிரம் கேள்விகள். மனிதர்களிடம் இருந்த மனிதாபிமானம் மறத்துப் போனதா? திண்ணை கட்டி சோறு போட்ட தமிழர்களா இவர்கள்? என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் வெடித்துக் கொண்டிருந்தன.

”தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழி!” என்ற குரல் இரவு முழுவதும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. அது பாரதியின் குரலா என எனக்குத் தெரியவில்லை. அது உங்களின் குரலாகக் கூட இருக்கலாம் அல்லவா?

* * * * *
29/03/2019 - 12.29 PM