குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, September 8, 2016

தாய் மொழி என்று அழைக்காதீர்கள்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்காக ஆன்லைனில் செய்தால் ரிஜெக்டட் என்றே வருகிறது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பிரச்சினை. ஆகையால் கோவை பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தின் வளாகத்தில் இருக்கும் ஏஜென்சியை அணுகினேன். ஐம்பது ரூபாய் கட்டணம் பெறுகின்றார்கள். பெட்ரோல் செலவு வேறு. மதியம் உணவுச் செலவு வேறு. எப்படியும் இருநூறைத்தாண்டி விடுகிறது. இதுவே தின வேலைக்குச் செல்பவராக இருந்தால் ஒரு நாள் சம்பளம் போய் விடும். 

தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இங்குள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் அப்ளை செய்ய வேண்டுமாம். சித்ராவில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகம் நார்மலாக பாஸ்போர்ட் அப்ளை செய்பவர்களுக்கானதாம். இரண்டு அலைச்சல்.

எனக்கு பாஸ்போர்ட் ரினிவல் செய்யும் போது ஆன்லைனில் புக்கிங்க் செய்தேன். அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததும் நேரில் சென்றேன். கைரேகை, போட்டோ எடுத்தார்கள். கட்டணத்தை அங்கேயே செலுத்தி விட்டேன். பதினைந்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வீடு வந்து சேர்ந்து விட்டது. 

இந்த வளாகத்தில் இருந்த ஒரு ஏஜென்சியில் ஆன் லைன் அப்ளை செய்வதற்கும், இன்ன பிற வேலைகளுக்கும் 2500 ரூபாய் ஆகும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். அப்படியா என வாயில் ஈ போவது கூட தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கசங்காத சட்டை போட்டு விரைப்பாக நின்றவர். 

அப்போது ஒரு காரிலிருந்து காச் மூச்சென்று சத்தம் கேட்டது. என்னவென்று திரும்பிப் பார்த்தால் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்மணி ஆகியோர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி என்னைப் பார்ப்பதும் பின்னர் ஆங்கிலத்தில் அந்தக் குழந்தைகளை திட்டுவதுமாக இருந்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடுகின்றாராம். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேனாம். இது தெரியாத அந்தக் குழந்தைகள் இருவரும் தமிழில் அம்மா, அம்மா எனப் பேச ஆரம்பிக்க அதற்கும் திட்டு விழுகிறது. என்ன சொல்லித் திட்டுகிறார் தெரியுமா? ”லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வைக்கின்றேன், தமிழிலா பேசுகின்றீர்கள்?”.

அதன் பிறகு அந்தக் குழந்தைகள் இருவரும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தனர். அந்தப் பெண்மணியின் புருஷன் என்னிடம் வந்து பேசினார். ”நீங்கள் தமிழரா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ”நான் பச்சைத் தமிழன்” என்று பெருமையாகச் சொன்னார். 

நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறோம், நாட்டையே தாய் நாடு என்கிறோம். மொழியை தாய் மொழி என்கிறோம். அம்மா என்றால் பெரும்பான்மையான பெண்களுக்கு கசக்கிறது. மம்மி என்று தான் அழைக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். கிராமத்திலிருக்கும் பெண்களை விடுங்கள். நகரத்தில் இருக்கும் பெண்கள் என்ன செய்கின்றார்கள் என்று யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழில் பேசினால் என்ன? ஏன் அதைக் கூடச் செய்ய தயங்குகின்றார்கள் இந்தப் பெண்கள்? வெற்று ஈகோவினால் என்ன கிடைக்கப்போகின்றது? இந்த தற்பெருமையினால் கிடைக்கப்போகும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை. வெற்றுப்பெருமை.

தாய் மொழி என்று இனிச் சொல்லவே கூடாது என நினைத்தேன். இந்த எரிச்சலில் இருந்த போது குஜராத் சிங் ஒருவர் வெகு அழகாக போனில் யாரோ ஒருவருடன் தமிழில் பேசிக் கொண்டே நடந்து சென்றார். சில்லென்று இருந்தது.

தமிழை யாரும் வளர்க்க வேண்டாம். தமிழால் தான் பலரும் பிழைக்கின்றார்கள் என்ற சிந்தனை மேலோட வீட்டுக்குத் திரும்பினேன்.

தமிழ்ப் பெண்களே, வீட்டிலிருக்கும் போது உங்கள் குழந்தைகளைத் தமிழில் பேச வையுங்கள். தமிழ் பேப்பரை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். ஆங்கிலம் என்பது வயிற்றுப் பிழைப்புக்கு என தெளிவாகச் சொல்லிக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவை அம்மா என்று தான் அழைத்தீர்கள் என்பதினை மறந்து விடாதீர்கள். எங்கெங்கும் ஆங்கிலத்தில் பேசுவது அடிமைத்தனம். வேலையின் போது, படிக்கும் போது ஆங்கிலத்தில் பேசினால் போதுமே. 

கணபதி, பாரதி நகரில் இருக்கும் கிராமத்துக்கடையில் ராகிக்களியும், காரப்புளிக்குழம்பும், மிளகாய் வற்றலும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.  ”சார், கருவாட்டுக்குழம்பு இருக்கிறது, அதையும் பார்சல் செய்து தரவா?” என கேட்டார்கள். 35 வயது வரை சாப்பிட்ட கருவாட்டுக்குழம்பின் வாசம் திடீரெனெ நினைவுக்கு வர பெருமூச்சு தான் வெளிப்பட்டது. சென்று வா கருவாட்டுக்குழம்பே என மனம் அதற்கு விடை கொடுத்து நீண்ட நாட்களாகி இருந்தன.

ஆதார் கார்டில் முகவரி மாற்ற செய்ததில் மீண்டும் ஒரு தவறு நேர்ந்திருக்கிறது. இன்றைக்கும் மறுபடியும் செல்ல வேண்டும்.

Monday, September 5, 2016

ஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

எங்க ஊர் பக்கம் இப்படித்தான் சொல்வார்கள். உழுவும் ஏர் இதற்கு இன்னொரு பெயர் கலப்பை. கொழு என்றொரு வஸ்து இருக்கும். அது கலப்பை மரத்தின் நுனியில் இரண்டு போல்டு போட்டு இணைத்திருப்பார்கள். மொத்தமாக நான்கு மரத்துண்டுகள் தான். நுகத்தடி தணி. 


இதோ இப்படித்தான் இருக்கும் ஏர் கலப்பை. நுகத்தடியில் மாடுகளைக் கட்டி கைப்பிடியை அழுத்திட மாடுகள் முன்னே செல்ல, கொழு மண்ணைக் கீறி இரண்டு பக்கமும் மண்ணைத் தள்ளும். வடம் பிடித்தல் என்றுச் சொல்வார்கள். அதாவது மாடு திருப்புவதற்கு வசதியாக நீண்ட அகலமான செவ்வக வடிவத்தில் முதலில் ஏரோட்டி பின்னர் நான்கு ஐந்து வரிசைகள் உழுத பிறகு அடுத்த இணைச் செவ்வகத்தினை உருவாக்கி உழுவார்கள். வெற்று வயலில் உழுவது இப்படித்தான். சேறடிக்கும் போது வேறு மாதிரி உழுவார்கள்.

குறுவைச் சாகுபடி வருவதற்கு முன்பே போஸ் ஆசாரியைக் கூட்டி வருவான். அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு குடி ஆசாரிகள் என தனியாக இருப்பார்கள். ஒவ்வொரு பொங்கலின் போது அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் புத்தம் புதிய அகப்பையைத் தான் பயன்படுத்துவோம். எங்கள் குடும்பத்திற்கு நெடுவாசல் கருப்பன் ஆசாரி தான் வருவார். புதுக் கொழு வாங்கி வந்து இணைப்பார்கள். இரண்டு ஏர் கலப்பை இருக்கும். ஏதாவது உடைந்து விட்டால் அடுத்த ஏர் கலப்பையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?


பெரிய வண்டிமாடு ஜோடி ஒன்று, கட்டை மாடுகள் ஜோடி ஒன்று என இரண்டு ஜோடிகள் இருக்கும். மாட்டு வண்டியில் சக்கரத்தில் பழைய ஆயிலுடன் காட்டன் துணியை ஊற வைத்து சக்கரத்துக்குள் நுழைத்து, வண்டிச் சக்கரங்கள் எளிதாக சுழல ஏற்பாடு செய்வான் போஸ். 

இப்படித்தான் ஏற்பாடுகள் நடக்கும். உழவு செய்வதற்கு முன்பு வீட்டில் சேரும் குப்பையை வண்டியில் கொண்டு போய் வயலில் கொட்டி நிரவி விட வேண்டும். அதன் பிறகு உழவு செய்ய வேண்டும். இரண்டு முறை உழவு செய்வார்கள். பின்னர் சேற்று உழவு செய்வார்கள். 

நாற்றங்கால் உழவுக்கு கிட்டப்பிடித்து உழ வேண்டும். ஊற வைத்து முளை கட்டின நெல்மணிகளை நாற்றங்காலில் பாவ வேண்டும். அது முளைத்து பயிராகி நிற்கும் போது, அதைப் பிடுங்கி வயல்களில் நடவு செய்ய வேண்டும். பிறகு களை எடுக்க வேண்டும். உரமிட வேண்டும். பூச்சிகள் வராதவாறு மருந்து அடிக்க வேண்டும். வயலில் தண்ணீர் காயக்காய தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கதிர் விளைந்து நிற்கும் போது அறுவடை செய்து நெல்மணிகளை நீக்கி சுத்தம் செய்து கோணியில் இட்டு வீடு வந்து சேர்க்க வேண்டும். தக தகவென தங்கமென மின்னும் நெல்மணிகளை பத்தாயத்துக்குள் சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு சேகரித்த நெல்மணிகள் அடுத்த விவசாயம் செய்வதற்கு முன்பு வியாபாரிகளிடம் விலை பேசி விற்போம். கிட்டத்தட்ட முன்னூறு மூட்டைகள் விற்பனை செய்வோம். அது தவிர சாப்பாட்டுக்கு தனியாக இருக்கும். வீட்டில் இருந்த இரண்டு பத்தாயங்கள் (பாக்ஸ் வடிவ மரப்பட்டி - நூறு மூட்டைகள் நெல் மணிகள் சேகரிக்கலாம்).

சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கலப்பை இற்றுப் போய் கிடந்தது. கொழுவில் மாட்டி இருந்த போல்டுகள் துருப்பிடித்திருந்தன. பத்தாயங்கள் காணவில்லை. மரம் உழுத்துப் போய் விட்டதாம். நெல் அவிக்கும் வெங்கல அண்டா மட்டும் இருந்தது. அதைத் தூக்கவே நான்கு ஆட்கள் வேண்டும். அவ்வளவு கனமான அண்டா அது.

ஏர் கலப்பையோடு நடந்து நடந்து உடம்பு உரமாகி இருந்த உழவர்கள் எல்லாம் இப்போது சர்க்கரை வியாதியில் சிக்குண்டு இருக்கின்றார்கள். விடிகாலை நான்கு மணிக்கு உழ ஆரம்பித்து மதியம்  ஒரு மணிக்குள் உழவை முடித்து ஆற்றில் குளித்து வீடு வரும் உழவனை இனிக் கண்ணால் காண முடியுமா? காவிரி வறண்டு போனது. உழவு செய்ய தண்ணீரைத் தர மாட்டேன் என்கிறார்கள். மாறிப்போன மனிதர்களும் மாறவே மாறாத அரசியலும் இருக்கையில் என்ன ஆகப்போகின்றது?

அடுத்த தலைமுறைக்காக இந்தப் பதிவு எழுதுகிறேன் மன வலியுடன்.

Wednesday, August 31, 2016

நான் தாத்தாவாகப் போகின்றேன்

அண்ணன் முத்துகிருஷ்ணனின் மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஒரு பெண் வேமங்குடியில் வாழ்க்கைப்பட்டிருக்கிறது. ஆவணம் அருணாசலம் மாமா வீட்டுக்குப் பின்னால் தான் இரண்டாவது பெண் வாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் எனக்கு மகள்கள் அல்லவா? நான் சித்தப்பா அல்லவா?

அம்மு பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன்,”அம்மு உன்னை ஒருத்தர் சித்தின்னு அழைக்கப்போகிறார்! ரித்திக் நீ மாமாவாகப் போகின்றாய்!” என்றார்.

அம்மு. ‘என்ன? என்ன?’ என்று கேட்டு விழித்தது. ரித்திக் சிரித்தான்.

”ஆமா அம்மு, உன் அக்காவிற்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆகையால் நீ சித்தி தானே?” என்றார்.

ஒரே சிரிப்பு அம்முவுக்கு.

என்னைப் பார்த்தார். எனக்குத் திக்கென்றது. பக்கத்தில் கோதை உட்கார்ந்திருந்தார்.

’நீ தாத்தாவாகப் போகிறாய் தங்கம்’ என்றார் அண்ணன்.

கோதை என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.

”நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது, எனக்கு அண்ணணும் இல்லை, தம்பியும் இல்லை” என்றேன் படக்கென்று.

சிரி சிரியென சிரித்து விட்டு எங்கள் குடும்ப வரலாற்றினைச் சொல்ல ஆரம்பித்தார். அது தனி பதிவில் (குடும்ப வரலாறு பகுதி 1)

இனி என்ன ஆகப்போகின்றது? நான் தாத்தாவாகப் போகின்றேன். வேறு வழியே இல்லை. நான் தாத்தா தான்.

குடும்ப வரலாறு பகுதி 1

தாத்தாவின் தாத்தா பெயர் என்ன? என்று கேட்டால் கிட்டத்தட்ட அனைவரும் விழி பிதுங்கி விடுவார்கள். அந்தக் காலத்து ராஜாக்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நாம், நமது குடும்ப முன்னாள்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. வயதாகி விட்டாலே போதும், ஓரமாய் ஒதுக்கி விடுவோம். இறந்து போனால் நினைவில் வைத்துக் கொள்ளவா போகிறோம்?

அண்ணன் முத்துகிருஷ்ணன் களத்தூரிலிருந்து வந்திருந்தார். முள்ளங்கி சாம்பார், சுண்டல்காய் புளிக்குழம்பு, தக்காளி ரசம், வாழைக்காய் வறுவல், பாகற்காய் இனிப்பு பொறியல், ஆதண்டங்காய் வற்றல், எலுமிச்சை  ஊறுகாய், தயிர் என அவருக்கு உணவு அளித்தோம். திருப்தியாக உண்டு விட்டு அரை மயக்கத் தூக்கத்திலிருந்தார். மூன்று மணி வாக்கில் எழுந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். ஊர்க்கதை தான். அப்போது தான் எங்கள் குடும்பம் பற்றி பேச்சு வந்தது. ’அண்ணே, நீ எப்படி எனக்குச் சொந்தம்?’ என்று ஆரம்பித்தேன். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லை, தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை இவற்றில் இருப்பது ஆவணம் கிராமமும், நெடுவாசல் கிராமமும். நெடுவாசல் எனது ஊர். ஆவணம் அண்ணன் ஊர். இனி எங்க குடும்ப உறுப்பினர்கள் விவரம்.

ஆப்புநாததேவர், ஏயி என்கிற ஏகாத்தாள், அலமேலு, ஆவா நால்வரும் சகோதர சகோதரிகள். ஆவணத்தில் பிறந்தவர்கள். இவர்களின் அப்பா அம்மா பெயர் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.

ஆப்புநாததேவருக்கு இரண்டு பையன்கள் அவர்கள் பெயர் சம்மள மாணிக்கதேவர் மற்றும் சுப்பையா தேவர் என இரு பையன்கள்.

ஏயி என்கிற ஏகாத்தாளை கட்டிக் கொடுத்தது நெடுவாசல் கிராமத்தில் இவரின் கணவர் பெயர் அருணாசலதேவர். இவர்களுக்கு நாடி மாணிக்கதேவர், ராமசாமி தேவர், ராமாயி, சின்னப்பிள்ளை மற்றும் வள்ளி என ஐந்து குழந்தைகள். ராமசாமி தேவர் சிறு வயதில் காலரா வந்து இறந்து போய் விட்டார். ராமாயியை நெடுவாசல் தெற்குத் தெருவில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஏதோ சண்டை வந்து காஞ்சிராத்தி இலையை அரைச்சுக் குடிச்சிட்டு செத்துப் போச்சாம்.

அலமேலுவை ஆவணத்தில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷன் பேரு முத்துக்கருப்பண்ணதேவர். இவர்களுக்கு ஆவுடைத்தேவர் மற்றும் சிவந்தி மாணிக்கதேவர் என்று இரு பையன்கள். 

ஆவாவை வேமங்குடியில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷன் பேர் என்னன்னு தெரியவில்லை, விசாரிக்கணும். இவருக்கு ராமதேவர், விசாலாட்சி மற்றும் மன்னார்குடியில் செட்டிலான ஒரு டாக்டர் (இவரின் பெயரும் தெரியவில்லை) ஆக மூன்று குழந்தைகள்.

ஆப்புநாததேவர் பையன் சம்மள மாணிக்கத்தேவருக்கு நெடுவாசல் ஏகத்தாளுக்குப் பிறந்த சின்னப்பிள்ளையை திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு குழந்தைவேலு, குட்டியம்மாள், அருணாசலம் மற்றும் ருக்குமணி என நான்கு குழந்தைகள்.

ஆப்பு நாததேவர் அடுத்த பையன் சுப்பையாதேவருக்கு வேமங்குடியில் கட்டிக் கொடுத்த ஆவாவின் மகள் விசாலாட்சியை திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு ஒரே ஒரு பையன் அவர் பெயர் சிங்காரவேல்.

நெடுவாசலில் கட்டிக் கொடுத்த ஏயி என்கிற ஏகாத்தாளின் மகன் நாடி வீட்டு மாணிக்கதேவருக்கு ஆவணம் சம்மள மாணிக்கதேவருக்கும் சின்னப்பிள்ளைக்கும் பிறந்த குட்டியம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கொடுத்தார்கள். சொத்து ஆள வாரிசு இல்லையென்பதால் தனது தங்கை மகளான குட்டியம்மாளை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஞானேஸ்வரி, ஜானகி, தங்கவேல், டிம்பிள்கபாடியா என நான்கு வாரிசுகள். நாடி மாணிக்கதேவரின் முதல் சம்சாரத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த பெண்ணை ஆவணம் சம்மள மாணிக்கதேவரின் மூத்த பையன் குழந்தைவேலுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். குழந்தைகள் ஏதுமின்றி இறந்து போனார். இரண்டாவது மகள் காளியம்மாளை நெடுவாசலில் இருந்தவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு பழனிவேலு, அலமேலு இரண்டு வாரிசுகள்.

அடுத்து ஏகாத்தாளின் மகள் வள்ளியம்மையை வீரியன்கோட்டையில் கட்டிக் கொடுத்தார்கள். இவரின் வீட்டுக்காரர் பெயர் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். இவர்களுக்கு வீராயி, செவையாள், வீரப்பன், குட்டியப்பன், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என்று ஏழு வாரிசுகள்.

ஆவணத்தில் கட்டிக் கொடுத்த அலமேலு மகன் ஆவுடைத்தேவருக்கு முத்துலட்சுமி (நெடுவாசல்), ராஜேஸ்வரி (பைங்கால்), முத்துகிருஷ்ணன் (ஆவணம்), செல்வராணி (பூக்கொல்லை), மஞ்சுளா (துறையூர்), இந்துமதி (ஆண்டாகோட்டை) ஆகிய ஆறு வாரிசுகள்.

ஆவணத்தில் கட்டிக் கொடுத்த அலமேலுவின் இரண்டாவது மகன் சிவந்தி மாணிக்கதேவருக்கு செண்பகவல்லி(சென்னை), ராஜ்குமார் (மலேசியா மிலிட்டரியில் வேலை திருமணமில்லை), காந்திமதி (சென்னை), குணசுந்தரி (மலேசியா), ஜெயபாரதி (மலேசியா), சரவணன் (மலேசியா) என ஆறு வாரிசுகள் இருக்கின்றனர். இதில் சமீபத்தில் தான் செண்பகவல்லி சென்னையில் காலமானார்.

ஆவணம் ஆப்பு நாததேவரின் மகன்களில் சுப்பையாதேவரின் மகன் சிங்காரவேலுவிற்கு வேமங்குடியிலிருந்து பெண் எடுத்தார்கள். மனைவி பெயர் பானு. இறந்து விட்டார். இவர்களுக்கு ஜெயம் என்கிற ஃபேமஸ் ஸ்டார்னி, சின்னப்பொன்னு என்கிற செஸ்மின் வாணி, ஃப்ரான்சிஸ்காசன் மற்றும் சிஸ்பான் விசாலம் என்கிற நான்கு வாரிசுகள். தலையைச் சுற்றுகிறதா? மாமா குசும்பு பிடித்தவர். பிள்ளைகளின் பெயர்களைப் பார்த்தீர்களா? 

இது முதல் வாரிசு குடும்ப விவரம் அடுத்த தலைமுறை வாரிசுகளை எல்லாம் விசாரித்து அடுத்த பதிவில் எழுதுவேன். எங்கள் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 25, 2016

அழகன்

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தது. அடுத்துப் படிக்க வேண்டும். எல்லோரும் டி.பார்ம் படித்து விட்டு மெடிக்கல் வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அக்கா தஞ்சை அதிமுக மாவட்ட பிரதிநிதி. சேவல் சின்னத்தில் போட்டியிட்ட குழ.செல்லையா மாமாவுக்கு நெருக்கம். ரெகமெண்டேசன் கடிதம் பெற்று தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் டி.பார்ம் சேர முயற்சித்தேன் கிடைக்கவில்லை. 

வீட்டுக்கு பின்னால் ரங்கசாமி அண்ணன் இருந்தார். அவரைச் சந்திக்கச் செல்வதுண்டு. அப்போதே வேதாந்தமாகப் பேசுவார். அவர் என்னிடம் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தையும், பகவத் கீதையையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

அதுவரை மாலைமதி, ராணிமுத்து, ராஜேஷ்குமார், சுபா (எனக்குப் பிடித்த நாவல் தங்கக் கொலுசு மற்றும் தூண்டில் முள்), குமுதம் வகையறாக்களே எனக்குத் தெரியும். ஒரு புது உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ரங்கசாமி அண்ணனுக்கு நன்றி.


உள்ளே இழுத்துக் கொண்டார் கண்ணதாசன். கண்ணனைப் பற்றிய அவரது புலம்பல் கண்ணன் மீது மாறாப்பற்றுக் கொள்ள வைத்தது. கண்ணனைத் தேடினேன். அப்போதெல்லாம் இணையம் ஏது?  காணும் புத்தகத்திலெல்லாம் கண்ணன் படம் கிடைத்தால் கட் செய்து வைத்துக் கொள்வேன். தூண்டிக்காரன் பத்ரகாளி, வீரபத்திரர் என்று தேவர் இனத்தின் அடையாளங்களை விட்டு விட்டு என் மனம் கண்ணனைத் தேடியது. ஜெயதேவரின் அஷ்டபதியில் ராதே கண்ணன் பற்றி கண்ணதாசனின் எழுத்துக்கள் மோகப்படுத்தியது. விடாது தேடினேன் கண்ணனை.

ஒரு வழியாக கரூர் ராமகிருஷ்ண மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பொழுது கண்ணன் பற்றிய அத்தனைப் புத்தகங்களையும், பாடல்களையும் விடாது கேட்க ஆரம்பித்தேன். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கெளதமானந்தரையும் விடவில்லை. எனக்கு ராமகிருஷ்ண கோவிலில் மந்திர தீட்சை கொடுத்த பேலூர் மத்தின் தலைவர் எனது குரு காலம் சென்ற ரங்கநாதனந்தரையும் விடவில்லை. ஆஸ்ரம தலைவர் ஆத்மானந்தா அவர்கள், ’ஏனப்பா கண்ணன் மீது இவ்வளவு பற்று?’ என்று கேட்டு விட்டு அவனைப் பற்றிய புத்தகங்கள், பாடல்கள் எங்கு கிடைத்தாலும் கொண்டு வந்து கொடுப்பார்.

கண்ணனில் மூழ்கி கிடந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கடவுள் பற்றிய ஒரு தெளிவான முடிவிற்கு வந்து விட்டேன். ஆனால் இந்தக் கண்ணன் மீதான ஈர்ப்பு மட்டும் இன்றைக்கும் என்னை விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு அவனைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். கண்ணனின் வாழ்க்கை சொல்வது வேறு ஏதோ. அது என்னவென்று உணர வேண்டும் . ஓஷோவின் பகவத் கீதை ஒரு தரிசனம் மற்றும் அஷ்டவக்ர மகா கீதை புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். காலம் வரட்டும்.

இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உங்களுக்காக இரண்டு பாடல்களை இங்கு இணைப்புக் கொடுக்கிறேன். கேட்டுப்பாருங்கள். மனதை அள்ளி விடுவான் கிருஷ்ணன்.





ராகுல், சிந்துஜா மற்றும் மிருளாளினியின் குரல்களின் வழியே கண்ணனின் அன்புக் கரங்களின் தழுவலில் மனது ஒடுங்கி நிற்கும் அற்புதத்தை அவசியம் அனைவரும் உணருங்கள். இசை வழியே உள்ளத்துக்குள் ஊடுறுவும் அற்புத தரிசனத்தை ஒரு நொடி உணருங்கள். மாயவன் அழகனாய் மனக்கண்ணுக்குள் வெளிப்படும் ஆனந்த தரிசனத்தை உணருங்கள்.

- கோவை எம் தங்கவேல்.



Monday, August 22, 2016

2016 கோவை புத்தக திருவிழாவில் ஒரு நாள்

பொழுது புலரும் முன்பு எழுந்து கொள்வேன். ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீர். கொழுப்பைக் குறைக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும் என நண்பர் சொல்லி இருந்தார். டீ, காபி, சுக்கு மல்லிக்காஃபி எல்லாம் போயிடுச்சு. வழக்கம் போல உழவர் சந்தைக்குச் செல்லாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். மனையாள் சந்தைக்குச் சென்று விட்டார்.

வீட்டில் சுத்த சைவம். இலை தழைகள் தான். உறவினரும், நண்பர்களும் வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை. அப்படி வந்தாலும் ஒரு நாள் அதிகபட்சம் இரண்டு நாட்கள். விட்டால் போதும் என ஓட்டம் பிடிப்பார்கள். காரம், புளி இல்லாமல் அரை உப்புச் சாப்பாடு என்றால் எவர் தான் இருப்பார்கள்?



தினமலரில் கோவை கொடீசியா வளாகத்தில் புத்தக திருவிழா என்று போட்டிருந்தார்கள். பசங்க ஞாயிறுகளில் பதினோரு மணிவாக்கில் டிவியில் உட்கார்ந்து விடுவார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது போக்கு டிவி. கொடீசியா கிளம்பினேன். 

வீல் சேர் கொண்டு வந்து கொடுத்தார்கள். முன்புறம் பெரிய பந்தல் போட்டு பெரிய பெரிய புத்தக கம்பெனிகள் ஸ்டால் போட்டிருந்தார்கள். கூட்டமும் அதிகம் தான். எனக்குத் தேவையான ஓஷோ புத்தகங்களை கவிதா பப்ளிகேசனில் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் ராம்ப் இல்லை. படிக்கட்டுகள் எதிரே இளித்தன. இரண்டு பக்கமும் இருந்த ராம்பை அடைத்து வைத்திருந்தார்கள். புத்திசாலிகள்.

ஒரு வழியாக இறங்கி பின் வீல் சேரினை தூக்கி வைத்து உள்ளே சென்றேன். பையன் வீல் சேரினைத் தள்ளிக் கொண்டு சென்றான். நிவேதிதா ஒவ்வொரு ஸ்டாலாக சென்று உள்ளே இருக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றினையும் எடுத்து எடுத்துப் பார்ப்பதும் பின்னர் விலையைப் பார்ப்பதுமாய் இருந்தது. பையனும் இருக்கும் ஆங்கில சிறுவர் இதழ்களை எல்லாம் அலசி ஆராய்ந்து புத்தகங்களைத் தேர்வு செய்தான். நானும் மனையாளும் ஸ்டாலின் வாசலில் உட்கார்ந்திருந்தோம். மூன்று மணி ஆயிற்று. இன்னும் அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி முடியவில்லை.

பசி கிள்ளல் போட்டது. கேண்டீன் சென்றோம். பசங்க வெஜ் பிரியாணியும், நானும் மனையாளும் இரண்டு சப்பாத்திகளும் சாப்பிட்டோம். அங்கு டேபிள் துடைத்துக் கொண்டிருந்த பெண்மணி மிகவும் களைத்துப் போயிருந்தார். சாப்பிட்டாயாம்மா எனக் கேட்டேன். இன்னும் சாப்பிடவில்லை சார் என்றது அது. மனையாள் கொஞ்சம் காசு கொடுத்துப் போய் சாப்பிடும்மா என்றார்.

மீண்டும் புத்தகத்தேடல் ஆரம்பித்தது. ஆயிற்று ஐந்து மணி. ஒரு வழியாக எல்லா ஸ்டால்களையும் பார்த்து புத்தகங்களைப் புரட்டி தேவைக்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தோம்.

வந்ததும் பசங்க இருவரும் பேனாவை எடுத்து ஒவ்வொரு புத்தகங்களிலும் பெயரும் தேதியும் எழுதினார்கள். மனையாளுக்கு அடியேன் சலுகை விலை பொன்னியின் செல்வன் பதிப்பினை வாங்கிக் கொடுத்திருந்தேன். இருக்கும் வேலைப்பளுவில் அவர் ஐந்து பாகங்களையும் படிப்பதற்கு ஐந்து வருடம் ஆகும் என நினைக்கிறேன்.

உயிர்மையில் கூட்டம் இல்லை. அதே போல கிழக்குப் பதிப்பகத்திலும் அதிகம் இல்லை. காலச்சுவடு சொல்லவே வேண்டாம். புத்தகத்தை எடுத்தாலே திகீர் என்கிறது. ஒவ்வொன்றும் 200, 300, 500, 1000 என்று இருக்கிறது. 

குழந்தைகள் அதிகம் வந்திருந்தார்கள். குழந்தைகள்  புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. லயன் காமிக்ஸ் ஸ்டாலில் கூட்டம் அதிகம். ஆனால் அவர்களும் அதிக விலை வைத்து விற்கின்றார்கள். 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் ஆங்கில நாவல்கள் கலர் கலரான புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். பையன் அங்கு சென்று கொஞ்சம் புத்தகங்களை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். ஒரு புத்தகத்தினை பிரித்தேன். கண்ணில் பட்ட வார்த்தை அய்யோ என கதறவிட்டது. அவனுக்கு இன்னும் கொஞ்சம் வயது வரட்டும் என்று நினைத்து மறுத்து விட்டேன். 

மனையாள் வெளிநாட்டு இலக்கிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். ’உள்நாட்டு இலக்கியத்தைப் படிக்கவே முடியவில்லை. இதில் அயல் நாடு வேறா தூக்கித்தூரப்போடு’ என்றேன். பின்னே எரிச்சலாக இருக்காதா? கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளவே முடியாது. அந்தக் கலாச்சாரத்தைப் படித்து என்ன கிழிக்கப்போகின்றோம்? நமக்கெல்லாம் ஜானகிராமன் வகையறாக்கள் தான் சரிப்படும். பிகேபி, சுபா, ராஜேஷ்குமார் எல்லாம் படித்து ஏமாந்ததுதான் மிச்சம். பொட்டுப் பிரயோஜனம் இல்லை. இந்த நாசமாப்போகும் சினிமா, டிவிக்கு இந்தப் புத்தகங்கள் எவ்வளவோ பரவாயில்லை. 

கொட்டகையில் இருந்த புத்தக ஸ்டால்களில் கூட்டம் புத்தகங்களை அள்ளியது. வியாபாரம் சூப்பர் சார் என்றார் பில் போடுபவர். ஸ்டாலுக்கு பத்து நாளைக்கு 36000 ரூபாய் கட்டணமாம். ‘பின்னர் ஆள் கூலி, சாப்பாடு, ஹோட்டல் பில், போக்குவரத்துச் செலவு என்று அதற்குப் பிறகுதான் லாபம்’ என்றார். ’அதெல்லாம் தாண்டியாச்சு சார்’ என்றார் அவர் தொடர்ந்து. வளரும் பதிப்பாளர்கள் என்றொரு பகுதியில் ஒரு டேபிளில் கொஞ்சம் புத்தகங்களை வைத்திருந்தார்கள். ஒரு பெரிய புக் ஸ்டாலில் வாசலில் ஒரு பையன் நின்று கொண்டு உள்ளே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருந்தார். இதில் அயர்னி என்னவென்றால் கிண்டில் வேறு விற்றுக் கொண்டிருந்தார்கள். புத்தகத்துக்கும் கிண்டிலுக்கும் சரிப்பட்டு வருமா?

பசங்க இருவரும் புத்தகங்களை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு சீரியசாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அடியேனும் தான். மனையாள் சமையல் செய்யச் சென்று விட்டார். அந்தப் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் கிச்சனையே பார்த்துக் கொண்டிருந்தன. 

Saturday, August 20, 2016

கேடிஎம் பைக்

பாம்பே நண்பரும் நானும் வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வர ஏற்பாடு. ரெட் டாக்சியில் மணியகாரம்பாளையம் வழியாக, வடவள்ளி, தொண்டாமுத்தூர் தாண்டி செம்மேடு வழியாகப் பயணித்தோம். அனேக இடங்களில் வெங்காயம் விளைந்திருந்தது. படல்களில் வெங்காயத்தை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். மழை பெய்திருந்ததால் காற்று சில்லென்று இருந்தது. சுற்றிலும் பசுமை படர்ந்திருந்த பகுதிகளின் ஊடே செல்லும் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

முட்டம் முத்துவாளி உடனமர் நாகேஸ்வரர் கோவிலில் இறங்கினோம். முத்துவாளியம்மனுக்கு அன்று அபிஷேகம் நடந்தது. மதுரை மீனாட்சி, குமரி அம்மன் மற்றும் முத்துவாளியம்மன் மூவரும் ஒருவரே என்று முன்பு ஒரு முறை கோவிலில் பூஜை செய்பவர் சொல்லி இருந்தார். அழகி என்றால் அழகி. பார்க்கும் போது சொக்கி விடும். மூப்பே இல்லாத அழகி. அருளை அள்ளித்தரும் பேரழகி முத்துவாளியம்மன். அபிஷேகம் முடிந்து காருக்கு திரும்பிய போது ஒரு பெண், ‘அண்ணா, சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்’ என்று முகம் பார்த்துச் சொன்னது. 

பாக்குமட்டைத் தட்டில் நெய், பஞ்சாமிர்தம், பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், பச்சைப்பயறு சுண்டல் வைத்துக் கொடுத்தது. பத்து உருண்டை சாதம் கொஞ்சம் காய்கறிகளோடு எனது உணவு. ஆனால் இதுவோ மிரள வைத்தது. மனையாளோ தியானம் செய்யாமல் உணவெடுக்க மாட்டார். அக்கா பையன் பிரவீனிடம் நீட்டினேன். ’என்னவோ தெரியவில்லை மாமா, இன்றைக்குப் பார்த்து பயங்கரமாக பசிக்கிறது’ என்றான். பிரச்சினை தீர்ந்தது.

ஆசிரமத்திற்குத் திரும்பினோம். மீண்டும் பள்ளத்தை தோண்டி விட்டார்கள். லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதிக்குச் செல்லும் பாதையை ஏன் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே புரியவில்லை. பெரிய பள்ளமாய் தோண்டி வைத்திருந்தார்கள். பள்ளத்துக்குள் இறங்கி பின்னர் நடந்து செல்ல வேண்டும். யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் குளிப்பதற்கு அந்தப் பாதையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதையும் தடுக்கிறார்கள். விரைவில் அவர்களே தானாகவே அமைதியாகி விடுவார்கள் என நினைக்கிறேன்.

சுவாமியின் ஜீவசமாதியில் தியானம் முடித்து உணவருந்தி விட்டு வீடு திரும்பினோம். வீட்டுக்கு நுழையவே இல்லை, பணிக்காக மீண்டும் பயணம் ஆரம்பித்தது.

கார் சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரின் முன்னால் பைக் ஒன்று வலது பக்கமிருந்து கட் செய்து முன்னால் செல்ல டிரைவர் பிரேக்கை அழுத்த நமக்கு திகீர் என்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்காரன் பறந்து விட்டான். 

இப்படித்தான் ஒரு முறை சென்னை வடபழனியிலிருந்து ஏர்போர்ட்டுக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு பைக் ஓட்டி வந்தவன் காரின் பின்னால் தட்டென்று மோதினான். காரை நிறுத்தி டிரைவர் இறங்குவதற்குள் பறந்து விட்டான். அந்தப் பைக்கும் இந்த பைக்கும் ஆரஞ்சுக் கலர்.

’கேடிஎம் பைக் சார் இது,  சிசி அதிகம்ச. பறக்குறானுவ. டக்டக்குன்னு கட் செய்றானுவ சார். காரில வர்ரவங்க தப்பிச்சுக்குவாங்க. பைக்குல வர்றவங்க தடுமாறி விழுந்தா பின்னாடி வரும் காரோ லாரியோ ஏத்திடுவானுங்க சார். கேட்டா சட்டுனு பிரேக் பிடிக்கலன்னு சொல்லிடுவாங்க. அக்கிரமம் செய்றானுங்க சார். இந்தப் பயலுகள ரோட்டுக்குப் பெத்து விட்டுருக்கானுவ சார் இந்த அப்பனுங்க’ என்றார் கார் டிரைவர்.

அந்த கேடிஎம் பைக் காரின் முன்னால் வந்து சென்ற போது சில்லென்று திகில் பரவி பின்னர் அடங்கியது. படபடப்புத் தீர ஐந்து நிமிடம் ஆனது. எங்காவது ஒரு கல்லோ பள்ளமோ இருந்தால் அந்தப் பையனின் நிலை?

புண்ணியவான்களே, நீங்கள் பைக் ஓட்டுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் பாவப்பட்ட சில மனிதர்கள் ஏதோ ஒரு இருசக்கர வாகனத்தில் வருவார்கள். அவர்களுக்கு குடும்பம் உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். உங்களின் அதீத சந்தோஷம் பிறருக்கு ஆபத்தாகி விட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

Saturday, August 13, 2016

துறவு என்பது என்ன? காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா?

மனதை அழுத்தும் துன்பங்களில் இருந்து விடுபட கோவில்களை நாடுகிறேன். சில சமயம் சாமியார்களை நாடுகிறேன். சில சமயம் அவர்கள் சொல்லித்தரும் பயிற்சிகளைச் செய்கிறேன். எல்லாவற்றையும் துற என்கின்றன நூல்கள். ஒரு சிலர் அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள். என்னதான் செய்வது? புரியவில்லை. யாரிடம் கேட்பது என்று புரியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. எனக்குப் புரியும் படி ஏதாவது சொல்ல முடியுமா? - மாலதி(யூயெஸ்ஸே)

உங்களுக்கான பதிலை ஒரு புத்தகத்திலிருந்து தருகிறேன். அது பலருக்கும் நிச்சயம் உதவும். பலரும் பல மாதிரிச் சொல்லியதுதான். புரியும் படிச் சொல்ல இந்த புத்தகத்தை எடுத்துக் கொள்கிறேன்.

முதலில் மதம், அமைப்புகள் பற்றிய குறிப்பு:-

அன்பே,
மனிதன் அடிமையாகிப் போனான்
ஏனெனில், தனிமைக்குப் பயந்து.

அந்தப் பயத்தால் ஒரு கூட்டம், சமூகம், சங்கம்
அவனுக்குத் தேவைப்பட்டதால்

பயமே அத்தனை அமைப்புகளுக்கும் அடிப்படை
எப்படி இந்த பயந்த மனதால்
சத்தியத்தை அறிய முடியும்?

சத்தியத்தை அறிய துணிவு வேண்டும்
துணிவு தவத்தினால் வருகிறது
எந்தக் கூட்டத்திலிருந்தும் அல்ல.

ஆகவே தான்

எல்லா மதங்களும்
சங்கங்களும் அமைப்புகளும்
சத்தியத்தைத் தேடும் பாதையை
மறைக்கின்றன
மூடுகின்றன
தடை செய்கின்றன. 

(குறிப்பு : சத்தியம் என்பதை உண்மை என்று கருதவும்)

* * *

அடுத்து துறவு பற்றியது.

துறவு பொருள்கள் சம்பந்தப்பட்டதல்ல
எண்ணங்கள் சம்பந்தப்பட்டது
துறவு வெளியே சம்பந்தப்பட்டதல்ல
உள்ளே சம்பந்தப்பட்டது
துறவு உலகம் சம்பந்தப்பட்டதல்ல
ஒருவன் சம்பந்தப்பட்டது

உலகத்தில் இருப்பது பற்று இல்லை
உன் மனதில் உலகம் இருப்பது தான் பற்று
உன் மனதிலிருந்து உலகம் மறைந்து விட்டால் - அது தான் துறவு.

* * *

மனிதன் யதார்த்தத்தில் வாழ்வதில்லை
கனவுகளிலேயே வாழ்கிறான்
ஒவ்வொரு மனமும் தனக்கென ஒரு உலகத்தை
எங்கும் காணக்கிடைக்காத உலகத்தை
உருவாக்கிக் கொண்டுள்ளது

இரவும் பகலும் மனம் கனவுகளிலேயே இருக்கிறது
இந்தக் கனவுகள் கணக்கில்லாமல்
கட்டுக்கடங்காமல் போகும் போது
மனிதன் பைத்தியமாகிப் போகிறான்

ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் இருத்தல் என்பது
கனவுகளற்று இருப்பதே.

* * * 

ஓஷோவின் இந்தக் கவிதை சொல்லும் அர்த்தங்கள் ஆயிரமாயிரம். அப்துல்கலாம் கனவு காணச் சொன்னாரே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது உலக வாழ்க்கை. உலக வாழ்க்கை என்பது வேறு ஒரு மனிதன் துறவு கொள்வது என்பது வேறு. 

இது உங்களுக்கான கனவு. நீங்கள் தெளிவாயிருத்தலே துறவு என்கிறது இந்தக் கவிதை.

அந்தக் காலத்தில் துறவு பூண்டவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். நபிகள் திருமணம் செய்து கொண்டவர். கண்ணன் பல திருமணங்களைச் செய்து கொண்டவன். திருக்குரான், கீதைகள் எல்லாம் அருளப்பட்டது திருமணம் ஆனவர்களாலே. திருமணம் ஆகாமல் பிரம்மச்சரியம் ஏற்பதை துறவு என்றுச் சொல்வது அபத்தம். அமைப்பினைப் பாதுகாக்க அல்லது உருவாக்கப் பயன்படுபவை இது போன்ற வேஷங்கள். ஆனால் துறவு என்பது உடலுக்கு அல்ல உள்ளத்துக்கு.

எண்ணங்களில் நான் இல்லாமல் நிகழ்வில் வாழ்வதுதான் உண்மையான துறவு. நிகழ்வில் வாழ ஆரம்பித்தால் உலக வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என புரிந்து கொள்ள முடியும். பிறகென்ன துக்கமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. எல்லாம் ஒன்று தான்.

மனிதன் ஒரு ஆற்றினைப் போல வாழ வேண்டும். குளத்தைப் போல அல்ல.

குறிப்பு : மேற்கண்ட எழுத்து அனைத்தும் ஓஷோவின் ஒரு கோப்பைத் தே நீரில் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. நன்றி ஓஷோ மற்றும் கம்யூன்.

Friday, August 12, 2016

குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டமும் தஞ்சாவூர் மாவட்டமும் இணையும் பார்டரில் தான் எனது ஊர் நெடுவாசலும், அம்மா பிறந்த ஊர் ஆவணமும் இருக்கின்றன. விவரம் தெரிந்த நாளில் இருந்து மாமா ஊரில் தான் அம்மாவுடன் வசித்து வந்தேன். ஊரில் காவிரி ஆற்று விவசாயம் மற்றும் குளத்துப் பாசனமும் உண்டு. ஊரின் கிழக்கே தான் வயற்காடுகள் இருக்கும். ஆறு, குளங்கள் நிறைந்த பகுதி. பச்சைப்பசேல் என்று பசும்பட்டாடை போர்த்திக் கொண்டிருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கின்றன. எதுவும் மாறவில்லை. வெளி நாடு சென்று வந்தவர்களும், ஒரு சிலரும் வீடுகள் கட்டி இருக்கின்றனர். சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. பதினெட்டு நாட்டு அகமுடையார் ஊரில் தலைக்கிராமம் ஆவணம். அடுத்து நெடுவாசல் கிராமம். 

ஒவ்வொரு ஊரின் நீர் வளத்துக்கு காரணம் அந்த ஊர் குளங்கள்தான். அந்தக் காலத்தில் மோட்டார் எல்லாம் இல்லை. குளிப்பதற்கு குளங்கள் தான் ஒரே வழி. இல்லையென்றால் மண்குடத்தில் தண்ணீர் பிடித்து பொக்கைகளில் நிரப்பி வீட்டில் குளித்துக் கொள்ள வேண்டும். கிணற்றிலிருந்து தான் குடி தண்ணீர் கிடைக்கும். போரெல்லாம் கிடையாது.

ஊரின் மேற்கே சின்னக்குளம் இருக்கும். அது பள்ளிவாசலின் அருகில் இருக்கும். மூன்று நான்கு இடங்களில் படிக்கட்டுகள் இருக்கும். மாலைகளில் பெண்கள் வீட்டுத்துணிகளைக் கொண்டு போய் துவைத்து குளித்து விட்டு வருவார்கள். ஆண்கள் படித்துறை தனியாக இருக்கும். மழைக்காலங்களில் வெள்ளை வெளேரென்று இருக்கும் தண்ணீர் நாளடைவில் ஆரஞ்சு வண்ணத்தில் மாறி விடும். அதிக மழை பெய்யும் போது சின்னக்குளம் நிரம்பி எங்கள் வீட்டு நாவல்மரத்தின் வழியாக வழிந்து சென்று ஆவிகுளம் சென்று சேரும். ஆவிகுளம் நிரம்பினால் தூண்டிக்காரன் கோவில் குளத்தை சேரும். இந்தக் குளமும் நிரம்பினால் ஆவணத்தான் குளத்துக்குச் சென்று சேரும் படி நீர் வழிப்பாதைகள் இருந்தன.

சின்னக்குளத்திற்கு அம்மா என்னைத் தூக்கிச் சென்று குளிக்க வைப்பார்கள். கால்களுக்கு இடையில் இருத்திக் கொண்டு தலைகீழாக தலைமுடியில் சீவக்காய்தூள் போட்டு அலசி விடுவார்கள். குளிப்பதற்கு ஆனந்தமாக இருக்கும். விவரம் தெரிந்த நாட்களில் இருந்து நான் தனியாக குளிக்க கிளம்பி விடுவேன் நண்பர்களுடன்.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புச் செல்ல வேண்டிய நேரம். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. மூன்று சக்கர சைக்கிள் வேண்டுமென்று விண்ணப்பித்திருந்தோம். அதற்காக உடல் தேர்ச்சிக்காக தஞ்சாவூர் சென்றோம். அங்கு மூன்று மருத்துவர்கள் அமர்ந்திருந்தனர். மாமா என்னிடம் சொன்னார். டாக்டர் கை கொடுப்பார். நன்றாக வலிக்கும்படி அழுத்தினால் தான் உனக்கு வண்டி கிடைக்கும் என்றார். விட்டேனா பார் என்று டாக்டரின் கையை அழுத்திய அழுத்தில் போதுமப்பா என்று அலறினார் மருத்துவர். ஏதோ மெலட்டூரோ என்னவோ நினைவுக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர் அப்போது சி.எம்.ஆக இருந்தார். அந்த ஊர் திரையரங்கத்தில் விழா. ஏதோ ஒரு மினிஸ்டர்தான் எனக்கு சைக்கிளை வழங்கினார். ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது சைக்கிள்.

அதன் பிறகு வீட்டில் என்ன வேலை? எனது பள்ளி நண்பர்கள் சேகரும், சேதுராமனும் வந்து விடுவார்கள். மூவரும் குளிக்கச் செல்வதென்ன? ஊர் சுற்றச் செல்வதென்ன? கிளம்பினால் மாலைதான் வீட்டுக்கு வருவேன். இவர்கள் எல்லோருக்கும் டியூசன் எடுக்க வேண்டும். நான் பள்ளியில் லீடர். இவர்கள் சுமாராகத்தான் படிப்பார்கள். சொல்லிக் கொடுக்க வேண்டும். டியூசன் தனியாக நடக்கும், ஊர் சுற்றலும் தனியாக நடக்கும்.

சின்னக்குளத்துக்கு அதிகமாகச் செல்ல மாட்டேன். அங்கு சமாதிகள் இருக்கும். அதைப் பார்த்தாலே எனக்குப் பயம். பிச்சநரிக்குளத்துக்குத்தான் அதிகம் குளிக்கச் செல்வதுண்டு. போகும் வழியில் மாரியம்மன் கோவில் குளம் இருக்கும். அதில்  நான் குளிப்பதில்லை. பிச்ச நரிக்குளத்தில் தண்ணீர் வறண்டால் ஆவணத்தான் குளத்துக்கு செல்வதுண்டு. அது புதுக்கோட்டை பட்டுக்கோட்டை வழிச்சாலையில் நான் படித்த அரசு மேல் நிலைப்பள்ளி தாண்டி இருக்கும். காக்கா நீச்சல், தண்ணிக்குள்ளேயே நீச்சல் என்று எல்லா நீச்சலும் அடித்துப் பார்ப்பதுண்டு. ஆற்றில் தண்ணீர் வந்தால் அதில் ஆட்டம்.

பண்ணண்டா குளம் ஒன்று இருக்கிறது. எங்கள் வயலுக்கு அந்தக் குளத்திலிருந்துதான் தண்ணீர் மடை வழியாக வரும். இந்தகுளமும் ஆவணத்தான் குளமும் ஆற்றினை ஒட்டியவாறு கிழக்குப்பகுதியில் இருக்கும். இந்த இரண்டு குளங்களில் இருந்து பாசனம் நடைபெறும். கோடைக்காலத்தில் இந்தக் குளத்து நீரினை வைத்து குளத்தருகில் இருக்கும் வயல்களில் விவசாயம் நடக்கும். அந்த நேரத்தில் அங்கு குளிக்கச் செல்வதுண்டு. இந்தக் குளத்தின் அருகில் தான் மாயன்பெருமாள் கோவில் இருக்கும். சுத்துப்பட்டு ஊரில் இருந்து கோடையில் இந்தக் கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மாட்டு வண்டியில் தான் செல்வோம். பெரிய பானையில் சர்க்கரைப்பொங்கலும், வெண்பொங்கலும் வைப்பார்கள். 

அரசு ஆரம்பபள்ளியின் அருகில் ஆவிகுளமும், தூண்டிக்காரன் கோவில் குளம் என்கிற புதுக்குளமும் இருக்கும். மழைக்காலத்தில் தூண்டிக்காரன் கோவில் குளத்தில் தான் குளிக்கச் செல்வது உண்டு. ஆவிகுளத்தில் அவ்வளவாக குளித்தது இல்லை.

காலம் செல்லச் செல்ல வடக்கித்தெரு சுப்பையாதேவர் தன் தோப்பில் போர் போட்டு விட்டார். அகலமான குளியல் தொட்டி போன்று கட்டி இருந்தார். பூமியிலிருந்து கொட்டும் தண்ணீர் குளியல் ஆரம்பித்து விட்டது. இந்தக் குளியல்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் தான் நடக்கும். பள்ளி நாட்களில் எங்கள் வீட்டுக் கிணற்றுத் தண்ணீரை வாளியில் இறைத்து பொக்கையில் நிரப்பிக் குளிப்பதுண்டு. எனது அப்போதைய சோப்பு என்ன தெரியுமா? மைசூர் ஜாஸ்மின் சோப். இப்போது அந்தச் சோப்பைக் காணமுடியவில்லை.

குளத்தில் குளிப்பது என்பது அவ்வளவு சந்தோஷத்தைத் தரக்கூடிய அற்புதமான தருணம். கொண்டு செல்லும் அழுக்குதுணிகளைத் துவைத்து அலசி வைத்து விட்டு பின்னர் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு சில்லிட்ட தண்ணீரைக் கையால் எடுக்கும் போது உடல் சிலிர்க்கும். உள்ளே இறங்க கொஞ்சம் தயக்கமாக இருக்கும். குளித்து விட்டு வெளியில் வருபவர் தண்ணீரை அள்ளி மேலே தெளித்து விடுவார். பின் என்ன? ஒரே குதியல். மூச்சு முட்ட தண்ணீருக்குள் அமிழ்ந்து வெளியில் வந்து கண்கள் சிவக்கச் சிவக்க ஆட்டம் போட்டு விட்டு கரைக்கு வந்து சோப்பு போட்டு உடலை நன்கு தேய்க்க வேண்டும். மீண்டும் குளத்திற்குள் தஞ்சம். உடல் சூடு எல்லாம் காணாமல் போய் விடும்.

இப்போது குழாயில் வடியும் தண்ணீரைப் பிடித்து தலையில் ஊற்றிக் கொண்டு ஷாம்பூ, சோப்பு போட்டு உடலைக் கழுவி காய வைத்து குளியலை முடித்து விடுகிறேன். காரில் செல்லும் போது வழியில் தென்படும் குளங்களைப் பார்க்கையில் மனது அசைபோட ஆரம்பித்து விடுகின்றன.

நாகரீகம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதனை வெகுதூரம் தள்ளிக் கொண்டு போய் விட்டது. இயற்கையும் மனிதனின் வாழ்வும் தனிதனியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தனிமையில் வாழ்வது போன்று ஆகி விட்டது. பூமிக்கும் நமக்குமான தொடர்பு அற்றுப் போய் விட்டது போல தெரிகிறது.

இனி அந்தகாலம் வரவா போகிறது?

Thursday, August 11, 2016

தூரத்தில் ஏதோ லட்சியம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல், அந்தச் சூழலுக்கு ஏற்ப சிந்தனைகள், செயல்கள், லட்சியங்கள் அதன் விளைவுகள். தினமும் எழுகிறோம் ஓடுகிறோம் தூங்குகிறோம் பின்பு எழுகிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அனைவருக்கும் ஒரே குறிக்கோள் - பணம். இதைத்தான் தேடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டே இருக்கின்றோம். குதிரையின் கண்ணுக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்படும் கொள்ளுப்பை போல லட்சியத்தை முன்னால் வைத்துக் கொண்டு ஓடுகிறோம்.

வீடு கட்ட வேண்டும். லட்சியம். வீடு கட்டி முடித்தாகி விட்டது அடுத்து? மீண்டும் தேடல் ஓடல். இந்த ஓட்டம் உடல் நோயில் விழும்போது முடிந்து விடுகிறது. பின்னர் ஆறுதல் தேடுகிறது, அடைக்கலம் தேடுகிறது. அன்பினைத் தேடுகிறது. கொடுப்பதற்கு எவருமில்லை. ஏனென்றால் ஆறுதல் தருபவரும், அடைக்கலம் தருபவரும், அன்பு தருபவரும் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

லட்சியங்கள் நிறைவேற நிறைவேற எதிரில் வெற்றிடம் நின்று கொண்டிருப்பதை அதன் பிறகுதான் உணர முடியும். வெற்றி என்பது வெற்றிடத்தைத்தான் தரும். வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் ஒரே மாதிரியாக இரு என்பதன் அர்த்தம் என்னவென்று புரிந்து விடும்.

எனது நண்பரொருவன் சவுதியில் ஒட்டகம் மேய்த்து வீட்டுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவனின் அம்மா தன் மகள்களுக்கு அந்தப் பணத்தை முழுவதும் செலவு செய்திருக்கிறார். இது அவனுக்குத் தெரியவில்லை. பணம் மொத்தமும் அப்படியே இருக்குமென்று நினைத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறான். ஒரு தொழிலைத் தொடங்கலாம் என்று முடிவு செய்து அம்மாவிடம் பணம் கேட்க அம்மா கையை விரித்து விட்டார். எங்கே போனது பணமெல்லாம் என்று கேட்டபோது மகள்களுக்குச் செய்து விட்டேன் என்றாராம். தன் அக்காள்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் கை விரித்து விட்டார்கள். வீட்டுக்கு வந்திருந்தான். பிழியப்பிழிய அழுதான். எனது இந்தத் தியாகத்தை எனது சகோதரிகள் கூட மறந்து விட்டார்கள். என் பத்து வருட வாழ்க்கையை இழந்து சம்பாதித்த பொருளை வைத்து அவர்கள் வசதியானவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நானோ? அருவியாய் கொட்டியது கண்கள். அழுது முடித்தான்.

தியாகம் என்பது ஒரு சில புத்திசாலி அயோக்கியர்களுக்காக ஒருவரோ அல்லது பலரோ ஏமாற்றப்படுவது. அது உறவாக இருந்தாலும் சரி மதமாக இருந்தாலும் சரி. தியாகம் என்பது முற்றிலும் மனிதனை ஏமாற்றப்பயன்படும் ஒரு வார்த்தை அவ்வளவுதான். ஒரு அரசியல்வாதி தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக தன் தொண்டனை தியாகி ஆக்குவான். மன்னன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போர் வீரனை தியாகி ஆக்குவான். யோசித்தால் எல்லாமும் ஒரு வகை சுய நலமாகத்தான் இருக்கும். ஒருவன் வாழ இன்னொருவன் தன்னை இழப்பதுதான் தியாகம் என்றால் அது ஒரு கொடுமை அல்லவா? கொலை என்றச் சொல்லை விட தியாகம் என்றச் சொல் படுபயங்கரமானது.

’போடா முட்டாப்பயலே, போய் வேற வேலை இருந்தாப்பாருடா’ என்றுச் சொல்லி முடித்ததும் அவனுக்கு சற்றே சந்தோஷம். ஏதோ கடை வைத்திருக்கின்றானாம். நன்றாக வியாபாரம் ஆகிறது தங்கவேலு என்கிறான். காசு வந்ததும் தியாகப் பிரச்சினை மறந்து விட்டது.

Wednesday, August 10, 2016

கோச்சிங் சரியில்லை

பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்கு நின்று கொண்டிருக்கையில் அருகில் நின்று கொண்டிருந்த மாணவியின் அம்மா ’பத்தாவது வரை தான் இந்த ஸ்கூலில் கோச்சிங் நல்லா இருக்காம். பனிரெண்டாம் வகுப்பிற்கு கோச்சிங்க் சரியில்லையாம்’ என்றுச் சொன்னதாக மனைவி சொன்னார். மனைவியின் உறவினர் ஒருவர் தன் குழந்தையை ஒவ்வொரு பள்ளியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். கோச்சிங் சரியில்லையாம்.

’தேர்வு எழுதுவது வாத்தியாரா? ஸ்டூடண்டா?’ என்று கேட்டேன். கோதை என் முகத்தையே பார்த்தார். ’அரசுப் பள்ளியில் படிக்கிறவர்கள் கூட இன்றைக்கு அதிக மார்க் எடுக்கின்றார்கள் கோதை அங்கெல்லாம் கோச்சிங் எப்படி இருக்கும் என்று யோசித்தாயா?’ என்று கேட்ட போது பேசாமல் இருந்தார்.

1992ல் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வருவதற்கு முன்பே கணிணியில் பேசிக், ஃபோர்ட்டான், பாஸ்கல், கோபால், சி லாங்குவேஜ்களைப் படிக்க முயன்று பல்வேறு மனப்பிறழ்வுகளுக்கு உட்பட்டவன் அடியேன். ஒரு சாதாரண கூட்டலைக்கூட பேசிக் மொழியில் எழுத வராது. அதன் வரிசை என்று ரெம் என்றால் என்ன என்ற கேள்வி இப்படி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு தான் பேசிக் லாங்குவேஜின் புரோகிராமிங் டெக்னிக்கே புரிபட்டது. அடுத்து போர்ட்டான், பாஸ்கல், கோபால் மொழிகள் எல்லாம் என்னை படாத பாடு படுத்தின. விண்டோஸ் 3.1 என்று நினைக்கின்றேன். ஒரே ஒரு கணிணியில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தார்கள். கலர் மானிட்டரெல்லாம் காஸ்ட்லி. அதில் வரும் சில படங்களைப் பார்க்கையில் சுவாரசியமாக இருக்கும். பூண்டி கல்லூரியில் படிக்கும் போது முதல் செமஸ்டரில் தமிழில் மட்டும் அதிக மார்க். 92 மார்க் என்று நினைக்கிறேன். மற்ற சப்ஜெக்டில் ஆவரேஜ். எல்லாம் ஆங்கிலம். யாருக்குப் புரியும்? ஆனால் எனது சிறு வயதில் ஜோசப் வாத்தியாரால் அறிமுகம் செய்யப்பட்டு தினமும் ஹோம் வொர்க்காக எழுதிச் சென்ற பனிரெண்டு வகை வாக்கியங்களால் எனக்கு மனதில் தைரியம் வர ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ள முயன்றேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். சுஜாதாவெல்லாம் கல்லூரிக்கு வந்திருந்தார். என்னவோ மீட் நடத்தினார்கள் சீனியர்கள். அவரிடம் பேச மாணவர்கள் அலைமோதினர். நானெங்கே பேசுவது? ஒரு சீனியர் மாணவர் சேலத்தைச் சேர்ந்த சசிகுமார் எனக்கு நண்பர், அவர் மூலமாக ஒரே ஒரு பேக் கிடைத்தது. கொடுத்த காசுக்கு வசூல் செய்து விட்டேன். இதர மாணவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

காலம் மாறியதில் பேசிக் எல்லாம் ஓடிப்போய் விட்டன. இப்போது என்னென்னவோ புதுப்புது மொழிகள் வந்து விட்டன. சாஃப்ட்வேர் படித்தவரெல்லாம் அமெரிக்கா சென்று லட்ச லட்சமாய் சம்பாதித்தார்கள். பி.எஸ்.சி முடித்ததும் எனக்கும் ஆசை வர நானும் மைக்ரோசாஃப்ட் எம்.சி.எஸ்.சி படித்து ஆன்லைனில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். ஊனமுற்றவன் என்பதால் எனக்கு அமெரிக்க கதவு மூடப்பட்டு என் கனவுக்கும் குழி வெட்டப்பட்டது. ஒரு சாதாரணவன் எளிதில் கற்று விடும் கல்வி எனக்கு படுபயங்கர வலிகளைக் கொடுத்தது. இருப்பினும் அதையெல்லாம் நானொரு ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஒரு கிலோ மீட்டர் தூரம் முட்டிபோட்டு வெறுங்காலில் சூடு கொப்பளிக்கும் கப்பிக்கல் சாலையில் தவழ்ந்து சென்ற போது எனக்கு கால் மட்டும் தான் வலிக்கும். மனது அது பாட்டுக்கு இருக்கும். அமெரிக்க கதவினை எம்பசியில் மூடியபோதுதான் அம்மா மீது கோபம் கொப்பளித்தது. அன்றே கொன்று விட்டிருந்தால் இன்றைக்கு இந்த அவமானம் எனக்கு ஏற்பட்டிருக்குமா என்று மனது கொந்தளித்தது. நான் வெகு சிரமப்பட்டு படித்த எம்.சி.எஸ்.சிக்கு இப்போது மதிப்பில்லை.  

பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் முதல் மார்க். எனக்கும் என் மச்சான் பிரான்ஸிஸ்காசனுக்கும் போட்டியோ போட்டி. பத்தாவது வரை அப்படித்தான். என் கூடப்படித்த மாணவி உமாவின் அப்பா டீக்கடையும், ஹோட்டலும் வைத்திருந்தார். அவர் ஜோசியம் கூட பார்ப்பாராம். அம்மா அவரிடம் என் ஜாதகத்தைக் காட்டினாராம். அவர் சொன்னாராம் உன் பையன் பட்டனைத் தட்டித்தான் சம்பாதிப்பான் என்று. அம்மாவுக்கு அப்போது டெலிபோன் பட்டன் தான் தெரியும். எனக்கு டியூசன் சொல்லிக் கொடுத்த ஓவிய வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி தங்கி இருந்த வீட்டுக்கு அருகில் டெலிபோன் எக்சேஞ்ச் இருந்தது. அங்கு சென்று பார்ப்பேன். இங்கு தான் எதிர்காலத்தில் வேலை செய்யப்போகின்றேனோ என்று கேள்வி இருந்தாலும் ஐயர் சொல்லிட்டாரு அது சரியாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் டெலிபோனை ஆர்வத்துடன் பார்த்து வருவேன்.

என்னென்னவோ தொழில் செய்து தற்போது ரியல் எஸ்டேட்டில் மையம் கொண்டிருக்கிறேன். என் மச்சானோ தோல் பாக்டரியில் வேலை செய்து ஊரில் பெரிய வீடு கட்டிக்கொண்டிருக்கின்றான். இந்த ரியல் எஸ்டேட் தொழிலிருக்கிறதே முகம் தெரியாத வில்லன்களுடன் மோதுவது போன்றது. மனிதனைப் எளிதில் படித்து விடும் அற்புத அறிவினை எனக்கு இந்தத் தொழில் கற்றுக் கொடுத்துள்ளது. அரசியல் தானாகவே எனக்குள் முளை விட ஆரம்பித்துள்ளது. 

ஆரம்ப காலத்திலிருந்து பத்தாவது வரை முதல் மதிப்பெண் பெற்ற எனக்கு அந்த மதிப்பெண்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது முகத்தில் படீரென்று அறையும் உண்மை. வருடா வருடம் ஸ்டேட்டில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் எல்லோரின் தற்போதைய நிலை என்னவென்று பார்த்தால் கொடுமையாக இருக்கும். எதார்த்தம் என்னவென்றே தெரியாத நிலையில் தங்கள் பிள்ளைகளைப் படாத பாடு படுத்தி படிக்கச் சொல்லி துன்பப்படுத்தும் பெற்றோர்களில் நூற்றில் 99 சதவீதமானோர் கானல் நீரைத்தான் பார்க்கப் போகின்றார்கள்.

வாழ்க்கை என்பது பணம் சம்பாதிக்க இல்லை. வாழ்க்கை என்பது வாழ்வதற்கு என்று புரிய வரும் போது எல்லாம் கையை மீறிப் போய் இருக்கும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்போரின் மொத்தப் பணமும் கார்ப்பொரேட் சாமியார்கள் வசம் சென்று சேர்ந்து விடும்.

நிலையில்லா ஒவ்வொரு பொழுதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பி.ஈ படித்த ஒரு பெண் என்னிடம் 1500 ரூபாய் சம்பளம் தர முடியுமா? என்று கேட்டார்.  இன்றைக்கும் 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து விட்டு வேலையின்றித் தவிக்கின்றார்கள். கொட்டிக் கொடுத்த பணம் கையில் இருந்தால் அவனொரு தொழிலைச் செய்து கொண்டிருப்பான். அதுவும் போச்சு இதுவும் போச்சு. 

குழந்தைகளுக்கு கல்வியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். நான்கைந்து மொழிகளைக் கற்றுக் கொடுங்கள். வேறு ஏதேனும் தொழில் சார்ந்த இணைப்படிப்புகளைக் கற்றுக் கொடுங்கள். அது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிக உதவியாய் இருக்கும்.

அதை விடுத்து கோச்சிங் சரியில்லை என்று ஆரம்பித்தால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை.

Tuesday, August 2, 2016

மாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததிகள் இறுதிப்பகுதி


வீட்டிற்கு வந்தவுடன் என்னை எதிர்பார்த்து இரண்டு நபர்கள் உட்கார்ந்திருந்தனர். ஒருவர் எனது நண்பர். இன்னொருவர் அவரின் நண்பர். பிற விஷயங்களைப் பற்றி விசாரித்து விட்டு வந்த நோக்கமென்ன என்று வினவினேன். ”என்னை ஏதாவதொரு ஆசிரமத்தில் சேர்த்து விடுங்க” என்றார். ஏனய்யா அதற்குள் அவசரப்படுகிறாய்? என்று நினைத்துக் கொண்டு மேலும் விசாரிக்க ஆரம்பித்தேன்.

அவரின் இரண்டு குழந்தைகளும் ஆளுக்கொரு பக்கமாய் காதல் செய்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்களாம். இவருக்கும் மனைவிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். திருமணம் நடந்ததே எங்களுக்குத் தெரியாது. திடீரென்று குழந்தையுடன் வந்து நின்றார்களாம். உறவுக்காரர்களுக்கு கூட தெரியாதாம். இப்போது இந்த விஷயம் தெரிந்து அனைத்து உறவினர்களும் துக்கம் கேட்பது போல வீட்டுக்கு வந்து செல்கின்றார்களாம். இப்படி பல பிரச்சினைகளால் மனசு சரியில்லாமல் போய் விட்டதாம். ஆகவே இருக்கும் சொத்துக்களை தன் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டு ஆசிரமம் சென்று விடுகின்றார்களாம். அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமாம். வழி தேடி வந்துள்ளார். அவரின் பிரச்சினை இப்போது எனக்குள் வந்து விட்டது.

எனக்கொரு நண்பர் சென்னையில் இருக்கிறார். டிரேடிங் பிசினசில் கொடி கட்டிப்பறந்தவர். கார்னெட் மணல் ஏற்றுமதியில் நம்பர் ஒன்னாக இருந்தவர். அவர் செல்லாத நாடுகளே இல்லை எனலாம். ஒவ்வொரு நாட்டிலும் தொழில் அவருக்கு இருந்தது. நானும் எனது நண்பரும் ஆஃப்ரிக்கா நாடுகளுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் வாக்சின் ஊசி போட்டுக் கொள்ள சென்றிருந்தோம். அப்போது அவரின் வீட்டில் தான் தங்கி இருந்தோம். வீட்டில் அவரும் அவரின் மனையாளும் மட்டும் தான் இருந்தனர். அவரின் பெண் குழந்தைகள் எங்கே என்று விசாரித்தேன். அமெரிக்காவில் இருக்கின்றார்கள் என்று வருத்தமாகச் சொன்னார். மேலே எனது நண்பர் சொல்லிய அதே காரணம் தான். என்ன ஒன்று அவரின் பெண் ’நாளைக்கு எனக்கு கல்யாணம்ப்பா’ என்று போனில் சொல்லியதாம். இவரால் தடுக்கவா முடியும்? ’சரிம்மா நல்லா இரு’ என இருவரும் வாழ்த்தி இருக்கின்றார்கள். அன்றிலிருந்து ஆமை தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல இருவரும் ஆகி விட்டார்கள்.


வாழ்க்கை என்னதென்று தெரியாமல் வாழ்ந்து இறந்து போகும் மானிடப்பிறவி அல்லவா? ஆகவே அவர்கள் இருவரும் நிதர்சனம் என்ன என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை இனிமேல் ஒன்றுமில்லை என்பது போல மாற்றிக் கொண்டு விட்டார்கள். காமமும், இறப்பும் மனிதர்கள் வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. ஆனால் மனித சமூகம் காமத்தைப் பற்றிப் பேசாதே என்றுச் சொல்லிகொடுத்து வருகிறது. சாவைப் பற்றிப் பேசாதே என்று பயமுறுத்தி வருகின்றது. காமம் மனித வாழ்வினை பிரதி நிதிப்படுத்துவதை மறைத்து விடுகின்றார்கள். அது பாவம் என்கிறார்கள். சாவு என்பது கொடுமையானது என்று பயமுறுத்தி விடுகின்றார்கள். மனிதன் உருவானதே காமத்தால் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல சாவதும் உண்மை. ஆனால் இவை இரண்டும் மாபெரும் மறைவுப் பொருளாய் மாற்றப்பட்டுள்ளன.

காமத்தால் மனிதன் தன்னைப் பிரதிநிதிப்படுத்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாறு அவன் செய்யும் போது பிரதியை நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று எப்படி உத்தரவு போட முடியும்? வாழ்வு முடிந்ததும் பிரதி உன்னைத் தொடர்ந்து பிரதிநிதிப்படுத்துவான். இதில் ஏன் இருவரும் துன்பப்பட வேண்டும்? உலகிற்கு வந்தீர்கள், வாழ்ந்தீர்கள், உங்கள் பிரதியை நீங்கள் விட்டுச் செல்வீர்கள். அந்தப் பிரதி தனக்கான வாழ்வைத் தானே வாழ்ந்து விட்டுச் செல்லட்டுமே? ஏன் அந்தப் பிரதியின் வாழ்வையும் நீங்களே வாழ முயல்கின்றீர்கள் என்றொரு கேள்வியை என் நண்பரைப் பார்த்துக் கேட்டேன்.

அவருக்குள் என்ன தோன்றியதோ தெரியவில்லை. காஃபி வேண்டுமென்று கேட்டார். குடித்ததும் வீட்டுக்குச் சென்று விட்டார். மறு நாள் காலை போனில் அழைத்தார்.

“தங்கம், மனசு இலேசாகி விட்டதுப்பா, நானும் என் மனையாளும் சந்தோசத்துடன் இருக்கிறோம்” என்றார்.

இதைத்தவிர வேறென்ன வேண்டும் எனக்கு? அவரின் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார் என்றால் அவரின் வாழ்க்கை மகிழ்வானதாகத்தானே இருக்க முடியும்?

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இனி எதிர்கால சந்ததியினர் பிரச்சினைக்கு வருவோம். தனி மரம் தோப்பாகுமா? என்று எவரும் யோசிப்பதில்லை. தன் சுகம், தன் வாழ்க்கை, தன் குழந்தை என்று இருப்போர்களின் கடைசிக் கால வாழ்க்கை ஏதாவதொரு முதியோர் காப்பகத்தில் முடிந்து விடும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நான் சம்பாதிக்கிறேன், என் வாழ்க்கை, நானே முடிவெடுப்பேன் என்று நினைத்து அதன்படி வாழ்க்கை நடத்துவது எந்தளவுக்கு முட்டாள்தனம் என்று நினைத்துப் பார்க்க வேண்டிய காலம் இது. அமெரிக்காவில் கூட குடும்பங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றன.

மனிதனின் வாழ்க்கைப் சகமனிதனைச் சார்ந்தே இருக்கின்றன. அதுதான் அமைப்பே! உண்மையை உணருங்கள். வாழ்வினைச் செழிப்பாக்குங்கள்.

Saturday, July 23, 2016

எம்.எல்.ஏ தொடர் (4) - ரங்கராஜ் பாண்டேவின் கபாலி விவாதம்

சுதந்திரமும் யெம்மெல்லேயும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் பாண்டே கபாலி திரைப்படம் வரமா? சாபமா? என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது சுதந்திரம் யெம்மெல்லேவின் முகத்தினைப் பார்ப்பதும் டிவியைப் பார்ப்பதுமாக இருந்தார். சுதந்திரத்துக்கு யெம்மெல்லே ஏதாவது பொன்மொழி சொல்வார் என்று ஆர்வம்.

யெம்மெல்லேவுக்கு கடும் கோபம். இந்தச் சுதந்திரத்திற்கு இதே பொழைப்பாப் போச்சு என. இருவரும் டிவியை விடாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்தது. சுதந்திரம் யெம்மெல்லேவைப் பார்த்தார். 

”நான் அடிக்கிறது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழுன்னு சொல்வாங்களே? அதுதான்யா இது!”

”சுதந்திரம்! மீடியா, சினிமா, அரசியல் மூன்றுமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்துள்ளதுய்யா. ஒருவரை விட்டு ஒருவர் வாழவே முடியாதுய்யா. அது பாண்டேவுக்கு நல்லா தெரியும். இருந்தாலும் கேள்வியைக் கேட்பார். டிக்கெட் விற்பனை குறித்து வழக்குப் போட்டவரிடம் பாண்டே அடுத்தடுத்து என்ன கேட்டார் என்று பார்த்தாயா? நீங்கள் ஏன் சினிமாவுக்கு மட்டும் வழக்குப் போடுகிறீர்கள்> மற்ற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றனவே அதற்கெல்லாம் வழக்குப் போட்டால் என்ன? என்று கேட்டு விட்டு வழக்குப் போட்டவரையே தான் செய்தது தவறு என்பது போல காட்டி விட்டார். அதுதான் மீடியா? அது யாருக்காக வேலை செய்கிறது என்று பார்த்தாயா? இது என்றைக்கும் மாறப்போவதில்லை, மாறவும் விட மாட்டார்கள். என்ன புரியுதாய்யா?” என்றார் யெம்மெல்லே.

சுதந்திரம் தனக்குள் நினைத்துக்கொண்டார் இப்படி.

கபாலி மேட்டர் இரண்டு டிவிக்களில் விவாதம் செய்தவுடன் அடங்கி போய் விடும். அவ்வளவுதான். அடுத்த வேலைக்குச் சென்று விடுவார்கள். அவர் இப்படிப் பேசினார், இவர் இப்படிப் பேசினார் என்று கருத்துக்களைப் பறிமாறிக் கொள்வார்கள். அதுமட்டும் தான் இந்தச் சுதந்திர நாட்டில் முடியும்.

சுதந்திரம் சோகமாக இருந்தார்.


மாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததிகள் பகுதி 1

ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 75 வருடங்களாக பீடு நடை போட்டு வந்த ஒரு மதுரையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சமீபத்தில் வங்கியில் வாங்கிய கடனுக்காக என்.பி செய்யப்பட்டது. 2000 தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். வங்கி அத்துடன்  விடவில்லை அந்த நிறுவனத்தினை உருவாக்கியவர் இறந்து விட, அவரின் மகள் தன் சுய சம்பாத்தியத்தில் நடத்தி வந்த நிறுவனத்தின் மீதும் கடனைக் கட்ட வழக்குப் போட்டது. அந்த நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் தனியாக வழக்குப் போட்டு அந்தப் பெண்ணையும், அம்மாவையும் கைது செய்து விட்டனர். பிரச்சினை விஸ்ரூபம் எடுத்து நிற்க என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற நேரத்தில் அவர்களை எனது நண்பரொருவர் என்னிடம் அழைத்து வந்தார்.

மாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததியினர் என்று தலைப்பிட்டு விட்டு ஏன் பிசினஸ் பற்றி எழுதுகிறேன் என்று உங்களுக்கு தோன்றும். நிச்சயம் தோன்ற வேண்டும். காரணம் இருக்கிறது.

ஒரு காலத்தில் நான் கணிணி விற்பனை செய்து வந்தேன். இதுவரை எனக்கு நினைவிலிருந்து சுமார் 3000 கணிணிகளை தயார் செய்து விற்பனை செய்துள்ளேன். ஆரம்பகாலத்தில் ஒரு கணிணிக்கு சுமார் 10000 ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்ந்து வந்த காலத்தில் ஒரு கணிணிக்கு 2000 ரூபாய் லாபம் பார்ப்பதே அரிதாகி விட்டது. மூலைக்கு மூலை கணிணிக் கடை. வியாபாரம் முடிந்து போய் விட்டது. அந்தக் காலத்தில் ஒரு நிறுவனத்திற்கு சுமார் 5 கணிணிகளையும், ஆஃபீஸ் ஆட்டோமேஷன் சாப்ட்வேரை, விண்டோஸ் என்.டி சர்வர் மூலமாக இணைத்து வழங்கி இருந்தேன். புதிய பணியாளர்களால் பல தடவை சிஸ்டம் கிராஸ் ஆகி நின்று விடும். அதைச் சரி செய்ய அங்கு அடிக்கடி சென்று வருவேன்.

புதிய பெண் ஒருவரை கணிணியில் பணி செய்ய அமர்த்தியிருந்தது அந்த நிறுவனம். அப்பெண் சரியான அழகி. கோவில் சிலைபோல இருந்தார். அவருக்கு கணிணியில் எவ்வாறு அந்த ஆட்டோமேஷன் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்தேன். அப்போதே எனக்கு ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் கட்டணம். பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டாலும் 1000 ரூபாய் கட்டணம் தருவார்கள். இதனால் எனக்கு லாபம் என்று நினைத்து விடாதீர்கள். நிறுவனத்திற்குதான் பெரும் லாபம். 

அந்தப் பெண் ஒரு வாரம் கழித்து என்னை எனது அலுவலகத்தில் சந்தித்தார். விஷயத்தைக் கேட்டேன் வேலையை விட்டு நின்று விட்டாராம். அவரின் புத்திசாலித்தனத்துக்காக அவரை என்னிடம் கணிணி வாங்கிய வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன்.

ஏன் வேலையை விட்டு நின்று விட்டாய் என்று கேட்டதற்கு அந்தப் பெண், “சார், முதலாளி அலுவலகத்துக்கு வந்த உடனே பேண்டை கழட்டி ஹேங்கரில் மாட்டி விடுகிறார் சார். அவரின் மேஜைக்கு கீழே !” என்றுச் சொன்னவுடன் வெட்கம் வந்து விட்டது அப்பெண்ணுக்கு.

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு என்று நினைத்துக்கொண்டு,’சரிம்மா! போதும்! போதும்!’ எனச் சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்டேன்.

அந்த நிறுவனம் மூன்றே மாதங்களில் வங்கியால் மூடப்பட்டது. இப்போது அந்த நிறுவனம் இருந்த இடத்தில் ஹோட்டல் ஒன்று உள்ளது. அந்த முதலாளி போக வேண்டிய இடத்துக்குப் போய் விட்டார். 

இப்போது புரிந்து இருக்குமே மேலே கண்ட நிறுவனம் ஏன் மூடப்பட்டுள்ளது என்பது? இதுதான் விஷயம்.

ஒரு பெண் என்பவள் ஆலமரம் போன்றவர். மற்ற உறவுகள் எல்லாம் அந்த ஆலமரத்தின் வேர் போன்றவர்கள். அந்தப் பெண்ணை வைத்துதான் மிகப் பெரிய குடும்பச் சங்கிலி உருவாகிறது. எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்த்து எதை எதை எப்போது செய்ய வேண்டும்? குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை அவளின் தாய் மூலம் கற்றுக் கொண்டு அதை வாழையடி வாழையாக கொண்டு செல்பவள். 

காலச் சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். அப்படி வேலைக்கு வரும் பெண்களை தன் சுய நலத்துக்காக கட்டாயத்தின் பெயரில் தவறான பாதைக்கு இழுத்து விடும் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனம் அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனவேதனைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். 

ஒரே ஒரு பாஞ்சாலி தான் பாரதப்போருக்கு காரணம். கோடிக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட காரணம் இந்தப் பாஞ்சாலி என்கிறது மகாபாரதம். சீதை தான் இராமாயணத்துக்கு காரணம்.

பல நிறுவனங்களின் நிறுவனர்கள் தெரிந்தோ தெரியாமலோ இந்தக் காரியத்தினை எளிதாகச் செய்து விடுகின்றனர். உப்பினைத் தின்று விட்டு தாகம் எடுக்காமல் இருக்க முடியும் என்று நம்புவது எவ்வளவு மடத்தனமோ அதே போலத்தான் குற்றம் செய்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விடலாம் என்று நினைப்பது.

எனது ஒரு சில கார்ப்பொரேட் நிறுவனத்தைச் சார்ந்த நண்பர்களைக் கொண்டு இந்தப் பிரசினையிலிருந்து வெளிவருவதற்கு உதவிகளைச் செய்ய முயல்கிறேன் என ஆறுதல் கூறி அப்பெண்களை அனுப்பி வைத்தேன். கணவர் இதே வேலையைச் செவ்வனே செய்து வந்துள்ளவர் என்று அவரின் மனைவி சொன்னார். சொல்லும் போது அவரை அறியாமல் கண்களில் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. எந்தப் பெண்ணின் கண்ணீரோ தெரியவில்லை 2000 பேர் வேலை இழக்கும்படி ஆகி விட்டது.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்தேன். அங்கு ஒரு பெரிய பிரச்சினை காத்துக் கொண்டிருந்தது. அது என்ன? அந்தப் பிரச்சினையினால் நானென்ன புரிந்து கொண்டேன் என்று விரைவில் எழுதுகிறேன்.

Sunday, June 19, 2016

மகள் நிவேதிதாவிற்கு கடிதம் - 19 ஜூன் 2016

என் பிரியத்துக்குரிய அன்பு மகளே!
எந்த வித கட்டளைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் கடந்து செல்லும் நாட்களின் ஊடே சில தருணங்கள் நெகிழ்வுகளை உண்டாக்கி விடும். மனிதர்களுக்கு அந்த தருணங்களே அனுபவங்களாக வாழ்க்கையின் அர்த்தங்களாக மனதோடு ஊடாடிக் கொண்டிருக்கும். இன்றைக்கு நீ விடிகாலையில் எழுந்த என்னிடம் கொடுத்த வாழ்த்து அட்டையைப் பிரித்த போது மீண்டும் உண்டானது.


(உனது வாழ்த்து அட்டை)


(வெள்ளிங்கிரி மலை யாத்திரையின் போது)


என் பாச மகளே! மருத்துவ மனையில் நர்ஸ் உன்னை சிறு குழந்தையாக என் கைகளில் கொடுத்தபோது நான் அடைந்த நெகிழ்வினை உனது பத்தாவது வயதில்  நான் மீண்டும் இன்று அடைந்திருக்கிறேன். அழகான அந்த வாழ்த்து அட்டையில் எனக்காக நீ எழுதி இருந்த அந்த வாசகங்கள் என்னை வெட்கம் கொள்ள வைத்தன. ஆமாம் நான் ஏதாவது வேலையில் இருக்கும் போது நீ என்னிடம் ஏதோ கேட்க வருவாய், நான் அப்புறம் பேசலாம் என்று மறுத்து விடுவேன். இது அடிக்கடி நடக்கும். அப்போது நான் அப்படி நடந்து கொண்டிருக்க கூடாது என்று எனக்கு ஆயாசமும் அசூசையும் ஏற்பட்டு விட்டது மகளே. இனி அவ்வாறு நடக்க இயலாமல் பார்த்துக் கொள்கிறேன்.

உன்னையும் உன் சகோதரனையும் நல்ல குழந்தைகளாக, சமூக பிரக்ஞை உடையவர்களாக, நல்ல திடமும், செயலூக்கமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, சக மனிதர்களிடையே அன்பு கொண்டவர்களாக வளர்க்க வேண்டுமென்ற நினைப்பின் காரணமாகவும்,  மனசாட்சிக்கு விரோதமாக எந்த விதக் காரியத்திலும் ஈடுபட்டு எவரின் சாபமும் பெற்று விடக்கூடாது என்ற எனது எண்ணத்தின் காரணமாகவும் தொழிலில் நான் சந்திக்கும் பிரச்சினைகளால் உண்டாகும் வலியினால் சில நேரங்களில் உனது வேண்டுகோளினை கேட்க முடியாமல் போய் விடுகின்றன. வேறொன்றும் காரணமில்லை மகளே!

தத்தி நடை போட்டு நடந்த நீ இன்றைக்கு தனியாக வெள்ளிங்கிரி மலைக்கு யாத்திரை செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாய். என்னைப் போலவே உனக்கு தண்ணீரும், பசுமையும் நிறைந்த இடங்கள் பிடித்தவை என்று எனக்குத் தெரியும். நானும், ரித்தியும் உன்னுடன் வெள்ளிங்கிரி மலையிலிருந்து வடியும் மூலிகை ஆற்றில் ஆனந்தமாகக் குளித்து, ஆற்றில் செல்லும் மீனைப் பிடிக்க முயன்று தோற்று மீண்டும் பிடித்து குழி செய்து அதில் மீனை நீந்த விட்டு விளையாடுவது எனக்கு இப்போது நினைவில் வந்து செல்கிறது.

உனக்கு ஒரு சில விஷயங்களைச் சொல்லி விட எனது மனது துடிக்கிறது. சொல்லி விடுகிறேன். நீ பெரிய பெண்ணாக வளர்ந்து வருகையில் இணையத்தில் எனது இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றால் படித்துப் பார்.

நீ எப்போதுமே தனியாள் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனது பிரச்சினையும், மகிழ்ச்சியும், வலியும் உன்னை மட்டுமே சார்ந்தது. அதை வேறு எவரும் உணர்ந்து கொள்ளக் கூட முடியாது. உன் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருபவர்கள் எவரும் நிரந்தரம் இல்லை என்பதை நீ முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் உனக்கு எந்த வித காரியத்தையும் பயனின்றி செய்ய மாட்டார்கள் என்பதை நீ நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உலகம் கொடுத்துப் பெறுவதைதான் தான் அச்சாணியாக கொண்டு இயங்குகிறது. நண்பர்கள் என்று யாரும் இல்லை, உறவினர்கள் என்று எவரும் இல்லை. எல்லோரும் மனிதர்கள் என்பதை மறந்து விடாதே.

பணம் என்றொரு மாயத்தோற்றமும், பொறாமை என்றொரு மயக்கும் குணமும் மனிதர்களை விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவைகளில் சிக்கிக் கொண்டு இன்னும் விடுபட முடியாமல் அவர்கள் தன் சக மனிதனுக்கு துன்பங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆகவே உனக்குத் துன்பங்கள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் சக மனிதர்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். இது அவசியமா? இது தேவையா? என்று உன்னைக் கேட்டுக் கொள்,  முடிவெடு, பிறகு செயல்படு. சக மனிதர்களால் உனக்கு பிரச்சினைகள் வராத வண்ணம் நீ செயல்பட்டாய் என்றால் என்றைக்கும் சந்தோஷமாக வாழலாம்.

மகளே இப்போது மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லப் போகின்றேன். நீ இப்போது கல்வி என்ற பெயரில் படித்துக் கொண்டிருப்பதெல்லாம் பிறரால் உருவாக்கப்பட்ட அவர்களின் குப்பைகள். இந்தக் குப்பைகளை நீ உண்மை என்று நம்பி விடாதே. இது ஒரு பாதை என்றளவில் எடுத்துக் கொள்.

உனது வாழ்க்கைக்கு நீ பயிலும் கல்வி என்பது வழிகாட்டி மட்டுமே. அதை வைத்துக் கொண்டு உனக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள். நீ ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டுமா? முதலாளியாக இருக்க வேண்டுமா? என்பதை நீ வளர்ந்து வருகையில் முடிவெடுத்துக் கொள். வெற்றி என்பது இங்கு நிரந்தரமில்லை என்பதையும், தோல்வியும் நிரந்தரமில்லை என்பதையும் நினைவில் மறக்காமல் வைத்துக் கொள்.

வெற்றி என்பதும் தோல்வி என்பதும் குதிரைக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்படும் புல் போன்றது மகளே. உனக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீ குதிரையாக இருக்க வேண்டாமென்பது எனது ஆசை. நீ அதை இயக்குபவராக இருக்க வேண்டும். புரிகிறதா?

உனது வாழ்த்துக்கு மிக்க நன்றி மகளே!

மிக்க அன்புடன் உனது அப்பா.

Thursday, May 19, 2016

வரி எனப்படும் கற்கதரு



இந்தியாவில் எத்தனையோ உலகை உலுக்கிய ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா முடங்கிப் போய் விடவில்லை. இந்த ஊழல்களில் தமிழர்கள் பங்கு பெற்றிருக்கும் ஊழல்கள் தான் ஆகப் பெரிது. ஒவ்வொரு விஷயத்திலும் தமிழர்கள் தமக்கென்று ஒரு முத்திரைப் பதித்துக் கொண்டே வருகின்றார்கள். ஊழலிலும் அப்படித்தான் முத்திரைகளைப் பதிக்கின்றார்கள். இந்த ஊழல்கள் என்று மட்டுமில்லை மாநில அரசுகள், மாநகராட்சிகள், ஊராட்சிகள், அரசு அலுவலர்கள் என்று அது ஒரு தொடர் இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆரம்பித்த ஊழல்கள் இதுவரையிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. ஜனநாயகம் என்கிற பெயரால் வாக்காளர்களை ஓட்டுப்போட அழைக்கும் அதிகாரங்கள், ஓட்டுப் பெற்று ஜெயித்த பிறகு வாக்காளர்களை வேற்று கிரக வாசிகள் போல நடத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பொதுமக்களுக்கு சேவை செய்ய இருக்கும் அரசும், ஜனநாயகம் தொடர்பான அத்தனை அமைப்புகளும் சேவை செய்வதாக நடிக்கின்றன. 

மக்களுக்கு பணி செய்ய வேண்டுமென்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்கள் மக்கள் எஜமானர்களாக மாறி, யாரால் நம் குடும்பம் வாழ்கிறதோ அவர்களையே மிரட்டி காசு பறிக்கும் கூட்டமாக மாறிக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

இதை மாற்றுவதற்கு மக்களால் எதுவும் செய்யமுடியாது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசியல் உருவாக்கி வைத்திருக்கிறது. அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் தனி மனிதனின் வாழ்க்கை முடிந்து விடும். 

அரசை தனி மனிதன் கேள்வி கேட்க முடியாதவாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் பாதுகாவலர்கள் கேள்வி கேட்பவனை கேனயனாக்கி விடுவார்கள். 

இந்திய அரசியலமைப்பு என்று மட்டுமல்ல உலக அரசியலும் இப்படித்தான் இருக்கின்றன. இதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துபவர்களை ஜெயிலில் தூக்கிப் போட்டு விட்டு, கொஞ்ச காலம் முடிந்தவுடன் வெளியில் விட்டு நோபல் பரிசுகளைக் கொடுத்து வீட்டில் உட்கார வைத்து விடுவார்கள்.

இது உலகம் அழியும் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். யாராலும் எதையும் மாற்றி விட முடியாது. மாற்றமும் அரசியலில் வரவும் முடியாது. அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரு கட்சி இந்தியாவை ஆள்வதுதான் நான் மேலே சொல்வதற்கு சாட்சி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த இந்தியப் பிரதமர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் வருவார். பிஜேபி நிச்சயமாக வெற்றி பெறவே பெறாது. இதுதான் ப்ரீ பிளான் (முன்பே திட்டமிடல்). இதற்கு பல்வேறு காரணிகள் உண்டு.

இத்தனையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது மக்களின் வரிப்பணம். எது நடந்தாலும் நடக்கவில்லையென்றால் மக்களிடமிருந்து அரசுகள் பெரும் வரிப்பணம் என்றைக்கும் குறைவதே இல்லை. கற்பகதருவாய் கொட்டிக் கொண்டிருக்கும் வரிப்பணத்தை முன்னிருத்தியே கட்சிகள் உருவாகின்றன. ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால் ஊழல் மட்டும் மாறுவதே இல்லை. அந்தக் கற்பகதருவை அள்ளிடத்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அடித்துக் கொள்கின்றன. 

இதை மாற்றிட முடியுமா என்றால் முடியவே முடியாது. மக்களின் வாழ்க்கை யை அவ்வாறு சிக்கலில் கொண்டு வைத்திருக்கின்றது அரசியல். உழைக்கும் மக்களின் ஒவ்வொரு துளி வியர்வையிலும் ஒரு கால் துளி அரசுக்கு வரியாய்ச் செல்கிறது. இந்த வரி எனும் அருவியினால் தான் இந்திய அரசு எந்த வித சுணக்கமும் இன்றி தொடர்ந்து நடைபோடுகிறது. எத்தனையோ ஊழல்கள் நடந்தாலும் நடையில் தளர்ச்சி இல்லை. எந்த ஒரு கட்சியாலும், அமைப்பினாலும் இந்த பிரச்சினையைச் சரி செய்யவே முடியாது. அது நிச்சயம் முடியவே முடியாது. ஆனால் ஊழலில் பங்கு கொள்ளலாம். அதற்கு அர்பணிப்பும் திறமையும் வேண்டும்.

நல்லவனாய் இரு என்கின்றன ஆன்மீகச் சந்தைகள். எண்ணற்ற நூல்கள், நன்னெறியைப் போதிக்கின்றன. ஆனால் அரசியல் தனி மனிதனை திருடனாக இரு என்கிறது. அதுதான் அரசியல் என்கிறது அது.

ஆனால் தர்மம் என்கிற ஒன்று இவ்வுலகில் உண்டு. 

* * *




Tuesday, May 10, 2016

கிளைகளை வெட்டாதீர்கள் வேர்களை வெட்டுங்கள்


முல்லா நஸ்ருதீன் இந்தியா வந்திருந்த போது அவருக்கு மிகுந்த பசி எடுத்திருந்தது. இமயமலையின் வாயிலாக இந்தியாவுக்குள் நுழைந்த இடத்தில் ஒருவன் அழகான கூடையில் நீண்ட சிவப்பான பழங்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த முல்லாவுக்கு அந்த அழகிய சிவப்பு வண்ண பழங்களைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது. பசியும் மிகுந்த காரணத்தினால், அந்தப் பழக்கூடைக்காரனிடம் சென்று விலையைக் கேட்டார்.

“ஒரு கூடைப் பழம் இரண்டே பைசா” என்றான் அவன்.

அந்தக் கூடையை விலைக்கு வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார் முல்லா.

அது செம காரம்.

அவரின் கண்களிலிருந்து கண்ணீராய்க் கொட்டியது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் சொன்னான். “என்ன செய்து கொண்டிருக்கின்றீர்? அது மருத்துவ குணம் கொண்ட பழம். சில நோய்களுக்கு ஒன்றோ அல்லத் இரண்டோ சாப்பிட வேண்டும். நீங்கள் என்னடாவென்றால் எல்லாப் பழங்களையும் சாப்பிடுகின்றீர்களே? செத்து விடப்போகின்றீர்கள். அல்லது உங்களக்கு பைத்தியம் பிடித்து விடும்”

முல்லா சொன்னார்,” எது வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் நான் இரண்டு பைசா கொடுத்து வாங்கி இருக்கிறேன், ஆகவே முழுமையாகச் சாப்பிட்டே ஆக வேண்டும்”

* * *

கிளைகளை வெட்டாதீர்கள், வேர்களை வெட்டுங்கள் என்றுச் சொன்னவர் யோக்கா. நாம் இன்னும் கிளைகளை மட்டுமே வெட்டிக் கொண்டிருக்கிறோம். வேர் எது? கிளை எது என்பது பற்றிய புரிதலில்லாதவர்களுக்கு எதை வெட்டுவது என்பது புரிவதில்லை.

* * *
ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Saturday, May 7, 2016

நிலம் (18) - பவர் மூலம் விற்கிரைய ஒப்பந்தம் பற்றிய பிரச்சினை

சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மேல் முறையீட்டுக்கு வந்திருந்தது. 

அந்த வழக்கு என்னவென்றால், சொத்தின் உரிமையாளரிடமிருந்து பொது அதிகார ஆவணம் எழுதி வாங்கியவர் வேறொரு நபருக்கு சொத்தினை விற்பதற்காக விற்கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்து சொத்தின் விலையில் முக்கால் வாசி பெற்று விடுகிறார்.

விற்கிரைய ஒப்பந்தகாலம் ஒரு வருடம். ஆனால் ஒரு வருடம் முடிவில் பொது அதிகார முகவர் சொத்தினை எழுதிக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஒப்பந்தம் செய்தவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். சொத்தின் உரிமையாளர் பொது அதிகார ஆவணத்தை ரத்துச் செய்கிறார்.

விற்கிரைய ஒப்பந்தத்தின் படி சொத்தினைக் கிரையமும் செய்யமுடியவில்லை. பொது அதிகார முகவர் ஆவணமும் ரத்தும் செய்யப்பட்டு விட்டது. பிரச்சினை நீதிமன்றத்துக்கு வந்து விட்டது.

கீழ் நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட வழக்குகளின் தீர்ப்புரைகள் மாறி மாறி வந்தன. அதைப் பற்றி இங்கே எழுத ஆரம்பித்தால் குழம்பி விடுவீர்கள் என்பதால் சாரத்தை மட்டும் எழுதுகிறேன்.

பொது அதிகார ஆவணம் எழுதிக் கொடுத்தாலும் சொத்தின் உண்மையான உரிமையாளராக பவர் பெற்றவர் ஆக மாட்டார். எந்த நேரத்திலும் பவர் ரத்துச் செய்யப்படலாம். ஆனால் பவர் வாங்கியவர் எழுதிக் கொடுத்திருக்கும் ஒப்பந்தத்தை சொத்தின் உண்மையான உரிமையாளர் செயல்படுத்தியே ஆக வேண்டும். எனக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. 

இருப்பினும் ஒரு சில ஓட்டைகளும் இருக்கின்றன. புத்திசாலி வக்கீல் அதனைப் பயன்படுத்துவார்.

மேற்கண்ட பிரச்சினைக்கு நீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை வழங்கியது.

விற்கிரைய ஒப்பந்தம் செய்தவர், அந்தச் சொத்தினை குறிப்பிட்ட காலத்துக்குள் கிரையம் செய்திட தயாராக இருந்ததை நிரூபித்த காரணத்தால் அந்தச் சொத்தினை சொத்தின் உரிமையாளர் மீதித் தொகையினைப் பெற்றுக் கொண்டு கிரையம் செய்து கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. 

விற்கிரைய ஒப்பந்தம் போட்டு விட்டோம் இனி சொத்து எனக்குத்தான் என்று நினைத்து விடக்கூடாது என்பதை நினைவில் கொள்க என்பதற்காகத்தான் இந்தப் பதிவினை எழுதி இருக்கிறேன்.

இதைப் போன்ற ஏதேனும் வழக்குகள் வந்தால், கோர்ட்டில் வழக்கு நடந்தால், அது இன்னும் முடியாமல் இருந்தால் தொடர்பு கொள்ளவும். விரைவில் வழக்கை முடித்து தீர்வு பெற உதவுகிறேன்.

*  *  *


சிற்றலையும் பேரலையும் பேசிக் கொள்கின்றன

”ஐயோ நான் எவ்வளவு அற்பமானவன், என்னை அந்தப் பெரிய அலைகள் பாய்ந்து வந்து அமுக்கி அழித்து விடுகின்றனவே” என்று மிகவும் வருத்தப்பட்டது ஒரு சிற்றலை.

அப்போது ஒரு பெரிய அலை பாய்ந்து வந்தது.

“ஐயோ!” என்று அலறியது சிற்றலை.

“உன் முகத்தை நீ பார்த்ததில்லையா, உண்மையான உன் முகத்தை?” என்று கேட்டது பேரலை.

”இல்லை, நான் யார்? நான் ஒரு அலைதானே?” என்று கேட்டது சிற்றலை.

“ நீ அலைதான், ஆனால் அலை உன் வடிவமல்ல. அது ஒரு தற்காலிக வடிவம், நீ தண்ணீர்”

“தண்ணீரா?”

“ஆம், தண்ணீர். என்னைப்போல, என் வடிவமும் ஒரு தற்காலிக வடிவம்தான். அடிப்படையில் நானும் தண்ணீர்தான் உன்னைப்போல. வீணாக நீ கவலைப்படுகிறாய். குழப்பமடைகிறாய். உன் உண்மையான நிலையை, அடிப்படையை உணர்ந்தால் அச்சம் இல்லை, அவலம் இல்லை”

“அப்படியா? நீயும் நானும் ஒன்றா?”

“ஆம்! மாபெரும் இயற்கையின் வெவ்வேறு தற்காலிக வடிவங்கள். அடிப்படையில் எல்லாம் ஒன்றே. கவலை விடு” என்றது பேரலை.

* * *

படித்தீர்களா? விஷயம் அவ்வளவு தான். எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருந்த காலம். மனிதர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் எதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றொரு கேள்வியை என் முன் வைத்தேன். அதே போல நானும் இன்னொருவருடன் எதற்காகப் பேசுகிறேன் என்றும் என்னையே கேட்டுக் கொண்டேன். இதே கேள்வியை ஒவ்வொரு ஆட்களையும் பார்த்து வைத்தேன். மனிதர்களை மட்டுமல்ல என்னையே நான் அறிந்து கொள்வதற்கும் எனது இந்தக் கேள்விகளே போதுமானவைகளாக இருந்தன. 

மனித வாழ்வு பொருளை முன்வைத்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழலைக் கட்டியமைத்திருப்பது சக மனிதனின் பாதுகாப்புக்குத்தான். கோவிலுக்குச் சென்றாலும் பொருள் செலவழிப்பதற்கு இதுவே காரணம். பொருள் சார்புடைய வாழ்க்கைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. மனிதனை இன்னும் கட்டிப்போடுவது குடும்பத்தின் சாரல்களான பந்தம், பாசம், உறவுகள். அனைத்து ஒவ்வொன்றாய் விட்டுப் போய் விடும் என்று காலம் மாற மாற ஒவ்வொருவருக்கும் புரிந்து விடும்.

இந்தப் பொருள் மட்டும் இல்லையென்றால் சிற்றலை பேரலை தத்துவம் மனிதனுக்கு எளிதில் விளங்கி விடும். மாயா உலகமல்லவா? கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பொருள். 

விட்டு விலக சாத்தியமே இல்லை. நீங்களும் நானும் தண்ணீர் தான் என்பதை புத்தி சொல்கிறது. ஆனால் மனசுக்கு அது புரியாது. புரிந்தாலும் புரியாது போய் விடும்.

* * *

Friday, May 6, 2016

மனிதனின் இரண்டு முகங்களும் ஒரு ஜென் கதையும்

ஒரு மதுச்சாலையில் ஒருவன்
தனக்குள்ள உறுதியான வைராக்கியம் பற்றி
பெருமையடித்துக் கொண்டான் :

“மதுவை இனித் தொடவே மாட்டேன்” என்றான்.

ஆனால் அன்று மாலையே
அங்கே வந்து விட்டான்.

எல்லோரும் கேட்க, இப்படி உரக்கச் சொன்னான்:

“நான் என் மன வைராக்கியத்தை விடப் பலமானவன்!
நான் முழுதும் போராடி என் வைராக்கியத்தைத்
தோல்வியடைச் செய்து விட்டேன்.
இரண்டு மடங்கு மதுவைக் கொடு!”

(நன்றி : ஓஷோவின் ஒரு கோப்பைத் தேநீர் )

இதை ஓஷோ ஒரு மனிதனின் சுய வஞ்சனை என்கிறார். எந்த ஒரு செயலையும் அவன் நியாயப்படுத்திக் கொள்கிறான் என்கிறார் ஓஷோ.

* * *

அடுத்து ஒரு ஜென் கதை.  இந்தக் கதை உங்களுக்குப் புரிந்து விட்டால் !



கடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன மீனுக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்.

’கடல், கடல் என்று பேசிக் கொள்கிறார்களே, அப்படியென்றால் என்ன?’ என்பது தான் அந்தச் சந்தேகம். அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு பெரிய மீனிடம் சென்று,

“கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது?” என்று கேட்டது.

“அதுதான் உன்னைச் சூழ்ந்திருக்கிறது. அதற்குள் தான் நீ இருக்கிறாய்!” என்றது பெரிய மீன்.

“ஆனால் அது எனக்குத் தெரியவில்லையே!” என்றது சின்ன மீன்.

“நீ அதற்குள் இருப்பதால் தான் உனக்குத் தெரியவில்லை. நீ பிறந்ததும் கடலில். வாழ்ந்து கொண்டிருப்பதும் கடலில். உன்னைச் சுற்றி இருப்பதும் கடல். உனக்குள் இருப்பதும் கடல். உனது தோலைப் போல் அது உன்னை விட்டு நீங்காமல் சூழ்ந்திருக்கிறது. நீ பிறந்து வாழ்ந்து மறையப் போவதும் இந்தக் கடலில் தான். அதற்குள் இருப்பதால் அது தெரியவில்லை” என்றது பெரிய மீன்.

* * *

இந்த ஜென் கதை புரிந்து விட்டால் வாழ்வில் படும் துயரங்களில் இருந்து மனிதன் விடுதலை பெற்று விடுவான். புரியவில்லை என்றால் அடுத்து ஒரு அருமையான கதையொன்றினை வெளியிடப் போகிறேன். அந்தக் கதை சொல்லும் உங்களுக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள்.

ஜென் கதைக்கு முன்பு இருக்கும் கவிதை உங்களின் மனதை நிச்சயம் கீறி விட்டிருக்கும். சுய நிந்தனையில் மனிதனை விட மிகவும் உயர்ந்தது எதுவுமே இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. அந்த சுய வஞ்சகத்தன்மையினால் அவன் இழப்பது தன் வாழ்க்கையை என்று அவர் என்றைக்குமே உணருவது இல்லை.

கவிதை மனிதனின் ஒரு முகத்தையும், ஜென் கதை மனிதனின் அறியாமை எனும் முகத்தையும் காட்டுகிறது. இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

* * *