குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 28, 2010

வாழ்விற்கு தேவை சந்தோஷமா? பணமா?


இன்றைய காலச் சூழலில் மனிதர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். உடல் நலம், மன நலம் பற்றி மனிதர்கள் கொஞ்சம்கூட யோசிக்கும் திறமையற்றவர்களாய் காசுக்கு வேலை பார்க்கும் இயந்திரமாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள். லட்சங்களில் கொடுக்கப்படும் சம்பளம் பின்னர் மால்களின் மூலமாக வசூல் செய்து விடுகிறார்கள்.

வெறும் 200 ரூபாய் பொருமானமுள்ள சாதாரண டிசர்ட் 2000 ரூபாய்க்கு பிராண்ட் பெயரில் விற்கப்பட்டு கொள்ளை அடிக்கப்படுகிறது. பிராண்ட் மோகத்தில் அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே, ஏமாளிகளாய் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தனது ஈகோவினால் தனது உழைப்பை பிறர் திருடுகிறார்கள் என்பது தெரியாமல் ஏமாந்து போவதுதான் வேதனை.

வாழ்க்கை என்பது வேறு வகையானது. அது கொண்டாடப்பட வேண்டியது. மனித வாழ்க்கையின் தத்துவமே பிறருக்காக வாழ்வது தான். ஆனால் இன்றைய நவ நாகரீக மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

வெறும் பத்து செண்ட் நிலத்தில் தனக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக்கும் ஒரு விவசாயியின் பேட்டியைக் படித்துப் பாருங்கள். இந்த விவசாயிக்கு முதலாளி என்று எவரும் இல்லை. காலை 10 மணி இரவு 7 மணி என்ற கணக்கு இல்லை. தானே முதலாளி தானே தொழிலாளி என்று வாழும் இந்த விவசாயியை விடவா நீங்கள் சந்தோஷமாய் இருக்கின்றீர்கள்?



பசுமை விகடனில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பகுதியும், விவசாயியின் புகைப்படமும். நன்றி பசுமை விகடன்

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள சிங்கான்ஓடையைச் சேர்ந்த பாஸ்கரன் சொல்கிறார்.

''ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டுஇருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட்) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஓரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு. குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.

நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இருக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்துக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்னு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு, கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி... இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்'' என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன், பத்து சென்ட் நிலத்தில் புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.

புடலைச் சாகுபடி செய்வது எப்படி என்பது நமக்கு இவ்விடத்தில் தேவையில்லை. பாஸ்கரனின் உழைப்பு என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. உடல் நலம், குடும்ப நலம், சந்தோஷம் போன்றவைகளுக்கு மொத்த குத்தகைதாரராக அல்லவா இருக்கிறார். எங்கே இந்த சந்தோஷமும் நிம்மதியும் உங்களிடம் இருக்கிறதா என்பதை சற்றே நிதானித்து ஆராய்ந்து பாருங்கள்.

அன்புடன் - தங்கவேல் மாணிக்கம்

Tuesday, May 11, 2010

பிரேமானந்தாவுடன் ஒரு நாள்

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் - அலங்கார வளைவுகள், கொடிகள், தோரணங்கள் என்று கல்லூரி அதகளப்பட்டது. வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தேன். பதினோறு மணிவாக்கில் அனைவரும் கல்லூரிக்குள் இருக்கும் மேடைக்கு வரும்படி சர்க்குலர் வந்தது. என்னவோவென்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்குள் இருக்கும் ஹாஸ்டலுக்கு மூன்று சக்கர சைக்கிளில் சென்றேன். கேட்டில் வாட்ச்மேன் நின்று கொண்டு உள்ளே விட மறுத்தார். ஏன் என்று கேட்க, அனைத்து மாணவர்களும் சுவாமி பிரேமானந்தாவின் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று நிர்வாகத்தினர் உத்தரவிட்டதால் ஹாஸ்டல் ஒரு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார். வேறு வழி இன்றி மாமரத்தின் அடியில் இருக்கும் பெஞ்சு ஒன்றின் மீது தஞ்சமடைந்தேன். சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய மீன் குளத்தில்( ஆராய்ச்சிக்காக வளர்க்கின்றார்கள்) பெரிய பெரிய சைஸில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அதையடுத்து பச்சைப் பசேல் வயல்களில் பசுங்கதிர்கள் சலசலவென பேசிக்கொண்டிருந்தன. அதையும் தாண்டி நாகப்பட்டினத்திற்கு ரயில் ஒன்று ஓசையிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது. 

இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே சிவப்புக் கலர் கார் ஒன்றும் தொடர்ந்து பல கார்களும் வந்தன. காரிலிருந்து இறங்கினார் சுருள் முடி பிரேமானந்தா. அதைத் தொடர்ந்து இறங்கினார் திவ்யா மாதாஜி. மஞ்சள் கலரில் சேலை. பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் அழகு. இறங்கியவுடன் தன்னை வரவேற்ற கல்லூரியின் நிர்வாகிக்கு ஒரு ரோஜாவை வரவழைத்துக் கொடுத்தார். கல்லூரிப் பையன்களுக்கு திவ்யாவைப் பார்த்ததும் சுறு சுறுப்பு வந்து விட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு மேடைக்குப் பறந்தனர். கவனிக்க பறந்தனர். கூட்டமெல்லாம் நமக்கு ஒத்து வராது என்ற நினைப்புடன் மெதுவாக ஹாஸ்டலுக்கு மீண்டும் சென்றேன். வாட்ச்மேன் கதவைத் திறந்து விட்டார். அறைக்குச் சென்று ரீகிரியேஷன் ஹாலுக்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். சாமியார் வரப்போவதாக சொன்னார். சரி வரட்டும் என்று குமுதம் புத்தகத்தைக் கையெலெடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

சரியாக ஒரு மணி நேரம் சென்ற பிறகு பிரேமானந்தாவுடன் கல்லூரி நிர்வாகியும் அவர் கூடவே திவ்யா மாதாஜியும் வந்தனர். ரீகிரியேஷன் ஹாலைப் பார்த்தார். நான் பய பக்தியுடன் வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லி, ராஜா என்ன படிக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன். கண்ணை மூடினார் கையை தலைமீது கொண்டு சென்றார். விபூதியாய்க் கொட்டியது. நெற்றியில் கொஞ்சம் இட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பக்தியுடன் பரவசத்தில் ஆழ்ந்தனர். நன்றாகப்படி என்று சொன்னார். அவர் அறையினை விட்டு வெளியே சென்ற பிறகு பின்னால் வந்த திவ்யா மாதாஜி அருகில் வந்து எந்த ஊர், என்ன படிக்கின்றீர்கள் என்றெல்லாம் விசாரிக்க நானும் பக்தியுடன் பதில்களை உதிர்த்தேன். சிரித்துக் கொண்டே ஒரு கையால் தலைமுடியைக் கலைத்து விட்டு அவசியம் ஆசிரமத்திற்கு வரும்படி சொல்லிச் சென்றார்.

அதன்பிறகு நடந்த விஷயம் தான் முக்கியமானது.

அவர்கள் சென்ற பிறகு அறைக்கு வந்த என் தோழர்களும், நண்பர்களும் என் தலைமீது கொட்டப்பட்டிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டனர். ஆனால் வழக்கம்போல திவ்யாவைப் பாத்ரூமில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டனர் என்பது தான் மிகப் பெரிய சோகம். டெர்ம் எக்ஸாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். லீவு முடிந்து வந்து பார்த்தால் அனைவரும் நக்கீரனும் கையுமாய் அலைந்து கொண்டிருந்தனர். என்ன விஷயமென்று பார்த்தால் பிரேமானந்தா மாட்டிக் கொண்டார். திவ்யா தூர தேசம் ஓடினார் என்பது தான். வகையாக என்னையும் நண்பர்கள் சற்று வறுத்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்டிருந்த நல்லம்மா என்ற அழகு தேவதையை அவர் கற்பழித்த விஷயம் தான் இன்னும் என் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது. நக்கீரனில் வெளியிட்டிருந்த அப்பெண்ணின் முகம் அப்படியே இன்னும் என் நினைவில் இருக்கிறது.




Friday, May 7, 2010

பசு ஏறி காளை மரணம்

ஆபிதீன் அவர்ககளின் சிறுகதை “அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு” படித்த போது மட்டுமே நான் மிகச் சந்தோஷமாயிருந்தேன். சிறுகதையென்றால் சிறுகதைதான் போங்கள்.

அன்பு நண்பர்களே, உங்களுக்கும் நிச்சயமாய் சிரிப்பு வரும். படித்து விட்டு அவருக்கொரு பதிலெழுதிப் போடுங்கள். சுகமாயிருக்கும் அவருக்கு.

நன்றி ஆபிதீன் சார்.


link : http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html

Tuesday, May 4, 2010

நன்றி மறவாமை

கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில் பல பள்ளிகளும், இரண்டு பெண்கள் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறித் துறையின் மேற்பார்வையாளராகவும், ஆசிரியராகவும் நான்காண்டுகள் தொண்டு செய்து வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம்தானிது. மேற்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தாளாளராக இருந்தவர் திரு ஆத்மானந்தா அவர்கள். அறுபது வயது இளைஞர். என் வாழ் நாளில் இவரைப் போன்ற மன உறுதி கொண்டவரைக் கண்டதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புக் கொண்ட நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

மாதந்தோறும் இரண்டு தடவையாவது சாமியுடன் காண்டசாவில் சென்னை சென்று வருவேன். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்யூட்டர் நிறுவனத்தில் தான் மொத்தமாக உதிரி பாகங்களை வாங்கி வந்து அசெம்பிள் செய்து கல்லூரியில் கணிணி நெட்வொர்க்கில் இணைப்பேன். அசெம்பிள் என்ற உடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் இந்த சம்பவம்.

ஒரு தடவை ஹிந்து முன்னனி தலைவர் திரு ராமகோபாலன் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கொடுத்திருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பிறகு தான் அவரைச் சந்திக்க முடியும். அவர் தங்கி இருந்த ஹெஸ்ட் ஹவுஸ்ஸின் இடது பக்கத்திலிருக்கும் அறையில் தான் அடியேனின் வாசம். அறை முழுதும் கணிணி பாகங்களாக இறைந்து கிடக்கும். புதிய ஆள் எவராவது பார்த்தால் தீவிரவாதி வெடிகுண்டு தயாரிக்கிறான் என்றே நினைத்து விடுவார்கள். எஸெம்பிஎஸ் மற்றும் பாக்ஸ்களும், மானிட்டர்களுமாய் அறை நிரம்பிக் கிடக்கும். அதனூடே தான் படிப்பது, தூங்குவது எல்லாம்.

திரு ராமகோபாலனுக்கு காவலுக்கு வந்த காவல்துறை அதிகாரி அறையை நோட்டம் விட்டு படக்கென்று கதவைத் திறந்து துப்பாக்கியை நெஞ்சை நோக்கி நீட்டினார் பாருங்கள். அரண்டு விட்டேன். அதன் பிறகு விபரம் சொல்லி ஒரு வழியாக தப்பித்தேன். அன்றிலிருந்து அந்த காவல்துறை அதிகாரிக்கு என்மேல் கொள்ளை அன்பு. சாப்பிட்டீர்களா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதே போல நடு இரவில் ஒரு நாள் நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமம் இட்ட ஒருவரும் அவருடன் மற்றொருவரும் வந்திருந்தனர். வேறு அறைகளில் தங்குவதற்கு இடமில்லாத காரணத்தால் என் அறையில் தங்கியிருக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். இந்து முன்னணியின் ஏதோ ஒரு மாவட்ட தலைவராம் அவர். கூட வந்திருந்தவர் அவருக்கு துணையாக வந்திருப்பார் போல எண்ணிக் கொண்டிருந்த போது இடுப்பிலிருந்து கருப்புக் கலரில் துப்பாக்கியை எடுத்தார் பாருங்கள். நடு நடுங்கிப் போய் விட்டேன். என்னடா இது வம்பு என்று பயந்து கொண்டே அவரைப் பற்றி விசாரித்தேன். போலீஸ் என்று சொன்னார்.

இது போல எண்ணற்ற சம்பவங்கள் ஆஸிரம வாழ்க்கையில் நடந்தது. அதையெல்லாம் தனியாக நாவலாக எழுதலாமென்று இருக்கிறேன். மேலும் சாரு நிவேதிதாவுடன் மூன்று வருடங்களாக தொடரும் நட்பும் மிகப் பெரிய நாவலுக்கான விதையை ஊன்றி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பகவான் ராமகிருஷ்ணரை தரிசித்து விட்டு காரில் அமர்வோம். அதற்கு முன்பே சமையல்காரர் எழுந்து எனக்கும், சாமிக்கும், டிரைவருக்கும் தேவையான காலை உணவைத் தயார் செய்து காரின் பின்னால் வைத்து விடுவார். முதல் நாள் இரவே சென்னையிலிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின்(பிராஞ்ச்) நிர்வாகியிடம் போனில் நானும் சாமியும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விடுவேன். எனக்குப் பிடித்த காலிபிளவர் சாம்பாரும், ரசம்(SUPER TASTY) மற்றும் பிற உணவுப் பொருட்களை திரு நாராயணனந்தா அவர்கள் தன் கைப்படவே சமைத்து வைத்திருப்பார். உணவின் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

சரியாக ஏழு மணிக்கு கார் திருச்சி டூ சென்னை சாலையிலிருக்கும் ஒரு பத்ரகாளி அம்மன் கோவிலின் முன்னால் நிறுத்தப்படும். அங்குதான் எனக்கும், ஆத்மானந்தாவிற்கும் காலை உணவைப் பரிமாறுவார் டிரைவர். சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் உலாவுவார் ஆத்மானந்தா சாமி. நான் காரில் அமர்ந்திருப்பேன். கிளம்பும் தருவாயில் கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு உண்டியல் போட்டு விட்டு வருவார். பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். சமீபத்தில் என் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் சென்று வந்த போது ஒரு அம்மன் கோவிலில் காரை நிறுத்தி சாப்பிட்டோம். ரித்திக்கிடம் பணம் கொடுத்து உண்டியலில் சேர்க்கச் சொன்னேன். நிவேதிதாவையும், ரித்திக்கையும் அம்மனை தரிசிக்கச் சொன்னேன். என் நண்பர் என்னிடம் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அவருக்குத்தான் இந்தப் பதிவு.

Monday, April 26, 2010

மொழி

கனவுகளிடையே வழிந்தோடும்
எண்ணங்களின் நீட்சியாய்
இசையும் பேச்சுமற்ற
பெருவெளியில் நீயும் நானும்
ஏதும் பேசிக் கொள்ளாமலே
அமைதியாய் இருந்த போது
உன் அதரங்களில்
பாம்பு போல நெளிந்த
புன்னகை சொன்னது
மொழி என்பது
சத்தமல்ல என்பதை

*****

Monday, April 19, 2010

ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா?

ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா? (இது ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மட்டும்)

காலையில் சுமார் ஆறு மணி அளவில் ப்ளாக் டீ வித் நாட்டுச் சர்க்கரை. பால் வேண்டவே வேண்டாம். இடையிடையே டீயும், காஃபியும் வேண்டவே வேண்டாம்.

எட்டு மணி அளவில் இரண்டு அல்லது மூன்று எண்ணெய் சேர்க்காத கோதுமை தோசையுடன், புதினாவோ அல்லது கொத்து மல்லியோ அல்லது தக்காளியோ சட்னியாக இரண்டு டீஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளவும். கோதுமை தோசை, மாவு தோசை(இரண்டு மட்டும்), இட்லி இரண்டு மட்டும், சப்பாத்தி இரண்டு(கண்டிப்பாக எண்ணெய் தவிர்க்கவும்). மேலும் கொஞ்சம் பழங்கள் ஏதாவது சேர்த்துக் கொள்ளவும். சீசனுக்கு தகுந்தவாறு பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் சாப்பிடவும்

பின்னர் ஒரு மணிக்கு ஒரு கப் (400கிராம்) சாதத்தோடு, ஒரு கப் கீரை, ஒரு கப் காய்கறியை (கண்டிப்பாக உருளைக் கிழங்கு தவிர்க்கவும்) பருப்போடோ அல்லது குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ செய்து தேங்காய் தவிர்த்து சாப்பிடவும். இதே அளவில் டேஸ்ட் வேறு வேறாக வரும்படி செய்து சாப்பிடவும். கோதுமையில் சாதம் கூட சேர்க்கலாம்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.

இரவு எட்டு மணி அளவில் மீண்டும் கோதுமை தோசையோ அல்லது கோதுமை ரவையோ சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். ஊத்தப்பம் சேர்க்கலாம் அல்லது இடியாப்பம் கூட ஓகே. இரவில் குறைவாக உண்ணும் போது நடு இரவில் பசிக்கும். தண்ணீர் குடித்துக் கொள்ளவும். நாளடைவில் நிம்மதியான உறக்கம் நிச்சயம். குறட்டை வரவே வராது.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.
இது வரையிலும் ஒன்றரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் அருந்தியிருப்பீர்கள்.

மேலும் ஒரு லிட்டரை கூட சேர்த்தால் நாளொன்றுக்கு தேவையான மூன்று லிட்டர் தண்ணீர் தேவை முடிந்து விடும். ஆகையால் இடை இடையே கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

அதிக உப்பு, பால், வெள்ளைச் சர்க்கரை மூன்றையும் நிச்சயமாய் தவிர்த்து விடவும். வெள்ளைச் சர்க்கரை விஷம். இந்தச் சர்க்கரை சேர்த்த எந்த பொருளானாலும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து தவிர்த்து விடவும். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் அதற்கு பதில் அவித்த காய்கறிகளோடு கொஞ்சம் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்ளவும்.

மேலும் இரவில் படுக்கச் செல்லும் முன்பு இரண்டோ அல்லது மூன்று சுமாரான துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளியைச் சாப்பிடவும். காலையில் டாய்லெட் செல்லும் போது வயிற்றைச் சுத்தம் செய்து விடும். நோய் எதுவும் அண்டாது.

மேலும் சில அவசியக் குறிப்புகள் :

புளிக்குப் பதிலாக கொடபுளியை உணவில் சேர்க்கவும். இது கொழுப்பைக் குறைத்து விடும். நாட்டுக் காய்கறிகளைச் சுவையாக செய்து தரும்படி வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி வையுங்கள். உப்பு நாளொன்றுக்கு முக்கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சூடான இடத்தில் நின்று வியர்வை வெளியேறுமாறு செய்து கொள்ளவும். மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். அதற்கு மேல் சேர்த்தால் கொழுப்பு சேரும்.

மட்டன் வேண்டவே வேண்டாம். சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் இரண்டு துண்டு கொஞ்சம் குழம்பு சாப்பிடவும். இதற்கு பதிலாக தொடர்ந்து சற்றே எண்ணெய்,உப்பு தவிர்க்கவும். கோழியில் நாட்டுக்கோழி உத்தமம். மசாலா குறைத்து, எண்ணெய் குறைத்து சமைத்து வாரம் ஒரு முறை உண்ணலாம். மீனில் திருக்கை வேண்டாம். மற்றவை குழம்பு வைத்து சாப்பிடவும். வறுத்த மீண் வேண்டவே வேண்டாம். குழம்பில் கொடபுளியைச் சேர்க்கவும். காரம் கொஞ்சூண்டு சேர்க்கவும். சாம்பாரில் புளி கொஞ்சமாய் இருக்க வேண்டும்.

சாதத்தோடு மோர் சேர்க்கலாம். பசும்பாலில் ஆடை நீக்கிய மோர் நல்லது. தினமும் எக்சர்சைஸ் செய்ய வேண்டியது இல்லை. தேவையென்றால் நடக்கவும். அது போதும். காய்கறிகளில் நாட்டுக்காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகள் தேவையில்லை. தண்ணீர் சத்து அதிகமிருக்கும் உணவுகள் உத்தமம். வியர்வையில் நாம் உண்ணும் உப்பு வெளியேற வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் நூறாண்டுகள் நிச்சயம். இடையிடையே ஏற்படும் காய்ச்சல், சளி தொல்லைகளை எளிதில் சமாளித்து விடலாம். பெரு நோய்கள் வந்தால் வேதனையுடன், விரயமும் உண்டாகும். தமிழக அரசின் இலவச மருத்துவக்காப்பீடு இருக்கிறது என்று எண்ணி ஆப்பசைத்த குரங்காகி விடாதீர்கள் ஜாக்கிரதை.





Tuesday, April 13, 2010

சர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து



சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்
(கடல் கடந்த தமிழ் மருத்துவம் )


மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.


கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே'

அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.


நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.


இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.

இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.


சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.


சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.



நன்றி - தாகம்

Monday, April 12, 2010

புற்றுநோய்க்கு இலவச மருந்து

அன்பு நண்பர்களே,

என் நண்பர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் புற்று நோயினால் அவதிப்பட்டார். முட்கள் கொட்டி விட்டன. கைகால்கள் சிறுத்து விட்டது. சாப்பாடு குறைந்து விட்டது. சென்னையிலிருக்கும் மிகப்பிரபலமான மருத்துவமனையில் மாதந்தோறும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில்தான் ஒரு பச்சிலை மருந்தைப் பற்றி அறிய நேர்ந்து அதை உட்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் பச்சிலை இரத்தத்தில் கலந்து இருக்கும் புற்று நோய்க்கிருமிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுகிறது. சஃபாரி காரில் கோட் சூட்டுடன் தற்போது வெகு சந்தோஷமாய் வலம் வருகிறார்.

பச்சிலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அலோபதி மருத்துவத்தையும் தொடர்ந்தார். புற்று நோய்க்கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அவரின் வாழ்வாதார நாட்கள் அதிகரித்து விட்டன. பழையபடி ஆள் பெருத்து சரியாகி விட்டார்.

இந்த மருந்துக்கு காசு ஒன்றும் தர வேண்டியதில்லை. பச்சிலை கொடுக்கும் இடத்திற்கு சென்று வர வேண்டியது மட்டும்தான் செலவு.

உங்களின் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ மேற்படி புற்று நோய் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும். அந்தப் பச்சிலை எங்கு கிடைக்கிறது என்ற விபரத்தினை அனுப்பி வைக்கிறேன்.

எனது மெயில் அட்ரஸ் : thangavelmanickam@gmail.com


அன்புடன் தங்கவேல்

Sunday, March 14, 2010

ராமேஷ்வரம்

எனது நெருங்கிய நண்பருடன் குடும்பத்தோடு ராமேஷ்வரம் சென்று வந்தேன். கோவையிலிருந்து ராமேஷ்வரம் சென்று வர கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் தூரம்.

மாலை நேரம் 6.10க்கு பாம்பன் பாலத்தில் காரை நிறுத்தி இறங்கினேன். கடற்காற்று பிசிபிசுப்புடன் உடலைத் தழுவ இறுக்கமான மன நிலையிலிருந்த மனசு சட்டென லேசாகியது.

சுற்றிலும் கடல். நடுவே வானவில்லைப் போன்ற பாலம். தனித்தீவாய்க் கிடந்தது ராமேஷ்வரம்.

குளு குளுவென காற்று உடலைத் தழுவ, மாலை நேரத்துச் சூரியன் தகதகவென ஜொலிக்க அந்தக் காட்சிகளைக் கண்ணுற்ற மனசு ஆரவாரித்தது. கடலுக்குள் எழுந்து ஆர்ப்பரித்து வரும் அலைகள் சிறிது நேரத்தில் கடலுக்குள்ளேயே மரித்துப் போவதை பார்த்தேன். எல்லையற்ற பிரபஞ்சத்தில் தூசி அளவே இருக்கும் பூமியில் இரண்டடி அகலத்தில் இயற்கையின் கருணையின் காரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், அவர்களின் ஆசா பாசங்களையும், அதனால் உண்டாகும் பிரச்சினைகளையும், சக மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும், கோடி கோடியாய் பணக்கட்டுகளை பாதுகாப்பாய் வைக்க நினைத்து லாக்கர்களில் மறைத்து வைத்திருக்கும் மனிதர்களையும் நினைத்து சிரிப்புதான் வந்தது. கடலுக்குள் எழுந்து காணாமல் போகும் அலைகளைப் போலே சடுதியில் விதியென்னும் கயிற்றில் உயிரினை விட்டு அம்போவென போவும் மனிதர்களுக்குத் தான் எவ்வளவு ஆசைகள், கொலை வெறி.

தலையில் வெளிச்சப்பொட்டாய் விளக்கு ஒளிர அமைதியாய் சென்னை செல்லும் ரயில் வண்டியொன்று ரயில் பாலத்தில் ஊர்ந்து சென்றது.

ஹோட்டல் ஒன்றில் தஞ்சமடைந்தோம்.

18 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடந்த கோவில். கோவிலின் வரலாறு என்ன? ஏன் அங்கு செல்ல வேண்டும்? அதனால் என்ன பலன்? இப்படி இன்னும் பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்வோம். படிப்பவருக்கு கொஞ்சமேனும் உதவிகரமாய் இருக்கும் இனி வரும் பதிவுகள்.


விரைவில் தொடரும்

Tuesday, February 2, 2010

தகப்பனுக்கும் தாய்மை உண்டு

என் மகள் நிவேதிதா நாப்தலீன் பால்ஸை சாப்பிட்டு விட்டு மயக்கமாகி விட்டாள். வாயில் நுரை தள்ளியது.

டாக்டர் காப்பாற்றுவது கடினம் என்றார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது என்னை மீறி. கைகள் சோர்ந்து விட்டன. மனசு செத்துப் போய் நடை பிணம்போல ஆகி விட்டேன்.

வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த பல பெற்றோர் என் கண்களிலிருந்து தானாக வடிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு உள்ளம் துடித்து அவரவரும் வந்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

விடிகாலை இரண்டு மணி. லேப் டெஸ்ட்டில் நாப்தலீன் பால்ஸ் என்ற விபரம் தெரிய, டாக்டர் என்னிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு ”கவலைப் படாதீர்கள் தங்கம், சாதாரண பிரச்சினைதான், குழந்தைக்கு ஒன்றுமில்லை இப்போதாவது உங்கள் கண்ணீரை துடையுங்கள்” என்றார்.

தாய் தன் இரத்தத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறாள். தந்தை தன் ஆன்ம பலத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறான்.

தாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை சொல்லுகிறது இப்பாடல்.


">

தந்தைக்கும் தாய்மை உண்டு என்பதைச் சொல்லுகிறது கீழே வரும் பாடல்.

">