குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, November 12, 2011

சிவன்-எமன்-உணவு

 (ராமேஸ்வரம் ஆயிரம் கால் மண்டபம்)
 
சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று வர சந்தர்ப்பம் கிடைத்தது.  காவிரி புரண்டோடும் இயற்கை கொஞ்சும் அழகிய பூமியான தஞ்சாவூரில் இருக்கும் எனது நெருங்கிய நண்பரொருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பரின் அம்மா, வெகு ஆச்சாரமானவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொல்லியது கீழே.

மனிதர்களின் ஆயுள் முடிந்த பிறகு எமன் வந்து பாசக்கயிற்றை வீசி மேலே அழைத்துச் செல்வானாம். அப்போது ஒவ்வொருவரும் எமனைத் திட்டியும், வைதும், பழி போட்டும், இன்னபிறவும் செய்து கடிந்து கொள்வார்களாம். உனது காலம் முடிந்து விட்டது, வா போகலாம் என்றழைத்தாலே வசைமாரி பொழிவார்களாம். எமனுக்கோ ஒரே அவஸ்தை. நானும் ஒரு கடவுள் தானே. தர்மத்தின் தலைவன் அல்லவா நான். என்னை மட்டும் மக்கள் இப்படி வைகின்றார்களே என்ற ஆதங்கத்தில், சிவபெருமானிடம் மக்கள் ஏன் என்னை மட்டும் திட்டுகின்றார்கள், இதற்கொரு வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அதன்பிறகு சிறிது நேரம் யோசித்த சிவபெருமான், எமனிடம் இனிமேல் மக்கள் உன்னைத் திட்டமாட்டார்கள் என்றுச் சொல்கிறார். எப்படி என்று உங்களுக்குப் புரிகிறதா?

இன்றைய காலத்தில் ஆக்சிடெண்டில் இறந்து போய் விட்டார், ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் விட்டார், காய்ச்சலில் போய் விட்டார், புற்று நோயில் போய் விட்டார், கிட்னிப் பிராப்ளத்தில் போய் விட்டார் என்றுச் சொல்கிறார்கள். எவரும் எமன் கொண்டு போய் விட்டான் என்றுச் சொல்ல மாட்டார்கள். இங்குதான் பகவானின் சூத்திரம் இருக்கிறது என்றார் நண்பரின் அம்மா.

எமனின் வேண்டுகோளினை ஏற்று மனிதர்களுக்கு நோயை உண்டாக்கினார் சிவபெருமான். அன்றிலிருந்து எவரும் எமனைத் திட்டுவதில்லை என்றார். நோய் ஏன் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள். உணவு, காற்று இவற்றிலிருந்து தான் நோய் வருகிறது. ஆக மனிதனுக்கு நோயை அவன் உண்ணும் உணவின் மூலமாக உண்டாக வைத்தார் சிவபெருமான் என்று முடித்தார் அம்மா.

நண்பர் சாப்பிடலாம் வாங்க என்று அழைக்க, சாப்பிடச் சென்றேன்.

வடை, பாயசம், சாம்பார், ரசம், தயிர், உருளைக் கிழங்கு பொறியல், வாழைக்காய் வறுவல், மரவள்ளிக் கிழங்கு பொறியல், கீரை என்ற மெனுவைப் பார்த்தேன். அம்மாவைப் பார்த்தேன். சிவபெருமானும் எமனும் மனதுக்குள் நிழலாடினார்கள்.

- கோவை எம் தங்கவேல்.