குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Friday, October 28, 2016

ஒரு பதிவு ஒரு பயணம்

நண்பனுக்கு ஓர் கடிதம் எழுதிய நேரமோ என்னவோ தெரியவில்லை தினமலர் தீபாவளி மலரில் பல பெரிய மனிதர்கள் எழுதி தள்ளி இருக்கின்றார்கள். நம்ம ராசி அப்படி போலும். பிளாக்கில் இரண்டொரு கடிதப் பதிவுகளைக் கூடப் பார்த்தேன். இருக்கட்டும் ஒவ்வொருவருக்கும் யாரோ ஒரு நண்பர் இருப்பார் அல்லவா? எனது அந்தப் பதிவைப் படித்து விட்டு சில நண்பர்கள் போனில் அழைத்து அழ வைக்கின்றீர்களே என்று புலம்பினர். அப்படியெல்லாமா நாம் எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் நண்பர் “ஃபெதர் டச் தருகிறது உங்களின் எழுத்து” என்கிறார். எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது. அவரவர் பார்வையில் எனது பதிவுகள் பல்வேறு தோற்றங்களைப் பதிவு செய்கிறது போலும். ஒரு சினிமா இயக்குனர் பாடல் எழுதுகின்றீரா என்று கேட்டார். மற்றொரு நண்பர் நல்ல கதையொன்று எழுதித் தாருங்களேன் என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறொரு நண்பர் பதிவுகளில் கோர்வையான பதிவுகளை எடுத்து வா.மணிகண்டன் போல புத்தகமாக்கி வெளியிடுங்கள் என்கிறார். பார்க்கலாம் அதற்கென காலம் நேரம் வர வேண்டுமல்லவா? இப்போது விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

இன்றைக்கு அடியேன் எழுதிய பழைய எழுதிய பதிவுகளைப் படித்துப் பார்த்து வருகையில் சரவணனின் பதிவு ஒன்று கிடைத்தது. அதில் கடைசி வரியைப் படிக்கையில் எனக்குள் பயமே ஏற்பட்டு விட்டது. ”அவர் பொருட்டு எல்லோருக்கும்” என்று எழுதி வைத்து விட்டார். கோவையில் போன வருடம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இந்த வருடம் வருவேனா மாட்டானா என்று பயமுறுத்தும் வேலை பார்க்கிறது மழை. 

இதோ கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் விசயம் விளங்கும்.


2008ல் சரவணனுடன் உரையாடிய போது அவருக்குள் நிகழ்ந்த நெகிழ்ச்சியை வார்த்தையாகப் பதிவு செய்து விட்டார். அவரின் பெருந்தன்மை அது.அவர் இப்போது கிட்டத்தட்ட ஒன்பது புத்தகங்களின் ஆசிரியர். மிக நல்ல எழுத்தாளர். எந்த கோடுகளும் இன்றி சகிப்புத்தன்மையும் இன்றி எழுதுபவர். இதுவரை அவரின் ஒரு புத்தகங்களைக் கூட என்னால் படிக்க முடியவில்லை. அவரை நேரில் சந்திக்கும் போது ஓசியில் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அரசே இலவசங்களைக் கொடுக்கிறது சரவணன் கொடுக்கமாட்டாரா?

மழை வேண்டி ஒரு சிறு பயணம் செய்யவிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வேண்டி இறைவனிடம் முறையிட நானும் மனையாளும் செல்லவிருக்கிறோம். இதெல்லாம் ரொம்பவும் ஓவரா இருக்கே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இருந்தாலும் ஒரு நப்பாசை எனக்குள் இருக்கிறது. ஆகவே எனது பயணம் இனிதே தொடங்கவிருக்கிறது.

”மழையே விடாது பெய்து உலகைச்  சுபிட்சமாக்குக” என வேண்டிக் கொள்கிறேன்.

சரவண கார்த்திகேயன் உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இனிய நண்பர் ராஜ்குமார் அவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

எனது சகோதரர் சிவாவிற்கு அன்பு வாழ்த்துக்கள்.

எனது மூத்த சகோதரர் காமராஜ் அவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜெயமோகனின் அறச்சீற்றம்

கடந்த வாரம் என்று நினைக்கிறேன். வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில் ஒரு பையனை இரண்டொருவர் சேர்ந்து அடித்து துவைத்தனர். பார்த்த எனக்கு கடும் கோபம் ஏற்பட்டு எனது நண்பர்களை அழைத்து என்ன செய்யலாம் என்றுக் கேட்டேன். பல இடங்களில் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதற்கென முஸ்தீபுகளைச் செய்த போது அது முடிந்து போன சமாச்சாரம் என்ற தகவல் கிடைத்தது. ஆசிரியர்கள் பணி மாறுதலும் அந்த பசங்களுக்கு டிசியும் கொடுக்கப்பட்டதாகவும், அடி வாங்கிய பையன் விரும்பினால் இருவரின் மீது வழக்குப் பதியலாம் என்ற செய்தி கிடைத்ததும் தான் மனசு சற்று ஆசுவாசப்பட்டது. இது ஒவ்வொரு மனிதனுக்குள் உண்டாகும் அறச்சீற்ற உணர்வு. எனக்கு ஏற்பட்டது அந்த அடி கொடுத்த பையனின் மீதான கோபம் இல்லை. அங்கு தர்மம் மீறப்படுகிறது. அதனால் சீற்றம் உண்டாகிறது. அவ்வளவுதான் விஷயம். நீ யார் கோபப்பட? உனக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டால் அதற்கும் ஒரு பதில் இருக்கிறது என்னிடம்.

சாலையில் அடிபட்டுக் கிடப்போரைக் கண்டு கொள்ளாமல் சென்றால் மனிதனா நீ என்றெல்லாம் பேசுகின்றோமே அது என்ன விதத்தில் சரி? சிலர் ஓடோடி உதவி செய்கிறார்களே அதைப் போலத்தான் கடும் கொடும் செயல் நடக்கும் போது மனிதர்களுக்குள் உண்டாகும் கோபம். அதே போலத்தான் ஜெயமோகன் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

இது போன்ற வீடியோக்களைப் பார்த்ததும் படபடப்பும் நமக்குள் உறங்கிக் கிடக்கும் ஹீரோயிசமும் வெளி வந்து விடும். 

இதே போலத்தான் ஜெயமோகனும் செய்திருக்கிறார். அவருக்கு தன் கோபமானாலும் சரி, மகிழ்ச்சியானாலும் சரி, எழுதி விடத்தான் செய்வார். அவரின் அந்தக் கோபம் அந்தப் பெண்மணி மீது உண்டானது என்று முடிவு செய்ய வேண்டியதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்.

வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளால் நாட்டுக்கு எவ்வளவு இழப்புகள் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. நேற்று கூட சுப்ரீம் கோர்ட்டில் 85,000 கோடி ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு இதுவரை கடன் கட்டாமல் தவிர்த்து வரும் பெரும் தொழிலதிபர்களைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறது நம் மத்திய அரசு. வங்கிப் பணம் மக்களுடைய பணம் அல்லவா? வங்கிகள் திவாலானால் மனிதன் வங்கி மீது கொண்டிருக்கும் கடைசி நம்பிக்கை கூட சிதறுமானால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஹர்சத் மேத்தா என்ன செய்தார்? ஏதாவது நடந்ததா? பெரும் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் வங்கி மேலாளர்கள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றனவே அதையெல்லாம் யாரால் என்ன செய்து விட முடியும் வேடிக்கை பார்ப்பதைத் தவிர.

வங்கிகள் சாதரண மனிதனின் நம்பிக்கை. பக்கத்து வீட்டுக்காரனிடம் கூட காசைக் கொடுத்து வைத்துப் பின்னர் திரும்ப வாங்க முடியுமா என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால் வங்கிக்கு நம்பிச் செல்கிறார்கள். இந்த நம்பிக்கைக் குலையும் படி நடந்து கொள்வது சரி என்கின்றார்களா? 

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவோரால் எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல், மக்கள் மீது அலட்சியம். அதிகாரத்தைக் கொடுத்தவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஒன்றையே வேலையாக வைத்துள்ளார்கள். 

ஜெயமோகன் அந்தப் பெண்ணின் வேலை செய்யும் வேகத்தினைப் பார்த்துதான் கோபத்தில் எழுதி இருப்பார். இன்னுமா நாம் ஏமாற வேண்டும்? இப்படியுமா ஒரு அரசு அலுவலர் வேலை செய்வார்? என்ற உடனடிக் கோபம் தான் அது. அதற்காக அவரை இரண்டு நாட்களாக வறுத்து எடுப்பது சரியல்ல. கடந்து செல்ல வேண்டிய விஷயம் இது. ஜெயமோகனுக்கு உண்டானது அறச்சீற்றம். அது அழுக்கு அல்ல.

சிவா தன் பிளாக்கில் எழுதி இருந்ததை இங்கு மீள் பதிவிடுகிறேன். ஏனென்றால் அதுதான் உண்மை. 

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.

 வேலை வாங்கும்போது வேலையை வாங்கு.. 

ஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம்.  உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்.. 

ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.


நான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட…   உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.

இவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை.. 

ஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்.. 

குறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது.  பொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ 

வீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..

அதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,

இரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் ? வங்கிப்பாதுகாப்பு கேள்விக்குறி.

அதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன ? முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.

BSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.

நன்றி :  நிகழ்காலத்தில் சிவசுப்ரமணியன்

Tuesday, October 25, 2016

தீபாவளியும் ஹிட்லரின் சதியும் ஒரு உண்மைச் சம்பவம்

வருடம் தோறும் தீபாவளி வருகிறது. வெடித்து விட்டுச் சென்று விடுகிறது. இப்படியான விழாக்கள் மக்களை செக்கு வாழ்க்கையிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. வளர் பிராயத்தினருக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பினை உண்டாக்குகிறது. பிறக்கிறோம் இறக்கிறோம். இந்த இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையின் மீதான அழகியலை இது போன்ற விழாக்கள் தான் உருவாக்கி காலம் காலமாக மனித கட்டமைப்பை விரிசல் விடாது பாதுகாக்கின்றன.

(2011ம் வருடம் ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தின் மீது அம்மு, ரித்தியின் அப்பத்தா குட்டியம்மாள் அவர்களுடன்)

இந்த வருடம் அடியேனுக்கு முறுக்குப் பிழிவதிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்து விட்டது. பெண் அச்சில் முறுக்கு மாவைச் சேர்த்துக் கொடுக்க பையன் முறுக்கு பிழிய ஹிட்லர் அடுப்பில் முறுக்கைச் சுட நான் தீபம் நா.பார்த்தசாரதியின் நூலில் மூழ்கி விட்டேன். கடந்த ஞாயிறு அன்று மாலை நேரம் முறுக்குச் சுடுவதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்த போதே நான் நைசாக உடல் வலிக்கிறது என்றுச் சொல்லி பெட்ரூமில் படுத்து விட்டேன்.

இல்லையென்றால் மூன்றுபடி மாவை ஒற்றை ஆளாக பிழிந்து கொடுப்பது என்றால் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏண்டி இப்படிப் படுத்தறே என்றால் சர்ர்ரீங்க்க நீ....ங்க..... போ......ய்ய்ய்ய் ரெஸ்ட் எடுங்.....க..... என்ற குரல் இழுத்துக் கொண்டே முகம் கோணலாய் மாறியபடி வரும். கைகள் இரண்டும் முறுக்கு அச்சினை அழுத்தியதால் உண்டாகும் எரிச்சல் வலியை விட இந்த இழுப்புச் சேட்டை அவஸ்தைப் படுத்தி விடும். வேறு வழி முழுவதும் முடிந்தால் தான் தற்காலிக விடுதலை கிடைக்கும்.

இதுவாவது பரவாயில்லை. தீபாவளி அன்று இரவில் மெதுவடைக்கு வெங்காயம் நறுக்கிக் கொடுக்க வேண்டும். சுழியனுக்கு சுக்கு, வெல்லம் உடைத்து தர வேண்டும். பாலப்பத்திற்கு கட்டி இல்லாமல் மாவு கரைத்துக் கொடுக்க வேண்டும். அன்றைக்கு என்று சுடும் அதிரசத்திற்கு கூட இருந்து உதவி செய்ய வேண்டும். இட்லிக்குச் சட்னி அரைக்க நான்கைந்து தேங்காய் துருவித் தர வேண்டும். விடிகாலையில் வெந்நீர் போட்டு பசங்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல வேண்டும்கள் தீபாவளி அன்று வரிசை கட்டி நிற்கும். நான் செய்து கொடுப்பது சிறிய உதவிகள் தான். ஆனால் அதுதான் வண்டிக்கான அச்சாணி என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் அச்சாணிகளை மதிப்பதே இல்லை. மேலழகைத்தானே ஆஹா ஓஹோ என்கிறது. ஆம்பளைங்க விதியை ஆண்டவன் இப்படித்தான் எழுதி வைத்திருப்பான் போல.

சுழியத்துக்கு வெல்லத்தை இப்படியா பொடித்து தருவது என்று நக்கல் வேறு. வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை வராது. எல்லாம் முடிந்த பிறகு தான் கிண்டல்கள் வரும். எத்தனை வருடமா சுழியத்துக்கு வெல்லம் பொடிக்கிறீங்க, கொஞ்சமாவது பொடிசா பொடிக்கிறீங்களா என்பார்கள் மாலை நேரத்தில். ஒவ்வொரு செயலையும் மாலையில் விமர்சித்தால் எப்படி இருக்கும்? கொதிக்கும் ரத்தம் பசங்க கையில் பலகாரங்களைப் பார்க்கையில் கொதிக்கும் பாலில் ஒரு துளி தண்ணீர் பட்டது போல அடங்கி விடும். ஆம்பளைங்களுக்குதான் அதிகம் ரத்தக் கொதிப்பு வரும் என்றுச் சொல்கிறார்கள். வராமல் என்ன செய்யும்? வராமல் என்ன தான் செய்யும்?

ஒரு வழியாக பலகார பிரச்சினை தீர்ந்தாலும் வெடிப்பிரச்சினைதான் பெரிது. வாசலில் உட்கார்ந்து ஒவ்வொரு பார்சலாய் பிரித்து எடுத்துக் கொடுக்க வேண்டும். மத்தாப்பூ வெடித்ததும் கம்பியைப்  பெற்று தனியாக வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் சுட்டுக் கொள்வார்கள். பெண் இருக்கிறதே அவ்வளவுதான் ஊரையே கூட்டி கண்ணில் கங்கையைக் கொட்டி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய பெரிய பூகம்பமே கிளம்பி விடும். தேவையா இதெல்லாம் என கண் கொத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

நேற்றைக்கு காலையிலிருந்து போன் மேல் போன் வந்து அடுப்படியில் ஹிட்லரும் அவரது அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி இன்றைக்கு நமக்கு டிரைவர் வேலை இருக்கிறது போல என நினைத்தால் சரிதான். இதற்குள் எனக்கு வங்கிக்குச் செல்ல வேண்டியபணி, அரசு அலுவலரைச் சந்திக்க வேண்டிய பணி, ஆடிட்டரைப் பார்க்க வேண்டிய பணி, வேறொரு வங்கிக்குச் செல்ல வேண்டிய பணி என வரிசை கட்டி நின்றிருந்தன. இருந்தாலும் தலையில் வலி வந்தால் உடம்பு முழுவதும் அல்லவா வலிக்கும். அது போல ஹிட்லர் வேலை என்றால் தலையில் வலி வந்ததாகத்தானே. அதற்காக நான் ஹிட்லரை தலைவலி என்றுச் சொல்லி விட்டேன் என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் கோயம்புத்தூர் வெயில் வறுத்து எடுக்கிறது. எவ்வளவு வெயில் அடித்தாலும் குளிர்ச்சியாக இருக்கும் கோவை வெயில் இன்றைக்கு என பார்த்துக் கொதிக்கிறது. என்னைச் சுற்றி ஆண்கள் அதிகமிருந்தார்கள். அவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்குமோ என நினைத்தேன். நினைத்தால் என்ன ஆகி விடப்போகிறது. வறுபடல் வறுபடல் தான். அரை மணி நேரமாக கோவை சிங்காநல்லூர் என்.ஜி. மருத்துவமனை அருகில் நின்று கரூரிலிருந்து வரும் பஸ்ஸுக்காக காத்திருந்து அங்கிருந்து வந்த பார்சலை கண்டக்டரிடமிருந்து பெற்றுக் கொண்டு பிறகு ஒவ்வொரு வேலையாக முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து பார்சலைப் பிரித்தார் ஹிட்லர்.

வருடா வருடம் கரூரிலிருந்து ஹிட்லரின் அம்மா காரபூந்தி செய்து தனியாகப் பார்சலில் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் திருவள்ளுவர் ஹோட்டலிலிருந்து நான்கு பரோட்டாக்களும் வரும். பலகாரங்களுடன் கரூர் போர்வை, கொசுவலை மற்றும் இன்னபிற தீபாவளி தொடர்பான வஸ்துகளும் வந்து விடும். இந்த வருடம் அடியேனுக்குப் பிடித்த காரபூந்தியைக் காணவில்லை.

பொசுக்கென்று ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் மாமியார் வீட்டுப் பலகாரம் என்றால் கொஞ்சம் குஷியாகத்தானே இருக்கும். இந்த வருடம் சோகமாகவே இந்தத் தீபாவளி போகும் போல. இது பற்றி நைசாக விசாரித்தால் அது ஹிட்லரின் சதி என்று கண்டுபிடித்தேன். நான் செய்து தருகிறேன் என்று ஆரம்பித்தார். விதி வலியது அல்லவா? மீண்டும் அடுப்பங்கரைக்குக்கு ஆளை வர வைத்தே ஆக வேண்டும் என்று சதி செய்தால் என்ன செய்வது? கிரேக்க வம்சத்து அடிமை மாதிரி இருப்பதைத் தவிர என்னதான் செய்ய முடியும்?

இந்த வருடம் டிவியை ஆன் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ளேன். உண்மையான தீபாவளி டிவியை ஆஃப் செய்வதில் தான் உள்ளது.

இதெல்லாம் முடிந்து இரவில் படுக்கச் செல்லும் போது முகத்தில் புன்னகையுடன் காலையிலிருந்து கொண்டாடிய கொண்டாட்டத்தால் அசந்து தூங்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அறியாமலே மனதுக்குள் மத்தாப்பூ பூக்கும். அதுதானே நமக்கு உண்மையான தீபாவளி இல்லையா?

குடும்பத்துடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுங்கள். வெளி நாடு வாழ் தியாக உள்ளங்களே வரக்கூடிய நாட்களில் நீங்களும் உங்கள் குடும்பங்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ நான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Friday, October 21, 2016

குடும்பத்தில் இருப்போர் வாசியோகம் கற்கலாமா?

நான்கு வருடங்களுக்கு முன்பு வாசியோகப்பயிற்சி செய்ய தீட்சை பெற்ற போது இருந்த அறிவுக்கும் நேற்றைக்கு எனது இரு நண்பர்களுக்கு வாசியோகப் பயிற்சி பெற அழைத்துச் சென்ற கிடைத்த அறிவுக்கும் வித்தியாசமிருந்தது. பக்குவமும் உணர்ந்து கொள்ளும் திறனும் அதிகரித்திருந்ததை உணர்ந்தேன்.

முதல் நாள் வியர்வையோடு அவசரமாக முகத்தை கழுவி விட்டேன். நீர் கோர்த்துக் கொண்டது. கண்கள் இரண்டும் வெடித்து விடுவது போல கனகனவென மூக்கில் நீர் ஒழுக ஆரம்பித்தது. தலை விர்ரென்று கணக்க ஆரம்பித்தது. தலையில் குடைச்சல், உடல் முழுவதும் வலி பின்னிப் பெடலெடுக்க ஆரம்பித்தது. இந்தப் பிரச்சினையோடு தான் ஆசிரமத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்றேன். 

ஒரு மனிதன் நல்ல சிந்தனையாளனாகவும், உலகைப் புரிந்து கொண்டவனாகவும் மாறி விட்டால் அவனைச் சுற்றி இருப்போருக்கு அவனால் நன்மை நடக்காவிட்டாலும் கெடுதல் நடக்காது அல்லவா? வாசியோகம் மனிதனைப் பக்குவப்படுத்தி விடும். வரக்கூடியவற்றை எளிதில் உணரும் தன்மையை மனிதனுக்கு தரும். அந்தப் பயிற்சி தரும் பலன் அது.

வாசி என்றால் சிவா. சிவா என்றால் சிவம். அந்தச் சிவத்தை மனிதர்கள் அனைவரும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். அதை வீணாக்கி விடாமல் சேகரம் செய்து உடலைத் தூய்மையாக்கி மனதை நிச்சலமாக்கி கடவுள் தன்மை அடைய இந்த வாசியோகப் பயிற்சி உதவுகிறது.

இட வல மூச்சை ஒன்றாக்கி அதனை சுழுமுனையில் செலுத்தி சிவமடைதலே வாசியோகம். நம் கோவில்களில் இந்த வாசியோகத்தை தான் சிலைகளாகச் செதுக்கி வைத்துள்ளனர். ஆனால் புரிந்து கொள்வார் யாருமில்லை. புரிந்து கொண்டவர்கள் எவரிடமும் சொல்வதுமில்லை.

வாசியோகத்தின் போது மூச்சை சீராக்க வேண்டும். அதற்கு நாடி சுத்தி செய்தல் வேண்டும், பிறகு கப சுத்தி செய்ய வேண்டும். பின்னர் வாசியோகப்பயிற்சி செய்தல் வேண்டும். பயிற்சி முடிந்ததும் சாந்தி செய்தல் வேண்டும். வாசியோகப் பயிற்சியின் போது உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி அறிதல் வேண்டும். வீட்டில் பயிற்சி செய்யும் போது சரியாகச் செய்கின்றீர்களா என்பதை கண்டுணர்ந்து சரி செய்யும் குரு வேண்டும்.

இந்தப் பயிற்சியை எம் குரு நாதர் கற்றுக் கொடுக்கிறார். அவரின் குருதட்சினை நன்கு பயிற்சி செய்வது மட்டும் தான். 

ஜோதி சுவாமி : 98948 15954
இடம் : சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி, முள்ளங்காடு, பூண்டி, கோயம்புத்தூர்

அவரிடம் போனில் பேசி, நேரம் முடிவு செய்து செல்லவும். இந்தப் பயிற்சியைப் பற்றி நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்வார். நன்கு புரிந்து தெளிந்து கொண்டு பயிற்சியைத் தொடங்குங்கள். சித்தர்கள் நம் வழித்துணையாக நின்று வழி காட்டுவார்கள்.

குடும்பஸ்தர்கள் வாசியோகம் கற்றுக் கொள்ளலாமா? என்று பலருக்கும் உட்கேள்விகள் இருக்கும். ஆன்மீக வழியில் நின்று தன் பாரம்பரியத்தையும், குடும்பத்தையும், நல் வழியில் நடத்தி வர குடும்பஸ்தர்கள் தான் இந்தப் பயிற்சியை செய்தல் வேண்டும். குடும்ப வாழ்க்கைக்கு எந்த வித பங்கமும் நேராது. 

என் மனைவி வாசியோகத்தில் நல்ல நிலையில் முன்னேறி பயிற்சியை விடாது செய்து வருகிறார். இதனால் எங்களுக்குள் எந்த வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆகவே எந்த வித சந்தேகமும் இன்றி குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவியரோடு சென்று பயிற்சி செய்ய முயற்சியுங்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியது நல்ல ஆரோக்கியமும், அமைதியாக வாழும் முறைகளையும்தான்.

நண்பர்கள் இருவரும் பயிற்சி செய்வது பற்றி தெரிந்து கொண்டார்கள். மதியம் போல வீட்டுக்கு வந்தால் தலை கிர்கிர்ரென்று கனக்க ஆரம்பித்தது. அசதியில் பாய் விரித்துப் படுத்து விட்டேன். ஒரு இளநீர் கொண்டு வந்து கொடுத்தார் மனையாள். அருந்தினேன். சிறிது நேரம் கழித்து ஆரஞ்சு சுளைகளைத் தந்தார். இரவில் முருங்கைகீரை சூடான சூப் ஒரு கப் அருந்தினேன். தன் விரலால் வயிற்றில் ஏதோ ஒரு இடத்தில் அழுத்தி விட்டார் மனையாள்.  இதோ விடிகாலையில் எழுந்து அமர்ந்து கொண்டு இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

கனத்த தலை இப்போது நன்றாக உள்ளது. மூக்கில் இடது பக்கம் மட்டும் அடைத்தது போல இருக்கிறது. உடல் வலி நின்று விட்டது. இன்று இரவு மீண்டும் ஒரு கப் சூடான முருங்கை இலை சூப் மற்றும் ஒரு இள நீர் மேலும் கொஞ்சம் ஆரஞ்சு சுளைகள் சளி என்னை விட்டு விட்டு ஓடி விடும்.

அனைவரும் வாசியோகத்தைக் கற்றுக் கொண்டு நம் சித்தர்கள் வழி நின்று தம் தம் குடும்பங்களை நல் வழிப்படுத்தி ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ பிரார்த்திக்கின்றேன்.

Thursday, October 13, 2016

சிவகார்த்திகேயனின் அழுகை

அண்ணா, சிவகார்த்திகேயன் மேடையில் அழுது விட்டார் பார்த்தீர்களா? என்று போனில் ஒரு சினிமா நண்பர் அழைத்து ஆதங்கப்பட்டார். கிட்டத்தட்ட 32 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் அவர். மிக நல்ல கதை சொல்லி. ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன. அவர் 12 மணி நேரம் கதை சொல்வார். அந்தளவுக்குத் திறமைசாலி. ஆனால் இதுவரை ஒரு படம் கூட அவரால் இயக்கமுடியவில்லை. காரணம் அவருக்கு அந்த வித்தை தெரியவில்லை. போன் போட்டு சிவகார்த்திகேயனுக்காக பேசுகிறார். இதனால் அவருக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் யோசித்திருந்தால் போன் செய்திருக்கமாட்டார்.

சிவகார்த்திகேயன் ஏன் அழுகிறார்? எங்கே நாம் அடுத்து அடுத்து கோடிகளில் சம்பாதிக்க முடியாதோ என்ற ஆதங்கத்தில் அழுகிறார் விஷயம் அவ்வளவுதான். புரிந்துகொள்ள முயலுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டார். கமல்ஹாசன் கூட கண்ணீர் சிந்தினார். ஏனென்றால் அவரின் பிசினஸுக்குப் பிரச்சினை. அதனால் அழுதார். இதில் நமக்கு என்ன பிரச்சினை என்று எவரும் சிந்திப்பதில்லை.

இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? சிறிய தொழில் செய்பவன் கூட தன் சக தொழில் போட்டியாளரிடம் தோற்றுப் போகின்றானே அவன் என்ன அழுது கொண்டா இருக்கின்றான்? இல்லை பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றானா? இல்லையே? தொழில் போட்டியில் பல இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும். அதைச் சமாளித்துதான் வெற்றி பெற வேண்டும். உடனே மீடியாவில் அழுக ஆரம்பித்தால் தினம் தோறும் நொடிக்கு நொடி அழுகாட்சிகளையே மீடியாக்கள் காட்டிக் கொண்டிருக்க நேரிடும். இதெல்லாம் எதற்கு? 

இதெல்லாம் புரியும் அளவுக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே அரசியலைத்தான் எழுத்தாளர்களும் செய்கின்றார்கள். எழுத்தாளர்களில் கூட சினிமாத்தனம் இருக்கிறது. ஜெயமோகன் சாரு நிவேதிதா என்று எழுதுகின்றார்கள். 

இந்த அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த அரசியல் என்று தெளிந்து கொள்ள வேண்டும். தனிமனிதப் பெருமை பேசும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும், இலக்கியவாதிகளைப் பற்றி யும் தெளிவறப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களின் அரசியல் நம் இரக்க குணத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி நம்மிடமிருந்து பணம் பிடுங்க செய்யும் மாயாஜால வித்தை. அரசியல்வாதி அதிகாரத்தை அடைந்து பணம் சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றான். எந்த அரசியல்வாதியும் தன் சொத்தை விற்று மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழவும், அதிகாரத்தை அனுபவிக்கவும், அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் தான் அரசியலுக்கு வருகிறான். செலவு செய்கிறான்.

எழுத்தாளர்கள் பணமும் புகழும் சம்பாதிக்கத்தான் எழுதுகின்றார்கள். சமூகப் பிரக்ஞை, வரலாறு என்று பேசி மாய்மாலம் செய்வார்கள். 

சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்குள் வருகின்றார்கள். ஹீரோயின் இல்லையென்றால் ஹீரோக்கள் சினிமாவுக்கே வரமாட்டார்கள். 

பத்திரிக்கையும், சினிமாவும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவை மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை. மக்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையப் போட உருவாக்கப்பட்ட மாயவலைகள். சினிமா ஒரு பக்கம் நம்மிடமிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அரசியல் வரிப்பணமாக உறிஞ்சிக் கொள்கிறது. இவர்கள் இரண்டு பேரையும் இணைத்து பத்திரிக்கைகள் தர்ம நியாயம் பேசியே கண்ணுக்குத் தெரியாமல் உறிஞ்சிக் கொள்கின்றார்கள்.

விஷயம் அவ்வளவுதான். ஒரு புள்ளி மட்டுமே இது. 

ஒரு விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசியலில் தூய சேவை செய்கின்றவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். எழுத்தாளர்களில் பலர் உலகமக்களுக்காக உண்மையாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிக்கையாளர்களில் பலர் உண்மையின் சொரூபமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவரையும் நமக்குத் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இங்கு தான் அரசியல் நடக்கின்றதே?

ஆனால் சினிமா அதுவும் அல்ல இதுவும் அல்ல. சினிமாவில் உறிஞ்சப்படுதல் மட்டுமே நடக்கின்றது. அந்த சினிமா அரசியலையும் உருவாக்குகிறது. அடிமைத்தனத்தில் சினிமா ஒரு விதம். நான் அவரின் ரசிகன் என்றுச் சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை சொல்பவனுக்கு இருக்கிறது என்று எவரும் யோசிப்பதில்லை. இந்தப் பூமிப்பந்தில் சினிமாவைப் பற்றியும், சினிமாக்காரர்களைப் பற்றியும் தெரியாதவர்கள் ஐந்து பர்செண்டேஜ் இருக்கலாம். மீதமுள்ளவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் சினிமாவில் சென்று சேர்கிறது. 

ஒரு சாதாரண போர்ன் நடிகை 100 கோடிக்கு நகை வைத்திருக்கிறார். அவளின் படத்தைப் பார்ப்பவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைக்கு பதினைந்து கோடி சம்பளம் பெறுகிறார் என்று மீடியாவில் பேசப்படும் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகனின் பாக்கெட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. ஆனால் சிவகார்த்திகேயன் அழுகிறார். 

யாருக்காக அழுகிறார்?

ரசிகனுக்காக எவரும் அழுவதில்லை. ரசிகன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அழுகின்றார்கள். 

Wednesday, July 20, 2016

சித்ரவதைக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகளும் முதியவர்களும்

கோவை வடக்கு வட்டம் தாசில்தார் அலுவலகத்துக்கு குடும்ப அட்டைக்கான முகவரி மாற்றத்துக்காக மனையாளுடன் சென்றிருந்தேன். 

வாசலின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து விண்ணப்ப மனுக்களை எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 30 ரூபாய் கொடுத்தால் விண்ணப்பம் எழுதித் தருகின்றார்கள்.

விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டு கொடுத்தேன். இரண்டாவது தளத்தில் இருக்கும் குடிமைப் பொருள் அலுவலகத்திற்கு மனையாள் சென்று விட்டார். நான் அங்கிருக்கும் வேம்பு மரத்தின் நிழலில் வண்டியில் அமர்ந்திருந்தேன்.

அப்போது ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து ஒரு வயதான பெண்மணியும் அவருடன் குச்சி போன்ற உடலுடன் ஒரு பெண்ணும் இறங்கினார்கள். இருவராலும் இறங்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஆகின. ஆட்டோ டிரைவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு ஆட்டோவிலேயே அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் அங்கிருந்த வாசலில் உட்கார்ந்தனர். அந்த வயதான பெண்மணி யாரையோ எதிர்பார்த்து வாசலில் நின்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கோ உட்காரக்கூட முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் யாரும் உதவி கூட செய்யவில்லை. ஏதாவது இயற்கை உபாதை ஏற்பட்டால் அந்த இருவரின் நிலை? யோசிக்கவே முடியவில்லை.

அடுத்து இன்னொரு டாக்சி வந்தது. அதிலிருந்து ஒரு பெரியவர் இறக்கப்பட்டார். இரண்டு கைகளாலும்  தூக்கி  வைத்து நடக்கும் கையூன்றியுடன் அவர் மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அந்தப் படிகளைக் கடந்து செல்ல முயன்று கொண்டிருந்தார். இரண்டு படிகளைக் கடக்க அவருக்கு பத்து நிமிடங்கள் ஆகின. 

கைகால்கள் அடிபட்டு உடைந்து போன நிலையில் இருந்த மூன்று பெரியவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர். ஆதார் எடுக்க ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை கணிணியில் ஏதோ பிரச்சினை என்றுச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இயலாமையுடன் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கும் குடும்பம் என்ற ஒன்று இருந்திருக்கும். அவர்களுக்கும் வாரிசுகள் இருப்பார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. திரும்பவும் வர அவர்களிடம் பணமிருக்குமோ இருக்காதோ தெரியவில்லை. அவர்களால் சம்பாதிக்க கூட முடியாது. மீண்டும் வர அவர்கள் யாரிடம் பணம் பெறுவார்களோ தெரியவில்லை.

முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த துவங்கியவுடன் தான் ஊனமுற்றோர் என்ற சொல் மாற்றுத்திறனாளி என்று மாற்றப்பட்டது. தனக்கு என்று வந்தால் தான் மாற்றங்கள் என்றால் ஒவ்வொரு தலைவரும் சக்கர நாற்காலியில் தான் வர வேண்டும்? இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா?

பேரூந்துகள், ரயில் வண்டிகளில் மாற்றுத்திறனாளிகளும், வயதானவர்களும் பயணம் செய்வது என்பது பியர் கிரில் காட்டில் விடப்பட்டு தப்பித்து வருவதை விட கொடிய நிகழ்வாக இருக்கிறது. இத்தனைக்கு சுற்றிலும் மனிதர்கள் இருக்கின்றார்கள். ஆனால் எவரும் யாருக்கும் உதவுவதே இல்லை. கோவிலுக்குச் சென்றால் கூட ஒதுங்கி வழி விட மாட்டார்கள் எதிர்கால வயோதிக மனிதர்கள்.

இந்த வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் மாறக்கூடியது என்பதை எவரும் அறிவார் இல்லை. 

தாலுக்கா அலுவலகத்தில் அந்தப் பெண்ணும், பெரியவரும் பட்ட துன்பம் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. இது அத்தனையும் அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன நடக்கிறது? கண்டும் காணாமலே செல்கிறது ஆறறரிவு பெற்ற மனித உள்ளங்கள்.

எனது நண்பரொருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். ஊனமுற்றோருக்கு வெளி நாட்டில் செய்துதரக்கூடிய உதவிகளைப் பட்டியலிட்டார். அங்கிருப்பவர்கள் மனிதர்கள். 

உலகத்திற்கே முன்னுதாரணமான தமிழ் சமூகம் மாற்றுத்திறனாளிகளையும், வயோதிகர்களையும் நடத்தி வரும் போக்கும் சித்தவதைக்களமாக இருக்கிறது. 

ஊனமுற்றோருக்கு என்றொரு வாரியம், சமூக அமைச்சர், அலுவலர்கள், மருத்துவர்கள் என்று அரசு பெரும் செலவுகளைச் செய்கிறது. இயங்கவே முடியாத வயதான பெரியவர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும், கண்பார்வை அற்றோர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று அரசு வழங்கும் நலத்திட்டங்களை வழங்கினால் என்ன? 

அவர்கள் தங்கள் உயிர் மீது கொண்ட ஆசையினால் படும் துன்பத்தைக் காணச் சகிக்க முடியவில்லை. மனம் வேதனைதான் கொள்கிறது. வசதியும், வாய்ப்பும் இருப்பவர்களால் சமாளித்து விட முடியும். இல்லாதவர்கள் நிலை என்ன?

இந்திய அரசும், நீதித்துறையும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என ஆவலாய் இருக்கிறது. 

Monday, July 18, 2016

தீவிரவாதம் ஏன் நடக்கிறது? உண்மை என்ன?

உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக சாதாரண மக்களை பெரும் துயருக்குள் தள்ளிக் கொண்டிருப்பது தீவிரவாதம். அது மதத் தொடர்பானதாக இருந்தாலும் சரி, விடுதலை தொடர்பானதாக இருந்தாலும் சரி. ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது தீவிரவாதம் என்றே அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மூன்றாம் உலகப் போர் நடக்குமா என்றெல்லாம் விவாதங்கள் செய்கின்றார்கள். அதற்கு நிச்சயமாக சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என்றே கருதுகிறேன். இனிமேல் மூன்றாவது உலகப்போர் என்பது நடத்தப்பட்டால் பூமி என்ற உலகமே இருக்காது. வெடித்து சிதறி விடும்.

அறிவியல் மனிதனுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளைச் செய்ததை விட அழிவுக்கான பாதையைத்தான் காட்டி இருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனிதனை தன் நிலை இழக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. அவன் மிருகமாகிக் கொண்டே போகின்றான். ஒரு ட்ரக் 85 பேரைக் கொல்ல உதவுகிறது. துப்பாக்கியால பலரைக்க் கொல்லலாம். ஒரு அணுகுண்டு ஒரு ஊரையே சுடுகாடாக்கி விடுகிறது. ஒரு வைரஸ் கிருமி உலகையே கொன்றொழிக்கிறது. சகமனிதனைக்கூட அருகில் செல்ல விடுவதில்லை.

நாடெங்கும் ஆயுதத்தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. என்றைக்கு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அன்றிலிருந்து அவை மனிதனின் உயிரைப் பறித்துக் கொண்டே இருக்கின்றன. 

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதங்களுக்கு அச்சாணியாய், முழுக் காரணமாய் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது வியாபாரம். அறிவியல் வியாபாரம். ஆமாம் அறிவியலின் உச்சமாக ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தாங்கிக் கொண்டு செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் 5 போனா வைத்திருக்கிறாய்? நான் 6எஸ் அல்லவா வைத்திருக்கிறேன் என்று வெற்று ஈகோ. இந்த வெற்று ஈகோவை வளர்க்கும் சினிமாக்கள், மீடியாக்கள். 

இந்த வெற்று ஈகோவினால் ஆப்பிள் கம்பெனிக்கு லாபம். விளம்பரங்களால் மீடியாவிற்கு லாபம். ஆனால் அந்த ஆப்பிள் போனை வாங்குபவனுக்கு? மாதம் ஒரு புதிய அப்டேட்டை வாங்குவதால் என்ன பயன்?  எவரும் யோசிப்பதில்லை. என்ன தேவையோ அதற்குத்தான் பொருள் வேண்டும். காசைக் கரியாக்கும் ஈகோவினால் பொருள் இழப்புதான் ஏற்படும். இதை எவரும் உணர்ந்து கொள்வதில்லை. அதனால் உழைப்பை இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

இந்த உலகில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து விட முடியுமா? என்றால் ஆம் நிச்சயம் முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் அது நடக்காது.

ஒவ்வொரு நாடும் தன் ஆயுதத்தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். புதுப்புது ஆயுதங்கள் தயாரிக்க மிகப் பெரிய அளவில் பழைய ஆயுதங்கள் மீந்து விடுகின்றன. அந்த ஆயுதங்களைக் காசாக்குகின்றார்கள். அவை கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. பழைய ஆயுதங்கள் விற்கப்பட வேண்டுமெனில் சண்டைகள் நடக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆயுதங்களை விற்க முடியும். அந்தச் சண்டைகளை ஆயுத வியாபாரிகள் புத்திசாலித்தனமான விஷயங்களால் உருவாக்குகின்றார்கள். விஷயம் அவ்வளவுதான். கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். நான் கோடிட்டுக் காட்டுகிறேன். முழுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்கு பிரச்சினையின் ஆரம்பம் இருக்கிறதோ அதைச் சரிசெய்யாத வரைக்கும் இந்த தீவிரவாதம் நிற்கப்போவதில்லை. மக்கள் தங்கள் இன்னுயிரை இழப்பது தொடர்கதையாகத்தான் நடந்து கொண்டிருக்கும். யாரோ ஒருவரின் பேராசைக்கு உலக மக்கள் தங்கள் வாழ்வை இழக்கின்றார்கள். அலறுகின்றார்கள். அல்லல்படுகின்றார்கள். துயரத்தில் வீழ்கின்றார்கள். துன்பத்தில் வீழ்கின்றார்கள். 


Monday, December 29, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம் - தொடர்ச்சி

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கோவை டைம்ஸ் பகுதியில் ரஜினி காந்த் அவர்களின் சொத்து ஏலம் பற்றி ஒரு பத்தி வெளிவந்திருக்கிறது. எந்த ஒரு செய்திக்கும் விரிவான அலசலை அளிக்கும் பத்திரிக்கை ரஜினி என்கிற கோபுரத்தின் கதையைப் பற்றி விரிவாக அலசி இருக்க வேண்டிய தருணத்தை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறது.

கோடம்பாக்கத்தின் தெருக்களிலும், ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் இளைமையையும், எதிர்காலத்தையும், குடும்பத்தையும் தொலைத்து விட்டு கட்டுக்கட்டாகப் பணமும், புகழும் கிடைக்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் மனதுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி இருக்க வேண்டிய அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியா தவற விட்டு தன் ஊடக தர்மத்தை வசதியாக மறந்து விட்டது. சினிமா என்ற மாயா உலகத்தின் மறுபக்கம் தான் ரஜினியின் சொத்து ஏலத்திற்கு வந்தது. இதே போல அமிதாப்பச்சனின் சொத்தும் ஏலத்திற்கு வந்தது நினைவிலிருக்கலாம். சினிமா மோகத்தின் மீதான மாயையை அலசி ஆராய்ந்து கட்டுரையை வெளியிட வேண்டிய தர்மத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா மறந்து விட்டது.

என்னைப் போன்று எத்தனை எத்தனையோ லட்சோப லட்சம் வாசகர்கள் கொடுக்கும் சிறு பணத்தில் வளர்ந்து நிற்கும் இந்தப் பத்திரிக்கை மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடமைக்கு ஆட்பட்டது. ஆனால் ரஜினி போன்ற மாயா உருவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தர்மத்தைக் காக்கத் தவறி நிற்கிறது.

என்றைக்கு ஒரு தராசு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கிறதோ அன்றிலிருந்து தன் முடிவுக்கான ஆரம்பப் படியை அது எடுத்து வைத்து விட்டது எனலாம். நூற்றாண்டு கால டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய நிலைக்கு இன்னுமொரு உதாரணம்,

இன்றைய சினிமா விமர்சனத்தில் கயல் திரைப்பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வெள்ளைக்காரத்துரை திரைப்படத்தை தவறுதலாக வெளியிட்டு இருக்கிறது.

காலம் சொல்லும் பதிலுக்கு கேள்வியை இவர்களே தயார் செய்திருக்கிறார்கள். பதில் வெகு கடுமையாக இருக்கக் கூடாது என்று அதன் வாசகன் என்ற நிலையில் விரும்புகிறேன்.


Saturday, September 14, 2013

22 நாடுகள் சேர்ந்து விரட்டப்படவரின் நிகழ்காலத்தில் கதை

ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரச்சினைகள் இருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஒவ்வொரு நன்மைக்கும், தீமைக்கும்  நாமே காரணமாய் இருப்பதை நாம் அறிந்து கொள்வதில்லை. அறிந்து செய்யும் செயலோ அல்லது அறியாமல் செய்யும் செயலோ, என்ன செய்தோமோ அதற்குரிய பலன் அது நன்மையோ அல்லது தீமையோ அனுபவித்து தான் ஆக வேண்டும். ஒரு துன்பம் வருகிறது என்றால் ஏன் வந்தது என்பதை அறிந்து கொண்டு விட்டால் பிரச்சினையின் மூலம் தெரிந்து விடும். பின்னர் எது வரினும் கவலை ஏன் வரப்போகிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எப்போதாவது நிழல்காலத்தில் வாழ்வதை உணர்ந்திருக்கிறோமா என்று கேட்டால் பெரும்பாலானோர் “ நிகழ்காலமா?, அப்படியென்றால்” என்று கேட்பார்கள். இது ஒன்றுமில்லை. எது செய்யினும் அத்துடன் ஒன்றியிருத்தல் என்பதுதான்.

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது வீட்டு நினைவோ அல்லது சினிமா நினைவோ அல்லது காதலிகள் நினைவோ வந்தால் என்ன ஆகும்? எங்காவது ஓரிடத்தில் காரை முட்டி விடுவோம். செய்யும் வேலையில் முழுக்கவனமும் இல்லையென்றால் “கெட்டது காரியம்”.  நிகழ்காலத்தில் வாழ்ந்து பாருங்கள்.வெற்றிப்படிக்கட்டு கண்ணில் தெரியும். இதுதான் வெற்றியின் சாவி. பூட்டைத் திறக்க சாவி கிடைத்து விட்டது. இனி என்ன? பூட்டைத் திறந்து வெற்றிப்படிக்கட்டில் ஏற வேண்டியதுதான் பாக்கி.

ஒரு ஜோக் உங்களுக்காக,

சிலர் எப்போதுமே ஒரே மனநிலையில் வாழ்வர். மனிதர்களுக்கு எதையுமே எஸ்ட்ரீமாக செய்வதுதான் வழக்கம். அப்படி ஒரு மனிதரைப் பற்றித்தான் ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஒரு புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணர் ஆப்பிரிக்காவிற்க்கு கானக பயணம் சென்றார். அவர் திரும்பி வந்தவுடன் அவரது தோழர்கள் பயணம் எப்படி இருந்தது எனக் கேட்டனர். அதற்கு அவர் அது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நான் ஒரு மிருகத்தைக் கூட கொல்லவில்லை. அதற்கு பதிலாக நான் இங்கேயே ஆஸ்பத்திரியில் இருந்திருக்கலாம். என்றார்.

நீ எங்கிருந்தாலும், எங்குசென்றாலும் நீ நீயாகவே, உனது மனமாகவே, உனது குறிக்கோளாகவே இருக்கிறாய். இங்கு இப்பொழுது என்பதே உனக்கு இல்லை.

இக்கதையில் இருக்கும் பிரச்சினை என்னவென்று உங்களுக்குப் புரிந்து விட்டால் இனி “வானம் கூட வசப்படலாம்”

Thursday, January 26, 2012

ஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல் விளக்கம்


நேற்றைக்கு முதல் நாள் இரவு ஒன்பது மணி போல நேஷனல் ஜியாகரபி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வுலகம் அணுக்களால் ஆனது என்றார்கள். குடிக்கும் தண்ணீருக்குள் கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றார்கள். எந்த அணுவும் அழிவதில்லை என்றார்கள். அது உருவம் மட்டுமே மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீருக்குள் மஹாத்மா காந்தியை உருவாக்கிய அணுக்கள் இருக்கலாம். அதாவது சுருக்கமாய்ச் சொன்னால் நாம் காந்தியைக் கூட குடித்திருக்கலாம்.

இந்து மார்க்கத்தில் ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்றும், உடல் மட்டுமே அழிகிறது என்றும் ஆனால் ஆத்மா அழிவதே இல்லை என்றும் விரிவாக எழுதி இருக்கின்றார்கள்.

ஆன்மீகத்தினைப் புரிந்து கொள்ள எளிதில் முடியாது என்று எனது நண்பர் ஒருவர் சொல்வார். ஆன்மீகத் தத்துவங்கள் பல அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. எனது வாழ்வில் நான் பல உண்மை ஆன்மீகவாதிகள், போலி ஆன்மீகவாதிகளுடன் பழகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஜீவாத்மாவிற்கு(மனிதனின் ஆத்மா) அழிவில்லை என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவ்வாக்கியம் எனக்கு குழப்பத்தையே இதுகாறும் தந்து கொண்டிருந்தது. ஆனால் அதை ஜியாகிரபிக் சேனல் நிவர்த்தி செய்து விட்டது.

ஆமாம் நண்பர்களே, ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக விபரத்திற்கு நீங்கள் நேஷனல் ஜியாகிரபிக் சேனலைத் துருவிப் பார்க்கவும்.

அணுக்களால் உருவம் மாற்றமடையுமே தவிர அந்த அணு அழிவதில்லை என்பதுதான் ஆத்மா அழிவதில்லை என்பதாகும். அதாவது அணுக்கள் ஒன்று சேர்ந்து மனிதனாய், விலங்காய், செடியாய், கொடியாய், புல்லாய், பூண்டாய், மரமாய், தண்ணீராய் மாறும். அதே அணுக்கள் பிறகு வேறொரு மாற்றம் பெரும். இதைத்தான் இன்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. இதைப் பற்றி முன்னே சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. அணுவை ஆத்மா என்றார்கள். அவ்வளவுதான். அதைத்தான் நாம் குடிக்கும் நீருக்குள் காந்தியை உருவாக்கிய அணுவோ அல்லது அன்னை தெரெஸாவை உருவாக்கிய அணுவோ இருக்கலாம். இதை வைத்துப் பார்க்கும் போது, முன் ஜென்மம் என்பதெல்லாம் இருக்க 100% சதவீத வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை, நம் ஆன்மீகத்தில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நினைக்கும் போது, ஆன்மீகத்தின் வழி சென்றால் அறிவியலில் என்னென்னவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம் என்று நம்பிக்கை வருகிறது.

இந்துக் கலாச்சாரத்தின் மேன்மைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது அல்லவா?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்